Blog

  • ” சார் ! சார் ! ஒரு கதை கேளுங்க சார் ! “

    கமலாதேவி அரவிந்தன்

    ” சின்னாங்கு இல்லேலா !
    அல்லாம்மா வேணாம்லா !
    பின் நவீனத்துவம்னா என்னாலா !
    சாந்த லெட்சுமிக்குத் தத்தாவ்லா ! ”

    unnamed (2)” இந்த தாமானுக்குப் போக எப்படியும் முக்கால் மணி நேரமாவது ஆகும். 120 ரிங்கிட்டுக்குக் குறையாது.”

    டேக்சி ஓட்டுநர் சொல்ல ,முப்பந்தைந்து ஆண்டுகட்கு முன்பு படித்த மலாய்மொழியில் உரையாடுவது ஸ்வேதாவுக்கு இன்பமாகத்தான் இருந்தது. ஆனால் சுட்டெரிக்கும் வெயிலில் காருக்குள் குளிர்சாதன வசதி இல்லாததால் சரீரமெங்கும் வியர்த்துக்கொட்டியது.

    கழுத்தைச்சுற்றிப் போட்டிருந்த துப்பட்டாவைக் கழற்றி கையில் பிடித்து விசிறிப் பார்த்தாள்.இட்லிப்பானையாய் வெந்துகொண்டிருந்த உஷ்ணத்துக்கு முன்னே அது பெப்பே காட்டியது.கார்க்கண்ணாடிக்கதவை திறந்தாலாவது சற்றே வெப்பம் தணியாதா, என்று திறந்தபோது வெயிலின் உக்கிரத்தில் சரேலென்று உள்ளே நுழைந்த காற்று கூட அனலாய் தகித்தது. என்ன வந்தாலும் சந்திக்காமல் போவதில்லை, எனும் வைராக்கியத்தோடு வந்திருந்ததால், இந்த முக்கால் மணிநேர தகிப்பை சகித்தே ஆகவேண்டும். ஆயாசமாக இருந்தது. எந்த நேரத்தில் இந்த பணியை ஏற்றுக்கொண்டோம் , என்று அப்படி பரிதவிப்பாக இருந்தது.இதுவரை சந்தித்த அனுபவங்களை மீண்டுமொரு முறை நினைத்துப் பார்க்கவும் மனசு கசந்தது.

    ஸ்வேதா பெண்கள் பத்திரிகையில் குறிப்பிட்ட செய்தித்துறையைச் சார்ந்தவள் .அதனாலேயே வாழ்க்கையில் பலரையும் சந்தித்த அனுபவம் அவளுக்கு உண்டு. அந்த அனுபவங்களையெல்லாம் பன்முகப்பரிமாணத்தில் அசராமல் எல்லா இசங்களையும், உயிர்த்துவம் , வாழ்வியல் கூறு, எனப்பல நீட்சிகளில், நேர்காணல்களாகவும், சமயத்தில் கவிதைகள், அவ்வப்போது புனைப்பெயரில் பெண்கள் கட்டுரைகள், ஏன் அரசியல் பார்வையில் கூட சில கட்டுரைகள்கூட எழுதியிருக்கிறாள்.,

    இதனால் கண்டடைந்த வாசகர்களின் நிறைவை மறுப்பதற்கில்லை.ஆனால் அண்மைய காலமாக, பெண்களின் எழுத்து பற்றி பரவலாக வந்த சில கருத்துக்களை ஜீரணிக்கவே முடியவில்லை.

    அதற்குக்காரணம் சில அரைவேக்காடுகளின் தத்துப்பித்து விமர்சனமும், சுய அட்சதையைத் தலையில் போட்டுக்கொண்டு சில கசடுகள் செய்த பம்மாத்து விமர்சனமும், நேற்று பெய்த மழையில் ஒண்டவந்த ஈசல்கள் கெட்ட கேட்டுக்கு, இவர்கள் வரவுக்குப்பின் தான் உலகமே இந்த மண்ணை திரும்பிப்பார்க்கிறது, என அஜால் குஜால் பேட்டி கொடுப்பதுமாய் , வந்த சில சேதிகளால் சுரணையுள்ள சிலர் கொதித்துப்போயினர். ஸ்வேதா பணிபுரியும் பத்திரிகை ஆசிரியரும் பெண்ணே என்பதால் அவருக்கும் சிலிர்த்துக்கொண்டு வந்தது.. புதுக்கவிதை எழுச்சியைக் கொடுத்தவரும், பின் நவீனத்துவ நாடகங்களால் உலக அரங்கில் பேசப்படவேண்டிய ,சாதனையாளருமான இலக்கியவாதி ,இருக்குமிடம் தெரியாமல் புத்தனாய் அமைதி காக்க ,இந்த அரைகுறைகளின் அலட்டலில் ஸ்வேதாவுக்கும் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இன்னொரு முக்காத்துண்டு அலட்டல், பெண்எழுத்து என்றாலே முட்டை சம்பாலும் கோழிக்கறியும் தான், அதற்கும் அப்பால் இவர்களால் என்ன சிந்திக்கமுடியும்? என்று தன் பங்குக்கு அம்மண ஜோக் அடித்தது. தெளிவுறவே அறிந்திருந்தால் தானே தெளிவு தர மொழிந்திடமுடியும்?

    ஆனால் ஸ்வேதாவின் பத்திரிகை ஆசிரியர் , இந்த அரைவேக்காடுகளுக்கு பதிலடி கொடுக்கவாவது ஒரு கட்டுரையின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தியபோது, கேட்டுக்கொண்டிருந்த அத்தனை பேருக்குமே அப்படியே மிளகாயை அரைத்துப் பூசினாற்போல் எரிந்துகொண்டு வந்தது.

    மூத்த பெண்ணிலக்கியவாதிகளின் நேர்காணலுக்கு ஸ்வேதாதான் கட்டுரையாளர் என்று முடிவானபோது, ஸ்வேதா ஒரு அட்சரம் மறுப்பு சொல்லவில்லை. ஆனால் அது எவ்வளவு பெரிய குறுக்குவெட்டு என்பதை அவள் அப்போது அறியவில்லை. இலக்கியம் படைத்தல் பற்றி ஸ்வேதாவுக்கென ஒரு கோட்பாடு இருந்தது. புனைவிலக்கியம் படைத்தல் ஒன்றும் வியாழவட்டம் அல்ல. அது ஆத்மாவின் ராகம்.வன்தொடர் குற்றியலுகரத்துக்கும் மென்தொடர் குற்றியலுகரத்துக்குமான வேறுபாடுகூடத் தெரியாமல், முப்பத்தெட்டு இலக்கணப்பிழைகளோடு கதைகள் எழுதிவிட்டு, நாங்கள் மண்வாசனை பொழியப்பொழிய எழுதுகிறோமாக்கும், ‘என்று ஜிஞ்சிண்ணாக்கடி வசனம் பேசுபவர்களைக்கூட மன்னித்துவிடலாம். ஆனால் லா, போட்டுப்பேசுவது மட்டுமே சிங்கப்பூர், மலேசிய இலக்கியம் என்று, விவஸ்தையே இல்லாமல்,கதையில் வரும் சொல் பிரபஞ்சத்துள் தேவையற்ற இடங்களிலெல்லாம்,” இல்லலா, என்னாலா, வா லா, போ லா, என்றெழுதி, மொழிவெளியையே அசிங்கப்படுத்தும் அனாமத்துக்களை மட்டும் அவளால் மன்னிக்கவே முடியவில்லை.இந்த கோரத்தைப்படித்துவிட்டு தமிழ்நாட்டுக்கு செல்லும்போது, வாங்க லா , ? என்று பேசவந்தவர்களைப் பார்த்து நேசமாக ஒரு வார்த்தை பேசத்தோன்றவில்லை. பாமரர்களின் பேச்சுவழக்கில் லா, உண்டுதான் , ஆனால் கற்றவர்கள் உரையாடும் சபையில் எங்குமே இந்த பம்மாத்து வசனம் கேட்டதில்லை.என்றாலும் கதையாடலின் கட்டுமானம் பற்றிய பிரக்ஞை போலும் தெரியாத மொழிச்சிதைவைக் கொடுக்கும்,கசடுகளின் சுய அட்சதையோ எழுதவே கூசுகிறது.

    யாகம் அல்லவா இலக்கியம் படைத்தல் என்பது.சமகால இலக்கியம் பற்றிய எந்த துணுக்குமே தெரியாவிட்டாலும் ,உள்ளீடின் உருவகமாவது வாசகனைச் சென்றடைய வேண்டாமா?

    வாழ்க்கையின் நிஜங்களுக்கு எந்த வகையிலும் மாற்றுக்குறையாமல் , ஒரு துறவியின் ஸ்பரிசம்போல், பட்டும்படாமல் அமானுஷ்யமாய், வாசகனின் உள்ளுறைந்த உணர்வில் , குறைந்த பட்சம் ஈஷிக்கொள்ளவாவது முடியுமென்றால் ஒரு படைப்பாளி பின்னர் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை. ஆழ்மன நுணுக்கங்களின் பிரத்யட்சங்களை சுவாரஸ்யமாகக் கூற அனுபவம் எனும் விளை நிலத்தின் துல்லியம் மட்டுமே போதாது, என்பதில் ஸ்வேதாவுக்கு அழுத்தமான நம்பிக்கை இருந்தது.

    களப்பணி செய்தும், நேரில் சென்று சந்தித்தும் , போலியின் நிழல்ரேகை இருந்தால் கூட, அதை செம்மைப்படுத்தாமல் அவள் எழுத்து வந்ததில்லை. ஆனால் முழுமூச்சாய் இக்கட்டுரையில் இறங்கியபிறகுதான் மொட்டைப் பாலைவனத்தில் தவிக்கும் ஒட்டகமாய் தகவலுக்கு ஆலாய்ப்பறக்க வேண்டியிருந்தது. ஸ்வேதா இதை எதிர்பார்க்கவேயில்லை. குறிப்பிட்ட ஒருசிலரை மட்டுமே தொலைபேசியில் பிடிக்க முடிந்தது.மகிழ்ச்சியோடு பேசிய சிலர்,ஆய்ந்து ஓய்ந்து

    ” இலக்கியமா? ஹ்ம்ம், இன்னுமா எம்பேரை நினைவு வச்சுக்கிட்டு கூப்பிடறே ? என்று தூங்கி எழுந்தாற்போல் அலுத்துக்கொண்டவரும்,

    “ கதையா? அதையெல்லாம் நான் விட்டு ரொம்ப நாளாச்சு, நம்ப கதையே பெருங்கதையாயிருக்கு, இதிலே என்னா பேசச்சொல்றே ? “ என்று சலித்துக்கொண்டவர்களும்,

    ஆமாம், நான்தான் , இப்ப எதுக்கு அதெல்லாம் ?என்று பட்டென்று போனை வைத்தவர்களுமாக , ஸ்வேதாவுக்கு இவர்களை பேட்டி காண்பதே பெரிய சவாலாக இருந்தது.

    ஒரு கட்டத்தில் பேசாமல் எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுவிட்டு, பழைய செய்தியாசிரியராகவே வேலையைத் தொடரலாமா என்று கூடத்தோன்றிவிட்டது.

    ஆனால் அசரீரி கூட ததாஸ்து சொல்லவில்லை. கர்மவினை யாரைவிட்டது? குபுக்கென்று உடம்பு குலுக்கிப்போட்டது. ஏதோ பெரும்பாறை மேல் ஏறி இறங்கினாற்போல் வண்டி சட்டென்று நின்றுவிட்டது. ஸ்வேதாவுக்குக் கவலையாக இருந்தது.சாலையெல்லாம் குண்டும் குழியுமாக,
    இடுங்கி நசுங்கிக் கிடக்கும் ஒரு குற்றுயிராய் தெரிந்த தாமான் வீடுகளும், படுதா போட்ட படிக்கட்டுக்கடைகளுமாக,ஏனோ இந்த ஏரியா மட்டும், அந்த வட்டாரத்துக்கே திருஷ்டிப்பொட்டாய் தெரிந்தது.

    ”கையில் இருந்த முகவரியைப்பார்த்தால் இது தாமானும் அல்ல. கம்போங்கும் அல்ல “ என்றான் டேக்சியோட்டி. அப்படியானால் யாரிடம் தான் கேட்பது ? டேக்ஸி சுற்றிச் சுற்றி வந்தது.

    அட ! யாரோ ஒரு வயதான பெண்மணி , பார்த்தால் இந்திய மாதுபோல் –கைலியும் பாஜுவும் அணிந்து, வீட்டுக்கு முன்னால் போட்டிருந்த நீண்ட பெஞ்சில் ஏதோ வைத்து விற்றுக்கொண்டிருந்தார். துணிந்து கேட்டுவிட ஸ்வேதா அருகே செல்ல, முகவரியை வாங்கிப்பார்த்த அந்த பெண்மணி ஆச்சரியமாகப் பார்த்தார்.

    ” இந்த முகவரியில உங்களுக்கு யாரைப் பாக்கணும் ?

    ” சாந்த லெட்சுமி, கதையெல்லாம் கூட எழுதுவாங்களே ”

    ” என்ன சொல்றீங்க ? கொஞ்சம் சத்தமாச்சொல்றீங்களா? ” ,மீண்டும் சத்தமாய் முழங்கியபோதும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் விழிக்க,

    தொண்டையின் முழுவீச்சையும் பிரயோகித்து, எம்பியகுரலில் ஸ்வேதா உரத்துக் கத்தினாள்.

    ” அட, என்றவாறே ட்ர்ஷ்ஷ் “ என்று வாய் திறந்து சிரித்தபோது இரண்டு பக்க பற்கள் இல்லை.தலைமுடி சுத்தமாய் நரைத்திருந்தது.

    ” நான் தான் சாந்த லெட்சுமி ! என்ன விஷயம் ! அட ! ? “

    கலர் கைலியும், மேலே இடுப்புவரை நீண்ட அரைக்கை பாஜுவும் அணிந்து தாட்டியாய், கனத்து , யாரோ செங்கோயான் பொம்பள , மாதிரி நின்ற இவரா சாந்தா லெட்சுமி ? நம்பவே முடியவில்லை,.

    35 ஆண்டுகட்கு முன்பு பூங்கொத்தைப்பிடித்துக்கொண்டு, பெரிய பெரிய பூக்களிட்ட ஒரு அழகான புடவையில் மலர்ந்து சிரித்த தோற்றத்தில் சாந்த லெட்சுமி அனுப்பிய புகைப்படம் இன்றும் ஸ்வேதாவின் ஆல்பத்தில் உண்டு. சாந்த லெட்சுமி மட்டுமல்ல. அன்று மும்முரமாய் எழுதிக்கொண்டிருந்த , 20க்கும் மேற்பட்ட பெண்கள் ஸ்வேதாவுக்கு பேனாத்தோழிகளாக தொடர்பில் இருந்தார்கள். பின் திருமணமாகி அவரவர் வாழ்க்கை, குழந்தைகள், குடும்பம் , என ஓடிக்கொண்டிருக்க கடிதத்தொடர்பு நீடிக்கவில்லை. ஆனால் அவர்கள் அத்தனைபேரிலும் சாந்த லெட்சுமி போன்ற சிலரே தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தனர். சாந்தலெட்சுமியின் எழுத்து பற்றி,பேசவேண்டுமென்றால் இலக்கியத்தின் மூலை முடுக்கில் கூட வைக்கத் தகுதியில்லை, என்று பலராலும் விமர்சிக்கப்பட்டவர்.அப்படியும் சாந்த லெட்சுமி எழுதுவதை நிறுத்தவில்லை.என் கடன் எழுதுவதே என்பது போல் அவர் கதைகள் ஏதாவது ஒரு பத்திரிகையில் பிரசுரமாகிக்கொண்டுதான் இருந்தன.

    நீ , நீங்க ?

    ” ஸ்வேதா !“

    ”அட, யாரு ? யாரு ? ஸ்வேதா ஓமணக்குட்டனா?? , என்னுடைய பேனாத்தோழி ஸ்வேதாவா !,?
    அப்படியே பாய்ந்துவந்து கட்டிக்கொண்ட சாந்த லெட்சுமியை நிதானத்துக்குக் கொண்டுவர சில நிமிஷங்கள் பிடித்தது

    ” ரெட்டைச்சடைபோட்டு, கருப்புகலர் காலர் வைத்த பனியனில் நீ அனுப்பின படம் இன்னும் கூட எங்கிட்டேஇருக்கு தெரியுமா, ஆமாம், என்ன விஷயமா என்னைப் பாக்க வந்திருக்கே , “

    விஷயத்தைக் கூறியதும் நாணிக்கண் புதைக்கவில்லையே தவிர அப்படி ஒரு வெட்கம். முகத்தில் பளிச்சிட்ட பிரகாசத்தை மறைக்கத்தெரியவில்லை சாந்த லெட்சுமிக்கு.

    ” பேட்டியா ?என்னையா ? இதுவரை யாருமே என்னை பேட்டி கண்டதேயில்லையே, நான், என்ன பேசப்போறேன் ?பரபரப்பில் குரல் நடுங்கியது

    மொதல்லே கோப்பி கலக்கறேன். ஒரு வா குடிச்சுக்கிட்டே பேசலாமே?

    வரக்கோப்பியை தனக்கு எடுத்துக்கொண்டு, பால் கலந்த காப்பியையும் , மேஜையில் விற்பனைக்கு வைத்திருந்த பலகாரங்களில் சிலதையும் ஒரு தட்டில் வைத்து நீட்டியபோது கைகளில் கறுப்பாய் தழும்பு கிடந்தது.எரிக்கும் இந்த வெயிலில் கொதிக்கும் இந்த காப்பியை எப்படிக்குடிப்பது ?

    அதற்குள் காதில் பொருத்த வேண்டிய கருவியை சாந்த லெட்சுமியின் மகள் வந்து காதில் மாட்டிவிட்டாள். பிறகு கத்திப்பேச வேண்டியிருக்கலை.

    ” என்னா பாக்கறே, ஒடம்பு ரொம்ப வெயிட் போட்டுடுச்சி,.டைபட்டிக் வேற, சதா மனஉளைச்சல் வேற, அதனால்தான் சாப்பாட்டுல கொஞ்சம் கட்டுப்பாடு, ஒரு வரக்கோப்பி நாலு தாவா பிஸ்கட் போதும், முக்கா நாள ஓட்டிடுவேன். என்னா சொல்லச் சொல்றே ?

    கல்யாணம் ஆவும்போதே 34 வயசாயிடுச்சி, ! ஆர்மியில இருக்கற அவர் என்னுடைய வாசகனா கடிதம் போடும்போது சந்தோஷமாத்தான் இருந்திச்சு. பிறகுதான் எங்களுக்குள்ளே காதல் கனிஞ்சது.கல்யாணமாகி மூத்த பையன் பொறக்கற வரைக்கும் பெரிசா பிரச்சினையொண்ணும் இல்லே.அடுத்தடுத்து மூணு பிள்ளைகள் பொறந்தப்புறம் அவரோட குடிப்பழக்கம் கொஞ்சம் அதிகமாயிடிச்சு. எப்படியும் அவரால குடிய நிறுத்த முடியல, எல்லாம் பொருளாதாரப் பிரச்சினைதான், வேறென்ன? ஆர்மியிலெருந்து வெளியானப்புறம் எங்கேயுமே சரியான வேலை கிடைக்கலை, ஒரு இடத்தில புல்லு வெட்டற வேலைதான் கிடைச்சது,ஆனா அதுவும் நிலக்கலை.

    அந்த கோவத்திலேயே சதா அடி, சண்ட, ஒரு கட்டத்தில மப்பு தலைக்கேறி,கீழே கிடந்த அல்லூர் சுத்தப்படுத்தற இரும்புக்கழியாலயே போட்டு சாத்திட்டாரு,. மூணு நாளைக்கப்புறம்தான் எனக்கு காது கேக்காமப்போனதே தெரிஞ்சுது.டாக்டர் கிட்டெயெல்லாம் போவலை, விஷயம் தெரிஞ்சதும் என்கையைப் பிடிச்சுக்கிட்டு அப்படி அழுதாரு.

    பிறகு கொஞ்சம் நாள் ஒழுங்காதான் இருந்தாரு. திரும்பவும் ஒரு நாள் குடிச்சுட்டு வந்தப்போ மாதவிடாய் நேரம் பாரு. அசந்து தூங்கிட்டேன். பசியோட வந்தவருக்கு கண்ணு மண்ணு தெரியல,! அவருக்கு குளிக்க வெந்நீர் போட்டிருந்த அடுப்பிலிருந்து ,அப்படியே எரியற கொள்ளிக்கட்டையாலே சூடு போட்டுட்டாரு , போயேன், ! குப்புறப்படுத்துக் கிடந்ததாலே பின்னாலயோட போச்சு. இல்லேன்னா மூஞ்சி, முகறையெல்லாம் வெந்து போயிருக்கும்.. அதுக்கப்புறம் தான்,
    காசுப்பிரச்சினையினாலதானே சண்டை வருதுண்னு நான் வேலைக்குப்போகத்தொடங்கினேன்.

    ஃபேக்டரியில” டாய்லெட் க்ளீனர்” வேலைதான் கிடைச்சது. அந்த கால ஆறாம்வகுப்பு தமிழ் படிச்ச எனக்கு வேறென்ன வேலை கிடைச்சுடும் ? ராத்திரி ஃபேக்டரியில கழிவறை துப்புரவுவேல, காலையில கொஞ்சம் தூங்கிட்டு , இப்படி ஏப்போஏப்போ, , கோரேங் பீசாங் ,னு எனக்குத்தெரிஞ்ச பலகாரங்களையும் செஞ்சு விக்கறேன்.செலவுக்கு பிரச்சினையில்ல. ஏதோ வாழ்க்கை ஓடுது,
    ஆனா இதையெல்லாம் பேட்டியில எழுதிடாதே, இனி இலக்கியம் பற்றி கேள்வி கேளு, நான் சொல்றேன். !

    விதிர்விதிர்த்துப் போயிருந்த ஸ்வேதாவால் பேசவே முடியவில்லை.அடிபட்டு, மொத்துப்பட்டு, ஃபேக்டரியில் இரவுவேலை செய்துகொண்டு, வீட்டுவேலை, அதோடு பலகாரம் செய்து விற்றல் என, குடும்பத்துக்காக ஓயாது உழைத்துக்கொண்டிருக்கும் இவளுக்கு கதை எழுத எப்படி நேரம் கிடைக்கிறது ?

