Blog

  • இந்த வார வல்லமையாளர்

    திவாகர்

    இந்த ‘காலகட்ட’ ஆராய்ச்சிகளென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.நம்மாழ்வார் எப்போது பிறந்திருப்பார், திருவள்ளுவரின் காலம் என்ன, திருவள்ளுவருக்கு திருமூலர் முந்தியவரா பிந்தியவரா, மாணிக்கவாசகரின்காலம் தேவார மூவருக்கும் முந்தியதா என்பதெல்லாம் ஆராயப் பிடிக்கும்.அப்படித்தான் மாணிக்க வாசகர் பற்றிய காலகட்டத்தின் ஆராய்ச்சியொன்றினை என் வலைப்பகுதியில் தொடராக எழுதியுள்ளேன்.

    ஆனால் இவையெல்லாம் வருங்காலம் இன்னமும் எளிதாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.நாம் எத்தனைதான் முன்னோரைப் பற்றி ஆராய்ச்சி செய்தாலும்சம்பந்தப்பட்டவராகவே வந்து நமக்கு சரிவரத் தெரிவிக்காவிடில் எல்லாமும் கணிப்புகளின் ஒரு பகுதிதான் என்பதையும் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். நாம் எத்தனைதான் சந்தேகமற நம் முன்னோர்களின் வாழ்க்கை வரலாற்றை மிகவும் தெளிவாக ஆராய்ந்து எழுதினாலும் சம்பந்தப்பட்டவர்களின் நேரடி சாட்சியங்கள் கிடைக்காத மட்டில் இந்த ஆராய்ச்சிகள் அனைத்துமே மறு ஆராய்ச்சிக்கு உட்பட்டதுதான். உதாரணமாக நம் தேச தந்தை காந்தியடிகளின் வரலாறு ‘சத்திய சோதனை’ என்று அவரே கைப்பட எழுதியதுதான் அவரது காலக் கட்டத்தைப் பற்றியும் அவரது சாதனைகள் பற்றியும் எதிர்காலத்தவருக்கு சரியான செய்தியாகப் போய்ச் சேரும். ஒருவேளை காந்தி எழுதவில்லை என்றால் வேறு ஆயிரம் பேர்கள் காந்தியைப் எழுதினாலும் அத்தனை எழுத்துக்களும் மறு ஆய்வுக்குரியதே.

    இந்த வகையில் பார்க்கும்போது டாக்டர் செம்மல் அவர்கள் ஒரு சிறந்த சேவையாக அறிஞர்களின் வாழ்க்கையை நேரடியாக அவர் வாய் மூலமாகக் கேட்டு அதைக் காலப் பெட்டகத்தில் பதிப்பது ஒரு பொறுப்பான சமூகப் பணியாகும். இதோ அவரது கோரிக்கை ஒன்று இந்த வாரத்தில் வல்லமை குழுவில் வெளிவந்தது.

    Subject: Archiving Tamil Scholars Living in Madurai as on March 2013

    Dear All,

    Hereby the Scientific Tamil Foundation launches a new webpage title as http://www.tamillanguagearchives.blogspot.in/Kindly refer the names of the Scholars living in Madurai at present whom you believe may be added to this webpage. Viewing at the activities of the foundation, many may be of the opinion that it will be manned by a team; the reality is that – at present the foundation is manned only by me as a single person.
    Shri. Manavai Mustafa, the founder of the foundation has donated rupees 10 lakhs (INR) (that which was given for nationalization of his
    books) by the Government of tamilnadu to the foundation. With that corpus fund the foundation is able to proceed on various non
    commercial ventures smoothly. Apart from this, every month I am funneling a part of my salary for the ventures.The foundation is registered with the Government and is ready to provide financial assistance for Tamil Development. Archiving will be done by me personally on Tuesday (26th March) (10:00 hours till 16:00 Hours)All the Processing, Recording , Video editing , Uploading will be done Free of cost. Refer the names of the genuine scholars to me as early as possible.

    டாக்டர் செம்மலுக்கு நாம் அனைவரும் உதவுவோமாக.. எதிர்கால தலைமுறைக்குஒரு மிகச் சிறந்த சேவையாக இதைக் கருதி, இச் செய்லை மேற்கொண்டு வரும் டாக்டர் செம்மல் அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமைக் குழு மனமுவந்து தேர்ந்தெடுக்கிறது. டாக்டர் செம்மல் அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: ’மலர் சபா’ அவர்களின் சிலம்புத் தமிழ் காணிக்கையிலிருந்து

    இனிய கதிர்களையுடைய
    திங்களது போலும்
    ஒளிர்ந்திருக்கும் முகத்தையுடைய
    தலைவியின் சிவந்த வாயில் இருக்கும்
    அழகிய பற்களுக்கு
    நீ தரும் இந்த முத்துகள் ஈடாகா;

    எனினும்

    ‘முத்துகளை நீங்கள் வாங்குங்கள்’ என்று கூறித்
    திருமாலின் மகன் காமன் அவன் போல் பித்தேறி
    கடலே! நீயும் நாள்தோறும் இங்கு வருகின்றாய்!

    Share
  • நாகரிக மனிதனின் வியாதிகளும் காட்டுமிராண்டிகளின் உணவுமுறையும் (3)

    செல்வன்

    கொலஸ்டிரால் என்பது என்ன?

    1) மிக ஆபத்தான நச்சுபொருள்

    2) உடலுக்கு மிக அத்தியாவசியமான மூலப்பொருள்.

    இரண்டில் எது சரி? இரண்டாவதுதான்.

    கொலஸ்டிரால் தான் உங்கள் உடல் வைடடமின் டியை உற்பத்தி செய்ய உதவும் மூலப்பொருள். அது மட்டும் அல்ல ஒருவருக்கு ஆண்மையை அளிக்கும் டெஸ்டிஸ்ட்ரோன், பெண்மையை அளிக்கும் ஈஸ்ட்ரோஜென் ஆகிய ஹார்மோன்களை உற்பத்தி செய்யத் தேவைப்படுவது கொலஸ்டிரால். அது மட்டும் அல்ல உங்கள் மூளையே ஒரு மிகப்பெரும் கொழுப்பால் ஆன கொலஸ்டிரால் உருண்டைதான். கொலஸ்ட்ரால் இல்லையெனில் மனித இனமே இல்லை.

    கொலஸ்ட்ரால் இத்தனை முக்கிய மூலப்பொருள் என்பதால் உங்கள் உடலின் ஒவ்வொரு செல்லும் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யும் சக்தி படைத்து உள்ளது. நீங்கள் துளி கொலஸ்ட்ரால் இல்லாத அரிசி, பருப்பை மட்டுமே ஆயுள் முழுக்க உண்டுவந்தாலும் உங்கள் உடல் அந்த உணவை கொலஸ்டிராலாக மாற்றும் சக்தி படைத்தது. தனக்குத் தேவையான கொலஸ்ட்ராலை உங்கள் உடல் உற்பத்தி செய்தேதான் தீரும். அது நீங்கள் உண்ணும் உணவின் மூலம் நேரடியாக கிடைத்தால் தான் உற்பத்தி செய்யும் கொலஸ்ட்ராலின் அளவை உங்கள் உடல் அதற்கு ஏற்ப குறைத்துக் கொள்ளும். உங்கள் உணவில் கொலஸ்டிரால் இல்லையெனில் உங்கள் உடல் நீங்கள் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை சத்தை கொலஸ்டிராலாக மாற்றும்.
    ஆக “கொலஸ்டிரால் ப்ரீ, ஃபேட் ப்ரி” என விளம்பரம் செய்யப்பட்டு விற்கபடும் உணவுகளால் எந்த நன்மையும் இல்லை.

    பன்றி புல்லைத்தான் உண்கிறது. அப்புறம் எப்படி அதன் உடலில் இத்தனை கொழுப்பு சேர்கிறது?

    கொலஸ்ட்ரால் அதிகரித்தால் ஆபத்து எனப் படிக்கிறோம். கொலஸ்ட்ரால் குறைவால் என்ன ஆகும் என படிக்கிறோமா?

    உங்கள் மொத்த கொலஸ்ட்ரால் எண் 160க்கு கீழே போனால் நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு மிக அதிகம். உங்கள் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படலாம். மாரடைப்பு வரலாம். ஆம் உண்மைதான். கொலஸ்ட்ரால் குறைவாக இருந்தால் மாரடைப்பு வராது என பொருள் இல்லை. சொல்லப்போனால் மாரடைப்பு வந்தவர்களில் 75% பேர் பாதுகாப்பான எல்டிஎல் அளவு என சொல்லபடும் 130க்கு கீழே கொலஸ்ட்ரால் அளவு கொன்டவர்கள் தான்.

    இன்னொரு தடவை சொல்கிறேன்.

    உங்களுக்கு கொலஸ்ட்ரால் குறைவாக இருந்தால் உங்களுக்கு மாரடைப்பு வராது என பொருள் இல்லை.

    அல்லது

    உங்கள் கொலஸ்ட்ரால் எண் அதிகமாக இருந்தால் உங்களுக்கு மாரடைப்பு வரும் எனவும் பொருள் இல்லை.

    In other words

    நீங்கள் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புக்கும் உங்கள் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுக்கும் உங்களுக்கு மாரடைப்பு வருமா, வராதா என்பதற்கும ஸ்னானப்ராப்தி கிடையாது.

    ரிபீட்

    ஸ்னானபிராப்தி கிடையாது.

    மாரடைப்பு நோயாளிகளில் பாதிப் பேர் நல்ல ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் எண்களை கொன்டவர்கள் (மொத்த கொலஸ்ட்ரால் < 200. எல்டிஎல் < 130)

    உங்கள் மொத்த கொலஸ்ட்ரால் 330 தாண்டினால் தான் அது உங்களுக்கு மாரடைப்பு வருமா, வராதா என்பதைக் கணிக்கும் சக்தியை பெறுகிறது. ஆனால் உங்கள் கொலஸ்ட்ரால் எண் 160க்கு கீழே விழுந்தால் அது உங்கள் டிப்ரஷன், மன அழுத்தம் முதலிய பலவற்றுக்கு உடனடி காரணம் ஆகிறது.

    அப்புறம் ஏன் கொலஸ்ட்ரால் இப்படி வில்லன் அந்தஸ்தை பெறுகிறது?

    தவறான சில ஆய்வுகள், அரசியல் கமிட்டிகள், வணிக நிர்ப்பந்தங்கள்!!!!

    ஒரு உதாரணம் சொல்லவேண்டுமெனில் பி.எம்.ஐ எனும் எண்ணை அறிந்திருப்பீர்கள். உங்கள் பி.எம்.ஐ 25 தாண்டி இருந்தால் நீங்கள் ஓவர்வெயிட் எனும் வகையை அடைகிறீர்கள். பி.எம்.ஐ 25க்கு கீழ் இருந்தால் நீங்கள் நார்மல்.

    பி.எம்.ஐ சார்ட்படி அதிபர் ஜார்ஜ் புஷ் ஓவர் வெயிட். ஆனால் அவருக்கு உடலில் எந்தக் கோளாறும் இல்லை. அவரைப் பார்த்தால் குண்டர் மாதிரியா தெரிகிறது?

    90களில் ஓவர் வெயிட்டுக்கான பி.எம்.ஐ 28 ஆக இருந்தது.

    திடீரென ஒரே நாளில் அமெரிக்க அரசு அதை 25 ஆக குறைத்தது.

    ஆக ஓவர் நைட்டில் சுமார் 4 கோடி அமெரிக்கர்கள் குண்டர்கள் ஆனார்கள்.

    25 தான் நார்மல் பி.எம்.ஐ என முடிவு செய்தது யார்? ஒரு ஐ.நா சபை கமிட்டி. அதன் தலைவர் அந்த கமிட்டியின் தலைவர் ஒரு எடை குறைப்பு மருந்தை தயாரிக்கும் கம்பனியில் பணி ஆற்றியவர். கான்ஸ்பைரசி தியரி எழுதுவதானால் எப்படியும் எழுதலாம். ஆனால் என் நோக்கம் அது அல்ல. ஆனால் ஒன்றை தெளிவாகச் சொல்லமுடியும்.

    நீங்கள் ஒரு எடையை குறைக்கும் மருந்தை தயாரிக்கும் கம்பனி போர்டு மீட்டிங்கில் இருக்கிறீர்கள் என வைத்துகொள்வோம். பி.எம்.ஐ நார்மல் என்பதன் அளவீடு 28ல் இருந்து 25 ஆக குறைகிறது. உடனே ஒரே வினாடியில் உங்கள் மருந்துகளுக்கு மேலும் பல கோடி வாடிக்கையாளர்கள் சேர்வார்கள். போர்டு மீட்டிங்கில் எப்படி கைதட்டல் எழும் என்பதை யூகிக்க முடிகிறதா?

    அரசாங்கம் வேண்டும் என்றே சதியில் ஈடுபடுகிறது என கூறுவதில் பொருள் இல்லை. அரசின் நோக்கம் 25 பி.எம்.ஐ என்பது 28 பி.எம்.ஐ என்பதை விட மக்களுக்கு பாதுகாப்பு எனும் நோக்கிலேயே இருக்கும். ஆனால் நன்றாக இருப்பவர்களை நோயாளி ஆக்கிதான் இதை செய்யவேன்டுமா? வேறு வழி இல்லையா?

    சிந்திப்போம்.

    (தொடரும்..)

    Reference:

    http://newsroom.ucla.edu/portal/ucla/majority-of-hospitalized-heart-75668.aspx


    செல்வன்
    www.holyox.blogspot.com

    Share
  • ஆன்மீக வண்ணக்கலவை

    விசாலம்

    இந்தப் பங்குனி ,சித்திரை மாதம் வந்தாலே பலவிதமான பலதரப்பட்ட பண்டிகைகள் திருநாட்கள் வந்து மன மகிழ்ச்சியைத் தருகின்றன. வட இந்தியாவில் டிசம்பர் ஜனவரி வரை மிக அதிகமாகக் குளிரில்  மக்கள் வெடெவெடத்துப் பின் குளிர் குறைய ஆரம்பித்து அதன் பின்  ஹோலிப்பண்டிகையுடன்  ,சிவராத்திரியுடன் குளிர் போ போ என்று போய்விடும்  பின் வசந்தக்காலம் ,,,, வசந்தபஞ்சமியிலிருந்து ஆரம்பித்து வரிசையாக எல்லா மதத்தினருக்கும்   கொண்டாட்டம் தான் மக்கள் பனியில் தவித்தப்பின் ஆனந்தமாய் வெளியில் வருவதும் .பூக்கள்    பூத்துக்குலுங்கி வரவேற்பதும் மிக  அழகான காட்சி

    இந்த நேரத்தில் தான் குடியரசுத்தலைவர் மாளிகையின்  தோட்டம் மக்கள் பார்வைக்கு  விடப்படும்  பலதினுசு ரோஜாக்கள் நம்மை மயக்க வைக்கும் மாசி பௌர்ணமி அன்று  ஹோலிப்பண்டிகை   இது ஒருவாரம் முன்பே களைக்கட்டிவிடும்  எல்லா மாணவர்களும் பலூனில் நீர் நிரப்பி அதைக் கட்டிவிட்டு அந்தப்பந்தை எல்லோர் மேலும் வீசுவார்கள் முக்கியமாக காலேஜ் மாணவிகள் இதில் அவதிப் படுவார்கள். ஹோலி     சோட்டி  ஹோலி  ,படி [badi]  ஹோலி என்று இரண்டு நாட்கள் கொண்டாடப்படும்    சோட்டிஹோலியில்  பலநாட்கள் முன்பே மரக்கிளைகள்  குச்சிகள் பல அட்டைகள் என்று சேகரித்து அதை  சோட்டி    ஹோலி அன்று எரித்து  அதைச் சுற்றி பாட்டுக்களும் பாடி நடனங்களுடன் கொண்டாடுவார்கள் .நிச்சியம்  மதுவும் இருக்கும்   விருந்தோம்பலும் உணடு. சுடச்சுட பன்னீர் பகோடா .மிளகாய் பஜ்ஜி . நமக்பாரே போன்றவைகள்
    தட்டுக்களில் பரப்பபட்டிருக்கும் அதற்கு ஒத்துப்போகும்  புதினா கொத்தமல்லி சட்னி ..ஆஹா  அமிருதமாக இருக்கும்

    ஹோலி பெயரைக் கேட்டாலே வண்ணங்களும்  “:பிச்காரி”என்ற தண்ணீர் பீச்சும் குழாய்களும் ஒவ்வொருவர் அன்புடன் தழுவுதலும்”ஹோலி ஹை  ஹோலி  ஹோலி முபாரக்”என்ற ஆனந்தக் கூவலும் நம்மைப் பரவசப்படுத்தும்  மஹாராஷ்ட்ராவில்  இதை மிகப்பிரமாதமாகக் கொண்டாடுவார்கள் இதை”ரங்கபஞ்சமி” என்பார்கள் வசந்தக்காலத்தின் நுழைவு நாள் இது,.இங்கு  செம்படவர்கள்  அதிகம் பங்கேற்று  தங்களை மறந்து களிப்பார்கள் எல்லோரும் ஒவ்வொரு சாலையின்  நடுச்சந்தியிலும்  மேலே சுமார் ஆறு அல்லது ஏழு மாடி உயரத்தில் ஒரு பெரியப் பானையில் சில ஆயிரம்  ரூபாய்கள் வசூலித்து தனியாகக் கட்டி விடுவார்கள். பானைக்குள் தயிர் அல்லது மோர் இருக்கும்  இதை உடைக்க ஒரு “டோலி”கும்பல் வரும். அவர்களுக்கு முதலிலேயே பயிற்சி அளிக்கப்படும்  .எல்லோரும் பாட்டு பாடிக்கொண்டு “கோவிந்தா ஆலாரே” என்று  கொட்டு கொட்டிக்கொண்டும்  வருவதைப் பார்த்தால் நம் உடலும் சிலிர்க்கும் பின் ஒருவர்க்கொருவர் முக்கோணம் போல் அமைப்பில் ஒருவர் மேல் ஒருவராக ஏறி அதை எட்டிப்பிடித்து உடைப்பர்ர்கள். பார்ப்பவர்கள் அவர்களை ஏறவிடாமல் தண்ணீர் கொட்டுவதும்  உண்டு இதே போல் தான் ஜன்மாஷ்டமி அன்றும் இருக்கும்   அவர்கள் சாமர்த்தியமாக எடுத்துவிட்டால் அந்த ரூபாய்கள் அவர்களுக்கே

    லக்கூஜி ஜாதவ் மஹராஜின் பெண் ஜீஜாபாய் , அவள் தன் ஐந்து வயதில்  விளையாட்டாக எல்லோர் மேலேயும்  வண் ணக்கலர் தண்ணீரில் கலந்துத் தெளித்தாள் அப்போது சிறு பையன் “சாஹூஜி மேல் பட்டுவிட அவனது தந்தை மலாஜி ராவ் பாவ்லே தன்  மகனுக்கும் ஜீஜாபாயிக்கும் திருமணம் நிச்சியம் செய்து விட்டார்  பின் சில வருடங்களுக்குப் பிறகு வீர சிவாஜி அவர்களுக்குப் பிறந்தார் பின் மஹாராஷ்டர மாகாணமும் பிறந்தது  இதைக் கொண்டாடும் வகையிலும் இந்த ஹோலி காரணமாகிறது

