பாகிஸ்தான் மத்தியஸ்தம்: இந்தியாவின் தோல்வியா?
அண்ணாகண்ணன்
அமெரிக்கா – இரான் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து போர்நிறுத்தம் செய்தது, வியப்புக்கு உரியது; பாராட்டுக்கும் உரியதே. ஆனால், இதை இந்தியாவின் தோல்வி என்று சிலர் எழுதியதைப் பார்க்கிறேன். பாகிஸ்தானின் ஆக்கப்பூர்வமான, பொறுப்பான செயலைக் கண்டு இந்தியாவும் மகிழ்வே அடையும். பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகளை மட்டுமே இந்தியா எதிர்க்கிறது. இதர முனைகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் நட்பு நாடுகளே.
இந்தியா எதிலாவது வெற்றி பெற்றால், அது பாகிஸ்தானின் தோல்வியாகக் கருதப்படுவதில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் சம வலிமை பெற்ற நாடுகளும் இல்லை. எனவே எந்த வகையிலும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியதில்லை.
கிரிக்கெட்டிலும் இதர விளையாட்டுகளிலும் இதே போல், இந்தியாவும் பாகிஸ்தானும் மோதினால் பரம வைரிகள் என்று வர்ணிக்கிறார்கள். விளையாட்டில் நாம் அவ்வாறு கருத வேண்டியதில்லை. கருதவும் கூடாது.
பாகிஸ்தானைப் போல் இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்திருக்கக் கூடாது என்று சிலர் கேட்கலாம். இதே கேள்வியைச் சீனம், ரஷ்யா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் எனப் பல நாடுகளையும் நோக்கிக் கேட்கலாம். இதில் சீனமும் ரஷ்யாவும் தங்கள் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஹார்மஸ் நீரிணையைத் திறக்கும் ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் தீர்மானத்தை முறியடித்தன. இரானுக்கு அருகில் இருக்கும் வளைகுடா நாடுகளைப் பார்த்தும் கேட்கலாம். அமெரிக்காவுடன் நெருக்கமாக இருப்பதே இப்போதைக்குப் பாகிஸ்தானின் வலிமை. அமெரிக்கா சொல்வதைத்தான் பாக் செய்யும். இந்த மத்தியஸ்தம் கூட, அமெரிக்காவின் மறைமுக முன்னெடுப்பாக இருக்கலாம்.
எனவே, இப்படி எல்லாம் ஏன் நடக்கவில்லை என்று பேசுவதை விட, நடந்ததைக் குறித்துப் பேசுவதே பொருத்தமானது. பாகிஸ்தான் பொறுப்புடன் நடப்பதை நாம் வரவேற்க வேண்டும். ஊக்குவிக்க வேண்டும். இது அரிதாகத்தான் நடக்கிறது.
