இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

-சுரேஜமீ

இளமை பொங்க
மனங்கள் இனிக்க
உறவுகள் தழைக்க
உன்னதமாய் வரும்
மன்மத ஆண்டே!                                         chittirai

மாற்றங்கள் நிகழ்ந்து
ஏற்றங்கள் பெற்று
தோற்றங்கள் மாறிச்
சாற்றிட எங்கணும்!

அன்னைதந்தை போற்றி
அவர் நலம் காத்து
அகிலத்தில் எவரும்
அவர்நிகர் இல்லையென!

வீடுகள் தோறும்
வீணில் செல்நீரால்
பேணியே வளர்ப்போம்
பண்புடன் மரங்களென!

தேவைக்கு ஏற்பச்
செலவுகள் செய்துச்
சேவைக்கும் வாய்ப்பாய்ச்
சேமிப்பை வளர்ப்போமென!

மானுடம் போற்றும்
மரபுகள் காத்து
வான்மழை நிகராய்
வையகம் அணைப்போமென!

சாதிகள் தொலைந்தன
வீதிகள் கலைந்தன
நீதிகள் போற்றிநற்
சேதிகள் சொல்வோமென!

வரம்பல தந்திடும்
நலம்பல வந்திடும்
வளம்பல பெற்றுநல்
வாழ்வே சிறந்திடும்

இனிய தமிழின்
ஈராறு மாதங்களில்
முதலாய் வந்து
முத்தாய்த் தொடங்கும்

சித்திரை மலராள்
செங்கதிர் அணிந்தாள்
முத்திரை பதித்தே
எத்திசை முழங்க!

மன்மதன் தாங்கி
மானுடம் செழிக்க
மங்களமாய் வரும்
மங்கையும் அவளே!

புத்தாண்டு மகளே!!
இருகரம் கூப்பித் தமிழர்கள் அழைக்கின்றோம்
இனிய தமிழ்ப் புத்தாண்டே வா  என!! 

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *