Tag: ரமணி

  • ’மம்மி’யாரின் மறுமகள்!

    ’மம்மி’யாரின் மறுமகள்!
    சிறுகதை
    ரமணி

    ம்மா, உன் மாமியார்-மாமனார் உன்னை ஆட்டிவெச்சது மாதிரி நான் ஆகவிடமாட்டேன்”, என்றேன் நான் உறுதியான குரலில்.

    “அதெல்லாம் போன தலைமுறை ஹேமா! நீயும் மாப்பிள்ளையும் ஐ.டி.கம்பெனில வேலை பார்க்கறதனால உங்க மாமியார்-மாமனார் நிச்சயம் அட்ஜஸ்ட் பண்ணிப்பா. அவாளுக்கு ஒரே குழந்தை, அதுவும் பிள்ளைங்கறதால, உன்னை சொந்தப் பொண் மாதிரி பார்த்துக்கறோம், கவலை வேண்டாம்னு கல்யாணம் முடிஞ்சு ஊருக்குக் கிளம்பறச்ச சொன்னால்லயா? அப்புறமென்ன?”

    எனக்கு அம்மா பேரில் முன்பிருந்த எரிச்சல் இப்போது சிரிப்பாக மலர்ந்தது.. என் பிறந்த வீட்டிலேயே சொந்தப் பெண்ணான நான்தான் எல்லா வீட்டு வேலைகளையும் அதுநாள் வரை செய்துவந்தேன்! என் தங்கை வசந்தாவும் ஒரே தம்பி சந்துருவும் தம் ’மம்மி-டாடி’யின் செல்லக் குழந்தைகளாக வளர்ந்தனர். ’நாளைக்கு மாமியார் ஆத்துல இடிச்சுக் காட்டுவா’ன்னு சொல்லியே என்னிடம் எல்லா வேலைகளையும் வாங்கி என்னைக் ’கொடுமைப் படுத்திய’ என் தாயார் இப்போ நாக்கு மேல பல்லைப்போட்டுப் பேசறா!

    “சொந்தப் பொண்ணா நீ என்னை ட்ரீட் பண்ணியே, அதுமாதிரி அவாளும் பண்ணினா நான் சும்மா இருக்கணுங்கறயா?”

    என் கேள்வி அம்மாவைச் சுட்டது அவள் முகத்தில் தெரிந்தது. “எல்லாம் உன் நன்மைக்குத்தான் பண்ணினேன். நீ எல்லா வேலையும் கத்துண்டு பொறுப்பா செஞ்சு பழகினாத்தானே நாளைக்கு உனக்குப் புக்காத்தில ஈஸியாகவும் பெருமையாவும் இருக்கும்? அப்பா-நான் ரெண்டு பேரும் ஸ்கூல் டீச்சரா இருந்து சம்பாதிச்சு உன்னைக் கஷ்டப்பட்டு இஞ்சினியரிங் டிகிரி படிக்கவெச்சதையும் நெனச்சுப்பாரு. சரி விடு, கல்யாணமாகி இந்த மூணு மாசத்தில உனக்கு அங்க எப்படி இருக்கு? அவாகிட்ட உனக்கு ஏதாவது குறை உண்டா?”

    “பெரிசா ஒண்ணுமில்லை. ஆனால், நான் சனி-ஞாயிற்றுக் கிழமைகள்ல மூணு வேளையும் சமையல் பண்ணிச் சுத்து வேலைகளையும் பார்த்துக்கணும்னு மாமியார் எதிர்பார்க்கறார்…”

    “நியாயம் தானே?”

    “என்ன நியாயம்? நானும் விஜய்யும் தினமும் போகவர ரெண்டு மணிநேரம் கம்பெனி கார்ல-பஸ்ல ட்ராவல் பண்றோமாக்கும்! அதைத் தவிரப் பத்து மணிநேரம் ஆஃபீஸ்ல அல்லல் படறோமாக்கும்! சனி-ஞாயிறு ரெண்டு நாள்தான் எங்களுக்கு ஓய்வு. சமயத்தில சனிக்கிழமை கூடப் போகவேண்டியிருக்கு. அந்த ரெண்டு நாள்ல நாங்க காலைல எழுந்துக்கறதுக்கே மணி ஏழு-ஏழரை யாயிறதில்ல! அப்புறம் எங்க சமையல் பண்றது? மாமியார் ஹௌஸ்வைஃப் தானே, பண்ணட்டுமே? நான்தான் சனி-ஞாயிறு ரெண்டு நாள்லயும் சாயங்கால காப்பி-டிஃபன், ராத்திரி டின்னர் ரெண்டும் பார்த்துக்கறேனே, அது போதாதா?”

    “உன் ஆத்துக்காரர் ஒண்ணும் சொல்லலையா?”

    “அம்மா கேட்டா நீ வீக்-என்ட் காலைலயும் சமைக்கணும்னு சொன்னார்.”

    “ரொம்ப மோசம்டீ! இந்தாத்துக்கு ஒரு மாட்டுப்பொண்ணு வந்தா அவள் அப்படிலாம் இருக்க நான் விடமாட்டேன்! ஐ.டி.-வேலைக்குப் போயிண்டே நீ இந்தாத்துல பெரும்பாலும் தினமும் ராத்திரி சமையல் பண்ணுவியே? புக்காத்தில வாரத்தில ரெண்டு நாளாவது எல்லாத்தையும் நீயும் உன் புருஷணும் பார்த்துண்டு அவா ரெண்டு பேர்க்கும் ரெஸ்ட் தர வேண்டியதுதானே? உங்க மாமியார் ஹவுஸ்வைஃப்-னாலும் மாமனார் ஒரு யூ.ஜி.ஸி. கல்லூரி முதல்வரா இருந்து ரிடயர் ஆனவர்தானே? மாமியார் தினமும் ரெண்டு வேளையும் சமையல் பண்ணிப் போடறா, மாமனார் உங்க ரெண்டு பேர்க்கும் காலை ப்ரேக்ஃபாஸ்ட் பரிமாறி, மத்யானம் சாப்பாட்டைக் கட்டிக் கொடுத்தனுப்பறார்னு சொன்னேல்ல, அதுமாதிரி யார் செய்வா சொல்லு? அவா அப்படி அட்ஜஸ்ட் பண்ணிண்டு இருக்கற போது நாமளும் கொஞ்சம் கிவ்-அண்ட்-டேக்-கா இருக்கணும். அப்பதான் ஏதும் பிரச்சனை இருக்காது.”

    “அவா அட்ஜஸ்ட் பண்ணிண்டிருக்கறது எனக்கு ரொம்பத் திருப்தி, சந்தோஷம் தாம்மா? ஆனாலும் நான் முதல்லயே சொன்ன மாதிரி, உன்னை உன் இன்-லாஸ் ஆட்டிவெச்ச மாதிரி என்னை இவா ஆட்டிவெச்சிடக் கூடாதுன்னுதான் நான் இவ்ளோ ஜாக்கிரதையா இருக்கேன். என் அதிர்ஷ்டம் விஜய்யும் எனக்கு சப்போர்ட் பண்றார். கொஞ்சம் இடம் கொடுத்தா எல்லாம் விஸ்வரூபம் எடுத்திரும்னு எனக்கு நல்லாத் தெரியும்.”

    “நீ சொல்றது ஒருவகைல சரிதான். இருந்தாலும் நமக்கும் கொஞ்சம் மனசாட்சி வேணும். நீங்க ரெண்டு பேரும் ஒரே கம்பெனி, காலைல எட்டரை-மணிக்குக் கார்ல ஒண்ணா போயி சாயங்காலம் பெரும்பாலும் ஏழரை மணிக்குக் கம்பெனி பஸ்ல திரும்பி வர்றேள் இல்லையா? வரும்போது ஆத்துக்கு வேண்டிய கறிகாய்-பழம், ஸ்நாக்ஸ் இது மாதிரி வாங்கிண்டு வரலாம் இல்லயா?”

    “ஏழெட்டு தரம் மாமியார் சொல்லிப் பார்த்தார்! டைட் ஆஃபீஸ் வேலல எப்படா வீட்டுக்கு வந்து விழுவோம்னு இருக்கறதால நாங்க பெரும்பாலும் இந்த வேலையை மறந்துடுவோம்! அதான் தினமும் மாலை மாமியார் கோவிலுக்கும், மாமனார் ஸ்கூட்டரை எடுத்துண்டு நண்பர்களைப் பார்க்கப் போறேன்னும் போறா இல்ல, அவாளே கறிகாய்-பழம்லாம் வாங்கட்டுமே?”

    “அப்ப நீங்க ரெண்டு பேரும் ஆத்துக்குன்னு என்னதான் செய்யறேள்?”

    “இப்ப நீதான் மாமியார் மாதிரி பேசறே! உனக்கு ஒருத்தி மருமகளா வந்தா அவள் பாடு பாவம்தான்! நாங்கதான் ரெண்டு பேரும் கைநிறைய சம்பாதிக்கறோமே? வேற என்ன செய்யணும்?”

    “உங்க சம்பளத்தை நம்பியா அவா இருக்கா? உங்க மாமியார்க்கு அவா குடும்பப் பூர்வீக சொத்திலேர்ந்து பணமா ஒரு பெரிய தொகை பங்கா வந்தததும், உங்க மாமனார்க்குக் குறைஞ்சது மாசம் முப்பதாயிரம் ரூபாய் பென்ஷனா வரும்னும் கல்யாணத்துக்கு முந்தியே உங்க அப்பா விசாரிச்சு வெச்சிருக்கார். இன்னிக்கு தேதில மாடியும் கீழுமா ஒரு பெரிய வீட்ல, சுத்தீவர தோட்டத்தோட, எல்லா வசதிகளும் இருக்கற அவா வீட்ல நீங்க இருக்கறதே உங்களுக்கு ஒரு பெரிய கொடுப்பினை. மாடி வீட்டுக்கு மாசம் பதினஞ்சாயிரமும், அது போக அவாளுக்குக் குரோம்பேட்ல இருக்கற மூணு-பெட்ரூம் ஃப்ளாட்லேர்ந்து வேற மாசம் பதினஞ்சாயிரமும் வாடகை வரது. அதனால, பணத்தைப் பொறுத்தவரைக்கும் உங்க சம்பாத்யத்தை நம்பி அவா இல்லேன்னு நல்லாத் தெரிஞ்சுக்கோ…”

    நான் ஒரு மருமகளாக நடந்துகொள்ளும் விதம் எனக்குச் சரியென்றே பட்டது. என்னை இவர்கள் ஆட்டிவைக்க விடமாட்டேன் என்று விஜய்யிடம் சொன்னபோது அவரும் அதை முழுமனதாக ஆமோதித்தார். என் மாற்றுப் பெற்றோர்களுக்கு அப்படியொன்றும் வயதாகி விடவில்லையே? மாமனார் அறுபத்திரண்டு வயதிலும் மாமியார் ஐம்பந்தேழு வயதிலும் விச்சாகத்தானே இருக்கிறார்கள்! தினமும் மூன்று வேளையும் சமையல்-டிஃபன் பண்ணுவதை மாமியார் உவந்தே செய்வதாக எனக்குத் தோன்றியது. நான் முடிந்தபோது உதவுவதிலும் அவர்கள் ஒன்றும் குறைகாணவில்லை என்றும் பட்டது.

    *** *** ***

    ல்யாணமாகி ஒன்பதாம் மாதம் பிறந்த வீடு சென்ற போது அம்மா தன் தொணதொண விசாரிப்பை வேறுவிதமாகத் தொடங்கினாள்.

    “கல்யாணமாகி மாசம் ஒம்பதாறது. காலா காலத்தில ஒரு பிள்ளையோ பொண்ணோ பெத்துக்க வேண்டியதுதானே? ஏதாவது விஶேசம் உண்டா? இதப்பத்தி ஒங்க மாமியார் என்ன சொன்னா?”

    “கல்யாணமாகி வந்த முதல் வாரமே மாமியார் நாங்க நாலு பேரும் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் சாப்பிடும்போது சொன்னார்: ’அடுத்த ஒரு வருஶத்தில ஒரு குழந்தையைப் பெத்துக்கோங்கோ! ஃபாமலி ப்ளானிங் அது-இதுன்னு தள்ளிப் போடாதீங்கோ. வேணும்னா ரெண்டாவது குழந்தைக்கு இடைவெளி விட்டுக்கலாம். காலாகாலத்தில பெத்துண்டாதான் எங்களால பேரனையோ பேத்தியையோ சீராட்டி வளர்க்க முடியும்…’”

    “நாங்க ரெண்டு பேரும் ஒப்புக்கு சரின்னு சொன்னோமே தவிர, எங்களுக்கு ஒரு வருஶத்திலேயே பெற்றோர் ஆறதுல இஶ்டம் இல்லை. ஆகட்டுமே ரெண்டு மூணு வருஶம், இப்பவே என்ன அவசரம்? அப்படி இவாளால பாத்துக்க முடியலேன்னா ஒரு பேபி-சிட்டரை ஏற்பாடு பண்ணிக்கறோம்!”

    “வாயாடி! இதுமாதிரி மாமியார்ட்ட சொன்னயா?”

    “நான் சொல்லலை, விஜய்தான் சொன்னார். அவாளுக்கு மூஞ்சி ஒரு மாதிரி ஆகி அதுக்கப்பறம் இதுபத்திப் பேச்சை எடுக்கல!”

    “ஸோ, உங்க தினப்படி வாழ்க்கை, நீ-மாப்பிள்ளை ஒரு துருவம், மாமியார்-மாமனார் ஒரு துருவம்னு ஒருத்தருக்கொருத்தர் அன்யோன்னியமா பேசிக்காம ஓடறதா?”

    “அப்படீல்லாம் இல்லைப்பா! நீங்க ரெண்டு பேரும் அனாவசியமாக் கவலைப்படறேள்.”

    “உங்க தினசரி வாழ்க்கையைப் பத்திச் சொல்லு, காலைல எழுந்ததுலேர்ந்து ராத்திரி தூங்கற வரைக்கும்…”

    “விஜய் கார்த்தால ஏழு மணிக்குதான் எழுந்திருப்பார். நான் ஆறு மணிக்கே எழுந்து குளிச்சு ஸ்வாமி ரூமை எட்டிப் பார்த்து சத்தமா ரெண்டு ஸ்லோகம் சொல்லிட்டு நெத்தில குங்குமம்-விபூதி கீத்தோட வந்து மாமியாரைக் கொஞ்சம் அசத்துவேன்! அவர் ஒரு சின்னப் புன்னகையோட எனக்கு காப்பி கலந்து தர்றதுக்குள்ள நான் எங்க லஞ்ச்-பாக்ஸ் தேய்ச்சு ரெடி பண்ணி, ப்ரேக்ஃபாஸ்ட் தட்டெல்லாம் எடுத்து டைனிங் டேபிள் மேல வெச்சிருவேன். சமயத்தில ரொட்டித் துண்டுக்கெல்லாம் வெண்ணை-ஜாம் தடவி வைப்பேன். இதுக்குள்ள மாமனார் சந்தியை முடிச்சிண்டு வேஷ்டிக்கு மேல துண்டைக் கட்டிண்டு சாப்பாடு கட்ட வருவார். நாங்க ரெண்டு பேரும் எட்டு மணிக்கு டிஃபன் பண்ணிட்டு சரியா எட்டரை மணிக்கு வண்டி வந்து கிளம்பிப் போவோம்.”

    “சாயங்காலம்?”

    “அதுதான் கொஞ்சம் ட்ரிக்கி! கம்பெனி பஸ்ஸைப் பிடிச்சுக் கேம்ப் ரோடுல இறங்கிப் பத்து நிமிஷம் நடந்து ஏழறை மணிக்கு ஆத்துக்குள்ள நுழையற போதே அப்பாடான்னு இருக்கும்! மாமியார் ஹால்ல டீவியை ஓடவிட்டு சமையல் கட்டுல இருப்பார். தினமும் சாயங்காலம் ஸ்கூட்டர்ல ஊர் சுத்தற மாமனார் அவா ரூம்ல உக்காந்து லேப்டாப்ல உலகத்தச் சுத்திண்டிருப்பார்! நாங்க தினமும் ஆஃபீஸ் ஃபுட்கோர்ட்ல நாலு மணி வாக்ல காபி-டிஃபன் சாப்ட்ருவோம். அம்மா-அப்பாட்ட ஹலோ சொல்லிட்டு விஜய் ஸ்டடி ரூம்ல நுழைஞ்சார்னா எட்டரை மணிக்கு சாப்பிடும் போதுதான் வருவார். எனக்கும் தினமும் ஃபேஸ்புக்-ல அரட்டை அடிக்கணும்! மாமியார்ட்ட ஏதாவது வேலை இருக்கான்னு கேட்டாத் தலைல கட்டிடுவார்னு தெரியும்! கொஞ்ச நேரம் குட்டிபோட்ட பூனை மாதிரி ஹால்ல குறுக்கும் நெடுக்குமா நடந்திண்டிருப்பேன்! அப்புறம் நைஸா நானும் ஸ்டடி ரூம்ல என் லேப்டாப் பார்த்திட்டு எட்டே-கால் மணிக்கு எங்க நாலு பேர்க்கும் சாப்பிடத் தட்டுவெச்சு, மாமியார் சமைச்சு வெச்ச பண்டங்களை டேபிள்ல கொண்டுவைப்பேன். சாப்பிடும் போது எல்லோரும் சிரிச்சு நல்லாத்தான் பேசிண்டிருப்போம். சாப்டதுக்கப்புறம் மாமியார் டீவில மூழ்கிடுவார். சமயத்தில வீட்ல பொதுவா இருக்கற டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்ல மேய்வார். நானும் விஜய்யும் எங்க லேப்டாப்பை எடுத்துண்டு ஒம்பதரை மணிக்கு பெட்ரூம் நுழைஞ்சு கம்ப்யூட்டர்ல இங்கிலிஶ் டீவி சீரியல் பார்த்துட்டு பத்தரை மணிக்குத் தூங்குவோம். அவா ரெண்டு பேரும் எப்போ தூங்கறா எப்போ எழுந்திருக்கறான்னு நாங்க குறிப்பா கவனிச்சதில்லை!”

    “நீ ரொம்ப லக்கி அக்கா! உனக்கு அவர் மாமியார் இல்லை; மம்மி மாதிரி பார்த்துக்கறதால ’மம்மி’யார்தான்!”, என்றாள் என் தங்கை.

    “அந்த ’மம்மி’யார்க்கு நீயும் ஒரு மாட்டுப் பொண்ணா இல்லாமா ’மறுமகளா’ நடந்துக்கறாயான்னு அப்பப்ப நிச்சயம் பண்ணிக்க”, என்றான் என் தம்பி.

    இவர்களுக்கு எங்கிருந்து இவ்வளவு வாய் வந்தது என்று எனக்கு ஆச்சரியாமாக இருந்தது. “அது எனக்குத் தெரியுமே! இவ்ளோ நாள் ஜாக்கரதையா இருந்திட்டேன் இல்ல? இனிமே கொஞ்சம் நல்ல பொண்ணாப் படம்காட்ட வேண்டியதுதான்!”

    *** *** ***

    டுத்த மூன்று மாதத்தில் என் ’மம்மி’யார்-மாமனார் கொஞ்சம் தம் சுயரூபத்தைக் காட்டுவதுபோல் தெரிந்தது! ஒரு சனிக்கிழமை மதியம் நாங்கள் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது கூடத்தில் குரல் கேட்டு விழித்துக்கொண்டேன். மெல்லிய குரலில் அவர்கள் பேசிக்கொண்டாலும் எனக்குத் தெளிவாகக் கேட்டது.

    “போன மாசம் ரெண்டு நாள் நாம மதுரைக்கு ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தபோது இவா ரெண்டு பேரும் வீட்ல சமைக்கவே இல்ல, பார்த்தேளா? கேட்டதுக்கு விஜய் சொன்னதா அவள் என்ன சொன்னா, ஞாபகம் இருக்கா? தினமும் வீட்டுச் சாப்பாடுன்னு போர் அடிச்சதுனால கேட்டரிங் ஆர்டர் பண்ணி காலம்பற-மத்யானம் சாப்ட்டாளாம். ராத்திரிக்கு ஜாலியா ஹோட்டல் போய் நார்த் இண்டியன் டிஶ்ஶஸ் சாப்டாளாம்.”

