Author: ரமணி

  • கூட்டுக் குடும்பம்

    குருநாதன் ரமணி

    இளம் இந்திய ஆடவரும் பெண்டிரும் திரைகடலோடித் திரவியம் தேடி வாழ்வில் எல்லாவித சுதந்திரங்களையும் அனுபவித்துப் பார்க்க முற்படும் தற்காலத்தின் சமூகப் பரிணாம வளர்ச்சியில் இனிவரும் நாட்களில் பெண்ணியமும் ஆணியமும் ஒன்றுடன் ஒன்று மோதிப் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்ததில் விளைந்த குட்டிக்கதை இது.

    று வயதுச் சிறுவன் அகிலேஷ்: அக்கா, நீ மட்டும் அப்பாவை ஏன் டாடின்னு கூப்பிடறே? நாமட்டும் ஏன் அப்பான்னு கூப்பிடனும்? அப்பா வேற டாடி வேறயாக்கா? ரெண்டும் ஒரே மீனிங்தான்னு என் ஃப்ரெண்ட் அரவிந்த் சொல்றானே?

    எட்டு வயதுச் சிறுமி மதுமிதா: ஆமாம் அகில் கண்ணா! ஒவ்வொரு ஸன்டேயும் என்னை வந்து கூட்டிட்டுப் போவாரே, ப்ரகாஷ் அங்கிள், அவர்தான் எனக்கு அப்பா. உங்கப்பா சூர்யா வந்து உனக்கு அப்பா, எனக்கு டாடி, ஸிம்பிள்!

    அகிலேஷ்: அப்போ உங்கப்பாவை நான் டாடின்னு கூப்பிடலாமா? நம்ம ரெண்டு பேர்க்கும் ஒரே அம்மா, ஆனா அப்பா டாடி வேற வேறயாக்கா?

    மதுமிதா: எனக்கும் உனக்கும் ஒரே அம்மாதான். ஆனா எனக்கு இன்னொரு மம்மி இருக்கா. அவளுக்கு ஒரு குட்டிப் பாப்பாவும் இருக்கு, தீபக்ங்கற பேர்ல, தெரியுமா? ஸோ, எனக்கு ரெண்டு தம்பிங்க இருக்காங்க.

    அகிலேஷ்: ஏன்க்கா எனக்கு மட்டும் மம்மி இல்லை? அம்மா வந்ததும் கேக்கப் போறேன், எனக்கும் ஒரு மம்மி வேணும்.

    மதுமிதா: ஷ்..ஷ்! சத்தம் போட்டுப் பேசாதே, பாட்டி எழுந்திடப் போறா! உனக்கு ஒரு ரகசியம் சொல்றேன், ஆனா நீ அதைப் பத்தி யார்ட்டயும், மெய்ன்னா அம்மா டாடிட்ட வாய்தவறிக் கூடக் கேட்டுறக் கூடாது, ப்ராமிஸ்?

    அகிலேஷ்: ப்ராமிஸ்க்கா! என்ன ரகசியம் சொல்லேன்.

    மதுமிதா: கூடிய சீக்கிரம் உனக்கும் ஒரு மம்மி வரப் போறா!

    அகிலேஷ்: ஹை, எப்படிக்கா?

    மதுமிதா: அம்மாவும் உங்கப்பாவும் இப்பல்லாம் அடிக்கடி சண்டை போட்டுக்கறா பத்தியா? அதனாலா, டாடி வேற கல்யாணம் பண்ணிக்கப் போறார். ஸோ, உனக்கு ஒரு மம்மி கிடைப்பா. ஆனால், நீ இதுபத்தி மூச்சு விடக்கூடாது.

    அகிலேஷ் (கொஞ்சம் யோசித்து): ஏன்க்கா நம்ப அம்மா அப்பா டாடிலாம் அடிக்கடி சண்டை போட்டுக்கறா? நம்ப அம்மாவும் உங்க அப்பாவும் பிரிஞ்சதனாலதானே நீ இங்கேயும் அங்கேயுமா இருக்க வேண்டியிருக்கு. எனக்கும் ஸன்டேஸ்ல போர் அடிக்கிது. அட்லீஸ்ட் நாம சில்ட்ரன்லாம் ஒண்ணா ஒரு இடத்தில இருந்தா எவ்ளோ லவ்லியா இருக்கும்!

    மதுமிதா: கவலைப் படாதே அகில் கண்ணா. நான் அதுக்கு ஒரு ப்ளான் வெச்சிருக்கேன். அது சரியா வரலேன்னா ப்ளான்-B-யும் யோசிச்சு வெச்சிருக்கேன். கூடிய சீக்கிரம் பாரேன், நான் பெரியவங்க எல்லோரையும் ஃபோர்ஸ் பண்ணி நாம எல்லாரும் சேர்ந்து ஒரு வீக்-என்ட் பிக்னிக் போகப்போறோம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா முதல்ல நாம சில்ட்ரென் லெவல்ல ஒண்ணுசேரப் போறோம்.

    தொலைபேசி மணி அடிக்க, பாட்டி விழித்துக்கொள்கிறாள். குழந்தைகள் வாயை மூடிக்கொண்டு தங்கள் ஹோம்-வர்க்கைத் தொடர்கின்றனர்.

    ★★★★★

    மேலுள்ள குட்டிக்கதையானது மேற்கத்திய கலாசாரத்தில் எப்படி பூதாகாரமாகப் பரிமாணம் எடுக்கக்கூடும் என்று கோடிட்டுக் காட்டி ஆங்கிலத்தில் வந்த ஒரு நகைச்சுவைத் துணுக்கின் தமிழாக்கம்:

    ஏற்பட்ட திருமணமும் காதல் திருமணமும்:
    ஒரு கலாசார அதிர்ச்சி

    ரண்டு மனிதர்கள், ஒருவர் இந்தியர், மற்றொருவர் அமெரிக்கர் ஒரு பாரில் பக்கத்தில் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தார்கள்.

    இந்தியர் அமெரிக்கரிடம் சொன்னார்: “என் பெற்றோர்கள் என்னைக் கல்யாணம் செய்துகொள்ளும்படி கட்டாயப் படுத்துகிறார்கள். குடும்பப் பாங்கான ஒரு கிராமப் பெண்ணாம். நான் அவளை ஒரு முறை கூடப் பார்த்ததில்லை!

    “நாங்கள் இதை ’அரேஞ்ட் மேரேஜ்’ என்று சொல்வோம். நான் காதலிக்காத ஒரு பெண்ணை மணந்துகொள்ள எனக்கு விருப்பம் இல்லை. இதை நான் அவர்களிடம் வெளிப்படியாகச் சொல்லிவிட்டதால் குடும்பத்தில் ஏகப்பட்ட குழப்பம்…”

    அமெரிக்கர் சொன்னார்: “’லவ் மேரேஜ்’ பற்றியா நீங்கள் பேசுகிறீர்கள்? என் கதையைக் கேளுங்கள்…

    “மூன்று வருடங்கள் டேட்டிங் பண்ணி நான் ஒரு விதவையைக் கல்யாணம் செய்துகொண்டேன். அவளுக்குக் கல்யாண வயதில் ஒரு மகள் இருந்தாள்… இரண்டு வருடம் கழித்து என் அப்பா என் வளர்ப்பு மகளான அவளைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டார். இதனால் என் தந்தை எனக்கு மருமகன் ஆகிவிட, நான் என் தந்தையின் மாமனார் ஆனேன்! என் மகள் இப்போது என் அன்னையாகி, என் மனைவியே எனக்குப் பாட்டியானாள்!

    “எனக்கு ஒரு மகன் பிறந்தபோது உறவின் குழப்பங்கள் விசுவரூபம் எடுத்தன. என் மகன் என் தந்தையின் சகோதரன், எனவே எனக்கு அவன் அங்க்கிள் ஆனான்! என் தந்தைக்கும் ஒரு மகன் பிறந்தபோது இன்னும் மோசமானது. இப்போது என் தந்தையின் மகன், அதாவது என் சகோதரன் எனக்குப் பேரன்! இப்படியெல்லாம் எங்கள் குடும்பத்தில் இருக்கும்போது நீ உன் குடும்பத்தில் குழப்பம் என்று சொல்வது வேடிக்கை!”

    ★★★★★

    Share
  • நாயும் நானும்!

    குருநாதன் ரமணி
    (முச்சீரிரட்டைச் சமனிலைச் சிந்து)

    என்கரச் சங்கிலி பற்றிநான் – தினம்
    . என்நாய் முன்செலத் திரிவேன்
    தன்புலன் கூர்மையாய்ப் பெற்றநாய் – அது
    . தாள்விரை யக்கரம் நெரிவேன். … 1

    என்னைத் தரதர வென்றிழுக்கும் – பல
    . வெண்ணம் மேலெழ மூச்சிரைக்கும்
    என்மன நாயிது பாய்ந்தோடும் – அதில்
    . என்நிலை தேராய்ச் சாய்ந்தாடும்! … 2

    இங்கது நின்றுமண் நுகரும் – பின்
    . எதுவோ புதர்மேல் நீரிழிக்கும்
    அங்கது நின்றுமண் முகரும் – கால்
    . அகற்றியே கர்மக் கூர்கழிக்கும்! … 3

    இங்கொரு வீட்டுநாய் கண்டால் – பல்
    . இளித்துத் தன்வால் குழைக்கும்
    மங்கிய தெருநாய் நின்றால் – தன்
    . வாயால் குரைத்ததைத் துரத்தும்! … 4

    தலைமேல் பட்டாம் பூச்சியை – அது
    . தாவிப் பிடிக்கப் பார்ப்பதேன்
    நிலைகொள் ளாமனப் பேச்சினில் – அதை
    . நெருக்கியே நசுக்கப் பார்ப்பதோ? … 5

    சுற்றிச் சுற்றியே ஓடுமே – வாய்
    . தொட்டுத் தொட்டுத் தேடுமே
    பற்றிப் பற்றிக் காணுமே – ஒரு
    . பல்லால் இழுத்துக் கோணுமே! … 6

    நாயை ஓர்மனப் படுத்தவே – தொலை
    . நானோர் பந்தை எறிவனே
    பேயைப் போல்கால் விடுப்பிலே – வாய்
    . பெற்றே என்னிடம் சொரியுமே! … 7

    அரணாய் வரனாய் வருநாய் – ஓர்
    . அகநாய்த் திறனாய் உருநாய்
    முரணாய்ச் செலுநாய் மொழிநாய் – நான்
    . உளநாள் பலனாய்க் கடனாய்! … 8

    நாயில் லாமல் நானில்லை – அது
    . ஞானம் தேடும் நாளென்றோ? – இந்
    நோயில் லாமல் நானில்லை – உயிர்
    . நோவலென் றாலுமென் சேயன்றோ? … 9

    *****

    Share
  • ’மம்மி’யாரின் மறுமகள்!

    ’மம்மி’யாரின் மறுமகள்!
    சிறுகதை
    ரமணி

    ம்மா, உன் மாமியார்-மாமனார் உன்னை ஆட்டிவெச்சது மாதிரி நான் ஆகவிடமாட்டேன்”, என்றேன் நான் உறுதியான குரலில்.

    “அதெல்லாம் போன தலைமுறை ஹேமா! நீயும் மாப்பிள்ளையும் ஐ.டி.கம்பெனில வேலை பார்க்கறதனால உங்க மாமியார்-மாமனார் நிச்சயம் அட்ஜஸ்ட் பண்ணிப்பா. அவாளுக்கு ஒரே குழந்தை, அதுவும் பிள்ளைங்கறதால, உன்னை சொந்தப் பொண் மாதிரி பார்த்துக்கறோம், கவலை வேண்டாம்னு கல்யாணம் முடிஞ்சு ஊருக்குக் கிளம்பறச்ச சொன்னால்லயா? அப்புறமென்ன?”

    எனக்கு அம்மா பேரில் முன்பிருந்த எரிச்சல் இப்போது சிரிப்பாக மலர்ந்தது.. என் பிறந்த வீட்டிலேயே சொந்தப் பெண்ணான நான்தான் எல்லா வீட்டு வேலைகளையும் அதுநாள் வரை செய்துவந்தேன்! என் தங்கை வசந்தாவும் ஒரே தம்பி சந்துருவும் தம் ’மம்மி-டாடி’யின் செல்லக் குழந்தைகளாக வளர்ந்தனர். ’நாளைக்கு மாமியார் ஆத்துல இடிச்சுக் காட்டுவா’ன்னு சொல்லியே என்னிடம் எல்லா வேலைகளையும் வாங்கி என்னைக் ’கொடுமைப் படுத்திய’ என் தாயார் இப்போ நாக்கு மேல பல்லைப்போட்டுப் பேசறா!

    “சொந்தப் பொண்ணா நீ என்னை ட்ரீட் பண்ணியே, அதுமாதிரி அவாளும் பண்ணினா நான் சும்மா இருக்கணுங்கறயா?”

    என் கேள்வி அம்மாவைச் சுட்டது அவள் முகத்தில் தெரிந்தது. “எல்லாம் உன் நன்மைக்குத்தான் பண்ணினேன். நீ எல்லா வேலையும் கத்துண்டு பொறுப்பா செஞ்சு பழகினாத்தானே நாளைக்கு உனக்குப் புக்காத்தில ஈஸியாகவும் பெருமையாவும் இருக்கும்? அப்பா-நான் ரெண்டு பேரும் ஸ்கூல் டீச்சரா இருந்து சம்பாதிச்சு உன்னைக் கஷ்டப்பட்டு இஞ்சினியரிங் டிகிரி படிக்கவெச்சதையும் நெனச்சுப்பாரு. சரி விடு, கல்யாணமாகி இந்த மூணு மாசத்தில உனக்கு அங்க எப்படி இருக்கு? அவாகிட்ட உனக்கு ஏதாவது குறை உண்டா?”

    “பெரிசா ஒண்ணுமில்லை. ஆனால், நான் சனி-ஞாயிற்றுக் கிழமைகள்ல மூணு வேளையும் சமையல் பண்ணிச் சுத்து வேலைகளையும் பார்த்துக்கணும்னு மாமியார் எதிர்பார்க்கறார்…”

    “நியாயம் தானே?”

    “என்ன நியாயம்? நானும் விஜய்யும் தினமும் போகவர ரெண்டு மணிநேரம் கம்பெனி கார்ல-பஸ்ல ட்ராவல் பண்றோமாக்கும்! அதைத் தவிரப் பத்து மணிநேரம் ஆஃபீஸ்ல அல்லல் படறோமாக்கும்! சனி-ஞாயிறு ரெண்டு நாள்தான் எங்களுக்கு ஓய்வு. சமயத்தில சனிக்கிழமை கூடப் போகவேண்டியிருக்கு. அந்த ரெண்டு நாள்ல நாங்க காலைல எழுந்துக்கறதுக்கே மணி ஏழு-ஏழரை யாயிறதில்ல! அப்புறம் எங்க சமையல் பண்றது? மாமியார் ஹௌஸ்வைஃப் தானே, பண்ணட்டுமே? நான்தான் சனி-ஞாயிறு ரெண்டு நாள்லயும் சாயங்கால காப்பி-டிஃபன், ராத்திரி டின்னர் ரெண்டும் பார்த்துக்கறேனே, அது போதாதா?”

    “உன் ஆத்துக்காரர் ஒண்ணும் சொல்லலையா?”

    “அம்மா கேட்டா நீ வீக்-என்ட் காலைலயும் சமைக்கணும்னு சொன்னார்.”

    “ரொம்ப மோசம்டீ! இந்தாத்துக்கு ஒரு மாட்டுப்பொண்ணு வந்தா அவள் அப்படிலாம் இருக்க நான் விடமாட்டேன்! ஐ.டி.-வேலைக்குப் போயிண்டே நீ இந்தாத்துல பெரும்பாலும் தினமும் ராத்திரி சமையல் பண்ணுவியே? புக்காத்தில வாரத்தில ரெண்டு நாளாவது எல்லாத்தையும் நீயும் உன் புருஷணும் பார்த்துண்டு அவா ரெண்டு பேர்க்கும் ரெஸ்ட் தர வேண்டியதுதானே? உங்க மாமியார் ஹவுஸ்வைஃப்-னாலும் மாமனார் ஒரு யூ.ஜி.ஸி. கல்லூரி முதல்வரா இருந்து ரிடயர் ஆனவர்தானே? மாமியார் தினமும் ரெண்டு வேளையும் சமையல் பண்ணிப் போடறா, மாமனார் உங்க ரெண்டு பேர்க்கும் காலை ப்ரேக்ஃபாஸ்ட் பரிமாறி, மத்யானம் சாப்பாட்டைக் கட்டிக் கொடுத்தனுப்பறார்னு சொன்னேல்ல, அதுமாதிரி யார் செய்வா சொல்லு? அவா அப்படி அட்ஜஸ்ட் பண்ணிண்டு இருக்கற போது நாமளும் கொஞ்சம் கிவ்-அண்ட்-டேக்-கா இருக்கணும். அப்பதான் ஏதும் பிரச்சனை இருக்காது.”

    “அவா அட்ஜஸ்ட் பண்ணிண்டிருக்கறது எனக்கு ரொம்பத் திருப்தி, சந்தோஷம் தாம்மா? ஆனாலும் நான் முதல்லயே சொன்ன மாதிரி, உன்னை உன் இன்-லாஸ் ஆட்டிவெச்ச மாதிரி என்னை இவா ஆட்டிவெச்சிடக் கூடாதுன்னுதான் நான் இவ்ளோ ஜாக்கிரதையா இருக்கேன். என் அதிர்ஷ்டம் விஜய்யும் எனக்கு சப்போர்ட் பண்றார். கொஞ்சம் இடம் கொடுத்தா எல்லாம் விஸ்வரூபம் எடுத்திரும்னு எனக்கு நல்லாத் தெரியும்.”

    “நீ சொல்றது ஒருவகைல சரிதான். இருந்தாலும் நமக்கும் கொஞ்சம் மனசாட்சி வேணும். நீங்க ரெண்டு பேரும் ஒரே கம்பெனி, காலைல எட்டரை-மணிக்குக் கார்ல ஒண்ணா போயி சாயங்காலம் பெரும்பாலும் ஏழரை மணிக்குக் கம்பெனி பஸ்ல திரும்பி வர்றேள் இல்லையா? வரும்போது ஆத்துக்கு வேண்டிய கறிகாய்-பழம், ஸ்நாக்ஸ் இது மாதிரி வாங்கிண்டு வரலாம் இல்லயா?”

    “ஏழெட்டு தரம் மாமியார் சொல்லிப் பார்த்தார்! டைட் ஆஃபீஸ் வேலல எப்படா வீட்டுக்கு வந்து விழுவோம்னு இருக்கறதால நாங்க பெரும்பாலும் இந்த வேலையை மறந்துடுவோம்! அதான் தினமும் மாலை மாமியார் கோவிலுக்கும், மாமனார் ஸ்கூட்டரை எடுத்துண்டு நண்பர்களைப் பார்க்கப் போறேன்னும் போறா இல்ல, அவாளே கறிகாய்-பழம்லாம் வாங்கட்டுமே?”

    “அப்ப நீங்க ரெண்டு பேரும் ஆத்துக்குன்னு என்னதான் செய்யறேள்?”

    “இப்ப நீதான் மாமியார் மாதிரி பேசறே! உனக்கு ஒருத்தி மருமகளா வந்தா அவள் பாடு பாவம்தான்! நாங்கதான் ரெண்டு பேரும் கைநிறைய சம்பாதிக்கறோமே? வேற என்ன செய்யணும்?”

    “உங்க சம்பளத்தை நம்பியா அவா இருக்கா? உங்க மாமியார்க்கு அவா குடும்பப் பூர்வீக சொத்திலேர்ந்து பணமா ஒரு பெரிய தொகை பங்கா வந்தததும், உங்க மாமனார்க்குக் குறைஞ்சது மாசம் முப்பதாயிரம் ரூபாய் பென்ஷனா வரும்னும் கல்யாணத்துக்கு முந்தியே உங்க அப்பா விசாரிச்சு வெச்சிருக்கார். இன்னிக்கு தேதில மாடியும் கீழுமா ஒரு பெரிய வீட்ல, சுத்தீவர தோட்டத்தோட, எல்லா வசதிகளும் இருக்கற அவா வீட்ல நீங்க இருக்கறதே உங்களுக்கு ஒரு பெரிய கொடுப்பினை. மாடி வீட்டுக்கு மாசம் பதினஞ்சாயிரமும், அது போக அவாளுக்குக் குரோம்பேட்ல இருக்கற மூணு-பெட்ரூம் ஃப்ளாட்லேர்ந்து வேற மாசம் பதினஞ்சாயிரமும் வாடகை வரது. அதனால, பணத்தைப் பொறுத்தவரைக்கும் உங்க சம்பாத்யத்தை நம்பி அவா இல்லேன்னு நல்லாத் தெரிஞ்சுக்கோ…”

    நான் ஒரு மருமகளாக நடந்துகொள்ளும் விதம் எனக்குச் சரியென்றே பட்டது. என்னை இவர்கள் ஆட்டிவைக்க விடமாட்டேன் என்று விஜய்யிடம் சொன்னபோது அவரும் அதை முழுமனதாக ஆமோதித்தார். என் மாற்றுப் பெற்றோர்களுக்கு அப்படியொன்றும் வயதாகி விடவில்லையே? மாமனார் அறுபத்திரண்டு வயதிலும் மாமியார் ஐம்பந்தேழு வயதிலும் விச்சாகத்தானே இருக்கிறார்கள்! தினமும் மூன்று வேளையும் சமையல்-டிஃபன் பண்ணுவதை மாமியார் உவந்தே செய்வதாக எனக்குத் தோன்றியது. நான் முடிந்தபோது உதவுவதிலும் அவர்கள் ஒன்றும் குறைகாணவில்லை என்றும் பட்டது.

    *** *** ***

    ல்யாணமாகி ஒன்பதாம் மாதம் பிறந்த வீடு சென்ற போது அம்மா தன் தொணதொண விசாரிப்பை வேறுவிதமாகத் தொடங்கினாள்.

    “கல்யாணமாகி மாசம் ஒம்பதாறது. காலா காலத்தில ஒரு பிள்ளையோ பொண்ணோ பெத்துக்க வேண்டியதுதானே? ஏதாவது விஶேசம் உண்டா? இதப்பத்தி ஒங்க மாமியார் என்ன சொன்னா?”

    “கல்யாணமாகி வந்த முதல் வாரமே மாமியார் நாங்க நாலு பேரும் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் சாப்பிடும்போது சொன்னார்: ’அடுத்த ஒரு வருஶத்தில ஒரு குழந்தையைப் பெத்துக்கோங்கோ! ஃபாமலி ப்ளானிங் அது-இதுன்னு தள்ளிப் போடாதீங்கோ. வேணும்னா ரெண்டாவது குழந்தைக்கு இடைவெளி விட்டுக்கலாம். காலாகாலத்தில பெத்துண்டாதான் எங்களால பேரனையோ பேத்தியையோ சீராட்டி வளர்க்க முடியும்…’”

    “நாங்க ரெண்டு பேரும் ஒப்புக்கு சரின்னு சொன்னோமே தவிர, எங்களுக்கு ஒரு வருஶத்திலேயே பெற்றோர் ஆறதுல இஶ்டம் இல்லை. ஆகட்டுமே ரெண்டு மூணு வருஶம், இப்பவே என்ன அவசரம்? அப்படி இவாளால பாத்துக்க முடியலேன்னா ஒரு பேபி-சிட்டரை ஏற்பாடு பண்ணிக்கறோம்!”

    “வாயாடி! இதுமாதிரி மாமியார்ட்ட சொன்னயா?”

    “நான் சொல்லலை, விஜய்தான் சொன்னார். அவாளுக்கு மூஞ்சி ஒரு மாதிரி ஆகி அதுக்கப்பறம் இதுபத்திப் பேச்சை எடுக்கல!”

    “ஸோ, உங்க தினப்படி வாழ்க்கை, நீ-மாப்பிள்ளை ஒரு துருவம், மாமியார்-மாமனார் ஒரு துருவம்னு ஒருத்தருக்கொருத்தர் அன்யோன்னியமா பேசிக்காம ஓடறதா?”

    “அப்படீல்லாம் இல்லைப்பா! நீங்க ரெண்டு பேரும் அனாவசியமாக் கவலைப்படறேள்.”

    “உங்க தினசரி வாழ்க்கையைப் பத்திச் சொல்லு, காலைல எழுந்ததுலேர்ந்து ராத்திரி தூங்கற வரைக்கும்…”

    “விஜய் கார்த்தால ஏழு மணிக்குதான் எழுந்திருப்பார். நான் ஆறு மணிக்கே எழுந்து குளிச்சு ஸ்வாமி ரூமை எட்டிப் பார்த்து சத்தமா ரெண்டு ஸ்லோகம் சொல்லிட்டு நெத்தில குங்குமம்-விபூதி கீத்தோட வந்து மாமியாரைக் கொஞ்சம் அசத்துவேன்! அவர் ஒரு சின்னப் புன்னகையோட எனக்கு காப்பி கலந்து தர்றதுக்குள்ள நான் எங்க லஞ்ச்-பாக்ஸ் தேய்ச்சு ரெடி பண்ணி, ப்ரேக்ஃபாஸ்ட் தட்டெல்லாம் எடுத்து டைனிங் டேபிள் மேல வெச்சிருவேன். சமயத்தில ரொட்டித் துண்டுக்கெல்லாம் வெண்ணை-ஜாம் தடவி வைப்பேன். இதுக்குள்ள மாமனார் சந்தியை முடிச்சிண்டு வேஷ்டிக்கு மேல துண்டைக் கட்டிண்டு சாப்பாடு கட்ட வருவார். நாங்க ரெண்டு பேரும் எட்டு மணிக்கு டிஃபன் பண்ணிட்டு சரியா எட்டரை மணிக்கு வண்டி வந்து கிளம்பிப் போவோம்.”

    “சாயங்காலம்?”

    “அதுதான் கொஞ்சம் ட்ரிக்கி! கம்பெனி பஸ்ஸைப் பிடிச்சுக் கேம்ப் ரோடுல இறங்கிப் பத்து நிமிஷம் நடந்து ஏழறை மணிக்கு ஆத்துக்குள்ள நுழையற போதே அப்பாடான்னு இருக்கும்! மாமியார் ஹால்ல டீவியை ஓடவிட்டு சமையல் கட்டுல இருப்பார். தினமும் சாயங்காலம் ஸ்கூட்டர்ல ஊர் சுத்தற மாமனார் அவா ரூம்ல உக்காந்து லேப்டாப்ல உலகத்தச் சுத்திண்டிருப்பார்! நாங்க தினமும் ஆஃபீஸ் ஃபுட்கோர்ட்ல நாலு மணி வாக்ல காபி-டிஃபன் சாப்ட்ருவோம். அம்மா-அப்பாட்ட ஹலோ சொல்லிட்டு விஜய் ஸ்டடி ரூம்ல நுழைஞ்சார்னா எட்டரை மணிக்கு சாப்பிடும் போதுதான் வருவார். எனக்கும் தினமும் ஃபேஸ்புக்-ல அரட்டை அடிக்கணும்! மாமியார்ட்ட ஏதாவது வேலை இருக்கான்னு கேட்டாத் தலைல கட்டிடுவார்னு தெரியும்! கொஞ்ச நேரம் குட்டிபோட்ட பூனை மாதிரி ஹால்ல குறுக்கும் நெடுக்குமா நடந்திண்டிருப்பேன்! அப்புறம் நைஸா நானும் ஸ்டடி ரூம்ல என் லேப்டாப் பார்த்திட்டு எட்டே-கால் மணிக்கு எங்க நாலு பேர்க்கும் சாப்பிடத் தட்டுவெச்சு, மாமியார் சமைச்சு வெச்ச பண்டங்களை டேபிள்ல கொண்டுவைப்பேன். சாப்பிடும் போது எல்லோரும் சிரிச்சு நல்லாத்தான் பேசிண்டிருப்போம். சாப்டதுக்கப்புறம் மாமியார் டீவில மூழ்கிடுவார். சமயத்தில வீட்ல பொதுவா இருக்கற டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்ல மேய்வார். நானும் விஜய்யும் எங்க லேப்டாப்பை எடுத்துண்டு ஒம்பதரை மணிக்கு பெட்ரூம் நுழைஞ்சு கம்ப்யூட்டர்ல இங்கிலிஶ் டீவி சீரியல் பார்த்துட்டு பத்தரை மணிக்குத் தூங்குவோம். அவா ரெண்டு பேரும் எப்போ தூங்கறா எப்போ எழுந்திருக்கறான்னு நாங்க குறிப்பா கவனிச்சதில்லை!”

    “நீ ரொம்ப லக்கி அக்கா! உனக்கு அவர் மாமியார் இல்லை; மம்மி மாதிரி பார்த்துக்கறதால ’மம்மி’யார்தான்!”, என்றாள் என் தங்கை.

    “அந்த ’மம்மி’யார்க்கு நீயும் ஒரு மாட்டுப் பொண்ணா இல்லாமா ’மறுமகளா’ நடந்துக்கறாயான்னு அப்பப்ப நிச்சயம் பண்ணிக்க”, என்றான் என் தம்பி.

    இவர்களுக்கு எங்கிருந்து இவ்வளவு வாய் வந்தது என்று எனக்கு ஆச்சரியாமாக இருந்தது. “அது எனக்குத் தெரியுமே! இவ்ளோ நாள் ஜாக்கரதையா இருந்திட்டேன் இல்ல? இனிமே கொஞ்சம் நல்ல பொண்ணாப் படம்காட்ட வேண்டியதுதான்!”

    *** *** ***

    டுத்த மூன்று மாதத்தில் என் ’மம்மி’யார்-மாமனார் கொஞ்சம் தம் சுயரூபத்தைக் காட்டுவதுபோல் தெரிந்தது! ஒரு சனிக்கிழமை மதியம் நாங்கள் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது கூடத்தில் குரல் கேட்டு விழித்துக்கொண்டேன். மெல்லிய குரலில் அவர்கள் பேசிக்கொண்டாலும் எனக்குத் தெளிவாகக் கேட்டது.

    “போன மாசம் ரெண்டு நாள் நாம மதுரைக்கு ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தபோது இவா ரெண்டு பேரும் வீட்ல சமைக்கவே இல்ல, பார்த்தேளா? கேட்டதுக்கு விஜய் சொன்னதா அவள் என்ன சொன்னா, ஞாபகம் இருக்கா? தினமும் வீட்டுச் சாப்பாடுன்னு போர் அடிச்சதுனால கேட்டரிங் ஆர்டர் பண்ணி காலம்பற-மத்யானம் சாப்ட்டாளாம். ராத்திரிக்கு ஜாலியா ஹோட்டல் போய் நார்த் இண்டியன் டிஶ்ஶஸ் சாப்டாளாம்.”

    “எனக்கும் அது பிடிக்கல பத்மா! இந்தப் பயலும் தோட்டத்துக்குத் தண்ணி ஊத்தாம செடியெல்லாம் வதங்கிப் போய் நான்தான் சரிபண்ணினேன்!”

    “ஆமாம், அவள் நித்யமல்லி, அரளிப் பூக்கூடப் பறிக்கலை! ரெண்டு வேளையும் ஸ்வாமி விளக்கக் ஏத்தினேன்னு சொன்னதுகூட சந்தேகம்தான்! இப்படிக் கொஞ்சம் கூட வீட்டுப் பொறுப்பு, குடும்பப் பொறுப்பு இல்லாம இவா இருக்கறதுக்கு ஒரு வழி பண்ணியே ஆகணும்!”

    “என்ன செய்யலாம் சொல்லு?”

    “என் சமையலை தினமும் சாப்டறது அவாளுக்கு போர் அடிக்குதில்ல? நம்ம குரோம்பேட் வீடுதான் இப்போ காலியா இருக்கே? அங்க போயி கொஞ்சநாள் தனியா இருந்துக்கோங்கோன்னு அனுப்சிடலாமா?”

    “இவா கொஞ்சநாள் தனியா இருந்து பழக வேண்டியதுதான். ஆனால் குரோம்பேட்ல கம்பெனி பஸ்ல இறங்கி ஆத்துக்கு வர ரொம்ப தூரம் நடக்கணுமே? அதனால ஒண்ணு செய்வோம். இவாள இந்தாத்தில தனியா விட்டுட்டு நாம அங்க போய்டலாம். ஒரு வருஷம் இருந்து இவா எப்படி சமாளிக்கறான்னு பார்ப்போம். நாளைக்குக் காலைல இதுபத்தி பேசி முடிவுசெய்வோம்…”

    எனக்குத் திகீரென்றது. அன்று மாலை அவர்கள் இருவரும் ஒரு கல்யாண ரிஸப்ஶன் சென்றுவிட, விஜய்யிடம் விஶயத்தைச் சொல்லி ஆலோசித்தேன். பேசாமல் அவர் தன் மம்மி-டாடிக்கு அவர்கள் எதிர்பார்க்கும் மகனாகவும், நான் என் ’மம்மி’யார்-மாமனாருக்கு ’மறுமகள்’ என்றும் மாறினால்தான் இதுவரை கிடைத்த சுகத்தை அனுபவிக்க முடியும் என்று தோன்றியது.

    அன்று இரவு அவர்கள் வீடு திரும்ப இரவு மணி பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் எல்லோரும் காலை எட்டுமணி வாக்கில் எழுந்தால் போதும் என்று சொல்லிவிட்டு இருவரும் தூங்கச் சென்றனர்.

    *** *** ***

    றுநாள் காலை என் ’மம்மி’யார்-மாமனார் எழுந்த போது சமையல் கட்டில் குக்கரின் விசில் கேட்டு அசந்துவிட்டனர்! ஸ்வாமி விளக்கேற்றி ஊதுபத்தி மணந்துகொண்டிருக்கப் பூவெல்லாம் பறித்து ஒவ்வொரு படத்திற்கும் வைத்திருந்தேன். கூடத்தில் நடு விளக்குச்சரத்தில் இருந்த எம்.பி.3 பிளேயர் மெதுவாக உமா மோகன் குழுவினர் பாடும் ஸ்தோத்திரங்களை ஒலித்துக் கொண்டிருக்க, நான் ஒரு தட்டில் இரண்டு டபரா-டம்ளர்களில் காப்பியின் மணம் மூக்கைத் துளைக்க, ஹால் சோஃபாவில் அவர்களை அமர்த்திக் கொடுத்தேன். விஜய் ஆழ்துளைக் கிணற்று மோட்டரைப் போட்டுவிட்டு, ஹோஸ் பைப்பால் தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.

    “போன மூணு மாசமா நீ தூரமா இருந்து குளிக்கலை போலிருக்கே? ஏதாவது விசேஶமா?”

    “அப்படித்தான் போலிருக்கும்மா!”

    “சரி, சாயங்காலம் நம்ப ஃபேமலி லேடி டாக்டர் சாந்தாட்ட போய் செக் பண்ணிப்போம். விஜய்யும் கூட வரட்டும்.”

    *** *** ***

    Share
  • தெய்வ தரிசனம்: ஆடிக் கிருத்திகை: முருகன் துதி

    ரமணி

    தெய்வ தரிசனம்: ஆடிக் கிருத்திகை: முருகன் துதி

    images

    (எழுசீர்ச் சந்த விருத்தம்:
    தான/தனன தானன/தனன தான/தனன தானன/தனன
    . தான/தனன தானன/தனன தானனா)

    ஆறு படைகளில் ஆல யங்கொளும் ஆறு மாமுக வேலனே
    ஏறு மாமயில் சேரும் மாவிணை ஈச னுமைமகன் பாலனே
    கூறு மாவடி யார்ம னத்தினில் கோலம் கொண்டமர் குமரனே
    சேறு வொன்றையே சீந்து மென்மனம் சேயெ னக்கருள் அமரனே. … 1 (2)

    [மாவிணை = அழகிய இரு மனைவியர்]

    ஓது மாமறை உன்ன தம்வரும் உன்னைப் பாடிடும் போதிலே
    யாதும் நீயெனும் ஞானம் வந்திடும் யானி லங்குள மீதிலே
    சோத னைபல தந்த ருள்குகன் சூர பதுமனின் காலனே
    தீத ழிந்துளம் நன்மை நாடவே சேயெ னக்கருள் பாலனே. … 2 (2)

    ஆழ்ம னத்துயர் நீக்கி ஞானமென் றாழ்ம னத்துயர் வாகவே
    பாழ்ம னத்தினில் பற்று நீங்கிடும் பான்மை யென்நெறி யாகவே
    ஊழ்வி னையடி யோடு நீங்ககண் ணொற்றி னேன்குகன் பாதமே
    வாழ்வி லேயினி வைய மேயிது மாயை யாமெனும் போதமே. … 3 (2)

    –ரமணி, 28-07-2016, கலி.13/04/5117

    *****

    Share
  • தெய்வ தரிசனம்: 08. கோவிந்தன் கோலம்

    ரமணி

    08. கோவிந்தன் கோலம்

    Tamil-Daily-News-Paper_82039606572

    (குறும்பா)

    கோவிந்தன் நாமத்தைப் பாடுவமே
    பாவுந்தும் பொருள்தன்னில் ஆடுவமே
    . கோவிந்தன் ஆவிடையன்
    . நாவுந்தக் காவிடையன்
    நாவிந்தப் பேராழத் தேடுவமே. … 1

    [காவிடையன் = காக்கும் இடையன்]

    கண்ணனாக வந்துதித்த போதினிலே
    கண்ணாயிரன் கருவத்தின் கோதறவே
    . இந்திரனின் பூசையிலை
    . இந்தமலை பூசையிலே
    கண்ணனாணை கோபர்கள் காதினிலே. … 2

    [கண்ணாயிரன் = ஆயிரம் கண்ணுடைய இந்திரன்; கோது = குற்றம்]

    மழைவேந்தன் வெள்ளத்தால் தாக்கிடவே
    குழல்வேந்தன் கோவர்த்தன் தூக்கிடவே
    . கோவிந்திரன் நேர்வந்தான்
    . கோவிந்தன் பேர்தந்தான்
    விழைவேந்த கோவிந்தன் போக்கிடமே. … 3

    கோவென்றே பூமியின்பேர் உற்றிடுமாம்
    கோவிந்தன் பூமிதேடிப் பெற்றவவனாம்
    . பன்றியாக ஆழ்கடலில்
    . சென்றுபூமி மீட்டிடலில்
    கோவிந்தன் பேர்வந்த கொற்றவனாம். … 4

    கோவென்றால் புலனென்றும் பொருளுண்டே
    கோவைந்தால் உள்ளத்தில் மருளுண்டே
    . கோவைந்தும் கட்டுணவே
    . கோவிந்தன் உட்டுணையே
    நாவுந்தும் நாமத்தில் அருளுண்டே. … 5

    [உட்டுணை = உள்துணை]

    மலையேறும் போதினிலே கோவிந்தா
    நிலையாகும் காதினிலே கோவிந்தா
    . சங்கீர்த்தனம் கோவிந்தா
    . சங்கரர்பா கோவிந்தா
    தொலையாத பாவம்கொள் கோவிந்தா! … 6

    [சங்கரர்பா கோவிந்தா = ஆதிசங்கரரின் ’பஜகோவிந்தம்’]

    –ரமணி, 26/11/2015, கலி.10/08/5116

    உதவி:
    கோவிந்தன் என்ற சொற்பொருள்
    https://ta.wikipedia.org/wiki/கோவிந்தன்_என்ற_சொற்பொருள்

    purAnic encyclopedia: vETTam maNi

    *****

    Share
  • தெய்வ தரிசனம்: 07. மாதவன் மகிமை

    ரமணி

    07. மாதவன் மகிமை

    (குறும்பா)

    மாதவனின் பேர்சொல்லும் பேறிதே
    மாதவத்தின் பலனென்றே ஆவதே
    . முற்பிறப்பின் தவமென்றே
    . இப்பிறப்பின் நலமென்றே!
    வேதனைகள் தீர்த்துவைக்கும் பேரிதே. … 1

    சராசரியாம் மனிதனுமே அறியவே
    பராசரராம் பட்டரவர் உரையிலே
    . மாதவனின் பேர்விளக்கம்
    . யாதெனவே வேர்விளக்கம்
    பிரார்த்தனையாம் நாமமெனத் தெரியுமே. … 2

    மாவென்னும் அட்சரத்தின் மௌனமே
    தவென்னும் அட்சரத்தின் தியானமே
    . மோனத்தில் உருவற்ற
    . தியானத்தைத் தருவிக்க
    வவென்னும் அட்சரத்தின் யோகமே. … 3

    [பராசர பட்டரின் விஷ்ணு ஸஹஸ்ரநாம உரை]

    மதுவித்தை சாதனையில் ஆதவனே
    மதுவென்றே சங்கரரின் போதனையே
    . உண்ணாத அமுதாகவே
    . கண்ணாலே நமதாகவே
    அதுவென்னும் பரம்பொருளாம் மாதவனே. … 4

    [ஆதிசங்கரரின் சாந்தோக்ய உபநிடத உரை]

    ஹரிவம்சம் சொல்லுகின்ற பொருளாமே
    பரமாத்ம ஞானத்தின் அருளாமே
    . பேரறிவின் போதனையாய்
    . வேரெனவே மாதவனாம்
    உரையெல்லாம் இப்பொருளில் உருவாமே. … 5

    அஞ்சுபுலன் நம்சித்தம் ஆட்கொள்ளும்
    சஞ்சரிக்கும் மனதையதன் மேற்தள்ளும்
    . வெளியுணர்வில் ஈடுபடும்
    . நளிவுள்ளம் பாடுபடும்
    தஞ்சமெனப் பலநிலைகள் மேற்கொள்ளும். … 6

    [நளிவுள்ளம் = செருக்கினைக் கொள்ளும் உள்ளம்]

    புறவுணர்வைக் கட்டுதற்கு மௌனமாம்
    அறிவதனில் அமிழ்ந்திருக்க தியானமாம்
    . நூலறிவால் ஏற்பட்ட
    . வாலறிவின் பாற்பட்டு
    பொறியற்று நிலைநிறுத்த யோகமாம். … 7

    [வாலறிவு = பேரறிவு, உண்மை]

    மாவென்று திருமகளின் பேரதுவே
    மாவென்னும் முதலெழுத்தின் வேரதுவே
    . செல்வமெலாம் திரமாக
    . செல்வதெலாம் அறமாக
    வாவென்றால் வரமருளும் சீராமே. … 8

    –ரமணி, 19/11/2015, கலி.03/08/5116

    உதவி:
    மாதவன் என்ற சொற்பொருள்
    https://ta.wikipedia.org/wiki/மாதவன்_என்ற_சொற்பொருள்
    purAnic encyclopedia: vETTam maNi

    *****

     

    Share
  • தெய்வ தரிசனம்: 06. நாராயணா என்னும் நாமம்

    தெய்வ தரிசனம்

    06. நாராயணா என்னும் நாமம்

    images
    (குறும்பா)

    நாராய ணாவென்னும் பேரினிலே
    வேராக உள்ளிருக்கும் சீரினிலே
    . ஏறிநிற்கும் பொருளெல்லாம்
    . ஊறிநிற்கும் அருளெல்லாம்
    ஆராயப் புகுவோமிப் பாவினிலே. … 1

    நரவென்னும் சொற்பொருளாய் ஆன்மாவாம்
    நரத்தினின்று வருவதெலாம் நாராவாம்
    . அயனமெனில் இருப்பிடமாம்
    . வியனுலகின் பிறப்பிடமாம்
    உருவத்தின் உள்ளீடாய் நாரணனாம். … 2

    நரம்தந்த வெளியீடே வான்வெளியாம்
    விரிகாய வெளியீடாய்த் தான்வளியாம்
    . காற்றதுவே தீயாகி
    . நீராகி நிலமாகும்
    நரம்விளைத்த பேரதுவே நாராவாம். … 3

    நாரமதே நாரணனின் உறைபொருளாம்
    காரணோத கம்சொல்லும் மறைபொருளாம்
    . அஞ்சுபூதம் இயல்தனியே
    . அப்புவெனும் பெயரிலினிலே
    பேரணவும் படைப்பாகும் இறைபொருளாம். … 4

    [பேர்-அணவும் = பெயர் பொருந்தும்]

    உயிருள்ள உருவுள்ளே நாரணனே
    உயிரற்ற உருவுள்ளே நாரணனே
    . உயிருள்ளதோ இல்லாததோ
    . பெயருள்ளதோ இல்லாததோ
    பெயரற்ற உள்ளமைதி நாரணனே. … 5

    நீராடும் போதினிலே நாமமென
    நாராய ணன்நாமம் சேமமென
    . எட்டெழுத்து மந்திரமே
    . கட்டுமனம் தந்திடுமே
    வேரோடும் செய்கையெலாம் ஏமமென. … 6

    [ஏமம் = களிப்பு, இன்பம்]

    நாரணனின் நினைவுவரும் இறுதிமூச்சே
    வேரறுக்கும் பிறப்பென்றே உறுதியாச்சே
    . கருமமுறும் சோதனையோ
    . கருமமறு சாதனையோ
    சீரிதுவே உயிரொன்றின் அறுதியாச்சே. … 7

    ஓம்நமோ நாராய ணாயவென்றே
    போம்வினைப் பாராய ணமாமென்றே
    . எட்டெழுத்து மந்திரமே
    . உட்டுளையாய் வந்துறினே
    நாம்மேன்மை கொள்வதற்கா தாயமென்றே. … 8

    [உட்டுளை = உள்+துணை]

    –ரமணி, 12/11/2015, கலி.26/07/5116

    *****

     

    Share
  • தெய்வ தரிசனம்

    -ரமணி

    05. கேடுநீக்கும் கேசவன்

    (குறும்பா)

    கேசியெனும் தானவனைக் கொன்றேநீர்
    கேசவனாம் பேர்தன்னைக் கொண்டீரோ?
    . குழலழகர் கூந்தலதே
    . அழகெல்லாம் ஏந்துவதே
    நேசமுடன் போற்றுவமே இன்றேநாம்!… 1

    [தானவன் = அசுரன்]

    சடைமுடியே ராகவனின் தலையினிலே
    பிடரிமயிர் நரசிம்மம் கலையெனவே
    . சிக்கமெலாம் மும்மூர்த்தி
    . சக்தியென இம்மூர்த்தி
    இடையூறு நீக்கும்தாள் தலையிதுவே!… 2

    [சிக்கம் = உச்சி மயிர்]

    கண்ணனுக்கோ வண்ணமயில் கேசந்தான்
    எண்ணமெலாம் மாயவனின் நேசந்தான்
    . காதலிப்பர் கோபியரே
    . ஆதுரத்தில் பாபியரே
    கண்ணன்மேல் நம்நெஞ்சில் பாசந்தான்!… 3

    [ஆதுரம் = பரபரப்பு, வியாதி]

    ககரமெனில் பிரமனவன் பேராமே
    அகரமதோ விட்டுணுவின் பேராமே
    . ஈசனுரு கொண்டவரும்
    . நேசமுடன் ஒன்றுவரே
    பகவனிவர் பரம்பொருளாம் சீராமே!… 4

    தண்ணுலவும் கேசமெனும் கிரணமிதே
    மண்டலத்தில் உள்ளுறையும் அருணமிதே
    . கொண்டிடிவார் அவதாரம்
    . விண்டிடுவார் பவரோகம்
    கொண்டல்வண் ணன்போற்றத் தருணமிதே!… 5

    கேசவனே கேடுகளை நீக்குபவர்
    கேசவனே கேசரியாய்த் தாக்குபவர்
    . பண்ணுறுமே பூவுறுமே
    . கண்நிறுத்த நாவறுமே
    கேசவனின் கேசம்தாள் நோக்குவமே!… 6

    *****

     

    Share
  • வெண்பாவில் விடுகதைகள்

    வெண்பாவில் விடுகதைகள்

    ரமணி

    தமிழில் விடுகதைகளுக்குப் பஞ்சமே யில்லை. ஒருவரியில் இருவரியில் பலவரியில் என்று அவை ரத்தினச் சுருக்கமாகவோ வெற்றிலைப் பெருக்கமாகவோ காணப்படுகின்றன. முதலில் புதிராகவும் விடையை அறிந்தபின் வியப்பாகவும் காணும் விடுகதைகளை வெண்பாக்களில் சேகரித்து எழுதுவோம். சின்னச் சின்ன விடுகதைகளைக் குறட்பாவில் எழுதலாம்.

    விடுகதை ஒன்றைக் குறட்பாவிலோ, மற்ற வகை வெண்பாவிலோ அமைக்கக் கீழ்வருவது போன்ற விதிகளை அமைத்துக்கொள்ளலாம்.

    1. குறட்பாவானால், பொதுவாக ஈற்றடியில் உள்ள மூன்று சீர்களில் ஒன்றில் விடை அமைய வேண்டும். வெண்பாவானால் விடை பொதுவாக ஒரு சீருக்குள் எந்தச் சீரிலும் அமையலாம். விடை மறைமொழியாக, சீரின் பெரும்பான்மை எழுத்துகளை வைத்துக் கண்டறிவதாக அமையும்.

    2. விடைச்சொல் சிதைவோ புணர்ச்சியோ உறாது அதுவாகவே அமைய வேண்டும். புணர்ச்சி தவிர்க்க முடியாத போது புணரும் எழுத்தை அடைப்புக் குறிகள் மூலமோ வேறு விதத்திலோ காட்டுதல் நலம்.

    3. விடைச்சொல் மறைமொழி யாவதால் அது மற்ற சீர்களுடன் இலக்கணத்தில் பொருந்தி நின்றாலும் பொருளில் பொருந்தாது நிற்குமாதலால் அதை இனங்கண்டு கொள்வது எளிதாகுமாறு அமைக்க வேண்டும்.

    4. விடைச்சொல்லைப் பலவிதமான மறைமொழிகளில் (encryption) கூறலாம். எவ்வித மறைமொழி உத்தியாயினும் விடை எளிதில் காண முடிவதாக இருக்கவேண்டும்.

    5. மறைமொழியும் பொருளுடன் அமைந்தால் விடை காணுவது சுவையான சிக்கலாக இருக்கும். பொருளில்லாதோ வேற்று மொழிச் சொல்லாகவோ அமைந்தாலும் தனித்து நின்று கண்பட்டு விடை காண வைக்கும்.

    6. சில மறைமொழி உத்திகள்:
    6.1. விடைச்சொல்லில் அதிக பட்சம் இரண்டு எழுத்துகளை மறையாக்கலாம், ஒற்றுகள் தவிர்த்து. ஒற்றுகளை மாற்றக்கூடாது.

    6.2. மறையாகும் எழுத்து விடையின் எழுத்தைச் சேர்ந்த இனமாக–குறிலெனில் குறிலாக, நெடிலெனில் நெடிலாக–இருக்கவேண்டும். அவ்வாறு வரும் குறில்/நெடில் தகுந்த முந்தைய அல்லது பின்வரும் எழுத்தாக அமைந்தால் விடைகாண எளிதாக இருக்கும். தள்ளியுள்ள எழுத்துகளாகவும் அமையலாம்.

    உதாரணமாக, ’பட்டு’ என்னும் விடைச்சொல்லை முன்பின் அடுத்துள்ள எழுத்துகள் மூலம் ’நட்டு, மட்டு, மிட்டு’ என்று அமைக்கலாம். தள்ளி வரும் எழுத்துகள் மூலம் ’கட்டு, முட்டு, மொட்டு’ என்று அமைக்கலாம்.

    6.3. விடைச்சொல்லின் எழுத்துகள் இடம் மாறியோ, ஒலி மாறியோ வரலாம். சான்று: ’சிவா’ என்பது ’வாசி’ அல்லது ’விசா’ என வரலாம்.

    6.4. இரண்டு எழுத்துகளை மறைக்கும் போது ஒன்றின் மறை அருகில் வருவதாகவும் மற்றது தள்ளி வருவதாகவும் அமைக்கலாம். சான்று: ’பெண்மணி’ என்பதைத் ’தண்பணி’ எனலாம்.

    6.5. இருசொல் விடைகள்:
    சற்றுக் கடினமான விடுகதைகளில் விடை மறைமொழியாக இரண்டு சீர்களில் இருக்கும். இவ்விரண்டு சீர்கள் வெண்பாவில் ஏதோவோர் அடியில் ஒன்றையொன்று அடுத்துவரும். இரண்டு சீர்களிலும் உள்ள எழுத்துகளில் ஒற்றுகள் தவிரித்து இரண்டு முதல் நான்கு எழுத்துகள் வரை மாறியிருக்கலாம். குறில் நெடில் ஒன்றுக்கொன்று மாறியும் வரலாம். சீரில் உள்ள எழுத்துகளில் பெரும்பாலானவற்றை வைத்து விடையைக் கண்டறிய வேண்டும். உதாரணமாக,

    எரியும் விளக்கில் எரிவதோ எண்ணை?
    எரியும் கிழக்குத் தெரு.

    இந்தக் குறட்பாவில் விடை மறைமொழி: கிழக்குத் தெரு; விடை: விளக்குத் திரி.

    6.6. வேறுவித உத்திகளைக் கையாளுவோர் அவற்றை இந்தப் பட்டியலில் சேர்க்கலாம்.

    *****

    வெண்பாவில் விடுகதை: உதாரணம்

    அடித்தால் வலித்திட ஆனை விரும்பும்
    கடித்தால் நுனியில் கசக்கும் – அடியில்
    இனிக்கும் மதுரம் இலையது கீறும்
    கனமான புல்லாம் எறும்பு.

    இந்த வெண்பாவின் ஈற்றடியின் ஈற்றுச்சொல் வெண்பாவின் பொருளுடன் ஒட்டாமல் நிற்பதால், அதுவே விடை மறைமொழி என்று அறியலாம். ஒற்று மாறாதிருக்க, ’எறும்பு’ என்னும் சொல்லில் இரு குறில் எழுத்துகள் மட்டும் மாறியிருக்க, மற்ற எழுத்துகளை இந்தச் சொல்லில் அமைத்துப் பார்த்தால் ’கரும்பு’ என்னும் விடை எளிதில் கிடைக்கும். இப்போது கரும்பு என்னும் விடையை வெண்பாவில் அமைத்துப் பார்த்தால் அது பொருளுடன் ஒன்றுவது தெரியும்.

    *****

    வெண்பாவில் விடுகதைகள்: வாசகர் விடை காண

    இனி, வாசகர்கள் விடை கண்டறிய, மற்ற வெண்பா விடுகதைகள் ஒவ்வொன்றாக இந்த இழையில் வரும், ஒன்றின் விடை தெரிந்ததும் அடுத்தது என்ற நிரலில்.

    1. ஆலமரம் தூங்க…
    (அளவியல் இன்னிசை வெண்பா)

    ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்கவும்
    பாலாழி வண்ணனும் பாம்பணையில் தூங்கவும்
    கோலமில் லாவொருவன் போய்வருவான் கண்விழித்தே
    ஓலமுடன் பேர்கேட்டால் போச்சு.

    (தொடரும்)

    *****

    Share
  • தெய்வ தரிசனம்

    -ரமணி

     04. பிரமனுக்கேன் ஆலயமில்லை?

    (தரவு கொச்சகக் கலிப்பா)

    [காஞ்சி மகாபெரியவர் உரையிலிருந்து திரட்டிய செய்திகள்]

    நான்முகனாய் நாரணனின் நாபியிலே தோன்றியுமே
    நான்முகமும் எப்போதும் நான்மறையை ஓதியுமே
    வான்முதலாய் வைத்துலகும் மானிடரும் ஆக்கியுமே
    ஏனோநான் முகனுக்கே எங்கணுமே கோவிலிலை! … 1

    படைப்பின்றேல் காப்பில்லை பண்ணியதை அழிப்பதில்லை
    உடைத்தழிக்கும் பித்தனவன் உன்னதமாய் ஆலயத்தில்
    நடைமுறையைக் காத்தருளும் நாரணனும் ஆலயத்தில்
    படைப்புதரும் பிரமனுக்கோ பண்ணில்லை கோவிலிலை! … 2  brahma

    வீட்டினிலே வழிபாட்டில் விடையவனும் விட்டுணுவும்
    பாட்டினிலே புகழ்ந்தேத்தப் பலதெய்வம் படமாக
    நாட்டினிலே எல்லோரும் நாடுதெய்வ வழிபாட்டில்
    ஏட்டினிலே செய்கையிலே இடமில்லை பிரமனுக்கே! … 3

    மூன்றுதேவர் பத்தினியும் முறையாக வழிபாட்டில்
    ஊன்றிநிற்க உமையன்னை உள்ளத்தில் திருமகளாம்
    தோன்றுஞானம் தந்திடவே தொழுதிடுவோம் நாமகளை
    ஆன்றவனாம் அந்தணனாம் ஆரணனுக் கேதுமிலை! … 4

    பிரும்மமெனப் பரம்பொருளே பேர்பெற்றி ருந்தாலும்
    பிரும்மவித்தை பேரெனவே பிரும்மஞானம் ஆனாலும்
    பிரும்மானந் தம்நிலையாய் பிரும்மவித்தை யானாலும்
    பிரமனுக்கோ கோவிலிலை பேர்சொல்லிப் போற்றவிலை! … 5

    ஆரணத்தின் ஒலியாலே அனைத்துலகும் உருவாக்கும்
    ஆரணனாய்த் தந்தையென அனைத்துயிர்க்கும் வேராகிச்
    சீரணவும் பிரமனுக்கோ சிறப்புவழி பாடிலையே!
    காரணத்தைத் விளக்குவரே கருணைமிகு காஞ்சிமுனி. … 6

    [சீரணவும் = சீர் பொருந்திநிற்கும்]

    பிறவியிதைத் தருகின்ற பிரமனுக்கா வழிபாடு?
    பிறவியிதே ஈனமெனப் பேரின்ப நிலையிருக்க
    பிறவியிதன் போக்கினையே பிரம்மலிபி தலையெழுதப்
    பிறவியிதைத் தருகின்ற பிரமனெவண் வழிபடவே! … 7

    நம்பிறவிக் காரணமாய் நான்முகனெங் ஙனமாவான்?
    நம்பிறவி அமைவதெலாம் நம்வினைகள் துய்ப்பதற்கே
    நம்பிறவிப் போக்கொன்றே நம்தலையில் எழுதிவைக்கும்
    அம்பாவான் பிரமனவன் அம்பெய்த வர்நாமே! … 8

    பாலனத்தைச் செய்பவராய்ப் பரந்தாமன் ஆனாலும்
    சூலத்தாற் கொல்பவராய்ச் சொக்கனவர் ஆனாலும்
    ஏலுவரே இருவருமே எதுவுமருள் தெய்வமெனக்
    கோலமிகு இந்தநிலை குரவனுக்கோ என்றுமிலை! … 9

    [பாலனம் = பாதுகாப்பு; ஏலுவரே = தகுதியாவரே; குரவன் = பிரமன்]

    பாலனத்தைச் செய்பவளாய்ப் பாற்கடலாள் ஆனாலும்
    சூலத்தாற் கொல்பவளாய்த் துர்க்கையவள் ஆனாலும்
    ஏலுவரே இருவருமே எதுவுமருள் தெய்வமெனக்
    கோலமிகு இந்தநிலை குரவனுக்கோ என்றுமிலை! … 10

    பரம்பொருளால் ஆனாலும் பரம்பொருளாய்த் தோன்றாத
    பிரமனைமற் றிருவருடன் பேசுமுறை இல்லையென
    உருவமேதும் ஆலயத்தின் உள்ளறையில் வைக்காமல்
    கருவறைவி மானத்தில் காணவைத்த உருவெனவே! … 11

    மூவரிலே ஒருவரென முன்னிற்கும் பிரமன்பேர்
    ஆவதெவண் என்பதனை ஆன்றமுனி சொன்னசெய்தி:
    பூவுலகம் அண்டமெலாம் பொருந்திநிற்கும் பரம்பொருளே
    மேவிவரும் லீலையென வேதாவைச் செய்ததுவே. … 12

    [வேதா = பிரமன்]

    ஆடவர்பெண் சேர்க்கையிலே அவனியெலாம் செய்பிரம்மம்
    தோடணியான் நாமகளைச் சோதரராய்ச் செய்ததுடன்
    நீடுமாலும் அம்பாளும் நிலையினிலே சோதரராய்
    நாடுகின்ற போகநிலை ஞானநிலை தருவதற்கே. … 13

    [தோடணியான் = காதில் தோடணிந்த சிவன்; நீடுமால் = நிலைத்திருக்கும் திருமால்]

    உலகியலும் ஞானமுமே ஒன்றாகக் கலப்பதெனத்
    தலைப்பட்ட பிரம்மமது தம்பதியாய்ச் சோதரர்க்கு
    விலையொன்றைத் தருவதற்கே வேதாவை இலக்குமியை
    நிலைபேற்றில் சோதரராய் நிற்பதெனச் செய்ததுவே. … 14

    அரன்-உமையாள் அரி-கமலை அயன்-வாணி எனமூன்றாய்
    உருவான தம்பதியில் முதலிருவர் முழுமுதலாய்
    இருந்திடவே பின்னிருவர் எழுஞானம் ஒன்றுமட்டும்
    அருள்வதற்கே தெய்வமாக ஆலயத்தில் நின்றிலையே. … 15

