டனூப் நதி அருங்காட்சியகம், டோனாவேஷிங்கன், ஜெர்மனி

முனைவர் சுபாஷிணி

நதிகள் பார்ப்போர் மனதை அமைதி கொள்ளச் செய்யும் பண்பு கொண்டவை. நதிகளின் பிரமாண்டம் காண்போரைத் தன்னிலை இழக்கச் செய்யும் தன்மையுடையது. தமிழகச் சூழலில் தாமிரபரணி, வைகை, காவேரி, கொசத்தலை, பெண்ணையாறு போன்ற நதிகள் புகழ்பெற்றவை.

ரஷ்யாவின் வோல்கா நதிக்கு அடுத்து இப்பிராந்தியத்தில் மிக நீளமான நதி என்ற சிறப்பைப் பெறுவது டனூப் நதி. ஜெர்மனியை மட்டும் எடுத்துக் கொண்டால் இங்கு பிரபலமான மூன்று நதிகளில் ஒன்று என டனூபை குறிப்பிடலாம். ரைன், நெக்கார் ஆகிய இரண்டிற்கும் அடுத்து டனூப் நதி சிறப்புடன் காணப்படும் நதியாக விளங்குகின்றது எனலாம். ஜெர்மனியின் கருங்காட்டில் (Blackforest) ஊற்றாகி அங்கிருந்து வளர்ந்து ஏனைய சிறு ஓடைகளையும் கிளை நதிகளையும் இணைத்துக் கொண்டு ஐரோப்பாவின் பத்து நாடுகளைக் கடந்து செல்கின்றது இந்த டனூப் நதி. இதன் நீளம் 2800 கிமீட்டர் ஆகும் ஜெர்மனிக்கு அடுத்ததாக ஆஸ்திரியா, சுலோவாக்கியா, ஹங்கெரி, குரோஷியா, செர்பியா, ரொமானியா, புல்கேரியா, மொல்டோவா, உக்ரேயின் ஆகிய பத்து நாடுகளில் பாய்ந்து கடந்து கருங்கடலில் கலக்கின்றது டனூப். டனூபின் மொத்த நீளத்தில் மூன்றில் ஒரு பகுதி ஹங்கெரி நாட்டில் ஓடும் பகுதியாக அமைந்திருக்கின்றது. ஜெர்மனியின் டோய்ச் மொழியில் இந்த நதி டோனாவ் என அழைக்கப்படுகின்றது.

unnamed (4)
​டனூப் நதி பாயும் நாடுகள்

கோடைகாலத்தில் சுற்றுப்பயணிகளைக் கவரும் படகுச் சவாரிகள் டனூப் நதியில், அதிலும் குறிப்பாக நாடுகளின் தலைநகரங்களை டனூப் கடக்கும் பகுதிகளிலெல்லாம் காணலாம். ஐரோப்பாவில் இடம்பெறும் இந்தப் பத்து நாடுகளில் நான்கின் தலைநகரங்களும் டனூப் நதிக்கரையை அண்டியவாறு அமைந்துள்ளன. நதிக்கரையோரங்களில்தானே மனித குலங்களின் நாகரிகம் வளர்ந்து செழித்தது. சிந்து சமவெளி, நைல் போல டனூப் நதியும் இதற்குச் சான்றாகவே விளங்குகின்றது.

unnamed (5)

ஹங்கெரியின் தலைநகர் பூடாபெஷ்டில் டனூப்

டனூப் நதியில் இணையும் கிளை நதிகள் ஏறக்குறைய 300 ஆகும். இவற்றில் ஏறக்குறைய 30 கிளை நதிகளில் படகுப் பயணமும் செல்லலாம். இந்த நதியின் கரையோரங்களிலும் இவை உருவாகிவரும் பகுதிகளிலும் வாழும் தாவர வகை, பறவைகள் மற்றும் விலங்கு வகை உயிரினங்களின் எண்ணிக்கை 5000 வகைகளுக்கும் குறை யாது உள்ளன.

unnamed (4)
ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் டனூப்

நதிகள் என்றாலே மனித குல நாகரிகங்கள் தம் இருப்பிடங்களை அமைத்து, விவசாயத்தை வளர்த்து விரிவாக்கி கலைகள் செழித்து வளர்ந்த செய்திகளை வரலாற்றில் காண்கின்றோம். டனூப் நதி ஐரோப்பாவின் பழமையான கெல்ட் இன மக்கள் வாழ்ந்த நிலப்பகுதியாக வரலாற்று ஆய்வாளர்களால் அறியப்படுகின்றது. இந்த நதி ஓடும் கரையின் பல பகுதிகளில், அதிலும் குறிப்பாக ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, ப்ராட்டிஸ்லாவா ஆகிய பகுதிகளில் கெல்ட் இன மக்கள் இன்றைக்கு 2600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்விடங்களை அமைத்து வாழ்ந்ததாக கெல்ட் இன மக்கள் தொடர்பான வரலாற்றுச் செய்திகளை அறியலாம். கி.மு. 7ம் நூற்றாண்டு வாக்கில் கிரேக்க கடலோடிகள் இந்த நதியில் பயணித்த விபரங்கள் நமக்குக் கிடைக்கின்றன. பின்னர் ரோமானியப் பேரரசு தன் ஆளுமையை விரிவாக்கிய சமயத்தில், போர் வீரர்கள் இந்த நதி மார்க்கமாக பயணித்து வந்து தங்கள் ஆளுமைக்கு உட்படாத நிலப்பகுதிகளைக் கைப்பற்றி பேரரசை விரிவாக்கினர்.

இந்தப் பத்து நாடுகளைச் சேர்ந்த பொது மக்கள் இந்த நதியை எந்த தங்கு தடையுமின்றி பயன்படுத்துகின்றனர். இந்த நதியில் சுற்றுலா பயணிகளுக்கான நதிப்பயணம் என்பது 19ம் நூற்றாண்டு வாக்கில் தொடங்கியது. இன்றோ டனூப் நதிக்கரை பயணம் என்பது உலகளாவிய அளவில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கவரும் ஒரு பயணமாகத் திகழ்கின்றது.

unnamed (6)

டோனாவ்குவெல்ல – ​டனூப் தொடங்கும் ஊற்று

டனூப்/ டோனாவ் ஊற்றெடுக்கும் பகுதி அமைந்திருக்கும் சிற்றூரின் பெயர் டோனாவேஷிங்கன். ப்ரெக், ப்ரிகாக் என்ற இரு பகுதிகளிலிருந்து ஊற்றெடுத்து ஒன்றாகிப் பின்னர் 300க்கும் மேற்பட்ட கிளை நதிகள் இணைந்து இது உருவாக்கம் பெறுகின்றது. டோனாவ்குவெல்ல ( Donauquelle) என்பதன் பொருள் டோனாவ் நதியின் ஊற்று தொடங்கும் இடம் என்பதாகும். இந்தப் பகுதியில் தான் டனூப் நதியின் ஆரம்பப்புள்ளி தொடங்குகின்றது. இங்குதான் மிகச் சிறிய வடிவிலான டனூப் நதி அருங்காட்சியகம் இருக்கின்றது. இங்கே டனூப் நதியைப் பற்றிய அடிப்படை தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜெர்மனியின் கருங்காடு சூழ்ந்த இப்பகுதியில் கருங்காட்டினுள், பசுமை அழகு கண்களையும் மனதையும் கொள்ளைக்கொள்ளும் சூழலில் இந்த நீரூற்று அமைந்திருக்கின்றது.

unnamed (7)

இந்த நதி ஊற்றெடுக்கும் பாடன் உர்ட்டென்பெர்க் மாநிலத்தில் தான் நான் வசிக்கின்றேன். இந்த மாநிலத்தின் குடிநீர் டனூப் நதியிலிருந்து பெறப்படுகின்றது என்பதும் இந்த நதிநீரைத்தான் நான் தினமும் பருகி வாழ்கின்றேன் என நினைக்கும் போது எனக்குள் இந்த நதியின் மீது மிக ஆழமான பற்றுதல் ஏற்படுகின்றது. தாய் போலத்தான் நதியும் நம்மை வாழ்விக்கின்றது, அல்லவா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *