Tag: தமிழ்த்தேனீ

  • கன்யா குமரி


     தமிழ்த்தேனீ

    விடிகாலை நேரம்

    ஆதவனே வரத் தயங்கும்

    காரணம் என்னவென்று காணுதற்கு

    வாசற்கதவு திறந்தேன்

     

    எதிர் வீட்டு குடிசையின் வாசலில்

    ஏற்கெனெவே உதயமாகி மாக்கோலம்

    போடுகின்ற கன்னிப் பெண் உருவத்தில்

    வந்தானோ சூரியன்

     

     வண்ணக் கோலம் போடும் கன்னியவள்

    மனம் மயக்க மதி வதனம் காண வேண்டி

    பார்வையை கூர்மையாக்கினேன்

     

    நிழற் படமாய் நின்று அவள்

    நெற்றியில் சுருண்டு விழுந்த

    கருமேகக் கீற்றை புறங்கையால்

    ஒதிக்கிவிட்டு    நிமிர்ந்தாள்

     

    கன்னங் கரேலென்ற காரிருளின்

    சாயமதை தோய்த்தெடுத்து

    கன்னியாய் உருக் கொண்டு

    பூவுலக காரிருளை போக்குதற்கு

     

    தானே கருப்பான விக்ரகமாய்

    கருணை அன்னை ஆகி நின்று

    அருள் புரியும் விந்தையினை

    நான் காண நிமிர்ந்தாள் அவள்

     

    காதிலே தாடங்கமோ ,கால்களிலே

    கொலுசோ ஏதுமில்லை,ஆனாலும்

    சர்வாங்க பூஷிதையாய் கண நேரம்

    கண்களிரண்டில் கருணைக் காந்தமோடு

     

    காட்சி  தந்தாள்  கயல் விழிகளை 

    ஒரு சுழற்று சுழற்றி விட்டு,

    திரும்பினாள் அவள் முகம் பார்த்தேன்,

    அதில் பார்த்தேன்  அன்னை

     

    அகிலாண்டேஸ்வரியை கன்னியாகுமரியை

    கருவறையின் மூல விக்ரஹ கணநேரத்

    தோற்றம் போல் இதமான புன்சிரிப்பு

    பாதாரவிந்தமது மெல்லடி நடக்க

     

    மனம் முகிழ்த்தது தாமரையாய்

    கடையவனை கரை சேர்க்க

    வந்திட்ட தெய்வம் போல்

    காட்சி தந்த கருணைதெய்வம் !!!!!

     

    பாதாதி கேசம் வரையில் படர்ந்து

    படுமாற் போல் பூமியதில்

    நெடுண்ஞாண்கிடையாக நீண்டு வீழ்ந்து

    கும்பிட்டு மீண்டு மெழுந்து கை யெடுத்து

     

    அவள் இருந்த திசை நோக்கி கும்பிட்டேன்

    அட சூரிய நமஸ்காரமா நல்ல வழக்கம்

    போகிற போக்கில் சொல்லிவிட்டுச்

    சென்றான்  ஒரு பால்காரன்!

      படத்துக்கு நன்றி

    http://www.hindudevotionalblog.com/2011/06/kanyakumari-devi-temple-in-tamilnadu.html


    Share
  • நவராத்திரி மகிமை

     

    தமிழ்த்தேனீ

    மகாராஜா சுரதா,  ராஜ குரு சுமதாஅவர்கள் கூறிய  ஆலோசனையின்படி  “பஞ்சபூதங்களில்  ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை  பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்…’ என்று, தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளபடி,  மகாராஜா சுரதா தூய்மையான ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு, காளி ரூபத்தைச் செய்து, அதை ஆவாஹனம் செய்து, உண்ணாவிரதம் இருந்து, காளி தேவியை வேண்டினார். அந்த வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து,  அவர்களின் இன்னல்களிலிருந்து விடுதலை பெற்றார். எனவே, அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து வழிபாடு செய்வது, நவராத்திரியில், குறிப்பாக சரஸ்வதி பூஜை வழிபாட்டின் முக்கிய அங்கம் பெறுகிறது. மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஒன்பது படிகள் அமைப்பதுபொதுவான  மரபு.

    புரட்டாசி மாதம் 29ம் தேதி, அக்டோபர் 15ம் தேதி திங்கட்கிழமை சித்தயோகம், அமாவாசை அன்று நவராத்திரி விழா தொடங்குகிறது .இந்த நவராத்திரி விழாவை சிறப்பாகக் கொண்டாட அவரவர்கள் சக்திக்கும், இருக்கும் இடத்துக்கும் ஏற்ப  மூன்று படிகள். ஐந்து படிகள், ஏழு படிகள், ,ஒன்பது படிகள் என்று அமைத்து அந்தப் படிகளில் பலவிதமான தெய்வங்களின் உருவ பொம்மைகளை, மற்றும் நமக்கு மனதுக்கு உகந்த நடைமுறை வாழ்க்கையில் இருக்கும் மக்களில் நம்மைக் கவர்ந்த 12 ஆழ்வார்களின் பொம்மைகள், 63 நாயன்மார்களின் பொம்மைகள். மஹாத்மாகாந்தி, சுபாஷ் சந்திரபோஸ், வாஞ்சிநாதன், கப்பலோட்டிய தமிழன் வ.உ .சிதம்பரம்பிள்ளை, ஜவஹர்லால்நேரு, இந்திராகாந்தி, காமராசர், பாரதியார் ,பாரதிதாசன் ,வியாபாரச் செட்டியார் பொம்மை, குறவன் குறத்தி பொம்மைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, போன்ற நம் தேசத்தில் நினைவு கூரவேண்டியவர்களின், தலைவர்களின் உருவ பொம்மைகள்  போன்றவற்றை வைக்கிறோம், அதையும் தவிர நாம் அன்றாடம் பார்க்கும் விலங்குகள் பசு ,ஏரில் பூட்டிய காளைகள், நிலத்தை உழும்  உழவன்,  போன்றவர்களின் பொம்மைகள் எல்லாவற்றையும் அவைகளை வைக்கவேண்டிய  தகுந்த இடங்களில் வைத்து மகிழ்வது நம் வழக்கம்.

    அதே போல் பக்கத்திலே  மண் கொட்டி பூங்கா அமைத்து, அதன் பக்கத்திலே கோயில் அமைத்து, அந்தக் கோயிலுக்கு எதிரே நம் வீட்டில் உள்ள தாம்பாளத்தில் படிக்கட்டுகள் அமைத்து நடுவிலே நீர் ஊற்றி குளம்போல் தோற்றம் ஏற்படுத்தி அதில் நீர்வாழ் மீன்கள், தவளை கொக்கு போன்ற பொம்மைகளை  வைத்து, அலங்கார விளக்குகள் அமைத்து அழகுக்கு அழகு சேர்த்து கலைநயத்துடன் நவராத்திரியைக் கொண்டாடுகிறோம்.

    இப்படி எல்லாப் பொம்மைகளையும் வைத்துவிட்டு, நம் சுற்றத்தார், அண்டை அயலார் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் இந்த விழாவிலே கலந்துகொள்ள அவர்கள் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு  தாம்பாளத்தில் வெற்றிலைபாக்கு,மஞ்சள், குங்குமம், பலவிதமான பழங்கள் போன்றவைகளை வைத்து அழைத்துவிட்டு, தினமும் அன்றிலிருந்து தொடங்கி விசேஷமான பூஜைகள் செய்து  பலவிதமான  உகந்த தின்பண்டங்களை , சமைத்து  நிவேதனம் செய்து   அவைகளை வீட்டிற்கு வரும் அனைவருக்கும் பகிர்ந்தளித்து  மகிழும் பண்டிகை நவராத்திரி ஆகும். இந்த ஒன்பது நாட்களிலும் வீட்டிற்கு வரும் குழந்தைகள், மற்றும் பெரியவர்கள் அனைவரும் மகிழும்படி வரவேற்று , நம் இதிகாச, புராணங்களில் இருந்து நம் மனதைக் கவர்ந்த  ஶ்ரீராமன், ஶ்ரீ கிருஷ்ணன், ராதை, பக்த மீரா போன்ற பலவேடங்களை குழந்தைகளுக்கு  அணிவித்து எல்லோரும் மகிழும்படியாக ஆடிப் பாடி மகிழ்ந்து  ஒன்பதாம் நாள் நவமி அன்று  சரஸ்வதிக்கு பூஜை செய்து பத்தாம்   நாளாகிய தசமிஅன்று ஆயுத பூஜை என்றும்  விஜய தசமி என்றும் கொண்டாடுகிறோம்.  அன்று நாம் அன்றாடம் உபயோகிக்கும் நம் வாகனங்கள், ஆயுதங்கள், எல்லாவற்றிர்க்கும் முறையே குங்குமம் இட்டு பூஜைகள் செய்து கொண்டாடி  நிறைவு செய்வோம் நவராத்திரி விழாவை.

    ஆட்சி, அதிகாரம், நாடு உள்பட சகலமானதையும் இழந்த பாண்டவர்கள் 12 ஆண்டு வனவாசம், ஓராண்டு அக்ஞாத வாசம் முடிந்து, விஜயதசமியன்றே மீண்டும் அனைத்து ஆயுதங்களையும் தாங்கள் இழந்த பலம் ஆகியவற்றையும் பெற்றனர் .இந்த விஜயதசமி நன்நாளில்தான் துர்க்கா வெற்றி பெற்றாள் ,ஆகவே இந்த நாளில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்தால் சகலவிதமான வித்தைகளிலும் வெற்றி பெறுவார்கள் என்பது ஐதீகம்.

     

    வீரத்தின் தெய்வமான சிவப்பிரியையான, இச்சா சக்தியான  துர்க்கை  அல்லது காளி என்னும் சக்தியானவள் துர்க்கை. இந்த துர்க்காதேவி  மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டு  அவனை வதம் செய்தாள் அதாவது தீமை என்னும் அரக்கனை அழித்து  மக்களுக்கு  நன்மையாகிய வெற்றியை அருளினாள். அதனால் மகிஷசுரமர்த்தனி என்று பெயர்கொண்டாள்.    ” விஜய ” என்றால்   வெற்றி   . தசம் என்றால் பத்து வெற்றியை பெற்ற நாள்  பத்தாம் நாள். இப்படி மகிஷனை துர்க்கை வதம் செய்த பத்தாம் நாளே விஜயதசமி என்று அழைக்கப்பட்டது.

    இந்த துர்க்கா தேவி மகி‌ஷனுடன் போர் புரியத் தொடங்கிய நாளே நவராத்திரி விழாவின்  தொடக்க நாள்.  நவராத்திரி விரதம் புரட்டாசி  மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை  குறித்து நோற்கப்படும்  நோன்பாகும். இது தக்ஷிணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்திராயண காலம் தேவர்களுக்கு பகல் காலம் ஆகும்.  

    நவராத்திரி பூஜை புரட்டாசி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்ய வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது ஆகவே புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் கைக்கொள்ளப்படும் நோன்பு  சாரதா நவராத்திரி நோன்பாகும்.

    உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தக்ஷினாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாசி மாதத்தில் நோற்கப்படும்  சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக் கொள்ளுகின்றோம்.

    பிரளயம் என்னும் அழிவுக்  காலத்தின் முடிவில் இறைவன் மீண்டும் உலகத்தை உண்டாக்க விரும்புகின்றான் ஆகவே இறைவன் விரும்பத் தொடங்கும் அந்தக் கணமே   இச்சை என்ற சக்தி தோன்றுகின்றது. அந்த இச்சை சக்தியினால்  எவ்வாறு உலகை உண்டாக்குவது என்று இறைவன் அறிகின்றான். எவ்வாறு என்று யோசிக்கும் போதே ஞான சக்தி தோன்றுகிறது . அதன்பின் தன்னுடைய கிரியை என்னும் சக்தியினால் கிரியா சக்தியைத் தோற்றுவித்து  உலகைப் படைக்கின்றான்.
     
    நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.
     
    நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்
     
    இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான்
     
    சாந்தி துர்க்கை ,சபரிதுர்க்கை, ஶ்ரீ ஜ்வாலாதுர்க்கை, ஶ்ரீ ஜெயதுர்க்கை,ஶ்ரீ ஆசூரி துர்க்கை, ஶ்ரீ மூலதுர்க்கை, ஶ்ரீ வன துர்க்கை, ஶ்ரீ சூலினி துர்க்கை, ஶ்ரீஜாதவேதா துர்க்கை. ஆகியோர் நவதுர்க்கைகள்.

    முதல் நாளில் 2 வயதுக் குழந்தை – குமாரி அதாவது ஷைலபுத்ரி யாகவும்,
    இரண்டாம் நாள் 3 வயதுக் குழந்தை – திரிமூர்த்தி அதாவது பிரம்மசாரிணி யாகவும்,
    மூன்றாம் நாள் – 4 வயதுக் குழந்தை – கல்யாணி  அதாவது சந்தரகாந்தா ஆகவும்,
    நான்காம் நாள் – 5வயதுக் குழந்தை – ரோகிணி  அதாவது  கூஷ்மாண்டா ஆகவும்,
    ஐந்தாம் நாள் – 6 வயதுக் குழந்தை – காளிகா  அதாவது  ஸ்கந்த மாதா ஆகவும்,
    ஆறாம் நாள் – 7 வயதுக் குழந்தை – சண்டிகா  அதாவது காத்யாயனி  ஆகவும்,
    ஏழாம் நாள் – 8 வயதுக் குழந்தை – சாம்பவி  அதாவது  காலராத்ரி ஆகவும்,
    எட்டாம் நாள் – 9 வயதுக் குழந்தை – துர்க்கா   அதாவது மஹா கௌரி ஆகவும்,
    ஒன்பதாம் நாள் – 10 வயதுக் குழந்தை – சுபத்ரா  அதாவது  சித்திதாத்ரி ஆகவும்
    கொண்டாடுகிறோம்.
     
    அஷ்ட சரஸ்வதி: வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி ஒன்பது சக்திகள்: முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் சிறப்பாக உள்ளன.
     
    துர்க்கை: 1. மகேசுவரி, 2. கெளமாரி , 3. வராகி. இலட்சுமி: 4. மகாலக்ஷ்மி 5. வைஷ்ணவி 6. இந்திராணி. 7. சரஸ்வதி
    8. நாரசிம்மி , 9. சாமுண்டி.
     
    நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும். நவராத்திரியில் கன்னி வழிபாடு என்பது ஒரு வகை. நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாக பாவனை செய்து வழிபடுவது ஒரு முறை.

     
    ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும்.
     1வது படி – ஓரறிவு உயிரினம் (மரம், செடி, கொடி, மர பொம்மைகள்)
     2வது படி – இரண்டறிவு உயிரினம் (நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள்)
     3வது படி – மூன்றறிவு உயிரினம் (எறும்பு, கரையான் பொம்மைகள்)
     4வது படி – நான்கறிவு உயிரினம் (நண்டு, வண்டு, பறவை பொம்மைகள்)
     5வது படி – ஐந்தறிவு உயிரினம் (ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள்)
     6வது படி – ஆறறிவு உயிரினம் (மனித பொம்மைகள்)
     7வது படி – மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள்.
     8வது படி – தேவர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத தெய்வங்கள்.
     9வது படி – பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், விநாயகக் கடவுளர்.
     இம்முறைப்படி கொலு வைத்து, முப்பெரும் தேவியரை வணங்கி வரும் போது கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் நம்மிடம் செழித்தோங்கும்.

    நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது.  கன்னி ராசிக்கு அதிபதியானவன் புதன். வித்யாகாரகன் எனப்படுபவன். கல்வி, புத்தி, தொழில் ஸ்தானம் சரியாக அமைய புதனின் பார்வை முக்கியமானது என்பார். இந்தக் காலத்தில் நவராத்திரி கொண்டாடுவது சாலச்சிறந்தது என்று கருதி வந்துள்ளனர்.
     
    நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பதுதான் அர்த்தம். உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம். பராசக்தியே சர்வ வல்லமை படைத்தவர் ஆவார். அந்த அம்பிகையின் மகிமைகளை ‘தேவி பாகவதம்’ விரிவாகப் பேசுகிறது.  நவம் என்றால் ஒன்பது என்று ஒரு பொருள் உண்டு. நவம் என்றால் புதிய, புதுமை, என்றொரு பொருளும் உண்டு! சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கும் புரட்டாசி மாதம் வளர் பிறை பிரதமை முதல் 9 நாள் நவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.

    இதில் முதல் 3 நாள் துர்க்கை அன்னையையும், அடுத்த மூன்று நாள் திருமகளையும், அதற்கு அடுத்த மூன்று நாள் கலைமகளையும் வழிபடுவார்கள்.  துர்க்கை என்ற பெயருக்கு கோட்டை என்ற பொருளும், துன்பத்தை அழிப்பவள் என்ற பொருளும் உண்டு. இந்தப் பெயரைச் சொன்னாலே மனிதன் தன்னைத் துன்பங்களை அணுக விடாமல் காத்துக்கொள்ள முடியும். அத்துடன் தீய சக்திகள் மற்றும் தீய எண்ணங்களையும் அழித்தால்தான் உலகில் நல்லவை நிலைபெறும். அதனால்தான் மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் பல தீயவற்றை அழித்து நல்லவற்றை நிலை நிறுத்தி வெற்றி பெற உதவும் அன்னையை முதல் மூன்று நாள் வழிபடுகிறோம்.

    அடுத்த மூன்று நாள் செல்வ வளத்தை அளிக்கும் திருமகளை வழிபடுகிறோம். மனிதன் வாழ்வில் சிறப்பான நிலையை அடைய உதவுவது செல்வம்.  அடுத்த மூன்று நாள் கல்விச் செல்வத்தை அளிக்கும் கலைமகளுக்கு உரியவை. காலத்தால் அழியாத செல்வம் கல்வி. இந்தச் செல்வம் வேண்டி கலைமகளைத் துதிக்கிறோம். நவம் என்றால் புதிய என்று பார்த்தோம். துன்பங்கள் தீர்ந்து, பொருள் வளம், கல்வி வளம் இரண்டும் பெற்றால் மனிதனுக்கு வாழ்க்கை தினம் புதியதுதான்!

    அதுமட்டுமல்ல; இந்த மூன்றும் சேர்ந்தால் வெற்றிதான் என்பதைக் குறிக்கும் விதமாக பத்தாம் நாள் விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது. துன்பத்தை அழித்து நன்மையை நிலைநாட்டி, பொருள் செல்வம் மற்றும் அறிவுச் செல்வம் பெற உதவும் மூவரையும் நவராத்திரியில் முறைப்படி துதிப்போம். வளம் பெறுவோம்! வெற்றி பெறுவோம்!
     
    ஒரு மனிதனிற்கு உடல்வலிமை, பராக்கிரம், மனோதிடம், புத்திபலம், தீர்க்காயுள், ஞானம, தேவைகளிற்கு பணம் போன்ற அனைத்து அம்சமும் நிறைந்திருந்தால் தான் அவன் சிறந்த வெற்றியாளனாக திகழ முடியும். அதாவது வீரம், செல்வம், கல்வி ஆகியவை அனைத்தும் நிறைந்திருக்க வேண்டும். இவற்றை பெறுவதற்காகவே நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வாழ்க்கையில் நமக்கு செல்வம் ,வீரம் ,ஞானம் மூன்றும் இருந்தால்தான் நாம் வெற்றி பெற முடியும்.  இதற்காக மகாலட்சுமி தேவியை,  துர்க்கா தேவியை வழிபடுகிறோம்.   சரசுவதிதேவியை வணங்குகிறோம்.

    ——————————————————————————————————————————————————————————————
     நவராத்திரி விழா காணும் ஆலயங்கள் :-

    ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோயில், திருவானைக்காவல் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனாய ஐம்புகேஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில்,நாகை நீலாயதாட்சி கோயில், கன்யாகுமரி ஸ்ரீ பகவதி அம்மன் கோயில், புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயில்,திருவண்ணாமலை ஸ்ரீ உண்ணாமுலை உடனாய அண்ணாமலையார் கோயில், நெல்லை ஸ்ரீ காந்திமதி அம்மன் கோயில், திருவேற்காடு ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோயில்,மாங்காடு அம்மன் ஆலயம்,சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ கற்பகாம்பாள் கோயில்,காளிகாம்பாள் கோயில்,திருவையாறு அறம் வளர்த்த நாயகி கோயில்,திருமெய்யம் ஸ்ரீ வேணுவனேஸ்வரி அம்பாள் கோயில்,சமயபுரம், பண்ணாரி,பொள்ளாச்சி,திண்டுக்கல்,தஞ்சை,திருச்சி மாரியம்மன் கோயில்கள்,படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் கோயில்,மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில்,மேல் மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயில்,காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் கோயில், திருக்கடையூர் அபிராமி கோயில்  ஆகிய  ஆலயங்களில் நவராத்திரி விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடுவார்கள்

    அம்பத்தூரை அடுத்த வட திருமுல்லை வாயிலில் வைஷ்ணவி ஆலயத்தில் ஒன்பது நாளும் ஒவ்வொரு அலங்காரம் செய்து  வைஷ்ணவியை வழிபடுவார்கள். மிகவும் விசேஷமாக  இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படும்

    படத்திற்கு நன்றி :

    http://www.desicomments.com/desi/kali-puja/

     

    Share
  • கனவுச் சாவி

    தமிழ்த்தேனீ

    வழக்கமாய் வருவது போலவே அன்றைக்கும் கனவு வந்தது லக்ஷ்மிக்கு. வேலைகளை முடித்துவிட்டு அக்கடா என்று சற்று நேரம் படுக்கலாம் என்று படுத்தால், உடனே உறக்கம் கண்களை சுழற்றுகிறது.

    சரி தூங்குவோம் என்று முடிவெடுக்கும் முன்னரே தூங்கிப் போவது அவள் வழக்கம்.  அன்றும் அப்படியே வேலைகளை முடித்துவிட்டு  மதியம் கண்ணயர்ந்தாள் லக்ஷ்மி.

    எப்போதும் வருவது போலவே கனவில் அவளுக்கு பிடித்த இஷ்ட தெய்வம் கிருஷ்ணன்.

    “என்ன வந்து விட்டாயா? சற்று நேரம் தூங்கலாம் என்று கண்ணயர்ந்தால் உடனே நீ வந்துவிடுகிறாய். சரி  சொல் என்ன வேண்டும்” என்றாள் லக்ஷ்மி.

    “எனக்கு என்ன வேண்டும்? உனக்கு வேண்டுவதை என்னிடம் கேட்டுப் பெறுவதற்கே,  நீ இந்த மதிய வேளையில் தூங்குகிறாய் என்று  எனக்குத் தெரியும். இன்று உன் தேவை என்னவோ அதைத் தெரிந்து கொண்டு  அதை நிறைவேற்றிவிட்டுப் போகலாம் என்றுதான் வந்தேன்” என்றான் கிருஷ்ணன்.

    “கிருஷ்ணா, உனக்குத்தான் தெரியும். எனக்கு படுத்தால் உடனே உறக்கம் வந்துவிடுகிறது. அது மட்டுமல்ல கனவும் வந்துபோகிறது. கனவில் வருவதெல்லாம் அப்படியே நடக்கவும் நடக்கிறது.” என்றாள்  லக்ஷ்மி.

    “நல்லதுதானே ? எத்தனை பேருக்கு, இது போல் முன்கூட்டியே என்ன நடக்கப் போகிறது என்று தெரிகிறது. இது உனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமல்லவா” என்றான் கிருஷ்ணன்.

    “கிருஷ்ணா, இந்த மானுட ஜென்மத்தில் வருவதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியாதிருப்பதும், பழையதை மறந்து போவதும் தானே வரப்ப்ரசாதங்கள். அந்த இரு வரப்ரசாதங்களில் ஒன்றை இழந்துவிட்டேனே என்று ஒரு புறம் வருத்தமாக இருந்தாலும் இன்னொரு புறம் கனவின் மூலமாக உன்னை சந்திக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேனே அதை எண்ணியே மகிழ்கிறேன்.

    இன்று நான் கண்ட கனவு என்னை நிம்மதி இழக்கச் செய்து விட்டதே, ஆமாம் நான் இறந்து போவது போலவும், என் கணவர்  வருத்தமாக இருப்பது போலவும்  கனவு கண்டேன்.”

    “அப்படியா நல்லதுதானே ! நீ சீக்கிரம் என்னை வந்து அடையப் போகிறாய். அதற்கென்ன கலக்கம் ?” என்றான் கிருஷ்ணன்.

    “சீக்கிரமாக உன்னை வந்து அடையப் போகிறேன் என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், வேறு ஒரு சிந்தனை என்னை வருத்துகிறது.” என்றாள் லக்ஷ்மி.

    “என்னை வந்து அடைவதை விட மகிழ்ச்சியானது வேறொன்று இருக்க முடியுமா? பிறகென்ன  வருத்தும் சிந்தனை உனக்கு ?”,  என்றான் நமுட்டுச் சிரிப்புடன் கிருஷ்ணன்.

    “உனக்குத் தெரியாததா! எல்லாம் அறிந்தவன் நீ , வேண்டுமென்றே  என்னைச் சீண்டுகிறாய்.

    நீ எனக்கு ஒரு வரம் போல் கொடுத்தாயே ஒரு வாழ்க்கைத் துணைவர், அவருடைய குணம் என்னவென்று உனக்குத் தெரியாதா?

    எப்போதோ நான் செய்த புண்ணியத்தின் பலனை எனக்கு  வாழ்க்கைத் துணை அமைத்துக் கொடுப்பதில் செலவிட்டிருக்கிறாய் நீ.

    அவருக்கு கள்ளம் கபடம் தெரியாது, எல்லாருக்கும் என்ன வேணும்ன்னு பாத்து பாத்து செய்யக் கூடிய மனுஷன், ஆனா அவருக்கு என்ன வேணும்னு அவருக்கே தெரியாது.

    அவங்க அம்மா. அதான் என் மாமியார் எனக்கு கல்யாணம் ஆன புதுசுலே என் கையைப் பிடிச்சிண்டு சொன்ன வார்த்தைகள் அப்பிடியே இப்பவும் காதிலே ஒலிக்கறதே, 

    ‘லக்ஷ்மி எல்லாரும் நெனைச்சிண்டுருக்கா உன்னை இவன்கிட்ட ஒப்படைச்சிட்டோம்னு. எனக்குதான் தெரியும்  இவனை உங்கிட்ட ஒப்படைச்சிருக்கேன்னு. அவனோட நேர்மையிலே, புத்திசாலித்தனத்திலே எனக்கு அவநம்பிக்கை இல்லே. ஆனா இந்தக் காலத்துக்கு வேண்டிய கெட்டிக் காரத்தனம் இவனுக்கு கிடையாது. வெளுத்ததெல்லாம் பாலுன்னு நெனைப்பான், எல்லாரையும் நம்புவான். யார் எது கேட்டாலும்  தனக்கு இருக்கோ இல்லையோ எடுத்துக் குடுத்துட்டு  அவங்க திருப்பித் தருவாங்கன்னு எதிர்ப்பார்த்திண்டே இருப்பான்.

    யார்கிட்டே எப்பிடிப் பேசணும்னு தெரியாது, எவ்ளோ கள்ளம் நிறைந்த உலகம் இதுன்னு தெரியாது. உதவின்னு கூப்பிட்டா ஓடிப்போயி உதவிட்டு அவங்க தூக்கி அடிக்கும்போது வருத்தப்பட்டுண்டு இருப்பான். இவனை நான் உங்கிட்ட ஒப்படைக்கிறேன்,இனிமே நீதான் இவனைப் பாத்துக்கணும்’ னுட்டு சொல்லி இவரை எங்கிட்ட ஒப்படைச்சாங்க.

    நானும் என்னாலானது இவ்ளோ நாள் அவருக்கு உதவியா இருந்துட்டேன். இப்போ நான் முதல்லேயே போகப் போறேன்னு தெரிஞ்சதுக்கப்புறம் இவரைப் பத்தின கவலைதான் அதிகமாயிடிச்சு.

    இவரு ஒரு சொல் பொறுக்க மாட்டாரு. அனிச்ச மலர் மாதிரி மென்மையான மனசு. இனிமே இவரை யாரு கவனிக்கப் போறாங்க? நெனைச்சுப் பாத்தாவே கவலையா இருக்கு.

    கிருஷ்ணா நீ நான் எது கேட்டாலும் நிறைவேத்தி வெச்சே, எனக்கு ஒரு குறையும் வைக்கலே. எனக்கு உன்னை விட்டா வேற யாரும் கிடையாது. உன்னையே சரண் அடைஞ்சு கவலை இல்லாம இருந்தேன்.

    இப்பவும் எனக்கு நீதான் உதவணும், யாருக்குமே கிடைக்க முடியாத பாக்கியத்தை எனக்கு குடுத்தே. எவ்ளவோ மகான்களுக்கெல்லாம் கிடைக்காத பாக்கியம் எனக்கு குடுத்திருக்கே. நான் இந்த வாழ்க்கையிலே இருந்துண்டே உன்னை அப்பப்போ பாத்து பேசறேன்.

    நான் ஒரு வரம் கேப்பேன் குடுப்பியா ?”, என்றாள் ஏக்கமாக! 

    “நீ என்ன கேக்கப் போறேன்னு எனக்குத் தெரியும்.  வாழ்க்கையிலே பல பூட்டுகள் இருக்கு. ஆனா எல்லாப் பூட்டுக்கும்  சாவி கிடையாது. சில பூட்டுக்கு மட்டும்தான் சாவி இருக்கு, அந்தச் சாவிகள் கூட யார்கிட்டே இருக்கணுமோ அவங்க கிட்டே இருக்கறதில்லே, வேற எங்கேயோ இருக்கு. அதுனாலே பல பூட்டுக்கள் இன்னும் திறக்கப் படாமையே இருக்கு. சரி கேளு” என்றான் கிருஷ்ணன் புன் சிரிப்புடன்.

    “எனக்கு முன்னாடி அவரைக் கூட்டிண்டு போயிடு. அதுக்கு அப்புறம் என்னை கூட்டிண்டு போ. அது முடியலைன்னா  எங்க ரெண்டு பேரையும் ஒண்ணா கூட்டிண்டு போயிடு. அவரை மட்டும் தனியா விட்டுட்டு நான் மட்டும் வந்தா  நான் குடுத்த வாக்கை நிறைவேத்த முடியாம போயிடும்”,  என்றாள் லக்ஷ்மி. 

    நாளையிலேருந்து உனக்கு கனவே வராது  என்றான் கிருஷ்ணன் புன்சிரிப்புடன்

    Share
  • ஈரத்துணி

     தமிழ்த்தேனீ

    மாலை ஐந்து மணி. சிமெண்டும், மணலும் அப்பிக்கிடந்த உடலைக் கழுவிக் கொண்டே, “கிருஷ்ணா, எனக்கு இன்னிக்கு ஒரு 100 ரூபா குடு. நாளைக்கு பொழுது விடிஞ்சா தீபாவளி, நான் அடுத்த வாரம் உனக்கு திருப்பிக் குடுத்துர்ரேன்”, என்று சக தொழிலாளியிடம் எப்படியோ கொஞ்சம் பணம் கடன் வாங்கிக்கொண்ட கருப்பசாமி, அந்தப் பணத்தில் பட்டாசுகளும், புதிய துணிகளும், இனிப்பு பலகாரங்களும் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

    வீட்டுக்கு வரும்போதே மாலை 6 மணி ஆகிவிட்டது. கைகால்களைக் கழுவிக்கொண்டு நிமிர்ந்தவர், “ஆமாம் ரமேஷ் பெங்களூருக்கு போனானே ஒரு இண்டெர்வியூக்காக, இன்னிக்கு வந்துருவேன்னு சொன்னானே, எங்கே இன்னும் வரவில்லையா? விடிஞ்சா தீபாவளி !” என்றார்.

    அவர் மனைவி அஞ்சலை, “தீபாவளிக்கு முத நாளு வந்துருவேன்னு சொல்லிட்டுதானே போனான். இன்னிக்கு வந்துடுவான். நீங்க கைகாலைக் கழுவிகிட்டு உள்ளார வாங்க”  என்றாள்.

    அன்றாட கவலைகளை மறந்து கிருஷ்ணன் நரகாசுரனை வதம் செய்த நாளைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருந்தனர் மக்கள். மறு நாள் தீபாவளி. நாடெங்கிலும் தீபாவளிக் கொண்டாட்டங்கள் வாண வேடிக்கைகளும், பட்டாசுகளின் சத்தமும், சங்கு சக்கரம், மத்தாப்பூ, புஸ்வாணம் போன்றவைகளின் ஒளியும், கண்ணைப் பறித்தது.

    விதவிதமான புதிய வகைப் பட்டாசுகள் நகரெங்கும் விற்பனையாகியது. புத்தாடைகள் சரசரக்க, பிள்ளைகள் பட்டாசுகளும், அவற்றைப் பாதுகாப்புடன் கொளுத்த நீண்ட ஊதுபத்திகளும் கையில் வைத்துக்கொண்டு கபடமில்லாமல் சிரித்துக்கொண்டே, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தனர். 

    வாங்கி வந்த பட்டாசுகளையும், இனிப்பையும் வீட்டில் மனைவியிடம் கொடுத்து, “பத்திரமாக வைய்யிம்மா”  என்றார். அவருக்கு அவருடைய மகன் ரமேஷ் கம்பி மத்தாப்பூ கொளுத்தவே பயந்து, “அப்பா இதைப் பிடிப்பா பயமா இருக்குது” என்று அலறியது  நினைவுக்கு வந்தது. சிரித்தபடியே கைகால்களை கழுவிக்கொண்டு  உள்ளே வந்து உட்கார்ந்து செய்தித்தாளைப் பிரித்தார்.

    செய்தித்தாளில் கொட்டை எழுத்தில் போட்டிருந்த செய்தியையும், புகைப்படங்களையும்  பார்த்து அதிர்ந்தே போனார் அவர். பட்டாசுக் கம்பனியில் தீப்பிடித்தது, பட்டாசு வெடித்ததில் பட்டாசுக் கம்பனியின் கட்டிடம் சிதறியது. அதில் வேலை செய்துகொண்டிருந்த  மக்கள், மற்றும்  ஒரு மைல் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் பாதிப்பு, பலபேர் சடலம் தோண்டி எடுக்கப் படுகிறது.  தீக்காயத்துடன் அவதிப் படுவோரை எடுத்துக்கொண்டு அவசரகால ஊர்திகள் மருத்துவமனைக்கு விரைகின்றன. தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்க போராடி வருகின்றன.

    நாட்டிலே இருக்கற மக்கள் சந்தோஷமா இருக்கணும்னு தங்களோட உயிரையும் பணயம் வெச்சு பட்டாசு தயாரிக்கறாங்க, இந்தப் பட்டாசுக் கம்பனீலே வேலை பாக்கறவங்க  வயித்துப் பொழைப்புக்காக கூலிக்கு வேலை பாக்கறாங்க.  இப்பிடி தீயிலே மாட்டிகிட்டு கருகிப் போயிட்டாங்களே, அவங்க குடும்பம் என்னா பாடு படுதோ என்று மனதுக்குள் வருந்தினார்.

    “இந்தப் பய ரமேஷுக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சுதுன்னா  கொஞ்சம் நிமிரலாம். சரி அவன் வந்தா தெரியும் வேலை கிடைச்சுதா, நல்ல வேலையா? சம்பளம் எவ்ளோ ஒண்ணும் தெரியலை, சரி அவன் வந்த வுடனே அவனைக் கேள்வி மேலே கேள்வி கேட்டு தொந்தரவு செய்யாதே. படிச்ச புள்ளே ஆயிரம் யோசனை இருக்கும், அங்கே என்னாகேள்வி கேட்டாங்களோ, வேலையைப் பத்தி என்னா சொன்னாங்களோ. கஷ்டப்பட்டு படிக்க வெச்சிருக்கேன் நல்ல வேலை கிடைக்காமையா போயிரும், என் மவன் கெட்டிக்காரன், எல்லாம் நல்லபடியா நடக்கும், கவலைப்படாதே, வந்தவுடனே இந்த பலகாரத்தைக் குடு, நிதானமாப் பேசிக்கலாம்”, என்று அஞ்சலைக்கு ஆறுதல் சொல்வது போல் தன் மனதையே தேற்றிக் கொண்டார் கருப்பசாமி.

    தட்டின் முன் வந்து உட்கார்ந்து, “காவ்யாகுட்டி, அப்பா தீபாவளிக்கு பட்டாசு, இனிப்பு,உனக்கு கௌனு எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன். அண்ணன் வந்துரட்டும், புது கௌனு போட்டுகிட்டு வெடியெல்லாம் வெடிக்கலாம்” என்றார். அஞ்சலை அவர் தட்டில் பலகாரத்தை வைத்தாள்.  

    “போப்பா, அண்ணன் மத்தாப்பூ கொளுத்தவே பயப்படும், நானு தைரியமா பட்டாசு வெடிப்பேன், அண்ணன் பயந்தாங்கொள்ளி”, என்று சிரித்தாள் காவ்யாகுட்டி.

    “வீட்டுலே யாருங்க, வெளியே வாங்க”, என்று ஒரு குரல் கேட்டது. அஞ்சலை எட்டிப் பார்த்து, “ஏனுங்க வாசல்லே போலீஸ் ஜீப் நிக்கிது, உங்களை யாரோ கூப்புடறாங்க” என்றாள்.

    “சரி வந்து சாப்படறேன்” என்றபடி எழுந்து போய் வாசலில் பார்த்தார்.

    ஒரு காவல் துறை ஜீப் அவர் வீட்டருகே வந்து நின்றது.

    “இந்தாங்க, இந்த தினசரியைப் பாருங்க”, என்று அவர் முன் ஒரு தினசரியை நீட்டினார்கள்.  தினசரியை பிரித்தவர் கண்ணில் பட்டது அந்தச் செய்தி. அதிர்ந்து போய் பேச்சு வராமல் அப்படியே தலையில் கைவைத்துக்கொண்டு கண்களில் நீர்வழிய உட்கார்ந்திருந்த அவரைப் பார்த்த அஞ்சலை, “என்னங்க ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க ?” என்றாள். அவர் கையிலிருந்து தினசரியை வாங்கிப் பார்த்து அதிர்ந்தாள்.

    “வண்டியிலே ஏறுங்க”, என்று அவரையும், அஞ்சலையையும் அழைத்துக் கொண்டு  காவல்துறை ஜீப் புறப்பட்டது. “காவ்யாக் குட்டி, பத்திரமா வீட்டிலேயே இரு”,  என்ற கருப்பசாமியின் குரல் காற்றிலே தேய்ந்தது. 

    “உங்க புள்ளதானே இந்த ரமேஷ், உண்மையைச் சொல்லுங்க, உங்களுக்கும்  தீவிரவாதிகளுக்கும் எவ்ளோ வருஷமாத் தொடர்பு இருக்கு ?” என்றார் அதிகாரி.

    “ஐயா, சத்தியமாச் சொல்றேனுங்க. அதெல்லாம் ஒண்ணும் கிடையாதுங்க. என் மவன் பெங்களூருக்கு ஒரு இன்டெர்வியுவுக்காகப் போயிட்டு வரேன்னு போனான். இன்னிக்கு வந்துடுவேன்னு சொல்லிட்டுப் போனான்.  அவ்ளோதாங்க எங்களுக்குத் தெரியும்.  அவன் வந்தா உடனே நானே தகவல் சொல்றேனுங்க, நானே அவனைக் கையோட கூட்டிகிட்டு வந்து உங்க கிட்ட ஒப்படைக்கிறேனுங்க.”  என்று சொல்லிவிட்டு, வீட்டுக்கு வந்து  உள்ளே போய் அந்தப் பட்டாசு, இனிப்பு அத்தனையையும் எடுத்துவந்து   தண்ணீரில் முக்கி ஈரத்துணியில் முடிந்து  வெளியே எறிந்தார். 

    அக்கம்பக்கத்து மனிதர்கள் வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். அக்கம்பக்கம் மனிதர்கள், “என்னா ஆச்சு அஞ்சலை ?”ன்னு  அவருடைய மகனைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினர். ஒரு சிறுவன் “டேய் நம்ம ரமேசு குண்டு போட்டானாம்டா, அவனைப் போலீசு தேடுது ” என்று கத்திக் கொண்டே ஓடினான்.

    திபுதிபுவென்று கருப்பசாமியின் குடிசை வாசலில் அவரைத்தேடி கும்பலாக பத்திரிகைக்காரர்களும் வந்தனர். மக்கள் அவர் வீட்டு வாசலில் கூடினர். கண்ணீருடன் நிமிர்ந்த அவரிடம் ஒரு பத்திரிகை நிருபர், “நீங்க பத்திரிகை பாத்தீங்களா, உங்க மகன் தீவிர வாதிகளோட சேந்துகிட்டு குண்டு வெச்சிருக்கான்”  என்றார்.

    “பாத்தேனே…… என்னால தாங்கிக்க முடியலையே…. அப்பப்பா எத்தனை உயிர்கள், எத்தனை உடல்கள் சிதறிப்போச்சு, யாரு பெத்த புள்ளைகளோ, மனிதமே செத்துப்போச்சே, என் மவன் இப்பிடி பல உயிர் போறதுக்கு காரணமா தீவிர வாதியா மாறி குண்டு வைப்பான்னு நான் நெனைச்சு கூடப் பாக்கலையே, என் குடும்பத்திலே அவனாவது படிக்கணும்னு வயித்திலே ஈரத் துணியைக் கட்டிகிட்டு பட்டினியா பசியா உழைச்சேனே, இப்பிடி செஞ்சிட்டானே”,  என்று கதறினார் கருப்பசாமி, அஞ்சலை மயங்கிச் சாய்ந்தாள். பதறிப்போய் அவளை தாங்கிக் கொண்டு கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் குமுறிய அவர்.

    “அவனை எங்க மகன்னு சொல்லிக்கறதுக்கே அவமானமா இருக்கு.எங்களுக்கு மகனே பொறக்கலைன்னு நெனைச்சுக்கறேன். எப்பிடியாவது அவனைக் கண்டு பிடிச்சு…. கொன்னுடுங்க ! மனிதத்தையே அழிக்கிற இந்த தீவிர வாதத்திலே ஈடுபடற நரகாசுரன்களை எந்த கிருஷ்ணன் வந்து எப்போ கொல்றானோ, அப்போதான் நம்ம உலகத்துக்கே உண்மையான தீபாவளி அவனைக் கொன்னுடுங்க… கொன்னுடுங்க…” என்று கதறினார் கருப்பசாமி !

    Share
  • தமிழ்த்தேனீயின் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

     

    அன்பு நண்பர்களே

    வருகின்ற 14ம் தேதி மாலை 6.30 மணிக்கு சென்னை அம்பத்தூர்  சிரிப்பரங்கம்   “நகைச்சுவைமன்றம்” நடத்தும் ” வெற்றிச் சக்கரம் ” புத்தக வெளியீட்டு விழா.

    (அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகில்)

    சத்சங்கம் தெருவில் உள்ள சத்சங்கத்தில்  நடைபெற இருக்கிறது. விழாவுக்கு வருகை தந்து சிறப்பிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்

    .
    நூல் வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்துபவர் எக்ஸ்னோரா இன்டர்னேஷனல் நிறுவனர் உயர் திரு எம் பீ நிர்மல் அவர்கள்.

    முதல் நூல் பெற்றுக்கொண்டு உரையாற்றுபவர் எழுத்தாளர், முனைவர் திரு அண்ணா கண்ணன் அவர்கள்.

    முன்னிலை வகிப்பவர் திரு தீபம்   எஸ் திருமலை அவர்கள்.

    ஏற்புரை திரு தமிழ்த்தேனீ அவர்கள்.

    அனைவரையும் வரவேற்று   “தென்றல் வருடிய சிரிப்பு!   வழங்குபவர் பத்திரிகையாளர், எழுத்தாளர், உயர் திரு அரவிந்த் சாமிநாதன் அவர்கள்.

    நடத்துபவர்  திரு சிரிப்பானந்தா ,  சித்திரைச் சிங்கர் ,மற்றும்
    (Laughtoriuam) ,
    சிரிப்பரங்கம்  நண்பர்கள்.

    அழைப்பிதழை இணைத்திருக்கிறேன்-அனைவரும் வருக

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

    Share
  • நாத்திகம்

    தமிழ்த்தேனீ

    என்னது, ராசைய்யா இறந்து போயிட்டாரா ! அதிர்ச்சியா.. துக்கமா… ஆச்சரியமா… ஏதோ ஒன்று தாக்கியது வேணுகோபாலை. செய்தி கேள்விப்பட்டு பதறி அடித்துக்கொண்டு கையில் கிடைத்த சொக்காயைப் போட்டுக்கொண்டு ஓடினார் வேணுகோபாலன். ராசையா வீட்டிற்கு சென்று அவருடைய உடல் கிடத்தப்பட்டு இருந்ததைப் பார்த்த  வேணுகோபாலுக்கு, ஏதோ ஒரு பாதி தன் உடலிலிருந்து பிரிந்து போனதைப் போன்ற உணர்வு ஆட்கொண்டது. அவரை அறியாமல் மனதின் துயரம் கண்களில் வெளிப்பட்டது.

    எழுவத்தி இரண்டு வயதான ராசைய்யா நேற்று இரவு வழக்கம் போல தூங்கச் சென்றார். ஆனால் காலையில் தூக்கத்திலேயே அலுங்காமல் குலுங்காமல் இல்லாமல் இறந்து போயிட்டார். ராசையா வீட்டு உள்ளே அவரின் பூத உடல் கிடத்தப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. வேணுகோபால் உள்ளே நுழைந்தவுடன் அவரைப் பார்த்து, ராசையாவின் உறவினர் அனைவரும் ஒருமித்த குரலில் உரக்க அழ ஆரம்பித்தனர். யாருக்கும் ஆறுதல் சொல்ல வழியில்லாமல் மௌனமாய் இருந்தார் வேணுகோபாலன்.

    எத்தனையோ ஆத்திகர்கள் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் படுத்த படுக்கையாய் இராமல் பட்டென்று உயிர் போய் விடவேண்டும் என்று வேண்டிக்கொண்டே இருக்க, எந்த ஒரு வேண்டுதலும் இல்லாதிருந்த ராசைய்யா கல்யாணச்சாவு என்பார்களே அதுபோல ஒரு அருமையான முடிவை எட்டியிருந்தார்.

    கடந்த 72 வரை எந்த நோயும் தாக்காது, விருப்பமான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக இருந்த அவர் இது வரையில் கடவுளைக் கும்பிட்டதே இல்லை. கோயிலுக்கு போனதில்லை, ஆனால் யார் வந்து உதவி என்று கேட்டாலும், அல்லது யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால், உடனடியாக களத்தில் இறங்கி தம்மால் இயன்ற உதவிகளைச் செய்யத் தயங்கியதும் இல்லை. மற்றவர்களையும் உதவிகள் செய்யத் தூண்டுபவர். மொத்தத்தில் மனித நேயத்தை இறையாகக் கொண்டவர்.

    அப்படிப்பட்ட ராசைய்யா தன் அந்தரங்கங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரே ஆதமார்த்தமான நண்பர்  வேணுகோபால். இறை நம்பிக்கை உடையவர். ராசையா போலவே மற்ற அனைத்து நற்குணங்களும் பொருந்தியவர். மாற்று சாதியைக் கொண்டவராக இருந்தாலும்  ராசையாவின்மேல் சிறு வயது முதற்கொண்டே ஒரு ஆதமார்த்தமான நட்பு கொண்டவர். இருவருக்கும் உள்ள மன ஒற்றுமை ஊரே வியக்கும் அளவுக்கு இருந்தது.

    ராசையாவையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார் வேணுகோபால்.  ராசையாவின் மனைவி, “அண்ணா பாத்தீங்களா, என்னைத் தனியா விட்டுட்டு அவருமட்டும் போய்ட்டாரு. நான் என்னா செய்வேன் !” என்று கதறிக்கொண்டிருந்தாள்.

    ராசையாவின் மூத்த மகன் வேணுகோபாலின் அருகிலே சென்று, “மாமா பார்த்தீங்களா அப்பாவை !” என்றான். அதற்குமேல் அவனுக்கு வார்த்தை வரவில்லை. குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்கினான். ஆறுதலாக அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு, முதுகைத் தடவிக் கொடுத்துவிட்டு, “தம்பி சுரேஷ், நீங்கதான் தைரியமா இருக்கணும். அம்மாவை யார் சமாதானப் படுத்த முடியும்? ஆகவேண்டிய காரியங்களைப் பாருங்க. நாம கொடுத்து வெச்சது அவ்ளோதான்! அவரோட ஆன்மா சுத்தமானதுன்னு உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். அவ்வளவு ஏன் ஊருக்கே தெரியும்.

    ஆறுதல் சொல்லி ப்ரயோசனமே இல்லாத ஒரு நிகழ்வு இதுதான் உலகத்திலே, என்னா செய்யிறது” என்றார் வேணுகோபால்.

    “உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அவரோட ஆன்மா நல்லவிதமா கரையேற தேவையான காரியத்தை செய்யுங்க. வேறென்ன சொல்ல ?” என்றவர் அடுத்து மற்ற ஏற்பாடுகளைக் கவனிக்க ஆரம்பித்தார். ஆனால் மனம் மட்டும் ராசைய்யாவையே சுற்றி வந்துகொண்டிருந்தது.

    மருமகள்களும்,மாப்பிள்ளையும், பெண்ணும் மற்றும் உறவுக்காரர்கள் அனைவருமே கதறிக்கொண்டிருக்கின்றனர். ஒரு மனிதரால் இப்படி வாழ முடியுமா.? வேணுகோபாலுக்கு ஆச்சரியம், ஆனால் வாழ்ந்து காட்டியிருக்கிறாரே  ராசையா. ராசையா போன்ற மனிதர்கள் இறக்கும் போதுதான் மனிதம் வாழவே ஆரம்பிக்கிறது என்னும் உண்மை வேணுகோபாலுக்கு உள்ளுக்குள் விளைந்தது.

    திரு ராசையாவுக்கு மூன்று பிள்ளைகள், ஒரு பெண். எல்லோரும் அவரவர் இல்லறத் துணைகளோடு வந்திருந்தனர். எல்லா சம்பந்திகளும் வந்திருந்தனர். அனைவரின் கண்களிலும் சத்தியமான வருத்தம், கண்ணீர். எப்படி இது சாத்தியமாயிற்று திரு ராசையாவுக்கு..?

    அவருக்கு இது நியாயமாகக் கிடைக்கவேண்டிய புஷ்பாஞ்சலிதான் என்று தோன்றியது வேணுகோபாலுக்கு. ஒவ்வொரு பிள்ளைக்கும் திருமணம் செய்து வைக்கும்போதும், பெண்ணைப் பெற்றவர்களிடம் நான் பிள்ளையைப் பெத்து வெச்சிருக்கேன், நீங்க பெண்ணை பெத்து வெச்சிருக்கீங்க, அவ்ளோதான் நமக்குள்ளே வித்யாசம். எனக்கு பணத்தைவிட மனுஷங்கதான் முக்கியம். அதுனாலே கடன்படாமல் உங்களாலே என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்க போதும். என்னோட பிள்ளைங்க கல்யாணம் மட்டுமில்லை இது பொண்ணா இருந்தா என்ன, பிள்ளையா இருந்தா என்ன? அதுனாலே நம்ம புள்ளைங்களோட கல்யாணம். அது நல்லபடியா மகிழ்ச்சியா நடக்கணும்.

    அதுக்கும் மேலே எனக்குன்னு ஒரு விருப்பம் இருக்கு. உங்க பொண்ணுங்க என்னை மாமனாரா நடத்தக் கூடாது. என்னையும் தகப்பன் ஸ்தானத்திலே வச்சி அன்பு செலுத்தச் சொல்லுங்க, அது போதும். கல்யாணம் செய்துகொள்ளும் சின்னஞ்சிறுசுகள் மகிழ்ச்சியா இருக்கணும். அவங்க மனசுலே எந்த பாரமும் இருக்கக் கூடாது. பட்டாம் பூச்சி போல அவங்க வாழ்க்கையை மகிழ்ச்சியா அமைச்சுக்கணும்.

    அதுக்கு பெத்தவங்க நாமதானே உதவணும் ? அதுதான் நம்மோட கடமை. அதுனாலே கல்யாணச் செலவிலே பாதி எங்களோடது. நாம சேர்ந்து இந்தக் கல்யாணத்தை ஒரு மகிழ்ச்சியான விழாவா கொண்டாடலாம் என்று சொல்லி, அதே போல வரதக்ஷணையோ, வேற எந்தப் பொருட்களோ வாங்காமல், ஒரு தகப்பனா நீங்க உங்க பொண்ணுக்கு உங்க சக்திக்கு ஏத்தா மாதிரி கல்யாணம் செய்யுங்க போதும்னு சொல்லி, மூன்று கல்யாணத்தையும் நடத்தி வெச்சாரு ராசைய்யா. அதுக்கு ஏத்தா மாதிரி வந்த மூணு மருமகள்களும் ஒத்துமையா இன்னிக்கு வரைக்கும் குடும்பம் நட்த்திவராங்க.

    அது மட்டுமில்லே, அவர் பொண்ணுக்கும் இவரை மாதிரியே ஒரு நல்ல சம்பந்தியும் கிடைச்சது அதிர்ஷ்டம். மாப்பிள்ளையும் இவருக்கு மகன் மாதிரியே அமைஞ்சது அதைவிட அதிர்ஷ்டம். இப்பிடி ஒரு அதிர்ஷ்டமான வாழ்க்கை எல்லாருக்கும் அமைவதில்லை. வாழ்க்கையை சரியான கோணத்தில் புரிந்து கொண்டவர் திரு ராசையா.
    உரில் உள்ள அனைவரும் அதிர்ச்சியையும் உண்மையான வருத்தத்தையும் கண்களில் தேக்கி, வீட்டு வாயிலில் குழுமி இருந்தனர். ஆளுக்கொரு வேலையை பொறுப்பெடுத்துக்கொண்டு செய்து கொண்டிருந்தனர். எப்படிப்பட்ட மனிதர் ! நினைவு தெரிந்த நாள் முதல் தன்னுடைய வேலையைத் தானே செய்துகொண்ட நல்லவர். யாருக்கும் தீங்கு நினைக்காதவர். ஒரு முறையும் கோயிலுக்குள் நுழையாதவர் திரு ராசையா. ஒரு நாளும் இறைவனை வணங்கியதும் இல்லை. நிந்தனை செய்ததும் இல்லை. இறைவன் இல்லையென்று அவர் வாயால் கூறியதும் இல்லை.

    எத்தனையோ பழுத்த ஆன்மீக வாதிகள் இல்லறத்திலிருந்துகொண்டு படுக்கையில் படுக்காமல் யாருக்கும் தொந்தரவு அளிக்காமல்,நினைத்தவுடன் உயிர் போய்விடவேண்டும் என்று பல வேண்டுதல்களைச் செய்தவர்களுக்கெல்லாம் கிட்டாத, அமைதியான முடிவை வெகு சுலபமாக எட்டியிருக்கிறார் திரு ராசைய்யா. திரு ராசையா மனிதர்களை மனித நேயத்தை மட்டுமே மதித்து வாழக்கற்றவர்.

    மகள் திருமணம், பிள்ளைகள் கல்வி, கோயில் திருவிழா எல்லாவற்றையும் சமமாகப் பார்க்க கற்றவர். யார் வந்து கேட்டாலும் எல்லோருக்கும் ஒரே விதமான மரியாதையை அளித்து அவரால் முடிந்த பொருளுதவியைச் செய்தவர். நினைக்க நினைக்க ஆச்சரியமாய் இருந்தாலும் வேணுகோபாலுக்கு இவையெல்லாம் பழகிப் போயிருந்தன. ஆனாலும் ஆச்சரியம் விலகவில்லை வேணுகோபாலுக்கு.

    ஒரு சிறந்த நாணயமான நாத்திகவாதி. ஒரு நாத்திகவாதி, பகுத்தறிவுவாதி என்பவர் எப்படி வாழவேண்டும் என்றும் நாத்திகவாதியாக இருந்தாலும் ஆத்திகவாதிகளை மதிக்கத் தெரிந்த மனிதர். மனிதம் முக்கியம் என்றுணர்ந்த நாத்திகவாதியும் ஆத்திகவாதியே என்று உணர்ந்த மனிதர். ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கும் உதாரண புருஷனாக வாழ்ந்த மறைந்தவர் நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருந்தது வேணுகோபாலுக்கு. அதனால்தான் இப்படி ஒரு அருமையான முடிவு கிடைத்ததோ..?

    எப்படி இது எப்படி முடிந்தது ? என் எண்ண ஓட்டங்கள் திரு ராசைய்யாவையே சுற்றிச் சுற்றி வந்தது . எப்படி இந்த மனிதருக்கு இப்படி ஒரு அருமையான முடிவு கிட்டியது? எல்லோருக்கும் இந்த சுபமான முடிவு கிடைக்குமா..? யோசிக்க யோசிக்க ஆத்திகவாதியான வேணுகோபாலுக்கு ஒரு எண்ணம். ஒரு முடிவு  திடமாக உறுதியானது.

    நிச்சயமாக பூர்வ ஜென்ம நடத்தைகள், நம்மை அடுத்த ஜென்மத்திலும் பாதிக்கிறது என்பது உண்மைதான். ஒன்று வாழவைக்கிறது அல்லது வீழ வைக்கிறது என்பது சத்தியமான உண்மை. பூர்வஜென்மம்,மறுஜென்மம் எனபதெல்லாம் கட்டுக்கதை இல்லை. சத்தியமான உண்மை. இந்த எண்ணங்கள் மனதில் வந்ததும், தம்மையறியாமல் சில மனிதர்களின் கபடநாடகங்களை எண்ணிப் பார்த்தார். எதற்குமே கொடுத்து வைக்க வேண்டும். வேணுகோபால் நாத்திகவாதியான ராசையாவையே கடவுளாக நினைத்து நண்பா ‘எனக்கும் இது போன்ற வரம் தா’ என்று வேண்டிக்கொண்டார்.

    அனுபவப்பட்டாலும் மனிதர்களுக்கு மாயை விலகுவதில்லை என்னும் உண்மை உறைக்கவே சிரிப்பு வந்தது. அவருக்கு அடுத்த கணமே,  யாராவது பார்த்தால் இந்த இடத்திலே சிரிக்கிறாரே என்று தவறாக நினைத்துக்கொள்ளப் போகிறார்களே என்று அந்த விரக்திச் சிரிப்பை அடக்கிக்கொண்டார்.

    ஆனாலும் அவரை அறியாமலே அவருக்கு உள் மனதிலிருந்து துக்கம் பொங்கி வந்தது. வேணுகோபால் எதற்காக அழுகிறோம் என்பதே தெரியாமல் அவரையறியாமல் ஏதோ ஒன்று அவரை உலுக்கியது. ஒரு ஓரமாகச் சென்று மௌனமாகக் கண்ணீர் வடித்து துக்கத்தை தோளில் கிடந்த துண்டால் அடக்கியும் முடியாமல், குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார் வேணுகோபால். 

    Share
  • பெட்டைகள்

    தமிழ்த்தேனீ

     

    ஒரு பெட்டைக் கோழிக்கும் கட்டுச் சேவலுக்கும் ஊடல்.  வாக்குவாதம் முற்றியது.

    “இதோ பாரு இப்பிடி இனிமே  எல்லாத்துக்கும் எங்கிட்ட வாக்குவாதம் செஞ்சே, மனுஷங்க மாதிரி நானும் உன்னை  விவாகரத்து செஞ்சுடுவேன். நான் மத்தவங்க மாதிரி இல்லே மானமுள்ள ஆம்பிள்ளை” என்றது கட்டுச் சேவல்.

    “நீ எப்பவும் பெட்டைதான். சேவலாக முடியாது”, என்றது. விதிர் விதிர்த்துப் போனது பெட்டைக் கோழி.

    “ஓஹோ  இந்த  ஆம்பிள்ளைத் தனத்தெல்லாம் எங்க கிட்ட மட்டும் காட்டுங்க . யாராவது கையை  ஓங்கிட்டு  வந்தா உடனே ஆம்பிள்ளைங்கறதை எல்லாம் மறந்துட்டு கொக்கரகோன்னு ஓடிப் போயிடுங்க.

    காலமே கெட்டுப் போச்சு..நீங்க  என்னவேணா செய்வீங்க. இப்பல்லாம் ஆம்பிள்ளைங்க,பொம்பளைங்க  எல்லாருக்கும்   வெவஸ்தையே இல்லாமப் போச்சே. விவாகரத்து செஞ்சாலும் செய்வீங்க.  மனுஷனுக்குதான் அறிவில்லாம போயிடிச்சுன்னா, இயற்கையா வாழற நமக்குமா இப்பிடி புத்தி போகணும்….?    ..இனிமே விளையாட்டுக்கு கூட இப்பிடி சொல்லாதீங்க”, என்று கண்ணைக் கசக்கியது  பெட்டைக் கோழி,  தலையைக் குனிந்துகொண்டு.  

    “அப்பிடி வா வழிக்கு ” என்றது சேவல் தலையை நிமிர்த்தி  ஆணின் கர்வத்துடன்.

    ஒரு பெண் தன்னுடைய கணவனிடம் ஏதோ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தாள். அது என்னவென்று அறிய பெட்டைக் கோழிக்கும் கட்டுச் சேவலுக்கும் ஆசை. அவர்கள் பக்கமாக இரண்டும்  ஏதோ காரியம் இருப்பது போன்ற பாவனையுடன் அருகில் சென்றன.

    அங்கே, அந்தப் பெண் அவள் கணவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள், “இதோ பாருங்க, திருப்பி திருப்பி பயித்தியம் மாதிரி, சொன்னதையே சொல்லாதீங்க. ஆமா நான் தெரியாமத்தான் கேக்கறேன்,  நாமே ரெண்டு குழந்தைகளை பெத்து வெச்சுருக்கோமே, அதுங்களுக்கு என்னவழி?

    இப்போ காலம் இருக்குற இருப்புல, நம்ம கையில தேவையான காசு இருந்தாதான் நாமளும் சுகமா இருந்து அதுங்களையும்  வாழ வைக்க முடியும். புரியுதா?”

    அதற்கு அந்தக் கணவன் “சரிம்மா,  சரி” என்று வேகமாக  தலையை ஆட்டிவிட்டு, ” நான் என்ன சொல்ல வரேன்னா…” என்று இழுத்தான்.

    உடனே அவள் “போதும் நீங்க என்ன சொல்லப்  போறீங்க, என்ன இருந்தாலும் உங்களைப்  பெத்தவங்க அவுங்க , உங்களைப் படிக்க வெச்சு ஆளாக்கி நீங்க  ஆசைப்பட்டா மாதிரியே என்னையும் உங்களுக்கு கட்டி வெச்சவங்க அவுங்க.  அவுங்களுக்கு இப்போ உடம்பு சரியில்லைன்னா நாமதானே கவனிக்கணும்,நம்ம கடமை இல்லையா இது.”  இதானே சொல்லப் போறீங்க?

    “கேட்டுக் கேட்டு காது புளிச்சுப் போச்சு. இதோ பாருங்க இப்போ நாம ஊருக்குப் போனா  மொத்த செலவும் நம்ம தலையிலெதான் விழும். உங்கப்பாக்கு ஹார்ட் அட்டாக். அவசர சிகிச்சை முடிஞ்சு பாத்துகிட்டு இருக்காங்க. அது ரொம்ப நல்ல மருத்துவமனை, நல்லா பாத்துப்பாங்க. இப்போ நாம அங்க போனா,  எல்லா செலவும் நம்ம தலையிலதான் விழும். அதுனாலதான் சொல்றேன், நீங்க சும்மா இருங்க எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்.      அப்பிடி யாராவது கேட்டா உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு சமாளிச்சுக்கறேன், புரியுதா” என்றாள். 

    உடனே சரி சரி என்று தலையை ஆட்டினான் கணவன்.

    இப்போது பெட்டைக் கோழி சேவலைப் பார்த்து, “என்னைப் பெட்டை என்று திட்டினீங்களே, இப்போ சொல்லுங்க  யாரு பெட்டை?” ன்னு அப்பிடீன்னுது……..? 

    நிமிர்ந்திருந்த தலையைக் குனிஞ்சு பரிதாபமாகப் பார்த்தது சேவல்!!!!

    Share
  • கூவமும் கங்கைதான்

    தமிழ்த்தேனீ

     

    சாணக்கியரின் வாக்கு :–

    “நேர்மையான, அறிவாளியான  மக்கள்தான் ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். மக்களின்றி நாடில்லை, நாடின்றி ராஜ்ஜியமில்லை. ஒரு இடத்தின் மதிப்பே அந்த இடத்தில் வசிக்கும் மக்களால் உருவாக்கப்படுவதே. நாட்டின் மேன்மையை விரும்பும் மன்னன் அந்த நாட்டு மக்களை  நல்ல முறையில் அறிவாளிகளாக உருவாக்கவேண்டும். பொருளாதாரத் தடைகள் ஏற்படாவண்ணம் தடுத்து  வருவாயைப் பெருக்க வேண்டும்”-   சாணக்கியர்

    ஒரு மனிதனின் மரியாதை, ஒரு மனதின் வலி, ஒரு வார்த்தையின் கனம், ஒரு அன்பின் அருமை, ஒரு பாசத்தின் பெருமை, ஒரு தியாகத்தின் விலை, ஒரு மண்ணின் பெருமை, ஒரு தேசத்தின் உயர்வு, ஒரு குடும்பத்தின் பாரம்பரியம், மக்களின் அருமை புரியாதவனுக்கு மனசாட்சியின் குரல் கேட்காது. அப்படிப்பட்டவன் நாட்டையாளத் தகுதி இல்லாதவன். –  தமிழ்த்தேனீ

     **************************

    யா, நான் உள்ளே வரலாங்களா  என்று கேட்டபடியே வந்த அவனை ஏறிட்டுப் பார்த்த  கிருஷ்ணன் வாப்பா  தாராளமா வரலாம் என்றார்.

    தயங்கித் தயங்கி உள்ளே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி அவர் காலைப் பிடித்துக்கொண்டு  கொண்டு, “என்னை ஆசீர்வாதம் செய்யுங்க சார்” என்று கெஞ்சும் அவனை அவருக்கு அடையாளம் தெரியவில்லை.

    சரி யாரென்று பிறகு பார்த்துக்கொள்ளலாம், “நல்லா இருப்பா” என்று  அவனை வாழ்த்திவிட்டு, “எழுந்திருப்பா” என்று வாஞ்சையோடு தோள் தொட்டுத் தூக்கி அவன் தலையில் கை வைத்து ஆசி வழங்கினார் கிருஷ்ணன். நேருக்கு நேர் அவனைப் பார்த்த போது அவருக்கு அவனைப் பிடித்துப் போயிற்று.

    சில நேரங்களில் நம்மை விட நம் உள் மனதுக்கு  சக்தி அதிகம் என்று உணரும் தருணங்கள் வரும். நம்மைவிட நம் உள் மனது மிகச்சரியாக எடைபோடும் விந்தையை அனுபவித்திருக்கிறார் அவர்.

    நல்ல தீர்க்கமான நாசி, ஆண்பிள்ளைக்கு அடையாளமாக வாளிப்பான உடல்வாகு, பரந்து விரிந்த மார்பகம், திண்ணென்ற தோள்கள், நேருக்கு நேர் கண்களைப் பார்த்துப் பேசும் திடம், தீர்க்கம், அறிவு விசாலத்துக்கு அடையாளமாக ஒளிரும் கண்கள். அவரையறியாமல் அவன் மேல் ஒரு மதிப்பு வந்தது   கிருஷ்ணனுக்கு.

    “வாப்பா இங்கே உக்காரு” என்று எதிரில் இருந்த நாற்காலியைக் காட்டினார் கிருஷ்ணன். “இல்லே சார், பரவாயில்லை நான் நிக்கறேன்” என்றான் அவன்.

    “அனாவசியமான மரியாதையை நான் எதிர்பார்க்கறதில்லே, எப்போ என் கால்லே விழுந்து நீ வணங்கினியோ நீயும் என்னோட பையன் மாதிரிதான். பரவாயில்லே உக்காரு” என்றார் கிருஷ்ணன். தயங்கியபடியே உட்கார்ந்தான் அவன்.

    “அம்மா நல்லா இருக்காங்களா? அவங்க உள்ள இருக்காங்களா ?”.

    அவன் கண்கள் ஆவலுடன் காமாக்ஷியைத் தேடின.

    “இல்லேப்பா அவ கோயில் வரைக்கும் போயிருக்கா. இப்போ வர்ற நேரம்தான்”, சொல்லும்போதே வாயிலில் நிழலாடியது  காமாக்ஷி வந்துவிட்டாள்.

    “சொல்லுப்பா உன் பேரென்ன? நீ யாரு ,எதுக்கு என் கால்லே விழுந்து வணங்கறே?” என்றார் கிருஷ்ணன்.

    “சார்.. நான்..என்னை உங்களுக்கு ஞாபகம் இல்லையா? நான்தான் சார்  குமரன். என்னை என்னோட பத்து வயசிலே ஒரு ஹாஸ்டல்லே சேத்துட்டு, எனக்கு படிக்கறதுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செஞ்சு குடுத்து, நான் எவ்வளவு படிக்கணுமோ அவ்வளவு படிக்கலாம்ன்னு சொல்லி எல்லா ஏற்பாடும் செஞ்சு குடுத்தீங்க”. 

    அங்கே வந்த காமாக்ஷி “ஏங்க இவன் நம்ம குமரனுங்க, இவனை அடையாளம் தெரியலையா?”  என்றாள்.

    “அம்மா என்னை ஆசீர்வாதம் செய்யுங்க” என்றபடி அவள் காலிலும் விழுந்தான் குமரன். “நல்லா இருப்பா” என்று ஆசிகூறினாள் காமாக்ஷி. அதிர்ந்தார் கிருஷ்ணன். “நீ இவனை எப்பிடி நியாபகம் வெச்சிருக்கே ?” என்றார் ஆச்சரியத்துடன்.

    புன்னகைத்தாள் காமாக்ஷி. எத்தனை வருடம் கழித்துப் பார்த்தாலும் தாய் மனம் கொண்டவர்களுக்கு  குழந்தையை அடையாளம் தெரியும் என்று நிரூபிப்பது போல  புன்னகை புரிந்தாள் காமாக்ஷி.

    இன்னிக்கு நான் ஒரு கம்ப்யூட்டர் கம்பெனிலே  இஞ்சினீயரா இருக்கேன். உங்களைப் பாக்கணும்னு எவ்வளவோ நாள் நெனைச்சிருக்கேன். ஆனா படிப்பை முடிக்காமே உங்களை வந்து பாக்கக் கூடாதுன்னு சொல்லிட்டீங்க. அதுனாலே மனசைக் கட்டுப்படுத்திண்டு இவ்ளோ வருஷமா படிப்பே குறிக்கோளா இருந்து படிச்சிட்டேன் சார். என்னோட கனவு ஓரளவு நிறைவேறி இருக்குன்னா அதுக்கு நீங்கதான் சார் காரணம் என்றான் குமரன்.

    அவன் கண்களிலிருந்து நன்றிக் கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்துகொண்டிருந்தது. பரம திருப்தியுடன் அவனை உச்சி மோர்ந்தார் கிருஷ்ணன். இந்த மாதிரி உன்னைப் பாக்கணும்னு நானும் மனசைக் கல்லாக்கிகிட்டு  உன்னைப் பார்க்க வரல்லே, ஆனா எப்பவும் விசாரிச்சிகிட்டே இருந்தேன்  நீ நல்லாப் படிக்கிறியான்னு. ஒன்னோட வளர்ச்சியை அணு அணுவா ரசிச்சவன் நான். 

    “காலம் என்னோட தோற்றத்திலே பெரிய மாறுதலைச் செய்யலை, அதுனாலே நீ என்னை கண்டு பிடிச்சிட்டே. ஆனா உங்கிட்ட எவ்ளோ மாற்றம்! என்னாலே  கண்டு பிடிக்க முடியலை.  இங்கே இல்லைப்பா வெளிநாடு போயிட்டேன், இப்போதான் திரும்பி வந்தேன் ஆனா ரொம்ப சந்தோஷமா இருக்கு, உன்னைப் பாக்க” என்ற  கிருஷ்ணன், அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.

    அவருக்கு பல வருடங்களுக்கு முன் நடந்த அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.

    புதியதாக குடிபெயர்ந்திருந்த இடத்தில் என்னென்ன கடைகள் எங்கே இருக்கின்றன என்று பார்த்து வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம், அதன் காரணமாக ஒரு சின்ன நடைப்பயிற்சியும் மேற்கொண்டாற்போல் இருக்கும் என்று நினைத்து கடை வீதியில் வந்து கொண்டிருந்தார் கிருஷ்ணன்.

    அவர் மனைவி ஏங்க இங்கே பச்சைஅம்மன் மளிகைக் கடைன்னு ஒண்ணு இருக்காம், நாம வேண்டிய பொருட்களோட பட்டியலைக் குடுத்துட்டா வீட்டிற்கே வந்து குடுத்துடறாங்களாம் என்று கூறியது நினைவுக்கு வந்தது. எதிரே அந்த பச்சைஅம்மன் மளிகைக் கடை தென்பட்டது. அதன் உள்ளே நுழையலாம் என்று எண்ணிக் காலை வைத்தார். சேறும் சகதியுமாக இருந்த அந்த இடம் அவரை வழுக்கிவிட்டு கீழே தள்ளியது தலைகீழாய். நல்லவேளை கையில் கிடைத்த எதையோ பற்றிக்கொண்டு ஒருவாறு கீழே விழாமல் தப்பித்து நிமிர்ந்தார்.         

    பக்கத்தில் ஒரு பையன் அவரை பிடித்துக்கொண்டு  “என்னா பெரியவரே, பாத்து வரக் கூடாதா” என்றான். அவன் கண்களில் வெறுப்பு மண்டிக்கிடந்ததைக் கண்ட கிருஷ்ணன், “மன்னிச்சிக்கோப்பா பாக்காம காலை வெச்சிட்டேன், ரொம்ப நன்றிப்பா” என்றார்.

    “நன்றியெல்லாம் இருக்கட்டும், என் தோளை விடுங்க நான் போவணும், எனக்கு வேலை இருக்கு” என்று கூறியபடியே அவர் கையை தள்ளிவிட்டுவிட்டு நகர்ந்தான் அந்தப் பையன்.

    ஒருவாறு சமாளித்துக்கொண்டு கடைக்குச் சென்று  அங்கே இருந்தவரிடம், “நான் இந்த பகுதிக்கு புதுசா வந்திருக்கேன். மளிகை லிஸ்டைக் கொடுத்தா  வீட்டுக்கு பொருளை அனுப்புவீங்கன்னு கேள்விப்பட்டேன், அனுப்புவீங்களா?” என்றார்.

    கடைக்காரர், “ஆமாம் சார் அப்பிடிதான் அனுப்பிகிட்டு இருந்தேன், வரவர வேலை செய்ய சரியான ஆட்களே கிடைக்க மாட்டேங்கறாங்க, அப்பிடியே கிடைச்சாலும் நாலு நாளைக்கு வேலை செய்யறாங்க, அதுக்குப் பிறகு ஓடிப் போயிர்றாங்க என்னா செய்யிறது. எதுக்கும் நீங்க லிஸ்டைக் குடுத்துட்டுப் போங்க முடிஞ்சா அனுப்பறேன்” என்றார்.

    பேசிக்கொண்டே இருக்கும்போது கிருஷ்ணன் மேலே ஒரு கொத்துக் குப்பை வந்து விழுந்தது. கையால் அந்தக் குப்பையை தள்ளிவிட்டுவிட்டு  “என்னாப்பா கடையைப் பெருக்கும்போது யாராவது நிக்கிறாங்களான்னு கவனிச்சு பெருக்கக் கூடாதா” என்றார் ஆதங்கமான குரலில். ஒரு தலை நிமிர்ந்து “நான்தான் பெருக்கினேன், வேணும்னுட்டா உங்க மேலே போடுவாங்க? போவீங்களா! என்னாமோ பெரிசா குரல் விடுறீங்களே” என்று ஒரு குரலும்.

    அந்தக் குரலுக்கு சொந்தமான வெறுப்பு நிறைந்த கண்களும் கோவமான முகமும் தென்பட்டன.  இவரைத் தாங்கிப் பிடித்த அதே பையன்தான்.

    “என்னாங்க இது இப்பிடிப் பேசறான் இந்தப் பையன்” என்றார் கடைக்காரரிடம் கிருஷ்ணன்.

    “டேய் ஏண்டா இப்பிடி வர கஸ்டமரையெல்லாம் வெரட்டறதிலேயே இருக்கே, அவர்கிட்டே மன்னிப்பு கேளுடா முதல்லே” என்றார் கடைக்காரர்.

    “மன்னிப்பெல்லாம் கேக்க முடியாது. வேணும்னா வேலைக்கு வெச்சிக்கோங்க இல்லேன்னா நானு இப்பவே போறேன். எங்கூருக்கு, ரெயிலேத்தி அனுப்பிருங்க”  என்றான் பையன்.

    “எப்பிடிப் பேசறான் பாத்தீங்களா சார், இவங்க அம்மா கஷ்டப் படறாங்களேன்னு அவங்ககிட்ட எடுத்துச் சொல்லி  இவனை கூட்டி கிட்டு வந்து பத்திரமா பாத்துப்பாத்து வெச்சிக்கறேன். தொழில் சொல்லிக் குடுக்கறேன். இவன் சம்பாரிச்சா அந்த அம்மாவோட மத்த  புள்ளைங்கல்லாம் ஒருவேளை கஞ்சி குடிக்கும் அப்பிடீன்னு அந்த அம்மாகிட்ட கெஞ்சி, பணம் செலவழிச்சு ரெயில் டிக்கட்டு எடுத்து கூட்டிவந்து,  இங்கே வெச்சு சாப்பாடு போட்டு தங்க இடம் குடுத்து,  வெச்சிருக்கேன். கொஞ்சமாவது நன்னி இருக்கா பாருங்க, இவன் இப்பிடி நடந்துக்கறான்” என்று சலித்துக்கொண்டார் கடைக்காரர்.

    “இதோ பாருங்க முதலாளி,  நான் உங்களை ஒண்ணும் குறை சொல்லலையே! எனக்கு வேணாம், நான் போறேன்னு சொல்றேன். என்னைய அனுப்பிருங்கன்னு சொல்றேன், கேக்கமாட்டேங்கறீங்க. என்னைய விட்ருங்க, அனுப்பிருங்க” என்று தன் துணி மணிகளை எடுத்து வைத்துக்கொண்டு “நீங்க என்னா அனுப்பறது, நானே போயிக்கறேன்” என்றபடி வெளியே சென்று நடக்கத் தொடங்கினான்.

    இந்தச் சிறு வயதில் இவனுக்கு எங்கே இருந்து இவ்வளவு வெறுப்பும் ஆத்திரமும் வருகிறது  என்று யோசித்தார் கிருஷ்ணன். “சரி மளிகை பொருட்களை நானே வாங்கிட்டு போயிடறேன் நீங்க குடுங்க” என்று சொல்லிவிட்டு  நின்று வாங்கிக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினார்.  இரவு சப்பிட்டுவிட்டு படுத்தார். அவர் மனதில் ஏனோ மீண்டும் மீண்டும் அந்தப் பையனின் நியாபகமே வந்துகொண்டிருந்தது. நல்ல தூக்கத்தில் ஏதோ சப்தம் கேட்டு  எழுந்தார். 

    வாசலில் அக்கம்பக்கத்து வீடுகளில் இருப்போர் கூடியிருந்தனர். “ஒரு திருடன் வகையா மாட்டிகிட்டான், கட்டி வெச்சிட்டு  போலீசுக்கு சொல்லி இருக்கோம்” என்று ஒரே குரலில் சொன்னார்கள். அந்தத் திருடனை எழுப்பி  ஓங்கி ஒரு அறைவிட்டார் கீழே போய் விழுந்தான் அவன். இன்னமும் அவருக்கு ஆத்திரம் தாங்கவில்லை. இந்தச் சின்னஞ்சிறு வயசிலே திருட்டா  நினைக்க நினைக்க ஆத்திரமாய் வந்தது.

    மீண்டும் அவனை எழுப்பி அவர் பக்கமாகத் திருப்பி அவன் முகத்தைப் பார்த்து அதிர்ந்து போனார். ஆமாம் காலையில் சந்தித்த அதே கடைக்காரப் பையன். ஆத்திரமாக வந்தது அவருக்கு. “ஏண்டா நியாயமா வேலை செஞ்சு  சம்பாதிக்க முடியலே, இந்தச் சின்ன வயசிலே  திருட மட்டும் முடியுதா ?  உன்னையெல்லா கட்டி வெச்சு உதைக்கணும். தப்பே இல்லே”  என்றார் ஆக்ரோஷமான குரலில்.   

    கண்களில் கண்ணீருடன்  இவரைப் பார்த்து  “என்னை அடிங்க சார், எவ்ளோவேணா அடிங்க சார் ஆனா திருடன்னு மட்டும் சொல்லாதீங்க, சார் நான் திருட வரல்லெ சார், ஊருக்கு போக டிக்கட் எடுக்கப் பணம் இல்லே. பசிவேற குடலைப் புடுங்குது அப்பிடியே மயக்கத்திலே  இங்க படுத்திருந்தேன். அதோ அந்தப் பெரிய நாயி என் பையை எடுத்துகிட்டு ஓடிடிச்சு, அதைத் துரத்திகிட்டு வந்தேன். அந்தப் பையிலேதான் சார் எங்க அம்மாவோட  படம் வெச்சிருக்கேன். அதைத் துரத்திகிட்டுவந்தேன் சார். அந்தப் பையை வாங்கிக் குடுங்க சார்  எங்கம்மா படம் இருக்குது அதிலே என்று கதறினான். எங்க அம்மாவை படத்திலேதான் சார் தினோம் பாக்கறேன். அவங்களோட சேந்து இருக்க எனக்கு குடுத்து வைக்கலே. அந்தப் பையை வாங்கிக் குடுத்திருங்க சார்.”

    கிருஷ்ணனுக்கு  இவன் ஒரு புண்யாத்மா, திருடனில்லை என்று உள்மனம் சொல்லியது. அவர்களிடமிருந்து அந்தப்பையை வாங்கி இவனிடம் கொடுத்துவிட்டு, “சரி நீங்கள்ளாம் போங்க நான் இவனைப் பாத்துக்கறேன்” என்று  கூறிவிட்டு உடனடியாக காவல் நிலையத்துக்கு  போன் செய்து, “சார் தப்பா சொல்லிட்டாங்க. இங்கே திருட யாரும் வரலை, அந்தப் பையன் எங்க வீட்டுக்கு வந்திருக்கான். வழிதெரியாம தடுமாறும் போது திருடன்னு நெனைச்சிகிட்டாங்க. நீங்க கஷ்டப்படாதீங்க  அந்தப் பையனை நான் பாத்துக்கறேன்” என்று கூறிவிட்டு, “நீ வாப்பா போகலாம்”, என்று அவன் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.

    “வாப்பா நீ இங்கே உக்காரு, காமாக்ஷி  இவனுக்கு வயித்துக்கு  ஏதாவது குடு” என்றார். காமாக்ஷி ஒரு தட்டில் உணவு எடுத்துவந்து அவனிடம் வைத்தாள். “சாப்புடுப்பா”  என்றார்.  அள்ளி அள்ளி விழுங்கிவிட்டு, “தட்டை எஙக சார் கழுவணும்”  என்றான். “அதோ அங்கே போயி வாஷ் பேசின்லே சுத்தம் செஞ்சு கொண்டு வா”  என்றார் கிருஷ்ணன்.

    அவனுக்கு துடைத்துக்கொள்ள ஒரு துண்டைக் கொடுத்துவிட்டு, கையை துடைத்துக்கொண்டு  வந்த அவனை தன் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு, “ஆமாம், உனக்கு ஏன் இவ்ளோ சின்ன வயசிலே இவ்வளவு ஆத்திரமும், கோவமும் வருது ?” என்றார்.

    “அந்த மளிகைக் கடைக்காரர்  உன்னை சரியா நடத்தலையா. கொடுமைப் படுத்தறாரா? என்கிட்ட சொல்லு  அவனை ஒரு வழி பண்றேன்”  என்றார்.

    “அவரு பாவம் சார், நல்ல மனுஷன்  அவருமேலே தப்பில்லே, துட்டுக்கு ஆசைப்பட்டு எங்க ஊர்லேருந்து நிறையா பேரு  படிக்கணும்னு ஆசைப்படுற  சின்னப் புள்ளைங்களையெல்லாம்  மெட்ராசுக்கு அனுப்பறாங்க. இவரு கூட்டியாந்து கடையிலே வேலைகுடுத்து  நல்லாத்தான் வெச்சிக்கறாரு.

    முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட கதை சார் என்னோடது.  என் அம்மா என்னைப் படிக்க வைக்க முடியாம ரொம்பக் கஷ்டப்படறாங்க. எங்க அப்பா தினோம் குடிச்சிட்டு வந்து அம்மாவைப் போட்டு அடிக்கறாரு, தம்பி தங்கையெல்லாம் கஷ்டப்படுது, ராத்திரி குடிச்சிட்டு வந்து எல்லாரையும் அடிக்கறாரு. காலையிலே  மன்னிப்பு கேக்கறாரு, மறுபடியும் ராவிக்கு  குடிச்சிட்டு வந்து நிக்கறாரு.

     சாப்பாட்டுக்கு கூட வழியில்லாம அம்மா கஷ்டப்படுது. எங்கம்மா என்னா செய்வாங்க? ஆனா  ஒரு நாளுகூட  எங்கப்பனை திட்டாது எங்கம்மா. இதமா அவரு வாயைத் துடைச்சு விட்டு படுக்க வெச்சு விசிறியாலே வீசறாங்க . அவரு தூங்கறாரு,  ஏம்மா ஒரு நாளைக்காவது  நீ கேள்வி கேட்டாதானே அவரு திருந்துவாரு அப்பிடீன்னு நான் கேட்டா, “அடப் போடா  அவரு நல்ல மனுஷன்டா. ஏதோ போறாத காலம் குடிக்க ஆரம்பிச்சிட்டாரு, நீ அவரு பெத்த மகன்டா  என் முன்னாலே அவரை எது சொன்னாலும் நான் ஒப்புக்க மாட்டேன்”னு எங்கிட்ட  சண்டை பிடிக்குது. இத்துப்போன கயிறாலே இறுக்கிக் கட்ட முடியாது, உறவு நல்லா இருக்கணும்னா  உண்மையான பாசமும் நேசமும், அன்பும், கருணையும், நடிப்பு கலக்காத நேர்மையும் அவங்கவங்களுக்கா  வரணும், சொல்லிக்குடுத்து வரவைக்க முடியாது,  அப்பிடீன்னு ஏதேதோ சொல்றாங்க.   எனக்கு புரியமாட்டேங்குது.

    உனக்கென்னா நான் கூலி வேலை செய்தாவது உன்னைப் படிக்க வைக்கிறேன் அப்பிடீங்குது. எனக்குன்னு ஒரு மனசு இருக்குதில்லே.  எனக்கு மனசு வரலே. அதுனாலே எங்க அம்மாவை நல்லபடியா வெச்சிக்க, நான் சம்பாரிக்கணும், என் குடும்பம் என்னாலே முன்னுக்கு வரணும், அதுக்காகத்தாங்க இந்த வேலைக்கு வந்தேன்.

    ஆனா இங்கே வேலைக்கு வந்தபெறகுதான் தெரியுது, எவ்ளோபேரு  படிக்க வழியில்லாமே எங்களை மாதிரி கஷ்டப்படறாங்கன்னு. நாங்கள்ளாம் குழந்தைங்க.  ஆனா விளையாடணும்னுகூடத் தோணலீங்க, பாடுபட்டு முன்னுக்கு வரணும்னு தோணுது. அது தப்பாங்க? ஆனா அதுக்குகூட வழியில்லையே ? காலம் காலமா  நாங்க இப்பிடி  கஷ்டப்பட்டுகிட்டேதான் இருக்கணுமா? எங்களோட எதிர்காலமே விணாகுதே நாங்க படிக்க முடியலையே. எங்களுக்கு விடிவுகாலமே இல்லையா ன்னு யோசிச்சேனுங்க, கோவம் கோவமா வருது.

    குழந்தைங்களை வேலைக்கு வெச்சுக்க கூடாதூன்னு சட்டம் மட்டும் போட்டுட்டா போதுமா சார்?  அந்தக் குழந்தைங்களோட வயித்துப் பசியையும்   அதுங்க எதிர்காலத்தையும் யாரு சார் பாக்கறாங்க? எங்களை மாதிரி சின்னப் பசங்களைப் படம்பிடிச்சு வருங்காலத் தூண்கள்னு போஸ்டர் அடிச்சு ஒட்றாங்க சார், ஓட்டு வாங்கறதுக்காக. 

    ஆனா என்னா சார் செய்யறாங்க எங்களுக்கு? எங்க அப்பனெல்லாம் குடிச்சு அழியறதுக்கு  நாட்டுலே நிறைய சாராயக் கடை திறக்கறாங்க, ஏன் சார் சாராயம் விக்காம நம்ம நாட்டை  முன்னுக்கு கொண்டு வரமுடியாதா  ?

    ஏன் சார் இந்த அரசியல்வாதிங்க  இப்பிடி செய்யறாங்க? அந்தக் கோவம்தான் சார். இவ்ளோ வெறுப்பை வெச்சுகிட்டு எப்பிடி சார் நான் சிரிக்க முடியும்? எப்பிடி கோவப்படாம இருக்க முடியும்? நான் எப்பிடிங்க வேலை செய்வேன்.” மூச்சு வாங்கியது குமரனுக்கு…..

    “தூங்க முடியலைங்க  பாடமெல்லாம் கனவா வருதுங்க திடுக்கிட்டு எழுந்துக்கறேன்.  மளிகைக் கடையிலே ஒவ்வொரு மூட்டையைப் பாக்கும்போதும்  ஒவ்வொரு பாடபுத்தகம் நினைவுக்கு வருதுங்க.

    எங்க வாழ்க்கை இப்பிடி சிதறிப் போனக் கடுகு மூட்டை மாதிரி ஆயிப்போச்சுங்க”, என்றபடியே குமுறிக் குமுறி  அழ ஆரம்பித்த குமரன் உணர்ச்சியின் வேகம் தாங்காமல் அப்படியே மயங்கினான்.

    காமாக்ஷி அவனை மடியில் கிடத்திக்கொண்டு  இதமாகத் தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தாள்.  கண்களைத் துடைத்துக்கொண்டு ஓடிப்போய்  ஒரு பாத்திரத்தில்  தண்ணீர் கொண்டு வந்தார் கிருஷ்ணன்.  அந்தத் தண்ணீரை வாங்கி குமரன் கண்களைத் துடைத்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவன் வாயில் ஊற்றினாள் காமாக்ஷி.

    உணர்வுக்கு வந்த குமரன் திடுக்கிட்டு எழுந்தான்.

    “அம்மா அய்யா என்னை மன்னிச்சிருங்க. ஒழுங்கா படிக்கக் கூட வக்கில்லாத  ஏழைங்க நானு என்னைப் போயி  உங்க மடியிலே. என்னை மன்னிச்சிருங்க, தெரியாம நான் உங்க மடியிலே படுத்துகிட்டேன், என்று நடுங்கினான் குமரன். அவனை இழுத்து அணைத்து மீண்டும் தன் மடியில் கிடத்திக்கொண்டு   அவன் முதுகை இதமாகத் தடவிக் கொடுத்தபடியே,  நானும் உங்க அம்மா மாதிரிதான் படுத்துக்கோப்பா என்றாள். அவள் கைகள் அவனை தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தன.

    எங்கும் இருப்பான் நாராயணன் என்று கூறிய ப்ரகலாதனின், தன் பக்தனின்,  வாக்கைக் காப்பாற்ற ஜகமெங்கும் நிறைந்து, அணுவைச் சதகூறிட்ட அணுவிலும் உளன் என்று ஆழ்வார்கள் பாடும்படியாக  சர்வ வியாபியாக நிறைந்து  தூணிலிருந்து வெளிப்போந்து நரசிம்மமாக வந்து ஹிரணியனின்  வயிற்றைக் கிழித்து குடலை மாலையாகப் போட்டுக்கொண்ட நாராயணன், அதன் பிறகு  ஹிரணியனுடைய மார்பில் கையை விட்டுத்  துழாவி அவனுடைய ஹிருதயத்தை தன்னுடைய கைகளால் தடவிக் கொடுத்தானாம்.

    ஏனென்றால் அவன் சொன்னதைக் கேட்டுக் காவல் புரிந்து,  அதன் காரணமாக முனிவரால் சபிக்கப்பட்டு ஹிரணியனாகப் பிறந்து உள்ளே பக்தி இருந்தாலும் பிறப்பின் காரணமாக நாத்திகன் போல் நடித்து, மகனைக் கொடுமைப்படுத்தி எல்லோரிடமும் கெட்ட பெயரெடுத்து, அசுரன் என்று ஏசப்பட்டு, ஹிரணியன் தன்னை அடைய  எவ்வளவு கொடுமைகளை அனுபவித்தான் என்று உணர்ந்து மனம் இரங்கி அவனுடைய ஹிருதயத்தை இதமாகத் தடவிக் கொடுத்த நாராயணனைப் போல என்று பௌராணிகர்  சொன்னது நினைவுக்கு வந்தது. 

    இந்தச் சின்னஞ்சிறு வயதில்  எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கிறான்  குழந்தை,  என்றுணர்ந்து இதமாக தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தாள்  காமாக்ஷி . இந்தக் குழந்தைகளைக் கூட முறையாகக் காப்பாற்றாமல் இருக்கும் ஹிரண்யர்களை சம்ஹாரம் செய்ய எப்போது நாராயணுனுக்கு மனம் வருமோ என்ற எண்ணம் வந்தது காமாக்ஷிக்கு.

    சுதாரித்துக்கொண்டு எழுந்த குமரன், “அம்மா நான் போன ஜென்மத்திலே செஞ்ச புண்ணியம் உங்களை மாதிரி இன்னொரு அம்மா அப்பா கிடைச்சது.  ஐயா  உங்ககிட்டகூட மரியாதை இல்லாம நடந்துகிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. நான் கிளம்பறேன் எப்பிடியாவது கஷ்டப்பட்டு முன்னுக்கு வருவேன் சார்  ஆனா உங்க ரெண்டு பேரையும் மறக்க மாட்டேன்.  நான் வரேன்”, என்று கிளம்பினான்.

    “கொஞ்சம் நில்லுப்பா.   நீ படிக்கறதுக்கு நான் உதவறேன், நல்லா படிச்சு முன்னுக்கு வருவியா ?” என்றார். கிருஷ்ணன். “சத்தியமா படிச்சு முன்னுக்கு வருவேனுங்க   இது எங்க அம்மா மேலே  சத்தியம்” என்றான் குமரன்.

    அத்தனையும் மனக்கண்ணில் படமாக ஓடியது  கிருஷ்ணனுக்கு.

    “ஐயா குப்பையை தூக்கி உங்க மேலே நான் போட்டேன், ஆனா நீங்க என்னைக் கோபுரத்தில் ஏத்தி வெக்கறீங்க. எத்தனை பிறவி எடுத்தாலும் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கேன் நானு.”, என்ற குமரன் நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்தான் .  

    சுதாரித்துக்கொண்டு  “குமரா நீ ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு வளந்துட்ட”, என்றவர் அவனைத் அணைத்துக்கொண்டு, “உன்னைய மாதிரி பசங்க இந்த நாட்டுக்கே வழிகாட்டிப்பா. உங்க அம்மா நல்லா இருக்காங்களா என்றார். கூச்சப்பட்டுக்கிட்டு   வெளியிலே நிக்கறாங்க சார்” என்றான் குமரன். 

    “அப்பா எங்கே இருக்காரு ?”  என்றார் கிருஷ்ணன்.

    “அப்பா இல்லீங்க  அவரு குடல் வெந்து  எங்களையெல்லாம் தவிக்க விட்டுட்டு  இறந்து போயிட்டாரு” என்றான் குமரன்.

    “வருத்தமா இருக்குப்பா  ஆனா எங்களை மாதிரி இருக்கறவங்க வருத்தப் படறதைத் தவிற வேறொண்ணும் செய்ய முடியலை.”

    “நீங்க உள்ளே வாங்கம்மா. பிள்ளையைப் படிக்கவைக்கணும்னு நெனைக்கிற உங்களை மாதிரி  அம்மாக்கள்தான்  இந்த நாட்டுக்கு தேவை. நீங்க இந்த மாதிரி பிள்ளையைப் பெத்ததுக்கு  தலைநிமிர்ந்து நடக்கணும். நீங்க கூச்சப்படக் கூடாது.

    இந்த நாட்டிலே  சுதந்திரம் வாங்கி 65 வருஷம் ஆகியும் உங்க நெலைமைய இதே மாதிரி வெச்சிட்டிருக்கோமே.  நாங்கதான் கூச்சப்படணும். கூவத்தையெல்லாம் கங்கையாக்கணும்னு நெனைக்காம கங்கையையுயும் கூவமாக்கிட்டு இருக்கோமே நாங்கதான் கூச்சப்படணும்”  என்றார் கிருஷ்ணன்.

    குமரனின் அம்மா கையைக் கூப்பிக்கொண்டு, “நீங்களும் அம்மாவும் நல்லா இருக்கணுங்க”  என்றாள் கண்ணில் நீருடன்.  

    எல்லாப் பெண்மணிகளிலும் உள்ளே அம்மா இருக்கிறாள். தாய்மை ப்ரபஞ்சத்தின் மூலைமுடுக்குகளில் கூட சர்வ வியாபியாய் இருக்கிறது என்று எண்ணம் ஓடியது கிருஷ்ணனுக்கு அவருடைய அம்மாவே அவரை  ஆசீர்வதித்தது போல் ஒரு உணர்வு வந்தது.  கிருஷ்ணனும் கையைக் கூப்பினார் தன் அம்மாவை நினைத்துக்கொண்டு.

                             சுபம்

    Share
  • மாற்றான் தோட்டம்

    தமிழ்த்தேனீ

    யதேச்சையாக கண்ணில் பட்டாள் அவள்.

    அப்பப்பா  என்ன அழகு, ஆனால் பல நூறு ஆண்டுகளாய்  சோகை படிந்த  தேவதையின் ஓவியம் கருமேகத்தின்  இடைவெளியில்  மின்னல் கீற்று பளீரென்று தெரியும் போது  தோன்றி மறைவது போல்  அவள் அழகைத் தாண்டி அவள் கண்ணில்  ஒரு சோகம். தெளிவாகத் தெரிந்தது. அவள் கண்களின் கீழே கருவளையம் அவள் முகத்தின்  சோகத்தை வெளிப்படையாகப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

    அரசல் புரசலாக அவள்  வாழ்க்கை அம்பலத்துக்கு வந்தது. பார்யா ரூபவதி சத்ரு என்னும் பழமொழி நினைவுக்கு வந்தது. ஆனால் அந்தப் பழமொழி உண்மையானால் அவள் கணவன் கண்களில் அல்லவோ சோகம் தெரியவேண்டும், இங்கே மாறாக இருக்கிறதே?

    மனதில் தோன்றிய சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள அவளைப் பற்றி, அவள் குடும்பத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினான் ரமேஷ்.

    அவள் குழந்தையிலேயே அழகாக இருந்ததால் அவளுக்கு ரூபா என்றே பெயரிட்டிருந்தனர் அவளுடைய பெற்றோர்.

    காலைத் தொடும் நீண்ட கருகருவென்ற  கேசம், தாமரைத் தடாகத்திலே நீந்தும் மீனைப் போன்ற அகலமான கரிய விழிகள், தீர்மையான நாசி, சற்றே இதழ் விரிந்திருக்கும் ரோஜா மொட்டுப் போன்ற உதடுகள், அசாத்தியமான, அலங்காரமான வளைவுகளுடன் மோவாய், அதற்கும் கீழே சங்குக் கழுத்து, இதற்கு மேலும் வர்ணிப்பது பாவம் என்று தோன்றியது ரமேஷுக்கு. என்ன இருந்தாலும் அவள் மாற்றான் தோட்டத்து மலர்.

    அந்த மலரை வாடாமல்  மெல்லிய கைகளின் அழுத்தமும் இல்லாமல் இடைவெளிவிட்டு  பொத்தி வைத்துக்கொண்டு,  காலம் முழுவதும்   வைத்துக்கொண்டு காப்பாற்றி, அவள் முகத்தில் ஆனந்த மயமான புன்னகையை வரவழைத்து, அவள் முகத்தில் சிரிப்பைத் தவிர சோகத்தின் நிழலே விழாதவாறு,   ஒரு தேவதையை உபாசனை செய்வது போல், அவளை உபாசித்தால்தான் தன் ஜென்மம் கடைத்தேறும்  என்று உணர்ந்தான் ரமேஷ். 

    எப்படி இது சாத்தியமாகும்? எப்படி அவளை அந்தச் சிறையிலிருந்து விடுவிப்பது என்பதே சிந்தனையாய் மூளைக்குள் சுழன்று சுழன்று அவனை அசத்திக்கொண்டிருந்தது. இதற்கு எப்படித் தீர்வு காண்பது என்னும் யோசனையில் இருந்த அவனுக்கு பலவிதமான சந்தேகங்கள். அவள் இவனை நம்புவாளா? ஏற்கெனவே ஒரு ஆண்மகனால் கொடுமைப் படுத்தப்பட்ட பெண்னின் மனநிலையில் இன்னொரு ஆண்மகனை நம்பி தன் வாழ்க்கையை ஒப்படைப்பாளா? அவள் நம்பிக்கையை எப்படிப் பெறுவது என்றெல்லாம் எண்ணங்கள் குறுக்கும் நெடுக்குமாக மூளைக்குள் வலம் வரத் தொடங்கின.

    ஒரு மனிதனுக்கு அழகான மனைவி அமைவது வரம். அப்படி வரம்போல் அமைந்த அழகான மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டு வாழாமல், எப்படி ப்ரச்சனைகளை உருவாக்கிக் கொண்டு தானும் நிம்மதியில்லாமல் அந்த தேவதையையும் நிம்மதியாக இருக்க விடாமல் இப்படி இருக்கிறார்கள் மனிதர்கள் என்று  நினைத்தால் ஆத்திரம் வந்தது ரமேஷுக்கு.

    எப்போதுமே மனிதன் கிடைக்காதவரையில் அது கிடைக்க ஏங்குகிறான், ஆனால் அது கிடைத்ததும் அதன் மதிப்பு தெரியாமலே வாழ்கிறான். எப்போதுதான் இவர்கள் திருந்துவார்களோ.

    சரி இந்த தேவதையை நாம் எப்படியாவது நல்லபடியாக வாழவைக்கவேண்டும். நாம் இவளை வைத்துக்கொண்டு வாழ்வதைப் பார்த்தாவது இவரைப் போன்ற மனிதர்கள் திருந்தட்டும்.  இவன் திருந்தினால் என்ன, திருந்தாவிட்டால் நமக்கென்ன, கண்ணுக்கெதிரே துன்பப்படும்  இவளை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும் என்று மனது துடித்தது.

    அவன் எதிர் பார்த்த வாய்ப்பு அதிர்ஷ்டவசமாக அவனைத் தேடி வந்தது.

    ஆமாம் வாசலில் யாரோ அழைப்பு மணியை அடிப்பது கேட்கவே, ஜன்னல் வழியே பார்த்தவன் அதிர்ந்தான். அந்த அழகுத் தேவதை அவன் வீட்டு வாசலில் நின்றிருந்தாள். ஓடிப்போய்க் கதவைத் திறந்து, “என்ன வேண்டும் வாருங்கள் உள்ளே” என்றான். 

    “அதற்கெல்லாம் நேரமில்லை என் புருஷனுக்கு திடீரென்று நெஞ்சு வலி எனக்கு பதட்டமாக இருக்கிறது” என்று பதறினாள் அவள். இதோ ஒரு நொடியில் வருகிறேன் என்று கூறிவிட்டு, கதவைப் பூட்டிக்கொண்டு, அவனுடைய காரை எடுத்து ஓட்டிக்கொண்டு வந்து  அவர்கள் வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு,  கைத்தாங்கலாய் அவள் புருஷனைக் கூட்டிவந்து காரில் உட்காரவைத்துவிட்டு, அவளையும் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று,  அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துவிட்டு….

    அவள் ஓய்ந்து போய் உட்கார்ந்திருந்தாள். “நீங்கள் கவலைப்படாதீர்கள், ஒன்றும் ஆகாது”  என்று அவளுக்கு ஆறுதல் கூறினான்.

    “நீங்கள் அவர்மேல் இவ்வளவு பாசத்துடன் இருக்கிறீர்களே அவர் ஏன் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியாமல் இருக்கிறார்” என்றான்.

    “என்னை நீங்கள் நீ என்றே அழையுங்கள்”, என்றாள் அவள்.

    “என் தலைவிதி அப்படி இருக்கிறது, நான் அழகாகப் பிறந்ததுலே என்னோட தப்பு என்ன இருக்குன்னே புரியலை. எப்போ பாத்தாலும் என்னை சந்தேகப் பட்டுக்கொண்டே இருக்காரு. நான் எப்பிடி நிரூபிக்கிறதுன்னே புரியலை” என்று கேவினாள் அவள்.

    “நான் ஒண்ணு சொன்னா தப்பா நெனைக்க மாட்டீங்களே, உங்களோட அருமை அவருக்கு புரியலை. எனக்கு மட்டும் உங்களை மாதிடி ஒரு பொண்ணு கிடைச்சிருந்தா அப்பிடியே தங்கத் தாம்பாளத்திலே வெச்சுத் தாங்குவேன்” என்று கூறிவிட்டு  அவளையே பார்த்தான் ரமேஷ்.

    அவள் அவனை நோக்கி ஒரு விரக்திப் புன்னகையை வீசிவிட்டு “எப்படி உங்களால் இவரிடமிருந்து என்னைப் பிரித்து அழைத்துப் போகமுடியும், இதெல்லாம் நடக்கிற காரியமா” என்றாள்.

    “நீ மட்டும்  சரின்னு சொல்லு ரூபா, நீ மட்டும் சரின்னு ஒரு வார்த்தை சொல். இனிமே உன் கண்ணுலேருந்து ஆனந்தக் கண்ணிர்தான் வரணும், அதுக்கு நான் பொறுப்பு” என்றான் தீர்மானமாக.

    “இவரைப் பத்திக் கவலைப்படாம, இவர் கண்ணிலேயே அகப்படாத இடத்துக்கு உன்னைக் கூட்டிக்கிட்டு போய் நான் காலமெல்லாம் சந்தோஷமா வெச்சிக்கறேன், இது சத்தியம்” என்றான் உணர்ச்சி வசப்பட்டு.

    அவள் இவன் மேல் சாய்ந்து அழத்தொடங்கினாள், அவளை தலையை ஆதரவாகத் தடவிக் கொடுத்து, “இனிமேல் உன் கண்ணுலேருந்து ஆனந்தக் கண்ணீரமட்டும்தான் வரணும்.  நான் பாத்துக்கறேன்” என்றான் ரமேஷ்.

    சொன்ன வாக்கைக் காப்பாற்ற, தகுந்த இடமாகப் பார்த்து அவளை  பெங்களூருக்கு அழைத்துப் போய் ஒரு பெரிய வீட்டில் வாழத் தொடங்கினர் இருவரும். வாழ்க்கை மிக மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருந்தது.

    இவர்கள் இருந்த வீட்டிற்கு எதிர் வீட்டில் குடியிருந்தான் கமலேஷ், யதேச்சையாக கண்ணில் பட்டாள் அவள், அப்பப்பா  என்ன அழகு, ஆனால் பல நூறு ஆண்டுகளாய்  சோகை படிந்த  தேவதையின் ஓவியம் கருமேகத்தின்  இடைவெளியில்  மின்னல் கீற்று பளீரென்று தெரியும் போது  தோன்றி மறைவது போல்  அவள் அழகைத் தாண்டி அவள் கண்ணில்  ஒரு சோகம். தெளிவாகத் தெரிந்தது. அவள் கண்களின் கீழே கருவளையம் அவள் முகத்தின்  சோகத்தை வெளிப்படையாகப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

    அவன் மனதில் ஒரு வைராக்கியம் தோன்றியது. சரி இந்த தேவதையை நாம் எப்படியாவது நல்லபடியாக வாழவைக்கவேண்டும். நாம் இவளை வைத்துக்கொண்டு வாழ்வதைப் பார்த்தாவது இவரைப் போன்ற மனிதர்கள் திருந்தட்டும், கண்ணுக்கெதிரே துன்பப் படும்  இவளை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும் என்று மனது துடித்தது. மனதில் தோன்றிய சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள அவளைப் பற்றி, அவள் குடும்பத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினான் கமலேஷ்.

    ஒரு நாள் அவள் மட்டும் தனியாக இருக்கும்போது “உன் புருஷன் ரமேஷைப்  பத்திக் கவலைப்படாம நீ மட்டும் சரின்னு ஒரு வார்த்தை சொல் ரூபா, இந்த ஆளு  கண்ணிலேயே படாத இடத்துக்கு உன்னைக் கூட்டிக்கிட்டு போய் நான் காலமெல்லாம் சந்தோஷமா வெச்சிக்கறேன், இனிமே உன் கண்ணுலேருந்து ஆனந்தக் கண்ணீர்தான் வரணும் அதுக்கு நான் பொறுப்பு. இது சத்தியம்” என்றான் தீர்மானமாக உணர்ச்சி வசப்பட்டு  கமலேஷ் . 

    Share