Tag: அமெரிக்கா

  • பாகிஸ்தான் மத்தியஸ்தம்: இந்தியாவின் தோல்வியா?

    பாகிஸ்தான் மத்தியஸ்தம்: இந்தியாவின் தோல்வியா?

    அண்ணாகண்ணன்

    அமெரிக்கா – இரான் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து போர்நிறுத்தம் செய்தது, வியப்புக்கு உரியது; பாராட்டுக்கும் உரியதே. ஆனால், இதை இந்தியாவின் தோல்வி என்று சிலர் எழுதியதைப் பார்க்கிறேன். பாகிஸ்தானின் ஆக்கப்பூர்வமான, பொறுப்பான செயலைக் கண்டு இந்தியாவும் மகிழ்வே அடையும். பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகளை மட்டுமே இந்தியா எதிர்க்கிறது. இதர முனைகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் நட்பு நாடுகளே.

    இந்தியா எதிலாவது வெற்றி பெற்றால், அது பாகிஸ்தானின் தோல்வியாகக் கருதப்படுவதில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் சம வலிமை பெற்ற நாடுகளும் இல்லை. எனவே எந்த வகையிலும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியதில்லை.

    கிரிக்கெட்டிலும் இதர விளையாட்டுகளிலும் இதே போல், இந்தியாவும் பாகிஸ்தானும் மோதினால் பரம வைரிகள் என்று வர்ணிக்கிறார்கள். விளையாட்டில் நாம் அவ்வாறு கருத வேண்டியதில்லை. கருதவும் கூடாது.

    பாகிஸ்தானைப் போல் இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்திருக்கக் கூடாது என்று சிலர் கேட்கலாம். இதே கேள்வியைச் சீனம், ரஷ்யா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் எனப் பல நாடுகளையும் நோக்கிக் கேட்கலாம். இதில் சீனமும் ரஷ்யாவும் தங்கள் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஹார்மஸ் நீரிணையைத் திறக்கும் ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் தீர்மானத்தை முறியடித்தன. இரானுக்கு அருகில் இருக்கும் வளைகுடா நாடுகளைப் பார்த்தும் கேட்கலாம். அமெரிக்காவுடன் நெருக்கமாக இருப்பதே இப்போதைக்குப் பாகிஸ்தானின் வலிமை. அமெரிக்கா சொல்வதைத்தான் பாக் செய்யும். இந்த மத்தியஸ்தம் கூட, அமெரிக்காவின் மறைமுக முன்னெடுப்பாக இருக்கலாம்.

    எனவே, இப்படி எல்லாம் ஏன் நடக்கவில்லை என்று பேசுவதை விட, நடந்ததைக் குறித்துப் பேசுவதே பொருத்தமானது. பாகிஸ்தான் பொறுப்புடன் நடப்பதை நாம் வரவேற்க வேண்டும். ஊக்குவிக்க வேண்டும். இது அரிதாகத்தான் நடக்கிறது.

    Share
  • தீதும் நன்றும் பிறர்தர வாரா

    தீதும் நன்றும் பிறர்தர வாரா

    அண்ணாகண்ணன்

    அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட பலரும் சுமார் 50 லட்சம் செலவு செய்து, பல்வேறு அபாயகரமான வழிகளில் அமெரிக்காவுக்குச் சென்றிருக்கிறார்கள். கடன் வாங்கியும் பலர் அங்கே சென்றிருக்கிறார்கள். இவ்வளவு தொகை புரட்ட முடிந்த இவர்கள், இந்தியாவிலேயே எவ்வளவோ தொழில்கள் செய்திருக்கலாம். பானி பூரி, இட்லி கடை, பரோட்டா கடை, பிரியாணி கடை என்று சாலையோரங்களில் கடை போட்டு, மிகக் குறைவான முதலீட்டில் தொழில் செய்து இங்கே கோடிக்கணக்கானோர் வாழ்ந்து வருகிறார்கள். பேராசைப் பட்டு, குறுக்கு வழியில் சென்றால் என்ன நடக்கும் என்று இப்போது அவர்கள் உணர்ந்திருப்பார்கள். தீதும் நன்றும் பிறர்தர வாரா. நம் செயல்களுக்கு நாமே பொறுப்பு. அதற்குரிய விளைவுகளை ஏற்கத்தான் வேண்டும்.

