Tag: ஷைலஜா

  • சிட்டுக் குருவி – ஷைலஜா கவிதை

    ஷைலஜா எழுதிய ‘சிட்டுக் குருவி’ கவிதையை அவரது குரலில் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆண் சிலை – ஷைலஜாவின் கவிதை

    ஷைலஜாவின் ‘ஆண் சிலை’ கவிதை, அவரது குரலில்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பாரதி வேண்டிய சுதந்திர நாள் | ஷைலஜா பாடல்

    பாரதி வேண்டிய சுதந்திர நாள் | ஷைலஜா பாடல்

    கவிதாயினி ஷைலஜா இயற்றிய ‘பாரதி வேண்டிய சுதந்திர நாள்’ என்ற பாடலைத் திருமதி நாகி, திருமதி பானு ஆகியோர், இனிய குரலெடுத்துப் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மகராசர் காமராசர்

    மகராசர் காமராசர்

    அண்ணாகண்ணன்
     
    பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவுநாள் இன்று. தமக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த அந்த அற்புத மனிதரின் நினைவைப் போற்றுவோம்.
     
    மகராசர் காமராசர் என்ற தலைப்பில் நான் எழுதிய பாடலை, பெங்களூரில் வசிக்கும் எழுத்தாளர் ஷைலஜா, மூன்று மெட்டுகளில் பாடியுள்ளார். அதை இன்று கேட்டு மகிழுங்கள்.
     
     
     
    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
    Share
  • மகராசர் காமராசர்!

    மகராசர் காமராசர்!

    பாடல் எழுதியவர் : அண்ணாகண்ணன், சென்னை

    இசையமைத்து, மூன்று மெட்டுகளில் பாடியவர்: ஷைலஜா, பெங்களூரு.

    வாசிக்கக் கல்விச் சாலை
    வயிற்றுக்கு நல்ல சோறு!
    தேசத்தின் வளத்தைக் கூட்ட
    திக்கெட்டும் அணைகள்! ஆலை!
    யோசிக்கும் நொடியில் இந்த
    யுகம்வெல்லும் மனித நேயர்!
    மாசில்லை எனப்பார் போற்றும்
    மகராசர் காம ராசர்!

    வாய்ச்சொல்லில் வீரர் அல்லர்!
    வகுப்புகள் ஆறே கற்றார்!
    பாட்டாளி அவரின் பேரில்
    பல்கலைக் கழகம் இன்று!
    வீழ்ச்சியில் கிடந்த நாட்டை
    மீட்பராய் வந்து காத்தார்!
    நேயத்தின் எளிய செல்வர்
    நிகரில்லாக் காம ராசர்!

    இந்தப் பாடலை மூன்று மெட்டுகளில் கேட்க:

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கனவென்னும் கட்டெறும்பு

    கனவென்னும் கட்டெறும்பு

    கவிதை: அண்ணாகண்ணன்
    வாசிப்பு: அண்ணாகண்ணன், ஷைலஜா

    இந்தக் கவிதையை ஒலி வடிவில்  இங்கே கேட் கலாம்.

     

    காய்ச்சலா என்று கேட்டு
    நெற்றியில் கையை வைத்தாய்.
    இல்லாத காய்ச்சல் சூடு
    ஜிவ்வென ஏறக் கண்டேன்.

    வேர்க்குதா என்று கேட்டு
    மேலாக்கால் துடைத்து விட்டாய்.
    இல்லாத வேர்வை பொங்கி
    என்மேனி மூழ்கக் கண்டேன்.

    தூசியா என்று கேட்டு
    இதழ்குவித்து ஊதி விட்டாய்.
    உலகமே தூசியாச்சு
    உன்னிதழ் உலக மாச்சு.

    கோணலா வகிடு என்று
    சீப்பினால் சிலை வடித்தாய்.
    மேகமாய் மிதந்து சென்று
    காற்றுக்குத் தலை கொடுத்தேன்.

    பசிக்குதா என்று கேட்டு
    ஒற்றைவாய் ஊட்டிவிட்டாய்.
    உறுபசி தன்னைத் தின்று
    உயிர்ப்பசி ஊறக் கண்டேன்.

    தூங்கென்று சொல்லிவிட்டுத்
    தூரத்தில் புள்ளி யானாய்.
    கனவென்னும் கட்டெறும்பு – என்
    காலத்தைக் கடிக்குதேடி.

    http://annakannan-kavithaigal.blogspot.com/2006/03/blog-post.html
    ——————————————
    Pic courtesy: https://www.maxpixels.net

    ——————————————

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மழைப்பேச்சு!

     

    ஷைலஜா

    nandi_2623696f

    யாகங்கள் பல செய்தீர் உங்கள்மன
    சோகம் நீங்கிடவேண்டுமென்றே
    தாகம் தணிக்க வந்தேன் தவறா?

    கண்ணுக்கு எட்டாத்தொலைவில்
    காணாபொருள்போலிருந்தேன்
    காட்சிகொடுத்ததும் தவறா?

    கோடிக்குரல் அழைத்தால்
    தேடிவருவது தெய்வகுணம்
    ஓடிவந்ததும் தவறா?

    என்பாதைஅத்தனையும்
    எங்கும் அடைத்துவிட்டீர்
    எப்படியோ வந்ததும் தவறா?

    என்குணம் எதிலும் அடங்கும்
    என்பது தெரிந்திருந்தும்
    ஏரிகுளங்களை அழித்தது தவறு

    இல்லாத பொழுதினில் ஏங்குவதும்
    வருகின்றபொழுதினில் சேமிக்காததும்
    வாழும் மனிதன் செய்யும் தவறு

    இயற்கையின் கொடைதன்னை
    இயன்றவரை அழிப்பதுதான்
    இன்றைய மனிதனின் தவறு

    பொறுத்ததுபோதுமென்றுதான்
    பொங்கி எழுந்து வந்தேன்
    புரிந்ததா உங்கள் தவறு?

    Share
  • படியில் குணத்துப் பரத நம்பி!

    ஷைலஜா

    aramகம்பகாவியத்தில் இராவணவதைப்படலம் முடிந்து சீதையுடன் இராமன் அயோத்திக்குத்திரும்பும் காட்சி!

    இலங்கைமாநகரினின்றும் புஷ்பகவிமானத்தில் பரிவாரங்களுடன் புறப்படும் இராமன் சீதைக்கு ஒவ்வொருஇடமாக காட்டிக்கொண்டுவருகிறான்.வருகிறான்.

    கோதாவரி நதி வரும்போது அதனருகில் உயர்ந்தகுன்றினைக்காண்பித்து,’நாம் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்த இடம் ‘என்கிறான்.

    பரத்வாஜமுனிவர் இராமரை எதிர்கொண்டு தன் இருப்பிடத்திற்கு அனைவரும் வந்து விருந்துண்ணும்படி அன்புடன் கேட்க இராமனால் தட்டமுடியவில்லை..ஆனால் அயோத்தியில் தம்பி பரதன் தன் வரவுக்குக்காத்திருப்பான் என நினைக்கிறான்.குறித்த நேரத்தில் தான் செல்லாவிட்டால் பரதன் தீமூட்டி அதில் விழுந்துவிடுவதாக சொல்லி இருந்தது இராமனுக்கு தவிப்பாக இருக்கிறது.பரதனுக்கு சேதி அனுப்பவேண்டும்.

    ஆகவே அனுமனை அழைத்து,தனதுமோதிரத்தையும் கொடுத்து தான் அயோத்திக்கு திரும்பிவந்துகொண்டிருக்கும் தகவல் சொல்லி அனுப்புகிறானாம் இராமன்.

    ஆகாயமார்க்கத்தில் அனுமன் வாயுவேகத்தையும்விடவும் தனது நாயகன் இரமானின் அம்பின் வேகத்தைவிடவும் தனது வேகத்திற்கே ஈடாகாமல் சிந்தைபின்செல தான்முந்திச்செல்கிறான்.

    அங்கோ பரதன் இராமனின் வரவுகாணாது வருந்தி தம்பிசத்ருகனனை தனக்காக தீ மூட்ட சொல்கிறான்.
    சத்ருக்னன் திடுக்கிடுகிறான். செய்வதறியாது மனம் சோர்வுறுகிறான்.

    தனக்கு நேர்ந்துள்ள நிலைமையின் விரக்தியில் இளையவன் புலம்புகிறான்.

    விவரம் அறிந்து கோசலை ஓடிவருகிறாள்.பரதன் செயல்கண்டு பதறுகிறாள்

    .” ‘எண்ணில் கோடி இராமர்களென்னினும் அண்ணல் நின்னருளுக்கு அருகாவரோ?’ என்கிறாள்.

    இதே வார்த்தையை முன்பு குகன் சொன்னான்.

    ஆயிரம் இராமர் நின்கேழ்
    ஆவரோ தெரியின் அம்மா

    பரதனைப்பற்றி இராமன் கூறியதும் குகன் இப்படிவியந்தானாம்!

    இங்கு கோசலைதன் மகனை காட்டுக்கு அனுப்பியகைகேயி மகனிடம் அவள்கொண்ட கனிவுதான் என்னே! அதனால் கௌசல்யா சுப்ரஜா ராமா என்று சுப்ரபாதம் சொல்கிறோம்!

    பரதன் மட்டும் லேசுப்பட்டவனா? ’தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத் தீவினை என நீத்தவன்” அல்லவா?மணிமுடிதவிர்த்து சடைமுடி தரித்துக்காடு சென்ற காகுத்தனைத்தேடி தானும் அதே கோலத்தில் சென்று தன் நினைப்பு நிறைவேறாத நிலையில் வேறுவழியின்றி தமையனின் திருவடிகளைப்பெற்றுவந்து அவற்றை அரியணையில் அமர்த்தி அவன் சார்பில் ஆட்சிபுரிந்தவன். இராமனுக்கு அடிமை என்னும் இயல்பையே விரும்புபவன்.

    பெரியாழ்வார் பரதனைப்பற்றி இப்படி அருள்கிறார்.

    முடி ஒன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்
    அடியேற்கு அருள் என்று அவன்பின் தொடர்ந்த
    படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று
    அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற
    அயோத்தியர் கோமானைப் பாடிப் பற

    படியில்குணத்துப்பரத நம்பி என்னும் வார்த்தைக்கு ஆழ்ந்த பொருள் உள்ளது. படி..ஒப்பு. ஒப்பில்லாத உயர்ந்த குணங்களை உடையவன் பரதன் என்பது பொருள்

    குணங்களால் நிறைந்தவன் என்று தோன்றவும் பரதன் நம்பி என்கிறார்.

    பங்கமில்குணத்துப்பரதனாகக் காட்டுவான் கவிச்சகரவர்த்தி.

    பங்கம் இல் குணத்து எம்பி பரதனே
    துங்க மாமுடி சூடுகின்றான்.

    என்பது இராமனின் கூற்று.

    ஆழ்வார்கள் அடியொற்றிச்செல்லும்கம்பனுக்கு பரதன் நம்பி என்னும் பெரியாழ்வாரின் பெருமைமிகு சொல்லாட்சி நெஞ்சிலேயேஉழன்று கொண்டிருக்கவேண்டும் அதனால் பரதன் தவவேடம் கண்டு திகைத்த குகனின் மனநிலையைக்கண்டு கல்லும்கனியப்பாடுகிறான் கம்பன்.

    நம்பியும் என் நாயகனை
    ஒக்கின்றான்; அயல் நின்றான்
    தம்பியையும் ஒக்கின்றான்;
    தவம் வேடம் தலைநின்றான்;
    துன்பம் ஒரு முடிவு இல்லை;
    திசை நோக்கித் தொழுகின்றான்;
    எம்பெருமான் பின்பிறந்தார்
    இழைப்பரோ பிழைப்பு?‘‘ என்றான்

    நம்பியும் என் நாயகனை என்னும் வரியில் பெரியாழ்வாரின் பரதன் நம்பி எனும் வார்த்தையின் பாதிப்பினைக்காணலாம்.

    இப்படிப்பட்ட பரதன் தீயில் விழத்துணிந்துவிட்டான்.சொன்னபடி இராமன் வரவில்லை என தான் எடுத்த முடிவுக்குத்துணிந்துவிடுகிறான்.

     தீவலம் வந்து பரதன் அதில் விழ இருக்கும் அக்கணம்
    அனுமன் வந்துவிடுகிறான்

    குன்றுபோல் நெடுமாருதி கூடினான்

    என்கிறான் கம்பன்.,

    வந்தவன் தீயை முதலில் அணைக்கிறான். அக்கினிசாட்யாகவும் இதை நாம் எடுத்துக்கொள்ளலாம்.ஆம் ’அக்னிசாட்சியாக ராமன் வந்துகொண்டிருக்கிறான் என்னும் சேதி சொல்ல நான் வந்திருக்கிறேன் என்னை நீ நம்பலாம்!’என்னும் அனுமனின் மனோவாக்காக இருக்கலாம்! பரதனை நெருப்பு பற்றுமுன்பாக மாருதி பற்றுகிறான்.

    காற்றின் மகனை தீஎன்ன செய்யும்?ஏற்கனவே அனுமன் இலங்கைக்கு தன் வாலினால் தீவைக்கும்போது சீதை,’ தீயால் அனுமனுக்கு ஏதும் தீமைவரக்கூடாது ’என வேண்டிக்கொண்டிருக்கிறாள்!
    மாதாவின் வாக்கு மகனுக்குக்காப்பு!

    கையினாலெரியைக்கரியாக்கினான் என்று அனுமன் வலிய பரந்த தன் கையினால் அக்கினியைப்பிசைந்து அவித்துக்கரியாக்கினதாக கம்பன் வர்ணிக்கும்போது கண்முன் காட்சியாய் விரிகிறது அல்லவா! .

    இராமன் அளித்தமோதிரத்தை பரதனிடம் கொடுக்கிறான் வால்மீகியில் இப்படி ஒருகாட்சி இல்லை என்கிறார்கள்,. (அன்று அண்ணல், சீதைக்கு அளித்த கணையாழியை இன்று பரதனுக்கு அளிக்கச்செய்ய கம்பனால்முடிகிறது!)

    மோதிரம் வாங்கித்தன் முகத்தின் மேலணைத்துக்கொள்கிறான் பரதன்.
    அவன்மன நிலையை கம்பன் தமிழில் காணலாம், சுவைத்து மகிழலாம்.

    அழும், நகும்; அனுமனை – ஆழிக் கைகளால்
    தொழும், எழும்; துள்ளும் – வெங் களி துளக்கலால்

    விழும், அழிந்து ஏங்கும் – வீங்கும், வேர்க்கும்; அக்
    குழு வொடும் குனிக்கும் – தன் தடக்கை கொட்டும் ஆல்
    வேதியர் தமைத் தொழும் – வேந்தரைத் தொழும்;
    தாதியர் தமைத் தொழும் – தன்னைத் தான் தொழும்;

    ஏதும் ஒன்று உணர்குறாது – இருக்கும், நிற்கும் ஆல்;

    காதல் என்று அதுவும் ஓர் – கள்ளில் தோற்றிற்றே!

    images (1)

    அழும் நகும் என்கிறவார்த்தைகள் குழந்தைத்தனத்தை சொல்வது. கள்ளம்கபடம் இல்லா குழந்தைமனம்தான் அப்படியெல்லாம் செய்யும்

    இங்கேயும் கம்பன் ஆழ்வார் பெருமானின் இந்தப்பாடலைத்தான்நினைக்கவைக்கிறார்!

    கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
    கண்ணநீர் கைகளால் இறைக்கும்*
    சங்கு சக்கரங்கள் என்று கைகூப்பும்
    தாமரைக்கண் என்றே தளரும்*
    எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு? என்னும்
    இருநிலம் கைதுழாவிருக்கும்*

    செங்கயல் பாய்நீர்த் திருவரங்கத்தாய்!
    இவள் திறத்து என் செய்கின்றாயே?

    Share
  • ஏன் வரவில்லை?

    ஷைலஜா

    இரண்டுவருஷமாய் நான் இந்தியாவிற்குப்போகவே இல்லை. அதற்குமுன்புவரை வருடம்ஒருமுறைதவறாமல் போவது வழக்கமாக இருந்தது. ஒவ்வொருமுறையும் இருபதுநாளுக்குமேல் லீவ் எடுத்துக்கொண்டு வீட்டில் அப்பா அம்மா அண்ணா மன்னி தம்பிதங்கை அண்ணாவின் குழந்தை ப்ரியாக்குட்டியுடன் பொழுதினைக்கழித்துவருவேன்.மலைக்கோட்டை, சமயபுரம்,

    கல்லணை,முக்கொம்பு,வயலூர் என்று பெரிய திட்டங்களோடுதான்

    துபாயைவிட்டுப்புறப்படுவேன் ஆனால் அங்கெல்லாம் போக நேரம் கிடைக்காத அளவுக்கு வீடு என்னைக் கட்டிப் போட்டுவிடும்.

    இந்தவருடமும் ஊருக்குப்போகவேண்டாமென்றுதான் இருந்தேன் ஆனால் போனவாரம் போனில்ப்ரியாகுட்டி,”சித்தப்பா எப்போ வரே?’ என்று கேட்டதும் மனது கேட்கவில்லை.

    புறப்பட்டுவிட்டேன்!

    காவிரிப்பாலத்தில் டாக்சியில் வரும்போதே காலைநேரத்து இளம்குளிரோடுவீசியகாற்றில் உடலிற்குப் புதுத்தெம்பு வந்துவிட்டது.

    மாம்பழச்சாலையைக் கடந்து ஊருக்குள் டாக்சிநுழையும்போது எதிரே விண்ணைமுட்டும்ராஜகோபுரம் ‘வா வா’ என அழைப்பதுபோல இருக்கிறது.

    தெற்குவாசலில் டாக்சியை நிறுத்தசொல்லி மன்னிக்குப் பிடிக்குமே என்று ஜாதிமல்லிபத்துமுழமும், கோபுரத்துஅடியில் கூறுகட்டி

    விற்றுக்கொண்டிருந்தவளிடம் அம்மாவுக்காக கொய்யாபழமும் வாங்கிக்கொள்கிறேன்.

    டாக்சியின் எஃப் எம் கமல்படத்தின் ’ உன்னைக்காணாமல்…’என்றது.போனமுறை ஊர்வந்தபோதுதீப்தா எனக்குப்பாடிக்காட்டிய பாடல்! என் இனிய சிநேகிதியான அவளுக்கும் குடும்பச் சுமை அதிகம்,அதுவும்அவள் அப்பாவின் மறைவிற்குப்பிறகு, உள்ளூரில் ஒருசீட்டுக்கம்பெனியில் பணிபுரிகிறாளாம், மாதம்நாலாயிரம் ரூபாய் சம்பளத்திற்காக

    சித்திரை வீதிவழியே டாக்சிபோகும்போது இரண்டுவருடங்களில் கொஞ்சமும் மாறாத என்ஊரைப்பெருமையுடன்பார்த்துக்கொள்கிறேன்.

    . தேரடியில் ரங்கப்ரசாத் மற்றும் பாபு, சுதர்சனுடன் கிரிக்கெட் விளையாடியதைமனம் அசைபோட்டது.

    ?யாரு பரத்வாஜனா? ஏண்டாப்பா, ரண்டுவருஷம் கழிச்சி வரபோல்ருக்கு?”

    எதிர்வீட்டுதிண்ணையிலிருந்து மூக்குக்கண்ணாடியை எடுத்து மறுபடி அணிந்தபடியேகிச்சாமாமா குரல்கொடுத்தார்.

    “ஹைய்யா சித்தப்பா வந்தாச்சு:!” ஓடிவந்தது ப்ரியாகுட்டி. அட! ப்ரியாக்குட்டிஎப்படி வளர்ந்துட்டது!

    டாக்சியை அனுப்பிவிட்டு நிமிர்கிறேன்.

    வீட்டுவாசல்கதவை அடைத்துக்கொண்டு உறவுப்பட்டாளம்!

    பார்வையாலேயே பாசத்தைப்பொழிந்தார் அப்பா. பள்ளிக்கூடத்தில் ஆசிரியராய்பணிபுரிந்தபோது அதிகம் பேசிய களைப்போ என்னவோ ஓய்வுபெற்றதிலிருந்து அப்பாயாருடனுமே அதிகம் பேசுவதில்லை.

    “அதில்லைடா பரத் உங்கப்பாக்கு குடும்பச்சுமையை உன்மேல ஏத்திட்டோ மேன்னுமனசுக்குள்ள குறுகுறுப்பு உங்கண்ணாக்கும் சுமாரான சம்பளம்தான். சேமிப்பும்அதிகமில்லை..குடும்பம் ஓடணும்னுதான் படிச்சதுமே நீ துபாய் போய் பணம்அனுப்பிண்டு இருக்கே..பாவம் …நாங்கள்ளாம் வாய்விட்டு சொல்லிடுவோம்…உங்கப்பா மனசுக்குள் வச்சிண்டு குமைவார். அதான் மௌனசாமியாராய் ஆயிட்டார்”என்று போனதடவையே அம்மா சொன்னாள்.

    “ரண்டுவருஷமாச்சே கண்ணா எப்டிப்பா இருக்க? என்னவோ இந்தக்குடும்பம் முன்னேறவும்வீட்டுக்கடனை அடைக்கவும் உன்னை

    அவ்வளோ தூரத்துக்கு அனுப்பிட்டோ மேன்னு பலசமயம் வருத்தமா இருக்குப்பா”

    அம்மா இப்போதும் பார்த்ததும் கண்பனித்தாள்.

    “வாங்கோ! போனவருஷம் வருவேள்னு ரொம்ப எதிர்பார்த்தோம்”என்றாள் மன்னி. கல்யாணமாகி ஆறுவருடங்களாகியும் மாறாத புன்னகைமுகம்.

    ” அதான் லீவே கிடைக்கலை வரமுடியலைன்னு போன்ல சொல்வானே விஜி? இப்போ லீவ்கிடைச்சிருக்கு ஓடிவந்துட்டான் என் தம்பி!…வாடா பரத்…எப்படீ இருக்கே? அம்மா! அவனுக்கு ஃபில்டர்காஃபி புதுப்பால்லபுதுசா போட்டுக்கொடு” அண்ணா ராஜு தோளைத்தட்டி வரவேற்றான்.

    “பரத் அண்ணா! நான் இந்தவருஷம் ப்ளஸ்டூக்கு ரொம்ப ஹார்ட் ஒர்க் பண்ணிபடிக்கறேன்’

    ‘நானும்:தான்”

    இரட்டைசகோதர உறவுகள் சேர்ந்துகுரல் கொடுத்தன.

    “இந்தவருஷமும் நீ வரலேன்னா நாங்க கடனை உடனைவாங்கி டிக்கட்போட்டுண்டுதுபாய்வந்துருப்போம்,தெரியுமா அப்படி

    ஏங்கிட்டோ ம்டா பரத்! போன்ல எத்தனை பேசினாலும் நேர்ல பாக்றாப்ல ஆகுமா சொல்லு?”

    “வந்ததும்வராததுமா அவனை ஆயிரம் கேள்வி கேக்காதங்களேண்டிம்மா.. பரத்! ஊஞ்சல்லஉக்காருப்பா… டீ சித்ரா! fan போடேன் சித்த..குழந்தை வெளிநாட்ல ஏசிகீசின்னு சௌகர்யமா இருப்பான் இங்க வந்த சித்த நாழிலகறுத்துப்போயிட்டான்பாரு..” அத்தை-அப்பாவின் மூத்த சகோதரி- வாஞ்சையுடன் என்

    தலையைக் கோதிவிட்டாள்.

    . :அம்மா சூடாய் வெண்பொங்கலும் கத்திரிக்காய் சுட்ட கொத்சும் தட்டில் வைத்துஎன்னிடம் நீட்டினாள்.தங்கநிறத்தில் வறுபட்டமுந்திரிகளும், பொம்மைமுயலின்கண்களைப்போல முழித்துக்கொண்டிருந்த மிளகும் நாக்கில் நீர் ஊறவைத்தது.

    புழக்கடைப்பக்கம் போய் கிணற்றடியில் கைகால் அலம்பிக்கொண்டுவந்து தட்டைஅம்மாவிடமிருந்து வாங்கிக்கொண்டேன்.

    “காஃபி முதல்ல தரக்கூடாதோ?” அண்ணா கத்தினான்.

    “பசியா இருக்குமோன்னு முதல்ல டிபனைத் தந்தேன்..முடிச்சதும் காஃபி கலந்துட்டாபோச்சு”

    “பொங்கலோட வடையும் பண்ணி இருக்கலாம்னு இப்போ தோண்றது

    ..சாப்பாட்டுக்குப்பண்ணிடலாம்மா…மச்சினருக்கு தயிர்வடைன்னா ரொம்பவேபிடிக்குமே?” மன்னி உருகினாள்.

    “நேத்தே திரட்டிப்பால் கிளறிவச்சிட்ட்டேன் குழந்தைக்கு தட்ல ஓரமா போடேன்பத்மா,சொல்லணுமாக்கும்? “அத்தை அதட்டினாள் அம்மாவை அன்பாக.

    வாங்கிவந்த சாமான்களை அனைவரிடமும் கொடுத்தபோது கண்களில் மகிழ்ச்சிதவழ நன்றிதெரிவித்தனர்.

    “எதுக்குடா இப்படி சிரமம் எடுத்துக்கறே?”அண்ணன் அன்பாய்கடிந்துகொண்டான்.

    ஊரும் மாறவில்லை என்வீட்டுமனிதர்களும்மாறவில்லை என்னும்போது எனக்குப்பெருமையாகஇருக்கிறது.

    “கொள்ளிடம்போய்குளிச்சிட்டுவந்துடறேன்” என்றபோது அப்பா தன் சைக்கிள்சாவியைஎன்னிடம் தந்தார். நடந்துபோகக்கூடாதாம்!

    படித்துறையில் தீப்தா துணி துவைத்துக்கொண்டிருந்தவள், என்னைக்ண்டதும்,”பரத்எப்போ வந்தே? “என்று வியப்பாய் கேட்டாள்.

    சிறிதுநேரம் நாஞ்சில்நாடனையும் ஜெயகாந்தனையும் அலசினோம்.

    “ஜெயகாந்தனும் போயிட்டாரேடா பரத் நம்பவேமுடியல”

    “ஆமா …மனசுக்கு ரொம்பக்கஷ்டமா இருக்கு..”

    “என்னவோபோ..சொல்லிக்காம வர ஒரேவிருந்தாளி மரணம்தான்…

    அதுபோக்கட்டும்..நாளைக்கு ஆடும்பல்லக்குடா, பரத்…வாசல்பூரா

    கோலம் வழக்கம்போலப்போடப்போறேன்..நீவந்து பார்த்து கருத்து சொல்லணும் என்ன?”

    “இந்த கம்ப்யூட்டர் யுகத்துலயும் சின்னக் குழந்தைமாதிரி கோலம்போடறதும்கொள்ளிடக்குளியலுமாய் அது இதுன்னு இருக்கியா தீப்தா?”

    “மனசுக்கு சந்தோஷமான விஷயங்களை எதுக்கு மாத்திக்கணும் அல்லதுமறக்கணும் , அதுவேமத்த துக்கங்களை மறக்க ஒருகருவியா இருக்கறப்போ?”

    நான் சிரித்தபடி வேறுபக்கம் நகர்ந்தேன்

    ஆயிற்று ஊருக்குபோகிற நாள் வந்தாயிற்று.

    எந்நேரமும் விரல்பிடித்துக்கொண்டே விளையாடிய ப்ரியாகுட்டி..

    பார்வையால் வருடும் அப்பா..

    வாய்க்கு ருசியாய் சமைத்துப்போடும் அம்மாவும் அதனை வயிறாரப் பரிமாறியமன்னியும்

    ..

    பாடங்களில் சந்தேகம்கேட்டு என்னைப்பெரிய ஆசிரியர் போல மதிக்கும் என்உடன்பிறப்புகள்..

    ‘துபாய்ல உப்பு,புளிகிடைக்குமா ?நல்ல ஹோட்டல் இருக்கா? உடம்புக்கு ஏதாவதுன்னாயாருடா பக்கத்துல இருக்கா உனக்கு?’

    அத்தையின் அன்பான அக்கறையான கேள்விகள்.

    ‘பரத்! அம்மா அப்பாவைப்பத்தி கவலையேபடாதே …நானும்மன்னியும் நன்னாபாத்துக்றோம் என்ன? “

    அண்ணாவின் அனுசரணையான பேச்சு..

    சிநேகிதம் என்கிற எல்லைக்கோடிற்குள்லேயே எப்போதும் இருந்துகொண்டுபழகும்அன்புதோழி தீப்தா…

    எல்லாரையும் விட்டு ஊருக்குபுறப்படவேண்டுமே என்றிருக்கிறது.

    அப்பாமட்டும் எவ்வளவு தடுத்தும் சென்னை செல்லும் ரயிலில் ஏற்றிவிட ஸ்ரீரங்கம்ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார்.

    ரயில் வருவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருக்கும் போது அப்பா என்னிடம்,

    “பரத்! உன்கிட்ட வந்ததுலேந்து கேட்க நினச்சேன் , இப்போ கேட்டுட்றேன்.. உன் தலைலகுடும்பச்சுமைய ஏத்திட்டோம்ன்னு எங்கபேர்ல கோபமா? அதனால்தானே நீ இத்தனை நாளாய்

    ஊர்பக்கமே வரலயா?” என்றார்.

    ‘ஐயோ அப்பா! இந்தப்பேச்சுக்கு உங்கள் மௌனமே பரவாயில்லை’ என்று கத்தவேண்டும்போலிருந்தது.

    என்னையே பார்த்துகொண்டிருந்த அப்பாவின் விரல்களை பிடித்துக்கொள்கிறேன்.

    “அ அ ..அ.ப்.பா! ” வார்த்தைகள் உடைந்து வந்தன .

    இருபத்தி ஏழுவயதில் இருபதுவயதை முழுங்கிவிட்டு, சிறுவனாய் கதறஆரம்பிக்கிறேன்.

    “அப்பா ஒவ்வொரு தடவை ஊருக்கு வந்துவிட்டுப்போகிற போதெல்லாம் உங்க எல்லாருடையபாசத்தையும் பரிவையும் அனுபவிச்சிட்டுதிரும்பி துபாய் போனதும் பலநாட்களுக்கு என்னால் இதிலிருந்துமீளமுடிவதில்லை.. எதையுமே ருசிகண்டால்தானே அவஸ்தை?என்னால் ஆசையை அடக்கமுடியும்போல இருக்கு… ஆனா அவஸ்தையை தாங்கமுடியலப்பா..அதான் இத்தனை நாளா வரல…இப்போ மறுபடி துபாய்போனதும் இந்த அவஸ்தைதொடரபோகிறதுப்பா..” நான் முடிக்கவும் உடனே

    “ப..ர..த்!” என்ற அப்பாவின் குரலில் மேலும் கரைந்துவிடவும் இருந்த நிலையில், நல்லவேளையாய் ரயில் வந்துவிட்டது .

    Share
  • கர்மவீரர் காமராசர் ..

    ஷைலஜா, பெங்களூர்

    கர்மம் எனில் செயல்.செயல்வீரராக வாழ்ந்துகாட்டிச்சென்றவர் அந்த உன்னத மனிதர்! அதனால்தான் கர்மவீரர் என்று போற்றப்படுகிறார்.

    Kamarajar kavithai

    சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

    சொல்லிய வண்ணம் செயல்

    எனும் வள்ளுவரின் வாக்குபோல சொல்லியவண்ணம் வாழ்ந்து காட்டியவராம் காமராஜர்!

    மக்களுக்காக வாழ்ந்த மாமனிதரைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது.ஆயிரத்தில் ஒருவரின் பெருமையை வெறும் ஆயிரம் சொற்களில் அடக்க முடியாதுதான்!

    பெருந்தலைவர் காமராஜர் ஆண்ட காலத்தைத் தமிழ்நாட்டின் பொற்காலம் என்பார்கள்.

    கர்மவீரர், கருப்புக்காந்தி, ராஜதந்திரி, படிக்காத மேதை, பாரத ரத்னா, கிங் மேக்கர், ஏழைப் பங்காளன் என்று மக்களால் போற்றப்படுபவர் கர்மவீரர் காமராஜ்!

    நாடறிந்த நல்லதொரு தலைவர் காமராஜ்! தனக்கென வாழாமல் நாட்டிற்கென வாழ்ந்த தனி மனிதர்! ஆம் முதலில் அவர் மனிதர் தான்! அவரின் மனிதாபிமானம் போற்றுதற்குரியது.

    அந்த காலத்தில் அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் மற்றும் பொதுக்கூட்டங்களில் மக்களோ தொண்டர்களோ காலணா அரையணா ஓரணா என்று கொடுப்பார்கள் அதைவாங்கி சட்டைப்பையில்போட்டுக்கொள்வார் காமராஜர்! ஐந்து பத்துரூபாயாக சேர்ந்ததும் அதை அப்படியே நண்பர்’இந்து’ கஸ்தூரிரங்கனிடம் கொடுத்துவிடுவார்

    ஒருமுறை’ இந்து’ கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு உட;ல்நிலை மோசமாகிவிட்டது

    காமராஜரை அழைத்து,” சாகும்போது கடன்காரராக சாக விரும்பவில்லை உம்முடைய பணத்தை உம்மிடமே ஒப்படைக்கிறேன்” என்றார்.

    பெருந்தலைவரோ,”அப்படி ஏதும் நடக்காது நீங்கள் கவலைப்படவேண்டாம் இந்தப்பணத்திற்காகத்தான் என்னைவரசொல்லி இருக்கிறீர்கள் என்றால் நான் வந்தே இருந்திருக்கமாட்டேன்” என்றார்
    .
    “சரி..எத்தனைவருடம் என்றாவது ஞாபகத்தில் இருக்கிறதா?”கஸ்துரிரங்கன் இப்படிக்கேட்கவும்,”அதெல்லாம் எனக்குத்தெரியாது”என்றார் காமராஜர். ஆனால் கஸ்தூரிரங்கனின் வீட்டில் உள்ளவர்கள் தேதிவாரியாக குறித்துவைத்திருந்தபடியால் அவர்களிடம்,”எனக்கு ஏதாவது ஒன்று நேர்ந்துவிட்டால் பணத்தை காமராஜரிடம் ஒப்படைத்துவிடுங்கள்” என்று கஸ்தூரிரங்கன் கூறினாலும் காமராஜரின் நினைப்பைப்போலவே கஸ்தூரிரங்கன்குணமாகிவிட்டார்.

    மறுபடி இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது,”உம் தொகையை பெற்றுக்கொள்ளலாமே?’ என்ற கஸ்தூரி ரங்கனிடம்.”எனக்கு எதற்கு? அது மக்கள் பணம். ஆனால் ஒரு இடம் வாங்க நினைத்திருக்கிறேன் அதை செய்யுங்கள்” என்று காமராஜ் சொல்லவும் இந்தமட்டில் இடம் வாங்க சம்மதித்தாரே என பெரிய நிலத்தை விலைபேசி வாங்கிவிட்டார்.

    பத்திரப்பதிவுக்கு தன் பெயரைப்போட இருந்த கஸ்தூரிரங்கனைப்பார்த்து பெருந்தலைவர் அலறி விட்டார்,”மக்கள் கொடுத்த காசு , அது பொதுச்சொத்து. எனக்கெதற்கு காசுபணம் சொத்து எல்லாம்?” என்றார்.

    கட்சியின் பெயரில்பத்திரப்பதிவு செய்யப்பட்ட அந்த இடம் தான் இன்று தேனாம்பேட்டை காங்கிரஸ் கட்சி மைதானமும், பெரிய காமராஜர் அரங்கமும்.

    அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி – பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் – இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது.

    கல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதாது, நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகவேண்டுமே என சிந்தித்தார் காமராஜர். அதற்கென திட்டங்கள் தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

    இன்றைக்கு மதுவிலக்கு அமுலுக்கு வர பலர் போராடுவதாக சொல்கிறார்கள், ஆனால் அன்றைக்கு பெற்ற தாய் இறந்தபோது கூட கண் கலங்காத காமராஜர், மனம் நொந்து கண்ணீர் விட்டது தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட போதுதான்

    ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசுவார்.

    பெரியார் அவரின் தொண்டர்களின் குழந்தைக்கு நல்ல பெயர் வைக்கவேண்டும் எனில் காமராஜர்னுதான் வைப்பார்.
    ஜீவா தனது மரணப்படுக்கையில் சொன்ன கடைசி வார்த்தை “காமராஜர்க்கு போன் போடு” என்பதுதான்.

    அவரளவுக்குச் சுருக்கமாக யாராலும் பேச முடியாது. உ.பி-யில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில். ஐம்பதுகேள்விகளுக்கு ஏழு நிமிடத்தில் பதில் சொன்னாராம். இரண்டரை மணி நேரத்தில் எட்டு ஊர்களில் கூட்டம் பேசியிருக்கிறார்.

    உழைத்துவாழ்வதையும், எளிமையோடு இருக்கவேண்டியதையும், நாட்டுப்பற்றோடும் ஒற்றுமையோடும் வாழவேண்டியதை தன் பேச்சில் குறிப்பிடுவார் காமராஜர்.

    ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!

    இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2-ம் தேதி உடல்நிலை அதிகம் பாதிக்க ஆரம்பித்தது,

    டாக்டர் அண்ணாமலைக்கு அவரே போன் செய்துவிட்டு, ‘டாக்டர் வந்தா எழுப்பு… விளக்கை அணைச்சிட்டுப் போ’ என்றார். அதுவே அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை.

    டாக்டர் வரும்போது காமராஜர் அணைந்துவிட்டார்!

    **************************************************************************************************************

    Share
  • காந்தி நாமம் வாழ்க!

    அக்டோபர் பெட்டகம்
    ஷைலஜா

    148513_324138741024966_1845415878_n

     

     

    அன்பாய் நிறைந்தவர்gan1

    அகிம்சையை போதித்தவர்

    இன்பக்குறுநகையை

    இதழினில் கொண்டவர்

    சத்தியப்பாதையின்

    சாந்தத்தலைவரவர்

    உத்தமப்பணியினில்

    உலகையே வென்றவர்gan

    கொள்ளையர்போல் வந்த

    வெள்ளையர் ஆட்சியை

    மெள்ள மெள்ளவே

    கிள்ளிக்களைந்தவர்

    இன்றுநமக்குள்ள

    இன்பசுதந்திரம்gandhi

    இவராலன்றோ

    இங்குக்கிடைத்தது!

    பின்னைத்தலை முறைக்கும்

    பெட்டகமாயிருக்கும்

    அன்னவரை நாம்

    என்றும் வணங்குவோம்!

     

     

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்…

    — ஷைலஜா

    என் பார்வையில் கண்ணதாசன்…

     

     

    Kannadasan‘மாணிக்கம் கட்டி, வைரம் இடை கட்டி,
    ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டில்..’

    என்கிறார் இறைவன் கண்ணனைப்பாடும் பாசுரத்தில் ஆழ்வார் பெருமான்! எந்தக் கலப்படமும் இல்லாத, சுத்தமான 24 காரட் தங்கத்தைதான் ‘ஆணிப்பொன்’ என்று அழைக்கிறோம். ஆணிமுத்தும்  உயர்வானது.

    ‘ஆணிமுத்து வாங்கிவந்தேன் ஆவணி வீதியிலே’ என்று கண்ணதாசன் எழுதிய பாடலைக் கேட்டிருப்பீர்கள்!

    கண்ணதாசனும் தமிழ்மாதமான ஆனியில்  பிறந்த ஆணிமுத்து! இயற்பெயரிலும் முத்தினைக்கொண்டவர்! தமிழ் அன்னையின் கழுத்தில் முத்தாரமாய் திகழ்பவர் !

    திரை இசைப்பாடல்களில் தனி  முத்திரை பதித்த ஒப்பற்ற கவிஞர்! மனவாசமும் கண்டவர் வனவாசமும்  கொடுத்தவர்! இந்தியமண்ணின் உமர்கய்யாம்!  இயேசுகாவியமும் அளித்தவர் அர்த்தமுள்ள இந்துமதமும் படைத்தவர்!

    கண்ணதாசனே!கங்கைவெள்ளம் நீங்கள்!  தங்களைப்பற்றி ஆயிரம்வரிகளுக்கு மிகாமல் எழுதுவதும் சாத்தியமா என்ன! கங்கைவெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது!

    உங்களைப்பற்றி எழுதும் பொழுதிலும் உங்களது பாடல்வரிகளைத்தான்  உதாரணம் காட்டவேண்டி இருக்கிறது பார்த்தீர்களா!  உங்கள்  பாடல்களில் அப்படி ஒரு ஆக்கிரமிப்பு ! அவை யாவும்  மனதில் அசைபோடுகிறது! சீர்மிகு செந்தமிழை  சிகரத்திற்குக்கொண்டு சென்றவரல்லவா இந்த செட்டிநாட்டுக்கவிஞர்!

    எளிமை என்பது எவரையும் வசீகரிக்கும்  மாயம்! அவரது பாடல்களில் எளிமை தான் மிகுதி. அதனால்தான்  பாமரனையும் போய் பற்றிக்கொண்டன! என்னையும் மிகக்கவர்ந்து இன்று எழுதவைக்கிறது!

    தொட்டில் முதல் சுடுகாடு வரையிலான  வாழ்வியல் தத்துவங்களை, வாழ்வின்வளைவுகளை நெளிவுகளை சுழிவுகளை வார்த்தைகளில் வள்ளலாய் வடித்துக்கொடுத்தவரை வெறும் சிறுகட்டுரைக்குள் சிறைப்படுத்தவும் முடியாதுதான். ஆயினும் கதம்பமாலையின் மலர்க்கூட்டமிடையில், தன்பச்சை இலை மேனிவாசனையை வீசும் மரிக்கொழுந்தாய் கவிஞர்புகழ்பாடும் இந்தக்கட்டுரை, இங்கும் மணக்கும்எனும் நம்பிக்கை!

    கலை என்பதே  ஆழ்மனம் சார்ந்ததுதான் அதற்கு படிப்பறிவு அவசியமில்லை படித்தபலருக்கு கலையை  ரசிக்கத்தெரிவதில்லை. எங்கள் கவிஞர் எந்தப்பள்ளிச்சாலையிலும் சென்று பட்டம்  வாங்கியதில்லை ஆனாலும் அறிவு  அவர்  மூளையில்  சாலை போட்டுக்கொண்டது.

    நூல்களை அல்ல நூலகங்களையே  படித்துமுடித்தவர்..அவரது வாழ்க்கை அனுபவம்  வாகான  வார்த்தைகளில் கவிதையாய் வடிவெடுத்தன.

    ஐந்தாயிரம்  பாடல்களுக்கு மேல் எழுதிய   கரங்கள், அரத்தமுள்ள இந்துமதம் என்ற நூலை எழுதியதும்  நாத்திகக்கறை நீங்கப்பெற்று நானிலமெங்கும் அவரது புகழை இன்னமும் உயர்த்தின!

    வீணையின் சுபாவம்  அதனை  மீட்டி முடித்தபின்னும் அதிர்வுகளை சிலக்கணம் பரப்பிக்கொண்டிருக்கும்.

    காலவீணையை உந்தன் கவிதைவரிகளில்மீட்டிவிட்டுப் போய்விட்டாய்  காவியக்கவிஞனே! இனியகானத்தின் அதிர்வு இன்னமும்  ஒலித்துக்கொண்டே இருக்கிறது!

    தாய் பாடும் தாலாட்டில் தமிழ் மணம் கமழ்ந்து வருகின்றது. தாய்க்குக் குழந்தை எப்படித் தெரிகிறதா? கவிஞர் பாடலில் காண்போம் அதை!

    “நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
    நடந்த இளந்தென்றலே வளர்
    பொதிகை மலைதோன்றி
    மதுரை நகர்கண்டு பொலிந்த தமிழ் மன்றமே”

    தமிழ் மன்றத்தைப் போன்று தெரிகின்றதாம்! தமிழுடன் குழந்தையை ஒப்பிட்டுப்பாடும் தாயின் மனம் கவிஞரின் வார்த்தைகளில் பெருமையுடன் வெளிப்படுகிறது.

    சிறுகூடற்பட்டியிலே பிறந்து,  சிகாகோ நகரில் தம் வாழ்வை முடித்த  மகா கவிஞனுக்கு கம்பன்மீதான காதல் அலாதியானது!

    கம்பன்  தன் காவியத்தின் ஒருபாடலில்,
    “மழைவண்ணத்து அண்ணலே உன்
    கைவண்ணம் அங்கு கண்டேன்
     கால்வண்ணம் இங்கு கண்டேன்”
    என்பதாக இராமனைப்புகழ்ந்தபடிஅப்பாடலில் எட்டு வண்ணம் வைத்தான் என்றால் கண்ணதாசனோ “பால் வண்ணம் பருவம் கண்டு” என்று தொடங்கும் பாட்டில் முப்பத்திரண்டு வண்ணம் வைத்துள்ளார்!

    “கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்” என்பது கண்ணதாசன் வாக்கு!

    தனது பாடலின் நடுவே, அவளது  திருப்பாவையின் ஒருபாசுரமான,

    குத்துவிளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்றபஞ்சசயனத்தின் மேலேறி…”என்றவரிகளின் தாக்கமாய்,

    “குத்துவிளக்கெரிய கூடமெங்கும் பூ மணக்க
    மெத்தைவிரித்திருந்து மெல்லியலாள் காத்திருக்க..”
    என்கிறார் தான் இயற்றிய திரைப்பாடலொன்றில்.

    திருப்பாவை மற்றும் திருவெம்பாவையை  மனதில்கொண்டு  வடித்த “தைப்பாவை” நூல் இலக்கிய உலகின் அணையாவிளக்கு.

    “என்னைக்கவலைகள்   தின்னத்தகாதென்று நின்னைச்சரணடைந்தேன்” என்றான் பாரதி.

     “பின்னிவரும் இன்னலைச் சன்னல்வழிவீசியே பிணமாய்புதைக்கவேண்டும்” என்றார் கண்ணதாசன்.

    பாரதியைப்போலவே கவிஞருக்கும்   உண்டு  ஒரு கனவு ..ஆம்,அந்த முண்டாசுக்கவிஞன்,

    “பாட்டுக் கலந்திடவே அங்கே யொரு பத்தினிப் பெண்வேணும்
    எங்கள் கூட்டுக் களியினிலே கவிதைகள் கொண்டு தரவேணும்
    அந்தக் காட்டு வெளியினிலே அம்மா நின்றன் காவலுறவேணும்
    என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித் திடவேணும்”
    (–காணி நிலம்வேண்டும்)
    என்றான்.

    “அழகான சிறிய வீடு அடுக்காகப் புத்த கங்கள்
    பழங்கால ஓவியங்கள் பஞ்சணை குளிர்ந்த காற்று
    தொழத்தக்க இளைய கன்னி தொண்டுக்கோர் சிறியபையன்
    எழிலான காகி தங்கள் எழுதுகோல் பழுதில் லாமல்!”
    என்கிறார் நம் கவிஞர்!
    “தொழத்தக்க இளைய கன்னி” என்பதில் வெறும் காமத்தைத் தாண்டிப் பெண்மையின் மீதான பெருமதிப்பையும் காட்டுவதை உணரமுடிகிறது.

    “எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
    நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
    நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு – அதை
    நமக்காக நம் கையால் செய்வது நன்று
    நமக்காக நம் கையால் செய்வது நன்று”
    (–ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்)

    நமக்கான  கடமைகளை   நம்கைகளால் செய்யவேண்டியது  நல்லதென்பதை  எளிமையாய் அருமையாய்  சொல்லியவிதம்  அதன்படி நடக்கத்தூண்டிவிடுகிறது.

    “அத்திக்காய்காய் காய் ஆலங்காய்வெண்ணிலவே” என்ற பாடலில் இரண்டு அர்த்தங்கள் வரும்படி எழுதி இருப்பார். அத்திக்காய் என்பது ஒரு காய் என்று ஒரு பொருள். அடுத்து, அத்திக்காய் எனில் அந்த திக்காய் (திசையில்) காய் என்றால் நிலா காய்கிறது என்பதுபோல பொருள். பாடல்முழுவதும் காய்களோடு விளையாடி இருப்பார். ஆமாம்! அத்திக்காயை ஏன் முதல் வார்த்தையாய் கொண்டுவந்தார் தெரியுமா?அத்தி மரம்  சுக்கிரனின் ஆகர்ஷண சக்தி கொண்ட மரம். சுக்கிரன்  காதல்தேவதை!

    காதலை நிறைவேற்றுவதில் சுக்கிரனின் பங்கு  மகத்தானது. காதலுக்குரிய கிரகம் இவரே. ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக இருப்பது மிக மிக அவசியம். மகிழ்ச்சிக்கும், இனிமையான திருப்திகரமான திருமண உறவுக்கும் சுக்கிரனின் அருள் அவசியம்.

    அத்தி மரத்திலிருந்து வெளிப்படும்  ஒரு வகையான ஆற்றல்  தம்பதிகளின் பிணக்கைத் தீர்த்துவைக்கும்  என்பது ஜோதிடர்களின்  நம்பிக்கை. திரைப்படத்தில் தம்பதிகள் சிறு ஊடலில் பாடும் பாடல் இது. எத்தனை விஷய ஞானம் இருந்திருந்தால் கவியரசர் இந்தப்பாடலுக்கு அத்தியை முதல் வார்த்தையாக அமைத்திருப்பார்!’ Amazing’என்பார்கள் ஆங்கிலத்தில்! வியப்பில் வாய் அடைத்துத்தான் போகிறது!

    “மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழைபோல்” சொல்லாமல் கொள்ளாமல் வந்தது! என்று எதிர்பாராமல்வரும் காதலுணர்வைக்குறிப்பிடுகிறார்! காதலைக்காமமின்றி பலப்பலகவிதைகளில்கொடுத்த கவிஞரின் கைவண்ணம் பற்றி எழுத நீள்வானம் தான்  தாள் ஆக  வரவேண்டும்!

    அடுத்து  வாழ்க்கை எங்கும் வாசல்கள் இருப்பதை  இந்தப்பாடலின் வரிகள் உணர்த்துகின்றன.

    “பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
    பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
    பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
    கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
    காட்சி கிடைத்தால் கவலை தீரும்
    கவலை திறந்தால் வாழலாம்!!!”
    (– வாழ நினைத்தால் வாழலாம்)

    வாழ நினைக்கவேண்டுமாம்  நினைத்துவிட்டால் வாழலாம் என்கிறார். “எண்ணியமுடிதல்வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்” என்றான் பாரதி! கவிஞரின் இந்த வரிகள் எளிமைதான் ஆனால் அர்த்தம் கடல் அளவு ஆழமானது. நிறைய சிந்தித்தாலே ஒழிய இந்தவரிகளை நாம் உணர இயலாது.

    “மழைகூட ஒருநாளில் தேனாகலாம்,
    மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்
    ஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா,
    அம்மா என்று அழைக்கின்ற சேய் ஆகுமா? “

    இப்படி, தாய்மையை போற்றும் வரிகளிலேதான் எத்தனை நீர்மை !

    இன்னும் மனித மன இயல்பை பட்டவர்த்தனமாய் காட்டும் வரிகளாய்…….
    “ஆடை இன்றி பிறந்தோமே –
    ஆசை இன்றி பிறந்தோமா?
    ஆடி முடிக்கையிலே
    அள்ளி சென்றோர் யாருமுண்டோ?”
    என  நம் கன்னத்தில் அறைவதுபோல கேள்விகள் வருகின்றன.

    சாக்ரடீஸின் தத்துவத்தை மூலமந்திரமாக்கிக் கவிஞரின் கவிதைக் கருவில் தோன்றிய உயர் பாடலான,
    “உன்னையறிந்தால் – நீ உன்னையறிந்தால்
    உலகத்தில் போராடலாம்!
    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் – தலை
    வணங்காமல் நீ வாழலாம்!”

    என்று ஆரம்பமாகும்  பாடலை அறியாதார் யார்!

    இன்று எந்த தன்னம்பிக்கை நூல்களை எடுத்துக்கொண்டாலும் “தன்னை அறிவது” அதாவது “SELF-REALISATION” தான் அடிப்படை. அதாவது “KNOW YOURSELF” இதை உன்னை அறிந்தால்  என்னும் பாடலில் எளிமையாக சொல்லிவிட்டார்.

    புராண, இதிகாச, இலக்கியங்களில் கவிஞர் கண்ணதாசனுக்கு ஆழ்ந்து அறிவு! ஆம்  ஒருசில பாடல்களில், அதிலும் ஓரிரு வரிகளில் மட்டும் அந்தப் பாதிப்பு தெரியும்.

    “காலங்களில் அவள் வசந்தம், மாதங்களில் அவள் மார்கழி..”
    (– பகவத்கீதை)

    “மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை
    கன்னியரும் பூங்கொடியும் கன்னையா அவர்
    கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா.”

    “பருவம் வருதலாற் பற்றல் விழைந்தனள்;
    அருகுள து  எட்டியே யாயினும் முல்லைப்
    படர்கொடி படரும்”
    (– மனோன்மணியம் )

    “தோள் கண்டேன் தோளே கண்டேன்” (கம்பர்)

    “நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
    நதி செய்த குற்றம் இல்லை” (கம்பர்)”

    “அன்றொரு நாள் இதே நிலவில்”  (பாரி மகளிர்)

    “வீடு வரை உறவு வீதி வரை மனைவி” (பட்டினத்தார்)

    இப்படிப்பல!

    “நாளைப் பொழுதை இறைவனுக் களித்து
    நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
    உனக்கும் கீழே உள்ளவர் கோடி
    நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!!”

    சோர்வில் துவளும் மனத்திற்கு இதைவிட ஆறுதலான  வார்த்தைகளை கண்ணதாசனைத்தவிர வேறு யாராலும் தர இயலாது..

    இன்னமும்  சொல்லிக்கொண்டேபோகலாம்  ஆனால் கங்கைவெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடுமா என்ன?! சர்க்கரை சமுத்திரமாக தமிழ்நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் அற்புதக்கவிஞனுக்கு  இறுதியாக  அவரது வார்த்தைகளினாலேயே  முடிப்பதே சிறப்பு.

    “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை”என்றார்! ஆம், தமிழைப்போல், கவியரசர் கண்ணதாசனும் நிரந்தரமாக அனைத்துத்தமிழ் நெஞ்சங்களிலும்  வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்!

     
     
     
     
     
     
     
     
    —  ஷைலஜா,பெங்களூர்

    Share
  • மனசு

    ஷைலஜாimages

    இறுக்கிக்கட்டிச் சரமாய்
    தொடுத்தபின்னும்
    மணம்பரப்பும் மலர்போல
    அடக்கிப்பின்னலிட்டும்
    அடங்கமறுக்கும்
    முன் உச்சிமுடிபோல
    குடம்குடமாய் நீர்விட்டும்
    மழையை விரும்பும்
    மலர்ச்செடிபோல
    எத்தனையோ மனிதர்கள்
    அருகில் இருந்தும்
    தொலைதூரத்திலிருக்கும்
    உன்னையே எதிர்பார்க்கும்,
    மனசு.

     

    Share
  • பெண்ணின் ராஜாங்கம்!

    ஷைலஜா

    தமிழ் இலக்கியங்களின் சிறப்பே அதனை நாம் ஆழ்ந்து படிக்கும் போது அதில் வரும் சில அழகிய காட்சிகள் மனதைவிட்டு நீங்காமல் அப்படியே பதிந்துவிடுவதுதான்.

    பெரும்புலவர் ஒருவர் தாம் எழுதிய கதையில் வரும் கதாநாயகியின் பெண்மைத்தன்மையை இப்படித்தான் அழகாக படம்பிடித்துக்காட்டுகிறார்.

    அந்தக்கதையின் கதாநாயகி ஒருமகாராணி. தன்னுடைய சிறந்த நான்கு குணங்களை நாற்படையாகவும், தன்னுடைய ஐம்புலன்களையும் சிறந்த அமைச்சர்களாகவும் பெற்று ஆட்சி செய்வதாக தன் கவிதைகளில் வர்ணித்துள்ளார்.

    ரத கஜ துரக பதாதி என்று சொல்லப்படும் நால்வகைப்படையும் அவளுடைய சிறந்த குணமாகிய அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு என்பவைகளாம் .

    அடுத்து அவளுடைய மந்திரி சபையில் ஆலோசனைகூறும் அமைச்சர்களைக் கூறுகிறார்.

    மெய்- அவளுடைய உணர்ச்சிமந்திரியாம்
    வாய் – சுவை மந்திரி
    கண்-காட்சி மந்திரி
    மூக்கு- நுகர்ச்சி மந்திரி
    செவி- கேள்வி மந்திரி

    அமைச்சரவை இருந்தால் மட்டும்போதுமா அழகிய வெண்கொற்றக்குடை வேண்டாமா? அதுதான் அவளின் அழகிய முகம்!

    அவளுடைய ஆட்சிக்கு வெற்றி முரசுதான் காற்சிலம்புகள்.அதன் ‘ சல்சல் ‘ என்ற ஓசைதான் முரசொலி. அத்துடன் அவளின் இருவிழிகளும் வேற்படை ,வாட்படைகளாம்!

    இதன் கீழேதான் பெண்ணியல்பாகிய ராஜாங்கம் நடக்கிறது.

    இந்த ராஜாங்கம் எப்படி நடக்கும் ? போர்முறை எப்படி இருக்கும்?

    கேளுங்கள் அதையும்…..

    நாணப்படை யானைமீது ஏறியபடி அவளை தலைகுனியவைக்கிறது.

    அவள் வரும்போது ‘வருகிறாள்மகாராணி’ என்று காற்சிலம்புகள் முரசொலிக்கின்றன.

    அப்போது “கண்ணே” எனும் குரல்கேட்கிறது.

    உடனே செவி என்னும் பெயர் கொண்ட கேள்விமந்திரி, தன் இலாக்காவில் அந்த வார்த்தையை பதிவு செய்துகொள்கிறார்.

    இப்படி ஒருகுரல் கேட்டதை காட்சி மந்திரியாகிய கனம் கண் அவர்களுக்குத் தெரிவிக்கிறார்.

    உடனே காட்சி மந்திரி நிமிர்ந்து பார்க்கிறார்.

    அடுத்தவினாடி அச்சம்படை(அதாவது தேர்ப்படை) வந்து அந்த மகாராணியை பயமுறுத்துகிறது.

    அவள் அச்சத்தில் அழகுததும்ப நிற்கிறாள்.

    உடனே குரல் கொடுத்த் ஆண்மகன் அச்சம்தவிர்க்க அங்கே வருகிறான்.

    அவளது நுகர்ச்சிமந்திரியாகிய கனம் மூக்கு அவர்கள் தன் இலாக்காவில் அந்த ஆடவனின் மணத்தைப்பதிவு செய்து கொள்கிறார்.

    அந்த அளவுக்கு அருகில் வந்துவிட்டான் அவன்!

    அப்படியே அவளைக் கட்டிக்கொள்கிறான், உதடுகளைப் பார்த்தவன், உடனே கமலஹாசனின் சாகசம் செய்துவிடுகிறான் !:)

    சுவைமந்திரியான வாய் அவர்கள் ‘அதன் சுவை அலாதி ‘எனப்பதிவு செய்கிறார்.

    அடுத்து அவளை இறுக அணைத்துக்கொள்கிறான்.

    உணர்ச்சி மந்திரியாகிய முதல் மந்திரி மாண்புமிகு மெய் அவர்கள், அந்தப் பெண்மை உணர்ச்சிக்கு முழு அனுமதி தருகிறார்.

    நாணத்தை உடைக்கிறது படை.

    பிறகு,,பிறகு…இனிய இரவுதான் விடியும்வரை..

    இதுதான் அவள் ராஜாங்கத்தின் ஒருநாள் நடப்பு!

    இந்த நடப்பையும் ராஜாங்க இலாக்காக்களையும் பிரித்து வைத்திருக்கிறார் ஒருபுலவர்.

    யார் அந்தப்புலவர்?

    அவர்தான் புகழேந்தி!

    யார் அந்த மகாராணி?

    நளனின் மனைவி தமயந்தி!

    ‘இக்காட்சி தரப்படுவது நளவெண்பாவில்

    நாற்குணமும் நாற்படையா
    ஐம்புலனும் நல்லமைச்சா
    ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா
    வேற்படையும் வாளுமே கண்ணா
    வதன மதிக்குடைக்கீழ்
    ஆளுமே பெண்மை அரசு!’

    Share
  • குடியரசு தினம் என்றால் என்ன?…

    ஷைலஜா

     

    images

    நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தைகூட விடை சொல்லிவிடும் ஆனால் குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் முழிப்பார்கள்.

    சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்றால் யாரோ நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள், அவர்களிடமிருந்து நாம் விடுதலை பெற்று விட்டோம் என்பதை உணரமுடிகிறது. மற்றபடி பலருக்கு- அதிலும் குறிப்பாய் பல இளைஞர்களுக்கு குடியரசு பற்றி எதுவும் தெரிவதில்லை.

    இன்றைய பள்ளிகளிலும் தேசப் பற்றை விட மதிப்பெண்கள் பற்றே அதிகம் மாணவர்களிடம் இருக்கிறது. மொழிப் பற்றும் தேசப் பற்றும் இளம் தலைமுறையினரிடம் குறைந்து வர யார் காரணம்? பள்ளியில் ஆசிரியர்களா? வீட்டில் பெற்றோர்களா? சுதந்திரப் போராட்ட வீரர்களைச் சொல்லுங்கள் எனக் கேட்டால் காந்தி, நேருவிற்கு மேல் அவர்களால் சொல்ல முடிவதில்லை.

    தமிழ்நாட்டில் சத்தியமூர்த்தி, காமராஜ், வ.உ.சி., வ.வே.சு. ஐயர், சுப்ரமண்ய சிவா, பாரதி, வீர வாஞ்சி, கொடி காத்த குமரன், நீலகண்ட பிரம்மசாரி……..இன்னும் எதனையோ வீரர்கள் சுதந்திரத்திற்காக் குரல் கொடுத்தவர்கள். இவர்களில் பலர் தங்கள் உயிரை அர்ப்பணித்தவர்கள்.

    இந்தியா அளவில் பார்த்தால் திலகர், கோபாலகிருஷ்ண கோகலே, காந்தி, நேரு, பட்டேல், அம்பேத்கர், பகத்சிங், நேதாஜி, லாலா லஜபதி, ஆச்சார்ய வினோபாபாவே, சித்தரஞ்சன் தாஸ், தாதாபாய் நௌரோஜி….. இன்னும் எத்தனையோ பேர் நாட்டு விடுதலைக்காகப் போராடி வாழ்ந்தனர். இவர்களை எவ்வளவு பேர் நினைவில் கொண்டிருக்கிறோம்?

    ஆசிரியர்கள் நாட்டுப் பற்றை மாணவர்களுக்கு ஊட்டவேண்டும். இந்த ஊட்டம்தான் வருங்கால சந்ததியினர் நாட்டுப் பற்று கொண்டு நம் நாட்டை உயர்த்த வழிகாட்டும். பெற்றோர்களுக்கும் இதில் பங்கு உண்டு. அன்றாட வாழ்க்கையை தொலைக்காட்சிகளிலேயே தொலைத்து விடுகிறவர்கள் எப்படி இளைஞர்களுக்கு வழிகாட்டுவது? வேரில் பழுதுகள் இருந்தால் விழுதுகள் வளர்வது எப்படி சாத்தியம்?

    நமது மன்னர்கள் ஒற்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச் சிறு சிறு மாநிலங்களாய்ப் பிரித்து ஆண்டதால்தான் ஆங்கிலேயர் இந்த ஒற்றுமையின்மையைக் காரணம் வைத்து உள்ளே நுழைந்தனர். இந்த நிலை திரும்பவும் வராதிருக்க நமது தியாகிகளின் வீர வரலாற்றினைக் கூறி இளைய தலைமுறைகளை நாட்டுப்பற்று உள்ளவர்களாக வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமையும் ஆகும்.

    முந்நூறு வருடங்கள் பிரிட்டிஷ்காரர்களிடம் நாம் அடிமைகளாய் இருந்தோம்.. அந்த முந்நூறு வருடங்கள் முன்பு நம் நாடு எப்படி இருந்தது? அப்போது மன்னர்கள் பலர் ஆண்டனர். மக்களுக்குச் சுதந்திரம் பற்றி எந்த விழிப்புணர்வும் வரவில்லை. மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்றே வாழ்ந்தார்கள்.

    ராஜராஜ சோழன், மராட்டிய சிவாஜி, குப்தர்கள் போன்றவர்கள் மக்களுக்கு நல்லாட்சி கொடுத்தாலும் ஔரங்கசீப், அலாவுதின் கில்ஜி போன்றவர்களால் மக்கள் துன்பமும் பட்டார்கள். மன்னனின் ஆட்சி என்பது முடியாட்சி. அவன் வைத்ததே சட்டம். இதில் மக்கள் சுயமாய் சிந்திக்க, சுதந்திரம் பற்றி நினைக்கவும் வழி கிடையாது.

    மன்னனின் வாரிசுகள் அடுத்து அரியணை ஏறுவார்கள். அவர்களின் கொடுங்கோலாட்சியை எதிர்க்கும் சிலரில் வீரமும் துணிவும் உள்ளவன் எப்போதாவது ஆட்சியைக் கைப்பற்றுவது உண்டு.

    குடியரசு என்பதற்கு நேரடிப் பொருள் குடிமக்களின் அரசு. அதாவது மக்களாட்சி. மக்கள்: தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் முலம் தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எப்படி அட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டம் (constitution). மேதைகள் பலர் சேர்ந்து உருவாக்கிய நமது அரசியல் சட்டம்தான் உலகிலேயே மிக நீளமானதாம்.

    மன்னர் ஆட்சி ஆங்கிலேயர் ஆட்சி எல்லாம் முடிந்து 1947 ஆகஸ்டு 15ஆம் தேதி சுதந்திரத்தைப் போராடி வாங்கிவிட்டோம். சுதந்திரத்திற்குப் போராடிய பலரில் நேரு, அதன் பின் இரண்டரை வருடங்களுக்குப் பிறகு 1950இல் குடியரசு நாடாக அதாவது மக்களாட்சி நாடாக அறிவிக்கப்பட்டது.

    சுதந்திர தினத்தைவிட, குடியரசு தினம்தான் முக்கியமானது. ஏனென்றால் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சரியான ஆட்சி இல்லையெனில் தேர்ந்தெடுத்தவரை நீக்கிவிட்டு வேறொரு நல்ல தலைவரை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

    இதையெல்லாம் இளைய தலைமுறை நன்கு அறிந்திருக்குமானால் நாட்டின் எதிர்காலம் வளமுடையதாக ஆகும் என்பது நிச்சயம்.

    ஜெய்ஹிந்த்!

    Share