Blog

  • வரவேற்புக் கவிதை

    விவேக் பாரதி

     

    என் கல்லூரியில் இன்று இணைந்திருக்கும் முதலாமாண்டு மாணவர்களுக்கு மூத்த(இரண்டாமாண்டு) மாணவனான நான் மனதாரப் பாடிய வரவேற்புக் கவிதை….

    இளமை கொண்டவர்கள் வாழ்கவே – வாழ்கவாழ்க
    இளமை கொண்டவர்கள் வாழ்கவே !
    வளமை ஆக்கவந்த மக்களாம் – வாழ்கவாழ்க
    வலிப டைத்தவர்கள் வாழ்கவே !

    கனவு காணுங்கண்கள் வாழ்கவே – உயருதற்குக்
    கடமை ஆற்றுங்கைகள் வாழ்கவே !
    மனதில் அச்சமற்ற வீரர்கள் – பூமியெங்கும்
    மணம்ப ரப்பிநீடு வாழ்கவே !

    வேட்கை கொண்டநெஞ்சர் வாழ்கவே – சூழுகின்ற
    வேத னையெரித்து வாழ்கவே !
    பாட்டி சைக்ககுமிதழ்கள் வாழ்கவே – கல்விகற்று
    பாரு யர்த்தும்வர்க்கம் வாழ்கவே !

    காதல் பேணுமக்கள் யாவரும் – இன்பமுற்று
    கவிதை போலமண்ணில் வாழ்கவே !
    நீதி நேர்மைகொண்டு வாழ்ந்திடும் – இளைஞரென்றும்
    நீடு வாழ்கவாழ்க வாழ்கவே !

    எச்ச ரிக்கைகொண்ட மானுடர் – நல்லவார்த்தை
    எழுத மண்ணில்நன்கு வாழ்கவே !
    மெச்சு தற்குமுரிய சக்தியாம் – இளைஞரென்னும்
    மேன்மை யாளர்வாழ்க வாழ்கவே !

    Share
  • கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்

    170714 - Udupi Krishna - scan -lr

    ———————————————
    ”துடுப்பில்லாத் தோணியில் தூரத்தே தீயும்,
    அடுப்பில்லா பால்வெளியில் ஆறவைத்து-உடுப்பியில்
    கீதாவை மத்தால் ,கடைந்து வினியோகம்:
    மாதாவாய் கண்ணன்ந மக்கு’’….

    “வாமத்தில் மத்து, வலத்தினில் கோமாதா
    ஜாமத்தில் கண்ணன் ஜனித்தது, -பூமத்ய,
    பாரம் குறைக்கவல்ல, பாகவத ஓவியக்
    காரனிவன் கேசவ்கா க”….கிரேசி மோகன்….!

    Share
  • ஏற்றிடலே நன்று !

         (    எம் . ஜெயராமசர்மா …… மெல்பேண் ….. அவுஸ்திரேலியா   )

     

     

    தானியங்கள் பலவற்றை நாமுண்டு வந்தோம்

    நகரத்து உணவுகளை நாம் காணவில்லை

    ஊரெல்லாம் விவசாயம் உயிர்ப்புடனே அன்று

    ஒழுங்குடனே இருந்ததனை யாவருமே அறிவோம்

    காலமெனும் சக்கரமோ வேகமாய் சுழன்று

    கடுகதியாய் உணவெல்லாம் மாற்றமுறத் தொடங்கி

    நாமின்று வேண்டாத உணவுகளை உண்டு

    நலமிழந்து போவதற்கு ஆளாகி உள்ளோம் !

     

    கூழ்குடித்த காலமதில் குடல்நோய்கள் குறைவே

    கொக்கோகோலா குடித்தவர்க்கு வருநோய்கள் பலவே

    ஆழ்கிணறு நீரெடுத்து அருந்திநின்றோம் நன்றாய்

    அதனாலே ஆரோக்கியம் அமைந்திருந்த தன்று

    நீர்குடித்தோம் மோர்குடித்தோம் நிரம்பியது வயிறு

    பீர்குடித்து உடல்நலத்தைக் கெடுக்கின்றோம் இன்று

    ஊர்முழுக்க இப்போது மாறியே போச்சு

    உயிர்ப்புள்ள உணவுகளை உண்பாரும் குறைவே !

     

    வரகுதினை கம்புசோளம் மாட்டுணவாய் ஆச்சு

    மனிதவுண வெல்லாமே வரண்டு போகலாச்சு

    தினமுண்ட  எள்ளும்கூட சிதறியெங்கோ போச்சு

    பனைதந்த பலபொருளும் காட்சிப் பொருளாச்சு

    நின்றுகொண்டே  உண்டுவிட்டு ஓடிநிற்கும் பலபேர்

    கண்டதையும் கடையில்வாங்கி வாயினுள்ளே போட்டு

    மென்றிடாமல் விழுங்கிநின்று வேகமுடன் சென்று

    விலைகொடுத்து நோயையவர் வாங்குகிறார் நாளும் !

     

    பக்கற்றில் உணவுவகை பதம்பதமாய் இருக்கு

    பார்ப்பவர்கள் மனங்கவரும் கவர்ச்சியதில் இருக்கு

    காலைமாலை வேளைக்கென கலர்கலராய் இருக்கு

    கண்டவுடன் வாயூறும் காட்சியதில் இருக்கு

    சமையல்செய்ய விரும்பாத பலபேர்க்கும் இப்போ

    சரியான துணையாக இருக்குதந்த உணவு

    பணம்கொடுத்து வாங்கியதை பலபேரும் உண்டு

    பறிகொடுத்து நிற்கின்றார் பலநலத்தை இன்று !

     

    செயற்கையாய் தயாரிக்கும் உணவு வகையெல்லாம்

    செரிமானம் ஆகாமல் சிக்கலினைத் தருமே

    அதைவிரும்பி ஏற்பதற்கு அதையாக்கி விற்போர்

    அதிகபணம் செலவாக்கி விளம்பரங்கள் செய்வார்

    விளம்பரத்தால் மயங்கிநிற்கும் பலபேரும் ஆங்கே

    விரைந்துசென்று அதைவாங்கி வீட்டிலுண்டு மகிழ்வார்

    மகிழ்கின்றார் மகிழ்ச்சியது நிலைத்துவிடு முன்னே

    மருந்துதேடி அவரலைந்து மாட்டிடுவார் வகையாய் !

     

    மேல்நாட்டு உணவுவகை மெத்தவுமே வந்து

    மெய்யாக உடல்நலத்தை பொய்யாக்கி விட்டு

    நாளெல்லாம் பலநோய்கள் நமதுடலுள் செலுத்தி

    நம்பணத்தை வீணாக்கும் நடைமுறையில் இருக்கு

    பழையவுண வெல்லாமே உடல்நலத்தை நோக்கி

    பக்குவமாய் அமைந்தமையை பார்க்கின்ற போது

    நமதுணவை நாம்மறத்தல் நமைமறத்தல் அன்றோ

    இனிமேலும் நம்முணவை ஏற்றிடலே நன்று !

     

     

     

    Share
  • கோப்புக்கூட்டல் [4]

    இன்னம்பூரான்

     

    ஆங்கிலத்தில் ‘எல்லாவற்றையும் உட்படுத்திய’ என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன் பொருட்டு, ஒரு கோப்புக்கூட்டல் செய்ய விரும்புகிறேன்.

    இன்றைய கோப்பு: [4]

     

    ஜூலை 12, 2017

    நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக, நவீன பெண்ணியம் தடபுடலாக முன்னேறி, அய்யப்பன் கோயிலுக்கு போய் சாஸ்தா ப்ரீதி செய்வதில் ஏன் எங்களுக்கு பங்களிக்கவில்லை என்று ஆக்ரோஷமாக இருமுடி பக்தர்களை கலவரப்படுத்தும் தற்காலத்தில், 

    ஆண்களுக்கு மட்டும் ஏன் வலது பக்கம்? மாற்றி மாற்றி எங்களையும் சமானமாக நடத்தக்கூடாத என்று வினா-அம்பு விடுவிக்கும் தற்காலத்தில், 

    எங்களுக்கு பரிவட்டம் கட்ட ஏன் பெண் பூசாரிகளை அமர்த்தவில்லை என்று உரிமைக்குரல் கொடுக்கும் தற்காலத்தில், 

    அம்பிகையை அலங்கரிக்க பார்ப்பான் எதற்கு?; எங்களில் ஒருவர் அம்பிகைக்கு நேர் வகிடு எடுத்து, தலை சாமான் சூடி, காதுகளில் லோலாக்கு மாட்டி, கன்னத்தில் ரொஜ் பூசி, நெற்றியில் திலகமிட்டு, பெருமாளுக்கும் சங்கு சக்ர கதாபாணே, கத்தி, கபடா, செண்டு எல்லாவற்றாலும் அலங்காரம் செய்வது எங்களால் முடியுமே? என்று சவால் விடும் தற்காலத்தில் கூட

    ஆணாதிக்கம் கொடி கட்டி, வால் பிடித்து, தலையாட்டி பறக்குது பாரீர், பாருக்குள்ளே தம்மாத்தூண்டு நாடு ஒன்றில்:

    அங்கொரு ஒகினொஷிமா என்ற அழகிய தீவு ஒன்றில் பெண்ணரசிகளுக்கு நுழைய அனுமதி இல்லை, கல் தோன்றி, மண் தோன்றா காலத்திலிருந்து!