    அமெரிக்கா இவர்களை நல்ல முறையில் திருப்பி அனுப்பவில்லை. மனிதாபிமானம் குறித்து எகிப்துக்கும் ஜோர்டானுக்கும் கூறும் அமெரிக்கா, அதே அடிப்படையில் தானும் நடந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால், தங்கள் நாட்டின் சட்டத்தை மதிக்காதவர்களுக்கு இந்த மரியாதை தான் அளிக்க முடியும் என அவர்கள் காட்டியிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை, இவர்களுக்கு மட்டுமில்லை. இது போன்று அமெரிக்காவுக்குள் நுழைந்து, அமெரிக்க அரசை ஏமாற்றி வாழ்ந்துவிட முடியும் என நம்பி எதிர்காலத்தில் வரக்கூடியவர்களுக்கும் இதுவே பதில். இனியாவது இத்தகையோர் பாடம் கற்பார்களா என்பதே கேள்வி.

    இப்போது இந்திய அரசு, ஒரு முக்கியமான பணியைச் செய்ய வேண்டும். வெவ்வேறு முதலீடுகளில் செய்யக்கூடிய சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் குறித்து விரிவான விழிப்புணர்வை ஊட்ட வேண்டும். ஏற்கெனவே இதற்கென ஒரு துறை இருக்கிறது. இந்தத் துறை, சில பயிற்சிகளையும் அளிக்கிறது. இது தொடர்பான விளம்பரங்கள், நாளிதழ்களில் அடிக்கடி வருகின்றன. ஆனால், இதை மிகப் பெரிய அளவில் செய்ய வேண்டும். ஒவ்வொருவரையும் தேடித் தேடிச் செய்ய வேண்டும். பயிற்சி அளிப்பதோடு, நம்பிக்கை அளிக்க வேண்டும். ஏற்கெனவே இவ்வாறு தொழில் செய்து முன்னேறியவர்களின் அனுபவங்களைப் பதிவு செய்து, விரிவாக அவற்றைக் கொண்டு செல்ல வேண்டும். புதிய தொழில்முனைவோருக்காகத் தனிச் செயலி, இணையத்தளம், யூடியூப் அலைவரிசை, தொலைக்காட்சி ஆகியவற்றைத் தொடங்க வேண்டும். நல்ல திறமைசாலிகளை, சிறந்த பொருள்களை அரசே விளம்பரப்படுத்தலாம். இந்தப் பொருள் தேவையா? இந்தச் சேவை தேவையா? இவர்களை அணுகுங்கள் என வாடிக்கையாளருடன் இணைக்கலாம்.

    இந்தியச் சந்தையைக் குறிவைத்து, அயல்நாட்டு நிறுவனங்கன் பலவும் இங்கே வருகின்றன. ஆனால், இந்தியர்களோ வெளிநாட்டைத் தேடிச் செல்கிறார்கள். எனில், இந்தியாவின் மதிப்பை இந்தியர்கள் பலர் இன்னும் உணரவில்லை. அவர்கள் அதை உணரும்போது, இந்தச் சிக்கல் தீரும். இந்தியாவும் இதனால் வளம் பெறும்.

    #us #usa #america #india #indians #illegalimmigration

    Share
  • அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முன்னுரிமைகள்

    அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முன்னுரிமைகள்

    அண்ணாகண்ணன்

    அமெரிக்க அதிபராக டிரம்ப், அடித்து ஆடத் தொடங்கிவிட்டார்.

    உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுகிறது. காரணம், அமெரிக்கா அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியைச் சேமிக்க. வெளிநாட்டுப் போர்களில் அமெரிக்கா இனிப் பங்கேற்காது. காரணம், நிதிச் சிக்கனம். டாலரில் வர்த்தகம் செய்யாத நாடுகளுக்கு 100 சதம் கூடுதல் வரி என எச்சரித்துள்ளார். இதன் மூலம் டாலரின் முக்கியத்துவத்தை இழக்காமல், தன்னைச் சார்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்துகிறார்.

    வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதைக் குறைத்து, அமெரிக்காவைப் பொருள்களின் உற்பத்தி மையமாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் உள்ள எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து, பெட்ரோலிய இறக்குமதியைக் குறைக்கவும் திட்டம் வைத்துள்ளார்.

    பனாமா கால்வாயில் அமெரிக்கக் கப்பல்களுக்கான கட்டணத்தைக் குறைக்க வேண்டும் அல்லது அதன் நிர்வாக உரிமையை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அமெரிக்கப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே அவரது முன்னுரிமையாக இருக்கிறது. நிச்சயமாக டிரம்ப், அயல் பணி ஒப்படைப்பிலும் கை வைக்க வாய்ப்பு இருக்கிறது.

    டிரம்பின் அடுத்த முன்னுரிமை, அமெரிக்கப் பெருமிதம். செவ்வாய்க் கோளில் அமெரிக்கக் கொடி பறக்கும் என்பதும் மெக்சிகோ வளைகுடா இனி அமெரிக்க வளைகுடா எனப் பெயர் மாற்றம் செய்வதும் இதையே குறிக்கிறது. அமெரிக்கக் குடியுரிமையைக் கட்டுப்படுத்துவது, அமெரிக்கர் என்னும் அடையாளத்தை அவ்வளவு எளிதில் மற்றவர்கள் பெற முடியாது என்பதைச் சுட்டவே. அமெரிக்கப் பொருள்களை வாங்குங்கள் என அவர் பரப்புரை செய்தால், ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பார். அமெரிக்கப் பொருளாதாரமும் வளரும். அமெரிக்கப் பெருமிதமும் உயரும்.

    புதிய தலைவர் பொறுப்பு ஏற்கும்போது அதிரடி அறிவிப்புகள் வருவது இயல்பே. ஆரம்ப ஆரவாரங்களைக் கடந்து, அனைவரது நன்மையையும் அவர் கருத்தில் கொண்டால், புதிய சகாப்தம் படைப்பார்.

    Share
  • H1B விசா உள்ளவர்களுக்கு ஜாக்பாட்

    H1B விசா உள்ளவர்களுக்கு ஜாக்பாட்

    அமெரிக்காவில் எச்1பி (H1B) விசா உள்ளவர்களுக்கு, கனடா சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. மூன்று ஆண்டுகள் எந்த நிறுவனத்திலும் பணியாற்றலாம் என்ற சுதந்திரமான பணி அனுமதியை வழங்குகின்றது. அமெரிக்கக் குடியுரிமைக்காக நீண்ட காலமாகக் காத்திருக்கும் திறமைசாலிகளைத் தன் பக்கம் இழுக்கின்றது. எச்1பி (H1B) விசா உள்ளவர்களின் துணைவரும் கனடாவில் பணியாற்றலாம் என்பது அடுத்த அதிரடி. இது குறித்து, கேனெக்ஸ்ட் குடியேற்ற நிறுவனத்தின் தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம் விளக்குகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அறிஞர் அண்ணா உரை | அமெரிக்கா தந்த பாடங்கள்

    அறிஞர் அண்ணா உரை | அமெரிக்கா தந்த பாடங்கள்

    1968ஆம் ஆண்டு, அமெரிக்க, ஜப்பான் நாடுகளுக்குச் சென்று வந்த அண்ணாவுக்கு முத்தமிழ் மன்றம் அளித்த வரவேற்பினை ஏற்றுக்கொண்டு, அறிஞர் அண்ணா ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வான்கோழி

    வான்கோழி

    ஷங்கர் படக் காட்சி போல் இருக்கு, பாருங்க. இந்த இடத்தில் ஐஸ்வர்யாராய் நடனம் ஆட, ஒரு பாடல் காட்சி எடுக்கலாமா?

    படப்பதிவு: கார்கில் ஜெய்

    Cover image: Wikimedia

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • என் அமெரிக்க அனுபவங்கள் – பாஸ்டன் பாலா நேர்காணல்

    என் அமெரிக்க அனுபவங்கள் – பாஸ்டன் பாலா நேர்காணல்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    அமெரிக்கக் குடியுரிமை பெற்று, அந்நாட்டில் 25 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நண்பர் பாஸ்டன் பாலா, தமது அமெரிக்க அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். கனவு தேசம் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் பல்வேறு முகங்களை இந்த நேர்காணல் வழியே நீங்கள் காணலாம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கடவுள் யார் பக்கம் இருக்கிறார்?

    கடவுள் யார் பக்கம் இருக்கிறார்?

    -நாகேஸ்வரி அண்ணாமலை

    இஸ்ரேல் கடவுளின் பக்கம் இருப்பதாக இஸ்ரேலில் இருக்கும் அமெரிக்கத் தூதர் டேவிட் ப்ரீட்மேன் கூறியிருக்கிறார். கடவுள் இஸ்ரேலின் பக்கம் இருப்பதாகச் சொல்வதற்குப் பதில் இப்படிச் சொல்கிறார் போலும். இஸ்ரேல் கடவுளின் பக்கம் இருப்பதாகச் சொல்வதால் இஸ்ரேல் செய்வதெல்லாம் சரியென்று சொல்கிறாரா? இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமெரிக்கக் கொள்கையை வகுப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர் இவர்.

    பைபிளை அப்படியே நம்பும் அமெரிக்கக் கிறிஸ்தவர்கள் (Evangelical Christians) அமெரிக்கா தன்னுடைய தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றி ஒரு வருஷம் ஆனதைக் கொண்டாடும் ஒரு விழாவில் அவர் இப்படிப் பேசியிருக்கிறார். (யேசுவைக் கொன்றவர்கள் என்ற கோபம் யூதர்கள் மேல் இவர்களுக்கு சென்ற நூற்றாண்டுவரை இருந்தது. பல ஐரோப்பிய நாடுகளில் யூதர்கள் வாழ்ந்து வந்தபோது யேசு உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் அன்று கிறிஸ்தவர்கள் யூதர்களுக்குத் தீங்கு விளைவிக்கலாம் என்று யூதர்கள் வெளியில் வர மாட்டார்களாம். இப்போது யூதர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே பாலஸ்தீனத்தில் மோதல் ஏற்பட்ட பிறகு கிறிஸ்தவர்கள் யூதர்கள் பக்கம் சாய்ந்துவிட்டனர். உலகம் முழுவதும் முஸ்லீம்களுக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியது ஒரு காரணம். கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களை எதிர்க்க, வெறுக்க ஆரம்பித்தனர். இரண்டாவது, பெத்லஹேமில் பிறந்த இயேசு மாண்டது ஜெருசலேமில். ஜெருசலேம் இஸ்ரேலின் ஆதிக்கத்தில் இருந்தால்தான் தாங்கள் அங்கு இடையூறின்றிப் போய்வரலாம் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இது தவறான நம்பிக்கை என்று நான் சொல்வேன்.) இப்போது அமெரிக்காவுடனான இஸ்ரேலின் உறவு வலுப்பட்டிருப்பதாலும் இஸ்ரேல் கடவுளின் பக்கம் இருப்பதாலும் இஸ்ரேல் மிகவும் பலமுள்ளதாக ஆகிவருவதாக அவர் கூறியிருக்கிறார்.

    அமெரிக்காவும் இஸ்ரேலும் நெருங்கிய உறவு கொண்டிருப்பதாக அவர் கூறியதாலேயே அமெரிக்கா இஸ்ரேலுக்கு சாதகமாக ஒருதலைப் பட்சமாக நடந்து வருகிறது என்று சொல்லலாம். இதற்கு நிறைய உதாரணங்கள். அமெரிக்கத் தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றியிருப்பது; பாலஸ்தீன அகதிகளுக்கு ஐ.நா. அளித்து வரும் உதவியில் தன் பங்கைக் குறைத்திருப்பது; வெஸ்ட் பேங்கை இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்று கூறுவதை நிறுத்திவிட்டது; வாஷிங்டனில் இருந்த பாலஸ்தீனத்தின் அமெரிக்க உறவு அலுவலகத்தை மூடிவிட்டது; ஜெருசலேமில் இருந்த பாலஸ்தீனர்களுக்கான துணைத் தூதரகத்தை இஸ்ரேலுக்கான தூதரகத்தோடு இணைத்துவிட்டது. இப்படிப் பல. ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக ஆன நாளிலிருந்தே பாலஸ்தீனர்களுக்கு இருந்த உரிமைகளைப் பறிப்பதும் இஸ்ரேலுக்கு புதிய சலுகைகள் வழங்குவதும் அமெரிக்காவின் வழக்கமாயிற்று.

    ப்ரீட்மேனின் இந்தக் கருத்தைப் பாலஸ்தீனர்கள் மட்டுமல்ல இஸ்ரேலில் ப்ரீட்மேனுக்கு முன்னால் அமெரிக்காவின் தூதராக இருந்த டேனியல் குர்ட்ஸெர்கூட வரவேற்கவில்லை. இவர் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளின் காலத்திலும் அமெரிக்காவின் இஸ்ரேல் தூதராக இருந்திருக்கிறார். ‘அமெரிக்க அரசுக்கும் அதன் மக்களுக்கும் தூதரான இவர் தன் பணிக்குப் பொருத்தமில்லாத விஷயங்களாகக் கூறிவருகிறார்’ என்றார். பாலஸ்தீனர்களுக்கு ப்ரீட்மேன் கூறியது மிகுந்த கோபத்தைக் கொடுத்தது. அமெரிக்கத் தூதரான இவர், அமெரிக்கர்களின் நலன்களைவிட இஸ்ரேலின் நலன்களில்தான் அதிக அக்கறை செலுத்துகிறார் என்று விமர்சித்துள்ளனர்.

    பாலஸ்தீன விடுதலை அமைப்பின் (PLO) அதிகாரிகளில் ஒருவர், ‘ப்ரீட்மேன் இப்படிக் கூறியிருப்பதால், ‘பாலஸ்தீனர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிராகக் கடவுள் செயல்படுகிறார் என்று சொல்லாமல் சொல்கிறார். ஒருபோதும் அமெரிக்கா அப்படி நினைத்ததில்லை’ என்று ட்விட்டரில் கூறியிருக்கிறார்.

    இந்தப் பதவிக்கு ட்ரம்ப்பால் நியமிக்கப்படுவதற்கு முன் ப்ரீட்மேன், ட்ரம்ப்பின் திவால் வழக்கறிஞராக இருந்தார்; பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடமான வெஸ்ட் பேங்கில் இஸ்ரேல் குடியிருப்புகளைக் கட்டியபோது அதை வெகுவாக ஆதரித்ததோடு நன்கொடைகளும் வழங்கியவர் இவர். இஸ்ரேல் இப்படிக் குடியிருப்புகளைக் கட்டியது, அகில உலக சட்டத்திற்குப் புறம்பானது என்று பல நாடுகள் கருத்துத் தெரிவித்தன. சட்டம் படித்த இவர், இதைக் கண்டுகொள்ளவே இல்லை.

    ஓராண்டுக்கு முன் அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றியபோது இருபது பேர்களைத் தவிர பாலஸ்தீனர்கள் வேறு யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் அன்று ஜெருசலேம் ஓட்டல்களில் தாங்கள் சாப்பிட்ட உணவு அவ்வளவு நன்றாக இல்லை என்று பேசினார்களேயொழிய தூதரகத்தை மாற்றியது பற்றி யாரும் பேசவில்லை என்றும் வாய்கூசாமல் கூறுகிறார். அன்று இதை எதிர்த்து காஸாவில் கலவரம் நடந்து 60 பேர் கொல்லப்பட்டது உண்மை என்றாலும், நடந்த கலவரங்களுக்கும் தூதரகம் திறக்கப்பட்டதற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்கிறார். எப்படிப் பொய் சொல்கிறார்! திறப்புவிழா நிகழ்ச்சிகளை இருட்டடிப்பதற்காகத்தான் காஸாவில் வன்முறை நிகழ்ந்தது என்பதே உண்மை.

    இப்படிப் பொய்களாகச் சொல்லிக்கொண்டிருக்கும் இவர் தன்னால் முடியுமென்றால் பாலஸ்தீனர்களை இன்னும் ஒடுக்குவாராம். இன்னொரு மனித இனத்திற்கு அநீதி இழைத்துக்கொண்டிருக்கும் இஸ்ரேலைப் பாராட்டிக்கொண்டிருக்கும் இவர் எப்படி இஸ்ரேல் கடவுள் பக்கம் இருக்கிறது என்று சொல்லலாம். கடவுள் என்று இவர் யாரைச் சொல்கிறார்? கடவுள் படைத்த மனித இனங்களில் ஒன்றைத் தீர்த்துக் கட்டுவதென்று முடிவு எடுத்திருக்கும் இவருக்குக் கடவுள் பெயரைச் சொல்லக்கூட அருகதை இல்லை.

    Share
  • படித்த, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் செய்யும் மோசடி

    -நாகேஸ்வரி அண்ணாமலை

    மைக்கேல் கோகென் என்பவர் ஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர். இவர் இவ்வளவு நாட்களாக ட்ரம்ப் செய்த சில தவறுகளை மூடிமறைத்து வந்தார். இப்போது வேறு வழியில்லாமல் தான் அமெரிக்கப் பாராளுமன்ற கமிட்டியின் முன்னால் பொய் கூறியதாக ஒப்புக்கொண்டார். இதற்கு அவருக்கு மூன்று ஆண்டு ஜெயில் தண்டனை விதித்திருக்கிறார்கள். இந்தியாவில் இம்மாதிரிக் குற்றங்கள் எல்லாம் – அதுவும் மேல் மட்டத்தில் நடந்தால் – கண்டுகொள்ளப்படாமலே போய்விடும். என்ன இருந்தாலும் கோகெனும் ட்ரம்பும் அமெரிக்காவில் இருப்பவர்கள் அல்லவா? அமெரிக்கா இன்னும் இந்தியா அளவுக்குத் தாழ்ந்து போகவில்லை.

    இம்மாதிரிக் குற்றங்களைப் படித்தவர்கள் செய்யும் குற்றங்கள் (white collar crimes) என்று அழைக்கிறார்கள். இம்மாதிரிக் குற்றங்கள் புரிவோர்களை – அவர்கள் மேல்மட்டத்தவர் என்றாலும் – அமெரிக்கா தண்டிக்காமல் விடுவதில்லை. இருப்பினும் அவர்கள் எந்த மாதிரி சிறைச்சாலைக்குப் போக விரும்புகிறார்கள் என்ற சலுகையை அமெரிக்கா அவர்களுக்குக் கொடுத்திருக்கிறது.

    கோகென் நியூயார்க் அருகிலுள்ள ஆடிஸ்வில் என்னும் ஊரிலுள்ள ஒரு சிறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இதை ஒரு சிறை என்றுகூட சொல்ல முடியாது. ஒரு முகாமுக்குரிய எல்லா வசதிகளும் இங்கு உண்டு. கோகென் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த முகாம் இம்மாதிரியான மற்ற முகாம்களைவிட வசதிகள் குறைந்ததுதான். இருப்பினும் கோகென் இதைத் தேர்ந்தெடுத்திருப்பதற்கு முக்கிய காரணம் இங்கு யூதக் குற்றவாளிகள் பலர்  இருப்பதுதான். மேல் மட்டத்தில் இருந்த யூதர்கள் பலர், படித்தவர்கள் புரியும் குற்றங்களைப் புரிந்திருக்கிறார்கள். நியூயார்க் மாநில சட்டசபையின் பெரும்பான்மை கட்சித் தலைவர் ஷெல்டனும் இவர்களில் ஒருவர்.

    இன்னொரு காரணம், யூதர்கள் உண்ண விரும்பும் ஒரு வகையான இறைச்சி. இதை இந்தச் சிறையில் கொடுக்கிறார்கள். யூதர்கள் ஒரு குறிப்பிட்ட சடங்கு செய்துமாடுகளையும் மற்ற மிருகங்களையும் பறவைகளையும் கொன்று அந்த இறைச்சியைத்தான் உண்ணுவார்கள். இன்னொரு காரணம், பெரும்பான்மையான யூதக் குற்றவாளிகளால் மதகுருவாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், இங்குள்ள யூதக் கோவில்களில் மத சம்பந்தப்பட்ட வகுப்புகளை நடத்துகிறார்கள். இவர்கள் வெளியே இருந்தபோது மதகுருவாக வேலை பார்த்தவர்கள். தினம் மூன்று முறை இம்மாதிரி கூட்டங்கள் நடத்த வசதி இருக்கிறது.

    மேலும் வாரம் ஒரு முறை – வெள்ளிக்கிழமை சூரியன் மறைந்ததிலிருந்து சனிக்கிழமை சூரியன் மறையும்வரை – யூதர்கள் வேலை செய்யாத விதியைக் கடைப்பிடிக்கிறார்கள். இந்த விதியைக் கடைப்பிடிக்கவும் யூதர்களுக்கு இந்தச் சிறையில் அனுமதி உண்டு. யூதர்கள் பாஸோவர் (Passover) என்று ஒரு பண்டிகையைக் கொண்டாடுவார்கள். எகிப்திலிருந்து யூதர்களின் தலைவரான மோசஸ், அவர்களை எகிப்து அரசனின் அனுமதியோடு கானான் தேசத்திற்கு அழைத்துச் சென்றபோது அரசன் மனம் மாறி அவர்களை மறுபடி சிறைப்பிடிக்க முயன்றபோது, அவர்கள் அவசர அவசரமாகத் தயாரித்த உணவுகளைத் தங்களோடு எடுத்துச் சென்றார்களாம். அந்த உணவுகளை இப்போதும் பாஸோவர் அன்று சாப்பிடுகிறார்கள். இந்த உணவுகளைச் சிறையிலேயே தயாரித்துக்கொள்வதற்கும் அங்கு வசதி இருக்கிறதாம்.

    கோஷர் இறைச்சி, தினந்தோறும் மூன்று முறை வழங்கப்பட்டாலும் மௌனம் இருக்கும் சனிக்கிழமையன்றும் பாஸோவர் தினத்தன்றும் அந்தத் தினங்களுக்கு உரிய உணவுகளைச் சமைத்துக்கொள்ள வசதி இருக்கிறது. யூதர்கள் அணியும் தலைக்குல்லா, அவர்கள் அருந்தும் ஒரு வகைப் பானம், ஒரு வகையான ரொட்டி ஆகியவையும் இவர்களைப் பார்க்க வருபவர்களைச் சந்திக்கும் அறையில் விற்கப்படுகின்றனவாம். அவை கொஞ்சம் விலை அதிகம் என்றாலும் சிறையில் கிடைக்கிறதே என்று இந்தச் சிறையில் இருக்கும் யூதர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.

    இவ்வளவு வசதிகள் இருந்தாலும் இந்தச் சிறை ஒன்றும் பிக்னிக் போகும் இடமல்ல என்கிறார், இங்கு பதினெட்டு மாதங்களைக் கழித்த ஒரு யூதர். ஒவ்வொரு நாள் காலையும் ஆறு மணிக்கு அங்குள்ளவர்களின் எண்ணிக்கையைப் பட்டியல் போடும்போது எல்லோரும் எழுந்திருக்க வேண்டும். சிறைக் காவலாளிகள் எந்த நேரம் வேண்டுமானாலும் கைதிகளின் அறைகளுக்குள் வரலாம். அந்தரங்கம் கிடையாது. குறட்டை விடும் பலருக்கு அருகில்தான் தூங்க வேண்டும் என்றால் அதைத் தவிர்க்க முடியாது. மதவழிபாட்டைப் பின்பற்றுவதால் இந்தக் கஷ்டங்களை ஓரளவு தாங்கிக்கொள்ள முடிகிறதாம். இப்படி இந்தச் சிறையில் மத சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு முதலிடம் கொடுக்கிறார்கள். மற்ற சிறைச்சாலைகளில் நிலைமை நேர் எதிர்.

    இங்குள்ள யூதர்களில் பலர், பெரிய பதவிகளில் இருந்தவர்கள். உதாரணமாக பலர் டாக்டர்கள், வழக்கறிஞர்கள், நிதி ஆலோசகர்கள், வணிகர்கள், மதகுருக்கள். இந்த மதகுருக்கள் பலர், பல வகையான மோசடிகள் புரிந்திருக்கிறார்கள். மதகுருக்கள் சிலருக்கு யூதர்களின் வேதமான தோராவின் உரையான டால்முட் (Talmud) தலைகீழ்ப் பாடம். ஆனாலும் எப்படி இவ்வகையான குற்றங்கள் புரிந்தார்கள் என்று தெரியவில்லை. இப்படிக் குற்றங்கள் புரிந்தவர்களே சிறைக்கு வந்ததும் மனம் மாறி மற்றவர்களுக்கு வேதத்தைப் போதிக்க ஆரம்பிக்கிறார்கள்.

    அமெரிக்க சமூகம் படித்த, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வசதியானவர்கள் செய்யும் குற்றங்களைக் (white collar offences) கண்டித்து அவர்களையும் சிறைக்கு அனுப்பித் தண்டிக்கிறதே என்ற வியப்பு ஒரு பக்கம். தங்கள் மதத்தின் வேதங்களைக் கரைத்துக் குடித்தவர்களும் பெரிய பெரிய ஊழல்களும் பணம் சம்பந்தப்பட்ட மோசடிகளும் புரிந்திருக்கிறார்களே என்ற வியப்பு இன்னொரு பக்கம். வேதங்களை முழுமையாகப் படித்துவிட்டு இவர்களால் எப்படி இப்படிப்பட்ட குற்றங்களைப் புரிய முடிகிறது? பின்னால் சிறையில் மறுபடி எப்படி மத போதகர்களாக மாற முடிகிறது? அங்கும் இவர்களைப் பின்பற்றுவதற்கு பலர் இருக்கிறார்களே. இவற்றையெல்லாம் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது.

    Share