ஷைலஜா எழுதிய ‘சிட்டுக் குருவி’ கவிதையை அவரது குரலில் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
ஷைலஜா எழுதிய ‘சிட்டுக் குருவி’ கவிதையை அவரது குரலில் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
ஷைலஜாவின் ‘ஆண் சிலை’ கவிதை, அவரது குரலில்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

கவிதாயினி ஷைலஜா இயற்றிய ‘பாரதி வேண்டிய சுதந்திர நாள்’ என்ற பாடலைத் திருமதி நாகி, திருமதி பானு ஆகியோர், இனிய குரலெடுத்துப் பாடக் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

ஷைலஜா
யாகங்கள் பல செய்தீர் உங்கள்மன
சோகம் நீங்கிடவேண்டுமென்றே
தாகம் தணிக்க வந்தேன் தவறா?
கண்ணுக்கு எட்டாத்தொலைவில்
காணாபொருள்போலிருந்தேன்
காட்சிகொடுத்ததும் தவறா?
கோடிக்குரல் அழைத்தால்
தேடிவருவது தெய்வகுணம்
ஓடிவந்ததும் தவறா?
என்பாதைஅத்தனையும்
எங்கும் அடைத்துவிட்டீர்
எப்படியோ வந்ததும் தவறா?
என்குணம் எதிலும் அடங்கும்
என்பது தெரிந்திருந்தும்
ஏரிகுளங்களை அழித்தது தவறு
இல்லாத பொழுதினில் ஏங்குவதும்
வருகின்றபொழுதினில் சேமிக்காததும்
வாழும் மனிதன் செய்யும் தவறு
இயற்கையின் கொடைதன்னை
இயன்றவரை அழிப்பதுதான்
இன்றைய மனிதனின் தவறு
பொறுத்ததுபோதுமென்றுதான்
பொங்கி எழுந்து வந்தேன்
புரிந்ததா உங்கள் தவறு?
ஷைலஜா
கம்பகாவியத்தில் இராவணவதைப்படலம் முடிந்து சீதையுடன் இராமன் அயோத்திக்குத்திரும்பும் காட்சி!
இலங்கைமாநகரினின்றும் புஷ்பகவிமானத்தில் பரிவாரங்களுடன் புறப்படும் இராமன் சீதைக்கு ஒவ்வொருஇடமாக காட்டிக்கொண்டுவருகிறான்.வருகிறான்.
கோதாவரி நதி வரும்போது அதனருகில் உயர்ந்தகுன்றினைக்காண்பித்து,’நாம் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்த இடம் ‘என்கிறான்.
பரத்வாஜமுனிவர் இராமரை எதிர்கொண்டு தன் இருப்பிடத்திற்கு அனைவரும் வந்து விருந்துண்ணும்படி அன்புடன் கேட்க இராமனால் தட்டமுடியவில்லை..ஆனால் அயோத்தியில் தம்பி பரதன் தன் வரவுக்குக்காத்திருப்பான் என நினைக்கிறான்.குறித்த நேரத்தில் தான் செல்லாவிட்டால் பரதன் தீமூட்டி அதில் விழுந்துவிடுவதாக சொல்லி இருந்தது இராமனுக்கு தவிப்பாக இருக்கிறது.பரதனுக்கு சேதி அனுப்பவேண்டும்.
ஆகவே அனுமனை அழைத்து,தனதுமோதிரத்தையும் கொடுத்து தான் அயோத்திக்கு திரும்பிவந்துகொண்டிருக்கும் தகவல் சொல்லி அனுப்புகிறானாம் இராமன்.
ஆகாயமார்க்கத்தில் அனுமன் வாயுவேகத்தையும்விடவும் தனது நாயகன் இரமானின் அம்பின் வேகத்தைவிடவும் தனது வேகத்திற்கே ஈடாகாமல் சிந்தைபின்செல தான்முந்திச்செல்கிறான்.
அங்கோ பரதன் இராமனின் வரவுகாணாது வருந்தி தம்பிசத்ருகனனை தனக்காக தீ மூட்ட சொல்கிறான்.
சத்ருக்னன் திடுக்கிடுகிறான். செய்வதறியாது மனம் சோர்வுறுகிறான்.
தனக்கு நேர்ந்துள்ள நிலைமையின் விரக்தியில் இளையவன் புலம்புகிறான்.
விவரம் அறிந்து கோசலை ஓடிவருகிறாள்.பரதன் செயல்கண்டு பதறுகிறாள்
.” ‘எண்ணில் கோடி இராமர்களென்னினும் அண்ணல் நின்னருளுக்கு அருகாவரோ?’ என்கிறாள்.
இதே வார்த்தையை முன்பு குகன் சொன்னான்.
ஆயிரம் இராமர் நின்கேழ்
ஆவரோ தெரியின் அம்மா
பரதனைப்பற்றி இராமன் கூறியதும் குகன் இப்படிவியந்தானாம்!
இங்கு கோசலைதன் மகனை காட்டுக்கு அனுப்பியகைகேயி மகனிடம் அவள்கொண்ட கனிவுதான் என்னே! அதனால் கௌசல்யா சுப்ரஜா ராமா என்று சுப்ரபாதம் சொல்கிறோம்!
பரதன் மட்டும் லேசுப்பட்டவனா? ’தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத் தீவினை என நீத்தவன்” அல்லவா?மணிமுடிதவிர்த்து சடைமுடி தரித்துக்காடு சென்ற காகுத்தனைத்தேடி தானும் அதே கோலத்தில் சென்று தன் நினைப்பு நிறைவேறாத நிலையில் வேறுவழியின்றி தமையனின் திருவடிகளைப்பெற்றுவந்து அவற்றை அரியணையில் அமர்த்தி அவன் சார்பில் ஆட்சிபுரிந்தவன். இராமனுக்கு அடிமை என்னும் இயல்பையே விரும்புபவன்.
பெரியாழ்வார் பரதனைப்பற்றி இப்படி அருள்கிறார்.
முடி ஒன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருள் என்று அவன்பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று
அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற
படியில்குணத்துப்பரத நம்பி என்னும் வார்த்தைக்கு ஆழ்ந்த பொருள் உள்ளது. படி..ஒப்பு. ஒப்பில்லாத உயர்ந்த குணங்களை உடையவன் பரதன் என்பது பொருள்
குணங்களால் நிறைந்தவன் என்று தோன்றவும் பரதன் நம்பி என்கிறார்.
பங்கமில்குணத்துப்பரதனாகக் காட்டுவான் கவிச்சகரவர்த்தி.
பங்கம் இல் குணத்து எம்பி பரதனே
துங்க மாமுடி சூடுகின்றான்.
என்பது இராமனின் கூற்று.
ஆழ்வார்கள் அடியொற்றிச்செல்லும்கம்பனுக்கு பரதன் நம்பி என்னும் பெரியாழ்வாரின் பெருமைமிகு சொல்லாட்சி நெஞ்சிலேயேஉழன்று கொண்டிருக்கவேண்டும் அதனால் பரதன் தவவேடம் கண்டு திகைத்த குகனின் மனநிலையைக்கண்டு கல்லும்கனியப்பாடுகிறான் கம்பன்.
நம்பியும் என் நாயகனை
ஒக்கின்றான்; அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான்;
தவம் வேடம் தலைநின்றான்;
துன்பம் ஒரு முடிவு இல்லை;
திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின்பிறந்தார்
இழைப்பரோ பிழைப்பு?‘‘ என்றான்
நம்பியும் என் நாயகனை என்னும் வரியில் பெரியாழ்வாரின் பரதன் நம்பி எனும் வார்த்தையின் பாதிப்பினைக்காணலாம்.
இப்படிப்பட்ட பரதன் தீயில் விழத்துணிந்துவிட்டான்.சொன்னபடி இராமன் வரவில்லை என தான் எடுத்த முடிவுக்குத்துணிந்துவிடுகிறான்.
தீவலம் வந்து பரதன் அதில் விழ இருக்கும் அக்கணம்
அனுமன் வந்துவிடுகிறான்
குன்றுபோல் நெடுமாருதி கூடினான்
என்கிறான் கம்பன்.,
வந்தவன் தீயை முதலில் அணைக்கிறான். அக்கினிசாட்யாகவும் இதை நாம் எடுத்துக்கொள்ளலாம்.ஆம் ’அக்னிசாட்சியாக ராமன் வந்துகொண்டிருக்கிறான் என்னும் சேதி சொல்ல நான் வந்திருக்கிறேன் என்னை நீ நம்பலாம்!’என்னும் அனுமனின் மனோவாக்காக இருக்கலாம்! பரதனை நெருப்பு பற்றுமுன்பாக மாருதி பற்றுகிறான்.
காற்றின் மகனை தீஎன்ன செய்யும்?ஏற்கனவே அனுமன் இலங்கைக்கு தன் வாலினால் தீவைக்கும்போது சீதை,’ தீயால் அனுமனுக்கு ஏதும் தீமைவரக்கூடாது ’என வேண்டிக்கொண்டிருக்கிறாள்!
மாதாவின் வாக்கு மகனுக்குக்காப்பு!
கையினாலெரியைக்கரியாக்கினான் என்று அனுமன் வலிய பரந்த தன் கையினால் அக்கினியைப்பிசைந்து அவித்துக்கரியாக்கினதாக கம்பன் வர்ணிக்கும்போது கண்முன் காட்சியாய் விரிகிறது அல்லவா! .
இராமன் அளித்தமோதிரத்தை பரதனிடம் கொடுக்கிறான் வால்மீகியில் இப்படி ஒருகாட்சி இல்லை என்கிறார்கள்,. (அன்று அண்ணல், சீதைக்கு அளித்த கணையாழியை இன்று பரதனுக்கு அளிக்கச்செய்ய கம்பனால்முடிகிறது!)
மோதிரம் வாங்கித்தன் முகத்தின் மேலணைத்துக்கொள்கிறான் பரதன்.
அவன்மன நிலையை கம்பன் தமிழில் காணலாம், சுவைத்து மகிழலாம்.
அழும், நகும்; அனுமனை – ஆழிக் கைகளால்
தொழும், எழும்; துள்ளும் – வெங் களி துளக்கலால்
விழும், அழிந்து ஏங்கும் – வீங்கும், வேர்க்கும்; அக்
குழு வொடும் குனிக்கும் – தன் தடக்கை கொட்டும் ஆல்
வேதியர் தமைத் தொழும் – வேந்தரைத் தொழும்;
தாதியர் தமைத் தொழும் – தன்னைத் தான் தொழும்;
ஏதும் ஒன்று உணர்குறாது – இருக்கும், நிற்கும் ஆல்;
காதல் என்று அதுவும் ஓர் – கள்ளில் தோற்றிற்றே!
அழும் நகும் என்கிறவார்த்தைகள் குழந்தைத்தனத்தை சொல்வது. கள்ளம்கபடம் இல்லா குழந்தைமனம்தான் அப்படியெல்லாம் செய்யும்
இங்கேயும் கம்பன் ஆழ்வார் பெருமானின் இந்தப்பாடலைத்தான்நினைக்கவைக்கிறார்!
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
கண்ணநீர் கைகளால் இறைக்கும்*
சங்கு சக்கரங்கள் என்று கைகூப்பும்
தாமரைக்கண் என்றே தளரும்*
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு? என்னும்
இருநிலம் கைதுழாவிருக்கும்*
செங்கயல் பாய்நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறத்து என் செய்கின்றாயே?
ஷைலஜா, பெங்களூர்
கர்மம் எனில் செயல்.செயல்வீரராக வாழ்ந்துகாட்டிச்சென்றவர் அந்த உன்னத மனிதர்! அதனால்தான் கர்மவீரர் என்று போற்றப்படுகிறார்.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
எனும் வள்ளுவரின் வாக்குபோல சொல்லியவண்ணம் வாழ்ந்து காட்டியவராம் காமராஜர்!
மக்களுக்காக வாழ்ந்த மாமனிதரைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது.ஆயிரத்தில் ஒருவரின் பெருமையை வெறும் ஆயிரம் சொற்களில் அடக்க முடியாதுதான்!
பெருந்தலைவர் காமராஜர் ஆண்ட காலத்தைத் தமிழ்நாட்டின் பொற்காலம் என்பார்கள்.
கர்மவீரர், கருப்புக்காந்தி, ராஜதந்திரி, படிக்காத மேதை, பாரத ரத்னா, கிங் மேக்கர், ஏழைப் பங்காளன் என்று மக்களால் போற்றப்படுபவர் கர்மவீரர் காமராஜ்!
நாடறிந்த நல்லதொரு தலைவர் காமராஜ்! தனக்கென வாழாமல் நாட்டிற்கென வாழ்ந்த தனி மனிதர்! ஆம் முதலில் அவர் மனிதர் தான்! அவரின் மனிதாபிமானம் போற்றுதற்குரியது.
அந்த காலத்தில் அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் மற்றும் பொதுக்கூட்டங்களில் மக்களோ தொண்டர்களோ காலணா அரையணா ஓரணா என்று கொடுப்பார்கள் அதைவாங்கி சட்டைப்பையில்போட்டுக்கொள்வார் காமராஜர்! ஐந்து பத்துரூபாயாக சேர்ந்ததும் அதை அப்படியே நண்பர்’இந்து’ கஸ்தூரிரங்கனிடம் கொடுத்துவிடுவார்
ஒருமுறை’ இந்து’ கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு உட;ல்நிலை மோசமாகிவிட்டது
காமராஜரை அழைத்து,” சாகும்போது கடன்காரராக சாக விரும்பவில்லை உம்முடைய பணத்தை உம்மிடமே ஒப்படைக்கிறேன்” என்றார்.
பெருந்தலைவரோ,”அப்படி ஏதும் நடக்காது நீங்கள் கவலைப்படவேண்டாம் இந்தப்பணத்திற்காகத்தான் என்னைவரசொல்லி இருக்கிறீர்கள் என்றால் நான் வந்தே இருந்திருக்கமாட்டேன்” என்றார்
.
“சரி..எத்தனைவருடம் என்றாவது ஞாபகத்தில் இருக்கிறதா?”கஸ்துரிரங்கன் இப்படிக்கேட்கவும்,”அதெல்லாம் எனக்குத்தெரியாது”என்றார் காமராஜர். ஆனால் கஸ்தூரிரங்கனின் வீட்டில் உள்ளவர்கள் தேதிவாரியாக குறித்துவைத்திருந்தபடியால் அவர்களிடம்,”எனக்கு ஏதாவது ஒன்று நேர்ந்துவிட்டால் பணத்தை காமராஜரிடம் ஒப்படைத்துவிடுங்கள்” என்று கஸ்தூரிரங்கன் கூறினாலும் காமராஜரின் நினைப்பைப்போலவே கஸ்தூரிரங்கன்குணமாகிவிட்டார்.
மறுபடி இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது,”உம் தொகையை பெற்றுக்கொள்ளலாமே?’ என்ற கஸ்தூரி ரங்கனிடம்.”எனக்கு எதற்கு? அது மக்கள் பணம். ஆனால் ஒரு இடம் வாங்க நினைத்திருக்கிறேன் அதை செய்யுங்கள்” என்று காமராஜ் சொல்லவும் இந்தமட்டில் இடம் வாங்க சம்மதித்தாரே என பெரிய நிலத்தை விலைபேசி வாங்கிவிட்டார்.
பத்திரப்பதிவுக்கு தன் பெயரைப்போட இருந்த கஸ்தூரிரங்கனைப்பார்த்து பெருந்தலைவர் அலறி விட்டார்,”மக்கள் கொடுத்த காசு , அது பொதுச்சொத்து. எனக்கெதற்கு காசுபணம் சொத்து எல்லாம்?” என்றார்.
கட்சியின் பெயரில்பத்திரப்பதிவு செய்யப்பட்ட அந்த இடம் தான் இன்று தேனாம்பேட்டை காங்கிரஸ் கட்சி மைதானமும், பெரிய காமராஜர் அரங்கமும்.
அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி – பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் – இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது.
கல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதாது, நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகவேண்டுமே என சிந்தித்தார் காமராஜர். அதற்கென திட்டங்கள் தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
இன்றைக்கு மதுவிலக்கு அமுலுக்கு வர பலர் போராடுவதாக சொல்கிறார்கள், ஆனால் அன்றைக்கு பெற்ற தாய் இறந்தபோது கூட கண் கலங்காத காமராஜர், மனம் நொந்து கண்ணீர் விட்டது தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட போதுதான்
ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசுவார்.
பெரியார் அவரின் தொண்டர்களின் குழந்தைக்கு நல்ல பெயர் வைக்கவேண்டும் எனில் காமராஜர்னுதான் வைப்பார்.
ஜீவா தனது மரணப்படுக்கையில் சொன்ன கடைசி வார்த்தை “காமராஜர்க்கு போன் போடு” என்பதுதான்.
அவரளவுக்குச் சுருக்கமாக யாராலும் பேச முடியாது. உ.பி-யில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில். ஐம்பதுகேள்விகளுக்கு ஏழு நிமிடத்தில் பதில் சொன்னாராம். இரண்டரை மணி நேரத்தில் எட்டு ஊர்களில் கூட்டம் பேசியிருக்கிறார்.
உழைத்துவாழ்வதையும், எளிமையோடு இருக்கவேண்டியதையும், நாட்டுப்பற்றோடும் ஒற்றுமையோடும் வாழவேண்டியதை தன் பேச்சில் குறிப்பிடுவார் காமராஜர்.
ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!
இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2-ம் தேதி உடல்நிலை அதிகம் பாதிக்க ஆரம்பித்தது,
டாக்டர் அண்ணாமலைக்கு அவரே போன் செய்துவிட்டு, ‘டாக்டர் வந்தா எழுப்பு… விளக்கை அணைச்சிட்டுப் போ’ என்றார். அதுவே அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை.
டாக்டர் வரும்போது காமராஜர் அணைந்துவிட்டார்!
**************************************************************************************************************
அகிம்சையை போதித்தவர்
இன்பக்குறுநகையை
இதழினில் கொண்டவர்
சத்தியப்பாதையின்
சாந்தத்தலைவரவர்
உத்தமப்பணியினில்
கொள்ளையர்போல் வந்த
வெள்ளையர் ஆட்சியை
மெள்ள மெள்ளவே
கிள்ளிக்களைந்தவர்
இன்றுநமக்குள்ள
இவராலன்றோ
இங்குக்கிடைத்தது!
பின்னைத்தலை முறைக்கும்
பெட்டகமாயிருக்கும்
அன்னவரை நாம்
என்றும் வணங்குவோம்!
— ஷைலஜா
‘மாணிக்கம் கட்டி, வைரம் இடை கட்டி,
ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டில்..’
என்கிறார் இறைவன் கண்ணனைப்பாடும் பாசுரத்தில் ஆழ்வார் பெருமான்! எந்தக் கலப்படமும் இல்லாத, சுத்தமான 24 காரட் தங்கத்தைதான் ‘ஆணிப்பொன்’ என்று அழைக்கிறோம். ஆணிமுத்தும் உயர்வானது.
‘ஆணிமுத்து வாங்கிவந்தேன் ஆவணி வீதியிலே’ என்று கண்ணதாசன் எழுதிய பாடலைக் கேட்டிருப்பீர்கள்!
கண்ணதாசனும் தமிழ்மாதமான ஆனியில் பிறந்த ஆணிமுத்து! இயற்பெயரிலும் முத்தினைக்கொண்டவர்! தமிழ் அன்னையின் கழுத்தில் முத்தாரமாய் திகழ்பவர் !
திரை இசைப்பாடல்களில் தனி முத்திரை பதித்த ஒப்பற்ற கவிஞர்! மனவாசமும் கண்டவர் வனவாசமும் கொடுத்தவர்! இந்தியமண்ணின் உமர்கய்யாம்! இயேசுகாவியமும் அளித்தவர் அர்த்தமுள்ள இந்துமதமும் படைத்தவர்!
கண்ணதாசனே!கங்கைவெள்ளம் நீங்கள்! தங்களைப்பற்றி ஆயிரம்வரிகளுக்கு மிகாமல் எழுதுவதும் சாத்தியமா என்ன! கங்கைவெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது!
உங்களைப்பற்றி எழுதும் பொழுதிலும் உங்களது பாடல்வரிகளைத்தான் உதாரணம் காட்டவேண்டி இருக்கிறது பார்த்தீர்களா! உங்கள் பாடல்களில் அப்படி ஒரு ஆக்கிரமிப்பு ! அவை யாவும் மனதில் அசைபோடுகிறது! சீர்மிகு செந்தமிழை சிகரத்திற்குக்கொண்டு சென்றவரல்லவா இந்த செட்டிநாட்டுக்கவிஞர்!
எளிமை என்பது எவரையும் வசீகரிக்கும் மாயம்! அவரது பாடல்களில் எளிமை தான் மிகுதி. அதனால்தான் பாமரனையும் போய் பற்றிக்கொண்டன! என்னையும் மிகக்கவர்ந்து இன்று எழுதவைக்கிறது!
தொட்டில் முதல் சுடுகாடு வரையிலான வாழ்வியல் தத்துவங்களை, வாழ்வின்வளைவுகளை நெளிவுகளை சுழிவுகளை வார்த்தைகளில் வள்ளலாய் வடித்துக்கொடுத்தவரை வெறும் சிறுகட்டுரைக்குள் சிறைப்படுத்தவும் முடியாதுதான். ஆயினும் கதம்பமாலையின் மலர்க்கூட்டமிடையில், தன்பச்சை இலை மேனிவாசனையை வீசும் மரிக்கொழுந்தாய் கவிஞர்புகழ்பாடும் இந்தக்கட்டுரை, இங்கும் மணக்கும்எனும் நம்பிக்கை!
கலை என்பதே ஆழ்மனம் சார்ந்ததுதான் அதற்கு படிப்பறிவு அவசியமில்லை படித்தபலருக்கு கலையை ரசிக்கத்தெரிவதில்லை. எங்கள் கவிஞர் எந்தப்பள்ளிச்சாலையிலும் சென்று பட்டம் வாங்கியதில்லை ஆனாலும் அறிவு அவர் மூளையில் சாலை போட்டுக்கொண்டது.
நூல்களை அல்ல நூலகங்களையே படித்துமுடித்தவர்..அவரது வாழ்க்கை அனுபவம் வாகான வார்த்தைகளில் கவிதையாய் வடிவெடுத்தன.
ஐந்தாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிய கரங்கள், அரத்தமுள்ள இந்துமதம் என்ற நூலை எழுதியதும் நாத்திகக்கறை நீங்கப்பெற்று நானிலமெங்கும் அவரது புகழை இன்னமும் உயர்த்தின!
