Tag: சுரேஜமீ

  • என்ன நடக்கிறது?

    – சுரேஜமீ

    என்ன நடக்குது எங்கள் நாட்டிலே
    எதிரெதிர் வருபவனும் தாக்கவும் அவனவனை
    ஏட்டினைப் படித்திடிணும் எவனுக்கும் அறிவுமில்லை
    ஏகிட்ட கல்வியென்றும் எதுசரியெனவும் இல்லை
    இருப்பவன் நம்பிடவும் மறுப்பவன் பரப்பிடவும்
    இருக்குது சுதந்திரமே இயம்பவும் செய்திடடா!
    கருத்தெதிர் கருத்தினையும் விதைத்திடு முடிந்தவரை
    கருத்தினில் கொள்பவரைக் கொண்டாடு அடிபற்றி
    திணித்திட உனக்குமில்லை உரிமையும் துளியுமடா!
    தின்பவன் உணர்வதில்தான் உணவின் அருமையடா!

    பழமையிலும் உண்டு நலன்விளை சேதிகளும்
    பண்பினை வளர்ப்பதற்கும் பேரினம் வாழ்வதற்கும்
    சொல்வண்ணம் நடந்திட்டால் சேரினம் சேர்ந்திடுமே
    செந்தமிழ் நடைபழகிச் சிந்தனைச் சிறகேறி
    வம்பினை வளர்ப்பதென்றும் நற்றமிழர் மறபன்று
    வள்ளுவம் வழிவந்த வான்புகழ் தமிழினத்தில்
    வேண்டாம் சாதியென வேண்டுவ உரைத்திட்டும்
    வீணில் வளர்த்ததுவும் வெறியர்கள் செயலன்றோ!
    பேதங்கள் பார்ப்பதுவும் வேதங்கள் செய்ததென்றால்
    ஓதவும் மறுத்திருந்தால் ஒற்றுமை நிலைத்திருக்கும்!

    வானமும் வையகமும் அனைவர்க்கும் சமமென்றால்
    வானவர் மட்டுமிதை எப்படி மறுத்திடுவார்?
    நாயனார் கதைபடித்தும் நாயகன் அறியாமல்
    நானிலம் சண்டையிட்டால் நாமும் அழிந்திடுவோம்
    நம்பிக்கை கொள்வதுவும் நம்மை உயர்த்திடவே
    நமக்குள் பிரிவறுத்து நாளும் மகிழ்ந்திடவே
    அவரவர் நம்பிக்கை அவரவர் தனிவிருப்பம்
    அடுத்தவன் மறுப்பதற்கு அவனென்ன ஆண்டவனா?
    அழிப்பது எனவந்தால் இயற்கையும் ஆண்டவனே
    அடக்கிடு சீற்றங்களை அவரவர் மட்டினிலே
    அறிவினைப் பயிர்செய்ய ஆற்றலும் பெருக்கிடலாம்
    அகிலமும் அறுவடையாய்ப் போற்றியே வாழ்ந்திடலாம்!

    அரசியல் மதங்கடந்து சாதியும் வேரறுத்து
    அறிந்திடு சரியெதென்று ஆவன செய்வதற்கு
    எவனும் தலைவனென்று ஏகிட மறுத்துவிடு
    அவனவன் குடும்பத்தை ஏற்றுதல் நீயுங்கண்டு
    அன்பைக் காட்டிடவே உனக்கவன் தலைவனென்றால்
    அன்பாய் உனைநம்பி வந்தவர் என்செய்வார்?
    அனுதினம் யோசித்து வாழ்க்கையை உயர்த்திவிடு
    ஆனந்தமாய் வாழ்ந்து அனைவரும் இன்புறவே!

     

    Share
  • சிகரம் நோக்கி …. (1)

    சுரேஜமீ

    peak

    நம் கல்விமுறையில் மாற்றம் வேண்டுமென்பது, பெரும்பான்மையினரின் கருத்தாக, இற்றை நாட்களில் இருக்கிறது. இதற்குப் பின்னனி என்ன என்று யோசித்தால், வாழ்வியல் சார்ந்த கல்வியாக, தற்போதைய கல்வி இல்லை என்பதும், ஒரு தேர்விற்காகத் தன்னைத் தகுதிப் படுத்திக் கொள்ளும் மனனம் சார்ந்த ஒரு புத்தக அறிவை மட்டுமே தருகிறது என்பதும், குற்றச்சாட்டாக இருக்கிறது.

    கல்வி என்பது சிந்தனை ஆற்றலை, பகுத்து உணரும் அறிவை, சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்கும் தன்மையை, வாழ்க்கை நெறியை உய்விக்கும் கோட்பாடுகளை, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் கொடுக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது!

    ஆனால், நாம் படித்ததை, நம் வாழ்க்கைக்குப் பயன்படுத்தி, நம்மைச் செதுக்கினோமா? என்றால், அதற்கான விடையைத் தேடும் சமுதாயமாக, வளரும் சமுதாயம், இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது!

    ஒரு பழமொழி நாம் அனைவரும் அறிந்ததே.

    ‘ஐந்தில் வளையாதது; ஐம்பதில் வளையாது! என்பது;

    ஆகவே தான், நல்ல பல கருத்துக்களை, மிகவும் சுருக்கமாக, குழந்தைகளுக்கு, ஆரம்பக் கல்வியில் வைத்தார்கள்! ஆனால், அதன் ஆழத்தைப் பெற்றோர்கள் உணர்த்தினார்களா? என்பதில் தான், கல்வியின் மேம்பாடு இருக்கிறது!

    இன்றைக்கு ஆங்கில வழிக் கல்விதான், உலகத்திலேயே சிறந்தது என்ற நினைப்புதான், ஆதாரக் கல்வியான தாய்மொழிக் கல்வியின் சிறப்பைக் கெடுக்கிறது.

    ஆங்கிலம் என்பது ஒரு அன்னிய மொழி அறிவு! அவ்வளவே! அது சூழலால் ஏற்படுவது. மொழி அறிவு என்பது, ஒரு புரிதல் சாதனம்! அதுவே, அறிவின் உச்சமாகிவிடாது!

    தாய்மொழிக் கல்விதான் தரத்தின் அடையாளம்!

    avvaiஅதற்கேற்ப, தமிழ்க் கிழவி ஔவையாரின் சில பாடல்களும், அதன் கருத்துக்களும், வளரும் சமுதாயத்திற்காகப் பகிர்வதில் பெருமிதம் கொள்கிறேன்!

    கல்வியின் சிறப்பு என்ன? ஏன் படிக்க வேண்டும்? படித்தால் தான் வாழ முடியுமா? என்ற கேள்விகளுக்கு, ஔவையார் என்ன சொல்கிறார் என்று சிந்தியுங்கள்!

    மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
    மன்னனில் கற்றோன் சிறப்புடையன் – மன்னர்க்குத்
    தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
    சென்றஇடம் எல்லாம் சிறப்பு!

    இதைவிடப் பிஞ்சு உள்ளங்களில், கல்வியின் சிறப்பைச் செம்மையாகச் சொல்ல இயலுமா? ஆகக், குழந்தைகள் சிந்திக்க வேண்டுவது, நாம் ஒரு தேசத்தில் மட்டுமே இருக்க வேண்டுமா? அல்லது, மன்னனினும் உயர்வாகக் கற்றவராக இருந்தால், சென்ற இடமெல்லாம் சிறப்புப் பெறமுடியும்!

    இன்றைக்கு மக்களாட்சியில், ஆட்சி பீடத்தில் இருப்பவர்களும் பல தேசம் போகலாம்; ஆனால், கற்றவரின் துணையில்லையேல், ஆட்சியாளருக்கே அவலமாகிவிடும்!

    ஆதலால், கல்வியின் சிறப்பு எத்தகையது என்பதை அறிய, இதைவிட உதாரணம் வேறில்லை!

    அடுத்து, நாம் யாரோடு நம்மைத் தொடர்பு படுத்திக் கொள்ளல் அவசியம் என்பதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார் அடுத்த இரண்டு பாடல்களில்!

    நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலமிக்க
    நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே!

    அப்படி, நல்லவர்களோடு நட்பு கொள்ளும்போது, நமக்கு என்ன கிடைக்கும்?

    இந்தப் பாடலைக் கவனியுங்கள்!

    நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
    புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்
    நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
    எல்லார்க்கும் பெய்யும் மழை!

    நாம் கழனியிலே நெல்லுக்குத்தான் நீர் பாய்ச்சுகிறோம்; ஆனால், அது புல்லுக்கும் போகிறதல்லவா? அதுபோல, இந்த உலகம் உய்வதற்குத் துணையாக இருப்பவர்கள் நல்லவர்கள். ஆதலால், அவர்களுடைய நட்பு அவசியம் என்பதை, அவர்களால்தான் அனைவருக்கும் பயன் விளைகிறதென்பதை, மழையோடு ஒப்பிட்டுச் சொல்கிறார்.

    அடுத்து உறவு எப்படி இருக்க வேண்டும்?

    இன்றைக்கு அவசியமானது நல்ல உறவுகள், நமக்குத் துணையாக இருப்பதுதான். நமக்குக் கிடைத்த உறவுகள், நம் பிள்ளைகளுக்கு வாய்ப்பதில்லை. அதற்குக் காரணம், நாம் கூட்டுக் குடும்பங்களில் வாழ்ந்ததும், நம் உடன் பிறந்தோர் ஒன்றுக்கு மேல் என்பதும்!!

    ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலில், பொருளாதார ஏற்ற, இறக்கங்களில், தனிக்குடித்தன வாழ்வும், பெரும்பாலான இல்லங்களில் உறுப்பினர்கள் குறைவு என்பதும் கண்கூடு. ஆக, உறவு முறைகள் அவ்வளவாக பலமாக இருப்பது இல்லை என்பதும், அதன் அவசியத்தை இன்னும் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

    இவர் கூற்றுப்படி ஒரு உறவு உங்களுக்குக் கிடைத்தால், நிச்சயம், நீங்கள் கொடுத்து வைத்தவரே!

    அற்ற குளத்தில் அறும்நீர்ப் பறவைபோல்
    உற்றுழித் தீர்வர் உறவல்லர் – அக்குளத்தில்
    கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
    ஒட்டி உறுவார் உறவு!

    நீர்ப் பறவைகள் எப்படி நீர் வற்றியவுடன், அடுத்த நீர் நிலையைத் தேடி ஓடுகிறதோ, அவ்வாறில்லாமல், நீர்த்தாவரங்கள், நீரோடு சேர்ந்து தானும் மடிவதுபோல,

    உறவுகள் நம் துன்பத்திலும் தோள் கொடுக்கக் கூடிய உறவுகளாகப் பெற்றவர்கள் வாழ்க்கை சொர்க்கத்திற்கு ஒப்பானது!

    இன்னும் எவ்வளவோ சான்றுகளை, நீதிகளை அடுக்கலாம். ஆனால், நாம் எந்த அளவு ஒரு நூலைத் தனதாக்கி, அதனை நாம் சிந்தையில் ஏகி, அதன் பயனை, வளரும் சமுதாயத்திற்கு ஏற்ற வகையில், எடுத்து இயம்புவோமேயானால்,

    ஒரு உறுதியான சமுதாயத்தை, உலகுக்கே வழிகாட்டும் சமுதாயத்தை, உன்னத நெறி போற்றும் சமுதாயத்தை, நம்மால் உருவாக்க முடியும்!

    செய்வோமா?

    Share
  • கவிஞனால்தான் முடியும்!

    -சுரேஜமீ.

    கவிஞனால்தான் முடியும்! காலத்தால் அழிக்க முடியாத கருத்தைச் சொல்வதற்கு!

     

    இந்திய மண்ணின் இரண்டு இதிகாசங்கள் சொல்லும் நீதி, வாழ்க்கை இயம்பட வாழ வழிசொல்லும் ஒப்பற்ற காவியங்கள் என்பது யாவரும் அறிந்ததே!

    அதை சொல்லும் விதத்தில், எவ்வகையிலும் சளித்தவர்கள் அல்ல நம் கவிஞர்கள்!

    அதிலும் குறிப்பாக, கவிச் சக்ரவர்த்தி கம்பன், அயோத்தியா காண்டத்தில், மந்திரப் படலத்தில், ஒரு வாழ்த்துப் பா வைக்கிறான்.

    Kambanஅந்த விருத்தத்தில், கடைசி நான்கு வரிகளில், ஒரு காதையின் முழுக்கருத்தையும் சொல்லி விடுகிறான் என்பதை, என்னுடைய கோணத்தில் பார்க்க விரும்புகிறேன்.

    இதோ அந்த பாடல் வரிகள்:
    …….கூனும் சிறிய கோத் தாயும்
    கொடுமை இழைப்பக் கோல் துறந்து,
    கானும் கடலும் கடந்து, இமையோர்
    இடுக்கண் தீர்த்த கழல் வேந்தை!

    என்ன சொல்கிறான் கம்பன்? சிந்திப்போமா?

    கூனியும், இராமனின் சிறிய தாயான கைகேயியும், செய்த கொடுமையின் விளைவால், அரசாள வேண்டிய இராமன், பட்டத்தைத் துறந்து, கானகம் ஏகிக், கயவர்களின் சூழ்ச்சியால், கட்டின மனைவி சீதையைப் பிரிந்து, ஆற்றொனாத் துன்பத்திற்கு ஆளாகி, அனுமனின் உதவியால், கடல் கடந்து, தன் இமைபோல இருக்கக் கூடிய மனைவி சீதாப்பிராட்டியை துன்பத்திலிருந்து மீட்க, இழிசெயல் புரிந்த இராவணனை அழித்து, வெற்றியை ஈட்டித் தன் மனைவியை மீட்ட வேந்தன் இராமன் என்று

    இரத்தினச் சுருக்கமாக, ஈரிரண்டு வரிகளில் யாரால் சொல்ல முடியும்?

    கவிஞனால்தான் முடியும்! காலத்தால் அழிக்க முடியாத கருத்தைச் சொல்வதற்கு!

     

     

    Share
  • விநாயகர் கவசம்

    சுரேஜமீ

    வணக்கம். இங்கே கொடுக்கப் பட்டுள்ள ‘விநாயகர் கவசத்தை’ கந்த சஷ்டி மெட்டில் புனைந்துள்ளேன் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த அஷய த்ரிதியை நாளில், அனைவரும் படித்து பயனுறுமாறு வேண்டுகிறேன்.

    av

    விநாயகர் கவசம்
    சதுர்த்தியில் மலர்ந்த
    சண்முக சோதரா
    சதுர்மறை போற்றும்
    சிவனுமை பாலா
    தினம்உனைப் பாடி
    துதிசெய்து நாளும்
    உனதருள் வேண்டி
    நிதமுனைப் பணிவோம்.

    முன்வினை களைவாய்
    மூஷிக வாகனா
    என்மனம் இருப்பாய்
    ஈசன் புதல்வா
    சிந்தையில் கலப்பாய்
    சித்தி விநாயகா
    உன்பதம் சரணம்
    உமையவள் மைந்தா.

    ஒன்றுமே அறியேன்
    உலகினில் பிறந்தேன்
    உன்னடி சேர்ந்தேன்
    ஒரு வரம் தருவாய்
    நன்று மற்றன்று
    நவிலா வண்ணம்
    நந்தன விநாயகா
    நலமது அருள்வாய்.

    இருசெவி என்றும்
    இன்பமே உய்க்கும்
    நற்செய்தி நாளும்
    நயம்படக் கேட்க
    இருவிழி காணும்
    ஒரு முகக்காட்சி
    மங்கல மூர்த்தி
    நினதருள் சாட்சி.

    நாமகள் நாவினில்
    அமர்ந்து அடியேன்
    சொல்பொருள் யாவும்
    நலமென விளைய
    நுகரும் மணமே
    நறுமணமாகி,என்
    மெய்யது காப்பாய்
    கஜமுக கணபதி.

    ஐம்புலன் தன்னை
    ஐங்கரன் காப்பான்
    தினம் ஒருதடவை
    மனமது ஒன்றிப்
    பாடும் பக்தர்கள்
    பாரினில் நற்கதி
    பெறுவார் சத்தியம்
    பால கணபதியருளால்.

    அல்லல்கள் ஓடும்
    நல்லவை நாடும்
    நவகோள் அருளை
    வாரி வழங்கும்
    ஒருமுறை உன்னைத்
    தொழும்அன்பர் யாவர்க்கும்
    ஹேரம்ப கணபதி
    அருள்நமைக் காக்கும்!

    -சுரேஜமீ

    Share
  • ஓ காதல் கண்மணி – திரை விமர்சனம்

    சுரேஜமீ

    kadal

    ஓ காதல் கண்மனி – முரணில் ஒரு முத்து எடுத்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம் அவர்கள்!

    ஒரு காலக்கட்டம் வரை, நமது தமிழ்த்திரைப் படங்கள், வாழ்வியலோடு ஒன்றி இருந்தது; ஆனால், மேற்கத்திய தாக்கம், சாதனை எண்ணம், திறன் நிரூபித்தல், புதிய பரிணாமம் எனப் பல்வேறு காரணங்களால்,

    திரைப்படங்கள் ஒரு நேரம் கழிப்பானாகவும், பிரமிப்பைக் கண்ணெதிரே கொண்டுவரும் ஒரு ஊடகப் பெட்டகமாகவும் பயணிக்க,

    மிகச் சில படங்கள் இன்னமும், பழைய பாதையைத் தொட்டு வருவதாகவும் இருக்க,

    ஓ காதல் கண்மனி நம்மை சிந்திக்க வைக்கும் ஒரு இனிய பயணம் என்று சொன்னால் மிகையாகாது!

    அருமையான களம். சிறந்த கருத்தோவியம். சில ஒவ்வாமைகளைத் தவிர,

    காதல் ஒரு அன்பின் வெளிப்பாடு. அது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணுக்கிடையே வரும்போது , அதை நம் சமூகம் இன்றளவும், ஒரு அந்தரங்கமாகப் பார்த்துப் பழக்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால், அன்பு அளவற்று இருந்தும், அதை வெளிப்படுத்தும் தன்மை, நம்மவர்களுக்குத் தெரியாது. அதற்குக் காரணம், நம் சமூகக் கட்டமைப்பே என்று சொன்னால், ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

    கணவன்-மனைவி உறவில் மட்டுமே, அன்பை வெளிப்படையாகத் தெரிவிப்பதைக் காமம் சார்ந்த விஷயமாக, நான்கு சுவர்களுக்குள் மட்டுமே நடக்க வேண்டிய ஒரு கடமையாகப் பார்க்கிறது நம் சமூகம். ஆனால், இம்முறையில், மிகச் சமீப காலத்தில், பல மாற்றங்கள் வந்தாலும்,

    மாற்றங்கள் தவறான புரிதலின் காரணமாக வேறு கோணங்களில் இட்டுச் செல்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

    சமூக மாற்றங்களை உன்னிப்பாகக் கவனத்தில் கொள்வதும், அதனை நேர்த்தியாக, ஒரு சமூகத்திற்கு படைப்பதும் ஒரு படைப்பாளியின் கடமை என்பதை மிகக் கவனமாகக் கையாண்டிருக்கிறார் மணி – ஓ காதல் கண்மணியில்!

    மேற்கத்தியத் தாக்கமான ‘சேர்ந்து வாழும் முறையை’ (Living together), அறிமுகப்படுத்தி, ஒரு ஆண்-பெண் புரிதலை, ஒருவரை ஒருவர் வரம்பு மீறாமல், அதே நேரம், உண்மையான அன்பைப் பரிமாறும் ஒரு காவியமாகப் பயணிக்க வைத்து, அதற்கு ஒப்பாக ஒரு இந்தியப் பாரம்பரிய கணவன் – மனைவி கதாபாத்திரத்தையும் படைத்து, அந்த உறவின் வலிமையை, தூய்மையான அன்பின் பாதுகாப்பை, ஒரு பாடமாக சேர்ந்து வாழும் கலையைப் பின்பற்றும் ‘ஒரு ஆண் – பெண்’ உறவுக்கு வைத்து, கடைசியில், அவர்களை, நம் கலாச்சார நெறிகளைத் தழுவும் திருமண பந்தத்துக்குள் இணைத்திருப்பது பாராட்டத்தக்கது!

    கதை, களம் தாண்டி ஒரு கருத்து விதையைப் புதிய சமுதாயத்திற்குக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குனர் மணி!

    நீண்ட நாட்களுக்குப் பின் தன் கதையையும், கருத்தையும் மட்டுமே நம்பி, ஒரு நல்ல படத்தின் மூலம் தன்னை உயிர்பித்திருக்கிறார் மணிரத்னம் என்று சொன்னால்,

    திரைப்படத்தைப் பார்த்தவர்கள் மறுக்க மாட்டார்கள்!

    அவசியம் பார்க்கவும்!

    அன்புடன்
    சுரேஜமீ

    Share
  • பாரினில் யாருளர்?

    – சுரேஜமீ

    கோதையின்  நாயகனே எங்கள்
    கீதையின் திருமகனே என்றும்
    அனுபவம் தரும் வழியில்
    அறிவினைப் பெறுவதற்கு உன்
    திருநாம மெனும் அந்தத்
    தெவிட்டாத தேனெதற்கு?

    கோகுலக் களியாட்டம் முதல்                      lord-krishna
    பார்குலப் போராட்டம் வரை
    பன்முக அரிதாரம் கொண்ட
    பரந்தாமன் உனக் கென்றும்
    அவனியில் மாந்தர் படும்
    அல்லல்கள் புரியாதோ?

    பிறப்பினில் ஏது  குற்றம்
    அறம் வளர்ப்பதில் மாறு
    பட்டுப் பின் பட்டபின்
    பாடம் கற்கும் நிலையினைக்
    கொடுப்பதற்கு மண்ணில் எதற்கினிக்
    கடவுளெனும் கேள்வி?

    ஐவரை வைத்து நீயும்
    அறத்தினை நாட்டி எங்கள்
    குலத்தினைக் காப்பதற்கு நெறி
    களத்தினை ஏற்படுத்தி எம்மதி
    தனை எழுப்பி விட்ட
    அந்தக் கண்ணனெங்கே?

    யாவரும் வேண்டுவது உன்
    மாபெரும் துணையன்றி வேறு
    தேவையும் எமக்கில்லை இனி
    தூயனற் சிந்தனையில் என்றும்
    மற்றவர் துயர் களையும்
    மாண்பினைத் தருவாயா?

    ஏடுகள் சொல்வதிலும் உள்ள
    ஏற்றங்கள் தெளிவுடனே பற்றிப்
    போற்றுதல் செய்து நல்ல
    தேற்றுதல் பெற்று நாளும்
    காலத்தை வென்றிடும் உன்
    கருணையைப்  புரிவாயா?

    மாயத்திரை விலக்கி
    மந்திரங்கள் சொல்வாயோ?
    தவிக்கும் எம்முன்னே
    தந்திரங்கள் தாராயோ?
    கர்ம வினையென்னும்
    கல்லினை அகற்றாயோ?
    பாராமுக மிருந்தால்
    பரந்தாமா உனையன்றி
    பாரினில் யாருளர்?

     

    Share
  • கவி கொள்ளும் தமிழ்!

    சுரேஜமீ

     

     உன்னை அறிந்தால் – வரும் தலைமுறைக்கான வாழ்வியல் வழிகாட்டி

    கவிஞர்களைக் காலம் தன் கரங்களால் இழுத்துச் செல்லும் என்றால், கவி கொள்ளும் தமிழ் எவ்வாறு இருக்கவேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்!

    அத்தகைய வகையில், கம்பன் காவியத்தைத் தொட்ட என் எண்ணங்கள், இன்று அவன் சேய்; அன்னைத் தமிழ் தந்த தங்கக் குழந்தை; அடியேனின் தமிழுக்கு அகராதி, என்றும் நான் போற்றும், ஏழைப் பங்காளன், ஏமாற்றும் உலகில், எவரையும் மாற்றும் கவி பாடிய கண்ணதாசனின் ஒரு பாடல்,

    எப்படி முக்காலத்தையும் முத்தமிழால் இணைக்கிறது என்பதை வளரும் தலைமுறைக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்!

    முத்தையா கொடுத்த முத்தான பாடல் இது!

    கடந்த காலம்:
    தமிழகத்தை ஆண்ட சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்களின் வீரத்தையும், தமிழனின் தீரத்தையும் ஒருசேர, இரு வரிகளில் சொல்லிவிட்டானே!

    பாடல் வரிகளைப் படியுங்கள்;

    கனக விசயரின் முடித்தலை நெறித்து
    கல்லினை வைத்தான் சேரமகன்;
    இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
    இடைபட வாழ்ந்தான் பாண்டியனே!

    இருநூறு நாட்களுக்கு மேல், பள்ளியில் பாடமாகப் படித்து, ஒரு நாள் தேர்வுக்குத் தன்னைத் தயார்படுத்தும் மாணவனுக்கு, ஒரு பாடலில், வரலாற்றைச் சொல்லும் வல்லமை, கவிஞனுக்கு மட்டுமே உண்டு என்பதை மறுக்க முடியாது!

    நிகழ்காலம்:
    ஒரு குழந்தை எப்படி வளரவேண்டும்? எதை நாம் கொடுக்கிறோமோ, அதுவாகத்தான் ஆகிறோம் என்கிறது வேத நூல்கள்! ஒவ்வொரு கருவின் பிறப்பிடமும் ஒரு தாயாக இருக்கும்பொழுது, அந்தத் தாய், தன் கருவை எப்படி வளர்க்கிறாள் என்பதையும். கருவில் உருவான உன்னத படைப்பு என்ன செய்யும் என்பதையும் விளக்குகிறான்

    அடுத்த இரு வரிகளில்……

    கருவினில் வளரும் மழலையின் உடலில்
    தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை;
    களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
    காத்திட எழுவான் அவள் பிள்ளை!

    என்ன ஆழமான வார்த்தைகள்! வாழ்வின் அடித்தளத்தை எவ்வளவு உறுதியாக வடிக்கின்றான் கவிஞன்? இவைகள் தந்த வாழ்க்கை என்றாவது சோர்வாகுமா? நிச்சயமாக இருக்காது! இருந்தால், அது தமிழாக இருக்க முடியாது!!

    வருங்காலம்:
    இப்படி வரலாறும்; வளரும் முறையும் இருந்தால், வருங்காலம் உன்னை வாழ்த்தி வரவேற்கும் என்பதில் ஐயமில்லை!

    இதோ அந்த வரிகள்…..

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்?
    மாபெரும் வீரர் மானம் காப்போர்
    சரித்திரம் தனிலே நிற்கின்றார்!

    ஆக, காலம் உங்களைத் தாங்கிச் செல்லவேண்டும் என்று நீங்கள் எண்ணினால், நீங்கள் செய்ய வேண்டுவது என்ன?

    1. உங்கள் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதைப் பெற்றோர் கூறக் கேட்டு அறியுங்கள்!

    2. உங்கள் பெற்றோர்கள், உங்களுக்காகச் செய்யும் தியாகங்களைப் போற்றுங்கள்!

    3. நீங்கள் எப்படி வாழவேண்டும் என்று முடிவெடுத்துச் செயல்படுங்கள்!

    நிச்சயம் வரலாறு தன் பக்கங்களை, உங்களால் நிரப்பக் காத்திருக்கிறது!

    கவியரசரைப் பற்றி எண்ணும்போதெல்லாம், என் எண்ணம் ஊற்றெடுக்கும்! அப்படி ஒருவேளையில் எழுதியது….

    kannadasanமுத்தையா
    எனும் கடலில்
    மூழ்கும் போதெல்லாம்
    எனக்குமூச்சு
    முட்டுவதே இல்லை!

    ஏன் தெரியுமா?

    முத்தமிழே
    முத்தமிட்டால்
    மூச்சேது?
    பேச்சேது?

     

     

     

    அன்புடன்
    சுரேஜமீ

     

     

     

     

    http://kksr-aurosun.blogspot.com/

    Share
  • உன்னை அறிந்தால்!

    சுரேஜமீ.

     

    உன்னை அறிந்தால்!

    சில வேளைகளில், நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? நம்முடைய முன்னோர்கள் எத்தகைய பண்புடையவர்கள்? என்று சிந்திப்பதற்காகத்தான், ஒவ்வொரு மொழியிலும் இலக்கியங்கள் படைக்கப் படுகின்றன!

    இது வரலாறு; வரும் தலை முறைக்கான வாழ்வியல் வழிகாட்டி!

    கம்பனைப் பற்றித் தெரியாத தமிழன் இருக்க முடியாது! அத்துனை புகழ் வாய்ந்த கம்பன், தன் இராமாயணத்தின் கடைசிச் செய்யுளில், தன் இனத்தின் பெருமையைத் தூக்கி நிறுத்துகிறான் என்று சொன்னால் மிகையாகாது!
    இதோ உங்களுக்காக……

    அரியணை அனுமன் தாங்க,
             அங்கதன் உடைவாள் ஏந்த,
    பரதன் வெண்குடை கவிக்க,
             இருவரும் கவரி வீச
    விரைசெறி குழலி ஓங்க
             வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
    மரபுேளார் கொடுக்க வாங்கி
             வசிட்டனே புனைந்தான் மௌலி

    விளக்கம்:
    அரச பீடத்தை அனுமன் தாங்கிப் பிடிக்கின்றான். அங்கதன் உடை வாளை ஏந்தி நிற்கின்றான். பரதன் அரச குடையைப் பிடித்து நிற்கின்றான். இலக்குவனும், சத்ருக்ணனும் கவரி வீச, அழகிய மணம் வீசும் கூந்தலை உடைய அன்னை சீதாப் பிராட்டி பெருமிதமாய் நிற்க,

    யார் அரச மகுடத்தை வசிட்ட முனியிடம் கொடுக்கிறார்கள்?

    அங்குதான் தமிழன் பண்பாடு தலை நிமிர்த்துகிறது; இராமன் ஒரு தெய்வப் பிறவி. அருளாளர் சடையப்பர் ஒரு மனிதப் பிறவி.

    ஆனால், இந்தக் கம்பன், அந்த இராமனைப் பற்றி எழுத அருள் செய்த, பொருள் தந்த வள்ளல் சடையப்பர். ஆகக் கம்பன் முடிவு செய்கிறான்;

    இராமனுக்கு முடி சூட்ட வேண்டுமென்றால், அதற்கு அவனை விடத் தகுதி வாய்ந்த ஒருவன், அந்த மகுடத்தை இராமனுக்கு அளிக்க வேண்டுமென்று!

    அந்தத் தகுதி பெற்ற சடையப்ப வள்ளலின் மரபு வந்தோர் எடுத்துக் கொடுக்க, வசிட்ட மாமுனி கிரீடத்தை இராமனுக்குச் சூட்டுகிறார் என்று புனைந்தான்.

    ஒரு அவதார புருஷனை விட உயர்ந்தது, ஒரு மானுட உள்ளம் என்பதை, ஆண்டவனுக்கே எடுத்துரைத்தான் என்று சொன்னால் …

    நண்பர்களே, உணருங்கள் உங்கள் பண்பு நெறிகளை! போற்றுங்கள் உங்கள் முன்னோர்கள் கட்டிக் காத்த உயரிய குணங்களை!!

    அன்புடன்
    சுரேஜமீ

     

     

     

     

    http://kksr-aurosun.blogspot.com/

    Share
  • சார்லி சாப்ளின்

    -சுரேஜமீ

    சார்ந்தோரின் மகிழ்வுக்கு
    சாப்ளின் என்று,
    சொன்னால் போதும்
    சலிப்பே பறந்துவிடும்!                                  chaplin

    நவரசமும் இருந்தாலும்
    நகைச்சுவைதான் பிரதானம்
    நானிலத்தில் எவரும்
    நாளெல்லாம் மகிழ!

    வாழ்க்கை வாட்டத்தில்
    வீழ்வோர் பலரிருக்க
    வாழ்வே சாதனையாய்
    வாழ்ந்தவர்தான் சாப்ளின்!

    எத்தனையோ
    சொல்வதற்கு
    ஏறிவரும்
    சிந்தையிலே….

    ஐந்தில் ஆரம்பம்
    அகிலம் ஓரங்கம்
    காண்போர் களிப்பதற்கு
    குரலெனும் மொழியெதற்கு?

    மூன்றே வருடத்தில்
    மூவிரண்டு நூறிலிருந்து
    மில்லியனும் கைக்குவர
    மிடுக்கான உழைப்புமது!

    பாட்டாளி வியர்வையையும்
    பாதகர்கள் போக்கினையும்
    பாங்குடனே சித்தரித்துப்
    பார்ப்பதற்குத் தந்தானே!

    அமெரிக்கா துரத்தியது
    ஆஸ்காரும் அணைத்ததுவே!
    ஆங்கிவன் இல்லையெனில்
    ஆறுதலும் யாருளரோ?

    நகைச்சுவையும்
    நாயகனும்
    நாடு தாண்டி
    நமை நாட

    கமலின் வடிவத்தில்
    கண்டோமே
    சாப்ளினை
    சிகரம் தந்த புன்னகையில்!

    இந்நாளில் அவன்
    பிறந்தான்!
    வரும் நாளும்
    அவன் நினைவு!
    ஆண்டொன்று போனாலும்
    ஆசையுடன் காத்திருப்போம்!!

     

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – தகவல் தொடர்பு முறைகள்

    சுரேஜமீ.

    முகங்கள் பார்த்து கதைகள் பேசிக் களித்த காலங்கள் கடந்து, நாம் வெகுதூரம் வந்ததற்கான சாட்சியே, நாம் இன்றைக்கு இணையத்தை, உற்ற தோழனாகவும்; தொடர்பாகவும் கொண்டுள்ள காட்சி எனலாம்!   காலம் தன் வேகத்தைக் கூட்டவுமில்லை; குறைக்கவுமில்லை! ஏனோ நாம் மட்டும் இன்னமும், காலம் ஓடுகிறது என்ற சொல்லை; நம் இயல்புக்குத் தகுந்தவாறு பயன்படுத்தத் தவறுவதில்லை.  மனிதத் தொடர்புகள்  தூரமாகும்போது, அதனை நம் அருகே கொணரத் துணை புரியும் இணையத் தொடர்பு சாதனங்களையும், அதைக் கையாளும் முறைகளையும், சற்று உங்கள் மனதில் பதிய வைப்பதுதான், இந்தக் கட்டுரையின் நோக்கம்!

     

    இந்தக் கட்டுரையில் மூன்று முக்கியத் தகவல் தொடர்பு முறைகளைப் பற்றியும்; அதனைக் கையாளும் வழிகள் பற்றியும் குறிப்பிட முனைகிறேன்;

    1. முகநூல் (Facebook)
    2. ஏகிநிற்பது என்ன? (Whatsapp – இதற்குத் தமிழாக்கம் என் சொந்த முயற்சி; இணையான வார்த்தைகள் வரவேற்கப் படுகின்றன; அதே சமயம் இச்சொல்லே பழக்கத்திற்கு வந்தால் அதன் பெருமை என் தமிழ்த்தாய் தந்த எண்ணத்திற்கு)
    3. குறியீட்டுச் செய்தி (Twitter) – இத் தமிழாக்கமும் என் சொத்த முயற்சியே! குறியீடுகள் அதிகம் பயன்படுத்தப்படுவதால், ‘குறியீட்டுச் செய்தி’ எனப் பெயரிட்டுள்ளேன்.

     

    முகநூல் (Facebook):

    ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களுள் ஒருவரான மார்க் சுக்கெர்பெர்க் என்பவரால், தன் சக மாணவர்களோடு ஒரு தொடர்பினை ஏற்படுத்த செய்யப்பட்ட ஒரு முயற்சி, இன்று உலகத்தையே தன் தொடர்பில் வைத்திருப்பதோடு, உலக அளவில் ஒரு ஒப்பற்ற தகவல் தொடர்பு ஊடகமாகவும், மொத்த இந்தியாவின் மக்கள் தொகையை விஞ்சும் அளவிற்கு, சற்றேறக் குறைய 130 கோடிக்கும் மேலான பயனாளிகளைக் கொண்டதாகவும், சுமார் 21 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டுவதாகவும் வளர்ந்திருக்கிறதென்று சொன்னால், அதன் வளர்ச்சியை உங்களின் மனக்கண் முன் கொண்டு வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு!

    முகநூலின் பயன்

    இற்றைக் காலங்களில், உலகம் ஒரு சின்ன உள்ளங்கைக்குள் அடங்குவது போன்று சுருங்கிவிட்டது.  சிறுவனாக இருந்த பொழுது, முகவையிலிருந்து சென்னை பெருந்தூரமாகத் தெரிந்தது என் போன்றோர்க்கு; ஆனால், இன்று படித்த குடும்பங்களில், வீட்டுக்கு ஒரு பிள்ளை வெளிநாட்டில் பணி செய்யும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது என்று சொன்னால், ஆச்சரியம் ஏதுமில்லை.  இத்தகைய சூழலில், தொலைவில் இருப்பவர்களோடு, அடிக்கடித் தொடர்பில் இருப்பதற்கு, நாம் தொலைபேசியையோ, அலை பேசியையோ உபயோகப் படுத்தினால், மிகவும் அதிகமான செலவு பிடிக்கும்.  அதே வேளையில், நமக்கு ஒரு முகநூல் கணக்கு இருந்தால், நம்மால், சுலபமாக நம் உறவுகளை அவர்களின் முகநூல் கணக்கோடு இணைத்து, தினமும் செய்திகளப் பகிர்ந்துகொள்ள ஏதுவாக இருக்கும்!  சரிதானே?

     எப்படித் துவங்குவது?

    படித்தவர்களே சில நேரங்களில், முதன் முதலாக ஒரு செயலைச் செய்யும்போது, ஒரு தயக்கம்; ஒரு சிறிய அச்சம் அல்லது ஏன்? எதற்கு என்னும் கேள்வியால், அச் செயலைக் காலம் தாழ்த்துவதோ அல்லது தவிர்ப்பதோ உண்டு! அவர்களுக்கான ஐயப்பாடுகளை நீக்குவதும், என்ன செய்யவேண்டும் எனப் பகர்வதும்தான், இணைத்துள்ள நிழற்படமும் அதற்கான விளக்கமும்!

    சுரேஜமீ

    இணைத்துள்ள படத்தில் எண் வரிசைப் படி, நாம் கொடுக்கவேண்டிய தகவல்களைப் பார்க்கலாம்;

    1. தாங்கள் பெயர்.  இங்கே உங்களின் பயன்பாட்டுக்கேற்றவாறு, நீங்கள் தகவல்களைப் பகிரலாம்.  பயன்பாடு என்று சொல்லும்போது, கீழ்க்காணும் ஏதேனும் ஒன்றுக்கு ஏற்ப, உங்களின் சுய தகவல் பரிமாற்றம் இருக்க வேண்டும்;
    • குடும்ப உறவுகள் மற்றும் துறை சார்ந்த நண்பர்கள் மட்டும்
    • நட்பு வளைய மேம்பாடு மற்றும் பொழுது போக்கு
    • திறன் வெளிப்படுத்தல்
    • இன்ன பிற

    இங்கு நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியக் காரணியே, உண்மைத் தகவல் பகிர்வதா? அல்லது புனைப் பெயர் மற்றும் வெற்றுத் தகவல் பகிர்வதா என்பதே!

    1. இது தங்களின்  முதல் தகவலைத் தழுவியது.
    2. உங்களின் உண்மையான மின்னஞ்சல் கணக்கு ஒன்றைப் பகிர்தல் அவசியம். முகநூல் கணக்கு துவங்கிய பின், துவங்கிய நபரைச் சரி பார்க்கும் அஞ்சல், இந்த முகவரிக்கு அனுப்பப்படும் என்பதை நினைவில் கொள்க!

    இதே தகவலை, இதற்கு அடுத்த தகவல் நிலையிலும் திரும்பப் பதிவிடுங்கள்

    1. உள் நுழை பாதுகாப்பு சொல்.
      1. தாங்கள் எளிதில் நினைவில் வைக்கத் தக்க ஒரு சொல்லைப் பயன்படுத்துதலும்;
      2. அச்சொல்லில்
        1. ஒரு தலைச் சொல்லும்(Capital Letter);
        2. ஒரு எண்ணும் (Number);
    • ஒரு அனுமதிக்கப்பட்ட சிறப்புக் குறியீட்டுச் சொல்லும் (Special Character) இருந்தால் நல்லது!
    1. இது தங்களின் முதல் தகவலைத் தழுவியது.  ஆனால், கண்டிப்பாக ஒரு தகவலைப் பதிதல் அவசியம்!
    2. இதுவும் தங்களின் முதல் தகவலைத் தழுவியது.  ஆனால், கண்டிப்பாக ஒரு தகவலைப் பதிதல் அவசியம்!

    மேற்கூறிய தகவல்கள் நிலையிட்ட பின், “Sign Up” அழுத்த, உங்களின் முகநூல் கணக்கு துவங்கப்பட்டு, கணக்கு உங்களுடையதுதானா எனச் சரி பார்க்கும் மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பப்படும்.  மின்னஞ்லில் குறிப்பிட்டுள்ள தொடர்பானைச் சொடுக்க, உங்கள் முகநூல் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்!

    என்ன முகநூல் கணக்குத் துவங்கலாமா?  இந்தியாவில் இதுவரை 10 கோடிக்கும், அதிகமானவர்கள், முகநூல் கணக்கு வைத்திருப்பதாக ஒரு செய்தி சொல்கிறது  கணக்குத் துவங்குவது சம்பந்தமாக, மேலதிகத் தகவலுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள, இணைப்பானைச் சொடுக்கவும்!

    http://www.wikihow.com/Set-up-a-Facebook-Account

    குறைந்த பட்ச பாதுகாப்பு

    முகநூல் கணக்கு வைத்திருப்பதன் நோக்கமே, நாம் நினைக்கும் செய்திகளைத் தன் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதுதான்.  அத்தகைய சூழலில், நாம் பகிரும் தகவல்களில், பெரும்பாலும், நம்முடைய அல்லது குடும்பத்தாருடைய நிழற்படங்கள்; காணொளிக் காட்சிகள், பிற ஆவணங்கள் என நிரம்பி இருக்கலாம்!  ஆனால், மேற்கூறிய அனைத்தும், ஏதோ ஒரு வகையில், இன்றைக்கு இருக்கக் கூடிய விஞ்ஞான வளர்ச்சியில், திரித்துப் பகிரக் கூடிய வாய்ப்பு இருப்பதை நாம் அறிந்திருத்தல் அவசியம்!

    அதற்கான சில பாதுகாப்பு குறித்த தகவலைப் பார்ப்போமா?

    1. உங்கள் சுய குறிப்புகளின் பாதுகாப்பு குறித்து, நீங்கள் முடிவு எடுக்க ஏதுவாக, எது மற்றவர்களுக்குத் தெரியவேண்டும்? எது தெரிய வேண்டுவது இல்லை என்பதைத் தீர்மானித்து, அதற்கேற்றார் போல, உங்கள் சுயதகவல் பரிமாற்றம் செய்யலாம். இதோ அதற்கான புரிதல் படம்;

    சுரேஜமீ1

    1. நிழற்படங்களை யாருடன் நாம் பகிரவேண்டும் என்பதையும்; அதன் பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்துவது என்பதையும் விளங்கிக் கொள்ள, கீழுள்ள படத்தைப் பார்க்க;

    சுரேஜமீ2

    பெரும்பாலும், நிழற்படத்தின் வலதுமுனையில், பூமிப் பந்து போன்ற உருண்டைச் சின்னத்தில், சொடுக்க, அது மேற்காணும் தகவல்களைப் பகிரும்!  அதற்கேற்றவாறு, உங்களின் நிழற்படம், யார் பார்க்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.  குறிப்பாக, சில படங்களை நாம் சேமிப்பில் வைக்கவும் முகநூலை உபயோகிக்கலாம்.  அத்தகைய சூழலில், நிழற்படங்களை நாம் மட்டுமே பார்க்கக் கூடிய வகையில், பூட்டு சின்னம் (Only Me) அமைப்பில் சொடுக்க, அப்படம் மிகுந்த பாதுகாப்போடு, நாம் மட்டும் பார்க்க ஏதுவாக அமையும்.

    என்ன உபயோகமான தகவல்தானே?

    1. அடுத்து, நம்மை யார் தொடுப்புச் செய்வது; நம் நிலைத்தகவலில் அடுத்தவரை தகவல் பதிய அனுமதிப்பதா? வேண்டாமா?

    சுரேஜமீ3

    1. நமக்கு யார் நட்பு விண்ணப்பம் அனுப்புவது என, ஒவ்வொன்றையும், நேர்த்தியாக, நாமே தீர்மானிக்க முடியும்; அதற்கான விளக்கப் படம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது!

     

    சுரேஜமீ4

     

    1. சிலவேளைகளில், நாம் நல்லவர் என நட்பு விண்ணப்பங்கள் வரவேற்கும்போது, போகப் போக, அவர் பகிரும் தகவல்கள், நமக்கு சில சங்கடங்களையோ, அல்லது கருத்து ஒவ்வாமையையோ ஏற்படுத்தலாம். அத்தகைய வேளையில், நீங்கள் அவருடனான தொடர்பைத் துண்டிக்க நினைக்கலாம்.  அதை எவ்வாறு செய்வது என்பதை விளக்கும் சுட்டி, இதோ உங்களின் பார்வைக்கு;

    சுரேஜமீ5

    மேற்கூறிய இந்த ஐந்து தகவல்களும், உங்கள் முகநூல் கணக்கை நிச்சயம் ஒரு பாதுகாப்பாக வைத்திருக்கத் தேவையான மிக முக்கியக் கூறுகளாக இருக்கும் என நம்புகிறேன்!  மேலும் அதிகத் தகவல்களுக்கு, முகநூல் பக்கத்தில் உள்ள பாதுகாப்பு குறித்த விளக்கங்களைப் பார்க்கவும்!

     

    ஏகிநிற்பது என்ன? (Whatsapp):

    அடுத்து நாம் காண இருப்பது ஏகிநிற்பது என்ன? (Whatsapp) என்ற தகவல் தொடர்பு முறை

    இன்றைய அலைபேசி உலகில், அவரவர் கைகளை அலங்கரிப்பதில், நவீன கைப்பேசிகளின் பங்கை யாராலும் மறுக்க முடியாது.  அவற்றுள் இரு முக்கிய மென்பொருள்கள் உலகளாவி இருக்கின்றன.  அவை முறையே ஆன்ராய்டு மற்றும் ஆப்பிள் இயக்கிகள்!  இவற்றுள் ஆன்ராய்டு இயக்கி மிக எளிமையாக, அனைத்து பயன்பாட்டுக்கும் சாதகமாக இருப்பதாக எண்ணுகிறேன்.  சமீப காலமாக, “ஏகிநிற்பது என்ன” எனும் பயன்பாட்டில், ஆன்ராய்டு இயக்கி மூலமாக, ஒருவருக்கொருவர் பேசவும் முடிவதாக அறிகிறேன்.

    மிகக் குறுகிய காலத்தில், மிகப் பரவலாக்கப் பட்ட மகத்தான ஒரு தகவல் தொடர்பு முறை ஏகிநிற்பது என்ன? (Whatsapp) என்று சொன்னால் மிகையாகாது.  இது முதன் முதலில் புழக்கத்திற்கு வந்தது 2009ம் ஆண்டு.  கடந்த ஐந்து ஆண்டுகளில், இதன் அபரிமித வளர்ச்சி கண்டு, முகநூல் நிறுவனத்தார், இந்த தொடர்பு முறையை, அதன் உரிமையாளர்களிடமிருந்து, சற்றேறக்குறைய ரூபாய் இரண்டாயிரம் கோடிக்கு வாங்கியிருக்கிறார்கள், என்றால், இதன் வளர்ச்சி, எத்தகையது என்பதை வாசகர்களாகிய நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்!

    கடந்த ஜனவரி 2015 வரை, சுமார் 70 கோடி உபயோகிப்பாளர்கள் இருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது! அதில், சுமார் 7 கோடி உபயோகிப்பாளர்கள் இருப்பதாகவும் சொல்கின்றனர். (http://en.wikipedia.org/wiki/WhatsApp)

    இன்று ஒவ்வொரு அமைப்பு சார்ந்த குழுமங்களும் பெரும்பாலும், தன் அங்கத்தினர்களுடனானத் தொடர்புக்கு, ஏகிநிற்பது என்ன? (Whatsapp) என்ற முறையைத் தான் பயன்படுத்துகின்றன.

    அவை பற்றிச் சில குறிப்புகள்!

    1. இதில் கணக்குத் துவங்குவதற்கு அடிப்படைத் தேவை ஒரு நவீன கைப்பேசி.
    2. ஏகிநிற்பது என்ன? (Whatsapp) என்ற பயன்பாட்டுத் தளத்தின் மூலம், நாம் செய்திகள், நிழற்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியும்.

    குறைந்த பட்ச பாதுகாப்பு முறைகள்

    1. பல நேரங்களில், நம்முடைய கவனக் குறைவின் காரணங்களால், மிகுந்த கன அளவுடைய காணொளிக் காட்சிகள் மற்றும் நிழற்படங்கள், தானியங்கிப் பதிவிறக்கம் (Auto download) செய்யப்படுகின்றன. அதனால் நமக்கு ஏற்படும் பொருட்செலவு மிகுதியாகும். இதைத் தடுப்பதற்கு, கீழ்காணும் சுட்டியைக் கவனிக்கவும்.

    சுரேஜமீ6

    2. நம்முடைய பயனீட்டு அளவுகளை அவ்வப்போது கண்காணிப்பது எப்படி என்பதை விளக்கும் சுட்டி

    சுரேஜமீ7

    3. சில வேளைகளில், விரும்பத்தகாத செய்திகளும், காணொளிப் படங்களும் வரும்போது, அத்தகைய செய்தி அனுப்பும் நபர்களைத் தடை செய்வது எப்படி என்பதை விளக்கும் படம்.

    சுரேஜமீ8

     

    4. பலருடைய அனுபவமே, நாம் விரும்பும்பொழுது, நம்முடைய கைப்பேசியில், தேவையான நிழற்படமோ, காணொளியோ எடுக்கப் போதுமான இடவசதி இல்லாமல் இருக்கும்.  இதற்குக் காரணம், நாம் அவ்வப்பொழுது அழிக்காமல் வைத்திருக்கும் சேமிப்புச் செய்திகளும்; படங்களுமே!  அதனை எவ்வாறு சுத்தப்படுத்தி கைப்பேசிக்கான சேமிப்புப் பகுதியை தகுதிப்படுத்துவது என்பதை விளக்கும் படம்.

    சுரேஜமீ9

    பெரும்பாலும் நாம் அறிந்த செய்திகளாகவே இருந்தாலும், சில வேளைகளில் அனைத்தும் ஒருங்கிணைத்து ஒரு தொகுப்பாகப் பார்க்கும்போது அது நம் மனதில் எளிதில் தங்கிவிட ஏதுவாக இருப்பதால், நிச்சயம் உங்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

     

    குறியீட்டுச் செய்தி  (Twitter):

    தகவல் பரப்பும் களமாக ஒரு குறுகிய காலத்தில் அசுர வேகத்தில் வளர்ந்ததுதான் இந்தக் குறியீட்டுச் செய்தி(Twitter) என்று சொன்னால் மிகையாகாது.  2006ம் ஆண்டில் நான்கு நபர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய இந்தத் தகவல் பரிமாற்ற முறை, இன்று உலகில் ஏறக்குறைய 28 கோடி பயனீட்டாளர்களைக் கொண்டதாக உள்ளதாக ஒரு இணையச் செய்தி கூறுகிறது. (http://en.wikipedia.org/wiki/Twitter)

    அவை பற்றிச் சில குறிப்புகள்!

    • இது பெரும்பாலும் செய்தியைத் துரிதமாக அனுப்புவதற்கு உதவுகிறது.
    • மிக அதிக பட்சமாக 140 எழுத்துக்கள் மட்டுமே உபயோகிக்க முடியும்.
    • மிக அதிகபட்ச வாசகர்களைச் சென்றடையும் வல்லமை பெற்றது.
    • வணிக உபயோகத்திற்கு ஏற்ற உன்னதமான தகவல் பரிமாற்ற முறை!

     

    முடிவுரை

    இதுவரை நாம் பார்த்த இந்த மூன்று விதமான தகவல் பரிமாற்றக் களங்களையும், அதற்கேற்ற செயல் வடிவத்தில் பயன்படுத்த கீழ்க்காணும் விதத்தில் பிரிக்க முற்படுகிறேன்.

    1. உறவுகளோடு ஒட்டி இருக்க ‘முகநூல்’ (Facebook)
    2. குறுஞ்செய்திகள் மற்றும் காணொளிப் பரிமாற்றத்திற்கு ‘ஏகி நிற்பது என்ன? (Whatsapp)
    3. வணிக மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கு ‘குறியீட்டுச் செய்திகள்’ (Twitter)

    ஆக, நம் வாழ்வில் அன்றாடம் பயன்பாட்டில் உள்ள மிக முக்கிய மூன்று தகவல் பரிமாற்று வழிமுறைகளைப் பற்றி எனக்குத் தெரிந்த வகையில், உங்களின் சிந்தனைக்குப் பகிர்ந்த இந்த விடயங்கள், உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    Share
  • அண்ணல் அம்பேத்கார் சொல்பற்றி வாரீர்!

    -சுரேஜமீ

    அரசியல் சாசன
    ஆசான்!
    அடித்தட்டு மக்களின்
    நேசன்
    அனைவரும் சமமேயென்ற                           ambetkar
    தாசன்!

    சட்டத்தின் சமத்துவம்
    சரிநிகர் சென்று
    சாமானியனை அடையச்
    சரித்திரம் படைத்தோன்!

    நாட்டிற்கு ஒரு சட்டம்
    வீட்டிற்கும் அது பொருந்தும்
    வீணில் எதற்கு ஒரு பிரிவு
    விழிப்புடன் இருந்தால் என்றோன்!

    ஒடுக்குதல் என்றும் தீதே
    ஒற்றுமை நல்க வாழ்வே
    ஏற்றுதல் வேண்டும் நாமே
    வேற்றுதல் என்று ஒதுக்கா!

    தாழ்ந்தவர் மேலே வந்தால்
    தாழ்வே இல்லை வாழ்வில்
    உயர்த்திட வேண்டிச் சட்டம்
    செய்திட்ட அண்ணல் காரே!

    சமூக நீதி வேண்டிச்
    சாசனத் திருத்தம்
    செய்த சாதனையாளர்
    சாகேப் பிறந்த நாளிது!

    நாளும் அவர்புகழ் பாடி
    நாடும் போற்ற நாடி
    நானிலத்தில் இனி
    நசுக்கப்பட்ட இனமில்லை
    என வாழ்ந்து காட்டுவோம் வாரீர்!
    அண்ணல் அம்பேத்கார் சொல்பற்றி வாரீர்!!

     

    Share
  • இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    -சுரேஜமீ

    இளமை பொங்க
    மனங்கள் இனிக்க
    உறவுகள் தழைக்க
    உன்னதமாய் வரும்
    மன்மத ஆண்டே!                                         chittirai

    மாற்றங்கள் நிகழ்ந்து
    ஏற்றங்கள் பெற்று
    தோற்றங்கள் மாறிச்
    சாற்றிட எங்கணும்!

    அன்னைதந்தை போற்றி
    அவர் நலம் காத்து
    அகிலத்தில் எவரும்
    அவர்நிகர் இல்லையென!

    வீடுகள் தோறும்
    வீணில் செல்நீரால்
    பேணியே வளர்ப்போம்
    பண்புடன் மரங்களென!

    தேவைக்கு ஏற்பச்
    செலவுகள் செய்துச்
    சேவைக்கும் வாய்ப்பாய்ச்
    சேமிப்பை வளர்ப்போமென!

    மானுடம் போற்றும்
    மரபுகள் காத்து
    வான்மழை நிகராய்
    வையகம் அணைப்போமென!

    சாதிகள் தொலைந்தன
    வீதிகள் கலைந்தன
    நீதிகள் போற்றிநற்
    சேதிகள் சொல்வோமென!

    வரம்பல தந்திடும்
    நலம்பல வந்திடும்
    வளம்பல பெற்றுநல்
    வாழ்வே சிறந்திடும்

    இனிய தமிழின்
    ஈராறு மாதங்களில்
    முதலாய் வந்து
    முத்தாய்த் தொடங்கும்

    சித்திரை மலராள்
    செங்கதிர் அணிந்தாள்
    முத்திரை பதித்தே
    எத்திசை முழங்க!

    மன்மதன் தாங்கி
    மானுடம் செழிக்க
    மங்களமாய் வரும்
    மங்கையும் அவளே!

    புத்தாண்டு மகளே!!
    இருகரம் கூப்பித் தமிழர்கள் அழைக்கின்றோம்
    இனிய தமிழ்ப் புத்தாண்டே வா  என!! 

     

    Share
  • இறைவன் சிரிக்கின்றான்!

    -சுரேஜமீ

    அன்பிற்குத் தாய் தந்தேன்
    ஆற்றலுக்கு மனம் தந்தேன்
    இயல்பிற்கு மொழி தந்தேன்
    ஈகைக்குக் குணம் தந்தேன்
    உறவுக்குக் கொடி தந்தேன்
    ஊக்கத்திற்குக் கை தந்தேன்
    எப்போதும் மகிழ்விற்கும்
    ஏற்றதொரு வாழ்விற்கும்
    ஐவகை நிலம் தந்தேன்
    ஒற்றுமையாய் இருக்கவேண்டி
    ஓதும் நெறிகள் பலதந்தேன்
    ஒளவைத் தமிழும் தந்தேன்
    அஃதெல்லாம் மறந்தாய்!

    அணிசேர்த்தாய்
    ஆற்றாது;
    இன்சொல் பேச மறுத்தாய்;
    ஈன்ற தாய்கூடப் புறக்கணித்தாய்;
    உண்மையை
    ஊமையாக்கினாய்;
    எல்லாம் ‘நான்’
    ஏகி நின்றாய்;
    ‘ஐயோ பாவம்’ அடியோடு மறந்து நின்றாய்;
    ஒன்றும் புரியாமல்;
    ஓடும் வாழ்க்கையில்
    நிற்கும்
    உனைப் பார்த்துச்
    சிரிக்கின்றேன் நான்!

    படைப்பில் குறையில்லை;
    பார்த்தும் தெளிவில்லை!
    புவியில் நீ ஆடும்
    ஆட்டம் நிற்கும் வேளையிலே…
    என்னை அழைக்கின்றாய்
    குறையே சொல்கின்றாய்
    நிறையை மறுக்கின்றாய்
    பேதம் அறுக்கின்றாய்
    வேதம் பேசுகிறாய்
    வாழ்க்கை நீடிக்க
    வேண்டுதல் செய்கின்றாய்!

    வாழும் காலத்தில்
    அத்தனை நான் செய்தும்
    வழித் துணையாயிருந்தும் பேதையாயிருந்து
    போதை தெளிந்ததுபோல்
    நிற்கும் உனைப்பார்த்துச் சிரிக்கின்றேன் நான்!!

    இருப்பே
    இறப்பை மறந்துவிட்டு
    இருப்பைக் கேலியாக்கும்
    இதுவா வாழ்க்கை?
    சிந்தி!

    இறைவன் நானிருக்க;
    எவனும் இல்லையெனும்
    இறுமாப்பை விட்டொழித்து
    இனிமையாய் வாழ்ந்து பார்!!
    இருவரும் சிரிக்கலாம்
    இனிமையாய் இருக்கலாம்!!

    இங்கே சற்று உயிரோடு மெய் விளையாடியிருக்கிறேன்…
    உன் பொய்யை
    எடுத்துரைக்க!
    எண்ணிப் பார்த்து
    ஏற்றம் காண்!
    சேர்ந்து சிரிப்போம்
    அதுவரை
    நான் சிரிக்கின்றேன்!!

     

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    — சுரேஜமீ.

     

    நான் பார்த்த எம்.ஜி.ஆர்

    அப்பொழுது எனக்கு ஐந்து வயதிருக்கும் என நினைக்கிறேன். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, களத்த்தில் நிற்கும் ஜாம்பவான்களுக்கிடையே, புதிதாய் முளைத்த இலை வருகிறது! முதன் முதலில் எங்கள் வீட்டில், DMK & ADMK என்ற சொற்கள் உபயோகிகப் படுகின்றன. அதுதான், என் முதல் பசுமையான நினைவு மக்கள் திலகம் பற்றி! (1976-77).

    அதன் பின்னர், வெள்ளித் திரையில் நான் பார்த்த பல திரைப்படங்கள்! ஒரு காலத்தில் காலை, பகல் மற்றும் இரவுக்காட்சியென மூன்று வேளைகளிலும் பைத்தியமாக என் தந்தையுடன் பார்த்த திரைப்படங்கள் சொன்னது …
    யார் இவர் என!

    மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு
    மாலைகள் விழவேண்டும்!

    எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

    நான் ஆணையிட்டால்; அது நடந்து விட்டால்
    இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்!

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் !

    என எத்தனையோ பாடல்களின் வரிகள் என் இரத்தத்தில் கலந்து இரத்தத்தின் இரத்தமாக்கிய தருணங்கள் பொன்னானவை என்றால் மிகையாகது!
    தமிழின் வார்த்தைகளை வாழ்க்கையாக்கிய வள்ளல்தான் புரட்சித்தலைவர்! இன்றைக்கு இருக்கக்கூடிய பல அரசியல் தலைவர்களை இனம் கண்டு படிக்க வைத்து, வாழ்க்கை கொடுத்தவரை வள்ளல் என்றுதானே தமிழ் சொல்கிறது! கர்மவீரர் காமராஜருக்குப் பின் கல்வியின் வலிமையை அறிந்து அதைக் கடைக்கோடித் தமிழனும் பெறவேண்டுமென்றும், பட்டினி பள்ளிக் கல்வியைத் தடுக்கக் கூடாதென்றும், சத்துள்ள உணவு தந்த அன்னை சத்யாவின் புதல்வர்தான் எம்.ஜி.ஆர்!

    தலைவனுக்கு எடுத்துக்காட்டு:
    அடுத்து நான் பார்த்த எம்.ஜி.ஆர் ஒரு பத்து பதினோரு வயது இருக்குமென நினைக்கிறேன்! முகவை மாவட்டம் மிகவும் பின் தங்கிய மாவட்டம்; வானம் பார்த்த பூமி. மக்கள் கல்வி, பொருளாதாரம், வாழ்வாதாரம் என அனைத்திலும் பின் தங்கியிருந்த காலம். சாதிக்கலவரம் கோலோச்சிய நேரம். (1981).

    அப்படி ஒரு கலவரத்தில், முகவையும்; சுற்று வட்டாரமும் பற்றி எரிகிறது! வீடுகளை விட்டு வீதிகளில் செல்கின்றனர் மக்கள். உடமைகள் போனால் என்ன; உயிரல்லவா முக்கியம் என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் தஞ்சம் தேடி அலைகிறது! வீடுகள் தீக்கிரையாக்கப் படுகிறது! எங்கு பார்த்தாலும் வெட்டு; குத்து; கொலை; மனித உயிரைக் குடிக்க மனிதனே துடிக்கின்ற அவலம்! ஊரடங்கு பிறப்பிக்கப் படுகிறது. கலவரம் கட்டுக்குள் வருகிறது.

    மக்களின் தலைவர், மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வருகிறார். என்னுடைய கிராமத்திற்கு மிக அருகில் உள்ள கிராமத்திற்கு! அவரது கண்கள் பனிக்கின்றன! வேதனை அவர் நெஞ்சை அடைக்கிறது! பார்த்த அத்துனை உள்ளங்களும் உடைந்து உருகுகின்றன! இதுதான் ஒரு தலைவனுக்கு எடுத்துக்காட்டு என என் பிஞ்சு நெஞ்சில் அன்று விதைத்த விதைதான் இன்னும் என்னை மனிதாபிமானமுள்ள மனிதனாக வைத்திருக்கிறதென்று பெருமைப்படுகின்ற தருணங்கள் அவை!

    வாழ்க்கையே பார்த்து அஞ்சிய தலைவன்:
    அடுத்து வருவதோ, எம் இனப் பிரச்சினை. நாங்கள் இருப்பதோ முகவை. கரைக்கு இந்தப் பக்கம் ராமேஸ்வரம். அந்தப் பக்கம் மன்னார். ஈழத்தின் இனவாதம் உச்சத்தில் இருக்கிறது. பிரித்தானிய கொள்கையை; பிரித்தாளும் சூழ்ச்சியை இலங்கைப் பேரினவாதம் தமிழ் குழுக்களுக்குள் வித்திட்டு, இரண்டு பக்கங்களிலும் (ஒன்று அரசாங்கம்; மற்றொன்று போராடும் தமிழ் வர்க்கம்) நம் இன மக்கள் அவதியுற்று அடைக்கலம் நாடி தாய்த்தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்! (1981-82).

    மக்களுக்காகவே தலைவனானவனாயிற்றே. எப்படிப் பொறுப்பான்? அகதிகளுக்காகவே, அன்றைக்கு ஒரு அமைச்சகத்தை உருவாக்கி, அதற்கு அமைச்சராக அன்றைய முகவை சட்ட மன்ற உறுப்பினர், அருமை அண்ணன் மறைந்த திரு. டி. இராமசாமி அவர்கள் அமைச்சராக்கப் படுகிறார்கள்! அதுமட்டுமா? அதன்பின் மக்கள் திலகம் செய்த உதவிகள் இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக ஏராளம்! அது நம் நெஞ்சத்தில் என்றும் நிலழாடும்!

    வாழ்க்கையப் பார்த்து அஞ்சிய தலைவர்களுக்கிடையே, வாழ்க்கையே பார்த்து அஞ்சிய தலைவன் ‘மக்கள் திலகம்’ என்றால் மிகையாகாது! முன் வாழ்க்கையின் வறுமை தந்ததுதான் பின் வாழ்க்கை என்பதனால் தானோ, மக்களின் வறுமையை ஒழிக்க எண்ணிய வள்ளலாகத் திகழ்ந்த ஒப்பற்ற, மாற்றாரும் வணங்கும் தலைவராக எம்.ஜி.ஆர் விளங்கினார்.

    தமிழுக்கும், தமிழர்களுக்கும் செய்த தொண்டுகள்:
    பொன்மனச் செம்மல் தமிழுக்கும், தமிழர்களுக்கும் செய்த தொண்டுகள் ஏராளம்; அதில் முத்தாய்ப்பான சிலவற்றைப் பார்போமா?

    1. முதலில் வருவது நான் வணங்கும் ஆசான், என் தமிழின் தடாகம்; தமிழ்த்தாயின் இளைய மகன் முத்தையா எனும் கண்ணதாசன்; கவிக்கெல்லாம் அரசன்; கலைவாணியின் அருள்பெற்ற கவியரசரை அரசவைக் கவிஞராக அமர்த்தி அழகு பார்த்தது! (1978)

    2. தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தியது. எத்தனை பேருக்கு இது நினைவில் இருக்குமெனத் தெரியவில்லை! (உதாரணத்திற்கு: றா, னா, ணா, லை, ளை, னை, ணை என்பன)

    3. சங்கம் வளர்த்த மதுரையில், தமிழுக்கு ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடத்தித் தமிழ் அறிஞர்களைக் கொளரவப்படுத்தியவர்!

    4. கல்லாதோரில்லாத் தமிழகத்திற்காக ‘முதியோர் கல்வி’!

    5. தமிழுக்கென்று ஒரு பல்கலைக்கழகம்!

    6. இலவச பாடநூல் வழங்கும் திட்டம்!

    7. ஈழப் பிரச்சினைக்கு ஆற்றிய பணிகள்!

    என அடுக்கிக்கொண்டே போகலாம்; ஆனால், எழுத்தின் அளவும்; வாசிப்பின் சுவாசிப்பும் கருதி, என் கருத்தினை, நான் பார்த்த அனுபவத்தின் அடிப்படையில், என்னுள் வாழ்கின்ற தலைவனைப் பற்றி எடுத்து வைத்திருக்கிறேன். அதன் முடிவாக,

    தமிழகம் போற்றும் ஒப்பற்ற தலைவன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளான் என்ற செய்தி ஊடகங்களில் பரவக் கேட்ட மக்கள் அலை மோதுகின்றன மருத்துவ மனை நோக்கி, மக்கள் தலைவனின் நலம் வேண்டி! என் இதயக் கண் முன்னே அன்றைய நிழல் காட்சிகள் ஓடுவதை வர்ணிக்க மனம் சற்று கிலேசமடைகிறது!

    அமெரிக்கா பயணம்:
    பின்னர், மேல் சிகிச்சைக்காக, அமெரிக்கா செல்கிறார். அங்கு உலகில் தலை சிறந்த மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைத் தொடர்கிறது. ஆனால், தமிழகத்திலோ, தங்கத் தலைவனின் நலம் வேண்டி கோவில்கள்; தேவாலயங்கள்; மசூதிகள் என எல்லா இடங்களிலும், மக்களின் பிரார்த்தனை எம் மன்னனை வாழவிடு என்று!

    இச்சமயத்தில் ஒன்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஒளி விளக்கு என்ற ஒரு திரைப்படம். அதில் வரும் ஒரு பாடல் காட்சி; சொகார் ஜானகி அவர்கள், மனமுருகி இறைவனிடம் வேண்டுவார்….

    என்னுயிரைத் தருகின்றேன்…..மன்னனுயிர் காத்துவிடு என்று!

    இப்பாடலின் முதல் வரிகள்

    இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு;
    தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு !

    தமிழகத்தின் பட்டி, தொட்டியெல்லாம் இப்பாடல் ஒலிக்காத இடமே இல்லையெனலாம்! அவர்கள் அத்துனை பேருடைய நம்பிக்கையும், மக்கள் திலகத்தை மீட்டுக் கொண்டுவந்தது என்று சொன்னால், அது தலைவனின் மேல் தமிழனுக்கு இருந்த நம்பிக்கைக்குக் கிடைத்த பெருமை!

    கடைசி அரசு விழா:
    கடைசி அரசு விழா. அதுவும் என் நெஞ்சைத் தட்டுகிறது. ஆசிய ஜோதி நேருவுக்கு, சென்னை கத்திப்பாராவிலே சிலை திறக்கும் விழா! அன்னை இந்திரா மறைந்த செய்தி கூட என் மன்னனின் உடல் நலம் கருதி மறைக்கப்பட்டிருந்தாலும், இந்திராவின் புதல்வர், மறைந்த இளம் இந்தியப் பிரதமர் ராஜீவுடன் கலந்து கொண்ட அந்த விழாதான், அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் கடைசி விழாவாகிப்போனது!

    மறைவின் செய்தி பரவிய நேரம், தமிழகமே திரண்டது தலை நகர் நோக்கி! எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம்! தன் வீட்டில் ஒருவன் மறைந்தது போன்ற உணர்ச்சிப் பெருக்கு!
    மன்னவனை மண்ணும் போற்ற, தன்னுள்ளே வாங்கிக் கொண்டது!
    அலைகடலும், அடைக்கலம் நானென்றது!
    வான் மகளோ தினமும் நானுன்னை வணங்குவேன் என்றது! மன்னவன் புகழ் பாட

    மக்கள் திலகம் பற்றி ஒரு சின்னக் கவிதை!
    (பொன்மனச் செம்மலின் பிறந்த தினமான ஜனவரி 17 அன்று எழுதியது)

    இவன்
    மாற்றான் தோட்டத்து
    மல்லிகையாய்
    இருந்தும்;
    மணம் வீசியதென்னவோ
    நம் தோட்டத்தில்தான்!

    தமிழுக்கே
    திலகம்
    வைத்தவன்!
    தமிழகத்திற்குத்
    திலகமாய்
    இருந்தவன்!
    அவன் தான்
    மக்கள்
    திலகம்!

    தாயைவிட
    தமிழை
    நேசித்தவன்!

    ஆம்!
    பசுத்தோல்
    போர்த்திய
    புலிகளுக்கிடையே
    புலியையே
    மடியில்
    கிடத்தி
    போலிகளை
    விரட்டிய
    புண்ணியவான்!

    இன்னும்
    என் மக்களின்
    இதயக் கோயிலில்
    வாழும்
    இரட்டை இலைத்
    தெய்வமிவன்!

    இந்த நாள்
    அன்று
    தீர்மானிக்கப் பட்டது;
    இவன் பிறந்தால்
    தமிழகம்
    தலை நிமிரும்
    என்று!

    அந்தப்
    பொன்னாள்
    இன்றும்
    வருகிறது!

    வாழ்த்தும்
    உள்ளங்கள்
    வாழட்டும்!
    பொன்மனச்
    செம்மலின்
    பொன்னான
    பிறந்தநாள்
    இன்று!!

    முடிவுரை:
    இந்தக் கட்டுரைத் தகவல்கள் தாங்கி வந்தது என் இதயத்திலிருந்த நினைவுகளை! இதைப் படிக்கும், உங்கள் உள்ளத்தில் கடுகளவாவது என் மன்னனின் பண்புகள் வேரூன்றுமானால்,

    அந்தப் பரிசுக்கு இணை நிச்சயமாக வேறேதுமில்லை எனக்கு!

    வாழ்க தமிழ்! வளர்க தமிழர் தம் இல்லங்கள்! ஓங்குக மக்கள் தலைவனின் புகழ்!!

    Share