தமிழ்த்தேனீ

வழக்கமாய் வருவது போலவே அன்றைக்கும் கனவு வந்தது லக்ஷ்மிக்கு. வேலைகளை முடித்துவிட்டு அக்கடா என்று சற்று நேரம் படுக்கலாம் என்று படுத்தால், உடனே உறக்கம் கண்களை சுழற்றுகிறது.

சரி தூங்குவோம் என்று முடிவெடுக்கும் முன்னரே தூங்கிப் போவது அவள் வழக்கம்.  அன்றும் அப்படியே வேலைகளை முடித்துவிட்டு  மதியம் கண்ணயர்ந்தாள் லக்ஷ்மி.

எப்போதும் வருவது போலவே கனவில் அவளுக்கு பிடித்த இஷ்ட தெய்வம் கிருஷ்ணன்.

“என்ன வந்து விட்டாயா? சற்று நேரம் தூங்கலாம் என்று கண்ணயர்ந்தால் உடனே நீ வந்துவிடுகிறாய். சரி  சொல் என்ன வேண்டும்” என்றாள் லக்ஷ்மி.

“எனக்கு என்ன வேண்டும்? உனக்கு வேண்டுவதை என்னிடம் கேட்டுப் பெறுவதற்கே,  நீ இந்த மதிய வேளையில் தூங்குகிறாய் என்று  எனக்குத் தெரியும். இன்று உன் தேவை என்னவோ அதைத் தெரிந்து கொண்டு  அதை நிறைவேற்றிவிட்டுப் போகலாம் என்றுதான் வந்தேன்” என்றான் கிருஷ்ணன்.

“கிருஷ்ணா, உனக்குத்தான் தெரியும். எனக்கு படுத்தால் உடனே உறக்கம் வந்துவிடுகிறது. அது மட்டுமல்ல கனவும் வந்துபோகிறது. கனவில் வருவதெல்லாம் அப்படியே நடக்கவும் நடக்கிறது.” என்றாள்  லக்ஷ்மி.

“நல்லதுதானே ? எத்தனை பேருக்கு, இது போல் முன்கூட்டியே என்ன நடக்கப் போகிறது என்று தெரிகிறது. இது உனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமல்லவா” என்றான் கிருஷ்ணன்.

“கிருஷ்ணா, இந்த மானுட ஜென்மத்தில் வருவதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியாதிருப்பதும், பழையதை மறந்து போவதும் தானே வரப்ப்ரசாதங்கள். அந்த இரு வரப்ரசாதங்களில் ஒன்றை இழந்துவிட்டேனே என்று ஒரு புறம் வருத்தமாக இருந்தாலும் இன்னொரு புறம் கனவின் மூலமாக உன்னை சந்திக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேனே அதை எண்ணியே மகிழ்கிறேன்.

இன்று நான் கண்ட கனவு என்னை நிம்மதி இழக்கச் செய்து விட்டதே, ஆமாம் நான் இறந்து போவது போலவும், என் கணவர்  வருத்தமாக இருப்பது போலவும்  கனவு கண்டேன்.”

“அப்படியா நல்லதுதானே ! நீ சீக்கிரம் என்னை வந்து அடையப் போகிறாய். அதற்கென்ன கலக்கம் ?” என்றான் கிருஷ்ணன்.

“சீக்கிரமாக உன்னை வந்து அடையப் போகிறேன் என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், வேறு ஒரு சிந்தனை என்னை வருத்துகிறது.” என்றாள் லக்ஷ்மி.

“என்னை வந்து அடைவதை விட மகிழ்ச்சியானது வேறொன்று இருக்க முடியுமா? பிறகென்ன  வருத்தும் சிந்தனை உனக்கு ?”,  என்றான் நமுட்டுச் சிரிப்புடன் கிருஷ்ணன்.

“உனக்குத் தெரியாததா! எல்லாம் அறிந்தவன் நீ , வேண்டுமென்றே  என்னைச் சீண்டுகிறாய்.

நீ எனக்கு ஒரு வரம் போல் கொடுத்தாயே ஒரு வாழ்க்கைத் துணைவர், அவருடைய குணம் என்னவென்று உனக்குத் தெரியாதா?

எப்போதோ நான் செய்த புண்ணியத்தின் பலனை எனக்கு  வாழ்க்கைத் துணை அமைத்துக் கொடுப்பதில் செலவிட்டிருக்கிறாய் நீ.

அவருக்கு கள்ளம் கபடம் தெரியாது, எல்லாருக்கும் என்ன வேணும்ன்னு பாத்து பாத்து செய்யக் கூடிய மனுஷன், ஆனா அவருக்கு என்ன வேணும்னு அவருக்கே தெரியாது.

அவங்க அம்மா. அதான் என் மாமியார் எனக்கு கல்யாணம் ஆன புதுசுலே என் கையைப் பிடிச்சிண்டு சொன்ன வார்த்தைகள் அப்பிடியே இப்பவும் காதிலே ஒலிக்கறதே, 

‘லக்ஷ்மி எல்லாரும் நெனைச்சிண்டுருக்கா உன்னை இவன்கிட்ட ஒப்படைச்சிட்டோம்னு. எனக்குதான் தெரியும்  இவனை உங்கிட்ட ஒப்படைச்சிருக்கேன்னு. அவனோட நேர்மையிலே, புத்திசாலித்தனத்திலே எனக்கு அவநம்பிக்கை இல்லே. ஆனா இந்தக் காலத்துக்கு வேண்டிய கெட்டிக் காரத்தனம் இவனுக்கு கிடையாது. வெளுத்ததெல்லாம் பாலுன்னு நெனைப்பான், எல்லாரையும் நம்புவான். யார் எது கேட்டாலும்  தனக்கு இருக்கோ இல்லையோ எடுத்துக் குடுத்துட்டு  அவங்க திருப்பித் தருவாங்கன்னு எதிர்ப்பார்த்திண்டே இருப்பான்.

யார்கிட்டே எப்பிடிப் பேசணும்னு தெரியாது, எவ்ளோ கள்ளம் நிறைந்த உலகம் இதுன்னு தெரியாது. உதவின்னு கூப்பிட்டா ஓடிப்போயி உதவிட்டு அவங்க தூக்கி அடிக்கும்போது வருத்தப்பட்டுண்டு இருப்பான். இவனை நான் உங்கிட்ட ஒப்படைக்கிறேன்,இனிமே நீதான் இவனைப் பாத்துக்கணும்’ னுட்டு சொல்லி இவரை எங்கிட்ட ஒப்படைச்சாங்க.

நானும் என்னாலானது இவ்ளோ நாள் அவருக்கு உதவியா இருந்துட்டேன். இப்போ நான் முதல்லேயே போகப் போறேன்னு தெரிஞ்சதுக்கப்புறம் இவரைப் பத்தின கவலைதான் அதிகமாயிடிச்சு.

இவரு ஒரு சொல் பொறுக்க மாட்டாரு. அனிச்ச மலர் மாதிரி மென்மையான மனசு. இனிமே இவரை யாரு கவனிக்கப் போறாங்க? நெனைச்சுப் பாத்தாவே கவலையா இருக்கு.

கிருஷ்ணா நீ நான் எது கேட்டாலும் நிறைவேத்தி வெச்சே, எனக்கு ஒரு குறையும் வைக்கலே. எனக்கு உன்னை விட்டா வேற யாரும் கிடையாது. உன்னையே சரண் அடைஞ்சு கவலை இல்லாம இருந்தேன்.

இப்பவும் எனக்கு நீதான் உதவணும், யாருக்குமே கிடைக்க முடியாத பாக்கியத்தை எனக்கு குடுத்தே. எவ்ளவோ மகான்களுக்கெல்லாம் கிடைக்காத பாக்கியம் எனக்கு குடுத்திருக்கே. நான் இந்த வாழ்க்கையிலே இருந்துண்டே உன்னை அப்பப்போ பாத்து பேசறேன்.

நான் ஒரு வரம் கேப்பேன் குடுப்பியா ?”, என்றாள் ஏக்கமாக! 

“நீ என்ன கேக்கப் போறேன்னு எனக்குத் தெரியும்.  வாழ்க்கையிலே பல பூட்டுகள் இருக்கு. ஆனா எல்லாப் பூட்டுக்கும்  சாவி கிடையாது. சில பூட்டுக்கு மட்டும்தான் சாவி இருக்கு, அந்தச் சாவிகள் கூட யார்கிட்டே இருக்கணுமோ அவங்க கிட்டே இருக்கறதில்லே, வேற எங்கேயோ இருக்கு. அதுனாலே பல பூட்டுக்கள் இன்னும் திறக்கப் படாமையே இருக்கு. சரி கேளு” என்றான் கிருஷ்ணன் புன் சிரிப்புடன்.

“எனக்கு முன்னாடி அவரைக் கூட்டிண்டு போயிடு. அதுக்கு அப்புறம் என்னை கூட்டிண்டு போ. அது முடியலைன்னா  எங்க ரெண்டு பேரையும் ஒண்ணா கூட்டிண்டு போயிடு. அவரை மட்டும் தனியா விட்டுட்டு நான் மட்டும் வந்தா  நான் குடுத்த வாக்கை நிறைவேத்த முடியாம போயிடும்”,  என்றாள் லக்ஷ்மி. 

நாளையிலேருந்து உனக்கு கனவே வராது  என்றான் கிருஷ்ணன் புன்சிரிப்புடன்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on "கனவுச் சாவி"

  1. கனவுச்சாவி  அருமையான தலைப்பு..
    கவித்துவமான தலைப்புக்கு ஏற்றாற் போல் தத்ரூபமான கதை.. படைப்புக்கு பாராட்டு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.