-சுரேஜமீ

அன்பிற்குத் தாய் தந்தேன்
ஆற்றலுக்கு மனம் தந்தேன்
இயல்பிற்கு மொழி தந்தேன்
ஈகைக்குக் குணம் தந்தேன்
உறவுக்குக் கொடி தந்தேன்
ஊக்கத்திற்குக் கை தந்தேன்
எப்போதும் மகிழ்விற்கும்
ஏற்றதொரு வாழ்விற்கும்
ஐவகை நிலம் தந்தேன்
ஒற்றுமையாய் இருக்கவேண்டி
ஓதும் நெறிகள் பலதந்தேன்
ஒளவைத் தமிழும் தந்தேன்
அஃதெல்லாம் மறந்தாய்!

அணிசேர்த்தாய்
ஆற்றாது;
இன்சொல் பேச மறுத்தாய்;
ஈன்ற தாய்கூடப் புறக்கணித்தாய்;
உண்மையை
ஊமையாக்கினாய்;
எல்லாம் ‘நான்’
ஏகி நின்றாய்;
‘ஐயோ பாவம்’ அடியோடு மறந்து நின்றாய்;
ஒன்றும் புரியாமல்;
ஓடும் வாழ்க்கையில்
நிற்கும்
உனைப் பார்த்துச்
சிரிக்கின்றேன் நான்!

படைப்பில் குறையில்லை;
பார்த்தும் தெளிவில்லை!
புவியில் நீ ஆடும்
ஆட்டம் நிற்கும் வேளையிலே…
என்னை அழைக்கின்றாய்
குறையே சொல்கின்றாய்
நிறையை மறுக்கின்றாய்
பேதம் அறுக்கின்றாய்
வேதம் பேசுகிறாய்
வாழ்க்கை நீடிக்க
வேண்டுதல் செய்கின்றாய்!

வாழும் காலத்தில்
அத்தனை நான் செய்தும்
வழித் துணையாயிருந்தும் பேதையாயிருந்து
போதை தெளிந்ததுபோல்
நிற்கும் உனைப்பார்த்துச் சிரிக்கின்றேன் நான்!!

இருப்பே
இறப்பை மறந்துவிட்டு
இருப்பைக் கேலியாக்கும்
இதுவா வாழ்க்கை?
சிந்தி!

இறைவன் நானிருக்க;
எவனும் இல்லையெனும்
இறுமாப்பை விட்டொழித்து
இனிமையாய் வாழ்ந்து பார்!!
இருவரும் சிரிக்கலாம்
இனிமையாய் இருக்கலாம்!!

இங்கே சற்று உயிரோடு மெய் விளையாடியிருக்கிறேன்…
உன் பொய்யை
எடுத்துரைக்க!
எண்ணிப் பார்த்து
ஏற்றம் காண்!
சேர்ந்து சிரிப்போம்
அதுவரை
நான் சிரிக்கின்றேன்!!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.