    ஆனானப்பட்ட ஆம்பளை பசங்க கூட சமுத்திரத்தில் அம்மணமாக ஸ்நானம் செய்த பின் அந்த தீவின் மஹாராணியான தேவதை கோவிலுக்கு (17 வது நூற்றாண்டு)  செல்லலாம். இந்த தீவை பழமை வாய்ந்த சர்வதேச கலாச்சார மையமாக, யுனெஸ்கோ அறிவித்து உளது.

    வாழ்க பெண்ணியம். ஆணியமும் தான். அதை த்ராட்லெ விடலாமோ!

    -#-

    சித்திரத்துக்கு நன்றி: 

    http://www.japantimes.co.jp/wp-content/uploads/2017/05/n-unesco-a-20170507.jpg

     

    Share
  • மழையே தாகம் தீர்த்துவிடு

     ரா.பார்த்தசாரதி

     

    மழையே உன்னை நினைத்து ஏங்காதவர்கள் எவருமில்லை

    பயிர்கள்  உன் வரவுகண்டு மகிழ்ச்சி  கொள்ளாமல் இல்லை

    விட்ட குறை, தொட்ட குறையாய் வந்து செல்கின்றாய்,

    ஏனோ சில மணித்துளி பெய்து வாசல்கோலங்களை அழிக்கின்றாய் !

     

    உன்னை நினைக்காத நாளில்லை தண்ணீர் பஞ்சம் வந்தபோது

    நிலத்தடி நீரையும் பல ஆழ்கிணற்றால்  சுரண்டப்பட்டபோது

    நீரின்றி உலகம் அமையாது என்று மக்கள் நினைத்தபோது

    மனிதன் இயற்கையை எதிர்த்து நீரைப் பெற நினைக்கும்போது!

     

    அருவிகளும், மலைகளும் இருகைகொண்டு உன்னை வரவேற்கும்

    மலைகளும், உன்னை அருவியாய் பிரித்து மக்களை நனைக்கும்

    அருவிகளும் நடனமாடி அழகுடன் மக்கள் மனதில் கலக்கும்

    கடலே உன்னை அணைத்து மீண்டும் மேகமாய் உருவெடுக்கும்

     

    உன்னை வரவேற்க நான்மட்டும்மல்லா, என் தாய்நாடும்தான்

    நானில்லாத நாட்களில் வந்தாலும், உன் அருமை தெரியவில்லை

    நீரை முகந்து , கருமேகமாய் மாறி  உலகிற்கு மழையைப் பொழிகிறாய்

    கைம்மாறு கருதாது  பயிருக்கும்,மக்களுக்கும் தாகம் தீர்க்கின்றாய் !

     

    மழையே,  உன் இதழ் துளி  எங்கள் உயிர் துளி என கருதுவோம்

    என்று தணியும் உன் கோபம், என்று தீரும் எங்கள் தாகம்

    மகன் பிறப்பதும்,மழைபொழிவதும், மகேசனும் அறியார்

    உன்னருமை கண்டு  வான் சிறப்பில் வள்ளுவன் எடுத்துரைத்தார் !

     

     

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 94

    டனூப் நதி அருங்காட்சியகம், டோனாவேஷிங்கன், ஜெர்மனி

    முனைவர் சுபாஷிணி

    நதிகள் பார்ப்போர் மனதை அமைதி கொள்ளச் செய்யும் பண்பு கொண்டவை. நதிகளின் பிரமாண்டம் காண்போரைத் தன்னிலை இழக்கச் செய்யும் தன்மையுடையது. தமிழகச் சூழலில் தாமிரபரணி, வைகை, காவேரி, கொசத்தலை, பெண்ணையாறு போன்ற நதிகள் புகழ்பெற்றவை.

    ரஷ்யாவின் வோல்கா நதிக்கு அடுத்து இப்பிராந்தியத்தில் மிக நீளமான நதி என்ற சிறப்பைப் பெறுவது டனூப் நதி. ஜெர்மனியை மட்டும் எடுத்துக் கொண்டால் இங்கு பிரபலமான மூன்று நதிகளில் ஒன்று என டனூபை குறிப்பிடலாம். ரைன், நெக்கார் ஆகிய இரண்டிற்கும் அடுத்து டனூப் நதி சிறப்புடன் காணப்படும் நதியாக விளங்குகின்றது எனலாம். ஜெர்மனியின் கருங்காட்டில் (Blackforest) ஊற்றாகி அங்கிருந்து வளர்ந்து ஏனைய சிறு ஓடைகளையும் கிளை நதிகளையும் இணைத்துக் கொண்டு ஐரோப்பாவின் பத்து நாடுகளைக் கடந்து செல்கின்றது இந்த டனூப் நதி. இதன் நீளம் 2800 கிமீட்டர் ஆகும் ஜெர்மனிக்கு அடுத்ததாக ஆஸ்திரியா, சுலோவாக்கியா, ஹங்கெரி, குரோஷியா, செர்பியா, ரொமானியா, புல்கேரியா, மொல்டோவா, உக்ரேயின் ஆகிய பத்து நாடுகளில் பாய்ந்து கடந்து கருங்கடலில் கலக்கின்றது டனூப். டனூபின் மொத்த நீளத்தில் மூன்றில் ஒரு பகுதி ஹங்கெரி நாட்டில் ஓடும் பகுதியாக அமைந்திருக்கின்றது. ஜெர்மனியின் டோய்ச் மொழியில் இந்த நதி டோனாவ் என அழைக்கப்படுகின்றது.

    unnamed (4)
    ​டனூப் நதி பாயும் நாடுகள்

    கோடைகாலத்தில் சுற்றுப்பயணிகளைக் கவரும் படகுச் சவாரிகள் டனூப் நதியில், அதிலும் குறிப்பாக நாடுகளின் தலைநகரங்களை டனூப் கடக்கும் பகுதிகளிலெல்லாம் காணலாம். ஐரோப்பாவில் இடம்பெறும் இந்தப் பத்து நாடுகளில் நான்கின் தலைநகரங்களும் டனூப் நதிக்கரையை அண்டியவாறு அமைந்துள்ளன. நதிக்கரையோரங்களில்தானே மனித குலங்களின் நாகரிகம் வளர்ந்து செழித்தது. சிந்து சமவெளி, நைல் போல டனூப் நதியும் இதற்குச் சான்றாகவே விளங்குகின்றது.

    unnamed (5)

    ஹங்கெரியின் தலைநகர் பூடாபெஷ்டில் டனூப்

    டனூப் நதியில் இணையும் கிளை நதிகள் ஏறக்குறைய 300 ஆகும். இவற்றில் ஏறக்குறைய 30 கிளை நதிகளில் படகுப் பயணமும் செல்லலாம். இந்த நதியின் கரையோரங்களிலும் இவை உருவாகிவரும் பகுதிகளிலும் வாழும் தாவர வகை, பறவைகள் மற்றும் விலங்கு வகை உயிரினங்களின் எண்ணிக்கை 5000 வகைகளுக்கும் குறை யாது உள்ளன.

    unnamed (4)
    ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் டனூப்

    நதிகள் என்றாலே மனித குல நாகரிகங்கள் தம் இருப்பிடங்களை அமைத்து, விவசாயத்தை வளர்த்து விரிவாக்கி கலைகள் செழித்து வளர்ந்த செய்திகளை வரலாற்றில் காண்கின்றோம். டனூப் நதி ஐரோப்பாவின் பழமையான கெல்ட் இன மக்கள் வாழ்ந்த நிலப்பகுதியாக வரலாற்று ஆய்வாளர்களால் அறியப்படுகின்றது. இந்த நதி ஓடும் கரையின் பல பகுதிகளில், அதிலும் குறிப்பாக ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, ப்ராட்டிஸ்லாவா ஆகிய பகுதிகளில் கெல்ட் இன மக்கள் இன்றைக்கு 2600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்விடங்களை அமைத்து வாழ்ந்ததாக கெல்ட் இன மக்கள் தொடர்பான வரலாற்றுச் செய்திகளை அறியலாம். கி.மு. 7ம் நூற்றாண்டு வாக்கில் கிரேக்க கடலோடிகள் இந்த நதியில் பயணித்த விபரங்கள் நமக்குக் கிடைக்கின்றன. பின்னர் ரோமானியப் பேரரசு தன் ஆளுமையை விரிவாக்கிய சமயத்தில், போர் வீரர்கள் இந்த நதி மார்க்கமாக பயணித்து வந்து தங்கள் ஆளுமைக்கு உட்படாத நிலப்பகுதிகளைக் கைப்பற்றி பேரரசை விரிவாக்கினர்.

    இந்தப் பத்து நாடுகளைச் சேர்ந்த பொது மக்கள் இந்த நதியை எந்த தங்கு தடையுமின்றி பயன்படுத்துகின்றனர். இந்த நதியில் சுற்றுலா பயணிகளுக்கான நதிப்பயணம் என்பது 19ம் நூற்றாண்டு வாக்கில் தொடங்கியது. இன்றோ டனூப் நதிக்கரை பயணம் என்பது உலகளாவிய அளவில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கவரும் ஒரு பயணமாகத் திகழ்கின்றது.

    unnamed (6)

    டோனாவ்குவெல்ல – ​டனூப் தொடங்கும் ஊற்று

    டனூப்/ டோனாவ் ஊற்றெடுக்கும் பகுதி அமைந்திருக்கும் சிற்றூரின் பெயர் டோனாவேஷிங்கன். ப்ரெக், ப்ரிகாக் என்ற இரு பகுதிகளிலிருந்து ஊற்றெடுத்து ஒன்றாகிப் பின்னர் 300க்கும் மேற்பட்ட கிளை நதிகள் இணைந்து இது உருவாக்கம் பெறுகின்றது. டோனாவ்குவெல்ல ( Donauquelle) என்பதன் பொருள் டோனாவ் நதியின் ஊற்று தொடங்கும் இடம் என்பதாகும். இந்தப் பகுதியில் தான் டனூப் நதியின் ஆரம்பப்புள்ளி தொடங்குகின்றது. இங்குதான் மிகச் சிறிய வடிவிலான டனூப் நதி அருங்காட்சியகம் இருக்கின்றது. இங்கே டனூப் நதியைப் பற்றிய அடிப்படை தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜெர்மனியின் கருங்காடு சூழ்ந்த இப்பகுதியில் கருங்காட்டினுள், பசுமை அழகு கண்களையும் மனதையும் கொள்ளைக்கொள்ளும் சூழலில் இந்த நீரூற்று அமைந்திருக்கின்றது.

    unnamed (7)

    இந்த நதி ஊற்றெடுக்கும் பாடன் உர்ட்டென்பெர்க் மாநிலத்தில் தான் நான் வசிக்கின்றேன். இந்த மாநிலத்தின் குடிநீர் டனூப் நதியிலிருந்து பெறப்படுகின்றது என்பதும் இந்த நதிநீரைத்தான் நான் தினமும் பருகி வாழ்கின்றேன் என நினைக்கும் போது எனக்குள் இந்த நதியின் மீது மிக ஆழமான பற்றுதல் ஏற்படுகின்றது. தாய் போலத்தான் நதியும் நம்மை வாழ்விக்கின்றது, அல்லவா?

    Share
  • INDIA / VII – Beyond the vast expanse

     

     

    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : பங்கஜ் என்.மோகன்
    தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி

     

    பரந்து விரிந்த அகல்வெளிக்கப்பால்

    images (1)

    எல்லையற்ற அகல்வெளிக்கப்பால் பெருகியோடும் தங்க ரேப் மலர்கள்
    தொடுவானத்தில் வெகு தொலைவிற்கு மேற்பரவியுள்ளன
    பாழடைந்த பண்டைய ஆலயமொன்றும் படர்ந்துள்ளது.

    எருதுகள் ஏர் உழும் வறண்ட பூமி
    ஹரிஜன்களும், ஏழைகளும், வீடற்றோரும்
    கரங்களில் புற்பூக்கள் ஏந்தியவாறு கூடுகின்றனர்.

    வானமும் பூமியும் மாற்றமின்றியே இருக்கின்றன
    முன்பு போலவே ஆறும் அருகில் ஓடுகின்றது.
    தமது வீடுகளை கட்டமைக்கவும் வேண்டுமா அவைகள்.
    தமது கூரைகளை வேயவும் வேண்டுமா அவைகள்.
    மதில்களோ அன்றி சுவர்களோ அமைத்தலும் வேண்டுமா.

    காந்தியின் ஹரிஜன்கள் ஆதரவற்றவர்களாயினும் வானின் கீழுள்ள
    பரந்த உலகையே தங்கள் இல்லமாய்க் கொள்வதால் வருந்துபவர்களில்லை.

    Share
  • உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

     

    பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்

    ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

    +++++++++++++++

    unnamed

    [58]

    இரவு, பகல் மீளும் சதுரங்க ஆட்டத்தில்

    ஊழ் மனிதரோடு மீளா புரிக்கு விளையாடும்

    இங்குமங்கும் நகரும், கூடும், கொல்லும், பின்

    ஒவ்வொன்றாய்க் கல்லறையில் வைக்கும்.

    [58]
    ‘Tis all a Chequer-board of Nights and Days
    Where Destiny with Men for Pieces plays:
    Hither and thither moves, and mates, and slays,
    And one by one back in the Closet lays.

    [59]

    வெற்றியா, தோல்வியா எனும் வினா இல்லை

    வலதோ, இடதோ, விளையாட்டுப் போட்டியில்

    மைதானத்தில் உன்னைக் கீழே வீழ்த்தியோன்

    அறிவான் எல்லாம் அறிவான், அவன் அறிவான்!
    [59]
    The Ball no Question makes of Ayes and Noes,
    But Right or Left, as strikes the Player goes;
    And he that toss’d Thee down into the Field,
    He knows about it all – He knows – HE knows!

    [60]

    எழுதிச் செல்லும் ஊழியின் கை, எழுதி, எழுதி

    மேற்செல்லும்; உன் பக்தியும், யுக்தியும் அதை

    மறுமுறை மாற்றாது, அரை வரி கூட நீக்காது;

    அழுத கண்ணீர்த் துளிகளும் அழிக்கா ஒருசொல்.

    [60]

    The Moving Finger writes; and, having writ,
    Moves on: nor all thy Piety nor Wit
    Shall lure it back to cancel half a Line,
    Nor all thy Tears wash out a Word of it.

    +++++++++++++++++++++++

    Share
  • சிறுவர் இலக்கியம் படைப்பது எப்படி? (10)

    பவள சங்கரி

    சிறுவர் இலக்கியம்

    ஒரு படைப்பிற்கு ஆரம்பம் என்பது எவ்வளவு முக்கியமானதொன்று என்பதை அறிந்திருப்போம். முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். முதல் பகுதி சுவையாக அமைய கருத்தில் கொள்ளவேண்டிய சில விசயங்களைப் பார்ப்போம்.

    ⦁ கதை அல்லது நாடகம் என எதுவாயினும் நினைவில் நிற்கக்கூடிய ஒரு கதாபாத்திரத்தை உருவாக்குங்கள். முதல் அறிமுகம் வித்தியாசமானதாக இருக்கட்டும்.
    ⦁ கதை நாயகனுக்கு ஏற்படப்போகும் பிரச்சனையோ அல்லது எதிர்ப்போ அதற்கான ஒரு குறிப்பைக் கொடுக்கலாம்.
    ⦁ அந்தப் பிரச்சனை ஏன் அவ்வளவு மோசமானது என்பதற்கான காரணத்தைச் சொல்லலாம்.
    ⦁ அதன் தீர்வு ஏன் அவ்வளவு முக்கியமானது அல்லது தீர்ப்பதில் என்ன சிரமம் என்பதைக் குறிப்பிடலாம்.
    ⦁ கதாநாயகனோ அல்லது நாயகியோ அதற்கான முயற்சியாக என்ன செய்கிறார்கள் என்பதைச் சொல்லலாம்.
    ⦁ சரியான நேரத்தில், இடைவெளியில் ஆரம்பப்புள்ளியை அழுத்தமாகப் பதிக்கவேண்டும்.
    ⦁ இயன்றவரை தேவையற்ற வார்த்தைகளைத் தவிர்த்து சுருக்கமாகவும் சுவையாகவும் கொடுக்க முயலவேண்டும்.
    ⦁ பரீட்சார்த்தமான புதிய யுக்திகள் உதிக்கும்போது அதை ஒதுக்கத் தேவையில்லை. துணிவுடன் முயன்று பார்க்கலாம்.
    ⦁ கதாநாயகி அப்பாவை மட்டுமே சந்திக்கவேண்டும், அப்பா பற்றி மட்டுமே பேசவேண்டும் என்று நினைக்க வேண்டியதில்லை. நல்ல நட்பையோ, நல்ல ஆசிரியரையோ, தான் சம்பந்தப்பட்டத் துறை நிபுணரையோ, தலைவர்களையோ போன்ற பரந்துபட்ட சிந்தனையை வெளிக்கொணரலாம்.
    ⦁ ஆழ்ந்த பெருமூச்சுடன் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம்.

    தொடரும் ஆரம்பத்துடன் அடுத்தகட்ட நகர்வுகள் ஆச்சரியமான அனுபவங்களைக் கொடுக்கவல்லதாக இருப்பது நலம். வாசகர்களை சுண்டியிழுக்கும் சுவையான பகுதிகளாக அவை இருக்கவேண்டியது அவசியம். கதை முழுவதும் முடியும்வரை எந்த கவனச் சிதறல்களும் ஏற்படாதவாறு கட்டிப்போட்டு வைப்பது சிறந்த படைப்பாகக் கருதப்படும்.

    மேற்கண்ட கருத்துகளை நடைமுறைப்படுத்துவது எப்படி? ஆரம்பப்பகுதியை ஆய்ந்தறிந்து அதன் போக்கில் கதையை நகர்த்திச் செல்வது எளிது.

    கதை சொல்வதற்கான சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம்:

    ஆரம்பப்பகுதியைத் தொடர்ந்து அதே நடையில் முன்னேறிச் செல்வது. ஒவ்வொரு படியாகக் கடந்து தொய்வில்லாமல் கதையை முன்னோக்கி மட்டும் நகர்த்திச் செல்வது. இந்த முறையில் கருப்பொருளை உருவாக்குவதும் எளிதாகும். ஆனாலும் இந்த முறையில் மட்டுமே மேலெடுத்துச் செல்ல வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். அதாவது கதையை பின்னோக்கி எடுத்துச் செல்லும் ஃபிளாஷ்பேக் என்ற உத்தி இல்லாமல் கதையின் போக்கில் முன்னேற்ற வாய்ப்புகள் குறைவாகவே இருக்கக்கூடும்.

    “வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்!” என்ற என் கதையின் ஆரம்பப்பகுதி ….

    சிரிப்பு என்றால் என்ன? இதைக்கேட்டவுடன் சிரிப்பு வருகிறதா? ஆமாம், இந்த உலகில் உள்ள பல கோடி உயிரினங்களில் மனிதனால் மட்டுமே சிரிக்க முடியும் தெரியுமா? . மனிதரோடு உடன் பிறந்த உணர்வுகள் பல. அதில் மிகவும் முக்கியமானது சிரிப்பு. நாம் ஒரு முறை சிரிக்கும் போது நம் உடலின் 300 தசைகள் அசைகின்றன என்கிறது விஞ்ஞானம். இந்த சிரிப்பு, உடல் ஆரோக்கியமாக இருக்கக்கூடிய மனிதர்களிடமிருந்து வித விதமான சந்தர்ப்பங்களிலும் இயல்பாகத் தானாக வெளிப்படக்கூடிய ஒன்று. சிரிப்பு மட்டுமே நம் மனதையும், உடலையும் வலிமைப்படுத்தி புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கக்கூடியது என ஆய்வுகள் கூறுகின்றன. மனம் விட்டு, வாய்விட்டுச் சிரித்தால் நம் உடலிலும், மனதிலும் உள்ள அழுத்தங்களும், கவலைகளும் வெளியேறுகின்றன. முகத்திலுள்ள தசைகளும், நெஞ்சுத் தசைகளும் பலம் பெற்று ஆரோக்கியத்தைத் தருகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியும் கூட அதிகமாகின்றதாம். சிரிக்கும் போது கவனித்துப் பாருங்களேன். மூச்சை நம்மால் ஆழமாக இழுக்க முடியும். அதனாலேயே தேவையான ஆக்சிஜனை எளிதாக உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன்களை இந்த சிரிப்பின் மூலம் மூளை உடலுக்கும் பரவச்செய்வதால், உடலும் நல்ல ஆரோக்கியமாக ஆகிறது. கபடமற்ற குழந்தைகள் கண்டதற்கெல்லாம் சிரித்து மகிழ்வார்கள். அவர்கள் நாளொன்றுக்கு சராசரியாக 400 முறைகள் சிரிக்கிறார்கள் என்றும் , பெற்றோர்கள் 15 முறைகள் மட்டுமே சிரிக்கிறார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. சிரிப்பு என்பது ஒரு தொற்று வியாதி போல. ஆமாம், கூட்டமாக இருக்கிற ஒரு இடத்தில் ஒருவர் சிரிக்க ஆரம்பித்தால் அது மளமளவென்று அங்கிருக்கும் அனைவரையும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்துவிடும். சிரிப்பில், புன் சிரிப்பு அசட்டுச் சிரிப்பு, ஆணவச் சிரிப்பு, ஏளனச் சிரிப்பு, சாகசச் சிரிப்பு, நையாண்டிச் சிரிப்பு என பலவகை உண்டு.

    அடுத்து நேரடியாக முன்னேறிச்செல்லும் இடைப்பட்ட பகுதியின் ஆரம்பம் இப்படிச் செல்கிறது ….

    “பெருந்தலைவர்கள், சொற்பொழிவாளர்கள் போன்ற பலர் இயல்பாகத் தங்கள் நகைச்சுவையை வெளிப்படுத்தி சபையோரை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பார்கள். சில கலைஞர்களைப் பார்த்தவுடன் பொத்துக்கொண்டு சிரிப்பு வரும். அவர்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் , கண்களை உருட்டிப் பார்க்கும் ஒரு பார்வை கூட, அப்படி ஒரு சிரிப்பை வரவழைத்துவிடும், சார்லி சாப்ளின் படம் பார்த்திருப்பீர்கள் இல்லையா. அதுபோல இன்றும் கூட பல திரைப்பட நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்களென பலர் இருக்கிறார்கள்”

    இங்கு ஃபிளாஷ் பேக் என்ற பின்னோக்கிச் செல்லும் உத்தியுடன் கதை எளிதாக முன்னேறும் வகையைக் காணலாம்……..

    …….மிகப்பெரும் தத்துவ அறிஞரான பெர்னாட்ஷா, ஒரு முறை அழைப்பின் பேரில் ஒரு வயலின் கச்சேரிக்குச் சென்றிருந்தார். கச்சேரி முடிந்தவுடன், அங்கிருந்த பெண் நிர்வாகி ஒருவர் இவரிடம் வந்து, வயலின் வாசித்த அந்த கலைஞரைப் பற்றி தான் நினைப்பதைக் கூறும்படி கேட்டார்.

    அதற்கு ஷா சற்றும் தயங்காமல், ” பாதரவ்ஸ்கியை (பாதரவ்ஸ்கி இன்னொரு இசைக் கலைஞர்) நினைவூட்டுகிறார்” என்று பதில் அளித்தார்.

    அந்த நிர்வாகிக்கு இந்த பதில் மிகவும் ஆச்சரியமாகிவிட்டது. “பாதரவ்ஸ்கியா..? அவர் ஒரு வயலின் கலைஞர் இல்லையே.” என்று இழுத்தார்.
    அதற்கு ஷாவும் முகத்தில் எந்தவிதமான உணர்வையும் காட்டாமல், “இவர் மட்டும் என்னவாம்?!” என்றாராம்.
    அந்த நிர்வாகியின் முகத்தில் ஈயாடவில்லையாம், …………

    நடந்து முடிந்த பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து அதை நடப்பு நிகழ்வுடன் பொருத்துவதன் மூலமாக சுவையாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. கதையின் கருவிற்கு ஏற்ற பழைய நிகழ்வுகளை எடுத்துக்காட்டாக விளக்குவதன் மூலம் கதையின் ஓட்டமும் தொய்வில்லாமல் பயணிக்க வழிவகுக்கும். கிளைக்கருவை நகர்த்துவதற்கான சிறு விளக்கங்களும் கொடுப்பதற்கு ஏதுவாகும். ஒரு குறிப்பிட்ட கதாப்பாத்திரமோ அல்லது மையக்கருவின் கருத்தையோ ஒளியூட்டக்கூடிய வகையில் அமைந்துவிடுகிறது. முக்கியமான கதாநாயகப் பாத்திரத்தை மெருகேற்றவும் செய்கிறது. கதைக்கு மென்மை மற்றும் ஆழ்ந்த தன்மையை வழங்குகிறது.

    ஃபிளாஷ் பேக் உத்தியில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, குழந்தைகளுக்கு நிகழ்கால சம்பவமா அல்லது நடந்து முடிந்த பழைய சம்பவமா என்ற குழப்பம் ஏற்படாதவாறு இருக்கவேண்டும். நேரத்தை சரியாகக் கணக்கிட்டு நிகழ் காலத்திற்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்துவிட வேண்டும்.
    மேற்கண்ட கதையில் வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்ற மையக்கருவிற்கு வளம் சேர்க்கும் வகையில் முக்கியமான கதாபாத்திரங்களின் பழைய சம்பவங்களை பின்னோக்கிப் பார்த்து விளக்கப்பட்டுள்ளது.
    தொடருவோம்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . ( 243 )

     

    சக்தி சக்திதாசன்

     

     

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள்..

    இன்னுமொரு வாரம் ! இன்னுமொரு மடல் ! அடுக்கடுக்காய் ஆனந்தங்கள்,அடுக்கடுக்காய் அனர்த்தங்கள். அப்படி ஒரு நிகழ்வு ! இப்படி ஒரு நிகழ்வு ! ஒரு இன்பம், ஒரு துன்பம் அதுதான் வாழ்க்கையென்றிருந்தால் அடுத்தடுத்து இன்பம், அடுத்தடுத்து துன்பம். இவைகளை வகுப்பவர் யார், அவர்தம் விதிகள் தாமெவை ?

    இன்றைய உலகின் அவசர நிகழ்வுகள் அடுக்கடுக்காய் எம்மீது தூக்கிப் போடும் சவால்கள் இவை. இன்றைய உலகின் பலநாடுகளிலும் ஒரு புதிய சமுதாயம் உருவாகியிருக்கிறது . அதுதான் ” புலம்பெயர் சமுதாயம்” இப்புலம்பெயர் சமுதாயம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் உள்ளடக்கியதல்ல. பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு காரணங்களினால் இடம் பெயர்ந்து வேறொரு நாட்டிற்கு குடிபெயரும் அவலமான நிலையில் இருக்கும் மக்களை உள்ளடக்கியதே இச்சமுதாயமாகிறது.  இச்சமுதாயத்தினரால் படைக்கப்படும் இலக்கியம் அவர்களின் மனவோலங்களின் அடிப்படையில் எழுந்தவைகளே ! ஆனால் புலம் பெயர்ந்து வந்து வாழும் அனைவராலும் இலக்கியம் படைக்க முடிகிறதா ? இல்லையே ! தமது மன உணர்வுகளை எழுத்தில் வடித்து வெளியிட முடியாதோரின் மனவோலங்களுக்கு வடிகால் தான் என்ன ?

    எனது எழுத்துக்களின் எல்லைகளை நிர்ணயிப்பது நான் பிறந்த என் தாய்மண்ணான ஈழம், நான் வாழ்க்கைத்துணையைத் தேடிக்கொண்ட தாய்த்தமிழகம், எனக்கு வாழ்வளித்த இங்கிலாந்து எனும் என் மாற்றாந்தாய். எனது பார்வையின் கோணம் இவைகளின் பின்னனியில் விளைபவைகளே ! எனக்குள் எனது பின்புலத்தால் வரைந்து வைக்கப்பட்ட கலாச்சாரக் கோலங்கள் அழிக்கப்பட முடியாதவை. அதேநேரம் பதின்ம வயதின் இறுதிப்படிகளில் இருந்து எனக்கு வாழ்வளித்த இந்த இங்கிலாந்து தேசத்தின் கலாச்சாரப் பின்னனி எனக்குள் எழுதப்பட்ட கலாச்சார விதிகளுக்கு முற்றிலும் மாறானவை. ஆயினும் எந்த வித வற்புறுத்தல்களுமின்றி எனது சொந்த விருப்பில் நான் வாழ்வதற்குத் தேர்ந்தெடுத்த இங்கிலாந்து நாட்டின் காலாச்சாரத்தை சுவீகரித்துக் கொள்ளும் மனப்பான்மையை எனது வாலிப வயதில் வரித்துக் கொள்வதில் எனக்கு எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. ஆயினும் என் தாய்மண்ணின் கலாச்சாரப் பின்னனியைத் தொலைத்து விடாமல் காப்பாற்றிக் கொள்வதில் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்தன.

    இவை யிரண்டுக்கிடையில் இருந்த கலாச்சார இடைவெளியை நிரப்புவதே ஒரு போராட்டமாக இருந்தது. அப்போராட்டக் களத்தில் பல சமயங்களில் பல குழப்பநிலைகள் தோன்றி மறைந்துள்ளன. ஆனால் இன்று எனது முதுமையின் வாசலில் நான் இன்னமும் தமிழையும், அது கற்றுத் தந்த கலாச்சார முக்கியத்துவத்தையும் மனதில் கொண்டிருப்பது எனது போராட்டத்தில் நான் ஓரளவு வெற்றியடைந்தேன் எனும் மகிழ்வை எனக்குத் தந்திருக்கிறது. இந்தப் பின்னனியில் தான் நான் இங்கிலாந்தில் எமது புலம்பெயர் தமிழ்ச் சமுதாயத்தின் மத்தியில் நிகழும் நிகழ்வுகளை எனது கோணத்தில் இருந்து பார்க்க விழைகிறேன். தமிழையும், அதன் கலாச்சாரப் பெருமைகளையும் தாம் வாழும் புலம்பெயர் தேசத்தில் காப்பாற்றி வளர்த்து வருகிறோம் எனும் நம்பிக்கையில் எம்மவர் நிகழ்த்தும் பல நிகழ்வுகளுக்கான உண்மை விளக்கங்களின் அடியில் ஒளிந்திருக்கும் மனப்பான்மையை கொஞ்சம் வெளிக்கொணர்வதே எனது இந்த மடலின் சாரமாக அமைகிறது. மனம் நிறைய எமது கலாச்சாரப் பெருமைகளைச் சுமந்தபடி அந்நிய தேசத்தினுள் நுழைகிறோம். நாம் நுழையும் அந்நிய தேசங்களில் எமக்கு வரவேற்பளித்து எமது தனிமனித உரிமைகளுக்கு மதிப்பளித்து நாம் அவர்களின் சட்டவரம்புக்கு உட்பட்டு எமது கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு அவர்கள் எவ்விதத் தடையும் போடுவதில்லை. எமது உள்ளங்களில் தேக்கி வைத்திருக்கும் கலாச்சாரங்களைக் காப்பாற்றும் திறன் எமக்குள் இல்லை என்றாலும் இருக்கவே இருக்கிறார்கள் எமது குழந்தைகள். என்ன செய்கிறோம் ? எமது கனவுகளை கலாச்சாரம் எனும் பெயரில் எம்மைப் பிணைத்திருக்கும் விலங்கினை நாம் பாசக்கடமை எனும் பெயரில் எமது குழந்தைகளின் மீது பூட்டி விடுகிறோம். இந்தப் புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளர்ந்த எமது குழந்தைகள் தம் வாழ்வுக்கான கல்வியைப் பெற்றிட செய்யும் முயற்சிகளோடு பெற்றவர்களின் கலாச்சார சுமைகளையும் சேர்ந்தே சுமக்கிறார்கள்.