    ” ஓ, ! அதுவா, நான் எழுத்தாளினி பாரு, என்னா வேலை செஞ்சுக்கிட்டிருந்தாலும் , மனசெல்லாம் ஏதாவது கற்பனையிலேயே தான் மூழ்கிக்கிடக்கும், ஏன் கேட்கறே ? பகலெல்லாம் நேரமே இருக்காதுங்கறது உண்மைதான். இரவு வேலைக்குப் போகும்போது, விடியற்காலை மூணுமணிக்கே வேலை முடிஞ்சுடும் பாரு, அப்புறமா , அங்கிருக்கற நீண்ட கல் பெஞ்சில குப்புறப்படுத்துக்கிட்டு , கொண்டுபோற நோட்டுப்புத்தகத்திலே எழுதுவேன். இடையிலே யாராவது டாய்லெட்டுக்குப் போறவங்க பாத்தாக்கூட சிரிச்சுக்கிட்டே போயிடுவாங்க, ! பொழுதுவிடியற வரைக்கும் இப்படியே ஓய்வு கிடைக்கற நேரமெல்லாம் எழுதிக்கிட்டே தான் இருப்பேன் ?

    போனமாதம்கூட முத்தாரம் பத்திரிகையில என் சிறுகதை ஒண்ணு பிரசுரமாச்சே, படிச்சியா? யாரோ ஒரு வாசகர் கூட உற்சாகமாக ஒரு வார்த்தை பாராட்டியிருந்தார். அதுதானே ஸ்வேதா ஒரு படைப்பாளிக்கு பெரிய ஊக்கம் ? ”

    ”நிச்சயமா, !அப்படீன்னா, எதிர்வினையை எப்படி எதிர்கொள்ள முடிகிறது ??”

    ” நான் அதைப்பற்றியெல்லாம் ரொம்ப கண்டு கொள்றதில்லை ஸ்வேதா, குசினியில உள்ள கரித்துணி மாதிரியிருக்கே இவுங்க எழுத்து,, சமையல் கட்டுக்கு அப்பால் வெளியுலகை எப்பத்தான் இவுங்க அண்ணாந்து பார்ப்பாங்க, னு ? கூடஒரு குப்பைமேதாவி என்னைப்பற்றி எழுதனான்.படிச்சப்ப கொஞ்சம் கவலையாத்தான் இருந்திச்சு ! ஆனால் இந்த இலக்கியம் கூட இல்லன்னா நான் இப்ப உயிரோடயே இருக்கமாட்டேன் தெரியுமா? ஏன் பொய் சொல்லணும் ? ஒருமுறை அப்படித்தான், குடிவெறியில , இந்த மூணு குழந்தைகளும் அவருக்குப்பொறக்கலைன்னு சொல்லிட்டாரு, எல்லாவற்றையும் பொறுத்துக்கிட்ட எனக்கு அதை மட்டும் தாங்க முடியலை.

    பொழுது எப்படா விடியும், இவரு வெளியே போனவுடனே போயி ராச்சூன் மருந்தை வாங்கிவந்து குடிச்சிடலாம்னு தான் காத்துக்கிட்டிருந்தேன், அவர் போனவுடனே அவசரம் அவசரமா வெளியே கடைக்குப்போறேன். உங்க கதை வந்திருக்கேம்மா, !ன்னு கடைக்காரர் சிரிக்கறாருன்னா பாரேன். பத்திரிகையை வாங்கிப்பார்த்தா, என்னோட சிறுகதை, –அய்யோ, என்ன சொல்ல, !

    ஸ்வேதா, அன்னைக்குத்தான் முடிவெடுத்தேன் ஸ்வேதா, ! இந்த உலகமே எதிர்த்தாலும் சரி, என்ன துன்பமே வந்தாலும் சரி, நான் என் உயிரை மட்டும் மாய்ச்சுக்கவே மாட்டேன், ஏன்னா நான் எழுத்தாளினி பாரு, பேனா புடிச்ச இந்த கையால நான் எழுதிக்கிட்டேதான் இருப்பேன், என்ன சொல்றே ? “

    விம்மிவெடித்துக்கொண்டு வந்த அழுகையை அடக்க ஸ்வேதா மிகவும் சிரமப்பட வேண்டியதாயிற்று. அடிவயிற்றினின்று எழுந்த கேவலை தேம்பதேம்ப அடக்க வேண்டியிருந்தது.ஒரு வார்த்தை கணவர் கடுமையாகப்பேசினாலே ஒரு வாரத்துக்கு நினைத்து நினைத்து அழுபவளுக்கு, சாந்தலெட்சுமி கூறிய தகவல்கேட்டு ,விக்கி விக்கி அழவேண்டும்போல் இருந்தது.

    -சூடு போடுவானா ? பிருஷ்டத்தில்லேயே தேய்த்துவிட்டானா ? இரும்புக்கழியால் அடித்து காதை செவிடாக்கிவிட்டானா?

    ஸ்வேதாவைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்தாள் சாந்தலெட்சுமி,

    ” பின் நவீனத்துவம், புதுமைப்புரட்சியாகவெல்லாம் எழுதணும்னு சொல்லிக்கறாங்க, ! ஆனா எனக்கு வாழ்க்கையே போராட்டமாயிருக்கு, ஒவ்வொரு நாளும் காலை நிம்மதியா விடிஞ்சாலே போதும்னு இருக்கு, இருந்தாலும் கற்றுக்கொள்ள ஆசையாத்தான் இருக்கு, யாராச்சும் , இந்த வட்டாரத்திலே, பின்நவீனத்துவம் பற்றி வகுப்பு எடுக்கறதா இருந்தா, உண்மையிலேயே கற்றுக்க ஆசையாதான் இருக்கேன் ஸ்வேதா, ! எங்கேயிருந்தாவது தொடங்கணும் தானே ? , !”

    அதற்குள் ”குவே “வாங்க மலாய்க்கார சிறுமிகள் சிலர் வந்தனர், இரண்டு பெண்மணிகள் கடனுக்கு வாங்கிப்போயினர். வந்தவர்களிடம் சிரித்த முகத்துடனேயே குவே, விற்றுக்கொண்டே சாந்த லெட்சுமி பேசினாள். அது நேர்காணல் மொழியாக இல்லாமல், சடக்கு மேலே வழிந்தோடும் கித்தாப்பால் மொழியாகத்தான் இருந்தது.

    தமிழ்கூறு நல்லுலகில் புதுமையும், போஸ்ட் மோடர்னிஸமும் கொடிகட்டிப் பறக்க, ஒட்டுப்பால் எழுத்தையும் நமக்கு யாராவது அறிமுகம் செய்ய வேண்டாமா? பேச்சிலும் கூட பனிப்புல்லின்மேல் முத்துப்போல் மின்னும் எந்த பளீரிடலும் இல்லை. சில இலக்கியசொகுசுகளுக்கே உரித்தான அலட்டல் நடிப்பும் , வெற்று பந்தாவும் கூட அறியாத அப்பாவியாகத்தான் பேசினாள். இரண்டுமணி நேரம் இடையறாத அருவியாய் பேசினாள்.ஒலிப்பதிவுசெய்வதைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல், அப்படியே அவளது மொழியிலேயே , ஆனால் பிழையில்லாத தமிழில் தான் பேசினாள்.
    சாந்த லெட்சுமியை பலகோணங்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டு , விடை பெறும்போது தயங்கிநின்றவளை அன்பு வழிய வழிய அப்படியே நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் ஸ்வேதா.

    ” இந்த முத்துமாலை உனக்கு ரொம்ப அழகாயிருக்கு ஸ்வேதா, “ என்று கபடமின்றி சிரித்த சாந்த லெட்சுமியின் கழுத்தில் அப்படியே அந்த முத்துமாலையை, கழற்றிப்போட்டு, மீண்டும் ஒருபுகைப்படம் எடுத்துக்கொண்டாள். நேர்காணலை அப்பொழுதே எழுதவேண்டும்போல் ஸ்வேதாவுக்கு பதறிக்கொண்டு வந்தது.

    கணினியை மடியில் வைத்துக்கொண்டு தட்டச்சு செய்யத் தொடங்கியபோது, பொலபொலத்துக் கொண்டு வந்தது. சாந்த லெட்சுமிக்கு பின்நவீனத்துவம் தெரியாதுதான், ஏன் சமகால இலக்கியம்பற்றிய பிரக்ஞை கூட இல்லைதான்.ஆனால் தான் கண்டதை, தன்னுடைய சிந்தனையை அகம் புறம் சார்ந்த எந்த நிலையிலும் சாயாமல் ,சுயம் மட்டுமே எழுத்தாய் வாழும் இவள் எழுத்தில் எந்த புதிய சிந்தனையும் கிட்டத்தில் கூட போகவில்லை.

    ஈவிரக்கமற்ற ஆணாதிக்க கொடுமையில் எந்த பிழையுமே காணாமல், ” என்ன இருந்தாலும் அவரு என் கணவர் தானே, இன்னைக்கும் நான் சாந்தலெட்சுமி ஏகாம்பரம் தானே, ”என இயல்பாய் ஏற்றுக்கொண்ட பாங்கே பழங்காலத்து பெண் தெய்வங்களின் நீட்சிதான், அதே பாணிதான் இவளது எழுத்திலும் கூட தொடர்கிறது, .யதார்த்த இலக்கியமோ, இயல்பியல் பார்வையோ, அதன் அரிச்சுவடி கூட இவள் அறிய மாட்டாள்.

    எந்த கலப்படமுமில்லாமல், கூடுமானவரை தன்னுடைய இயல்பிலேயே தான் எழுதுகிறாள்.?
    ஆனால் பின்நவீத்துவத்தின் அவதாரமே நாங்கள் தான் என்று கொஞ்சமும் லஜ்ஜையின்றி, பிறமொழி இலக்கியத்தின் தழுவல்களைத் திருடி தங்கள் பெயரைப் போட்டுக்கொண்டு திரியும், களவாடி ஜம்பங்களுக்கு முன்னால், சாந்த லெட்சுமியின் எழுத்து நிஜத்தின் தரிசனம். ஒருபக்க செவிப்பறையே கிழிந்து டமாரம் ஆன நிலையிலும், பிருஷ்டம் வெந்து பழுத்த நிலையிலும் கை, காலெல்லாம் சூடுபட்டு தழும்பேறிய உடல் கோலத்திலும் ,

    ” என்ன இருந்தாலும் அவரு என் கணவரு பாரு, என்ன செய்ய, வாழ்ந்துதானே ஆகணும்? , ”

    என வாழும் இவளுக்கு பின் நவீனத்துவம் எப்படித்தெரியும்? நிதர்சனத்தின் அச்சு அசலாய முகம் இவளது எழுத்து. நூற்றாண்டு மாறலாம்,மரபுகளும் கூட மரிக்கலாம்..ஆனால் பெண்ணின் இருப்பு அற்ற வாழ்க்கை எங்கேனும் சாத்தியமாகியிருக்கிறதா?

    சுயம் மட்டுமே வாழ்க்கையாய், எழுத்தாய் , இவ்வளவு துக்கத்திலும் உதட்டைக்கடித்து , அழுகையை விழுங்கிக்கொண்டு, ராஜபாட்டையே வந்து எதிரில் நின்றாலும் மண்டியிடாமல், கணவரை விட்டுக்கொடுக்காத, இந்த ஒற்றையடிப்பாதை நடையில் என்ன தவறிருக்கிறது.? துப்புரவு வேலை செய்தும் ,கழிவறைக்கு வெளியே படுத்துக்கொண்டு கிட்டும் சொல்ப நேரத்தில் கதை எழுதும் மாதரசி, நீ எந்த நூற்றாண்டுப்பெண் ?????????

    சாந்த லெட்சுமியை நினைக்க நினைக்க ஸ்வேதாவுக்கு நெஞ்சுடைந்து அழுகை வந்தது. தட்டச்சு செய்ய முடியாமல் மடிக்கணிணியை மூடியபோது, அட !

    அப்பொழுதுதான் ஸ்வேதாவுக்கு ஒரு அரிய விஷயம் ஞாபகத்துக்கு வந்தது.அவ்வளவு நேரமும் பேசிய பேச்சில் ஓரிடத்தில் கூட சாந்த லெட்சுமி , லா ‘ , போட்டுப் பேசவில்லை.

    [ முற்றும் ]

    Share
  • மகளிரைப் போற்றுதும்!

    இரா.தீத்தாரப்பன்

    மகளிரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மேம்படுத்த பல அரிய முயற்சிகள் செய்தவர் நம் திருவள்ளுவர். மகளிரை அடிமை போல நடத்துவதை அன்றே கண்டித்தவர்.

    ” சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும் மகளிர்
    நிறைகாக்கும் காப்பே தலை.”

    என்ற குறளில் தங்களைக் காத்துக் கொள்வதில் பெண்கள் தலையானவர்கள் என்று சொல்லிவிட்டு வேறு ஒரு குறளில்

    ஒழுக்கமாக இருந்து பெருமை பெறவேண்டுமென்றால் அதை ஒரு பெண்ணிடமிருந்து கற்றுக்கொள்”

    என்று ஆணைப்பார்த்துச் சொல்லுகிறார். அந்தக் குறள்

    ” ஒருமை மகளிரே போலப் பெருமையும்
    தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு”

    இதுவே! பின்னர் வந்த இளங்கோவடிகள் கண்ணகி வழக்குரைத்த அற்புதத்தை எடுத்துக்காட்டி அவளின் புகழை விண்ணுயரச் செய்தார். அவருக்குப் பின் வந்த கம்பரோ ,

    ” பெருந்தடங்கண் பிறைனுதலார்க் கெலாம்
    பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் “

    என்று சொல்லுவதிலிருந்து இயற்கையாகவே செல்வமும் கல்வியும் பெண்களிடத்தில் பூத்துக்கிடக்கின்றன என்பது தெளிவு.

    “மனைவி ஒருத்தியை அடிமைப் படுத்த வேண்டித்
    தாய்க்குலத்தை முழுதடிமைப் படுத்தலாமோ?
    தாயைப்போல பிள்ளை என்று முன்னோர்
    வாக்குள தன்றோ? பெண்மை அடிமை யுற்றால்
    மக்களெல்லாம் அடிமையுறல் வியப்பொன்றாமோ?”

    என்று நம் மகாகவி பாரதியாரும் கொதிக்கிறார். ஹெலன் கெல்லர் என்ற வாய் பேசமுடியாத, காது கேட்காத, கண்ணால் பார்க்க முடியாத ஒரு பெண்மணி செய்த சாதனையை சமன் செய்த ஆண் உலகில் இல்லை என்பதே உண்மை.

    மகளிரைப் போற்றுவதும் மனிதத்தைப் போற்றுவதும் ஒன்றே!

    Share
  • பெண்ணுக்கு உரிமை

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

     

    பெண்ணுக்கு உரிமையை மறுத்து விட்டு
    பேசிய உலகத்தில் இன்று நாங்கள்
    கண்ணுக்கு நிகராக அவரை இன்று
    காதலித்துப் போற்றுகின்றோம் அவர்கள் வாழ்க!
    விண்ணுக்குக் கூடவே பெண்கள் கீர்த்தி
    விமானத்தில் பறந்தங்கு சென்ற தாவே
    மண்ணுக்கு புதுத்தெம்பு வந்து சேரும்
    மாதர் குலம் அதைக்கண்டு மகிழ்ச்சி கொள்ளும்.

    பூட்டிய கதவுகளை உடைத்துக் கொண்டு
    புரட்சி மங்கையர்கள் எழுந்து விட்டார்
    தீட்டுவார் புதுக்கவிதை அதிலே கொஞ்சம்
    தீவிரமும் வீரமும் நிறைந்திருக்கும்
    வீட்டுக்குள் படுப்பவரும் எழுந்து கொண்டு
    விடிவுக்காய் குரல்கொடுக்க வந்து விட்டாள்
    நாட்டிலே தமிழ்ப் பஞ்சம் குறைந்து போகும்
    நான்கு புறத் திசை இருந்தும் தமிழ் முழங்கும்.

    எழுத்துக்கள் எப்பொழுதும் எங்கள் உள்ள
    எழுச்சிக்கு துணையாக நிற்க வேண்டும்!
    அழுபவர்கள் குரல்களை அடக்கி விட்டு
    ஆர்ப்பரித்து அவர் எழும்பச் செய்ய வேண்டும்!
    விழுந்து கிடப்பவரை மெல்ல மெல்ல
    வீரமுள்ள வீரர்களை மாற்ற வேண்டும்.
    பழுது பட்டும் போகாமல் தமிழை என்றும்
    பக்குவமாய் நாம் காத்து வளர்க்க வேண்டும்

    Share
  • பெண்ணின் ராஜாங்கம்!

    ஷைலஜா

    தமிழ் இலக்கியங்களின் சிறப்பே அதனை நாம் ஆழ்ந்து படிக்கும் போது அதில் வரும் சில அழகிய காட்சிகள் மனதைவிட்டு நீங்காமல் அப்படியே பதிந்துவிடுவதுதான்.

    பெரும்புலவர் ஒருவர் தாம் எழுதிய கதையில் வரும் கதாநாயகியின் பெண்மைத்தன்மையை இப்படித்தான் அழகாக படம்பிடித்துக்காட்டுகிறார்.

    அந்தக்கதையின் கதாநாயகி ஒருமகாராணி. தன்னுடைய சிறந்த நான்கு குணங்களை நாற்படையாகவும், தன்னுடைய ஐம்புலன்களையும் சிறந்த அமைச்சர்களாகவும் பெற்று ஆட்சி செய்வதாக தன் கவிதைகளில் வர்ணித்துள்ளார்.

    ரத கஜ துரக பதாதி என்று சொல்லப்படும் நால்வகைப்படையும் அவளுடைய சிறந்த குணமாகிய அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு என்பவைகளாம் .

    அடுத்து அவளுடைய மந்திரி சபையில் ஆலோசனைகூறும் அமைச்சர்களைக் கூறுகிறார்.

    மெய்- அவளுடைய உணர்ச்சிமந்திரியாம்
    வாய் – சுவை மந்திரி
    கண்-காட்சி மந்திரி
    மூக்கு- நுகர்ச்சி மந்திரி
    செவி- கேள்வி மந்திரி

    அமைச்சரவை இருந்தால் மட்டும்போதுமா அழகிய வெண்கொற்றக்குடை வேண்டாமா? அதுதான் அவளின் அழகிய முகம்!

    அவளுடைய ஆட்சிக்கு வெற்றி முரசுதான் காற்சிலம்புகள்.அதன் ‘ சல்சல் ‘ என்ற ஓசைதான் முரசொலி. அத்துடன் அவளின் இருவிழிகளும் வேற்படை ,வாட்படைகளாம்!

    இதன் கீழேதான் பெண்ணியல்பாகிய ராஜாங்கம் நடக்கிறது.

    இந்த ராஜாங்கம் எப்படி நடக்கும் ? போர்முறை எப்படி இருக்கும்?

    கேளுங்கள் அதையும்…..

    நாணப்படை யானைமீது ஏறியபடி அவளை தலைகுனியவைக்கிறது.

    அவள் வரும்போது ‘வருகிறாள்மகாராணி’ என்று காற்சிலம்புகள் முரசொலிக்கின்றன.

    அப்போது “கண்ணே” எனும் குரல்கேட்கிறது.

    உடனே செவி என்னும் பெயர் கொண்ட கேள்விமந்திரி, தன் இலாக்காவில் அந்த வார்த்தையை பதிவு செய்துகொள்கிறார்.

    இப்படி ஒருகுரல் கேட்டதை காட்சி மந்திரியாகிய கனம் கண் அவர்களுக்குத் தெரிவிக்கிறார்.

    உடனே காட்சி மந்திரி நிமிர்ந்து பார்க்கிறார்.

    அடுத்தவினாடி அச்சம்படை(அதாவது தேர்ப்படை) வந்து அந்த மகாராணியை பயமுறுத்துகிறது.

    அவள் அச்சத்தில் அழகுததும்ப நிற்கிறாள்.

    உடனே குரல் கொடுத்த் ஆண்மகன் அச்சம்தவிர்க்க அங்கே வருகிறான்.

    அவளது நுகர்ச்சிமந்திரியாகிய கனம் மூக்கு அவர்கள் தன் இலாக்காவில் அந்த ஆடவனின் மணத்தைப்பதிவு செய்து கொள்கிறார்.

    அந்த அளவுக்கு அருகில் வந்துவிட்டான் அவன்!

    அப்படியே அவளைக் கட்டிக்கொள்கிறான், உதடுகளைப் பார்த்தவன், உடனே கமலஹாசனின் சாகசம் செய்துவிடுகிறான் !:)

    சுவைமந்திரியான வாய் அவர்கள் ‘அதன் சுவை அலாதி ‘எனப்பதிவு செய்கிறார்.

    அடுத்து அவளை இறுக அணைத்துக்கொள்கிறான்.

    உணர்ச்சி மந்திரியாகிய முதல் மந்திரி மாண்புமிகு மெய் அவர்கள், அந்தப் பெண்மை உணர்ச்சிக்கு முழு அனுமதி தருகிறார்.

    நாணத்தை உடைக்கிறது படை.

    பிறகு,,பிறகு…இனிய இரவுதான் விடியும்வரை..

    இதுதான் அவள் ராஜாங்கத்தின் ஒருநாள் நடப்பு!

    இந்த நடப்பையும் ராஜாங்க இலாக்காக்களையும் பிரித்து வைத்திருக்கிறார் ஒருபுலவர்.

    யார் அந்தப்புலவர்?

    அவர்தான் புகழேந்தி!

    யார் அந்த மகாராணி?

    நளனின் மனைவி தமயந்தி!

    ‘இக்காட்சி தரப்படுவது நளவெண்பாவில்

    நாற்குணமும் நாற்படையா
    ஐம்புலனும் நல்லமைச்சா
    ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா
    வேற்படையும் வாளுமே கண்ணா
    வதன மதிக்குடைக்கீழ்
    ஆளுமே பெண்மை அரசு!’

    Share
  • மரணம்

    ஷஹான் நூர்images

    01

    நாம் கேட்டுத்தான் அமையவில்லை

    இப்பிறப்பு!

    நாம் கேட்டேனும் அமையக் கூடாதா

    இறுதி நாள் நமக்கு!

    ***********************

    02

    ஒருவனின் தொண்டைக் குழியினை

    மரணம் அடைத்து விடுகின்ற

    வேளையிலே

     

    அவன் வேண்டுவது

    என்னை விட்டுவிடு என்றிருக்காது

    குதிங்காலிலிருந்து ஏறிவந்த நீ

    கூடிய மட்டும் இதனையும் கடந்துவிடு

    என்ற கருணை எதிர்பார்ப்பாகத்தானிருக்கும்!

    ***************************

    03

    இவ்வுலகின் இறுதி மனிதன்

    இறக்கின்ற தருவாயில்

    இம்மண்ணிற்கு இதனை வேண்டுகோளாய்

    வைத்துவிட்டு மடியட்டும்!

     

    அன்புகளைப் பிரிக்கும்

    இவ்விறப்பு அற்ற இனமாய்

    தோன்றட்டும்

    இனி இங்கொரு இனம் பிறந்தால்!

     

    http://www.sho.com/sho/time-of-death/home

     

    Share
  • திருமால் திருப்புகழ் (18)

    கிரேசி மோகன்

    Picture 9

    தனத் தனந்தன தனதன தனதன
    தனத் தனந்தன தனதன தனதன
    தனத் தனந்தன தனதன தனதன-தனதான….

    ————————————————————————————————————————
    “மனத் தகந்தையை எழயெழ இடுகளimages (1)
    கணற் பிணஞ்சுடு கழியடி கொடவுடல்
    விறைத் தடங்கிடு, முறையது அருளிய -ரமணேசன்
    நிலைக் குயர்ந்திட, களமிசை பயமுற
    விதிர்த் தொடுங்கிய விஜயனை அருள்மொழி
    உரைத் தடங்கிட வழிசெயும் குருவென -வரவேணும்
    பிணித் தவன்னையின் உரலுடன் இருமரம்
    முறித் துமங்கள வடிவுற அவர்வழி
    அனுப் பவந்தது உனதுக தையிலொரு-அத்தியாயம்
    தவித் தநங்கை துருபதை அவமதை
    ஓழிக் கவந்துபு டவைகளை மலையென
    குவித் துகுந்திபு தல்வர்கள் அரசுற -அருள்வோனே
    ஜனித் தவெஞ்சிறை கதவுவி ரியஅவ
    தரித் துகங்குலில் யமுனையில் நிலவென
    அடுத் தஅன்னைம டிதனில்த வழபுகு -இடையோனே
    புவிக் களங்கமொடு பளு,அத ரும,மத
    கலிப் புழுங்கலை களையத சஉருவில்
    பணத் துறங்கிடு பதவிவி லகிவரு -பெருமாளே”
    ————————————————————————————————————-

    Share
  • பெண் எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கு – ரூ 50,000 பரிசு

    சுப்ரபாரதி மணியன்

    கடந்த 3 ஆண்டுகளில் வந்த சிறந்த நூல்களை அனுப்பலாம். கவிதை, சிறுகதை நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு,ஆய்வு, நாடகம் அன்று அனைத்துப்பிரிவு ( பெண் எழுத்தாளர்களின் சிறந்த )
    நூல்களையும் அனுப்பலாம்.

    ரூ50,000 பரிசு வழங்கப்படும்.

    3 பிரதிகள் அனுப்ப வேண்டும்.

    கடைசி தேதி : 15-4-2014

    முகவரி:

    அரிமா மு ஜீவானந்தம் இலக்கியப்பரிசு
    பாலாஜி ரோடுலைன்ஸ்,
    51/38, சரவணா தெரு,
    அவினாசி சாலை,
    திருப்பூர் 641 602

    Share
  • சீதாயணம் நாடகப் படக்கதை – ​2​3​ ​​

     

    சி. ஜெயபாரதன், கனடா

    [சென்ற வாரத் தொடர்ச்சி]

    சீதாயணம் படக்கதை -2​3

    ​நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு : வையவன்

    ஓவியம் : ஓவித்தமிழ்

     

    unnamed (2)

    unnamed (4)

    தகவல் :
    1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit to Kishan Lal Verma

    3. Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata By: Romesh C. Dutt [1969]

    6. Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma [2004]

    7.   http://jayabarathan.wordpress.com/seethayanam/  [நெஞ்சின் அலைகள்]​

    8.  ​http://www.vallamai.com/?p=21424   [வல்லமை வலைப் பக்கம்]

    **************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013)  [R-2]

    http://jayabarathan.wordpress.com/

     

     

    Share
  • அத்தத்தா… (மழலை மொழி மயக்குறும் மந்திர மொழி)

    முனைவர். ப. பானுமதி

    வெளியிடங்களில் இளம் குழந்தைகளின் நடைமுறைகளைப் பார்க்கும் போது மனத்திற்குக் கலக்கமாக இருக்கிறது. அவர்கள் பெரியவர்களிடம் மரியாதை சிறிதுமில்லாமல் நடந்து கொள்வதும் வசை மொழிகளை வார்த்தைகளாக்கி வீசுவதும் வெகு இயல்பாகிப் போயுள்ளது. இல்லங்களிலும் அன்னை, தந்தையை வைவது சர்வ சாதாரனமாகி விட்டது.

    “அத்தத்தா என்னும் நின்தேமொழி கேட்டல் இனிது”

    சங்கத் தாயின் சந்தோசச் சாரல் இது. சங்ககாலத் தாய் ஒருத்தி தன் குழந்தை அத்தத்த்தா…. என்று பிஞ்சு வாயில் எச்சில் ஊற கொஞ்சு மொழி பேசுவதைக் கேட்டு மெய்சிலிர்ப்பாள். தேன் போலும் தித்திக்கும் தீஞ்சுவை வாய்ந்தது குழந்தைகளின் வாயூறும் மழலை மொழி. இப்படி கனிந்த மொழி பேசும் குழந்தைகள் வளர் பருவத்தில் பேசாமலோ அல்லது வன்மொழி பேசுபவர்களாகவோ ஆவது எதனால்?

    ஒருவருக்கு இசை பிடிக்கும். அவர் இசையைக் கேட்பதையும் இசையைப் பற்றி பேசுவதையுமே விரும்புவார். ஒருவருக்கு இலக்கியம் பிடிக்கும் என்றால் அதைத் தவிர வேறு விஷயம் பேசும் போது சிறிது நேரத்திற்கு மேல் அவரால் அதில் கவனம் செலுத்த முடியாது. சினிமாவை நேசிப்பவர்களுக்கு அதைத் தவிர வேறு பேசினால் பிடிக்காது. சிலருக்குச்  சமையல் பிடிக்கும். சிலருக்கு அழகுக் கலை பிடிக்கும். சிலருக்கு அரசியல் பிடிக்கும். இப்படி ஒவ்வொருவரின் ரசனை ஒவ்வொரு வகையாக இருக்கும்.

    athaகுழந்தைகளுக்கு எது பிடிக்கும் என்று கேட்டால் நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது விழுக்காடு “விளையாட்டு” என்று கூறுகின்றன. “யாரைப் பிடிக்கும்?” என்று கேட்டால் “இமாம் அண்ணாச்சியை” என்கின்றன. காரணம் அவர் குழந்தைகளுடன் குழந்தையாகப் பழகுவதால். ஒருவர் தம்மைத் தாழ்த்திக் கொண்டு ஒரு நிகழ்ச்சியை நடத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல. நிகழ்ச்சியில் விரும்பத் தகாதவை ஒன்றிரண்டு இருந்த போதும் அந்தக் குழந்தைகளுக்கு நிகராக, குழந்தை மனோபாவத்துடன் இறங்கும் நிலையே அவரது அந்த நிகழ்ச்சியின் வெற்றி எனலாம்.

    தங்கள் குழந்தையின் மழலைச் சொல்லை  ரசிக்காதவர்கள்தான் குழலையும் யாழையும் இனிமையானது என்பார்கள் என்று சற்று காரசாரமான கருத்தைப் பதிவு செய்வார் திருவள்ளுவர். குட்டிக் குழந்தைகளின் மொழி மழலை மொழியா. இல்லவே இல்லை. மனக் கவலையைப் போக்கும் மந்திர மொழி. இந்த மந்திர மொழியைக் கேட்டல் இனிது. ஆம்,

    “குழவி தளர்நடை காண்டல் இனிதே
    அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே”

    என்று இனியவற்றைப் பட்டியலிடும் இனியவை நாற்பது அமிழ்தினும் இனியதான மழலைச் சொல்லை உண்டு சுவைத்து நமக்கும் எடுத்துக் காட்டுகிறது.,.

    பெற்றவர் உற்றவர் மட்டுமல்ல மற்றவரும் குழந்தையின் இனிய சொற்களைக் கேட்கப் விரும்புவர்.

     “நாவொடு நவிலா நகைபடும் தீம்சொல்

    யாவரும் விழையும் பொலந்தொடிப் புதலவன்”

    என்று கூறும் அகநானூற்றுப் பாடலும், குழந்தைகளின் மழலைச் சொல் எவருக்கும் மயக்குறும் மந்திரமாவதை எடுத்துக் காட்டும்.

    படிப்பு படிப்பு என்று கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இக்காலத்தில் இவ்வளவு இனிய மழலைச் சொல்லைக் கேட்டு ரசிக்க வேண்டிய குழந்தைகளிடம் பேசும் பலர் அக்குழந்தையை முதல் கேள்வியிலேயே முடக்கி விடுகின்றனர். குழந்தைகளிடம் பேசும் போது அவர்களின் பெயரைக் கூடக் கேட்பதில்லை. குழந்தைகளைப் பார்த்தவுடன் பெரியவர்கள் பலரிடம் எழும் முதல் வினா, ‘என்ன படிக்கிற?’ என்பதுதான். ஏனென்றால் அக்குழந்தையின் பெயர் இவர்களுக்குத் தெரிந்திருக்கும். அதனால் எடுத்த எடுப்பிலேயே படிப்பைப் பற்றி ஆரம்பித்து விடுவார்கள். வேண்டா வெறுப்பாக அக்குழந்தை, தான் படிக்கும் வகுப்பைச் சொல்லும். அதோடு விடுவதில்லை சிலர். அடுத்த வினாவாக ‘நல்லா படிப்பியா?’ என்று கேட்டு விடுவர்.

    பெண்கள் இருவர் பேச ஆரம்பித்தாலே “உங்க பொண்ணு எப்படி படிக்கிறா? என் பெண் படிக்கவே மாட்டேங்கறா. ஹோம் ஒர்க்கெல்லாம் உங்க பொண்ணு அவளே முடிச்சிடறாளா? என் பொண்ணு நான் உக்காந்த்தாத்தான் முடிக்கிறாள்” என்று படிப்பில் தொடங்கி படிப்பிலேயே முடிகிறது.

    இது ஒரு புறம். ஆண் குழந்தைகளைப் பெற்ற பெண்கள், “எப்ப பார்த்தாலும் விளையாட்டு விளையாட்டு, படிக்க மட்டும் மாட்டேங்கறான். உங்க பையன் எப்படி? என்று ஒருவர்.

    “மாசத்துக்கு இரண்டு முறையாவது அவங்க மேடம் கூப்பிட்டு விட்டுடறாங்க. என்ன செய்றதுன்னே தெரியலை” இது மற்றொருவர்.

