Blog

  • சாந்தி ஜெயராமன் வீட்டுக் கொலு

    சாந்தி ஜெயராமன் வீட்டுக் கொலு

    கொலு எப்படி வைக்க வேண்டும் என்ற இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டு, இதோ. சென்னை, விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள சாந்தி ஜெயராமன் வீட்டுக் கொலுவை இணையம் வழியே கண்டுகளிக்க வாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஓவியர் ஜெயராஜ் நேர்காணல் – 3

    ஓவியர் ஜெயராஜ் நேர்காணல் – 3

    கலையை விற்கலாமா? கலை என்ன வியாபாரப் பொருளா? என்று கேட்டால், ஆமாம், கலை வியாபாரம்தான் என அடித்துச் சொல்கிறார் ஓவியர் ஜெயராஜ். அவருடன் ஓவியர் ஸ்யாம் நிகழ்த்திய உரையாடலின் மூன்றாவது பகுதி, இதோ. பத்திரிகை உலகின் இன்னொரு முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் அதிரடி நேர்காணலைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குழந்தைகள் அடம்பிடித்தால் | நிர்மலா ராகவன்

    குழந்தைகள் அடம்பிடித்தால் | நிர்மலா ராகவன்

    குழந்தைகள் அடம்பிடித்தால் என்ன செய்வது? அவர்களை அவர்கள் போக்கில் விட்டால் என்ன ஆகும்? மிக முக்கியமான ஆலோசனையை வழங்குகிறார் நிர்மலா ராகவன், இந்த உரையாடலைப் பார்த்துப் பயன்பெறுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சாய் ஐஷ்வர்யா வீட்டுக் கொலு

    சாய் ஐஷ்வர்யா வீட்டுக் கொலு

    சென்னையில் ஆறாம் வகுப்புப் படிக்கும் சாய் ஐஷ்வர்யா, தங்கள் வீட்டுக் கொலுவை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். மூன்று தலைமுறைகளாகப் பாதுகாக்கப்படும், 100 ஆண்டுகள் பழைமையான ஓவியத்தைக் காட்டுகிறார். மரபின் செழுமை கொண்ட இந்தக் கொலுவைக் கண்டு களிக்க வாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கடலைப் பருப்புச் சுண்டல் செய்வது எப்படி?

    கடலைப் பருப்புச் சுண்டல் செய்வது எப்படி?

    நவராத்திரி என்றாலே கொலுவும் சுண்டலும் நமக்கு நினைவுக்கு வரும். அந்தச் சுண்டலிலும் ஏராளமான வகைகள் உண்டு. கடலைப் பருப்புச் சுண்டல் செய்வது எப்படி என்பதை இன்று செய்து காட்டுகிறார், ஜெயந்தி சுப்ரமணியன். உடன் உரையாடுகிறார், வெ.சுப்ரமணியன். இதை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஒன்றாக வாழுகின்றோம். ஒன்றாகவா வாழுகின்றோம்

    ஒன்றாக வாழுகின்றோம். ஒன்றாகவா வாழுகின்றோம்

    கௌசி

    எழுதப்படாத சட்டங்கள், மனிதாபிமானங்கள், விட்டுக்கொடுப்புகள், பிறரை மதிக்கும் பண்புகள் போன்ற காரணங்களினால், பல அமைப்புகள், பல குடும்பங்கள், பல நண்பர்கள் காலவேறுபாடுகள் அற்று ஒன்றாக வாழுகின்றார்கள். ஆனால், ஒன்றாகவா வாழுகின்றார்கள்? என்ற கேள்வியுடன் இக்கட்டுரை ஆரம்பிக்கின்றது.

    ஐந்து விரல்களும் ஒன்றாக இருப்பதில்லை உண்மைதான். ஒன்றாக இல்லை என்பதற்காக அதனை வெட்டி எறிந்துவிட முடியாது. அதனால், சமாளித்து சகித்துக் கொண்டு போக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. ஒன்றை உயர்த்திப் பார்க்க நாம் ஆசைப்படுகின்றோம். வேண்டிய சக்தி எல்லாவற்றையும்  தாரை வார்க்கின்றோம். ஆனால், அங்கு ஒத்துழைப்புக்கள் கிடைக்கவில்லை என்றால், வைத்த பற்றும் இணைந்து பயணித்த அனுபவங்களும் எம்மை மௌனமாக வழிநடத்த அடுத்தவர் கண்களுக்கு ஒன்றாக வாழுகின்றோம். ஆனால், மனதால் ஒன்றாகவா வாழுகின்றோம்?

    இப்போது ஒரு குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றது. கணவனுடைய மனதுக்கு ஏற்ற மனைவியாக வாழ அவளுக்குத் தெரியவில்லை. அவன் விருப்பு வெறுப்புகளுக்குத் தன்னை அர்ப்பணிக்கத் தெரியவில்லை. அவனைப் புரிந்து நடக்கத் தெரியாது போகத் தானும் வாழாது கணவனையும் மகிழ்ச்சியுடன் வாழ விடாது மனைவி வாழுகின்றாள். இதேபோல் மனைவியின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கத் தெரியாத மனிதனாக கணவன் வாழுகின்றான். இந்த நேரத்தில் போட்டிபோட்டுப் போராட்ட வாழ்க்கையைக் காலம் முழுவதும் கணவனும் மனைவியுமு; வாழ்கின்றனர். குடும்பத்தைக் கொண்டு நடத்த புரிந்துணர்வுகளும் விட்டுக் கொடுப்புகளும் தேவை. பெற்றெடுத்த பிள்ளைகளின் நலன், சமூகப் பார்வை போன்றவை எழுதப்படாத சட்டங்களாக இருக்க குடும்பங்கள் ஒன்றாக வாழுவதாகத் தெரிகின்றன. ஒன்றாகவா வாழுகின்றார்கள்?

    அக்கால இலக்கியங்களில் காணப்படும் இவ்வாறான நிலைமைகள் எமக்குப் பாடம் கற்றுத் தந்திருக்கின்றன. பரத்தை ஒழுக்கத்தை விரும்பி கணவன் போகின்றான் என்று தெரிந்தும் மனைவி அவனுடன் ஒன்றாகவே வாழுகின்றாள். கணவனைப் பரத்தை வீட்டிற்குக் கூடையில் சுமந்து சென்று விடுகின்றாள். இந்தக் கதை எமக்கு எதைப் போதிக்கின்றது? கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்னும் தத்துவத்தையா? இல்லை. மனதை அடக்கிக் கணவன் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதையா? இல்லாவிட்டால் இப்படித்தான் வாழ வழியில்லாத பேதைப் பெண்கள் வாழ்க்கையில் ஒன்றாக இல்லை ஆனால், ஒன்றாகவே வாழுகின்றார்கள் என்பதையா சொல்லித் தருகின்றது.

    “மந்தப் பரத்தையோடும் வருமொழியாரோடும்”  சேர்ந்து கோவலன் தன் பொருள்களை எல்லாம் இழந்தான். மாதவி சேர்க்கைக்குப் பின் கோவலன் வணிகர் கடமையாகிய பொருளீட்டல் தொழிலைச் சரிவரச் செய்யவில்லை. மன்னர்களுக்கே கடன் கொடுக்கக் கூடிய பணக்காரனாக இருந்த கோவலன் தன்னுடைய செல்வங்களை எல்லாம் இழக்கின்றான்.

    பாடமை சேக்கையுட் புக்குத் தன்பைந்தொடி
    வாடிய மேனி வருத்தங்கண் டியாவுஞ்
    சலம்புணர் கொள்கைச் சலதியொ டாடிக்
    குலந்தரு வான்பொருட் குன்றந் தொலைந்த
    இலம்பாடு நாணுத் தருமெனக் கென்ன

    என்று கூறிக் கோவலன் கண்ணகியை அடைகின்றான். இத்தனையும் அறிந்திருந்தும் கண்ணகி கோவலனுக்காகவே வாழ்ந்தாள். கோவலனைப் பிரிந்த வருத்தம் இருந்தாலும் அறச் செயல் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால், வாழ்ந்தாள்.

    அக்காலப் பெண்கள் அறம் செய்வதாக இருந்தாலும் கணவன் மனைவியுடன் இணைந்துதான் செய்யவேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் இருந்தது. இராமனும் சீதையும் வனவாசம் செய்த காலகட்டத்தில் இராமன் இல்லாத சமயத்திலே அறச்செயலில் ஈடுபட்ட காரணத்தினாலேயே இராவணனால் சீதை கடத்தப்பட்டாள் என்று உரைக்கிறது இராமாயணக் காட்சி.

    காரைக்காலம்மையார் சிறந்த இலக்கியவாதியாக இருந்த போதிலும் கணவன் பரமதத்தனுடன் ஒன்றாக வாழ்ந்தாள். சிவபக்தர்களைப் போற்றும் பண்புள்ளம் கொண்ட காரைக்காலம்மையார் மாங்கனி விடயத்தில் கணவன் அறியாது சிவபக்தனுக்கு உணவளித்த அறச் செயலை மறைப்பதற்காக  இறைவனை வேண்டி மாங்கனி பெற்றாள். பரமதத்தனுடன் வாழ்ந்தாலும் மனதளவில் அவள் வாழ்க்கை எதனை நாடியது? ஒன்றாகவே வாழ்ந்தாள். ஆனால், ஒன்றாகவா வாழ்ந்தாள்?

    புத்தரைத் திருமணம் செய்த போதே தன்னை விட்டுப் பிரியப் போகின்ற ஒரு ஞானியுடனேயே நான் குடும்பம் நடத்துகின்றேன் என்று யசோதரை தெரிந்துதான் புத்தருடன் வாழ்ந்தாள். புத்தரை குடும்ப வாழ்க்கைக்குள் அமிழ்த்திவிட முயற்சி செய்தாள். ஆனால், புத்தர் ஒன்றாக வாழ்ந்தார். வாழ்க்கை முழுவதும் துறவற சிந்தனையுடன் வாழ்ந்தார். ஒன்றாகவா வாழ்ந்தார்? இறுதியில் 29 வயதிலேயே யசோதரையை விட்டுச் சென்று விட்டார்.

    நிடத நாட்டு மன்னன் நளனை கலி பிடித்து ஆட்டுகின்றது. அரசாட்சியைத் துறந்து தமயந்தியுடன் கானகம் போகின்றான். ஒன்றாக வாழந்தான். ஆனால், தன்னோடு தன் மனைவி தமயந்தி கானகத்தில் அவலங்களை அனுபவிப்பதை நாளும் பொழுதும் அவதானித்தான். கலியின் சூட்சியினால் தன் ஆடை இழந்த வேளையிலே தன் மனைவியினுடைய ஆடைக்குள் தன்னுடைய மானத்தைக் காப்பாற்றினான். இதனால், நடுநிசியில் ஆடையைக் கிழித்து இரவில் தனியே அவளை விட்டுச் சென்றான்.

    “கானகத்துக் காதலியைக் காரிருளில் கைவிட்டுப்
    போனதுவும் வேந்தர்க்குப் போதுமோ – என்று
    சாற்றினான் அந்தவுரை தார் வேந்தன் தன்செவியில்
    ஏற்றினான் வந்தான் எதிர்”

    தான் இல்லாவிட்டால், தன் மனைவி தன்னுடைய தந்தையிடம் சென்றுவிடுவாள் என்று எண்ணம் கொண்டான். இங்கு கானகத்தில் நளன் தமயந்தியின் அர்ப்பணிப்பு எடுத்துக் காட்டப்படுகின்றது.

    இராமகிருஸ்ண பரஹம்ஸர் தன் மனைவி சாரதா அம்மையாருடன் ஒன்றாக வாழ்ந்தார்.  காமத்தின் சாயல் கூட இல்லாது இருவரும் ஒன்றாகவே வாழ்ந்தார்கள்.

    இவற்றைவிட மன்னன் தலைமையில் அவைக்களப் புலவர்களாக கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, ஒளவையார் சீத்தலைச் சாத்தனார் போன்ற புலவர்கள் ஒன்றாகவே அவையிலே வீற்றிருந்தார்கள். ஆனால், ஒன்றாகவா இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் இடையில் புலமைப் போட்டிகளும் அரண்மனை பஞ்சாயத்துகளும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன.

    தவறு கண்ட இடத்தில் எழுத்தாணியால் தன் தலையிலே குத்திக்கொள்ளும் சீத்தலைச்சாத்தனார் போலே எத்தனையோ பேர் பொருந்தாத உறவுக்குள், அமைப்புக்குள், குடும்ப வாழ்க்கைக்குள் புகுந்து தம்மைத்தாமே காயப்படுத்திக் கொண்டு ஒன்றாகவே வாழுகின்றார்கள். இது எழுதப்படாத சட்டம்.

