(Peer Reviewed) ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பு மீட்டுருவாக்கம் (நற்றிணை 11-ஆவது பாடலை முன்வைத்து)

2

(Peer Reviewed) ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பு மீட்டுருவாக்கம்

(நற்றிணை 11-ஆவது பாடலை முன்வைத்து)

முனைவர். வேல்முருகன்

தலைவர் & பேராசிரியர், தமிழ்த்துறை

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்

திருவாரூர் – 610 005.

மின்னஞ்சல்: pdrvelmurugan@gmail.com; செல்பேசி    : 9488264166

இர. ஆனந்தகுமார்

முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் – 610 005.

மின்னஞ்சல்: anadhakumar001@gmail.com; கைப்பேசி            : 9488264166

முன்னுரை

மூலபாடம் என்பது ஒரு நூலின் மூல நூலாசிரியர் எழுதிய வடிவம் அல்லது அதை ஒத்த பாடம் ஆகும். இதை முன்னோர் சுத்த பாடம் என்று வழங்குவர். ஒரு நூல் சுவடிகளிலிருந்தும் காகிதப் பிரதிகளிலிருந்தும் பதிப்பு நூலாக வெளிவரும் பொழுது பல்வேறு மாற்றங்களைப் பெறுகின்றது. குறிப்பாகச் சுவடிகளிலும் தொடக்க காலக் காகிதப் பிரதிகளிலும் குறில் நெடில், மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து ஆகியவை ஒன்று போலவே தோன்றுகின்றன. அதனால் ஒரு நூல் ஏட்டுப் படிகளாகவோ அச்சுப் படிகளாகவோ வெளிவரும் பொழுது பல திரிபுகளுடன் அமைகின்றது. சுவடிகள், காகிதப் பிரதிகள், அச்சுப் பதிப்புகள் முதலியவற்றில் காணப்படும் பாடங்களையும், பாட வேறுபாடுகளையும் தொகுத்து, உண்மையான பாடத்தைக் கண்டறிய முயல்வது மூலபாடத் திறனாய்வு ஆகும்.

ஏவா வில்தன் (EVA WILDEN), நற்றிணைக்குரிய சுவடி, காகிதப் பிரதிகள், பதிப்பு நூல்கள் ஆகியவற்றைத் தொகுத்து, ஆராய்ந்து நற்றிணைக்குச் செம்பதிப்பைக் (2008) கொண்டுவந்துள்ளார். இவரது பதிப்பு, நற்றிணைக்கு இதுவரை வெளிவந்த பதிப்புகளில் காணப் பெறாத வகையில், ஏடுகளில் உள்ள பாடங்களைத் தொகுத்து, அறிவியல் அடிப்படையில் மூலபாடத்தைத் தெரிவுசெய்யும் விதமாக அமைகிறது. இச்செம்பதிப்பிலும் சில விடுபாடுகள் உள்ளன. அவற்றை இக்கட்டுரை ஆராய்கிறது.

நற்றிணை 11-ஆவது பாடலில் விடுபட்டுள்ள பாடங்களையும், பாட வேறுபாடுகளையும் இலக்கணம், அகராதிப் பொருள், உரைகள், ஒப்புமைப் பகுதிகள் ஆகியவற்றைக் கொண்டு மூலபாடத்தை உறுதிப்படுத்துவது இந்த ஆய்வுக் கட்டுரையின் கருதுகோளாக அமைகிறது. இதில் மூலபாட ஆய்வு அணுகுமுறை பின்பற்றப்படுகிறது.

நற்றிணைக்குக் கிடைத்துள்ள சுவடி, காகிதப் பிரதிகள், பதிப்பு நூல்கள் ஆகியவை ஆய்வின் கருதுகோளை நிறுவுவதற்கான முதன்மை ஆதாரங்களாக அமைகின்றன. மேலும்,

S.M. Katre – Introduction to Indian Textual Criticism, அ.விநாயகமூர்த்தி – மூலபாடஆய்வியல் (1978), த.கோ.பரமசிவம்(ப.ஆ.) – சுவடிப் பதிப்பு நெறிமுறைகள் (1989), வெ.பழனியப்பன் – தமிழ் நூல்களில் பாடவேறுபாடுகள் (1990),மூ. இராமகிருட்டிணன் – பிரதிபேத ஆராய்ச்சி, வெ. பிரகாஷ் – பாட ஆய்வியல்: புறநானூறு பாடம், வடிவம் குறித்த ஆய்வு (ஆய்வேடு, 2012), ம.சா.அறிவுடைநம்பி – சுவடி ஆய்வு நெறிமுறைகள்(2013),Eva Maria Wilden – Studies in manuscript Cultures (2014), வெ. பிரகாஷ் – பாட ஆய்வியல் கையேடு (2014) முதலியோர்களின் நூல்கள், துணைமை ஆதாரங்களாக அமைகின்றன.

நற்றிணை 11-ஆவது செய்யுள்

ஏவா வில்தன் பதிப்பு :       

பெய்யாது வைகிய கோதை போல

மெய்சாயி னையவர் செய்குறி பிழைப்ப

வுள்ளி நொதுமலர் நேர்புரை தெள்ளிதின்

வாரா ரென்னும் புலவி யுட்கொள

லொழிக மாளநின் னெஞ்சத் தானே

புணரி பொருத பூமண லடைகரை

யாழி மருங்கி னலவ னோம்பி

வலவன் வள்பாய்ந் தூர

நிலவு விரிந்தன்றாற் கான லானே”.

மூலபாடத்தைத் தெரிவு செய்வதற்குப் பாடலின் சூழல், பொருண்மை போன்றவை துணை நிற்கும். அவ்வகையில் நற்றிணை 11-ஆவது பாடலுக்கான சூழல், பொருள் விளக்கம்.

கூற்று                         –           தோழி கூற்று (தோழி, தலைவிக்குச் சொல்லியது)

துறை                          –

காப்பு மிகுதிக்கண் இடையீடு பட்டு ஆற்றாளாய தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.

துறை விளக்கம் –

காவல் மிகுதியாலே தலைவனைக் தலைவனைக் கூடப்பெறாமல் ஆற்றாது வருந்திய தலைவியைத் தோழி நோக்கி நீ வருந்தாதேகொள், நிலவு விரிந்ததனால் அவர் இன்னே வருவரெனக் கூறுவோள் போன்று, காவல் மிகுதியால் இரவுக்குறி பிறழ்ந்ததும், அதனாலே தலைவி படுந்துன்பமும் சிறைப்புறத்திருந்த தலைவன் கேட்டு வரைவொடு புகுமாறு கூறுவது (நாரா.).

செய்யுள் பொருள் விளக்கம்

அவர் செய்த குறி இடையீடுபட்டு தவறுபட்டதனால், சூடாது கிடந்த பூமாலையைப் போல உடல் இளைத்தனை. அயலவர் பேசுகின்ற பழிச்சொல்லை நினைத்து, தெளிவாக வராமாட்டார் என்கின்ற ஐயத்தை உன் மனத்தின்கண் நினைக்காது விட்டொழிவாயாக. அலைகள் வந்து மோதியதால் நுண்மணலாக உள்ள கடற்கரையில், நண்டுகளின் மேல் தேர்ச்சக்கரங்கள் படாதவாறு பாதுகாத்து, தேர்ப்பாகன் கடிவாள வாரினைக் கவனமாகப் பிடித்துச் செலுத்த, கடற்கரைச் சோலையிலே நிலவு விரிந்தது. சுருங்கக் கூறின்,

‘அலவனுக்குத் (நண்டு) தீங்கு செய்யாது தேர் செலுத்த வேண்டும் என்று உரைக்கும் தலைவன், நீ பழிச்சொல்லால் வருந்தாதபடி வரைந்து இல்லறம் நிகழ்த்துவான்’ என்றவாறு.

செய்யுளில் உள்ள பாடவேறுபாடுகள்

                                                          (அட்டவணை)

 

ஏவா வில்தன் கொண்ட பாடம் ஏவா வில்தன் கொண்ட பாடங்களும் அவை இடம்பெற்ற பிரதிகளும் ஏவா வில்தன் கொண்ட பாடங்களிலிருந்து வேறுபடும் பாடங்களும் அவை இடம்பெற்ற பிரதிகளும்
பெய்யாது பெய்யாது- G3, EN, VP, ER, EV, ET பெய்யாத       – C1, G1, G2

பொய்யாது    – ETv

நொதுமலர் நேர்புரை நொதுமலர் நேர்புரை- VP, ER, EV நொதுமல் ஏர்புரை- C1, C2, G1, G2,G3, EN

நொதுமலர் ஏர்புரை  – ET

நொதுமல் ஓருரை      – ETv

யுட்கொளல் யுட்கொளல் –

C1, C2, G1, G2,G3, EN, VP, ER, EV, ET

யுட்கொளாஅல்- ETv
நிலவுவிரிந்தன்றால் நிலவுவிரிந்தன்றால்- G1, ER, EV நிலவுவிரிந்தன்றால் – G2, EN, ET, VP

நிலவுவிரிந்தன்றே   – ETv

குறிப்பு

C1                 உ.வே.சா. நூலகப் பிரதி (ஓலை)

C2                உ.வே.சா. நூலகப் பிரதி (காகிதம்)

G1, G2, G3 அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப்பிரதி (காகிதம்)

VP                எஸ். வையாபுரிப்பிள்ளை

EVA             ஏவா.    ஏவா வில்தன்

EN               அ. நாராயணசாமி ஐயர்

ER                மர்ரே. எஸ்.ராஜம்

ET                 ஔவை சு. துரைசாமிப் பிள்ளை

EV                 ஹச். வேங்கடராமன்

ETv               ஔவை சு. துரைசாமிப் பிள்ளைப் பாடவேறுபாடு

 

ஏவா வில்தன் பதிப்பில் விடுபட்ட பாடம்:’வளவன்

) வலவன்வளவன்

ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பில்  ‘வலவன்வள்பாய்ந்தூர’ (11:8) என்ற அடியில் இடம்பெறும் ‘வலவன்’ என்ற பாடத்திற்கு C1, G1, G2 ஆகிய பிரதிகளில்‘வளவன்’ என்ற பாடம் உள்ளது. இப்பிரதிகளில் உள்ள பிற பாடவேறுபாடுகளைச் (காண்க – அட்டவணை) சுட்டிக் காட்டும் ஏவா வில்தன்,C1, G1, G2 ஆகிய பிரதிகளில் காணப்படுகின்ற ‘வளவன்’ என்ற பாடவேறுபாட்டினைப் பதிவு செய்யாது விட்டுள்ளார்.

மேலும் செம்பதிப்பு முன்னுரையில் உச்சரிப்பு வேறுபாடுகள் எனும் தலைப்பில் ‘‘ஒள / அவ், ள்/ல, ர/ற கெளவை / கவ்வை ஆகியவை பொருள் மாறுபாடு செய்யாவிடினும் வட்டார (அல்லது ஏடெழுதும் தனிப்பட்ட ஒருவரின்) வழக்காறுகளைத் தெரிந்துகொள்ள உதவுமாதலால் இவை பதிப்புரையில் குறிப்பிடப்படுகின்றன” (ப.34) என்று பதிவு செய்துள்ளார். ஒலி வேறுபாட்டு அடிப்படையில் பாடல்களில் (36:8., 128:11., 295) உள்ள ஒலி வேறுபாட்டுச் சொற்களைச் (கெளவை / கவ்வை.,ஆகின்றியா / ஆகின்ரியா.,வ்வை / ஒளவை) சுட்டிக் காட்டும் இவர், ‘வலவன்’, ‘வளவன்’ என்ற பாடங்களிலுள்ள லகர ளகர ஒலி வேறுபாட்டினைப் பாடவேறுபாட்டுப் பகுதியில் சுட்டிக்காட்டவில்லை. இவ்வாறான முரண்பாடுகள், நற்றிணைச் செம்பதிப்பு என்ற கருத்தாக்கத்தைக் கேள்விக்குள்ளாகின்றன.

(குறிப்பு: ஒப்புநோக்கி ஆய, பிரெஞ்ச் ஆசியவியல் நிறுவனம்(EFEO), நற்றிணைக்குச் சுவடி, காகிதப் பிரதிகளைத் தந்துதவியது.)

நற்றிணைச் செம்பதிப்பு 11-ஆவது பாடலில் உள்ள ‘வலவன்’ என்ற பாடத்திற்கும், C1, G1, G2 ஆகிய பிரதிகளில் காணப்படுகின்ற ‘வளவன்’ என்ற பாடத்திற்கும் பொருள் மாறுபாடுகள் உண்டு.

வலவன்என்ற சொல் தேர்ப்பாகன்’ என்ற பொருளில் சங்க இலக்கியத்தில் ஏழு இடங்களில் (நற்றிணை, 11:8, 78:10, குறுந்தொகை, 311:2, அகநானூறு, 20:15, 104:3, 190:12, 340:4, 354:8, 400:12, புறநானூறு, 27:8) வந்துள்ளது. வளவன்என்ற சொல் சோழமன்னன் கிள்ளிவளவன் என்ற பொருளில் சங்க இலக்கியத்தில் ஏழு இடங்களில்  (புறநானூறு, 34:16, 60:10-11, 174:14-15, 226:6, 227:9, 393:24, 397:22-23) வந்துள்ளதைக் காண முடிகிறது.

இருப்பினும் நற்றிணை 11-ஆவது பாடலில் இடம்பெற்ற ‘வலவன் வள்பாய்ந்தூர’ என்ற பாடலடிக்கு உரையாசிரியர்கள் ‘தேர்ப்பாகன் (குதிரையின்) கடிவாள வாரினைக் கவனமாகப் பிடித்து செலுத்த’ என உரை எழுதியுள்ளனர். ஆனால் ஏவா வில்தனின் செம்பதிப்பில் விடுபட்ட பாடமான ‘வளவன்’ என்ற பாடத்தினை உரையாசிரியர்கள் எவரும் உரையிலும் பாடவேறுபாட்டுப் பகுதியிலும் குறிப்பிடவில்லை.

காரணம் பாடலின் பொருண்மையை நோக்குகையில் குதிரையின் கடிவாள வாரினைக் கவனமாகப் பிடித்துச் செலுத்துகின்ற தேர்ப்பாகனைக் குறிக்கும் பாடமாக ‘வலவன்’ என்பது பொருத்தமாக உள்ளது. இவ்வாறன்றி C1, G1, G2 ஆகிய பிரதிகளில் காணப்படுகின்ற ‘வளவன்’ என்ற பாடத்தைப் பின்பற்றி ‘வளவன் வள்பாய்ந்தூர’ எனப் பதிப்பித்து உரை எழுதினால்,  ‘சோழ மன்னனான கிள்ளிவளவன் கடிவாள வாரினைக் கவனமாகப் பிடித்து செலுத்த’ என்று உரைகொள்ள நேரிடும். ஆகவே பாடலின் பொருண்மைக்குத் தேர்ப்பாகனைக் குறித்து வரும் ‘வலவன்’ என்ற பாடமே ஏற்புடையதாகும்.

வன் / வவன் என்ற இருபாடவேறுபாடுகள் பிரதிகளில் காணப்படுகின்றன. அப்பிரதிகளில் ல/ள ஒலி வேறுபாடு பொருள் வேறுபாட்டுத் தன்மையில் அமைந்திருப்பினும் C1, G1, G2 ஆகிய பிரதிகளை எழுதினோர், அவ்வொலி வேறுபாட்டினை உணராது ‘வளவன்’ என்ற பாடத்தைப் பின்பற்றியுள்ளனர். எனவே இலக்கண அடிப்படையில் ஒலி வேறுபாடு உணர்த்தும் பொருண்மையில் ‘வலவன்’ என்ற பாடம் ஏற்புடையது.

ஏவா வில்தன் பதிப்பில் விடுபட்ட பாடவேறுபாடு

) உலோச்சனார்கயமனார்

பாடலுக்குள் இருக்கின்ற பாடவேறுபாடுகள் மட்டுமின்றி புலவர் பெயர்களில் காணப்படும் பாடவேறுபாடுகளையும் ஏவா வில்தன் தன்னுடைய பதிப்பில் குறிப்பிடுகிறார். சான்றாக

பாலத்தனார் (G1+2: பாலாத்தனார்) (52),

பெருங்கவுசிகனார் (EN, ER: கெளசிகனார், ET: கோசிகனார்) (139)

ஆனால் இவர் ஒரு பாடலுக்குரிய புலவர் பெயர் முழுவதும் மாறுபடும் இடங்களைப் பாடவேறுபாட்டுப் பகுதியில் குறிப்பிடாமல் விட்டுள்ளார். காட்டாக, ஒளவை.சு. துரைசாமிப்பிள்ளையின் நற்றிணைப் பதிப்பில் “இங்கே உலோச்சனார் என்ற பெயரோடு கயமனார் என்ற பெயரும் ஓர் ஏட்டில் காணப்படுகிறது” (ப.56) என அடிக்குறிப்பில் குறிப்பிடுவதைக் காண முடிகிறது.

துரைசாமிப்பிள்ளை (1966) பாடவேறுபாட்டுப் பகுதியில் இடம்பெற்ற செய்தி

மேலும் சில பாடல்களில் புலவர்களின் பெயர்கள் முற்றிலும் மாறுபட்டு உள்ளன.

நற்றிணைச் சுவடி, காகிதப் பிரதிகள், பதிப்பு நூல்கள் ஆகியனவற்றில் நல்விளக்கனார் (85), சல்லியங்குமரனார் (141), பராயனார் (155) ஆகிய புலவர்களின் பெயர்கள் எவ்வித மாறுபாடுகளுமின்றி காணப்படுகின்றன. ஆனால் துரைசாமிப் பிள்ளையின் நற்றிணைப் பதிப்பில் அப்புலவர்களின் பெயர்கள் முறையே நல்விளக்குன்றனார் (85), அரிசிலங்குமரனார் (141), பாரதாயனார் (155) என்று முற்றிலும் மாறுபட்டு உள்ளன.

மேலும் நற்றிணை 64-ஆவது பாடலை உலோச்சனார் பாடியுள்ளதாக அனைத்துப் பிரதிகளிலும் காணப்படுகிறது.  ஆனால் துரைசாமிப் பிள்ளை, 64-ஆவது பாடலை உரோடகத்தனார் பாடியதாகவே குறிப்பிட்டு, குறிப்புப் பகுதியில் ‘‘ஏடுகளில் உரோடகத்தனார் பெயரே உள்ளது. முன்பாட்டை எழுதிய நினைவால் இப்பாட்டையும் உலோச்சனார் பாடியதாக ஏடெழுதினோர் தவறியிருக்கலாம்” (ப.254) என்று குறிப்பிடுகிறார். ஆகவே ஏவா வில்தன், புலவர்களின் பெயர்கள் முற்றிலும் மாறுபட்டுக் காணப்படுவதை தமது நற்றிணைச் செம்பதிப்பில் குறிப்பிடவில்லை. ஒளவை சு.துரைசாமிப் பிள்ளையின் பாடலுக்குள் காணப்படும் பாடவேறுபாடுகள், புலவர் பெயர்களுக்குள் உள்ள பாடவேறுபாடுகள் ஆகியனவற்றைக் குறிப்பிடும் ஏவா வில்தன், இப்புலவர் பெயர் மாறுபாட்டைச் சுட்டிக் காட்டாதது, நற்றிணையின் செம்பதிப்பு முறையியலைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

நற்றிணை 11- ஆவது பாடலில் மூலபாடத் தெரிவுகள்

) பெய்யாதுபெய்யாதபொய்யாது

ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பில் ‘பெய்யாது வைகிய கோதை போல’ (11:1) என்ற பாடலடியில் உள்ள ‘பெய்யாது’ என்ற பாடத்திற்கு C1, G1, G2 ஆகிய பிரதிகளில் ‘பெய்யாத’ என்ற பாடம் உள்ளது. துரைசாமிப்பிள்ளை பதிப்பில் காணப்படும் பாடவேறுபாட்டுப் (ETv) பகுதியில் ‘பொய்யாது’ என்ற பாடவேறுபாடு காணப்படுகிறது.

சங்க இலக்கியத்தில் ‘பெய்யாது’ என்ற பாடம் ‘சூடாது’, ‘பெய்யாது’ ஆகிய பொருள்களில் நான்கு இடங்களில் (நற்றிணை 11:1, 365:6. புறநானூறு.105:4, 266:1) வந்துள்ளது. ‘பெய்யாத’ என்ற பாடம் சங்க இலக்கியத்தில் இல்லை. துரைசாமிப் பிள்ளை பதிப்பு, பாடவேறுபாட்டுப் பகுதியில் காணப்படும் ‘பொய்யாது’ என்பது சங்க இலக்கியத்தில் ‘பொய்த்துப் போதல்’, ‘பொய்’, ‘உண்மைக்குப் புறம்பானது’ என்ற பொருளில் நான்கு (நற்றிணை 38:1, 2. ஐங்குறுநூறு. 66:1, 80:1) இடங்களில் வந்துள்ளது.

‘பெய்யாது வைகிய கோதை போல’ (11:1) என்ற பாடலடிக்கு உரையாசிரியர்கள் ‘சூடாது கிடந்த பூமாலையைப் போல’ என்று உரை தருகின்றனர். ஆனால் பெய்யாது என்ற பாடத்திற்கு மாற்றாக C1, G1, G2 ஆகிய பிரதிகளில் ‘பெய்யாத’ என்ற பாடம் உள்ளது. இப்பாடத்தை அடிப்படையாகக் கொண்டு ‘பெய்யாத வைகிய கோதை போல’ என்ற பாடலடிக்கு உரைகொண்டால் ‘சூடாத கிடந்த பூமாலை’ என்று பொருள்படும். ‘பெய்யாத’ என்ற பாடம், சங்க இலக்கியத்தில் இல்லை. இதனடிப்படையில் நோக்கினோமானால் உரையாசிரியர்கள் இதை மூலபாடமாகத் தெரிந்தெடுக்கவில்லை என்பதை உய்த்துணர முடிகிறது.

துரைசாமிப் பிள்ளை பதிப்பின் பாடவேறுபாட்டுப் பகுதியில் ‘பெய்யாது’ என்ற பாடத்திற்கு ‘பொய்யாது’ என்ற பாடவேறுபாடு காணப்படுகிறது. இப்பாடவேறுபாட்டின் அடிப்படையில் ‘பொய்யாது வைகிய கோதை போல’ என்று பதிப்பு அமையும். இவ்விடத்து பொய்யாது என்பதற்கு ‘பொய்’ ‘பொய்த்துப்போதல்’ ஆகிய பொருள்கள் உள்ளன. இப்பொருள்களின் அடிப்படையில் ‘பொய்யாது வைகிய கோதை போல’ என்ற பாடலடிக்கு, ‘பொய்கூறாது கிடந்த பூமாலையைப் போல’ என்று உரைகொள்ள நேரிடும். இவ்வுரை பாடலின் பொருண்மைக்குப் பொருத்தமின்றி அமைவதால் ‘பொய்யாது’ என்ற பாடவேறுபாட்டை நீக்கி, G3, EN, VP, ER, EV, ET ஆகிய பிரதிகளில் உள்ள பாடமான ‘பெய்யாது’ என்பது பாடலின் பொருண்மைக்கு (‘சூடாது கிடந்த பூமாலையைப் போல’) ஏற்புடையதாக உள்ளதால் உரையாசிரியர்கள் இதனை மூலபாடமாகத் தெரிவு செய்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

) நொதுமல் ஏர்புரைநொதுமலர் ஏர்புரைநொதுமலர் நேர்புரைநொதுமல் ஓருரை

C1, C2, G1, G2,G3, EN ஆகிய பிரதிகளில் ‘நொதுமல் ஏர்புரை’ என்ற பாடமும் ET பிரதியில் ‘நொதுமலர் ஏர்புரை’ என்ற பாடமும் அதே பிரதியில் ‘நொதுமல் ஓருரை’ (ETv) என்ற பாடவேறுபாடும் இருக்க, ஏவா வில்தன் VP, ER, EV ஆகிய பிரதிகளில் உள்ள ‘நொதுமலர் நேர்புரை’ என்ற பாடத்தையே மூலபாடமாகத் தெரிவு செய்துள்ளார். இருப்பினும் அவர் அப்பாடத்தை உறுதிப்படுத்துவதில் உள்ள சிக்கலைக் குறிப்பிடுகையில் ‘‘here the ER reading looks very much like an conjecture supposed to make sence of a number of unsatisfactory variants. As so Aften, we are not in a position to find out whether there were sources supporting such a reading’’ (ராஜம் பதிப்பில் காணப்படும் ‘நொதுமலர் நேர்புரை’ என்ற பாடமே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பாடம்   திருப்தியற்ற பல மாறுபாடுகளைக் (நொதுமல் ஏர்புரை – நொதுமலர் ஏர்புரை – நொதுமலர் நேர்புரை – நொதுமல் ஓருரை) கொண்டுள்ளது.  ராஜம் பதிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பாடம் ‘நொதுமலர் நேர்புரை’ என்பது, அனுமானத்தால் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதை   உறுதிப்படுத்த ஆதாரங்கள் உள்ளனவா என்பதை ஆராயும் நிலையில் தான் இல்லை) என்று 11-ஆவது பாடலின் அடிக்குறிப்பில் குறிப்பிடுகிறார் ஏவா வில்தன்.

இருப்பினும் இப்பாடங்களுக்கு யாப்பு முறைகளின்படியும், உலோச்சனாரின் நற்றிணைப் பாடல்களைத் தவிர ஏனைய பாடல்களை ஆராய்வதன் அடிப்படையிலும், உரையாசிரியர்கள் தரும் பொருண்மைகளின் அடிப்படையிலும் சரியான பாடத்தைத் தேர்வு செய்ய இயலும்.

யாப்பு அடிப்படையில் -‘நொதுமல் ஏர்புரைநொதுமலர் நேர்புரை

உரையாசிரியர்கள் ‘நொதுமல் ஏர்புரை’, ‘நொதுமலர் நேர்புரை’ ஆகிய பாடங்களுக்குத் தரும் பொருண்மைகளின் அடிப்படையில் எவ்வித மாறுபாடும் இல்லை. ஆனால் சொல் அடிப்படையிலும் யாப்பு அடிப்படையிலும் வேறுபாடுகள் உள.

  •         நொது / மல்                ஏர் / புரை           மா முன் நேர் = நேரொன்றாசிரியத் தளை

                   நிரை   / நேர்              நேர் / நிரை

  • அ. நொது / மலர்             ஏர் / புரை            விளம் முன் நேர் = இயற்சீர் வெண்டளை

                   நிரை     நிரை           நேர் / நிரை

  • ஆ. நொது / மலர்            நேர் / புரை

                   நிரை   நிரை             நேர் / நிரை         விளம் முன் நேர் = இயற்சீர் வெண்டளை

யாப்பு முறைப்படி 1)‘நொதுமல் ஏர்புரை’ என்ற பாடத்தைப் பிரித்தால் நேரொன்றாசிரியத் தளை வருகிறது. அதே நேரத்தில் 2) அ.‘நொதுமலர் ஏர்புரை’ மற்றும் ஆ.‘நொதுமலர் நேர்புரை’ ஆகிய பாடங்களைப் பிரித்தால் இயற்சீர் வெண்டளை வருகிறது. ஆகவே ஆசிரியப்பாவில் இயற்சீர் வெண்டளையும் விரவி வரலாம் என்பதால் பாடத்தைத் தெரிவு செய்வதில் மேலும் சிக்கல் ஏற்படுகிறது.

அகநானூற்று உலோச்சனார் பாடலில் -‘நொதுமலர்

ஒரு புலவர் பாடிய பாடலில் பாடவேறுபாடுகள் இருப்பின், அப்புலவர் பாடிய ஏனைய பாடல்களை ஆராய்ந்து, அதில் உள்ள பாடங்களைக் கொண்டு மூலபாடத்தை உறுதிப்படுத்தலாம். அவ்வகையில் உலோச்சனாரின் பாடல்கள், நற்றிணையில் மட்டுமின்றி குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் உள்ளன. அவற்றினைக் கொண்டு ஒப்பிடுகையில் அகநானூற்றில் ‘நொதுமலர் போல பிரியின் கதுமென’(300:11) என்ற அடியில் ‘நொதுமலர்’ என்ற பாடம் வந்துள்ளது.

C2 (சுவடி)

C3(சுவடி)

C5(காகிதம்)

C6(காகிதம்)

 

C9 (காகிதம்)

(C2, C3, C5, C6, C9 – உ.வே.சா. நூல் நிலையப் பிரதிகள்)

ராஜகோபாலார்யன் (1933)

வையாபுரிப்பிள்ளை (1940)

பாகனேரி வெ. பெரி. பழ. மு. காசிவிசுவநாதன் செட்டியார் (வெளியீடு, 1946)

(குறிப்பு: ஒப்பு நோக்கி ஆய, பிரெஞ்ச் ஆசியவியல் நிறுவனம்(EFEO), அகநானூற்றுக்குச் சுவடி, காகிதப் பிரதிகளைத் தந்துதவியது.)

மேற்குறிப்பிட்ட உலோச்சனார் பாடிய அகநானூற்றுப் பாடலைச் சுவடிகள் (C2,C3), காகிதப் பிரதிகள் (C5, C6, C9) பதிப்பு நூல்கள் (ராஜகோபாலார்யன், பாகனேரி வெ. பெரி. பழ. மு. காசி விசுவநாதன் செட்டியார், வையாபுரிப்பிள்ளை) ஆகியனவற்றைக் கொண்டு ஆராய்கையில் ‘நொதுமலர்’ என்ற பாடம் உள்ளதை அறிய முடிகிறது. மேலும் இப்பாடத்திற்கு வேறான பாடவேறுபாடுகள் எதுவும் இல்லை என்பதைத் தரவுகளின் வழியாக உறுதியிட முடிகிறது. ஆகவே உலோச்சனார் நற்றிணையிலும் ‘நொதுமலர்’ என்ற பாடத்தைத்தான் கையாண்டிருப்பார் என்பதைத் தரவுகளின் வழியாக ஊகிக்க முடிகிறது.

உரையாசிரியர்கள் தரும் பொருள் –’ஏர்புரை‘, ‘நேர்புரை

வையாபுரிப்பிள்ளை (VP) பதிப்பில் ‘நொதுமலர் நேர்புரை’ என்ற பாடம் முதன் முதலில் காணப்படுகிறது. அப்பாடமே மர்ரே ராஜத்தின் (ER) சந்தி பிரித்த நற்றிணைப் பதிப்பிலும் உள்ளது. இவ்விரு பதிப்புகளும் உரையில்லாத மூலப் பதிப்புகள். அடுத்தடுத்த பதிப்புகளாக (உரையுடன்) வந்துள்ள வேங்கடராமன் (EV) மற்றும் ஏவா வில்தன் (EVA) ஆகியோர் தமது பதிப்புகளில் மேற்கண்ட பாடத்தையே மூலமாகக் கொண்டு ‘அயலவர் பழிச்சொல்’ என்று உரை கொள்கின்றனர்.

பொ.வே.சோமசுந்தரனாரின் (நாராயணசாமி ஐயர் உரையுடன், இலக்கணக் குறிப்பும் ஆய்வுரையும் கொண்ட நற்றிணை உரை) இலக்கண ஆய்வுரையில் ‘நொதுமலர் நேர்புரை’ என்ற பாடத்தைப் பாடவேறுபாடாகக் கொண்டு ‘அயலோர் வாய் நேர்ந்து கூறும் பழிச்சொல்’ என்று குறிப்புப் பகுதியில் குறிப்பிடுகிறார். அவற்றைக் கொண்டு நோக்குகையில் ‘நேர்புரை’ என்பதற்கு ‘நேர்ந்து கூறும் பழிச்சொல்’ என்ற பொருள் கிடைக்கிறது. இப்பொருள் வேங்கடராமன் பதிப்பிலும் ஏவா வில்தனின் பதிப்பிலும் இல்லை. ஆகவே பாடலின் பொருண்மைக்கு ‘நேர்ந்து கூறும் பழிச்சொல்’ என்ற பொருளைத் தருகின்ற ‘நேர்புரை’ என்ற பாடத்தைக் கொள்ளாமல், ‘எழுதலையுடைய பழிச்சொல்’ (EN), ‘எடுத்துரைக்கும் அலருரை’ (ET) ஆகிய பொருள்களைத் தருகின்ற ‘ஏர்புரை’ என்ற பாடத்தையே ஏற்புடைய பாடமாகக் கொள்ளலாம்.

முடிவுகள்

  • ஏவா வில்தன், நற்றிணைக்குக் கிடைத்துள்ள சுவடி, காகிதப் பிரதிகள், பதிப்பு நூல்கள், தொல்காப்பிய உரை மேற்கோளில் காணப்படும் நற்றிணைப் பாடல்கள் ஆகியனவற்றைத் தொகுத்து, பாடவேறுபாடுகளைப் பட்டியலிட்டு ஆராய்ந்து, நற்றிணைக்குச் செம்பதிப்பைக் கொண்டுவந்துள்ளார். இதுவரை வந்த நற்றிணைப் பதிப்புகளில் காணப்பெறாத வகையில், மூலபாடத்தை நிறுவும் முயற்சியை இவரது பதிப்பில் காணலாம். மேலும் நற்றிணைக்குக் கிடைத்துள்ள பிரதிகளில் காணப்படும் பாடங்களைத் தொகுத்துப் பட்டியலிடும் அதே நேரத்தில் பாடலுக்குள் காணப்படும் பாடங்களையும் பாடல் எழுதிய புலவர் பெயர்களில் காணப்படும் மாறுபாடுகளையும் குறிப்பிடாமல் விட்டுள்ளார்.
  • ‘வலவன்’ (11:8) என்ற பாடத்திற்கு C1, G1, G2 ஆகிய பிரதிகளில் ‘வளவன்’ என்ற பாடம் உள்ளது. இப்பிரதிகளில் உள்ள பிற பாடவேறுபாடுகளைச் சுட்டிக் காட்டும் ஏவா வில்தன், C1, G1, G2 ஆகிய பிரதிகளில் காணப்படுகின்ற ‘வளவன்’ என்ற பாடத்தினைச் சுட்டிக் காட்டவில்லை. அதே போல உலோச்சனார் என்ற பெயரோடு கயமனார் என்ற பெயரும் ஓர் ஏட்டில் காணப்படுகிறது என்ற துரைசாமிப் பிள்ளையின் அடிகுறிப்புச் செய்தியும் இவரது பதிப்பில் விடுபட்டுள்ளது.
  • நற்றிணை 11- ஆவது பாடலில் ‘பெய்யாது’(11:1) என்ற பாடத்திற்கு  ‘பெய்யாத’ , ‘பொய்யாது’ ஆகிய பாடவேறுபாடுகள் உள்ளன. அப்பாடவேறுபாடுகளுள் பாடலின் பொருண்மைக்கு ‘பெய்யாது’ என்ற பாடமே மிக அணுக்கமாக உள்ளது.
  • உலோச்சனாரின் பாடல்கள், நற்றிணையில் மட்டுமின்றி குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் உள்ளன. அவற்றினைக் கொண்டு ஒப்பிடுகையில் ‘நொதுமலர்’ என்ற பாடம் அகநானூற்றில் மட்டும் வந்துள்ளதால் நற்றிணையிலும் ‘நொதுமலர்’ என்ற பாடத்தைத் தான் உலோச்சனார் கையாண்டிருப்பார் என்பதைத் தரவுகளின் வழியாக அறிய முடிகிறது.
  • ‘நேர்புரை’, ‘ஏர்புரை’ ஆகிய பாடங்களில் உரையாசிரியர்கள் பொருள்கொள்ளும் அடிப்படையில் நோக்கும் பொழுது ‘ஏர்புரை’ என்ற பாடம் பொருத்தமுள்ளதாகத் தோன்றுகிறது.
  • ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பில் விடுபட்ட பாடங்களும் மூலபாடத் தெரிவில் இடர்ப்பாடுகளும் காணப்படுவதால் அவரது நற்றிணைச் செம்பதிப்பு என்பது கேள்விக்குள்ளதாக அமைகிறது. ஆக, ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பில் (2008) உள்ள ஏனைய பாடல்களையும் மூலபாடவியல், பதிப்பியல் நோக்கில் ஆய்வுக்கு உட்படுத்தினால் மேலும் சில விடுபட்ட பாடங்களும் மூலபாடத் தெரிவில் உள்ள மாறுபாடுகளும் தெரிய வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆகவே ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பினை மீட்டுருவாக்கம் செய்தால், நற்றிணைச் செம்பதிப்பு என்பது சீர்மை பெறும்.

