Tag: மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

  • கழுமல வளநகர் மலரென மலர்ந்தார்!

    கழுமல வளநகர் மலரென மலர்ந்தார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    சீர்காழி பிறந்தார் சிவனையே கண்டார்
    பாலகனாம் வயதில் பரஞானம் பெற்றார்
    மூன்றகவை தன்னில் தோடுடைய செவியன்
    சீர்காழி பிறந்தார் செப்பினார் தமிழில்

    தத்துவம் செறிய தமிழாய் மலர்ந்தது
    சைவம் வளர உரமாய் எழுந்தது
    இத்தரை இறையை உணரவே வைத்தது
    இறை அருளுடனே பிறந்தார் சம்பந்தர்

    ஞானக் கொழுந்தாய் இருந்தார் அவரும்
    தேனார் தமிழில் திருவருள் செப்பினார்
    ஊனாய் உருகி உணர்வாய் உரைத்தார்
    உமையே வந்து ஊட்டினார் பாலை

    திருவருள் பெற்ற சீர்காழி மைந்தர்
    உருவிலே குழந்தை ஆகியே இருந்தார்
    கருவிலே திருவை உடையவர் ஆகி
    கழுமல வளநகர் மலரென மலர்ந்தார்

    Share
  • பாவேந்த ரெனவே பாரினில் திகழ்கிறார் !

    பாவேந்த ரெனவே பாரினில் திகழ்கிறார் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பாரதி வந்தார் பற்பல பாடினார்
    பண்டிதர் ஒதுக்கினார் பாமரர் ஏந்தினார்
    காரிருள் போக்கிடும் கதிரவன் ஆகினார்
    கன்னித் தமிழின் காவலன் ஆனார்

    பாட்டில் புதுமை பதத்தில் புதுமை
    ஊட்டியே கவிதை உவப்பாய் அளித்தார்
    நாட்டை நினைத்து நல்லன மொழிந்தார்
    நாடே அவரின் உயிராய் இருந்தது

    பாரதி காலம் கவிமணி இருந்தார்
    நாமக் கல்லின் நற்கவி இருந்தார்
    எட்டய புரத்து பாரதி மூச்சை
    சுப்பு ரத்தினமே சுவாசித்து நின்றார்

    நாமக் கல்லார் நற்கவி ஆவார்
    கவிமணி தமிழின் கற்கண் டாவார்
    பரதி தாசனாய் வந்தார் ஒருவர்
    அதுவே அவரின் ஆசியே ஆகும்

    சுப்பு ரத்தினம் எழுந்தார் தாசனாய்
    சுப்பிர மணிய பாரதி வாழ்த்தினார்
    வாழ்த்திய வாழ்த்து வளர்ந்தே வந்தது
    மாநிலம் பாரதி தாசனைப் பெற்றது

    அன்னிய ஆட்சியில் பாரதி வாழ்ந்தார்
    அடிமை என்பது அனலாய் கொதித்தது
    அனலை அகற்றப் பாரதி பாடினார்
    அடிமைக் கெதிராய் படைப்புகள் ஈந்தார்

    பாரதி தாசனின் காலமோ வேறு
    அடிமை அகன்று சுதந்திரம் மலர்ந்தது
    தமிழே ஆட்சி தமிழே தலைமை
    அதனால் தமிழை அமுதம் என்றார்

    பாரதி தமிழை தேனாய் ஆக்கினார்
    அவரின் தாசனோ உயிராய் ஆக்கினார்
    பரதி வழியில் பயணந் தொடரினும்
    அவரின் சிந்தனை புதிதாய் மிளிர்ந்தது

    கல்வியை இருவரும் கண்ணே என்றனர்
    பெண்ணின் கல்வியை பெரிதாய் எண்ணினர்
    குருவின் கருவை மனத்தில் கொளினும்
    அவரின் சிந்தனை அகன்றே நின்றது

    பாரதி உள்ளம் புதுமைகள் இருந்தும்
    பக்தியை பாரதி பக்குவம் என்றார்
    பாரதி தாசனோ பக்தியைப் பாரா
    புரட்சிக் கவியாய் ஊர்வலம் வந்தார்

    பாரதி பாடல்கள் திரைக்கு வந்தன
    பாரதி தாசனே திரைக்குள் நுழைந்தார்
    நாடகம் எழுதினார் நடிக்கவும் செய்தார்
    நாட்டுப் பாடலை நயமுடன் அணைத்தார்

    புரட்சிக் கவிஞராய் இருவரும் எழுந்தார்
    புதுமைகள் புகுத்தி கவிஞராய் ஒளிர்ந்தார்
    பாரதி வாழ்த்திய கவிஞராய் அமைந்தார்
    பாவேந்த ரெனவே பாரினில் திகழ்கிறார்

    Share
  • அவனியில் அன்னை தெய்வமாய் தெரிகிறாள் !

    அவனியில் அன்னை தெய்வமாய் தெரிகிறாள் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    அம்மையே அப்பாவென் றழைத்தார் வாசகர்
    அன்னையும் பிதாவும் என்றார் ஒளவையார்
    அன்னையைத் தொட்டே ஆரம்பம் என்பதை
    அனைவரும் அகத்தில் இருத்திடல் வேண்டும்

    அன்பின் உருவாய் அன்னையே இருக்கிறாள்
    அவளே பொறுமையின் இருப்பிடம் ஆகிறாள்
    உண்ண மறப்பாள் உறங்க மறப்பாள்
    ஒரு கணமேனும் பிரியவே மறக்காள்

    பத்து மாதம் பாடாய் படுவாள்
    பசியும் பார்க்காள் ருசியும் பார்க்காள்
    கருவை எண்ணியே உருகியே நிற்பாள்
    காத்துக் கிடப்பாள் புதுமலர் கண்டிட

    பட்ட வேதனைகள் பஞ்சாய்ப் பறந்திடும்
    பச்சிளம் குழந்தை முகத்தைக் கண்டதும்
    கட்டித் தழுவுவாள் கண்ணீர் பெருகும்
    இட்டமாய் அணைப்பாள் இன்பத்தில் மூழ்குவாள்

    அன்னையே என்று ஆனந்தப் படுவாள்
    அனைத்தும் கிடைத்ததாய் அகநிறை வடைவாள்
    பெண்மையே முழுமை பெற்றதாய் நினைப்பாள்
    பெரு வரமாகவே எண்ணியே மகிழ்வாள்

    நீள நினைப்பாள் நெஞ்சில் சுமப்பாள்
    ஆழ அறிவை ஊட்டிட விளைவாள்
    வாழ்வை வளமாய் ஆக்கிட முனைவாள்
    வழித் துணையாக இருப்பாள் அன்னை

    நல்ல குருவை நாடியே  நிற்பாள்
    வல்ல பிள்ளையாய் ஆக்கிட முனைவாள்
    கற்றவர் முன்னே வந்திட வேண்டி
    கைகூப்பிக் கடவுளை வேண்டியே நிற்பாள்

    துன்பம் வந்தால் துடித்துப் போவாள்
    அன்பைப் பொழிந்து அவளும் உருகுவாள்
    சிரிப்பைக் கண்டால் சிறகை விரித்து
    சிட்டுக் குருவாய் வானில் பறப்பாள்

    தாழ்ந்து விடாமல் தாங்கியே நிற்பாள்
    வீழ்ந்து விடாமல் வேராய் இருப்பாள்
    ஏணியாய் ஆகி ஏற்றியே விடுவாள்
    என்றும் அன்னை துணையே ஆவாள்

    அன்னை என்பள் ஆருயிர் போல்வாள்
    அவளின் உணர்வே பிள்ளையே ஆகும்
    அவனியில் அன்னை தெய்வமாய் தெரிகிறாள்
    அவளைப் போற்றுவோம் அவழடி தொழுவோம்

    Share
  • மங்களச் செம்பொருள் சிவனார் விரதம் !

    மங்களச் செம்பொருள் சிவனார் விரதம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஆதியும் அந்தமும் காணா ஒளியாய்
    பேரொளி ஒன்று தோன்றியே நின்றது
    அடிமுடி காணென அசரீரி ஒலித்தது
    அயனும் மாலும் ஓடினார் தேடினார்

    ஆணவ நிலையில் தேடிய அவர்கள்
    அடிமுடி காணா அலமந்தி நின்றனர்
    தேவ தேவனாம் சிவனும் தோன்றி
    தெளிவினைக் கொடுத்து தரிசனம் காட்டினர்

    சிவனின் தரிசனம் தெளிவினைக் கொடுக்க
    அயனும் மாலும் ஆணவம் அகன்றனர்
    ஆணவம் அகன்றிட அமைந்த நன்னாளே
    மாநிலம் போற்றிடும் மகத்துவம் பெற்றது

    மகத்துவம் பெற்ற மகா சிவராத்திரி
    மக்கள் மனத்தினைப் பக்குவம் ஆக்கிடும்
    பசித்திரு என்றும் தனித்திரு என்றும்
    விழித்திரு என்றும் விளம்பிடும்  ராத்திரி

    சிவமே செம்பொருள் சிவமே இன்பம்
    சிவமே அன்பு சிவமே கருணை
    அனைத்தும் ஆகியே இருப்பது சிவமே
    அகத்தில் அமர்த்தினால் அது பேரின்பம்

    பற்பல கதைகள் பரவியே இருக்குது
    நற்கரு உணர்த்தவே அக்கதை வந்தது
    கதைகளை விமர்சனம் செய்வதை விட்டு
    கருவினைத் தேடுவார் கண்களைத் திறப்பார்

    சமயக் கதைகள் தத்துவம் பொதிந்தன
    உள்ளே நுழைந்தால் உண்மை விளங்கும்
    அறிவியல் இருக்கும் ஆன்மீகம் இருக்கும்
    அகத்தில் அமர்த்தினால் வெளிச்சம் கிடைக்கும்

    மாசி மாதம் மகத்தான மாதம்
    மாபெரும் விரதம் அமைந்த நல்மாதம்
    பூதலம் சக்தி பொலிந்திடு மாதம்
    ஆதலால் விரதமாய் ஆக்கிய மாதம்

    ஈதர் என்பது இயக்கிடும் சக்தி
    எங்கும் நிறைந்து இருக்கும் சக்தி
    பூதல மாந்தர் உள்ளே நுழைந்தால்
    ஆதாரம் ஆகிடும் அனைத்தும் சிறக்கும்

    மாசி மாத சிவராத்திரி வேளை
    ஈதர் சக்தியின் ஈர்ப்பு பெருகிடும்
    பெருகிடும் சக்தியை உடலுனுள் செலுத்திட
    அமைந்த நல்லொழுங்கே விரதமாய் மலர்ந்தது

    மெய்ஞ்ஞானத் துடனே விஞ்ஞானம் இணையுது
    அஞ்ஞானம் அகன்றிட மெய்ஞ்ஞானம் விரியுது
    அஞ்ஞானம் அகலவே ஆண்டவன் தெரிவான்
    ஆண்டவன் தெரிந்திட ஆணவம் அழிந்திடும்

    சிவராத்திரி என்பது சிறப்புடை விரதம்
    உயர்வுடை யாவும் அளித்திடும் விரதம்
    மனத்தைச் செம்மை ஆக்கிடும் விரதம்
    மங்களச் செம்பொருள் சிவனார் விரதம்

    Share
  • எங்களின் சுவாமிநாதா என்றுமே வாழுகின்றாய் !

    எங்களின் சுவாமிநாதா என்றுமே வாழுகின்றாய் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் ……. ஆஸ்திரேலியா

    உள்ளத்தில் தமிழுணர்வு  ஊற்றெடுக்க உழைத்தாரே
    ஊரூராய் அலைந்தாரே  உவேசா தமிழாசான்
    தெள்ளுதமிழ் நூல்களைத்  தேடிநின்ற வேளை
    செல்லரித்த சேதிகேட்டுத் திகைத்தவரும் நின்றாரே

    ஏடுதேடி எங்கேயோ சென்றலைந்தார் அவரும்
    காடுமேடு பாராமல் நடந்தலைந்தார் நாளும்
    நாடுபோற்ற பணிசெய்து நலம்விளைத்தார் அவரும்
    பீடுடைய தமிழ்த்தாத்தா ஆகியே விட்டார்

    ஏட்டிலே இருந்தவற்றை எல்லோரும் படிக்க
    காட்டியேவிட்ட எங்கள் கற்பகத்தரு ஐயா
    பூட்டியே வைத்தவேட்டைப் புத்தகமாக்கி வைத்த
    பாட்டனே எங்களையா பணிந்துமே போற்றுவோமே

    ஏடெலாம் இடைஞ்சலென்று எரித்திட முயன்றவேளை
    கேடது என்றுநீயும் கிளர்த்தெழுந்தாயே ஐயா
    புதைகுழி வெட்டியேட்டைப் புதைத்தது கண்டபோது
    புயலெனப் புகுந்துஅங்கு புதுவழி சமைத்தாயையா

    மெய்வருத்தம் பாராது விடியுமுன்னே நீஎழுந்து
    கைநிறைய ஏடுகளை கண்ணாக மதித்துநிதம்
    அய்யமறக் கற்றிட்டு அச்சுதனில் ஏற்றிநிதம்
    செய்துநின்ற திறல்மெச்சி சிரம்தாழ்த்தி வணங்கிடுவோம்

    பைந்தமிழ் மொழியைக் தேர்ந்துமே கற்றாய்
    பலருமே வியக்க தமிழாகி நின்றாய்
    சொந்தமாய்ச் சேர்த்த சொத்தாய் நினைத்து
    சுந்தரத் தமிழினைக் காத்துமே நின்றாய்

    நந்தமிழ் சங்கநூல்கள் யாவரும் கற்றுநிற்க
    வெந்தழல் புகுந்தவேட்டைப் வேகமாய் பற்றி
    நொந்திடச் செய்தாரை வந்தனை செய்துநின்று
    செந்தமிழ் காத்தநம் செம்மலைப் போற்றுவோமே

    பல்கலைக்கழகம் செய்யும் பணியினைத் தனியேநின்று
    நல்மனம் கொண்டுசெய்த நாயகன் நீயேஐயா
    இன்தமிழ் சிறந்துநிற்க என்றுமே உழைத்தவையா
    எங்களின் சுவாமிநாதா என்றுமே வாழுகின்றாய்

    வடமொழி படித்தால் வானுலகு உவந்தேற்றும்
    வசதிபல கிடைப்பதற்கு ஆங்கிலமே கைகொடுக்கும்
    இவையனைத்தும் புறந்தள்ளி ஏந்தினார் தமிழதனை
    உலகவாழ்வில் தமிழதனை உயிராக எண்ணினரே

    மேடையில் பேசுதற்கும் விதம்விதமாய் எழுதுதற்கும்
    சங்கத் தமிழினைத் தன்னுழைப்பால் எமக்களித்தார்
    ஊணுறக்கம் பாராமல் ஓய்வின்றி உழைத்ததனால்
    ஏடிருந்த அத்தனையும் எம்சொத்தாய் ஆக்கினரே

    சாமிநாத ஐயர் தமிழுக்குச் சொத்தாவார்
    நாம்படிக்க நூல்களை நற்றுணையாய் ஈந்தளித்தார்
    எழுதினார் பதிப்பித்தார் ஏந்தினார் தமிழை
    என்றுமே தமிழுலகில் இருந்திடுவார் உவேசா

    Share
  • பூசத் திருநாள் பொலிவுடைத் திருநாள்!

    பூசத் திருநாள் பொலிவுடைத் திருநாள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா

    தையில் பொங்கல் மங்கலத் தொடக்கம்
    தையில் பூசம் பற்பல சிறப்பு
    கந்தனை நினைத்து வந்தனை செய்திட
    வந்ததே தைப் பூசத் திருநாள்

    அருவமாய் இருந்தது உருவம் ஆனது
    அரனின் கனற்பொறி அதினுள் இருந்தது
    ஆதியாம் சிவனின் மைந்தனாய் வந்தான்
    அவனே கந்தனாய் ஆகியே நின்றான்

    பூசத் திருநாள் பொலிவுடைத் திருநாள்
    தேசுடைக் கந்தனை சேவிக்கும் பெருநாள்
    மாசிலா வேலினை மாதுமை கொடுத்த
    மகத்தான திருநாள் தைப்பூசத் திருநாள்

    வேலின் மகத்துவம் மேவிடும் திருநாள்
    வேலவன் சன்னதி யாவரும் குவிவார்
    காவடி எடுப்பார் கந்தனைப் பரவுவார்
    சாதிகள் கடந்து சமத்துவம் ஆகுவார்

    புதிரும் எடுப்பார் புதிதும் தொடங்குவார்
    எழுத் தறிவிக்க ஏடும் தொடங்குவார்
    தொடங்கும் அனைத்தும் துலங்கும் என்று
    எண்ணியே ஏற்றுவார் பூசத் திருநாள்

    காது குத்துவார் காரியம் தொடங்குவார்
    கந்தனை எண்ணியே யாவும் ஆற்றுவார்
    தம்மை மறந்து அலகும் குந்துவார்
    தனிப்பெரும் கருணையாய் கந்தனைப் போற்றுவார்

    தமிழும் சைவமும் போற்றிடும் திருநாள்
    சம்பந்தம் பெருமான் காட்டிடும் திருநாள்
    ஒளியாய் இருக்கும் கந்தனை யாவரும்
    உவப்புடன் ஏற்றியே போற்றிடும் திருநாள்

    Share
  • பொங்கி மகிழ்வோம் போற்றுவோம் இறையை!

    பொங்கி மகிழ்வோம் போற்றுவோம் இறையை!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மார்கழி மாதம் மனமுறை மாதம்
    தேவர் விரும்பும் திருவுறை மாதம்
    சைவம் வைணவம் போற்றிடும் மாதம்
    மெய்யாம் இறையினைத் துதித்திடும் மாதம்

    இறையினைத் துதித்து எல்லோர் மனமும்
    புனிதம் ஆகியே நிற்பது தையிலே
    தையிலே வருவதோ தலைநிமிர் பெருவிழா
    அதுவே தமிழரின் ஆனந்தப் பெருவிழா

    உழவை மதிக்கும் உன்னதப் பெருவிழா
    உழைப்பை உவக்கும் உழைப்பவர் திருவிழா
    நன்றியை நவிலும் நயப்புடைப் பெருவிழா
    நல்லதை நல்கிடும் தைப்பொங்கல் நல்விழா

    சமயமும் கலக்கும் சமத்துவம் இருக்கும்
    தமிழர் யாவரும் பொங்கலைப் பொங்குவார்
    பொங்கிய பொங்கலைப் பங்கிட்டு மகிழ்வார்
    பொங்கல் என்பதே பூரிப்பைத் தந்திடும்

    நீராடி யாவரும் புத்துடை அணிவார்
    மாவிலை தோரணம் வாசலில் அமைப்பார்
    கோலம் போடுவார் கும்பம் வைப்பார்
    குத்து விளக்கினை ஒளிர்ந்திடச் செய்வார்

    அப்பா அம்மா தாத்தா பாட்டி
    அனைவரும் மகிழ்வாய் அங்கே வருவார்
    பொங்கற் பானையை அலங்காரம் செய்து
    மங்கலம் பொங்கென அடுப்பினில் வைப்பார்

    பாலினை யாவரும் பகிர்ந்துமே விடுவார்
    பொங்கும் பாலினை பொறுமையாய்ப் பார்ப்பார்
    வெண்ணுரை தள்ளிடப் பாலுமே பொங்கும்
    யாவரும் அரிசியைப் பானையில் இடுவார்

    சர்க்கரை தேனைப் பொங்கலில் சேர்ப்பார்
    சந்தோஷம் அங்கே நிறைந்துமே பொங்கும்
    அத்தனை பேரும் பொங்கலைப் படைத்து
    ஆதவன் நோக்கி அர்ப்பணம் செய்வர்

    ஆலயம் நோக்கி அனைவரும் செல்வார்
    ஆனந்தம் மகிழ்வு அமைந்திட வேண்டுவார்
    எண்ணிய காரியம் ஏற்றமாய் அமைந்திட
    இறையின் திருவடி வீழ்ந்தே வேண்டுவார்

    உறவுகள் வருவார் உவகை கொள்ளுவார்
    பெற்றும் கொடுத்தும் பெருமகிழ் வெய்துவார்
    பெரியவர் ஆசியைப் பெற்றிட யாவரும்
    அருகினில் சென்று ஆவலாய் நிற்பார்

    ஆசிகள் பெற்றவர் அனைத்தையும் பெற்றதாய்
    அக மகிழ்வுடனே ஆனந்தம் அடைவார்
    பெருநாள் திருநாள் பெறுமதி என்பதை
    உணரும் போது உள்ளம் உவக்கும்

    பொங்கற் பண்டிகை பூரிப்பை ஊட்டும்
    எங்கும் பட்டாசு மத்தாப்பும் இருக்கும்
    பாடலும் இருக்கும் பட்டிமன்றமும் இருக்கும்
    யாவரும் மகிழும் கோலமும் பெருகும்

    இல்லார் இருப்பார் யாவரும் பொங்குவார்
    இல்லம் அனைத்தும் பொங்கல் இருக்கும்
    பொங்கல் என்பது மங்கலம் ஆகும்
    பொங்கி மகிழ்வோம் போற்றுவோம் இறையை

    Share
  • கருணையாய் நிற்கும் தெய்வம்  !

    கருணையாய் நிற்கும் தெய்வம்  !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் … ஆஸ்திரேலியா

    வேலினைக் கையில் ஏந்தி
    வெற்றியைத் தந்த கந்தன்
    மூலமாய் நின்ற மூர்த்தி
    பொறியிலே வந்த கந்தன்
    கார்த்திகைப் பெண்கள் ஏந்த
    கந்தனாய் ஆன தெய்வம்
    கலியுகம் காக்க என்றும்
    கருணையாய் நிற்கும் தெய்வம்  !

    ஆணவம் அழித்த கந்தன்
    அகவிருள் அகற்றும் கந்தன்
    பேணிடும் அடியார்க் கெல்லாம்
    பேரருள் ஈயும் கந்தன்
    நாமெலாம் விரும்பி நிற்கும்
    நல்லையில் உறையும் கந்தன்
    சேவடி தொழுது நின்றால்
    தெரிசனம் தருவான் கந்தன் !

    சூரரை வதைத்த கந்தன்
    சூழ்ச்சியை அறுக்கும் கந்தன்
    மாயிருள் மாயை போக
    வந்தனன் ஒளியாய் கந்தன்
    ஆழமாம் பிறவி நோயை
    அகற்றிட மருந்தாய் நிற்கும்
    வேலுடை கந்தன் பாதம்
    பற்றுவார் வீடு காண்பார் !

    Share
  • உளமகிழத் தீபாவளி வரவெண்ணி நிற்போம்!

    உளமகிழத் தீபாவளி வரவெண்ணி நிற்போம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் … ஆஸ்திரேலியா

    மத்தாப்பும் பட்டாசும் மனமெல்லாம் மகிழ்வும்
    தித்திக்கும் இனிப்பும் சேர்ந்துமே நிறைய
    இத்தரையில் மலர்கின்ற ஏற்றமிகு நாளாய்
    தீபாவளித் திருநாள் சிறப்பாக வருகிறதே

    பெரியவரும் மகிழ்வார் சிறியவரும் மகிழ்வார்
    உரிமையுடன் உறவுகள் பரிசுகளும் தருவார்
    மூத்தோரை வணங்கி ஆசிகளும் பெறுவார்
    முதல்வனாம் இறையைப் பணிந்துமே நிற்பார்

    புத்தாடை அணிவார் புத்துணர்வு  பெறுவார்
    சித்தமதில் எத்தனையோ தேக்கியே வைப்பார்
    அத்தனையும் நிறைவேற ஆண்டவனை வேண்டி
    அனைவருமே ஆலயத்தை நோக்கியே செல்வார்

    இந்துக்கள் எல்லோரும் கொண்டாடி மகிழும்
    இனிமைத் திருநாளாய் இத்திருநாள் அமையும்
    இருப்பாரும் மகிழ்வார் இல்லாரும் மகிழ்வார்
    இல்லார்க்கும் இருப்பார்க்கும் இத்திருநாள் இனிக்கும்

    பட்டுடுத்தி மகிழ்வார் பலபேர் இருக்கின்றார்
    பட்டின்றி மகிழ்வாரும் பலபேர்  இருக்கின்றார்
    கஷ்டமுடன் உழைத்துக் களிப்புறுவார் களிப்பே
    காசினியில் நிறைவான களிப்பாக அமையும்

    ஏழை பணக்காரென எத்தினமும் பார்ப்பதில்லை
    இல்லார்க்கும் விடிகிறது இருப்பார்க்கும் விடிகிறது
    தீபாவளித் திருநாள் சிறப்பான திருநாளே
    யாவர்க்கும் நன்னாளாய் அதுவமைந்து நிற்கிறதே

    நரகாசுரன் மடிந்தான் எனவெண்ணி நிற்கின்றோம்
    நாளும் பொழுதுமாய்ப் பலவசுரர் வருகின்றார்
    அசுரன் மடிந்தநாள் அதுதானே தீபாவளி
    ஆனாலும் அசுரர்கள் எப்படித்தான் வருகின்றார்

    கோபமும் வெறுப்பும் கொள்ளையும் கொலையும்
    பகையும் பதற்றமும் பாரெல்லாம் நிறைகிறதே
    அன்பும் அரவணைப்பும் அறமும் ஆன்மீகமும்
    நின்று நிலைத்தாலே நித்தமுமே தீபாவளி

    இறையெண்ணி நிற்போம் இயலார்க்கு ஈவோம்
    மறைகூறும் அனைத்தும் மனமேற்றி வைப்போம்
    குறைகளைந்து நிற்போம் கோவிலுக்குச் செல்வோம்
    உளமகிழத் தீபாவளி வரவெண்ணி நிற்போம்

    Share
  • அம்மா  இலக்குமி அணைப்பாய்  தாயே!

    அம்மா இலக்குமி அணைப்பாய் தாயே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் .. ஆஸ்திரேலியா

    நீள் செல்வம் நிலபுலங்கள் வேண்டாம்
    மாடி மனை கோடிசெல்வம் வேண்டாம்
    ஆழ் மனதில் அமைதிவர எனக்கு
    அருள் தருவாய் இலக்குமித் தாயே

    வையத்துள் வறுமை இன்றி வாழ
    மற்றவர்க்கு மனம் விரும்பி ஈய
    பொய் இல்லா வழியினிலே உழைக்க
    உய்யும் வழி காட்டிடுவாய் தாயே

    இல்லை என்று சொல்லாமல் இருந்து
    இல் அறத்தை நல்லறமாய் ஆக்க
    நல்ல பாதை காட்டிடுவாய் தாயே
    நா நிலத்தில் துணையாவாய் நீயே

    அளவற்ற ஆசை எனக் கில்லை
    அளவான பொருள் இருந்தால் போதும்
    நிலையற்ற தங்கம் வைரம் வேண்டாம்
    நினதருளே எனக் கிருந்தால் போதும்

    செல்லும் செல்வம் வேண்டாம் தாயே
    செல்லா அருளைத் தந்திடு தாயே
    அல்லும் பகலும் உந்தன் நினைப்பே
    அம்மா இலக்குமி அணைப்பாய் தாயே

    Share
  • கழல்பணிந்தேன் துர்க்கா காத்திடுவாய் நீயே !

    கழல்பணிந்தேன் துர்க்கா காத்திடுவாய் நீயே !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஈரமொடு வீரம் எனக்கருள வேண்டும்
    இரக்கமொடு கருணை எனக்கீய வேண்டும்
    காதலொடு நாளும் கவிபாடி உந்தன்
    காலடியில் நிற்க கருணைபுரி தாயே

    மனமமரும் இருளைப் போக்கிடுவாய் தாயே
    மாயவலை சிக்கா காத்திடுவாய் தாயே
    சினமான தீயை ஒழித்திடுவாய் தாயே
    தினமுமுனைப் பாடிப் பரவுகிறேன் தாயே

    நோயணுகா வண்ணம் காத்திடுவாய் தாயே
    தாயாகி நிற்கும் தயைவுடைய துர்க்கா
    பேயாகி பித்தாகி மனமலையா வண்ணம்
    பேரொளியே துர்க்கையே காத்திடுவாய் தாயே

    மனநோயை நீக்கும் மருத்துவனும் நீயே
    மனவழுக்கைப் போக்கும் மருந்துமே நீயே
    கவலையிலா மனத்தைத் தந்திடுவாய் தாயே
    கழல்பணிந்தேன் துர்க்கா காத்திடுவாய் நீயே

    நோயற்ற வாழ்வைத் தந்திடுவாய் தாயே
    நுடங்காத உள்ளம் கொடுத்திடுவாய் தாயே
    தாயான உன்னை நானெண்ணி நிற்க
    தயைபுரிவாய் தாயே துர்க்கை அம்மாவே

    Share
  • ஆடி மாதம் அமங்கலம் அல்ல; அம்மனின் மாதம்

    ஆடி மாதம் அமங்கலம் அல்ல; அம்மனின் மாதம்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா                            
    மெல்பேண். ஆஸ்திரேலியா

    நம்பிக்கையின் அடிப்படையில்தான் நாம் நாளும் பொழுதும் யாவற்றையும் செய்து வருகின்றோம். சமயத்தில் நம்பிக்கை. தத்துவத்தில் நம்பிக்கை. புராண , இதிகாசங்களில் நம்பிக்கை. முன்னோர் மொழிந்த மொழிகளில் நம்பிக்கை. கற்றறிந்தவர் எழுதும் நூல்களில் நம்பிக்கை. அவர்கள் ஆற்றுகின்ற உரைகளில் நம்பிக்கை . இவற்றை எல்லாம் விட சமுகத்தில் நிலவுகின்ற நம்பிக்கை. இப்படியாக நமது வாழ்வில் நம்பி க்கை எனும் பொழுது பல பரிமாணங்களில் அமைந்திருப்பதைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இதன் அடிப்படையில் பன்னிரண்டு மாதங்கள் பற்றிய நம்பிக்கை எப்படி இருக்கிறது என்பதை நோக்குவதும் மிகவும் முக்கியமானதாய் இருக்கிறது. 

    ன்னிரண்டு மாதங்களும் வருகின்றன. போகின்றன. சில மாதங்களைச் சிறப்பென்றும் சிலவற்றை ஒதுக்கிப் பார்ப்பதும் இயல்பாகிவிட்டது. ஆனால் அப்படி ஒதுக்க வேண்டியது  – மனத்தில் எழுகின்ற ஒரு வித மயக்கம் என்றே எண்ண வேண்டி இருக்கிறது. எல்லா மாதங்களும் ஏதோ ஒரு விதத்தில் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு தான் வருகின்றன. மார்கழியைப் பீடை பிடித்த மாதம் என்கிறோம். புரட்டாசியையும் ஒரு பக்கம் தள்ளியே வைக்கிறோம். ஆடியை மங்கலம் அற்ற மாதம் என்கிறோம். பங்குனியைசித்திரையைதையைஆவணியைக் கொண்டாடி வரவேற்கிறோம். இப்படி நோக்குவது எங்களிடம் இயல்பாகிவிட்ட நிலையில், மங்கலம் இல்லா மாதமாக எடுத்துக்கொள்ளும் ஆடி எங்களை நாடி வருகிறது!

    ஆடி என்றவுடன் – ஆடிச் செவ்வாய்ஆடி வெள்ளிஆடிப்பூரம்ஆடிக்கார்த்திகைஆடித்தபசுஆடிப் பெருக்குஆடி அமாவாசைஆடி பெளர்ணமி என்று இறை வழிபாட்டுடன் இணைந்ததாக ஆடி மாதம் முழுவதும் அமைந்திருப்பதை நாமனைவரும் மனமிருத்த வேண்டியது அவசியம். ஆடி மாதத்தை அம்மனின் மாதம் என்பதையும் அகமிருத்தல் மிகவும் அவசியமேயாகும். அப்படி இருக்க ஆடியை நாடாமல் ஒதுக்கிப் பார்ப்பது முறையா?

    மார்கழியில் திருவெம்பாவை வருகிறது. திருப்பாவையும் மணிவாசகரின் திருவெம்பாவையும் மார்கழியில் கோவில்களில் பக்தி சிரத்தையுடன் பாடப்படுகின்றன. வைணவர்களும் சைவர்களும் கொண்டாடும் மாதமாய் மார்கழி இருக்கிறது. மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கண்ணனே சொல்லுவதையும்  கருத்திருத்த வேண்டும். புரட்டாசியில் நவராத்திரி வருகிறது. கலைகளைப் போற்றும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சமயமும் கலைகளும் சங்கமிக்கும் மாதமாய்ப் புரட்டாசி விளங்குகிறது. ஆடிபுரட்டாசிமார்கழி இறை வழிபாட்டுக்கு உரிய மாதங்களாகும். அப்படி என்றால் மற்றைய மாதங்கள் இறை வழிபாட்டுக்கு ஏற்றவை அல்லவா என்று வினா எழுகிறதல்லவா? ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் மங்கலமான நிகழ்வுகளான – வீடு குடிபுகுதல்திருமணம்திருமண நிச்சயார்த்தம்காது குத்தல்எதையும் செய்வதில்லை. காரணம் – இம்மாதங்கள் தேவர்களுக்கு உரிய மாதங்கள். மனிதர்களுக்கும் அவர்களின் இன்பங்களுக்கும் உரிய மாதங்கள் அல்ல என்பதுதான் காரணம்.

    சூரியனை அடிப்படையாகக் கொண்ட மாதங்கள்தான் நம்முடைய தமிழ் மாதங்கள். கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம்தான் ஆடி மாதம். ஆடி மாதம் தொடங்கி மார்கழி மாதம் வரையான ஆறு மாதங்களும் சூரியன் – தன்னுடைய வடக்கு நோக்கிய பயணத்தை முடித்துக்கொண்டு தெற்கு நோக்கிப் பயணிக்கிறார்.தெற்கு என்பது பித்ருக்களுக்கு உரிய திசையாகும். இதனால் இம்மாதத்தைப் பித்ருக்களுக்கு வழிபாடாற்றும் மாதமாயும் கொள்ளும் நிலை ஏற்பட்டது.

    மனிதர்களுக்கு ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். ஆடி தொடங்கி மார்கழி வரையான ஆறு மாதங்களும் சூரியனின் தெற்கு நோக்கிய பயணமாகும். தை தொடக்கம் ஆடி வரையான ஆறு மாதங்களும் சூரியனின் வடக்கு நோக்கிய பயணமாகும். வடக்கு நோக்கிய பயணக் காலத்தில் வெப்பம் அதிகமாய் இருக்கும். தெற்கு நோக்கிச் சூரியன் பயணிக்கும் பொழுது வெப்பம் தணிந்து – காற்றுமழைபனி என்னும் காலநிலை வந்து நிற்கும். தெற்கு நோக்கிய சூரியனின் பயணக் காலம் தேவர்களுக்கு இராக் காலமாகும். அதாவது ஆடி என்பது தேவர்களின் இராக்காலத் தொடக்கமாகும். மார்கழி என்பது தேவர்களுக்கு விடியல் காலமாகக் கருதப்படுகிறது. ஆடி, இரவின் தொடக்கம். மார்கழி, விடியலின் தொடக்கம்.

    ஆடியில் சூரியன் கடகராசியில் சஞ்சரிக்கிறார் என்று பார்த்தோம்.கடகராசி என்பது சந்திரனின் ஆட்சி வீடாகும்.சூரியன் சிவனின் அம்சமாகும். அந்தச் சூரியன் சக்தியின் அம்சமான சந்திரனில் சஞ்சாரம் செய்யும் நிலை இக்காலத்தில் அமைகிறது. இதனால் சந்திரனின் ஆளுமை அதிகரிக்கிறது.இப்படி ஆவதால் ஆடி மாதம் என்பது சக்தியின் மாதமாய் விளங்குகின்றது. அக்காரணத்தால்தான் அம்மனின் மாதம் – ஆடி என்று ஆகிவிட்டது. அம்மனுக்கு உகந்த விழாக்கள் இம்மாதத்தில் முக்கியத்துவம் பெறுவது இதனால் தானோ  என்று எண்ணிட  வைக்கிறது.

    அறிவியல் வழியில் சிந்திப்பதும் உகந்ததாகும். ஆடி மாதம் காற்றுக் காலமாகும். காற்றினால்  பரவும் நோய்கள்  அதிகரிக்கும் காலமாகவும் இக்காலம் அமைகிறது. இதனால்வேப்பிலைமஞ்சள் என்பவற்றை வழிபாடு என்ற வகையில் அம்மனுக்கு உரியதாக்கி நிற்பதும் நோக்கத்தக்கது. அத்துடன் கூழ் காய்ச்சுவதும்அம்மனுக்கு வைத்து வழிபடுவதும் கூட அறிவியலை ஆன்மீகத்துடன் இணைக்கும் நிலையினையே காட்டுகிறது அல்லவா !

    ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கமே அமைகிறது என்பதும் நோக்கத்தக்கது. கிராமங்கள் தோறும் அம்மனுக்குரிய விழாக்கள் நடைபெறுவதும் மனமிருத்த வேண்டியதே.அம்மனைப் பல நிலைகளில் வழிபடுவதும் நோக்கத்தக்கது. காவல் தெய்வமாய்க் கருதி, போற்றி வழிபாடுகளில் ஈடுபடுவதையும் ஆடியில் காணக்கூடியதாய் இருக்கிறது.

    ஆடியில் ஆறுகளில் நீர்ப்பெருக்கு வருவதை அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றார்கள். இதனையே ஆடிப்பெருக்கு என்று அகமகிழ அழைக்கின்றார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்களின் தாலிக் கயிற்றை மாற்றுவதும்அம்மனுக்கு படையில் வைத்து ஆராதிப்பதும் இவ்வேளை இடம் பெறுகிறது என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

    பெண்கள் விரும்பி அனுட்டிக்கும் விரதமான வரலட்சுமி விரதம் ஆவணி மாதத்துக்கு உரியதாய் இருந்தாலும்பெரும்பாலான சமயங்களில் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் வருகிறது. ஆடி வெள்ளியில் மாரியம்மனுக்கு தேர்த் திருவிழாதெப்பத் திருவிழாதீமிதிப்பு எல்லாம் நடக்கும். அருள் மாரியாய்  கருமாரி விளங்கிறாள் அல்லவா?  சின்னக் கோவில்கள்பெரிய கோவில்கள் எல்லாம் இந்த விழாக்கள் நடைபெறுவதும் நோக்கத்தக்கது.

    ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசையும் தையில் வருகின்ற அமாவாசையும் கடலில் நீராட உகந்த தினங்களாகும். தஷிணாயன புண்ணிய காலம்உத்தராயண புண்ணிய காலம் என்று இக்காலங்களைச் சிறப்பித்துச் சொல்லுவார்கள்.

    இறைவனை அடைவதற்கு அன்னை பராசக்தி தவம் செய்ததும் ஆடி மாதத்தில்தான். சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் நாச்சியார் ஆடியில்தான் அவதரிக்கின்றார். சுந்தரமூர்த்தி நாயனாரை இறைவன் அழைத்துக் கொண்டதும் ஆடியில்தான் என்பதும் அகமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    தையினைப் பொங்கல் திருநாளாய்அறுவடைத் திருநாளாய் கொண்டாடுவதற்கு வித்திடப்படுவதே ஆடியில்தான். “ஆடிப்பட்டம் தேடி விதை” என்னும் பழமொழியே ஆடியில் விதைத்தால்தான் தையில் அறுவடை செய்ய முடியும் என்பதைக் காட்டி நிற்கிறதல்லவா ?

    ஆடிச் செவ்வாயினை மையமாய் கொண்டு “ஆடிச்செவ்வாய் தேடிக் குளி – அரைச்ச மஞ்சளைப் பூசிக் குளி” என்னும் முதுமொழி பழக்கத்தில் இருக்கிறது.

    ஆடி தெய்வீக மாதம். அம்மனின் மாதம்என்றெல்லாம் போற்றப்பட்டாலும் புதுமணத் தம்பதிகளுக்கு மட்டும் வெறுப்பான மாதமாய் இருக்கிறது. அவர்களுக்கு மட்டும் ஏன் வெறுப்பாய் இருக்கிறது என்பதையும் அறிவதும் அவசியம் அல்லவா ! மணமான தம்பதிகளைப் பிரித்து விடுவார்கள்.அதாவது பெண்ணைப் பிறந்த வீட்டு அனுப்பி விடுவார்களாம். சாஸ்திரம் என்று சொன்னாலும் – இங்கே எங்களின் முன்னோர்களின் நல்ல சிந்தனையும் கலந்தே இருக்கிறது. ஆடியில் கருவுற்றால் – பத்தாவது மாதமான சித்திரையில் பிரசவம் நடக்கும். சித்திரையில் புத்திரன் பிறந்தால் தந்தைக்கு நல்லதல்ல என்னும் கருத்து சாதாரணமாகச் சமூகத்தில் நிலவுகிறது. இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. சித்திரையில் கத்தரி வெயில் என்பதை அனைவரும் அறிவோம் .வெப்பம் கூடிய காலத்தில் பிரசவம் நடந்தால் கால நிலை காரணமாக, பிரசவிக்கும் பெண் பெரும் வேதனைக்கு ஆளாவாள். பிரசவ வேதனையுடன் வெயிலின் கொடுமையும் பெருவேதனையைத் தந்துவிடும் என்பதால் மணப்பெண்ணை, பிறந்த வீட்டுக்கு ஆடியில் அனுப்பிய எங்களின் முன்னோர்களின் சிந்தனையினைப் பாராட்டாமல் இருக்கத்தான் முடியுமா?

    ஆடி என்றவுடன் எங்கள் தங்கத் தாத்தா சோமசுந்தரப் புலவர் கட்டாயம் வந்து நிற்பார். தாத்தாவின் வரவையும் , அவரின் ஆடிப்பிறப்பு ஆனந்தமான பாடலையும் நினைவுக்குக் கொண்டு வருவதும் நாடிவரும் ஆடி அல்லவா ! 

    ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
    ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே!
    கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
    கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

    பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
    பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
    வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
    மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

    வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
    வேலூரில் சக்கரையுங்கலந்து,
    தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
    சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

    வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
    வெல்லக் கலவையை உள்ளே இட்டு
    பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
    பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

    பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
    போட்டு மாவுருண்டை பயறுமிட்டு
    மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவாள்
    மணக்க மணக்க வாயூறிடுமே

    குங்குமப் பொட்டிட்டு, பூமாலை சூடியே
    குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
    அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
    ஆடிப் படைப்பும் படைப்போமே

    வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
    வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
    அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
    ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

    வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
    மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
    கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
    கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

    நாடிவரும் ஆடி அமங்கலமான மாதம் அல்ல! அது தெய்வீக மாதம் ! கொழுக்கட்டையும் சாப்பிட்டு கூழும் குடித்து மகிழும் காலம். ஆடிப்பட்டம் விட்டு அம்மனைப் போற்றிக் கொண்டாடி, தோழர்களுடன் பாடி மகிழும் காலமாகும். 

    மெய்ஞ்ஞானமும், விஞ்ஞானமும் இணைந்து மேதினியில் சிறந்து விளங்குவதுதான் ஆடி மாதத்தின் சிறப்பு எனலாம். எங்கள் முன்னோர்கள் எதையும் தக்க காரண காரியத்தோடுதான் வகுத்தார்கள். அவர்களின் கணிப்பில் தவறுகளைக் கண்டுபிடிப்பது முறையானதல்ல. தற்காலத்தில் எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் பேசுவது என்பது பெரும் மேதாவித்தனம் ஆகியே விட்டது. ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கிறது. சிறப்புகளைச் சீர்தூக்கிப் பார்ப்பதுதான் மிகவும் உகந்த பண்பாடாகும்.

    நம்பிக்கைகள்தான் வாழ்வின் ஆணிவேராகும். எமது முன்னோர் கொண்ட நம்பிக்கைகள், அதற்காக அவர்கள் வகுத்த அற வழிகள், ஆன்மீக வழிகள், அத்தனையும் எம்மை என்றுமே வழிநடத்திச் செல்வதற்கு அருந்துணையாக அமைகின்றன என்பதை அகமிருத்துவது அவசியம் அல்லவா!  

    Share
  • சைவத்தின் வழி நடந்த தமிழ்ச் செல்வி தங்கம்மா

    சைவத்தின் வழி நடந்த தமிழ்ச் செல்வி தங்கம்மா

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பக்தி என்னும் கருவினை எந்த மொழியும் இலக்கியம் ஆக்கியதே இல்லை. ஆனால் பக்தியை உயர்வாக்கிப் பார்த்து அதனை இலக்கியமாய் காட்டிய பெருமை எங்கள் அன்னைத் தமிழ் மொழிக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது. “பக்தி இலக்கியம்” என்று ஒரு பெரும் பகுதியை தமிழ் மொழியானது தன்னுடை இலக்கிய வரலாற்றில் கொண்டிருக்கிறது என்பதும் முக்கியம் எனலாம். பக்தி இலக்கியம் என்னும் பெருவெளியில் ஆண்களும் வருகிறார்கள். பெண்களும் வருகிறார்கள். பக்தி இலக்கியப் பாதையில் முகிழ்த்த பாடல்கள் அத்தனையும் – இறையருளைப் பற்றியன வாக இருந்த பொழுதும்அவை அத்தனையும் அன்னைத் தமிழின் அழகோவியமாய்அருங்கருத்துக்களை அடக்கியவனாவாய்இலக்கியச் சுவைகளை ஈவதாய்புலவர்க்கெல்லாம் நல்விருந்தாய்தமிழுக்கே பெரும் பொக்கிஷமாய் வாய்த்த நல் வரமென்றே எண்ண வேண்டி இருக்கிறது. அந்தப்பக்தி இலக்கிய வெளியிலே காலத்துக்காலம் ஆண்டவன் அருளால் பல அருளாளர்கள் வந்து இணைகிறார்கள். அந்தவகையில் ஈழத்தில் நல்லை நகரில் நாவலர் பெருமான் வருகின்றார். அவரின் அடிபற்றி  எங்கள் சைவத்தின் கொழுந்து, சைவ வழி பற்றிட வருகின்றார் தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக் குட்டி அவர்கள்.

    காரைக்கால் அம்மையார்திலகவதியார்மங்கையற்கரசியார்வழியில் பயணப்பட வந்தமைகின்றவராய்  எங்கள் தமிழ்ச் செல்வி தங்கம்மா அவர்களைப் பார்க்கின்றோம். முன்னவர்கள் வாழ்ந்த காலமும்சூழலும் வேறாகும். அதனால் அவர்களின் செயற்பாடுகளும் அக்காலத்துக்கு இயைபானதாக ஆகியிருந்தது. ஆனால் தமிழ்ச் செல்வி தங்கம்மா அவர்கள் வாழ்ந்த காலமும்சூழலும் – அவரின் செயற்படுகின்ற பாங்கினைத் தீர்மானித்தது என்பதை மனமிருத்துவது முக்கியமாகும்.

    சாதாரண குடும்பத்தில் சாதாரண பிள்ளையாகவேதான் தங்கம்மா அவர்கள் பிறக்கிறார்கள். அவர் பிறக்கும் வேளை எந்தவொரு அதிசயங்களோஅற்புதங்களோ நிகழ வில்லை. சாதாரணமாகவே பிறந்தார். சாதாரணமாகவே படித்தார். சாதாரணமாகவே ஒரு ஆசிரியர் வேலையும் பார்த்தார். ஆனால் அவர் மற்றவர்களைப்போல்  “சாதாரண மானவர் அல்லசாதிக்கப் பிறந்த சன்லே எழுதி வைத்துவிட்டான் என்பதுதான் யதார்த்தமாகும். இப்படியானவர்களைத்தான்  “கருவிலே திருவுடையார்”, “வரம்பெற்று வந்தவர்”, என்று வியந்து நிற்கிறார்கள் போலும். வரம் பெற்மார்க்க நங்கை என்பதை இறைவன் ஏற்கனவே அவரின் பிறப்பிறு வந்த காரணத்தால், தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் – தம் காலத்தில் செய்ய வேண்டிய சிறப்பான அத்தனையும் செய்து பயன் மிக்கவராய் ஒளிவிட்டு நின்றார் என்றால் அஃது மிகையாகாது.

    தமிழ்ச் செல்வி தங்கம்மா அவர்களைப் பல பரிணாமங்களில் பார்ப்பதுதான் உகந்ததாகும். சைவத்தை நன்கு கற்று சைவப் புலவர் ஆகுகின்றார். தமிழை முறையாகக் கற்று தமிழ்ப் பண்டிதர் ஆகுகின்றார். அத்துடன் ஆசிரிய பயிற்சியையும் பெற்று நல்லா சிரியராகவும் மிளிர்கிறார். 

    இலங்கையின் பல பகுதிகளில் கற்பித்து யாவரையும் நன்கு அறிந்தும் கொள்ளுகின்றார். கற்பிக்கும் வேளை கருத்தூன்றிக் கற்பித்து கற்கின்றவர்கள் மனத்தில் நற்கருத்துக்களையும் ஊன்றுகின்றார். வேலைபார்த்த இடமெல்லாம் வேலையெனக் கருதாமல் அதனை ஆத்மார்த்தப் பணியாக அகமிருத்தி மேற்கொள்ளுகின்றார். ஆசியரியப் பணியை அகமிருக்கும் அழுக்குகளை அகற்றிடும் பணியாகவே எண்ணிச் செயற்படுகின்றார். இதனால் அன்னையாய், அறிவூட்டும் ஆசானாய் மதிக்கவும்படுகிறார் என்பதை மனமிருத்துவது அவசியமாகும்.

    அழகானவர் தங்கம்மா அவர்கள். அறிவானவர் தங்கம்மா அவர்கள். இளமையில் அவரைப் பார்த்தவர்கள் அவர் வசம் ஈர்க்கவே படுவார்கள். சாதாரண பெண்தானே அவரும். ஆனால் அவர் மனத்தில் லெளகீகம் பற்றிய சிந்தனைக்கே இடம் இல்லாமல் போய் விடுகிறது. அவர் சிந்தனை எல்லாம் – சைவம் பற்றியும், சன்மார்க்கம் பற்றியும், சமூகம் பற்றியுமே சென்று விடுகிறது. இல்லறத்தில் தங்கம்மா அவர்கள் இணைந்திருந்தால் – சாதாரண ஒரு குடும்பத் தலைவியாய், பிள்ளைச் செல்வங்களுடன் வாழும் நிலைதான் ஏற்பட்டிருக்கும். ஆனால் அவரிடம் எழுந்த அரிய சிந்தனையால் – அனைவருக்கும் அன்னையாய், அநேக குழந்தைகளின் வழிகாட்டியாய், சமுதாயத்தின் சேவகியாய், சைவத்தின் காவலராய், தமிழ் பெரும் ஆளுமையாய், யவரும் வியந்து பார்த்து வாழும் வாய்ப்பு வாய்த்தது என்பதை எவருமே மறுத்து ரைத்து விடல் முடியாது.

    தெல்லிப்பளையில் பிறந்தவர்தான் தங்கம்மா அவர்கள். அவரின் முன்வினைப் பயனாகவேதான் சாதாரண சிறிய கோவிலான துர்க்கை அம்மன் கோவில் தென்படுகிறது. அந்தத் துர்க்கை அம்மாதான் எங்கள் தமிழ்ச் செல்வி தங்கம்மாவின் வாழ்வி னையே மாற்றப் போகிறது என்பதை எவருமே எதிர்பார்க்கவே இல்லை. ஏன்.. தங்கம்மா அவர்களே எதிர்பார்த்திருக்கவும் மாட்டார். இதைத்தான் திருவருள் என்று எண்ணத் தோன்றுகிறது. தெல்லிப்பளையில் பிறந்தவரின் சமய, சமூக, ஆன்மீக, அறப்பணிகள் தமிழ்ப்பணிகள், அத்தனையும் ஆரம்பிக்கும் இடமாக அன்னை துர்க்கையின் ஆலயமே நிலைக்களனாக அமைகிறது அமைந்தது என்பதை அனைவரும் அகமிருத்துவது மிக மிக அவசியமாகும். சாதாரண தமிழ்ப்பண்டிதர், சைவப்புலவர், பயிற்றப்பட்ட ஆசிரியர் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் “துர்க்கா துரந்தரி” என்று போற்றப்படுவதற்கும் நிலைக்களனே தெல்லிப்பளையில் சாதாரணமாய் இருந்த துர்க்கை அம்பாளின் சிறிய கோவிலே ஆகும். தங்கம்மா அவர்கள் துர்க்கை அம்பாள் கோவிலைக் கண்டதுதான் அவரின் வாழ்வில் மிகப் பெரிய தருணம், மிகப்பெரிய திருப்பு முனை என்று எண்ண முடிகிறதல்லவா !

    நாவலரை நன்றாகவே மனத்தில் பதித்திருக்கிறார் தங்கம்மா அவர்கள். அதனால் அவரின் தடம் பற்றி நடக்க முற்பட்டிருக்கிறார். நாவலர் பெருமானின் பின்னர் புராணங்கள், திருமுறைகள், சைவசமயச் சிந்தனைகளைக் கோவில்களில் யாவரும் கேட்டிடப் பிரசங்கம் செய்யும் பாங்கு இல்லாமல் போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அத்தகைய சூழலில் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் அந்தப் பணியை ஆத்மார்த்தமாய் அகமிருத்தி ஆலயங்கள் தோறும் இடைவிடாமல் பிரசங்களை அழகு தமிழால் தக்க எடுத்துக் காட்டுக்களுடன் மிகவும் பக்குவமாய் செய்தமை மீண்டும் நாவலர் யுகம் தோன்றி விட்டதோ என்றே எண்ணிட வைத்தது. தங்கம்மா அவர்களின் சைவப் பிரசங்கங்கள் இலங்கையில் எல்லாக் கோவில்களிலும் இடைவிடாது இடம் பெற்றன. இலங்கை மட்டும் அல்லாது – இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து நாடுகளிலும் அவரின் பிரசங்கங்கள்  இடம் பெற்றன என்பதை மனமிருத்துவது அவசியமாகும்.

    பேச்சுடன் நின்று விடாமல் எழுத்திலும் தன்னுடைய ஆளுமையினைப் பதித்தும் நின்றார். “கந்த புராணச் சொற்பொழிவுகள்” நூல் மிகவும் கருத்தாளம் மிக்க நூல். இந்த நூலின் பெறுமதியை வியந்து பாராட்டி இலங்கை அரசாங்கம் 1978 ஆம் ஆண்டு ” சாகி த்திய மண்டல விருதினை”  வழங்கியது. 

    தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் சைவசமயத் தொண்டினையும் சொற்பெருக்காற்றும் ஆற்றலையும் வியந்து மதுரை ஆதீனத்தால் “செஞ்சொற் செம்மணி” பட்டம் வழங்கப்பட்டது. காரைநகர் மணிவாசக சபையினால் “சிவத்தமிழ் செல்வி”, தமிழ் நாடு இராகேசரி பீடாதிபதியினால் “சைவதரிசினி”, சிலாங்கூர் மலேசியா இலங்கைச் சைவச் சங்கத்தினால் “திருவாசகக் கொண்டல்”, வண்ணை வைத்தீஸ்வரன் தேவஸ்தானத்தினால் “திருமுறைச் செல்வி”, ஈழத்துச் சிவனடியார் கூட்டத்தால் சிவமயச் செல்வி” அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் “சிவஞான வித்தகர்”, “தெய்வத் திருமகள்” ஆகிய இரண்டு விருதுகள், துர்க்காதேவி தேவஸ்தானத்தால் “துர்க்கா துரந்தரி”, மாதகல் நுணசை முரு கமூர்த்தி தேவஸ்தானத்தினால் “செஞ்சொற் கொண்டல்”, இணு வில் பரராசசேகரப் பிள்ளையார் தேவஸ்தானத் தினால் “திரு மொழி அரசி” கொழும்புக் கம்பன் கழத்தால் “கம்பன் புகழ் விருது”, என எங்கள் தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களை நாடிப் பட்டங்கள் வந்து குவிந்தன. அம்மா அவர்களுக்கு பட்டங்களை வழங்கிய அமைப்புகள் அத்தனையும் – பட்டங்களை வழங்கியதால் பெரும் பேற்றினைப் பெற்றதாகவே எண்ணிக் கொண்டன என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ்ச் செல்வி தங்கம்மா அவர்களுக்குப் பல பட்டங்கள் வந்து அமைந்தாலும் காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தால் வழங்க ப்பட்ட “சிவத்தமிழ் செல்வி” என்னும் பட்டந்தான் மிகவும் சிறப்பானதாய் ஒளி விட்டு விளங்கியது எனலாம். தங்கம்மா என்றால் “சிவத்தமிழ் செல்வி” என்றே அனைவர் அகத்திலும் பதிந்து விட்டது என்பதை எவருமே மறுத்துரைக்க மாட்டார்கள். சிவ மயமாய் சிந்தித்து, சைவத்தைக் காத்திடும் அன்னையாய், காலத்தின் வருகையாய், ஏன் காலத்தின் காவலராய், விளங்கினார் என்பதுதான் உண்மையாகும். 

    அம்மா அவர்கள் தன்காலத்தில் சைவத்தின் குரலாகவே ஓங்கி ஒலித்தார். சைவத்தின் வளர்ச்சியை இளையவர் விளங்கிடவும், சைவ நம்பிக்கை தளர்ந்தவர் நிமிர்ந்திடவும், துணிவாய் அதேவேளை மிகவும் பக்குவமாய் யாவரும் பக்குவத்தைப் பெறும் வண்ணம் பல வற்றை ஆற்றினார். பலருக்கும் நல் வழிகாட்டியாகவும் விளங்கினார்.

    ஆன்மீகம் என்பது ஆலய வழிபாட்டுடன் மட்டும் நின்று விடுவதில்லை. ஆன்மீகம் என்பது அறம் சார்ந்ததாகும் என்று அம்மா அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள். புராணங்கள் படிப்பதும், திருமுறைகளைப் போற்றுவதும், திருக்கோவில்களை வழிபடுவதும், நற்சிந்தனைகளக் கேட்பதும், அத்தியாவசியம் என்று அம்மா அவர்கள் கூறினார்கள். அதேவேளை ஆதரவற்றோரைக் காப்பதும், பசிப்பிணி போக்குவதும், கல்விக்கண்ணைத் திறப்பதும், நலத்தினைக்காக்க வழி வகுப்பதும் அவசியமானது என்பதையும் எங்கள் தங்கம்மா அவர்கள் எடுத்து உரைத்தார். உரைத்தோடு நின்று விடாமல் – தானே முன் வந்து “துர்க்காபுரம் மகளிர் இல்லம்” என்னும் அமைப்பினை நிறுவினார். “அன்னபூரணி அன்னதான மண்டபத்தை” அமைத்தார். அத்துடன் அமையாது  “கல்யாண மண்டம்” ஒன்றையும் அமைத் தார்கள். குறைந்த செலவில் கல்யாணங்களை நடத்துவதற்கு அதாவது வசதிகள் குறைந்தோரும் இல்லறமாம் நல்லறத்தில் இணைந்து இன்பமுற – அம்மாவின் இம்முயற்சி பெரும்பயனை அளித்தது எனலாம். இவை அத்தனையும் ஆன்மீகமே என்பதை நாமனைவரும் மனமிருத்துவது மிக மிக அவசியமாகும்.  

    எங்கள் தமிழ்ச் செல்வி யாழ் மண்ணின் மாசில்லா மங்கை, சைவத்தின் காவலர், சன்மார்க்க வழிகாட்டி, செந்தமிழ்ப் புலவர் சிறப்புடை ஆசானுக்கு – அமெரிக்க ஹவாய் சிவாயசுப்பிரமணிய சுவாமி ஆசிரிமம் 2005 ஆம் ஆண்டுக்கான “சிறந்த இந்துப் பணி ” விருதும். 2003 இல் வவுனியாவில் இடம் பெற்ற தமிழ் இலக்கியப் பெருவிழாவில் “வட கிழக்கு மாகாண ஆளுனர் விருதும்” வழங்கப்பட்டது. அது மட்டுமல்லாது இலங்கை அரசாங்கத்தால் “கலாசூரி” விருதும் வழங்கப்பட்டது. அம்மா அவர்களின் அனைத்துப் பணிகளையும் கருத்தில் கொண்டு கல்வி நிலையில், கற்பித்தல் நிலையில் உயர்ந்தோங்கி நிற்பது என்று எல்லோர் மனத்திலும் இடம் பெற்றிருக்கின்ற பல்கலைக்கழகமானது அதாவது யாழ் மண்ணில் பொன்னம்பலம் இராமநாதப் பெரியோனின் கனவாய் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாய் பேருருப் பெற்ற பல்கலைகழகம் எங்கள் சிவத்தமிழ்ச் செல்விக்கு “கலாநிதிப் பட்டத்தினை” வழங்கி கெளரவப்படுத்தியது. இந்தப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வழங்கியதால் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகமே பெரும் பேற்றினைப் பெற் றுக் கொண்டது எனலாம்.

    சைவத்தின் காவலராய், தமிழ் மொழியின் ஆளுமையாய், எங்கள் நாவலர் பெரு மான் திகழ்ந்தார். அவரின் தடம்பற்றி நடந்த தமிழ்ச் செல்வி தங்கம்மா அவர்களும் – சைவத்தையும் தமிழையும் கண்ணாகவே கருதினார். நாவலர் பெருமான் சமயப்பணி யோடு சமுகப்பணி யினையும் மேற்கொண்டார். அம்மாவும் அவ்வழியில் பயணப்பட்டார் என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும். 

    நாவலர் பெருமானைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். அவர் நடந்த மண்ணில் நடந்தும் இருக்கிறோம். அவரின் ஆற்றல்களை அவரின் வரலாற்றால் அறிந்தும் இருக்கிறோம். அவர் இம்மண்ணில் வாழ்ந்த காலத்தில் நாம் பிறக்கும் பாக்கியம் எமக்கெல்லாம் வாய்க்கவில்லை. ஆனால் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் காலத்தில் நாமெல்லோரும் வாழ்ந்தோம், அவருடன் பழகினோம், அவரின் சொற்பொழிவுகளைக் கேட்டோம், அவரின் ஆன்மீகப் பணிகளை அறப்பணிகளை, கண்டோம் வியந்தோம் என்பதே பெரும் பேறு என்றுதான் எண்ண வேண்டும். சிவத் தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர் களுக்குப் பின் அவரைப்போல் ஒரு ஆன்மீக, அறச்சிந்தனை மிக்க அருள் நிறைப் பெண்மணி யாழ்மண்ணுக்கு வாய்க்கவே இல்லை என்பதை எவருமே மறுத்து உரைத்திடல் முடியாது. 

    சைவத்தின் வழிநடந்த தமிழ்ச் செல்வி தங்கம்மா அவர்கள் ஆண்டவன் அருள் பெற்ற அருளாளர். சைவத் தமிழ் வரலாற்றில் சிவத் தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி என்னும் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்க ப்படுவது மிக மிக அவசியமானதாகும். 

    Share
  • கற்பகதரு என்னும் அற்புதம் – அங்கம் 7 ஏடுதந்திட்ட எங்கள் பனை

    கற்பகதரு என்னும் அற்புதம் – அங்கம் 7 ஏடுதந்திட்ட எங்கள் பனை

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும்
    பனை அழிந்தால் பாரம்பரியமே அழியும் “

    வருடம் முழுதும் வற்றாத வளம்
    வாங்கி வந்த வரமே பனை “

    வானோங்கி நிற்பதுதான் எங்கள் கற்பகதருவாம் பனை மரம். வாழ்வில் தோள் கொடுத்துத் தோழமையுடன் நிற்பதுதான் எங்கள் பனை மரம்.இருந் தாலும் பயன் கொடுக்கும். இருப்பை விட்டு மறைந்தாலும் பயன் கொடு க்கும். பனை என்பது  மரம் அல்ல . அது நல் வரம் என்பதை மனமிருத்தல் வேண்டும்.பனையின் நிலை யினை  நாங்கள் ஒவ்வொருவருமே மனத்தில் இருத்திட வேண்டியது அவசியமாகும்.இருக்கும் வரை எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுக்கிறது என்பதே எங்களுக்கெல்லாம் நல்ல தொரு பாடமாய் இருக்கிற தல்லவா ! மற்ற மரங்களைப் போல பனை யினை நாங்கள் பார்த்துவிடக் கூடாது. தலை நிமிர்ந்து தளர்வி ன்றி.   கொடை வழங்கும் கர்ணனாய் கற்பகதருவாம் பனை காட்சி தருகிறது என் பதும் கருத்திருத்த வேண்டி யதேயாகும்.

    பனையின் ஓலைகளை சாதாரணமாகப் பார்த்தே பழகிவிட்டோம். ஆனா ல் அந்த ஓலைக்குள் எவ்வளவு பொக்கிஷங்கள் பொதிந்திருக்கின்றன என் பதை ஏட்டுச் சுவடிகள் வரலாற்றுக்குள் பார்த்தோம்.அந்த வரலாற் றுக்குள் சற்று உள்ளே போய் இன்னும் என்ன இருக்கிறது என்பதையும் பார்ப்பது அவசியம் அல்லவா !

    இலக்கியம் வளர்த்த பனை என்று கூறுவதில் எள்ளளவும் ஐயம் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது,

    எமது முன்னோர்களின் சிந்தனைச் செல் வங்களை இன்று நாம் பயனாக்கி நிற்கிறோம் என்றால் அதற்குதக்க துணையாக அமைந்தது பனை தானே ! பனைமரத்தின் ஓலைச் சுவடிகள் இல்லை என்றால் பழந்தமிழ்ச் செல்வங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். பனை இல்லையேல் நமக்கு  மொழியில்லை. வரலாறு இல்லை . ஏன் பாரம்பரியமே இல்லை என்பதை உணரும் பொழுது மெய்சிலிர்க் கிறதல்லவா !  ” பயன்மரம் ” என்று வள்ளுவமே போற்றும் தகைமையினைப் பெற்ற ஒரே மரமாய் கற்பகதருவாம் பனையே விளங்குகிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத்தல்லவா.

    ” ஆறங்க வேதநூ லாகமநூல் வேறுமுள மெய்க்கலைகள்
    போதமிகுந்த புராணநூல் – ஓதுகின்ற
    மந்திரநூல் சிற்பநூல் வாகடநூல் வாய்மைமிகு
    செந்தமிழ்நூல் பற்பலவும் தீட்டலாம் – சுந்தரஞ்சேர்
    மங்கல நாளோலை மஙகையர்க்குக் காதோலை
    துங்கமிகு நண்பருக்குத் தூதோலை – தங்குபல
    பற்று வரவு பதியுங் கணக்கோலை
    மற்று முறுதி வரையோலை – கற்றவர்கள்
    எந்திரங்கள் கீறி எழுத்தடைத்துக் கட்டுகின்ற
    மந்திர வோலைகட்கு வாய்ப்பாகும் “

    என்று ” தாலவிலாசம் ” நாடகநூலும்

    “படிக்க நல்ல தம்பியர்க்கு
    பட்டோலை நானாவேண்
    எழுத நல்ல தம்பியர்க்கு
     எழுத்தோலை நானாவேன்
    தூரத்து வன்னைமைக்கு
    தூதோலை நானாவேன்
    வாசலில் வன்னிமைக்கு
    வழக்கோலை நானாவேன் “

    என்று நாட்டுப் புறப்பாடலும் பனை ஓலையின் பயன் பாட்டினை வியந்து நிற்பதைக் காண்கிறோம்.பனை ஓலையென்று நாங்கள் சாதாரணமாய் எண் ணி விடும் அந்த ஓலைக்குள் இத்தனையும் இருக்கிறதா என்று எண்ணு கையில் பனையென்பது நல்வரம் என்றுதானே சொல்ல வேண்டும்.

     ஏடுதந்த பனையின் ஓலை பற்றிய எண்ணப் பதிவினை ” பனை மர சோபனம் ” என்னும் நூல் எப்படிப் பார்க்கிறது என்பதையும் பார்ப்போம்.

       ” வருடத்திற் கோர்தினத்தில் சரஸ்வதியம்மன் பூசைசெய்து
        மஞ்சள் படிந்துவர மங்கலங்கள் பாடிவர
        அட்சதையும் மலரெடுத்து அர்ச்சிப்பார் உலகமெலாம்
        என்னைத் திருத்தியவர் எழுத்தாணி கைப்பிடித்து
        ஆசிரியரும் வேதியரும் ஹரிநமோ என்றெழுதி
        ஹரிஹரி என்றெழுதி அர்ச்சிப்பார் என்னையவர்
        அரிச்சுவடி என்னாலே வரிக்காய்ப் பாடம்என்னாலே
        தர்க்கங்கள் என்னாலே சாஸ்திரங்கள் என்னாலே
        இராமாயணம் என்னாலே பாரதமும் என்னாலே
        பாகவதம் என்னாலே பலசாத்திரங்கள் என்னாலே
        திருவாய்மொழி என்னாலே திருமுறைகள் என்னாலே
        நாலுவேதம் என்னாலே ஆறங்கம் என்னாலே
        மங்கையர்க்கும் மன்னவர்க்கும் மணவறிவ தென்னாலே
        வர்த்தகருஞ் செட்டிகளும் கணக்கறிவ தென்னாலே
        பட்சமுள்ள வாசலுக்குப் பட்டோலை நானாவேன்
        காதத்துப் பெண்களுக்குக் காதோலை நானாவேன்
        தூரத்துப் பெண்களுக்குத் தூதோலை நானாவேன்
        கலியாண வாசலுக்குக் கட்டோலை நானாவேன்
        சீமந்து வாசலுக்குச் சீருடனே நான்போவேன்
        பிள்ளை பிறந்ததென்றால் பெருமையுடன் நான்போவேன்
        மைந்தன் பிறந்ததென்றால் மகிழ்ச்சியுடன் நான்போவேன்
        அரண்மனையில் நானிருப்பேன் ஆஸ்தானத்தில் நானிருப்பேன்
        மச்சுக்குள் நானிருப்பேன் மாளிகையில் நானிருப்பேன்
        எமலோகம் போனாலௌம் எல்லோர்க்கும் தெரியவைப்பேன்
        சிவலோகம் போனவர்க்குச் சீட்டோலை யாயிருப்பேன் “

    என்று பனை ஓலையின் ஒவ்வொரு நிலையினையும் இப்பாடல் காட்டு வதைக் கருத்திருத்துவது முக்கியம் அல்லவா !

    பனையின் ஓலை பலவிதங்களில் எங்கள் வாழ்வியலில் எப்படியெ ல்லாம் இணைந்திருந்தது என்பதை இங்கு பல பாடல்களால் கண் டோம். பனையின் ஒலையினால்  ஆகிய ஏடுகள் பற்றிய பல விஷயங் களையும் பார்க்கப் பாரர்க்க பெருமையாகவும் வியப்பாகவுமே இருக் கும்.எழுதும் நிலை ஏற்பட்டவுடன் எழுதுவதற்கு உரியதாய் பனையின் ஓலைதான் பொருத்தமாய் அமைந்திருக்கிறது.இலகுவாய் கிடைத்தது. அதுவும் வாழும் அயலிலேயே கிடைத்தது. பனையின் ஓலையில் எழு துவதைக் கண்டறிந்த தன்மையினைச் சாதாரணமாகப் பார்த்துவிட முடியாது. மிகச் சிறந்த தெரிவு என்றுதான் எண்ண வேண்டும். கல் லில் , மரத்தில்களிமண் தகட்டில்தோலில்செப்புத்தகட்டில் எழுதுவது என்பது இலகுவான செயலன்று. அதுமட்டுமல்ல அவற்றில் விரைவாக வும் எழுதிட முடியாது. எனவேதான் பனையின் ஓலையினை எழுதுவ தற்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பனை ஓலையில் எழுதினால் அவ ற்றை போகும் இடமெல்லாம் எடுத்துச் செல்வது இலகுவாக இருக்கும் என்னும் காரணத்தாலும் – பனை ஓலை ஏடாய் மலர்ந்தது என்றும் எடு த்துக் கொள்ளலாம் அல்லவா !

    ஓலையில் எழுதுவது என்பது இலகுவான காரியம் அல்ல. ஓலையில் எழுதுவது என்பது ஒருவித கலை எனலாம். எழுத்தாணியைக் கொண் டு மிருதுவான ஓலையில் எழுதும் பொழுது மிகவும் கவனமாகவே எழுத வேண்டும். ஓலையில் எழுதும் எழுத்துக்கள் – நாங்கள் தற் பொழுது காகிதத்திலோ அல்லது கணிப்பொறியிலோ அல்லது தட்ட ச்சிலோ எழுதுவதுபோல் இலகுவாக எழுதிவிடல் முடியாது. பிழை யினை திருத்தவோ அழிக்கவோ முடியாது. எழுதினால் எழுதியதுதான். எழுதும் ஓலையில் பிழை வந்தால் அந்த ஓலையினைத் தவிர்த்து   விட்டு புது ஓலையில்த்தான் எழுதல் வேண்டும். மெய் எழுத்துக்களை எழுத முடியாது. குற்றுப் போட்டால் ஓலை கிழிந்து விடும்.ஓலையில் எழுதும் எழுத்துக்களை எழுதுவது என்பதற்கு நல்ல பழக்கம் வேண் டியதாய் இருந்தது. தற்காலத்தில் விரித்து எழுதுவதுபோல் எழுதிவிட வும் இயலாதுசுருக்கமாய் அதே வேளை செறிவாய் எழுதும் நிலையே காணப்பட்டது எனலாம். இதனாலேயே எழுதப்பட்ட எல்லாமே பாட்டின் வடிவத்தைக் கொண்டு அமையும் கட்டாயம் இருந்தது என்பது கருத்திரு த்த வேண்டியதே.

    ஓலையில் பாட்டெழுதும் முறையிலும் வரையறைகள்  காணப்பட்டன என்பதற்கு ஆதாரங்களும் இருந்திருக்கின்றன.

    அந்தணர்க்கு நாலா றரசர்க் கிருபதாம்
    இந்த விரல் வணிகர்க் கெண்ணிரண்டாம் – முந்துவிரல்
    வேளாரக்க் கீராறாய் வெள்ளோலை வேயவனை
    தோளாய் அறிந் தொகுத்து 

    என்று கல்லாடனார் வெண்பா காட்டுகிறது. இதன் படி நான்மறை யா ளர்கள் இருபத்து நான்கு விரற்கடை அளவும்அரசர்கள் இருபது விரற் கடை அளவும் வணிகர்கள் பதினெட்டு விரற்கடை அளவும்வேளார் கள் பனிரெண்டு விரற் கடை அளவு எடுத்தே ஓலையில் எழுத வேண் டும் என்னும் நிலை காணப்பட்டது என்பதை இப்பாடல் தெரிவிக்கிறது. இதனை மேலும் உறுதிப் படுத்தும் வகையில் பொய்கையார் பாடலும் வந்து அமைகிறது.

    ஓலைய திலைக்கணம் உரைக்குங் காலை
    நாலாறு விரலாம் நான்மறை யோர்க்கே
    பாருடை யோர்க்கும் பதிற்றிரண் டாகும்
    வணிகர்க் கீரெண் விரலாகும்மே
    காணென மொழிய சூத்திரக் களவே “

    புத்தகம் சரியா பொத்தகம் சரியா என்று குழம்புகின்றோம். பொத்தகம் என்னும் சொல் பல ஏடுகளை இணைத்த இணைப்பினைக் குறித்தது என்பதற்கும் பழையபாடல்கள் சான்றாய் வந்து அமைகிறது.வெற்றி லைகளை அடிக்கி வைத்திருக்கும் அடுக்கினைக் குறிக்க ” கவளி ” என்னும் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சொல்லை பலரும் மறந்து விட்டாலும் இன்னும் இந்தச் சொல் பழக்கத்தில் இருக்கிறது. வெற்றிலை அடுக்கினைக் குறிக்க வழங்கப்பட்ட இச்சொல் ஏடுகளின் அடுக்கினுக்கும் வழங்கப் பட்டிருக்கிறது.

    பொத்தகம் படிகமாலை குண்டிகை பொருள் சேர் ஞான
    வித்தகம் தரித்த செங்கை விமலையை அமலை தன்னை
    மொய்த்த கொந்து அளக பாரா முகில் முலைத் தவள மேனி
    மைத்தகு கருங்கண் செவ்வாய் அணங்கினை வணங்கல் செய்வோம்

    கம்பராமாயணத்தில் சரஸ்வதியை வணங்கும் வகையில் அமைந்த இப் பாடலில் – சரஸ்வதி ” பொத்தகம் ” கையில் வைத்திருப்பதாய் காட்டுவது நோக்கத்தது.

    மெய்யெலாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டி
    கையினில் படை கரந்த புத்தகக் கவளி ஏந்தி
    மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்து
    பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்த நாதன் “ 

    முத்திநாதன் என்பவன் உடம்பெலாம் திருநீறு பூசிக்கொண்டு சடை முடிந்த கோலத்தில் கையில் ” பொத்தகச் சுவடி ” வைத்துக் கொண்டு வந்தான் என்று பெரிய புராணத்தில் வரும் இப்பாடல் குறிப்பிடுகிறது. இங்கே ” பொத்தகச் சுவடி ” என்பதுதான் முக்கியம். அக்காலத்தில் ஏட் டுச் சுவடிகளை அடுக்காய் கொண்டுவரும் நிலையும் இருந்திருக்கிறது என்பதும் அதற்காக வழங்கப்பட்ட பெயர்களையும் கருத்திருத்துவது நலமல்லவா !

     ஏடுதந்த பனையின் ஓலைகளை எடுத்த எடுப்பில் ஓலை என்று அழை த்திடவும் முடியாது. ஓலை என்பது பொதுவான பெயராக இருந்தாலும் அது பனையின் மேல் முளைத்து எழுந்து வரும் பொழுது அதனை “குரு த்தோலை ” என்கிறோம். பசுமையாய் வந்தபின்பு ” சாரோலை ” என்கி றோம்.காய்ந்த பின்னர் ” காவோலை ” என்கிறோம்.குருத்தோலை என் னும் பெயர் கிறீத்தவர்களுக்கு நன்கு பரிச்சயமான பெயராகும். குருத் தோலை பற்றி விவிலியத்திலும் வருகிறது. குருத்தோலை ஞாயிறு என்று ஒரு திருநாள் வருவதும் நோக்கத்தக்கது.

    குருத்தோலை என்று கூறியவுடன் அதனுள் நல்லதொரு தத்துவம் பொதிந்து இருக்கிறது என்பதை நம்மில் எத்தனைபேர் அறிந்திருப்போம் குருத்தோலைக்கு ஒரு மென்மைத் தனமையும் நெகிழும் தனமையும் உண்டு.மற்ற ஓலைகளைப் போல் குருத்தோலையானது கைகளை விரித்தபடி இருப்பதில்லை. பணிவு கொண்டு இருப்பவர்கள் போல – அக்குருத்தோலைகள் கூப்பியபடியே இருக்கின்றன. அதுமட்டுமல்ல அதன் நுனிகள் வானத்தை நோக்கியபடியே நிமிர்ந்தே நிற்கின்றன. இப்படிக் குருத்தோலைகள் இருப்பது – வாழ்வில் நம்பிக்கையினை யும்பணிவையும் எமக்குப் புகட்டுவதாக இருக்கிறது என்பதும் மனங் கொள்ளத்தக்கதாகும்

    (வளரும்)

    Share
  • அடியார்க்கு எளியனாய் மிளிர்ந்தார் அப்பர்!

    அடியார்க்கு எளியனாய் மிளிர்ந்தார் அப்பர்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    சைவத்தை, சிவனைப் போற்றிடும் குடும்பம்
    சன்மார்க்க வழியிலே நடந்திடும் குடும்பம்
    பெண்ணும் ஆணும் பிள்ளையாய் வாய்த்தனர்
    பெற்றோர் சிவனைப் பரவியே வாழ்ந்தனர்

    சிவனை, சைவத்தைச் சிந்தையில் இருத்திட
    பெற்றோர் நாளும் எண்ணியே வளர்த்தனர்
    பெற்றோர் வழியில் பிள்ளைகள் நடந்தனர்
    நற்றவச் செல்வமாய்  நன்றாய் வளர்ந்தனர்

    இல்லற வாழ்வில் இணைத்தனர் பெண்ணை
    நல்லதோர் துணையும் வந்தே அமைந்திட
    பெற்றவர் மகிழ்ந்தார் உற்றவர் மகிழ்ந்தார்
    காலனோ மகிழா கண்ணீரைக் கொடுத்தான்

    காலம் ஓடின பெற்றோர் பிரிந்தார்
    கணவனை இழந்தாள் தம்பியை அணைத்தாள்
    தம்பிக்குத் தாயாய் ஆகியே நின்று
    தம்பியைக் காத்திட சாமியை வேண்டினாள்

    தம்பி பெயரோ மருள் நீக்கியார்
    மருளது அகன்றிட வழிவகை செய்தாள்
    படித்தான் படித்தான் பலதும் படித்தான்
    சஞ்சலப் பட்டதால் சமணத்தில் கலந்தான்

    தம்பியின் போக்கால் தமக்கை நொந்தாள்
    எம்பிரான் திருவடி பற்றியே நின்றாள்
    சமணத் தலைமை ஏற்றிட்ட தம்பி
    தன்னுள் மாற்றம் வருவதை உணர்ந்தான்

    சகோதரி வேண்டுதல் சங்கரன் ஏற்றான்
    தம்பியை மாற்றிடச் சங்கரன் விரும்பினான்
    சூலை வந்தது சூழ்நிலை கலைந்தது
    மீளவும் தம்பி சைவம் பற்றினான்

    பற்றிய தம்பி பாடினான் பாடினான்
    நற்றமிழ் நாவில் ஊற்றென வந்தது
    நெற்றிக் கண்ணனும் பற்றினான் பாடலை
    நாவுக் கரசனாய் வாழ்ந்திட அருளினான்

    தரும சேனராய் சமணத் தலைவராய்
    இருந்தவர் மாற்றம் எரிச்சலைத் தந்திட
    சமணர் எதிர்த்தார் தண்டனை கொடுத்திட
    ஆண்ட அரசனை அணுகினார் அனைவரும்

    அரசனும் சமணன் ஆட்சியும் சமணமே
    அதிகாரம் அனைத்தும் சமணத்தின் வசமே
    கைது செய்திடக் கட்டளை பிறந்தது
    காவலர் விரைந்தனர் கைதினை மேற்கொள

    அரசன் ஆணையை அறைந்தனர் காவலர்
    அரனின் அடியார் ஆத்திரம் கொண்டார்
    நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
    துணிவுடன் சொல்லிப் பணியவே மறுத்தார்

    வெகுண்டான் அரசன் வில்லங்கம் விளைந்தது
    சமணக் கூட்டம் சந்தோஷம் கொண்டது
    நீற்றறை பூட்டினார் நஞ்சினை ஊட்டினார்
    யானையை ஏவியே கொன்றிட முயன்றார்

    கல்லுடன் கட்டிக் கடலினுள் வீசினார்
    நற்றுணை நாமமாய் நமச் சிவாயவே
    உற்றிடு துணையாய் ஆகியே நின்றது
    கற்றுணை அங்கே தெப்பமாய் மிதந்தது

    நாதனின் அருளால் அனைத்தும் அகன்றன
    நாட்டினை ஆண்டவன் பணிந்துமே நின்றான்
    சைவம் தழைக்க வழியும் பிறந்தது
    சங்கரன் நாமம் தமிழெலாம் நிறைந்தது

    நாவுக் கரசரை நற்றமிழ் பெற்றது
    நம்சைவம் நல்லதோர் அடியாரைக் கண்டது
    திருமுறை புதியதோர் கருவினைப் பெற்றது
    தத்துவம் வித்துவம் தமிழினை நிறைத்தது

    புதுமையைப் புகுத்தினார் புரட்சியைக் காட்டினார்
    சமுதாயம் தழைக்கச் சைவத்தை வளர்த்தார்
    திருவருள் நம்பினார் செப்பினார் திருமுறை
    குருவென இறையின் திருவடி பற்றினார்

    அரனைத் தொழுவார் அனைவரும் சமமென
    அரிய தத்துவம் அப்பர் மொழிந்தார்
    ஈசன் நாமத்தை இதயம் இருத்துவார்
    இன்னல் அகன்று இருப்பார் என்றார்

    நிலைபெற இருக்க எண்ணிடும் யாவரும்
    நித்தம் கோவில் செல்லுக என்றார்
    படி முறையாகப் பலபல செய்திடப்
    பலரும் உணர்ந்திடப்  பாடமும் நடத்தினார்

    வணங்கத் தலையும் வாழ்த்த வாயும்
    கும்பிடக் கையும் பூக்கொய்திட விரல்களும்
    நற்பணி செய்ய நடந்திடக் கால்களும்
    தந்தவன் இறைவன் என்றுமே மொழிந்தார்

    தொண்டினை முதலாய்க் கொண்டவர் அப்பர்
    என்றுமே உழவாரம் ஏந்தியே நின்றார்
    உழைத்திடல் உயர்வெனக் கண்டவர் அப்பர்
    உழைப்பவர்க்கு இறைவனும் உதவுவான் என்றார்

    பக்தி உலகினில் முத்தாய் ஒளிர்கிறார்
    பக்குவம் பெற்றிட்ட பரமனின் அடியார்
    ஓடும் செம்பொனும் ஒன்றென நோக்குவார்
    ஓரிறை சிவனென உலகிடை வாழ்ந்தவர்

    எண்பத் தொன்றில் இறைவன் அழைத்தான்
    இன்தமிழ், இசைத்தமிழ் கேட்டிட  அழைத்தான்
    துன்பப் பட்டார் துயரிடை உழன்றார்
    என்பும் தோலுமாய் இறையடி  அடைந்தார்

    ஆளுடைப் பிள்ளையார் அப்பரே என்றார்
    ஆண்டவன் நாவுக்கு அரசரே என்றார்
    அன்னையும் தந்தையும் மருணீக்கியார் என்றார்
    ஆளுமைச் சேக்கிழார் வாகீசர் ஆக்கினார்

    தாண்டக வேந்தராய் தமிழன்னை கண்டாள்
    தமிழிசை மறவாப் பாடல்கள் தந்தார்
    ஆண்டவன் விரும்பிட அருந்தமிழ் கொடுத்தார்
    அடியார்க்கு எளியனாய் அப்பர் மிளிர்ந்தார்

    Share