-தமிழ்த்தேனீ 

எங்கேயோ ஒரு பெரிய   மரம் மளுக்கென்று முறியும் சப்தம் கேட்கவே  ஓடிப் போய் எட்டிப்பார்த்தார் பெரியவர். அங்கே என்ன வேடிக்கை பாக்கறீங்க? கேள்வி காதிலே  விழுந்தது  இல்லே என்றார்  மகன்.

இல்லே  ஏதோ பெரிய மரம்  முறிஞ்சாப் போல சத்தம் கேட்டுது என்றார் பெரியவர்.

எங்களுக்கெல்லாம் ஒரு சத்தமும் கேக்கலே;  உங்களுக்கு மட்டும்  எப்பிடி இந்தச்  சத்தமெல்லாம் கேக்குது. சரி அது இருக்கட்டும்  நான் கேக்கற கேள்விக்கு  பதில் சொல்லுங்க.  வேலையிலேருந்து  ரிடைர் ஆனதிலேருந்து  ரெண்டு வருஷமா சும்மாத்தான  வெட்டியா இருக்கீங்க எதையாவது உருப்படியா  செய்யலாம்னு உங்களுக்கு  தோணாதா என்றார் மகன்.

மீண்டும் ஒரு முறை அவரை நோக்கி இந்தக் கேள்விக் கணை  அனுப்பட்டு நேராகவந்து சர்ர்ர்ர்ர்ர்ரக் என்று  மார்பிலே  குத்தி  அந்தக் கணையின் மேல்பக்கம் விரிந்து அங்கும் இங்கும் ஆடியது.

ஏம்பா நானா மாட்டேங்கறேன்  நிறைய பேர்கிட்டே வேலை கேட்டேனே…  உடம்பிலே தெம்பு இருக்கறவனுக்கே  வேலை குடுக்க முடியலே;  போயி வீட்டுலே தூங்குங்க பெரியவரே  அப்பிடீன்னு கிண்டல் செய்யறாங்கப்பா  நான் என்னா செய்வேன் என்றார்.  மார்பிலே குத்திய கணையின் கூர்முனை உள்ளே உறுத்த உள்ளுக்குள்ளே  முழுவதும் வலிக்க  அதைத்தாங்கியபடி,
ஏதோ என்னாலானது காலையிலே போயி பால் வாங்கிட்டு வரேன், ரேஷன் வாங்கிட்டு வரேன், காய்கறி வாங்கிட்டு வரேன்,  எலக்ட்ரிக் பில் கட்டிட்டு வரேன்,  பேரப் பிள்ளைங்களைப் பள்ளிக் கூடத்திலே விட்டுட்டு சாயங்காலம் கூட்டிகிட்டு வரேன்.  வேற என்னா செய்ய முடியும் என்னாலே  என்றார் அவர்.

தெரியுது இல்லே  வெட்டியாத்தான்  இருக்கோம்னு;  நாந்தானே உங்களையும் காப்பாத்திகிட்டு இருக்கேன்னு; அப்போ யார் விஷயத்திலேயும்    அனாவசியமா தலையிடாமே  சும்மா இருக்கணும்  புரியுதா  என்றார்  மகன். பெத்து வளத்து ஆளாக்கி ஏதேதோ செஞ்சு வேலையும் வாங்கிக் குடுத்ததெல்லாம் மனதிலே நிழலாட  உள்ளுக்குள்ளே  உயிர்போகும்  வலியைப் பொறுத்துக்கொண்டு, கொஞ்சம் இருப்பா  என்றவர் ஓடிப்போய் கதவருகே காதை வைத்துக் கேட்டார்.  ஏதோ ஒரு பெரிய மரம் மளுக்குன்னு முறியறா மாதிரி  சப்தம் கேக்குதே என்றார்.

மருமகள்  எதுக்கெடுத்தாலும்  இப்பிடி ட்ரஸ் பண்ணாதீங்க , இப்பிடி காசைக் கரியாக்காதீங்க  இப்பிடி பிள்ளைங்க  படிப்பைக் கெடுத்து  எப்போ பாத்தாலும் டீவீயைக் கத்த விடாதீங்கன்னு  எப்போ பாத்தாலும்  எதையாவது சொல்லிகிட்டு  உயிரெடுக்கறாரு என்றாள்.

அன்று இரவு பன்னிரண்டு மணிக்கு பாத்ரூம் போக வந்த மருமகள் பயந்து போய் புருஷனை எழுப்பினாள்  அவன் ஓடி வந்து எட்டிப் பார்த்தான். பெரியவர்  இருட்டில் கதவருகே காதை  வைத்துக் கொண்டு எங்கியோ ஒரு மரம்  முறிஞ்சு போச்சு  என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

மருத்துவப் பரிசோதனைகள்  எல்லாம் முடிந்து  மருத்துவர்  மகனிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்.  இவருக்கு  ஒரு வியாதியுமில்லே;  இதயம் நல்லா  இருக்கு;  மூளையிலே  எந்தப் ப்ரச்சனையும் இல்லே;  கிட்னி நல்லா வேலை செய்யுது; ஆரோக்கியமாத்தான் இருக்காரு. பயப்பட ஒண்னுமில்லே என்றார்

வெளியே  கதவில் காதை வெச்சுகிட்டு  மரம் முறிஞ்சு போச்சு;  மரம் முறிஞ்சு போச்சு என்று கதறிக் கொண்டிருந்தார்  பெரியவர். அவர்  மனைவி வாயைப் பொத்திக் கொண்டு அவரையே பார்த்தபடி அழுது கொண்டிருக்கிறாள்.

மனம் முறிஞ்சு போச்சுன்னு சொல்லத் தெரியலே அவருக்கு.

மரம் முறிஞ்சு போச்சு என்று அலறுகிறார் பெரியவர். யாருக்குமே காதிலே விழவில்லை  மனம் முறிஞ்ச சப்தம். மனம் முறியும்  சப்தம் வெளியே கேட்காதே!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.