வீணையின் சுபாவம் அதனை மீட்டி முடித்தபின்னும் அதிர்வுகளை சிலக்கணம் பரப்பிக்கொண்டிருக்கும்.
காலவீணையை உந்தன் கவிதைவரிகளில்மீட்டிவிட்டுப் போய்விட்டாய் காவியக்கவிஞனே! இனியகானத்தின் அதிர்வு இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது!
தாய் பாடும் தாலாட்டில் தமிழ் மணம் கமழ்ந்து வருகின்றது. தாய்க்குக் குழந்தை எப்படித் தெரிகிறதா? கவிஞர் பாடலில் காண்போம் அதை!
“நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே வளர்
பொதிகை மலைதோன்றி
மதுரை நகர்கண்டு பொலிந்த தமிழ் மன்றமே”
தமிழ் மன்றத்தைப் போன்று தெரிகின்றதாம்! தமிழுடன் குழந்தையை ஒப்பிட்டுப்பாடும் தாயின் மனம் கவிஞரின் வார்த்தைகளில் பெருமையுடன் வெளிப்படுகிறது.
சிறுகூடற்பட்டியிலே பிறந்து, சிகாகோ நகரில் தம் வாழ்வை முடித்த மகா கவிஞனுக்கு கம்பன்மீதான காதல் அலாதியானது!
கம்பன் தன் காவியத்தின் ஒருபாடலில்,
“மழைவண்ணத்து அண்ணலே உன்
கைவண்ணம் அங்கு கண்டேன்
கால்வண்ணம் இங்கு கண்டேன்”
என்பதாக இராமனைப்புகழ்ந்தபடிஅப்பாடலில் எட்டு வண்ணம் வைத்தான் என்றால் கண்ணதாசனோ “பால் வண்ணம் பருவம் கண்டு” என்று தொடங்கும் பாட்டில் முப்பத்திரண்டு வண்ணம் வைத்துள்ளார்!
“கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்” என்பது கண்ணதாசன் வாக்கு!
தனது பாடலின் நடுவே, அவளது திருப்பாவையின் ஒருபாசுரமான,
“குத்துவிளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்றபஞ்சசயனத்தின் மேலேறி…”என்றவரிகளின் தாக்கமாய்,
“குத்துவிளக்கெரிய கூடமெங்கும் பூ மணக்க
மெத்தைவிரித்திருந்து மெல்லியலாள் காத்திருக்க..”
என்கிறார் தான் இயற்றிய திரைப்பாடலொன்றில்.
திருப்பாவை மற்றும் திருவெம்பாவையை மனதில்கொண்டு வடித்த “தைப்பாவை” நூல் இலக்கிய உலகின் அணையாவிளக்கு.
“என்னைக்கவலைகள் தின்னத்தகாதென்று நின்னைச்சரணடைந்தேன்” என்றான் பாரதி.
“பின்னிவரும் இன்னலைச் சன்னல்வழிவீசியே பிணமாய்புதைக்கவேண்டும்” என்றார் கண்ணதாசன்.
பாரதியைப்போலவே கவிஞருக்கும் உண்டு ஒரு கனவு ..ஆம்,அந்த முண்டாசுக்கவிஞன்,
“பாட்டுக் கலந்திடவே அங்கே யொரு பத்தினிப் பெண்வேணும்
எங்கள் கூட்டுக் களியினிலே கவிதைகள் கொண்டு தரவேணும்
அந்தக் காட்டு வெளியினிலே அம்மா நின்றன் காவலுறவேணும்
என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித் திடவேணும்”
(–காணி நிலம்வேண்டும்)
என்றான்.
“அழகான சிறிய வீடு அடுக்காகப் புத்த கங்கள்
பழங்கால ஓவியங்கள் பஞ்சணை குளிர்ந்த காற்று
தொழத்தக்க இளைய கன்னி தொண்டுக்கோர் சிறியபையன்
எழிலான காகி தங்கள் எழுதுகோல் பழுதில் லாமல்!”
என்கிறார் நம் கவிஞர்!
“தொழத்தக்க இளைய கன்னி” என்பதில் வெறும் காமத்தைத் தாண்டிப் பெண்மையின் மீதான பெருமதிப்பையும் காட்டுவதை உணரமுடிகிறது.
“எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு – அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று
நமக்காக நம் கையால் செய்வது நன்று”
(–ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்)
நமக்கான கடமைகளை நம்கைகளால் செய்யவேண்டியது நல்லதென்பதை எளிமையாய் அருமையாய் சொல்லியவிதம் அதன்படி நடக்கத்தூண்டிவிடுகிறது.
“அத்திக்காய்காய் காய் ஆலங்காய்வெண்ணிலவே” என்ற பாடலில் இரண்டு அர்த்தங்கள் வரும்படி எழுதி இருப்பார். அத்திக்காய் என்பது ஒரு காய் என்று ஒரு பொருள். அடுத்து, அத்திக்காய் எனில் அந்த திக்காய் (திசையில்) காய் என்றால் நிலா காய்கிறது என்பதுபோல பொருள். பாடல்முழுவதும் காய்களோடு விளையாடி இருப்பார். ஆமாம்! அத்திக்காயை ஏன் முதல் வார்த்தையாய் கொண்டுவந்தார் தெரியுமா?அத்தி மரம் சுக்கிரனின் ஆகர்ஷண சக்தி கொண்ட மரம். சுக்கிரன் காதல்தேவதை!
காதலை நிறைவேற்றுவதில் சுக்கிரனின் பங்கு மகத்தானது. காதலுக்குரிய கிரகம் இவரே. ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக இருப்பது மிக மிக அவசியம். மகிழ்ச்சிக்கும், இனிமையான திருப்திகரமான திருமண உறவுக்கும் சுக்கிரனின் அருள் அவசியம்.
