–ரமணி
அரசமரம் கீழமர்ந்த கணபதியே
தரிசுமனம் நின்றருளக் கணமிதுவே
.தென்காற்றின் அலையோட
.என்காற்றும் நிலையாகக்
கரிசனத்தின் காப்பருள்வாய் குணநிதியே! 1 
எத்தனையோ உருவமுன்றன் கதையுமே
அத்தனையும் அர்த்தமுடன் வதியுமே
. ஓங்காரம் உள்ளமுற
. ரீங்காரப் பள்ளமறும்
சித்தமெலாம் உன்நாமம் பதியுமே! 2
ஏகதந்த இறைமகனாம் ஏரம்பன்
ஆகுவாக னத்திலருள் ஆரம்பம்
.முக்கண்ணன் நாமமெலாம்
.எக்கணமும் சேமமென
வேகுமன வேதனைகள் ஓரம்போம்! 3
சிந்தையிலே உன்னுருவைக் கொள்ளுவனே
வந்தவினை போனதெனத் தள்ளுவனே
.தும்பிக்கைக் காப்பினிலே
.நம்பிக்கை கூப்புவனே
வந்தனையில் வருவதெலாம் அள்ளுவனே! 4
என்னாயுள் எதுவென்றே ஆனாலும்
என்வாழ்வில் எதுவந்தே போனாலும்
.தந்திமுகன் வந்தனையில்
.சிந்தனையில் பந்தமறும்
என்நாவில் உன்பெயரே தேனாமே! 5

Leave a Reply