Blog
-

திருமாலடி பிடிப்பாவை
சத்தியமணிபொடியான் தானமிட நெடியான் அடியளக்கஅடியான் கல்லையே அகலிகை ஆக்கும்முடியான் மூவுலகின் இடையான் திருமலைப்படியான் அரங்கக் குடியானைப் பிடிமனமே…1ஆவினம் அழைக்க அதன்மடி பால்சுரக்கபூவினம் மொட்டுரிய பொன்வண் டெச்சமிடகூவினம் பாபயில கோபியர் மத்தொலிக்கநாவினம் கோவிந்தா வெனுநாதனைப் பிடிமனமே…2 -

தமிழ் வருமோ சொல்!
சத்தியமணி
தேவாரம் படிக்காது திருவாசகம் பிடிக்காது
பூவாரம் தொடுக்காது ஓதுவார்பண் கேட்காது
தாவாரச் சிவன்கோயில் இடிப்போரைத் தடுக்காது
நாவோரம் துவேசத்தால் நற்றமிழ் வருமோசொல்
அருட்பாவைத் திவ்விய பிரபந்தங்கள் பாடாமல்
கருப்பாவைக் கம்பன்தன் ராமகதைக் கேளாமல்
திருப்பாவை ஆண்டாளை வேசியெனச் சொல்லிக்
கொடும்பாவி எரித்தாலே கனித்தமிழ் வருமோசொல்
பக்திக்கு விழையாமல் பண்பாட்டைக் குறைகூறி
புத்திக்கு ஏற்றாமல் வழிபாட்டைக் கறையாக்கி
சித்திக்கு மூடமெனும் பழக்கமென முடக்கித்தன்
யுத்திக்கு வேடமிடின் பைந்தமிழே வருமோசொல்
உருவில் சிவனாக அருவில் சிவனாக
திருவில் சிவனாகக் குருவில் சிவனாக
இருளில் சிவனாக எதிலும் இவனாக
அருளில் சிவனேதான் மறையில் சிவனான்
அவனைப் புரியாது எதுவும் தெரியாது
தவணைத் தவறுக்கு கர்மவினை புரியாது
தமிழ் வளர்த்த ஆன்மீகம் தர்மநெறியோடு
தமிழ் வளர்த்த ஆண்டவர் அறம்பொருளோடு
தமிழ் வளர்த்த இன்பவீடு பேரளித்தான்றோரின்
தமிழ் வளர்த்த சேவையைப் பழித்தால் தமிழ்வருமோ? -

மாமியார் Vs மருமகள் | நிர்மலா ராகவன்
சந்திப்பு: அண்ணாகண்ணன்
மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே நிகழும் சண்டைகள் குறித்து நிறையப் படித்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம். எப்படிச் சண்டை ஆரம்பிக்கிறது? இதில் கணவன் என்ன செய்ய வேண்டும்? சண்டையைத் தீர்ப்பது எப்படி? தவிர்ப்பது எப்படி? ஆலோசனை வழங்குகிறார் எழுத்தாளர் நிர்மலா ராகவன்.
உங்கள் குடும்பத்தில் அல்லது உங்கள் நண்பர்கள் குடும்பத்தில் ஏதும் சிக்கல் இருந்தால், நீங்கள் அதுகுறித்து நிர்மலா ராகவனிடம் இலவச ஆலோசனை பெறலாம். உங்கள் கேள்விகளை இந்தப் பதிவிற்கு மறுமொழியாக இடலாம். அல்லது, annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 35
புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.comகவிதை அழகு பார்க்கும் கண்ணாடிகள் உவமங்கள்!
முன்னுரை
படைப்பதோடு முடிந்து விடுகிறது படைப்பாளன் பணி. சுவைப்பதோடு நிறைவடைகிறது ரசிகனின் மனம்! படித்தலும் சுவைத்தலும் ஆய்தலும் நீட்டித்துக் கொண்டே போவதால் திறனாய்வாளனின் பணிக்கு ஆதி உண்டு. அந்தம் இல்லை. உவமம் பொருட்பகுதி என்பதால் ஒரு கவிதைக்கான பொலிவும் தெளிவும் அதில் பயன்படுத்தப்படும் உவமத்தைப் பொருத்தே அமையும். சுருக்கியுரைப்பின் கவிதை தன் உள்ளடக்க வெளிப்பாட்டு நேர்த்தியைச் சரிபார்த்துக் கொள்ளும் கண்ணாடியாகவே உவமம் அமைந்திருக்கிறது. அது போன்ற சில கண்ணாடிகளை இக்கட்டுரை அடையாளப்படுத்துகிறது.
ஓரூர் உண்மை! உள்ளூர் அருமை!
சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் நல்லியக்கோடன். இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனாரால் பாடப்பெற்றவன். நத்தத்தனார் பாடிய நல்லியக்கோடனைப் புறத்திணை நன்னாகனாரும் பாடியிருக்கிறார். நன்னாகனார் ஒருமுறை நல்லியக்கோடனைக் காணச் சென்ற பொழுதுதான் அவனுடைய தன்மையும் வள்ளன்மையும் தெரிந்திருக்கிறது. அதுவரை நல்லியக்கோடனின் வள்ளன்மை அறியாது அவனால் புரக்கப்படாது வீணே கழிந்த தன் வாழ்நாள்களுக்காக வருந்தியது அவர் நெஞ்சம். அப்போது பாடிய பாடலில்,
“பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
ஓரூர் உண்மையின் இகந்தோர் போலக்
காணாது கழிந்த வைகல் காணா
வழிநாட்கு இரங்கும் என் நெஞ்சம்! அவன்
கழிமென் சாயல் காண்டொறு நினைந்தே!” (புறம்.176)என்ற வரிகளில்தான் வெண்ணெயிருக்க நெய்க்கு அலைந்த தன் அறியாமைக்கு ஒர் உவமம் சொல்கிறார். பாரியின் பறம்புச் சுனை நீர் “‘கைவண் பாரி தீம்பெரும் பைஞ்சுனை” (அகம். 78) “பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்” (குறுந். 166) எனப் பிறராலும் பாடப்பெற்ற பெருமையுடையது. உள்ளூரில் அகப்படும் அரியபொருள் அரிதாகாது எளிதாகக் கருதப்படுவதைப் போலப் பாரியின் சுனைநீரின் அருமையும் உணரப்படாது போயிற்று. எல்லாராலும் அறியப்பட்டுப் பயன்பட்ட பாரியின் சுனை நீர் அருமையை அறியாது, அதனைப் பருகாது வீணானவரைப் போல, நல்லயக்கோடனின் பெருமையை உணராது தானும் துன்பப்பட்டதாக நன்னாகனார் பாடுகிறார்.
