பெண்ணுக்கு உரிமை

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

 

பெண்ணுக்கு உரிமையை மறுத்து விட்டு
பேசிய உலகத்தில் இன்று நாங்கள்
கண்ணுக்கு நிகராக அவரை இன்று
காதலித்துப் போற்றுகின்றோம் அவர்கள் வாழ்க!
விண்ணுக்குக் கூடவே பெண்கள் கீர்த்தி
விமானத்தில் பறந்தங்கு சென்ற தாவே
மண்ணுக்கு புதுத்தெம்பு வந்து சேரும்
மாதர் குலம் அதைக்கண்டு மகிழ்ச்சி கொள்ளும்.

பூட்டிய கதவுகளை உடைத்துக் கொண்டு
புரட்சி மங்கையர்கள் எழுந்து விட்டார்
தீட்டுவார் புதுக்கவிதை அதிலே கொஞ்சம்
தீவிரமும் வீரமும் நிறைந்திருக்கும்
வீட்டுக்குள் படுப்பவரும் எழுந்து கொண்டு
விடிவுக்காய் குரல்கொடுக்க வந்து விட்டாள்
நாட்டிலே தமிழ்ப் பஞ்சம் குறைந்து போகும்
நான்கு புறத் திசை இருந்தும் தமிழ் முழங்கும்.

எழுத்துக்கள் எப்பொழுதும் எங்கள் உள்ள
எழுச்சிக்கு துணையாக நிற்க வேண்டும்!
அழுபவர்கள் குரல்களை அடக்கி விட்டு
ஆர்ப்பரித்து அவர் எழும்பச் செய்ய வேண்டும்!
விழுந்து கிடப்பவரை மெல்ல மெல்ல
வீரமுள்ள வீரர்களை மாற்ற வேண்டும்.
பழுது பட்டும் போகாமல் தமிழை என்றும்
பக்குவமாய் நாம் காத்து வளர்க்க வேண்டும்

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *