Blog

  • எழிலரசி கிளியோபாத்ரா -14

    அங்கம் -2 பாகம் -14

    unnamed

    “காதல் சம்பந்தப்பட்ட வரையில் பாலுணர்ச்சிகளைப் பொய்யாக எண்ணுவதைப் நானொரு மனிதப் பாபமாகக் கருதுகிறேன். அதே சமயத்தில் காதல் முழுதாயின்றிப் பின்னமாக உள்ள போது ஏற்படும் உணர்ச்சிகளை போலித்தனமானத் தவறென்று நான் மதிப்பீடு செய்கிறேன். நான் நம்புவதையே சொல்கிறேன்: காதலுற்ற போது ஒருவரை ஒருவர் முடிந்தவரை முழுமையாக நேசிக்க வேண்டும். அல்லாவிட்டால் என்ன நேர்ந்தாலும் சரி, ஒருவர் முழுக் கற்புடன் தனிமையாக வாழ வேண்டும்.”

    ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]

    “இறைவா! எப்போதும் நான் சாதிக்கக் கூடுவதை விட மிகையாக வேட்கை கொள்வதையே எனக்கு அளித்திடு.”

    மைக்கேலாஞ்சலோ [1474-1564]

    “ஒரு நாளைப் பொழுதில் கடிது உழைத்துக் காலத்தைச் செலவழித்த பிறகு அன்றிரவில் ஆழ்ந்த சுகமான தூக்கம் வருவதைப் போல், நன்னெறியுடன் வாழ்ந்த வாழ்க்கை மகிழ்ச்சியான மரணத்தை அளிக்கிறது!”

    லியானார்டோ டவின்ஸி [1452-1519]

    “என் எகிப்து நாடே! நன்கு அறிவாய் நீ!
    நின் திசைதிருப்பிப் பின்தட்டுடன் கயிற்றால்
    பிணைக்கப் பட்டு துள்ள தென் இதயம் !
    பிறகு நீதான் இழுத்துச் செல்ல வேண்டும்!”

    [கிளியோபாத்ரா]

    வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]

    நேரம், இடம்:

    அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

    நாடகப் பாத்திரங்கள்:

    ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர்.

    காட்சி அமைப்பு:

    கிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார். சீஸர் ரோமுக்கு மீள்வதை நிறுத்தி கிளியோபாத்ரா அவரைத் தன் கவர்ச்சியால் மயக்கி ஆண்மகவு பெற்றுத் தருவாய் உறுதி அளித்து மகிழ்ச்சி ஊட்டுகிறாள். வெளியே டாலமியின் படைவீரர் ரோமானியரைத் தாக்கி, அவரது கப்பல்களுக்குத் தீவைக்கிறார்! முடிவில் அலெக்ஸாண்டரியா நூலகம் எரிகிறது!

    தியோடோடஸ்: [சீஸரைக் கூர்ந்து நோக்கி] உலகப் புகழ் பெற்ற எங்கள் பெரு நூலகம் தீப்பற்றிக் கரியாகக் காரணமானீர்! உலக வரலாற்றை உருவாக்கும் மாவீரர் நீங்கள் பூர்வீக வரலாற்றை அழிப்பதில் பூரண விருப்பமா? எரிந்து போன நூல்களைப் புதிதாகப் பெற்றுத் தர வேண்டும். அல்லது நீங்கள் நட்ட ஈடு தர வேண்டும் எங்களுக்கு!

    ஜூலியஸ் சீஸர்: [சற்று சீற்றமுடன்] ரோமானியக் கப்பலில் தீவைத்தது யார்? எகிப்தியப் படைகள்! கலகம் உண்டாக்கி நூலகத் தீயை அணைக்க முயலும் ரோமானியப் படைகளைத் தடுப்பது யார்? உங்கள் பரம்பரை! தொட்டில் பிள்ளையைக் கிள்ளி விட்டு, தாலாட்ட தாயைத் தேடுகிறீரா? உன்னத நூலகத்தின் மதிப்பை அறியாதவர் உங்கள் மூட மக்கள்! அறிவு கெட்டதனமாய் ரோமானியர் மீது பழி சுமத்த வேண்டாம்! உமது அறிவும் பழுதாகி விட்டது. ஏனிப்படிச் சும்மா நின்று கொண்டு என்னுடன் வாதாடிக் கொண்டிருக்கிறீர்? மெய்யாகவே நூலகத்தைக் காக்க விரும்பினால், வெளியே போய் தீயை அணைப்பீர்!

    [தியோடோடஸ் பக்கத்தில் நிற்கும் போதினஸைப் பார்த்தவண்ணம் விரைந்து வெளியேறுகிறார்]

    போதினஸ்: தியோடோடஸ், நான் போக முடியாது உன்னுடன்! நானொரு வீட்டுக் கைதி இங்கே! வெளியே எங்கும் உன்னைப் போல் நடமாட முடியாது நான்!

    தியோடோடஸ்: [நடந்து கொண்டே] என்ன நீ ஒரு கைதியா? நூலகத்தை என்னால் முடிந்தவரைக் காக்க வேண்டும்! [போகிறார்]

    ஜூலியஸ் சீஸர்: போதினஸ் நீதான் சொல்ல வேண்டும், உலக வரலாறுகள் எரிந்தழியும் இந்த நேரத்தில்! தியோடோடஸ் மூலம் செய்தி அனுப்பு, இனிமேலும் ரோமானியரைக் கொல்ல வேண்டா மென்று! என் நெஞ்சம் கொதிக்கிறது! போரிடாமல் வாளா நிற்கும் ரோமானியரைக் கொல்லத் துணியாதீர்! உமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவாவது, எமது படையினரைக் காப்பாற்றுவீரா?

    unnamed (1)

    போதினஸ்: [கோபமாக] உமது படையினர் உயிர் உமது கையில் உள்ளது! அவரைக் கப்பலில் ஏற்றி வந்தவன் நானில்லை! ஆனால் எமது உயிரைப் போக்கத் துணிந்தால், அதற்குப் பதிலாக நீவீர் பெருமிழப்பை ஏற்க வேண்டிய திருக்கும்!

    ஜூலியஸ் சீஸர்: [சினத்துடன்] டாலமியும், நீயும் அக்கிலஸ் மூலமாக ஆயுதமற்ற என் மருமகன், ரோமானிய மாவீரன், பாம்ப்பியின் தலையை வெட்டிய பயங்கர வாதிகள்! உங்கள் குற்றத்துக்குத் தக்க தண்டனை கிடைக்கும்! அதில் ஐயமில்லை! நீவீர் நிரபராதி என்று நிரூபிக்கப்படும் வரையில் முதல்தரக் கொலையாளியாகத்தான் எண்ணப்படுவீர்!

    ரூஃபியோ: [அவசரமாய்க் குறுக்கிட்டு] ஜெனரல் சீஸர்! உங்கள் வருகை தேவைப் படுகிறது! உங்கள் முடிவு வேண்டப் படுகிறது! [துறைமுகம் வழியே எட்டிப் பார்த்து, படை வீரனிடம்] கிழக்கில் நிற்கும் சிறிய படகுகளை வெளியேற்று! நீண்ட படகுகளை என்ன செய்ய வேண்டுமென்று ஆணையிடச் சீஸர் வருவதாகச் சொல்! [சீஸரைப் பார்த்து] எங்கே அந்த எகிப்திய பயங்கர வாதிகளை? கொலைகாரர் அவர்கள்! அவர் மீது உங்களுக்குப் பரிவு மிகுந்து விட்டதா? அவருக்கு விடுதலை அளித்து விட்டீர்களா? பாம்ப்பியைக் கொன்ற அந்த பாதகரைச் சும்மா விடலாமா?

    ஜூலியஸ் சீஸர்: ரூஃபியோ! நூலகத் தீயை அணைக்க தியோடோடஸை அனுப்பி யுள்ளேன்! உலக வரலாறுகளை, காவியங்களைப் பாதுகாக்க வேண்டும். போதினஸ் சிறைக் கைதியாக வைக்கப் பட்டிருக்கிறான்! நினைவில் வைத்துக் கொள் ரூ·பியோ! எத்தனை எகிப்தியனை நாம் சிறைப் படுத்தி வைத்திருக்கிறோம்! அதே சமயத்தில் ஒவ்வோர் எகிப்தியனுக்கும், இரட்டை ரோமானியக் காவலரைச் சிறைப்படுத்தி வைத்துள்ளோம், பாதுகாக்க.

    ரூஃபியோ: சீஸர்! உங்கள் கசப்பான சுவைப் பேச்சில் ஏதோ ஒரு குள்ள நரித்தனம் தெரிகிறது எனக்கு! எகிப்தியர் மீது ஏன் உங்களுக்கு அத்தனை பரிவு? [பலகணி நோக்கிச் சென்று வெளியே எட்டிப் பார்த்து] சொல், என்ன நடக்கிறது துறைமுகத்தில்?

    ஜூலியஸ் சீஸர்: [அங்குமிங்கும் பார்த்து] என்ன? பிரிட்டானஸ் தூங்கி விட்டானா? எனது கவசத்தைக் கொண்டுவர ஏற்பாடு செய்தேன். .. பிரிட்டானஸ்! எங்கே போய் விட்டாய்? கவசத்தைக் கொண்டுவா! காத்துக் கொண்டிருக்கிறேன். … யாரங்கே வருவது?

    [அப்போது கிளியோபாத்ரா வெளியிலிருந்து சீஸரின் வாள், தலை கெல்மெட்டை பிரிட்டானஸிட மிருந்து பறித்துக் கொண்டு, ஆங்காரமாக உள்ளே நுழைகிறாள். அவளைப் பின்பற்றி பிரிட்டானஸ் தொடர்கிறான். சீஸருக்கு இடப்புறம் கிளியோபாத்ராவும், வலப்புறம் பிரிட்டானஸ¤ம் நிற்கிறார்கள்.]

    கிளியோபாத்ரா: [ஆர்வமுடன்] ரோமன் கெல்மெட்டைப் பார்க்கவே வெகு அழகு! அதில் ஆண்மை தெரிகிறது! ஆண்மையின் வல்லமை தெரிகிறது. ஆண்மையின் அதிகாரம் தெரிகிறது. அதைத் தலையில் வைத்தால் ஆடவரின் உயரம் கூடுகிறது! முக லட்சணம் பராக்கிரமத்தைக் காட்டுகிறது! உங்களின் ஆண்மைத் தோன்றத்தைப் பன்மடங்கு அதிகரிக்கிறது! எடுப்பான உங்கள் முகத்தைப் பார்த்தால், பகைவரின் தொடைகள் நடுங்கும்! வயிற்றுக் குடல் வெளியே வந்திடும்! ஆடவருக்கு அப்படி ஓர் அதிகாரக் கெல்மெட் உள்ளது போல, பெண்டிருக்கு ஏன் செய்யப் படவில்லை? எனக்கொன்று அதுபோல் வேண்டும்!

    ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] எங்கள் ரோமானியப் படையில் பெண் வாசமே அடிப்பதில்லை! மருத்துவக் குழுவில் கூட பெண்டிர் எவரும் கிடையாது! போர்ப்படையில் பெண்டிருக்கு யாம் வேலை தர மாட்டோம்! வீட்டுப் போரில் பங்கெடுப்பவர் எமது பெண்டிர்! வெளிப் போரில் பங்கெடுப்பவர் ஆடவர்! வீட்டுப் போரில் பெண்ணை ஆடவர் வெல்ல முடியாது! வெளிப் போரில் பெண்டிர் எம்மை மிஞ்ச முடியாது! வீராங்கனை உனக்கு ஓர் கெல்மெட் தேவைதான்! தயார் செய்து அனுப்பச் சொல்கிறேன். உன்னைப் போல் ஒரு வீரப் பெண்ணை ரோமில் எங்கும் காண முடியாது!

    கிளியோபாத்ரா: [சிரித்துக் கொண்டு] ஆடவர் நீங்கள் வீட்டில் பெண்டிரை ஆராதித்துக் கொண்டு, அரவணைத்துக் கொண்டு, அலங்காரப் பொம்மைகளாய் நடத்திக் கொண்டு வருகிறீர்! என்னைப் போல் பெண்டிர் ரோமிலில்லை என்று கூறி மூடி மறைக்காதீர்! கையில் வாளைக் கொடுத்து, கவசத்தை மார்பில் கட்டி, குதிரையில் ஏற வாய்ப்பைக் கொடுத்தால் என்னைப் போன்ற பெண் ஏன் உருவாக மாட்டாள்?

    ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] கிளியோபாத்ரா! அது உண்மைதான்! ரோமானியப் பெண்டிர் உன் வீரக் கண்களைப் பார்த்தவுடனே பக்கத்தில் வாள் உள்ளதா வென்று அவரது கைகள் தேட ஆரம்பித்து விடும்! நான் ரோமுக்குப் போகும் போது நீ அவசியம் என்னுடன் வா! உன்னை ரோமாபுரியின் பிரதான வீதிகளில் அழைத்துச் செல்கிறேன்! யாவரும் வாழ்த்தி வரவேற்பார்!

    கிளியோபாத்ரா: [பூரிப்புடன் அருகி சீஸர் தோளைப் பற்றிக் கொண்டு] என் வயிற்றில் வளரும் உங்கள் ஆண்மகவு பிறந்து நடக்க ஆரம்பித்ததும் ரோமாபுரிக்கு வருகிறேன்! நிச்சயம் வருகிறேன்! ரோமாபுரியின் வருங்கால வாரிசு மன்னனான உங்கள் புதல்வனை, என் கரத்தில் பற்றிக் கொண்டு வருகிறேன்.

    ஜூலியஸ் சீஸர்: [மகிழ்ச்சியுடன் கிளியோபாட்ராவைத் தழுவி] ஆனந்தம் அடைகிறேன், கிளியோபாத்ரா! நீ தாயா? என் மகவுக்கு அன்னையா? மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்….. ஆனால் அது எப்படி ஆண்மகவு என்று அப்படி உறுதியாகச் சொல்கிறாய்?

    unnamed (2)

    கிளியோபாத்ரா: [சீஸரின் பிடியிலிருந்து மெல்ல விடுவித்துக் கொண்டு] எங்கள் அரண்மனை ஜோதிட நிபுணர் மூவரும் கூறினார், எனக்குப் பிறக்கப் போவது ஆண் மகவென்று! அதை நான் நம்புகிறேன்! அவர் வான சாஸ்திரம் அறிந்தவர். அலெக்ஸாண்டர் இந்தியாவைப் படை யெடுத்து மீண்ட சமயத்தில், அங்கிருந்த வான சாஸ்திர வல்லுநர் மூலம் கிரேக்க ஞானிகள் அறிந்த கலை. வாழையடி வாழையாக அந்த வான சாஸ்திரக் கலை எகிப்திலும் பரவி வளர்ச்சி பெற்றது. [கனிவுடன்] சீஸர்! சீஸர்! சீஸர்! நான் பிறந்ததின் உன்னத பலனைப் பெறுகிறேன். நிச்சயம், நமது முதல் குழந்தை ஆண்மகவு! அந்த எதிர்பார்ப்பில் சிறிதேனும் ஐயமில்லை எனக்கு! அந்த ஆண்மகவு உங்கள் வாரிசு! ரோமாபுரியின் எதிர்கால வேந்தர் வேந்தன்! எகிப்த் நாட்டின் வருங்கால மாமன்னன்!

    ஜூலியஸ் சீஸர்: [ஆனந்தக் கண்ணீர் சொரிய] கிளியோபாத்ரா! என் கனவை நிஜமாக்கியவள் நீ! எனது மனைவி கல்பூர்ணியா பெற முடியாத ஆண்மகவை எனக்கு ஈடிணை யில்லாத அற்புதப் பரிசாக அளிக்கப் போகிறாய்! அரசனாக ஏற்றுக் கொள்ளா விட்டாலும், பிரதான பிள்ளைச் செல்வமாய், ரோமாபுரியும் என் குமரனை வரவேற்கும்! நிச்சயம் வரவேற்கும்! எனக்குக் கிடைக்கும் மதிப்பு என் எகிப்திய மகனுக்கும் கிடைக்கும்!

    [கிளியோபாத்ரா சீஸர் மார்பில் சாய்ந்து கொள்கிறாள்]

    ++++++++++++++++++++

    Share
  • நில்லடா வெல்லடா நீ

     

    மு. மகாலிங்கம்.

    முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு

    பாரதியார் பல்கலைக்கழகம்

    கோயம்புத்தூர்-46

     

    போர்க்களம் வந்து போர்செய் விடியலுக்கு

    போரா எதற்கு போடா விடியுமடா

    அந்தணன் வந்தான் அகிலம் தனைப்படைத்தான்

    அந்நா ளொடுஇந்நாள் அந்தணன்தான் ஆண்டவன்

    பிந்தயவன் வந்தான் பிறிதொறு விதிசெய்தான்

    வந்தவனும் முன்னவனும் வருவானும் பின்னவனும்

    இன்பமாய் வாழ்கின்றார் இந்நாட்டில் எம்வீட்டில்

    துன்பம் துயரம் துடைப்பது யாரோ

    வலிமை உனக்கு வலியா தமிழா

    வலிமை வலியல்ல வாளடா வாழடா

    செத்தது  போதும் செருக்களம் நோக்கிவாடா

    வந்து வலிவாளால் வீழ்த்தடா- பாயும்

    புலியாய் மதகரியாய் பல்லரியாய் வீர்பரியாய்

    நில்லடா வெல்லடா நீ.

    Share
  • அருமருந்தே காளியம்மா !

     

             ( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா )

     

    எண்ணமெலாம் உன்னிடத்தில் எங்களது காளியம்மா

    மண்ணிலே நல்லவண்ணம் வாழுதற்குத் துணையானாய்

    ( எண்ணமெலாம் )

     

    கண்ணாலே உனைப்பார்த்தால் கவலையெல்லாம் தீருமம்மா

    கண்மணியே காளியம்மா காலடியைப் பற்றுகின்றோம்

    ( எண்ணமெல்லாம்)

     

    தீராத காதலுடன் தினமும்வரும் அடியவரை

    நோகாமல் காத்திடுவாய் நுண்ணறிவின் இருப்பிடமே

    ஆராதனை செய்து அனுதினமும் பாடுகின்றோம்

    நேராக எமைபார்த்து நின்னருளைத் தருவாய

     

    மருதமர நிழலினிலே வாழுகின்ற தாயேநீ

    உரிமையுடன் வருமடியார் உள்ளமதில் உறைந்திடம்மா

    வருவினைகள் எமையணுகா வகையினிலே காத்திடுவாய்

    அருமருந்தே காளியம்மா அனைவருமே தொழுகின்றோம்

     

    ( எண்ணமெலாம் )

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • அன்பின் பரிமாணம்

     

    ரா. பார்த்தசாரதி

     

    மண்ணின் காதல்,  மழை துளியே

    விண்ணின் காதல், அழகிய மதியே

    மலையின் காதல்,  மேகம்  அன்றோ

    பூவின் காதல், வீசும்  தென்றலன்றோ !

     

    காதல்,  இது இல்லாத இடம்  ஏது ?

    காகிதமும் காதலிக்கும்,தன் மேல் மேவும் எழுதுகோலை

    காதல் ஒன்றையொன்று சார்ந்து நிற்குமே

    ஊருக்குள்  அவை அடையாளம் காட்டுமே !

     

    காதல் என்பது  அன்பின் பரிமாணமன்றோ!

    இரு இதயங்களின்   சங்கமம் அன்றோ

    காதல் என்பது இரு விழிகளின்  நேசமே

    அதுவே  அவர்களின் காதல் தேசமே !

     

    உன்னை என் உள்ளத்தில் அள்ளித் தெளித்தேன்

    இரவில் கனவில் விளையாடி, உறவில் கலந்தேன்

    உன்னிடத்தில் என் நினைவு,என்னிடத்தில் உன் நினைவு

    நம்  அன்பின்  அளவிற்கு  எல்லையில்லா  முடிவு !

     

    இதுதான் காதலோ? கண்கள்  இரண்டும் சொந்தம்  கொண்டாடுதோ

    குறைகள் இருந்தாலும், ஏற்றுக்கொள்ளும் உண்மை காதலோ

    அன்பு குறையாமல்  மாற்றம்  காணாத  இன்ப காதலோ

    இரு பார்வைகள் சேர்ந்தும்,  வாய் பேச முடியாத  காதலோ !

     

     

     

     

    Share
  • வாழ்க்கை என்னும் பாதையில்

     

    . பிரகாஷ்

    உவிப்பேராசிரியர்

    தமிழ்த்துறை

    நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)

    திருமலையம்பாளையம் – 105

     

    கடந்தோம் கடந்தோம் காலத்தைக் கடந்தோம்!                            

    கலந்தோம் கலந்தோம் கற்பனை என்ற களத்தில் ந்தோம்!

    இணைந்தோம் இணைந்தோம் காதல் என்ற இணைப்பில் இணைந்தோம்!

    வரைந்தோம் வரைந்தோம் நம் உள்ளத்திலிருந்த காவியத்தை வரைந்தோம்!

    அளந்தோம் அளந்தோம் அன்பினை அளந்தோம்!

    தளர்ந்தோம் தளர்ந்தோம் உடலால் தளர்ந்தோம்!

    வளர்ந்தோம் வளர்ந்தோம் மனதால் வளர்ந்தோம்!

    கூடினோம் கூடினோம் கூடலில் புணர்ந்தோம்!

    புணர்ந்தோம் புணர்ந்தோம் !தாய்தந்தையாகத் தொடர்ந்தோம்!

    இனிதாய் வாழ்ந்தோம்!

    வாழ்ந்தக் காலங்களில் விட்டுகொடுத்தே இருவர் ஒன்றானோம்!

    உள்ளமோ ஒன்றே! நம் உடல் மட்டும் இரண்டே!

    உயிரும் நமக்குள் ஒன்றனல் நன்றே!

    விதியின் வழிச் சென்றே இலக்கினை அடைந்தோம்!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170720 - Narayana Akhilaguro-lr
    170720 – Narayana Akhilaguro-lr

    ”பள்ள மதைநோக்கிப் பாய்கின்ற வெள்ளமென
    கொள்ளிடத் தானிருகால் கொள்கையாய் -உள்ளமே
    கள்ளமில்லா நம்பிக்கை கண்மூடக் கும்பிடு
    வள்ளலென மாறும்காண் வாழ்வு”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கேசவ் , தாமததிற்கு மன்னிக்கவும்….மதுரை சென்றிருந்தேன்….!
    “டயலாவித் அர்ஜுனர் டாப்கிளாஸ் கேசவ் -பயலேக்(payaleg) ஆகி பயந்தும் , -கயலாக –

    ஆமைவ ராகசிங்கம் அந்தணர்(வாமனர்) மூணுவித –

    ராமனும் கண்ணன் ரதம் “….கிரேசி மோகன் ….!

    Share
  • பீட்டில்ஸ் இசைக் கீதங்கள் – இந்தியா என் இல்லம் -1

    ஆங்கில மூலம் : ஜான் லென்னன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    [ பீட்டில்ஸ் பாடகர் குழு 1968 இல் இந்தியாவுக்கு வருகை தந்து ரிஷிகேஷத்தில் மகரிஷி மகேஷ் யோகியிடம் ஞானத் தியான முறைகளைக் கற்றபின் ஜான் லென்னன் எழுதிய இந்திய கீதமிது ]
    unnamed

    ஈர்த்துக்கொள் என்னை உன் நெஞ்சிக்குள்!
    பூர்வ மர்மங்களை புலப்படுத் தெனக்கு!
    விடை தேடுகிறேன் நானோர் வினாவுக்கு!
    எங்கோ உள்ள தென்னுள் ளத்தின் ஆழத்தில்!
    இங்கே காண இயலாதென அறிவேன்!
    முன்னமே உள்ள தென்னுடை மனதிலே!
    என்னிதயப் போக்கிலே போக வேண்டும்,
    எங்கெலாம் எனை இழுத்துச் செல்லினும்!
    என்னிதயப் போக்கிலே போக வேண்டும்,
    எப்போது நான் அழைக்கப் படினும்!
    என்னிதயப் போக்கிலே போக வேண்டும்,
    இல்லம் நோக்கி ஏகுது என்னிதயம்!
    ஓம்.

    இந்தியாவே ! இந்தியாவே !
    என் வேண்டு கோளைக் கேளாய் !
    பொறுமை யோடுன் திருவடியில் கிடந்துளேன்.
    ஆற்றங் கரையில் காத்துளேன். ஆயினும்
    என் நினைவில், எங்கோ இங்கி லாந்தில்
    என்னிதயம் தன்னை இழந்து விட்டேன்,
    விட்டுச் சென்ற என் காதலி யோடு,
    எங்கெலாம் எனை யிழுத்துச் சென்றாலும்,
    என்னிதயப் போக்கிலே போக வேண்டும்!
    எப்போது நான் அழைக்கப் பட்டாலும்,
    என்னிதயப் போக்கிலே போக வேண்டும்!
    இல்லம் நோக்கி ஏகுது என்னிதயம்,
    இந்தியாவை நோக்கி!

    +++++++++++++++++

    https://youtu.be/Ts6YFtJJ_Ok [India, My India Song]

    India, India was written during the Beatles’ visit to India in 1968 while I Don’t Want to Lose You was provided by Yoko Ono to complete The Beatles Anthology in 1990, but an electronic glitch made it impossible to include the song.

    Many of the songs are personal and self-referencing; for example, “Dear Prudence” was written about actress Mia Farrow’s sister, Prudence, who attended a Transcendental Meditation course in Rishikesh, India, at the same time as The Beatles. Often times she stayed in her room, engaged in Transcendental Meditation. Most of the songs on The Beatles were conceived during the group’s visit to India in the spring of 1968. “Sexy Sadie” is about Maharishi Mahesh Yogi, who led the Transcendental Meditation movement.

    +++++++++++++++++++
    India, My India
    John Lennon, The Beatles’s Singer

    Take me to your heart
    Reveal your ancient mysteries to me
    I’m searching for an answer
    That’s somewhere deep inside
    I know I’ll never find it here
    It’s already in my mind
    I’ve got to follow my heart
    Wherever it takes me
    I’ve got to follow my heart
    Whenever it calls to me
    I’ve got to follow my heart
    And my heart is going home
    Om

    India, India
    Listen to my plea
    I sit here at your feet so patiently
    I’m waiting by the river
    But somewhere in my mind
    I left my heart in England
    With the girl I left behind
    I’ve got to follow my heart
    Wherever it takes me
    I’ve got to follow my heart
    Whenever it calls to me
    I’ve got to follow my heart
    And my heart is going home
    India ah.

    +++++++++++++++++++
    jayabarathans@gmail.com [S. Jayabarathan (July 17, 2017)]

    Share
  • முத்தமிழ் வித்தகர் !

    எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா 

    unnamed (4)
    மட்டுநகர் வாவியிலே மீன்கள் பாடும்
    மகளிரது தாலாட்டில் தமிழ் மணக்கும்
    கட்டளகர் வாயிலெல்லாம் கவி பிறக்கும்
    களனிகளில் நெற்பயிர்கள் களித்து நிற்கும்
    இட்டமுடன் கமுகு தென்னை ஓங்கிநிற்கும்
    இசைபாடிக் குயில்களெங்கும் மயக்கி நிற்கும்
    எத்திக்கும் இயற்கைவளம் தன்னைப் பெற்ற
    எழில் பெற்ற இடமே கிழக்கிலங்கையாகும் !
    ஈழத்தின் கிழக்காக இருக்கின்ற காரைதீவில்
    ஞானமாய் வந்துதித்தார் நம்துறவி விபுலாநந்தர்
    துறவியாய் ஆனாலும் தூயதமிழ் துறக்காமல்
    அமைதியாய் பணிசெய்து அவருயர்ந்தார் இமயமென !

    விஞ்ஞானம் படித்தாலும் விரும்பியே தமிழ்படித்தார்
    நல்ஞானம் அவரிடத்தில் நயமோடு இணைந்ததுவே
    சொல்ஞானம் சுவைஞானம் எல்லாமும் சேர்ந்ததனால்
    செல்லுமிட மெல்லாமே சிறப்பவர்க்குச் சேர்ந்தனவே !

    ஈழத்தில் பிறந்தாலும் இந்தியா அவர்வாழ்வின்
    கோலத்தை மாற்றியதால் குன்றேறி அவர்நின்றார்
    பண்டிதராயிருந்த அவர் பல்கலைக்கழகம் தன்னில்
    பலபேரின் பாராட்டால் பதவியிலே உயர்ந்துநின்றார் !

    பண்டிதரால் வெறுக்கப்பட்ட பாரதியார் படைப்புக்களை
    பண்டிதராய் இருந்தவரே பலபேரும் அறியச்செய்தார்
    பல்கலைக்கழம் தன்னில் பாரதிக்கு இடம்கொடுத்து
    பாடமாய் படிப்பித்தார் பண்பாளர் விபுலானந்தர் !
    பேராசிரிராய் பெருமையுடன் பணி ஆற்றி
    ஆராத காதலுடன் அவர்தமிழை வளர்த்தாரே
    தீராத பசியோடு தினமுமவர் தமிழ்கற்று
    யாருமே தொட்டிரா யாழ்தொட்டு நூல்செய்தார் !

    பலமொழிகள் தெரிந்தாலும் பற்றெல்லாம் தமிழ்மீது
    அவர்கொண்டு இருந்ததனால் அறிஞரெலாம் போற்றினரே
    இயலிசை நாடகத்துள் என்றுமவர் இணைந்ததனால்
    முத்தமிழ் வித்தகராய் எத்திக்கும் திகழ்ந்தாரே !

    துறவியாய் மாறினாலும் தமிழினைத் துறக்கவொண்ணா
    அறிவுசால் ஆசானாகி அருந்தமிழ் வளர்த்தே நின்றார்
    துறைபல கற்றுணர்ந்து தூயநற் பணிகள் ஆற்றி
    கறையிலா நெஞ்சங்கொண்டார் கருநிற அண்ணல்தாமும் !

    ஆசானாய் அதிபராகி அதியுயர் பதவிபெற்று
    மாசறு குணத்தனாக மாண்புறு மனத்தைப் பெற்று
    பாசமாம் வினையைப் போக்கும் பக்குவகுருவமாகி
    தேசமே போற்றும்வண்ணம் திகழ்ந்தனர் விபுலாநந்தர் !

    Share
  • தமிழ் இலக்கியத்தில் பண்பாட்டுப் பதிவியல்

    . பூங்கோதை

    முனைவர்பட்ட ஆய்வாளர்

    தமிழ்த்துறை

    நேரு கலை அறிவியல் கல்லூரி

    திருமலையம்பாளையம்

    கோயம்புத்தூர் – 105

     

    இனிமையும்,  பழமையும்,  சிறப்பும்  வாய்ந்த  தமிழ்மொழியில்  இலக்கியங்கள் சிறந்த  இடத்தை  வகிக்கின்றன.   இந்த  இலக்கியங்கள்  மூவேந்தரையும், முத்தமிழையும்  கொண்டு  முறையான  தகுதி  பெற்றது.   இதில்  சங்க  இலக்கியம்,  காப்பிய  இலக்கியம்  என்று  பலவகை  இருப்பினும்  இக்கால  இலக்கியம் தனக்கென்று ஒரு தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது.

    இக்கால இலக்கியம் :

    இக்கால இலக்கியமானது சமுதாயச் சீர்திருத்தத்தை கொண்டு வருவதுமாய், சமுதாயச்  சீர்கேடுகளை  களைவதுமாக  அமைந்து,  மனிதனின்  வாழ்க்கை முறையோடு  பின்னிப்பினைந்து ஓர் குறிக்கோளோடு  படிப்பவரின்  ஆர்வத்தை தூண்டுவதாக  அமைகின்றது. அதிலும்  சிறுகதைகள்  வாழ்க்கை  நெறிகளை வகுத்துக்காட்டி தனி இடம் பெற்றுள்ளன.

    பண்பாடு

    ஒரு  சமுதாயத்தில்  வாழும்  மக்களின்  வாழக்கை  அமைப்பு  முறையின் வெளிப்பாடே  பண்பாடாகிறது.   வாழ்க்கை  அமைப்பு  என்பது  அச்சமுதாயத்தின் பழக்கவழக்கங்கள்,  நம்பிக்கைகள்,  மரபுகள்,  கலைகள்,  இலக்கியங்கள் முதலியவற்றில்  அறியப்படுவது.  சுருங்கக்கூறின்  பண்பாடென்பது  ஒரு தலைமுறையினர்  சென்ற  தலைமுறையினரிடம்  பெற்றுக்கொண்ட  வாழ்க்கை முறையாகும்.

    பண்பாடு  என்பது  ஒரு  குழுவினரின்  வாழ்க்கை  முறையாகும்.  அது  மொழி மற்றும் பாவனைகள் மூலம் ஒரு சந்ததியினர் பிறிதொரு சந்ததிக்கு விட்டுச்செல்கின்ற, பகிர்ந்து  கொள்ளப்படும்  கருத்துக்களின்  தொகுதிகள்  மற்றும்  தேறிய நடத்தைகளின்  மாதிரிகள்.  நாவல்கள்  வாழ்க்கை  நெறிகளையும்,  பரிமாறிக் கொள்ளும் எண்ணங்களையும் அழகாய் எடுத்து இயம்புகிறது.

    பண்பாட்டுக் கூறுகள்

    எஸ்.ராமகிருஷ்ணன்  அவர்களின்   “என்ன  சொல்கிறாய்  சுடரே”  என்ற சிறுகதை  தொகுப்பில்  கலாச்சாரம்,  பண்பாடு,  இல்வாழ்க்கை,  விருந்தோம்பல், தாய்மை,  ஒற்றுமை,  நட்பு,  முயற்சி  போன்ற  கூறுகள்  பாத்திரங்கள்  வழியே இடம்பெற்று மனதில் நீங்காவண்ணம் சிறந்து விளங்குவதாய் அமைந்துள்ளது.

    ல்வாழ்க்கை

    (“அன்பும்  அறனும்  உடைத்தாயின்  இல்வாழ்க்கைப்  பண்பும்  பயனும்  அது”)கணவன்,  மனைவி  இடையே  அன்பும்,  பிணைப்பும்  அறநெறியில்  ஒழுகுதலும் இருக்குமாயின்  அந்த  வாழ்க்கையின்  பண்பும்,  பயனும்  அதுவே  என்ற  வள்ளுவர் வாக்கிற்கிணங்க,  எஸ்.  ராமகிருஷ்ணன்  அவர்கள்  இரவு  நடை, காகித  வளையம் என்ற இருகதைத் தொகுப்பில் அழகாய் சித்தரிக்கின்றார்.