எல்லாப் பூவும் இறைவனுக்கு மணக்கும்!
வேள்பாரியைக் கபிலர் கடவுளோடு ஒப்பிட்டுப் பாடுகிறார்!. இந்த ஒப்பீட்டில் அவர் சுட்டும் உவமம், நுண்ணியமுடையது. எருக்கம் பூவை ஏற்கின்ற இறைவனைப் பாரியோடு ஒப்பிடுகிறார். மக்கள் விரும்பாத பூவை இறைவன் ஏற்கிறார். எருக்கம் பூவிற்குக் கொடுக்கும் அடைகள் அதன் புறஅழகைப் பெருக்குமாயினும் மக்கள் அதனை ஏற்பதில்லை. ‘குவியிணர்ப் புல் இலை எருக்கம்’ என்கிறார். ‘குவிமுகிழ் எருக்கு’ என்பது இன்னொரு பார்வை. ‘குவியிணர் எருக்கின் அதர் பூங்கண்ணி’ என்பதும் பிறிதொரு பார்வை. கம்பர் கூட ‘வெள்ளெருக்கம் சடைமுடியான்’ என அடைகொடுத்தே சிவனைச் சுட்டுவார். கொத்தாகப் பூத்தாலும் புல்லிலைகள் இருப்பினும் இறைவன் அதனை வெறுப்பதில்லை.
“நல்லவும் தீயவும் அல்ல குவியிணர்ப்
புல் இலை எருக்கம் ஆயினும்; உடையவை
கடவுள் பேணேம்” என்னா ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்
கடவன் பாரி கைவண்மையே!” (புறம். 106)நறுமணம் இன்மையின் நற்பூ வகையிலும் இறைவன் விரும்பிச் சூடுதலின் தீயபூ வகையிலும் சேராதது எருக்கம்பூ. ஆனால் இறைவன் சூடிக்கொள்கிறான். அதுபோலப் பாரியை நாடிச் செல்வோர் அறியாமை உடையவராயினும் வறுமையால் மெல்லியராயினும் வேள்பாரி தன் வள்ளன்மையிலிருந்துப் பிறழமாட்டான். மலரில் பேதம் பார்க்காத இறைவனைப், புரக்கப்பட வேண்டியவரின் தரம் பார்க்காத பாரியோடு ஒப்பிடுகிறார் கபிலர். ஆழமான சமுதாயக் கருத்தினை உலகியலோடு தொடர்புடைய ஒரு பொருளை உவமமாக வைத்துக் கூறுவது காண்க.
செருப்பிடைப் பட்ட சிறுபரல்
இன்னா செய்தார்க்கு மீளச் செய்வது நன்னயமேயானாலும் அதனை ‘ஒறுத்தல்’ என்ற சொல்லால் திருக்குறள் குறிப்பது சிந்திக்கத்தக்கது. தூக்குத்தண்டனைக் கைதிக்கு ஆயுள் தண்டனை விதிப்பது குற்றத்தின் தன்மை பொருத்தது என்பதோடு உளவியல் நுட்பம் வாய்ந்தது. தூக்கு உயிர்போக்கும். ஆயுள் உயிர்காக்கும். இந்த முரண் உணரத்தக்கது. ஆனால் முன்னது ஒரு நொடியில் முடிந்து விடும். பின்னது அத்தகையதன்று. உயிர் தவணைமுறையில் கழியும். குற்றம் செய்தவன் தன் குற்றத்திற்காக ஒவ்வொரு நொடியும் எண்ணி மருகுவான். ஆழ்ந்த சிந்தனையாளர் பின்னதையே முன்னெடுப்பர். அந்தக் காலத்தில் அப்படி முன்னெடுத்த மன்னன் ஒருவன் இருந்திருக்கிறான். பெயர் தெரியாது. “கணைக்கால், அம் வயிறு, அகன்ற மார்பு, பைங்கண், குச்சின் இரைத்த குரை மயிர் மேவாய்ச், செவியிறந்து தாழ்தரும் கவுளன் வில்லோடு யார் கொலோ எளியன்?” (புறம். 257) என்று வண்ணனை செய்யப்படும் இவனை, உண்டாட்டில் வைத்துக் கொண்டாடுகிறார்கள் அவன் நாட்டார்!
“செருப்பிடைச் சிறுபரல் அன்னன்”
பகைவர்தம் ஆநிரையைக் கவர்ந்து கொண்டு வந்து தம் நாட்டார்க்கு வழங்கிய அவன் பகைவர்க்குத் துன்பம் தருவதில் எத்தகையவன் என்றால் செருப்புக்கு இடையே நுழைந்து அணிந்தவனுக்கு இடையறாது தொல்லை கொடுக்கும் பரலைப் போன்றவனாம்.
“தருக்கி யொழுகித் தகவல்ல செய்தும்
பெருக்க மதித்தபின் பேணாமை செய்தும்
கரப்பிடை உள்ளம் கனற்று பவரே
செருப்பிடைப் பட்ட பரல்” (பழ. 202)என்னும் பதினெண் கீழ்க்கணக்கில் ‘செருப்பிடைப் பட்ட பரல்’ என்னுந் தொடர் வேறொரு பொருண்மையை விளக்கி நிற்கிறது. உவமம் சொல்லும் பெருமக்கள் உலகியலை உற்று நோக்குந் திறத்தை அவர்கள் கையாளும் உவமங்களாலேயே புரிந்து கொள்ள இயலும்.
அச்சுடை சாகாட்டு ஆரமும் பல்லியும்
இழப்பு கண்டு உற்றார் உறவினர் புலம்புவதும் இறந்தவரால் புரக்கப்பட்டவர் புலம்பினாலும் இரண்டுமே கையறுநிலைதான். மனைவி மாண்டு கணவன் அரற்றுவதும் கணவன் மாண்டு மனைவி புலம்புவதும் இத்துறையே!, இறப்பும் இழப்பும் சூழல்களுக்கு அப்பாற்பட்டவையாதலின் பாலைவனத்தில் எதிர்பாராக் காரணங்களால் தன் கணவனைப் பறிகொடுக்கிறாள் ஒருத்தி. இதுகாறும் இணைந்தே வாழ்ந்தவள் அந்நொடி தனிமை உணர்கிறாள். அதனால் தன்னையும் அவனோடு சேர்த்தே புதைத்துவிட ஒரு முதுமக்கள் தாழி தேவைப்படுகிறது அவளுக்கு. தாழி செய்பவனிடம் இருவரையும் சேர்த்துப் புதைக்குமாறு அகன்ற தாழி செய்து உதவ இப்படி வேண்டுகிறாள்.
“கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
அச்சுடை சாகாட்டு ஆரம் பற்றிய
சிறு வெண்பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருள்
வியன் மலர் அகல்பொழில் ஈமத்தாழி
அகலி தாக வனைமோ!
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே!” (புறம். 256)இக்கால இணையர்கள் தங்களை ஒப்பிட்டுக் கொள்வதே ஒரு தனி ரகம்! மலரும் மணமும் என்றிருந்தது இன்றைக்கும் ‘மந்தையும் மாடும்’ என்ற அளவுக்கு வந்துவிட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ‘ஆரக்காலில் ஒட்டிக் கொண்ட பல்லியாய்’ வாழ்ந்திருக்கிறாள் மனைவி!. அன்றைக்குக் கணவனுக்கு மனைவியாக வாழ்ந்தவள் இன்றைக்குக் கவிதையில் பொருளாக வாழ்கிறாள். வாழ்வில் மட்டுமன்று சாவிலும் ஒன்றாக வேண்டும் என்பதற்காக அகன்ற தாழியை வேண்டுகிறாள். ஒரே மாலையில் இருவர் கழுத்தும் இருப்பதை விரும்பும் தற்காலத்திற்கும் ஒரே தாழியில் இருவர் அடங்க வேண்டும் என்னும் அக்காலத்திற்கும் காலம் மட்டுமா இடைவெளி? என்ன தெரிகிறது இதனால்? ஒட்டி உறவாடியவர்கள் விட்டுப் பிரிய எண்ணுவதில்லை.
விதவைபோல் ஆன வீடு
‘மனைக்கு விளக்கம் மடவார்’ என்பது முதுமொழி. நவீன காலத்தில் மங்கல நாட்களில் ஆண்கள் வீட்டில் விளக்கேற்றுவது புரட்சியாகத் தெரியலாமே தவிர மனைக்கு மங்கலமாகாது. ‘வீடு வெறிச்சோடி விட்டது’ என்பது உலக வழக்கு! மகிழ்ச்சியோடு சில நாளே தங்கிய விருந்தினர் சென்றால் கூட வீடு வெறிச்சோடிவிடும் என்றால் விளக்கேற்றிய மனைவி இழந்த மனை எப்படி இருக்கும்? அணிகலன் இழந்த கைம்பெண்ணைப போல் இருக்குமாம்!.
“அந்தோ எந்தை அடையாப் போரில்
வண்டுபடு நறவின் தண்டா மண்டையொடு
வரையாப் பெருஞ்சோற்று முரிவார் முற்றம்
வெற்று ஆற்று அம்பியின் எற்று? அற்று ஆக!
…………………………………………………………………………………………
நிரை இவண் வந்து நடுகலாகிய
வென்வேல் விடலை இன்மையின் புலம்பிக்
கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிக்
கழிகலன் மகடூஉப் போலப்
புல் என்றனைப் பல் அணி இழந்தே! “(புறம். 261)‘காரியாதி’ என்னும் மன்னனுக்குப் பாடிய கையறு நிலையை ஆவூர் மூலங்கிழார் ஆதியின் முரிவார் முற்றத்தின் இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒப்பிட்டுப் பாடுகிறார். காரியாதி இருந்தபோது வரையாப் பெருஞ்சோற்று முரிவார் முற்றம் அவன் இறந்தபிறகு கழிகலன் மகடூஉப்போலப் பொலிவிழந்ததாகக் கூறுகிறார். ‘கழிகலன் மகடூஉ’ என்னும் கிழாரின் தொடருக்குக் கம்பன் உரையெழுதியிருக்கிறான். வாலியை இழந்து விதவையான தாரையை இப்படி நோக்குகிறான் இலக்குவன்.
“மங்கல அணியை நீக்கி மணி அணி துறந்து வாச
கொங்கலர் கோதை மாற்றிக் குங்குமம் சாந்தம் கொட்டாப்
பொங்கு வெம் முலைகள் பூகக் கழுத்தொடு மறையப் போர்த்த
நங்கையைக் கண்ட வள்ளல் நயனங்கள் பனிப்ப நின்றான்” (கம்ப. 4320)இந்த விதவைக் கோலத்தில் இருப்பது ஒரு குரங்கு என்பதை எவரும் நினைவுக்குக் கொண்டு வர இயலாது. தாரையின் இந்தக் கோலத்தைக் கண்ட இலக்குவனுக்குத்தன் தாயரின் கைம்மைக் கோலம் நினைவுக்கு வந்ததாம். அங்கேதான் கவிஞன் கம்பன் ஒரு கவிச்சக்கரவர்த்தியாகிறான்.
“இனையர் ஆம் என்னை ஈன்ற இருவரும் என்ன வந்த
நினைவினால் அயர்ப்பு சென்ற நெஞ்சினன் நெடிது நின்றான்” (கம்ப. 4321)குரங்கைத் தாயாக எண்ணும் பாத்திர செய்நேர்த்தி, உலக உயிர்களை ஒன்றாக எண்ண வைக்கும் இறையுள்ளம், தாயின் நிலை மறக்காத தனையர்களின் இயல்பு எதிரியின் மனைவியானாலும் பெண்மைக்குத் தரப்படும் மதிப்பு என்று கம்பனின் கவியாற்றல் எல்லை மீறிச் செல்வதைக் காணலாம். இந்த உவமங்களைத் தொகுத்து நோக்கினாலோயொழிய உவமச் சிறப்பு அவ்வளவாகப் புலப்படாது. “தாயரைப் போல் தாரையிருக்கிறாள், அந்தத் தாரையைப்போலப் புறநானூற்றுக் கைம்பெண் இருக்கிறாள். கலன்கழிந்த அந்தக் கைம்பெண்ணைப் போலக் காரியாதியை இழந்த இல்லம் இருக்கிறது என்ற நிரலில் வைத்துப் பார்த்தால் இலக்கியச் சுவை என்ன என்பது புரியக் கூடும். ‘கலன் கழிந்த மகடூஉ’ என்பதை விளக்கத்தான் தாரையும் அயோத்தித் தாயரும் இங்கே துணைக்கழைக்கப்பட்டார்கள் என்பது கருதத்தக்கது. “இந்த மன்னன் படையெடுத்தபோது அழிந்த நகரத்தைப் போல் இவள் நலன் அழிந்தது” என்று தலைவன் பிரிவால் இழந்த நலனுக்கு அழிந்த நகரத்தை அகத்திணையில் உவமமாக்கிய புலவர்கள் உண்டு. மூலங்கிழார் ஒளியிழந்த வீட்டிற்குக் களையிழந்த கைம்பெண்ணை உவமமாக்கியிருப்பது அவலத்தை மிகுவிப்பதாக உள்ளது, மேலே சொல்லப்பட்ட கைம்பெண்களின் கோலத்தை மனத்தில் கொண்டு வந்து ‘கழிகலன் மகடூஉ’வைக் காட்சிப்படுத்திக் கொண்டு காரியாதியின் இல்லத்தை நோக்கினால் தெரியும் உவமத்தின் நுண்ணியம்!
இல்லது படைக்கவும் இவனால் இயலும்!
சங்க இலக்கியம் ஓர் உவமத் தோரணம். ஆனால் அவற்றுள் பெரும்பாலானவை அனுபவப் பதிவுகள். அழகியல் துளிகள் அல்ல. கற்பனைப் புள்ளிகள் குறைவு. இதனை வேறுவகையாகச் சொன்னால் மக்கள் வழக்கில் உவமத்தைப் பயன்படுத்துவதற்கும் செய்யுள் வழக்கில் உவமத்தைப் பயன்படுத்துவதற்கும் வேறுபாடு உண்டு. முன்னது இயற்கை. பின்னது செயற்கை. ஆனால் சங்க இலக்கியம் இதற்கு மாறுபட்டது. புலவனின் புலமையாற்றல் பின்னதில் வெளிப்படுவதென்றால் புலவனின் சமுதாய நோக்கும் வாழ்வியல் பட்டறிவும் முன்னதில் வெளிப்படும்.
“கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல்
வில்லேர் வாழ்க்கை சீறூர் மதவலி
நனி நல் கூர்ந்தனன் ஆயினும் பனிமிகப்
புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும்
கல்லா இடையன் போலக் குறிப்பின்
இல்லது படைக்கவும் வல்லன்., உள்ளது
தவச்சிறிது ஆயினும் மிகப் பலர் என்னாள்
நீள்நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும்
இல் பொலி மகடூஉப் போலச் சிற்சில
வரிசையும் அளிக்கவும் வல்லன் உரிதினின்
காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்
போகுபலி வெண்சோறு போலத்
தூவவும் வல்லன் அவன் தூவுங்காலே!” (புறம். 331)பாட்டில் உள்ள உவமத்தைச் சுவைக்கிறபோது உவமத்தை மட்டுமே தனியெடுத்துச் சுவைக்கலாம். பாயாசத்தில் கிடக்கும் முந்திரியையும் திராட்சையையும் போல. பாட்டோடு கலந்தும் சுவைக்கலாம் சோற்றில் உப்பைப் போல. சங்க இலக்கிய உவமங்கள் பெரும்பாலும் பின்னதைச் சார்ந்தது. இதில் மூன்று வல்லமைகள் காட்டப்படுகின்றன.
- இல்லது படைக்கவும் வல்லன்
- வரிசையில் அளிக்கவும் வல்லன்
- தூவவும் வல்லன்.
இம்மூவகை வல்லாண்மையை அவற்றை விளக்கும் உவமங்களோடு சுவைக்கிறபோதுதான் பாட்டு இனிக்கிறது.
கல்லா இடையன் போல வல்லன்
இல்லாமையைக் காரணமாக்கி ‘இயலாமையை’ முன்னிறுத்தி மறுதலிப்பதைவிட முயற்சியினால் இல்லாமையைப் போக்கிக் கொள்வது சிறந்தது. மிக்க வறுமையுற்ற காலத்திலும் வறுமையை முன்னிறுத்தாது, ‘குளிரைத் தவிர்ப்பதற்கு வேண்டிய நெருப்பைத் தீக்கடைக்கோலைக் கொண்டு கடைந்துத் தீயுண்டாக்கும் கல்லாத இடையன் போலத்’ தித்தன் உதவுவான் என்னும் இந்த உவம விளக்கம் தித்தன் வறுமையுற்ற காலத்தும் இல்லையென்னாது வந்தார்க்கும் வழங்கும் நெறியைத்தானே கண்டறிந்து ஈட்டி வழங்குவான் என்னும் உண்மை உணர்த்தி நின்றது.
இல்பொலி மகடூஉப் போல வல்லன்
இல்லாமையைப் போக்கிக் கொள்ளும் நெறி அவ்வாறெனின் உள்ளது சிறிதாகிப் புரக்கப்பட வேண்டியவர் பலராயின் தித்தன் எப்படிச் செயல்படுவான்? இல்பொலி மகடூஉப் போலச் செயல்படுவானாம்!. அவள் எப்படிச் செயல்படுவாள்? தன்பால் உள்ளது சிறிதாயினும் அதனை இவறுதல் இன்றி யாவர்க்கும் அவரவர் வரிசைக்குத் தக்க முறைப்படுத்தி வழங்குவதனால், கொள்வதனால் கொள்வார்க்கு வருத்தம் பயவாதாம். ‘நெடிய பந்தர்க் கீழ் இருத்தி உணவை முறைமுறையாகத் தந்து உண்பிக்கும் இல்வாழ்க்கையின் சிறந்த மகளைப்போல’ என்னும் அகன்ற விளக்கத்தை இல்பொலி மகடூஉ என்னும் இருசொற்களால் புலப்பட வைத்த நுட்பம் உணர்க.
வெண்சோறு போலத் தூவவும் வல்லன்
இல்லாதபோது உருவாக்கிக் கொள்ளுவான். அளவு குறைந்த போது நிரந்து வழங்குவான். செல்வக் காலத்தில் எப்படி வழங்குவான்? “வரையாக் கொடைக்குரிய செல்வக் காலத்தில் (உரிதினின்) நாடு காத்தலைச் செய்யும் வேந்தரது பெருமனையில் எறியப்படும் வெண்சோறு போல யாவர்க்கும் அள்ளி வரையாது வழங்கவும் வல்லனாவானாம். இப்போது நிரல்படுத்திக் கொள்ள வேண்டும். இருக்கிற காலத்தில் வெண்சோறுபோல வாரி இறைப்பான். அளவான காலத்தில் குடும்பத்தலைவிபோல அளவறிந்து தருவான். இல்லாத காலத்து தேவைப்படும் தீயைத் தானே உருவாக்கிக் கொள்ளும் கல்லாத இடையன் போல உருவாக்கித் தருவான்.
நிறைவுரை
உவமம் கவிதை ஆடைக்குள் இழையும் நூல். போலிச் சரிகை பட்டையன்று. அது மலருக்கும் காம்புக்குமான உறவு. கொடிக்கும் குண்டூசிக்குமான உறவன்று. அகத்திணைப் பரப்பிலிருந்துத் தன் ஆளுகையை விரித்துக் கொண்ட பெருமை அதற்கு உண்டு. கவிதைப் பேரழகு அதனால் கட்டமைக்கப்பட்டது. சொல்லப்படுகிற கருத்துக்களுக்கேற்றவாறு பொருத்தமான உவமங்களை மிக எளிதாகக் கையாண்டவர்கள் நம் முன்னோர்கள்.! கருத்து விளக்கத்திற்கே உவமங்கள்! கவிதை தன் அழகைப் பார்த்துக் கொள்ளும் கண்ணாடிகள் அவை!
(தொடரும்…)
-

எங்கே பச்சை எரிசக்தி?
சி. ஜெயபாரதன், கனடா
வருது வருது,
புது சக்தி வருகுது!
கிரீன் சக்தி
வருகுது!
ஹைபிரிட் கார்கள்
செல்வக்
கோமான் களுக்கு!
கிரீன் ஹவுஸ் வாயுக்கள்வெளி ஏறா
எலக்டிரிக் கார்கள்,
உச்ச விலைக் கார்கள்!
பச்சை எரிசக்தி
வாகனங்கள் அல்ல!அனுதினம்
அமெரிக்க வீதிகளில்,
இருநூறு பில்லியன்
எண்ணிக்கை
மிஞ்சிய
காஸ்லின் கார்கள்
காலையில்
ஓடா விட்டால்
பிரளயம் விளையும்!
கரி வாயு
பாரெங்கும் பரப்பும்
கார்கள்
ஓடித்தான்
கிரீன் எரிசக்தி
வாகனம்
வடிவாகப் போகுது!பருவ காலங்களில்
உழுது பயிரிட்டு
அறுவடை செய்யும்
விவசாய யந்திரங்கள்
மின்சா ரத்தால்
இயங்கா!
விண்ணில் பறக்கும்
737 ஜெட்
விமானங்கள்
மேலே மேலே ஏறவும்
இறங்கவும்
தூய காஸ்லின் தேவை.
சூரிய ஒளிச்சக்தி
காற்றாடி மின்சக்தி
இராப் பகலாய்த் தொடர்ந்து
காரோட்டுமா?
பாரில் விமானங்கள்
பறக்குமா?
அறுவடை நிகழுமா?கிரீன் சக்தி தேடி
நூறாண்டு
ஆராச்சி செய்யினும்
கரி வாயு உமிழும்
காஸ்லின்
கார்கள் ஓடும், ஓடும்,
ஓடும்,
பாரெங்கும் பயணம்
நீடிக்கும். -

கனேரித் தீவில் திடீரென எழுந்த தீக்குழம்பு எரிமலைக் காட்சி
சி. ஜெயபாரதன், கனடா
Canary Islands La Palma Volcano [September 19, 2021]
Canary Islands La Palma City
கனேரித் தீவுகளில் சுற்றுலாப் பயணிகள் போற்றும் ல பால்மா நகர் மலைச் சிகரத்தில் எரிமலை எழுச்சி
2021 செப்டம்பர் 19 இல் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ல பால்மாவில் திடீரெனப் பொங்கி எழுந்த எரிமலை தெரியும் முன்பு சுமார் 4220 நில நடுக்கங்கள் நேர்ந்தன என்று ஸ்பெயின் தேசீயப் பூதளவியல் ஆய்வுக்கூடம் அறிவித்தது. ல பால்மா நகரம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து, எரிமலை எழுச்சியை எச்சரித்தது. நாலடுக்கு அபாய அறிவிப்பில் மஞ்சள் ஆரம்ப நிலை எச்சரிக்கை. 11 மில்லியன் கியூபிக் மீட்டர்ஸ் அளவு தீக்குழம்பு கும்பர் வீஜா சரிவுகளில் சில நாட்களில் வழிந்தது.
கனேரித் தீவுகளின் எரிமலைத் துறையக அபாய அறிவிப்பை / எச்சரிக்கை வெளியிட்டு மக்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியது. கடந்த ஒன்பது நாட்களில் சுமார் 25,000 மேற்பட்ட நிலநடுக்கங்கள் உணரப் பட்டுள்ளன. தீவிரம் ; 4.2 ரிக்டர். 20 அடி உயர்ந்த லாவா எரிமலைக் குழம்பு சரிவுகளில் உள்ள 185 இல்லங்களை விழுங்கியது. 6000 மக்கள் வீடிழந்து புலம்பெயர்ந்தார். எரிமலைக் குழம்பு உஷ்ணம் 1800 டிகிரி பாரன்ஹீட். நாள் ஒன்றுக்கு எரிமலை வெளியேற்றிய தீவிர வாயு ஸல்ஃபர் டையாக்சைடு 8000 முதல் 105,00 டன் இருக்கலாம்
https://www.cnn.com/videos/world/2021/09/29/la-palma-volcano-lava-ocean-lon-orig-tp.cnn
தகவல்
1. https://www.cbc.ca/news/world/canary-island-la-palma-volcano-1.6195998
2. https://www.cnn.com/videos/world/2021/09/29/la-palma-volcano-lava-ocean-lon-orig-tp.cnn
3. https://www.volcanodiscovery.com/lapalma/sep2021seismic-crisis/current-activity.html -

குறளின் கதிர்களாய்…(370)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(370)
கறுத்தின்னா செய்தவக் கண்ணு மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.– திருக்குறள் – 312 (இன்னா செய்யாமை)
புதுக் கவிதையில்…
பகை மிகக்கொண்டு
ஒருவன்
பல துன்பம் செய்தாலும்,
பதிலுக்கு அவனுக்குத்
தீமை ஏதும்
திருப்பிச் செய்யாமலிருப்பது
தெளிந்த மன மாசற்றோர்
கொள்கையாகும்…!குறும்பாவில்…
தம்மீது பகைகொண்டு ஒருவன்
தமக்குத் தீங்குசெய்யினும் பதிலுக்கு அவனுக்குத்
தீமைசெய்யாதது குற்றமற்றார் கொள்கை…!மரபுக் கவிதையில்…
அகத்தில் பகையை வைத்தேதான்
அளவே யின்றி தாம்நோகப்
பகர வொண்ணா யிடர்தரினும்,
பழியைத் தீர்க்கும் வகையினிலே
மிகவாய் வாட அவர்தமக்கே
மிகுந்த துன்பம் கொடுக்காத
நிகரே யில்லாக் கொள்கையதை
நெஞ்சில் கொள்வர் மாசிலாரே…!லிமரைக்கூ…
பகையால் செய்வர் இடரே,
திருப்பியவர்க்குத் தீங்கு செய்யா மாசற்றோர்
தூய கொள்கைச் சுடரே…!கிராமிய பாணியில்…
செய்யாத செய்யாத
கெடுதல் செய்யாத,
அடுத்தவன் வருந்தக்
கெடுதல் செய்யாத..பகய மனசுல வச்சி
தனக்குத் துன்பம் தந்தாலும்,
திருப்பி அவனுக்குத்
தீம செய்யாத
கொள்க கொண்டவங்கதான்
மனசுல குத்தங்கொற இல்லாதவுங்க..அதால
செய்யாத செய்யாத
கெடுதல் செய்யாத,
அடுத்தவன் வருந்தக்
கெடுதல் செய்யாத…! -

T. D. திருமலை நூற்றாண்டு விழா
அன்புடையீர்,
ரசிகமணி டி.கே.சி. வட்டத்தொட்டி (2021 அக்டோபர் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11:30) நிகழ்ச்சியில் (ரசிகமணியின் சீடர் காந்திய மாமணி திரு. T. D. திருமலை அவர்களின் நூற்றாண்டு விழா) கலந்துகொண்டு ரசனை அமுதத்தைப் பருக, கீழே உள்ள இணைப்பில் இணையும்படி கேட்டுக்கொள்கிறோம்.
Google Meet ( https://bit.ly/GMeet-TKC2110 )
YouTube ( https://bit.ly/YouTube-TKC2110 )
நன்றி
விழா ஏற்பாட்டுக் குழு
-

எதை வாங்குவது? எங்கே வாங்குவது?
நாம் வாங்க விரும்பும் ஒரு பொருளை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுப்பது? பிராண்டு, விலை, சலுகை, வழக்கம், தரம், அழகு, சந்தைப்படுத்தல்… எனப் பல காரணங்கள் இருக்கையில் நுகர்வோர் இவற்றில் எதை முக்கியமாகக் கொள்ள வேண்டும்? இதே போன்று அந்தப் பொருளை வீட்டுக்கு அருகில் உள்ள சிறிய கடையில் வாங்குவதா? பேரங்காடிகளில் வாங்குவதா? அல்லது இணையத்தில் வாங்குவதா? உள்நாட்டுப் பொருளா? வெளிநாட்டுப் பொருளா? எது நுகர்வோரின் முன்னுரிமையாக இருக்கலாம்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் தமது கருத்தை முன்வைக்கிறார். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

டிராகன் புரூட் எப்படி இருக்கு?
நம்ம ஊர்க் கடைகளில் அடிக்கடி தென்படும் டிராகன் புரூட், கண்ணைக் கவர்ந்தது. இன்று அதை வாங்கி வந்தோம். உள்ளே எப்படி இருக்கு, இதன் சுவை எப்படி இருக்கு எனப் பார்க்கலாமா?
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

காந்தியை அறிவோம்
(அண்ணாகண்ணன் ஆசிரியராக இருந்த சென்னை ஆன்லைன் தமிழ்ப் பிரிவில் 2009இல் இந்தக் கேள்வி-பதில் வெளியானது. மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் இதை மீள் பிரசுரம் செய்கிறோம்.)
அ.அண்ணாமலை, சென்னையில் உள்ள காந்தி கல்வி நிலையத்தின் இயக்குநர்; காந்தியடிகளால் அடிக்கல் நாட்டப்பட்ட தக்கர் பாபா வித்யாலயத்தின் இணைச் செயலாளர்; தமிழ்நாடு சர்வோதய மண்டலின் செயலாளர்; அகில இந்திய சர்வோதய மண்டலின் நிர்வாகக் குழு உறுப்பினர்; இளைஞர் முகாம், காந்திய பிரச்சார யாத்திரைகள், படக் காட்சி, கண்காட்சி என்று தமிழகம் முழுவதும் சுற்றி, இளைஞர்களிடையே காந்தி பற்றிய தெளிவான புரிதலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ‘தமிழர், தமிழ்நாடு, காந்தி’ எனும் சிறப்பு புகைப்படக் கண்காட்சியைப் பிற காந்திய அன்பர்களுடன் இணைந்து பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறார். பொதிகை தொலைக்காட்சியில் கடந்த ஒன்றரை வருடங்களாக ‘உலக உத்தமரின் உயரிய சிந்தனைகள்’ என்ற பகுதியில் காந்தியடிகளைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து வந்துள்ளார்.
காந்தியத்தில் ஆழ்ந்து தோய்ந்த அ.அண்ணாமலை, காந்தியம் தொடர்பான நம் கேள்விகளுக்குப் பதில் அளிக்க இசைந்துள்ளார். அவரிடம் அண்மைக் காலத்தில் கேட்கப்பட்ட சில கேள்விகள் வருமாறு:
கேள்வி 1:
வாடிக்கையாளரே நம்முடைய வியாபாரத்தின் முக்கிய நபர்;
அவர் நம்மை சார்ந்து இல்லை;
நாம்தான் அவரைச் சார்ந்து இருக்கிறோம்.
அவர் நம்முடைய வியாபாரத்திற்கு இடையூறு செய்பவர் அல்ல;
நம் வியாபாரமே அவருக்காகத்தான்.
நம் வியாபாரத்திற்கு அவர் அந்நியரல்லர்;
அவருடன்தான் நம் வியாபாரமே உள்ளது.
நாம் அவருக்கு உதவி புரியவில்லை;
அவர்தான், சேவை செய்யும் வாய்ப்பை நமக்களிப்பவர்இது ஒரு அருமையான கருத்து. காந்தியடிகள் கூறியதாகப் பல இடங்களில் பார்க்கிறோம். உண்மையிலேயே இது காந்தியடிகளின் வார்த்தைகளா? ஆம் எனில் எந்தப் புத்தகத்தில் இதனைக் காணலாம்?
பதில்: நிச்சயமாக இது ஒரு நல்ல கருத்துத்தான். ஆனால் இது காந்தியடிகளின் வார்த்தைகள் அல்ல. அதே போல் அவருடைய திரட்டப்பட்ட 100 ஆங்கிலத் தொகுதிகள் அடங்கிய புத்தகங்கள் எதிலும் இவை இல்லை.
===============================================
கேள்வி 2:
மகாத்மா காந்தியின் கடைசி உண்ணாவிரதம் இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுக்கு ரூ.55 கோடி கொடுக்க வேண்டும் என்பதற்காக முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருந்ததாகும். இது இந்திய அரசைப் பணம் கொடுக்க நிர்ப்பந்தம் செய்தது போன்ற செயல்தானே?
பதில்: 1947, செப்டம்பரில் கல்கத்தாவிலிருந்து காந்தியடிகள் டெல்லிக்கு வந்தார். அங்கிருந்து கலவர பூமியான பஞ்சாபில் அமைதி ஏற்படுத்துவதற்காக அங்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார். சர்தார் படேல் காந்தியடிகளைச் சந்தித்து டெல்லியில் நிலவும் நிலையை விளக்கினார். ஆகவே, அமைதிக்காகவும், மத ஒற்றுமைக்காகவும், உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார் காந்தி. ஆதலால், டெல்லியில் அமைதி ஏற்படுத்த வேண்டி மேற்கொண்ட உண்ணாவிரதம்தானே தவிர, பாகிஸ்தானுக்கு ரூ.55 கோடி தரவேண்டும் என்பதற்காக அந்த உண்ணாவிரதத்தைக் காந்தியடிகள் மேற்கொள்ளவில்லை. அதனால் இந்திய அரசை எந்தவிதமான நிர்பந்தமும் காந்தி செய்யவில்லை என்பதுதான் வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மை.
பிரிவினையின்போது நம்மிடையே ஏற்பட்ட ஒப்பந்தம்:
இந்தியா ரூ.55 கோடியை பாகிஸ்தானுக்குக் கொடுக்க வேண்டும் என்ற ஒப்பந்தப்படி ரூ.20 கோடி ஏற்கெனவே கொடுத்தாகி விட்டது. ஆனால் பாகிஸ்தான் இராணுவ உதவியுடன் காஷ்மீரில் ஆக்கிரமிப்பு நடத்தியதால் இந்திய அரசு இரண்டாவது தவணைத் தொகையை நிறுத்தி வைக்க முடிவு செய்தது. இது இரு தரப்பும் இணைந்து ஒப்புக்கொண்டதை மீறும் செயலாகும் என்று மவுண்ட்பேட்டன் பிரபு இந்த விஷயத்தைக் காந்தியடிகளின் பார்வைக்குக் கொண்டு சென்றார்.
கண்ணுக்குக் கண் என்ற சித்தாந்தத்தை எப்பொழுதும் எதிர்த்து வந்த காந்தியடிகள், தார்மீக அடிப்படையில் இந்திய அரசின் முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே காந்தியடிகளின் இந்த நிலைப்பாட்டை, சில தீய சக்திகள் அவர் சமூக அமைதிக்காக இருந்த உண்ணாவிரதத்துடன் திட்டமிட்டே இணைத்து இவ்வாறான செய்தியைப் பரப்பினார்கள்.
உண்ணாவிரதம் பற்றிய உண்மைகள்:
தில்லியில் நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் மறைய காந்தியடிகள் உண்ணாவிரதம் இருக்கப் போகிறார் என்றவுடன் டாக்டர் சுசீலா நய்யார், தன் சகோதரரும் காந்தியடிகளின் செயலாளருமான பியாரிலாலை சந்தித்துப் பேசுகிறார். அப்போது பேசப்பட்ட விஷயங்களில் ரூ.55 கோடி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
* உண்ணாவிரத அறிவிப்பை 12ஆம் தேதி நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தியடிகள் வெளியிட்டார். அப்பொழுதும் இதைப் பற்றி அவர் பேசவில்லை.
* அதே போல், 13ஆம் தேதி நடந்த கூட்டத்திலும் எதுவும் பேசவில்லை.
* 15ஆம் தேதி அவருடைய உண்ணாவிரதம் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலிலும் இதுபற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அரசு வெளியிட்ட பத்திரிகைக் குறிப்பிலும் இதுபற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
* டாக்டர் இராஜேந்திர பிரசாத் தலைமையில் காந்தியடிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய குழு கொடுத்த வாக்குறுதிகளிலும் இவை இடம்பெறவில்லை. இவ்வளவு சாட்சியங்கள் இருந்தும், காந்தியடிகள் ரூ.55 கோடி பாகிஸ்தானுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் உண்ணாவிரதம் இருந்தார் என்று கூறுவது வெறும் அவதூறுதானே தவிர அது உண்மைக்கு முற்றும் புறம்பானது.
===============================================
கேள்வி 3:
நேதாஜிதான் காங்கிரஸின் உண்மையான ஹீரோ. காந்தியடிகள் அவருடைய தலைமையைக் கேள்விக்கு உள்ளாக்கி காங்கிரஸை விட்டுப் போவதற்குக் காரணமாக இருந்தார் என்று பலர் நினைக்கிறார்கள். இதில் உங்களுடைய கருத்து என்ன?
பதில்: நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் 1938இல் நடந்த ஹரிபுரா காங்கிரஸ் மகாநாட்டில் ஒருமனதாக முன்மொழியப்பட்டார். அதே போல காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கான உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டார்கள். நேதாஜி தலைவரானவுடன் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், திட்டங்களையும், அதனுடைய அகிம்சைப் போராட்டத்தின் ஏற்புடைமை பற்றியும் மாறுபாடான கருத்துகளைப் பேசி வந்தார். மிகவும் வெளிப்படையாக இதையெல்லாம்
விவாதித்தாலும் காங்கிரஸ் பெரும்பாலான உறுப்பினர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் அவர்கள் பெரும்பாலும் காந்தியடிகளின் ஆதரவு நிலையை எடுத்தவர்கள்.ஓராண்டுக்குப் பின், 1939இல் திரிபுரியில் காங்கிரஸ் பொதுக் குழு கூடியது. மீண்டும் தலைவராக நேதாஜி விரும்பினார். மௌலானா அபுல்கலாம் ஆசாத் தாமும்போட்டியிடுவதாக அறிவித்து விட்டார். ஆனால் காந்தியடிகள் பட்டாபி சீத்தாராமையாவைத் தலைவராக்க விரும்பினார். நேதாஜி, மௌலானா, பட்டாபி மூவரும் தலைவருக்கான தேர்தல் களத்தில் இறங்கினார்கள். கடைசி நேரத்தில் மௌலானா வாபஸ் வாங்கி பட்டாபியை ஆதரித்து விட்டார். ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு நேதாஜி வெற்றிப் பெற்றார்.
தலைவராக காங்கிரஸின் பெரும்பாலோர் ஆதரவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற நேதாஜி, செயற்குழுவின் வழிகாட்டுதலுடன் செயல்பட வேண்டும். ஆனால் செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பாலோர் காந்தியடிகளின் ஆதரவாளர்கள். எனவே காந்தியடிகள், ‘சீத்தாராமையாவின் தோல்வி என்னுடைய தோல்வி. புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் தற்போதைய செயற்குழு உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும். அப்போதுதான் நேதாஜி தன்னுடைய கருத்துக்கு உடன்பட்டவர்களைச் செயற்குழுவில் சேர்த்து காங்கிரஸ் இயக்கத்தை நடத்த முடியும்’ என்று கூறினார்.
