இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (169)

0

–சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே!
இனிய வணக்கங்கள்!
வருட ஆரம்பம் ஏதோ சமீபத்திலே வந்தது போலிருக்கிறது. ஆனால், அதற்கிடையில் அவசரமாக அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதிக்குள் நுழைந்து கொண்டிருக்கிறோம்.

எனது இடது கண்ணில் சிறிய வலி ஏற்பட்டதால் நேற்று வைத்தியசாலையில் கண் மருத்துவ பகுதிக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. அங்கு என் கண்ணைப் பரிசோதித்த கண் டாக்டர், என் கண்ணில் சில துளிகள் மருந்தை விட்டு அரைமணிநேரம் காத்திருக்கும்படி பணித்தார். அந்த டாக்டரின் அறைக்கு வெளியே ஒரு கதிரையில் உட்கார்ந்திருந்தேன். அப்போது என் முன்னால் உள்ள சுவரில் தொங்கிய ஒரு சிறிய அறிவிப்புப் பலகை தென்பட்டது. அதிலே அன்று அங்குப் பணிபுரிந்து கொண்டிருக்கும் டாக்டர்களின் பட்டியல் தொங்கியது. மெதுவாக அப்பட்டியலில் என் பார்வையைப் பதிய விட்டேன். சுமார் 14 டாக்டர்களின் பெயர் போடப்பட்டிருந்தது. அப்பதினான்கு டாக்டர்களில் ஒருவரைத் தவிர மற்றும் அனைவரினது பெயர்களும் அவர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கிலாந்துக்குப் புலம்பெயர்ந்தவர்கள் அல்லது அவர்களது சந்ததி அதாவது இங்கிலாந்தைச் சேர்ந்த வெள்ளையர்கள் அல்ல என்பது புரிந்தது.

இன்றைய இங்கிலாந்தின் சமூக கட்டமைப்பு என் மனதில் அலைபாய்ந்தது. இன்று வெளிநாட்டுக்காரர் என்று இங்கிலாந்து மக்களால் வர்ணிக்கப்படுவோர் இல்லையானால் அவர்களது தேசிய சுகாதார சேவையின் நிலை என்ன? எண்ணிப் பார்க்கும் போது கொஞ்சம் அச்சமாகத்தான் இருந்தது. டாக்டர்களை விட அங்குக் குறிப்பிடப்பட்டிருந்த தாதிமாரின் பெயர்கள் கூட வேற்றினப் பெயர்களாகவே இருந்தது.

bbc2தேசிய சுகாதார சேவை மட்டுமல்ல, ஒரு பேருந்து நிலையத்தில் நின்று அங்கு வந்து போகும் பஸ்களின் சாரதிகளைப் பார்த்தால் 60 வீதமான பஸ்களின் சாரதிகள் வெள்ளையர்கள் அல்லாதவர்களாகவே காணப்படுவார்கள். அதுதவிர, இரயில்வே நிலைய ஊழியர்களில் கூட வெள்ளையர்கள் குறைவாகவே காணப்படுவார்கள்.

ஆக மொத்தம் இங்கிலாந்தில் இவ்வெளிநாட்டுக்காரின் பங்களிப்பு இல்லையானால், பலதுறைகளில் ஆட்குறைவு எனும் நிலையைத் தவிர்க்க முடியாது எனும் நிலை காணப்படுவது போன்ற ஒரு நிலை தென்படுகிறது. ஆனால், இங்கிலாந்தின் பலபகுதிகளில் இருந்து வெளிநாட்டுக்காரர்கள் இங்கிலாந்தில் வந்து குடியேறுவதை எதிர்க்கும் பல கோஷங்கள் எழுகின்றன. இங்கிலாந்து அரசியல் கட்சிகள் அனைத்தும் “இமிக்கிரேஷன்” (Immigration) எனும் பிரச்சனைக்குத் தீர்வு சொல்லாமல் எந்தவிதமான பிரச்சாரத்தையும் முன்வைக்க முடியாத ஒரு நிலை காணப்படுகிறது. இந்த இரண்டு நிலைகளுக்குமிடையில் நிலவும் இந்த இடைவெளியின் காரணம்தான் என்ன ?