    இரவுநடை : (பாத்திரங்கள் முரளி, அபர்ணா)

    முரளி,  அபர்ணா  இருவரும்  27  வருடங்கள்  தனது  வாழ்க்கைப்  பயணத்தை தொடர்ந்தார்கள்.  மகள்,  மகன்  என  இருவரையும்  தகுதிபெற்ற  நிலையில்  கல்வி, வேலைவாய்ப்பு,  திருமணம்  என்று  அனைத்தையும்  நிறைவு  செய்துவிட்டுத் தனிமையை  அனுபவிக்கின்றனர்.   ஒரு  நாள்  இரவு  அபர்ணா  நடைபயிற்சிப்  போக வேண்டும்  என்று  முரளியிடம்  கேட்க  இரவு  11.30  மணி  என்று  கூறியும்  போகலாம் என்ற  அபர்ணாவின்  ஆசையை  நிறைவேற்றும்  வண்ணமாய்  முரளி  அமைகின்றான்.

    அப்போது இருவரும் தன் 27 வருடங்களுக்கு முன்பு பார்த்த பல இடங்களை காணும்  போது, அவை  பெரிதும்  மாறுபட்ட  நிலையில்  உள்ளன.  அபர்ணா, முரளியை  பார்த்து  இந்த  நாள்  27  வருடங்களுக்கு  முன்பு  உங்களுக்கு  ஞாபகம் இருக்கிறதா  எனக்  கேட்க  அதே  பாசத்துடனும்,  நேசத்துடனும்  அந்த  நாளை மறக்க முடியமா என்று கூறி இருவரும் ஆனந்தப்பட்டனர்.

    இவ்வாறாகப்  பேசி  கடைசியில்  வீட்டை  அடைந்தனர்.  அவள்  கால்கடுத்த நிலையில்  அமர  தேநீர்  அருந்துகிறாயா  என்று  கேட்டு  அதனை  எடுத்து வருவதற்குள்  அவள்  உறங்கிவிட்டாள்.  அவளுக்கு  போர்வை  அணிந்துவிட்டு பக்கத்திலே உட்கார்ந்த படியாக முரளி அவளை இரசிக்கின்றான்.

    ஐங்குறுநூலில் இல்லறம் சிறக்க கூறிய வழி போல,

    வாழி அதன், வாழி அவனி

    பால் பல ஊறுக! பகடுபல சிறக்க

    வாழி ஆதன், வாழி அவனி

    பகைவர் புல் அர்க! பார்ப்போர் ஓதுக!

    வாழி ஆதன், வாழி அவனி

    பசி இல் லாகுக! பணிசேண் நீங்குக!

    வாழி ஆதன்! வாழி அவனி

    அரசுமுறை செய்க! களவு இல்லாகுக!

     (ஐங்குறுநூறு, வேட்கைபத்து:3)

    என்ற வரிகளுக்கு இணங்க பசி,  பிணி  ஆகியவை  இல்லாமல்  இருக்கும்  இடத்தில்  இல்லறம்  சிறக்கும், மன்னவன் காவல் இன்றியமையாதது என்பதை எண்ணுகிறான் முரளி.

    எத்தனை  காலங்கள்  கடந்தாலும்  கணவன்  மனைவி  இடையே  உள்ள பாசமும்,  பந்தமும்  மாறாது.  உலக  வாழ்க்கையில்  எத்தனை  மாற்றங்கள் ஏற்பட்டாலும்  இல்வாழ்க்கை  இனிமையையே  பயக்கும்  என்று  எஸ்.  ராமகிருஷ்ணனின் கதைகள் அழகாய் நம்மை நம் வாழ்க்கையை த் திரும்பிப் பார்க்க  வைக்கின்றது.

    காகித வளையம் : (பாத்திரங்கள்- கேசவன், வேணி)

     “ஒருவனுக்கு ஒருத்தி”  என்ற வரிகளுக்கு ஏற்பவும்பெற்றான்  பெறின்பெறுவர்  பெண்டிர்  பெருஞ்சிறப்புப்  புத்தேளிர்  வாழும் உலகு”  (குறள் 58) என்ற குறளில் தம் கணவனை போற்றிக் கடமை செய்யும் மகளிர் பெரும் சிறப்புடைய புத்தேளிர் வாழும் மேலுக வாழ்வினைப் பெறுவர் என்ற வள்ளுவர்  வாக்கிற்கிணங்க  இந்த  கதையில்  வரும்  கதாபாத்திரம்  அமைவதாக எஸ்.ராமகிருஷ்ணன் விளக்குகிறார்.

    காகித வளையம்  என்ற  கதைத்  தொகுப்பில்  கேசவன்,  வேணி  இருவரும் பரஸ்பர  அன்புடன்  ஒருவரை  ஒருவர்  விட்டுப்பிரியாது  அவனை  அவளுக்குள்ளும் அவளை  அவனுக்குள்ளும்  இரு  இதயங்கள்  கலந்த  ஒரு  உயிராக  வாழ்ந்து வருகின்றனர்.

    நீர் இன்று அமையா உலகம் போலத்

    தம் இன்று அமையாராம்! (நற்றினை1)

    – என்ற வரிகளுக்கு ஏற்ப தண்ணீர் இல்லாமல் உலகம் இல்லை அதுபோல நீ இல்லாமல் நான்  இல்லை  என்று  இருவரும்  இருந்த  நிலையில்  இழக்க  முடியாத பேரிழப்பாக வேணி,  கேசவனை  விட்டு  பிரியும்  நிலை  உருவாகின்றது.   அவள்  இருந்த காலத்தில்  கல்லானாலும்  கணவன்,  புல்லானாலும்  புருஷன்  என்றும்  கணவனையே “கொழுநன்  தொழுது  எழுபவளாகவும்”  வாழ்ந்தாள்.  அவளுடைய அரவணைப்பு அவனை விடாது வருத்திக் கொன்றது. கேசவன்  அந்த  அணைப்புக்காக  ஏங்குகிறான்  பலப்  பெண்களை  காண்கிறான் இருந்தாலும் அவன் மனம் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

    கடற்கரைக்குச் சென்று கடல்  அலையையே  வேணியாக  எண்ணி  அதனுடனே  தன்  சங்கடங்களைப் பகிறுகிறான்.  பின்பு  பெண்மை  மதிக்கப்பட  வேண்டும்,  பெண்ணியம்  பேசப்பட வேண்டும்,  பெண்கள்  போற்றப்பட  வேண்டும்,  அவர்கள்  தங்களை  நமக்காக அற்பணிப்பது நமக்கு தரும் தண்டனை! அதை என்னாளும் ஏற்று அதற்கு துரோகம் செய்யாது வாழ வேண்டும் என்று நினைத்து இது அவளுக்கும், எனக்கும் இடையில் இருந்த பரிபாஷை தானோ என்று கூற விளைகிறான். இவ்வாறாக இக்கதையில்  எஸ்.ராமகிருஷ்ணன்  சமுதாயத்தில்    கணவன்  –  மனைவி  சண்டை, விவாகரத்து  இவற்றை விட்டு  வெளியே  வரவேண்டும்.  இல்வாழ்க்கை  மிகவும்  இனிமையானது  அதனை இனிமையாய்  நுகர்ந்து  அனுபவிக்க  வேண்டும்  என்ற  கருத்துக்களை  அழகாகக்  கூறியிருக்கிறார்.

    விருந்தோம்பல் கலாச்சாரம் :

    “அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

    நல்விருந்து  ஓம்புவான்  இல்”  (குறள்  84)

     என்ற  குறளில்  முகமலர்சியோடு நல்ல விருந்தினரைப் போற்றுகின்றவள் உடைய வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து வாழ்வாள்  என்ற  வாக்கிற்கிணங்க  எஸ்.  ராமகிருஷணன்  அவர்களின்   “அதிகம் இனிப்பு”   என்ற கதை  அமைந்துள்ளது.

    அதிகம் இனிப்பு (பாத்திரங்கள் ஷியாமளா, அருட்செல்வன், கன்னையன்)

    ஷியாமளா,  அருட்செல்வன்  இருவரும்  வீடுகட்ட  நிலம்  வாங்க  வேண்டும் என்ற  எண்ணத்தில்  சிறுக,  சிறுக  பணம்  சேர்க்கின்றனர்.   அருட்செல்வன் கல்லூரியில்  உதவி  பேராசிரியராகவும்,  ஷியாமளா  இன்ஷீரன்ஸ் கம்பெனியில் பணிபுரிபவராகவும் இருக்கின்றனர். கன்னையா தனது நண்பன் ஸ்டீபன் உதவியின் மூலம்  அருள்  செல்வத்தின்  தொலைபேசி  எண்ணை  பெற்றுக்  கொண்டான்.  பின்பு கன்னையா  அவரிடம்  தொடர்பு  கொண்டு  பேசுகையில்  அருட்செல்வம்  அந்த இடத்தினை  வாங்க  ஒப்புதல்  கூறி  நாளை  நேரில்  வரும்படியும்  கூற,  அடுத்த  நாள் கன்னையா  அவர்களை  சந்திக்கையில்  இருவரும்  கண்பார்வையற்றவர்  என்பதை உணர்கிறான்.

    இருப்பினும் பணத்தின் மோகம் காரணமாக அவர்களை ஏமாற்ற ஒரு பொய்யான  பத்திரத்தைச்  செய்து  அவர்களுக்கு  கொடுத்து,  நாளை  முன்தொகையைச் செலுத்தலாம்  என்று கூறி  ஷியாமளா  வீட்டிற்கு  மூவரும்  திரும்புகின்றனர்.  வீட்டிற்கு வந்தவர்களை நன்று கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்

    “ திருவிருந்த தண்டலையார் வளநாட்டில்

    இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர்

    ஒருவிருந்தா கிலும் இன்றி உண்டபகல்

    பகலாமோ உறவாய் வந்த

    பெருவிருந்துக்கு உபசாரம் செய்தனுப்பி

    இன்னும் எங்கே பெரியோர் என்று

    வருவிருந்தோடு உண்பது அல்லால் விருந்து இல்லாது

    உணும் சோறு மருந்து தானே!” (தண்டலையார் சதகம் :9)

    என்ற  தண்டலையார்  பாட்டிற்கிணங்க  வீட்டிற்கு  வந்தவர்க்கு  உணவளிக்காது  தாம் உண்பது  சரியல்ல.  இவ்வாறு  இருப்பதே  சிறந்த  இல்வாழ்க்கை  என்ற கருத்திற்கேற்ப அவள் கன்னையாவுக்கு இலைப்போட்டு பரிமாறி அனுப்புகிறாள். இந்த  விருந்தோம்பல்  பண்பு  அவர்களை  ஏமாற்ற  வேண்டும்  என்ற  எண்ணம் கூட மாறி அவர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் கன்னையாவிற்கு எழுகிறது. அடுத்த நாள் அது வேறொருவற்கு கிரையம் ஆகிவிட்டதாகக் கூறி அவர்களின் முன்  தொகையைத்  திருப்பிக்  கொடுத்து  தங்கையை போல  எண்ணுகிறேன் என்று பாச உணர்வினையும் கன்னையா என்ற பாத்திரத்தின் மூலமாக எஸ்.ராமகிருஷ்ணன் விளக்குகிறார்.

    கலாச்சாரம் :

    “நல்விருந்து ஓம்பலின் நட்டாளம் வைகலும்

    இல்புறம் செய்தலன் ஈன்றதாய் தொல்குடியின்

    மக்கள் பெறலின் மனைவி கிழத்தி இம்மூன்றும்

    கற்புடையாள்  பூண்டகடன்”  (திரிகடுகம்  :  3) 

    என்று  கூறும்  பாடலுக்கு  ஏற்ப ஒரு பெண் தன் கணவனுக்குத் தாயாக, மனைவியாக, தோழியாக விளங்கவேண்டும் என்னும்  நிலையோடு  விளங்குவதாக  இந்த  கதாபாத்திரத்தின்  மூலம் எஸ்.ராமகிருஷ்ணன் கூறுகிறார்.

    ஷியாமளாவும்,  அருட்செல்வமும்  கண்பார்வை  அற்றவர்கள்  இருந்தாலும் ஒருவரை  ஒருவர்  புரிந்து  கலாச்சாரத்தோடும்,  மானம்,  மரியாதை  இவற்றோடும் பல்வேறு  மக்களின்  முன்னிலையில்  தனி  இடத்தைப்  பெற்று  வாழவேண்டும்  என்ற எண்ணத்தின்  அடிப்படையில்  வாழ்கின்றனர்.   இதன்  மூலம்  எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள்  சமுதாயத்திற்கு  ஊனம்  ஒரு  குறையில்லை  என்பதையும்  , அவர்கள்  நல்ல  கலாச்சாரத்தோடு  வாழ்வதையும் உணர்த்துவதோடு  அதை  நாமும்  கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தைப் பதிவு செய்வதாக இக்கதையை அமைத்திருக்கிறார்.

    தாய்மையும், முயற்சியும் :

    “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை

    சான்றோன்  எனக்கேட்ட  தாய்”

     (குறள்  69)  என்ற  குறளில்  தன்  மகன் சான்றோன்  என்று  கேட்கும்  போது  அவனை  பேறுபெற்ற  போது  அடைந்த இன்பத்தை  விட  பேரின்பம்  அடைவதாக  தாய்  எண்ணுகிறாள்.   என்ற வள்ளுவர்வாக்கிற்கிணங்க  எஸ்.ராமகிருஷ்ணனின்  “தனிமை  வெளிச்சம்” அமைகின்றது. தாய் சான்றோன் என்று தன்னை கேட்க வேண்டும் என்ற நிலையில் படித்து வேலை  தேடிஅலையும்  இளைஞன்  அடுக்குமாடி  குடியிருப்பில்  தங்கி  வசித்து வந்தான்.  ஒரு  நாள்  தனது  அறையில்  பல்பு  எரியவில்லை  என்று  குடியிருப்பு முதலாளியிடம் கூற விளைகையில் கீழ் அறையில் இருக்கும் 40 வாட்ஸ் பல்பினை எடுத்துப்  போட்டுக்  கொள்ளும்படி  கூறியிருக்கிறார்.   அந்த  பல்பானது இவனது அறைக்கு  வந்தவுடன்  ஒரு  பெண்  குரல்  கொண்டு  பேசுகிறது.   இழந்த  தாய் தன்னுடன்  மீண்டும்  வந்து  சேர்ந்ததாக  எண்ணி  மிகவும்  சந்தோ ஷப்பட்டு  முயற்சி எடுத்து வேலைதேட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது.

    “முயற்சி  திருவினையாக்கும்  என்றும்,  முடியாது  என்ற  முட்டுக்கட்டையை முயற்சி என்ற கோடாறியால் தகர்த்தால் வெற்றி என்னும் விறகு கிடைக்கும் என்ற வரிகளை  மனதில்  கொண்டும்,  வேலை  தேடி  அலைந்து  ஒரு  நல்ல  வேலையைப் பெறுகிறான்.

    கடமையைக் கண்ணாய் கொண்டால்

    காலனும் கைகட்டி சேவகம் செய்யும்

    முயற்சியை மூச்சாய் கொண்டால்

    மலைமுகடு கூட காலடியில் படியாய் மாறும்!

    என்ற   எண்ணத்திற்கு  ஏற்ப  கடமையைச்  செய்கிறான்.  தன்  வருமானத்தினைப் பெருக்குகிறான்.   இந்தக்  கதாபாத்திரம்   முயற்சி  இருந்தால்  மட்டுமே  தோல்வியை  வெற்றியாய்  மாற்ற  முடியும்  என்ற கருத்தினைச் சமுதாயத்திற்கு எடுத்து இயம்புவதாக அமைகின்றது. அந்த  இளைஞன்  முதல்  சம்பளத்தினை  அந்த  பல்பின்  முன்பு  நீட்டுகிறான். அந்த தாய் குரல் அதிக சந்தோஷத்துடன், இது உன் பணம் முறையாய் அனுபவி என்று  கூறுகிறது.   பின்பு  வசதிகள்  பெருக  அந்தக்  குடியிருப்பு  அவனுக்குப் போதுமானதாக இல்லை. பின்பு ஒரு தனிவீட்டிற்கு செல்கிறான். அங்கு அவன் அந்த பல்பினை  எடுத்துக்  கொண்டு  போடுகிறான்.  இங்கு  இருந்தது  போல  அது பேசவில்லை.  ஆத்திரம்  கொள்கிறான்.  பின்பு  கோபத்தில்  அதனைப்  போட்டு உடைக்கின்றான்  அப்போது  அது,  “காலில்  கண்ணாடிகள்  குத்தப்  போகின்றன பார்த்து”  என்று  கூறியதும்,  அவன்  இழந்த  தாயை  எண்ணி  மிகவும் வேதனையுறுகிறான்.

    எஸ்.  ராமகிருஷ்ணனின் இக்கதை  தாய்  –  மகன்  இடையே  உள்ள  உறவினையும், தாய்மை பண்பினையும் அழகாய் கூறியதோடு“வீட்டின் பெயரோ அன்னை இல்லம் அன்னை   இருப்பதோ  அனாதை  இல்லம்  “ என்று  வாழும்  இன்றைய சமுதாயத்தினருக்கு  தாய்மை  என்பது  பொக்கிஷம்,  உனது  உயிர்  அதை என்னாளும் கலங்கப்படுத்தாதே என்று கூறுவதாக அமைகிறது. தாய்மையிடமே  அன்பு,  பாசம்,  நேசம்,  கருணை,  இவையாவும்  பிறக்கின்றன. அதனை   கலங்கப்படுத்தாமல்  பார்க்க வேண்டும்,  அவர்கள்  அறிவுரையை  கேட்டு நடக்க வேண்டும் என்று இன்றைய சமுதாயத்தினருக்கு தனிமை வெளிச்சம் மூலம் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார்.

     ஒற்றுமை நட்பு: 

    “மதிமொழி யிடல்மாலை வினைவர்போல் வல்லவர் செதுமொழி சீத்த செவி செறுவாக முதுமொழி நீராப் புலனா வுழவர்

    புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர்” (கலித்தொகை : 68)

    புலவர்கள்  பலர்  மதுரையில்  இருந்தனர்  என்பதும்  பேராசானாகிய  பாண்டியனுக்கு அவர்தம் செவி செய்யாகவும், சான்றோர் செய்யுள் நீராகவும் அவர்தம் நா ஏராகவும் கொண்டு  புலம்  உழுதுண்ணும்  புலவர்கள் என்பதும்  அவர்கள்  புதிய  பாடல்களை ஒருங்கூடி  ஆய்ந்தனர்  என்ற  தமிழ்  இலக்கியத்தின்  கருத்துக்கேற்ப எஸ்.ராமகிருஷ்ணன்  கதைத்  தொகுப்பில்  “பாதிக்கனவு”  என்ற  தலைப்பில் வர்ணிக்கின்றார். பாதிக்கனவு (பாத்திரங்கள் சத்யன், சீனி, ரவி, விநோத்) இவர்கள்  அனைவரும்  நெருங்கிய  நண்பர்களாக  இருக்கின்றனர்.   சத்யன்  புத்தக ஆர்வம் கொண்டவனாக உள்ளான்.

    இம்மை பயக்குமால் ஈயக் குறைவன்றால்

    தம்மை வளிக்குமால் தாமுளராக் கேடின்றால்

    எம்மை யுலகத்தும் யாங்காணோம் கல்விபோல்

    மம்மர்  அறுக்கும்  மருந்து”  (நாலடியார்  132)

     என்ற  நாலடியார்  பாட்டில், இவ்வுலக  வாழ்விற்கு கல்வி  கண்போன்றது,  எதையும்  சாதிக்கும் ஓர்  அரிய  கருவி கல்வியாகும்,  இருளழிக்கும்,  ஒளியாக்கும்,  எல்லா  நன்மைகளையும்  தரும்  ஈயக் குறையாது  உன்னையே  உணரச்  செய்யும்,   மெய்ஞானியாக  மாற்றும்,  கல்விதான் அறியாமை  மயக்கத்தை  அகற்றும் அருமருந்து என்ற கருத்துக்களை  உணர்ந்த பாத்திரமாக  சத்யன்  புத்தகங்களை  அதிகம்  படிக்கும் ஆர்வம் உள்ளவனாக இருக்கின்றான். சத்யன் தம் நாட்டு புத்தகங்கள் மட்டுமின்றி பிறநாட்டு  புத்தகங்களையும்  படித்துத்  தனக்கென  ஓர்  தகுதி  படைத்துத்  தன்னுடைய கருத்துக்களை  எல்லாம்  ஒன்று  சேர்த்து  வைத்துள்ளான்.   அவன் அதனை  ஒன்று சேர்த்து  நூலாக்க  வேண்டும்  என்ற  எண்ணத்தில்  இருக்கிறான்.   திடீரென  சத்யன் இறந்துவிடுகிறான்.  அதனால் மனமுடைந்த  நண்பர்களுக்கு,அவனுக்காக  ஏதாவது  செய்ய  வேண்டும்  என்ற  எண்ணம்  மேலோங்குகிறது. அப்போது  அவர்கள் அவனுக்காக  புத்தகம்  போட  வேண்டும்  என்று  பேசி  முடிவு செய்கின்றனர்.

    மால்வரைக்

    கமழ் பூஞ் சாரல் கவினிய நெல்ல

    அமிழ்து விளை தீங்கின ஒளவைக்கு ஈந்த

    உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்

    அரவக் கடல் தானை அதிகனும்” (புறநானூறு 99-103)

    என்ற  வரிகளுக்கு  ஏற்ப  பெரிய  மலையில்  கமழும்  பூக்களைக்  கொண்ட பக்கமலையில் கிடைத்த அழகிய கருநெல்லி  என்னும் அமிழ்தினை ஒத்த இனிய கனியினைத்  தான்  நுகர்ந்து  நீண்ட  நாள்  வாழவேண்டுமென  விரும்பாமல் ஒளவைக்கு கொடுத்த அதியமானின் நட்பு போல இந்த கதாபாத்திரங்கள்  தன்  வாழ்க்கையின்  முக்கியத்துவத்தை  எண்ணாது  நண்பனின் முக்கயத்துவம்  கருதி  ஒவ்வொருவரும்  2000  ரூபாய்  போட்டு  அவனது  புத்தகத்தை வெளியிடுகின்றனர்.  இவ்வாறாக இக்கதைகளில்  இலக்கியங்களுக்கு  ஒப்பாகப்  பண்பாட்டுக்  கூறுகள் அமைகின்றன.

    தமிழன்  என்றோர்  இனமுண்டு  தனியே  அவர்க்கோர்  குணமுண்டு  அமிழ்தம் அவனுடைய  மொழியாகும்!  அன்பே  அவனுடைய  வழியாகும் மானம்  பெரிதென உயிர்விடுவான்!  மற்றவர்க்காகத்  துயர்படுவான்  தானம்  வாங்கி  பசித்திடுவான்!  தருவது மேல் எனப்பேசிடுவான்! (பாரதிதாசன்) என்றவாறு விருந்தோம்பல், இல்வாழ்க்கை, தாய்மை, ஒற்றுமை, நட்பு என்ற பண்பாடு கொண்டு  இச்சமுதாயம்  சீர்திருத்தம்  பெற்று விளங்கி  சிறந்ததொரு  சமுதாயமாக விளங்கவேண்டும் என எஸ். ராமகிருஷ்ணன்அவர்கள்  “என்ன சொல்கிறாய் சுடரே” மூலம் உணர்த்துகிறார்.

    நாமும் அவ்வழி செல்வோம் !

    நல்வழி பெறுவோமாக!

    Share
  • திருமந்திரத்தில் சில  சிந்தனைத் துளிகள் 18

    க. பாலசுப்பிரமணியன்

    உள்ளத்தில் உறவாடும் இறைவன்

    திருமூலர்-1-3

    இறைவன் நம்மை எப்படி ஆட்கொள்ளுகின்றான்? அவன் எவ்வாறு நம்மை அவனுக்கே உரியவனாக ஆக்கிக்கொள்ளுகின்றான்? அவனோடு நமக்கு உறவு எவ்வாறு ஏற்படுகின்றது? இந்த உறவை ஏற்படுத்த  முயற்சி செய்வது நாம அல்லது இறைவனா? அவன் எவ்வாறு நமது உள்ளத்துக்குள் வந்து அமருகின்றான்?

    திருமூலர் கூறுகின்றார்:

    பிறவாநெறி தந்த பேரருளாளன்

    மறவா அருள் தந்த மாதவன் நந்தி

    அறஆழி அந்தணன் மாதவன் பராபரன்

    உறவாகி வந்து உளம் புகுந்தானே 

    உடல் பொருள் ஆவி  என்ற மூன்றையுமே இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டால்  நமக்கு வேறு கவலை ஏது  என்று நாம்  நினைக்கின்றோம்.  ஆனால்  இத்தனையும் அவனுக்கு  அர்ப்பணித்த பின்னும் கூட அவன் நம்மைத் தனியாக விட்டு விட மாட்டான் என்று எப்படி  நம்பும் இந்த  உள்ளம்?  எல்லாம் அவனுக்கே உரிமையென்று  ஆன  பின்னே அவன் அதற்கு உரிமையாளனாக  விடுகின்றான். அவன் அதை என்ன செய்தல் நமக்கென்ன?

    ஆனால்  மாணிக்க வாசகருக்கோ எந்த  நிலையிலும் இறைவன் தன்னைக் கைவிட்டு விடக்கூடாது என்ற விருப்பம். ஆகவே அவர் இறைவனுக்கு அளிக்கும் விண்ணப்பம் என்ன தெரியுமா ?

    இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கோள்

    ஒற்றி வை  என்னின் அல்லால்

    விருந்தினனே விடுதி கண்டாய்

    மிக்க  நஞ்சு அமுதா

    அருந்தினனே மன்னும்  உத்தரகோச

    மங்கைக்கு அரசே

    மருந்தினனே  பிறவி பிணிபட்டு

    மடங்கினர்க்கே

    என்னே ஒரு வேண்டுதல் ! என்னே ஒரு ஈடுபாடு !

    இவ்வளவு  அன்பு காட்டும் இறைவனின் திருவடிகளை நாம் எப்படி அடைய முடியும்?  எவ்வாறு அவன்  பொற்பாதங்களின் தரிசனம் நமக்குக் கிட்டும் ? அவனை அடைய ,மகிழ்விக்க  எந்த வழியைக் கடைப்பிடிக்கலாம் ? அது எளிதானதா அல்லது மிகவும் கடினமானதா?

    இப்படியே உலகிலுள்ள அனைவரும் இறைவனின் பாதங்களை நாடினால் அவனுக்கு நம்மை கவனிக்க சற்றேனும் நேரம் கிடைக்குமா? அல்லது அவன் தன் அடியார்களை வரிசைப்படுத்தி அருள் கொடுப்பானா? இந்த ஐயத்திற்கு சற்றும் இடம் கொடுக்காமல் வள்ளலார் கேட்கின்றார் :

    யார்மீது உன் மனமிருந்தாலு முன்கடைக்

    கண்பார்வை யது போதுமே !

    திருநாவுக்கரசரோ உடலையும் உள்ளத்தையும் உயிரையும் அவனுக்கே அர்ப்பணித்து வேண்டி நிற்கின்றார் அவனுடைய பொற்பாதங்களின் தரிசனத்திற்காக.

    உடம்பெனும் மனையகத்து உள்ளமே தகழியாக

    மடம்படு முணர் நெய்யட்டி உயிரெனும்  திரிமயக்கி

    இடம்படு ஞானத்தீயால் எரிகொள் இருந்து நோக்கின்

    கடமபர் காளை தாதை கழலடி காணலாமே 

    திருமூலரோ இறைவனின்  தரிசனத்திற்கு அன்பு மட்டும் இருந்தால் போதும் . உண்மையான அன்புடன் இறைவனை அணுகினால் அவன் உள்ளம் நெகிழ்ந்து விடும்.  இதற்க்கெல்லாம் நமக்கு  திருமூலரிடமிருந்து  விளக்கமான பதில் கிடைக்கிறது :

    ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை

    ஈரம் உடையவர் காண்பார் இணையடி

    பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்

    கோர நெறிகொடு கொங்குபுக் காரே.

    அது மட்டுமல்ல. “தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் ” என்று நாரணனை பிரகலாதன் வர்ணித்தது போல் அரனை எங்கே காணலாம் என்ற வினாவுக்கு திருமூலர் தெள்ளத் தெளிவாக பதில் அளிக்கின்றார்

    அன்பின்உள் ளான்புறத்தான் உட லாயுளான்

    முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்

    அன்பின்உள் ளாகி அமரும் அரும்பொருள்

    அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே.

    (தொடரும்)

    xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

    Share
  • இன்றைய தாலாட்டு..!

     

    பெருவை பார்த்தசாரதி

     

    தாலாட்டு

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    தந்தை உயிர்கொடுத்து தாயென் உருவமெடுத்தென்

    சிந்தைமகிழ விந்தைமிகப் பிறந்தவனே தாலேலோ.!

     

    சஷ்டியில் விரதமிருந்து கருப்பையில் உருவாகி

    திருஷ்டி கழிக்கவந்தவனே ஆராரோ…ஆரிரரோ.!

     

    அரசனும் வேம்பையும் பரவசமாய்ச் சுத்திவந்து

    அரிதாயுதித்த அற்புதமே ஆராரோ ஆரிரரோ.!

     

    சிரவண ஏகாதசி சித்ரா பெளர்ணமியில சீராகபல

    விரதமிருந் தென்வயித்தில் உதித்தவனே தாலேலோ.!

     

    மணமாகி பலவருஷம் மாவிளக்கு இட்டதாலே

    வந்தென் வயிற்றிலுதித்த மின்னலேநீ கண்ணுறங்கு.!

     

    நாவால்வேண்டி நவமுறைசுற்றி நவகிரக அருளால

    நவரத்தினமெனப் பிறந்தயென் நித்திலமே நீயுறங்கு.!

     

    மலைபோல வந்ததுன்பம் நொடியில மறையுவண்ணம்

    அலைபோல தூளியிலே ஆடிநீயும் உறங்குதியோ.!

     

    முண்டக்கண்ணி கோவிலிலே முழங்கால் முட்டிதேய

    மண்டியிட்டு மடிப்பிச்ச கேட்டுப் பிறந்தபெரும்பேறே.!

     

    கன்னக் கதுப்பினுள் குழிவிழும் சிரிப்பைக்காணநான்

    என்ன தவம்செய்துனைப் பெற்றேனோ தாலேலோ.!

     

    பத்தியம் பலவிருந்து பலசோற்றில் உப்புநீக்கி

    வைத்தியம் செய்யாவந்துதித்த வண்ணமே நீயுறங்கு.!

     

    பிஞ்சுக் கரம்நீட்டியென் கன்னம் தொட்டபோதென்

    நெஞ்சு நிறைஞ்சுதடிநீ இமைமூடி உறங்குதியோ.!

     

    சந்தியம்மங் கோவிலிலே சமகாலந் தவமிருந்து

    சீதனமா நீயும்வந்து பொறந்தாயடி தாலேலோ.!

     

    குட்டிவாய்மலர்ந்து குழறுமுன் மழலைமொழி கேட்க

    எட்டிநீயுதைத்த என்வயிறு வாழ்த்துதடி தங்கமே.!

     

    தாலிக்குத்தங்கம் தரும்தமிழ்த்திரு நாட்டிலே பிறந்த

    தங்கமே தாலேலோ..!தூங்குகண்ணா தாலேலோ.!

     

    அஞ்சனந்தீட்டி அருமைப் பொட்டிட்டு அழகாய்ப்

    பஞ்சணைப் பட்டின்மேல்மலர் மொட்டாக நீயுறங்கு.!

     

    வாங்கி வச்சிருக்கேன் சங்குபாலாடை வெள்ளியிலே

    தூங்கி யெழுவாய்நீ துள்ளியெழுந்து பால்குடிக்க..

     

    தூளிவாசம் துயில் நீப்பாயெம் செல்லமகனே

    அள்ளி யணைக்கயிப்ப தாய்மாமன் வந்திடுவான்.!

     

    எண்ணிலாச் சுமைகளை ஏந்திச் சுழன்றேனே..உனைப்

    புண்ணியமாய்ப் பெற்று புகழடைந்தேன் பூமியிலே.!

     

    நீரைநீக்கிப் பாலையருந்தும் அன்னம்போலே அன்னை

    உயிரைப்போக்கும் மனச்சுமை யகற்றப் பிறந்தவனே.!

     

    ஆராரோ… ஆரிரரோ…! ஆரிரரோ…! ஆராரோ…!

    Share
  • ஊடு பயிர்…

     

    என்னவோ சாபமோ ஏனோ பிறப்பிங்கு
    நன்மக வாயென நாப்புலம்பும்… தன்மையில்
    பெண்ணென ஆணாகப் பேடு!

    பேடும் ஒருபிறவி பெற்றாரென் றெள்ளிநகை
    யாடும் நிலையறுக்கு மார்வமானப்.. பாடுதரும்
    ஊடு பயிராய் உறவு!

    உறவுடன் கூடும் உலகினில் பேடும்
    பிறப்பென உண்மை பிணைந்த… அறமும்
    மறவனுக் கேற்புடைய மாண்பு!

    … நாகினி

    Share
  • ஆடம்பரமற்ற எனது நிழல்

     
    ஆடம்பரமற்ற எனது நிழல்

    நான் நிழலால் செல்கிறேன்
    என் கூடவே வருகிறது நிஜம்

    என் நிழலுக்குள்
    சூரியன் நுழைய முடியவில்லை

    மர நிழலுக்குப் பொறாமை
    அங்குமிங்கும் செல்கின்ற என் நிழல் பார்த்து

    நான் இருக்கிறேன்
    இருளுக்குள் இறந்து விடுகிறது எனது நிழல்

    வெளிச்சம் படைக்கின்ற
    என் நிழலுக்கு இரகசியமில்லை

    அடித்தாலும் மிதித்தாலும் வலிக்காத
    என் நிழலைத்தான் நான் நேசிக்கிறேன்

    நீரில் மூழ்காத எனது நிழல்
    நனைவதில்லை

    வண்ண ஆடை உடுத்தாலும்
    கறுப்பாகவே இருக்கிறது ஆடம்பரமில்லாத எனது நிழல்

    – ராஜகவி ராகில் –

    Share
  • நான் மரம் பேசுகிறேன்.!

     

     

    எண்ணிலா
    என் இலைகளால்
    மானிடனே
    உன் சுவாசத்திற்காய்
    நான் .!

    என் கிளைகளில்
    ஊஞ்சல் கட்டி
    ஆடியே சிரித்தாய்
    உன்னுடன் நானும்
    சிலிர்த்தேன்.!

    அணில் கடித்த
    பழத்தையும் உனக்காய்
    சுமந்தே நின்றேன்
    ருசித்து நீ உன்ன
    ரசித்தே நான்.!

    அன்னை மடிபோல்
    எந்தன் அடியில் உறக்கம்
    தென்றலாய் நான் வீச
    அசந்து நீ தூங்க
    அசையாமல் நான்.!

    உனக்கே என்னை
    முழுதும் அளித்தேன்
    மானிடா
    என் உயிர் மூச்சை
    மட்டும் அறுத்து விடாதே
    அடுத்து உன் வம்சத்தின்
    குலக் கொடிகளை
    காணும் ஆவலில்
    நான்..
    நான் மரம் பேசுகிறேன்.!

    விஜயகுமார் வேல்முருகன்

    Share