காந்தியடிகள் இக்கருத்தைத் தெரிவிப்பதற்கு மற்றொரு காரணம் உண்டு. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் நேதாஜியைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தபின், காந்தியடிகள் மீதும் காங்கிரஸ் இதுவரை கடைப்பிடித்து வந்து கொள்கை மீதும் எங்களுக்குப் பூரணமான நம்பிக்கை உள்ளது என்று தீர்மானம் நிறைவேற்றினர். இத்தகைய முரண்பாடான நிலைதான் காந்தியடிகள் நிர்வாகக்குழு உறுப்பினர்களைப் பதவி விலக வற்புறுத்தியது. நாம் ஒன்றை மறந்துவிடக்கூடாது. அவர்களுக்கு இடையே கருத்து மாறுபாடுகள் இருந்தது. ஆனால் அவர்களுக்கிடையே இருந்த உறவு அற்புதமானது. இன்றைய தலைமுறையினரான நாம் அதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
காந்திக்கு தாகூர் இதுபற்றி கடிதம் எழுதுகிறார். அதற்கு காந்தி அளித்துள்ள பதிலில் ‘எங்கள் இருவருக்கும் கருத்தில் முரண்பாடு உள்ளது. உறவில் அல்ல. நேதாஜி என்றைக்கும் என்னுடைய மகன்தான்’ என்றார். அதேபோல 1944, ஜூன் 4ஆம் நாள் ரங்கூனில் இருந்து ‘ஆசாத் ஹிந்த் வானொலி’ மூலம் பேசிய நேதாஜி, காந்தியடிகளை ‘இந்தியாவின் தந்தை’ என்று அழைத்தார். ‘உங்களுடைய வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் மூலமாக பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவை விட்டு அகன்றுவிட்டாலோ அல்லது உங்களுடைய திட்டங்கள் வெற்றி பெற்றாலோ அதற்காக எங்களைவிட மகிழ்ச்சி அடைபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது’ என்றும் தெரிவித்தார்.
மேலும் நேதாஜி, ‘மேலே சொன்ன விஷயங்கள் தற்போது நடைபெறாது என்ற ஊகத்தின் அடிப்படையில்தான் நாங்கள் எங்களுடைய போராட்டத்தைத் தொடருகிறோம். விடுதலைக்கான இந்தப் புனிதப் போரில் இந்தியாவின் தந்தையாகிய உங்களுடைய ஆசிர்வாதத்தையும் வாழ்த்துகளையும் வேண்டி நிற்கிறோம்’ என்றும் உரையாற்றினார்.ய
மேலே உள்ள நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது, தன் கருத்துகளுக்கும், கொள்கைகளுக்கும், தனியான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி வழிநடத்தினால்தான் நமது இலக்கான சுதந்திரத்தை அடைய முடியும் என்ற எண்ணம் நேதாஜிக்கு வந்ததால்தான் காங்கிரஸை விட்டு விலகும் முடிவை எடுத்திருக்க வேண்டுமே தவிர, அதற்குக் காந்தி தான் காரணம் என்ற வாதத்தில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை.
நன்றி -சென்னை ஆன்லைன்
-

தமிழ் அறிஞர்கள் நாள்
வணக்கம்.
நிகழ்ச்சியை நேரலையாய்க் காண்லாம்:
https://facebook.com/chicagotamilsangam
https://youtube.com/chicagotamilsangam
அக்டோபர் 2, 2021, இரவு 8.30 மணி (இந்திய நேரம்)
அன்புடன்,
ரமணன் -

தவலை வடை செய்வது எப்படி?
தமிழர் பலரும் மறந்துவிட்ட தவலை வடையைச் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார், சுதா மாதவன். உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள். படப்பதிவு, சகஸ்ரா அஜய்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

உங்க வீட்டுப் பெண்களை இப்படி வரைவீர்களா?
சந்திப்பு – ஓவியர் ஸ்யாம், அண்ணாகண்ணன்
ஓவியர் ஜெயராஜ் நேர்காணலின் இரண்டாவது பகுதி. பனியன் வாசகங்கள் முதல் பெண்களின் அனாடமி வரை பல்வேறு கேள்விகளுக்கு இதில் பதில் அளித்துள்ளார்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

முதுமையில் இருப்பார் முதுசொம் ஆவர்!
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
ஆஸ்திரேலியாஓடிய கால்கள் உழைத்திட்ட கைகள்
தேடியே செல்வம் திரட்டிய உள்ளம்
வாடியே நில்லா வதங்கிடா வதனம்
வதங்கியே மூலை இருப்பது முறையா?தூக்கிய சுமைகள் சுகமென எண்ணி
சாப்பிடு நேரம் தனையுமே மறந்து
காப்பிடு நோக்கில் களிப்புற்ற உள்ளம்
கண்ணீரை உகுப்பது கருணையின் நிலையா?தடுக்கியே விழுவதைத் தடுத்திட நினைத்து
அணைத்திடும் நோக்கில் அன்பினைச் சொரிந்து
விடுப்புகள் இழந்து விருந்துகள் கொடுத்த
வியப்புடை உள்ளம் வேதனை உறுவதா?விடியலை வழங்க விரைத்திட்டார் நாளும்
தலையிடி என்று தவிர்த்திலார் வாழ்வில்
உலையிடை பட்ட இரும்பென உருகி
உழைத்தவர் இப்போ உழலுறார் வாழ்வில்தோளினில் ஏற்றிச் சாமியைக் காட்டினார்
தோழனாய் மாறி சுறுசுறுப் பூட்டினார்
வாழ்வினில் வசந்தம் காட்டிட முனைந்தார்
வதங்கிய நிலையில் இருப்பது முறையா?கைப்பிடித் தழைத்து பள்ளியில் சேர்த்தார்
கணக்கெழுத் தென்று பலபல காட்டினார்
மெய்யினில் வருத்தம் மேவிடா நின்றார்
மேதினி மீதினில் விக்கித்து நிற்கிறார்கற்பனை பலபல கண்டுமே நின்றார்
கற்றவர் அவையினில் நிற்கவும் வைத்தார்
நிற்பதும் நடப்பதும் நெஞ்சுரம் என்றார்
நிற்கவே முடியா நிலையினில் இப்போபள்ளியின் வாசலைப் பார்த்துமே நிற்பார்
துள்ளியே வந்ததும் தூக்கியே கொஞ்சுவார்
அள்ளியே அணைத்து அன்பினைப் பொழிவார்
அள்ளியே அணைத்திடா அவரிப்போ தவிக்கிறார்அம்மாவும் அப்பாவும் பாட்டியும் தாத்தாவும்
அன்புடை மாமியும் மாமாவும் இப்போ
அழகெலாம் குலைந்து அயர்விலே உழன்று
ஆறுதல் தேடுறார் அவர்நிலை உணர்வோம்காவோலை விழுவதும் குருத்தோலை சிரிப்பதும்
காதாலே கேட்கக் களிப்பாக இருக்கும்
காலத்தின் மாற்றம் எப்போதும் நிகழும்
களிப்பினைத் தந்தவர் கண்ணீரைத் துடைப்போம்முதுமையில் இருப்பார் முதுசொம் ஆவர்
ஒதுக்கிட நினைத்தல் உயர்குணம் அன்று
அவரது ஆசியை அனைவரும் பெறுவோம்
ஆண்டவன் நமக்கு அருளினை அளிப்பான்





