Tag: தமிழ்த்தேனீ

  • பொங்கலோ பொங்கல்

    2018 பொங்கலோ பொங்கல்

    இன்று பொங்கல் திருநாள்

    என் துணைவியார் விடியற்காலையிலே எழுந்து பொங்கல் பானை வைக்க எல்லாவற்றையும் ஏற்பாடு செய்ய ஆரம்பித்துவிட்டார், நானும் சீக்கிரம் எழுந்து கூடமாட உதவி செய்வோம் என்று ஏதேனும் உதவி வேண்டுமா என்றேன்,

    ” முதல்லே பல் தேச்சுட்டு காப்பி மேசைமேலே வெச்சிருக்கேன் அதைக் குடிச்சிட்டு கரும்பை எடுத்து நறுக்கி அதை சின்னஞ்சிறிய துணடுகளாக நறுக்கி குடுங்கோ, அதோட அங்கே மஞ்சள் கொத்து வெச்சிருக்கேன் அதையும் சேர்த்து ஒரு கரும்புத் துண்டையும் வெச்சி நன்னா கட்டி அதை அந்தப் பொங்கல் பானையிலே கட்டிக் குடுங்கோ, சீக்கிரம் குளிச்சிட்டு வந்தா நல்லது, இன்னிக்கு பொங்கல் விசேஷமான திருநாள் , சூரியபகவானுக்கு உகந்த நாள் அதுனாலே சூரியனையும் நம்ம முன்னோர்களையும் மனப்பூர்வமா நெனைச்சுக்கற நாள் ,

    குளிச்சிட்டு நீங்க வழக்கமா செய்யற தர்ப்பணம் செஞ்சு முன்னோர்கள் கிட்டே வேண்டிக்கோங்க. அதுக்கு தட்டு டம்ளர் எல்லாம் தயாரா வெச்சிருக்கேன், அதுக்கப்புறம் பெருமாள் சேவிக்கலாம், பெருமாள் அறையை நன்னா சுத்தம் பண்ணி பூவெல்லாம் பறிச்சு தட்டிலே வெச்சிருக்கேன் , வெற்றிலை பாக்கு மஞ்சள் பழம் எல்லாம் வெச்சிருக்கேன் , கரும்புத் துண்டத்தை அதிலே வையுங்கோ, அக்‌ஷதை கலந்து வெச்சிருக்கேன்,

    சந்தனம் கரைச்சு வெச்சிருக்கேன், தேங்காயை எடுத்து சமபாகமா உடைச்சு அதிலே வையுங்கோ , பூஜைக்கு ரெடியா வெச்சிக்கலாம் , உங்களுக்கு பாத்ரூமிலே துண்டு எல்லாம் போட்டிருக்கேன் நேத்து உடுத்திண்ட பழசோட போயி தொடாதீங்கோ, நம்மோட முன்னோர்களுக்கு மடி ஆசாரத்தோட செய்யணும், பெருமாளுக்கும் சாளிக்ராமத்துக்கும் ஆசாரத்தோட பூஜை புனஸ்காரம் செய்யணும், சீக்கிரம் குளிச்சிட்டு வாங்கோ வந்து உதவி செய்யுங்கோ என்றாள். மூச்சுவிடாமல் ”
    நினைத்துப் பார்த்தேன் நாம செய்யறதுக்கு என்ன இருக்கு எல்லாத்தையும் இவளே செஞ்சு தயாரா வெச்சிட்டு நான் ஏதோ உதவறா மாதிரி பேசறாளே இந்தப் பாங்கு நம்ம குடும்பத்திலே நம்மோட இந்திய மண்ணிலே பிறந்து வளர்ந்த இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமான ஒரு பதிவிரதாத் தனமில்லையோ என்று எண்ணும் போது மனம் விகசிக்கிறது.

    நம்மைத் தாய்க்குப் பின் தாரமாய் தாங்கி வழிநடத்தி ஆதரவாய்த் தலை தடவி (இந்த தலை தடவிங்கறதுக்கு வேற அர்த்தம் நீங்க எடுத்துண்டா நான் பொருப்பில்லே) சரி அப்பிடியே அர்த்தம் எடுத்துண்டாலும் இதுக்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரான்னு நாம அதுக்காகத்தானே ஏங்கி ஏங்கி எல்லாப் பொண்ணையும் பாத்து அதெல்லாம் கிடைக்காம கடைசியிலே இவளை ( ஒரு நல்ல பொண்ணைக் கல்யாணம் பண்ணிண்டோம் ) ன்னு நெனைப்பு ஓடறது .

    அழகாயிருப்பவர்கள் எல்லோரும் கற்பை விலை பேசுகிறார்கள், அமெரிக்காவைச் சேர்ந்த கிசெல்லே வயது 19, மாடல் அழகியான இவர் ஜெர்மன் நாட்டை மையமாக வைத்து இயங்கும் இணைய தளத்திலே தன் கற்பை ஏலம் விட்டிருக்கிறார். அந்தக் கற்பை விலைக்கு வாங்க ப்ரபலமான ஹாலிவுட் நடிகர்கள் தொழிலதிபர்கள், எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்திருக்கின்றனர்.

    ஆனால் அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபியைச் சேர்ந்த ஒரு ஷேக் 15 கோடிக்கு ஏலம் எடுத்து அந்தப் பெண்ணின் கற்பை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார், இதன் மூலம் அறிவது என்னவென்றால் கற்பின் விலை இன்றைய நிலவரப்படி 15 கோடி இன்னும் உயரலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.. எனும் செய்தியை தினமலர் வாரமலரில் பார்த்தேன்,

    ஆக கற்பு என்பது கயவர்கள் மெல்லும் அவலாகிப் போனதில் வியப்பில்லை. ஆண்டாளையும் சாடுவர் எல்லோரையும் சாடுவர் , பாவம் அவர்களுக்கு கற்புள்ள பெண்கள் கிடக்காத ஏக்கத்தை எப்படித்தான் சரிசெய்துகொள்வது.

    சரி அதைவிடுவோம் பொங்கல் நன்நாளில் நாம் பொங்கல் பானைக்கு கரும்பும் மஞ்சளும் கட்டுவோம் என்று முடிவுக்கு வந்து ஒரு கயிறை எடுத்து சுத்தம் செய்து பொங்கல் பானையில் மஞ்சளையும் கரும்பையும் கட்டினேன்.

    ஏனோ தெரியவில்லை “மாங்கல்யம் தந்துனானேனா மமஜீவன ஹேதுனா” மந்திர கோஷமும் நாதஸ்வரமும் என் மனதிலே உச்சகட்டத்தில் ஒலிக்கிறது,

    நமக்கு அழகும் நளினமும் கவர்ச்சியும் நிறைந்த நயன்தாரா, போன்ற பெண்களை காதலிக்க முடிகிறது ஆனால் கல்யாணம் செய்து கொள்ள பாமா ருக்மணி ரேவதி,  வசந்தா ஆனந்தி போன்ற பெண்களே கிடைக்கின்றனர், ஆனாலும் இவர்கள் போதுமைய்யா நமக்கு , (காலத்துக்கும் கஞ்சி ஊத்துவாங்க) நம்மைத் தூக்கிப் போடாமல், இப்போது புரிகிறதா ஆண்டாளின் கற்பு அரங்கன் மேல் காதல் ஆத்ம சமர்ப்பணம் எல்லாம் என்னவென்று.

    காலம் முழுவதும் நாம் கட்டிய மஞ்சள் கயிற்றுக்காக நம்மையேக் கணவனாக வரித்து அடித்தாலும் அணைத்தாலும் நம்மையே அடித்து நம்மையே அணைக்கும் இவர்கள்தானே கற்புள்ளவர்கள், ஒப்பனை செய்து கற்பை விற்கும் பெண்கள் நமக்குத் தேவையா ,

    வேண்டவே வேண்டாம் என்று இந்தப் பொங்கல் திருநாளில் ஒரு நல்ல முடிவெடுத்து, இவர்கள் செய்யும் பொங்கலில் பால் பொங்கியவுடன் பொங்கலோ பொங்கல் என்று உரக்க கோஷமிட்டு ஆண்டாளையும் அரங்கனையும் விநாயகரையும் வேங்கடவனையும் சூரியனையும் விவசாயிகளையும் எருதுகளையும், பசுக்களையும் , ஏரையும் வயலையும், நெல், அரிசி மஞ்சள் கரும்பு என்று எல்லாவற்றையும் மனதுக்குளே பசுமையாய் நினைத்துக் கொண்டு கொ

    கொண்டாடுவோம் பொங்கலோ பொங்கல்
    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

    Share
  • “ வர்லாம் வா “

     

    தமிழ்த்தேனீ

    கற்பனையான ஒரு பதிவு இது, பெரும் யோகிகளும் ஞானிகளும் இந்த சம்சார பந்தத்தை அறுத்துக்கொண்டு இறைவனை அடைய மிகவும் மனப்பக்குவம் தேவை என்று சொல்கிறார்கள்.  பலர் ஏதேனும் துன்பம் வந்தாலோ என்னை ஏன் இறைவா இப்படி சோதிக்கிறாய் அழைத்துக் கொண்டு போய்விடு என்பார்கள், அழைத்துக் கொண்டு போய்விடு என்று சொல்பவர்கள் எல்லாம் மனப்பூர்வமாகவா சொல்கிறார்கள் , அது அவ்வளவு எளிதா என்று சிந்தித்தேன், அதனால் வந்த கற்பனை இது .

    “ வர்லாம் வா  “   சிறு கதை

    *இப்போ என்னோட வரியா மானுடனே வர்லாம் வா என்றது அமானுஷ்யக் குரல்
    அட மறு படியும் ஆரம்பிச்சிட்டியா நான் கொஞ்சம் பலகீனமான உடனே எங்கேருந்தோ வந்து வர்லாம் வா வர்லாம் வான்னு கூப்பிட ரெடியாக காத்துகிட்டு இருக்கே , மத்த நேரத்திலே நீ எங்கே இருக்கே என்ன செய்யறே ஒண்ணுமே புரியமாட்டேங்குது

    நானும் ரொம்பக் காலமா நீ யாரு எங்கே இருக்கே என்னதான் செஞ்சிண்டு இருக்கே அப்படீன்னு ஆராய்ஞ்சிண்டே இருக்கேன் இது வரைக்கும் ஒரு சின்ன ஆதாரம் கூட கிடைக்கலே
    தவஸ்ரேஷ்டர்களும், முனிவர்களும், யோகிகளும், சித்தர்களும் பக்தி செஞ்சா போதும், பாவம் பண்ணாம இருந்தா போதும் ,கூடிய வரைக்கும் புண்ணியம் செய்யுங்க உன்னை எளிதா அடையலாம்ன்னு காலம் காலமா சொல்றாங்க , அவங்களாலே கூட உன்னை அவ்ளொ எளிதா நெருங்க முடியலே.

    ஆனா பக்திமான்லேருந்து சக்திமான் வரைக்கும் நிரூபிக்கிறாங்க பணம் இருந்தாத்தான் உன்னை அடைய முடியும்னு. யார் பணத்தை அதிகமா சேத்து வெச்சு பதுக்கி வெக்கிறாங்களோ அவங்களை யாராவது ஒருத்தன் உன்கிட்ட அனுப்பறான். இல்லேன்னா அவங்களுக்கு நீயே தரிசனம் குடுக்கறே , உண்டியல் ரொம்பினா போதும்னு அப்பிடியும் இல்லேன்னா நேரிலேதான் பாக்க முடியலையேன்னு ஏங்கிப் போயி கோயில்லே வந்து சிலாரூபமாவாவது பாக்கலாம்னு பாத்தா அங்கேயும் பணம் இருந்தாத்தான் அனுமதிக்கறாங்க, ஆனா நிறைய பணத்தை சேமிச்சு வைக்கறவன் எல்லாரையும் அவங்களே வாசல் வரைக்கும் வந்து பூரணகும்பம் வச்சி அழைச்சிட்டுப் போயி யாரும் தொடக் கூடாதுன்னு எழுதிப் போட்டிருக்கற த்வஜஸ்தம்பத்தையும் தொட்டுக்கோங்க தொட்டு கும்பிடுங்க என்று அனுமதிச்சு , கர்பக் கிருஹம் உள்ளேயே அழைச்சிட்டுப் போயி உனக்கே அவங்க தரிசனம் காட்டறாங்க ,

    நீயும் அவங்களைப் பாக்கறே இன்னும் அதிகமா பணம் தர, அதிகமா பதவி தர,, செல்வம் செல்வாக்கு எல்லாம் தர, இது என்னடான்னு ஆச்சரியப்பட்டா மறு நாளே செய்தி வருது உன்னையே கடத்திட்டாங்க பணத்துக்காகன்னு. ஒண்ணுமே புரியலே கிருஷ்ணா நாராயணா .

    ஆனா எங்களை மாதிரி நடுத்தர வர்க்கம்  நடுத்தெரு வர்க்கம் மாதிரியானவங்களை பதவியைப் பறிச்சு பணத்தைப் பறிச்சு பலவிதமா சோதிச்சு எங்களை பலகீனமாக்கி அப்பிடி பலகீனமான நேரத்திலே வர்லாம் வா வர்லாம் வான்னு கூப்புடுறியே இது நியாயமா கிருஷ்ணா நாராயணா
    எனக்கு இன்னமும் கொஞ்சம் கடமை இருக்கு அதை முடிச்சிட்டு வரேன் என்றார் மானுடன்.

    இதோ பாரு எப்பவும் கேள்வி கேட்டுகிட்டே இருக்காதே , பதில் சொல்றது கஷ்டம் , அப்பிடியே நான்பதில் சொன்னாலும் உனக்கு அதைப் புரிஞ்சிக்கறது கஷ்டம், அதுனாலே நானே நேரிலே வந்து கூட்டிகிட்டு போறதெல்லாம் ரொம்பப் பெரிய சமாச்சாரம் ,அது உனக்கு புரியலே நான் கூப்புடும் போது வந்துட. இல்லேன்னா உனக்குதான் கஷ்டம் என்றான் கிருஷ்ணன்.

    அதெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம் இப்போதான் எனக்கு பேரன் பொறந்திருக்கான் நான் அவனைக் கொஞ்ச வேண்டாமா பிறகு வருகிறேன் என்றார் மானுடன்

    சரி உன் இஷ்டம் ஆனால் பீஷ்மருக்கு நான் ஒரு வரம் கொடுத்தேன் அவர் எப்போது என்னிடத்துக்கு வரவேண்டுமோ அப்போது வரலாம் என்று , அதுபோன்ற அருமையான வரத்தை பல யுகங்கள் கழித்து இப்போது உனக்கு கொடுக்கிறேன்., ஆனால் அந்த வரத்தை சரியாக உபயோகித்துக் கொள் . இப்போது நான் செல்கிறேன் என்றபடி அமானுஷ்யக் குரல் மறைந்தது.

    அப்போதிலிருந்து அவர் யோசிக்கத் தொடங்கினார் வந்த நல்ல வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டோமோ , இந்த உலகத்திலே இருந்து அப்படி என்ன சாதிக்கப் போகிறோம் ? பரம்பொருளை அடைய தவம் இருக்கிறார்கள், நான் பரம்பொருளே என்னை நோக்கி வந்து மனமிறங்கி அழைக்கும் போது அதைவிட முக்கியமாய் வேறெதையோ நினைத்துக் கொண்டு நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டிருக்கிறோமே,

    நல்ல வேளை பூர்வ ஜென்ம புண்ணியம் பரம்பொருள் நம் மேல் கோபப்படாமல் நம் இஷ்டத்துக்கு நாம் நினைக்கும் போது வரலாம் என்று வரம் கொடுத்திருக்கிறது
    இந்த வரத்தை எப்படி உபயோகிப்பது வீணாக்காமல் என்று மிகவும் கவனமாக கையாண்டு உபயோகிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இது வரை வாழ்க்கையில் உழைப்பு கவலை சோகம் பிரிவாற்றாமை இழப்பு என்று ஏகப்பட்ட மானுட விதிகளை அனுபவித்தாயிற்று, சரி இனிமேல் சற்று காலமாவது மகிழ்ச்சியுடன் வாழலாம் சந்தோஷங்களை அனுபவிக்கலாம் என்று நினைக்கும் இந்த நேரத்திலே வந்து அழைத்தால் எப்படிப் போவதாம் ! என்று தன்னையே சமாதானப் படுத்திக் கொண்டு வாழத்தொடங்கினார் ,

    பேரன் தாத்தா என்றான் அட அதுக்குள்ள உனக்கு பேச்சு வந்துடுத்தா ! உனக்கு இப்பத்தான் உனக்கு ஆயுஷ்ஹோம்ம் செஞ்சு முதல் பொறந்த நால் கொண்டாடினா மாதிரி இருக்கு. ,காலம் ரொம்ப வேகமா ஓடறது நீயே அந்தக் கிருஷ்ணனோட ப்ரசாதம் தானே வரம்தானே , நீ என்னைத் தாத்தான்னு கூப்படறதே “ செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே “ ன்னு மஹாகவி பாரதியார் பாடின பாட்டு நியாபகத்துக்கு வருது.

    மஹாகவி பாரதியார் 39 வயசுக்குள்ளே கண்ணன் என் காதலன்னு கண்ணனை அடைஞ் காதல்ன்னா என்னான்னு நிரூபிச்சுட்டார். ஆனா வாழ்ந்த அந்த குறுகிய காலத்துக்குள்ளே எத்தனையோ அவதிகள் பட்டும் அதற்கு நடுவே நல்லதைச் செய்து நல்லதைப் பேசி நல்லதைப் பாடி சாகாவரம் அடைஞ்சார், உலகப் புகழ் அடைஞ்சார் . எத்தனை காலம் வாழ்கிறோம் என்பது முக்கியமே இல்லை இறந்த பின்னும் வாழ்கிறோமா என்பதே முக்கியம்னு நிரூபிச்சார், உனக்குத் தெரியுமோ என்றார் மானுடன்.

    குழந்தை தாத்தா என்றது மறுபடியும் , ஆமாண்டா நான் தாத்தாதான் ஆனா பாரதியார் எனக்கே தாத்தா என்றார் . குழந்தை தன் பொக்கை வாய் திறந்து ஏதோ புரிந்தாற்ப் போல் சிரித்துவிட்டு மறுபடியும் நீ தாத்தா என்றது .

    ஆமா நான் தாத்தா நீ பேரன் என்றார் மானுடன் அவருக்குள் ஏதோ ஒரு மாற்றம் ! அட நாம எப்போ சாகணும்னு நெனைக்கிறோமோ அப்போ சாகலாம்னு வரம் கொடுத்தானே மாயக்கிருஷ்ணன் , இது வரமா அல்லது அவரே நினைக்காத நேரத்திலே மஹாகவி பாரதியாரை கையைப் பிடிச்சு உரிமையோட வா போகலாம்ன்னு கூட்டிண்டு போனானே அது வரமா !

    என்ன இருந்தாலும் நாம சாதாரண மானுடன்தானே அதுனாலேதான் கண்ணனே வந்து கூப்புடும்போது போகாமே இருந்துட்டோம் கண்ணன்தான் நாம் எப்போ நெனைக்கிறோமோ அப்போ வர்லாம்னு வரம் கொடுத்திருக்கானே , சரி இப்போ முதல் வேலையா நாம் எப்போ போகணும்னு தீர்க்கமா முடிவெடுக்கணும்னு யோசிக்க ஆரம்பித்தார்.

    ஒரு பேரன் பொறந்துட்டான் இப்பிடீ யோசிச்சுகிட்டே இருக்கும் போதே நாலு பேரன் ஒரு பேத்தின்னு பிள்ளை , பெண்களுக்கு குழந்தைகள் பொறந்து எல்லாரோடையும் கொஞ்சி மகிழ்ந்தாச்சு , இனிமே என்ன எப்போ வேணா வர்ரதுக்கு நான் ரெடி , நீ எப்போ வரமுடியுமோ அப்போ வந்து என்னைக் கூப்பிட்டுண்டு போ நான் தயாரா இருக்கேன் என்றபடி ஈசிசேரில் சாய்ந்து மனக்கண்ணால் கிருஷ்ணனைப் பார்க்கத் தொடங்கினார்,

    எனகுத் தெரியும் கிருஷ்ணா நீ வருவே “ வர்லாம் வா வர்லாம் வா “ என்று வர்லாம் வா என்னும் ஸ்லோகத்தையே நாராயண மந்திரமாய் நினைத்துக் கொண்டு சொல்ல ஆரம்பித்தார். திடீர்ன்னு யாரோ அவரைத் தூக்கிண்டு போறாமாதி உணர்வு, ஓ வந்துட்டியா கிருஷ்ணா நீதான் என்னைத் தூக்கிண்டு போறியா என்று கண்ணை விழித்துப் பார்க்க முயன்றார்.

    எங்கிருந்தோ ஒரு குரல் டாக்டர் சார் பேஷன்ட் கண் முழிச்சிட்டார் , அவருக்கு நினைவு வந்துடிச்சு என்று ஒரு செவிலித்தாயாரின் குரல் கேட்டது. மருத்துவர் வந்து மானுடரே கண்ணைத் திறங்க , உங்களுக்கு ஒண்ணும் இல்லே பயப்படாதீங்க, நீங்க பொழைச்சிகிட்டீங்க என்றார்.

    அட கிருஷ்ணன் இன்னும் வரலியா என்றார், அவர் வாயருகில் காதை வைத்துக் கேட்ட மருத்துவர் எல்லாரும் வெளியேதான் இருக்காங்க , பயப்படாதீங்க நான் கிருஷ்ணனை வரச் சொல்றேன் என்றபடி வெளியே சென்று மானுடன் பொழைச்சிட்டார் பயப்படவேண்டாம், உள்ளே போயி பாக்கலாம்
    என்றார்,

    அப்பா பயப்பட ஒண்ணுமில்லே இப்போ நல்லா ஆயிட்டீங்க . அப்பா நீங்க ஈசீசேர்லே சாஞ்சுண்டு இருந்தீங்களே அப்போ உங்களுக்கு வேர்த்துக் கொட்டித்து, மூச்சு விடமுடியாமே அவதிப் பட்டீங்க , அதுனாலேதான் இங்கே கூட்டிண்டு வந்தோம், இப்போ டாக்டர் சொல்லிட்டார் இனிமே பயப்பட ஒண்ணுமில்லே உங்களுக்கு இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமா நடந்தாச்சு என்றார் கிருஷ்ணன்,

    அப்போ அந்தக் கிருஷ்ணன் வரலியா என்றார் மானுடன் .

    இன்னும் அப்பாவுக்கு மயக்கம் சரியா தெளியலே என்றான் அவர் மகன் கிருஷ்ணன்
    ஆமா எனக்கு மயக்கம் தெளிஞ்சு போச்சுப்பா என்றார் பலகீனமாக அப்பா இப்போ நீங்க ஒண்ணும் பேசவேண்டாம் நன்னா ரெஸ்ட் எடுக்கணும்னு டாக்டர் சொல்லி இருக்கார் என்றான் கிருஷ்ணன். ஹே கிருஷ்ணா நான்தான் வரேன்னு சொல்லிட்டேனே ஏன் வந்து என்னைக்கூட்டிண்டு போக மாட்டேங்கற என்றார் மானுடன். அப்பா இன்னிக்கிதான் சரியாயி மயக்கம் தெளிஞ்சிருக்கு இன்னும் ஒரு வாரத்திலே கூட்டிண்டு போயிடறேன் வீட்டுக்கு என்றான் கிருஷ்ணன்,

    ஏன் கிருஷ்ணா அம்மா எங்கே என்றார் மானுடன் . உங்களுக்கு சரியாகனுமேன்னு அம்மா வேண்டாத தெய்வமில்லே, அதோ அங்கே நிக்கறா வெக்கப்பட்டுண்டு, என்றான் கிருஷ்ணன், எதுக்குடா வெக்கம் அவளை வரச்சொல்லு என்றார் மானுடன் சரி நான் வெளியிலே போயி அம்மாவை அனுப்பறேன் என்று வெளியே போனான்
    திடீரென்று மயக்கும் குழலோசை கேட்டு திரும்பிப் பார்த்தார் மானுடன் அங்கே கிருஷ்ணன் ஒரு கள்ளப் புன்னகையுடன் வர்லாம் வா வர்லாம் வா மானுடனே என்று கையை நீட்டினான் .

    உள்ளே வந்த மானுடனின் மனைவி பக்கத்திலே உக்காந்து நீங்க பொழைக்கணுமேன்னு நான் வேண்டாத தெய்வம் இல்லே என்றாள், தழுதழுப்புடன். உங்க கிட்ட ரகசியமா ஒரு விஷயம் சொல்லணும் உங்களுக்கு மறுபடியும் ஒரு பிள்ளை பொறக்கப்போறான் என்று வெட்கப்பட்டாள்,

    அதிர்ந்து போய் கிருஷ்ணனைத் திரும்பிப் பார்த்த மானுடன் என்ன கிருஷ்ணா ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி வரக் கூடாதோ , கேட்டியா என் பொண்டாட்டி சொன்னதை , எனக்கே வெக்கமா இருக்கு , ஆனாலும் நீ எல்லாரும் சொல்றா மாதிரி மாயக்கண்ணன்தான்.

    சரி எனக்காக இன்னொரு தடவை ஒரே ஒரு சந்தர்ப்பம் குடுத்துதான் பாரேன் நிச்சயமா நான் உன்னோட வந்துருவேன் . அடுத்த தடவை நீ மறுபடியும் வாயேன் அப்போ நான் உன்னோட வந்துடறேன்  சரியா என்றார் மானுடன்.

     

    Share
  • மர்மப் புன்னகை

    “ எப்படிப்பட்ட புத்திமானாயினும் சில சிறு தவறுகளாலோ  அல்லது அலக்‌ஷியத்தாலோ  அல்லது  தேவையில்லாத  அவ நம்பிக்கைகளினாலோ  அல்லது அதீத தன்னம்பிக்கை எனப்படும் கர்வத்தாலோ   பெரும் அவதிகளுக்கு  உள்ளாவதுண்டு”

                                                                     அன்புடன்

                                                                     தமிழ்த்தேனீ

                                                                                                                                                                                                                                                                                                                                       

    பலமுறை வெளி நாடுகளுக்கு அடிக்கடி செல்லும் அனுபவம் கை கொடுத்தது  அதனால் எங்குமே ப்ரச்சனை இல்லாமல்  சுமுகமாக போய் தங்கி மகிழ்ச்சியாக இருந்து  அங்கே இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டு தாமும் மகிழ்ச்சியாக இருக்கப் பழகிய தம்பதியர்  ராமநாதனும் காமக்‌ஷியும், அதே போல்  இந்த முறையும்  எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு  புறப்படும் நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தனர்

    அவர்களுக்கே  தெரியாமல்  அங்கே அவர்கள் பெட்டியில் வந்து அமர்ந்து கொள்ளத் தயாராக இருந்தது  “ அது “  அது வந்து பெட்டியில் உட்காரப் போவதை  அறியாமல் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்,

    தொலைபேசி அழைத்தது  தொலைபேசியில்  சார்  நான் உங்க மகன் வேலை செய்யும்  அலுவலகத்திலே உங்கள்  மகனுடன் பணிபுரியும் எங்கள் மகனுக்கு   சில அவசியமான மருந்துகள் தேவைப்படுகின்றன  அதை எடுத்துப் போக முடியுமா  என்றார் எதிர் முனையில் பேசியவர்

    ராமநாதன் மிக ஜாக்கிரதையாக  சரி சார்  அதனாலென்ன கொண்டு போய்க் குடுக்கறோம்  ஒருத்தருக்கொருத்தர்  இந்த  உதவி கூட செய்யமுடியாதா என்ன  ஆனா டாக்டர் எழுதிக் கொடுத்த  மருந்துச் சீட்டையும் சேர்த்துக் கொண்டு வாருங்கள் என்றார்,

    சரி சார்  அதையும் சேர்த்தே  கொண்டு வரோம்  என்றார் எதிர் முனையில் பேசியவர்,   சரிஎன்று தொலைபேசியை வைத்தவர்    காமாக்‌ஷி  நான் போயி  தொலைபேசி இணைப்பையும் இணைய இணைப்பையும்  மூணு மாசத்துக்கு  பாதுகாப்புப் பெட்டகத்திலே  ( Safe Custody  )  வெச்சுக்கறதுக்கு எழுதிக்குடுத்துட்டு வரேன் என்றபடி வெளியே கிளம்பினார்  ராமநாதன்.

    “அவர் வெளியே போனதை அறிந்து அது உள்ளே நுழைந்தது”.

    சார்  நீங்க  எழுதிக் குடுத்துட்டீங்க   நாங்க  சேஃப் கஸ்டடிலே வெச்சுக்கறோம்   கவலைப்படாம  போயிட்டு வாங்க  என்றார்  பீ எஸ் என் எல்  அதிகாரி  , நன்றி   நான்  திரும்பி வரும் போது முதல்லேயே உங்களுக்கு  போன்லே செய்தி சொல்றேன்  சேஃப் கஸ்டடிலே லேருந்து  ரிலீஸ் பண்னிடுங்க  , அந்த   ரிக்வெஸ்டையும்  எழுதிக் குடுத்திருக்கேன் என்றபடி கிளம்பி வாயிலுக்கு  வந்து  காரிலேறி இக்னீஷியனை உசுப்பினார் ராமநாதன், காரிலிருந்த கென்வுட் இசைக்கருவி பாட்டை நிறுத்திவிட்டு  யாரோ தொலைபேசியில் அழைப்பதை சொல்லியது , அவர் மனைவி  காமாக்‌ஷி  ஏங்க  அவங்க  வந்திருக்காங்க  மருந்தை எடுத்துண்டு வந்திருக்காரு வாங்கிக்கவா  என்றாள் , வாங்கிக்கம்மா  பிரிஸ்க்ரிப்ஷனையும் வாங்கிக்கோ   என்றார்.

    இல்லே  ப்ரிஸ்க்ரிப்ஷனை உங்க  மெயிலுக்கு  அனுப்பரேன்னு சொல்றாரு  என்றாள் அவள்  சரி  வாங்கிக்கம்மா  என்று சொல்லிவிட்டு அவர் தெருவில்  நுழைந்து வரும் போது  ஒரு பெரிய விலை உயர்ந்த  கார்  அவர் வீட்டிலிருந்து வெளியே போனது . வீட்டுக்குள் நுழைந்து காரை நிறுத்திவிட்டு  காமாக்‌ஷி டெலிபோனுக்கு  எழுதுக்குடுத்தாச்சு  என்றார்.  சரிங்க இந்தாங்க காபி சாப்பிடுங்க  என்று காபியை நீட்டினாள் காமாக்‌ஷி

    அவங்க கொண்டு வந்த  மருந்தை எங்கே வெச்சே  ஏன்றார்   ராமநாதன்  நான் என் பெட்டியிலே வெச்சிட்டேன் என்றாள் காமாக்‌ஷி. “ ஒ அப்பிடியா  சரி சரி சரி  நான்  போயி கிருஷ்ணா ஸ்வீட்ஸ்லே  மசூர்பாக் வாங்கிண்டு அப்பிடியே கேஷ்யூ  பைட்டுன்னு ஒண்ணு புதுசா போட்டிருக்காங்களாம் அதையும் வாங்கிட்டு வரேன் என்று ராமநாதன்   மோட்டார் பைக்கை எடுத்துக்கொண்டு  கிளம்பினார்

    “ அந்த அது  உள்ளுக்குள்ளே  இருந்து மெல்லமாக  சிரித்தது  மர்மமாய் “

    குறிப்பிட்ட  நாளில் விமான நிலையத்துக்கு  வந்து இறங்கி  உள்ளே போகும்போது  பாஸ்போர்ட்டையும் விசாவையும் காண்பித்துவிட்டு உள்ளே  நுழைந்து இமிக்ரேஷனுக்கு முன்னால் பேகேஜ் செக் செய்யும் இடத்தில்  இவரை உள்ளே அனுமதித்துவிட்டு   காமாக்‌ஷியை  நிறுத்தி வைத்தனர்   அதிர்ந்தார்   ராமநாதன்.

    சார்  என்  பொண்டாட்டியை  அங்கே நிறுத்திட்டாங்க  நான் வெளியே போயி என்னான்னு பாக்கறேன்  என்று சொல்லிவிட்டு வந்து என்ன ஆச்சு எதுக்கு  என் பொண்டாட்டியை  இங்கே நிறுத்தி வெச்சிருக்கீங்க  என்றார் .  ஒருவர் வந்து  நீங்க  இவங்களோட  புருஷனா  ப்ளீஸ் இங்க நீங்களும்  வெயிட் பண்ணுங்க  என்றார் அவர். என்னவென்று புரியாமல் நின்றார்

    ஒரு ஆபீசர் வந்து  உங்க  மனைவியோட  கைப்பையிலே  ஒரு பாக்கெட் இருக்கு  அது உங்களுதா  என்றார்.   எது என்று எட்டிப் பார்த்தார்  ராமநாதன்  அவர் ஒரு பாக்கெட்டைக் காட்டினார் .  “ அது  ஒரு மர்மப் புன்னகை புரிந்தது “    காமாக்‌ஷி  ஏங்க  அவங்க கொண்டு வந்து குடுத்தாங்களே  அந்த  மருந்து பாக்கெட் அது  என்றாள் பயந்த  குரலில்

    அதை உன்னோட  பெட்டியிலே  வெச்சேன்னு சொன்னியே  என்றார்  ராமநாதன் , அதுலேருந்து  எடுத்து கைப்பையிலே  வெச்சிண்டேன்  என்றாள் காமாக்‌ஷி  , ராமநாதன் அந்த  அதிகாரியிடம் திரும்பி  சார்  அது என் பையனோட  ஆபீஸ்லே வேலை செய்யற  பையனோட  மருந்து, அவங்க அப்பா கொண்டு வந்து குடுத்து அதை அவங்க கிட்டே குடுக்கச் சொன்னாரு என்றார், ஏன் சார்  அதுக்கு ப்ரிஸ்க்ரிப்ஷன் இருக்கா  என்றார்  ஆபீசர்

    அவரு என்னோட  மெயில்லே  அனுப்பறேன்னு  சொன்னாரு   என்றார் ராமநாதன்.    சரி உங்க  கம்ப்யூட்டரை எடுத்து  அந்த  மெயிலைக் காட்ட  முடியுமா என்றார் ஆபீசர், சரி என்று அவர்  கப்ம்யூட்டரை எடுத்து  அதை உயிர்ப்பித்தார்,   அதிலே  அவருக்கு ப்ரிஸ்க்ரிப்ஷன் எதுவும் வரவில்லை

    மிஸ்டர் ராமநாதன்  அந்த பாக்கெட்டை  நாங்க  பிரிச்சுப் பாக்கணும் , என்றார் ஆபீசர். ஒரு அதிகாரியை அழைத்து  அதைப் பிரிக்கச் சொன்னார் .பிரித்தார்கள்  அதிலே …… இருந்தவற்றைப் பார்த்த  அதிகாரிகள்  அதிர்ந்தார்கள்.       என்ன மிஸ்டர் ராமநாதன் இது  உங்களைப் பாத்தா  படிச்சவர் மாதிரி இருக்கீங்க  இதுலே போதை மருந்து கலந்திருக்கு இதை அந்த நாட்டிலே  தடை செஞ்சிருக்காங்க , நம்ம நாட்டிலேயும்தான்

    அதுனாலே  நீங்க  ரெண்டு பேரும் இந்தப் பாக்கெட்டை உங்களுக்கு  குடுத்தவங்களுக்கு  தொடர்பு கொள்ளுங்க  அவங்கதான் குடுத்தாங்கன்னு நிரூபிச்சா  நீங்க  இந்த  ஃப்ளைட்டிலே போக முடியும்  இல்லேன்னா  நாங்க  உங்க ரெண்டு பேரையும் காவல்துறை கிட்டே ஒப்படைக்க வேண்டி வரும் என்றார்

    அதிர்ந்து போன ராமநாதன்  அவரைத் தொடர்பு கொள்ள முயன்றார்  எதிர் முனையில் நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் இப்போது தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை  அல்லது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்   என்றே சொல்லிக்கொண்டு இருந்து  ,

    என்ன செய்வதென்றே தெரியாதவராய்   சார்  அவர் என்னோட மெயிலுக்கு ப்ரிஸ்கிரிப்ஷன் அனுப்பறேன்னு சொல்லிட்டு இதைக் குடுத்துட்டுப் போயிருக்காரு, அதை நம்பி என் ஃவைப் இதை வாங்கி வெச்சிருக்காங்க, இது போதை மருந்துன்னு தெரிஞ்சிருந்தா  கைப்பையிலேயே கொண்டு வருவோமா  , நீங்களே யோசிச்சு பாருங்க என்றார் ராமநாதன்.

    சார்  எங்களுக்கு  உங்க  நிலைமை புரியுது ஆனா நாங்க  எங்க கடமையை செய்யணும் வேற  வழியில்லே  என்றார் அதிகாரி.   அந்தப் பாகெட்டைப் பார்த்தார்  ராமநாதன்  “ அது  ஒரு மர்மப் புன்னகை புரிந்தது “ ஏதோ  ஒரு அதிர்ச்சியில் திடுக்கிட்டு கண்விழித்தார்  ராமநாதன்!

    அட  மொத்தமும் கனவா    !  ஏம்மா காமாக்‌ஷி  அவங்க கொண்டு வந்த  மெடிசினைக் காட்டு  என்று வாங்கிப் பார்த்தார் .   மீண்டும் அவருக்கு தொலைபேசியில்  சார் நீங்க  அனுப்பறேன்னு சொன்னீங்களே  அந்த  ப்ரிஸ்க்ரிப்ஷனை அனுப்பவே இல்லையே என்றார்

    எதிர் முனையில்  சார்  மன்னிக்கணும்  இணையத் தொடர்பு கிடைக்கவே இல்லே  இதோ இப்போ  அனுப்பிர்றேன்  என்றபடி    சார் இப்போ பாருங்க  உங்க மெயில்லே அனுப்பி இருக்கேன்  என்றார்

    மெயிலைத்  திறந்து  பார்த்தவருக்கு  திருப்தி சாதாரண மருந்துகள்தான்  சரி சார்  நாங்க எடுத்துட்டுப் போயி உங்க   பிளைகிட்ட குடுத்துர்றோம்  என்றார்  ராமநாதன் . நன்றி சார்  என்றார் அவர்  மறு முனையில்.

     திரு ராமநாதன் ப்ரிஸ்க்ரிப்ஷனைப் பார்த்தே  நம்பிக்கை கொண்டார்  , அவர்  அந்தப் பாக்கெட்டைப் பிரித்துப் பார்த்திருக்கலாம் , அந்தப் பாக்கெட்டை  அவர் பிரித்துப் பார்க்கவே இல்லை. அது அவருடைய  விதியா   அல்லது  தன்மேலே  அவருக்கிருந்த  அதீத   நம்பிக்கையா

    அந்த  மருந்து பாக்கெட்  அவரைப் பார்த்து மர்மமாய்ச் சிரித்தது.

    குறிப்பிட்ட  பயண  நாளும் வந்தது  . பார்ப்போம் வேடிக்கை

                           சுபம்

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

    Share
  • இழுத்துண்டு ஓடு

    தமிழ்த்தேனீ

    சபேசனுக்கு  இன்னும் கொஞ்சம் வெண்டைக்காய் போடு அவனுக்கு சின்ன வயசிலேருந்தே வெண்டைக்காய் பிடிக்கும் என்றார்  கண்ணன்
    கன்ணனின் மனைவி ஆனந்தி நிறைய இருக்கு சபேசன் அண்ணா கேட்டு சாப்பிடுங்க என்றாள்  
    
    சரி ஆனந்திம்மா  போடும்மா  சாப்படறேன் என்றபடி சாப்பிட்டுக்கொன்டே
    டேய் கண்ணா  இந்த  வாழ்க்கையிலே  நம்மைச் சுத்தி மனுஷ வடிவிலே இருக்கற  நரி பூனை சிங்கம் கரடி காட்டுநாய்,ஓநாய் மாதிரி இருக்கற மனுஷாகிட்டேருந்து நம்மளைக் காப்பாத்திண்டு ஓடறது இருக்கே
    
    அதுதாண்டா  பெரிய திறமையான காரியம்
    அப்பிடி ஓடி ஓடியே நாம ரெண்டு  பேரும் ஏதோ  நம்மாலான நம்மோட பொறுப்புக்களையெல்லாம் நிறைவேத்தி பிள்ளங்களையெல்லாம் படிக்கவும் வெச்சு  கல்யாணமும் செஞ்சு வெச்சு நிமிந்துட்டோம் , அதுனாலே  நிம்மதியா இருக்கு  என்றார்  கண்ணன்
    
    ஆமாம் கண்ணா நாம எங்கேயாவது  தவறும் போது உன் பொண்டாட்டி உன்னையும்  என் பொண்டாட்டி என்னையும் , அதே மாதிரி அவங்க  தவறும் போது நாமளும் அவங்களுக்கு  சொல்லிக் குடுத்து  இழுத்துண்டு ஓடித்தானே  இப்பிடி வளந்திருக்கோம்  என்றார் சபேசன்
    
    சபேசா  இப்போ  நினைச்சுப் பாக்கறேன்  நீ இதோ இருக்காளே கனகா இவளை நீயும் இவ உன்னையும் இழுத்துண்டு ஓடிட்டீங்கன்னு ஊரே  உங்களை  கரிச்சுக் கொட்டித்தே என்றார்  கண்ணன்
    
    கண்ணா   நீ ஆனந்தியைக் கல்யாணம் செஞ்சிண்டு இழுத்துண்டு  இவ்ளோ தூரம் வாழ்க்கையிலே ஓடி வந்திருக்கே
    நான்  இந்தக் கனகாவை இழுத்துண்டு ஓடிப் போயி கல்யாணம் செஞ்சுண்டிருக்கேன். 
    
    ஆனா  நாம ரெண்டு பேரும்  இன்னமும் 60 வயசாகியும் இன்னமும்  இழுத்துண்டு  ஓடிண்டேதானா  இருக்கோம் . பாதியிலே  விட்டுட்டு ஓடிடலையே  அதுதான்  விசேஷம்  என்றார்  சிரித்துக்கொண்டே
    
    ஆமா  சபேசா ஆனா இப்போ  இழுத்துண்டு ஓடிப்போய் பாதியிலேயே  விட்டுட்டு போயிடறாங்களே  அதுதான் ப்ரச்சனையா இருக்கு என்றார் கண்ணன்
    
    போறும்  வழியாதீங்க  என்று ஆனந்தியும் கனகாவும் ஏகோபித்த குரலில் சொன்னார்கள் , இழுக்கறதாம் ஓடறதாம்  வாழ்க்கையிலே  ரெண்டு பேருமே சேர்ந்து ஒத்துமையா இழுத்துண்டு ஓடினாத்தானே  வண்டி நல்லா  ஓடும்   என்றாள் ஆனந்தி
    அதானே  என்றாள் கனகா
    
    
                   சுபம்
    
    Share
  • இரு எழுத்தாளர்களின் சந்திப்பு!

    -தமிழ்த்தேனீ

    ஒரு எழுத்தாளர் வருகிறார்; ஒரு எழுத்தாளர் அவரை வரவேற்கிறார்.

    உக்காருங்க  நண்பரே  என்ன  சாப்படறீங்க?

    ஒண்ணும் வேண்டாம் சார்;  இப்போதான் காப்பி குடிச்சிட்டு வந்தேன்.

    (மனதுக்குள் ஏதாவது குடுத்தா  நல்லாத்தான் இருக்கும்.)

    முதல்லே இந்தத் தண்ணீரைக் குடிங்க வெய்யில்லே வந்திருக்கீங்க.

    உள்ளே இருந்து எழுத்தாளர்  மனைவி வருகிறார்.

    அடேடே  வாங்க வீட்டுலே எல்லாரும்  சௌக்கியமா?

    நல்லா இருக்காங்கம்மா; நீங்க நல்லா இருக்கீங்களா? உங்க வீட்டுக்காரர்  ஜமாய்க்கறார்!

    எப்பிடித்தான் இவருக்கு இவ்ளோ கற்பனை வருதோ  ரொம்ப நல்லா   எழுதறாரு.

    (மனதுக்குள் ஒரு காட்சி நிழலாடுகிறது போனமுறை சந்தித்தபோது இவர் கொடுத்த புத்தகத்தை  வீட்டிலே கொண்டு போயி  சோபாவிலே வெச்சேன் இன்னும் படிக்கலே.)

    சார் நீங்க  குடுத்தீங்களே… அந்தப் புத்தகத்தை  இதுவரைக்கும்  நான் அஞ்சு தடவை  படிச்சிட்டேன்;  அலுக்கவே இல்லே.

    சார் அப்பிடியெல்லாம் ஓவரா  புகழாதீங்க;  ஏதோ  எழுதறேன்.

    நீங்க  அடக்கமா சொல்லிக்கிறீங்க.  படிக்கற  எங்களுக்குத்தானே உங்க அருமை தெரியும். (மனதுக்குள் எப்பிடி நடிக்கறான் பாரு அடக்கமா!)

    இப்போ சமீபத்திலே  நான் ஒரு புத்தகம் எழுதறேன். ரெண்டு மூணு பதிப்பாளர் கேட்டுகிட்டே  இருக்காங்க; நமக்கு இருக்கற வேலைக்கு நடுவே  எழுதறோம்; அவங்க அவசரத்துக்கு நாம் எழுதமுடியுமா?

    (மனதுக்குள் அடப்பாவி; கூசாம எப்பிடிய்யா பொய் சொல்றே.)

    எந்தப் பதிப்பகத்தார் யா உன்னை இவ்ளோ  தொந்தரவு  செய்யறாங்க  எந்தப் புத்தகமும் விக்கலேன்னு அவங்களே அல்லாடிக்கிட்டு இருக்காங்க.)

    எனக்கும் அதே நெலமைதான். ஆனாப் போனதடவை பப்ளிஷ் பண்னாங்களே அவங்களே கேக்கறாங்க;  இன்னும் ஒரு புஸ்தகம் வெளியிடலாம்னு   நானும் எழுதித் தரேன்னு சொல்லி இருக்கேன்.

    சார் நீங்க ஜமாயுங்க!  நானும் எனக்குத் தெரிஞ்ச  பப்ளிஷர்கிட்டே போகும் போதெல்லாம்  உங்களைப் பத்திதான்  சொல்லிகிட்டே இருப்பேன்.

    ஆனா ஒண்ணு  யார்கிட்டே  பேசினாலும் எங்களுக்கு அவரை நல்லாத் தெரியுமே அப்பிடீங்கறாங்க; உங்க புகழ் உங்களுக்குத்தான் தெரியலே!

    ( மனதுக்குள்  யோவ்  யாராவது  பப்ளிஷர் இருந்தாச் சொல்லேன்யா;  நானும்தான் ஒரு புஸ்தகம் வெளியிடறேன்; மனதுக்குள் அதெல்லாம் செய்யாத உன்னைப் பத்தியே நெனைச்சுகிட்டு உன் புத்தகத்தை மட்டுமே வெளியிட்டுக்கோ.)

    உங்களுக்குச் செய்யாமே வேற யாருக்கு நான் உதவப் போறேன்; நீங்க அந்த புஸ்தகத்தை எழுதிமுடிங்க. நான்… நானே உங்களை  அழைச்சிகிட்டு போறேன்  பப்ளிஷர்கிட்டே.

    உள்ளே இருந்து  காப்பி கொண்டுவந்து கொடுக்கிறார் எழுத்தாளர்  மனைவி.

    அதை வாங்கி குடிச்சிட்டு  உங்களுக்கு  எதுக்கும்மா  வீண் ஸ்ரமம்;  நாந்தான் ஒண்ணும் வேண்டாம்னு சொன்னேனே. ஆனா அருமையான காப்பி.

    சரி…அப்போ நான் கிளம்பறேன்.

    சரி போயிட்டு வாங்க… அடிக்கடி வாங்க!

    நீங்களும் உங்க  மனைவியைக் கூட்டிகிட்டு  வாங்க சார் நம்ம  வீட்டுக்கு.  நான் அக்கம்பக்கத்திலே  பெருமையா  சொல்லிக்குவேன் நீங்க  என் நண்பர்ன்னு.

    அப்பொ நான் வரேம்மா; வரேன் நண்பரே. நானு அந்தப் புஸ்தகத்தை  எழுதி முடிச்சு எடுத்துகிட்டு வரேன்.

    சரி நண்பரே… நானும் அதுக்குள்ளே இப்போ எழுதிகிட்டு இருக்கற  நாவலை முடிச்சிருவேன் ரெண்டு பேருமா போயி பாக்கலாம் பப்ளிஷரை.

    நன்றி! சந்திப்போம்!

    Share
  • ஆன்மீகமும் ஆழ்மீகமும் – 2

    -தமிழ்த்தேனீ

    பாகம் 7

    விவேகானந்தர்    ( நரேந்திரன் ) முதலில் ராமக்ருஷ்ண பரமஹம்ஸர்  சொல்லுவதைக் கவனிக்காமல் அவர் ஏதோ செய்து கொண்டிருப்பாராம்.  ஒரு நாள் ராம க்ருஷ்ணபரமஹம்சர் நரேந்திரனை அழைத்து நான் சொல்லுவதைக் கவனிக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று வினவ அதற்கு நரேந்திரன் தாங்கள் இறைவனைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.  ஆனால் கண்ணால் காணமுடியாத ஒன்றை எப்படி நம்புவது என்று நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்றாராம். அதற்கு ராமக்ருஷ்ணபரமஹம்சர் நான் உனக்கு இறைவனைக் காட்டுகிறேன் என்று கூறி தன்னுடைய தியான சக்தியால் நரேந்திரனை தன்கையால் தொட்டு அவருக்கு இறைவனைக் காட்டும் முயற்சியில் இறங்கினார். அப்போது தேஜோமயமாகத்  தாங்கவொண்ணா ஒளியாக இறைவன் நரேந்திரனுக்குக் காட்சி அளித்தாராம். அந்த அற்புத ஜோதிச்வரூபனை அந்த ஒளியின் விஸ்வரூபத்தை தாங்க முடியாமல் நரேந்திரன் திகைத்துப் போனாராம். அதற்குப் பிறகு ராமக்ருஷ்ணபரமஹம்ஸர் இறைவனைப் பார்க்க உனக்குள் சக்தியை ஏற்படுத்திக் கொள்; அப்போதுதான் இறைவனைப் பார்க்கமுடியும் என்னும் தத்துவத்தை போதித்தாராம். அப்போதுதான்  நரேந்திரன் விவேகானந்தராக மாறினார் என்பர்.

    ஆன்மீகம் என்பது என்ன? மனிதன் எப்போது தன்னை மீறிய சக்தி ஒன்று இருக்கிறது, அது நம்மை எல்லா ஆபத்திலிருந்தும் காப்பாற்றும் என்று நம்பத் தொடங்கின வினாடியிலிருந்து  ஆன்மீகம் தோன்றி வளர ஆரம்பித்தது என்றும் சொல்லலாம். அல்லது மனிதன் ஏற்கெனவே இருக்கும் ஆன்மீகத்தை  உணரத் தலைப்பட்டான் என்றும் கொள்ளலாம்.

    இந்தப் ப்ரபஞ்சத்தில் பிறந்த அத்தனை உயிர்களும் தங்களைக் காப்பாற்ற தங்களை மீறிய சக்தி ஒன்று இருக்கிறதாக நம்பத் தொடங்கின; அதனால்தான் எல்லா உயிர்களும் ஓரளவு தன்னம்பிக்கையோடு வாழத் தலைப்பட்டன.  இந்த இறை நம்பிக்கைதான் இன்றுவரை நம் எல்லோரையும் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது.  ஆன்மீகம் என்ற ஒரு வழியினால்தான் மனிதன் ஓரளவு தன்னம்பிக்கையோடு வாழ்கிறான்.    நமக்கு மேல் நம்மைக் காப்பாற்ற ஒருவருமே இல்லை நம்மை நாமேதான் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்று நாத்தீக வாதிகள் சொல்கிறார்கள்; அப்படிப்பட்ட நாத்தீகவாதிகளுக்கு

    ”உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு“ என்னும் வள்ளுவன் வாக்கிற்கேற்றார்போல்  இடுக்கண் வரும்போது அதைக் களைய ஒரு நண்பனாவது வேண்டும். அப்போதுதான் ஏதோ ஒரு நண்பனாவது இருக்கிறான் நம்மைக் காப்பாற்ற என்று வாழ்க்கையின் மேல் ஒரு பிடிப்பு ஏற்படும். இல்லையென்றால் நாம் வாழ்வது வீண் என்று விரக்தி ஏற்பட்டுவிடும்.  கடலில் தத்தளிக்கும்போது பிடித்துக் கொள்ள ஒரு சிறு கட்டையாவது கிடைக்காவிடில் மூழ்குவது நிச்சயம். அது போன்று நமக்கு துன்பம் வரும்போது நம்மைக் காக்க நம்மினும் மேலான சக்தி இருக்கிறது என்கிற நம்பிக்கைதான் அந்தக் கட்டை போன்றது. தற்கொலை செய்து கொள்பவர்கள் பலர் தம்மைக் காக்க , அல்லது தங்கள் துன்பத்தைப் போக்க யாருமில்லை என்று தீர்மானமாக எண்ணுவதால்தான் உயிரை விடத் தீர்மானிக்கிறார்கள்.   அப்படித் தங்களையே அனாதைகளாய் நினைத்துக் கொள்ளுதல் கூடாது என்பதுதான் ஆன்மீகத்தின் நோக்கம்.

    அதற்காகத்தான் பெரியவர்கள் இறைவன் இருக்கிறான்; அவன் நம்மை துன்பங்களிலிருந்து காப்பாற்றுவான் என்கிற நம்பிக்கையை வளர்த்தார்கள்.  ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்போது அதைத் தனியே விட்டுவிட்டு வேடிக்கை பாருங்கள்.  சிறிது நேரம் விளையாடும். தன்னைச் சுற்றி யாருமே. இல்லை என்று உணரும் வினாடியில் அழத் துவங்கும்.அந்த நிலையிலேதான் எல்லா வளர்ந்த  மனிதர்களும் வளர்ந்தாலும் குழந்தைதான்.  அணைக்கும் கை இருக்கிறது, நமக்கு ஆபத்து வரும்போது ஆதரவாக நம்மைக் கையிலெடுத்து  ஆதரவு தர ஒரு கை எப்போதும் நம் அருகில் இருக்கிறது  என்கிற நம்பிக்கை இருக்கும் வரைதான் நாம் மனிதராக இருப்போம். எப்போது அந்த நம்பிக்கை நம்மை விட்டுப் போகிறதோ அப்போதே நாம் சக்தி இல்லாதவர்களாக உணர்வோம்.  அதனால்தான் ஆன்மீகம் என்று ஒன்றை ஏற்படுத்தி நம்மை காக்க எப்போதும் ஒருவர் இருக்கிறார் என்று நமக்கு ஒரு உணர்வை பெரியவர்கள் ஏற்படுத்தினர்.

    ***

    பாகம்  8

    இறைவன் இருக்கிறானா, இல்லையா என்பது நமக்குத் தேவையில்லாத சிந்தனை. இருக்கிறான் என்று எண்ணும்போது நமக்குக் கிடைக்கும் நிம்மதி அதுதான் என்றும் தேவையான ஒன்று. அந்த நிம்மதி நமக்குக் கிடைக்கவேண்டுமானால் இறைவன் என்று ஒருவன் உண்டு என்று நாம் நம்பித்தானாகவேண்டும். எல்லாமே மனிதனின் சுயநலத்துக்காகத்தான். மனிதனின் உடலில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு, கசப்பு ,அழுக்கு, தண்ணீ ர், காற்று , மண், எல்லாம் இருக்கிறது. ஆனால் எந்த  அளவு  இருக்கவேண்டுமோ அந்த அளவு இருக்கிறது. அந்த அளவு கூடினாலும், குறைந்தாலும் உடனே வைத்தியர் அதை சமனப்படுத்த மருந்து தருகிறார். அது போல நம்முடைய சுயநலத்துக்காக நாம் ஏற்படுத்திய ஆன்மீகம்  ஒரு பற்றுக்கோல் போல நமக்குப் பயன் படுகிறது. ஆனால் அங்கு சுயநலம் என்னும் பற்றுக்கோல்  சற்றே பருத்துச் சுயநலம் அதிகமாகும் போது பொதுநலம் மறந்து போகிறது.

    உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் எல்லா மதத்தவருக்கும், எல்லா ஜாதியினருக்கும், எல்லா நாட்டினர்க்கும், பொதுவாக மானிடராய்ப் பிறந்த அத்தனை பேருக்கும் பொதுவாக ஏற்படுத்தப்பட்ட ஆன்மீகம் சிலபேருக்கு மட்டுமே சொந்தமான சொத்துபோல் ஆகும் போதுதான் அங்கு ப்ரச்சனை முளைக்கிறது.  தெய்வம் , இறைவன், ஸ்வாமி,அல்லா, இயேசு கிருஷ்ணன், ராமன் , வினாயகன், சிவன்,  சக்தி என்று எப்படி அழைத்தாலும் எல்லாம் ஒருவனே. ஒன்றே குலம் அது மனித குலம். ஒருவனே தேவன் அவன் பொதுவானவன் எப்பெயர் சொல்லி அழைத்தாலென்ன?

    என் தாயை நான் அம்மா என அழைப்பேன். என் குழந்தைகள் பாட்டி என்று அழைக்கிறார்கள். என் குழந்தைகளின் குழந்தைகள் கொள்ளுப் பாட்டி என்று அழைக்கிறார்கள்.சில குழந்தைகள் பெரியம்மா என்று அழைக்கிறார்கள். சில குழந்தைகள் குழந்தைகள் அத்தை என்று அழைக்கிறார்கள். யார் எப்படி அழைத்தாலென்ன என் அம்மா தானே? அதுபோலத்தான் யார் வேண்டுமானாலும் அவரவர் இஷ்டம் போல் அழையுங்கள்.  ஆனால் இருப்பது ஒரே தெய்வம்  அது இறைவன்.

    நமக்கும் மேல் பெரியவன், நம்மைக் காப்பவன்  அவ்வளவுதான்; இந்த உண்மை புரியத்தான் ஆன்மீகம் என்று ஒன்றைப் பெரியவர்கள் ஏற்படுத்தினார்கள்.   அந்த ஆன்மீகத்தின் நோக்கமே  பிரிவினை இல்லாது மனிதன் மனிதத் தன்மையோடு வாழவேண்டும் என்பதே.  நாம் அடிப்படையான இந்த நோக்கத்தையே மறந்து நமக்குள் பல பிரிவுகளை நாமே ஏற்படுத்திக் கொண்டு பிரிந்து நம்முடைய இளைய தலைமுறைகளுக்கும் அந்தப் பிரிவைச் சொத்தாக எழுதிவைத்து வருங்கால மக்களை,  மக்கள் என்னும் நிலையிலிருந்து மாக்கள் என்னும் நிலைமைக்குத் தள்ளிக் கொண்டிருக்கிறோம் ( மாக்கள் என்றால் மிருகங்கள் என்று பொருள்).

    மக்களை மாக்கள் நிலைக்குத் தள்ளும் பிரிவினையை அரசியல்வாதிகள் வேண்டுமானால் அவர்களின் சுய லாபத்துக்கு உபயோகப் படுத்திகொள்ளட்டும். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று ஒரு பழமொழி இருக்கிறது.  ஆதலால் நாம் அனைவரும் பிரிந்திருந்தால்தான் அவர்களுக்கு வசதி. ஆனால் நாம் இதை உணர்ந்து ஜாதி, மதம் , இனம் ,மொழி,கலாசாரம் கொள்கைகள், வழிபாடுகள், அத்தனையும் மாறுபட்டு இருந்தாலும் அவரவர் வழியை அவரவர் பின்பற்றிக் கொண்டு  முடிந்தால் எல்லா மனிதருக்கும் உதவிக் கொண்டு மேற்கூறிய அத்தனை பேதங்களையும் மறந்து மனத்தால் ஒன்றுபட்டால் நல்லதுதானே?

    ***

    பாகம் 9

    எங்கு மனிதருக்கு அநீதி இழைக்கப் படுகிறதோ அங்கு எந்த வித பேதமும் இல்லாமல்  அத்தனை மதத்தவரும் ஒன்று கூடி அநீதியை அழிக்க இணைந்தால்  அங்கே மனிதம் மலரும். விளங்க முடியாக் கடவுளைக் கூட விளங்கிக் கொள்ளமுடியும். கடவுள் மதத்திலில்லை, ஜாதியிலில்லை, இனத்திலில்லை, மொழியிலில்லை, நிறத்திலில்லை, மணத்திலில்லை, குணத்தில் இருக்கிறான். ஆமாம் மனிதம் தான் கடவுள். கடவுள் என்றாலே எல்லாவிதமான வேறுபாடுகளையும்  கடந்தவன் என்று பொருள். கட உள்  உன்னிலிருக்கும் கடவுளை உள்ளே சென்று பார்க்க உன் ஆன்மாவைப் பார்க்க எல்லா மனிதருக்கும்  உட் ப்ரயாணம் தேவை. உட்ப்ரயாணம் என்றால் ஆத்ம ஞானம்,ஆத்மயோகம். அன்பு ,கருணை, இரக்கம் சக உயிர்களை மதித்தல் , மனிதனை மனிதனாக மதித்தல், மனிதனை மனிதனாகவே நேசித்தல், மக்களை மாக்களாக்காமல்   மக்களாகவே இயல்பாக மனிதனாகவே நடத்துதல். மொத்தத்தில் மனிதம் என்பதுதான் கடவுள், இறைவன். அதுதான் ஆன்மீகம்.

    விஞ்ஞானிகள் அவர்கள் வழியிலே  அண்டத்தின் அற்புதங்களை  அணுவின் உள்கிடக்கையை பிரபஞ்ச வெடிப்பின் பேரொளியை அப்பாற்பட்ட உலகங்களை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதே போல்  ஆன்மீக வழியில் மெய்ஞ்ஞானிகளும்  சித்தர்களும்  மெய்ஞ்ஞான வழிகளில்  தியானம் யோகம் சித்து போன்ற  பல வழிகளிலும்  இறையைக் காண  இறையின் இருப்பை அறிய முயல்கின்றனர்.

    அதீதப் புலனாற்றல் ஆய்வு மையம் :   ஐந்து புலன்களால் அறிவியல் பூர்வமாக அறியப்படுவது மட்டுமே மெய்; மற்றதெல்லாம் பொய் என்று நவீன அறிவியல் விஞ்ஞானிகள் சென்ற நூற்றாண்டு வரை கருத்துக் கொண்டிருந்தனர். ஆனால் விளக்க முடியாத ஏராளமான சம்பவங்கள் ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன. ஆகவே இவற்றை ஆராய The Society for Psychical Research (S.P.R.) என்ற அதீதப் புலானாற்றல் ஆய்வு மையம் லண்டனில் 1882ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

    மூடி சீலிடப்பட்ட கவர்களில் இருக்கும் செய்திகளைப் படிப்பது, தொலைதூரத்தில் இருப்பதைப் பார்ப்பது, எண்ணங்கள் மூலம் தொலை தூரத்தில் இருப்பவரைக் கட்டுப்படுத்துவது, அவர்களுக்கு ஆணை இடுவது, மனோசக்தியாலேயே பொருள்களை நகர்த்துவது, ஆவிகளுடன் பேசுவது, முற்பிறப்பு உண்மைகளைச் சொல்வது என்று இப்படி எண்ணில்அடங்கா விந்தைகளை ஆராய ஒரு மையம் ஏற்பட்டவுடன் நூற்றுக் கணக்கான விஞ்ஞானிகள் ஆயிரக்கணக்கான சோதனைகளை நடத்தி வருகின்றனர். அவர்களது சோதனை முடிவுகள் அனைவருக்கும் திகைப்பையும் பிரமிப்பையும் தருவதாக அமைந்துள்ளன!

    ஜாகொல்லியட் :  எல். ஜாகொல்லியட் (L.Jacolliet -1901) என்பவர் ‘Occult Sciences in India’ என்ற தனது நூலில் காசியில் தான் சந்தித்த இந்திய யோகியைப் பற்றி விவரிக்கிறார். அந்த யோகி தனது மனோசக்தியால் நீர் நிரம்பியுள்ள மிகவும் கனமான வெங்கலத்தால் ஆன ஜாடியை ஜாகொல்லியட் நகர்த்தச் சொன்ன திசையில் நகர்த்துவாராம்! அதுமட்டுமின்றி தரையிலிருந்து 7 முதல் 8 அங்குலம் வரை அதை மேலே எழும்பச் செய்வாராம்!

    டெட் செரியோஸ் : டெட் செரியோஸ் என்பவர் மனத்தில் தோன்றும் சித்திரங்களை அப்படியே போட்டோவில் படைக்கும் வல்லமை பெற்றவர்! இவரை எய்ஸன்புட் என்ற விஞ்ஞானி இடைவிடாது தொடர்ந்து சோதனை செய்தார். அவரது சோதனைச்சாலையிலும் சோதனைகள் தொடர்ந்தன. எதை செரியோஸ் நினைக்கிறாரோ அது போலாரய்ட் காமராவில் கூடப் படமாக விழவே அனைவரும் வியப்படைந்தனர். இவரது திறமையை- ‘Thoughtography’ – எண்ணப்படம் என்று கூறி ஒரு புதிய வார்த்தையையே உருவாக்கினர். டெட் செரியோஸ் பற்றி எய்ஸன்புட் எழுதிய நூலான ‘தி வோர்ல்ட் ஆப் டெட் செரியோஸ்’ (The World of Ted Serios-1967) மிகவும் புகழ்பெற்றது.

    ***

    பாகம் 10

    நினா குளாகினா : விஞ்ஞான உலகையே பரபரப்பூட்டியவர் நினா குளாகினா என்ற ரஷியப் பெண்மணி! இவரது கணவர் வி.வி.குளாகின் ஒரு எஞ்சினியர். அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இவரை சோதனை செய்தனர்; பிரமித்தனர்! ஒரு ப்லெக்ஸிகிளாஸ் கியூபுக்குள் (Plexiglass Cube) வைக்கப்பட்ட பொருளை இவர் மனோசக்தியால் நகர்த்திக் காட்டினார். அது காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருளோ அல்லது ஈர்க்கப்படாததோ, ஆர்கானிக்கோ, இனார்கானிக்கோ எந்த வகைப் பொருளானாலும் இவர் பார்த்தாலே போதும். அது நகர ஆரம்பித்து விடும்! 50 கிராம் எடையுள்ள பொருள்கள் எட்டு அங்குல தூரத்திலிருந்து இவரை நோக்கித் தத்தித் தத்தி வருவதைப் பார்த்த விஞ்ஞானிகள் திகைப்படைந்து அதைப் படம் பிடிக்கவும் செய்தனர்! ஒரு தராசில் 30 கிராம் படிக்கல் வைக்கப்பட்டவுடன் இவர் பார்வை பட்டவுடன் எதிரில் இருக்கும் வெற்றுத் தட்டு 40 கிராம் வைத்தது போலக் கீழே இறங்கும்!

    அவரது தலை ஓட்டின் பின் எலும்பில் (Occipital region of the skull) எலக்ட்ரோடுகள் –  பொருத்தப்பட்டன. சாதாரணமாக இருப்பதை விட 50 மடங்கு அதிக வலிமை வாய்ந்த மூளை அலைகள் பதிவு செய்யப்பட்டன! இதர இடங்களில் மாட்டப்பட்டிருந்த எலக்ட்ரோட்கள் எந்த வித மாற்றத்தையும் காண்பிக்கவில்லை. கெய்ல் மற்றும் ஹெர்பர்ட் (1974)ஆகிய விஞ்ஞானிகள் இந்த சோதனை முடிவுகளை ஒரு நூலாக எழுதியுள்ளார்.

    இப்படிப்பட்ட ஏராளமான சோதனைகள் ஐம்புலன்களுக்கு அப்பால் பல சக்திகள் உள்ளன என்பதை நிரூபித்து விட்டதால் அதீத உளவியல் (ParaPsychology) இன்று அங்கீகரிக்கப்பட்ட ஒரு அறிவியல் கிளையாக ஆகி விட்டது.

    இந்திய யோகிகளின் எல்லையற்ற ஆற்றலை இந்த விஞ்ஞானிகள் ஆராய்ந்து அவற்றைக் குறிப்பிட்டு வியக்கின்றனர். அறிவியலின் எல்லையைத் தாண்டிய சித்தர்கள் அவ்வப்பொழுது தங்களின் ஆற்றலின் ஒரு சிறிய துளியைக் காட்டி உலகை பிரமிக்க வைக்கின்றனர். பேரண்டச் சக்தியின் எல்லையற்ற ஆற்றலில் தாங்கள் ஒரு மிகச் சிறிய துளிதான் என்று அவர்கள் பாடியுள்ளது நம்மை பிரமிக்க வைக்கிறது!

    ஆகவே ஆன்மீகம் என்பது  ஒரு மிகப்பெரிய மாயையான கடல். அதை உணர வழிகள் அவசியம், விழிகளும் அவசியம்.  அதுவும் குறிப்பாக  ஞான விழிகள் அவசியமானவை அந்த  ஞான விழிகளை  வழிகளை ஆராய்வோம். இங்கே ஆன்மீகத்தில் முற்றுப் புள்ளி என்பதே கிடையாது. அதனால்தான்  அடியும் முடியும் காணமுடியாத ஆன்மீகம்  என்கிறார்கள். பூஜ்ஜியத்தில் ராஜ்ஜியம் அமைத்து அந்தப் பூஜ்ஜியத்தில் இருந்துகொண்டு ப்ரபஞ்சத்தையே  ஆட்டிவைத்துக் கொன்டிருக்கிறான் இறைவன் என்கிறார்கள்.  அணுவைச் சதகூறிட்ட அணுவிலும் உளன் என்கிறார்கள் மெய்ஞ்ஞானிகள்.  அதையேதான்  விஞ்ஞானிகளும் அணுவிலேதான் இருக்கிறது அத்தனை உயிர்ப்பும் , அழிவும் என்கிறார்கள். விஞ்ஞானிகள் ப்ரபஞ்ச வெடிப்பு என்கிறார்கள். மெய்ஞ்ஞானிகள்  ப்ரளயம் பேரழிவு , மீண்டும்  உயிர்ப்பு  என்கிறார்கள்.

    ஆகவே ஆன்மீகம் என்பது இதுதான்  என்று அறுதியிட்டு இறுதியாகச் சொல்ல முடியாத  ரகசியம்தான். ஆன்மீகம் என்பதே இறைவனிடம் ஆழ்தல் ஆகவே ஆன்மீகத்தை ஆழ்மீகம் என்றும் சொல்லலாம்.  அதை நாம் முழுவதுமாகக் கண்டுபிடிக்கும் வரை. முழுவதுமாகக் கண்டுபிடிக்கவும் இயலாது  என்றே தோன்றுகிறது. ஆகவே ஆன்மீகம்   என்பதே ஒரு  புரியாத  புதிர். என்று இயற்கை சக்தி அதை விடுவிக்குமோ  அன்றுதான் நம்மால்  உணரமுடியும்;  அதற்கு  நாம் நம் சக்திகளை திரட்டி வைத்துக் கொண்டு அந்த ரகசியத்தை அறிய காத்திருக்கத்தான் வேண்டும். ஆகவே சக்தி திரட்டல் என்பதே ஆன்மீகம்  என்று இப்போதைக்கு வைத்துக் கொள்வோம், அது விஞ்ஞான சக்தியா மெய்ஞ்ஞான சக்தியா  என்பதைக் காலம்தான் உணர்த்த வேண்டும்.

    Share
  • ஆன்மீகமும் ஆழ்மீகமும் – 1

    -தமிழ்த்தேனீ  

    பாகம் 1

    ஆன்மீகம் என்று ஒரு கட்டுரை எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன் அதற்கு எனக்குத் தூண்டுகோலாயிருந்தது  உண்மையில் எது முக்கியம்? விளங்க முடியாக் கடவுளா? அல்லது சக மனிதனா என்கிற வினா, இந்த வினா என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

    என் மனத்திற்கு நியாயம் என்று தோன்றியதை எனக்குத் தெரிந்த வரையில் எழுதி இருக்கிறேன், அதுமட்டுமல்ல  கடவுளை நாம் ஏன் போய் தரிசிக்கவேண்டும் அங்கே போனால் ஒரு கண நேரம் கூட நம்மை அனுமதிக்க மாட்டேன்  என்கிறார்கள் கோயிலில் என்று பலர் கேட்கிறார்கள்.

    நான் சொல்கிறேன்  கடவுளைத் தரிசனம் செய்வதற்காக  கோயிலுக்கு  செல்லாதீர்கள் .  கடவுள் நம்மைக் காணக் கோயிலுக்கு செல்லுங்கள்.  நாம்  அவரைக் கண்டு ஒரு உபயோகமும் இல்லை,  அவர் தன் கருணைக் கண் கொண்டு நம்மைப் பார்த்தால்தான் நமக்கு உயர்வு கிடைக்கும் அதுதான்   உபயோகம் என்று!

    எம்மதமாயிருந்தாலும் சம்மதம் ’மனிதம்’ தான் முக்கியம் என்னும் உயரிய நோக்கோடு நாம் எல்லோரும் முழு மனத்தோடு கூடி  ’மனிதம்’ என்னும் ஒரே கொள்கையோடு முயற்சி செய்வோம், நிச்சயமாய்ப் புரிந்து கொள்வோம்,   ’மனிதம்’ தான் ஆன்மீகத்தின் ஆணி வேர் என்னும் உயரிய தத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்  என்று நினைத்தால் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விஷயம்  கடவுளைப் பற்றியதாக இருந்தாலும், சக மனிதரைப் பற்றியதாக இருந்தாலும் புரிந்து கொள்ளவேண்டும் என்று உண்மையாக செயல்பட்டால் நிச்சயமாகப் புரிந்து கொள்ள முடியும், புரிந்து  கொள்ளக் கூடாது என்று நினைத்துவிட்டால் புரிந்தாலும் மனது ஏற்றுக் கொள்ளாது  நாம் புரிந்து கொள்வோம் வாருங்கள்.

    நான் பொதுவாக எங்குச் சென்றாலும் அங்கிருக்கும் மனிதர்களிடத்தில் பொதுவாக கேட்பேன் ”யார் உறவுக்காரர்கள்” என்று பலர் பலவிதமாக விளக்கம் சொல்வார்கள், ஆனால் நான் கடைசியாகச் சொல்வேன்  இப்போது இங்கிருக்கும் நாம்தான் உறவுக்காரர்கள், ஏனென்றால் இப்போது இந்தக் கணத்தில் இங்கு என்ன நடக்கிறதோ அந்த நடப்புக்கேற்ப நன்மையாக இருந்தாலும், தீமையாக இருந்தாலும் முதலில் நமக்கு உதவப் போவது இங்கிருக்கும் நம்மில் ஒருவர்தான், பிறகுதான் மற்ற உறவுக்கோ, நண்பர்களுக்கோ செய்தி அனுப்புவோம் ஆகவே நாம் தான் உறவுக்காரர்கள் என்று.

    ***

    பாகம் 2

    கடவுள் நம்பிக்கை, உருவ வழிபாடு, அருவ வழிபாடு, மதம், கோவில், திருவிழா, தேரோட்டம்  எல்லாமே மனிதனால் உருவாக்கப்பட்டவை. மனிதனாலேயே விஸ்தரிக்கப்பட்டவை அவற்றை மனிதன் தான் செப்பனிட வேண்டுமே தவிர, கடவுள் முக்கியமா மனிதன் முக்கியமா என்ற ஆராய்வே அவசியமற்றது என்றுதான் தோன்றுகிறது. ஆனாலும் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டால் மனிதம் என்னும் ஆணிவேருக்குச் சரியான விளக்கம் என்ன என்பதை அறியலாம் என்னும் முயற்சியால் இக்கட்டுரையை எழுதுகிறேன்.

    கண்ணுக்குத் தெரியாத கடவுளை விடப் புலனுக்கு தெரியும் மனிதன் முக்கியம் தான் என்றால் அந்த மனிதன் தன் வாழ்க்கையில் மிக முக்கியமான பங்காக கடவுளை வைத்திருக்கிறானே “என்கிற பதில் என்னை ஆன்மீகத்தைப் பற்றி ஓரளவு எழுதலாம் என்று எண்ண வைத்திருக்கிறது.  மனிதர் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும் உலகிலே நம்மை மீறிய சக்தி உண்டு என்று ஒப்புக்கொள்வர், மேலும் அறிவார்ந்து சிந்திப்பவர்கள், விவரமறிந்தவர்கள் எப்போதும் நல்ல சக்தி ஒன்று கெட்ட சக்தி ஒன்று ஆக மொத்தம் இரு சக்திகள் உண்டு; கெட்ட சக்திகள் நம்மை ஆட்டிவைக்கின்றன என்று ஒப்புக்கொள்வர்.  கெட்ட சக்திகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவே நாம் இறைவனை  (அதாவது) நல்ல சக்தியை தொழுகிறோம் என்று சொல்வார்கள்.  சக மனிதர்கள் முக்கியம் என்றால், சக மனிதர்களின் உணர்வுகளும் முக்கியமானவைதானே? அதனால்தான் சொல்லுகிறேன், திட்டமிட்டு ஒரு கட்டுப்பாட்டோடு செய்யும்போது எதுவுமே  உயர்கிறது.  நாம் நம் மனதுக்குப் பிடித்தவற்றைச் செய்யலாம், தவறில்லை, அடுத்தவர்க்குத் துன்பம் தராமல் இருக்க கூடிய கட்டுப்பாடு வேண்டும் அதை விட்டு விட்டு உண்மையில் எது மிக முக்கியம்? விளங்க முடியா கடவுளா..? அல்லது சக மனிதனா? என்கிற கேள்வியே தேவை இல்லையோ என்று தோன்றுகிறது.

    விளங்க முடியாத பல விஷயங்களை விளங்கிக்கொண்டுதான் எல்லாம் செய்ய வேண்டுமென்றால், நாமெதையுமே செய்யமுடியாது, சக மனிதர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரவர் மரியாதையைக் காப்பாற்றி ஆகவேண்டும் அதுதான் ஜனநாயகம், கடவுள் மட்டுமல்ல, மனிதன் கூட விளங்கமுடியாதவன்தான். கட்டுப்பாடு என்பது எல்லாவித மனிதரையும், அவர்களின் உணர்ச்சிகளையும் மதிப்பது என்பதுதான் மனிதம்.  அவரவரை அப்பப்படியே ஏற்றுக் கொள்ளும், மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால்தான் மனிதம் வளரும்.

    “குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை” என்று பெரியவர்கள்  சொல்வார்கள், சக மனிதர்கள் ஒரு பொதுவான மன நிலைக்குவரவேண்டும். அனைவரும் ஒற்றுமையாக , இயல்பாகச் சகமனிதர்களிடம் அன்பாக, சகோதர மனப்பான்மையுடன் இனிமையாகப் பழகி வாழ்நாட்களை இனிமையாகக்  கழிக்கவேண்டும் என்கிற என்னுடைய நியாயமான ஆவல் நிறைவேறத்தான்  இதை எழுதுகிறேன்.  இதில் ஏதேனும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; தவறுகள் இருந்தால் எனக்கு உணர்த்தலாம், நான் தவறு என்று உணர்ந்தால் திருத்திக் கொள்ளத் தயாராய் இருக்கிறேன்.

    ஒரு வேண்டுகோள் என்னுடைய கருத்துக்களும், உங்களுடைய சார்ந்த கருத்துக்களும், மாற்றுக் கருத்துக்களும் இனிமையான, இதமான சொற்களோடு வரட்டும் வரவேற்கிறேன். கூடிய வரையில் அடுத்தவர் மனம் நோகாமல்,  நாம் எழுத முற்படுவோம். அதற்கும் மேலாக யாராவது மனம் புண்பட்டால், அவர்கள் என்னை மன்னிக்குமாறு இப்போதே வேண்டிக் கொள்கிறேன்.

    ***

    பாகம் 3

    ஏனென்றால் நான் சொல்ல வருவதை அழுத்தமாக, திடமாக சொல்லுவேன். நம் அனைவரையும் என்னையும் உட்படச் சொல்லுகிறேன், ஏதாவது சிறிதளவாவது நல்ல கருத்துக்களைக் கற்றுக் கொள்ள உதவினால் மகிழ்வேன். நாம் அனைவருமே பழக்க வழக்கங்களினால், அதாவது நாம் பழக்கப் பட்ட விதத்தால் அதற்கேற்றவாறு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் நாம் எப்போதும் சரியாகத்தான் நடந்து கொள்கிறோம் என்பதும் இல்லை,எப்போதும் தவறாக நடந்து கொள்கிறோம் என்பதும் இல்லை.

    என் அம்மா என்னுடைய அம்மாவின் தாயாரை அம்மா என்று அழைப்பதைக் கேட்டு எனக்கு பழக்கம், அதனால் அதே பழக்கத்தால் என்னுடைய தாயாரின் தாயாரைப் பாட்டி என்று ஒரு நாளும் நான் அழைத்ததில்லை; மாறாக அம்மா என்றே அழைத்திருக்கிறேன்.  இதைத் தவறு என்று சொல்பவர்களும் உண்டு, சரி என்று ஏற்றுக் கொண்டவர்களும் உண்டு. ஏற்றுக் கொள்பவர்களின் மனோபாவத்துக்கு ஏற்றவாறு எல்லாம் மாறுகிறது என்பதற்குத்தான் இதை உதாரணமாகச் சொன்னேன். நாம் சிறு வயதில் ஒரு கதை கேட்டிருப்போம், ஒரு மெலிந்த மரக் கிளையை ஒருவனிடம் கொடுத்து அதை உடைக்கச் சொன்னார் ஒருவர், அந்த மெலிந்த மரக் கிளையை வெகு எளிதாக உடைத்தான் அவன். பிறகு அதே போன்று பல மெலிந்த மரக் கிளைகளை ஒன்றாகக் கயிற்றால் இணைத்து கட்டி அதே மனிதனிடம் கொடுத்து உடைக்க சொன்னார், ஆனால் அவனால் இப்போது அந்த மெலிந்த மரக் கிளைகள் கொண்ட அந்த மொத்த கட்டை உடைக்க முடியவில்லை. இதனால் தான் பல சாதாரண சக்திகள் ஒன்றாக இணைந்து செயல்படும்போது அது ஒரு சக்தி வாய்ந்த பெரிய சக்தியாக மாறுகிறது என்பது அங்கு நிரூபணமாகிறது . இதே தத்துவத்தை அடிப்படையாக வைத்துதான் மனிதன் தன்னைவிட சக்தி வாய்ந்த ஒரு சக்தியை நம்பி தனக்கென்று ஒரு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள ஆலயங்கள் உருவாக்கினான். ஒருமித்த மனத்தோடு கூடிய கூட்டு வழிபாடுகளை உருவாக்கினான்.

    பொதுவாக ஒருமித்த மனத்தோடு கூடிய கூட்டு வழிபாட்டிற்குச் சக்தி அதிகம் என்று நாம் எல்லோரும் உணர்ந்திருக்கிறோம். அதனால்தான் யாருக்கு எந்தத் துன்பம் வந்தாலும், நாம் எல்லோரும் கூட்டாக வழிபாடு செய்கிறோம்.

    ஒவ்வொரு தனி மனிதருக்குள்ளும் ஒரு சக்தி இருக்கிறது.  கூட்டாக முயற்சி செய்யும்போது அத்தனை சக்தியும் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய சக்தியாக உருவாகி அந்த வழிபாட்டை நிறைவேற்றி வைக்கிறது. பெற்றோர், மனைவி, குழந்தைகள் அத்தனை பேரையும் ஒரு தேசத்திலே விட்டுவிட்டுப் பிழைப்புக்காக வேறு ஒரு தேசத்திலே போய் வேலை செய்யும்போது , தன்னுடைய பெற்றோர், குழந்தைகள், ஆசை மனைவி இவர்களை நேரிலே பார்க்க வசதி இல்லாதவர்கள், அவர்களின் புகைப் படங்களைத் தன்னிடம் வைத்துக் கொண்டு அதைப் பார்த்தாவது ஆறுதல் அடைகிறோம். நாம் பூவுலகத்தில் நம்மோடு வாழும் உறவினர்களிடமிருந்து வெகு தூரம் விலகி இருக்கும்போதே நாம் அவர்களின் புகைப்படங்களையாவது பார்த்து ஆறுதல் அடைகிறோமே, தற்காலத்தில் விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாக எப்போது நினைத்தாலும் அவர்களுடன் பேசலாம் இணையப் புகைப்படக் கருவி மூலமாக பார்த்துக்கொண்டே பேசலாம்.

    ***

    பாகம் 4

    ஆனால் எந்தவித விஞ்ஞான உபகரணங்களும் இல்லாத காலத்திலே மக்கள் எப்படித் துன்பப்பட்டிருப்பார்கள் என்று யோசித்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது . எந்த ஒன்றும் கிடைக்காத போதுதான் அதன் அருமை தெரியும்அருகிலே இருக்கும்போது நமக்கு அருமை தெரியாது. இங்கு என்னுடைய வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். எல்லா இறைவன் மேலும் எனக்கு பக்தி இருக்கிறது ஆனாலும் என் தாயார் மேல் அளவுகடந்த பாசம் வைத்திருந்தவன் நான். ,தந்தைமேலும் பாசம் வைத்திருந்தேன். என் தந்தை என்னுடைய பதினொன்றாவது வயதில் இறைவனடி சேர்ந்து விட்டார். அதனால் அந்த பக்தியும் பாசமும் இணைந்து, என் தாயாரின் மேல் செலுத்த ஆரம்பித்தேன்.

    ஆகவே இப்போது எல்ல தெய்வத்தையும் விட என் தாயை நான் தெய்வமாக வணங்கிக் கொண்டிருக்கிறேன். அது தவிர என் பூஜை அறையில் இறைவனின் படங்களுடன் என் பெற்றோர் படங்களும் இருக்கும். கூடவே என்னுடைய சகோதரி ராஜாமணி அவர்களின் படமும் இருக்கும். அதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. ராஜாமணி என்கிற என் சகோதரியை வணங்காமல் நான் எந்தச் செயலையும் செய்வதில்லை. தெய்வம் மனித உருவானது என்னும் சொல்லை மிக உண்மையாக என் வாழ்வில் சந்தித்து உணர்ந்தேன்.

    என்னுடைய ஏழாவது வயதில் எனக்கு நிமோனியா என்னும் காய்ச்சல் வந்தது. மருத்துவர்கள் நான் பிழைக்க மாட்டேன் என்று கை விட்டுவிட்டனர். அப்போது என்னுடைய மூத்த (சகோதரி) ராஜாமணி அவர்கள் என்னைத் தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டு கண்களில் நீர் தாரை தாரையாக வழிய மனமுருகி இறைவனிடம், “இறைவா என்னை எடுத்துக்கொள், என் சகோதரனைக் காப்பாற்றிக் கொடுத்துவிடு,  இறைவா என்னை எடுத்துக் கொள், என் சகோதரனைக் காப்பாற்றிக் கொடுத்துவிடு “ என்று வாய்விட்டு மனமுருகி வேண்டிக்கொண்டிருந்தாள். அவள் வேண்டுதல் வார்த்தைகள் என் காதிலும் கேட்டுக்கொண்டிருந்தது. என் உடலில் அவள் கண்ணீர் விழுந்து கொண்டிருந்தது. வாழ்வின் கடைசீ நேரத்தில் இருந்த நான் அன்று தெளிவானேன். மருத்துவர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு என் உடல் நிலை ஒரே நாளில் தேறியது. இறைவன் என் சகோதரி ராஜாமணியின் வேண்டுகோளுக்கு இறங்கிவிட்டான் போலும். மிகச் சாதாரணமான , ஆரோக்கியமான உடல் நலத்தோடு இருந்த என் சகோதரி ராஜாமணி திடீரென்று உடல்நலம் குன்றி அன்றே வலிப்புக் கண்டு இறந்து போனாள், நான் பிழைத்தேன்.

    என் சகோதரி அவள் இன்னுயிரை எனக்குக் கொடுத்துவிட்டு அவள் இறந்து போனாள்… “உயிரை, ஆயுளைக்கூட ஒரு உடலிலிருந்து தான் நேசிக்கும் மற்றொருவருக்கு மாற்ற முடியும் வல்லமை உண்மையான மனமொத்த வழிபாட்டுக்கு உண்டு என்று அன்று உணர்ந்தேன். இன்றுவரை என் உடலில் ஓடிக் கொண்டிருப்பது என் பிரிய சகோதரி ராஜாமணியின் உயிர்தான் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை.

    அதனால் என் தாய்க்கு அடுத்த படியாக எனக்கு மீண்டும் ஒரு பிறப்பைக் கொடுத்த என் பிரிய சகோதரி ராஜாமணிதான் எனக்கு இன்னொரு தாய். அதனால் அவள் படத்தையும் வணங்காமல் எந்த ஒரு வேலையையும் நான் செய்வதில்லை. சற்றே நினைத்துப் பாருங்கள் உண்மையான, மனப்பூர்வமான வேண்டுதலுக்கு வழிபாட்டுக்கு இப்படிப்பட்ட அரிய சக்தி இருப்பதை என் வாழ்விலே கண்கூடாகக் கண்டவன் நான்.

    ***

    பாகம் 5

    ஆகவே ஆத்ம சுத்தியான பக்திக்கும், ப்ரார்த்தனைக்கும் இறைவன் மனமிறங்குகிறான்; அருள் புரிகிறான் என்பது சத்தியமான உண்மை. ஆகவே நம்முடைய உண்மையான ஆத்மசுத்தியான பக்தி, ப்ரார்த்தனை, வேண்டுதல்கள்,வழிபாடுகள் நாம் கல்லில் வடிக்கும் இறைவனுக்கும் நம்முடைய சக்தியாக உள்ளே சென்றடையும். மீண்டும் அதே சக்தி நமக்கு ஏற்படும் இன்னல்களைக்  களையும் சக்தியாக உருவெடுக்கும் என்பது பரிபூரணமான உண்மை.

    இறைவனை நாம் நம்முடைய சாதாரண சக்தியை உபயோகப்படுத்தி பார்க்க முடியாது என்பதனால்தான் ஒரு விக்ரகமாக அவரை வடித்து அந்த வடிவத்தை இறைவனாக ஏற்று ,வழிபட ஆரம்பித்தோம். உருவ வழிபாடுகள் இப்படித்தான் தோன்றின. இதுதான் ஒரு ஆலயத்தில் ஒரு கடவுளை ப்ரதிஷ்ட்டை செய்யும்போதும் இதே தத்துவத்தில்தான் ஆலய நிர்மாணமும் விக்ரகப் ப்ரதிஷ்ட்டையும் நடக்கிறது. அங்கு ஒரு இறைவனை கல்லில் வடித்து அந்தக் கல் விக்ரகத்துக்குச் சக்தி கொடுக்கும் விதமாகப் பலபேர் சேர்ந்து அங்கு வந்து மந்திர உச்சாடனங்கள் செய்து அத்தனைபேரின் சக்தியையும் ஒன்றாகத் திரட்டி ஒரு குடத்திலே மந்திர உச்சாடனத்தின் சக்தியை அந்தக் குடத்து நீரில் இறக்கி அந்தக் குடத்து நீரை அந்தக் கல் விக்ரகத்தின் மேல் பொழிந்து அந்தக் கல் விக்ரகத்துக்கு அத்தனை பேரின் திரண்ட சக்தியை அளித்து, அந்தக் கல் விக்ரகத்தை இறைவனாக, சக்தி உள்ளவனாக மாற்றி, பிறகு தினமும் அந்தக் கல் விக்ரகத்துக்கு மந்திர உருவேற்றி அத்தனை பேரின் திரண்ட சக்தியாகிய அந்தக் கடவுளை எல்லோரும் வழிபட்டுத் தங்கள் கோரிக்கைகளை அந்தத் தெய்வத்திடம் வேண்டி பெறுதல் வழக்கமாக இருக்கிறது.

    இதே தத்துவத்தை அடிப்படையாக வைத்துத்தான் மனிதன் தன்னைவிடச் சக்தி வாய்ந்த ஒரு சக்தியை நம்பித் தனக்கென்று ஒரு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள ஆலயங்கள் உருவாகின. இறைவனை விளங்கிக் கொள்ள நாம் நம்மை தகுதியானவர்களாக ஆக்கிக் கொள்ளவேண்டும்.அப்போதுதான் இறைவனை விளங்கிக் கொள்ளமுடியும். ஒரு மஹா சக்தியை அல்லது ஒளியை, உதாரணமாகச் சூரியனை வெறும் கண்கொண்டு பார்க்க முடியாது. பார்த்தால் அதன் உருவம் நம் கண்ணின் சக்திக்குச் சரியாக விளங்காது. அதனால் ஒரு கருப்புக் கண்ணாடியை ஒரு சாதனமாகக் கொண்டு பார்க்கும் போது அந்தச் சூரியனின் ஒளி நம் கண்ணைக் கூசாமல் ,இதமாக இருக்கிறதல்லவா?அது போல ஒரு மஹா சக்தியை நாம் உணரவேண்டுமென்றால் அதன் சக்தியை நாம் தாங்கிக் கொள்ள இதமாகப் பதமாக அணுகவேண்டும். இறைவனைத் தரிசிக்க வேண்டுமென்றால் அதற்கு ஏற்ப பக்தி, த்யானம் போன்ற பல சாதனங்களை உபயோகித்து இறைவனை விளங்கிக் கொள்ள நாம் வகை செய்து கொள்ளவேண்டும்.

    வானிலே செவ்வாய்க் கிரகம் தோன்றப் போகிறது அதைக் காண விரும்புவோர் தொலைநோக்கி கொண்டு பாருங்கள். சூரியக் கிரகணம் இன்று வானிலே தெரியும் அதை வெறும் கண்கொண்டு பார்க்காதீர்கள், கண்ணுக்கு பாதகம் விளையும் என்றெல்லாம் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஏற்றுக் கொள்கிறோம் அல்லவா?

    அது போல வெறும் கண் கொண்டு இறைவனைப் பார்க்க முயலாதீர்கள். தியானம், யோகம் போன்ற சாதனங்களைக் கொண்டு இறைவனைப் பாருங்கள் அப்போதுதான் இறைவனை விளங்கிக் கொள்ள முடியும் என்று சொல்லும்போது ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது நாமும் அவர்கள் கூறும் சாதனங்களை உபயோகித்து முயன்றுதான் பார்ப்போமே!

    ***

    பாகம் 6

    விளங்க முடியாக் கடவுளா ..? அல்லது சக மனிதனா? இந்தக் கேள்விக்கு ஒரு பதில் உண்டு. கடவுள் விளங்க முடியாதவனல்ல; விளக்க முடியாதவனும் அல்ல. விளக்கவும் முடியும் , விளங்கவும் முடியும் ஆனால் நமக்கு அதற்குண்டான பொறுமையும் ஞானமும் வேண்டும். தமிழ் மறை நூல்களில்   ”கண்டவர் விண்டிலர்,விண்டவர் கண்டிலர் “என்று ஒரு கூற்று உண்டு. அதற்குப் பொருள் மெய்ஞ்ஞானம் என்னும் வழியில் சென்ற பலர் கடவுளைக் கண்டிருக்கின்றனர்; அதாவது அவர்கள் கடவுளைக் காணும் அளவுக்குத் தங்களுடைய ஆன்ம பலத்தைப் பெருக்கி அதன் மூலமாகக் கடவுளைக் கண்டிருக்கின்றனர். சாதாரணமாக நாம் உலகில் எப் பொருளைப்  பார்க்கவேண்டும் என்றாலும்  கண் இமைகளைத் திறக்க வேண்டும். அப்போதுதான் பார்க்க முடியும். கண்களை மூடிக் கொண்டே அங்கு எதையும் என்னால் பார்க்க முடியவில்லை என்று சொல்வது எப்படியோ அது போலத்தான் கடவுளும். அந்த மஹா சக்தியை நாம் பார்க்க வேண்டுமென்றால் அதைப் பார்க்குமளவுக்கு நம் உடலை, மனத்தை , நம் சக்தியைப் பெருக்கிக் கொள்ளவேண்டும்.

    கணிணியில் மென்பொருளைத் தாக்கும் கிருமிகள்  இருக்கிறது என்பதை நம்முடைய கணினியின் செயல்பாட்டை வைத்து அறிய முடியும்.  ஆனால் அந்த கிருமியைக் கண்ணால் பார்த்தால்தான் நம்புவேன் என்றால் இது குதர்க்க வாதம். அதுபோல நம் கணினியைக் கிருமிகளிடமிருந்து காப்பாற்ற  எதிர்ப்பு சக்தியை நாம் இந்தக் கணிணிக்குள் செலுத்தி அதைப் போக்க முடியும். ஆனால் கணினி கிருமிகளை எதிர்க்கும் சக்தியை நான் கண்ணால் பார்த்தால்தான் நம்புவேன் என்பதும் குதர்க்கவாதம். ஏனென்றால் இரண்டு கிருமிகளும் மனிதரால் எழுதப்பட்ட  உபகரணங்களே.  கணினியைப் பற்றி அறிந்து கொண்டு கணினியில் எப்படிச் செயல்பாடுகளை புகுத்த முடியும் என்று உணர்ந்தவர்கள் தான் இவைகளை அறிய முடியும். கணினியைப் பற்றி , மனிதனால் உருவாக்கப்பட்ட கணினியைப் பற்றி அறியவே இவ்வளவு தகுதி தேவைப்படுகிறதென்றால் இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைத்த இறையைப் பற்றி அறிய  எவ்வளவு சக்தி, தகுதிதேவை?  அத்தனையும் நாம் அடைந்து அதற்குப் பிறகு  விளங்கமுடியாக் கடவுள், விளக்கமுடியாக் கடவுள் என்றெல்லாம் சொல்வோமானால் அது சரியான முறை. எங்குச் சென்றடைய வேண்டுமோ அங்குச் செல்லும் பாதையைக் கண்டுபிடித்து அந்தப் பாதையில் பயணம் செய்து, அப்போதும் அந்த இடத்தை அடைய முடியாவிட்டால் அப்போது சொல்லலாம். விளங்க முடியாத அல்லது விளக்க முடியாத என்றெல்லாம் இன்னும் நாம் போகவேண்டிய இடத்தையும் புரிந்துகொள்ளவில்லை ,அதற்குண்டான பாதையையும் நிர்ணயிக்கவில்லை. ஆகவே முதலில்  போகவேண்டிய இடத்தை  நிர்ணயித்துக் கொண்டு அதற்குண்டான பாதையைக் கண்டுபிடித்து  அந்த வழியில் நம் பிரயாணத்தை  மேற்கொண்டால் எதையும் காணலாம்.  கடவுளையும் காணலாம்.

    (தொடரும்)

    Share
  • ஆணடிமைகள்!

    -தமிழ்த்தேனீ

    ஆண்களே விழித்துக்கொள்ளுங்கள்!

    பாகம் 1:

    இது பெண்களுக்கு எதிரான கட்டுரை அல்ல; ஆண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரை முயற்சி. 

    “Henpecked husbands“ என்று இதுவரைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் “Henpecked Wives“   என்கிற சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறோமா?

    கீழே எழுதியிருப்பதைப் படித்துவிட்டு உடனே பொங்காமல் சொற்களை அவசரப்பட்டு அள்ளித் தெளித்து விடாமல்  தீர ஆராய்ந்து  விவாதிக்க  தைரியமான  உண்மையான ஆண்பிள்ளைகளே வாருங்கள். அப்படி உண்மைகளைத் தைரியமாக சொல்லிவிட்டால் மறுநாளிலிருந்து உணவு கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற  தார்மீக  பயம் கொண்ட ஆண்பிள்ளைகள் இந்த இழையில் கருத்துத் தெரிவிக்காமல் இருந்து தங்களுடைய  மானமுள்ள சாப்பாட்டைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

    அல்லது  பெண்டாட்டியிடம் அனுமதி வாங்கிக்கொண்டு  தைரியமாக களத்தில் இறங்குங்கள். தைரியமாக கருத்தைச் சொல்லுங்கள். அவ்வப்போது பரிதாபமாக பெண்டாட்டியைப் பார்த்து கோவப்படாதே சும்மா இந்த  இழைக்காக  எழுதுகிறேன் என்று சமாதானப்படுத்திக்கொண்டே எழுதுங்கள்.

    மீண்டும் தலைப்பில் எழுதியதையே இங்கே அளிக்கிறேன்

    Henpecked husbands என்று இது வரை கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால்

    Henpecked Wives என்கிற சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறோமா?

    அதே போல்  தமிழில் பெண்டாட்டிதாசன்  என்னும் சொல்லை உருவாக்கிய  தைரியமான ஆண்பிள்ளைகள் பெண்டாட்டிக்கும்  பெண்மணிகளுக்கும் பயந்துகொண்டு அஞ்சி  “புருஷதாசி“ என்னும் சொல்லை  உருவாக்காமலே இருந்த  நம் முன்னோர்கள் முதல் இன்னோர்கள் வரை அனைவருக்கும் ஒரு கேள்வியாகவே இதைக் கேட்கிறேன்.

    பாகம் 2:

    அதே போல் தாசி என்கிற  சொல்லுக்குத் தவறான பொருளைக் கற்பித்த  அனைவரையும்  கண்டிக்கிறேன்.

    ஒரு பெண்ணானவள் கணவனுக்கு நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்ப் பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய்,  படுக்கையில் தாசியாய் இருந்தால்தான்  பத்தினி  என்று பெரியவர்கள்  எல்லோரும் சொல்கிறார்கள். இது தவறான  சொல்லாடல் அல்லவா?

    ஏனென்றால்  ஒரு ஆணை கணவனாக  வரித்து அவன் மேல் பக்தியும் ப்ரேமையும் கொண்டு ஒருவனைப் பற்றி ஓரகத்திரு என்னும் வேதவாக்கைக் கடைப்பிடித்து அவனுக்காவே வாழும் உத்தமப் பெண்மணிக்கும்  தாசி  என்கிற பெயர். அதே போல் ஒருவனுக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் த்ரோகம் செய்து பலருடன் வாழும் பெண்மணிக்கும்  தாசி என்கிற பெயர்  என்றால் எங்கோ  இடிக்கிறதே.   ஆகவே களங்கப்படுத்தும் வகையில்    மானத்தைக் காற்றிலே  பறக்கவிட்டுப் பொருள்ஈட்டும்  பரத்தைக்கும் தாசி என்கிற  சொல்லைக் வைக்காதீர்கள்.   தாசி என்றால்  காதலுள்ளவள்  அன்புள்ளவள் பக்தியுள்ளவள் பாசமுள்ளவள் என்றெல்லாம் பொருள் சொல்லாமல்  ஒரு தவறான பொருளை ஏற்படுத்தி வைத்திருக்கிறீர்களே  இது நியாயமா?

    கண்ணதாசன் என்று தைரியமாக பெயர் வைத்துக்கொள்ளும் இந்த நாட்டிலே  கண்ண தாசி கிருஷ்ணதாசி என்று பெயர் வைத்துக்கொள்ள ஒரு பெண்மணியால் இப்போது முடியுமா?

    அடியேன் தாசன் என்று ஒரு ஆணால் தைரியமாக சொல்ல முடியும் ஆனால் அடியாள் தாசி என்று ஒரு பெண்ணால் தன்னைச் சொல்லிக் கொள்ள முடியுமா?

    முடியாது  ஏனென்றால் தாசி என்றால் உண்மையான பொருளை மறைத்துக்  கேவலமான பொருளை மக்கள் மனதிலே திணித்துவிட்டார்கள்  அதனால் முடியாது.

    ஏற்கெனவே கிருஷ்ணதாசி என்றுதான்  பக்த  மீராவுக்கும் அவர் போல் கிருஷ்ணன் மேல் காதல் அன்பு பாசம்  பக்தி கொண்டவர்களுக்கும்  பெயர் என்று  சப்பைக் கட்டுக் கட்டவேண்டாம் . இப்போதைய  காலகட்டத்தில்  அதுவும் குறிப்பாக தாசி என்கிற சொல்லுக்கு  தவறான பொருள் கொண்ட  இக்காலத்தில்  யாரேனும் தைரியமாக கிருஷ்ணதாசி என்றோ  ராம தாசி என்றோ  பெயர்  வைத்துக்கொள்ள முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். 

    பாகம் 3 :

    இன்று வரை பெண்ணுக்குப் பெண்ணே  எதிரி என்னும் சொல் வழக்கு இருக்கிறது.   ஒரு பெண்ணுக்கு எதிரியாக இன்னொரு பெண்ணைத்தான் சொல்கிறார்களே தவிர  ஒரு பெண்ணுக்கு  ஆணே எதிரி  என்று யாராவது சொல்லி இருக்கிறார்களா?  இல்லை  ஏனென்றால்   ஆண்கள்  பெண்ணுக்கு எதிரி அல்ல;  அடிமைகள் என்பதை  பெண்மணிகள் நன்றாகவே உணர்ந்திருந்த காரணத்தால்தான் அப்படிப் பெண்ணுக்கு ஆணே எதிரி  என்கிற  சொல் வழக்கை ஏற்படுத்தாமல் விட்டுவிட்டார்கள்.

    நன்றாக யோசித்துப்  பார்த்தால்  அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை இராமாயணக் காலம் முதற்கொண்டு  கைகேயி சூர்ப்பனகை போன்றோர்கள்  மஹாபாரதக் காலத்திலே  குந்தி தேவிக்கு  முதலில் குழந்தை பிறந்துவிட்டது என்று பொறாமைப்பட்டு  அம்மிக் குழவியால்  தன் வயிற்றிலே இடித்துக்கொண்டாள் காந்தாரி அப்படி இடிபட்டதால்  101  சதைப் பிண்டங்களாக  சிதைந்த  அந்த  சதைப்பிண்டங்களை உயிர் பிழைக்க வைத்து  நூற்றி ஒரு குழந்தைகளாகப் பிறக்க வைத்தனர் என்பது  மஹாபாரத நிகழ்வு.

    சரி அதை விட்டுவிடலாம்!  கற்புக்கரசி  கண்ணகியின் வாழ்வைக் குலைத்தது   மாதவிதானே தவிர   பாண்டிய  மன்னன் அல்ல; பாண்டிய மன்னன் கோவலனின் உயிரைத்தான் எடுத்தான்.  ஆனால்  மாதவி  கோவலன் என்கிற  ஆணின் மானத்தை உயிரை உடமைகளை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு  கண்ணகியின் வாழ்வைக் குலைத்தாள்.

    ஆக கண்ணகி என்கிற  கற்புக்கரசியின் வாழ்வைக் குலைத்தது  மாதவி  என்கிற இன்னொரு பெண்தான் இது சிலப்பதிகாரம்.

    ஆகமொத்தம் இதிகாச புராணங்கள் இலக்கியங்கள் எல்லாவற்றிலுமே பெண்கள்தான் பெண்களுக்கு எதிரிகளே தவிர  ஆண்களல்ல  என்பது  நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

    ’சினிமாவுக்குப் போன  சித்தாளு’ என்னும் கதையில் திரு ஜெயகாந்தன் அவர்கள் ஒரு சாதாரண கீழ்த்தட்டு பெண்மணி  வழக்கத்துக்கு மாறாக  அவள் புருஷன் மேல்  விழுந்து விழுந்து கட்டிக்கொண்டு கொஞ்சுகிறாள்  புருஷனே ஆச்சரியப்படுகிறான்  என்றெல்லாம்  எழுதிவிட்டு, அந்தப் புருஷன் போட்டிருக்கும் பனியனில் ப்ரபல நடிகரின் புகைப்படம் பதிந்திருக்கிறது  என்று எழுதினாரே!

    இப்போதைய செய்திதாள்களிலே பார்த்தால்  கள்ளக் காதலனுக்காகக் கணவனைக் கொன்ற  காரிகை என்றுதான் தலைப்புச் செய்தியே  போடுகிறார்கள். அன்னிய நாட்டுக்கு உளவாளியாக செயல்பட்டு  தங்களின் அழகால் மயக்கும் தன்மையால் ரகசியங்களைக் கவர்ந்து ஆண்களைப் புத்தி பேதலிக்க வைத்து மன்னாதி மன்னர்களையும் மண்ணைக் கவ்வ வைப்பது பெண்களா  அல்லது ஆண்களா என்று யோசித்தால் ஆதாரங்களே சொல்கின்றன பெண்கள்தானென்று.

    ஒவ்வொரு ஆணும் பயப்படும் ஒரு நிகழ்வு இது! ஒரு பெண் ஒரு ஆணை அடையவேண்டும் என்று நினைத்து விட்டாலோ  அல்லது அவனிடம் உள்ள பொருட்களை கவர்வதற்காகவோ  அல்லது வேறு ஏதேனும் ஆதாயத்துக்காகவோ அந்த ஆணை அணுகும்போது அந்த  ஆண் சம்மதிக்காவிடில்   கூசாமல்  இந்த ஆளு என் கையைப் பிடித்து  இழுத்துவிட்டான்  என்றோ  என்னிடம் தவறாக நடந்துகொள்ள  முயற்சித்தான் என்றோ அந்தப் பெண்மணி சொல்லிவிட்டால் உடனே  எல்லா ஆண்களும்  சற்றும் யோசிக்காமல் நடந்த  உண்மையென்ன என்பதை ஆராயாமல்  ஒற்றுமையாக சேர்ந்து  ஒரு பொண்ணுகிட்டே இப்பிடியா நடந்துக்கறது. (மனதுக்குள்  எனக்கு இப்பிடி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே  என்று முணுமுணுத்துக் கொண்டே) அந்த வாய்ப்பு கிடைக்காத  ஏமாற்றத்தையும் ஆத்திரமாக மாற்றிக்  குற்றம் சொல்லப்பட்ட  ஆண்மகனுக்கு  தர்ம அடி கொடுக்கும் ஆண்களே அதிகம் என்கிற ஒரே காரணத்தால் பயப்படும் ஆண்களே!  இப்போதாவது தைரியமாக  உண்மையை சொல்ல  முன் வாருங்கள். இந்த அரிய  சந்தர்ப்பத்தையும்  இழ்ந்துவிட்டால் ஆணினத்துக்கு  விமோசனமே கிடையாது. நன்றாக யோசித்துப் பாருங்கள்!

    பாகம் 4 

    ஒருபெண் நினைத்தால் அவள்  சாதுர்யமாகவோ அல்லது தன் அழகாலோ தன் கவர்ச்சியாலோ அல்லது அன்பாலோ பாசத்தாலோ காதலாலோ  ஒரு ஆணை வீழ்த்த  முடிகிறது, ஆனால் ஆண்கள் தாம் விரும்பும் பெண்ணை அடைய எத்தனையோ முயற்சிகள் செய்தும் தோற்றுப் போகிறார்கள். 

    இல்லையேல் அவள் கிடைக்காத ஆத்திரத்தால் அவளைத் துரத்தி  அவளுக்கு கேடு விளைவித்து  மாட்டிக்கொண்டு கம்பி எண்ணுகிறார்கள். சாதுர்யம் என்னும் கலை ஆண்களுக்கு வரவே வராதோ? வருவதில்லை  என்பதே  உண்மை. ஐயோ பாவம் ஆண்கள்!

    ஒரு பெண் ஒருவனைக் காதலிக்கத் தொடங்கினால் ஒரு சிறு கண்ணசைவிலேயே உணர்த்தி விடுகிறாள். ஆனால் ஆண் காதலிக்க ஆரம்பித்தால் ஒன்று வெறிக்க வெறிக்கப் பார்க்கிறான் அல்லது அசடு வழிகிறான், அல்லது காதலைச் சொல்ல தடுமாறுகிறான், அப்படியே தைரியம் கொண்டு அந்தக் காதலைச் சொல்ல முடிவெடுத்தாலும் எப்படிச் சொல்வதெனத் தெரியாமல் அந்தப் பெண்ணைக் கவர நீ இல்லேன்னா நான் உயிரை விட்ருவேன்  என்றோ, அல்லது தன்  மேல் இரக்கம் வருவதற்காக தன்னையே அழித்துக்கொள்ள முயன்று அதன் மூலமாக அவளுக்கு உணர்த்த  முனைகிறான். ஆனால் அந்தப் பெண் அவன் உணர்ச்சிகளை புரிந்துகொண்டாலும் அவளுக்குத் தன்மேல் தன் அழகின்மேல் இருக்கும்  அபார நம்பிக்கையால்  அவனை விலக்குகிறாள், அவளுக்குப் பிடித்தவனையே காதலிக்கிறாள். 

    அதனால் ஆண் உணர்ச்சிவசப்படுகிறான். கதாநாயகன் என்னும் அந்தஸ்திலிருந்து  வில்லனாக  மாறுகிறான். சமூகத்திலே  கெட்டபெயர் வாங்குகிறான். ஒரு பெண்ணின்  சம்மதமே அவனை கதாநாயகனாகவோ வில்லனாகவோ மாற்றுகிறது. அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்று கம்பர்  சொன்னதிலிருந்து தெரிகிறது. அந்தச் சீதையான  அவள்  மட்டும் அண்ணலை நோக்காதிருந்தால் அண்ணல் ராமன் வில்லனாகவும்  ராவணன் கதாநாயகனாகவும்  மாறி இருப்பான் என்பதே உண்மை.

    பாவேந்தர் பாரதிதாசனின் பாடலில் “கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்” என்கிறார்  அது  உண்மையே.    அப்படிக் கண்ணால் காதலை ஒரு பெண் சொல்லாத போது ஒரு கடுகும் சிறு கடுகும் மா மலையாகிறது ஆணுக்கு. 

    ஆனால் லோக மாதாவான சீதை பரப்பிரும்மத்தை ஏற்கெனவே அறிவாள் அதனால் அவளும் நோக்கினாள் பிரிந்த  தம்பதிகள் மீண்டும் ஒன்று கூடினர் அவ்வளவே. அவர்களைப் பிரிக்கமுடியாது என்பதை அறியாத ராவணன்   வீண் முயற்சியால் கெட்ட  பெயர் எடுத்தான். 

    பாகம் 5

    பெண்பார்க்கும் படலத்திலே  அந்த  நாள் முதல்  இந்த  நாள் வரைப்  பெண்கள் மிகச்சரியான தேர்வு முறையையே கையாண்டனர். உண்மையில் பெண் பார்க்க வந்த  மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை என்றால் அதையும் பெற்றோர்களுக்கு உணர்த்தியும்  பிடிவாதப் பெற்றோர்களால் பிடிக்காத மாப்பிள்ளைக்கு மணமுடிக்கப்பட்டால்  முழு மனதோடு வாழாமல்  துன்பத்துக்கு ஆளாகினரே ஒழிய பிடித்த மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப் பட்டவர்கள் நன்றாகத்தான் வாழ்ந்திருக்கின்றனர் என்பது உண்மை. அதையும் மீறிச் சில பெண்கள்  விதியை நினைத்து வருத்தப்பட்டாலும்  வேறு வழியில்லாத  காரணத்தால்   அனுசரித்து வாழ்ந்த பல பெண்களும் உண்டு  என்றாலும், பார்த்த  பார்வையிலேயே ஆணை எடைபோடும் சாமர்த்தியம் பெண்களுக்கு இருப்பது போல் ஆண்களுக்குக் கிடையாது  என்பதே உண்மை.

    அதனால்தான் தன் தகுதிக்கும் அழகுக்கும்  மீறிய  பெண்களைத் திருமணம் செய்து கொண்டு பயந்து பயந்து எங்கே  நம்மை விட்டு விட்டுப் போய்விடுவாளோ  என்று அஞ்சி  அவளுக்கு தாசானு தாசனாகி  அதற்காகவே  பெற்றோரையும் உற்றார் உறவுகளையும்  கூடப் பகைத்துக்கொண்டு  பெண்டாட்டி தாசனாக ஆகிறார்கள் என்பதே உண்மையான அவல நிலை.

    எனக்கு ஒரு ஆச்சரியம்!  அம்மாவைக் கொடுமைப்படுத்தும் அப்பாவை வெறுக்கும் ஆண்கள் கூட  அம்மா என்னும் பெண்மணி அந்த அப்பாவின் உழைப்பையும்  வாங்கிக்கொண்டு  அவருடைய சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு மொத்தமாய் அவரை அன்பாலோ பண்பாலோ அழகாலோ அதிகாரத் தோரணையாலோ ஆள் பலத்தாலோ ஆட்கொண்டு குளவி கொட்டிக் கொட்டி தன் நிறம் ஆக்குதல் போல் நாளடைவில் அவரைக் குழந்தையாக்கித் தன் முந்தானைக்குள்ளே அவரைப் பூட்டி வைத்து  செயலிழக்க வைத்து  அவருக்கு  அவர் ஒரு ஆண்பிள்ளை  என்பதையே மறக்கடித்து  ஆமாம் சாமி போட்டுத் தலையாட்டும் ஒரு தஞ்சாவூர்த் தலையாட்டி பொம்மையை உருவாக்கி  வைத்திருக்கிறாள் என்பது எப்போது புரியும்.   இப்படிப்பட்ட அப்பாவியான அப்பாவை வில்லனாக நினைக்கும் பிள்ளைகளாவது  தன்மானத்தையே பெரிதாக  நினைத்து ஆண்பிள்ளைத் தனத்தைக் காட்டி அவர்கள் மனைவியை அடக்கி ஆள்கிறார்களா?

    இல்லையே  அவளிடம் அடிமைப்பட்டு  பெற்றவர்களையே  முதியோர் இல்லத்திலோ  அல்லது அனாதை விடுதியிலோ  சேர்க்காமல் இருக்கிறார்களா அல்லது  வீட்டில் வைத்திருந்தாலும்  மனைவி பேச்சைக் கேட்டுக்கொண்டு  அம்மாவையும் அப்பாவையும் துன்புறுத்தாமல் மரியாதையாக நடத்துகிறார்களா  என்றால் அதுவும் இல்லை.

    பாகம் 6

    அதைப் பார்க்கும்  பேரன் மனம் வெதும்புகிறான்  தாத்தாவையும் பாட்டியையும் அப்பா ஏன் இவ்வளவு கேவலமாக நடத்துகிறார்  நம்மோட  அம்மாவுக்கு பயந்து என்று  அவனும் தன்னுடைய  அப்பனை வெறுக்கத் தொடங்குகிறான்.  இப்படி  வம்ச பரம்பரையாக  வந்தீரே  சித்தப்பா என்னும் சொல் வழக்குக்கேற்ப  எந்தப் பிள்ளைக்கும்  தகப்பனைப் பிடிப்பதில்லை.

    இப்படிக்  காலம் காலமாக அப்பா பிள்ளை உறவு கசந்தே இருக்கிறது. தன் மேன்மையை  நினைத்தே அப்பா கண்டிப்பாக நடந்து கொள்கிறார் என்பதை உணராமல் இருக்கும் பல பிள்ளைகள்  அவர்கள் பிள்ளையிடம்  கண்டிப்பாக  நடந்து கொள்கிறார்களே அது எப்படி அந்தப் பிள்ளை மட்டும் அவரைப் புரிந்து கொள்ளும்  என்று நம்புகிறார்கள் என்பதே ஒரு பெரிய  கேள்விக்குறி.

    ஆக மொத்தம் எந்தப் பிள்ளையாவது பெற்ற தகப்பனை அன்போடு நடத்துகிறார்களா  பாசத்தோடு கவனிக்கிறார்களா என்றால் இல்லை என்கிற வருந்தத்தக்க விடையே வருகிறது. இதிலும் தாய்க்குலம் தப்பித்துவிடும்  அதென்னவோ  தாய்க்குலம் காட்டும் ஆசை பரிவு பாசம் நேசம்  எல்லாம் மட்டும் புரிகிறது பிள்ளைகளுக்கு.  ஆனால் ஜுரம் வந்தால் கசப்பு மருந்து கொடுக்கும் வைத்தியரைப் பிடிக்காமல் போவது போல தந்தை காட்டும் கண்டிப்பான  நேர்வழி  உயரும் வழி என்று தெரிந்தாலும் அதைக் கசப்பு மருந்தாகவே எண்ணித் தந்தையை வெறுக்கும் பிள்ளைகளே அதிகம். இதுதான் ஆண்களின் தலைவிதி போலும். இதையெல்லாம் தெரிந்தாலும் காட்டிக்கொள்ளாமல் பிள்ளையின் முன்னேற்றமே குறிக்கோளாய் தியாகியாய் வாழ்பவரே அப்பா.   ஐய்யோ பாவம் இந்த அப்பாக்கள்,  இந்த ஆண்கள்.

    ஆகமொத்தம் மாமியார் கொடுமை கேள்விப்பட்டிருக்கிறோம்;  மாமனார் கொடுமை என்னும் சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறோமா?  ஆகவே  சிந்தியுங்கள் ஆண்களே!  இது பெண்ணடிமைக் காலமல்ல; ஆணடிமைக் காலம் என்பதை உணருங்கள்!

    ஆனாலும் ஆண்களின் மழுங்கிப்போன புத்தியை எந்தக் காலத்திலும் விழித்துக்கொள்ளாத அளவுக்கு ஆக்கவே  பெண்கள்.  பெண்களை ஆண்களுக்கு  நிகராக நடத்த வேண்டும் என்றும் பெண்ணடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும்  என்றும் மாதர் சங்கங்களும் பெண்களும்  ஒரு திறமையான  அரசியல்வாதி போல் செயல்பட்டு ஆண்களையும் அவர்கள் தன்மானத்தையும் பிரித்தேஆளும் சூழ்ச்சி கொண்டு  அடக்கி ஆளுகிறார்கள்.

    விழித்துக் கொள்ளுங்கள் ஆண்களே!

    இவ்வளவு சொல்லியும் விழித்துக்கொள்ளாவிட்டால் நான் என்ன செய்ய?

    அது சரி,  தலைவிதி என்று ஒன்று இருக்கிறதே! அதை யாரால் மாற்ற முடியும்? ’விதி வலியது’ அதற்கு முன்னால் நாம் எல்லோரும் வெறும் தூசுகள்.  தாய்க்குலம் வாழ்க வாழ்க வாழ்க!  (நமக்கேன் வம்பு)

    Share
  • அன்னையர் தினம்!

    -தமிழ்த்தேனீ

    உலகிலேயே லாபமில்லா நிறுவனம் அதாவது NON PROFITABLE ORGANAISATION ஆரம்பித்தவர் யார் தெரியுமா?

    அதாவது எந்த ஒரு லாபமும் இல்லாமல் எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு துணைப் பங்குதாரரையும் இணைத்துக்கொண்டு முதன் முதலாக லாபமில்லாத நிறுவனம் தொடங்கித் தங்களுக்கு வரும் பரிசுப் பொருட்கள், சொத்துக்கள் எல்லாவற்றையும் உபயோகிப்பாளருக்கே தந்து நஷ்டத்திலேயே இயங்கி ஆனாலும் மகிழ்ச்சியாக நிறுவனத்தை நடத்தி கடைசியிலே தங்கள் கையிலே ஒன்றுமில்லாமல் லாபம் ஈட்டும் நிறுவனத்துக்கு தள்ளப்படும் ஒரே லாபமில்லாத நிறுவனத்தைத் தொடங்கியவர்கள் இன்னமும் நடத்திக் கொண்டிருப்பவர்கள், இனி எக்காலத்திலும் தளராமல் நடத்தியே தீருவோம் என்னும் நம்பிக்கையோடு நடத்தி வரும் முதலாளிகள் யாரென்று தெரிகிறதா?

    தங்கள் சொத்துக்களை, பரிசுப் பொருட்களை, உழைப்பை அன்பை, பாசத்தை, உடல் பொருள் ஆவி அனைத்தையும் வாடிக்கையாளராருக்கே தந்துவிட்டு வெறுங்கையோடு சொர்க்கம் செல்பவர்கள் அல்லது லாபம் ஈட்டும் நிறுவனமான முதியோர் இல்லத்துக்குச் செல்பவர்கள் யாரென்று தெரிகிறதா ? சந்தேகமில்லாமல் தாங்கள் பெற்ற பிள்ளைகளின் நலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட பெற்றோர்கள் எனப்படும் தாயும் தந்தையும்தான் அந்த முதலாளிகள்

    வாடிக்கையாளர்கள் எப்போதுமே பிள்ளைகள்தான். அந்த அன்னைக்கும் அவளின் அன்புக் கணவனுக்கும் அன்னையர் தினமாகிய இன்று வணக்கம் சொல்வோம்!

    என் தந்தை ஆர் ரங்கசாமி அவர்களுக்கும் என் அன்னை ஆர் கமலம்மாள் அவர்களுக்கும் என் சிறம் தாழ்ந்த நமஸ்காரத்தை தெரிவிக்கிறேன்!

    Share
  • மளுக்கென்று முறியும்

    -தமிழ்த்தேனீ 

    எங்கேயோ ஒரு பெரிய   மரம் மளுக்கென்று முறியும் சப்தம் கேட்கவே  ஓடிப் போய் எட்டிப்பார்த்தார் பெரியவர். அங்கே என்ன வேடிக்கை பாக்கறீங்க? கேள்வி காதிலே  விழுந்தது  இல்லே என்றார்  மகன்.

    இல்லே  ஏதோ பெரிய மரம்  முறிஞ்சாப் போல சத்தம் கேட்டுது என்றார் பெரியவர்.

    எங்களுக்கெல்லாம் ஒரு சத்தமும் கேக்கலே;  உங்களுக்கு மட்டும்  எப்பிடி இந்தச்  சத்தமெல்லாம் கேக்குது. சரி அது இருக்கட்டும்  நான் கேக்கற கேள்விக்கு  பதில் சொல்லுங்க.  வேலையிலேருந்து  ரிடைர் ஆனதிலேருந்து  ரெண்டு வருஷமா சும்மாத்தான  வெட்டியா இருக்கீங்க எதையாவது உருப்படியா  செய்யலாம்னு உங்களுக்கு  தோணாதா என்றார் மகன்.

    மீண்டும் ஒரு முறை அவரை நோக்கி இந்தக் கேள்விக் கணை  அனுப்பட்டு நேராகவந்து சர்ர்ர்ர்ர்ர்ரக் என்று  மார்பிலே  குத்தி  அந்தக் கணையின் மேல்பக்கம் விரிந்து அங்கும் இங்கும் ஆடியது.

    ஏம்பா நானா மாட்டேங்கறேன்  நிறைய பேர்கிட்டே வேலை கேட்டேனே…  உடம்பிலே தெம்பு இருக்கறவனுக்கே  வேலை குடுக்க முடியலே;  போயி வீட்டுலே தூங்குங்க பெரியவரே  அப்பிடீன்னு கிண்டல் செய்யறாங்கப்பா  நான் என்னா செய்வேன் என்றார்.  மார்பிலே குத்திய கணையின் கூர்முனை உள்ளே உறுத்த உள்ளுக்குள்ளே  முழுவதும் வலிக்க  அதைத்தாங்கியபடி,
    ஏதோ என்னாலானது காலையிலே போயி பால் வாங்கிட்டு வரேன், ரேஷன் வாங்கிட்டு வரேன், காய்கறி வாங்கிட்டு வரேன்,  எலக்ட்ரிக் பில் கட்டிட்டு வரேன்,  பேரப் பிள்ளைங்களைப் பள்ளிக் கூடத்திலே விட்டுட்டு சாயங்காலம் கூட்டிகிட்டு வரேன்.  வேற என்னா செய்ய முடியும் என்னாலே  என்றார் அவர்.

    தெரியுது இல்லே  வெட்டியாத்தான்  இருக்கோம்னு;  நாந்தானே உங்களையும் காப்பாத்திகிட்டு இருக்கேன்னு; அப்போ யார் விஷயத்திலேயும்    அனாவசியமா தலையிடாமே  சும்மா இருக்கணும்  புரியுதா  என்றார்  மகன். பெத்து வளத்து ஆளாக்கி ஏதேதோ செஞ்சு வேலையும் வாங்கிக் குடுத்ததெல்லாம் மனதிலே நிழலாட  உள்ளுக்குள்ளே  உயிர்போகும்  வலியைப் பொறுத்துக்கொண்டு, கொஞ்சம் இருப்பா  என்றவர் ஓடிப்போய் கதவருகே காதை வைத்துக் கேட்டார்.  ஏதோ ஒரு பெரிய மரம் மளுக்குன்னு முறியறா மாதிரி  சப்தம் கேக்குதே என்றார்.

    மருமகள்  எதுக்கெடுத்தாலும்  இப்பிடி ட்ரஸ் பண்ணாதீங்க , இப்பிடி காசைக் கரியாக்காதீங்க  இப்பிடி பிள்ளைங்க  படிப்பைக் கெடுத்து  எப்போ பாத்தாலும் டீவீயைக் கத்த விடாதீங்கன்னு  எப்போ பாத்தாலும்  எதையாவது சொல்லிகிட்டு  உயிரெடுக்கறாரு என்றாள்.

    அன்று இரவு பன்னிரண்டு மணிக்கு பாத்ரூம் போக வந்த மருமகள் பயந்து போய் புருஷனை எழுப்பினாள்  அவன் ஓடி வந்து எட்டிப் பார்த்தான். பெரியவர்  இருட்டில் கதவருகே காதை  வைத்துக் கொண்டு எங்கியோ ஒரு மரம்  முறிஞ்சு போச்சு  என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

    மருத்துவப் பரிசோதனைகள்  எல்லாம் முடிந்து  மருத்துவர்  மகனிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்.  இவருக்கு  ஒரு வியாதியுமில்லே;  இதயம் நல்லா  இருக்கு;  மூளையிலே  எந்தப் ப்ரச்சனையும் இல்லே;  கிட்னி நல்லா வேலை செய்யுது; ஆரோக்கியமாத்தான் இருக்காரு. பயப்பட ஒண்னுமில்லே என்றார்

    வெளியே  கதவில் காதை வெச்சுகிட்டு  மரம் முறிஞ்சு போச்சு;  மரம் முறிஞ்சு போச்சு என்று கதறிக் கொண்டிருந்தார்  பெரியவர். அவர்  மனைவி வாயைப் பொத்திக் கொண்டு அவரையே பார்த்தபடி அழுது கொண்டிருக்கிறாள்.

    மனம் முறிஞ்சு போச்சுன்னு சொல்லத் தெரியலே அவருக்கு.

    மரம் முறிஞ்சு போச்சு என்று அலறுகிறார் பெரியவர். யாருக்குமே காதிலே விழவில்லை  மனம் முறிஞ்ச சப்தம். மனம் முறியும்  சப்தம் வெளியே கேட்காதே!

    Share
  • கோதை ஆண்டாள் – 2

    -தமிழ்த்தேனீ

    பாகம் 7

    “நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் என்னும் பத்தாவது பாசுரத்திலே நாற்றத்துழாய் முடி நாராயணன் என்கிறாள். நாற்றம் என்றாலே நாம் மூக்கைப் பொத்திக் கொள்கிறோம்  தமிழைச் சரியாக அறியாமல். நாற்றம் என்றால் மணம்; துர்நாற்றம் என்றால்தான் மூக்கை மூடிக்கொள்ளவேண்டும். துழாய்முடி என்கிறாள் துளசியின் வாசனை கொண்ட  நாராயணன் என்கிறாள் அவனைப் போற்றினால் ஸ்வர்கம் நிச்சயம் அப்படி இருக்க கும்பகர்ணன் போல் தூங்கலாமோ என்கிறாள். ஆச்சரியமாக இருக்கிறது இருக்கும் இடத்திலே இருந்து கொண்டு நாராயணனின்  சுருள் கேசம் துளசி வாசம் என்று எப்படிக் கண்டுகொண்டாள் இந்த ஆண்டாள்? கும்பகர்ணனைப் பற்றிச் சொல்லி நான் காலத்தைக் கடந்தவள் ராமாவதாரத்திலே  வந்த  கும்பகர்ணனைப் பற்றியும் தெரியும் என்று சவால் விடுகிறாள் ஆண்டாள். என்றெல்லாம் ஆச்சரியப்பட வேண்டாம் அவள்தானே மஹாலக்‌ஷ்மி அவளுக்குத் தெரியாதது உண்டா?

    கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து என்னும் பதினோராவது பாசுரத்திலே கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால்  கறப்பவனாக இருந்தாலும் எதிரிகளைப் பகைவர்களை பந்தாடும் தீரன் என்கிறாள் கண்ணனை. அப்படிப்பட்ட கண்ணனை தழுவத் துடித்தால் போதாது அதற்கு அவன் நாமத்தைப் பாடி அவனைப் புகழ்ந்து பாடினால்தான் அவனை அடைய முடியும் ஆகவே நாம் கூட்டாக அவனைப் பற்றிப் பாடலாம் வா என்று கூட்டுப் ப்ரார்த்தனையை விளக்குகிறாள் ஆண்டாள்.

    “கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிறங்கி
    நினைத்து முலைவழியே பால் சோர“

    என்னும் பன்னிரெண்டாம் பாசுரத்திலே  இறைவன் அருள் கன்றுக்கிறங்கும் பசுவின் மனதைப் போன்றது. அப்படிப்பட்ட ஶ்ரீராமன் போன்ற சீதையைக் கவர்ந்த  ராவணனை அழிக்க ராமாவதாரம் கொண்டு ராஜாதி ராஜனாக வந்த நாராயணனின் புகழைப் பாடுவோம் வா என்கிறாள்.

    “புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
    கிள்ளிக் களைந்தானை  என்னும் பதிமூணாவது பாசுரத்திலே பகாசுரன் வாயைப் பிளந்தவன் அவன். அப்படிப்பட்ட கிருஷ்ணனை நினைந்து பாடத்தானே வேண்டும் என்று வலியுறுத்துகிறாள்.

    பாகம் 8

    இப்படி முப்பது பாசுரத்திலும் கண்ணனின் புகழைப் பாடி மற்றவருக்கும்  அவன் புகழைப் பரப்பி நான் அவனைத்தான் சேரப் போகிறேன் என்று ஊர் முழுதும் சொல்லிவிட்டாள் ஆண்டாள். ஆனால் பெரியாழ்வாருக்குத் தெரியவில்லை. பெண்களின் காதல் எப்போதுமே ஊரிலுள்ளோர் அனைவருக்கும்  தெரிந்தபின்னும் பெற்றவர்களுக்குத் தெரியாமலிருக்கும். அப்படியே யாராவது உங்க பொண்ணை ஜாக்கிறதையாக பாத்துக்கங்க  என்று சொன்னால் என் பொண்ணைப் பத்தி இப்பிடியெல்லாம் பேசாதீங்க; அவ அப்பிடியெல்லாம் செய்யமாட்டா என்று சொல்லி அதீதப் பாசமும் நம்பிக்கையும் வைத்திருப்பவரே  பெற்றோர்கள்.  ஆனால் உண்மை தெரியும் போது அதிர்ந்தே போவார்கள்.

    அப்படித்தான் பெரியாழ்வாரும் அதிர்ந்தார். நாம் வளர்த்த ஆண்டாளா இப்படிச் செய்தாள்?  குழந்தை வளர வளரப்  பார்த்துப் பார்த்து தோளிலும் மார்பிலும் போட்டுக்கொண்டு வளர்த்து  ஒவ்வொரு வினாடியும் அரங்கனைப் பற்றி சொல்லிக் கொடுத்து இப்படியெல்லாம் வளர்த்த அந்த ஆண்டாளா  இப்படிச் செய்தாள். அரங்க சேவையை ஒவ்வொரு அணுவுக்குள்ளும் புகுத்தி வளர்த்தோமே அப்படியெல்லாம் வளர்த்த ஆண்டாளா இப்படிச் செய்தாள், அவரால் அவர் கண்ணையே நம்ப முடியவில்லை.

    அரங்கனுக்காகவே   பக்திமலர்களால் தொடுத்த  மாலையைத் தன் தோளிலே போட்டுக்கொண்டு அழகுபார்க்க  எப்படி முடிந்தது இந்தக் குழந்தையால்? அரங்கனின் பெருமைகளை சொல்லிச் சொல்லித்தானே  வளர்த்தோம்?  அப்படி இருக்க, அரங்கனுக்குக் கட்டிய  மாலையை அணிந்து கொண்டு நிற்கிறாளே !  தகுமா இந்தச் செய்கை என்று விதிர்விதிர்த்தார்.  எங்கே தவறு செய்தோம் என்றே புரியாமல் தடுமாறி நின்றார் பெரியாழ்வார்.

    சிறு வயது முதலே இவன் உன்னோட மாமா பிள்ளை, இவன் உன்னோட அத்தை பிள்ளை  இவங்க ரெண்டு பேருமே உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளத் தகுதியான முறை கொண்டவர்கள் என்று சொல்லி அடிக்கடி அவர்களைப் பற்றிய  பெருமைகளை எடுத்துச் சொல்லி வளர்த்துவிட்டு  நான் அத்தானைத்தான்  கல்யாணம் செஞ்சுக்குவேன், மாமனைத்தான் கல்யாணம் செஞ்சுக்குவேன் என்று மகள் சொன்னால் அதிர்ந்து போகிறார்கள். அவர்கள் அந்தப் பிஞ்சு மனதிலே ஏற்றிய நினைவுகளின் விளைவுதான்  என்பதை அறியாத பெற்றோர். அது போலத்தான்  பெரியாழ்வாரும்!  அரங்கன் புகழைப் பற்றியே பேசிப் பேசி ஆண்டாள்  மனதிலே அரங்கனைப் பதிய வைத்துவிட்டு  என்ன உன் மனதிலே அரங்க இருக்கிறானா  என்று  அதிர்கிறார்.

    பாகம் 9

    அரங்கனை அடையத்தான் நான் குழந்தை  வடிவிலே உம்மிடம் வந்தேன் பெரியாழ்வாரே அந்த  தேவ ரகசியத்தை நீர் அறிய மாட்டீரா ஏதோ நாடகம் போல் நீரும் உணராதது போல்  நடிக்கிறீர். நீர் பெரியாழ்வார் அல்லவா?  உமக்குத் தெரியாத  தேவ ரகசியம் உண்டா? ஆனாலும் தெரியாததுபோல்  நடிக்கிறீர்! எனக்கு உபதேசம் செய்வது போல் நடிக்கிறீர். உமக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின்  தன்மையை நன்கு உணர்ந்து  நடிக்கிறீர்.  என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு  ஆம் அப்பா  நான் அரங்கனை என் மனதிலே வரித்துவிட்டேன் . அவரைத் தவிர மானுடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்  என்கிறாள் ஆண்டாள்.

    பெரியாழ்வார் கனவில் வந்த அரங்கன், ”பெரியாழ்வாரே ஆண்டாள்  என்னிடம் சேரவே  உம்மிடம் வந்தாள்; ஆகவே அவளை என்னிடம் அழைத்து வாரும்!” என்று உத்தரவிடுகிறார். பெரியாழ்வாரும் ஆண்டாளை அழைத்துப் போகிறார். அங்கே  ஆண்டாள் அரங்கனுடன் இரண்டறக் கலக்கிறாள்.

    திருமணம் முடித்து மகிழ்ச்சியோடு பெண்ணை மாப்பிள்ளை வீட்டில் விட்டுவிட்டு  விடைபெற்று வீட்டுக்கு வந்தாலும் பெண் நினைவாகவே இருக்கும் பெற்றோர்களின்  மனம்போல்  ஆண்டாளின் நினைவாகவே இருக்கிறார் பெரியாழ்வார்.  நந்தவனத்துக்குச் சென்று துளசி மாடத்தையே ஏக்கமாகப் பார்த்துகொண்டு நிற்கிறார் பெரியாழ்வார். எல்லாமே  படம்போல் காட்சியாய் விரிகிறது அவர் மனதிலே.

    துளசி மாடத்தின் கீழே ஆண்டாள் குழந்தையாய்ப் படுத்துக்கொண்டு தன் குட்டிக் கால்களையும், கைகளையும் அசைத்துக்கொண்டு, செம்பஞ்சுக் குழம்பு பூசியதைப் போன்று உள்ளங்கைகளும் உள்ளங்கால்களும்  தாமரை மலர்கள் அசைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த, கருணையும், கனிவும், கலந்த கருவிழிக் கண்களால் வா வா என்னை எடுத்துக்கொள் என்று அழைப்பது போலவும், இதழ்க் கடையோரம் இளநகையோடு நான்தான் பெரியாழ்வாரே  என்னைத் தெரியவில்லையா? எல்லாம் ஒரு காரணத்தோடுதான் நான் இங்கே வந்து உங்கள் நந்தவனத்தில் துளசிமாடம் அருகே வந்துதித்து பூமித்தாய் மடியிலே படுத்துக் கிடக்கின்றேன், வந்து என்னை எடுத்துக்கொண்டு உம்  மகளாய் வளர்க்க ஆசை வரவில்லையா உமக்கு? வாரும் வந்து என்னை எடுத்துக்கொள்ளும். பக்தன் ஆசைப்படுவதுண்டு பரம்பொருளின் அருகே வாசம் செய்ய வேண்டும் என்று. இங்கே நானே ஆசைப்பட்டுத்தானே , பேரருள் பெற்ற பெரியாழ்வாரே  உம் அருகிலே வாசம் செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டுத்தானே இந்த வாசம் மிகுந்த நந்தவனத்திலே துளசி மாடத்தின் அருகிலே  நானே  இங்கே வந்து கிடக்கிறேன்.

    பாகம் 10

    இன்னுமா புரியவில்லை, வாரும்  இந்தப் பிறப்பின் தந்தையே வந்து என்னை எடுத்துக்கொள்ளும் என்று உணர்த்தினாள் கோதை. பெரியாழ்வார் தன் சுய உணர்வுக்கு வந்து குழந்தையை அள்ளி அணைத்து, மார்போடணைத்து உடலும் உள்ளமும் உருக உருக முதன்முதலாய் ஒரு குழந்தையின் ஸ்பரிஸத்தை அனுபவித்து, அது குழந்தையா தெய்வமா என்று தடுமாறி, குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று உணர்ந்து, என்ன பாக்கியம் செய்தேன்! இப்படிப்பட்ட ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்க நான் என்ன பாக்கியம் செய்தேன்! என்று தனக்குதானே  தன்னுடைய அதிர்ஷ்டத்தை எண்ணி பூரித்துத் தாயானார். உடனே அவருக்கு  அடடே குழந்தைக்கு ஊதக் காற்று ஒத்துக்கொள்ளுமோ? என்று தன் மேல் உத்தரியத்தால் நன்றாக மூடி, தன் குடிலுக்கு எடுத்துச் சென்றார் பெரியாழ்வார்.

    ஒரு  வஸ்திரத்தில் அணைவாகக் குழந்தையை விட்டுவிட்டு எதிரே உட்கார்ந்து  குழந்தையைவிட்டுக் கண்ணகற்றாமல் பார்த்துக்கொண்டே இருந்தார் பெரியாழ்வார்.  மனம் பரபரத்துக் கொண்டிருந்தது.  மானுடர்க்கு எளிதில் கிடைக்காத ஒரு ஆச்சரியமான அபூர்வமான ஒரு குழந்தை தனக்கு கிடைத்திருக்கிறதே.  எனக்குக்  குழந்தை வளர்க்கும்  முறைகள் கூடத் தெரியாதே. நான் எவ்விதம் இந்தக் குழந்தையை வளர்க்கப் போகிறேன்? இந்தக் குழந்தைக்கு பசித்தால் அழுமா? அல்லது இந்தக் குழந்தைக்கு பசித்தால் நாம் எப்படிக் கண்டுபிடிப்பது? அப்படியே கண்டுபிடித்தாலும் இந்தக் குழந்தைக்கு அருந்த எதைக் கொடுப்பது? ஆயிரம் கேள்விகள்.

    ஆனால் அந்தக் குழந்தை அழவே இல்லை;  எதற்கெடுத்தாலும் பொக்கை வாய்திறந்து சிரிப்புதான்.  ஒரு கட்டத்தில் பெரியாழ்வாருக்கே பயம் வந்தது. இப்படிச் சிரித்துக் கொண்டே இருந்தால் எப்போது இந்தக் குழந்தைக்கு பசிக்கிறது என்றே தெரியாதே என்று. அழுத  பிள்ளைதானே பால் குடிக்கும்?. குழந்தை அழுவதே பசிக்கிறது என்பதை தெரிவிக்கத்தானே இந்தக் குழந்தை அழாமல் சிரித்துக் கொண்டே இருந்தால் எப்படி அறிவது இதற்கு பசிக்கிறதென்று என்ற யோசித்தார்.  அந்தக் குழந்தையின் சிரிப்புக்கு என்ன பொருள் என்று பெரியாழ்வார் அறியமாட்டாரா? அறியாதது போல் நடித்தார்.

    பாகம் 11

    உலகையே மகிழ்விக்க வந்த குழந்தை, அரங்கனையே மகிழ்விக்கவந்த குழந்தை. அரங்கன் மகிழ்ந்தால் அகிலமே மகிழும் என்றுணர்ந்த குழந்தை அழுமா? அழவே இல்லை. அதனால் பெரியாழ்வார் குழந்தைக்கு பசிக்கிறதோ இல்லையோ வேளா வேளைக்கு பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து பால் ஊட்டி வளர்த்தார். தாயுமானவன் என்றால் பெரியாழ்வார் தானே? அன்னைக்கே  தாயுமாகி தந்தையுமாகி நிற்கும் நிலை எத்துணை பேருக்கு வாய்க்கும்? பெரியாழ்வாருக்கு வாய்த்தாற் போல்.

    நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த மகளை ஒவ்வொரு கணமும் பார்த்துப் பார்த்து ரசித்து வளர்த்தார் பெரியாழ்வார். அகில உலகிற்கும் அன்னையான ஆண்டாளின் அணுக்கத் தொண்டராகவே வாழும் பாக்கியம் பெற்ற பெரியாழ்வார்.   குழந்தை சிணுங்கினாலே கைவேலைகளை அப்படியே போட்டுவிட்டு  பதறி ஓடிப்போய் குழந்தையை எடுத்து அணைத்துக்கொண்டு  என்ன வேணும் என்று கொஞ்சும்  தாய்மார்களைப் போல ஒவ்வொரு நொடியும் அரங்கன் கைங்கர்யமும், சேவையும்  அதற்கடுத்து  குழந்தை ஆண்டாளுக்குச் சேவகமும்  அடடா என்னே பாக்கியம்!  தந்தைக்கும்  தாய்க்கும்  சேவை செய்யும்  பாக்கியத்தை விட உலகில்  வேறு எதுதான் உயர்ந்தது?  அவர்களைக் குழந்தையைப் போல் பாவித்துச் சேவை செய்வது எவ்வளவு புண்ணியம்? எங்கெல்லாம் ஒருவன் தன் தாய் தந்தையைக்  குழந்தைபோல் நினைத்து சேவை செய்கிறானோ  அங்கெல்லாம்  ஆண்டாளும்  அரங்கனுமே குழந்தைகளாய் வந்துவிடுவார்களே. பர ப்ரும்மும் லோக மாதாவுமே குழந்தைகளாய் வருவதற்கு எப்படிப்பட்ட பாக்கியம் செய்திருக்க வேண்டும் மானுடர்கள் நாம்!

    ஆண்டாள்  பிறக்கவே இல்லையே… உதித்தாள்! திருவாடிப்பூரத்து ஜெகத்துதித்தாள். ஆண்டாள் பிறந்தாளா  இல்லை கிடந்தாள் துளசிமாடத்தருகே அவளாகவே வந்து கிடந்தாள். சூரியன், சந்திரன் எல்லோரும் உதிக்கிறார்கள் பின் நம் கண்ணுக்கு  மறைகிறார்கள்.  அவ்வண்ணமே  ஆண்டாளும் விஷ்ணுசித்தர் பெரியாழ்வார் தோட்டத்தில் உதித்தாள்; வளர்ந்தாள்; பெரியாழ்வார் கண்ணுக்கு மறைந்தாள்  அரங்கனுக்குள் மறைந்தாள்.  உதிப்பதும் மறைவதும் எல்லோராலும் முடியுமா?

    அது ஒரு சுழற்சி அல்லவா? அப்படி சுழன்று கொண்டே வரும்போது எங்கே  அரங்கனைக் கண்டாளோ?  யார் அறிவார்! ஆண்டாள் அரங்கனைப் பிடித்தாளோ  அல்லது அரங்கன் ஆண்டாளைப் பிடித்தானோ யார் அறிவார்?

    பாகம் 12

    ஆண்டாள்  பிறந்தாளா அல்ல அல்ல உதித்தாள்!
    திருவாடிப்பூரத்தில் உதித்தாள் சூரிய சந்திரர் போலுதித்தாள்
    வில்லிபுத்தூர் நந்தவனத்  துளசிமாடம் தனிலே
    பெரியாழ்வார் பெண்ணாய் உதித்தாள் சிறியாழ்வார்
    ஆண்டாளாய் உதித்தாள்  மாடத்திலுதித்து கூடத்தில்
    வளர்ந்தாள் அரங்கனுடன் கூடத்தான் மலர்ந்தாள்!
    சுழலுகின்ற செஞ்சுடராய் உதித்தாள் உதித்தாள் உதித்தாள்!
    கோ புரத்துக் கண்ணனுடன் கோதையவள் கலந்தாள்
    உதிப்பதுவும் மறைவதுவும் ஒரு சுழற்சி என்றால்
    அச்சுழலில் அரங்கனுக்கே அச்சாணியாய் இருந்தாள்
    அச்சுதன் கண்ணனவன் அரங்கன் மன்னனவன்
    அச்சுவையை அறிந்திடவே அகமகிழ்ந்தே கலந்தாள்
    பிடித்தவனை ஆண்டாள் அனுதினமும் படித்தாள்
    தேன் வடியும் மலர்களையே  ஊன் உருக்கித் தொடுத்தாள்
    பா வடித்துப் பிடித்தாள் கோபாலனையே பிடித்தாள்
    அவளுதித்து வளர்ந்து அலங்கரித்து நிமிர்ந்தாள்
    அரங்கனவன் களிகொண்டான் அவன்தோளில்  கிளியானாள்

    பிடித்துவிட்ட அரங்கனையே மீண்டுமவள் பிடித்திடவே-
    தன் தாள் பதித்தாள் ஆழ்வாரைப் பிடித்தாள் ஆழ்வாரே
    அறியாமல்  அரங்கனைப் பிடித்தாள் மாலை பிடித்தாள்,
    திரு மாலை பிடித்தாள்  திருமாலைப் பிடித்தாள்.
    திருவரங்கன் தாள் பிடித்தாள் அரங்கனே அறியாமல்
    அரங்கனையே பிடித்தாள் உள்ளிருந்தே அவள்
    உலகையே பிடித்தாள் கள்ளிருக்கும் மலர்ச்சோலை
    பெரியாழ்வார் நந்தவனம் உள்ளிருக்கும் துளசி மாலை
    பெரியாழ்வார் தோளினிலே பெண்மானாய் வளர்ந்தாள்
    உரியவனாய் வந்தரங்கன் அந்தரங்கம்  புகுந்தாள்
    மாலையென்ன காலையென்ன முழுவதுமாய்ப் பிடித்தாள்
    காலையிலும் மாலையிலும் கணப் பொழுதும் நீங்காத
    கள்ளியவள் ஆண்டாள் கண்சிமிட்ட நேரமில்லை
    கண் கொள்ளா காட்சிதனை கண்டுவிட்ட ஒரு கணத்தில்
    ஆண்டவனைப் பிடித்தாள் இமைப்பொழுதும் நீங்காத
    இணையுடனே சேர்ந்தாள் அரங்கனையே துதித்தாள்
    அவளெங்கே பிறந்தாள்? உதித்தாள். துளசிமகள் தூயமகள்
    இளசிலேயே அரங்கன்தனை எண்ணி எண்ணி வாழ்ந்த மகள்-
    ஏகாந்த ரங்கனிடம் ஒருசேரக் கலந்த மகள்

    பாகம் 13

    கள்ளிருக்கும் மலர்களெல்லாம் பூச்சொரியும் நந்தவனம்
    தனிலே உள்ளிருந்த துளசி வனம்தனிலே ஶ்ரீவில்லிபுத்தூர்
    நந்தவனம்தனிலே பேறு பெற்ற பெரியாழ்வார் கண்டெடுத்த
    குழவி இவள் அதில் கண்டு அள்ளிக்கொண்ட ஆண்டாளென்னும்
    செண்டு இனம்  பூச்சூடி பூவைச் சூடி கொடுத்த பாவை சூடி
    பாச்சூடி பாவைச் சூடி கொடுத்த பாவைச் சூடிக் கொடுத்த  சுடர்க்கொடி
    துளசிமகள் தூயமகள்  இளசிலேய அரங்கனை எண்ணி எண்ணி
    வாழ்ந்த மகள் – ஏகாந்த ரங்கனிடம் ஒருசேரக் கலந்த மகள்
    கள்ளிருக்கும் மலர்களெல்லாம் பூச்சொரியும் நந்தவனம்
    உள்ளிருந்த துளசிவனம் வில்லிபுத்தூர் நந்தவனம்
    பேறுபெற்ற பெரியாழ்வார் கண்டெடுத்த குழவி இவள்
    அதில் கண்டு அள்ளிக்கொண்ட ஆண்டாளென்னும் செண்டு இனம்
    பூவாய் அவதரித்த மலர்க்கோதை செண்டாய் அலங்கரித்து
    அருமையாய் வளர்த்த மகள் அரங்கன் திருவடியின்
    அருளாலே அவனுக்கே தாயானாள்
    பெரியாழ்வார் மறுபடியும்  சேயானார்

    பாகம் 14

    பெரியாழ்வாரின் நிலை சொல்ல முடியுமோ? ஏதோ என்னாலானதைச் சொன்னேன்.  ஆண்டாளைப் பற்றிச் சொல்ல முடியுமோ ஏதோ என்னாலானதைச் சொன்னேன்,

    ஆண்டாளே உன்னைப்பற்றி யாரிடம் சொல்ல
    உன்னையன்றி வேறிடம் அல்ல
    கண்ணனிடம் நீ செல்ல  என்னைத்
    தேர்ந்தெடுத்து  மகளாய் உருக்கொண்டு
    உன் மன்னிடம் சேர்ந்தாய்
    உன்னைப்பற்றி யாரிடம் சொல்ல
    அரங்கன்  நாயகியே உன்னைப் பற்றி
    யாரிடம் சொல்ல கண்ணை விற்று
    சரித்திரம் சொல்ல என்னை விற்று
    பொய்யை வாங்கி  என் மனதை விற்று
    உன்னை  மகளாய் நான் நினைத்தேன்
    பேதமை கொண்டேன் நீ என் மகளென்று
    உன்னையே நினைந்திருந்து உன்னையே உணர்ந்திருந்து
    கனவிலும் நினைவிலும் உன்னையே
    நினைந்திருந்து நான் உன்னையன்றி
    உன்னைப் பற்றி யாரிடம் சொல்ல தாயே
    உன்னைப் பற்றி யாரிடம் சொல்ல
    பூச்சூடி பூவைச் சூடிக்கொடுத்த பாவை
    சூடிக் கொடுத்த  மாலை பாச்சூடி
    பாவைச் சூடி பூவைச் சூடிய பூவை
    கொடுத்த பாவைச் சூடி ஆண்டாளே
    மஹாலக்‌ஷ்மி உன்னைப் பற்றி
    யாரிடம் சொல்ல?

    ஆண்டாள் திருவடிகளே சரணம்!
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!

    ஶ்ரீராமஜெயம்

     

     

    Share
  • கோதை ஆண்டாள் – 1

    -தமிழ்த்தேனீ

    “திருவாடிப்பூர நாயகி” ஆண்டாள் நினைவு

    ஶ்ரீவில்லி புத்தூர் திருவண்ணாமலை ஶ்ரீனிவாசன் திருக்கோயில் காண https://www.youtube.com/watch?v=6UWnTvJWtvc நானே எடுத்த காணொளி.

    ********

    என் சொந்த  ஊர்  ஶ்ரீவில்லிபுத்தூர். ஶ்ரீவில்லிபுத்தூரில் முதல் வக்கீல் என்னும் பெருமை கொண்ட என் பாட்டனார்  என்  தந்தை திரு ஆர்  ரங்கசாமி  அவர்களின்  தகப்பனார் அங்கே ஆண்டாள் கோயிலில் நிர்வாகியாகக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த திரு ராமபத்ரன்அவர்கள்.

    அவர்  செய்த  புண்ணியத்தாலோ  அல்லது என் முன்னோர்கள் செய்த புண்ணியத்தாலோ என் பெற்றோர் ஆண்டாளைப் பற்றி என் மனதில் விதைத்த நல்ல சிந்தனைகளை  உங்களுடன்  என் பாணியில்  நான் எழுதப் போகிறேன். சிந்தனையின் மூலக் கருவூலம்  என் முன்னோர்கள்  எழுதுவது  அடியேன். ஆகவே படித்து இன்புறுவது  நாமெல்லோரும். வாருங்கள்… ஆண்டாளைப் பற்றிய இனிய நினைவுகளில் தோய்வோம்.

    ஒவ்வொரு பெண்ணும்  தந்தைதாய் வீட்டிலிருந்து புக்ககம் சென்று அந்த வீட்டில் விளக்கேற்றி,  புகுந்த இடம் சரியான இடம்தான் என்று ஒரு தீர்மானம் வரும் வரையில்,  பெத்த தகப்பனுக்கு மனம் கனத்துத்தான் இருக்கும். பெண்ணும் மாப்பிள்ளையும் மனமகிழ்ச்சியோடு குடும்பம் நடத்துவதைப் பார்த்த பின்னர் ஒரு நிம்மதி ஏற்படும்.

    என்னதான் இருந்தாலும் தான் செல்லமாக வளர்த்த பெண்ணைத்  தன் மடியில் வைத்துத் தாரை வார்த்துக்கொடுக்கும் போது அவரையறியாமல்  அடிவயிற்றிலிருந்து விம்மி ஆனந்தம் கண்ணீராக அவர் கண்ணில்  ஊற்றாகப் பெருக்கெடுக்கும். இது ஒரு ஆனந்த நிலை; அனுபவித்தவர்க்கே புரியும் அற்புத உணர்வு.

    அப்படிப்பட்ட  அனுபவத்தை  அனுபவித்த பெற்றவர் பலரைப் பார்த்திருக்கிறேன்’  நானும் அந்த சுகத்தை  அனுபவித்திருக்கிறேன். அந்த ஆனந்தக் கண்ணீருக்கு  என்ன பொருள் என்று யோசித்திருக்கிறேன். பெண்ணிற்கு ஒரு நல்ல வாழ்வைத் தேடித்தரவேண்டும் என்னும் பொறுப்புடைய  தகப்பன்,   தன்  பொறுப்பென்ற  கனம்  சரியான முறையில் சரியான  இடத்தில் இறக்கி வைத்த  ஒரு நிம்மதி, ஆனந்தம் என்றே தோன்றுகிறது,  சாதாரணமான  மானுடப் பெண்களுக்கே  இப்படிப்பட்ட  நெகிழ்வு ஏற்படுகிறது ஒவ்வொரு தகப்பனுக்கும் என்றால்  லோக மாதாவான ஆண்டாளை  மகளாகப் பெற்ற பெரியாழ்வாரின் நிலை  சொல்லவும் கூடுமோ! மஹாலக்‌ஷ்மி ஆண்டாளை மகளாக மனதார ரசித்து வாழ்ந்த பெரியாழ்வாரின் நிலை சொல்லவும் கூடுமோ?

    திருமழிசைஆழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார் ஆகிய  நான்கு ஆழ்வார்களுடன் முதலாழ்வார்கள் என்று சொல்லக்கூடிய ஆழ்வார்களும் சேர்த்து  அஞ்சுக்குடி ஒரு அதிசியம் என்னவென்றால் பெரியாழ்வாரின் பரம்பரையில் பெரியாழ்வாரின் தம்பி மகன் என்று நினைக்கிறேன் அவர்தான் கடைசி வாரிசு அவரைச் சந்திக்கும் பாக்கியக் கிடைத்தது, அவரைப் பேட்டி எடுத்தேன்; காணொளியாக வைத்திருக்கிறேன். நிச்சயமாக அந்தக் காணொளியை அளிக்கிறேன். காணொளியைக் காணலாம்  பெரியாழ்வார் பரம்பரை மற்றும் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்:  https://www.youtube.com/watch?v=yfrWeDtVZMs

    பாகம் 2

    பெரியாழ்வாரின் நிலையை சொல்லத்தான் வேண்டும். ஒவ்வொரு பெண்ணைப் பெற்ற தகப்பனும் பெரியாழ்வாரே, கண்டெடுத்த பெரியாழ்வாருக்கே இந்நிலை யென்றால்  மாப்பிள்ளையின்  நினைவுகளை மனதில் தாங்கி, மடியில்  அமர்ந்திருக்கும்  மஹாகனம் பொருந்திய  மகளை, அவளின் குழந்தைப் பருவம் முதல் பெண்களின் 7 பருவங்களான   எட்டு வயது வரை பேதை, பத்து வயது வரை பெதும்பை, பதினோரு வயது முதல் 14 வயது வரை மங்கை, பதினைந்து வயதிலிருந்து பதினெட்டு வயது வரை மடந்தை  பத்தொன்பது வயது முதல் இருபத்தி நாலு வயது வரை  அரிவை, இருபத்து ஐந்து வயது முதல் இருபத்தி ஒன்பது வயது வரை தெரிவை,  முப்பது வயதுக்கு மேல் பேரிளம் பெண்  என்றாலும்  இருபத்தி நாலு வயது வரை வளர்த்து வயிற்றிலே நெருப்பைக் கட்டிக்கொண்டு  கண்விழித்துப்  பாதுகாத்து  பாசம் காட்டி பாதுகாத்து வளர்த்த  நினைவுகளை அசைபோட்டுக்கொண்டே இருந்து எங்க வேடிக்கை பாக்கறீங்க  மந்திரத்தை சொல்லுங்க  முஹுர்த்தத்துக்கு நேரம் ஆச்சு திருமாங்கல்ய தாரணம் சரியான  நல்ல சுப வேளையிலே  நடக்கணும் என்றதும் திடுக்கிட்டு விழித்து  மாங்கல்ய தாரணம் ஆனதும், மாப்பிள்ளையின் கையில் பிடித்துக்கொடுத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், மகளின் பிரிவு  மஹாலக்‌ஷ்மியின் பிரிவல்லவா? அதைத் தாங்கப் பெரியாழ்வாராலேயே  முடியவில்லை என்றால்  சாதாரண மானுடர்களின் நிலையை  நினைத்துப் பார்க்கிறேன். கண்டெடுத்த பெரியாழ்வாருக்கே இந்நிலை யென்றால் பெற்றெடுத்த பெரியாழ்வார்களின் நிலை? ஹும்…”பாசம்” மிகவும் கனமானதுதான்.

    பெற்றெடுத்த தந்தைகளுக்கு  என்ன நிலை  என்று எண்ணிப் பார்த்தேன்.  ஒவ்வொரு தகப்பனும் பெரியாழ்வாரே. “ஆனால் பிறக்கும் எல்லாப் பெண்களும் ஆண்டாள்  அல்ல. அந்தப் பெண்களைக் கொள்ளும் ஆண்களும்  அரங்கன் அல்ல”   இதுதான் இன்றைய  பிரச்சனை.  இப்படிப்பட்ட இந்தக் காலத்தில்  ஒவ்வொரு தகப்பனின் நிலையும் பரிதாபம்தான்.

    சுற்றிநோக்கில் எனைப் பற்றித் தொற்றிய எண்ணம் முற்றிய‘  நிலையால் பற்றிய கருத்து அலையால் சுட்டிய எண்ணம். உலகில் பெண்ணைப்பெற்ற ஒவ்வொருவரும் பெரியாழ்வார் அல்லர்.  பிறந்து புக்ககம் போகும் ஒவ்வொரு பெண்ணும் ஆண்டாளும் அல்லள்.. பெற்றவர்கள்  எல்லோருமே தங்களைப் பெரியாழ்வாராக நினைக்காவிடினும்,   தங்கள் பெண்ணை  மஹாலக்‌ஷ்மியாகவும், ஆண்டாளாகவும் நினைத்தே வளர்க்கின்றனர்,  அதனால்தான்  நம் சாத்திரத்தில்  பெண்ணைத் தாரை வார்த்து அளிக்கும்போது தன் பெண்ணைக் கைப்பிடிக்கவிருக்கும்  மாப்பிள்ளையை  மஹாவிஷ்ணுவின் அவதாரமாக நினைத்தே  பாத பூஜை செய்து  தங்கள் பெண்ணாகிய மஹாலக்‌ஷ்மியை  அந்த மஹாவிஷ்ணுவுக்குத் திருமணம் செய்து கொடுப்பதாகவே  நினைத்துத்தான்  திருமணங்களை  நடத்துகின்றனர்.

    பெண்களும்  ஆண்டாளாகவே தம்மை  வரித்துக்கொண்டுதான்  தன்னைக் கைப்பிடிக்கும் மணாளனை அரங்கனாக நினைத்துதான்  திருமணமும்   செய்துகொள்ளுகின்றனர். திருமணம் ஆன பின்னர் சுயரூபம் தெரியும் போதுதான் பெண்ணுக்கும் புரிகிறது, ஆணுக்கும் புரிகிறது.  தான்  ஆண்டாள் அல்ல என்பதுவும்  தன் மணாளன்  அரங்கன் அல்ல  என்பதுவும்  என்ன செய்ய?

    பாகம் 3

    நாம் பாதை மாறிவிட்டோம் அப்பா.  என் கணவரின் தகுதி அறிந்து செய்ய முடியவில்லை  என்றால் ஏன் எனக்குத்  திருமணம் செய்து வைத்தீர்கள்  என்று தகப்பன் மேல் பாய்ந்த  எத்தனையோ  பெண்களைக் கண்ணால் கண்டவன் நான்.  தந்தையர்களின்  கஷ்டம் அறியாத பெண்கள் பலர் உள்ளனர். ஒருவனைப் பற்றி ஓரகத்திரு என்பார்கள் பெரியவர்கள்.

    இந்தக் காலத்தில் அப்படி ஆணும் நடந்து கொள்வதில்லை பெண்களும் நடந்து கொள்வதில்லை . முந்தைய காலங்களில் கட்டிய கணவனை மனைவி பரிபூரணமாக நம்பினாள். கட்டிய  மனைவியைக் கணவன் பரி பூரணமாக நம்பினான். இங்கேயும் சில விதிவிலக்குகள் இருந்தன. அப்படி இருந்த சில வேண்டாத  விதிவிலக்குகள் சில மனிதர்களைத் தடுமாற  வைத்திருக்கலாம். ஆனால் இப்போது  எல்லா மனிதர்களுமே தடுமாறுகிறார்கள் வாழ்க்கைத்  துணையைத் தேர்ந்தெடுக்க.

    தன் வாழ்க்கைத்  துணையைத் தேர்ந்தெடுக்க  பெற்றவர்களையும் நம்புவதில்லை.  அது பரவாயில்லை… தாங்களே தேர்ந்தெடுக்கும் வாழ்க்கைத் துணையையும் இரு பாலருமே நம்புவதில்லை. ஓடும் வரை ஓடட்டும்; பிய்த்துக் கொள்ளும் நேரம் வந்தால் பிய்த்துக் கொண்டு வேறு துணையை தேடிக் கொள்ளலாம் என்னும் நிலையைக் காணமுடிகிறது இந்நாளில்.

    இந்த மானுட ஜென்மத்தில் நமக்குப் பிறந்த  பிள்ளைகளை  நம் பிள்ளைகள் என்று நினைக்கும் பேதைகள் நாம். அதனால் பாசத்திலும்  அன்பிலும் கரைந்து நாம்தான் அவர்களை  வளர்க்கிறோம்.  நாம்தான் அவர்களை ஆளாக்குகிறோம்   என்றெல்லாம்  நினைத்துக் கொண்டு  அவர்கள் பிரிவில்  வாடுகிறோம். என்னே பேதமை என்று புரிகிறது  ஆனாலும்  மாற்றிக் கொள்ள இயலாமல் அஞ்ஞானம் தடுக்கிறதே!  எப்போது மெய்ஞ்ஞானம்  பெறுவோம்?    குதிரை இருப்பறியும்  கொண்டவள் குணமறிவாள் என்று ஒரு பழமொழி உண்டு!  குதிரை  தன் மேல் பயணிக்க ஏறும் மனிதரின் அணுகு முறையை வைத்தே  நம்மை அடக்கியாள தகுந்தவனா இல்லையா என்பதை முடிவு செய்துவிடும், அதற்கேற்ப  அடங்கி ஓடவோ  அல்லது திமிறிக் கீழே தள்ளவோ செய்யும்.

    அது போலத்தான் பெண்களும்   அவர்களுக்கு  அவர்களைக் கொண்டவர்களின் குணம் மிக நன்றாகத் தெரியும், ஏனென்றால் இந்த  உலகில்  மிக நெருக்கமாக  பழகும் ஒரே ஜீவன் அவர்களைப் பொறுத்தவரை கணவன்தான் அதாவது  அவர்களைக் கொண்டவர்கள்தான்.

    என்னதான் சாமர்த்தியமாக ஏமாற்றினாலும்  எப்படியோ கண்டு பிடித்துவிடுவார்கள் அவர்கள். ஆனால் ஆண்களால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாது.  ஏனென்றால் கடலாழம் காண முடிந்தாலும் பெண்கள் மனதாழம் காண முடியாது  என்பார் பெரியோர்.

    பாகம்  4

    இன்னும் சில  பெண்கள் தூரத்திலிருந்தே பார்த்தாலும் ஒரே பார்வையில்  அல்லது அங்க அசைவில் அல்லது அவர்களின் பார்வையை வைத்தே  கண்டுபிடித்து  ஏங்க இந்த ஆளு சரியில்லே  என்று  சொல்லிவிடுவார்கள். ஆனால் அதை நம்பாமல் ஆண்கள் எந்தச் செயல் புரிந்தாலும்  மாட்டிக்கொண்டு  அவதிப்படுவார்கள். ஆமாம் பெண்களுக்கு  மிக நுணுக்கமான உணர்வுகள் உண்டு . அதையும்மீறிச் சில நேரங்களில் பாசத்தாலோ  அல்லது காதலாலோ  ஏமாற்றப் படுகிறார்கள். ஆனால் பெரும்பாலும்  பெண்கள் ஏமாறுவதில்லை. ஆண்களே ஏமாறுகிறார்கள்.  அது போலத்தான்  ஆண்டாள் இளவயதிலேயே அவளுக்கேற்ற  மணாளன் அரங்கன்தான் என்பதை  மிக நுணுக்கமாக அறிந்து கொண்டு அரங்கனை அணுக்கமாகத் தொடர்ந்தாள் மனதால், அப்படி தொடரும்போது  அந்த  உணர்ச்சி மேலீட்டால் பக்தியால் காதலால் பரவசத்தால் ஆழ்வார்களின் இயல்பான தோய்ந்து போதலால் ஆழ்ந்து போதலால் அவள் அரங்கனோடு ஒன்றிக் கலந்தாள். அவள் பாடிய  திருப்பாவை படித்தால் தெரியும், எவ்வளவு அணுக்கம்  இணக்கம் உருக்கம் அடடா!  அதன் சுவை நாமும் திருப்பாவை படித்தால்தான் தெரியும்.

    சிலர்  எழுத்துக்களைப் படிக்கும்போதே அவர் கூட்டிப் போகும் கற்பனை உலகுக்கு  நாமும் நம்மை அறியாமலே  அவரோடு பயணிப்போம், அப்படிப் பயணித்து  மீண்டு வரும்போதுதான் தெரியும்… ஓ நாம் இவர் எழுதியதைப் படித்தோம் அவ்வளவே. ஆனால் எல்லா நிகழ்ச்சிகளிலும்  கூடவே  இருந்தாற் போன்ற  உணர்வை ஏற்படுத்தி விட்டாரே என்று ஆச்சரியப் படுவோம். அப்படி எழுத  மஹான்களால் ஆழ்வார்களால் நாயன்மார்களால் தான் முடியும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களால் இயலாத  காரியம் அது.

    “மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாள் “என்று தொடங்கும் முதல் திருப்பாவையின் முடிவிலே “நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்“  என்கிறாள்.  வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் 106 ஐத்தான் தரிசனம் செய்ய முடியும்;  மற்ற இரண்டும் இங்கே பூவுலகில் இல்லை.  ஆகவே 108 ஆவது திவ்யதேசம் வைகுண்டம் அங்கே இருப்பவன்தான் நாராயணன். அவனைப் படிந்து பாடுவோம்  என்கிறாள் ஆண்டாள்.

    எப்படிப்பட்ட  அழைப்பு இது! வாருங்கள்  எல்லோரும் நாராயணனைத் தொழ வைகுண்டம் போவோம்  என்று தீர்க்கமாக செய்த தீர்மானமான  அறிவிப்பல்லவா  இது! இப்படித் தெளிவாக யாரால் அழைக்க முடியும் ஆழ்வார்களால்தான் அழைக்க  முடியும். நாம் பெரியாழ்வாரை பெரியாழ்வார்  என்று ஆண்டாளைச் சின்னாழ்வார் என்றும் சொல்வேன்  ஆனால் பெரியாழ்வாரோ  ஆண்டாளே பெரியாழ்வார் என்பார்.

     “வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்கு”  என்னும் இரண்டாம் பாசுரத்திலே  பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி  என்கிறாள் செய்யாதன செய்யோம் என்கிறாள் உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய் என்கிறாள்.   இந்தப் பாசுரம் 107ஆவது  திவ்ய தேசமான திருப்பாற்கடல் பற்றி பாடியிருக்கிறாள். பையத் துயின்ற என்கிறாள்  அதாவது மெல்லத் தூங்குகின்ற கோலத்திலே ஆதிசேஷன் மேல் நிச்சலனமாக படுத்திருக்கும்  ஆதி மூலமாகிய நாராயணன் என்கிறாள்.

    பாகம் 5

    “ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி” என்னும் மூன்றாம் பாசுரத்திலே உத்தமன் பேர் பாடினாலே மாதம் மும்மாரிப் பெய்யும், ஓங்கும் பெருஞ்செந்நெல், என்கிறாள் வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்  என்று  முழுமையான செல்வத்தை  நிறைவான செலவத்தை நீங்காத செல்வத்தை அளிப்பவன் நாராயணனே என்று பாடுகிறாள்.

    வாமனாவதாரத்தின் பெருமையைச் சொல்கிறாள். அவதாரத்துக்குள்ளேயே மிக உத்தமமான அவதாரம் வாமனன் என்கிறாள்; அவன் பாதம் பட்டாலே  மோக்‌ஷம் நிச்சயம் என்கிறாள்; திருக்கோவிலூர் உலகளந்த  பெருமானைப் பற்றி ஸ்லாகித்துப் பேசுகிறாள்.

     நான்காவது பாசுரத்திலே “ஆழிமழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்”

    ஆழியுள் புக்கு முகர்ந்து கொடார்த்தேறி  என்கிறாள்.   சார்ங்கம் உதைத்த சரமழைபோல்  நாங்கள் வாழ உலகினில் பெய்திடாய்; நாங்களும் மார்கழி நீராடவேண்டும்  இந்தப் பூவுலகமே நிறைவான மகிழ்ச்சியோடு வளமாக வாழ வேண்டுகிறாள். உலகமே  வளமாக வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் எப்படிப்பட்ட பொதுவான  மனநிலையில்  எந்த  பேதமும் இல்லாமல் வாழவேண்டும்  என்று எடுத்துரைக்கிறாள்.  தூய்மையான மனதோடு வேண்டவேண்டும் என்கிறாள்; கூட்டுப் ப்ரார்த்தனையின் மகிமையைச் சொல்கிறாள்.

    ஐந்தாவது பாசுரமான  “மாயனை மன்னு வட மதுரை மைந்தனை” என்னும் பாசுரத்தில்  தூய பெருநீர் யமுனைத் துறைவன்  ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்கை  தாயையே குடல் விளக்கம் செய்த  தாமோதரனே  என்கிறாள். தேவகிக்கு  எப்படிப்பட்ட புண்ணியத்தைக் கொடுத்தான் அவள் வயிற்றிலே  பிறந்து  என்கிறாள். அப்படிப் பிறந்த அந்தக் கிருஷ்ணனை தாமோதரனைப்  பாடினால் “போய  பிழையும்  தீயினில் தூசாகும்” என்கிறாள்.  அதாவது  நம் பாவங்களைப் போக்கிக்கொள்ள  எளிய வழியே மாதவனைப் பற்றிப் பாடி அவனைச் சரண் அடைவதுதான் என்று உணர்த்துகிறாள்.

    “புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்” என்னும் ஆறாவது  பாசுரத்திலே  வெள்ளை விளிசங்கின் ஓம் என்னும் ப்ரணவ ஒலியைக் கேட்கவில்லையோ; பூதகியின்  பேய்முலை நஞ்சுண்டு என்கிறாள்   நஞ்சுண்டால்  உண்டவர் சாவார்.  ஆனால் என் கண்ணன்  நஞ்சுண்டு  பூதகிகிக்கு  மோக்‌ஷம் அளித்தான் என்கிறாள். கள்ளச்சகடத்தை உதைத்தே அழித்த மாயனை உள்ளத்திலே  கொண்ட முனிவர்களும் யோகிகளும் அரி என்கிற பேரரவம் கேட்டு உள்ளம் குளிர்ந்த கதையை சொல்கிறாள்.

    அம்பலப் புழை அருகிலே இருக்கும் திருவமுண்டூர் என்னும் திவ்யதேசத்தைக் குறிப்பிடுகிறாள்.

    பாகம் 6

    ”கீசு கீசென்றெங்கும்  ஆனைச் சாத்தன் கலந்து என்னும் ஏழாவது  பாசுரத்திலே  ஆனைச்சாத்தன் என்னும் வலியன்குருவிகள் கிசுகிசுக்கும் ஒலி கேட்கவில்லையோ  நாயகப் பெண்பிள்ளாய்  நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்  நீ கேட்டே கிடத்தியோ?” என்கிறாள். அதாவது ஆயர்குலப் பெண்கள் தயிர் கடைந்து வெண்ணெய் எடுக்கும் ஒலி கேட்கிறது.

    நாங்கள் நாராயணன் என்னும் கேசவனைப் புகழ்ந்து பாடும் பாட்டைக் கேட்டும் எழுந்திருக்காமல் இருக்கிறீர்களே எழுந்து கதவைத் திறந்து வாருங்கள் நாம் அவன் புகழ் பாடுவோம் என்றழைக்கிறாள். மதுராவின் அருகிலே இருக்கும் ஆயர்பாடி என்னும் திவ்ய தேசத்தை மனதிலே வைத்துக்கொண்டு  பாடுகிறாள்.

    கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு என்னும் எட்டாவது பாசுரத்திலே பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை என்கிறாள். அதாவது கேசி  என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றானே கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் போன்ற மல்லர்களைக் கொன்றானே  அவனைக் குழந்தை என்றா நினைக்கிறீர்கள் அவன்தான் பரம் பொருள் என்கிறாள். அந்த தேவாதி தேவனைச் சேவித்தால் அருள் தருவான் என்கிறாள். சின்னக் காஞ்சீபுரத்தில் இருக்கும் தேவாதிதேவன் என்று செல்லமாக அழைக்கப்படும்  அத்திகிரி வரதராஜப் பெருமானை நினைத்துப் பாடுகிறாள். இந்தப் பாடலிலே வெகு நுணுக்கமாக ஒரு செய்தியைச் சொல்லுகிறாள். பெண்கள் வீரர்களைத்தான் விரும்புவார்கள் என்று வீரம் என்பது நல்லவர்களை அழிப்பதல்ல துஷ்டர்களை அழிப்பதுதான் வீரம் என்பதை  மிக அழகாக சொல்லும் பாசுரம் இது.

    “தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய” என்னும் ஒன்பதாவது பாசுரத்திலே மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றெல்லாம் நாமம் சொல்லிப் பாடவேண்டிய நேரத்திலே  தூங்கிக்கொண்டிருக்கிறாளே உன் மகள் அவளை எழுப்புங்களேன் என்கிறாள்; உன் மகள் ஊமையா செவிடா என்கிறாள்;  நாங்கள் கூவி அழைக்கிறோமே அவள் காதில் விழவில்லையா என்கிறாள்.

    பகவானைப் பாடும் உன்னதமான வேலை இருக்க மலரணையில் படுத்துக் கிடப்பது நியாயமோ என்கிறாள். சொகுசுவாழ்க்கை  தராத சொர்கத்தை அவனல்லவோ தருவான். ஆகவே அவன் இருக்கும்  வைகுந்தமே நாம் அடைய வேண்டிய இடம் என்பதை வலியுறுத்துகிறாள்.

    (தொடரும்)

     

     

     

    Share
  • நேரம் பொன்னானது!

    -தமிழ்த்தேனீ

    clock

    அன்பு நண்பர்களே! உலகத்திலே நாம் எதை இழந்தாலும் மீண்டும் கிடைக்காதுதான். நல்ல உறவுகள், நல்ல நட்பு, நல்ல சிந்தனைகள், நல்ல நேரங்கள், நல்ல வாய்ப்புகள், ஆகிய எதை இழந்தாலும் மீண்டும் கிடைப்பது கடினம். அப்படிப்பட்ட வாழ்க்கையில் இறைவன் நம்மைப் பிறக்க வைக்கிறான் மீண்டும் அழைத்துக் கொள்கிறான்.

    இந்த இடைப்பட்ட காலத்திலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் “நேரம் இருக்கிறதே” அதன் ஒவ்வொரு மணித்துளியும் பொன்னானது இழக்கக் கூடாதது. ஆகவே ஒவ்வொரு மணித்துளியையும் மிகவும் உபயோகமாகச் செலவிடவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் என்பதை நாமெல்லோரும் உணர்ந்தே ஆகவேண்டும்.

    அன்றாட வாழ்க்கையில் நாம் இழப்பது எவ்வளவோ உள்ளது. நம் உடலில் உள்ள திசுக்கள் ஒவ்வொரு கணமும் தேய்கின்றன, வளர்கின்றன. பழைய திசுக்கள் அழிந்து புதுத் திசுக்கள் உருவாகின்றன. இப்படி அன்றாடம் நிகழும் இந்த மாற்றத்தினால் ஏற்படும் திசுக்களின் அழிவைத் தடுக்க முடியாது. அப்படி அழிந்த திசுக்களை நாம் மீண்டும் பெற முடியாது.

    அப்படி இழந்த திசுக்களை மீண்டும் பெற முடிந்தால் நம் இளமை எப்போதும் நம்மிடம் இருக்கும். இந்த ரகசியத்தைத்தான் சித்தர்கள் ஆராய்ந்து அவர்களின் இளமையை தக்கவைத்துக் கொண்டார்கள். மேலும் உடலால் அழிந்தாலும் உயிரால் அழியாமல் சிரஞ்சீவியாக இன்னமும் பல சித்தர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

    அதேபோல் ஒவ்வொரு கணமும் உலகில் இயற்கையில் பல மாறுதல்கள் அதாவது அழிவுகளும், வளர்ச்சிகளும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அப்படி இயற்கை மாற்றத்தினால் ஏற்படும் அழிவுகளையும் நாம் மீண்டும் திரும்பப் பெற முடியாது. இவையெல்லாம் நம் சக்திக்கு மீறி நடந்து கொண்டிருக்கிறது. அவைகளைக் கட்டுப் படுத்த நமக்கு ஆற்றல் போதாது.

    இவைகளில் முக்கியமானது “காலம்” கடிகாரத்தை நிறுத்தலாம் ஆனால் காலத்தை நிறுத்த முடியுமா? காலச் சுழற்சியை யாராலும் நிறுத்த முடியாது. ஒவ்வொரு வினாடியும் கடந்து கொண்டே இருக்கிறது. இப்படி ஓடிக்கொண்டே இருக்கும் காலத்தின் விளைவால் கழியும் மணித் துளிகள் விரயமாவதை நாம் திட்டமிட்டு ஓரளவுக்கு உபயோகப்படுத்த முயன்றால் ஓரளவு காலத்தின் விரயத்தைத் தடுக்க முடியும். ஆனால் காலத்தை நிறுத்த முடியாது.

    ஆகவே திட்டமிடுதல் மிக முக்கியமான ஒன்று. அது மட்டுமல்ல. நாம் நம் திட்டங்களை முறையாக வகுத்துக் கொள்ளாததனால் எவ்வளவு விரயங்களை சந்திக்கின்றோம் என்பதை நாம் அறியாமலே இருக்கிறோம். இப்படி நாம் இழக்கும் பலவிதமான இழப்புகளை சில உதாரணங்களால் நாம் அளந்து கொள்ளலாம். அப்படி அளக்கும் போதுதான் நம்முடைய இழப்பை நாம் உணருவோம். அப்படி உணரும் போது நாம் அதிர்ந்து போவோம். அப்படி நம்முடைய இழப்பைக் கணக்கிட்டு அதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்வோம்.

    ஆகவே, நேரத்தின் அருமையை விளக்க ஒரு நடைமுறை நிகழ்வை வைத்துப் புரிந்துகொள்ள முயல்வோம். இப்போது நான் இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நேரம் மாலை 7 மணி 15 நிமிடம் 7/4/2017 ஆம் ஆண்டு. ஆனால் இனி என் வாழ்வில் இந்த மாலை 7 மணி 15 நிமிடம் 7/4/2017 ஆம் ஆண்டு, இந்த வினாடியை, மணித்துளிகளை, ஆண்டை திரும்பப் பெற முடியுமா? அட இதை எழுதிக் கொண்டிருக்கும் போதே இப்போது மாலை 7 மணி 16 நிமிடம் 7/4/2017 ஆம் ஆண்டு என்றும், மாலை 7 மணி 17 நிமிடம் 7/4/2017 ஆம் ஆண்டு என்றும், மாலை 7 மணி 18 நிமிடம் 7/4/2017 ஆம் ஆண்டு என்றும் ஓடிக்கொண்டே இருக்கிறது.

    நம்முடைய அலக்ஷியத்தால், முறையான திட்டமிடுதல் இல்லாமையால் ஒரு நிமிடத்தை இழந்தால்கூட அதை எப்போதுமே திரும்பப் பெற முடியாது. ஆகவே ஒரு நிமிடம் தானே என்று அலக்ஷியப் படுத்தாதீர்கள். கடந்து போன, நீங்கள் இழந்த அந்த ஒரு நிமிடம் உங்கள் வாழ்க்கையின் பொன்னான தருணத்தைத் தவற விட்டிருக்கிறீர்கள். வாழ்வின் உச்சிக்குச் சென்றிருக்க வேண்டிய வாய்ப்பை நம்மை அறியாமலே தவற விட்டிருப்போம்.

    ஆகவே இப்போது புரிகிறதா நேரத்தின் அருமை?! இழந்தது ஒரு நிமிடமென்றாலும் அதை மீண்டும் பெற முடியாது என்பதை உணர்கிறீர்களா? இனி ஒரு நிமிடத்தையும் வீணாக்காதீர்கள்.

    Share
  • மரமேறிகள்!

    -தமிழ்த்தேனீ

    தென்னை மரம் ஏறுபரை அழைத்தேன் தேங்காய்ப் பறிக்க. ஐந்து முறை அழைத்தும் வருகிறேன்…வருகிறேன் என்று சொல்லியே ஏமாற்றிக் கொண்டிருந்தார். ஆறாவது முறையாக வந்தார். ஏம்பா வரேன்னு சொல்லிட்டு வரமாட்டேங்கற, அதனாலே உனக்காகக் காத்திருந்து காத்திருந்து என் வேலையெல்லாம் தள்ளிப் போயிட்டே இருக்கே, ஏன் இப்பிடி செய்யறீங்க, இன்னிக்கு வரேன் அல்லது இன்னிக்கு முடியாது நாளைக்கு வரேன்னு சொன்னா நாங்களும் எங்க வேலையைப் பாப்போமில்ல, உனக்கு நான் கொடுக்கும் பணத்தில் ஏதேனும் குறை இருந்தா சொல்லு என்றேன்.

    அதெல்லாம் இல்லே சார். நீங்க பணமும் குடுக்கறீங்க சாப்பாடும் போடறீங்க தண்ணீர் வேணுமான்னு கேட்டுக் குடுக்கறீங்க எங்க தொழில்லே இருக்கற கஷ்டத்தைப் புரிஞ்சவங்க நீங்க. என்று தலையைச் சொறிந்தார் அவர், இப்ப புரியுதுப்பா சரியா பணம் குடுக்காதவங்க வீட்டுக்குதான் சொன்ன நேரத்துக்கு போவீங்களா என்றேன் நான்.

    அப்பிடியெல்லாம் இல்லீங்க நீங்க கோவிச்சுக்க மாட்டீங்க அப்பிடீங்கற தைரியம்தான் என்றார் அவர். என்னை ஏமாளின்னு நீயும் புரிஞ்சிகிட்டியா என்று சிரித்தேன் நான். அப்பிடியெல்லாம் சொல்லாதீங்க நீங்க நல்லவரு என்றார் அவர். சரி என் பிள்ளை வெளிநாட்டிலேருந்து வந்திருந்தான் அவனுக்கு நம்ம வீட்டிலே காய்க்கிற இளநீரைப் பறிச்சுக் குடுத்தா ஒரு சந்தோஷம் அதுனாலேதான் கூப்பிட்டேன். அவன் வெளிநாட்டுக்கு போயிட்டான்.

    ஆனா நான் எப்பிடியோ கஷ்டப்பட்டுத் தொறட்டிக் கொம்பு வெச்சு ரெண்டு இளநீரைப் பறிச்சு அவனுக்கு குடுத்தேன் என்றேன் நான். மன்னிச்சிருங்க அடுத்த முறையிலேருந்து நீங்க கூப்பிட்டா உடனே வரேன் என்றார் அவர்.

    இப்படி எல்லாத் தொழில் செய்வோருமே ஒத்துக்கொண்ட நேரத்துக்கு வருவதில்லை இவர்களும் மரமேறிகளே. இவர்கள் மட்டுமல்ல நாம் எல்லோரும் மரமேறிகளே என்று தோன்றுகிறது எனக்கு. நாம் சொல்லும்போது எந்த அறிவுரையையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் காதிலேயே போட்டுக் கொள்ளாதவர்கள் அவர்களுக்காய் தோன்றும் போதுதான் உணர்கிறார்கள். ஆனால் அது காலம் கடந்த உணர்வு. அப்போது நிறைய நஷ்டங்களைச் சந்திக்கிறார்கள்.

    இதைவிடக் கொடுமை அந்த சாலையிலே பள்ளம் இருக்கிறது; நேற்று தடுக்கியது அதனால் பார்த்து மெதுவாக செல்லுங்கள் என்று ஒருவருக்கு அறிவுரை சொன்னேன், அன்று மாலையே அவர் வீட்டுக்கு வந்தார், சார் நீங்க இனிமே எனக்கு அட்வைஸ் பண்ணாதீங்க. நீங்க அட்வைஸ் பண்றேங்கிற பேர்லே எதையாவது சொல்றீங்க. நீங்க வாயை வெச்சீங்க நான் விழுந்தேன் என்றார். திடுக்கிட்டேன் அன்று முதல் யாருக்கும் எந்த அறிவுரையும் சொல்வதில்லை என்று முடிவெடுத்தேன்.

    ஆனால் என் தீர்மானம் ப்ரசவ வைராக்கியம் போல ராமாயண வைராக்கியம் போல நீர்த்துப் போயிற்று. ப்ரசவம் ஆகும் போது பெண்கள் அந்த இடுப்பு வலி தாளாமையினால் அதுக்குக் காரணமான கணவனைச் சபிப்பார்களாம். ஆனால் குழந்தை பிறந்து அந்தக் குழந்தையின் தெய்வீக முகத்தைப் பார்த்தவுடன் குழந்தையை தன் கணவன் வந்து பார்க்கவேண்டும் என்றே ஏங்குவாளாம்–

    அதைப்போல பலகாலமாக ராமாயணப் ப்ரவசனம் கேட்டும் தன் தீய வழக்கங்களை நீக்காமல் இருப்போர் தளர்ந்து வயதான காலத்திலே படுக்கையில் ஒவ்வொன்றாக அசைபோட்டு நாம் திருந்தாமல் இருந்துவிட்டோமே என்று வருத்தப் படுவார்களாம். ப்ரசவம் ப்ரவசனம் எதுவுமே பலனளிப்பதில்லை என்று உணர்ந்தேன். ஆனாலும் வருங்கால சந்ததிகள் வளமாக வாழவேண்டுமே என்னும் கவலையால் உண்மையான அக்கறையால் என் தீர்மானமும் நீர்த்துப் போகிறது.

    யார் வேண்டுமானாலும் மரம் ஏறட்டும்; மரம் ஏறுபவனை எத்தனை தூரம் தாங்க முடியும் என்கிற பழமொழி இருந்தாலும் நம்மால் முடிந்த வரை தூக்கலாம். என்றும் நம்மைத் திட்டுகிறார்களே அதனால் அறிவுரை சொல்லாமல் இருந்துவிடலாம் எப்படியோ போகட்டும் என்னும் மனக் கசப்பு வந்தாலும் அதையும் தாண்டி நம்மைத் திட்டினாலும் பரவாயில்லை… ஆயிரம் பேரில் ஒருவர் மாற்றிக் கொண்டு திருந்தினால் போதும் என்கிற முடிவுக்கு வந்து என் அனுபவங்களை அதனால் கிடைத்த அறிவை அறிவுறுத்திக் கொண்டேதான் இருக்கிறேன். என்னை ஏமாளி என்று நினைப்பவர்கள் நினைக்கட்டும்.–

     நானும் ஒரு மரமேறிதானே!

    பின்குறிப்பு: (அடுத்த முறை தென்னை மரத்தில் ஏறுபவரைத் தொலைபேசியில் அழைத்தேன். வந்துவிடுகிறேன் சார் இந்த முறை ஏமாற்ற மாட்டேன் என்று தீர்மானமாகச் சொன்னார். ஆனால் ஐந்து முறை தொலைபேசியில் அழைக்கும் போதும் அதையேதான் சொல்கிறார் காத்திருக்கிறேன் என்று. ஆனால் இந்த முறை நானே துறட்டுக் கொம்பு வைத்துக் கொண்டு நிறையக் காய்களைப் பறித்துவிட்டேன். ஆனால் தென்னை ஓலைகளைக் கழிக்க அவரை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.)

    இப்படிக்கு மரமேறி.

    Share
  • தாய்நாடு

    -தமிழ்த்தேனீ

    “உலகத்தில் உள்ள அனைவரின் தாயையும் அம்மா என்று அழைக்கலாம் ஆனால் நம் தாயை அம்மாவென்று அழைக்காமல் பாசத்தோடு அன்போடு கவனியாமல் இருந்தால் அது நியாயமா? —-தமிழ்த்தேனீ.

    ***

    102 வயதான ஒருவரைப் பேட்டிகாண ஒரு இளவயது நிருபர் செல்கிறார்.

    நிருபர் : ஐயா உங்களை வணங்குகிறேன். இந்த வயதிலும் நீங்கள் இளமைத் துள்ளலோடு இருக்கிறீர்களே அதன் ரகசியம் என்ன?

    முதியவர்: நான் சிறு வயதிலிருந்தே மது, மாது, புகைப்பிடித்தல் போன்ற எந்தக் கெட்ட வழக்கமும் இல்லாதவன். அதுதான் காரணம் என் இளமைக்கும் ஆரோக்கியத்துக்கும்.

    (இப்படி இவர்கள் பேட்டி எடுக்கும் வைபவம் நடந்து கொண்டிருக்கும்போதே)

    மாடியிலிருந்து ’லொக் லொக்’கென்று இருமும் சத்தம் கேட்கிறது.

    நிருபர் : ஐயா மேலே யாரோ இருமும் சப்தம் கேட்கிறதே!

    முதியவர் : ஆமாம் அவர் என் அண்ணன்!

    நிருபர் : அவர் ஏன் இருமுகிறார்?

    முதியவர் : அவருக்கு இல்லாத கெட்ட பழக்கங்களே இல்லை; அதனாலே உடம்பு கெட்டுப் போச்சு.

    (நீதி : உலகில் உள்ள எல்லா சந்தோஷங்களையும் அனுபவித்துவிட்டு 104 வயதிலும் இன்னமும் இருமிக் கொண்டு இருக்கும் அண்ணன் சரியா, அல்லது எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் 102 வயது வாழும் தம்பி சரியா என்றால் எதையுமே அனுபவிக்காமல் எத்தனை வயது வாழ்ந்தாலென்ன என்று தோன்றுகிறது)

    இந்த நீதி சரியா என்றால் அது சரியல்ல என்பது என் கருத்து, சிகரெட் பிடித்தால் கேன்ஸர் வருமென்கிறார்கள். இப்போது மாசுபட்டிருக்கும் சுற்றுச் சூழலால் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத ஆசாரமானவர்களுக்கும் கேன்ஸர் வருகிறது. அதற்காக கெட்ட பழக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள் என்று நான் உபதேசிப்பதாக யாரும் நினைக்காதீர்கள். கற்றுக்கொள்ள வேண்டாம். ஆனால் மாசுபடுத்தப்பட்ட சுற்றுச்சூழல் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைப் பன்றிக் காய்ச்சல் ஒவ்வாமைகள் பலவிதமான குறைபாடுகள் ஆகிய எல்லாவற்றையும் தோற்றுவிக்கின்றன.

    ஆகவே நம் நாட்டின் சுற்றுச்சூழலை சாலைகளில் கொப்பளிக்காத சாக்கடைகள் கொசுக்களை உற்பத்தி செய்யாத மூடப்பட்டுத் தடையின்றி ஓடக் கூடிய சாக்கடைகளை முதலில் உருவாக்க வேண்டும். மாசுபடாத காற்றை மக்கள் ஸ்வாசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மொத்தத்தில் சுத்தமான நாடாக நகரமாக நம் நாட்டையும் நகரங்களையும் கிராமங்களையும் அரசாங்கம் நிர்வகிக்க வேண்டும் என்பதே என் நோக்கம் ஆவன செய்வார்களா அரசு நிர்வாகம்.

    அல்லது நாமாவது இப்படிப்பட்ட சுத்தமான நாடாக மாற்ற நடவடிக்கை எடுப்போமா என்பதே என் கேள்வி. கேள்விகள் கேட்பது எளிது; விடை கடினமானது. ஆகவே ஒவ்வொரு தனிமனிதரும் சிந்திக்க வேண்டும். நம்மால் என்ன செய்யமுடியும் என்று. நாம் சுத்தம் செய்யாவிடினும் அசுத்தம் செய்யாமலிருப்போமா. சுத்தம் கட்டுப்பாடு என்பதெல்லாம் சட்டம் போட்டுத்தான் வரவேண்டும் என்பது நியாயமல்ல. மனதுக்குள் தாமாகவே எழ வேண்டிய நியாயமான உணர்வு.

    வெளிநாடுகளில் குப்பை போட்டால் அசுத்தப்படுத்தினால் அநாகரீகமாக நடந்துகொண்டால் சட்டப்படி தண்டிக்கிறார்கள். அதற்குப் பயந்து நாமும் அங்கே போகும் போது நாகரீகமாக அசுத்தப்படுத்தாமல் குப்பைகளைப் போடாமல் கட்டுப்பாட்டுடன் இருக்கிறோமே!

    அதனால் நம்மாலும் முடியும் இப்படியெல்லாம் நடந்து கொள்ள எனும்போது ஏன் நம் நாட்டிலே மட்டும் மாறாக நடந்து கொள்கிறோம்.

    வெளிநாட்டுக்குச் சென்று அங்கே குப்பைகளைப் போடாமல் இருந்துவிட்டு மும்பையோ டெல்லியோ வந்தவுடன் கண்ட இடங்களில் பான்பராக் போட்டுச் சுவைத்து எச்சில் துப்புகிறோம், குப்பைகளைக் கண்ட இடத்தில் போடுகிறோம், பெண்களை வெறிக்க வெறிக்கப் பார்க்கிறோம் நியாயமா இவையெல்லாம்.

    பயமுறுத்தினால்தான் சட்டம் போட்டுத் தண்டித்து பயமுறுத்தினால்தான் ஒழுங்காக நடப்போம் இல்லையென்றால் எப்படி வேண்டுமானாலும் வாழ்வோம் என்பது முறையா?

    ஐயாமாருங்களே! அண்ணன்மார்களே! தம்பிமார்களே! இது நம்மோட நாடு நம் நாட்டின் மேல் பாசத்தையும் நேசத்தையும் தேச பக்தியையும் வளர்த்துக் கொள்ளுங்கள் இது வேண்டுகோள்!

     

    Share