    “எனக்கும் அது பிடிக்கல பத்மா! இந்தப் பயலும் தோட்டத்துக்குத் தண்ணி ஊத்தாம செடியெல்லாம் வதங்கிப் போய் நான்தான் சரிபண்ணினேன்!”

    “ஆமாம், அவள் நித்யமல்லி, அரளிப் பூக்கூடப் பறிக்கலை! ரெண்டு வேளையும் ஸ்வாமி விளக்கக் ஏத்தினேன்னு சொன்னதுகூட சந்தேகம்தான்! இப்படிக் கொஞ்சம் கூட வீட்டுப் பொறுப்பு, குடும்பப் பொறுப்பு இல்லாம இவா இருக்கறதுக்கு ஒரு வழி பண்ணியே ஆகணும்!”

    “என்ன செய்யலாம் சொல்லு?”

    “என் சமையலை தினமும் சாப்டறது அவாளுக்கு போர் அடிக்குதில்ல? நம்ம குரோம்பேட் வீடுதான் இப்போ காலியா இருக்கே? அங்க போயி கொஞ்சநாள் தனியா இருந்துக்கோங்கோன்னு அனுப்சிடலாமா?”

    “இவா கொஞ்சநாள் தனியா இருந்து பழக வேண்டியதுதான். ஆனால் குரோம்பேட்ல கம்பெனி பஸ்ல இறங்கி ஆத்துக்கு வர ரொம்ப தூரம் நடக்கணுமே? அதனால ஒண்ணு செய்வோம். இவாள இந்தாத்தில தனியா விட்டுட்டு நாம அங்க போய்டலாம். ஒரு வருஷம் இருந்து இவா எப்படி சமாளிக்கறான்னு பார்ப்போம். நாளைக்குக் காலைல இதுபத்தி பேசி முடிவுசெய்வோம்…”

    எனக்குத் திகீரென்றது. அன்று மாலை அவர்கள் இருவரும் ஒரு கல்யாண ரிஸப்ஶன் சென்றுவிட, விஜய்யிடம் விஶயத்தைச் சொல்லி ஆலோசித்தேன். பேசாமல் அவர் தன் மம்மி-டாடிக்கு அவர்கள் எதிர்பார்க்கும் மகனாகவும், நான் என் ’மம்மி’யார்-மாமனாருக்கு ’மறுமகள்’ என்றும் மாறினால்தான் இதுவரை கிடைத்த சுகத்தை அனுபவிக்க முடியும் என்று தோன்றியது.

    அன்று இரவு அவர்கள் வீடு திரும்ப இரவு மணி பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் எல்லோரும் காலை எட்டுமணி வாக்கில் எழுந்தால் போதும் என்று சொல்லிவிட்டு இருவரும் தூங்கச் சென்றனர்.

    *** *** ***

    றுநாள் காலை என் ’மம்மி’யார்-மாமனார் எழுந்த போது சமையல் கட்டில் குக்கரின் விசில் கேட்டு அசந்துவிட்டனர்! ஸ்வாமி விளக்கேற்றி ஊதுபத்தி மணந்துகொண்டிருக்கப் பூவெல்லாம் பறித்து ஒவ்வொரு படத்திற்கும் வைத்திருந்தேன். கூடத்தில் நடு விளக்குச்சரத்தில் இருந்த எம்.பி.3 பிளேயர் மெதுவாக உமா மோகன் குழுவினர் பாடும் ஸ்தோத்திரங்களை ஒலித்துக் கொண்டிருக்க, நான் ஒரு தட்டில் இரண்டு டபரா-டம்ளர்களில் காப்பியின் மணம் மூக்கைத் துளைக்க, ஹால் சோஃபாவில் அவர்களை அமர்த்திக் கொடுத்தேன். விஜய் ஆழ்துளைக் கிணற்று மோட்டரைப் போட்டுவிட்டு, ஹோஸ் பைப்பால் தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.

    “போன மூணு மாசமா நீ தூரமா இருந்து குளிக்கலை போலிருக்கே? ஏதாவது விசேஶமா?”

    “அப்படித்தான் போலிருக்கும்மா!”

    “சரி, சாயங்காலம் நம்ப ஃபேமலி லேடி டாக்டர் சாந்தாட்ட போய் செக் பண்ணிப்போம். விஜய்யும் கூட வரட்டும்.”

    *** *** ***

    Share
  • தெய்வ தரிசனம்: 07. மாதவன் மகிமை

    ரமணி

    07. மாதவன் மகிமை

    (குறும்பா)

    மாதவனின் பேர்சொல்லும் பேறிதே
    மாதவத்தின் பலனென்றே ஆவதே
    . முற்பிறப்பின் தவமென்றே
    . இப்பிறப்பின் நலமென்றே!
    வேதனைகள் தீர்த்துவைக்கும் பேரிதே. … 1

    சராசரியாம் மனிதனுமே அறியவே
    பராசரராம் பட்டரவர் உரையிலே
    . மாதவனின் பேர்விளக்கம்
    . யாதெனவே வேர்விளக்கம்
    பிரார்த்தனையாம் நாமமெனத் தெரியுமே. … 2

    மாவென்னும் அட்சரத்தின் மௌனமே
    தவென்னும் அட்சரத்தின் தியானமே
    . மோனத்தில் உருவற்ற
    . தியானத்தைத் தருவிக்க
    வவென்னும் அட்சரத்தின் யோகமே. … 3

    [பராசர பட்டரின் விஷ்ணு ஸஹஸ்ரநாம உரை]

    மதுவித்தை சாதனையில் ஆதவனே
    மதுவென்றே சங்கரரின் போதனையே
    . உண்ணாத அமுதாகவே
    . கண்ணாலே நமதாகவே
    அதுவென்னும் பரம்பொருளாம் மாதவனே. … 4

    [ஆதிசங்கரரின் சாந்தோக்ய உபநிடத உரை]

    ஹரிவம்சம் சொல்லுகின்ற பொருளாமே
    பரமாத்ம ஞானத்தின் அருளாமே
    . பேரறிவின் போதனையாய்
    . வேரெனவே மாதவனாம்
    உரையெல்லாம் இப்பொருளில் உருவாமே. … 5

    அஞ்சுபுலன் நம்சித்தம் ஆட்கொள்ளும்
    சஞ்சரிக்கும் மனதையதன் மேற்தள்ளும்
    . வெளியுணர்வில் ஈடுபடும்
    . நளிவுள்ளம் பாடுபடும்
    தஞ்சமெனப் பலநிலைகள் மேற்கொள்ளும். … 6

    [நளிவுள்ளம் = செருக்கினைக் கொள்ளும் உள்ளம்]

    புறவுணர்வைக் கட்டுதற்கு மௌனமாம்
    அறிவதனில் அமிழ்ந்திருக்க தியானமாம்
    . நூலறிவால் ஏற்பட்ட
    . வாலறிவின் பாற்பட்டு
    பொறியற்று நிலைநிறுத்த யோகமாம். … 7

    [வாலறிவு = பேரறிவு, உண்மை]

    மாவென்று திருமகளின் பேரதுவே
    மாவென்னும் முதலெழுத்தின் வேரதுவே
    . செல்வமெலாம் திரமாக
    . செல்வதெலாம் அறமாக
    வாவென்றால் வரமருளும் சீராமே. … 8

    –ரமணி, 19/11/2015, கலி.03/08/5116

    உதவி:
    மாதவன் என்ற சொற்பொருள்
    https://ta.wikipedia.org/wiki/மாதவன்_என்ற_சொற்பொருள்
    purAnic encyclopedia: vETTam maNi

    *****

     

    Share
  • தெய்வ தரிசனம்: 06. நாராயணா என்னும் நாமம்

    தெய்வ தரிசனம்

    06. நாராயணா என்னும் நாமம்

    images
    (குறும்பா)

    நாராய ணாவென்னும் பேரினிலே
    வேராக உள்ளிருக்கும் சீரினிலே
    . ஏறிநிற்கும் பொருளெல்லாம்
    . ஊறிநிற்கும் அருளெல்லாம்
    ஆராயப் புகுவோமிப் பாவினிலே. … 1

    நரவென்னும் சொற்பொருளாய் ஆன்மாவாம்
    நரத்தினின்று வருவதெலாம் நாராவாம்
    . அயனமெனில் இருப்பிடமாம்
    . வியனுலகின் பிறப்பிடமாம்
    உருவத்தின் உள்ளீடாய் நாரணனாம். … 2

    நரம்தந்த வெளியீடே வான்வெளியாம்
    விரிகாய வெளியீடாய்த் தான்வளியாம்
    . காற்றதுவே தீயாகி
    . நீராகி நிலமாகும்
    நரம்விளைத்த பேரதுவே நாராவாம். … 3

    நாரமதே நாரணனின் உறைபொருளாம்
    காரணோத கம்சொல்லும் மறைபொருளாம்
    . அஞ்சுபூதம் இயல்தனியே
    . அப்புவெனும் பெயரிலினிலே
    பேரணவும் படைப்பாகும் இறைபொருளாம். … 4

    [பேர்-அணவும் = பெயர் பொருந்தும்]

    உயிருள்ள உருவுள்ளே நாரணனே
    உயிரற்ற உருவுள்ளே நாரணனே
    . உயிருள்ளதோ இல்லாததோ
    . பெயருள்ளதோ இல்லாததோ
    பெயரற்ற உள்ளமைதி நாரணனே. … 5

    நீராடும் போதினிலே நாமமென
    நாராய ணன்நாமம் சேமமென
    . எட்டெழுத்து மந்திரமே
    . கட்டுமனம் தந்திடுமே
    வேரோடும் செய்கையெலாம் ஏமமென. … 6

    [ஏமம் = களிப்பு, இன்பம்]

    நாரணனின் நினைவுவரும் இறுதிமூச்சே
    வேரறுக்கும் பிறப்பென்றே உறுதியாச்சே
    . கருமமுறும் சோதனையோ
    . கருமமறு சாதனையோ
    சீரிதுவே உயிரொன்றின் அறுதியாச்சே. … 7

    ஓம்நமோ நாராய ணாயவென்றே
    போம்வினைப் பாராய ணமாமென்றே
    . எட்டெழுத்து மந்திரமே
    . உட்டுளையாய் வந்துறினே
    நாம்மேன்மை கொள்வதற்கா தாயமென்றே. … 8

    [உட்டுளை = உள்+துணை]

    –ரமணி, 12/11/2015, கலி.26/07/5116

    *****

     

    Share
  • தெய்வ தரிசனம்

    -ரமணி

    05. கேடுநீக்கும் கேசவன்

    (குறும்பா)

    கேசியெனும் தானவனைக் கொன்றேநீர்
    கேசவனாம் பேர்தன்னைக் கொண்டீரோ?
    . குழலழகர் கூந்தலதே
    . அழகெல்லாம் ஏந்துவதே
    நேசமுடன் போற்றுவமே இன்றேநாம்!… 1

    [தானவன் = அசுரன்]

    சடைமுடியே ராகவனின் தலையினிலே
    பிடரிமயிர் நரசிம்மம் கலையெனவே
    . சிக்கமெலாம் மும்மூர்த்தி
    . சக்தியென இம்மூர்த்தி
    இடையூறு நீக்கும்தாள் தலையிதுவே!… 2

    [சிக்கம் = உச்சி மயிர்]

    கண்ணனுக்கோ வண்ணமயில் கேசந்தான்
    எண்ணமெலாம் மாயவனின் நேசந்தான்
    . காதலிப்பர் கோபியரே
    . ஆதுரத்தில் பாபியரே
    கண்ணன்மேல் நம்நெஞ்சில் பாசந்தான்!… 3

    [ஆதுரம் = பரபரப்பு, வியாதி]

    ககரமெனில் பிரமனவன் பேராமே
    அகரமதோ விட்டுணுவின் பேராமே
    . ஈசனுரு கொண்டவரும்
    . நேசமுடன் ஒன்றுவரே
    பகவனிவர் பரம்பொருளாம் சீராமே!… 4

    தண்ணுலவும் கேசமெனும் கிரணமிதே
    மண்டலத்தில் உள்ளுறையும் அருணமிதே
    . கொண்டிடிவார் அவதாரம்
    . விண்டிடுவார் பவரோகம்
    கொண்டல்வண் ணன்போற்றத் தருணமிதே!… 5

    கேசவனே கேடுகளை நீக்குபவர்
    கேசவனே கேசரியாய்த் தாக்குபவர்
    . பண்ணுறுமே பூவுறுமே
    . கண்நிறுத்த நாவறுமே
    கேசவனின் கேசம்தாள் நோக்குவமே!… 6

    *****

     

    Share
  • வெண்பாவில் விடுகதைகள்

    வெண்பாவில் விடுகதைகள்

    ரமணி

    தமிழில் விடுகதைகளுக்குப் பஞ்சமே யில்லை. ஒருவரியில் இருவரியில் பலவரியில் என்று அவை ரத்தினச் சுருக்கமாகவோ வெற்றிலைப் பெருக்கமாகவோ காணப்படுகின்றன. முதலில் புதிராகவும் விடையை அறிந்தபின் வியப்பாகவும் காணும் விடுகதைகளை வெண்பாக்களில் சேகரித்து எழுதுவோம். சின்னச் சின்ன விடுகதைகளைக் குறட்பாவில் எழுதலாம்.

    விடுகதை ஒன்றைக் குறட்பாவிலோ, மற்ற வகை வெண்பாவிலோ அமைக்கக் கீழ்வருவது போன்ற விதிகளை அமைத்துக்கொள்ளலாம்.

    1. குறட்பாவானால், பொதுவாக ஈற்றடியில் உள்ள மூன்று சீர்களில் ஒன்றில் விடை அமைய வேண்டும். வெண்பாவானால் விடை பொதுவாக ஒரு சீருக்குள் எந்தச் சீரிலும் அமையலாம். விடை மறைமொழியாக, சீரின் பெரும்பான்மை எழுத்துகளை வைத்துக் கண்டறிவதாக அமையும்.

    2. விடைச்சொல் சிதைவோ புணர்ச்சியோ உறாது அதுவாகவே அமைய வேண்டும். புணர்ச்சி தவிர்க்க முடியாத போது புணரும் எழுத்தை அடைப்புக் குறிகள் மூலமோ வேறு விதத்திலோ காட்டுதல் நலம்.

    3. விடைச்சொல் மறைமொழி யாவதால் அது மற்ற சீர்களுடன் இலக்கணத்தில் பொருந்தி நின்றாலும் பொருளில் பொருந்தாது நிற்குமாதலால் அதை இனங்கண்டு கொள்வது எளிதாகுமாறு அமைக்க வேண்டும்.

    4. விடைச்சொல்லைப் பலவிதமான மறைமொழிகளில் (encryption) கூறலாம். எவ்வித மறைமொழி உத்தியாயினும் விடை எளிதில் காண முடிவதாக இருக்கவேண்டும்.

    5. மறைமொழியும் பொருளுடன் அமைந்தால் விடை காணுவது சுவையான சிக்கலாக இருக்கும். பொருளில்லாதோ வேற்று மொழிச் சொல்லாகவோ அமைந்தாலும் தனித்து நின்று கண்பட்டு விடை காண வைக்கும்.

    6. சில மறைமொழி உத்திகள்:
    6.1. விடைச்சொல்லில் அதிக பட்சம் இரண்டு எழுத்துகளை மறையாக்கலாம், ஒற்றுகள் தவிர்த்து. ஒற்றுகளை மாற்றக்கூடாது.

    6.2. மறையாகும் எழுத்து விடையின் எழுத்தைச் சேர்ந்த இனமாக–குறிலெனில் குறிலாக, நெடிலெனில் நெடிலாக–இருக்கவேண்டும். அவ்வாறு வரும் குறில்/நெடில் தகுந்த முந்தைய அல்லது பின்வரும் எழுத்தாக அமைந்தால் விடைகாண எளிதாக இருக்கும். தள்ளியுள்ள எழுத்துகளாகவும் அமையலாம்.

    உதாரணமாக, ’பட்டு’ என்னும் விடைச்சொல்லை முன்பின் அடுத்துள்ள எழுத்துகள் மூலம் ’நட்டு, மட்டு, மிட்டு’ என்று அமைக்கலாம். தள்ளி வரும் எழுத்துகள் மூலம் ’கட்டு, முட்டு, மொட்டு’ என்று அமைக்கலாம்.

    6.3. விடைச்சொல்லின் எழுத்துகள் இடம் மாறியோ, ஒலி மாறியோ வரலாம். சான்று: ’சிவா’ என்பது ’வாசி’ அல்லது ’விசா’ என வரலாம்.

    6.4. இரண்டு எழுத்துகளை மறைக்கும் போது ஒன்றின் மறை அருகில் வருவதாகவும் மற்றது தள்ளி வருவதாகவும் அமைக்கலாம். சான்று: ’பெண்மணி’ என்பதைத் ’தண்பணி’ எனலாம்.

    6.5. இருசொல் விடைகள்:
    சற்றுக் கடினமான விடுகதைகளில் விடை மறைமொழியாக இரண்டு சீர்களில் இருக்கும். இவ்விரண்டு சீர்கள் வெண்பாவில் ஏதோவோர் அடியில் ஒன்றையொன்று அடுத்துவரும். இரண்டு சீர்களிலும் உள்ள எழுத்துகளில் ஒற்றுகள் தவிரித்து இரண்டு முதல் நான்கு எழுத்துகள் வரை மாறியிருக்கலாம். குறில் நெடில் ஒன்றுக்கொன்று மாறியும் வரலாம். சீரில் உள்ள எழுத்துகளில் பெரும்பாலானவற்றை வைத்து விடையைக் கண்டறிய வேண்டும். உதாரணமாக,

    எரியும் விளக்கில் எரிவதோ எண்ணை?
    எரியும் கிழக்குத் தெரு.

    இந்தக் குறட்பாவில் விடை மறைமொழி: கிழக்குத் தெரு; விடை: விளக்குத் திரி.

    6.6. வேறுவித உத்திகளைக் கையாளுவோர் அவற்றை இந்தப் பட்டியலில் சேர்க்கலாம்.

    *****

    வெண்பாவில் விடுகதை: உதாரணம்

    அடித்தால் வலித்திட ஆனை விரும்பும்
    கடித்தால் நுனியில் கசக்கும் – அடியில்
    இனிக்கும் மதுரம் இலையது கீறும்
    கனமான புல்லாம் எறும்பு.

    இந்த வெண்பாவின் ஈற்றடியின் ஈற்றுச்சொல் வெண்பாவின் பொருளுடன் ஒட்டாமல் நிற்பதால், அதுவே விடை மறைமொழி என்று அறியலாம். ஒற்று மாறாதிருக்க, ’எறும்பு’ என்னும் சொல்லில் இரு குறில் எழுத்துகள் மட்டும் மாறியிருக்க, மற்ற எழுத்துகளை இந்தச் சொல்லில் அமைத்துப் பார்த்தால் ’கரும்பு’ என்னும் விடை எளிதில் கிடைக்கும். இப்போது கரும்பு என்னும் விடையை வெண்பாவில் அமைத்துப் பார்த்தால் அது பொருளுடன் ஒன்றுவது தெரியும்.

    *****

    வெண்பாவில் விடுகதைகள்: வாசகர் விடை காண

    இனி, வாசகர்கள் விடை கண்டறிய, மற்ற வெண்பா விடுகதைகள் ஒவ்வொன்றாக இந்த இழையில் வரும், ஒன்றின் விடை தெரிந்ததும் அடுத்தது என்ற நிரலில்.

    1. ஆலமரம் தூங்க…
    (அளவியல் இன்னிசை வெண்பா)

    ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்கவும்
    பாலாழி வண்ணனும் பாம்பணையில் தூங்கவும்
    கோலமில் லாவொருவன் போய்வருவான் கண்விழித்தே
    ஓலமுடன் பேர்கேட்டால் போச்சு.

    (தொடரும்)

    *****

    Share
  • தெய்வ தரிசனம்

    -ரமணி

     04. பிரமனுக்கேன் ஆலயமில்லை?

    (தரவு கொச்சகக் கலிப்பா)

    [காஞ்சி மகாபெரியவர் உரையிலிருந்து திரட்டிய செய்திகள்]

    நான்முகனாய் நாரணனின் நாபியிலே தோன்றியுமே
    நான்முகமும் எப்போதும் நான்மறையை ஓதியுமே
    வான்முதலாய் வைத்துலகும் மானிடரும் ஆக்கியுமே
    ஏனோநான் முகனுக்கே எங்கணுமே கோவிலிலை! … 1

    படைப்பின்றேல் காப்பில்லை பண்ணியதை அழிப்பதில்லை
    உடைத்தழிக்கும் பித்தனவன் உன்னதமாய் ஆலயத்தில்
    நடைமுறையைக் காத்தருளும் நாரணனும் ஆலயத்தில்
    படைப்புதரும் பிரமனுக்கோ பண்ணில்லை கோவிலிலை! … 2  brahma

    வீட்டினிலே வழிபாட்டில் விடையவனும் விட்டுணுவும்
    பாட்டினிலே புகழ்ந்தேத்தப் பலதெய்வம் படமாக
    நாட்டினிலே எல்லோரும் நாடுதெய்வ வழிபாட்டில்
    ஏட்டினிலே செய்கையிலே இடமில்லை பிரமனுக்கே! … 3

    மூன்றுதேவர் பத்தினியும் முறையாக வழிபாட்டில்
    ஊன்றிநிற்க உமையன்னை உள்ளத்தில் திருமகளாம்
    தோன்றுஞானம் தந்திடவே தொழுதிடுவோம் நாமகளை
    ஆன்றவனாம் அந்தணனாம் ஆரணனுக் கேதுமிலை! … 4

    பிரும்மமெனப் பரம்பொருளே பேர்பெற்றி ருந்தாலும்
    பிரும்மவித்தை பேரெனவே பிரும்மஞானம் ஆனாலும்
    பிரும்மானந் தம்நிலையாய் பிரும்மவித்தை யானாலும்
    பிரமனுக்கோ கோவிலிலை பேர்சொல்லிப் போற்றவிலை! … 5

    ஆரணத்தின் ஒலியாலே அனைத்துலகும் உருவாக்கும்
    ஆரணனாய்த் தந்தையென அனைத்துயிர்க்கும் வேராகிச்
    சீரணவும் பிரமனுக்கோ சிறப்புவழி பாடிலையே!
    காரணத்தைத் விளக்குவரே கருணைமிகு காஞ்சிமுனி. … 6

    [சீரணவும் = சீர் பொருந்திநிற்கும்]

    பிறவியிதைத் தருகின்ற பிரமனுக்கா வழிபாடு?
    பிறவியிதே ஈனமெனப் பேரின்ப நிலையிருக்க
    பிறவியிதன் போக்கினையே பிரம்மலிபி தலையெழுதப்
    பிறவியிதைத் தருகின்ற பிரமனெவண் வழிபடவே! … 7

    நம்பிறவிக் காரணமாய் நான்முகனெங் ஙனமாவான்?
    நம்பிறவி அமைவதெலாம் நம்வினைகள் துய்ப்பதற்கே
    நம்பிறவிப் போக்கொன்றே நம்தலையில் எழுதிவைக்கும்
    அம்பாவான் பிரமனவன் அம்பெய்த வர்நாமே! … 8

    பாலனத்தைச் செய்பவராய்ப் பரந்தாமன் ஆனாலும்
    சூலத்தாற் கொல்பவராய்ச் சொக்கனவர் ஆனாலும்
    ஏலுவரே இருவருமே எதுவுமருள் தெய்வமெனக்
    கோலமிகு இந்தநிலை குரவனுக்கோ என்றுமிலை! … 9

    [பாலனம் = பாதுகாப்பு; ஏலுவரே = தகுதியாவரே; குரவன் = பிரமன்]

    பாலனத்தைச் செய்பவளாய்ப் பாற்கடலாள் ஆனாலும்
    சூலத்தாற் கொல்பவளாய்த் துர்க்கையவள் ஆனாலும்
    ஏலுவரே இருவருமே எதுவுமருள் தெய்வமெனக்
    கோலமிகு இந்தநிலை குரவனுக்கோ என்றுமிலை! … 10

    பரம்பொருளால் ஆனாலும் பரம்பொருளாய்த் தோன்றாத
    பிரமனைமற் றிருவருடன் பேசுமுறை இல்லையென
    உருவமேதும் ஆலயத்தின் உள்ளறையில் வைக்காமல்
    கருவறைவி மானத்தில் காணவைத்த உருவெனவே! … 11

    மூவரிலே ஒருவரென முன்னிற்கும் பிரமன்பேர்
    ஆவதெவண் என்பதனை ஆன்றமுனி சொன்னசெய்தி:
    பூவுலகம் அண்டமெலாம் பொருந்திநிற்கும் பரம்பொருளே
    மேவிவரும் லீலையென வேதாவைச் செய்ததுவே. … 12

    [வேதா = பிரமன்]

    ஆடவர்பெண் சேர்க்கையிலே அவனியெலாம் செய்பிரம்மம்
    தோடணியான் நாமகளைச் சோதரராய்ச் செய்ததுடன்
    நீடுமாலும் அம்பாளும் நிலையினிலே சோதரராய்
    நாடுகின்ற போகநிலை ஞானநிலை தருவதற்கே. … 13

    [தோடணியான் = காதில் தோடணிந்த சிவன்; நீடுமால் = நிலைத்திருக்கும் திருமால்]

    உலகியலும் ஞானமுமே ஒன்றாகக் கலப்பதெனத்
    தலைப்பட்ட பிரம்மமது தம்பதியாய்ச் சோதரர்க்கு
    விலையொன்றைத் தருவதற்கே வேதாவை இலக்குமியை
    நிலைபேற்றில் சோதரராய் நிற்பதெனச் செய்ததுவே. … 14

    அரன்-உமையாள் அரி-கமலை அயன்-வாணி எனமூன்றாய்
    உருவான தம்பதியில் முதலிருவர் முழுமுதலாய்
    இருந்திடவே பின்னிருவர் எழுஞானம் ஒன்றுமட்டும்
    அருள்வதற்கே தெய்வமாக ஆலயத்தில் நின்றிலையே. … 15

    பிரமனவர் குருவாகப் பாற்கடலோன் பின்னின்றே
    பிரம்மவித்தை ஞானமெனும் பேற்றினையே அருளுவதால்
    உருவமென ஆலயத்தின் உள்ளில்லா பிரம்மதேவன்
    குருவாக நாம்போற்றிக் கூடுதரும் பிறப்பறுப்போம். … 16

    [குறிப்பு:
    மேல்விவரம்: தெய்வத்தின் குரல், பாகம் 5, பக். 187-230]

    *****

    Share
  • தெய்வ தரிசனம்

    -ரமணி 

    03. மூவகையாகும் பிரும்மம்

    (குறும்பா)

    நிர்குண பிரும்மம்

    நிர்குணத்த பிரும்மமெனும் போதினிலே
    நிர்மலமே, உருவென்றே ஏதுமிலை
    . . தன்னுள்ளே கூறில்லை
    . . தன்னைப்போல் வேறில்லை
    நிர்நாம நிர்வாண மானதுவே. … 1

    நீக்கமற எங்கணுமே நிறைந்திருக்கும்
    போக்கறவே செயலற்றே உறைந்திருக்கும்
    . . உறவற்றே தனியதுவாய்
    . . மறுவற்றே இனியதுவாய்
    வாக்கற்ற வத்துவெனச் சிறந்திருக்கும். … 2

    எப்போதும் இருப்பதனால் சத்தெனவாம்
    ஒப்பில்லா ஞானமெனும் சித்தெனவாம்
    . . குறையாத ஆனந்தம்
    . . நிறைவாகும் மோனந்தான்
    இப்பேர்-சச் சிதானந்த வத்தெனவாம். … 3

    நிர்குணத்தின் ஒளிவெள்ளம் வெண்மையென்போம்
    தர்க்கமற்ற நிலையாகும் உண்மையென்போம்
    . . காரணமாம் தத்துவமே
    . . பூரணமாம் வத்துவிதே
    வர்க்கமற்ற ஒன்றென்னும் தண்மையென்போம். … 4

    சகுண பிரும்மம்

    தோற்றமிலாத் தத்துவமாம் காரணமே
    மாற்றமொன்று பெறுவதனால் காரியமாம்
    . . வாக்கினின்று நாமமெழும்
    . . பார்க்கவொரு ரூபமெழும்
    ஆற்றலுடன் அறிவுகொண்ட பூரிதமாம். … 5   [பூரிதம் = வெகுகளிப்பு]

    களிமண்ணே மாற்றமொன்றை யுட்கொளவே
    களிமண்ணால் உருவாகும் மட்கலனே
    . . களிமண்ணே உருக்கொள்ளும்
    . . களிமண்ணே பேர்கொள்ளும்
    களிமண்ணே மட்கலனில் உட்கருவே. … 6

    வெளித்தோன்றா நாமரூபம் மாயையாகும்
    வெளித்தோன்றும் நாமரூபம் லோகமாகும்
    . . உருநாமம் எல்லாமே
    . . பிரும்மத்தின் உள்ளாமே
    ஒளிர்பிரும்மம் மாயைசத் குணமாகும். … 7

    குணமற்ற பிரும்மமாயை சேர்வதுவே
    குணமுள்சத் குணபிரும்ம மாவதுவே
    . . சற்குணமே மூன்றுதெய்வம்
    . . நற்குணமே யூன்றுதெய்வம்
    இணைகொள்ளும் ஆண்பெண்ணாய் நேர்வதுவே. … 8

    நாத பிரும்மம்

    பஞ்சபூத முதல்பூதம் ஆகாயம்
    அஞ்சுபுலன் காணாத கண்மாயம்
    . . நாதமொன்றே தன்மையென
    . . நாதபிரும்ம நன்மையென
    விஞ்சியது உள்ளடக்கும் ஆதாரம். … 9

    தானெனவே நாதபிரும்மம் பதிவாக
    வானதுவே ஓமென்னும் அதிர்வாகும்
    . . அதிர்வொலியே முப்போதும்
    . . புதுமையென எப்போதும்
    ஆனதுவே ஆதாரப் பொதுவாகும். … 10

    களிமண்ணின் உருபேரில் உலகமெழும்
    களிமண்ணுள் உறையுருவாய் மாயையெழும்
    . . பிரும்மந்தான் எல்லாமே
    . . உருநாமம் சொல்லாமே
    களிமண்ணே காணவரின் பிரும்மமெழும். … 11

    வழிபாடு

    நிர்குணத்தை உள்ளத்தில் ஏற்றிடுவோம்
    சற்குணத்தை வழிபட்டுப் போற்றிடுவோம்
    . . ஆறுதெய்வம் அவர்சக்தி
    . . ஆறுதலாய் நம்பக்தி
    நற்கதியைத் தருசெயல்கள் ஆற்றிடுவோம். … 12

    *****

     

    Share
  • தெய்வ தரிசனம்

    -ரமணி

    02. பரம்பொருளும் படைப்பும்

    (குறும்பா)

    [ரிக்வேதம் பத்தாவது மண்டலத்தில் 129-ஆவது சூக்தமாக உள்ளது ’நாஸதீய சூக்தம்.’ இப்பாடல் அதன் எளிய மொழிபெயர்ப்பு.]

