மலேசிய எழுத்தாளர் நிர்மலா ராகவன் அவர்களின் சிரிக்கச் சிரிக்கச் சில சிந்தனைகள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

மலேசிய எழுத்தாளர் நிர்மலா ராகவன் அவர்களின் சிரிக்கச் சிரிக்கச் சில சிந்தனைகள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

மறைமலையடிகள் பிறந்த நாளை முன்னிட்டு, மாநில அளவிலான தூய தமிழ்ப் பேச்சுப் போட்டி, சென்னை பாட்ரிசியன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் விருதுநகர் கல்லூரி மாணவர் க. இனிஷ் பாரத் ஆற்றிய உரை இங்கே.
பேச்சுப் போட்டிக்கான நடுவர்கள்: பால சீனிவாசன், அண்ணாகண்ணன்
கல்லூரி மாணவி அ.யமுனா ஆற்றிய உரை இங்கே.
கல்லூரி மாணவி ரா.ல.விஜயபாரதி ஆற்றிய உரை இங்கே.
கல்லூரி மாணவி நா.கனிகா ஆற்றிய உரை இங்கே.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

குழந்தையின்மை, இன்றைய நவீன யுகத்தில் பெரிய சிக்கலாக உருவெடுத்திருக்கிறது. இதனால் தம்பதிகளும் அவர்களின் குடும்பத்தினரும் பெரும் மன உளைச்சலையும் சமூகவியல் சிக்கல்களையும் சந்தித்து வருகிறார்கள். இதற்கான மருத்துவம், பணம் கொழிக்கும் துறையாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில், இயற்கை முறையில் இதற்கு உள்ள தீர்வுகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார், சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் சங்கர நாராயணன். இவற்றைப் பின்பற்றிப் பாருங்கள், கட்டாயம் குழந்தை பிறக்கும் என்கிறார். நம்பிக்கை அளிக்கும் இவரது வார்த்தைகளைக் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

அழகியல் மேவிய புனைவுலகும் ரசனை மிளிரும் புத்துலகும் கண்களில் மிதக்கும் கனவுலகும் பளீரென மின்னும் படைப்புலகும் நிறைந்தது, மாருதியின் ஓவிய மொழி. அவர் ரியலிஸ ஓவியங்களின் நாயகன் என்கிறார் ஓவியர் ஜீவா. மாருதி குறித்த நினைவலைகளை ஓவியர் ஜீவா சொல்லக் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

மறைமலையடிகள் பிறந்த நாளை முன்னிட்டு, மாநில அளவிலான தூய தமிழ்ப் பேச்சுப் போட்டி, சென்னை பாட்ரிசியன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சென்னைப் பல்கலைக்கழக மாணவர் அ.அஜித் ஆற்றிய உரை இங்கே.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(462)
வெண்மை யெனப்படுவ தியாதெனி னொண்மை
யுடையம்யா மென்னுஞ் செருக்கு.
-திருக்குறள் – 844 (புல்லறிவாண்மை)
புதுக் கவிதையில்…
புல்லறிவுடைமை என்று
சொல்லப்படுவது எதுவெனில்,
தெளிந்த அறிவுடையேம் யாமென்று
தம்மைத் தாமே மதித்துக்கொள்ளும்
தன்னலச் செருக்காகும்…!
குறும்பாவில்…
புல்லறிவு என்பது எதுவெனில்,
தம்மைத் தாமே தெளிந்த அறிவுடையவரென
மதித்திடும் மயக்கமே யாகும்…!
மரபுக் கவிதையில்…
எதுவென வினவிடில் புல்லறிவு
என்பதின் பொருளதே இதுதானே,
பொதுவினில் பேசிடும் போதினிலே
போற்றிடும் அறிவுளோன் தானெனவே
மதுவதன் மயக்கமாய்ப் பேசுதல்போல்
மனதினில் கர்வமும் கொண்டேதான்
எதுவுமே தெரிந்திடா தாங்கொருவன்
இருந்திடும் செருக்குடைச் செயலதுவே…!
லிமரைக்கூ…
புல்லறி வென்ப திதுவே,
தம்மைத் தாமே தெளிந்த அறிவுடையவராய்
மதித்திடும் மயக்க மதுவே…!
கிராமிய பாணியில்…
அறிவில்லாம அறிவில்லாம
இதுதான் அறிவில்லாம,
புல்லறிவுங்கிற அறிவில்லாம..
புல்லறிவுண்ணா என்னண்ணு கேட்டா
வேற ஒண்ணுமில்ல இதுதான்,
ஒருத்தன்
தனக்குத்தானே பெரிய அறிவாளிண்ணு
நெனச்சிக்கிட்டுத்
தலகால் தெரியாம
அறிவுகெட்டு ஆடுறதுதான்..
தெரிஞ்சிக்கோ
அறிவில்லாம அறிவில்லாம
இதுதான் அறிவில்லாம,
புல்லறிவுங்கிற அறிவில்லாம…!

சி. ஜெயபாரதன், B. E. (Hons) P.Eng [Nuclear] கனடா
கனடாவின் அண்டாரியோ மாநிலத்தில் இன்னும் பத்தாண்டுக்குள் 4800 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள் புதிதாக நிறுவகம் ஆகப் போகின்றன என்று அரச ஆட்சி மன்றத்தில் மாநில முதல் மந்திரி டக்லஸ் ஃபோர்டு 2023 ஜூலை 5 ஆம் தேதி அறிவித்தார். 2050 ஆண்டு நீண்ட காலத் திட்டமாக, அண்டாரியா மாநில அரசு தீர்மானித்தது. கடந்த 30 வருடங்களாக இத்தகைய பெரிய அணு மின்சாரத் திட்டங்கள் எவையும் எடுத்துக்கொள்ளப் படவில்லை. இப்பெரும் அணுமின் நிலையத் திட்டங்கள் சுமார் 4.8 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் பரிமாறும். மேலும் அணுமின்சாரக் கட்டுமான வேலைகள், சாதனங்கள் உற்பத்தி & இயக்க வேலைகள் பல்லாயிரம் பேருக்கு ஊழியம், ஊதியம் தொடர்ந்து அளிக்கும்.
கிரீன்ஹௌஸ் வாயுக்கள் வெளியேற்றாத, பேரளவு மின்சக்தி, உற்பத்தி அணுக்கரு விலிருந்து கிடைக்கிறது. உலக யுரேனிய உலோக இருப்பு தற்போது ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆஃபிரிக்கா, ரஷ்யா, யுக்ரேயின், உஸ்பெக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் அதிக அளவில் உள்ளது. கனடாவில் சஸ்காட்சுவன் மாநிலத்தில் பேரளவு யுரேனியச் சுரங்கம் உள்ளது.
கனடாவின் அண்டாரியோ மாநிலத்தில் பேரளவு சுவைநீர் உள்ள ஐம்பெரும் ஏரிகளில் ஒன்றான ஹூரன் ஏரிக்கரையில் புரூஸ் பவர் நிறுவனம் இயக்கி வரும் புரூஸ் A & B 6000 மெகாவாட் நிலையங்கள் அருகில் புருஸ் C 4800 மெகாவாட் ஆற்றல் மிக்க புது நிலையம் கட்டப் போவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. தற்போது அண்டாரியோ மாநிலத்தில் 30% மின்சாரப் பரிமாற்றம் அணுமின்சக்தியால் நிகழ்ந்து வருகிறது. கரித்தூள் உற்பத்தியாகாத தூய எரிசக்தி மின்சார உற்பத்தி யுரேனியம் பயன்படும் அணுமின் நிலையங்கள் எதிர்கால 2030-2040 ஆண்டு தொழிற்துறை வளர்ச்சிக்குக் கட்டப்படும் என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது.
கனடாவில் சிறிய கட்டமைப்பு அணுமின்சக்தி நிலையங்கள்
அகில தேச அணுசக்தி ஆணையகத்தின் [IAEA, INTERNATIONAL ATOMIC ENERGY AGENCY, VIENNA ] மேற்பார்வையில் காண்டு டிசைனில் [Natural Uranium, Heavy Water Reactors] சிறிய பயன்பாட்டுக்கு 10 மெகாவாட் முதல் 300 மெகாவாட் திறமுள்ளவை [மொத்தம் 700 மெகாவாட்] அமைக்கப் படப் போகின்றன. உலகளாவிய முறையில் சுமார் 100 [SMR SMALL MODULAR REACTORS] IAEA ஆணையகத்தின் கீழ் கட்டப் படும்.
World Nuclear Association (2021)
| Rank | Country/Region | Uranium production (2021) (tonnes U)[1] | Percentage of World Production (2021) |
| 20 | Malawi | 0 | < 0.01% |
| 19 | Germany | 0 | < 0.01% |
| 18 | France | 0 | < 0.01% |
| 17 | Romania | 0 | < 0.01% |
| 16 | Czech Republic | 0 | < 0.01% |
| 15 | United States | 8 | 0.02% |
| 14 | Brazil | 29 | 0.06% |
| 13 | Pakistan | 45 (est.) | 0.09% |
| 12 | Iran | 71 (est.) | 0.15% |
| 11 | South Africa | 385 (est.) | 0.80% |
| 10 | Ukraine | 455 | 0.94% |
| 9 | India | 615 (est.) | 1.27% |
| 8 | China | 1,885 (est.) | 3.90% |
| 7 | Niger | 2,248 | 4.65% |
| 6 | Russia | 2,635 | 5.45% |
| 5 | Uzbekistan | 3,500 (est.) | 7.24% |
| 4 | Australia | 4,192 | 8.67% |
| 3 | Canada | 4,693 | 9.1% |
| 2 | Namibia | 5,753 | 11.90% |
| 1 | Kazakhstan | 21,819 | 45.14% |
| World | 48,332 | 100.00% |

காலத்தால் அழியாத, அழகிய ஓவியங்களைப் படைத்தவர். இயல்பான முகங்களையும் கைவண்ணத்தால் கலைவண்ணத்தால் காவிய நாயகிகளாய் வடித்தவர். வண்ணங்களுக்குள் புகுந்து வாழ்க்கையை எழுதியவர். தூரிகை பிடித்து, தனக்கென ஒரு பாதையை, பாணியைக் கட்டமைத்தவர், ஓவியர் மாருதி. இவர் குறித்த நினைவலைகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார், ஓவியர் ஸ்யாம்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

சர்க்கரை நோயின் தலைநகரம் என இந்தியாவை அழைக்கிறார்கள். கோடிக்கணக்கானோர், சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் கோடிக்கணக்கானோர், சர்க்கரை நோயின் தொடக்க நிலையில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இளம் வயதினருக்கும் சர்க்கரை நோய் வரத் தொடங்கியிருக்கிறது. நீரிழிவுக்கு என்ன்றே பிரத்யேக மருத்துவமனைகள் பரவி வருகின்றன. இந்த நோய்க்குத் தீர்வு என்ன என்று பலரும் தேடி வருகிறார்கள்.
சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் சங்கர நாராயணன், தம் அனுபவத்தின் அடிப்படையில் மருத்துவக் குறிப்புகளை வழங்கி வருகிறார். இன்றைய நம் உரையாடலில், சர்க்கரை நோய்க்கு உள்ள இயற்கையான தீர்வுகளை விவரிக்கிறார். தமக்கு நீரிழிவு நோய் வந்தபோது கடைப்பிடித்த மருத்துவ முறைகள், உணவு முறைகள், வாழ்க்கை முறை ஆகியவற்றை யாவரும் பயனுறும் வண்ணம் பகிர்கின்றார். இதை நீங்களும் முயன்று பாருங்கள். உங்களுக்கு எத்தகைய குணம் கிடைத்தது என்று எழுதுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

தமிழ்நாட்டின் கல்வி முன்னேற்றத்தில் முக்கியப் பங்காற்றியவர் கல்வியாளர் மு. ஆனந்தகிருஷ்ணன். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் அறங்காவலர்களில் ஒருவாக இருந்த இவர், நூலகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். உயர் கல்வி, மொழி, இலக்கியம், பொறியியல் முதலியவற்றை ஊக்குவிக்கும் எண்ணற்ற முயற்சிகளுக்கு இவர் உந்துவிசையாக இருந்துள்ளார். இவர் பெயரில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகிறது.
வரும் ஆகஸ்ட 01, செவ்வாய்க்கிழமை அன்று மு. ஆனந்தகிருஷ்ணன் அறக்கட்டளைச் சொற்பொழிவின் ஒரு பகுதியாக பொறியாளர் மு. இராமனாதன் அவர்கள் முல்லைப் பெரியாறு அணையின் வரலாறு, அதன் பொறியியல் சிறப்பு, தற்போதைய சவால்கள், சட்டச் சிக்கல்கள் மற்றும் சாத்தியமான தீர்வுகள் முதலியவை குறித்து, ‘பெரியாறு அணை – பொறியியலும் அரசியலும்’ என்ற தலைப்பில் உரையாற்றவிருக்கிறார்.
மு. இராமனாதன் லண்டனில் பட்டயப் பொறியாளராகவும் ஹாங்காங்கில் பதிவுசெய்யப்பட்ட பொறியாளராகவும் இருப்பவர். பல்வேறு நாடுகளின் உள்கட்டமைப்பு திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். முல்லைப் பெரியாறு அணை பலப்படுத்தப்பட்டபோது அதில் பணியாற்றியவர்.
இந்தச் சொற்பொழிவில் அனைவரும் கலந்துகொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.
நாள்: 01 ஆகஸ்ட் 2023 (செவ்வாய் கிழமை)
நேரம்: மாலை 5.30 மணி
இடம்: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
அன்புடன்,
க. சுந்தர், இயக்குநர்,
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்.

சி. ஜெயபாரதன், கனடா
கலில் கிப்ரான் நூல் தொகுப்பு
மேரியின் மேப்பிள் சிரப்பு
காப்பக மகளிர் அணைப்பு
முதியோர் விழைவது, இதழ்
முத்தம் அல்ல
முதியோர்க்கு தேவை , உடல்
முயக்கம் அல்ல.
தாம்பத்திய ஆத்ம உறவு !
பூமியில் மூப்புற்றோர் பூரணம் எய்திட
தாம்பத்ய சேர்க்கை அளி.
********************
அன்றொரு நாள் காலை 6:30 மணிக்கு மருந்து வில்லைகள் தர ஆஷா அறைக்கு வந்தாள். முதியோர் தனிமையில் தவித்துள்ளது ஒருபுறம் இருக்க, மறுபுறம் பணிப் பெண்டிரும் இராப் பகலாய், யந்திரம் போல் பணி புரிந்து இயங்கி,எரிந்து போவது தெளிவாய்த் தெரிந்தது.
காலை எத்தனை மணிக்கு எழுவாய் என்று ஆஷாவைக் கேட்டேன். ஆறு மணி ஷிஃப்டுக்கு 4.45 மணிக்கு அலாரம் அடிக்கும், எழுந்து விடுவேன்.
எத்தனை மணிக்குத் தூங்கப் போவாய் ?
இரவு 8 மணிக்கு.
திருமணம் பற்றி விசாரித்தேன்.
உன் திருமண நாள் குறித்தாகி விட்டதா? என்று கேட்டேன்.
இல்லை. என்றாள். அடுத்த வருசம் நடக்கும், எப்போது என்று தெரியாது.
விரைவில் மணக்கச் சொல், உன் வருங்காலப் பதியை. தாமதமாயின் உன்னை நான் மணந்து கொள்வேன் என்று அவனிடம் சொல் என்று சொன்னேன். அவள் கொல்லெனச் சிரித்தாள்.
டின்னர் மேஜையில் அமர்ந்து அவளைப் பார்த்துக்கொண்டே, மிளகைத் தேநீரிலும், சர்க்கரையை முட்டையிலும் தூவினேன்.
என்ன செய்கிறீங்க இஞ்சினியர் ஸார்? மிளகு டீயா? நான் வேறு தேநீர் தருகிறேன் என்று சிரித்தாள்.
லட்டு கொடுத்தேன். ஒரு காகிதத்தில் சுருட்டி எடுத்துக்கொண்டு போனாள்.
அடுத்தொரு நாள் வந்த ஆஷாவிடம் கேட்டேன்.
ஒரு கேள்வி. தனித்துள்ள ஒரு பெண் மீது கவர்ச்சி ஏற்பட்டு, ஆடவன் ஒருவன் நேசிப்பது சரியா? தவறா? சொல்.
தப்பில்லை, சரிதான் என்றாள்.
உதாரணமாக உன்னைப் போல் தனித்திருக்கும் ஒரு மாதை ஒருவன் நேசிப்பது தப்பா?
சற்று சிந்தித்தாள்.
அது தப்பு தான் என்றாள்.
ஏன் என்றேன். தன் எங்கேஜ்மெண்ட் மோதிரத்தைக் காட்டி, அவரை நான் மணப்பதாக உறுதி செய்துள்ளேன்.
ஆனால் இப்போது நீ தனித்துள்ளவள் தானே!
உன்னை ஏன் நேசிக்கக்கூடாது நேசித்தால் என்ன?
சொன்ன வாக்கு தவறலாமா?
அவர் ஒருவேளை மனம் மாறி உன்னை மணக்காது போனால் ?
அவள் சிந்தித்தாள், சிரித்தாள். பதில் கூறாது ஓடிவிட்டாள்.
அடுத்த நாள் சோர்வாக, தளர்ச்சியுடன் இருந்தேன். பார்க்கின்சன் நோய் பாதத்தையும், கால்களையும் கசக்கி ஒடித்தது.
அவசர மணி அடித்து ஆஷா வந்தாள். என்ன ஆயிருச்சி? என்ன வேணும் உங்களுக்கு? என்று கேட்டாள்.
சிந்திக்கவே இல்லை நான்.
வலி தாங்காது, என்னை மணந்து கொள், என்றேன்.
கொல்லெனச் சிரித்தாள். சிட்டெனப் பறந்தாள். திரும்பிப் பார்த்தாள்.
மோதிரக் காதலன் மனம் மாறினால், வரிசையில் நிற்கிறான் ஒருவன், மணம் புரிய ! மோதிரம் தராத காதலன்.
ஒரு வருடத்தில் எத்தனையோ மாறுதல்கள் நிகழ்ந்து விடுகின்றன!
சிறிது நாட்கள் விடுமுறை எடுத்து, ஆஷா முதியோர் காப்பகதுக்கு வரவில்லை.
**************
மேப்பிள் சிரப்பு மூதாட்டி மேரி
மேரி என் டின்னர் மேஜையில் வலது புறம், கூட அமர்ந்துள்ள மாது.. ஒரு மேஜையில் அமர்வது நால்வர். எண்பது வயது மூதாட்டி. கணவன் இறந்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டன. தனித்துப் போன மேரி தனியா கவோ, கூடியோ வாழ வழி தெரியாது தவிப்பில் கிடந்தாள். கணவன் புற்று நோயில் வாடிய போது, முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு, அவள் நாட்களை எண்ணிக்கொண்டும், கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டும் கழித்து வந்தாள்.
ஒரு நாள் என் அறைக்கு வந்து தன் கதையைச் சொன்னாள். விழுந்து கால்கள் இரண்டிலும் அறுவை சிகிச்சை. இடுப்பு பெல்விக் அறுவை வேறு. தடுமாற்ற நடை. நாலு சக்கர நடை வண்டி இல்லாது நடக்க முடியாது. தினமும் என் அறைக்கு வந்து தான் பட்ட சிரமங்களைச் சொல்லிச் செல்வாள். கணவன் ஒரு முசுடு. உதவி செய்யும் மேரியைத் திட்டுவது அடிக்கடி.