    Share
  • கூட்டுக் குடும்பத்தில் அமைதி நிலவ | நிர்மலா ராகவன்

    கூட்டுக் குடும்பத்தில் அமைதி நிலவ | நிர்மலா ராகவன்

    இன்று இரண்டு பேர் சேர்ந்து வாழ்வதே கூட்டுக் குடும்பம்தான் என ஒரு நகைச்சுவைத் துணுக்கு உண்டு, இந்தக் கூட்டுக் குடும்பத்தில் அமைதி நிலவ என்ன செய்ய வேண்டும்? மிக முக்கியமான ஆலோசனையை வழங்கியுள்ளார் நிர்மலா ராகவன், இந்த உரையாடலைப் பார்த்துப் பயன்பெறுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    உங்கள் குடும்பத்தில் அல்லது உங்கள் நண்பர்கள் குடும்பத்தில் ஏதும் சிக்கல் இருந்தால், நீங்கள் அதுகுறித்து நிர்மலா ராகவனிடம் இலவச ஆலோசனை பெறலாம். உங்கள் கேள்விகளை இந்தப் பதிவிற்கு மறுமொழியாக இடலாம். அல்லது, annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பெருகட்டும்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தொட்டிச் செடி (சிறுகதை)

    தொட்டிச் செடி (சிறுகதை)

    த. ஆதித்தன்

    அது உணவு இடைவேளைக்கு முந்தைய வகுப்பு. வகுப்பறையில் ஆர்வத்தோடு பாடம் நடத்திக்கொண்டிருந்தாள் தன்வி டீச்சர்.

    திடீரென சாப்பாட்டு வாசம். யாரோ ஒரு மாணவன் மதிய உணவைத் திறந்ததால் வந்த வாசம் அது.

    கோபத்தோடு அனைவரையும் உற்றுப் பார்த்த தன்வி, “டிபன் பாக்ஸ் திறந்தது யாருனு மரியாதையா சொல்லிடுங்க என்றார். யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. கத்தித் தீர்த்துவிட்டாள். இயல்புக்கு வந்து வகுப்பினைத் தொடர பத்து நிமிடம் ஆயிற்று.

    கரும்பலகையில் தன்வி எழுதும்போது இரண்டாம் வரிசையில் இருந்து மெதுவான பேச்சுக்குரல். யாரென மிகச் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆவேசமாகி அடங்கினாள். மீண்டும் ஐந்து நிமிடம் வீணாயிற்று.

    பாடம் தொடர்கையில், நான்காவது வரிசையாக இருக்க வேண்டும் வைபரேட் மோடில் ஏதோ ஒரு மொபைல் ஃபோன் அதிரும் உணர்வு. இவள் பார்வையைத் திருப்ப…. அமைதியானது ஃபோன். “ஃபோனை மரியாதையா குடுத்திட்டீங்கனா…. போகும்போது குடுத்திடுறேன். நானா எடுத்தா இந்த வருசம் முழுதும் கிடைக்காது”. என்னன்னமோ பேசியும் யார் ஃபோன் என்பதை அறிய இயலா ஆத்திரத்தை அடக்கி, அறிவுரை கூறி முடிக்கையில் வகுப்பும் முடிந்தது. போராட்டம் போல் தோன்றினாலும், வகுப்பறையை விட்டு வெளிவரும்போது திருப்தியுடன் மனது.

    இந்நிகழ்வுகளை அசைபோட்டபடியே நேரலை இணையவழி வகுப்பிற்காகக் கணினியை இயக்கினாள் தன்வி. அறையினைச் சிக்கெனப் பூட்டியபடி தடையில்லாமல் பாடம் நடத்தினாள் தன்வி. மிக நன்றாக நடத்தினாலும் ஏனோ உயிர்ப்பில்லாத உணர்வு.

    கணினியை அணைத்துத் திரும்புகையில் கண்ணில் பட்டது அறைக்குள் இருந்த தொட்டிச் செடி. அழகுக்காய் வெட்டப்பட்டு செடியாய் மாறியிருந்தது அந்த மரம். சன்னல் திறந்தாள். வெளியே உயர்ந்து வளர்ந்த மரம். அதில் அணில் பழத்தைத் தின்றபடி…, குருவிகள் சலசலப்புடன் மரத்தினுள் மறைந்து விளையாடின…, காற்றின் வருடலில் கிளைகள் அசைந்தன.

    Share
  • நற்கருணை நாயகியே நலமருள வேண்டுகிறோம்!

    நற்கருணை நாயகியே நலமருள வேண்டுகிறோம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா,
    ஆஸ்திரேலியா 

    நற்கருணை நாயகியே நலமருள வேண்டுகிறோம்
    பொற்பதத்தைத் தினம்பரவி நற்கருணை வேண்டுகிறோம்
    நிற்பதுவும் நடப்பதுவும் நீநினைத்தால் நடந்துவிடும்
    உற்பதங்கள் வாராமல் உதவிடுவாய் மலைமகளே

    நாடழிக்கும் பேரரக்கன் தாண்டவத்தை ஆடுகிறான்
    நீயெழுந்து பேரரக்கன் நிட்டூரம் அழித்திடுவாய்
    கோரமுடை முகமுடைய கொரனோவாம் கொடியரக்கன்
    கொட்டமதை அடக்குதற்கு விரைந்துதிடுவாய் மலைமகளே

    துர்க்கையெனப் பெயர்தாங்கும் தூயவளே மலைமகளே
    துயர்துடைக்க நீவருவாய் எனநம்பி இருக்கின்றோம்
    பற்பலவே துன்பவலை படர்ந்தெம்மைச் சூழ்கிறது
    பார்காக்க கடைக்கண்ணால் பார்த்திடுவாய் மலைமகளே

    தளரா மனந்தந்து தயைதருவாய் மலைமகளே
    தயைகருணை மனம்நிறைய தானருள்வாய் மலைமகளே
    நிலையான ஆரோக்கியம் நீயருள வேண்டுகிறோம்
    நின்பாதம் தொழுகின்றோம் நீயருள்வாய் மலைமகளே

    வீரமெனப் பலரெண்ணி வீழ்த்துகிறார் மானுடத்தை
    வீரமதைப் பலபதர்கள் வீணாக்க வந்துள்ளார்
    வீரமதைச் சக்தியாய் கொண்டியங்கும் மலைமகளே
    தாரணியில் வீரமதைத் தர்மமாய் காட்டிடம்மா

