Tag: சுரேஜமீ

  • கவியரசர் நினைவாக

    கவியரசர் நினைவாக

    -சுரேஜமீ 

    காற்றின் அலைகொண்டு காலம்வென் றாயே
    காதல் ரசம்தந்து கண்ணன் ஆனாயே
    ஏற்றும் விளக்காகி ஏழைகவர்ந் தாயே
    என்றும் தமிழர்தம் வாழ்விலிணைந் தாயே
    போற்றும் எவர்நெஞ்சின் புத்தகமா னாயே
    போதை புகுந்ததுபோல் பொங்கியெழுந் தாயே
    சாற்றும் கவிதையெலாம் சங்கதியா னாயே
    சாகா வரம்பெற்ற கவியரச நீயே!

    அற்றை நிலவினிலும் ஆங்கேநீ யிருந்து
    அன்னைத் தமிழாலே அண்டமளந் தவனே!
    இற்றை வருநிலவும் இன்னுமுன் நினைவால்
    இன்பம் விளைக்கிறதே இன்னிசைத் தேனாக!
    வற்றா துயிர்நதிபோல் வாரி வழங்கிடுமுன்
    வார்த்தைத் தமிழாலே வண்ணங் கூட்டுகிறோம்
    பொற்றா மரைவாழும் பூவை மீனா மகிழும்
    பொழிதமிழே முத்தையா வெனும் பேரோனே!

    பற்றை விலக்கென்றே பாரதஞ் சொன்னாலும்
    பாசம் பிடித்திட்டே பாவியுனைத் தொலைத்தாய்
    பற்றும் எகிறியதாய்ப் பாவம் செய்திட்டார்
    பண்ணில் தமிழ்வந்தாள் பத்தனுனைக் காக்கத்
    தூற்றும் மனிதரெல்லாம் துச்சமென எறிந்தே
    துன்பம் கடந்து வந்த தூமணி நீயன்றோ
    நாற்றம் இசைக்கின்ற நற்றமிழ் ஆனாயே
    நாளும் உனைப்போற்றி நானும் மகிழ்கின்றேன்!

    தேற்றும் பலபாடல் தேன்தமிழ்ச் சொல்லாலே
    தீட்டும் மதிகொண்ட தென்றல் தேரோனே
    சேற்றில் விழுந்தாலும் செந்தா மரையாய்ச்
    சீறி எழுந்திட்ட சிங்கமன்றோ! கண்ணா!
    ஊற்றுச் சுரங்கம்நீ! உன்னதத் தமிழும்நீ
    உன்னால் கவியானோர் ஊரில் பலருண்டு
    போற்றி வணங்குகிறேன்! புன்னகைப் பூவுனையே!
    புக்க எனக்குள்ளே கண்ணதாச! நீயே!

    Share
  • இசைக்கவி ரமணன் அவர்களுக்கு ‘வாழும் பாரதி’ விருது!

    -சுரேஜமீ

    இசைக்கவி ரமணன் அவர்களுக்கு ‘வாழும் பாரதி’ விருது! – திருக்குறள் பாசறை, மஸ்கட் வழங்கியது.

    ‘இலக்கியமும் திரையிசையும்’ எனும் தலைப்பில் பேசுவதற்காக மூன்று நாட்கள் பயணமாக மஸ்கட் வந்திருந்தார் இசைக்கவி ரமணன். இனிய பல திரையிசைப் பாடல்களுக்குப் பின்னால் இருந்த தமிழ் இலக்கியங்களின் பெருமைகளை எடுத்துச் சொல்லி மஸ்கட் தமிழர்களின் இதயங்களைக் கட்டிப் போட்டார் என்று சொன்னால் மிகையல்ல.

    எழுந்து போக மனமில்லாமல், இன்னும் கொஞ்சம் தொடராதா என்ற கேள்விதான் நிகழ்ச்சியின் வெற்றி.

    மஸ்கட் மக்களுக்கு இசைக்கவி அண்ணா அவர்கள் பாரதி யார்? எனும் நிகழ்ச்சி மூலம் ஏற்கனவே பரிச்சயம் ஆகி இருந்தாலும், இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கும், மக்களுக்குமான உறவு இன்னும் பலப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.

    பாரதி யார்? எனும் நாடகத்தின் தாக்கத்தில் இருந்து இன்னும் மஸ்கட் மீண்டு வரவில்லை என்பதை, ஒவ்வொரு தமிழரும் அவருடனான உரையாடல்களில் நன்றியோடு பகிர்ந்து கொண்டனர்.

    ‘இலக்கியமும் திரையிசையும்’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திருக்குறள் பாசறை அமைப்பு, ‘வாழும் பாரதி’ எனும் விருதினை ஐயா இசைக்கவி ரமணன் அவர்களுக்கு அளித்து தனது அன்பை அவருக்குக் காணிக்கையாக்கியது.

    தாய்த் தமிழகத்தில், அன்னாரை ‘வாழும் பாரதி’ எனத் தமிழ்ச் சான்றோர்கள் கொண்டாடினாலும், அதையே விருதாக வழங்கி,

     

    வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
    வான்புகழ் கொண்டது தமிழ்நாடு! எனும்

    பாரதியின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், இந்த விருதை திருக்குறள் பாசறை வழங்கியது மிகவும் பொருத்தமே!

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரளான மக்கள் முன்னிலையில்,

    திருவாளர் குமார் மகாதேவன், இயக்குனர், ஓமான் சபூர்ஜி கம்பெனி அவர்கள்

    ‘வாழும் பாரதி’ என்ற விருதையும், பத்திரத்தையும்

    ஐயா இசைக்கவி ரமணன் அவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தார்கள்.

    நிகழ்ச்சி அமைப்பாளர் மற்றும் திருக்குறள் பாசறை நிறுவனர் கவி. சுரேஜமீ அவர்கள் முன்னிலையில், பாரதி யார்? எனும் நாடகத்தில் மஸ்கட்டிலிருந்து தங்கள் பங்களிப்பைச் செய்த அனைத்து நடிகர், நடிகையர், குழந்தைகள் சேர்ந்திருக்க, அன்னாருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

    இரண்டு நாட்கள் நிகழ்வும் இனிதே நிறைவேற, இன்பக் கனவுகளுடனும், இனி எப்போது வருவார் எனும் கேள்வியுடனும், மஸ்கட் தமிழர்கள் காத்திருக்கின்றனர்.

    இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த திருவாளர் சுரேஷ் மற்றும் சேகர் மற்றும் நிகழ்ச்சியின் வெற்றிக்காகத் தன்னை அர்ப்பணித்த அனைத்துத் தன்னார்வத் தொண்டர்களுக்கும் திருக்குறள் பாசறை தன்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டு,

    ஐயா இசைக்கவி ரமணன் அவர்கள் இன்னும் பல விருதுகளைப் பெற வாழ்த்துகிறது!

    – சுரேஜமீ
    12.1.2019

    Share
  • தாயே….தமிழகமே!

    aja
    உயிர் மெய்யைப்
    பிரிந்தாலும்
    தமிழர்கள் உயிரோடு
    கலந்த ஒரு
    உறவுச் சொல்!

    அம்மா………..

    வாழ்வின் அரும்பில்
    உயிர் கொடுத்த
    தந்தையை இழந்தாய்!

    வாழ்வின் வசந்தத்தில்
    உயிர் சுமந்த
    தாயை இழந்தாய்!

    உறவின்றித் தவித்த
    உள்ளத்தில் குடிகொண்ட
    உலகத் தமிழர்களின்
    உன்னதத் தாயானாய்!

    உன்னை வரவேற்கத்
    தென்றல் மறுத்தாலும்
    தீயினில் நடந்த
    தென்றல் நீயன்றோ?

    எது சுகம் மண்ணில்
    என ஏங்கி இராமல்
    என் சுகம் தமிழர்
    தன்சுகம் என்றாய்!

    எத்தனை சறுக்கல்கள்
    எத்தனை இடர்கள்
    எத்தனை எதிரிகள்
    எத்தனை வரினும்

    எரிமலை உன்முன்
    எரிந்து சாம்பலாக
    ஏழையின் வாழ்வில்
    ஏற்றிய ஒளியாக

    நிமிர்ந்து நிற்கிறாய்!
    உன்னைப் பார்த்து
    பெண்ணினம் தன்னை
    எண்ணிப் பெருமை கொள்கிறது!

    நீ இல்லாத தமிழகத்தை
    நினைக்க நெஞ்சம்
    பதறுகிறது தாயே!

    எமனுக்குத் தெரியாது
    வந்தது அவனுக்கே
    எமன் என்று!

    வாழ்வின் அடையாளங்களை
    மண்ணில் மறைக்க
    மரணத்தால் முடியாது தாயே!

    எங்களைக் காத்த உனக்கு
    தங்களைக் காக்க
    தெரியவில்லையே?

    தாயை இழந்து
    தவிப்பில் தமிழகம்
    சோகத்தின் வழியில்
    சிக்கி நிற்கிறது!

    இறைவனின் நிழலில்
    நீ இளைப்பாற
    நீங்காத துன்பத்தில்
    நாங்கள் கடக்கின்றோம்!

    தாயே….தமிழகமே!!

    – சுரேஜமீ

    Share
  • திருப்பாதிரிப்புலியூர் பதிகம்

    –சுரேஜமீ

     ​
    இறைவன்: பாடலீஸ்வரர்
    இறைவி:   கோதைநாயகி

     

    patirippuliyur

    காப்பு
    நம்பினார்ப் பாடிடுவர் இப்பதிகம் தோன்றிநாதர்
    கும்பிட்டு மகிழ்வர் நிறை!

    தடையறு பதிகம்
    திருஞான சம்பந்தர் தேவாரம் பாடியுந்தன்
    பெருமை பறைசாற்றிப் பாதம் பணிந்திட்டார்
    திருப்பா திரிப்புலி யூருறை மன்னவனே
    ஒருபா உனைப்பாட வைத்திட்டாய் என்னை! (1)

    கல்லோடு அப்பரைக் கடலினிலே வீசிடினும்
    தில்லாய்க் கரைசேர்ந்தார் தோன்றிநாதர் அண்டியதால்
    நில்லாத் துயரமுமே நீங்கிடும் நின்னருளால்
    இல்லா இனிஇல்லை ஈசன் இருப்பிடத்தில்! (2)

    வேண்டியுனைக் கேட்கின்றேன் பாப்புலிவாழ் ஈசனே
    தாண்டத் தடைகளையும் தன்மையுடன் நேசனே
    யாண்டும் மகிழ்திருக்க யாவரும் நலமிருக்கத்
    தூண்டும் மதிதனையே கோதை மணவாளா! (3)

    கடைஞாலுர் வாழ்கின்ற காசிநகர் வாசனைக்
    கடைத்தேறப் பற்றிடுவாய்க் கச்சிதமாய் ஈசனை
    எடைதேற்றி வாழுமொரு மாக்களைத் தள்ளித்
    தடைகளைந்து வெற்றிநடை போட்டிடவே நாளும்! (4)

    அன்று உனைத்தொழுத அக்னி சாட்சியாக
    என்றும் தமிழ்போற்றும் அகத்தியர் காட்சியாக
    இன்று உறுதியுடன் உன்னடியைப் போற்றுகிறேன்
    நன்று எனக்கருள்வாய் நாயகனே வேண்டுகிறேன்! (5)

    வந்திடுவர் பாப்புலியோர் நின்கருணை வேண்டித்
    தந்திடுவர் சம்மதமாய்த் தன்னையுமே நின்று
    ஐந்தெழுத்து மந்திரத்தால் உன்புகழைப் பாடி
    சிந்திடுவர் பக்திரசம் பாரினிலே என்றும்! (6)

    எப்பிறப்பில் யான்செய்த புண்ணியமோ சொல்வாய்
    இப்பிறப்பில் உந்தன் திருத்தலத்தைச் சேர
    ஒப்பிலா நின்பாதம் போற்றிடவே என்றும்
    தப்பிலா செய்துவிடு தோன்றாத் துணைநாதா! (7)

    எந்தையாய் எப்போதும் என்னருகே நீயிருக்க
    மந்தையாய் மானுடத்தில் மரிக்காமல் நானிருக்க
    விந்தையாம் உன்நாமம் செப்பிட்டுப் பொழுதிருக்கச்
    சிந்தையால் வென்றிடுவேன் சிக்கல்கள் தானிருக்க! (8)

    நம்பிவந்த உத்தமர்தம் நெஞ்சினிலே நீயமர்ந்து
    வெம்பும் அவருள்ளம் வேண்டுவது தந்துவிடு
    தெம்பாம் சிவநாமம் சிந்தையிலே தைத்திட்டு
    எம்மான் அருள்செய்ய என்றுமுனை யாம்தொழவே! (9)

    திக்கெட்டும் நிற்பவனே தில்லை நடராசனே
    இக்கட்டு வந்திடுமோ நின்னடிச் சரணார்க்குப்
    பாக்கட்டு சேர்த்திட்டேன் பாம்பணியும் நாதா
    வாக்கெடா வண்ணம் ​எமையென்றும் ​ காப்பாய் (10)

    (இப்பதிகம் பாடுவோர் வேண்டுவன கிட்டும்படி ஈசன் அருளும், தமிழின் கொடையும் இருக்கக் கடவது)

     

     

    Share
  • தோழா…….விமர்சனம்! (திரை)

    சுரேஜமீ

    as
    எப்படி இருக்கீங்க?

    இந்த ஒரு சொல் நம் இதயத்தைச் சட்டெனத் தொட்டுவிடும் அன்பின் வெளிப்பாடு என்பது அனைவருக்கும் தெரிந்ததே! ஏதோ காரணங்களால், இன்று நாம் அதைத் தொலைத்துவிட்டோமோ என ஏங்கும் நேரத்தில்,

    அந்த ஒரு சொல்லை வைத்து, தொலைத்த இடத்தில் நம்மைத் தேட வைத்திருக்கிறார் இயக்குனர் வசி அவர்கள்!

    மாற்றான் தோட்டத்து மல்லிகையானாலும் (The Intouchables), கதையின் கருவை உலகிற்கு அறிமுகம் செய்த பெருமை நம்முடையதன்றோ!

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அதன் வலிமையைப் பறைசாற்றிய இந்த மண்ணிற்கு,

    மீட்டு எடுத்துவந்து, வாழ்க்கையின் அவசியம் பணமல்ல; மாறாக மனதைப் புரிந்து கொள்ளும் ஒரு புனிதமான உறவுதான் என்பதைத் தெளிவாகக் காட்சிகளில் மட்டுமல்லாமல், வார்த்தைகளிலும் பதிவு செய்த இயக்குனருக்கு பாரட்டுக்கள்!

    மிக நேர்த்தியான மற்றும் இயல்பான நடிப்பால் தன் பாத்திரங்களைக் கையாண்ட நாகார்ஜுனா, கார்த்திக் மற்றும் தமனாவிற்கு வாழ்த்துக்கள்!

    காதலுக்குத் தேவை காணும் கவர்ச்சி அல்ல; கண்ணில் துளி நீர் வந்தாலும், அதன் வலியைப் புரிந்து கொள்ளும் மனம்தான் என்ற புரிதலை வலியுறித்திய வசனங்கள்

    காதலை மேன்மைபடுத்தி இருக்கிறது!

    அடுத்து ஒரு நிகழ்வு, ஒரு மனிதனின் வாழ்க்கையையே புரட்டிப் போடும் அந்த நிலை ஒவ்வொருவர் வாழ்விலும் நிச்சயம் ஒரு தடவையாவது வந்து செல்வதுதான் வாழ்க்கை. ஆனால், அந்த நிலையிலிருந்து மீள, நமக்குத் தேவை ஒரு நல்ல துணை!

    அதையும் வள்ளுவர் அழகாகச் சொல்லுவார்…

    கேட்டினும் உண்டோர் உறுதி…..என்று!

    அத்தகைய நட்பிற்கு அடையாளமாக ஒரு பாத்திரத்தை அமைத்து, அதற்கு நேர்த்தியாக நடிகர்களைத் தெரிவு செய்து,

    இந்த வேகமான வாழ்வில், தொலைந்து போன நட்பிற்கு ஒரு இலக்கணத்தை மீட்டு எடுத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்! மொத்தத்தில் வழிதவறும் வாழ்கைக்கு எது தேவை என்பதையும்;
    சில மணிநேர மகிழ்ச்சிக்குத் தேவையான காட்சி அமைப்பையும்,
    பொழுதுபோக்கிற்கு ஏற்ற பாடல் காட்சிகளையும்,

    எல்லை மீறாமல் எண்ண ஓட்டத்தைப் பதிவு செய்த மொத்த படக் குழுவிற்கும் வாழ்த்துச் சொல்ல

    ஒவ்வொரு ரசிகனும், ரசிகையும் தவற மாட்டார்கள்!

    இதுதான் ‘தோழா’வின் வெற்றி!

    அவசியம் பார்க்காதவர்கள் பார்க்க வேண்டிய ஒரு நல்ல ப(பா)டம்!

    – சுரேஜமீ

    Share
  • மகாகவி பிறந்த நாள்!

    – சுரேஜமீ

    கம்பனும்
    வள்ளுவனும்                                                   barathiyar
    இளங்கோவும்
    கலந்து பேசி
    தமிழ்த் தாயின்
    முன்தோன்றி
    ஒரு வரம் 
    வேண்டினர்!

    தூங்கும் 
    தமிழினத்தை 
    துயிலெழுப்ப,
    தூரிகையைத்
    தட்டி எடு என்று!

    தானே கருவாகி
    தரணியில்
    அவதரித்தாள்;
    பாரதி எனும்
    உருவெடுத்தாள்;
    தமிழென்னும்
    அமுது படைத்தாள்;
    குயில்கூடத் தமிழ்
    பாடியது,
    அவன் குரல் கேட்டு!
    மரம், செடி, கொடிகளெல்லாம்
    இசை பாடியது
    அவன் தமிழ் “பா” க்கு!
    தமிழன் தலை 
    நிமிர்ந்தான்!
    தரணியில் இனி 
    எவர்க்கும் யாம் 
    அடிமை இல்லையென்று!

    அந்நாள் இந்நாள்!
    அவதாரத் திருநாள்!

    வாழ்க தமிழ்! வளர்க பாரதி புகழ்!!    

     

    Share
  • சிகரம் நோக்கி …. (28)

    சுரேஜமீ

    நிறைவு

    peak1

    எளிதில் நிலைகொள்ளாத மனத்தில் எதிலும் நிறைவு என்பது இயலாத காரியம்தான். ஆனாலும், தேவைகளில் தெரிவும், உபயோகத்தின் தன்மையும், எண்ணங்களில் திண்மையும் இருந்தால்,

    நிறைவு என்பது நிச்சயம் குடியிருக்கும் ஒரு கோயிலாக உங்கள் இதயம் இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!

    உலகத்தில் இன்னமும் சரிபாதி மக்களின் சராசரி வருவாய், நாள் ஒன்றுக்கு ரூபாய் 200க்கும் குறைவாகத்தான் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. என்றாவது ஒரு நாள் நிலைமை மாறும் என்றுதான் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் மக்களின், வறுமையை ஒழிக்க மானுடம் பண்பட வேண்டும் என்பதை மறுக்க முடியாது.

    ஒவ்வொரு செயலிலும் நாம் காணும் நிறைவுதான், நம்மை வளர்த்தெடுக்கும், ஒப்பற்ற பண்பு என்பதை அனுபவம்தான் நமக்குப் புரிய வைக்க முடியும்.

    இன்னமும் நம்முடைய ஒவ்வொரு செயலும் , நம்மைப் பற்றிய அடுத்தவர்களின் பார்வையை எதிர் நோக்கியே இருக்கின்றன என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்; இதிலிருந்து விடுபடும் நாள் சொல்லும்,

    உங்கள் வாழ்வின் ஒப்பற்ற இலட்சியப் பயணத்தையும்; இந்த வாழ்வின் அர்த்தத்தையும் என்பதை நினைவில் நிறுத்துங்கள்!

    குழந்தைகளிடம் கற்றுகொள்ள ஏராளம் இருந்தாலும், மிக முக்கியமாக ஒன்றைக் கவனியுங்கள். குழந்தைகள் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாகவே இருக்கிறார்கள். எங்கிருந்து அவர்களுக்கு சக்தி கிடைக்கிறது?

    இவ்வளவுக்கும, இன்றைய வாழ்வில் வாய்ப்புள்ளவர்கள் அனைத்து சொகுசு வசதிகளின் துணையோடு வாழ்ந்தாலும், களைப்பு என்பதை மறைக்கவோ, மறுக்கவோ முடிவதில்லை. அலுவலகத்திலிருந்து வந்தவுடன் ஒருவித அசாதாரண நிலையில்தான் இருக்க முடிகிறது. உடல் அசதி ஒரு பக்கம் இருந்தாலும், எண்ண ஓட்டங்கள்தான் உளைச்சலுக்குக் காரணமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளத் தயக்கம் காட்டுகிறோம்!

    ஆனால், குழந்தைகள் நேற்றையப் பதிவையோ, நாளைய கனவையோ சுமப்பதில்லை; அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம், இன்று….இந்தத் தருணம்….நிகழ் காலம்…..அவ்வளவே…!

    நிகழ்காலத்தில் இருக்கும் ஒவ்வொரு தருணமும் இயற்கை வழங்கும் சக்தி அளப்பரியது என்பது நிதர்சனமான உண்மை.

    மகிழ்ச்சி என்பது வசதிகள் தருவது அல்ல; வாழ்க்கை வாழ்வதில் இருக்கிறது என்பதை உணர்த்துவதுதான் ‘நிறைவு’ எனும் பண்பு என்று சொன்னால் மிகையாகாது.

    நண்பர்களே, இதுகாறும் கடந்த 27 வாரங்களாக, வான் மண்டலத்தில் இருக்கும் 27 நட்சத்திரங்கள் போல, வாழ்வில் ஒளிவீசி ஏறு நடைபோடத் தேவையான பண்புகள் பற்றி எழுதி வந்தது குறித்து மன நிறைவு கொள்கிறேன்.

    ஒன்றை உங்கள் நினைவின் ஆழத்தில் பதிய விரும்புகிறேன். இங்கு குறிப்பிடப்பட்ட எதுவும் புதிதல்ல. இதற்கு முன்பு எத்தனையோ மாமனிதர்கள் குறிப்பிட்டதை

    ஒரு மாத்திரை அளவில், உங்களுக்குத் திரும்ப நினைவூட்டி, உறங்கிக் கிடக்கும் எண்ணங்களைத் தட்டி எழுப்ப முயற்சித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்!

    இதோ கடந்த 27 வாரங்களாக நாம் படித்த தலைப்புகளை ஒருங்கே இறங்கு வரிசையில் சுட்டி, உங்களின் கவனத்தை மீட்க விழைகிறேன்.

    27. புகழ்
    26. ஆளுமை
    25. வாய்மை
    24. திறமை
    23. பொறுமை
    22. எளிமை
    21. கடமை
    20. நேரம்
    19. திட்டமிடல்
    18. எண்ணங்கள்
    17. உணர்ச்சி வயப்படுதல்
    16. நட்பு
    15. குடும்பம்
    14. பெண்மை
    13. மனம்
    12. தெளிவு
    11. வெற்றி
    10. நம்பிக்கை
    9. மனிதம்
    8. வறுமை
    7. செல்வம்
    6. இயற்கை
    5. இயற்கை
    4. இயற்கை
    3. புரிதல்
    2. மதிப்பு
    1. கல்வி

    இவையெல்லாம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தால், தமிழுக்கு நன்றி சொல்வேன். பிரபஞ்சத்தில் மொழி தோன்றிய காலத்திலிருந்து, தனித்தன்மையுடன் விளங்கும் தாய்த்தமிழ் தந்த கொடைதான், இனம் காக்க, காலம் காலமாய் பதிவுகளைத் தாங்கி வருகிறது; வரலாறாய் தலை முறைக்கும் செல்கிறது!

    எது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது.
    எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது.
    எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்!

    இதுதான் வாழ்க்கை; இதுதான் பயணம் என்பதை அறிந்தோர் வாழ்வில் நலம் பெறுகின்றனர்; மற்றவர் வருவதைத் தனதென்றும்; போவதைத் துயரென்றும் வெதும்புகின்றனர்!

    நாம் எதைச் செய்தாலும், அதில் ஒரு நிறைவு இருக்க வேண்டும். அந்த நிறைவை ஏற்படுத்துவதாக, நம் செயல்கள் இருக்க வேண்டும்! அந்த வகையில், ‘சிகரம் நோக்கி’ என்ற இத்தொடரின் முதல் பாகத்தை நிறைவு செய்கிறேன்.

    துணுக்குகளாக எழுத ஆரம்பித்த பொழுது, தொடராக எழுதவேண்டும் என ஊக்கமளித்த அன்புச் சகோதரி பவளா அவர்களுக்கும்,

    வல்லமை ஆசிரிய குழுவிற்கும் மற்றும் கோடானுகோடி வாசகப் பெருமக்களுக்கும்,

    ஆக்கமும், ஊக்கமும், ஒத்துழைப்பும் அளித்த அன்பு மனையாள் திருமதி.ரேவதி சுந்தருக்கும், குழந்தைகள் ஜனனி மற்றும் மீராவுக்கும்

    தமிழின் தலையாய மூன்று எழுத்துக்களான ‘நன்றி’ எனும் மலரால் அலங்கரிக்கிறேன்.

    இவ்வேளையில், நண்பர்கள் அனைவருக்கும் ஒரு செய்தியைப் பகிந்து கொள்ள விரும்புகிறேன். தற்சமயம் நான் எழுதிவரும் ‘வள்ளுவ மாலை’ எனும் நூலுக்கு உரை எழுத ஆரம்பித்திருக்கிறேன். இது விரைவில் உங்கள் அனைவரின் ஆசியால் புத்தகமாக வர இருக்கிறது.

    உங்களின் வாழ்த்துக்களோடு இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்!

    அன்புடன்
    சுரேஜமீ

    Share
  • சிகரம் நோக்கி – 27

    சுரேஜமீ

    புகழ்

     

    peak

    உலகின் முதல் வெளிச்சம் தன்னில் பட்டபோது அழுதவன், தன்னை அடையாளப்படுத்த அடுத்தடுத்து வெளிச்சத்தை நோக்கியே நகர்கிறான் என்று சொன்னால் மறுப்பதற்கில்லை; கதிரொளிக்கும், மின்னொளிக்கும் உள்ள வித்தியாசம்தான் எது நிலையானது என்பதைத் தீர்மானிக்கிறது. ஒரு சொல்லைப் பொருள் கொள்வதில், இக்காலத்து இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் தவறு நேர்ந்துவிடக் கூடாது என்பதுதான் இன்றைய பதிவின் நோக்கம்!

    புகழுக்கு மயங்காதவர்தான் எவருளர் என்பர்? எளிதில் காரியம் சாதிக்க விரும்பும் நபர் செய்யக் கூடிய முதல் வினையே, எவர் மூலம் அக்காரியம் நடைபெற வேண்டுமோ, அவரைப் பற்றி பெருமையாகப் பேசிக் காரியத்தை சாதிப்பர். இதைத்தான் ‘புகழ்’ என்று பெரும்பாலும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.

    மொழியின் ஆளுமையில் வந்த பிழைதான் ஒருவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவதைப் ‘புகழ்’ என்று அர்த்தம் புனைய வைத்து விட்டதோ என்ற ஐயம் எழுகிறது.

    சரி, அப்படியென்றால் ‘பெருமை’ என்ற சொல்லுக்கும் ‘புகழ்’ என்ற சொல்லுக்கும் பொருள் வேறுபடுகிறதா என்றால்,

    ஆம்! என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

    எடுத்துக் காட்டாக, ஒரு மாணவர் வகுப்பில் ‘முதல் மாணவன்’ என்ற தகுதியைப் பெறுவது பெருமை சேர்க்கும் ;

    ஆனால், அதே மாணவன் ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டு, பெரும்பான்மை மக்களின் நலனுக்காக, ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்கினால்,

    அது அவனுக்குப் புகழைச் சேர்க்கும்!

    ஆக, பெருமை எனும் சொல்லைப் புகழுக்குப் பதிலியாகக் கொள்ளுதல் தவறு என்பதை முதலில் புரிந்து கொள்ளுதல் அவசியம்.
    மேலாண்மை இயல் தத்துவத்தில் சொன்னால், புகழ் என்பது ஒரு இலக்குக்கு ஒப்பானது; அதை அடையக் கூடிய நிபுணத்துவம்தான் பெருமை என்று கொள்ளளாம்!

    புகழ் என்பது காலம் தாண்டி நிற்கும் வலிமை உடைத்து. புகழ் என்பது ஒரு அசாதாரணமான, ஒரு தனித்தன்மை வாய்ந்த, ஒரு சிறப்பான செயலை,

    முன்னுதாரணமாகக் கொள்ளக் கூடிய ஆற்றல் வாய்ந்த பண்பு என்றும் சொல்லலாம்!

    அத்தகைய புகழ் பற்றித் தமிழ் இலக்கியங்கள் சொல்வதைப் பார்ப்போமா?

    புறநானூறு

    ………….ஆண்டுநீ பெயர்ந்த பின்னும்,
    ஈண்டுநீடு விளங்கும்,
    நீ எய்திய புகழே!

    ஒருவர் இறந்து ஆண்டுகள் போயினும், அவர் பற்றிய நினைவுகள் காலம் போற்றக் கூடியதாக இருக்குமாயின், அதுதான், இப்பாடலில் நாம் காணும் ‘புகழ்’ எனும் சொல்லின் பொருள்!

    பலருக்கு நாம் அறிவதில் அல்ல புகழ்; பாருக்கு நாம் ஒரு முன் மாதிரியாக இருப்பது தான் ‘புகழ்’!

    கடையெழு வள்ளல்களில் ஒருவன் பாரி எனும் மன்னன். அவன் ஒரு சமயம் வீதியில், தன தேரில் செல்லும்போது, ஒரு முல்லைக் கொடி, தான் படரக் கொம்பு இல்லாமல், தள்ளாடி நிற்பதைக் காண்கிறான். அச்சம்பவம் மன்னனின் மனதைப் பாதிக்க,

    உடனே தான் வந்த தேரை, அந்த முல்லைக் கொடியின் பக்கத்தில் நிறுத்தி, தான் நடந்தே அரண்மனைக்குச் சென்று, அக்கொடியின் துயரத்தைப் போக்கினான் என்றால்,

    அவன் ஆட்சிக் காலத்தில், தன் குடிமக்களை எவ்வாறு பாதுகாத்திருப்பான் என்று சிந்தியுங்கள்.

    இதைத்தான் ‘புகழ்’ என்று இலக்கியங்கள் பறைசாற்றுகிறது!

    திருக்குறள்

    இரண்டு அடுத்தடுத்த குறள்கள் ‘புகழ்’ எனும் சொல்லை நமக்கு எளிதில் புரியவைக்கிறது என்றால் மிகையாகாது;

    1. தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று!

    தோன்றுதல் எனும் சொல், நிலையான உண்மையைக் குறிக்கலாம்; முதன் முதலில் அறியக் கூடிய ஒன்றைக் குறிக்கலாம்; அல்லது ஒரு பிறப்பைக் குறிக்கலாம்! இதுதான், நம் மொழியின் சுவையே!

    நாம் எப்படிக் கையாள்கிறோமோ, அதற்குத் தகுந்தாற்போல் வளையக் கூடிய ஆற்றல் தமிழ் மொழியின் சிறப்பு.

    அவ்வகையில், நம்மை இவ்வுலகு அறியச் செய்ய வேண்டுமெனில், நாம் அதற்குத் தகுந்த வகையில், ஒரு உயர்ந்த நெறியில் வாழ்பவராகவோ; அல்லது, பலர் போற்றக்கூடிய செயலைச் செய்தவராகவோ; அல்லது ஒரு நிலைத்த உண்மையை கண்டறிந்தவராகவோ இருந்தால்,

    திருவள்ளுவர் சொல்லக் கூடிய ‘புகழ்’ எனும் சொல்லுக்கு இலக்கணமாக இருப்பவராகக் கருதப் படுவோம்;

    இதையே, திருக்குறள் தென்றல் தங்கமணி வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால்,

    நம் மனதில் எழக்கூடிய எண்ணங்கள் உயர்ந்த நோக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால், அது நிலைத்த புகழைத் தரக்கூடியது என்பார்!

    அடுத்த குறள் ,

    2. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
    இகழ்வாரை நோவது எவன்?

    ஒருவன் தான் காலத்தை வென்று வாழவேண்டும் என எண்ணினால், தான் அதற்கு ஏற்ப உழைக்க வேண்டும்! தன்னை பண்படுத்த வேண்டும்; மாறாக, தான் அவ்வாறு இருக்க முயலாமல்,

    தன்னை பழிசொல்பவர்கள் மீது வருந்தித் தன் செயலில் முனைப்பைக் குறைக்கக் கூடாது!

    ஆக, மேற்சொன்ன இரு குறள்கள் மூலம், திருவள்ளுவர், புகழின் அர்த்தத்தையும்; அதை அடைவதற்கு, நாம் என்ன செய்யவேண்டும் என்பதையும் மிகத் தெளிவாக வலியுறுத்துகிறார்.

    இப்பொழுது சொல்லுங்கள்……

    புகழ் என்பது ஒரு அழியாத சாதனையைக் குறிப்பதா? அல்லது ஏதோ ஒரு ஊடகத்தில் அல்லது ஒரு சமூகத்தில் அல்லது ஒரு அரங்கத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதா?

    மாய வார்த்தைகளால் ‘புகழ்’ எனும் மாலை சூடிக் கொண்டீர்களானால், அது புற்று நோய்க்குச் சமமானது; உங்களை அறியாமலேயே, உங்கள் திறமைகளை அழிக்கும் கொடும் நோயாக உருவெடுக்கும்!

    எனவே, நாம் சற்றுக் கவனமாக இருக்க வேண்டியது நம்மைப் பற்றிப் பிறர் கூறும் மயக்க வார்த்தைகளில்தான்! அவர்கள், நம்மைப் புகழ்கிறார்கள் என்று மயங்காமல்,

    நம்மைச் சீர் தூக்கி, நாம் அதற்குத் தகுதியானவாரா என்று ஆய்வுக்கு உட்படுத்தி,

    அதனைத் தலைக்கு ஏற்றாமல்,

    நம் தரத்தை உயர்த்திக் கொள்வோமானால்,

    நிச்சயம் நீடு புகழ் கொள்ளும் சிகரம் தொடுவோம்…..

    தொடர்வோம்!

    Share
  • சிகரம் நோக்கி … 26

    சுரேஜமீ

    peak1

    ஆளுமை

    வாழ்க்கை ஒவ்வொரு நிலையிலும், நம்மை மெருகேற்றி, உரு மாற்றி, இன்னும் செல்லவேண்டும் தூரத்திற்குச் சற்றும் தோய்ந்து விடாது உற்சாகத்துடனும், உறுதியுடனும்,

    இதோ ஒரு கை பார்த்து விடலாம் என அழைத்துச் செல்லும் ஒரு பண்புக்குப் பெயர்தான் ‘ஆளுமை’ என்றால் மிகையாகாது.

    ஆளுமைப் பண்பு என்பது அடிதொட்டு வரலாம்; அறிவு கற்று வரலாம்;ஆனால் அவையெல்லாம் அனுபவம் என்ற ஆசானுக்கு இணையாகாது என்பதைக் கற்றவர்கள் கூட மறுக்க முடியாது!

    அத்தகைய ‘ஆளுமை’ எனும் பதத்தை அறியாமலேயே பாதையை வகுத்தவர்கள் நம் மரபில் ஏராளம். அவர்கள் தம் வாழ்வே மற்றவர்க்கு ஒரு உந்துதலாக இருந்தது என்பதே தற்காலத் தமிழர்களுக்கு இலக்கியங்கள் சொல்லும் ஆதாரம்!

    இன்றைய பதிவில் ‘ஆளுமையின்’ அடிப்படையை நம் இதயத்தின் ஆழத்தில் விதைக்க முயற்சிப்பதே நோக்கமாகும்!

    ஆளுமை என்றால் என்ன? ஆளுமையின் ஆற்றல் எங்கு தொடங்குகிறது? ஆளுமையின் வெளிப்பாடு எப்படி இருக்கும்? ஆளுமையை எப்படி ஒரு சமூக வளர்ச்சிக்குப் பயனுள்ளதாக்க முடியும்? எனச் சுருக்கமாகப் பார்ப்போமா?

    ஆளுமை என்றால் என்ன?

    மிக எளிதில் ‘ஆளுமை’ எனும் சொல்லைப் புரிய வைக்கக் கவியரசரின் வரிகள்தாம் நமக்குச் சட்டென நினைவுக்கு வருகிறது;

    மாபெரும் சபைதனில் நீ நடந்தால்
    உனக்கு மாலைகள் விழவேண்டும்;
    ஒரு மாத்துக் குறையாத மன்னன்
    இவனென்று போற்றிப் புகழ வேண்டும்!

    ஆளுமையை மிக அருமையாகச் சில வார்த்தைகளில் வர்ணித்து விட்டார் கண்ணதாசன்!

    ஆக, ஆளுமை என்பது ஒரு மனிதனை மிகச் சாதாரண நிலையில் இருந்து, சான்றோர்கள் நிறைந்த சபைக்கு அழைத்துச் செல்லும் உன்னத பண்பு மட்டுமல்ல;

    கிஞ்சித்தும் அவனைப் பற்றிய இகழ்ச்சிக்கு வழிவிடாமல், அவனுக்கு நிகர் அவனே எனும் ஒப்பற்ற நிலையில் வைத்துப் புகழக் கூடியது என்று சொன்னால் மிகையாகாது!

    ஒரு தனி மனிதப் பண்பு; ஒரு செயலில் அவனுக்கு இருக்கக் கூடிய வல்லமை; தன்னை இந்தச் சமூகத்திற்குக் காட்டக் கூடிய அடையாளம்; எல்லாவற்றுக்கும் மேலாக, அனைவரையும் அரவணைத்துச் செல்லக் கூடிய தலைமைப் பண்பு என அனைத்தும் ஒருங்கே பெற்றிருக்ககும்

    ஒப்பற்ற அணிகலன்தான் ‘ஆளுமை’ !

    என்ன ‘ஆளுமையை’ அறிய எத்தனையோ புத்தகங்களைப் படித்தோமே என யோசிக்கிறீர்களா?

    வார்த்தையின் வலிமைகள் புத்தகத்தில் இருந்தாலும், வாழ்க்கையில் பயில்வதற்குத் தயாராக நமக்குப் புரியும் வகையிலும், நம் தாய்மொழியிலும் அறிந்தால் தானே முடியும்!

    இதையே சற்று இலக்கிய நடையில் சொல்ல வேண்டும் எனில், அய்யன் திருவள்ளுவர் சொல்வதைக் கவனியுங்கள்!

    கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
    அருவினையும் மாண்டது அமைச்சு.

    ஒரு செயலைச் செய்வதற்கான காலத்தையும்; அதனைச் செயல்படுத்தத் தேவையான சாதனம் அல்லது காரணிகள்; அச்செயலைச் செவ்வனே நிறைவேற்றக் கூடிய ஆற்றல்,

    இவையெல்லாம் ஒருவனிடம் அமையப் பெற்றால்,

    அதுதான் ‘ஆளுமை’ எனும் பண்பு என்று சொல்லலாம்! இதை ஒரு அமைச்சருக்கான பண்பு எனச் சொன்னலும்,

    ஆளுமைக்கான இலக்கணம் எனக் கொள்வதில் இருவேறு கருத்து இருக்க வாய்ப்பில்லை!

    ஆளுமையின் ஆற்றல் எங்கு தொடங்குகிறது?

    நம்முடைய முதல் பள்ளிக்கூடமே நம் பெற்றவர்கள்தான் என்பதில் நமக்கு எந்தச் சந்தேகமும் தேவையில்லை. அத்தகைய பெற்றோர்களிடம்தான் ஆளுமைப் பண்பை முதன் முதலில் நாம் கற்று கொள்கிறோம்.

    எந்த ஒரு பண்பிற்கும் அடிப்படைத் தேவை பழக்கம் என்பதை நாம் அறிவோம். ஆளுமையும் அதற்கு விதி விலக்கல்ல; நம் தாயின் அன்பிலும்; தந்தையின் கண்ணியத்திலும் தான் நாம் கற்றுகொள்கிறோம் ஆளுமையின் ஆற்றலை!

    ஒவ்வொரு செயலையும் உற்று நோக்குவதிலும்; அதன் வடிவத்தைப் புரிந்து கொள்வதிலும்; முன் பின விளைவுகளை ஆராய்வதிலும், எத்தனை தடை வரினும்,

    எடுத்த காரியத்தை முடிப்பேன் என்ற மன உறுதியிலும்தான் ஆளுமையின் ஆற்றல் தொடங்குகிறது!

    மகாகவி பாரதியின் வரிகளில் சொன்னால்,

    மனதில் உறுதி வேண்டும்;
    வாக்கினிலே இனிமை வேண்டும்!
    நினைவு நல்லது வேண்டும்;
    நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்!!

    ஆம்! எண்ணிய எண்ணியாங்கு எய்திடச் செய்யும் ஒப்பற்ற பண்புதான் ‘ஆளுமை’!

    ஆளுமையின் வெளிப்பாடு எப்படி இருக்கும்?

    மிகச் சுலபமாக ஆளுமையின் வெளிப்பாட்டைப் புரிந்து கொள்ளா இயலும்; எடுத்துக் காட்டாக, நம் பள்ளிக் கூடங்களிலே ‘வகுப்பின் தலைவர்’ என்று ஒரு மாணவனை நியமிப்பார்கள். அதை எவ்வாறு தீர்மானிக்கின்றனர்?

    எந்த ஒரு மாணவன் ஒழுக்கமாக இருக்கிறானோ; நன்றாகப் படிக்கிறானோ; பெற்றோர் மட்டும் பெரியவர்களிடத்தில் அன்பாக இருக்கிறானோ; ஒரு செயலில் சுயமாகச் சிந்தித்து அதை நேர்த்தியாகச் செய்வதோடு மட்டுமல்லாமல்

    சக மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறானோ

    அந்த மாணவனைத்தான் ‘வகுப்பின் தலைவர்’ எனும் பதவிக்கு நிர்ணயிக்கிறார்கள்!

    ஆகவே, ஆளுமையின் வெளிப்பாடு என்பது ஒரு மனிதனின் தனிப் பட்ட பண்பு நலன்களில் உள்ள முதிர்ச்சி மற்றும் செயல்களின் வெற்றியில் அடங்கி இருக்கிறது என்றால் மிகையாகாது.

    ஆளுமையை ஒரு சமூக வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்த முடியும்?

    மண்ணில் புதையும் விதைகளெல்லாம் மீண்டு எழுவதில்லை; ஆனால், ஒரே ஒரு விதை மண்ணைப் பிளந்து வந்து ஒரு செடியாகி, வளர்ந்து மரமாகி, காயாகிப் பழமாகி எப்படி பல்லாயிரம் விதைகளுக்குக் காரணியாகிறதோ

    அதைப் போலத்தான் இம்மண்ணில் வாழ்ந்த மாமன்னன் இராஜராஜன் முதல் இந்த நூற்றாண்டில் வாழ்ந்த காமராஜர், ராஜாஜி, வல்லபாய் பட்டேல், அம்பேத்கார் , அறிஞர் அண்ணா உள்பட,

    அண்மையில் மறைந்த அப்துல் கலாம் வரை

    காலம் நமக்கு எத்தனையோ சான்றோர்களின் ஆளுமையை பாடமாக்கி இருக்கிறது!

    அவர்களின் வழியில் நம்மை பண்படுத்துவதில் தான் ஆளுமையின் வெற்றி அடங்கி இருக்கிறது; அடுத்த சமுதாயம் மலர்வதற்கு!!

    வளர்ப்போம் நம்முள் ஆளுமையை; அன்னவர்களின் அடி பற்றி!

    வெல்வோம் எண்ணிய செயல் யாவும்!

    தொடரும்……..

    Share
  • சிகரம் நோக்கி – 25

    சுரேஜமீ

    வாய்மை

    peak1

    ஒரு துறவி தன்னுடைய இறை முடித்துக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அப்போது தெருவில் வந்து கொண்டிருந்த ஒருவனைக் காவலர்கள் துரத்தி வர, அவன் நேராக ஆசிரமத்தில் நுழைந்து, துறவியிடம் அடைக்கலம் கேட்டான். அவரும் ஒரு மறைவிடத்தைக் காட்டி, அங்கு சென்று ஒளிந்து கொள் என்றார். அவனைத் துரத்தி வந்த காவலர்களும், ஆசிரமத்தில் நுழைந்து, இப்பக்கம் ஒரு திருடன் வந்ததாகவும், அவனைப் பார்த்தீர்களா என்றும் வினவ,

    துறவி சைகையால் அவ்விடத்தைக் காட்டினார். காவலர்களோ துறவி நிஷ்டையில் எதோ கூறுகிறார் என எண்ணி அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    சிறிது நேரத்தில் வெளியில் வந்த திருடன், துறவியிடம் அடைக்கலம் என்று வந்தவரைக் காப்பாற்றுவதுதானே ஒரு துறவியின் தர்மம்! தாங்கள் ஏன் உண்மையை உரைத்தீர்கள்? ஒருவேளை நான் பிடிபட்டிருந்தால் என்னாவது? என்று கேட்க,

    அதற்குத் துறவி மிகவும் அன்பாக அவனிடம்,

    தம்பி, உண்மை நிச்சயம் நம்மைக் காப்பாற்றும் என்பதால் தான் சொன்னேன்; ஒரு வேளை பொய் சொல்லி இருந்தால், நம் இருவருக்கும் துன்பமே எஞ்சியிருக்கும்! ஆதலால், உண்மையைச் சொன்னேன் என்றார்!

    உண்மையின் வலிமை எத்தகையது என்பதை இக்கதை நமக்கு உணர்த்துவதோடு மட்டுமல்ல; ஆபத்தான நிலையிலும், உண்மை உங்களைக் காப்பாற்றும் என்ற நீதியும் புலப்படுகிறது.

    உங்களுடைய சிந்தனை; ஆற்றல், தகுதி, இன்ன பிற குணாதிசயங்கள் என அனைத்தையும் உயரிய நிலையிலிருந்து எடுத்துக் காட்டும் தன்மை ‘உண்மைக்கு’ மட்டுமே உண்டு!

    நாம் பழக்கத்தில், உண்மை பேசுபவர்களை ‘இவர் என்ன பெரிய சத்தியவானா? எனக் கேட்பதுண்டு. உண்மை பேசவேண்டும் என்ற ஒரே கொள்கைக்காக நாடு, நகரம், ஆட்சி, மக்கள், குடும்பம் என அனைத்தையும் துறந்தவனது வாழ்க்கைதான், “சத்தியவான் சரித்திரமாக” இன்றளவும் போற்றப்படுகிறது.

    சத்தியத்திற்குச் சோதனை வரலாம்; ஆனால், அது வேதனையாக இருப்பது போலத் தோன்றினாலும், நிரந்தர வெற்றியின் இருப்பிடமாக இருக்கக் கூடிய பலம் பொருந்தியது வாய்மை!

    சற்று யோசித்துப் பாருங்கள்…. குழந்தையாக இருக்கும்போது மகிழ்வுடன் இருந்த நமக்கு, வளர்ந்து வரும்போது, ஒவ்வொரு நிகழ்வும் நம்முள் ஒரு தடயத்தைப் பதிய காரணமாக இருப்பது எது என்று?

    ஏதோ ஒரு காரணத்திற்காக முதன் முதலில் நாம் சொன்ன ஒரு சின்னப் பொய்யாக இருக்கும்;

    பின்னர் அதுவே, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நமக்குப் பழக்கமாகி, ஒரு சூழலில் இருந்து, தற்காலிக விடுபாட்டிற்காக, நாம் பொய் எனும் மாய வலையில் விழும் நிலைக்குத் தள்ளிவிடும்.

    நெறிநூல்களில் தலையாயதான நம் மொழி தந்த திருக்குறள் என்ன சொல்கிறது ‘வாய்மை’ பற்றி?

    புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
    வாய்மையால் காணப் படும்.

    ஒரு மனிதனது அகத்தின் தூய்மையை உறுதிப்படுத்துவது வாய்மைதான் என்று வள்ளுவர் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். அது மட்டுமா, வாய்மை எனும் விளக்குதான் ஒரு சாதாரண மனிதனைச் சான்றோனாக்குவது என்றால்,

    முயன்றுதான் பார்க்கலாமே!

    அது என்ன அவ்வளவு கடினமானதா? ஏன் நம்மால் பின்பற்ற முடியாது? இன்று ஒரு நாள் மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் நான் வாய்மை தவறேன் என்று உறுதி பூண்டுவிட்டால்,

    இந்த ஒரு நாள் தரும் மகிழ்ச்சி நம்மை அடுத்த நாளுக்கு எழுச்சியோடு அழைத்துச் செல்லும் என்பதை மறவாதீர்கள்!

    ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும்; நீங்கள் உண்மை பேசத் துவங்கிய நாள் முதலாய், எவர்க்கும் அஞ்சத் தேவையில்லை; வாய்மையே ஒரு கவசமாக உங்களுக்குப் பாதுகாப்புத் தரும்.

    இன்றைய உலகியல் வாழ்வில், வாய்மையைக் கடைப்பிடிப்பது என்பது முற்றிலும் இயலாத காரியம் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கும், காலத்தின் தேவையை அன்றே கருதி, அதற்கும் வழி சொல்கிறார் வள்ளுவப் பெருந்தகை!

    வாய்மை எனப்படுவ(து) யாதெனின் யாதொன்றும்
    தீமை இலாத சொலல்.

    உங்களால், எவர்க்கும் தீங்கு இழைக்காமல் பேச முடியும் என்றால், அதுவே, வாய்மைக்கு நிகரானது என்கிறார். இதையே, வேறு வார்தைகளில் குறிப்பிட வேண்டுமானால், தாங்கள் கூறும் ஒரு பொய்யால், மற்றவர்களுக்கு ஒரு நன்மை வருமாயின்,

    அதுவும் வாய்மையாக கருதப்படும். இதெல்லாம் ஒரு விதி விலக்கே அன்றி விதியாகக் கொளல் கூடாது.

    கவிஞர் புலமைபித்தன் வரிகளில் கூறவேண்டும் என்றால்,

    பாதை தவறிய கால்கள் விரும்பிய
    ஊர் சென்று சேர்வதில்லை – நல்ல
    பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர்
    பேர் சொல்லி வாழ்வதில்லை!

    ஆக, நாம் வாய்மையைப் பேசவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், ஒருபோதும் நம்மால், அதைக் கடைப் பிடிக்க முடியாது;

    இன்றே செய்வோம்; அதை நன்றே செய்வோம் எனும் கூற்றுக்கேற்ப, ஒவ்வொரு வாரமும், நம்மைச் செதுக்கும் உயரிய பண்புகளின் விதைகளை மட்டுமே பார்க்கிறோம்; அவை விருட்சங்கள் ஆவது உங்களின் கைகளில்தான் இருக்கிறது!

    வளரும் நாட்கள் ஒவ்வொன்றும் வரமாக,

    சிகரம் தொட்டுவிடும் தூரம்தான்!

    தொடர்வோம் பயணத்தை!!

    அன்புடன்
    சுரேஜமீ

    Share
  • சிகரம் நோக்கி ….. (24)

    சுரேஜமீ

     

    திறமை

     apeak

    உலகில் அறிவும், திறமையும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள் வெற்றி காண்பது என்பது மிகவும் வாடிக்கையான ஒன்றுதான். ஆனால், திறமையால் மட்டுமே வென்றவர்கள்தான், வரலாறு படைக்கிறார்கள். அப்படியென்றால், வாழ்வின் வெற்றிக்கு அறிவு தேவையில்லையா எனும் கேள்வி எழலாம். அதற்கு பதில் காண்பதற்கு முன், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    அனைத்து வெற்றிக்கும் அடிப்படையாக இருப்பது அறிவுதான்!

    ஆனால், அந்த அறிவை ஒவ்வொரு மனிதனும், தன் சூழ்நிலைக்கு ஏற்ப, தன்னுடைய லட்சியத்தை நோக்கிச் செலுத்தி, செயலில் வெற்றி காணச் செய்வதுதான்

    ‘திறமை’ என்பதை வெற்றியாளர்களின் சரித்திரம் நமக்குச் சொல்கிறது.

    ஆக, திறமை என்பதே அறிவில் ஒளிந்து இருப்பதுதான் என்பதும், அதை ஒவ்வொருவரும், அவரவர் முயற்சியாலும், பயிற்சியாலும், தீவிர முனைப்பாலும், வெளிக்கொணர்ந்து, சாதனைகளுக்குச் சாதகமாக்கிக் கொளல் வேண்டும் எனவும் அறிதலே திறமையின் முதல் படி!

    சரி, அறிவுக்கும், திறனுக்கும் உள்ள நுட்பத்தைத் எப்படி தெரிந்து கொள்வது? திறனை அறிவது எப்படி? திறனை வளர்ப்பது எப்படி? திறனைச் சோதித்துக் கொள்வது எப்படி? அதனால் வெற்றி காண்பது எப்படி?

    அறிவோமா?

    மனதை வெற்றிடமாக்குங்கள்….சிந்தையை ஒருமுகப்படுத்துங்கள்….சில விதைகள் இங்கே தூவப்படலாம்…முளைப்பதற்கு உங்களிடம் முனைப்பு இருக்கட்டும்!

    அறிவு என்பது ஒரு செயலில் நமக்கு உள்ள நுணுக்கங்களையும், அது சார்ந்த அடிப்படைக் கூறுகளையும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும்,

    நூல்களின் மூலமாகவோ, ஊடகங்களின் மூலமாகவோ அல்லது அனுபவத்தின் மூலமாகவோ பெறுவதாக இருக்கக் கூடியது.

    மாறாகத் திறமை என்பது ஒரு செயலில் நமக்கு இருக்கக் கூடிய விருப்பத்தைப் பொறுத்து, அது சார்ந்த அறிவைப் பெற்று, அந்த அறிவின் அடிப்படையில் ஒரு கனவை உருவாக்கி, அந்தக் கனவை நினைவாக்க, நாம் நாளும் செய்யும் தவம் என்றால் மிகையாகாது.

    அறிவுகூடச் சிலவேளை மரபணு சார்ந்த விஷயமாகவோ, அல்லது பிறப்பின் அடிப்படையில் வருவதாகவோ கூட இருக்க வாய்ப்புண்டு! ஆனால், திறமை நிச்சயமாக, ஒருவரின் சொந்த முயற்சியில்தான் வர இயலும் என்பதே, அதன் தனித்தன்மை!

    ஆக, அத்தகைய முயற்சிக்கு வித்தாக பல காரணிகள் இருக்கலாம். குடும்பச் சூழல், நண்பர்கள், சமூகம், இருப்பிடம், நாடு என எது வேண்டுமானலும் உங்களுக்குள் ஒரு நெருப்புப் பொறியை ஏற்படுத்திவிட்டு, உங்களின் திறமையைச் செதுக்கத் தூண்டலாம்!

    மீண்டும் மீண்டும் நினைவின் ஆழத்தில் பதியுங்கள்…….

    ‘திறமை’ என்பது தனி மனிதனின் மட்டற்ற முயற்சியால் மட்டுமே விளையக் கூடியது!

    நாளும் வளர்க்கும் திறமைதான் நாளைய வரலாறு ஆக முடியும்!

    அத்தகைய திறமையை வளர்க்க உதவும் காரணிகளை அடையாளம் காணலில்தான், நாளைய வெற்றியின் சரித்திரம் அடங்கி இருக்கிறது.

    ஆர்க்கிமிடிஸ் எனும் தத்துவ ஞானி என்ன சொல்கிறார் தெரியுமா?

    நான் நிற்பதற்குத் தேவையான இடத்தையும் ஒரு நெம்புகோலையும் என்னிடம் கொடுங்கள். இந்த பூமியையே நகர்த்திக் காட்டுகிறேன் என்கிறார்!

    இதைவிட உங்கள் முயற்சிக்கு வித்தாகக் கூடிய வார்த்தைகள் வேறென்ன இருக்க முடியும்?

    திறனைப் பெறுவதற்குப் பல காரணிகள் இருந்தாலும், அதனை வளர்ப்பதற்குத் தேவையானது

    திடமான எண்ணமும், தீவிர நம்பிக்கையும், தொடர்ந்து செயலாற்றுவதும், பிழைகளைத் திருத்தித் தடைகளைக் களைந்து, இலக்கினை நோக்கிப் பயணிப்பதேயாம்!

    சரி திறனைக் கண்டுகொண்டோம்….பெருக்குகின்றோம்….பின் என்ன செய்யவேண்டும்? நம்மிடம் உள்ள திறனைச் சோதிக்க வேண்டாமா? எப்படிச் சோதிப்பது?

    எந்த வேலையானாலும், அதில் தன்னை விட யாரும் சிறப்பாகச் செய்ய இயலாதவாறு ஒரு செயல் இருக்குமானால்,

    நீங்கள் திறமைசாலி என்பதில் ஐயம் துளிகூடத் தேவையில்லை!

    தாம் எடுத்துக்கொண்ட செயலில், தம்மை விட யார் திறமைசாலியோ, அவர்களோடு போட்டியிட்டுத் தன்னை மேம்படுத்தித் தன் திறனை அவ்வப்போது மெருகேற்றிக் கொள்ளக் கற்றுக் கொண்டால்,

    நம் திறமையை வியந்து வெற்றித் திருமகள் நம்மை நாடி வருவாள்! அந்நாள், இந்த உலகமே நம்மைப் பார்த்து வியக்கும்!

    இதற்குச் சான்றாக எத்தனையோ பேர் நம் கண்முன்னே வாழ்ந்தார்கள்! வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சிலரைப் பற்றித் தெரிந்து கொள்வோமா?

    1. சிவாஜிராவாக இருந்த ஒரு சாதாரண மனிதருக்குள் இருந்த திறமைதான் ஒரு சிறந்த நட்சத்திர நடிகரான ரஜினிகாந்தை உருவாக்கியது.

    2. குண்டுராவாக மத்திய அரசுப் பணியில் இருந்தவரை, அப்பணியை உதறித் தள்ளிவிட்டு, அவருக்குள் இருந்த திறமைதான், ஒரு மிகச்சிறந்த நகைச்சுவை நடிகரான நாகேஷைக் கண்டெடுத்தது.

    3. எண்பதுகளின் ஆரம்பத்தில், ஒரு பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இன்ஃபோஸிஸ் எனும் நிறுவனத்தை, அமெரிக்கச் சந்தை முதல் கொண்டு சேர்த்தது,

    நாரயணமூர்த்தி எனும் தனிமனிதனின் திறமைதான்!

    எடுத்துக்காட்டுகள் அடுக்கிக் கொண்டே போகலாம்; ஏன் உங்கள் அருகாமையிலேயே எத்தனையோ மனிதர்கள், தங்கள் திறமைகளை ஏதோ ஒரு வகையில் மேம்படுத்தி,

    தங்கள் வாழ்வில் ஒளி பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகவே, நாம் செய்ய வேண்டுவன எல்லாம், நம்முள் இருக்கக் கூடிய சிறந்த வேட்கை என்ன என்பதைத் தன்னாய்வு செய்வதும்,

    அதைச் செயல்வடிவம் கொடுத்து, ஒரு இலக்கினை நிர்ணயித்து, அதன் வழி பயணத்தைத் தொடர்வதும்தான்!!

    வழிகள் பல இருந்தாலும், அதைத் தேர்ந்தெடுக்கக் கூடிய இடத்தில் இருப்பது நாம்தான் என்பதை அறிந்து

    நகர்வோம் சிகரத்தை நோக்கி!

    தொடரும்………………

    அன்புடன்
    சுரேஜமீ

    Share
  • ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்

    -சுரேஜமீ 

    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பப்
    பாரறிவான் பகன்றது விளம்பிப்
    பேருலகில் யாவரும் விளங்கப்
    போற்றுமொரு பெருநாள் இதுவே!

    பொங்கிவரும் அன்பின் உணர்வைப்
    பகிர்ந்து வளம்பெருக வாழ
    வருடம் ஒருமுறை வருமே
    வாழுலகில் உறவைப் போற்ற!

    ஈகைத் திருநாள் இன்று
    ஈரத்தை நெஞ்சில் வைத்து
    ஈந்து உலகில் வாழ்கவெனும்
    ஈத்-அல்-அதாத் திருநாள்!

    வாழட்டும் மனிதம் என்றும்
    வாழ்த்துக்கள் எட்டுத் திக்கும்!
    வாழ்த்துக்கள் உறவுகளே
    வாழி நல்வாழ்த்துக்களுடன்!!

     

    Share
  • சிகரம் நோக்கி (23)

    சுரேஜமீ

    பொறுமை

    apeak

    காலம் செல்லச் செல்ல மனிதன் எதையுமே அவசர கதியில் கையாளவே எண்ணுகிறான்; எடுத்த செயலை எப்படியேனும் ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதில்தான் எண்ணம் மேலோங்கியிருக்கிறதே ஒழிய, எப்படி ஒரு செயலைச் செம்மையாகச் செய்யவேண்டும் என்பதில்அக்கறை மிகச் சிலருக்கே இருக்கிறது என்பதே இன்றைய நிலை!

    எதற்காக அவசரப்படுகிறோம் என்பதை உணர்வதன் அடையாளம்தான் ‘பொறுமை’!

    பொறுத்தார் பூமி ஆள்வார் எனச் சும்மாவா சொன்னார்கள்?

    பொறுமையின் பயனை அனுபவித்தவர்கள் எழுதிவிட்டுச் சென்ற சத்தியமான வார்த்தைகள் அவை என அறிந்தால்,

    வாழ்வில் வெற்றிகளைக் குவிக்க முடியும்!

    பொறுமையாக இருக்க எப்படி முனைவது?

    அனுபவம் தரும் ஒப்பற்ற கல்விதான் பொறுமை; இது பெண்களுக்கு சற்று இயல்பானது என்று கூடச் சொல்லலாம். பொறுமையாக இருப்பதை, என்பது அமைதியாக இருப்பது என்ற பொருளில் இணைக்கக் கூடாது. பொறுமையும்; அமைதியும் இரு வேறு குணங்கள்.

    நம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும்; காட்சியும்; தொடர்புகளும் நமக்குக் கற்றுத்தரும் இனிமையான பாடம்தான் ‘பொறுமை’.

    ஒரு நாள் மிகுந்த வேலைப் பளுவிற்கு நடுவே, அலைபேசியில் என்னை அழைத்த என் மனைவி, குழந்தைகளைப் பள்ளியிலிருந்து கூட்டிவர வேண்டும் என்று கூறினார். நானும் புறப்படத் தயாராகி, சிற்றுந்தைச் செலுத்திக் கொண்டிருக்கும் வேளையில், திரும்பவும் அலைபேசி அழைப்பில் என் மனைவி வர, சற்றுக் கடினமான வார்த்தைகளைக் கூறிவிட்டேன். வீட்டிற்குக் குழந்தைகள் வந்தவுடன், அம்மாவின் முகம் மாறுபட்டு, மவுனமாக இருப்பதை ஏன் என வினவி இருக்கிறார்கள். நடந்ததைக் கூறியிருக்கிறார்.

    இரவில், என் மகள், சற்றே என் நிதானத்தைப் புரிந்து கொண்டு,

    அப்பா…..விடுப்பா! சாதாரணமாக இரு……என்ன வேண்டுமென்றா அம்மா அழைத்தார்கள்? நீ மறந்துவிடப் போகிறாயே என்று நினைவூட்டியிருக்கிறார்கள்…..அவர்களுக்குத் தெரியுமா நீ கார் ஓட்டிக்கொண்டிருக்கிறாய் என்று? விடுப்பா….சிரி…..என்று எனக்குச் சொல்லும்போது

    ‘பொறுமை’ யின் அர்த்தம் விளங்கியது! ஆக ஒரு சூழலைப் புரிந்து கொண்டு, ஆறு வயதே நிரம்பிய குழந்தை, நமக்கு பொறுமையைக் கற்றுக் கொடுக்கிறது!

    பொறுமையை இழந்தவன் தன்னையே இழக்கிறான் என்றால் மிகையாகது. இன்றைய சூழலில் நடக்கும் பல குற்றங்களுக்கும் காரணமாக இருப்பது

    குற்றம் புரியத் தூண்டும் அந்த ‘கண’ நேரத்தில் நாம் பொறுமையை இழப்பதுதான்!

    தமிழர்களின் கடந்தகாலத்தை மட்டுமல்லாமல், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என முக்காலத்தையும் சேர்த்துப் பதிந்த நீதிநூலாம் ‘திருக்குறள்’,

    பொறுமையின் சிறப்பை நாம் புரிந்துகொள்ள வேண்டி ஒரு தனி அதிகாரமே ‘ பொறையுடைமை’ என பத்துப் பாடல்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

    ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல……’ எனும் குறளில்,

    எப்படி இந்த பூமியானது, தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்கிறதோ அதுபோல

    நாம் ஒவ்வொரு செயலிலும், நிகழ்விலும், நகர்விலும் பொறுமையாகச் செயல்பட வேண்டும் என்று சொல்கிறது.

    பொறுமையாக இருந்தால் என்ன கிடைக்கும் என்பதை விட,

    பொறுமையால் இந்த உலகில் கிடைத்தற்கரிய மனிதப் பிறவியை, நாம் செம்மையாகப் பேணமுடியும். இதைத்தான் திருவள்ளுவர்,

    நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறயுடைமை
    போற்றி யொழுகப் படும்! என்கிறார்.

    நாம் பொறுமையாக இருந்தால் எல்லோராலும் புகழப் படுவோம் என்பதுதான் அதன் பொருள்!

    சமகாலத் திரைப்படப் பாடலாசிரியரின் தேசிய விருது பெற்ற பாடலின் வரிகளில் ‘ பொறுமை’ பற்றி இவ்வாறு கூறுகிறார்….

    உளி தாங்கும் கற்கள் தானே
    மண்மீது சிலையாகும்
    வலி தாங்கும் உள்ளம் தானே
    நிலையான சுகம் காணும்

    இங்கு வலி என்பதை ‘பொறுமை’ என்ற பொருளில் எடுத்துக் கொள்ளவும்.

    கம்பநாடன் அனுமனின் பொறுமையைச் சொல்லும்போது இப்படிச் சொல்கிறார்….

    ……………………………..நின்போல்
    பெரும் பொறை அறிவினோரால்…

    என்றாரென்றால், அனுமனின் வெற்றிக்கு பொறுமைதான் காரணம் என்பதற்குச் சான்றல்லவா இந்தப் பாடல்!

    காந்தியின் பொறுமைதான் இந்தியாவுக்கு, அன்னியர்களிடமிருந்து சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தது;

    சச்சினின் பொறுமைதான் 100 சதங்களைப் பெற்றுத் தந்தது;

    முனைவர். அப்துல் கலாமின் பொறுமைதான் இந்தியாவை அணு ஆயுத நாடாக மாற்றியது;

    ஸ்டீவ் ஜாப்ஸின் பொறுமைதான் ஆப்பிள் சாதனகளில் மிகுந்த பரிணாமங்களை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் உயர்த்தியது;

    இன்னும் நிறையப் பட்டியலிடலாம்! ஆனால், பட்டியல்களை விட பொறுமை தரும் பாடம் நிச்சயம் ஒரு மாற்றத்தை நம்மில் ஏற்படுத்தும் என்பதே கண்கூடான அனுபவம்.

    காலம் கடந்தும் தீர்க்க இயலாத பிரச்சினைகளைக் கூடபொறுமை எனும் குணத்தால் வென்றுவிட முடியும்.

    புரிதலின் வெற்றிக்குத் துணையாக இருப்பதும் பொறுமைதான்!

    ஒருமுகப் படுத்தல் மற்றும் கவனித்தலின் அடிப்படையும் பொறுமையில்தான் இருக்கிறது!

    பொறுமையாக இருப்பவர்கள், உடல் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்றால் நம்ப முடியவில்லையா? பொறுமையுடன் நிகழ்வுகளைக் கையாண்டு பாருங்கள்; உணர்ச்சி வயப்படுதலில் இருந்து விடுபட்டு, அறிவு பூர்வமாக சிந்தித்துச் செயல்படுவதன் மூலம் உடல்நலம் நிச்சயம் சீராக இயங்கும்.

    நண்பர்களே, ஒரு நல்ல பழக்கத்தை நாம் கடைப்பிடிக்கத் தொடங்கினால் போதும்; பழக்கம் என்பது ஒரு செயலைத் தொடர்ந்து செய்தலின் அறிதலை நமக்கு ஏற்படுத்தும்; சில காலங்காளில் தானே ஒரு விருட்சமாக நம்முள் வளர்ந்து, நம்மை செதுக்கும்!

    வாழ்வின் வெற்றி என்பது ஏதோ போட்டிகளில் வெல்வதிலோ; பெரும்பணக்காரனாவதிலோ இல்லை! ஆனால், இவையெல்லாம் கூட நம்மை நெருங்கி வரலாம்!

    எப்பொழுது நாம் ஒரு நல்ல பழக்கத்தை பழகிக் கொள்கிறோமோ, அப்பொழுது இவ்வுலகில் ‘வெற்றி’ என்று கருதப் படும் அனைத்துக் காரணிகளுக்கும்

    காரணமாக நீங்கள் இருப்பீர்கள்!

    வெறும் வார்த்தையல்ல…..வரலாறு என்பதைக் காலம் சொல்லும்!

    தொடர்ந்து சிந்திப்போம்…..

    அன்புடன்
    சுரேஜமீ

    Share
  • சிகரம் நோக்கி – 22

     சுரேஜமீ

    எளிமை

    peak11
    பிறக்கும் போது அனைவரும் வெறுமையாகத்தான் பிறக்கின்றோம் . ஆனால், அவரவர் வாழ்க்கைக்கு ஏற்ப வசதிகள்,

    வாய்ப்பினை ஏற்படுத்த,

    சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள் சில வேற்றுமைகளை விதைக்கிறது.

    இதன் விளைவாக ஒரு அந்நியப்படுதல் என்பது தெரிந்தோ தெரியாமலோ சிந்தையில் புகுந்து விடுகிறது.

    எப்பொழுது நாம் அன்னியப்படுகிறோம் என்ற உணர்வு மேலோங்குகிறதோ,

    எது நம்மைச் சாதாரண நிலையிலிருந்து சற்றே விலகி இருக்க உந்துகிறதோ,

    நெருங்கிப் பழகிய நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ தொடர்பிலிருந்து பிரித்து நம்மை மிகுதிப் படுத்துகிறதோ,

    அத்தகைய சூழலைக் கையாளும் கலையைக் கற்றுக் கொள்வதும்; நம் நிலையிலிருந்து மாறாதிருத்தலுமே

    எளிமையின் இலக்கணம் எனலாம்!

    வசதிகள் பெருகலாம்; தவறில்லை! ஆனால், வளர்ந்து வந்த பாதையை விட்டு விலகாமல், வசதிகளை வாய்ப்புக்களாக உருவாக்கி, அடுத்த மனிதனுக்கு எடுத்துச் செல்வதுதான் வாழ்வின் பயனாகும்.

    மாட மாளிகைகளோ, வைத்திருக்கும் பல சொகுசுக் கார்களோ, இன்ன பிற செல்வங்களோ,

    நம் உழைப்பில் வாங்கியதாக இருந்தாலும், கைக்கு கை மாறிச் செல்லும் இயல்பானது; இல்லையேல், இயற்கை அழிவுக்கு உட்பட்டது!

    ஆனால், நாம் தேடும் மனிதம் மட்டுமே, தன் அத்தியாயத்தை நம்மோடு முடித்துக் கொள்வது என்றால்;

    அதை நாம் வாழ்வில் சரியாகப் புரிந்து கொள்ளத் தயங்குவதற்குத் தடையாக இருக்கும் மனநிலையைத் தவிர்த்தால்,

    நாம் அனைவராலும் விரும்பப்படும் எளிமையான மனிதராக வாழ முடியும்.

    ஆனால் அவ்வாறாக இருக்கும் மனிதர்கள் சிலரே!

    கேள்வியில்தான் தெளிவு பிறக்கும் என்றாலும், நாம் தகுதியான கேள்விக்கு என்றுமே நம்மை உட்படுத்துவதும் இல்லை!

    நிலைமறந்து நிலவைத் தொட்டு என்ன பயன்?

    கற்ற கல்வியும்; கல்வியால் பெற்ற செல்வமும் மட்டும் காரணம் அல்ல; மாறாக உழைப்பு தரும் கௌரவம்; தேடி வரும் பட்டஙகள்; பதவி தரும் புகழ் என பட்டியலை அடுக்கிச் செல்லலாம்

    கவியரசரின் வரிகளில் சொல்லவேண்டும் என்றால்;

    வந்த நாள் முதல் இந்த நாள் வரை
    வானம் மாறவில்லை
    வான் மதியும் மீனும் கடல் காற்றும்
    மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
    நதியும் மாறவில்லை
    மனிதன் மாறிவிட்டான்……….

    செடி கொடிகள்; புள்ளினங்கள் மற்றும் இயற்கை, எத்தன்மையிலும், ஒரே நிலையில் இருக்க,

    மனிதன் மற்றும் ஒவ்வொரு நிலையிலும், வெவ்வேறாகப் பிரதிபலிக்கத் துவங்குகிறான்.

    இதற்கான அடிப்படைக் காரணத்தை ஆராய்ந்தால்,

    மனிதன் மட்டும்தான் ‘தான்’ என்றும்; ‘தனது’ என்றும் சுருக்கிக் கொள்கிறான். அதன் பயனாக, வாழ்வில் பெரும்பான்மையிலிருந்து விலகிச் சிறுபான்மை தொகுப்போடுத் தன்னை ஐக்கியப்படுத்தி, வாழ்வின் நோக்கத்தைச் சிறுமைப் படுத்தி விடுகிறான்.

    எளிமைக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்த பலரில் மிகவும் குறிப்பிடத் தக்க தலைவர்கள்,

    kamraj

    கர்ம வீரர் காமராஜர் மற்றும் சமீபத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களும்!

    abdul

    இரு எடுத்துக் காட்டுகள் இவர்களின் எளிமைக்குச் சான்றாக!

    முதலில் தமிழகத்தின் பொற்கால ஆட்சியாகக் கருதப்பட்ட கருப்பு காந்தி காமராசர்,

    முதல்வராகப் பொறுப்பேற்ற நேரம். பாதுகாப்பிற்காக முன்னும் பின்னும் காவல்துறை சார்ந்த சிவப்பு விளக்குப் பொருத்திய மற்றும் பாதுகாப்பு ஊர்திகள் வர,

    தலைவர் காமராசர் உடனடியாக உயர் காவல்துறை அதிகாரியை அழைத்து,

    எனக்கு எதற்கு இவ்வளவு ஆடம்பரம்? மக்கள்தான் உயரிய பாதுகாப்பு; ஆகவே, இத்தகைய பாதுகாப்பை உடனடியாக விலக்குங்கள் என்று உத்தரவிட்டாராம்!

    அடுத்ததாக, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரின் எளிமையைச் சொல்ல வேண்டும் என்றால்,

    மிகச் சாதாரணமானவர்! இப்படியும் ஒரு மனிதரா என்று வியக்க வைக்கும் மனிதர் இக்காலத்தில் வாழ்ந்தார் என்பதே

    நாம் எப்படி எளிமையாக இருக்க வேண்டும் எனக் கற்றுக் கொடுத்த மாமனிதர்!

    குடியரசுத் தலைவராக இருக்கும்போது ஒரு விழாவுக்குச் செல்கிறார். ஆங்கே அமைக்கப் பட்டிருந்த மேடையிலே,

    எல்லா இருக்கையும் சாதரணமாக இருக்க,

    ஒன்று மட்டும் வித்தியாசமாக இருக்கிறது. அதுதான் டாக்டர் அப்துல் கலாமுக்கான இருக்கை என்று சொல்லக் கேட்டதுமே

    இருக்கையை அகற்றச் சொன்னதோடு மட்டுமல்லாமல்,

    அவருக்கும் சாதாரண இருக்கையையே அமர்த்துமாறு வேண்டுகிறார்!

    இவர்களின் வாழ்வு சொல்லும் நீதி என்ன?

    இவர்கள் வாழ்ந்தால் மக்களின் மனதில் நிரந்தரமாக இருக்கலாம் என்ற செய்தி மட்டுமல்ல…..

    இயற்கை வாழ்வின் பின்னும் இருந்து வாழலாம் என்றல்லவா சொல்லாமல் செய்திருக்கிறார்கள்!

    எளிமையாக இருந்தால், சக மனிதனின் உணர்வுகள் புரியும்; எளிதில் நம்மை அடுத்தவர்கள் அணுகவும்; நாம் மற்றவரை அணுகவும் இயலும்!

    இலக்கு நோக்கி எளிதாகப் பயணப்பட முடியும்!

    புறநானூற்றுப் பாடல் ஒன்று இப்படிச் சொல்கிறது….

    பல்சான் றீரே! பல்சான் றீரே!
    …………..
    ………….

    நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
    அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
    எல்லாரும் உவப்பது; அன்றியும்,
    நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே!

    குறிப்பாக நம்மால் மற்றவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும், நிச்சயம் தீங்காவது இழைக்காமல் இருக்க முடியும்! அதுதான் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியது என்றும்;

    நல்வழியும் அதுதான் என்றும் சொல்கிறதென்றால்,

    எளிமையை விரும்புங்கள்! எளிமையாக இருக்கக் கற்றுக் கொண்டால்,

    நமக்கான தேவைகள் புலப்படும்! மற்றவர்களின் தேவைகளையும் நம்மால் நிறைவேற்ற முடியும்!

    ஒவ்வொரு நகர்வாகத் தொடர்வோம் சிகரத்தை நோக்கி…….

    Share
  • சிகரம் நோக்கி – 21

    சுரேஜமீ

    கடமை

    peak1

    உலகமே ஒரு நாடக மேடை என்றார் ஷேக்ஸ்பியர்!

    இது எந்த அளவு உண்மை என்பதை நாம் ஒவ்வொருவரும் சற்று யோசித்தால் புலனாகும். காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை செய்யக்கூடிய பலவகையான பாத்திரங்கள், நமக்கு ஷேக்ஸ்பியர் ஒரு தீர்க்கதரிசி என்பதை விளக்கும்.

    ஒரு தந்தையாக;; மகனாக; கணவனாக; சகோதரனாக; உறவினராக; நண்பனாக; பணியாளராக; மேலாளராக, சக மனிதனாக என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்!

    இதிலென்ன வியப்பு என்கிறீர்களா? ஆம்! ஒவ்வொரு வகைப் பாத்திரத்திற்கும் ஒரு கடமை இருக்கிறது. பொறுப்புணர்வுடனும்; விழிப்புணர்வுடனும்; செவ்வனே நாம் செயல்படுவதில்தான், அப்பாத்திரத்தின் முழுமை அடங்கியிருக்கிறது!

    இப்பொழுது புரிகிறதா ஷேக்ஸ்பியரின் தத்துவம்?

    ஆக, ஓவ்வொருவருக்கும் இருக்கும் கடமையிலிருந்து கிஞ்சித்தும் பிறழாமல், செய்யக் கூடிய செயல்களில் செம்மை இருந்தால், அதுதான் ஒரு சிறந்த மனிதனை உருவாக்கும் என்ற உணர்வு சிந்தையில் ஆழமாகப் பதிய வேண்டும்.

    கடமை என்பதும் ஒருவகை ஒழுக்கமே என்றால் மறுப்பதற்கில்லை; இதற்கு உதாரண புருஷர்களாக இதிகாசம் தொடங்கி இக்காலம் வரை பலர் நமக்கு சாட்சியாக வாழ்ந்திருக்கிறார்கள்; வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள் என்றால்,

    அதை நாம் பாடமாகக் கொண்டு வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகத்தான்!

    நாவுக்கரசர் இறைவனைப் போற்றிப் பாடும்பொழுது,

    ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’! என்கிறார். இறையடியார்களுக்குத் தொண்டு செய்வதைத் தவிர அவருக்கு வேறு பணி கிடையாது; அவ்வாறு செய்தால்; அதற்குப் பலனாக இறைவன் நம்மைக் காப்பான் எனும் இறை நம்பிக்கையில் சொல்லி இருந்தாலும்,

    இங்கு நாம் புரிந்துகொள்வது, பலனை எதிர்நோக்காமல் செய்யும் கடமைக்குக் காலம் நிச்சயம் தக்க பரிசினைத் தரும் என்பதே!

    நாம் அனைவரும் அறிந்த மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர் மறைந்த திரு. நாகேஷ் அவர்களுக்கு, நடிப்பின் மீது இருந்த அபார உந்துதலும்; சிந்தனையும்; அது சார்ந்த செயலுமே,

    அவரை ஒரு உயரிய இடத்திற்கு இட்டுச் சென்றது என்பதற்கு ஒரு உதாரணம்,

    அவருடைய முதல் மேடை நாடகம்!

    அதில் அவருக்கு ஒரு வயிற்றுவலி நோயாளி என்ற பாத்திரம் அளிக்கப் படுகிறது; ஒரு சில மணித்துளிகளே இருக்கக் கூடிய அப்பாத்திரத்தில் அவரின் பங்களிப்பு, அவையில் கூடியிருந்தவர்களைக் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது மட்டுமல்லாமல்; அதில் அவருக்கு சிறந்த நடிகருக்கான பட்டத்தையும் அளித்ததாக ஒரு செய்தி சமீபத்தில் படிக்க நேர்ந்தது!

    என்ன வேலை செய்கிறோம் என்பது முக்கியமல்ல; எப்படிச் செய்கிறோம் என்பதில்தான் வெற்றியின் ரகசியம் இருக்கிறது. எதைச் செய்தாலும்; நம்மை விடச் சிறப்பகா எவரும் செய்ய இயலாத அளவுக்கு நேர்த்தியாகச் செய்யக் கற்றுக் கொண்டால், நமக்கான அங்கீகாரம் நம்மைத் தேடிவரும் என்பதைப் பலர் நமக்கு உணர்த்தி இருக்கிறார்கள்!

    350 சதுர அடிகொண்ட ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில், ஒரு மேசை; இரண்டு உதவியாளர்கள் மற்றும் மூன்று நாற்காலிகளுடன் 1965-ல் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனம்,

    இன்று இந்திய மொத்த வருமான வரியில் 5% பங்களிக்கிறது என்பது வியப்பாக இல்லையா? இது எப்படி சாத்தியமாயிற்று? மறைந்த திருவாளர்.திருபாய் அம்பானியின் மிகச் சிறந்த செயல்களும்; அது சார்ந்த உறுதிப்பாடும் தானே!

    இது மட்டுமா?

    இந்தியத் திரை உலகிலேயே பல திரைக் கலைஞர்களையும்; சிறந்த நட்சத்திரங்களையும் உருவாக்கிய மிகச் சிறந்த இயக்குனர் மறைந்த திரு. பாலச்சந்தரின் கடமை உணர்வுதான்,

    அவரை ‘இயக்குனர் இமயம்’ எனும் உயர்ந்த இடத்திற்கு இட்டுச் சென்றது என்பதை மறுக்க முடியாது.

    ஒரு சாதாரண பொறியாளராகப் பணியைத் தொடங்கி, படிப்படியாக விஞ்ஞானியாகி, நாட்டின் குடியரசுத் தலைவர் எனும் பெரும் பதவியை அலங்கரித்த மக்களின் தலைவர், சமீபத்தில் மறைந்த திருவாளர். அப்துல் கலாம் அவர்களின் வாழ்வு நமக்குச் சொல்லுவது என்ன?

    அவரவர் கொண்ட கடமையில் சிறப்பாகச் செயல்பட்டால், நமக்கான இடம் நிச்சயம் உண்டு என்பதும்; அதை எவராலும் எளிதில் தட்டிப் பறிக்கமுடியாது என்பதும் தான்!

    யார் யாருக்கு என்ன கடமை என்பதைக்கூட நம் இலக்கியங்களில், அன்றே சொல்லி இருக்கிறார்கள் என்றால், நாம் எத்தகைய வரலாற்றிற்கும்; கலாச்சாரத்திற்கும் சொந்தக்காரர்கள் என்பதை அறியலாம்;

    ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே;
    சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!

    தாயின் கடமை ஒரு குழந்தையை நன்கு வளர்ப்பதுதான்; ஆனால், தந்தையின் கடமை அந்தக் குழந்தையைச் சான்றோனாக்குவது என்கிறது புறநானூற்றுப் பாடல்!

    பிசிராந்தையார் எனும் சங்கப் புலவர் ஒருவரைப் பார்த்து, வயது அதிகமிருந்தும் ஏன் முடி நரைக்கவில்லை என கேட்க, அதற்குப் புலவர் தரும் பதிலைப் பாருங்கள்……

    யாண்டு பலவாக நரையில ஆகுதல் யாங்கு ஆகியர் என வினவ,

    அதற்குப் புலவர்,

    என் மனைவியோடு, மக்களும்; யான் கண்ட இளையரும்; வேந்தனும்; அல்லவை செய்யான்;

    அது மட்டுமல்ல…

    ஆங்கே கல்வி; கேள்வி மற்றும் ஒழுக்கம் நிறைந்த சான்றோர்கள் பலர் வாழ்வதால், தலை நரைக்கவில்லை என்று கூறுகிறார் என்றால்;

    அவரவர் தம் கடமையில் சிறப்பாகச் செயல்பட்டால் தலை முடிக்குக் கருஞ்சாயம் பூச வேண்டிய அவசியம் எழாது என்ற ரகசியத்தை புறனானூறு சொல்கிறது!

    ஆகவே, கடமையில் செவ்வனே செயலாற்றி, வெற்றி எனும் தேரில் பவனம் செய்து,

    சிகரத்தை நோக்கி நகர்வோம்!

    தொடரும்…….

    Share