    பிரமனவர் குருவாகப் பாற்கடலோன் பின்னின்றே
    பிரம்மவித்தை ஞானமெனும் பேற்றினையே அருளுவதால்
    உருவமென ஆலயத்தின் உள்ளில்லா பிரம்மதேவன்
    குருவாக நாம்போற்றிக் கூடுதரும் பிறப்பறுப்போம். … 16

    [குறிப்பு:
    மேல்விவரம்: தெய்வத்தின் குரல், பாகம் 5, பக். 187-230]

    *****

    Share
  • தெய்வ தரிசனம்

    -ரமணி 

    03. மூவகையாகும் பிரும்மம்

    (குறும்பா)

    நிர்குண பிரும்மம்

    நிர்குணத்த பிரும்மமெனும் போதினிலே
    நிர்மலமே, உருவென்றே ஏதுமிலை
    . . தன்னுள்ளே கூறில்லை
    . . தன்னைப்போல் வேறில்லை
    நிர்நாம நிர்வாண மானதுவே. … 1

    நீக்கமற எங்கணுமே நிறைந்திருக்கும்
    போக்கறவே செயலற்றே உறைந்திருக்கும்
    . . உறவற்றே தனியதுவாய்
    . . மறுவற்றே இனியதுவாய்
    வாக்கற்ற வத்துவெனச் சிறந்திருக்கும். … 2

    எப்போதும் இருப்பதனால் சத்தெனவாம்
    ஒப்பில்லா ஞானமெனும் சித்தெனவாம்
    . . குறையாத ஆனந்தம்
    . . நிறைவாகும் மோனந்தான்
    இப்பேர்-சச் சிதானந்த வத்தெனவாம். … 3

    நிர்குணத்தின் ஒளிவெள்ளம் வெண்மையென்போம்
    தர்க்கமற்ற நிலையாகும் உண்மையென்போம்
    . . காரணமாம் தத்துவமே
    . . பூரணமாம் வத்துவிதே
    வர்க்கமற்ற ஒன்றென்னும் தண்மையென்போம். … 4

    சகுண பிரும்மம்

    தோற்றமிலாத் தத்துவமாம் காரணமே
    மாற்றமொன்று பெறுவதனால் காரியமாம்
    . . வாக்கினின்று நாமமெழும்
    . . பார்க்கவொரு ரூபமெழும்
    ஆற்றலுடன் அறிவுகொண்ட பூரிதமாம். … 5   [பூரிதம் = வெகுகளிப்பு]

    களிமண்ணே மாற்றமொன்றை யுட்கொளவே
    களிமண்ணால் உருவாகும் மட்கலனே
    . . களிமண்ணே உருக்கொள்ளும்
    . . களிமண்ணே பேர்கொள்ளும்
    களிமண்ணே மட்கலனில் உட்கருவே. … 6

    வெளித்தோன்றா நாமரூபம் மாயையாகும்
    வெளித்தோன்றும் நாமரூபம் லோகமாகும்
    . . உருநாமம் எல்லாமே
    . . பிரும்மத்தின் உள்ளாமே
    ஒளிர்பிரும்மம் மாயைசத் குணமாகும். … 7

    குணமற்ற பிரும்மமாயை சேர்வதுவே
    குணமுள்சத் குணபிரும்ம மாவதுவே
    . . சற்குணமே மூன்றுதெய்வம்
    . . நற்குணமே யூன்றுதெய்வம்
    இணைகொள்ளும் ஆண்பெண்ணாய் நேர்வதுவே. … 8

    நாத பிரும்மம்

    பஞ்சபூத முதல்பூதம் ஆகாயம்
    அஞ்சுபுலன் காணாத கண்மாயம்
    . . நாதமொன்றே தன்மையென
    . . நாதபிரும்ம நன்மையென
    விஞ்சியது உள்ளடக்கும் ஆதாரம். … 9

    தானெனவே நாதபிரும்மம் பதிவாக
    வானதுவே ஓமென்னும் அதிர்வாகும்
    . . அதிர்வொலியே முப்போதும்
    . . புதுமையென எப்போதும்
    ஆனதுவே ஆதாரப் பொதுவாகும். … 10

    களிமண்ணின் உருபேரில் உலகமெழும்
    களிமண்ணுள் உறையுருவாய் மாயையெழும்
    . . பிரும்மந்தான் எல்லாமே
    . . உருநாமம் சொல்லாமே
    களிமண்ணே காணவரின் பிரும்மமெழும். … 11

    வழிபாடு

    நிர்குணத்தை உள்ளத்தில் ஏற்றிடுவோம்
    சற்குணத்தை வழிபட்டுப் போற்றிடுவோம்
    . . ஆறுதெய்வம் அவர்சக்தி
    . . ஆறுதலாய் நம்பக்தி
    நற்கதியைத் தருசெயல்கள் ஆற்றிடுவோம். … 12

    *****

     

    Share
  • தெய்வ தரிசனம்

    -ரமணி

    02. பரம்பொருளும் படைப்பும்

    (குறும்பா)

    [ரிக்வேதம் பத்தாவது மண்டலத்தில் 129-ஆவது சூக்தமாக உள்ளது ’நாஸதீய சூக்தம்.’ இப்பாடல் அதன் எளிய மொழிபெயர்ப்பு.]

    இல்லையென்றோ உள்ளதென்றொ ஏதுமிலை
    தொல்லுலகம் தொடுவானம் போதுமிலை
    . மூடுபனி கூடியதோ
    . கூடெனவே மூடியதோ
    வல்லிருளோ வெள்ளமதோ பேதமிலை! … 1

    மரணமென்றும் மோட்சமென்றும் இல்லாதே
    இருள்தனியே பகல்தனியே செல்லாதே
    . அதுவொன்றே மூச்சற்றே
    . அதிர்ந்ததுவே பேச்சற்றே
    உருவமென வேறெதுவும் கொள்ளாதே! … 2

    இருளொன்றே இருளென்றே மூடியதே
    உருவற்ற வெள்ளம்போல் கூடியதே
    . ஒன்றெனவே ஓர்பொருளே
    . தன்நிலையை ஓர்பொருளே
    எரிதவத்தால் தன்னுள்ளே தேடியதே! … 3

    உள்ளியதில் ஓராசை எழுந்ததுவே
    உள்ளத்தின் மூலவித்தாய் விழுந்ததுவே
    . தன்னிதயம் ஆயுமுனி
    . உண்மையென மாயையென
    உள்மனத்தின் உணர்வினிலே இழிந்ததுவே! … 4

    கதிர்பலவாய்ச் சூனியத்தில் விரிந்ததுவே
    அதிர்வாற்றல் அடியெனவே இருந்திடவே
    . சந்ததிகள் உருவாக
    . விந்தொன்றே கருவாக
    அதிவேகம் உச்சியிலே திரிந்திடவே! … 5

    யாரறிவார் எங்கிருந்து படைப்பிதுவே
    யாருரைப்பர் இதுவென்ன புடைப்பெனவே
    . கடவுளரும் தேவருமே
    . படைத்தபினே மேவினரே
    யாரறிவார் எங்கிருந்த உடைப்பிதுவே! … 6

    படைப்பிதனைப் படைத்ததுவே புரப்பதுவோ
    படைப்பிதனைப் படைத்ததுவே புரந்திலையோ
    . பரவான வெளியினிலே
    . அரசாளும் ஒளியவனே
    படைப்புண்மை அறிவானோ அறிந்திலையோ? … 7 

     

    Share
  • அரசமரக் கணபதியே ஆறுதல்! (குறும்பா)

    –ரமணி 

    அரசமரம் கீழமர்ந்த கணபதியே
    தரிசுமனம் நின்றருளக் கணமிதுவே
    .தென்காற்றின் அலையோட
    .என்காற்றும் நிலையாகக்
    கரிசனத்தின் காப்பருள்வாய் குணநிதியே!  1  vinayakar

    எத்தனையோ உருவமுன்றன் கதையுமே
    அத்தனையும் அர்த்தமுடன் வதியுமே
    . ஓங்காரம் உள்ளமுற
    . ரீங்காரப் பள்ளமறும்
    சித்தமெலாம் உன்நாமம் பதியுமே!  2

    ஏகதந்த இறைமகனாம் ஏரம்பன்
    ஆகுவாக னத்திலருள் ஆரம்பம்
    .முக்கண்ணன் நாமமெலாம்
    .எக்கணமும் சேமமென
    வேகுமன வேதனைகள் ஓரம்போம்!  3

    சிந்தையிலே உன்னுருவைக் கொள்ளுவனே
    வந்தவினை போனதெனத் தள்ளுவனே
    .தும்பிக்கைக் காப்பினிலே
    .நம்பிக்கை கூப்புவனே
    வந்தனையில் வருவதெலாம் அள்ளுவனே! 4

    என்னாயுள் எதுவென்றே ஆனாலும்
    என்வாழ்வில் எதுவந்தே போனாலும்
    .தந்திமுகன் வந்தனையில்
    .சிந்தனையில் பந்தமறும்
    என்நாவில் உன்பெயரே தேனாமே!  5

     

    Share