துணைநூற்பட்டியல்

  • அறிவுடைநம்பி. ம.சா., சுவடி ஆய்வு நெறிமுறைகள், கருமணி பதிப்பகம், 27, சுப்பிரமணியர் கோயில் குறுக்குத்தெரு, இலாசுப்பேட்டை, புதுச்சேரி. சனவரி 2013.
  • இராமகிருட்டிணன். மூ., பிரதிபேத ஆராய்ச்சி, வேங்கடாசலபுரம், (வழி) தேனி, மதுரை. (ஆண்டு குறிப்பிடவில்லை).
  • ஏவா வில்தன் (ப.ஆ.)., நற்றிணை, சங்க இலக்கியங்கள் – செம்பதிப்பு வரிசை – 1.1., பிரெஞ்ச் ஆசியவியல் நிறுவனம் (EFEO) – 2008, தமிழ்மண்பதிப்பகம்.
  • வேங்கடசாமிநாட்டார். திரு. நாவலர் ந.மு. & வேங்கடாசலம் பிள்ளை. கரந்தைக் கவியரசு R. (பதவுரை, விளக்கவுரை), எட்டுத் தொகையுள் ஒன்றான அகநானூறு – மணிமிடை பவளம் (பாகனேரி வெ. பெரி. பழ. மு. காசிவிசுவநாதன்செட்டியார் அவர்களால் வெளியிடப்பெற்றது) திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிமிடெட், திருநெல்வேலி.ஜனவரி1946.
  • சுப்பிரமணியன். ச.வே., தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 600 108. மார்ச்.2013.
  • சோமசுந்தரனார். பெருமழைப்புலவர் பொ.வே., (இலக்கணக்குறிப்பும் ஆய்வுரையும்) –           எட்டுத் தொகையுள் ஒன்றாகிய நற்றிணை நானூறு (பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் எழுதிய உரையும் விளக்கமும்), திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், லிமிடெட், திருநெல்வேலி – 6, நான்காம் பதிப்பு1967.
  • துரைசாமிப்பிள்ளை.சு (உ.ஆ) ., நற்றிணை, அருணா பப்ளிகேஷன்ஸ், உஸ்மான் ரோடு, தியாகராய நகரம், சென்னை – நவம்பர்.1966& 1968.
  • நாராயணசாமி ஐயர். பின்னத்தூர் அ (உரையாசிரியர்)., எட்டுத் தொகையுள் ஒன்றாகிய நற்றிணை, சைவ வித்தியாநு பாலன யந்திரசாலை, சென்னை.1915.
  • பரமசிவம். த.கோ.(பதிப்பாசிரியர்)., சுவடிப்பதிப்பு நெறிமுறைகள் (கருத்தரங்கக்கட்டுரைகள்), தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்.மார்ச்1989.
  • பாலசுப்பிரமணியன்.கு.வெ(உரையாசிரியர்)., சங்க இலக்கியம் –நற்றிணை மூலமும் உரையும், நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ்(பி) லிட், அம்பத்தூர், சென்னை – 600 098. ஐந்தாம் பதிப்பு. அக்டோபர் 2014.
  • பழனியப்பன்.வெ., தமிழ் நூல்களில் பாடவேறுபாடுகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், சிதம்பரம்.1990.
  • பாகனேரி. வெ. பெரி. பழ. மு., திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், (வெளியீடு) லிமிடெட், திருநெல்வேலி.
  • பிரகாஷ். வெ., பாட ஆய்வியல் கையேடு, அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தா நத்தம், திருச்சி. 2014.
  • பிரகாஷ். வெ., பாட ஆய்வியல்: புறநானூறு பாடம், வடிவம் குறித்த ஆய்வு, முனைவர் பட்ட ஆய்வேடு, சென்னைப் பல்கலைக்கழகம், 2012,
  • ராஜகோபாலார்யன் (ப.ஆ)., அகநானூறு மூலமும் பழைய உரையும், கம்பர் புஸ்தகாலயம், கம்பர் விலாசம், மயிலாப்பூர்.
  • விநாயகமூர்த்தி.அ., மூலபாட ஆய்வியல், பாலமுருகன் பதிப்பகம், 90, பாரதியார் தெரு, சுப்பிரமணியபுரம், மதுரை – 625 011.
  • வெள்ளை வாரணன். க (ப.ஆ) ., தொல்காப்பியம் செய்யுளியல் – உரைவளம், பதிப்புத் துறை, காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை – 625 021. 1989.
  • வேங்கடராமன்.ஹச்(உ.ஆ)., டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், 2, அருண்டேல், கடற்கரைச் சாலை, பெசண்ட் நகர், சென்னை – 600 098.
  • வையாபுரிப்பிள்ளை. எஸ்(ப.ஆ.)., சங்க இலக்கியம், எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும், சைவ சித்தாந்தம் மகா சமாஜம், மயிலாப்பூர், சென்னை. 1940.
  • Eva Mariya wilden., Studies in Manuscript Cultures, 204 Walter de Gruyter Gmbh & KG Berlin / Munchen / Bosten in Germany.
  • S.M. Katre., Introduction to Indian Textual Criticism, Karanatak Publishing House.
  • தமிழ் லெக்ஸிகன்., சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
  • நிகண்டுகள்., சாந்தி சாதனா, 125 சேமியர்ஸ் சாலை, சென்னை – 600 028.
  • மணியன்.,சங்க இலக்கிய வினை வடிவங்கள், திராவிட மொழியியல் கழகம், திருவனந்தபுரம் – 86.
  • மாதையன்.பெ., சங்க இலக்கியச் சொல்லடைவு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613 310. 2007.
  • பாண்டியராஜா.சு., சங்க இலக்கியத் தொடரடைவு, sangamconcordance.com
  • தமிழிணையக் கல்விக் கழகம்(tamilvu.org)

ஆய்வுக் கட்டுரையாளர்களின் தன் விவரக் குறிப்பு

முனைவர். வேல்முருகன்

தலைவர் & பேராசிரியர், தமிழ்த் துறை

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்

திருவாரூர் – 610 005.