    இது போன்ற உரையாடலைத்தான் கேட்க முடிகிறது. குழந்தையைப் பற்றி பேச்சு எடுத்தாலே பெற்றோருக்கும் அந்தப் பேச்சின் ஆரம்பம் படிப்பாகத்தான் இருந்து தொலைகிறது.

    பசுவின் வலி பறவைக்குத் தெரியுமா? நன்றாகப் படிப்பாயா என்று வினா எழுப்பினால், அந்தக் குழந்தை என்ன செய்யும். நன்றாகப் படிக்க வில்லை என்றால் “நான் நன்றாகப் படிக்க மாட்டேன்” என்றா சொல்லும். நன்றாகப் படிப்பேன் என்று சொல்ல வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி அங்கே பொய் சொல்லும் சூழலுக்கு அக்குழந்தையைக் கடத்தி விடுகிறார்கள் இந்தப் பெரியவர்கள். நன்றாகப் படிக்கும் குழந்தையாக இருந்தாலும்கூட எல்லா நேரத்திலும் படிப்பைப் பற்றிச் சிந்திக்க விரும்புவதில்லை அவை. உரையாடல் படிப்பில் தொடங்கினாலே குழந்தைகள் சுருங்கி விடும். அதற்கு மேல் அவை பேச விரும்புவதே இல்லை.

    குழந்தைகளிடம் பேசும் போது அவர்களின் உலகத்திற்குப் பெரியவர்கள் செல்ல வேண்டும் எடுத்த எடுப்பிலேயே நீ என்ன படிக்கிற? எப்படி படிப்பே? எத்தனையாவது ரேங்க் என்றெல்லாம் கேட்கும் கேள்விகளைத் தவிர்த்தல் வேண்டும். ஏனெனில் இப்படி வினாக்கள் தொடுக்கும்போது மிக மிக நன்றாகப் படிக்கும் குழந்தையாக இருந்தால் ஒரு உற்சாகத்துடன் பதில் அளிக்கலாம். அவை கூட பள்ளியைத் தவிர பிற இடங்களில் படிப்பு, பாடம் இவற்றைப் பற்றி பேச விரும்புவதில்லை. அவ்வளவாகப் படிக்காத குழந்தைகளாக இருந்தால் சொல்லவே வேண்டாம். அவை இது போன்ற வினாக்களை அறவே விரும்புவதில்லை. ஒன்று குழந்தைகள் இப்படிப் பட்டவர்களுடன் பழகுவதைத் தவிர்த்து விடுகின்றன. இல்லாவிட்டால் குழந்தைகள் மனத்தில் மூண்டெழும் சினம் ‘சொல்ல முடியாது போ’ ‘உங்கள எனக்குப் பிடிக்கல.. நீ ஒன் வீட்டுக்குப் போ’ என்று கூற ஆரம்பித்து விடுகின்றன.  இது போன்ற வினாக்கள் எழுப்பிய கோபத்தின் உச்சம் சில சமயங்களில்  ‘போடா’, ‘போடி’, போன்ற சொற்களும் குழந்தைகளின் வாயிலிருந்து வெளிப்படுகின்றன. அமுத மொழி பேசும் குழந்தைகளின் மலர் போன்ற மென்மையான வாயிலிருந்து நஞ்சு போன்ற கொடுஞ்சொற்கள் உமிழப் படுவதற்குப் பல நேரங்களில் பெரியவர்களே காரணமாகி விடுகின்றனர் என்பதை பெரியவர்கள் உணர வேண்டும்.

    மழலையரிடம் பேசும்போது பேச்சு விளையாட்டில் தொடங்கலாம். உனக்கு என்ன விளையாட்டு பிடிக்கும். உன் நண்பர்கள் யார்? யாரோட இந்த விளையாட்டு விளையாடுவ? என்று தொடங்கி விளையாட்டு, நட்பு பற்றியெல்லாம் பேசலாம். பின்பு உணவில் தொடர்ந்து, உனக்கு சாப்பிட எது பிடிக்கும்? ஐஸ் கிரீமா? நூடுல்ஸா தோசையா நூடுல்ஸ் எப்படி இருக்கும்? ஐஸ்கிரீம் எப்படி இருக்கும்? என்றெல்லாம் பேசலாம். குழந்தைகளுக்குப் பிடித்தவற்றைப் பற்றி பேசும் போது ஒரு கல்லில் இரு மாங்காய். எல்லோரிடமும் அன்பாகப் பழகும் மனநிலையை உருவாக்கலாம். மற்றும் குழந்தைகளிடம் சுவைகளை, வடிவங்களை, நிறங்களைப் பிரித்தறியும் திறனையும் வளர்க்கலாம்.

    பழைய காலத்தில் குழந்தைகள் விளையாட்டில்,

    “பூப்பறிக்க வருகிறோம் பூப்பறிக்க வருகிறோம்

    எந்த மாதம் வருகிறீர்? எந்த மாதம் வருகிறீர்?

    ஐப்பசி மாதம் வருகிறோம் ஐப்பசி மாதம் வருகிறோம்

    எந்தப் பூவைப் பறிக்கிறீர்? எந்தப் பூவைப் பறிக்கிறீர்?

    டிசம்பர் பூவைப் பறிக்கிறோம் டிசம்பர் பூவைப் பறிக்கிறோம்

    யாரை விட்டுப் பறிக்கிறீர்? யாரை விட்டுப் பறிக்கிறீர்?

    கார்த்திகை பூவை விட்டுப் பறிக்கிறோம் கார்த்திகை பூவை விட்டுப் பறிக்கிறோம்”

    என்று ஒரே நேரத்தில் தமிழ் மாதங்கள், ஆங்கில மாதங்கள், பூக்கள் பற்றியெல்லாம் தெரிந்து கொண்டனர்.

    இக்காலத்துக் குழந்தைகளின் உலகம் வேறுபட்டது, வியப்பானது, விந்தையானது.. அக்காலத்தை விட நூறு மடங்கு அறிவானதும் ஆக்கப் பூர்வமானதும் கூட. “தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனிது” என்று வள்ளுவர் கூறுவது போல, அக்காலத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இப்போது பன்மடங்கு அறிவுத்திறன் வளர்க்கும் விளையாட்டுகள் கணினியிலும், கைப்பேசியிலும் கூகுல், முகநூல்  நிறுவனத்தாரால் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன. ஏழை பணக்காரர் என்னும் வேறுபாடு இல்லாமல் குழந்தைகள் எல்லோரும் இவ்விளையாட்டுகளை விளையாடுகின்றனர்.

    குழந்தைகளோடு பேசப் போகும் பெரியவர்கள் கொஞ்சம் கொஞ்சம் அந்த விளையாட்டுகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாமே. அவர்கள் விளையாடும் கணினி விளையாட்டுகளைப் பற்றி பேசினால் குழந்தைகள் அதிகம் ஈடுபாடோடு பேசுவர். ஆகவே குழந்தைகளோடு பழகும் பெரியவர்கள் குழந்தைகள் விரும்பும் இக்கால உணவு வகைகள், விளையாட்டு வகைகள் முதலிய அவர்களின் உலகையும் அறிந்திருத்தல் அவசியத் தேவையாகின்றது. அத்துடன் கோபமில்லாமல், கடினமான அதிகாரக் குரல் இல்லாமல், குழந்தை மொழியில் பேசும் மழலை மனத்தோடு அவர்களின் உலகத்திற்குள் நுழைதல் தேவையாக இருக்கிறது. வன்மொழி பேசாது நன்மொழி பேசும் குழந்தைகளை உருவாக்குவது பெற்றோர்களின் மற்றும் குழந்தைகளைச் சுற்றி இருக்கும் பெரியவர்களின் கடமை. பெரியவர்கள் குழந்தைகளிடம் கொஞ்சு மொழியும் கெஞ்சு மொழியும் பேசாவிட்டால் குழந்தைகளிடம் நஞ்சு மொழியே மிஞ்சும்!!

     

    Share
  • எங்கு சென்றாய்

    நந்திதா

    ஏசி ரூம். நல்ல மெத்தென படுக்கை. படுக்கையில் இப்படியும் அப்படியும் புரண்டு கொண்டிருந்தான் ராமன். மனம் மட்டும் அசை போட்டுக் கொண்டே இருந்தது.  தலைக்குள் ஏதோ சுழன்று சுழன்று வந்து கொண்டே இருந்தது. தனக்குத்தானே புலம்பிக் கொண்டே இருந்தான்.

    அவன் நிலை இப்படி ஆகும் என்று ஒருவரும் எதிர்ப்பார்க்கவில்லை. உறவினர் வந்து பார்த்து விட்டுச் சென்றனர். நல்ல வேளை. கல்யாணம் ஆகவில்லை. ஆகிருந்தால் அந்தப் பெண்ணின் கதி என்ன ஆகியிருக்கு​மோ என்று அலுத்துக் கொண்டும் அழுதுகொண்டும் அகன்றனர்.

    ஆனால் பெற்றவள் அகலமுடியுமா? பொறுமையாக, இராப்  பகலாக, கண் அசராமல் பார்த்துக் கொள்கிறாள். இதோ இப்போ கூட நேரம் ஆகி விட்டதே என்று, கடிகாரத்தைப் பார்த்து விட்டு சாதம் பிசைந்து வாயிலிட்டாள். உடனே மாத்திரைகளை வாயிலிட்டு முழுங்கச் சொன்னாள்.

    ராமனின் தலையை கோதி விட்டாள். மாத்திரை வயிற்றில் தஞ்சம் அடைந்ததும் படுக்கையில் வீழ்ந்தான்.  எங்கும் போகவோ, யாரையும் பார்க்கவோ பிடிக்கவில்லை. எந்த வே​லையிலும் மனம் லயிக்கவில்லை. அவனைச் சுற்றி டி.வி., மீயுசிக் சிஸ்டம், சி.டி. புஸ்தகங்கள்.. ஊஹூம்… ஒன்றும் பிடிக்கவில்லை. தலையை தலையணையில் புதைத்துக் கொண்டு அழுதான், புரண்டான்.

    அவன் வாய் முணு முணுத்தது. உன் அருமை தெரியாமல் உன்னை உதாசீனம் செய்து விட்டேன். அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா. என்னை மன்னித்து விடு. இல்லை என்றால் மரித்து விடுவேன் போல இருக்கு.

    விபரம் தெரிந்த நாள் முதல் நீ என்னருகில் வந்ததுமே உலகத்தையே உதறி விட்டு, உன் மடியில் தஞ்சமடைந்தேன். அதை நீ மறந்து விட்டாயா. என்னைச் சுற்றி என் கண்களைச் சுற்றி வந்து, என் இமைகளை வருடிக் கொடுத்த மறுகணமே நான் என்னை மறந்து உன் பிடியில் சிக்கிக் கிடந்தேன் விடியும் வரை. அந்த சுகமே அலாதி. மில்லியன் டாலர் கொடுத்தாலும் விலைக்கு வாங்க முடியாது.

    உயர்நிலைப் பள்ளியில் படிக்க வேண்டியது மலை போல் இருக்க என்னை சீண்டிப் பார்ப்பாய். உன் பிடியிலிருந்து விலக பல முயற்சிகள், பல உத்திகள், எல்லாம் பயன் அற்றுப் போயின.சில சமயம் எனது பலஹீனத்தைப் பயன் படுத்த உன் சாகசத்தில் பலியானேன்.

    பரிக்ஷை சமயத்தில் நான் இப்படி பலியாவதைக் கண்டு என் அம்மா பதறி எனக்கு காவலாக இருந்திருக்கிறாள். அவளைக் கண்டு நீ ஓடி ஒளிந்து கொண்டாய். பரிக்ஷைக்குப் பிறகு, பள்ளி திறக்கும் வரை நாம் இருவரும் உல்லாச பறவைகளாகி கனவு உலகில் பறந்து மெய் மறந்து இருந்தோம்.

    சே! மறுபடியும் பள்ளி திறந்து படிப்பு, அதன் பிறகு, மேல் படிப்பு. பட்டங்கள். பொறுப்புகள் சேர சாதிக்க நினைத்தேன். அப்பொழுதுதான் முதன் முதலாக கொஞ்சம் உன்னிடமிருந்து விலகினேன். ஏதாவது ஒன்றைப் பெற வேண்டுமானால் மற்றொன்றை தியாகம் செய்ய வேண்டும் என்பது இயற்கையின் விதி. சத்தியமாக நிரந்தரமாக உன்னை விட்டு விலக நினைக்கவில்லை. தற்காலிகமாகத்தான். சாதனைகள் வெற்றிக​ளைக் குவித்தன. பெரிய வேலைகள் என் வீடு தேடி வந்தன. என் வேலையில் நான் கண்ட வெற்றி, அதைத் தொடர்ந்த பெருமைகள், பரிசுகள், ​கெளரவங்கள், பட்டங்கள் என்னை வெறியனாக்கியது. இப்பெருமைக​ளை நிரந்தரமாக தக்க வைத்துக்கொள்ள பேராசைக் கொண்டேன். என் பதவி  பணம், வீடு, வாகனம், ஆடம்பர வாழ்க்கையை அள்ளிக் குவித்தன. அதே சமயம் நமக்குள் ஏற்பட்ட விலகல், விரிசலாகி நிரந்தரமாக உன்னை முழுவதுமாக இழந்து தொலைத்தும் விட்டேன். உன்னை மதிக்காத என்னை உதறி விட்டு எங்கோ ஓடி ஒளிந்து கொண்டு என்னைப் பழி வாங்குகிறாய். உன் அருமையை இப்பொழுது உணர்ந்து விட்டேன். நீ கொடுத்த தண்டனைப் போதும்.

    நீ முழுவதுமாக என்னை விட்டு விலக என் உடல் கெட்டு விட்டது. உணவு செரிப்பது இல்லை. முன் போல் அலுவலத்தில் வேலையைக் குறித்த நேரத்தில் செய்ய முடியாமல் மேலதிகாரிகள் என்னை விட்டு வேறு ஆட்களைத்தேடி செல்ல எனக்கு வேலைப் போய்விட்டது. நண்பர்கள் என்னைக் கண்டு கொள்வதில்லை.

    அம்மா பாவம். எவ்வளவோ முயற்சி எடுக்கிறாள். நான் பழைய நிலைக்கு வர தினமும் கோவில், அர்ச்சனை, சதா வீட்டில் மந்திர ஓசை, யாகம் ஏன் மாந்திரீகம் கூட பார்த்து விட்டாள். பெரிய பெரிய டாக்டர்களிடமும் சென்றேன். என்னைச் சுற்றி மருந்துகள். இப்பொழுது 24 மணி நேரம் படுக்கையில் புரளுகிறேன்.

    கண்ணாடியில் என் முகம்……. எனக்கே சகிக்கவில்லை. கண்கள் சிவந்து கன்னங்கள் ஒட்டி, தோல் சுருங்கி…நடந்தால் தள்ளாட்டம். சில சமயம் ஆள் மாறாட்டமாகத் தெரிகிறது. இதற்கு காரணம் நீதான். நீயேதான். உன்னை விட்டு விலகியதற்கு நீ கொடுக்கும் தண்டனை. கொஞ்சம் கொஞ்சமாக கொல்வதற்குப் பதில் ஒரே அடியாக கொன்று விடு.

    ஐய்யோ.. நான் படும் அவஸ்தையைப் பார். எங்கே போய் விட்டாய். உன்னை எங்கே போய் தேடுவது. என் ஆஸ்தி பூராவும் செலவு செய்தால்கூட உன்னைக் கண்டு பிடித்துக் கொடுக்க முடியாது போல் இருக்கிறதே…

    டாக்டர்கள், நண்பர்கள், உறவினர்கள் கூறுவது.. நான் படும் அவஸ்தைக்கு உன் பிரிவே காரணம். எனக்கும் புரிகிறது. ஆனால் உனக்குப் புரிய வில்லையே. அம்மாவின் மடிதான் சொர்க்கம் என்பார்கள். ஆனால் நீ இல்லாததால் அது கூட முள்ளாய்த் தெரிகிறது இப்பொழுது.

    கெஞ்சிக் கேட்கிறேன். வந்து விடு. நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்து விட்டாய். எதை இழந்தாலும் உன்னை ஒருவரும் இழக்கக் கூடாது. உதாசீனம் செய்யக்கூடாது. உன்னை இழந்தால் வாழ்க்கையை இழக்க நேரிடும். பைத்தியம் போல் பேசுகிறேன் என்று நினைக்கிறார்கள். பைத்தியமாகி விடுவேன் என்ற பயத்தில் கதறுகிறேன்.

    வா… தூக்கமே…என் மேல் கருணைக் காட்டு. இயற்கையாய்த் தூங்கி பல மாதங்களாகி விட்டது. நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு ஈடு இந்த உலகில் எதுவுமே இல்லை…

    நித்திரா தேவியின் காதில் ஐ.டி.யில் வேலை செய்த ராமனின் புலம்பல் விழுமா?!

    Share
  • சிறுகை அளாவிய கூழ் – 6

    இவள் பாரதி

     
    தூங்கும்போதுpapaa1
    கனவில் அடித்துவிட்டதென
    முகபாவம் செய்து
    உதடு சுழித்து
    அழும் குழந்தை

    வீட்டுப் பெரியவர்கள் சொல்கிறார்கள்
    சாமியுடன் விளையாடும்போது
    சேட்டை செய்ததால்
    ‘சாமி’அடித்து விட்டதென

    அதுசரி
    குழந்தையை அடிக்கும் தைரியத்தை
    யார் கொடுத்தது சாமிக்கு?

    ***

    முதல் முடியிறக்கும்போது
    நீயழுத அழுகையில்
    உன்னெச்சிலிலும் வெண்நுரை வந்தது

    உன் தாத்தாவின் பிடிதளர்த்தலில்
    நீ இலேசாக திமிறியதில்
    உச்சிக்குழி மேவிய
    உன் இளந்தலையில் கீறல்பட்டு
    இரத்தம் பரவியதுகண்டு
    முகந்திருப்பியழுதேன்
    குனிந்தபடியே ஏறிட்ட
    நீ நிறுத்தியிருந்தாய்
    உன் அழுகையை

    உன் காயமாறுகிற
    காலம் தேவைப்பட்டது
    எனதழுகையை
    நிறுத்துவதற்கு
    ***

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…98

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களுடன் மனதிலிருப்பவற்றில் உறுத்துவதை பகிர்ந்து கொள்ளும் வேளையிது.

    இந்தப் பிரபஞ்சம் எதற்காக எவரால் தோற்றுவிக்கப்பட்டது என்பது பற்றியும் அதன் கூர்ப்பானது இயற்கையினால் ஆனது இதற்கும் எவருக்கும் எதுவித சம்பந்தமுமில்லை என்பது பலவகையிலான விவாதங்கள் இப்பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் இருந்து நிகழ்ந்து கொண்டேயிருந்திருக்கின்றது.

    அதைப்பற்றிய அலசலுக்குரிய ஞானம் எனக்கில்லை அதைப்பற்ரி அலசுவது எனது நோக்கமுமல்ல .

    அப்புறம் எதற்கு இந்தப் பீடிகை எனும் உங்கள் கேள்வி என் காதுகளில் விழுகிறது

    எது எப்படியாக இருப்பினும் இன்று நாம் வாழும் காலகட்டத்திலே எமது வாழ்க்கைக்கும் இப்பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கும் பிணைப்பு இருக்கத்தான் செய்கிறது.

    தனிமனிதனாக இயங்கத் தொடங்கிய மனிதன் குழுக்களாகி சமுதாயமாகி விட்ட பின்பு அப்படியான பல சமுதாயங்களை இணைத்து எழுந்த நாட்டின் நலன்களை அத்துணை சமுதாயங்களின் சார்பிலும் நிர்வகிக்க வேண்டிய தேவையின் நிமித்தமே ஒரு நாட்டின் அரசியல் சூழல் உருவாகியது.

    அவ்வரசியல் சூழலில் தாம் சார்ந்த சமூகத்தின் நலனை முன்னெடுப்பதற்காக அச்சமூகங்களின் பிரதிநிதிகளாக மிளிர்ந்தவர்கள் பலரின் கூட்டமைப்பே அரசாங்கம் என்று கோலோச்சுகிறது.

    அப்படிப்பட்ட சமூகங்களில் பல வித்தியாசமான கருத்துக்கள், வித்தியாசமான வடிவங்களில் வியாபித்திருப்பதனாலும், அச்சமூகங்களிடையே உள்ளவர்களிடையே அந்தஸ்து வித்தியாசங்கள் காணப்படுவதாலும் அவற்றினால் உருவாகும் வேறுபாடுகளிடையே காணப்படும் ஒருமித்த காரணிகளை வளர்த்து அச்சமூகங்களை ஒன்றிணைத்து அரவணைத்துச் செல்லுவதுமே இவ்வரசாங்கம் எனப்படும் அமைப்பின் தலையாய நோக்கமாக இருந்தது.

    அரசன் எனும் ஒரு தனிப்பட்ட தலைவன் தன்னிச்சையாக தனது விருப்பு,வெறுப்புகளை தனது கருத்துக்களை தனது குடிமக்கள் மீது திணிக்கும் முறையை மாற்றி மக்களின் அபிலாஷைகளை முன்னெடுத்துச் செல்லும் நாட்டின் தலைவர்களை உருவாக்குவதே அரசியலமைப்புகளின் முக்கிய செயற்பாடாக இருந்தது.
    ஒரு நாட்டில் உள்ள பல சமூகங்களில் வித்தியாசமான கருத்துக்களை கொண்டவர்கள் எதுவித அச்சமுமின்றி தமது கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு (அது அடுத்தோருவரின் உரிமைக்குப் பங்கம் விளைவிக்காத வரையில்) வாழ்வதர்கு கொடுக்கப்பட்ட சுதந்திரமே அடிப்படை ஜனநாயகமாகிறது.

    ஆனால் இன்று 2014ம் ஆண்டு விஞ்ஞான வளர்ச்சியின் அது உச்ச காலத்தில், உலகமயமாக்கல் எனும் நிலைப்பாட்டின் அதியுயர் கட்டத்தில், நாடுகள் பொருளாதார சுபீட்சத்தின் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் வேளையில்,

    இந்த ஜனநாயக அரசியல் எங்கே போய்க் கொண்டிருக்கிறது ?

    இக்கேள்விக்கு பதிலைத் தேடும் போது எமது மனம் சிறிது அச்சத்தினால் அதிருகிறது.

    வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளைத் தாண்டி ஆடம்பரமான தேவைகளுக்காய் நேரமின்றி உழைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் அன்று முக்கிய இடத்தை வகித்த சமுதாய, சமூக உணர்வுகள் எத்தகைய பங்கு வகிக்கின்றன எனும் கேள்விக்கு பதிலை என்னும் தேடிக் கொண்டே . . . . .

    உழைப்பு மனித வாழ்க்கையின் ஒரு உன்னதமான அங்கம். வாழ்க்கையில் தமது நிலையை உஅயர்த்திக் கொள்ள எண்ணி நீதியான, நியாயமான வகையில் உழைத்து முன்னேற எடுத்துக் கொள்ளும் லட்சியக் கனவு அத்தியாவசியமான ஒன்றே.

    மனிதனுடைய தேவைகளும் அத்தேவைகளுக்கான தேடல்களுல் இல்லாதிருந்திருந்தால் இன்றைய அகிலத்தில் விஞான வளர்ச்சி இத்தனை தூரம் முன்னேறியிருக்காது.

    ஆனால் இவற்றின் விலையாக மனிதாபிமானம் கொடுக்கப்படுமேயானால் அதன் விளைவு கவலைக்குரியதே !

    பக்தியின் பெயரால் எடுக்கப்பட்ட பல மூட நம்பிக்கைகளின் வழி ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி மனித மேம்பாட்டிற்கு வழிவகுத்த ஆன்மீக உணர்வுகளையே ஆட்டிப்பார்க்கும் வல்லமை கொண்டதாய் மாறியதே மிகவும் கவலைக்குரியதான ஒரு “முன்னேற்றமாகிறது” .

    இன்று பல சமயங்களில் நான் இறையுணர்வு கொண்டவன், ஆன்மீகத்தை மதிப்பவன் என்று சொல்லிவதையே பலர் தவிர்க்கும் ஒரு சூழலுக்குள் நாம் தள்ளப்பட்டு விட்டோம் என்பதே உண்மை.

    இத்தகையதோர் பின்னனியில் தான் இன்றைய மேற்குலகங்களில் கொஞ்சம் கொஞ்சமாக தலையெடுக்கும் இனத்துவேஷம் தமது நாட்டின் மீது தாம் கொண்ட மதிப்பு எனும் போர்வைக்குள் தம்மை மறைத்துக் கொண்டே எழுகிறதோ எனும் உணர்வு தலைதூக்காமலில்லை.

    இத்தகைய ஒரு உணர்வு அலையினால் உந்தப்பட்டு இன்றைய ஜனநாயக அரசியல்வாதிகள் என்று தம்மைக் கூறிக் கொள்பவர்கள் பதவிகளைத் தம்மோடு தக்க வைத்துக் கொள்வதற்காக இவ்வுணர்வு அலைகளில் தமது அரசியல் படகை ஓட்டுகின்றனரோ என்று எண்ணத் தோன்றுவதில் எவ்வித வியப்புமில்லை.

    இன்று பலநாடுகளில் பல்லின மக்கள் அந்நாட்டு குடிமக்களோடு தம்மை இணைத்துக் கொண்ட புலம்பெயர்ந்த அந்நாடுகளையே தமது நாடுகளாக எண்ணிக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

    அதைத்தவிர அத்தகைய மக்களின் அடுத்த சந்ததியின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி, வேலைவாய்ப்பு அனைத்துமே அவர்கள் வாழும் புலம்பெயர் நாடுகளின் வசமே !

    இந்தச் சூழலில் இன்றைய ஜனநாயக அரசியல் . . . . .

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு..

    கவிஞர் காவிரி மைந்தன்

    · பூந்தோட்டக் காவல்காரன் திரைப்படத்தில் கங்கை அமரன் இயற்றிய பாடலிது. வரிகள் எல்லாம் வசந்த விழா எடுத்து.. தாய்மையை வரவேற்கும் தலைவனையும் ..

    · தாய்மையைச் சுமக்கும் தலைவியையும் திரையில் விஜயகாந்த் மற்றும் ராதிகா இவர்தம் பண்பட்ட நடிப்பில் பூத்த நந்தவனம் இந்தப் பாடல். செந்தில்நாதன் இயக்கத்தில்

    · உருவான இப்படம் விஜயகாந்த் அவர்களுக்கு சிறந்த நடிகர் என்கிற பட்டத்தை வாங்கி தந்தது.

    · கணவன் மனைவி தாம்பத்ய வாழ்வில் மிக முக்கிய கட்டமான தாய்மைப்பேறு நிலையில் இருவரின் அன்பு பரிமாற்றங்களை அழகாக அற்புதமாக படம் பிடித்து காட்டியமைக்காக இயக்குனரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

    · கண்ணைக் கவரும் குளிர்ந்த காட்சிப்படுத்தியமைக்காக ராஜ ராஜனும் (ஒளிப்பதிவாளர் ) கவனத்திற்கு வருகிறார்.

    · ஒவ்வொரு வரியிலும் உன்னத சொற்களைப் பயன்படுத்தி பாடலுக்கு உயிர் கொடுத்துள்ள கங்கை அமரன் .. எழுதிய பாடல்களிலேயே மிகவும் சிறப்பான பாடல் என்று இதனைச் சொல்லலாம்.

    · இசை ஞானி என்று ஏன் அழைக்கிறோம் என்றால் .. இது தான் இசை.. இதுதான் இதயத்தை தொடும் இசை.. என்று இப்படம் முழுவதும் ஆறு பாடல்களிலும் ராஜாங்கம் நடத்தி இருக்கும் இளையராஜா இசையின் ராஜாவாகத் தெரிகிறார்.

    · மொத்தத்தில் இந்தப் பாடல் என்றைக்கும் சுகம் தரும் ரகம் .. ராகம்.. இதை தனது காந்தர்வ குரலில் வழங்கியிருக்கும் கே.ஜே. யேசுதாஸ் மற்றும் பி.சுசீலா குரல்கள் ஒரு புதுவித அனுபவத்தை தருகின்றன என்றால் அது மிகையில்லை.

    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
    சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
    செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்…

    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு

    பெண் என்னும் வீட்டில் நீ செய்த யாகம்
    கண் மூடிப்பார்த்தேன் எங்கும் இன்பம்.

    அன்பெனும் ஆற்றில் நீராடும் நேரம்
    அங்கங்கள் யாவும் இன்னும் என்னும்

    இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கதில்
    இன்பத்தை வர்ணிக்கும் என் உள்ளம் சொர்க்கத்தில்

    மெல்லிய நூலிடை வாடியதேன்
    மன்மத காவியம் மூடியதேன்
    அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள் அன்பெனும்
    கீர்த்தனை பாடியதேன்.

    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
    சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
    செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்…
    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு

    தாய்தந்த பாசம் தந்தை உன் வீரம்
    சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே

    காலங்கள் போற்றும் கைவந்து காக்கும்
    என் பிள்ளை தன்னை இங்கே இங்கே

    வீட்டுக்கும் நாட்டுக்கும் நாம் பாடும் பாட்டுக்கும்
    எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும்
    என் மகன் காவிய நாயகனே!
    என் உயிர் தேசத்து காவலனே!

    வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும்
    மானிடம் என் மகனே

    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
    சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
    செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்…
    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு

    படம்: பூந்தோட்ட காவல்காரன்
    இசை: இளையராஜா
    பாடியவர்: யேசுதாஸ். சுசீலா

     

    Sinthiya venmani from Poonthotha Kaavalkaran
    Share
  • பரம்பொருள் பாமாலை-3

    இருளா சனமிட் டுயிரில் அமர்ந்த,

    பொருளா சையினைக் களையா தவரால்,

    திருவா சகமா யுருவா னவனின்,

    அருளா சியினைப் பெறுதல் அரிது!                                                                                9

     

    பிச்சையும் பிடி சாம்பலும் கொண்டு,

    பித்தனாய் நாடு வீதியில் நின்று,

    கச்சையாய்ப் புலித் தோலைக் கொண்டு,

    நர்த்தனம் புரி நாதனைக் கண்டேன்!                                                                                 10

     

    பனியா சனமே லமர்ந்தா னவனை,

    மணிநா வசைவோ டிசையா னவனை,

    கனியா மனதோ டிருப்போ ரினையும்,

    இனிதா யணைத்துக் கனிந்திடச் செய்வான்!                                                                   11

     

    நடரா சனுடன் நடமா டிடவே,

    சுடரா னவனுள் சுடரா கிடவே,

    இடரா யுயிரைப் படரும் துன்பம்,

    தொடரா திருக்கத் தொடர்வோம் அவனை!                                                                     12

     

    காடெடுத்துக் குடியிருக்கும் கயிலை நாதன்,

    தீயெடுத்த நெற்றிக்கண் ஒளி பாய்ச்சி,

    கூடெடுத்த பிண்டத்தின் பிணி நீக்கி,

    ஓடெடுத்துக் கண்டத்தில் மாலையாகச் சூடினானே!                                                  13

     

    குறிஞ்சிக் காடென விரிந்த சடையில்,

    குளிர்நீர் கங்கை பாய்ந்து பரவ,

    குமரனை வழங்கிய நெற்றிக் கண்ணின்,

    கனலது தணிந்து கருணை பொழியும்!                                                                           14

     

    நாணல் வளைவதில் புதுமை இல்லை,

    மூங்கில் வளைவதில் புதுமை இல்லை,

    நாளும் நாதனைத் துதித் துயரும்,

    மானிட மனமே புதுமை என்போம்!                                                                                  15

     

    வானவில் வளைவதில் புதுமை இல்லை,

    அதனேழு நிறங்களில் புதுமை இல்லை,

    வளிவெற் றிடமென நிறைந்தி ருக்கும்,

    விமலன் நிறமே புதுமை என்போம்!                                                                                 16

     

     

    Share
  • திருமால் திருப்புகழ் (17)

    கிரேசி மோகன்

    DSC00151
    தனன தானதத்த தனனதானதத்தvishnu_seated_on_a_lotus_guler_school_hb55
    தனன தானதத்த -தனதான

    சிறிய நானகற்றி பெரியஞானமுற்று
    அருணை வாசியர்க்கு-மகனான
    ரமண வாயுரைத்த ரமிய மானநிட்டை
    ருசியை நானும்பெற்று-நலம்காண

    சிறகை வான்விரித்து வினதை சேய்பறக்க
    முதலை வாயிருக்கும்-களிறோனின்,
    உயிரை வாழவைக்க சுழலும் ஆழிசக்ரம்
    எறிய வேகமுற்று-விரைவோனே

    குறைய பூகனத்தை உருளும் தேர்நடத்தி,
    பெரிய பாரதத்தின்-களமேகி
    விஜய னாரவத்தை விலக சோர்வகற்றும்,
    புனித கீதைசெப்பும்-இடையோனே

    கரிய வானையொத்த நெடிய மேனிநித்ரை
    சரிய ஆழிசொக்கும் -சுகவாசி
    பெரிய பாளயத்தி பெரிய சோதரத்வ,
    அருள வாமனத்துள்-பெருமாளே

    —————————————————————————–

    Share