ஒரு சமயம் காப்பகத்தில் பகல் வேளைக்கு பான்கேக் தயார் செய்து, மேப்பிள் சிரப்பு ஊற்றிச் சாப்பிட்டோம். அப்போது தனது மகன் வனத்தில் மகன் தயாரித்த மேப்பில் சிரப்பை மேரி கொண்டு வந்தாள். மேஜை நபர் நால்வரும் ஊற்றி உண்டு களித்தோம். ஒரு லிட்டர் குவளை மேப்பிள் சிரப்பை அனைவரும் பகிர்ந்துகொண்ட பிறகு. எஞ்சிய அரை லிட்டரை, என்னிடம் கொடுத்து விட்டாள் மேரி. மற்ற மேஜை நபர் அதைக் கண்டு விழித்தனர்.
மேரி குடும்ப வாழ்வில் கணவன் வன்சொற்களில் மிகவும் நொந்த போனவள். நோயில் துன்புற்ற கணவர் சொல்லடி வாங்கி, வெந்து போனவள். எனது ஆறுதல் மொழிகள் கேட்டு, மேரிக்கு என் மீது ஈர்ப்பு உண்டானது. என் தடுமாறும் குரல், மொழி பலருக்குப் புரிவதில்லை. உண்ணும் போது எனக்கு தேவையான வகைகளை கேட்டு வாங்கி விடுவாள் மேரி. சில சமயம் தள்ளாடி நடந்து போய், அவளே கிரான்பெரி ஜூஸ் எடுத்து வருவாள்.
மேப்பிள் மேரி எனக்குக்கண்காணிப்பு மூதாட்டி ஆனாள். அறையில் உள்ள டிவியில் திரைப்படங்கள் சேர்ந்தே பார்த்தோம். இந்தியச் சந்திரயான் -3 விண்ணுளவி நிலவுக்கு ஏவியதை டிவியில் கண்டு ரசித்தோம். விடுமுறை யில் வந்த என் மகள் மேரிக்கு நிறைய காஜூ, லட்டு வாங்கி வந்தாள். சந்தித்துப் பேசினாள்.
படிப்பினை : 4 உணவை விட முதியோர்க்குக் காப்பகத்தில் தனிமையைப் போக்க உறவே முதன்மை ஆகிறது.

சக்தி சக்திதாசன்
லண்டன்
ஆன்மீகம் என்றால் என்ன ?
மதங்களைக் கடந்த ஆன்மாவை உணர்தல் எனும் பொருளைக் கொள்ளலாம். ஆன்மீக அறிவியலாளர்கள் மனிதனின் மரணம் என்பது உடலுக்குத்தான் உரித்தானது ஆன்மாவுக்கு அழிவில்லை என்று கூறுகிறார்கள்.
கவியரசர் தனது பதிவினில் மதம் என்பது மனிதனுக்கு அணிகலனே ஒழிய அது ஆடையல்ல என்கிறார். அது எதைக் குறிக்கிறது ?
ஒரு மனிதனுக்கு ஆடை அவனது மானத்தைக் காக்கும் அளவுக்கு முக்கியமானது ஆனால் அணிகலனோ அவனது அந்தஸ்தைக் காட்டும் அடையாளமாகத்தான் கனிக்கப்படுக்கிறது என்கிறார்.
மறைமுகமாக மனிதர்க்கு மதம் என்பது அத்தியாவசியமானதொன்றல்ல என்று குறிப்பிடும்போது அவர் மதவெறியை ஒதுக்கி மனிதாபிமானத்தோடு கூடிய ஆன்மீக அறிவியலை நாடும்படி கூறுகிறார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
கர்ணன் எனும் திரைப்படத்துக்காகக் கவியரசர் யாத்த பாடலில்,
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா
மரணத்தின் தன்மை சொல்வேன்
மானிடர் ஆன்மா மரணம் எய்தாது
மறுபடிப் பிறந்திருக்கும்
மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய்
வீரத்தில் அதுவும் ஒன்று நீ
விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி
வெந்துதான் தீரும் ஓர்நாள் ..
என்று எழுதியிருந்தார். அழகாக, அற்புதமாக ஆன்மாவின் தன்மையை அதனை அழகாக உள்வாங்கியிருக்காமல் கவியரசரால் இத்தனை அருமையான வரிகளை, எளிமையான வரிகளைத் தந்திருக்க முடியுமா?
பூஜ்ஜியம் தான் உலகின் அனைத்தின் ஆரம்பமாகும் அந்தப் பூஜ்ஜியத்துக்குள்ளேதா இறை எனும் ஒரு சக்தி தன்னைப் புரிந்து கொள்ளமுடியாத வகையில் புதைத்து வைத்துள்ளது என்பதைப் பூடகமாக கவியரசர் குறிப்பிட்டுள்ளார்.
ஆன்மா உலகில் மறுபடி, மறுபடி பிறந்திருக்கிறது அதன் பிறப்பின் நோக்கமே அனுபவங்களை அடைவதே. அடைந்த அனுபவங்களின் மூலம் தேவையான ஆன்மீகப் புரிதல்களைக் கற்றுக் கொள்வதே ஆன்மாவின் தேவையாகிறது.
அந்த அனுபவங்களின் அவசியத்தை, அனுபவத்தின் ஆழத்தை அனைவரும் புரிந்து கொள்ளும்படி கவியரசர் மதங்கடந்த ஆன்மீக அறிவியல் அடிப்படையில் பல படைப்புகளை ஈந்துள்ளார்.
அந்த வகையில் இந்தப் பதிவில் அவரது கவிதையொன்றைப் பார்க்க விழைகிறேன்.
யதார்த்த வாழ்வினில் நாம் காணும் விடயங்களை அப்படியே எளிமையாக ஆண்௶டவன் எனும் ஒரு சக்தியை நோக்கித் தூக்கிப் போட்டு அதற்கு அவ்வாண்டவனும் யதார்த்தமான பதிலைக் கூறி வாழ்வின் உண்மைகளை விளக்குவதாய் அக்கவிதை அமைந்திருக்கும்.
ஆன்மீக அறிவியலின் படி ஆன்மீக உலகிலிருந்து மறுபிறவி எடுக்கையில் அனுபவங்களின் அடிப்படையில் நாமே எமது வாழ்வினைத் தெரிவு செய்கிறோம் என்கிறார்கள்.
குழந்தையாய்ப் பூமியில் பிறந்ததும் எமது வாழ்வின் நோக்கத்தை மறந்து போய் விடுகிறோம். எமது பிறப்பின் நோக்கத்தையும், நான் யார் எனும் கேௐள்விக்கு விடை காணூம் முகமாகவும் அதற்கான மார்க்கமாகவே தியானப் பாதையில் பயணிக்கும்படி ரமண மகரிஷி முதற்கொண்௶டு அனைத்து யோகிகளும், மகான்களும் போதிக்கிறார்கள்.
ஆன்மீகக் கடலில் நீந்திய கவியரசர் என்ன கூறுகிறார் பார்ப்போமே ,
நான் யார்?
நான் யார்? நான் ஏன் பிறந்தேன்?
நான் விரும்பிப் பிறக்கவில்லை என்றாலும், இதுவும் ஒரு நியாயமான கேள்விதான். இயற்கையின் நியதியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும், நட்சத்திரங்களுக்கும் நோக்கம் இருக்கும்போது, என் பிறப்புக்கும் ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும்.அது எனக்குப் புரியவில்லை. தவிர,ஏதோ ஒரு லட்சியத்துக்காகவே நான் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறேன் என்பது உண்மை. ஒவ்வொரு ஜீவனும் ஒவ்வொரு லட்சியத்துக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. ஜீவனற்ற அஃறிணைப் பொருளும் அவ்வாறே!
தண்ணீர் தாகத்தைத் தீர்க்கவும், வயல்களை வளப்படுத்தவும், உணவுப் பொருட்களுக்கு உரமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது.
அந்தத் தண்ணீரில் வாழும் மீன் அழுக்கைத் தின்று நீரைச் சுத்தப்படுத்தவும், மனிதனுக்கும் பறவைகளுக்கும் ஆகாரமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது. ஒரு காக்கையின் பிறப்புக்குக்கூட ஒரு சிறிய காரணம் இருக்கிறது. அப்படி என்றால், என் பிறப்புக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டுமே?
கவியரசு கண்ணதாசன்
சரி இனி கவியரசரின் கவிதையினைப் பார்ப்போம். இக்கவிதைக்கு விளக்கம் தேவையில்லை என்பதுவே இக்கவிதையின் சிறப்பாகும்.
கவிதைகளில் கவியரசர் கையாளும் எளிமையினையும் அப்படியே இக்கவிதை எடுத்துக் காட்டுகிறது.
வரிக்கு வரி அவரது யதார்த்த வினாக்களும் அதற்கான விளக்கங்களும் அலாதியானவை. ஆன்மீகத் தத்துவத்தின் அடிப்படையை அப்படியே எடுத்தியம்புபவை.
சாதாரண சராசரி வாழ்வினை மேற்கோள்வோரின் உள்ளக்கிடக்கையை அப்படியே வெளிக்கொணரும் கவிதை என்றே சொல்ல வேண்டும்
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!
– கண்ணதாசன்
ஒரு ஆன்மாவின் அடையாளம் அதன் அனுபவங்கள். ஆண்டவனின் அருகாமையை உண்ர வைப்பதும், அந்த ஆண்டவன் வெளியே எங்கும் இல்லை எமக்குள்ளேயே இருக்கிறான் என்பதையும் அறிவுறுத்தும் வகையில் கவியரசியரின் ஆன்மீக அறிவியலின் அடையாளமாகத் திகழ்கிறது இக்கவிதை,
(மீண்டும் வரும்வரை)

சக்தி சக்திதாசன்
லண்டன்
ஜார்ஜ் அழகையா (George Alagiah) எனும் பெயர் இங்கிலாந்து உத்தியோகபூர்வமான தொலைக்காட்சியான பி.பி.ஸி நிறுவனத்தில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்த ஒரு பெயராகும்.
1955ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி சிறீலங்கா அப்போதைய இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஒரு கிறீத்துவர்களான டொனால்ட் அழகையா எனும் பொறியியளாலருக்கும், திரேசாவுக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரிகள் உண்டு.
இவர் தனது பெற்றோர்களுடன் ஐந்தாவது வயதில் மேற்கு ஆபிரிக்க நாடான கானா நாட்டிற்குப் புலம் பெயர்ந்தார்.
கானா நாட்டிலிருந்து இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் புலம் பெயர்ந்த ஜார்ஜ் அழகையா தனது ஆரம்பக்கல்வியை சென்.ஜோன்ஸ் எனும் போர்ட்ஸ்மவுத் இடத்திலமைந்த உயர்நிலைப்பள்ளியில் பயின்றார்.
கல்லூரி வாழ்க்கையைத் தொடர்ந்து ஜார்ஜ் அழகையா அவர்கள் டர்காம் (Durham) யூனிவர்சிட்டியில் அரசியல் துறையில் பட்டம் பெற்றார்.
பட்டாதாரியாகிய பின்னால் 1980ம் ஆண்டு சவுத் எனும் இதழின் ஆபிரிக்க ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
சுமார் எட்டு வருடங்கள் இங்கு பணி புரிந்த பின்னால் 1989ம் ஆண்டில் இங்கிலாந்தின் முன்னனி ஊடகமான பி.பி.ஸியில் பணியில் அமர்ந்தார்.
முதலில் உலக விடயங்களின் நிருபராகவும், பின்னர் ஆபிரிக்க நாடுகளின் நிருபராகவும் பணியாற்றினார். அதன் பின்னால் தென்னாபிரிக்க நிருபராக ஜொகனஸ்பேர்க் இல் நியமிக்கப்பட்டார்.
ஆபிரிக்க நாட்டு விவகாரங்களில் நன்கு தேர்ச்சியடைந்த இவர் பல ஆபிரிக்க நாடுகளில் பாரிய பிரச்சனைகள் நடைபெற்ற வேளைகளில் மிகவும் துணிகரமாக செய்திகளை வெளியுலகிற்கு கொண்டு வந்திருந்தார்.
ருவாண்ட நாட்டு இனப்படுகொலைகள், தெற்கு ஈராக் சதுப்புநில ஆரபியர்களின் அரசியல் ஒடுக்குமுறை ஆகியவற்றை வெளியுலகிற்கு தெரியப்படுத்துவதில் முன்னின்று உழைத்தவர் ஜார்ஜ் அழகையா அவர்கள் .
ஆப்கானிஸ்தான், லைபிரியா, சிரியா லியோன், சொமாலியா போன்ற நாடுகளின் உள்நாட்டு யுத்தங்களின் போது போர் உக்கிரமாக நடந்த பகுதிகளில் துணிச்சலாக முன்னின்று செய்திகளைச் சேகரித்தார்.
1999ம் ஆண்டு பி.பி.ஸி மதிய ஒருமணிச் செய்தித்தொகுப்பின் உதவித் தொகுப்பாளராகக் கடைமயாற்றினார்.
2002ம் ஆண்டு பி.பி.ஸி 4வது அலைவரிசையில் பிரதான செய்தி வாசிப்பாளராகப் பதவியேற்றார்.
2003ம் ஆண்டு பி.பி.ஸியின் முக்கிய செய்தியான மாலை ஆறு மணிச் செய்தியை மற்றொரு பிரபல்யமான செய்தியாளர் சோபி ரேவேத் (Sophie Raeworth) உடன் 2005 வரையும், பின்னர் மற்றொரு புகழ் பெற்ற செய்தியாளர் நட்டாஷா கப்பிளின்ஸ்கி (Natasaha Kaplinski) உடன் 2007ம் ஆன்டு வரையும் இணைச் செய்தியாளராகவும் பணியாற்றினார்.
2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 மணிச் செய்திச் சேவையின் பிரதான தொகுப்பாளரானார். அத்தோடு 2006 ம் ஆண்டிலிருந்து பி.பி.ஸி உலகசேவையின், இன்றைய உலகச் செய்திகள் எனும் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் கடமையாற்றினார்.
அத்தோடு பி.பி.ஸி தொலைக்காட்சியின் பிரதான இரவு 10 மணிச் செய்திகளின் தொகுப்பாளர்கள் இல்லாத ல் அந்தன் செய்தித் தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.
ஆபிரிக்க நாட்டு அரசியல் விவகாரங்களில் நிபுணத்துவம் கொண்ட இவர் பிரபலமான ஆபிரிக்க நாட்டுத் தலைவர்களான நெல்சன் மண்டலே , முன்னால் ஐக்கிய நாடுகள் சபை காரியதரிசி கோவி ஆனன், மதகுரு டெஸ்மண்ட் டூடூ , முன்னால் சிம்பாவெ அதிபர் ரோபேர்ட் முகாபே ஆகியோருடன் நேர்காணல்களை நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
அற்புதமான குரல்வளமும் ஆங்கில மொழியின் ஆளுமையும் கொண்டவர் அமரர் ஜார்ஜ் அழகையா என்பதும் இவர் எமது பின்புல நாடான ஈழத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதும் பெருமைக்குரியதே .
பிரான்ஸிஸ் ரோபாதன் (Frances Robathan) எனும் தனது சர்வகலாசாலைத் தோழியான வெள்ளை இனப் பெண்மணியைத் திருமணம் செய்த இவருக்கு இரண்டு ஆண் குழைந்தைகள் உண்டு.
2000ம் ஆண்டு பாவ்டா (BAFTA) எனும் பிரித்தானிய தொலைக்காட்சிச் சேவைகளுக்கான பரிசினைப் பெற்ற குழுவில் இவரும் அடங்குவர்.
ரோயல் டெலிவிஷன் சொசைடி எனும் அமைப்பினால் சிறந்த சர்வதேச நிருபர் எனும் பரிசையும் , அமெனெஸ்டி இன்டர்நஷனல் யூகே அமைப்பினால் சிறந்த ஊடகவியலாளர் எனும் பரிசுகளையும் பெற்றவர்.
2008ம் ஆண்டு இங்கிலாந்து அரசினால் ஆர்டர் ஆவ் பிரிட்டிஷ் எம்பயர் – OBE எனும் விருது அளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.
உலக வியாபார அரங்கில் பொருட்களை உற்பத்தி செய்வோருக்கு தகுந்த ஊதியம் அளிக்கும் நிறுவனங்களுடன் வியாபாரம் செய்யும் அங்காடிகளிலேயே மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டும் எனும் கருத்தை முன்வைக்கும் Fair trade Foundation எனும் அமைப்பின் நிர்வாகக்குழுவில் கெளரவ அங்கத்தினராக இருந்த இவரை அதிலிருந்து இராஜினாமாச் செய்யும்படி பி.பி.ஸி நிர்வாகம் கேட்டதை அடுத்து இராஜினாமாச் செய்தார். இதற்கு பொதுமக்களிடமிருந்து பி.பி.ஸிக்கு பலத்த கண்டனங்கள் எழுந்தது. அதற்கு விளக்கமாக பி.பி.ஸி தமது நடுநிலை வகிக்கும் கொள்கையைப் பிரதிபலிக்கும் வகையாகவே அவரை இராஜினாமாச் செய்யச் சொல்லி கேட்டதாக கூறப்பட்டது.
2003 டிசம்பர் சுனாமி பேரலை அழிவுக்குப் பின்னர் 2004ம் ஆண்டு ஜார்ஜ் அழகையா அவர்கள் தன் தாய்மண்ணான ஈழத்தின் மட்டக்களப்பு பகுதிக்கு விஜயம் செய்து பேரலையால் அழிந்த தனது பூர்வீக இல்லத்தைப் பார்வையிட்டார். அங்கு தானும், தனது சகோதரிகளும் விளையாடிய கிணற்றுப் பகுதியை டையாளம் கன்ட இவர் அதை மகிழ்வுடன் குறிப்பிடிருந்தார்.
இவரது பிரித்தானிய தொலைக்காட்சிப் பங்களிப்பு 2014ம் ஆண்டு வயிற்றுப் பௐகுதியில் ஏற்பட்ட புற்று நோயினால் தடைப்பட்டது.
2015ம் ஆண்டு இறுதியில் தனது நோய்க்கான வைத்தியம் நிறைவுற்றதாகவும் உடல்நிலையில் கணிசமான அளவு முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் கூறியிருந்தார். அதே ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி மீண்டும் தொலைக்காட்சிச் செய்திச் சேவையில் இணைந்தார்.
மீன்டும் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புற்றுநோய் மருவியுள்ளாதாகக் கூறி தொலைக்காட்சிப் பணியை இடைநிறுத்திக் கொண்டார்.
2020ம் ஆண்டு புற்றுநோய் தனது நுரையீரலுக்கு பரவியுள்ளதாகவும் இனித் தன்னைக் காப்பாற்ற முடியாது என்றும் அறிவித்திருந்தார்.
37 வருடங்கள் மணவாழ்க்கையில் ஈடுபட்டிருந்த இவர் தன் மனைவியையும், குழந்தைகளையும் ஆழமாக நேசித்தார்.
தனது கடைசி விருப்பமாக தனது உயிர் பிரியும் வரை தனது காதல் மனைவியின் கைகளைப் பற்றியபடி இருக்கவேண்டும் என்பதைக் கொண்டிருந்தார், அவரது ஆசைப்படியே அவரது மனையின் கைகளைப் பற்றியபடியே கடந்த 24ம் தேதி தனது 67வது வயதில் இவ்வுலக வாழ்வை விட்டுப் பிரிந்தார்.
தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்தவர் அமரர் ஜார்ஜ் அழகையா. இத்தகைய ஒருவர் தான் புலம் பெயர்ந்த நாட்டிலே அனைத்து மக்களின் இல்லங்களிலும் ஒரு ஆசிய ஆளூமையாக ஒலித்துக் கொண்டிருந்ததே அவரது தமிழ்ப் பூர்வீகத்தினை உயர்த்திப் பிடிப்பதாகும்.
தமிழர்களாகிய நாமனைவரும் அவரது ஆத்மசாந்திக்காய் பிரார்த்திப்போம்.