இங்கிலாந்தின் தொன்மையான மக்களான வெள்ளையர்கள் தான் ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ளவர்களில் அதிக சகிப்புத்தன்மை கொண்டவர்கள் என்பது ஓரளவிற்கு உண்மையான ஒரு கணிப்பே. ஆயினும், இந்தக் காலகட்டத்தில் அவர்களது சகிப்புத்தன்மை அதன் எல்லைக்குத் தள்ளப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்படுவது போல் தென்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. பொதுவான ஒன்றை எடுத்துக் கொள்வோமானால் ஒரு வெளிநாட்டுக்காரர் உதாரணத்திற்கு ஐரோப்பிய நாடொன்றிற்குக் குடியேறி அந்நாட்டு பிரஜாவுரிமையைப் பெற்று ஐரோப்பிய பாஸ்போர்ட்டைப் பெற்றுக்கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். தற்போதைய ஐரோப்பிய யூனியன் சட்டங்களின் படி அவருக்கு ஐரோப்பிய நாட்டில் அங்கத்துவம் வகிக்கும் எந்த நாட்டிற்கும் செல்வதற்கோ அன்றி பணிபுரிவதற்கோ தடையில்லை.

அவர் இங்கிலாந்துக்குள் நுழைந்து வசிக்கத் தொடங்கினால் அவர் இங்கிலாந்து அரசு வேலையற்றோருக்குக் கொடுக்கும் உதவிப்பணத்தொகையையும் பெற்றுக் கொள்ளும் வழிவகைகள் உண்டு. இவ்வகையான அரசாங்க உதவிகள் இங்கிலாந்து நாட்டில் இலகுவாகக் கிடைப்பதால் பலர் இங்கிலாந்து நாட்டிற்குள் நுழைந்துவிடுகிறார்கள். இத்தகையோரின் வரவுகள் இங்கிலாந்தின் ஊடகங்களில் பிரபலப்படுத்தப் படுவதால் இந்நாட்டின் வெள்ளை இனத்தவர் தமது பொறுமையின் எல்லைக்குத் தள்ளப்படுவது போல எண்ணுகிறார்கள். இதன் காரணமாக இந்த வெளிநாட்டு மக்களின் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் கொள்கையை முன்வைக்காத எந்த அரசியல் கட்சியும் மக்களின் ஆதரவைப் பெறுவது கடினமாகிறது.

இங்கு முக்கியமாக நாம் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இங்கு வந்து குடியேறி வாழ்ந்து கொண்டிருக்கும் வெளிநாட்டு புலம்பெயர்ந்தவர்களும் அவர்களின் அடுத்த சந்ததியினரின் பெரும்பான்மையோர் கூட தற்போது இங்கு வெளிநாட்டுக்காரரின் குடியேற்றத்தை மட்டுப்படுத்தக் கோருவதுதான்.

இதற்குக் காரணம் என்ன? இங்கிலாந்தில் வாழும் புலம் பெயர்ந்த ஆசிய, ஆப்பிரிக்க மற்றைய நாட்டுக்காரர்கள் இந்நாட்டின் வெள்ளை இனத்தவரின் மனதில் எழும் வெளிநாட்டுக்காரரின் குடியேற்றத்திற்கு எதிரான அபிப்பிராயத்தில் அவர்களது வெறுப்பு எங்கே தம்மீது திரும்பி விடுமோ என்ற அச்சம் எழுவது தவிர்க்க முடியாதது.

இங்கிலாந்தின் பொருளாதார நெருக்கடி நிலைமையால் அரசாங்கம் ஏற்படுத்திய பொதுத்துறைகளின் மீதான நிதிக்கட்டுப்பாட்டினால் அல்லலுறும் மக்கள் தமது விரக்தியை யார் மீது திருப்பலாம் என்று எதிர்பார்க்கும் போது வந்து அகப்பட்டது இந்தப் பிரச்சனை எனலாம். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும், அரசாங்கம் அமைத்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சியின் அரசியல் பொது மகாநாட்டில் வெளிநாட்டவரின் குடியேற்ற அனுமதிக்குப் பொறுப்பான அமைச்சர் இந்த வெளிநாட்டுப்பிரச்சனை சம்பந்தமாக பல கடுமையான கொள்கைகளைக் கடைப்பிடிக்கப் போவதாகப் பேசியுள்ளார்.

இங்கிலாந்து எனும் இந்தக் கப்பலிலே பயணிக்கும் பயணிகளில் நானும் இடையில் வந்து ஏறியவனே! இப்போது அக்கப்பலில் பயணத்தின் ஆரம்பத்தில் இருந்து பயணிப்போர் தமக்கே இடமில்லை என்று முணுமுணுக்கிறார்கள். வருகின்ற காலங்களில் ஆட்கள் அதிகமாகி விட்டார்கள் என்றால் நாம் படகில் இருந்து தள்ளப்பட்டு விடுவோமோ ?

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

picture source: IAAI poster campaign | I Am An Immigrant | www.iamanimmigrant.net

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.