மின்னஞ்சல்: pdrvelmurugan@gmail.com; செல்பேசி    : 9488264166

இவர் தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.பில்., பி.எட்., பிஎச்.டி. பட்டங்களும் வரலாறு, தகவல் தொடர்பியல், மொழியியல் ஆகிய பாடங்களில் எம்.ஏ. பட்டங்களும் பெற்றுள்ளார். கணினி அறிவியல், ஹிந்தி மொழி, காந்தியச் சிந்தனை ஆகியவற்றில் சான்றிதழ் பயின்றுள்ளார். அடிப்படை மலையாள மொழியறிவு உடையவர்.

இவர் சங்க இலக்கியம், இலக்கணம், மொழியியல், தொல்லியல், தகவல் தொடர்பியல், கவிதையியல் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இப்பொருண்மைகளில் ஐந்து நூல்களை எழுதிய இவர் `எழுத்திலக்கண மாற்றம்’, `தமிழ் மரபிலக்கணங்களில் இடைச்சொற்கள்ஆகிய நூல்களுக்காக, இந்தியக் குடியரசுத் தலைவரின் செம்மொழித் தமிழ் இளம் அறிஞர் விருதும்,  `இலக்கண மரபும் இலக்கியப் பதிவும்என்ற நூலினுக்காகத் தமிழக முதல்வர் வழங்கும் சிறந்த நூலாசிரியர் விருதும் பெற்றுள்ளார். இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு பொருண்மைகளில் அறுபதிற்கும் மேலான எண்ணிக்கையில் வெளிவந்துள்ளன.

இவர், பதினாறு ஆண்டுகள், ஆசிரியர் பணி அனுபவம் மிக்கவர்; தற்பொழுது திருவாரூரில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்  தமிழ்த் துறைத் தலைவராகப் பேராசிரியர் நிலையில் பணி புரிந்து வருகிறார்.

இர. ஆனந்தகுமார்

முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த் துறை

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் – 610 005.

மின்னஞ்சல்: anadhakumar001@gmail.com; கைபேசி        : 9488264166

இவர் ஆசிரியர் பயிற்சியும், தமிழிலக்கியத்தில் எம்.ஏ., எம்.பில்., பட்டமும் பெற்றவர். மேலும் தமிழ் மொழியியலில் முதுகலைப் பட்டமும், மலையாள மொழியில் சான்றிதழ்ப் பட்டமும் (Certificate Course) பெற்றுள்ளார். தற்பொழுது திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில், முனைவர் பட்ட ஆய்வாளராக “நற்றிணைப் பாக்கள்: மொழியியல், இலக்கியவியல், கிளை மொழியியல், மூலபாடவியல் ஆய்வு” (உலோச்சனார் முதலியோரின் 133 பாக்கள் – சொல்லடைவுடன்) எனும் தலைப்பில் ஆய்வு செய்து வருகிறார். இவர், பன்னாட்டு ஆய்விதழ்களில் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

===========================================================

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

பழந்தமிழ் இலக்கியங்களின் உண்மைத் தன்மையை அறிய, அவற்றின் மூலம் கண்டடைதல் என்பது, தேவையான ஒன்று. அந்த வகையில் ஏவா வில்தன் முன்னெடுத்த செம்பதிப்புப் பணி பாராட்டத்தக்கது. இவர் பதிப்பில் உள்ள சில குறைபாடுகளைச் சுட்டிக் காட்டும் விதமாகவும் பதிப்புப் பணியில் ஈடுபடும் பதிப்பாசிரியர்கள் நினைவில் கொள்ளக் கூடிய பதிப்பு அடிப்படைகளையும் நற்றிணைப் பதிப்பில் உள்ள பாடவேறுபாடுகள் குறித்தும் விளக்கும் தன்மையில் கட்டுரை அமைந்துள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால் ஆய்வாளர்கள், பதிப்பாசிரியரின் வலவன், பெய்யாது, நொதுமலர் போன்ற மூலபாடத் தெரிவின் முயற்சிகளைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மேலும் ஏர்புரை என்பது பொருத்தமான பாடமாகத் தோன்றுகிறது என்று யூகத்தின் அடிப்படையில் கூறுதல் பொருத்தமற்றது. ஆய்விற்குப் பொருத்தமான ஆதாரங்களை முன்வைத்து, பதிப்பாசிரியரின் தவறுகளைச் சுட்டிக் காட்டுதல் நலம் பயக்கும். மேலும், ஆய்வாளர்கள் பிறர் கருத்தை மறுக்கும் பொழுது, தன்மையான முறையில் மறுக்க வேண்டும். ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகள், இத்தகைய செம்பதிப்புப் பணியில் ஈடுபடுபவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைய வேண்டும். மாறாக, அவர்களின் பணியைப் புறந்தள்ளும் தொனி வந்துவிடக் கூடாது. எனினும், ஆய்வாளர்கள் இதுபோன்ற ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்வது, தமிழுக்கு ஆக்கம் நல்கும்.

===========================================================

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “(Peer Reviewed) ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பு மீட்டுருவாக்கம் (நற்றிணை 11-ஆவது பாடலை முன்வைத்து)

  1. மனமார்ந்த வாழ்த்துக்கள் பேராசிரியர் வேல்முருகன் அவர்களே

    – கண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *