Tag: எம். ஜெயராம சர்மா

  • முட்டுக்கட்டை !

     

     எம் . ஜெயராமசர்மா … மெல்பேண். … அவுஸ்திரேலியா 

     

     

    முட்டிபோதி நிற்கின்றார் தட்டிப்பறிக்க முனைகின்றார்
    அத்தனைபேர் செயலினிக்கும் முட்டுக்கட்டை போடவேண்டும்
    வட்டியினைப் பெரிதாக்கி வரம்பின்றி லாபமீட்டும்
    கெட்டகுணம் அத்தனைக்கும் முட்டுக்கட்டை இடல்வேண்டும் !

    மதுவொழிக்க முன்னிற்பார் வம்புதும்பு தனையொழிப்பார்
    சூதுதனைத் துடைத்திடுவார் சொன்னவற்றைக் காத்திடுவார்
    யாவரது வழிகளையும் நாசமாக்க முனைவோரை
    முட்டுக்கட்டை போட்டுநிதம் முடக்கிவிடல் முறையாகும் !

    அரசியலில் நேர்மையின்மை அறம்பற்றி கவலையின்மை
    பெரும்பணத்தைக் குவிப்பதிலே பேராசை கொண்டிருத்தல்
    வருகின்ற அத்தனையும் தனக்குவர வேண்டுமென்னும்
    அருவருக்கும் நிலையினுக்கு அவசியமே முட்டுக்கட்டை !

    அல்லாத வழிகளுக்கு அவசியமே முட்டுக்கட்டை
    நல்லவற்றை நடக்கவிட முட்டுக்கட்டை முறையன்று
    நல்லவரும் வல்லவரும் வாழ்வினுக்கு அவசியமே
    அவர்களுக்கு முட்டுக்கட்டை அமைவதினைத் தவிர்த்திடுவோம் !

    காந்திக்கு முட்டுக்கட்டை கனதியாய் போட்டார்கள்
    சாந்தியை மட்டுமவர் தன்மனதில் கொண்டிருந்தார்
    எத்தனையோ முட்டுக்கட்டை அவர்வாழ்வில் வந்தாலும்
    அத்தனையும் அகிம்சையினால் அசைவற்றுப் போனதுவே !

    நபிபெருமான் யேசுபிரான் புவிமீது வந்தார்கள்
    நாட்டாட்சி துறந்துவிட்டுப் புத்தருமே வந்துநின்றார்
    இவர்கள்வரும் பாதையெலாம் எத்தனையோ முட்டுக்கட்டை
    இட்டார்கள் யாவருமே கொட்டமெலாம் அடங்கினரே !

    ஞானிகளும் யோகிகளும் வந்துவந்து போகின்றார்
    நம்வாழ்வு மலர்ச்சிபெற நாளுமவர் அருளுகின்றார்
    அவர்களுக்கு முட்டுக்கட்டை போடுகின்ற அனைவருமே
    அவர்வாழ்வில் முட்டுக்கட்டை ஆகிடுவார் அறிந்திடுவீர் !

    Share
  • குவிந்துநிற்கும் வாழ்வினிலே !

     

    எம் .ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா 

     
    கொஞ்சி மகிழ்வதற்கு
    குழந்தைகள் இல்லாமல்
    கெஞ்சிநின்று நோன்பிருந்து
    கேட்டுநிற்போம் கடவுளிடம்
    நெஞ்சறிந்த கருணைக்கடல்
    நிறையவே கொடுத்துவிட்டால்
    வெஞ்சொல்லால் கடவுளையே
    வெடுக்கென்று திட்டிநிற்போம் !

    பஞ்சமுடன் இருக்கையிலே
    பலகுழந்தை அளித்துநின்றால்
    அஞ்சாமல் ஆண்டவனை
    அர்ச்சித்தே நின்றிடுவோம்
    கொஞ்சமேனும் இரக்கமின்றி
    கொடுத்துவிட்டார் கடவுளென
    கெஞ்சிநின்ற பலபேரும்
    கேள்விகேட்பார் கடவுளையே !

    பணம்படைத்த பலபேரைப்
    பார்ப்பதற்குப் பிள்ளையில்லை
    பிள்ளைதனைப் பார்ப்பதற்குப்
    பணமில்லார் பலபேர்கள்
    உலகத்தின் விந்தைதனை
    உற்றுநோக்கிப் பார்க்கையிலே
    படைத்தவனின் நோக்கமதை
    விளக்குவார் யாருளரோ !

    என்னதான் நிறைந்திருந்தும்
    பேர்சொல்ல ஒருபிள்ளை
    இல்லையெனும் நிலைவந்தால்
    இன்பமங்கே மறைந்துவிடும்
    வறுமையொடு இருந்தாலும்
    வாசலிலே பிள்ளைவந்து
    மழலைமொழி பேசிவிடின்
    வாழ்வங்கே விடிந்துவிடும் !

    குழலோசை யாழோசை
    கொடுத்துவிடும் இன்பத்திலும்
    குழந்தையது ஓசையது
    கொடுத்துவிடும் பேரின்பம்
    அதனாலே குழந்தையினை
    ஆண்டவனோ டொப்பித்து
    அனைவரும் அனைத்துநின்று
    ஆனந்தம் பெறுகின்றோம் !

    இல்லறத்தின் பேறாக
    எமக்கின்பம் எதுவென்றால்
    நம்குழந்தை எமைப்பார்த்து
    நாலுவார்த்தை பேசுவதே
    பேசுகின்ற மழலையது
    பெரும்பேறு எனநினைத்து
    பேருவகை கொண்டுவிட்டால்
    பேரின்பம் பெருக்கெடுக்கும் !

    குழந்தையில்லா வீட்டினிலே
    குதூகலம் மறைந்துவிடும்
    குழந்தையது சிரித்துவிட்டால்
    குதூகலமே நிறைந்துவிடும்
    குழந்தைகளைத் தெய்வமாய்
    கொண்டாடி மகிழ்ந்திடுவோம்
    குவலயத்தின் இன்பமெலாம்
    குவிந்துநிற்கும் வாழ்வினிலே !

    Share
  • புள்ளிகளும் கோலங்களும் !

     

     

    எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா 

     
    வெள்ளை மனத்தினிலே கறுத்தப்புள்ளி வந்துவிட்டால்
    வினையாவும் குடிபுகுந்து விட்டதென நாம்நினைப்போம்
    புள்ளியினால் கோலங்கள் மாறுவதைக் கண்டுவிட்டால்
    நல்லபுள்ளி வருவதற்கு நாம்முயற்சி செய்துநிற்போம் !

    புள்ளியினால் கோலங்கள் புறப்பட்டு வந்துநிற்கும்
    புள்ளியது பிழைத்துவிடின் அலங்கோலம் ஆகிவிடும்
    புள்ளியினை நாமென்றும் எள்ளிநகை யாடிவிடின்
    நல்லகோல மெல்லாமே நரகலோக மாகிவிடும் !

    நல்லவராய் இருப்போரை நல்லபுள்ளி எனவழைப்போம்
    வல்லவராய் இருப்போரும் நல்லபுள்ளி ஆகிடுவார்
    சொல்லவல்ல விஷயமெல்லாம் நல்லபுள்ளி பெற்றுவிடும்
    நல்லபுள்ளி நிறைந்துவிடின் நன்மையங்கே குவிந்துவிடும் !

    எழுத்துக்குப் புள்ளிவைத்தால் மெய்யெழுத்தாய் மிளிர்ந்துவிடும்
    இழுக்குடைய செயல்செய்தால் மெய்மையங்கே அழிந்துவிடும்
    புள்ளிவைத்த மானைத்தான் யாவருமே விரும்பிடுவார்
    கள்ளநிறை நரியதனை காதலிப்பார் யாருமுண்டோ !

    புள்ளியது இடம்மாறின் கோலமெல்லாம் மாறிவிடும்
    கரும்புள்ளி செம்புள்ளி காறியே உமிழவைக்கும்
    நெற்றியிலே வைக்கும்புள்ளி வெற்றியினைக் காட்டிநிற்கும்
    நற்றமிழில் புள்ளியது நவின்றுவிடும் இலக்கணமே !

    ஏட்டினிலே புள்ளிவைத்தால் எல்லாமே கிழிந்துவிடும்
    புள்ளியில்லா எழுத்தினிலே தெள்ளுதமிழ் வளர்ந்ததுவே
    பிற்காலப் பெரும்புலவோர் புள்ளியினைத் தான்புகுத்தி
    இக்காலத் தமிழெழுத்தை எமக்களித்தார் ஏற்றமுடன் !

    பொட்டென்னும் பேரினிலே புள்ளிவைப்பார் தமிழ்மக்கள்
    கட்டழைக் காட்டியது களிப்பினையே நல்கிநிற்கும்
    மங்கலத்தைக் காட்டுதற்கு குங்குமத்தைப் பொட்டுவைத்து
    சந்தனமும் சேர்த்திடுவார் சந்தோஷம் கூடிவரும் !

    பெரும்பணத்தைக் கொண்டாரை பெரும்புள்ளி எனவழைப்போம்
    அரசியலில் பெரும்புள்ளி அனைத்தையுமே அள்ளிவிடும்
    பெரும்புள்ளி பலபேரும் பேயாட்டம் ஆடிடுவார்
    புள்ளியது பெயராலே புரட்சியே வெடித்தும்விடும் !

    வாசலிலே கோலமிட்டு மங்கலத்தைக் காட்டிடுவோம்
    மாக்கோலம் பூக்கோலம் வகைவகையாய் போட்டிடுவோம்
    புள்ளிவைத்துக் கோலமிடும் புள்ளிமானைக் குறிபார்க்கும்
    நல்லபுள்ளி கெட்டபுள்ளி நாமறிந்தால் நல்லதன்றோ !

    நல்லபுள்ளி நல்லகோலம் நலம்பயங்கும் யாவருக்கும்
    அல்லல்தரும் புள்ளியினால் அவதூறே வந்துநிற்கும்
    புள்ளியினைத் தேர்ந்தெடுத்து புதுக்கோலம் அமைத்திடுவோம்
    நல்லதெல்லாம் எம்வாழ்வில் அமைந்துவிடும் புள்ளியினால் !

    Share
  • அழவிட்டுப் போனதெங்கே !

     

     

     எம்.ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா 

    aj

    அப்துல் ரகுமானே அழகுதமிழ் பாவலரே
    செப்பமுடன் கவிதைதந்த சிந்தனையின் கோமானே
    முப்பொழுதும் தமிழ்பற்றி மூச்சாக நின்றவரே
    எப்பொழுது உன்தமிழை இனிக்கேட்போம் இவ்வுலகில் !

    தமிழ்க்கவிதைப் பரப்பினிலே தனியாக ஆட்சிசெய்தாய்
    உரத்தகுரல் கொண்டுநீ உயர்கருத்தை ஈந்தளித்தாய்
    கவிதை அரங்குகளை களியாட்டம் ஆக்காமல்
    புதுமை தனைப்புகுத்தி புத்தூக்கம் கொடுத்துநின்றாய்
    அப்துல் ரகுமானை அனைவருமே பார்க்கவைத்தாய்
    அருமருந்தாய் கவிதைகளை அனைவருக்கும் கொடுத்துநின்றாய்
    இப்போது உன்கவிதை கேட்பதற்குத் துடிக்கின்றோம்
    எங்குசென்றாய் ரகுமானே என்றுதேடி அழுகின்றோம் !
    பேராசிரியார் பெரும் பதவி வகித்தாலும்
    ஆராத காதலுடன் அருந்தமிழை அணைத்தாயே
    ஊராரின் மனமெல்லாம் உட்கார்ந்த ரகுமானே
    உன்பிரிவால் அழுகின்றோம் ஒருகவிதை சொல்லுவாயா !

    ஆராய்ச்சி யாளனே அருந்தமிழ் வல்லோனோ
    ஆசிரியாய் இருந்து அருநூல்கள் தந்தவனே
    ஆட்சியாளர் அருகிருந்து அருங்கருந்து உரைத்தவனே
    அப்துல் ரகுமானே அழவிட்டுப் போனதெங்கே !

     

    Share
  • நாளெலாம் போற்றுவோம் !

      ( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா )

     

    ஊசிமுதல் உணவுவரை

    உழைப்பாலே வருகிறது

    உழைக்கின்றார் வாழ்வெல்லாம்

    உயர்வுபெற மறுக்கிறது

    காசுள்ளார் கைகளிலே

    உழைப்பெல்லாம் போகிறது

    கவலையுறும் உழைப்பாளி

    கண்ணீரில் மிதக்கின்றான் !

     

    சமத்துவங்கள் பேசுகிறார்

    சங்கங்கள் அமைக்கின்றார்

    நினைத்தவுடன் மாநாடு

    நிறையவே வைக்கின்றார்

    அனைத்துமே உழைக்கின்றார்

    அனுசரணை என்கின்றார்

    ஆனாலும் உழைக்கின்றார்

    அல்லலிலே இருக்கின்றார் !

     

    நிலத்தில் வியர்வை சிந்தியே

    நித்தம் உழைக்கும் மக்களின்

    நலத்தை மனதில் எண்ணியே

    நடத்தல் நீதி அல்லவா

    பணத்தை முடக்கி வைத்திடும்

    குணத்தை உடைய மனமெலாம்

    உழைப்பை மதிக்கும் நிலையினை

    உலகில் வந்திடச் செய்குவோம் !

     

    பாடுபடுவார் பலவற்றைப் பெறுதல் வேண்டும்

    பக்குவமாய் அவர்வாழ்வு மலர்தல் வேண்டும்

    நாட்டினிலே அவருழைப்பு போற்றல் வேண்டும்

    நலம்விளைக்கும் நாளாய் மே திகழவேண்டும் !

     

    உழைப்பினை நல்குவார்

    உயர்ந்திடச் செய்குவோம்

    உழைப்பினை நினைவுறும்

    நாளதைப் போற்றுவாம்

    நலத்துடன் உழைப்பவர்

    வாழ்ந்திட வாழ்த்துவோம்

    நாட்டிலே உழைப்பாரை

    நாளெலாம் போற்றுவோம் !

     

    Share
  • மகிழ்ந்து வாழ்வோம் !

       ( எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா )

     

     

    முதியோர் இல்லமதில் தாய்

    முறுவலுடன் விழாவதனில்  சேய்

    தனியாகத் தவிக்கிறாள் தாய்

    தானமெலாம் செய்கிறான் சேய் !

     

    பலலட்சம் வைத்துள்ளான் சேய்

    பரிதவித்து நிற்கிறாள் தாய்

    பட்டம்பல பெற்றுவிட்ட சேய்

    பாருக்குள் இருப்பதுதான் ஏன் !

     

    விரிவுரை பலசெய்து விருதுகள் பலபெற்று

    கருணையை காட்டிநிற்கும் காவியம் பலகாட்டி

    தெருவெலாம் வரவேற்பு தினமுமே பெறுவதற்கு

    பலநூறு செலவுசெய்யும் பாங்கினைநாம் என்னசொல்ல !

     

    ஊட்டி வளர்த்தவளை ஒருகணமும் நினையாமல்

    போட்டி பொறாமையொடு புகழ்தேடும் கனவான்கள்

    சேற்றிலே வீழ்ந்துள்ள சீரழிவைக் காண்கையிலே

    நாட்டிலே இருப்பதனால் நன்மையென்ன இருக்கிறது !

     

    பட்டம் பலபெற்றாலும் பதவிகளில் உயர்ந்தாலும்

    கெட்ட குணமுள்ளவரை அத்தனையும் வீணாகும்

    நட்டம் பலவந்தாலும் தான்நொடிந்து போனாலும்

    இட்டமுடன் எமைக்காத்த எந்தாயை இகழுவதா !

     

    தாயினைத் தெய்வமாகத் தரணியில் போற்றவேண்டும்

    தாயினை தாங்கிநின்றி தாழ்பணிந்திருக்க வேண்டும்

    தாயின் ஆசிபெற்று தரமான வாழ்வுவாழ

    தாயினை வீட்டில்வைத்து தான்நிதம் மகிழ்ந்துவாழ்வோம் !

     

     

    Share
  • பரந்தமனம் எழவேண்டும் !

         ( எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

     

     

    குடிப்பதற்கு நீரின்றிக் குவலயத்தில் பலபேர்கள்

    தவிக்கின்ற நிலையிப்போ தானெழுந்து நிற்கிறது

    அதைப்போக்க வழிகாண ஆராய்ச்சி செய்துவிடின்

    அவலமுறும் அனைவருமே ஆறுதலை அடைந்திடுவார் !

     

    அணுபற்றி ஆராய்ச்சி அகிலத்தில் நடக்கிறது

    ஆயுதங்கள் புதுப்புதிதாய் அதனூடாய் வருகிறது

    அருந்துவதற்கு நீரின்றி அவதியுறும் நிலைபற்றி

    ஆயுதத்தை சிந்திப்பார் அரைக்கணமும் நினைப்பதில்லை !

     

    ஆண்டவனின் படைப்பினிலே அரும்படைப்பு மனிதவினம்

    அவ்வினத்தின் துயர்பற்றி அக்கறையைச் செலுத்தாமல்

    ஆயுதங்கள் செய்வதிலே ஆசையுடன் செயற்பட்டால்

    அகிலத்தின் அமைதியெலாம் அத்தனையும் அழியுமன்றோ !

     

    நீரில்லா நிலையினிலே நிலம்வறண்டு வீணாகும்

    போர்வந்து சேர்ந்துவிடின் பொலிவெல்லாம் மறைந்தொழியும்

    பார்செழிக்க வேண்டுமெனில் பரந்தமனம் எழவேண்டும்

    ஊரழிக்கும் நினைப்பொழிந்தால் உலகவளம் உயிர்த்துவிடும் !

     

    குண்டுமழை பொழிவதனால் குடிதண்ணீர் பாழாகும்

    குடிதண்ணீர் இல்லையெனில் குடிகள்நிலை என்னாகும்

    வளங்கொழிக்கும் வயலனைத்தும் வறண்டவனம் போலாகும்

    நிலமிருக்கும் மாந்தர்நிலை நினைப்பதற்கே பயமாகும் !

     

    காடுகள் அழியும் களனிகளும் சேதமுறும்

    மாடுமனை அத்தனையும் மண்ணுக்குள் மாய்ந்துவிடும்

    கேடுநிலை அத்தனையும் கிடுகிடென வந்துவிடும்

    நாடுகின்ற ஆராய்ச்சி நல்வழியை மறந்துவிட்டால் !

     

    ஆணவத்தின் வசத்துக்கு ஆராய்ச்சி ஆள்பட்டால்

    அகிலத்தின் துன்பமெலாம் அப்பக்கம் தெரியாது

    ஆக்கத்தின் பக்கமாய் ஆராய்ச்சி அமைவதுதான்

    அகிலத்தில் வெளிச்சம்வர அருந்துணையாய் அமையுமன்றோ !

     

     

     

    Share
  • அன்புதனை அணையுங்கள்

    எம் . ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா 

     

    ஓடிவரும் ஆறும் ஊற்றெடுக்கும் நீரும்

    ஆடிவரும் காற்றும் அனைவருக்கும் உதவும்

    கூவிநிற்கும் குயிலும் குதித்தோடும் முயலும்

    யாவருக்கும் இன்பம் நல்கிவிடும் நயமாய் !

     

    மயிலென்போம் குயிலென்போம்

    வண்ணமிகு கிளியென்போம்

    தனியான குணங்கொண்டால்

    அன்னமென உயர்த்திடுவோம்

    கருடனை வணங்கிடுவோம்

    காக்கைக்குச் சோறிடுவோம்

    பெருமைநிறை பறவையென

    உரிமையாய் உரைத்துநிற்போம் !

     

    கூவிநிற்கும் கோழியினை

    குழம்புவைத்துச் சுவைத்துவிட்டு

    கோழியது பொருமையை

    கொண்டாடி மகிழ்ந்திடுவர்

    வீட்டிலே வளர்த்தெடுக்கும்

    வெள்ளாடு தனைவெட்டி

    விருந்துண்டு மகிழ்ந்துவிட்டு

    விரிவுரைகள் செய்துநிற்பர் !

     

    அஃறிணை என்று

    அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு

    உயர்திணை என்று

    உவப்பாகப் பேசிநிற்கும்

    உலகத்து மனிதர்களின்

    உண்மைமுகம் வரும்பொழுது

    அஃறிணை எதுவென்று

    அப்போது  அறிந்திடலாம் !

     

    உயிர்கொன்று உயிர்வளர்த்தல்

    உயர்வான செயலன்று

    எனவுரைக்கும் வள்ளுவத்தை

    உயர்பீடம் வைக்கின்றோம்

    உயர்வான குறள்சொல்லும்

    உயர்வான தத்துவத்தை

    உள்ளமதில் பதிக்காமல்

    உதாசீனம் செய்கின்றோம் !

     

    கருணையைக் கடவுளென்போம்

    அன்புதான் அனைத்துமென்போம்

    உயிர்களைக் காப்போமென்று

    உறுதியும் எடுத்து நிற்போம்

    விலங்குக்குச் சங்கம்வைப்போம்

    வேள்விகள் வேண்டாமென்போம்

    நலம்பற்றி சொல்லிவிட்டு

    நாம்மட்டும் மாறமாட்டோம் !

     

    மனமுள்ள மனிதர்களே மாறிவிட முனையுங்கள்

    தினமுமே பாவமதை செய்துவிட முனையாதீர்

    அனுதினமும் நல்லவற்றை மனமெண்ணி ஆற்றுங்கள்

    ஆண்டவனின் அருள்கிடைக்க அன்புதனை அணையுங்கள் !

    Share
  • புனிதமுடன் நோக்குவோம் !

     

       ( எம். ஜெயராமசர்மா…. மெல்பேண் … அவுஸ்திரேலியா )

     

     

    கருணையொடு பாசமும் கள்ளமில்லா உள்ளமும்

    உருகிநிற்கும் அன்புமே உருவமெனக் கொண்டதாய்

    கருவறையில் சுமந்துமே கண்விழித்துப் பார்த்துமே

    மனமுழுக்கச் சுமந்திடும் மாண்புடைய மங்கையை

    நிலமுழுதும் இன்றுநாம் நீக்கமறப் போற்றுவோம்

    அவள்மனதில் ஆனந்தம் அமர்ந்துவிடச் செய்குவோம் !

     

    பொறுமையில் சிகரமாகி பொறுப்பினில் வைரமாகி

    அறிவினில் கூர்மைகொண்டு அனைத்திலும் உழைத்துநிற்கும்

    பெருமையாம் பெண்கள்தம்மை பெருமையாய் பார்க்கும்பாங்கு

    உலகினில் உதிக்கவேண்டி  ஒலியுடன் குரலெழுப்பி

    தனிமையில் வாடும்பெண்மை தலைநிமிர்ந் திடுகவென்று

    அனைவரும் அழைப்போம்வாரீர் அவரகம் மகிழ்ந்துநிற்பார் !

     

    மாதர்தம்மை இழிவுசெய்வார் மடமையைப் பொசுக்குவோம்

    மாநிலத்தில் மாதர்தம்மை மதிப்புயரச் செய்குவோம்

    பேதமின்றி பெண்கள்வாழ பெரிதும்பணி ஆக்குவோம்

    பூதலத்தில் பெண்கள்தமை புனதமுடன் நோக்குவோம் !

     

    Share
  • ஒருகணம்நாம் சிந்திப்போம் !

       ( எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா )

     

     

    பரந்திருக்கும் கடலதனை

    பலருக்கும் உவமிப்பர்

    பட்டம்பல பெற்றவரை

    பதவியிலே உயர்ந்தவரை

    பெட்டிநிறை பணம்கொண்டார்

    அத்தனபேர் தனையுலகில்

    கடலெனவே பெயர்சூட்டிக்

    களிப்புடனே அழைத்திடுவர் !

     

    உவமிக்கும் உவமானம்

    உயர்வினையே தரவேண்டும்

    உவர்நிறைந்த கடலதனை

    உவமித்தல் உகந்ததன்றோ

    உவர்நிறைந்த கடலதனை

    உவமானம் ஆக்கிவிடின்

    உயர்வென்று கருதுவதில்

    ஒருகுறைவு வருமன்றோ !

     

    தந்தாலும் பலவளத்தை

    தாகமதைத் தீர்க்காத

    கடலதனை உவமித்தல்

    கற்பனைக்கே பொருத்தமில்லை

    பசுமைதனைத் தருவதற்கும்

    பயிர்வளர்ச்சி யடைவதற்கும்

    ஒருபொழுதும் உதவாமல்

    இருக்குதன்றோ உவர்கடலும் !

     

    மேலிருக்கும் மேகமது

    கீழிருக்கும் கடல்தன்னுள்

    ஆதவனின் உதவியுடன்

    ஆவியென நீரெடுத்து

    பூமிதனைக் குளிர்விக்க

    பொழிகின்ற மழையெனவே

    மாறிவிட்டால் பின்னால்தான்

    மற்றவர்க்கு உதவுதது !

     

    பட்டம்பல பெற்றவர்கள்

    பண்புநிலை உயர்வதில்லை

    பணம்கொண்ட பலபேர்கள்

    குணம்கூட மாறமாட்டார்

    உவர்கொண்ட கடல்போல

    உளமெல்லாம் உயிர்ப்பின்றி

    அவர்வாழும் நிலையினைநாம்

    அகிலத்தில் காணுகிறோம் !

     

    கருணைக் கடலென

    கடவுளைக் கூறுகிறோம்

    கற்பனைக் கடலென்று

    கவிஞர்தமை அழைக்கின்றோம்

    பரந்திருக்கும் காரணத்தால்

    பெருவாழம் கொண்டதனால்

    கடலெனவே கருதிநின்று

    உலகிலுள்ளோர் அழைக்கின்றார் !

     

    ஆழத்தை நோக்கிடினும்

    அகலத்தை நோக்கிடினும்

    மாக்கடலின் உவர்தன்மை

    மாறிவிட மாட்டாது

    உவர்தன்மை கொண்டகடல்

    உயர்வுக்குப் பொருத்தமன்று

    உள்ளமதில் அதையெண்ணி

    ஒருகணம்நாம் சிந்திப்போம் !

     

    மேலிருக்கும் மேகம்தான்

    கீழ்கடலை பயன்படுத்தும்

    மேலான பணிதன்னை

    மேதினியில் செய்கிறது

    மேலான குணமுடையார்

    வெளிவந்து நின்றுவிடின்

    கீழான குணமெல்லாம்

    கிறுகிறுத்து ஓடிவிடும் !

    Share
  • ஆண்டவனை வேண்டிடுவோம்!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

     ஆணவம் வந்துவிட்டால்
    அப்பனும் தெரியமாட்டார்
    அம்மையும் தெரியமாட்டார்
    அறிவெலாம் மயங்கிநின்று
    அகந்தையின் உச்சம்சென்று
    அழிவினைத் தொட்டுநிற்கும்
    அவலத்தில் சிக்கிநிற்போம்!

    குடும்பமாய்க் கடவுள்காட்டும்
    குணமதைக் கொண்டுநிற்கும்
    அரும்பெரும் சமயந்தன்னை
    அறிந்திட முயலுகின்றார்
    ஆணவம் போக்குவென்று
    அம்மதம் சொல்லிச்சொல்லி
    அருமையாய்க் கதைகள்தன்னை
    அமுதமாய் அளிக்குதன்றோ!

    தேவரென மூவரென
    திரளாகக் கதைகள்சொல்லி
    யாவரையும் நல்லாக்க
    நம்சமயம் உதவுதன்றோ?
    பாவமெலாம் போக்குதற்குப்
    பக்குவமே தேவையென்று
    பாரினுக்கு எடுத்துரைக்கும்
    பாடமதைப் புகட்டுதன்றோ!

    ஆணவத்தைக் கொண்டிருப்பார்
    ஆண்டவனைக் காணார்கள்
    எனும்கருத்தை உணர்த்துகின்ற
    அரும்விரதம் சிவராத்ரி
    அவ்விரத நாளினிலே
    அனைவருமே கோவில்சென்று
    ஆணவத்தைப் போக்குவென
    ஆண்டவனை வேண்டிடுவோம்!

    மனமாரத் தொழுதழுதால்
    வஞ்சனைகள் ஓடிவிடும்
    சினமெம்மை விட்டகன்று
    சிந்தனையும் சிறப்பாகும்
    குணம்மாறும் குறையகலும்
    குதித்துவரும் பக்குவமும்
    அவையாவும் எங்களுக்கு
    ஆனந்தம் நல்குமன்றோ!

    விரதம் இருப்பதனால் மெய்யுணர்வு உண்டாகும்
    மேலான எண்ணமெலாம் விரைவாக எமையடையும்
    அதனாலே விரதமதை அனைவருமே
    கைக்கொண்டால்
    ஆணவமும் விட்டகல ஆண்டவனும் அருளிடுவான்!

     

     

     

    Share
  • மாற்றம் – பகுதி 2

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்த்திரேலியா

    “திருப்புகழ்” எங்கள் சமயத்துக்குக் கிடைத்த மற்றொரு வரப்பிரசாதமாகும்.  கோவில்களிலே திருமுறை ஓதும்போது திருப்புகழும் சேர்க்கப்பட்டுவிட்டது. இதற்குக் காரணம் அதன் அமைப்பும், இறைவன் புகழைக் கூறும் விதமுமாகும்.  தமிழ்மொழியில் இப்படிப் பாடமுடியுமா என்னும் அளவுக்கு மிகமிக அற்புதமாக அமைந்திருப்பதுதான் திருப்புகழ்.

    அந்தத் திருப்புகழைத்தந்த அருணகிரியார் பற்றிப் பார்க்கும்பொழுது அவர் யாவரும் வெறுக்கும்படியான அருவருக்கத்தக்க இழிவான முறையில் வாழ்ந்தார் என்று அறியமுடிகிறது. யாவரும் வெறுத்து ஒதுக்கிய நிலையில் இருந்தவரை மாற்றியது எது? அதுதான் இறைவனின் திருவருள்! அருணகிரியாரின் மாற்றம் அவருக்கு மட்டும் பயன்பட்டதா? இல்லவே இல்லை! யாவருக்கும் பயன்பட்டது. அவரது மாற்றத்தினால் திருப்புகழோடு – கந்தர் அனுபூதி, கந்தரலங்காரம் என்னும் அரிய தத்துவங்களும் பாடல்களாக வந்து சேர்ந்தன. நாளும்பொழுதும் கோவில்கள்தோறும் பயபக்தியுடன் ஓதப்படுகின்றன். பலருக்கும் பக்திக்கு வழிகாட்டியும் நிற்கின்றன என்பதும் நோக்கத்தக்கதாகும்.

    நல்லைநகர் தந்த நாவலர் பெருமானை சைவர்கள் தமது ஐந்தாவது குரவராக கொண்டுள்ளனர்.

    “நல்லை நகர் நாவலர் பிறந்திலரேல்
    சொல்லு தமிழ் எங்கே சுருதியெங்கே
    எல்லரிய வேதமொடு ஏத்து ஆகமங்களெங்கே” – என்று போற்றும் வண்ணம் நாவலர் பெருமான் சைவ சமயத்துக்குத் தொண்டாற்றியுள்ளார். நாவலர் மட்டும் இல்லறத்தில் இறங்கி அதன்வழி சென்றிருப்பாரேயானால் அவரின் ஆற்றல்கள் இந்தளவுக்கு எமது சமயத்துக்கு உதவியிருக்குமா என்பது கேள்விக்குரியதே! ஆனால் நாவலர் தனது வாழ்க்கைப் போக்கையே மாற்றினார்.

    மாற்றம் பெற்றதன் விளைவால்தான் அவரால் சைவத்தைக் காப்பாற்றவும், சைவம் இன்றும் ஈழத்தில் தழைத்து நிற்கவும் முடிகிறது எனலாம். தான் மாறியது மட்டுமன்றி – மற்றவர் மனங்களிலும் நல்ல சமயமாற்றம் வரவும் பெரும் பங்காற்றினார்.

    புராணங்களையும், இதிகாசங்களையும், கோவில்களில் சாதாரண மக்களும் விளங்கும்படிப் பிரசங்கம் மூலம் எடுத்து விளக்கினார். பெரிய புராணத்தை யாவரும் விளங்கும்படி வசனநடையில் ஆக்கினார். கந்தபுராணத்தைக் கோவில்கள் தோறும் விளக்கினார். சமய அனுட்டானங்கள் பற்றி நீண்ட விரிவுரைகளை கோவில்களில் ஆற்றினார். நாவலர் தனது சமயப்பணியை மேற்கொள்ளத் தேர்ந்தெடுத்த இடம் கோவில்கள்தான்.

    சம்பந்தரும் அப்பரும் கோவில்கள்தோறும் சென்று இறைபுகழைப் பாடி சமயம் வளர்த்து மக்களிடையே மாற்றம் வரச்செய்ததுபோல – நாவலர் தனது பேச்சைக் கோவில்கள்தோறும் நிகழ்த்தி மக்கள் மனத்தில் நல்ல மாற்றம் வரச் செய்தார்.

    நாவலர் ஏற்படுத்திய மாற்றத்தால் நாவலர் கலாசாரம் என்ற ஒன்றும் – கந்தபுராணக் கலாசாரம் என்ற ஒன்றும் ஈழத்தில் உருவாகி நல்ல மாற்றம் வருவதற்கு வழிவகுத்தது எனலாம்.

    எம்மிடையே வாழ்ந்து இறையடி சேர்ந்தவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். அவர் தனது வாழ்க்கையை மாற்றி அதனை இறைவழிபாட்டிலும், சமயவளர்ச்சியிலும் செலுத்தினார். ஊரெல்லாம் சென்றார். இறைவன் பற்றியும், பக்தி பற்றியும், வாழ்வாங்கு வாழுதல் பற்றியும், தர்மம் பற்றியும், அன்னதானம் பற்றியும் எடுத்துச் சொன்னார். சொன்னதோடு நின்றுவிடாமல் – நாவலர் பெருமான் போன்று செய்தும் காட்டினார்.

    தேடிய பொருளையெல்லாம் தெய்வப்பணிக்கே அர்ப்பணம் செய்தார். உலகு எங்கும் சென்றுவந்தார். அவரது இறைபக்தியினால் பலர் மாற்றம் அடைந்தனர். சமூகத்தில் மாற்றங்களுக்கு அவரின் செயற்பாடுகள் பெரிதும் உதவியது. அவர் தனது கதாப்பிரசங்கங்களை நிகழ்த்துவதற்குத் தேர்ந்தெடுத்த இடம் கோவில்கள்தான். கோவில்கள் காந்தசக்தி மிக்கன. யாவரையும் தன்வயமாக்கக் கூடியன. எனவேதான் நாவலரைப் போன்று வாரியார் சுவாமிகளும் கோவிலைத் தெரிவு செய்தார். இதனால் அவர்கள் எதிர்பார்த்த மாற்றமும் ஓரளவுக்கு நிகழ்ந்தது எனலாம்.

    இன்பம் கிடைக்கும் நிம்மதி கிடைக்கும் என்றெண்ணி – உல்லாச விடுதி களை நோக்கிச் செல்லுகின்றனர். அங்கு சென்றால் உல்லாசமாக இருக்க முடியும் என்றே எண்ணுகின்றனர். பொழுதை ஒரு வழியாகப் போக்கிவிட்டோம் என்றும் எண்ணுகின்றனர்.

    ”பொழுது” என்பது பெறுமதியானது.பொழுதைப் போக்கிவிட்டோம் என்பது அர்த்தமற்றதாகும். பொழுதைப் பொருத்தமான முறையில், பயன்தரும் வகையில் பயன்படுத்த வேண்டும். பொழுதை நாம் பொருந்தா வகையிலே செலுத்த முற்பட்டால் – எமது மனம், சிந்தனை, செயற்பாடு யாவுமே தடம் புரண்டே போய்விடும். இங்கெல்லாம் சென்று எமது அரிய பொழுதினை வீணடிக்கின்றோமேயன்றி பயனுடையதாக்குகின்றோமல்ல என்பதை யாவரும் உணருதல் அவசிமானதாகும். கேளிக்கைகளும், களிப்பாட்டங்களும் என்றுமே நல்ல மாற்றங்களைத் தரவே மாட்டாது என்பதையும் நாமனைவரும் கட்டாயமாக மனத்தில் பதித்துக் கொள்ளுதல் வேண்டும்.

    “அரிது அரிது மானிடர் ஆதல் அரிது” என்பதை யாவரும் அறிவோம். அப்படி அரிய பிறவியில் வந்த நாங்கள் சுதந்திரமாக வாழலாம். விலங்குகளுக்கு வாழ்க்கைபற்றி எதுவுமே தெரியாது. நாகரிகம், பண்பாடு, கலை, கலாசாரம், உயர்வு, தாழ்வு, படிப்பு, உழைப்பு, தானம், தர்மம், இவையாவும் மனித சமூகத்துக்கே உரியன. இவை பற்றி விலங்குகள் நினைத்தே பார்ப்பதும் இல்லை.

    இதனால் மாற்றம் என்பதுபற்றி அவைகள் அலட்டிக் கொள்வதே இல்லை.  ஆனால் மாற்றம் என்பது மனித சமூகத்துக்கு மிகவும் அவசியமானதாகும். அந்த மாற்றமும் நல்ல மாற்றமாகவே அமைவதும் மிகவும் கட்டாயமாகும். அந்த வகையில் சமூகத்தில் எப்படியெல்லாம் மாற்றங்கள் நிகழ்ந்து வந்தன அவை சமூகத்துக்கு எப்படியெல்லாம் நல்ல வழியாக அமைந்தன என்பதையெல்லாம் பார்த்தோம்.

    எதை எப்படிச் செய்தால் நன்மைவரும் அல்லது தீமைவரும் என்று அறியும் ஆற்றல் மனிதனுக்கே இருக்கிறது. நல்லபடி வாழ நல்ல மாற்றங்கள்தானே அவசியமானது. அந்த மாற்றங்களை நாமும் எமக்குள் ஏற்படுத்திவிடலாம்.

    பயப்படாதீர்கள்! இன்று – உலகம் போகும் போக்கில் எத்தனையோ மார்றங்கள்! என்னதான் செய்யமுடியும் என்று நீனைக்கிறீர்களா! சற்று நின்று நிதானியுங்கள்! சஞ்சலங்கள் மிகுந்து விட்டதா? நித்திரையும் வர மறுக்கின்றதா? எல்லாமே வெறுமையாகத் தோன்றுகிறதா?

    இவையாவும் தீர வழியைத் தேடுகிறீர்களா? நல்ல மருந்தையும் நாடு கிறீர்களா? யாவற்றுக்கும் – நல்ல மருந்தும், மாற்று வழியும் உங்கள் அருகிலேயே இருக்கிறது. அது ஏன் இன்னும் உங்களுக்குப் புலப்படவில்லை என எண்ணுகிறீர்களா? நீங்கள் இன்னும் அந்த இடத்தின் அருமையைப் பெருமையை அறியவில்லை. அதனை நாடவில்லை! தேடி ஓடவில்லை!

    கவலைப்படாதீர்கள்! அந்த இடம் எங்கும் இல்லை. உங்கள் இருப்பிடத் துக்கு அருகிலோ அல்லது சற்றுத் தூரத்திலோ அமைந்திருக்கும் ” கோவில்கள்” தான். கோவில்களுக்கு இன்னுமொரு சிறந்த பெயர்தான் ” சாந்திநிலையம். ” அன்பு, பொறுமை, கருணை, இரக்கம், பாசம், நேசம், சாந்தி, சமாதானம், அமைதி, அடக்கம், ஆனந்தம், ஆரோக்கியம், அத்தனையையும் இலவசமாக வழங்கி நிற்கும் இடம் கோவில்கள்தான்.

    கோவிலுக்குச் சென்றால் மனப்பாரம் குறையும்; சஞ்சலங்கள் மறைந்துவிடும்; மூர்க்க குணங்கள் அடங்கிவிடும். மற்றவர்மீது பற்றும் பாசமும் ஏற்படும். தாய்மை உணர்வு உருவாகும். தாழ்மை உணர்வு ஏற்படும். சகோதரத்துவம் வந்துவிடும். உயர்வு தாழ்வு ஓடிவிடும். போட்டியும் பொறாமையும் தவிடு பொடியாகிவிடும். போலிக் கெளரவம் பொசுங்கிவிடும். மனமெல்லாம் தூய்மையான உணர்வு எழுந்துநிற்கும். அமைதி தானாய்வந்து நிற்கும். அங்கு ஒருவித ஆனந்தம் பொங்கிப் பிரவாகிக்கும்.

    இந்தப்பிரவாகத்தில் தினமும் நாம் நம்மை இணைத்துக் கொண்டால் வாழ்க்கையே அர்த்தமுள்ளதாக மாறிவிடும். மாறிவிடுவதை உணருகின்ற வேளை – எம்முள் இன்பவெள்ளம் பாயும். அதுதான் இறைவனின் பெருங் கருணை. இந்த உணர்வைத்தான் பகவான் இராமகிருஶ்ண பரமஹம்சர் அடைந்தார் என அறிகிறோம்.

    “தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!” இது ஒரு நல்ல மாற்றம் அல்லவா? மனம் மாற்றம் அடைய உடலும் மாற்றம் அடைந்து செயற்பாடும் மாற்றம் அடைந்து – தூய்மையும் இறையும் ஒன்றாகும் இடம் கோவில்தான்.

    இன்னுமே மாற்றம் அடையாது இருப்பவர்களே – அனைவரும் வாருங்கள்! கோவிலுக்குச் செல்லுவோம்! மனம் மாற்றம் ஏற்படுத்தும் மருந்து கோவிலில் தானிருக்கிறது. ஆலயத்தைத் தொழுவோம்! ஆண்டவனை நினைப்போம்! சமயவழியில் செல்லுவோம்! மாறாத மனமெல்லாம் நிச்சயம் மாற்றம் அடையும். மாற்றம் என்பது நடந்தே தீரும்! அதுவும் நல்ல மாற்றம் என்பதே நல்ல வாழ்வுக்கும் தேவையாகும். அதனைத் தந்தது சமயமும் கோவில்களும்தான். இன்றளவில் தந்து கொண்டிருப்பதும் சமயமும் கோவில்களுமேயாகும்.

    (முற்றும்)

    Share
  • திருவாசகத் தேனில் சைவசித்தாந்தம்

    -எம். ஜெயராமசர்மா – மெல்பெண், அவுஸ்திரேலியா

      இறைவன் தன் திருவடியால் இந்நிலமிசை வந்து அருள்பாலித்துத் தனது திருக்கரத்தால் எழுதிய பெருமை பெற்றது “திருவாசகம்”. இத்திருவாசகத்தைக் கேட்டவரும் உருகுவார். படித்தவரும் உருகுவார். இதனாலத்தான் “திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் “என்று சொன்னார்கள் போலும். தேன் மருத்துவ குணம் கொண்டது. தானும் கெடாது தன்னைச் சேர்ந்ததையும் கெடவிடாத தன்மை கொண்டது. இதனால்தான் “திருவாசகம் என்னும் தேன்” என்று யாவரும் ஏற்றிப் போற்றுகின்றனர். தமிழர் மட்டுமின்றி மேனாட்டினரும் திருவாசகத்தை உயர்ந்த நிலையிலேயே வைத்துள்ளனர். கல்லையும் கரைக்கும் தன்மையுடையது திருவாசகம். கல் நெஞ்சையே நல்நெஞ்சாக்கும் பெருமையும் உடையது திருவாசகம்.

       தோத்திரங்களும் சாத்திரங்களும் சைவத்தின் இரு கண்களாகத் திகழ்கின்றன. அந்தச் சைவத்தின் முழுமுதல் தெய்வமாகச் சிவனே விளங்குகின்றார். ‘சிவமாம் தெய்வத்தின்மேல் தெய்வமில்லை” என்பது சைவத்தின் அறுதியான முடிவாகும். அன்பு நெறியால் இறைவனைக் காட்டுவன தோத்திரங்கள். அறிவு நெறியால் இறைவனைக் காட்டுவன சாத்திரங்கள். இவ்விரு நெறிகளுமே இறையுண்மையையே காட்டி நிற்கின்றன.

       வேதாந்தம் என்னும் ஆரா அருங்கனி பிழிந்த சாரம் கொண்டதே சைவசித்தாந்தம். இது தமிழ்நாட்டுடனும் ஈழத்துடனும் நெருக்கமான உறவினைக் கொண்டது. இப்பகுதிகளின் பண்பாட்டு உருவாக்கத்தில் முக்கியப் பங்களிப்பைச் செய்து வந்துள்ளது.

       சமயத்தையும் தத்துவ ஞானத்தையும் இணைத்தது சைவசித்தாந்தம். ஆன்மாக்களின் நித்தியத்துவத்தையும், தனித்தன்மையையும் கெடுக்காது நிலைநாட்டி இவ்வுலக வாழ்வை உண்மையானதும், பயனுடையதுமாக்கி _ இம்மை மறுமை இரண்டையும் சிறப்புடையன ஆக்கிய தனிச்சிறப்பு ” சைவசித்தாந்தத்துக்கு மட்டுமே உரியது”. “இந்தியாவிலுள்ள மதங்கள் அனைத்திலும் சைவசித்தாந்தமே மிகமேம்பட்டது” என்பதில் ஐயமில்லை என மேனாட்டு அறிஞரான ஜி.யூ.போப் கூற – “சைவசித்தாந்தம் இந்திய சிந்தனைகளது உணர்வினது சிகரம்” என ஏற்றிப் போற்றுகின்றார் கெளடி என்னும் அறிஞர்.

       சைவசித்தாந்தம் மூன்று பொருள்களைப் பற்றிச் சொல்கிறது. நமது சிந்தனைக்கும் ,ஆராய்ச்சிக்கும் உரிய விஷயம் அனைத்தையும் இந்த மூன்று பொருள்களுள்ளும் அடக்கலாம். இறை, உயிர், தளை என்பனவே அவை.

       சைவசித்தாந்தத்துக்கு முக்கிய ஆதாரங்கள் வேதங்களா ஆகமங்களா என்று நோக்கும் இடத்து இரண்டுமே பிரமாண நூல்கள்தான். எனினும் வேதங்களைவிட ஆகமங்களே முக்கியமானவை எனக் கொள்ளமுடிகிறது. வேதங்களைப் பொதுப்பிரமாணமாகவும் ஆகமங்களைச் சிறப்புப் பிரமாணமாகவும் கொள்ளுவது மரபாக உள்ளது. ஆகமம் என்பதற்கு விளக்கம் – பதி, பசு , பாசம் பற்றிக்கூறுவது என்று அறிகின்றோம்.

         தோத்திரங்களும் சாத்திரங்களும் சைவத்தின் கண்ணாக விளங்குவதோடு நின்றுவிடாமல் – சைவசித்தாந்தக் கருதுக்களையும் தன்னகதே கொண்டு நிற்கின்றன் என்பது முக்கியமானதாகும். இந்த நிலையில் திருவாசகம் என்னும் தேனானது – தோத்திரநூல் எந்த அளவுக்குச் சைவசித்தாந்த உண்மைகளைக் கொண்டிருக்கிறது என்று பார்ப்பது பொருத்தமாய் இருக்கும் அல்லவா?

    தொல்லை இரும்பிறவிச் சூழுந் தளைநீக்கி
    அல்லலறுத் தானந்தம் ஆக்கியதே – எல்லை                             மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்                               திருவா சகமென்னும் தேன்.

    தொல்லைக்குக் காரணம் பிறவி. அதை எடுப்பதே பெரிய தளையாகும். பிறவிப் பிணியகல இறையருள் தேவை. இறையருள் கிட்டினால் ஆனந்தம். பிறவி நோயும் அறியாமையும் அகன்றவுடன் சிவானந்தம் ஆகிய பேரானந்தம் விளையும். அந்த ஆனந்தத்தை எப்படிப் பெறலாம் என்று எமக்கெல்லாம் காட்டி நிற்கிறது திருவாசகமாகிய தேன் என்று இப்படல் காட்டி நிற்கிறதல்லவா? அதுமட்டுமல்ல… சைவசித்தாந்த உண்மையும் இதனுள் காட்டப்படுவது நோக்கத்தக்கது.

     எமது உடம்பில் சிரசு மேலானது. அதற்கு மேலாக இருப்பது சிகையாகும். சிகைக்கு மேலொன்றுமில்லை. ஆகவே சிகாமந்திரமாக விளங்கும் திருவாசகத்துக்கு மேல் சிறந்த நூல் இல்லை என்று பெரியவர்கள் சொல்லுவர். இந்தத் திருவாசகத்தில் “சிவபுராணம்” முக்கியப் பகுதியாகக் கொள்ளப்படுகிறது. அதன் ஆரம்பமே சைவசித்தாந்தத்தின் முக்கிய கருவைக் கொண்டிருக்கிறது எனலாம்.

    “நமச்சிவாய வாழ்க ”

    “நமச்சிவாய” என்பது திருவைந்தெழுத்து மந்திரமாகும்.இதன் பொருள் –

    ம – பாசம்

    ய – பசு

    சி – பதி

    ந – திரோதான சக்தி

                          வ – அருட்சக்தி                                                                  திருவாசகம் இறைவனுடைய தலைமைப் பண்பையும், அவனுக்குட்பட்ட உயிர்களின் அடிமைப் பண்பையும், பொருத்தமாக விளக்கிச் சொல்வதைக் காணலாம்.உயிர்கள் மலம் நீங்கி இறைவன் அருள்பெற மணிவாசகர் பாடியதால் திருவைந்தெழுத்தின் எல்லா வடிவங்களையும் திருவாசகத்தில் காணமுடிகிறது.

       சைவசித்தாந்தம் – மாயை, கன்மம், வினை பற்றியெல்லாம் சொல்லுகிறது. பிறப்புக்குக் காரணம் வினை. ஆன்மாக்கள் உடம்பை எடுப்பதற்கும் – பிறப்பதற்கும் – இறப்பதற்கும், அனுபவிப்பதற்கும் – இன்ப துன்பங்களுக்கும் – வினைப்பயனே காரணமாகிறது. இவற்றைத் திருவாசகம் –

               14 – மாயப் பிறப்பறுக்கும்

    20 – முந்தை வினை முழுதும்

    25 – பொல்லா வினையேன்

    26 – புல்லாகிப் பூடாய் ….எனத் தொடங்கி எல்லாப் பிறப்பும்

       பதி என்று பேசப்படும் இறைவன் ஆன்மாக்களின் மலபந்தங்களை நீக்க முயலுகிறான். இறைவனின் அருள்நோக்கம் ஒன்றினால்தான் ஆன்மாக்களின் மலபந்தம் அகல முடியும். இதனைத் திருவாசகம் காட்டும் விதம் நயக்கத்தக்கதே.

                18 – அவன் அருளாலே அவன் தாள்வணங்கி

                38 –  மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே

                40 – அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே

                 42 – ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்

                 48 – பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

                 64 – பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே

                 78 – காக்கும் எம்காவலனே

                 87 – மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே

    88 – கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே

    91 அல்லல் பிறவி அறுப்பானே …….                                                               ( திருவாசகம் )

         மணிவாசகப் பெருமான் இவற்றையெல்லாம் தன்மேலேற்றிக் கூறியிருந்தாலும் – இவற்றினூடாகச் சைவசித்தாந்த உண்மைகளை மற்றவர்களும் இலகுவில் விளங்கும் வண்ணம் செய்துள்ளார் என்று எண்ணலாம் அல்லவா?

         உயிர்கள் பதியினைப் பிரிந்து பாசத்துக்கு உட்படும் நிலை செயற்கையானது.  பதியினை அடையும் நிலை இயற்கையானது. இக்காரணத்தினால்தான் யாராவது இறந்துபோனால்” இயற்கை எய்தினார்” என்கிறோம். இந்த உலகவாழ்வு செயற்கையானது. அது வருவதற்குக் காரணம் அவா ஆகும். அவா ஆனது விரைவில் மறையமாட்டது. அதனை முயன்றே போக்கவேண்டும். அப்படிப் போக்கினால் இறைவனிடம்   இருந்து நீங்காத இயற்கைத் தன்மையைப் பெறும். இதனை வள்ளுவர் ” பேராஇயற்கை” என்று குறிப்பிட்டாரோ எனக் கருதக்கூடியதாக இருக்கிறது. இக்கருத்தைத் திருவாசகம் கோவில் மூத்த திருப்பதிகத்தில் காட்டுவதும் நோக்கத்தக்கது.

    இன்றெனக் கருளி யிருள் கடிந்
    துள்ளத்  தெழுகின்ற ஞாயிறே போன்று
    நின்றநின் றன்மை நினைப்பற நினைந்தேன்
    னீயலால் பிறிது ற்றின்மை
    சென்று சென்றணுவாய்த்
    தேய்ந்துதேய்ந்தொன்றாம்
    திருப்பெருந் துறையுறை சிவனே
    யொன்றுநீ யல்லை யன்றியொன் றில்லை
    யாருன்னை யறிகிற்பாரே.

    உயிரனது சிவத்தோடு ஒடுங்கும் பேரருள் நிலை இங்குக் காட்டப்படுகிறது. இதனால் திருவாசகத்தில் இதனை ‘இருதயப் பாடல்” எனப் பெரியவர்கள் கருதுவர். “சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம்” என்னும் அடிகள் மூலமாக உயிரின் பாசநீக்கம் – சிவப்பேறு காட்டப்படுகிறது.

       மலம் என்று சொல்லும் பொழுது எமக்கெல்லாம் அருவருப்பு ஏற்படுகிறதல்லவா?  முகத்தைச் சுளிக்கின்றோமல்லவா? ஆனால் இந்தச் சொல் தத்துவவிளக்கமாகச் சைவ சித்தாந்தத்தில் இடம்பெற்று நிற்கிறது. சகலவிதமான சிக்கல்களுக்கும் “மலமே” காரணமாக இருக்கிறது. இந்த மலமானது ஆணவம், கன்மம், மாயை எனச் சைவசித்தாந்தத்தில் பேசப்படுகிறது. அறியாமையை விளைவிப்பது ஆணவ மலம். இன்ப, துன்பங்களை விளைவிப்பது கன்ம மலம். மயக்கத்தை உண்டுபண்ணுவது மாயாமலம். இந்த மயக்கத்தினால் – ஆன்மாவானது தன்னை உடம்பாகவும், உலகில் காணப்படும் போகங்களை உண்மையானதெனவும் எண்ணிவிடுகின்றது. இதனால் மாயையும் மலங்களில் ஒன்றாகிவிடுகிறது.

       திருவாசகம் மலம் பற்றிக் காட்டி நிற்கிறது.மலத்தைக் காட்டுவதோடு – அதனைப் போக்குதற்கு யார்தான் உள்ளார் என்பதையும் கூறி நிற்பது நோக்கத்தக்கது.

         111 – மூலமாகிய மும்மலமறுக்கும்

    112 – தூயமேனிச் சுடர்விடு சோதி            ( கீர்த்தித் திருவகல் )

    122 – முத்தா போற்றி முதல்வா போற்றி

    128 – மன்னிய திருவருள் மலையே போற்றி

    194_ மருவிய கருணை மலையே போற்றி   ( போற்றித் திருவகல் )

    8- . உழிதரு காலத்து உன் அடியேன்
    செய்த வல்வினையைக்
    கழிதரு காலமும் ஆய் அவை காத்து
    எம்மைக் காப்பவனே.

    16 – நாய் அடியேன்
    பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான்    ( திருச்சதகம் )

    2 – உள்ள மலம் மூன்றும் மய உகு பெரும்
    (பண்டாய நான்மறை  20 20 -வாழ்கின்றாய் வாழாத
    நெஞ்சமே வல்வினைப் பட் டாழ் கின்றா யாழாமற்
    காப்பனை யேத்தாதே   சூழ்கின்றய்க் கேடுனுக்குச் சொல்
    கின்றேன் பல்காலும் வீழ்கின்றாய் நீயவலக் கடலாய
    வெள்ளத்தே     ( திருச்சதகம் )

        மூலமலம் வினைபற்றிச் சொல்லி – இவைபோக இறைவன் துணை எத்துணை அவசியமானது என்பதையும் இப்பாடல் சுட்டிநிற்பது நோக்கத்தக்கதாகும்.

    1 – முத்தி நெறியறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
    பக்திநெறி யறிவித்துப் பழவினைகள் பாறும்
    வண்ணஞ் சித்தமலம் யறுவித்துச் சிவமாக்கி
    யெனையாண்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவா
    ரச்சோவே,

    2 – மும்மை மலம் அறுவித்து முதலாய முதல்வன் தான்
    நம்மையும் ஓர் பொருளாக்கி …    என்று காட்டிநிற்கும் திருவாசகம் சொல்லும் இறைவனின் மலபரிபாக நிலையும் ஆட்கொள்ளும் நிலையும், யாவரும் விளங்கும் வண்ணம் இருக்கின்றது என்பது புலனாகிறதல்லவா ?

        பிறவிக்குக் காரணம் மலங்கள்தான். எனவேதான் திருவாசகம் ” ஆர்த்த பிறவித்துயர்” என்று கூறியதும் நோக்கத்தக்கது. திருவம்மானையில் “எங்கள் பிறப்பு அறுத்திட்டு எம் தரமும் ஆட்கொண்டு ‘என்றும்…” கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை வெள்ளத்தழுத்தி வினைகடந்த வேதியனே” .. என்றும்.. ” கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட” .. என்றும் _ ” இப்பிறவி ஆட்கொண்டு இனிப் பிறவாமே காத்து” என்றும், அப்பிறவியைப் போக்க இறைவனே துணை யென்பதும் காட்டப்பட்ட விதம் யாவரது உள்ளத்தும் பசுமரத்தாணி போல் பதியுமல்லவா ?

        “வேற்றுவிகார விடக்குடம்பின் உட்கிடக்க ஆற்றேன் ” என்கிறார் மணிவாசகர்.   இந்த உடம்பு புண்மயமானது.” மலஞ்சோரும் ஒன்பதும் வாயிற்குடிலை” என்று சொல்லுவதைக் கேட்கும்பொழுது உடம்பின் அருவருப்புத் தெரிகிறதல்லவா? அதுமட்டுமல்ல ” புறந்தோல் போர்த்தங்கு புழுவழுக்கு மூடி” – இதுவும் உடம்புதான். இதனால் இந்த உடம்பினுள் இருக்கும் பிறவி நிலைக்கு “ஆற்றேன் ஆற்றேன்” என்று மணிவாசகர் திருவாசகம் மூலம் வெளிப்படுத்தி நிற்பது தத்துவத்தின் சாரம் அல்லவா?   ஆறுதல் தருபவன் யாரெனின் அது இறைவன் மட்டுமே என்பது திருவாசகத்தின் கருத்துத்தானே! இதனால்தான் “அவன் அருளாலே அவன்தாள் வணங்கி” என்று போதித்து நிற்கிறது.

       சைவசித்தாந்தம் கடவுள் கொள்கையை முக்கியமாகக் கருதுகிறது. ” சிவன் ” என்னும் சொல்லிலிருந்து வந்ததுவே “சைவம்” ஆகும். சித்தாந்தம் எனக் குறிப்பிடாது “சைவசித்தாந்தம்” என்று சிவத்தையும் சம்பந்தப்படுத்தி வழங்குவதிலிருந்து சிவனுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது புலப்படுகிற தல்லவா?

        சைவசித்தாந்தம் “பதி ” என்று குறிப்பிடுவது இறைவனையே. இந்த இறைவனை  இறை, கடவுள், பதி, பரமசிவம், சிவம், ஈசன், பேருயிர், பரமாத்மா என்று பலபெயர்களில் அழைப்பதைக் காண்கிறோமல்லவா ? ஒரு நாமமோ ஓர் உருவமோ இல்லா இறைவனுக்குப் பல நாமங்கள் கொடுத்து வணங்குவதையும் காண்கிறோம் தானே! இதில் “கடவுள்” என்ற சொல் பலவித அர்த்தங்களை உள்ளடக்கியதாகும். உள்ளத்தைக் கடந்தவர், உலகையும் கடந்தவர், உலகுள்ளும் இருப்பவர், உயிர்கள் உள்ளும் வியாபித்து நிற்பவர், இந்தக் கருத்துக்கள் சைவசித்தாந்தமே. இதனை மணிவாசகரும் திருவாசகத்தில் காட்டுகிறார்.

               137 – பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி

    138 – நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

    139 – தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

    140 – வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி

    141 – வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி

     திருப்பள்ளி எழுச்சியால் இறைவனைத் துயில் எழுப்ப மணிவாசகர் முயலுகிறார். எம்மை எல்லாம் அஞ்ஞான இருளில் இருந்து எழுப்புவதற்கு இது உதவுகிறதல்லவா?  திருப்பள்ளி எழுச்சியில் இறைவனைப் பற்றி மணிவாசகர் காட்டுவது சைவசித்தாந்தக் கடவுள் கொள்கையை விளக்கி நிற்பதாக இருக்கிறது.

    பூதங்கள் தோறும் நின்றாயெனின் அல்லால்
    போக்கு இலன் வரவிலன் என நினைப் புலவோர்
    கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
    கேட்டு அறியோம் உனைக்கண்டு அறிவாரைக்
    சீதம் கொள்வயல் திருபெருந்துறை மன்னா
    சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன்வந்து                               ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டு அருள்புரியும்                        எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

    கடவுள் பற்றிச் சைவசித்தாந்தம் என்ன கருதுகின்றது என்பதற்கு மேலும் பலவற்றை திருவாசகம் தந்து நிற்கிறது.

    மின் ஆர் உருவ விகிர்தா போற்றி                                                 நதி சேர் செஞ்சடை நம்பா போற்றி
    ஐயா போற்றி அணுவே போற்றி
    சைவா போற்றி தலைவா போற்றி
    உரை உணர்வு இறந்த ஒருவ போற்றி
    அருமையில் எளிய அழகே போற்றி
    கருமுகில் எளிய அழகே போற்றி
    அழிவிலா ஆனந்த வாரி போற்றி
    அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி
    முழுவதும் இறந்த முதல்வா போற்றி
    சடை இடை கங்கை தரித்தாய் போற்றி                                       தென்நாடு உடைய சிவனே போற்றி                                               எந்நாட்டவர்கும் இறைவா போற்றி                                                 அரியாய் போற்றி அமலா போற்றி                                                   அருவம் உருவமும் ஆனாய் போற்றி                                           துரியமும் இறந்த சுடரே போற்றி                                                     சிந்தனைக்கும் அரிய சிவமே போற்றி                                           புரம்பல எரித்த புராணா போற்றி                                                       பரம் பரம் சோதிப்பரனே போற்றி

    திருச்சதகத்தில் உள்ள கீழ்வரும் பாடல் சைவசித்தாந்தக் கடவுள் கொள்கையை மிகவும் சிறப்பாகக் காட்டி நிற்கிறது.

    வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
    ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
    கோனாகி யான் எனதென்றவரைக் கூத்தாட்டு
    வானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே!

     இறை அனுபவத்தை மணிவாசகர் திருவாசகத்தில் வெளிப்படுத்தியுள்ள பாங்கு அவரது எளிமையினையே காட்டி நிற்கிறது. இரக்கமும், உருக்கமும், இணைந்து இறைஅனுபவத்தை உணரப்பண்ணி இருக்கிறது திருவாசகமென்னும் தேன் என்றால் அது மிகையாகாது. மணிவாசகர் ” அம்மையே அப்பா ஒப்பிலா மணியே” என அழைத்து “பால்நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து பாவியேனுடைய ஊனினை           உருக்கியவன்” என்று விளக்குகின்றார்.” ஒப்புனக்கில்லா ஒருவனே ” – ” பாசவேர் அறுக்கும் பழம் பொருளே, பிறவி வேரறுத்து என் குடிமுழுதாண்ட பிஞ்ஞகா”  என்றும் கூறிநிற்கின்றார். இவையெல்லாம் சைவசித்தாந்த நெறிகளைக் காட்டும் திருவாசகச் செய்திகள் எனலாம்.

       சைவசித்தந்தம் தமிழர் சொத்து. சைவத்தின் சொத்து. திருவாசகம் – தமிழிரதும் சைவத்தினதும் சொத்தாகும். சொத்துக்களைப் பிரிப்பது முறையற்றது. சைவசித்தாந்தச் சொத்து திருவாசகச் சொத்தினுள் இருக்கின்றது என்பதைப் பல நிலைகளில் பார்த்தோம் அல்லவா? சைவசித்தாந்தத்துக்குச் சாத்திர நூல்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவமோ   அதே அளவு தோத்திர நூல்களும் முக்கியமானதாக இருக்கின்றன.

         அந்தவகையில் தோத்திர நூலான “திருவாசகம் என்னும் தேன்” சைவசித்தாந்தக் கருத்துக்களை எந்த அளவுக்குக் கொண்டிருக்கிறது என்பதைக் காணமுடிகிறதல்லவா? எனவே சைவசித்தாந்தம் கூறும் பதி, பசு, பாசம், இறைபற்றி அறியத் “திருவாசகம் என்னும் தேனை” நாடலாம் என்னும் எண்ணம் உங்கள் உள்ளமதில் தோன்றி இருக்கும் என்று எண்ணுகிறேன்.

        மேனமைகொள் சைவநீதி விளங்கத்
    திருவாசகத்தேனைப் பருகுங்கள்! இறையடி
    தொழுமின்கள்! ஈசன் புகழ் பாடுங்கள்!

    விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கண்
    காரணன் உரௌயெனும் ஆரண மொழியோ
    ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல்
    மலர்வாய் பிறந்த வாசகத் தேனோ
    யாதோ சிறந்தது என்குவீர் ஆயின்
    வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி
    நெஞ்சு நெக்குருகி நிற்பவர் காண்கிலேம்
    திருவாசகம் இங்கு ஒருகால் ஓதின்
    கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள்
    தொடுமணற் கேணியின் சுரந்து நீர்பாய
    அன்பர் ஆகுநர் அன்றி
    மன்பதை உலகில் மற்றையர் இலரே.   (சிவப்பிரகாச சுவாமிகள்)

     

     

     

     

    Share
  • தைப்பூசம் காணுங்கள்!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண்,  அவுஸ்திரேலியா

         கலியுகத்தில்  கண்கண்ட தெய்வமாக கந்தப்பெருமான் விளங்குகின்றார். அவரது அருங்கருணையால் அனைவருக்கும்  அல்லல் அகன்று அகமகிழ்வு ஏற்பட வழி பிறக்கிறது. அடியார் ஓரடி நடந்தால் ஆண்டவன் நூறடிவருவான். அடியார் நூறடி நடந்தால் ஆண்டவன் ஆயிரமடி வருவான் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். முருகா என்று ஒருமுறை அழைத்தால் – இம்மைக்கும் மறுமைக்கும் என்றுமை நல்லதையே முருகப்பெருமான் நல்குவான். அந்த அளவுக்கு அளப்பரும் ஆற்றல் கொண்டவன் முருகப்பெருமான்.

        கலியுகத்தில் எவர் வாயிலும் முதலில் வருகின்ற வார்த்தை ” முருகா ” என்பதே யாகும். ஓம்முருகா – ஓம்முருகா – என்று அழைக்கும் பொழுது , உள்ளமெலாம் பூரிக்கின்றது! உடலிலே ஒருவிதப் பரவசம் உருவாகிறது! உணர்வுகள் தூய்மை அடைகின்றன.

       அழகு, ஆற்றல், கருணை நிரம்பிய முருகப்பெருமானுக்குப் பல விசேட தினங்கள் இருந்தாலும் ” தைப்பூசம் ” மிகவும் சிறப்பானதாக அடியவர்களால் முருகனுக்குரிய சிறப்புத் தினமாக கொண்டாடாப் பட்டுவருகிறது.

        தைமாதத்தில் பெளர்ணமியில் வருகின்ற பூச நட்சத்திரத்தன்று முருகனுக்கு உகந்த தினமாக நீண்ட காலமாகத்  தைப்பூசப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது எனலாம்.

        இந்த விழா இன்று நேற்று ஏற்பட்டதல்ல. தேவாரம் பாடிய செல்வக் குழந்தை திருஞான சம்பந்தர் காலம் முதல் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. பழைய இலக்கியங்களிலும் இவ்விழா பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.

        முருக வழிபாடு பழைமை வாய்ந்தது. தைப்பூசத்தோடு முருகப் பெருமான் பல நிலைகளில் இணைக்கப்படுகிறார். முருகனது அவதாரமே மிகவும் அற்புதமானது.

        முருகன் என்னும் நாமம்கூட மிகவும் அர்த்தம் பொதிந்தாகக் கருதப்படுகிறது.

    முருகு – என்றால் இளமை.முருகன்  – என்றால் அழகன் என்றும் இளமையானவன் என்றும் கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. முருகன் என்னும் பெயரில் தமிழின்
    வல்லின , மெல்லின, இடையின எழுத்துக்கள் இடம்பெறுகின்றன. இதனால்   முருகப்பெருமானை தமிழுடன் இணைத்துப் பேசுவார்கள். அதுமட்டுமல்ல முருகன் என்றாலே தமிழே வடிவானவன் என்னும் ஓர் எண்ணமும் மேலோங்கி நின்று முருகப்பெருமான் தமிழ் மயமாகவே விளங்குகிறார் என்று சொல்லிப் பெருமைப்படும்  நிலையும் இருப்பதையும் கண்டுகொள்ளலாம்.

         ஆண்டவனிடம் வரம்பெற்று அந்தவரத்தை  நல்வழியில் பயன்பபடுத்தாது – ஆணவத் தால் அறவழியை மறந்து –  தேவர்களுக்கே துன்பம் செய்யத் துணிந்துவிட்டான் சூரபதுமன் எனும் அரக்கன். ஆணவம் எங்கு மேலோங்குகிறதோ அங்கு ஆண்டவனின் சக்தி தோன்றி அதனை
    அழித்துவிடும். அந்த பெரும் சக்தியாக உருவெடுத்த நிலைதான் முருகன் அவதார மாக அமைகிறது.

       “அருவமும் உருவமாகி
          அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
          பிரமாய் நின்றஜோதி
          பிழம்பதோர் மேனியாகி
          கருணைகூர் முகங்களாறும்
          கரங்கள் பனிரண்டும் கொண்டு
          ஒருதிரு முருகன் வந்தாங்கு
          உதித்தனன் உலகம் உய்ய”

      முருகனது பிறப்பைப் பற்றிக் கந்தபுராணம் இவ்வாறு காட்டுகிறது. அரக்கரை அழித்து ஆணவத்தை அகற்றி அறம்தழைக்கச் செய்ய முருகன் வந்துதித்த தினமே தைப்பூசத்திருநாளாகப் முருகப்பெருமானது ஆலயங்கள் தோறும் கொண்டாடப் பட்டு வருகிறது என ஒரு வரலாற்றுக் கதையும் நிலவுகிறது.

         உமையம்மன் கொடுத்த வேல் என்னும் ஆயுதத்தால் அட்டூழியம் புரிந்த அரக்கனை வதம்செய்து வெற்றிகொண்ட  தினமாகவும் தைப்பூச விழா அமைகிறது என்று ஒரு கதையும் சொல்லப்படுகிறது.

        இவற்றைவிட மேலும் ஒரு கதையும் தைப்பூசத்துடன் தொடர்பு படுத்திச் சொல்லப் படுகிறது. சிவனால் பார்வதிக்கு மந்திரம் ஒன்று உபதேசிக்கப்படுகிறது. அவ்வேளை முருகன் அதை மறைந்திருந்து கேட்கவே – பார்வதி கோபங்கொண்டு சபித்திட முருகன் கோபித்து திருப்பரங்குன்றம் சென்று இருந்திட – சிவனும் பார்வதியும்  சென்று சாபத்தை மீளப்பெற்று முருகனை அரவணைத்த தினமே தைப்பூசம் என்றும் சொல்லப்படுகிறது.

        இக்கதைகளை வைத்துப் பார்க்கின்றபொழுது – தைப்பூசம் என்னும் தினமானது முருகப்பெருமானுடன் நெருங்கிய தொடர்புடைய தினமாகவே இருக்கிறது என்பதே இங்கு முக்கிய அம்சமெனலாம்.

          முருகன் தோற்றத்துடன் பிரகாசம் சம்பந்தப் பட்டிருக்கிறது.சிவனின் நெற்றிக்
    கண்ணிலிருந்து வெளிப்பட்ட அக்கினிப் பொறி சரவணப் பொய்கையில் விழுந்து ஆறுமுகன் அவதரிக்கிறார் என்பதைக் கந்தபுராணம் வாயிலாக அறிகின்றோம். ஒளிப் பிழம்பான முருகன் – ஒளிநிறைந்த பெளர்ணமி தினத்துடன் இணைக்கப்பட்டது மிகவும் பொருத்தமானது என்றே எண்ணமுடிகிறதல்லாவா ?

           தைபிறந்தால் வழிபிறக்கும். தைப்பொங்கல் சூரியனுக்குரியது. சூரியன் வெப்ப மயமானவன். சூரியனுக்குரிய பொங்கலையடுத்து வருகின்ற பெளர்ணமி சிறப்புடை யது. அந்தத்தினத்தில் வருகின்ற பூசமும் சிறப்புடையது. இத்தகைய காரணங்கள் தைப்பூசத்துடன் முருகப் பெருமான் இணைக்கப்பட்டது பொருத்தமாய் இருப்பதாகத் தெரிகிறதல்லவா ?

           தைப்பூசம் மிகவும் முக்கியத்துவம் மிக்கது என்பதற்கு – சம்பந்தப்பெருமானே தனது தேவாரத்தில் குறிப்பிட்டிருப்பதும் நோக்கத்தக்கது.

       “மைப்பூசும் ஒண்கண் மடநல்லூர் மாமயிலை
        தைப்பூசும் நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
        நெய்ப்பூசும் ஒண்புகழ் நேரிழையார் கொண்டாடும்
        தைப்பூசம் காணாது போதியோ பூம்பாவாய் ”    

         சைவத்தமிழ் மக்கள் செறிந்துவாழும் தென் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர்,  மலேசியா, தென்னாபிரிக்கா, பிரான்ஸ், கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, போன்ற நாடுகளிலும் – தமிழரல்லாத மக்கள் வாழுகின்ற கேரளப்பகுதிகளிலும்கூட தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.

         வித்தியாரம்பம், காதுகுத்தல், புதுக்கணக்கு ஆரம்பித்தல், புதிய முயற்சிகள்
    தொடங்குதல் எனப் பல சுபநிகழ்ச்சிகளை ஆரம்பிக்கும் நாளாகவும் தைப்பூசம். முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.

        பலவிதமான காவடிகள் எடுத்துத் தங்கள் குறைகளைப் போக்கும் தினமாக அடியார் கள் தைப்பூசத்தினத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். காவடிகளிலே  பல வகையுண்டு.

    பாற்காவடி, பன்னீர்காவடி, புஷ்பக்காவடி, சந்தனக்காவடி, பறவைக்காவடி , இவற்றோடு – தமது உடலை வருத்தக்கூடிய பலவித நிலைகளையும் இணைத்து  அடியார்கள் முருகனை வழிபடும் தினமாகவும் தைப்பூசம் விளங்குகிறது.

     ” தீபமங்கள ஜோதி நமோநமோ” – ” ஒளிவளர் விளக்கே ”

    ” ஆதியும் அந்தமுமில்லா அரும்பெருஞ்சோதி ” –

          ” சோதியே சுடரே சூழொளி விளக்கே ”  – இவையனைத்தும் இறைவன் ஒளி
    வடிவானவன், பிரகாசமானவன் என்பதையே காட்டுகின்றன எனலாம்.முருகனே ஒளிவடிவானவன்.ஜோதிப்பிழம்பாயிருந்து வந்தவனே முருகன்.

          உலக இயக்கத்துக்கு ஒளியும் வெப்பமும் இன்றியமையாத சக்திகளாகும். உயிர்வாழ்வதற்கும் உற்பத்திக்கும் இவையிரண்டுமே அவசியமானதேயாகும். அந்தச் சக்தியாக முருகப்பெருமானே விளங்குகின்றான் என்பதுதான் எங்கள் சமயநம்பிக்கை ஆகும். அதனையே புராணங்களும் காட்டி நிற்கின்றன. இவையாவும் இணையும் விதத்தில் தைப்பூசம் அமைவதால்  தைப்பூசம் முக்கியச் சமயக் கொண்டாட்டமாகவும் முருகப்பெருமானுடன் தொடர்புபட்டதாகவும் இருந்து வருகிறது. எதையும் இறை உணர்வுடன் செய்கின்றபொழுது அது உன்னதத்தையே தொட்டுநிற்கும் என்பதை மனமிருத்தினால் தைப்பூசம் காண்பது யாவருக்கும்  நல்லுணர்வையே நல்கி நிற்கும்.

     

    Share
  • இந்துமதம் – ஒரு வாழும் நெறி

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

       வையத்துள் வாழ்வாங்கு வாழும் வகையினை யாவருக்கும் காட்டுகின்ற நெறிமுறைகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டதாக இந்துமதம் விளங்குகின்றது. ‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ என எண்ணுபவர்களையும், “இப்படித்தான் வாழவேண்டும்” என அன்புடனும், அரவணைப்புடனும் அணுகி அவர்கள் அனைவரும் வாழ்வதற்குத் தேவையான வற்றைக் காட்டி நிற்பதால் இந்துமதம் – “என்றும் வாழும் நெறியாக” இருந்து வருகிறது எனலாம். நெகிழ்ச்சியும், சகிப்புத்தன்மையும், சுதந்திரமும் கொண்டதாக இந்துமதம் திகழ்கின்றமையாலும் அதனை- ஒரு வாழும் நெறி என்று குறிப்பிடலாம்.              

      உலகில் பல மதங்கள் காணப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம் – தொடங்கியவர்கள், தொடங்கியகாலம் என ஒரு வரையறை காணப்படுகிறது. ஆனால் இந்துமதத்தை யார் தொடக்கினார்கள்? எப்பொழுது தொடங்கப்பட்டது? என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் காணப்படவில்லை. ஆதியும் அந்தமும் அற்ற மதமாக இந்துமதம் விளங்குவதைக் காண்கின்றோம். இதனால்தான் இந்துமதத்தை “சனாதன தர்மம்” என்று குறிப்பிட்டனர். ‘சனாதன’  என்றால் நிலையானது என்று பொருளாகும். அதாவது நித்தியமானது, அழிவில்லாதது என்பதாகும். இதனாலும் இதனை வாழும் நெறி என்று அழைக்கலாம்.                                  

       குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று கூறப்பட்டு வந்ததை நாமனைவரும் கேட்டிருக்கின்றோம்.அதற்கு எடுத்துக்காட்டாக ‘மனமொரு குரங்கு’ என்று ஓர் உதாரணம் காட்டப்படுவது நோக்கத்தக்கது.                                   

       விலங்காக இருந்த மனித சிந்தனை, செயற்பாடு யாவும் சற்று மாறுதலடைந்து சிந்திக்கதக்க மனிதனாக மாற்றம் அடைந்ததற்குக் காரணம் மனிதவாழ்விலேற்பட்ட  படிப்படியான மாற்றங்களேயாகும்.

      மாற்றம்மடைந்த மனிதனிடம் விலங்கின் தன்மைகள் முழுமையாக விட்டு நீங்கவில்லை என்பதைத் தக்க சமயத்தில் காணக்கூடியதாக இருக்கிறது. உணர்ச்சி மேலிட்டு நிற்கின்ற பொழுது மனிதனால் செய்யப்படுகின்ற ஆக்ரோஷமான நடவடிக்கைகள் – இன்னும் மனிதனிடமிருந்து மிருக இயல்புகள் மறையவில்லை என்பதையே காட்டிநிற்கிறது எனலாம்.

      அந்த இயல்புகளை மாற்றி மனிதனை மனிதனாகவும் – அந்த மனிதனைப் புனிதனாகவும் மாற்றும் தன்மைகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டதாக இந்துமதம் திகழ்வதால் அது   “ஒரு வாழும் நெறியாக” விளங்குகிறது எனலாம்.                                

     மதங்களும் – மதங்கள் வகுத்த கடவுள் கோட்பாடுகளும் மனிதனைப் புனிதம் மிக்கவனாக மாற்றுவதற்கே அன்றி – அவனை அடக்கி, ஒடுக்கிவைப்பதற்கு அல்ல. மதங்களும் அவற்றின்  கொள்கைகளும் மனிதன் தன் வாழ்வில் முன்னேற்றம் கொள்ளவும்  அவனுள் தூய்மையை ஏற்படுத்தவுமே அமைந்தன. ஆனால் சில மதங்கள்  மனித சமுதாயத்தை அடக்கி, ஒடுக்கிவைக்க முனைகின்றன. சர்வாதிகாரப் போக்குடையனவாகவும் காணப்படுகின்றன. செய் அல்லது செத்துமடி என்னும் இராணுவத் தோரணை கொண்டனவாகவும் இருகின்றன.  சமயமாக இல்லாமல் சர்வாதிகாரம் கொண்டனவாக மாற முற்படுகின்றன.                  

      இவற்றுக்கு மத்தியில் இந்துமதமோ மாறுபட்டு, வேறுபட்டு நிற்கிறது. பூரண சுதந்திரம் கொண்டதாக இந்துமதம் விளங்குகின்றது. இந்து மதத்தவர்கள் அம்மதத்தை விட்டுச்சென்றாலும் சரி – வேறு மதத்தவர்கள் இந்துமதத்தில் இணைந்தாலும் சரி அதையிட்டு இந்துமதம் கண்டு கொள்ளுவதேயில்லை.

      கடலினுள் பல இடங்களிலிருந்து வரும் ஆறுகள் கலக்கின்றன. அந்த ஆறுகள் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி கடல் ஒரு போதும் கவலைப்படுவதே இல்லை. வருகின்ற ஆறுகளை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளுவதைப் போன்று – பரந்து விரிந்த கடலாக விளங்கும் இந்துமதமும் வருவோரையெல்லாம் மகிழ்வோடும் பரிவோடும் அணைத்துக்கொள்ளும் அன்பும், சகிப்புத்தன்மையும் கொண்டிருப்பதனால்தான் அது என்றும் “ஒரு வாழும் நெறியாக” இருக்கின்றது.                                              

      வாழ்க்கையை எப்படி வாழலாம் என்பதற்கு இந்துமதம் பல படிமுறைகளைக் காட்டுகின்றது.பிரமசாரியாக, கிரகஸ்தனாக, வானப்பிரசஸ்தனாக, சன்னியாசியாக வாழலாம் என்று காட்டிநிற்கிறது. நடைமுறைக்கு இது ஏற்கக் கூடியது எனப் பெரியவர்கள் இன்று கருதுகின்றனர். இல்லறவாழ்வில் ஈடுபடும் முன்பு ஒருவன் மாணவனாக இருந்து கல்வி கற்கவேண்டும். மாணவப் பருவம் பிரமசாரியத்துக்கு உரியது என்பதை எவரும் மறுக்கமுடியாதல்லவா?

      கற்றுத் தேர்ந்தபின் நல்ல மனைவியாகத் தேர்ந்தெடுத்து வாழுதல் கிரகஸ்தம் ஆகிறது. கற்று முடித்தபின் இல்லறத்தில் ஈடுபடும் பொழுது வாழ்வு பயனுடையதாக அமையும்  அல்லவா? பொருள் ஈட்டவும், தானதர்மம் செய்யவும் , மக்கட் செல்வங்கள், உற்றார் உறவினருடன் இசைந்து வாழவும் இல்லறமாகிய நல்லறம் பொருத்தமானதாக இருக்குமல்லவா?

       இல்லற இன்பத்தில் திளைத்துப் பின் வாழ்வின் நெளிவு சுளிவுகளை நன்றாக உய்த்து  உணர்ந்தபின் மனம் துறவையே நாடுவது இயல்பான ஒன்றே. இதுவே உண்மையான முதிர்ச்சியும் கூட. எனவே இல்லறமாம் நல்லறத்தின் நிறைவில் ஏற்படுவது துறவறம்  ஆகிறது.

       மனித வாழ்வை மிகவும் நுட்பமாக மதிப்பீடு செய்து – அதற்கான பருவங்களையும்  அடையாளம் கண்டு – அதன்படி வாழும் நிலைகளில் என்னென்ன கடமைகளை எல்லாம் ஆற்றவேண்டுமென்பதையும் வகுத்து வைத்து வாழ்க்கையை வாழ விழைபவர்களுக்குக் காட்டிநிற்கிறது இந்துமதம். இதனால்தான் இது “வாழும் நெறி ” எனப் போற்றப்படுகின்றது.                                                                        

        இல்லற வாழ்வை இந்துமதம் பெரிதும் போற்றுகின்றது. இல்லற வாழ்வில் பெண்ணின் இடம் மிகவும் உன்னதமானதாகும். பெண்ணைப் போற்றாத எந்த ஒரு அமைப்பும் உயிரோட்டம் உள்ளதாக இருக்க மாட்டாது. இதனை நன்குணர்ந்த காரணத்தால் – பெண்மைக்கு  உயரிய இடத்தை இந்துமதம் வழங்கியிருக்கிறது எனலாம்.                                 

      பெண்மையென்றால் – மென்மையும், பொறுமையும், அன்பும், அரவணைப்பும், பாசமும், நேசமும் மிக்கதென்பதே கருத்தாகும். இவையனைத்தையும் கொண்டதாக இறைத்தன்மையும் இருக்கின்றது. இதனால்தான் பெற்ற தாயைத் தெய்வமாகப் போற்றும் நிலையை இந்து மதம் தன்னுள் கொண்டிருக்கின்றது.                                                                 

       பெண்மையைத் தெய்வமாக்கிய பெருமையை இந்துமதம் எடுத்துக் கொள்கிறது. கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் எந்தமொழி,எந்தநாடு, எந்தவினம் என்று இல்லாமல் யாவருக்கும் தேவையானதே. அது மட்டுமல்ல இவை மூன்றும் இல்லாவிட்டால்  முழுமை என்பதற்கே அர்த்தம் இல்லாது போய்விடும். அடிப்படையான அத்தியாவசியமான இம்மூன்றையும் தருகின்ற கடவுள் சக்தியாக சரஸ்வதி, லக்‌ஷமி, துர்க்கை எனப் பெண்மையையே  உருவகப்படுத்திக் காட்டிய இந்துமதம் உண்மையிலேயே சிறந்த ஒரு வாழும் நெறிதான் என்பதை மறுக்கமுடியாது.

       கல்வி,செல்வம், வீரம் இவற்றை நினைத்தவுடன் பெற்றுவிட முடியாது. இவற்றைப் பெறுவதற்கு மிகுந்த பொறுமை வேண்டும். பல சோதனைகளை வேதனைகளைத் தாங்க வேண்டும். சில தியாகங்களைச் செய்ய வேண்டும். தன்னம்பிக்கை நிறையவே வேண்டும்.  இவையாவும் பெண்களிடம் நிறைந்து காணப்படுவதால்தான் பெண்மை  தெய்வீகம் ஆக்கப்பட்டது.

       இந்துமதம் இல்லறத்தைப் போற்றுகின்ற போதும் – துறவறத்தையும் ஒதுக்கிவிடவில்லை. இல்லற இன்பம் நிறைவுபெறும் நிலைவந்ததும்  துறவறம் என்னும் ஒரு நிலையும் இருக்கிறது என்று இந்துமதம் காட்டுகிறது. இல்லற வாழ்வில் ஈடுபட விருப்பம்  இல்லாவிட்டால் துறவறத்தை தேர்ந்தெடுத்து அதன்படியும் நடக்கலாம் என்றும் வழிகாட்டி நிற்கிறது. துறவறம்தான் கட்டாயம் என்றோ – இல்லறந்தான் கட்டாயமென்றோ வற்புறுத்த வில்லை. இரண்டையும் காட்டி விரும்பியதை வாழ்க்கை ஆக்கிக்கொள் என்னும் சுதந்திரத்தை இந்துமதம் வழங்கி நிற்கிறது.

       உயிர்வாழ்வதற்கு உணவு இன்றியமையாதது.’உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்பது இதனை வலியுறுத்தி நிற்கின்றது. இந்துமதம் பலவிதமான தர்மங்களைக் காட்டி நிற்கிறது. அவற்றில் அன்றும் இன்றும் என்றுமே தலையான தர்மம் அன்னம் இடுதலேயாகும். எந்த தானத்தைச் செய்தாலும் அதனைப் பெற்றுக் கொண்டவர்கள் திருப்தியை வெளிப்படுத்துவதில்லை. ஆனால் அன்னத்தைப் பெற்றுத் தனது பசியினைப் போக்கியவர்கள் மட்டுமே – உலகில் மனமாரத் திருப்தி அடைந்து மகிழ்ச்சியுடன் போதும் என்று வாய்விட்டுச்சொல்லிநிற்பார்கள். இதனால்தான் அன்னதானத்தைச் செய்வது மேலானது என இந்து மதம் சொல்லுகிறது. இது ஒரு சிறந்த வாழும் நெறி அல்லவா?

       குடும்ப உறவு வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது தாய், தந்தை, மகன், மகள், மாமா, மாமி, மைத்துனன் எனக் குடும்ப உறுப்பினர்கள் வாழ்க்கையில் பெரும்பங்கு வகிக்கின்றனர். இப்படியான உறவு நிலைகளை இந்துமதம் மிகவும் நுட்பமாகக் கடவுள் கொள்கையுடன்  இணைத்துவிட்டது.

       கடவுளை வழிபடுகின்ற பக்தன் கடவுளைத் தாயாக, தந்தையாக, நண்பனாக, காதலனாக, காதலியாக, குழந்தையாக, நினைந்து வழிபடுகின்றபொழுது அவனது மனம் இறைஅருளில் ஒன்றிவிடுகிறது.

       சிவன் தந்தையாகவும், பார்வதி தாயாகவும், விநாயகரும் முருகனும் அவர்களது பிள்ளைகளாகவும், பிரம்மா, விஷ்ணு , இந்திரன் உறவினராயும் – தேவர்கள் ஏனைய உறவுகளாவும் நண்பர்களாகவும் இந்துமதம் கடவுளையே குடும்பத்துக்குள் கொண்டுவந்துவிட்டது. இந்தச் செயற்பாடானது பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் விநோதமானதாயும் இருக்கும். ஆனால் இதனை வேடிக்கை என்று எடுத்துக் கொள்ளல் கூடாது.

       ஆண்டவன் என்பவன் யாராலும் அணுகமுடியாதவன் அல்ல. அன்பும், பாசமும், அரவணைப்பும் கொண்ட குடும்ப உறுப்பினன் போன்றவனே ஆண்டவன். அவனை அடைய அவன் அருளைப்பெற அன்பும், பொறுமையும், தயாளமும், தர்மமும், சகிப்புத்தன்மையும், பாசமும், உள்ளத்தில் ஏற்படுமானால் நிச்சயமாக ஆண்டவனைக் காணமுடியும் என்னும் உயர்ந்த தத்துவத்தை யாவருக்கும் விளங்கப்பண்ணுவதற்கே இந்துமதம் குடும்ப உறவை  இறைவனுடன் இணைத்தது என்பது மிகவும் கவனிக்கப் படவேண்டிய விஷயமாகும்.

       நாளாந்தம் நாம் கைக்கொள்ளும் நடைமுறைகள் அத்தனையிலும் இந்துமதம் தன்னை உள்நுழைத்துக் கொண்டுள்ளது. உண்பது தொடக்கம் உறங்குவதுவரை இந்துமத நெறிகள் பரவிக் கிடப்பதைக் காணலாம்.

      இந்து மதத்தில் மிகவும் முக்கியமானது ஆசாரமாகும்.ஆசாரம் என்றால் என்ன? ஆசாரம் என்றால் சுகாதாரம் என்பதுதான் கருத்து. உடலையும் சுத்தமாக வைத்திரு; உள்ளத்தையும் சுத்தமாக வைத்திரு இதுதான் இந்துமதத்தின் அடிப்படை வாழும்நெறி எனலாம். இதற்குப் பலவிதிமுறைகளை இந்துமதம் வைத்திருக்கிறது. இவற்றையெல்லாம் எவரும் உலகத்தில் கடைப்பிடிக்கலாம். அப்படிக் கடைப்பிடிப்பதற்கு இந்துமதம் எந்தத் தடையும் போடவில்லை. கடைப்பிடிப்பவர்கள் யாவரும் இந்துநெறிப்படி வாழ்பவர்கள் என்றுதான் எடுத்துக்கொள்ளும் பரந்த நோக்கே இந்துமதம் இன்னும் வாழும் நெறியாக இருப்பதற்குக் காரணம் எனலாம்.

       அவசர கதியில் இன்று உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. மக்களும் அதன் வழியிலேயே ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களிடம் அமைதி இல்லை. ஆனந்தம் ஓடிவிடுகிறது. எதற்கும் பதட்டமும் படபடப்பும் ராஜச வாழ்க்கைதான் அவர்களிடம் குடிபுகுந்து விட்டது. இதற்குக் காரணம்  நாகரிகம் என்னும் உருவத்தில் உள்புகுந்த தீராத தலைவலியே எனலாம்.

       வாழ்கைமுறை மாறிவிட்டது. மனிதர்களின் சமூக அமைப்பே மாறிவிட்டது. இந்த நிலை நீடிக்கக் கூடாது எனப் பல பெரியவர்கள் கூக்குரல் எழுப்புகிறார் கள். ஆனால் அவையும் எடுபடுவதாக இல்லை.

        நவீன நாகரிகத்தினை உயர்வெனக் கருதியவர்கள் மத்தியிலேயே ஒரு விழிப்புணர்ச்சி ஆரம்பித்திருக்கிறது. அதாவது – இந்துமத நெறிகளின்படி வாழ்வதுதான் சிறந்தது என்னும் சிந்தனையாகும். மொழிகடந்து நாடுகடந்து இனம்கடந்து இந்த எழுச்சி வந்திருக்கிறது.அதற்கு அடிப்படை இந்து மதத்தின் சாத்வீகமாகும்.

      இந்துமதம் என்பது உலகினுக்கு நல்ல வாழும் நெறியைக் காட்டி நிற்கிறது. எவரையும் நோகடிக்காமல் அன்பினால் கட்டியணைக்கும் தத்துவத்தை இந்து மத நெறி வழங்கி நிற்கிறது. மதம் பிடிக்கும் மனித இனத்தை மீட்கவேண்டும் என்பதுதான் இந்துமதத்தின் முக்கிய குறிக்கோளாகும். எந்த மதத்தாரையும் அரவணைக்கும் உயரிய பாங்கினை இந்துமதம் தன்னுள்ளே கொண்டிருக்கி றது. நல்லவற்றை வாழ்க்கை ஆக்கிக் கொள்ளுங்கள் என்று சாத்வீகமாக அனைவருக்கும் வழங்கும் நெறியினை இந்துமதம் நெறியாக்கி வைத்திருப் பதனால் அது ஒரு சிறந்த வாழும் நெறியாக வாழ்ந்துகொண்டிருக்கிறது.

    Share