அத்தி மரத்திலிருந்து வெளிப்படும் ஒரு வகையான ஆற்றல் தம்பதிகளின் பிணக்கைத் தீர்த்துவைக்கும் என்பது ஜோதிடர்களின் நம்பிக்கை. திரைப்படத்தில் தம்பதிகள் சிறு ஊடலில் பாடும் பாடல் இது. எத்தனை விஷய ஞானம் இருந்திருந்தால் கவியரசர் இந்தப்பாடலுக்கு அத்தியை முதல் வார்த்தையாக அமைத்திருப்பார்!’ Amazing’என்பார்கள் ஆங்கிலத்தில்! வியப்பில் வாய் அடைத்துத்தான் போகிறது!
“மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழைபோல்” சொல்லாமல் கொள்ளாமல் வந்தது! என்று எதிர்பாராமல்வரும் காதலுணர்வைக்குறிப்பிடுகிறார்! காதலைக்காமமின்றி பலப்பலகவிதைகளில்கொடுத்த கவிஞரின் கைவண்ணம் பற்றி எழுத நீள்வானம் தான் தாள் ஆக வரவேண்டும்!
அடுத்து வாழ்க்கை எங்கும் வாசல்கள் இருப்பதை இந்தப்பாடலின் வரிகள் உணர்த்துகின்றன.
“பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை திறந்தால் வாழலாம்!!!”
(– வாழ நினைத்தால் வாழலாம்)
வாழ நினைக்கவேண்டுமாம் நினைத்துவிட்டால் வாழலாம் என்கிறார். “எண்ணியமுடிதல்வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்” என்றான் பாரதி! கவிஞரின் இந்த வரிகள் எளிமைதான் ஆனால் அர்த்தம் கடல் அளவு ஆழமானது. நிறைய சிந்தித்தாலே ஒழிய இந்தவரிகளை நாம் உணர இயலாது.
“மழைகூட ஒருநாளில் தேனாகலாம்,
மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா,
அம்மா என்று அழைக்கின்ற சேய் ஆகுமா? “
இப்படி, தாய்மையை போற்றும் வரிகளிலேதான் எத்தனை நீர்மை !
இன்னும் மனித மன இயல்பை பட்டவர்த்தனமாய் காட்டும் வரிகளாய்…….
“ஆடை இன்றி பிறந்தோமே –
ஆசை இன்றி பிறந்தோமா?
ஆடி முடிக்கையிலே
அள்ளி சென்றோர் யாருமுண்டோ?”
என நம் கன்னத்தில் அறைவதுபோல கேள்விகள் வருகின்றன.
சாக்ரடீஸின் தத்துவத்தை மூலமந்திரமாக்கிக் கவிஞரின் கவிதைக் கருவில் தோன்றிய உயர் பாடலான,
“உன்னையறிந்தால் – நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்!
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் – தலை
வணங்காமல் நீ வாழலாம்!”
என்று ஆரம்பமாகும் பாடலை அறியாதார் யார்!
இன்று எந்த தன்னம்பிக்கை நூல்களை எடுத்துக்கொண்டாலும் “தன்னை அறிவது” அதாவது “SELF-REALISATION” தான் அடிப்படை. அதாவது “KNOW YOURSELF” இதை உன்னை அறிந்தால் என்னும் பாடலில் எளிமையாக சொல்லிவிட்டார்.
புராண, இதிகாச, இலக்கியங்களில் கவிஞர் கண்ணதாசனுக்கு ஆழ்ந்து அறிவு! ஆம் ஒருசில பாடல்களில், அதிலும் ஓரிரு வரிகளில் மட்டும் அந்தப் பாதிப்பு தெரியும்.
“காலங்களில் அவள் வசந்தம், மாதங்களில் அவள் மார்கழி..”
(– பகவத்கீதை)
“மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கன்னையா அவர்
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா.”
“பருவம் வருதலாற் பற்றல் விழைந்தனள்;
அருகுள து எட்டியே யாயினும் முல்லைப்
படர்கொடி படரும்”
(– மனோன்மணியம் )
“தோள் கண்டேன் தோளே கண்டேன்” (கம்பர்)
“நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றம் இல்லை” (கம்பர்)”
“அன்றொரு நாள் இதே நிலவில்” (பாரி மகளிர்)
“வீடு வரை உறவு வீதி வரை மனைவி” (பட்டினத்தார்)
இப்படிப்பல!
“நாளைப் பொழுதை இறைவனுக் களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!!”
சோர்வில் துவளும் மனத்திற்கு இதைவிட ஆறுதலான வார்த்தைகளை கண்ணதாசனைத்தவிர வேறு யாராலும் தர இயலாது..
இன்னமும் சொல்லிக்கொண்டேபோகலாம் ஆனால் கங்கைவெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடுமா என்ன?! சர்க்கரை சமுத்திரமாக தமிழ்நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் அற்புதக்கவிஞனுக்கு இறுதியாக அவரது வார்த்தைகளினாலேயே முடிப்பதே சிறப்பு.
“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை”என்றார்! ஆம், தமிழைப்போல், கவியரசர் கண்ணதாசனும் நிரந்தரமாக அனைத்துத்தமிழ் நெஞ்சங்களிலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்!
— ஷைலஜா,பெங்களூர்
இறுக்கிக்கட்டிச் சரமாய்
தொடுத்தபின்னும்
மணம்பரப்பும் மலர்போல
அடக்கிப்பின்னலிட்டும்
அடங்கமறுக்கும்
முன் உச்சிமுடிபோல
குடம்குடமாய் நீர்விட்டும்
மழையை விரும்பும்
மலர்ச்செடிபோல
எத்தனையோ மனிதர்கள்
அருகில் இருந்தும்
தொலைதூரத்திலிருக்கும்
உன்னையே எதிர்பார்க்கும்,
மனசு.
ஷைலஜா
தமிழ் இலக்கியங்களின் சிறப்பே அதனை நாம் ஆழ்ந்து படிக்கும் போது அதில் வரும் சில அழகிய காட்சிகள் மனதைவிட்டு நீங்காமல் அப்படியே பதிந்துவிடுவதுதான்.
பெரும்புலவர் ஒருவர் தாம் எழுதிய கதையில் வரும் கதாநாயகியின் பெண்மைத்தன்மையை இப்படித்தான் அழகாக படம்பிடித்துக்காட்டுகிறார்.
அந்தக்கதையின் கதாநாயகி ஒருமகாராணி. தன்னுடைய சிறந்த நான்கு குணங்களை நாற்படையாகவும், தன்னுடைய ஐம்புலன்களையும் சிறந்த அமைச்சர்களாகவும் பெற்று ஆட்சி செய்வதாக தன் கவிதைகளில் வர்ணித்துள்ளார்.
ரத கஜ துரக பதாதி என்று சொல்லப்படும் நால்வகைப்படையும் அவளுடைய சிறந்த குணமாகிய அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு என்பவைகளாம் .
அடுத்து அவளுடைய மந்திரி சபையில் ஆலோசனைகூறும் அமைச்சர்களைக் கூறுகிறார்.
மெய்- அவளுடைய உணர்ச்சிமந்திரியாம்
வாய் – சுவை மந்திரி
கண்-காட்சி மந்திரி
மூக்கு- நுகர்ச்சி மந்திரி
செவி- கேள்வி மந்திரி
அமைச்சரவை இருந்தால் மட்டும்போதுமா அழகிய வெண்கொற்றக்குடை வேண்டாமா? அதுதான் அவளின் அழகிய முகம்!
அவளுடைய ஆட்சிக்கு வெற்றி முரசுதான் காற்சிலம்புகள்.அதன் ‘ சல்சல் ‘ என்ற ஓசைதான் முரசொலி. அத்துடன் அவளின் இருவிழிகளும் வேற்படை ,வாட்படைகளாம்!
இதன் கீழேதான் பெண்ணியல்பாகிய ராஜாங்கம் நடக்கிறது.
இந்த ராஜாங்கம் எப்படி நடக்கும் ? போர்முறை எப்படி இருக்கும்?
கேளுங்கள் அதையும்…..
நாணப்படை யானைமீது ஏறியபடி அவளை தலைகுனியவைக்கிறது.
அவள் வரும்போது ‘வருகிறாள்மகாராணி’ என்று காற்சிலம்புகள் முரசொலிக்கின்றன.
அப்போது “கண்ணே” எனும் குரல்கேட்கிறது.
உடனே செவி என்னும் பெயர் கொண்ட கேள்விமந்திரி, தன் இலாக்காவில் அந்த வார்த்தையை பதிவு செய்துகொள்கிறார்.
இப்படி ஒருகுரல் கேட்டதை காட்சி மந்திரியாகிய கனம் கண் அவர்களுக்குத் தெரிவிக்கிறார்.
உடனே காட்சி மந்திரி நிமிர்ந்து பார்க்கிறார்.
அடுத்தவினாடி அச்சம்படை(அதாவது தேர்ப்படை) வந்து அந்த மகாராணியை பயமுறுத்துகிறது.
அவள் அச்சத்தில் அழகுததும்ப நிற்கிறாள்.
உடனே குரல் கொடுத்த் ஆண்மகன் அச்சம்தவிர்க்க அங்கே வருகிறான்.
அவளது நுகர்ச்சிமந்திரியாகிய கனம் மூக்கு அவர்கள் தன் இலாக்காவில் அந்த ஆடவனின் மணத்தைப்பதிவு செய்து கொள்கிறார்.
அந்த அளவுக்கு அருகில் வந்துவிட்டான் அவன்!
அப்படியே அவளைக் கட்டிக்கொள்கிறான், உதடுகளைப் பார்த்தவன், உடனே கமலஹாசனின் சாகசம் செய்துவிடுகிறான் !:)
சுவைமந்திரியான வாய் அவர்கள் ‘அதன் சுவை அலாதி ‘எனப்பதிவு செய்கிறார்.
அடுத்து அவளை இறுக அணைத்துக்கொள்கிறான்.
உணர்ச்சி மந்திரியாகிய முதல் மந்திரி மாண்புமிகு மெய் அவர்கள், அந்தப் பெண்மை உணர்ச்சிக்கு முழு அனுமதி தருகிறார்.
நாணத்தை உடைக்கிறது படை.
பிறகு,,பிறகு…இனிய இரவுதான் விடியும்வரை..
இதுதான் அவள் ராஜாங்கத்தின் ஒருநாள் நடப்பு!
இந்த நடப்பையும் ராஜாங்க இலாக்காக்களையும் பிரித்து வைத்திருக்கிறார் ஒருபுலவர்.
யார் அந்தப்புலவர்?
அவர்தான் புகழேந்தி!
யார் அந்த மகாராணி?
நளனின் மனைவி தமயந்தி!
‘இக்காட்சி தரப்படுவது நளவெண்பாவில்
நாற்குணமும் நாற்படையா
ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா
வேற்படையும் வாளுமே கண்ணா
வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு!’
ஷைலஜா
நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தைகூட விடை சொல்லிவிடும் ஆனால் குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் முழிப்பார்கள்.
சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்றால் யாரோ நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள், அவர்களிடமிருந்து நாம் விடுதலை பெற்று விட்டோம் என்பதை உணரமுடிகிறது. மற்றபடி பலருக்கு- அதிலும் குறிப்பாய் பல இளைஞர்களுக்கு குடியரசு பற்றி எதுவும் தெரிவதில்லை.
இன்றைய பள்ளிகளிலும் தேசப் பற்றை விட மதிப்பெண்கள் பற்றே அதிகம் மாணவர்களிடம் இருக்கிறது. மொழிப் பற்றும் தேசப் பற்றும் இளம் தலைமுறையினரிடம் குறைந்து வர யார் காரணம்? பள்ளியில் ஆசிரியர்களா? வீட்டில் பெற்றோர்களா? சுதந்திரப் போராட்ட வீரர்களைச் சொல்லுங்கள் எனக் கேட்டால் காந்தி, நேருவிற்கு மேல் அவர்களால் சொல்ல முடிவதில்லை.
தமிழ்நாட்டில் சத்தியமூர்த்தி, காமராஜ், வ.உ.சி., வ.வே.சு. ஐயர், சுப்ரமண்ய சிவா, பாரதி, வீர வாஞ்சி, கொடி காத்த குமரன், நீலகண்ட பிரம்மசாரி……..இன்னும் எதனையோ வீரர்கள் சுதந்திரத்திற்காக் குரல் கொடுத்தவர்கள். இவர்களில் பலர் தங்கள் உயிரை அர்ப்பணித்தவர்கள்.
இந்தியா அளவில் பார்த்தால் திலகர், கோபாலகிருஷ்ண கோகலே, காந்தி, நேரு, பட்டேல், அம்பேத்கர், பகத்சிங், நேதாஜி, லாலா லஜபதி, ஆச்சார்ய வினோபாபாவே, சித்தரஞ்சன் தாஸ், தாதாபாய் நௌரோஜி….. இன்னும் எத்தனையோ பேர் நாட்டு விடுதலைக்காகப் போராடி வாழ்ந்தனர். இவர்களை எவ்வளவு பேர் நினைவில் கொண்டிருக்கிறோம்?
ஆசிரியர்கள் நாட்டுப் பற்றை மாணவர்களுக்கு ஊட்டவேண்டும். இந்த ஊட்டம்தான் வருங்கால சந்ததியினர் நாட்டுப் பற்று கொண்டு நம் நாட்டை உயர்த்த வழிகாட்டும். பெற்றோர்களுக்கும் இதில் பங்கு உண்டு. அன்றாட வாழ்க்கையை தொலைக்காட்சிகளிலேயே தொலைத்து விடுகிறவர்கள் எப்படி இளைஞர்களுக்கு வழிகாட்டுவது? வேரில் பழுதுகள் இருந்தால் விழுதுகள் வளர்வது எப்படி சாத்தியம்?
நமது மன்னர்கள் ஒற்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச் சிறு சிறு மாநிலங்களாய்ப் பிரித்து ஆண்டதால்தான் ஆங்கிலேயர் இந்த ஒற்றுமையின்மையைக் காரணம் வைத்து உள்ளே நுழைந்தனர். இந்த நிலை திரும்பவும் வராதிருக்க நமது தியாகிகளின் வீர வரலாற்றினைக் கூறி இளைய தலைமுறைகளை நாட்டுப்பற்று உள்ளவர்களாக வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமையும் ஆகும்.
முந்நூறு வருடங்கள் பிரிட்டிஷ்காரர்களிடம் நாம் அடிமைகளாய் இருந்தோம்.. அந்த முந்நூறு வருடங்கள் முன்பு நம் நாடு எப்படி இருந்தது? அப்போது மன்னர்கள் பலர் ஆண்டனர். மக்களுக்குச் சுதந்திரம் பற்றி எந்த விழிப்புணர்வும் வரவில்லை. மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்றே வாழ்ந்தார்கள்.
ராஜராஜ சோழன், மராட்டிய சிவாஜி, குப்தர்கள் போன்றவர்கள் மக்களுக்கு நல்லாட்சி கொடுத்தாலும் ஔரங்கசீப், அலாவுதின் கில்ஜி போன்றவர்களால் மக்கள் துன்பமும் பட்டார்கள். மன்னனின் ஆட்சி என்பது முடியாட்சி. அவன் வைத்ததே சட்டம். இதில் மக்கள் சுயமாய் சிந்திக்க, சுதந்திரம் பற்றி நினைக்கவும் வழி கிடையாது.
மன்னனின் வாரிசுகள் அடுத்து அரியணை ஏறுவார்கள். அவர்களின் கொடுங்கோலாட்சியை எதிர்க்கும் சிலரில் வீரமும் துணிவும் உள்ளவன் எப்போதாவது ஆட்சியைக் கைப்பற்றுவது உண்டு.
குடியரசு என்பதற்கு நேரடிப் பொருள் குடிமக்களின் அரசு. அதாவது மக்களாட்சி. மக்கள்: தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் முலம் தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எப்படி அட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டம் (constitution). மேதைகள் பலர் சேர்ந்து உருவாக்கிய நமது அரசியல் சட்டம்தான் உலகிலேயே மிக நீளமானதாம்.
மன்னர் ஆட்சி ஆங்கிலேயர் ஆட்சி எல்லாம் முடிந்து 1947 ஆகஸ்டு 15ஆம் தேதி சுதந்திரத்தைப் போராடி வாங்கிவிட்டோம். சுதந்திரத்திற்குப் போராடிய பலரில் நேரு, அதன் பின் இரண்டரை வருடங்களுக்குப் பிறகு 1950இல் குடியரசு நாடாக அதாவது மக்களாட்சி நாடாக அறிவிக்கப்பட்டது.
சுதந்திர தினத்தைவிட, குடியரசு தினம்தான் முக்கியமானது. ஏனென்றால் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சரியான ஆட்சி இல்லையெனில் தேர்ந்தெடுத்தவரை நீக்கிவிட்டு வேறொரு நல்ல தலைவரை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
இதையெல்லாம் இளைய தலைமுறை நன்கு அறிந்திருக்குமானால் நாட்டின் எதிர்காலம் வளமுடையதாக ஆகும் என்பது நிச்சயம்.
ஜெய்ஹிந்த்!