    நின்பாதம் சரணடைந்தோம் நீதருவாய் நல்வீரம்
    நின்னருளால் நல்நினைப்பை நெஞ்சமெலாம் நிறைத்துவிடு
    நீதிநிறை வீரமதை நிலவுகில் நிறுத்திவிடு
    நின்சக்தி நிச்சயமாய் காத்துவிடும் மலைமகளே

    Share
  • சாணி யுகம் மீளுது

    சாணி யுகம் மீளுது

    சி. ஜெயபாரதன், கனடா

    சாணி யுகம்
    மீண்டும்
    வரப் போகுது!
    கிரீன் எரிசக்தி!
    மீள்புதிப்பு எரிசக்தி!
    வீட்டுக்கோர்
    மாட்டுக் கொட்டம்!
    சாணம் வீட்டுக்கு
    எரிசக்தி!
    நாட்டுக்கு மலிவு
    மின்சக்தி!
    இரட்டைக் காளைகள்
    இழுக்கும் வண்டி,
    வயலை
    உழுதிடும் ஏர்கள்,
    ஒற்றைக் குதிரை இழுக்கும்
    வண்டி,

    சைக்கிள் மிதிவண்டி,
    இவைதான்
    எதிர்காலத்தில் இயங்கும்
    சூழ்வெளி சுத்தமான
    வாகனங்கள்!
    ஆராய்ச்சி
    தேவை இல்லை!
    ராக்கெட்
    விஞ்ஞான மில்லை!

    Share
  • நின்னைச் சரணடைந்தேன் | மகாகவி பாரதியார்

    நின்னைச் சரணடைந்தேன் | மகாகவி பாரதியார்

    மகாகவி பாரதியின் ‘நின்னைச் சரணடைந்தேன்’ பாடலுடன் இந்த நவராத்திரியைக் கோலாகலமாகக் கொண்டாடுவோம். அன்னை மகாசக்தியை வணங்கி வேண்டுவோம். அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட, நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!

    பாடியவர் – கிருஷ்ணகுமார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உயர்வகைப் பொருளும் இரண்டாம்கைப் பொருளும்

    உயர்வகைப் பொருளும் இரண்டாம்கைப் பொருளும்

    சந்தைப் பொருள்களில் பல அடுக்குகள் உண்டு. உயர்வகைப் பொருள்களுக்கும் இரண்டாம்கைப் பொருள்களுக்கும் இடையில் எவ்வளவு விலை வேறுபாடு இருக்கிறது? இவற்றுக்குப் பின்னால் உள்ள வாய்ப்புகள், கணக்கீடுகள், அணுகுமுறைகள், மனநிலைகள் என்னென்ன? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார்.

    உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 147 (தம்சரணத்து)

    சேக்கிழார் பாடல் நயம் – 147 (தம்சரணத்து)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல்

    அருள்செய்த  மொழிகேளா , அடல்சரிகை  தனைஉருவிப்
    பொருள்செய்தாம்  எனப்பெற்றேன்  எனக்கொண்டு பூங்கொடிதன்
    இருள்செய்த  கருங்கூந்தல் அடியிலரிந்  தெதிர்நின்ற
    மருள்செய்த பிறப்பறுப்பார்  மலர்க்கரத்தின்  இடைநீட்ட,

    வரலாறு

    ஏயர்கோன் இல்லத்திலிருந்து மணம்பேச வந்த முதிய அறிஞர்களை  முறைப்படி  வரவேற்றார். அவர்கள் மணம்  புரிந்தேற்க விரும்பியது கேட்டு,  ‘’எங்கள்  குலவழக்கப்படி மனமகளைத் தரும் வகையில் தருவோம்!’’ என்று அனைவரின் மனமும் மகிழும்படி உரைத்துத் திருமணத்துக்கு இசைவு தந்து அனுப்பினார்.

    சென்றவர் இருவீட்டாரும் இசைந்து  சோதிட நூல் கூறிய வண்ணம் திருமண நாள் குறித்தனர். அவ்வாறே திருமணம் புரிவிக்க விரும்பிப் பெண்ணைப்  பெற்ற   தம்சுற்றத் தாருடன் மிகவும் மகிழ்ந்து, வெண்மையான முளைப் பாலிகை, பொற்கலங்களுடன் மலர்கள் பூத்த அந்த ஊரிலேயே திருமண அலங்காரங்கள் செய்வித்தார்.

    மானக்கஞ்சாறர் மகளைக் கைப்பிடிக்க வந்த  ஏயர்குலக்கோனும் தம் சுற்றத்தாருடன் மேகத்துடன்  முரசும் முழங்கும் கஞ்சாரூரின் எல்லையில் வந்தார் . இவ்வுலகம் உய்ய மானக்கஞ்சரனார் மனத்திலுள்ள இறைவனும் இத்திருமணத்திற்குப் புறப்பட்டார்.

    தம் தலையை மழித்து நடுவில் சிகையில் கோத்து  அணிந்த எலும்பு மணியாக முன்பு திருமாலின் அங்கத்தில் இருந்த எலும்பைக் கடைந்து செய்த வெண்முத்து விளங்க , காதில் குண்டலம், என்புமணி கோத்த அழகிய தாழ் வடம், திருத்தோளில் அரவை நீக்கி அணிந்த உத்தரீயம், கரிய மயிரால்  முறுக்கப்பெற்ற பூணூல், அடியார் பிறவியை நீக்கும் திருநீற்றுப்பை, இவற்றோடு . முன்கையில் எலும்புமணி  கோத்த கயிறும், அரிய மறையாகிய கோவணத்தின்மேல் மறைத்த ஆடையும் அணிந்து, நிலத்தில் படிந்த திருவடியில் பதுமம், சங்கம், மகரம், சக்கரம், தண்டம்  ஆகிய பஞ்ச முத்திரை விளங்க, சாம்பல் மூடிய தழல் போல மேனியில் பூசிய திருநீறு அணிந்தவராய் , கொடிகள் நிறைந்த வீதியில் வந்து தம் அவர் இல்லம் புகுந்தார்!

    மாவிரத முனிவர் வடிவில் வந்த இறைவனைக் கண்டு, மகிழ்ச்சியுடன்  எதிர் சென்று மானக்கஞ்சாறர் ‘’அடியேன் இல்லத்துக்கு எழுந்தருளியமையால் நானும் உய்வடைந்தேன்‘’ என்று கூறி, வந்து சேர்ந்த மாவிரத முனிவரைக்கண்டு எதிரே சென்று, பணிந்தார். முனிவர் ‘’இங்கு எதோ மங்கல  நிகழ்ச்சி நடக்கிறது போலும்! ‘’என்றார். அதற்கு விடையாக , ‘’ என் ஒரே மகளின் திருமணம் நிகழ விருக்கிறது!’’ என்றார். உடனே முனிவர் உமக்கு எல்லா நலமும் உண்டாகுக’ என்றார். ஞானம் நிறைந்த தவ முனிவர் திருவடி  பணிந்து, வீட்டுக்குள்  புகுந்து, தேன் நிறைந்த மலர்களால் புனையப்பெற்ற கூந்தலையுடைய செல்வமகளை அழைத்துக் கொண்டு வந்து, திருநீல கண்டத்தை மறைத்து வரும் அந்த முனிவரை வணங்கச் செய்தார்.

    தம்மைத் துதிப்பவர்களுக்குத் தமது திருவடித்தலம் கொடுப்பவராகிய சிவபெருமான்; தமது திருவடிகளில் வீழ்ந்து வணங்கி எழுந்து நின்ற மடமையுடைய கொடிபோல்வாரது மேகம் தழைத்ததுபோலத் தழைத்து வளர்ந்த மலரணிந்த கூந்தலின் புறத்தை நோக்கி;  கும்பிட்டு நின்ற உண்மைத் தொண்டனாரைப் பார்த்து; “அணங்கு  போல்வா ளாகிய இவளது மயிர் நமக்குப் பஞ்சவடிக்கு ஆகும்” என்று சொன்னார்.

    பாடல்

    அருள்செய்த  மொழிகேளா , அடல்சரிகை  தனைஉருவிப்
    பொருள்செய்தாம்  எனப்பெற்றேன்  எனக்கொண்டு பூங்கொடிதன்
    இருள்செய்த  கருங்கூந்தல் அடியிலரிந்  தெதிர்நின்ற
    மருள்செய்த பிறப்பறுப்பார்  மலர்க்கரத்தின்  இடைநீட்ட,

    பொருள்

    இதைக்கேட்ட மானக்கஞ்சாறர் ‘’என்மகள் கூந்தல் சிவந்னடியாரின் பஞ்சவடிக்கு ஆம் ‘’என்று  கேட்கப்பெற்றேன்  என்றெண்ணி உடைவாளை உருவி பூங்கொடிபோல்  மலர்வைத்த தம் மக்களின் கருங்கூந்தலை அரிந்து, நம் பிறப்பறுக்க வந்தவரின் மலர்ந்த கரத்தில் அளிக்க

    விளக்கம்

    பொருளல்லாத இதனையும் பொருட்படுத்தி “இது பஞ்சவடிக்கு ஆகும்” என்றுசொல்லும் பேறு பெற்றேன் என்க. இதற்கு  முற்பிறப்பிற் செய்த நல்லகருமம் என்று உரைகொண்டு, முன் செய்த நற்றவத்தால் இவ்வாறு கொடுப்பது ஒருவர்க்குக்கிட்டும்; நான் என்ன புண்ணியஞ் செய்தேன்? என்று உரைகொள்வர் மகாலிங்கையர்.

    இதனை மறுத்து, மொழிகேட்டு அதற்கு உண்மைப் பொருள் செய்து, அதன்படி செய்யத்துணிந்து, இதனை ஆம் என்று செய்யும்பேறு பெற்றேன் என மகிழ்ந்து என்று கூறுவர் ஆலாலசுந்தரம்பிள்ளை.

    இருள் செய்த என்ற தொடர்  கருநிறங்குறித்து நின்றது. ஆகுபெயர். இருள் செய்த, இருள் – மயக்கம் எனக்கொண்டு, கூந்தல் அழகியது – உடற்கூறு அழகியது என்றெல்லாம் இவ்வுடலைப் பற்றிக் கொண்டு அலையும் உலகியல்பு குறித்ததாக உரைப்பதுமாம். உலகர் அவ்வாறு மயங்காவண்ணம் காட்டும்நிலையில், இதுவரை இருள் செய்த – மயக்கம் செய்த – இனி உண்மை காணக் காரணமாயின- கூந்தல் என்று இப்பொருட்குக் குறிப்பு உரைத்துக்கொள்க.

    மானக்கஞ்சாறனார்போல் “மெய்ப்பொருளை யறிந்துண”ராத  ஏனை உலகர்க்கு மகளிரது கூந்தல் முதலியவை இருள் – மயக்கம் – செய்வன என்ற பொது இலக்கணமாகக் கூறியதாகக் கொள்க. இதனைத் தொடர்ந்து மருள் செய்த பிறப்பறுப்பார் என்றதும் உன்னுக. இருள் – ஆகுபெயராய் மேகத்தை உணர்த்தியதெனவும், செய்த – உவம உருபெனவும் கொண்டு மேகம் போன்ற கரிய கூந்தல் என்றலுமாம். மேல் மஞ்சுதழைத்தென என்றது காண்க.

    அடியில் அரிந்து என்ற தொடர்,  அந்தப் பற்றுச் சிறிதும் எஞ்சி நில்லாவகை அடியோடு களைந்து என்பதைக்  குறித்தது. . “பாசப் பழிமுதல் பறிப்பார்போல” என்றதுகாண்க.

    எதிர்நின்ற – முன்னே நின்றவராகிய பிறப்பறுக்கு முதல்வர். “தாவியவனுடனிருந்தும் காணாத தற்பரன்” என்றபடி எதிரேவரக் காணமுடியாதவர் இவருக்கு எதிர்வந்து நின்றார் என்பது குறிப்பு. எதிர்நின்ற மருள் என்று கொண்டு, உயிர்களை அறிவு மயங்கச்செய்து தம் இனமாகிய தலைவனை யடையாமல் எதிர்த்துக்கட்டி அதுகாரணமாகப் பிறப்பில்வீழ்த்தும் மயக்கம் என்றுரைக்க நிற்பதும் சிந்திக்க.

    “பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும்,
    மருளானாம் மாணாப்பிறப்பு”

    என்ற திருக்குறட் கருத்து இங்குத் தோற்றுவதனையும் உன்னுக. கூந்தல் முதலியனவாய் மெய் என்று பேர்பெற்ற பொருளல்லாத பொய்யினைப் பொருளெனக் கொண்டு அவற்றுக்காவனவே செய்து இறந்து பிறந்துழலும் மருளினால் ஆகிய மானிட வாழ்க்கையை நோக்கி இவ்வாறு கூறினார் என்பதும் காண்க.

    இனி, உலகபோகப் பொருள்கள் பொருளல்ல என்று தள்ளுதலும், அவையே பொருளாம் என்று கொண்டுழலுதலும் ஆகிய இரண்டும் தவறுடையன; சிவனுக்கும் அடியாருக்கும் பயன்படும் அவ்வளவிற்கே பொருளாம் என்றுணர மருள் செய்த பிறப்பறும் என்று சேர்த்துரைத்துக்கொள்ளுதலும் ஆம்.

    மருள்செய்த பிறப்பு அறுப்பார் , என்ற தொடர்,

    “மையல் செய்திம் மண்ணின்மேற் பிறக்கு மாறு காட்டினாய்” என்றபடி மருளினாலாகிய பிறவியினை அறுத்துத் திருவடித்தலம் கொடுப்பதற்காக எதிர்நின்று செய்த இச்செயல் முடிகின்ற இடமாதலின் இங்கு இத்தன்மையாற் கூறினார்.

    பிறப்பு அறுப்பார் மலர்க்கரம் , என்ற தொடர்  தமது கையினாற் காட்டும் ஞானமுத்திரையால் பிறப்பு அறும்வகை கூட்டுவார் என்ற குறிப்பும் காண்க. (மானக்கஞ்சாறர்) – நீட்ட – (அவர்) – மறைந்து – வந்தார் என வரும்பாட்டுடன் கூட்டி முடிக்க. பெற்றேன் என – கொண்டு – அரிந்து – நீட்ட என்ற வினைகட்கு, மானக்கஞ்சாறர்  என எழுவாய் வருவிக்க.

    இப்பாடலில்,  தம் மகளின் திருமணத்துக்குக் கூந்தலில் மலர் சூட வேண்டுமே என எண்ணாமல், இறைவனடியார்  வேண்டியதை அப்போதே வழங்க வேண்டும்  என்ற  உறுதியம் , அடியாரை இறைவனாகவே கருதும் சிவத்தொண்டும் புலனாகின்றது!

    Share
  • குருவடியைத் திருவடியாய் மனமெண்ணி மகிழ்வோம்!

    குருவடியைத் திருவடியாய் மனமெண்ணி மகிழ்வோம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் … ஆஸ்திரேலியா 

    எழுத்தை அறிவித்து எம்மகத்தைத் திறந்திட்ட
    பழுத்த அறிவுடைய பக்குவமே குருவாவாவர்
    நிலத்தை வளமாக்கி நிறைவளத்தைக் காணுகின்ற
    மனத்தை உடையவரே மாண்புடைய குருவாவார்

    அகமுறையும் அழுக்ககற்றி அறிவுச்சுடர் ஏற்றிவைத்து
    ஆதவனாய் ஒளிவிடுவார் அவரேநற் குருவாவார்
    செவிநுகரப் பலதருவார் சிறியவற்றை ஒதுக்கிடுவார்
    புவியதனில் பெருந்துணையாய் பொருந்திடுவார்  குருவாவார்

    கற்பவற்றைக் காட்டிடுவார் கருத்தமர வழியாவார்
    நிற்பதற்கும் நடப்பதற்கு நீள்வழியும் ஆகிடுவார்
    நற்பதத்தைத் தேர்ந்திடுவார் நாளுமதை மொழிந்திடுவார்
    இப்புவியில் நல்வரமாய் வாய்த்தவரே குருவாவார்

    இலக்கியமு மாவார் இலக்கணமு மாவார்
    தலைக்கனமே இல்லா தரமான குருவாவார்
    உலைக்களமாய் இருப்பார் உருக்கியே எடுப்பார்
    நிலைத்திடவே வைக்கும் நிறை குருவுமாவார்

    மெஞ்ஞானம் விஞ்ஞானம் சொல்ஞானம் தருவார்
    அஞ்ஞானம் அகல்வதற் கவர்விளக்  காகிடுவார்
    கல்ஞானம் கல்ஞானம் எனவுரைத்து நிற்பார்
    நல்ஞானம் மிக்குடையார் நம் குருவுமாவர்

    காவியமும் அறிவார் ஓவியமும் அறிவார்
    கணிதமும் தெரிவார் கற்சிலையும் வடிப்பார்
    வானிலையும் சொல்வார் வைத்தியமும் சொல்வார்
    வாழ்க்கையிலே வளமாய் வந்தமைந்தார் குருவாய்

    தலைதொட்டு நாளும் தலைநிமிர வைப்பார்
    தலைகுனியும் செயலை தலைகுனிய வைப்பார்
    உலகிடையே வாழ  உயர்கருத்தை விதைப்பார்
    உணர்வுடனே கலந்து உள்ளுறைவார் குருவாய்

    குருவாசி பெற்றிடுவார் குவலயத்தில் சிறப்பார்
    குருவாசி கிடைத்திடுதல் பெரு வரமேயாகும்
    குருவாய்த்தல் யாவருக்கும் நல் வரமேயாகும்
    குருவடியைத் திருவடியாய் மனமெண்ணி மகிழ்வோம்

    Share
  • சுவரில் வீசிய பந்து (சிறுகதை)

    சுவரில் வீசிய பந்து (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    கதிரவன். அது பெற்றோர் அவருக்குச் சூட்டிய பெயரில்லை. ஆனால், எழுத்துத்துறையில் கம்பீரமாக இருக்கவேண்டாமா என்று யோசித்து, அவர் தானே தன்னை நாமகரணம் செய்துகொண்டார்.

    முதலில் வருந்திய பெற்றோரும், அவர் ஒரு தினசரியின் ஞாயிறு பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றபின், `எல்லாம் அந்தப் பெயரோட ராசி! சும்மாவா? சூரியனில்ல!’ என்று பெருமைபேச ஆரம்பித்தார்கள்.

    அண்ணனுக்கு அந்தப் பெயரால்தான் வாழ்க்கையில் முன்னேற முடிந்தது என்று நம்பிய கதிரவனுடைய தம்பி பகலவனாக மாறினார்.

    “எதுக்கு அவசரமா வரச்சொன்னே?” என்று கேட்ட அண்ணனிடம் அழமாட்டாக்குறையாகச் சொல்ல ஆரம்பித்தார் பகலவன். “நான் பத்திரிகை ஆரம்பிச்சப்போ நீங்கதானே சொன்னீங்க, `நம்ப மக்களுக்கு நிறைய சினிமா செய்தி குடுடா. படம் பாத்துக்கிட்டிருந்தா, அவங்களுக்குச் சோறு தண்ணிகூட வேணாம்’னு?”

    “அதுக்கென்ன இப்போ? பத்திரிகை நல்லாத்தானே ஓடுது?”

    “இப்போ, ஆறு மாசமா, ரொம்ப நஷ்டம். எல்லாம் அந்தத் தாமரை பத்திரிகையால வந்த வினை!” பொருமினார் தம்பி.

    “காலேஜில படிச்சுக்குடுத்தவன் எவனோ ஆரம்பிச்சிருக்கானாம்!” அவர் குரலில் ஏளனம். “வேலையத்த வேலை! அவன் போடற குப்பையையெல்லாம் யார் படிப்பாங்க!”

    அண்ணன்-தம்பி இருவரும் மலேசிய ரப்பர் தோட்டப்புறங்களில் வளர்ந்தவர்கள். தமிழில் ஆரம்பக்கல்வி கற்றதோடு சரி. மெத்தப் படித்தவர்களைக் கண்டால் உள்ளுர பயம், வெளியில் அலட்சியம்.

    “நானும் அப்படித்தான் நினைச்சு சும்மா இருந்துட்டேன். இப்போ, அவன் போடற கதைங்க, விஷயங்களெல்லாம் சுவாரசியமா இருக்கு, நாலு விஷயம் தெரிஞ்சுக்கலாம்னு எல்லாரும் அதைத்தான் வாங்கிப் படிக்கறாங்க. நம்ப பத்திரிகை கடைங்கள்லே அப்படியே தொங்கிட்டுக் கிடக்கு!”

    கதிரவன் யோசனையில் ஆழ்ந்தார். சிறிது பொறுத்து, “அந்த ரோசாவோ, என்ன எழவோ, விக்காம செய்துட்டா?”

    “தாமரை!” என்று மெல்லிய குரலில் திருத்திய பகலவன், “வாங்கறவங்க கையைப் பிடிச்சு தடுக்கவா முடியும்?” என்றார் நிராசையுடன்.

    “எதை எப்படிச் செய்யணும்கிறதை எங்கிட்ட விடு!”

    அடுத்த வாரமே கதிரவனுடைய தினசரியில்  வெளியாகியிருந்தது அச்செய்தி: “நமது சகோதரரான ஞாயிறு பத்திரிகை ஆசிரியர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அன்னாரது குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதை ஒட்டி, இன்று மாலை நாம் ஏற்பாடு செய்திருக்கும் இரங்கல் கூட்டத்திற்கு இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் திரண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்”.

    ஞானி (உண்மைப்பெயரில்லை) அதிர்ந்தேபோனான். பதினாறு வயதில், நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் ஆசையுடன் தலைநகருக்கு வந்திருந்தவன் அவன்.

    திசை தெரியாது விழித்துக்கொண்டிருந்தவனை, “தமிழில எழுதப் படிக்கத் தெரியும்தானே? எங்கிட்ட வேலைக்கு சேர்ந்துக்க,” என்றவாறு அடைக்கலம் கொடுத்தார் கதிரவன். அவரைத் தன் தெய்வமாகவே அவன் மதித்து நடந்துகொண்டதில் வியப்பேதுமில்லை.

    இப்போதோ, சுயதலத்திற்காக வன்முறையைப் பயன்படுத்தியிருந்த அவருடைய போக்கு அவனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    “என்னங்க ஐயா, இப்படிச் செய்துட்டீங்களே!” என்று குழம்பியவனிடம், “நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா, எதுவும் தப்பில்ல,” சினிமா வசனத்தை எடுத்துக்கூறினார் கதிரவன். “அந்த நாலு பேத்தில நாம்பளும் ஒத்தங்க!”

    குருவின் இந்த உபதேசத்தால், ஒரு வழியாக உலகம் புரிவதுபோல் இருந்தது ஞானிக்கு.

    அதன்பின் `தாமரை’ முடங்கிப்போக, வாசகர்கள் மீண்டும் திரைப்படச் செய்திகளுக்கும், அரைகுறை ஆடை அணிந்த நடிகைகளின் படங்களுக்கும் தாவினர்.

    “நீங்க மந்திரியா இருக்கவேண்டியவங்கண்ணா!” என்று நன்றிப்பெருக்குடன் பகலவன் கூறியபோது, ஞானியும் அதை ஆமோதித்துத் தலையாட்டினான்.

    தம்பியின் மகிழ்ச்சி நிலைக்கவில்லை.

    “வியாபாரம் படுத்துப்போச்சுண்ணே. எல்லாப் பயலுவளும் ஹேண்ட்போன் வெச்சிருக்கானுங்க!” தான் வெளியிட்ட செய்திகள் கையிலேயே கிடைத்துவிட்டதால் யாரும் தன் பத்திரிகையை வாங்கப் பிரியப்படவில்லை என்ற கோபம் பகலவனது குரலில் வெளிப்பட்டது.

    “பேசாம, அதை மூடிட்டு, எங்கிட்ட சேர்ந்துக்க,” என்று ஆறுதல் கூறினார் கதிரவன். “அந்தப் பய ஞானிக்கு ஒழுங்கா தமிழ் எழுதத் தெரியல. நான் திரும்ப எல்லாத்தையும் திருத்தி எழுத வேண்டியிருக்கு! ஆனா, நாய்மாதிரி என் பின்னாலேயே வரான், பாவம்!”

    அதைக் கேட்டுவிட்ட ஞானியின் மனம் கொதித்தது.

    நாயா?! இருபது வருடங்கள்! எத்தனை முறை வயிற்றைக் காயப்போட்டு, மாடாக உழைத்தோம்!

    “தம்பி, டேய்! இப்பல்லாம் என் ஒடம்பு முந்திமாதிரி இல்ல. வயிறு என்னமோ பலூன்கணக்கா உப்பிக்கிட்டே போகுது,” என்று முனகினார் கதிரவன்.

    “டாக்டர் என்ன சொல்றாரு?”

    “குடியைக் குறைச்சுங்கங்கிறாரு. நான் என்னிக்குடா அந்தக் கருமத்தைத் தொட்டிருக்கேன்?”

    நடந்தால் வயிறு குறையுமோ என்ற நப்பாசையுடன் ஒருநாள் சாயங்காலம் உலவப்போனார் கதிரவன்.

    திரும்பும் வழியில் ஓரடிகூட எடுத்துவைக்க முடியாமல் போக, டாக்ஸி ஒன்றை நிறுத்தி, அதில் ஏறிக்கொண்டார்.

    அந்த வாகன ஓட்டியான மலாய்க்காரர் தன் பயணியின் முகத்தில் தெரிந்த வேதனையையும் அவருடைய பருத்த வயிற்றையும் பார்த்து ஒரு முடிவுக்கு வந்திருந்தார்.

    “இஞ்சே (INCHE — மலாயில் ஐயா)! ஒங்களுக்கு எதிரி யாராவது இருக்காங்களா?”

    “நான் பெரிய சம்பளக்காரனில்ல. எனக்கு எதிரிங்க யாரு இருக்கப்போறாங்க?” என்று அசிரத்தையாகச் சொன்னாலும், சொல்லத்தெரியாத பயம் எழுந்தது.

    “ஒங்களுக்கு யாரோ செய்வினை செஞ்சிருக்காங்க — போமோகிட்ட போய்!” அழுத்தந்திருத்தமாக வந்தது குரல்.

    போமோ (BOMOH)!

    அவரைப்பற்றித் தான் அறிந்ததையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டார் கதிரவன்.

    கிராமப்புற மருத்துவர் என்று அறியப்பட்ட மலாய் மாந்திரீகர். மருத்துவர் என்ற பெயருக்கு ஏற்றபடி, வருகிறவர்களின் நோய்களைக் குணப்படுத்துவார்.

    அத்துடன் நில்லாது, அவர்களுக்கு வேண்டாதவர்களுக்கு நோய்களையோ, ஏன், மரணத்தையோகூட உண்டாக்கும் வலிமை படைத்தவர்.

    ஒருவரது தலைமுடியை வைத்துக்கொண்டே அவருக்குத் தீமை விளைவிக்க முடியும் என்பதால்தானே, அழகுநிலையத்திற்குப் போகும் மலாய்ப்பெண்கள் வெட்டப்பட்ட தங்கள் தலைமுடியில் ஓரிழைகூட விடாது சேகரித்துக்கொண்டு வந்து, பூமிக்கு அடியில் புதைத்துவிடுகிறார்கள்!

    ஒருமுறை, போமோ ஒருவரைப் பேட்டி கண்டபோது, “ஒருத்தர் மூளை கலங்கச்செய்ய அவர் வீட்டு வெளியில இருக்கிற கதவிலே நூத்துக்கணக்கான பாம்புங்க நெளியறமாதிரி பிரமை உண்டாக்க எங்களுக்குப் படிச்சுக்குடுத்திருக்காங்க!” என்று கதிரவனிடம் ரகசியக் குரலில் கூறினார். ”செவத்திலே எறியற பந்து திரும்பி நம்பமேலேயே வந்து விழறமாதிரி, கெட்டது பண்ணினாலும் அப்படித்தான், இல்லீங்களா? அதனால, நான் அந்த பக்கமே போறதில்லே”.

    பக்கத்திலிருந்தவரின் உணர்ச்சிகளைக் கவனிக்காது, தன் அறிவைப் பறைசாற்றிக்கொள்வதுபோல், காரோட்டி தன்பாட்டில் பேசிக்கொண்டேபோனார்: “நமக்குப் பிடிக்காத ஒருத்தர் சாக, அவர் வயிறு பெருத்துக்கிட்டே போகச் செய்வாங்க. அதுக்குப் பேரு..”.

    “எப்படி மாத்தறது?” ஈனஸ்வரத்தில் கேட்டார் கதிரவன்.

    “கஷ்டம். சூனியம் போட்டவரால மட்டும்தான் அது முடியும். யாருன்னு எங்கே போய் தேடறது!”

    தான் மரணத்தின் வாயிலில் இருக்கிறோம் என்று சந்தேகமறப் புரிந்தவுடன், எதிலும் பற்று இல்லாது போயிற்று கதிரவனுக்கு.

    அவர் படுத்த படுக்கையாக இருந்தபோது, தான் விடாது, சுவரில் பந்து எறிவதுபோலவும், அது திரும்பி வந்து தன்னையே தாக்குவதுபோலும் தோன்றிக்கொண்டே இருக்க, “தம்பி, தாமரை” என்று பிதற்ற ஆரம்பித்தார்.

    கூடை நிறைய பழங்களுடன் அவரைப் பார்க்க வந்த ஞானியின் உடலில் புதிய மெருகு ஏறியிருப்பது அவ்வளவு கலங்கிய நிலையிலும் அவர் கண்களுக்குத் தப்பவில்லை.

    “நீங்க இருந்த எடத்திலே என்னைப் போட்டிருக்காங்க. எல்லாம் ஒங்க ஆசிதான்! சீக்கிரமே ஒடம்பு நல்லாகி, வந்துடுங்க ஐயா!” என்ற அவனுடைய போலிப்பணிவும் கரிசனமும் நன்றாகவே புரிந்தது.

    விரைவிலேயே, `எனது ஆசான்’ என்ற தலைப்பின்கீழ் அவரது மரணச்செய்தியை ஒரு பக்கத்தில் வெளியிட்டிருந்தான் ஞானி. கூடவே, ஒரு கண்ணீர்க்கவிதை வேறு!

    அவரது அகால மரணத்திற்கு, `மாரடைப்பு, குடிப்பழக்கம், மன இறுக்கம்’ என்று ஏதேதோ காரணங்கள் கற்பிக்கப்பட்டன.

    ஆனால், கதிரவனுக்கு மட்டும் தெரிந்திருந்தது துரோகம் செய்தது யாரென்று. `நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா, எதுவும் தப்பில்ல. அந்த நாலு பேத்தில நாம்பளும் ஒத்தங்க!’ என்று அவனுக்குப் போதித்ததே அவர்தானே!

    அதனால்தான், இறக்கும் தறுவாயில் அவர் இதழில் ஒரு சிறு புன்னகை நெளிந்திருந்ததோ?

    Share