    என்ன சக்தியின் மடல் எந்தத் திசை நோக்கிச் செல்கிறது என்கிறீர்களா ? இங்கிலாந்தில் நிகழும் பல அரங்கேற்றங்களையும் அவற்றின் பின்னால் புதைந்திருக்கும் பல துயரங்களையும் கண்ணுற்றதினாலும், கேள்வியுற்றதினாலும் எழுந்த ஆதங்கத்தின் வெளிப்பாடே இம்மடல். ஆமாம் நடனம், இசை, பாடல் எனும் பல கலாச்சார விழுமியங்களின் அடையாளச் சின்னங்களாக தமது வாரிசுகள் வருவதின் பெருமைக்காக பெற்றோர்கள் பலர் படும் இன்னல்கள் சொல்லிலடங்கா. இங்கே நடைபெறும் அரங்கேற்றங்கள் சிலவற்றின் செலவு ஒரு வாரிசின் ஆடம்பரமான திருமணச் செலவுக்கு இணையானது. அத்தகைய நிதியை வங்களில் கடனாகப் பெற்றுக்கூட இத்தகைய நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் பல அந்த ஒரு அரங்கேற்ற நிகழ்வின் பின்னால் ,அவ்வரங்கேற்றம் செய்த மாணவ மாணவிகளினால் மீண்டும் ஒருபொழுது கூட உபயோகிப்படக்கூடாத நிலையை நான் பல இடங்களில் கண்டிருக்கிறேன். ஆனால் அதேசமயம் தங்களுக்கு பிடித்ததினால், இக்கலைகளைப் பயிலும் பல மாணவ மாணவிகள் இல்லாமல் இல்லை. அவர்களின் திறமைகளையும், அவர்களின் கலச்சார அடையாளப் பாதுகாப்பையும் பார்த்து நான் பிரமிக்கத் தவறுவதில்லை.

    என்னுடைய ஒரே ஆதங்கம் கலாச்சாரப் பாதுகாப்பு எனும் பெயரில் பிடிக்காத ஒன்றைத் தமது சுயமகிழ்வுக்காக தமது குழந்தைகளின் மீது திணிக்கும் முறை சரிதானா என்பதே ! புலம்பெயர் வாழ்வில் எமது இளமைக்காலத்தில் தாய்நாட்டுக் கலாச்சாரத்தில் வளர்ந்து விட்டு பின்பு புலம்பெயர் தேசக் கலாச்சாரப் பின்னனியில் இணைந்து வாழ்வதென்பது ஒரு சுலபமான காரியமல்ல. அவ்வாழ்வில் எங்கே நாம் நமது அடையாளத்தை இந்த அந்நிய தேசத்தில் தொலைத்து விடுவோமோ எனும் பயத்தில், தீவிரமான நடவடிக்கைகளில் இறங்குவது எதிர்பார்க்க வேண்டிய ஒன்றே. ஆயினும் இப்புலம்பெயர் தேசத்தை நமது வாழ்நாடாக எடுத்துக் கொள்ளும் போது, இத்தகைய குழப்பங்களுக்குள் நம்மைப் புகுத்திக் கொள்ளாமல் தப்பித்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது அவசியமே !

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

      

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • எழிலரசி கிளியோபாத்ரா -14

    சி. ஜெயபாரதன்

    image (4)

    அங்கம் -2 பாகம் -14

    “காதல் சம்பந்தப்பட்ட வரையில் பாலுணர்ச்சிகளைப் பொய்யாக எண்ணுவதை நானொரு மனிதப் பாபமாகக் கருதுகிறேன். அதே சமயத்தில் காதல் முழுதாயின்றிப் பின்னமாக உள்ள போது ஏற்படும் உணர்ச்சிகளைப் போலித்தனமானத் தவறென்று நான் மதிப்பீடு செய்கிறேன். நான் நம்புவதையே சொல்கிறேன். காதலுற்ற போது ஒருவரை ஒருவர் முடிந்தவரை முழுமையாக நேசிக்க வேண்டும், அல்லாவிட்டால் என்ன நேர்ந்தாலும் சரி, ஒருவர் முழுக் கற்புடன் தனிமையாக வாழ வேண்டும்.”

    ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]

    “இறைவா! எப்போதும் நான் சாதிக்கக் கூடுவதை விட மிகையாக வேட்கை கொள்வதையே எனக்கு அளித்திடு.”

    மைக்கேலாஞ்சலோ [1474-1564]

    “ஒரு நாளைப் பொழுதில் கடிது உழைத்துக் காலத்தைச் செலவழித்த பிறகு அன்றிரவில் ஆழ்ந்த சுகமான தூக்கம் வருவதைப் போல், நன்னெறியுடன் வாழ்ந்த வாழ்க்கை மகிழ்ச்சியான மரணத்தை அளிக்கிறது!”

    லியானார்டோ டவின்ஸி [1452-1519]

    “என் எகிப்து நாடே! நன்கு அறிவாய் நீ!

    நின் திசைதிருப்பிப் பின்தட்டுடன் கயிற்றால்

    பிணைக்கப் பட்டு துள்ள தென்  இதயம் !

    பிறகு நீதான் இழுத்துச் செல்ல வேண்டும்!”

    [கிளியோபாத்ரா]

    வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]

    நேரம், இடம்:

    அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

    நாடகப் பாத்திரங்கள்:

    ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர்.

    காட்சி அமைப்பு:

    கிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபாத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார். சீஸர் ரோமுக்கு மீள்வதை நிறுத்தி, கிளியோபாத்ரா அவரைத் தன் கவர்ச்சியால் மயக்கி ஆண்மகவு பெற்றுத் தருவதாய் உறுதி அளித்து மகிழ்ச்சி ஊட்டுகிறாள். வெளியே டாலமியின் படைவீரர் ரோமானியரைத் தாக்கி, அவரது கப்பல்களுக்குத் தீவைக்கிறார்! முடிவில் அலெக்ஸாண்டரியா நூலகம் எரிகிறது!

    தியோடோடஸ்: [சீஸரைக் கூர்ந்து நோக்கி] உலகப் புகழ் பெற்ற எங்கள் பெரு நூலகம் தீப்பற்றிக் கரியாகக் காரணமானீர்! உலக வரலாற்றை உருவாக்கும் மாவீரர் நீங்கள் பூர்வீக வரலாற்றை அழிப்பதில் பூரண விருப்பமா? எரிந்து போன நூல்களைப் புதிதாகப் பெற்றுத் தர வேண்டும். அல்லது நீங்கள் நட்ட ஈடு தர வேண்டும் எங்களுக்கு!

    ஜூலியஸ் சீஸர்: [சற்று சீற்றமுடன்] ரோமானியக் கப்பலில் தீவைத்தது யார்? எகிப்தியப் படைகள்! கலகம் உண்டாக்கி நூலகத் தீயை அணைக்க முயலும் ரோமானியப் படைகளைத் தடுப்பது யார்? உங்கள் பரம்பரை! தொட்டில் பிள்ளையைக் கிள்ளி விட்டு, தாலாட்ட தாயைத் தேடுகிறீரா? உன்னத நூலகத்தின் மதிப்பை அறியாதவர் உங்கள் மூட மக்கள்! அறிவு கெட்டதனமாய் ரோமானியர் மீது பழி சுமத்த வேண்டாம்! உமது அறிவும் பழுதாகி விட்டது. ஏனிப்படிச் சும்மா நின்று கொண்டு என்னுடன் வாதாடிக் கொண்டிருக்கிறீர்? மெய்யாகவே நூலகத்தைக் காக்க விரும்பினால், வெளியே போய் தீயை அணைப்பீர்!

    [தியோடோடஸ் பக்கத்தில் நிற்கும் போதினஸைப் பார்த்தவண்ணம் விரைந்து வெளியேறுகிறார்]

    போதினஸ்: தியோடோடஸ், நான் போக முடியாது உன்னுடன்! நானொரு வீட்டுக் கைதி இங்கே! வெளியே எங்கும் உன்னைப் போல் நடமாட முடியாது நான்!

    தியோடோடஸ்: [நடந்து கொண்டே] என்ன நீ ஒரு கைதியா? நூலகத்தை என்னால் முடிந்தவரைக் காக்க வேண்டும்! [போகிறார்]

    ஜூலியஸ் சீஸர்: போதினஸ் நீதான் சொல்ல வேண்டும், உலக வரலாறுகள் எரிந்தழியும் இந்த நேரத்தில்! தியோடோடஸ் மூலம் செய்தி அனுப்பு, இனிமேலும் ரோமானியரைக் கொல்ல வேண்டா மென்று! என் நெஞ்சம் கொதிக்கிறது! போரிடாமல் வாளா நிற்கும் ரோமானியரைக் கொல்லத் துணியாதீர்! உமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவாவது, எமது படையினரைக் காப்பாற்றுவீரா?

    image (5)

    போதினஸ்: [கோபமாக] உமது படையினர் உயிர் உமது கையில் உள்ளது! அவரைக் கப்பலில் ஏற்றி வந்தவன் நானில்லை! ஆனால் எமது உயிரைப் போக்கத் துணிந்தால், அதற்குப் பதிலாக நீவீர் பெருமிழப்பை ஏற்க வேண்டிய திருக்கும்!

    ஜூலியஸ் சீஸர்: [சினத்துடன்] டாலமியும், நீயும் அக்கிலஸ் மூலமாக ஆயுதமற்ற என் மருமகன், ரோமானிய மாவீரன், பாம்பியின் தலையை வெட்டிய பயங்கர வாதிகள்! உங்கள் குற்றத்துக்குத் தக்க தண்டனை கிடைக்கும்! அதில் ஐயமில்லை! நீவீர் நிரபராதி என்று நிரூபிக்கப்படும் வரையில் முதல்தரக் கொலையாளியாகத்தான் எண்ணப்படுவீர்!

    ரூஃபியோ: [அவசரமாய்க் குறுக்கிட்டு] ஜெனரல் சீஸர்! உங்கள் வருகை தேவைப் படுகிறது! உங்கள் முடிவு வேண்டப் படுகிறது! [துறைமுகம் வழியே எட்டிப் பார்த்து, படை வீரனிடம்] கிழக்கில் நிற்கும் சிறிய படகுகளை வெளியேற்று! நீண்ட படகுகளை என்ன செய்ய வேண்டுமென்று ஆணையிடச் சீஸர் வருவதாகச் சொல்! [சீஸரைப் பார்த்து] எங்கே அந்த எகிப்திய

    ஜூலியஸ் சீஸர்: ரூஃபியோ! நூலகத் தீயை அணைக்க தியோடோடஸை அனுப்பி யுள்ளேன்! உலக வரலாறுகளை, காவியங்களைப் பாதுகாக்க வேண்டும். போதினஸ் சிறைக் கைதியாக வைக்கப் பட்டிருக்கிறான்! நினைவில் வைத்துக் கொள் ரூஃபியோ! எத்தனை எகிப்தியனை நாம் சிறைப் படுத்தி வைத்திருக்கிறோம்! அதே சமயத்தில் ஒவ்வோர் எகிப்தியனுக்கும் இரட்டை ரோமானியக் காவலரைச் சிறைப்படுத்தி வைத்துள்ளோம் பாதுகாக்க.

    ரூஃபியோ: சீஸர்! உங்கள் கசப்பான சுவைப் பேச்சில் ஏதோ ஒரு குள்ள நரித்தனம் தெரிகிறது எனக்கு! எகிப்தியர் மீது ஏன் உங்களுக்கு அத்தனை பரிவு? [பலகணி நோக்கிச் சென்று வெளியே எட்டிப் பார்த்து] சொல், என்ன நடக்கிறது துறைமுகத்தில்?

    ஜூலியஸ் சீஸர்: [அங்குமிங்கும் பார்த்து] என்ன? பிரிட்டானஸ் தூங்கி விட்டானா? எனது கவசத்தைக் கொண்டுவர ஏற்பாடு செய்தேன். .. பிரிட்டானஸ்! எங்கே போய் விட்டாய்? கவசத்தைக் கொண்டுவா! காத்துக் கொண்டிருக்கிறேன். … யாரங்கே வருவது?

    [அப்போது கிளியோபாத்ரா வெளியிலிருந்து சீஸரின் வாள், தலை கெல்மெட்டை பிரிட்டானஸிட மிருந்து பறித்துக் கொண்டு, ஆங்காரமாக உள்ளே நுழைகிறாள். அவளைப் பின்பற்றி பிரிட்டானஸ் தொடர்கிறான். சீஸருக்கு இடப்புறம் கிளியோபாத்ராவும், வலப்புறம் பிரிட்டானஸும் நிற்கிறார்கள்.]

    கிளியோபாத்ரா: [ஆர்வமுடன்] ரோமன் கெல்மெட்டைப் பார்க்கவே வெகு அழகு! அதில் ஆண்மை தெரிகிறது! ஆண்மையின் வல்லமை தெரிகிறது. ஆண்மையின் அதிகாரம் தெரிகிறது. அதைத் தலையில் வைத்தால் ஆடவரின் உயரம் கூடுகிறது! முக லட்சணம் பராக்கிரமத்தைக் காட்டுகிறது! உங்களின் ஆண்மைத் தோன்றத்தைப் பன்மடங்கு அதிகரிக்கிறது! எடுப்பான உங்கள் முகத்தைப் பார்த்தால், பகைவரின் தொடைகள் நடுங்கும்! வயிற்றுக் குடல் வெளியே வந்திடும்! ஆடவருக்கு அப்படி ஓர் அதிகாரக் கெல்மெட் உள்ளது போல, பெண்டிருக்கு ஏன் செய்யப் படவில்லை? எனக்கொன்று அதுபோல் வேண்டும்!

    ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] எங்கள் ரோமானியப் படையில் பெண் வாசமே அடிப்பதில்லை! மருத்துவக் குழுவில் கூட பெண்டிர் எவரும் கிடையாது! போர்ப்படையில் பெண்டிருக்கு யாம் வேலை தர மாட்டோம்! வீட்டுப் போரில் பங்கெடுப்பவர் எமது பெண்டிர்! வெளிப் போரில் பங்கெடுப்பவர் ஆடவர்! வீட்டுப் போரில் பெண்ணை ஆடவர் வெல்ல முடியாது! வெளிப் போரில் பெண்டிர் எம்மை மிஞ்ச முடியாது! வீராங்கனை உனக்கு ஓர் கெல்மெட் தேவைதான்! தயார் செய்து அனுப்பச் சொல்கிறேன். உன்னைப் போல் ஒரு வீரப் பெண்ணை ரோமில் எங்கும் காண முடியாது!

    கிளியோபாத்ரா: [சிரித்துக் கொண்டு] ஆடவர் நீங்கள் வீட்டில் பெண்டிரை ஆராதித்துக் கொண்டு, அரவணைத்துக் கொண்டு, அலங்காரப் பொம்மைகளாய் நடத்திக் கொண்டு வருகிறீர்! என்னைப் போல் பெண்டிர் ரோமிலில்லை என்று கூறி மூடி மறைக்காதீர்! கையில் வாளைக் கொடுத்து, கவசத்தை மார்பில் கட்டி, குதிரையில் ஏற வாய்ப்பைக் கொடுத்தால் என்னைப் போன்ற பெண் ஏன் உருவாக மாட்டாள்?

    ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] கிளியோபாத்ரா! அது உண்மைதான்! ரோமானியப் பெண்டிர் உன் வீரக் கண்களைப் பார்த்தவுடனே பக்கத்தில் வாள் உள்ளதாவென்று அவரது கைகள் தேட ஆரம்பித்து விடும்! நான் ரோமுக்குப் போகும் போது நீ அவசியம் என்னுடன் வா! உன்னை ரோமாபுரியின் பிரதான வீதிகளில் அழைத்துச் செல்கிறேன்! யாவரும் வாழ்த்தி வரவேற்பார்!

    கிளியோபாத்ரா: [பூரிப்புடன் அருகி சீஸர் தோளைப் பற்றிக் கொண்டு] என் வயிற்றில் வளரும் உங்கள் ஆண்மகவு பிறந்து நடக்க ஆரம்பித்ததும் ரோமாபுரிக்கு வருகிறேன்! நிச்சயம் வருகிறேன்! ரோமாபுரியின் வருங்கால வாரிசு மன்னனான உங்கள் புதல்வனை, என் கரத்தில் பற்றிக் கொண்டு வருகிறேன்.

    ஜூலியஸ் சீஸர்: [மகிழ்ச்சியுடன் கிளியோபாட்ராவைத் தழுவி] ஆனந்தம் அடைகிறேன், கிளியோபாத்ரா! நீ தாயா? என் மகவுக்கு அன்னையா? மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்….. ஆனால் அது எப்படி ஆண்மகவு என்று அப்படி உறுதியாகச் சொல்கிறாய்?

    image (6)

    கிளியோபாத்ரா: [சீஸரின் பிடியிலிருந்து மெல்ல விடுவித்துக் கொண்டு] எங்கள் அரண்மனை ஜோதிட நிபுணர் மூவரும் கூறினார், எனக்குப் பிறக்கப் போவது ஆண் மகவென்று! அதை நான் நம்புகிறேன்! அவர் வான சாஸ்திரம் அறிந்தவர். அலெக்ஸாண்டர் இந்தியாவைப் படை யெடுத்து மீண்ட சமயத்தில், அங்கிருந்த வான சாஸ்திர வல்லுநர் மூலம் கிரேக்க ஞானிகள் அறிந்த கலை. வாழையடி வாழையாக அந்த வான சாஸ்திரக் கலை எகிப்திலும் பரவி வளர்ச்சி பெற்றது. [கனிவுடன்] சீஸர்! சீஸர்! சீஸர்! நான் பிறந்ததின் உன்னத பலனைப் பெறுகிறேன். நிச்சயம், நமது முதல் குழந்தை ஆண்மகவு! அந்த எதிர்பார்ப்பில் சிறிதேனும் ஐயமில்லை எனக்கு! அந்த ஆண்மகவு உங்கள் வாரிசு! ரோமாபுரியின் எதிர்கால வேந்தர் வேந்தன்! எகிப்த் நாட்டின் வருங்கால மாமன்னன்!

    ஜூலியஸ் சீஸர்: [ஆனந்தக் கண்ணீர் சொரிய] கிளியோபாத்ரா! என் கனவை நிஜமாக்கியவள் நீ! எனது மனைவி கல்பூர்ணியா பெற முடியாத ஆண்மகவை எனக்கு ஈடிணை யில்லாத அற்புதப் பரிசாக அளிக்கப் போகிறாய்! அரசனாக ஏற்றுக் கொள்ளா விட்டாலும், பிரதான பிள்ளைச் செல்வமாய், ரோமாபுரியும் என் குமரனை வரவேற்கும்! நிச்சயம் வரவேற்கும்! எனக்குக் கிடைக்கும் மதிப்பு என் எகிப்திய மகனுக்கும் கிடைக்கும்!

    [கிளியோபாத்ரா சீஸர் மார்பில் சாய்ந்து கொள்கிறாள்]

    Share
  • பகவான் ஸ்ரீ ரமணர்….!

     
    “சத்சங்கம் வாய்த்தபின் சாத்திரம் ஏதுக்கு,
    மத்யான வெய்யிலுக்கு மாருத, -உத்யா,
    வனமிருக்க கையில் விசிறி எதற்கு,
    மனம்அறுக்கும் அண்ணா மலை”…..கிரேசி மோகன்….

    Share
  • தன்வந்திரி பீடத்தில் ஜீலை 15,16ல் இருவேறு ஹோமங்கள்

    சந்தான கோபால ஹோமம் கந்தர்வராஜ ஹோமம்

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வருகிற சனிக்கிழமை 15.07.2017 காலை 10..30 மணி முதல் 1.00 மணி வரை குழந்தை பாக்கியம் பெற வேண்டி சந்தான கோபால யாகம் மற்றும் 16.07.2017 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 வரை ஆண்கள் திருமணத் தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமமும் நடைபெறுகிறது.

    சந்தான கோபால யாகம்

    பெண்களின் பிரசவத்திற்கு பல வகையான உபாயங்கள் உள்ளன. மஹா சந்தான கோபாலானை வழிப்பட்டால் மகப்பேறு கிடைக்கும் என்று நம்பிக்கை.ஸ்ரீ சந்தான கோபால ஹோமம் செய்வதன் மூலம் சுகமாக எத்தடையுமின்றி குழந்தையை பெற்றெடுக்கலாம். மேலும் அறிவு வாய்ந்த திறனுடையவர்களாக திகழ்வார்.சந்தானகோபால ஹோமம் கர்ப்ப சிக்கல்கள் கட்டுப்படுத்த கிருஷ்ணர் ஆசிகள் பெறுவதற்கான ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஹோமம் ஒரு ஆரோக்கியமான நிலையில் குழந்தை கருவுறும் முறைகள் வழங்குகிறது. இன்னும் பல நன்மைகளை பெற இந்த ஹோமத்தில் பங்குபெறலாம்.. மேலும், பெண் கருத்தடையும் பிரச்சனைகளை நீக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல், ஒரு குழந்தை பிறக்க ,நாகதோஷம் மற்றும் கர்ம பிரச்சினைகள் இருந்து மீட்க விரும்புவோர் இந்த ஹோமம் செய்யலாம் சந்தான கோபால ஹோமம் சாத்தியமில்லாத கர்ப்ப பிரச்சினைகளை சமாளிக்க ஜாதகத்தில் கிரகங்கள் எதிர்மறை விளைவுகளை அகற்ற செய்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பெற்றெடுக்கும் போது ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைக்கும் . மேலும், அது சாத்தியமான அச்சுறுத்தல்கள் இருந்து ஒரு குழந்தை பாதுகாக்க உடலில் சக்தி வாய்ந்த ஆற்றலை அனுபவிக்க உதவுகிறது. நன்மை குணங்களும், ஒரு குழந்தைக்கு வரம் அளிக்கிறது. பெற்றோர் குழந்தைகள் திறமைகளை மேம்படுத்த இந்த ஹோமம் நடைபெறுகிறது

    கந்தர்வ ராஜஹோமம்

    திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற கந்தர்வராஜ ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் பங்குபெறுபவர்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடக்க வழிவகை செய்கிறது. மேலும் பீடத்தில் சென்ற 12 ஆண்டுகளில் ஏறக்குறைய சுமார் 2500க்கும் மேற்பட்ட கந்தர்வராஜ ஹோமங்கள் நடைபெற்று எண்ணற்ற ஆண்கள் பங்கு பெற்று பயனடைந்துள்ளார்கள்.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170713 - Trivikrama- the planet of Bhakti -lr

    ‘’தூணைப் பிடித்த துரைசிங்கம், வானிலுறிப்
    பானை பிடித்தானார் பாக்கியவான்: -கூனை(முதுகை)
    மிதித்தேறிக் கண்ணன், மகாபலி ஓணத்(து)(ஓணம் மகாபலியோடு சேர்த்துக் கொண்டாடுவது மலையாள மரபு)
    உதித்தவர் ரீவைண்ட்(REWIND) உலா(மலரும் வா மன நினைவு)’’….!

    அயிகிரி நந்தினி மெட்டில்…. பெருமாளின் த்வாதச நாமத்தில் ஒன்று ‘’திரிவிக்கிரமர்….
    “அளிவரம் முக்ரமம் ஒளியரி அக்ரமம்
    உணர்குரு சுக்கிரர் கட்டளையை
    பலியிட அக்கணம் குறள்திரு விக்ரம
    வடிவினில் திக்கது தொட்டனனே
    புலனுரு வாமனம் பழகிட நீமனம்
    பெருகுவை ஆணவ கந்தையிலே
    சலணரு ணேசரின் சிசுரம ணேசரை
    சரணடை கோவண சந்நிதியில்”….
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ’’ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….!
    ———————————————————–

    170712 - eka rekha Krishna - lr

    ’’ஏக பில்வம் சிவார்ப்பணம்’’
    பில்வாஷ்டகம் படித்த பாதிப்பில் எழுதியது
    ————————————————-
    ‘’சங்குசக்ரம் சாரங்கம் தெண்டம்வாள் நந்தகி
    அங்கையேந்தும் அவதார விஷ்ணு
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(1)

    ‘’மூணுமோர் மறைகள் மீட்க மீனமாய்க் கடலுள் சென்ற
    வானவைகுந்தனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(2)

    ‘’கடல்கடைந்த போதன்று வடவரையை வழுவிடாது
    உடல்சுமந்த ஆமையே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(3)

    ’’கொம்பிலே குவலயத்தை கால்சிலம்பில் கோள்குலுங்க
    நெம்பிய வராகரே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(4)

    ‘’தானாடும் துட்டனைத் தரைமட்டம் ஆக்கிட
    தூணாடும் துரைசிங்கனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(5)

    ‘’வந்தபின் வரம்வாங்கி அந்தவான் உலகளந்த
    அந்தணன் வாமனனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(6)

    ’’ராமபரசு ராமஅரசு ராமபல ராமனாய்
    நாமமொன்று நடிப்புவேறு
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(7)

    ‘’பூபாரம் போக்கவன்று பாரதப் போர்முடித்த
    கோபாலக் கண்ணனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(8)….கிரேசி மோகன்….!

    ———————————————————————-

    Share