    இல்லையென்றோ உள்ளதென்றொ ஏதுமிலை
    தொல்லுலகம் தொடுவானம் போதுமிலை
    . மூடுபனி கூடியதோ
    . கூடெனவே மூடியதோ
    வல்லிருளோ வெள்ளமதோ பேதமிலை! … 1

    மரணமென்றும் மோட்சமென்றும் இல்லாதே
    இருள்தனியே பகல்தனியே செல்லாதே
    . அதுவொன்றே மூச்சற்றே
    . அதிர்ந்ததுவே பேச்சற்றே
    உருவமென வேறெதுவும் கொள்ளாதே! … 2

    இருளொன்றே இருளென்றே மூடியதே
    உருவற்ற வெள்ளம்போல் கூடியதே
    . ஒன்றெனவே ஓர்பொருளே
    . தன்நிலையை ஓர்பொருளே
    எரிதவத்தால் தன்னுள்ளே தேடியதே! … 3

    உள்ளியதில் ஓராசை எழுந்ததுவே
    உள்ளத்தின் மூலவித்தாய் விழுந்ததுவே
    . தன்னிதயம் ஆயுமுனி
    . உண்மையென மாயையென
    உள்மனத்தின் உணர்வினிலே இழிந்ததுவே! … 4

    கதிர்பலவாய்ச் சூனியத்தில் விரிந்ததுவே
    அதிர்வாற்றல் அடியெனவே இருந்திடவே
    . சந்ததிகள் உருவாக
    . விந்தொன்றே கருவாக
    அதிவேகம் உச்சியிலே திரிந்திடவே! … 5

    யாரறிவார் எங்கிருந்து படைப்பிதுவே
    யாருரைப்பர் இதுவென்ன புடைப்பெனவே
    . கடவுளரும் தேவருமே
    . படைத்தபினே மேவினரே
    யாரறிவார் எங்கிருந்த உடைப்பிதுவே! … 6

    படைப்பிதனைப் படைத்ததுவே புரப்பதுவோ
    படைப்பிதனைப் படைத்ததுவே புரந்திலையோ
    . பரவான வெளியினிலே
    . அரசாளும் ஒளியவனே
    படைப்புண்மை அறிவானோ அறிந்திலையோ? … 7 

     

    Share
  • அரசமரக் கணபதியே ஆறுதல்! (குறும்பா)

    –ரமணி 

    அரசமரம் கீழமர்ந்த கணபதியே
    தரிசுமனம் நின்றருளக் கணமிதுவே
    .தென்காற்றின் அலையோட
    .என்காற்றும் நிலையாகக்
    கரிசனத்தின் காப்பருள்வாய் குணநிதியே!  1  vinayakar

    எத்தனையோ உருவமுன்றன் கதையுமே
    அத்தனையும் அர்த்தமுடன் வதியுமே
    . ஓங்காரம் உள்ளமுற
    . ரீங்காரப் பள்ளமறும்
    சித்தமெலாம் உன்நாமம் பதியுமே!  2

    ஏகதந்த இறைமகனாம் ஏரம்பன்
    ஆகுவாக னத்திலருள் ஆரம்பம்
    .முக்கண்ணன் நாமமெலாம்
    .எக்கணமும் சேமமென
    வேகுமன வேதனைகள் ஓரம்போம்!  3

    சிந்தையிலே உன்னுருவைக் கொள்ளுவனே
    வந்தவினை போனதெனத் தள்ளுவனே
    .தும்பிக்கைக் காப்பினிலே
    .நம்பிக்கை கூப்புவனே
    வந்தனையில் வருவதெலாம் அள்ளுவனே! 4

    என்னாயுள் எதுவென்றே ஆனாலும்
    என்வாழ்வில் எதுவந்தே போனாலும்
    .தந்திமுகன் வந்தனையில்
    .சிந்தனையில் பந்தமறும்
    என்நாவில் உன்பெயரே தேனாமே!  5

     

    Share
  • திருட்டுப் பட்டம்!

    ரமணி 

    சைதாப்பேட்டை டாட்‍ஹண்டர் நகர் ’மாதிரி உயர்நிலைப் பள்ளி’யில் எட்டாவது வகுப்பில் படிக்கும்போது நானும் கைலாசமும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். கடைசியில் ஒருவருக்கொருவர் ’காய் விட்டுக்கொண்டு’ பிரிந்தோம். காலப்போக்கில் ஒருவரை ஒருவர் மறந்தே போனோம். என் வாழ்வில் இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு சோகமான, சுமையான நிகழ்ச்சி நடந்தது. பழைய தோழமையைப் புதுப்பித்துக்கொள்ள அது ஒரு தூண்டுதலாக அமைந்தது.

    நிகழ்ச்சி நடந்த மறுவாரம் ஒரு நாள் மாலை கைலாசத்துடன் தொலைபேசினேன். அவனைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னேன். மிகுந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒலித்த குரலில் என்னை ஒருமையில் ’டா போட்டு’ அழைத்து அந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை சாப்பிட வரச்சொன்னான்.

    ஞாயிற்றுக் கிழமை சென்னை கிழக்கு தாம்பரம் சாலையில் சேலையூர் அருகில் கைலாசம் வீட்டைக் கண்டுபிடித்து அழைப்பு மணியை ஒலித்தேன். ஓடி வந்தான். “ரங்கா, உன்னைப் பார்த்து முப்பது வருஷமாச்சுடா!” என்றான். “இப்ப நீ என் பேச்சு ’பழம்’ தானே?”

    “கொஞ்ச நாளாவே நான் உன்கூட ’பழம்’தான்”, என்றேன். “அதனாலதான் உன் டெலிஃபோன் நம்பர் கண்டுபிடிச்சு அன்னிக்கு உன்னோட பேசினேன். நீ தமிழ்க் கதையுலக வாசகர்களுக்கு நல்லாப் பரிச்சயமான ஒரு எழுத்தாளன் ஆச்சே! நானும் உன் வாசகன். ’இன்றைய தமிழ் எழுத்தாளர்கள்’ புத்தகத்தில உன் சுயவிவரம், தொலைபேசி எண், விலாசம் பார்த்தேன். உன் படைப்புகளைச் சிலாகித்து அந்த புத்தகத்தில ரெண்டு ரெவ்யூ வந்திருந்ததே!”

    “ஆமாம், நீ என்னைத் தொலைபேசில தொடர்புகொண்டப்ப நம்பவே முடியலைடா! இப்ப நேர்ல பாக்கறப்ப, உன் குரல் அப்படியே இருக்கு. உன் உருவம்தான் முழுக்க மாறிடுத்து!”

    “ஆனால் உன் குரல், உருவம் ரெண்டும் ஸ்கூல்ல பார்த்த மாதிரியே இன்னமும் இருப்பது ஆச்சரியம்!” என்றேன்.

    “அப்படியா! அப்பா போனதும் கண்ணாடி போட்டுக்கிட்டேன். கல்லூரி நாள்லேர்ந்து வெச்சிருந்த மீசையை அம்மா போனதும் எடுத்துட்டேன்.”

    “உங்கப்பா அம்மா ரெண்டு பேருமே கதை எழுதுவான்னு நீ என்கிட்ட ஸ்கூல் படிக்கும்போதே சொன்னே இல்ல?”

    “ஞாபகம் வெச்சிருக்கயே! வா, கூடத்து ஷோகேஸ்ல அவங்க படம் இருக்கு, பாரு”, என்று கூட்டிச்சென்று அவன் பெற்றோர் கல்யாண போட்டோவைக் காட்டினான். “அப்பா சின்ன வயசிலயே போய்ட்டதால ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கற மாதிரி இந்த ஒரு படம்தான் கிடைச்சுது.”

    “ஷோகேஸ்ல மற்ற பொருட்கள்லாம் பாரு. இதோ வரேன். விமலா!” என்று விளித்தபடியே விலகி சமையல்கட்டை நோக்கிச் சென்றான்.

    கைலாசத்தின் பெற்றோர் போட்டோவில் அம்மா பக்கம் ஓர் ஊதாநிற ரைட்டர் ஊற்றுப் பேனாவும், அப்பா பக்கம் ஒரு கருப்புநிற பைலட் பேனாவும் லாமினேட் செய்யப்பட்ட போட்டோ சட்டத்துடன் இணைந்திருந்தன. அந்த பேனாக்களைப் பார்த்ததும் என் கண்கள் கலங்கிக் கண்ணீர் துளிர்த்தது.

    “இவள் விமலா, என் இல்லத்தரசி. சீனு எங்களுக்கு ஒரே பிள்ளை. எட்டாவது படிக்கறான். இப்ப கோடை விடுமுறைல திருச்சிக்குப் போயிருக்கான், அவன் சித்தி வீட்டுக்கு.”

    “வாங்கோ!” என்றாள் விமலா. “நீங்க ரெண்டு பேரும் ஸ்கூல காய் விட்டுண்டதுக்கப்பறம் முப்பது வருஷம் கழிச்சு இப்போதான் சந்திக்கறது மஹா ஆச்சரியம்!”

    சிரித்தேன். “என் பிள்ளை மாதுவும் எட்டாவதுதான் படிக்கறான். அவன் தங்கை கமலா நாலாம் கிளாஸ். என் மனைவி பெயர் மாலினி, ஹோம்மேக்கர். கைலாசம், உன்னை மாதிரியே நானும் அரசு வங்கில கிளார்க் வேலை பார்க்கிறேன். வீடு நங்கநல்லூர்ல இருக்கு.”

    நான் வாங்கியிருந்த பழங்கள் பையை விமலாவிடம் தந்தேன். “கைலாசம், உனக்கு ஒரு சின்ன கிஃப்ட்” என்று சொல்லி அவனிடம் ஒரு சின்ன பார்சலைத் தந்தேன்.

    உடனே பிரித்துப் பார்த்து வியந்தான். “எதுக்குடா எனக்கு விலை உயர்ந்த பார்க்கர் பேனா?”

    “நன்கு அறியப்பட்ட எழுத்தாளனுக்கு ஓர் வாசக நண்பனின் எளிய பரிசு.”

    “தாங்க்யு ரங்கா” என்றான். “வா, மணி பன்னிரண்டாகப் போறது. சாப்பிட்டபடி பேசுவோம்.”

    *** *** ***

    சாப்பாட்டு மேசையில் கைலாசம் நாங்கள் பள்ளியில் காய் விட்டுக்கொண்டது பற்றிக் கலகலப்பாக மனைவியிடம் சொன்னான். “எட்டாம் வகுப்பு முழுக்க நாங்க ரொம்ப நெருங்கிய நண்பர்கள் விமலா! அந்த வகுப்பு முழுவருடத் தேர்வில் இவன் என்னைவிடக் கணக்கிலும் ஆங்கிலத்திலும் அதிக மார்க். ஆனால் ரெண்டு பேரும் ஒரே டோட்டல் மார்க்….”

    “அறுநூறுக்கு நானூத்தி எண்பது” என்றேன். “உனக்கு ஞாபகம் இருக்கா? ஆனால் மற்ற தேர்வுகள்ல நீ என்னைவிட ஒவ்வொரு பாடத்லயும் அதிக மார்க். அதனால கடைசிப் பரீட்சைக்கு நான் விழுந்து விழுந்து படிச்சேன்.”

    “ஒன்பதாம் வகுப்பு ஆரம்பிச்சு மூணு மாசத்தில இவன் திடீர்னு ஒரு நாள் ’கைலாசம், இந்த க்ஷணத்லேர்ந்து நான் உன் பேச்சு காய். என்னோட பேச முயற்சி பண்ணாதே, சொல்லிட்டேன்’, அப்படீன்னான். ஏண்டான்னு கேட்டதுக்கு பதில் சொல்லாமப் போயிட்டான். அதுக்கப்புறம் நாங்க கடைசிவரை பேசிக்கவே இல்லை!”

    “ஆனால் மத்த பசங்க ஒரு பத்துநாள் நம்ம ரெண்டு பேரையும் சேர்த்துவைக்கப் படாத பாடு பட்டாங்க, இல்லயா?” என்றேன்.

    “ஆமாமாம். நாங்க பேசிக்காட்ட கூட முன்ன இருந்த மாதிரி ரெண்டு பேரும் பக்கத்தில பக்கத்திலதான் உக்காரணும்னு கிளாஸ் வாத்தியார் சொல்லிட்டார். அது மஹா அவஸ்தையா இருந்தது. பசங்க எங்க ரெண்டு பேர் செருப்பையும் ஒளிச்சு வெச்சுத் தேட வெச்சாங்க…”

    “ஒரு நாள் ஒரு செருப்பை மட்டும் ரெண்டுபேர்க்கும் மாத்தி வெச்சு அப்படியே போட்டுண்டு கொஞ்ச தூரம் போய்ட்டோம்”, என்றேன். “அப்புறம் கண்டுபிடிச்சு, தூரத்லேர்ந்து கடுப்பாப் பார்த்து ஒருத்தர் மேல ஒருத்தர் மாறின செருப்பை எறிஞ்சு மண்ணை வீசி எறிஞ்சி மௌனமாத் திட்டிக்கிட்டோம்!”

    “டெய்லி சாயங்காலம் கடைசி பீரியட் விளையாட்டு. அப்போ கால்பந்து விளையாடும் போது பசங்க எங்களை ஒருத்தர் மேல ஒருத்தர் விழனும்னு பிடிச்சுத் தள்ளுவாங்க!”

    “ராஜேந்திரன்னு எங்க ரெண்டு பேர்க்கும் ஒரு காமன் ஃப்ரெண்டு இருந்தான்”, என்றேன். “எட்டாம் வகுப்பு பரீட்சை, டெஸ்ட்கள்ல நாங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி முதல் ரெண்டு ரேங்க் வாங்கின போது ராஜேந்திரன் மூணாவது ரேங்க் வாங்கினான். அவன் எங்களைச் சேர்த்துவைக்க ரொம்பவும் முயற்சி பண்ணி முடியாம ஒரு நாள் எங்களுக்கு எதிர்லயே அழுதுட்டான். அப்பவும் நாங்க சேரக்கூடாதுங்கற திமிர்ல இருந்தோம்!”

    “ஏண்டா ரங்கா திடீர்னு என் பேச்சு காய் விட்டே?”

    “என்னத்தச் சொல்லறது? இப்ப நினைச்சுப் பார்த்தா வேடிக்கையாவும் வேதனையாவும் இருக்கு”, என்றேன். “ஒன்பதாம் வகுப்பு முதல் மூணு மாசத்ல நாம மொத்தம் பத்து தேர்வுகள் எழுதியிருப்போமா? அதுல எல்லாத்லயும் நீ முதல் ரேங்க் வாங்கினதை என்னால சகிச்சுக்க முடியலைங்கறது முதல் காரணம். அப்புறம் எல்லா வாத்தியாரும் உன்கிட்ட அன்பா பழகின மாதிரி என்கிட்ட பழகலைங்கறது ரெண்டாவது காரணம். அப்புறம் எட்டாம் வகுப்பு படிச்சப்ப பள்ளி ஆண்டுவிழாவுல கட்டுரை, கவிதை, பேச்சு மூணு போட்டிலயும் நீ முதல் பரிசு வாங்கின இல்லையா? பேச்சுப்போட்டியின் தரத்தை வெச்சுப் பார்த்தா நான்தான் முதல்பரிசு வாங்கியிருக்கணும். ஆனால் நீ எடுத்த எடுப்பிலேயே கலிங்கத்துப் பரணியோட ’எடுமெடு மெடுவென வெடுத்தவோர்’ பாட்ல ஆரம்பிச்சு ஆடியன்ஸ், ஜட்ஜை மயக்கி முதல் பரிசு வாங்கினது எனக்கு மஹா எரிச்சல்!”

    “அப்படியா சேதி! நீ முதல்ல காய் விட்டதும் எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது. அப்புறம் எனக்கும் உன்னமாதிரியே விரோதமும் வெறுப்பும் உண்டாச்சு.”

    கைகள் வாய்பேச்சை நடுநடுவே மீற விமலா சமைத்திருந்த அறுசுவை உணவை ஒருகை பார்த்துப் பாராட்டினேன். சாப்பிட்டு எழுந்ததும் மூவரும் ஹாலில் சோஃபாவில் வசதியாக அமர்ந்துகொண்டு பேச்சைத் தொடர்ந்தோம்.

    “திடீர்னு இவரோட காய்விட்ட மாதிரியே முப்பது வருஷம் கழிச்சு, திடீர்னு பழம்விடத் தோணித்தாக்கும்! அது எப்படி?” என்றாள் விமலா.

    “ஆமாண்டா, நேத்து வரைக்கும் ரெண்டு பேரும் ஆள் அட்ரஸ் தெரியாம இருந்திட்டு எப்படிடா திடீர்னு என்கூட நம்ம பழைய நட்பைப் புதுசு பண்ணிக்கணும்னு உனக்குத் தோணித்து? யு ஆர் கிரேட் ரங்கா!”

    “அதை நான் உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலைடா”, என்றேன். “ஆனால் சொல்லித்தான் ஆகணும்; அப்பதான் என் மனசு ஆறும்.”

    “என்னடா புதிர் போடறே? விஷயத்தைச் சொல்லேன், எருமை மாடு!”

    “சொல்றேண்டா கழுதை!”

    அந்த எருமை மாடும் கழுதையும் எங்கள் நட்பு பழையபடி ராசியாகி விட்டது என்று காட்டியது. ஆனாலும் எனக்குள் இருந்த குற்ற உணர்ச்சி குறையவில்லை.

    “பதினஞ்சு நாள் முன்ன எம்பிள்ளை மாது அவன் பர்த்டேக்கு நான் வாங்கித்தந்த காஸ்ட்லி வில்சன் பேனாவத் தொலச்சிட்டான். எனக்கு வந்த கோவத்துல அவனை அடி பின்னிட்டேன்! அப்புறம் மறுநாள் அவன் பேனா கெடச்சதும் ரொம்ப ஃபீல் பண்ணினேன். மாதுவைப் பிடிக்காத இவன் கிளாஸ் பையன் ஒருத்தன் இவன் புதுப் பேனாவை எடுத்து இவன் குளோஸ் ஃப்ரெண்ட், பக்கத்து சீட் ராகவன் ஸ்கூல் பையில போட்டானாம். அதை இன்னொரு பையன் மறைஞ்சு இருந்து பார்த்து மாதுட்ட சொன்னானாம். இவன் பொய்க்கோவத்தோட ’ஏண்டா என் புதுப் பேனாவைத் திருடினே?’ன்னு ராகவன்ட்ட கேட்டப்ப அவன், ’சத்தியமா நான் திருடலைடா! நமக்குள்ள சண்டை மூட்டிவிட யாரோ என் பைல போட்டிருக்கணும்டா, ஐ ஸ்வேர்’ அப்படின்னு சொல்ல, இவன் உண்மையைச் சொல்லி ராகவனைக் கட்டிண்டு ’நமக்குள்ள இருக்கற நட்பை யாரும் குலைக்க முடியாதுடா!’ அப்படீன்னு கிளாஸ்ல எல்லோருக்கும் கேக்கற மாதிரி உரக்கச் சொன்னானாம்…”

    கைலாசம் என்னை மேலே பேச விடவில்லை.

    “ரங்கா, இதே மாதிரி நான் ஒன்பதாவது படிச்சபோது ஒரு நிகழ்ச்சி நடந்ததுடா! நாம ரெண்டு பேரும் அப்ப ஒருத்தரோட ஒருத்தர் பேசாம இருந்தோம். உன் பையன் பேனாவைத் தொலைச்சான். ஆனால் என் பையில யாரோ ரெண்டு பேனாவைப் போட்ட கதையை உனக்கு இப்ப விளக்கிச் சொல்லறேன் கேளு”, என்று தொடர்ந்தான்…

    *** *** ***

    கைலாசம் சொன்னது:

    அன்று மாலை ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்தேன். காலையில் அம்மா கொடுத்து அனுப்பிய சாக்லெட் இரண்டையும் சாப்பிட மறந்தது ஞாபகம் வந்தது. உடனே அவசரமாக என் ஸ்கூல் பையைத் தலைகீழாகக் கவிழ்த்துத் தரையில் கொட்டித் தேடினேன். அன்று விடுமுறையில் இருந்த என் தந்தை அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா சமையல் கட்டில் எனக்காகப் பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்தாள்.

    “ஏண்டா உன் பையிலேர்ந்து ரெண்டு பேனா விழறதே!” என்று என் தந்தை சொன்னபோதுதான் கவனித்து எடுத்துப் பார்த்தேன். ஊதா நிறத்தில் ஒரு ரைட்டர் பேனாவும், கறுப்பு நிறத்தில் ஒரு பைலட் பேனாவுமாக இரண்டு புதிய ஊற்றுப் பேனாக்கள்.

    “உன்னோடது மெரூண்கலர் ரைட்டர் பேனா தானே? அதுவும் போன வருஷம் வாங்கினது. ஏது இந்த ரெண்டு பேனா?” என்றார் என் தந்தை.

    “தெரியலைப்பா!” என்று நான் சொன்னதை அவர் நம்பவில்லை.

    “யாரோட பேனாவோ? ரெண்டும் எப்படீடா உனக்குத் தெரியாம உன் பைக்குள்ள வந்தது?” தந்தையின் குரலில் சூடு ஏறியது.

    “நெஜமா எனக்குத் தெரியலைப்பா!”

    “பொய் சொல்லாதே! திருடினயா? சாயங்காலம் கடைசி பீரியட்ல பசங்க வெளையாடப் போனப்ப கிளாஸ்ல டெஸ்க் மேல இருந்த இந்தப் பேனா உன் கண்ணுல பட்டது. ஏதோ ஓர் ஆசைல நீ சத்தம் போடாம எடுத்துப் பையில போட்டுண்டு வந்துட்டே, அப்படித்தானே?”

    “ஐயோ அதெல்லாம் இல்லைப்பா! நான் திருடலை!”

    “அப்புறம் எப்படிடா பேனா ரெண்டும் உன் பைக்கு வந்தது?”

    “அதுதான் எனக்குத் தெரியலைப்பா!”

    என் அம்மா கையில் பால் டம்ளர்-டபராவுடன் வந்தவள், “கைலாசம், உண்மையைச் சொன்னா அப்பா புரிஞ்சுப்பார். அப்பாக்குக் கோவம் வந்தா உன்னால தாங்க முடியாது!”

    “என்னம்மா நீயும் இப்படிக் கேக்கறே? நான் திருடலைம்மா”, என்றேன். “பேனா எப்படி என் பைக்குள்ள வந்ததுன்னு எனக்குத் தெரியலையே அம்மா!”

    பொங்கிவரும் பாலாக என் தந்தைக்குக் கோபம் தலைக்கேறி அவர் கண்களில் வழிந்தது. பளார் என்று என் கன்னத்தில் அவர் அறைந்தபோது எனக்குத் தலை சுற்றியது.

    “திருடவும் செஞ்சிட்டுப் பொய் வேற சொல்லறயாடா, ராஸ்கல்!” என் முதுகில் அடிகள் சரமாரியாக விழ நான் தடுமாறிச் சாய்ந்தேன். ஆனாலும் நான் அழவில்லை.

    “கைலாசம், பொய் பேசினா ஸ்வாமி கண்ணக் குத்திடும்னு உனக்குச் சொல்லியிருக்கேன், இல்லையா?” என்றாள் அம்மா. “எப்படி பேனாவைத் திருடினதா அப்பா உன்னை அடிக்கறாரோ அப்படித்தானே பேனாவைத் தொலச்சதுக்கு அந்த ரெண்டு பையன்களும் அவா அப்பாட்ட அடி வாங்குவா!”

    அடிகள் போதும் என்று நினைத்தாரோ என்னவோ, அப்பா என்னைத் தரதரவென்று இழுத்துக் கொண்டுபோய் சமையல் கட்டில் இருந்த ஸ்வாமி அலமாரியின் முன் தள்ளினார். “போடா, போய் ஸ்வாமி முன்னால நின்னுண்டு நீ தப்புப் பண்ணலைன்னு சொல்லு.”

    “கைலாசம், என்னால இந்த அவமானத்தைத் தாங்க முடியலைடா. நீயா இப்படி!”, என்று அழுத அம்மா, என்று தன் புடவைத் தலைப்பை எரிந்துகொண்டிருந்த ஸ்டவ் அடுப்பின் ஜுவாலை அருகில் வைத்துக்கொண்டு, “இதுக்கு உயிரை விட்டுடலாம்”, என்றாள்.

    “பார்றா, அம்மா பத்திக்கப் போறா. உண்மையைச் சொல்லுடா!” என்று தந்தை இரைந்தார்.

    “ஐயோ கடவுளே! நான் உண்மையைத் தானே சொல்றேன்”, என்று நான் கண்ணீருடன் சத்தம் போட்டுக் கதறினேன். “ரெண்டு பேனாவும் எப்படி என் பைக்குள்ள வந்ததுன்னு எனக்குத் தெரியாது. அப்படி நான் திருடிட்டுப் பொய் சொல்றதா நெனைச்சா ஸ்வாமி என் கண்ணைக் குத்தட்டும், ஏத்துக்கறேன்.”

    முதன்முதலாக அவர்களுக்கு என் மேல், நான் சொல்வதில், நம்பிக்கை வந்தது. கோபத்துடன் முட்டவந்த மாடு மனிதன் கீழே விழுந்ததும் விலகிச் சொல்வதுபோல் அப்பாவின் கோபம் தணிந்து அவர் அப்பால் சென்றார். அம்மா என்னை அணைத்துக் கொண்டாள், அப்பாவின் விரல்கள் பதிந்த என் கன்னத்தை வருடியபடி.

    “ரெண்டு பேனாவும் எப்படி என் பைல வந்ததுன்னு புதிரா இருக்கும்மா!” என்று கேவினேன். “எனக்கு ஒண்ணுமே புரியலை. நாளைக்கு பேனாவைக் கிளாஸ்ல காட்டி யாரோடதுன்னு கேட்டு திருப்பிக் கொடுத்துடறேன்.”

    “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்”, என்றார் அப்பா. “அப்படிப் பண்ணினா நீதான் திருடினேன்னு நிரூபணம் ஆய்டும். கொண்டா அந்த ரெண்டு பேனாவையும்” என்று கீழே இருந்தவற்றைப் பறித்து வைத்துக்கொண்டார்.

    *** *** ***

    “அதுக்கப்புறம் அம்மா அந்த ஊதா நிற ரைட்டர் பேனாவையும் அப்பா கறுப்பு நிற பைலட் பேனாவையும் கதை எழுதப் பயன்படுத்தினாங்க”, என்றான் கைலாசம், மோட்டுவளை இல்லாத வீட்டுக் கூரையைப் பார்த்தவாறே. “அந்த ரெண்டு பேனாவும்தான் அவா புகைப்படத்தோட இணைச்சு ஷோகேஸ்ல வெச்சிருக்கேன், பார்த்தே இல்லயா?”

    “இன்னிவரைக்கும் ரங்கா, சத்தியமா அந்தப் பேனா ரெண்டும் எப்படி என் ஸ்கூல் பைக்குள்ள வந்ததுதுன்னு எனக்குத் தெரியாது”, என்ற கைலாசம், “யாராவது அதைப் பைக்குள்ள போட்டங்களான்னும் தெரியாது”, என்றபடி என்பக்கம் திரும்பினான்.

    என் கண்களில் இருந்து மாலையாகக் கண்ணீர் பெருகுவது கண்டு திடுக்கிட்டான். “நீ ஏண்டா அழறே?” என்றான்.

    பத்திரிகை படித்தவாறே கேட்டுக்கொண்டிருந்த விமலாவும் என்னைப் பார்த்தாள்.

    “ஒரு எழுத்தாளன் என்கிற முறையில இந்த சோக நிகழ்ச்சியை கிராஃபிக்கா விவரிச்சேன். நீ ஏன் அழறே?”

    “உன்னை உங்கப்பா அடிச்சதெல்லாம் எனக்குத் தெரியும் கைலாசம்! நீ விவரமா அவன்ட்ட சொன்னதை ராஜேந்திரன் என்கிட்ட சொன்னான்.”

    “அதுக்கு இப்ப என்ன கண்ணீர்! எனக்கே அழுகை வரல!” என்றான் கைலாசம்.

    “கைலாசம், உன்கிட்ட ஒரு உண்மையைச் சொல்லத்தான் நான் இன்னைக்கு இங்க வந்தேன்”, என்றேன். “இத்தனை வருஷமா என் மனசில புகையேறிக் கிடந்த உண்மை. பேனாவைப் பறிகொடுத்த என் பிள்ளையை அன்னிக்கு அடிச்சு மறுநாள் வருத்தப்பட்டேன் இல்லையா? அன்னிக்குதான் எனக்கு உன்னைக் கண்டுபிடிச்சுப் பேசி என் மனசில இருக்கற உண்மையைச் சொல்லணும்னு தோணிச்சு.”

    “என்னடா புதிர் போடறே? விஷயத்தைச் சொல்லேன், எருமை மாடு!”

    “சொல்றேன் கைலாசம். அதுக்கப்பறமும் நான் உன் நண்பனா இருக்க எனக்கு அருகதை உண்டான்னு நீ தீர்மானிச்சுக்க” என்றேன்.

    “சொல்லித் தொலையேன்!” என்றான் கைலாசம் பொறுமை இழந்து.

    “அன்னைக்கு அந்த ரெண்டு பேனாவையும் உன் ஸ்கூல் பையில் போட்டது நான்தாண்டா கைலாசம்!”

    *** *** ***

    Share