    இப்போது மதுரா பிருந்தாவன் போவோம்  .இங்கு ஹோலி ராதா கிருஷ்ண் பாவத்துடன் கொண்டாடப்படுகிறது ஒரு சமயம் ராதாவின் அழகைப் பார்த்து கண்ணன் தன் தாய் யசோதையிடம் சென்று”அம்மா நான் மட்டும் ஏன் கருப்பு  ராதா மட்டும் ஏன் இத்தனைச்சிகப்பு”என்றார் யசோதைக்குப் பதில் சொல்லத்  தெரியவில்லை .அப்போது கண்ணன் கருப்பு வர்ணம் குழைத்து அவள் முகத்தில் பூசி  அவளையும்  கருப்பாக்கினாராம்   .இது முதலிலேயே ராதாவின்  எண்ணமாக இருந்தது   .இதை  அறிந்து கொண்டு கண்ணன் இதைச் செய்து விளையாடினாராம்.   இதனால் இங்கு ஹோலியில் கலரைக் குழைத்து முகத்தில் பூசுகிறர்கள்.ஒருவர் யார் என்றே அடையாளம் சொல்ல முடிவத்தில்லை அத்தனை வண்ணக் கலவைகள்.இதைக்குறித்துத்  தான் “ராசலீலா” என்ற நடனம் உண்டாயிற்று . ஹிந்தி கவிஞர்   பிஹாரிலால் இது பற்றி அழகாக் கவிதைகள்: எழுதி இருக்கிறார் .
    மிக மட்ட ரகமாக் ஹோலி களிப்பது பீஹாரில் தான்  தண்ணிருக்கு பதிலாக சாணம் கரைத்து தலையில் ஊற்றுவார்கள் சில சமயம் அழுக்குத்தண்ணிரும் உண்டு பஸ்ஸில் உள்ளே சாணம் வீசி அடிப்பார்கள் நான் ஒரு தடவை கயா போய் வந்த போது  அவர்களிடமிருந்து தப்பித்து வந்தது பெரும் புண்ணியம் ஆனது ,தவிர பெண்கள் வெளியே போகவே முடியாது. கொஞ்சமும் பாதுகாப்பு இருக்காது ,

    இந்த ஹோலி புராண கதையில் பிரஹ்லாதனும்  சம்பந்தப்பட்டிருக்கிறார்  .எதற்கும் அசையாமல் “ஒம்  நமோ நாராயணாய” என்று சிறுவன் பிரஹ்லாதன் சொல்லி வருகிறான். பல விதமான  தண்டனைக் கொடுத்தும் அவன் மனம் மாறவில்லை கடைசியில்  அவனைத் தீயை வளர்த்து அதில் அவனது அத்தை ஹோலிகா உடல் சுடாதபடி  ஒரு மாயப் போர்வைச்சுற்றிக்கொண்டு   அநத்த் தீயின் நடுவில் அமர்ந்தாள் பின் பிரஹ்லாதனையும் அழைத்தாள். பிரஹ்லாதன் அவள் மடியில் அமர்ந்து “ஒம் நமோ நாராயணாய” என்று ஜபிக்க ஹோலிகாவின் போர்வை கழண்டு பிரஹ்லாதனைச் சுற்றிக்கொண்டு விட்டது. பிரஹ்லாதனுக்கு ஒன்றும் ஆக வில்லை ஆனால் ஹோலிகா எரிந்து சாமபலானாள். இறக்கும் முன் ஹோலிகா தன்னை மன்னிக்கும்படி பிரஹ்லாதனைக் கேட்டுக் கொண்டாள்.தன் தவறுக்கு வருந்தினாள் இந்த ஞாபகமாகத்தான்  சோட்டி ஹோலியின் போது  கட்டைகள் போட்டு எரிய விடுகின்றனர்

    இதெ போல் இதைக் காமத்தகனம் என்றும் கொண்டாடுகின்றனர்  சிவனது தபத்தைக் கலைக்க வந்தக் காமனை தன் மூன்றாவது கண்களைத் திறந்து எரித்து விட்டார் சிவன் பின் அவனது மனைவி வந்து அழுது மன்னிப்ப்பு கேட்க அவளது கண்களுக்கு மட்டும் ரதி தென்படுவாள் என்று வரம் அளித்தார் “காதலுக்கு கண்ணில்லை என்று இதனால் தான் சொல்கிறார்களோ ?மதுராபிருந்தவன் துவாரகாவில்  கண்ணன் சிலலயும் விட்டு வைப்பதில்லை அந்தச் சிலையையும் பீச்சுக்குழலால் வர்ணங்கள் பீச்சி  கண்ணன்  ராதை போன்று வேஷம் தரித்து வயசு வேறுபாடின்றி  சிறுவர் முதல் வயதானவர் வரை  இந்த வண்ணக்க்லவையில் மிதந்து
    களிக்கின்றனர்.ஜாதி மதம் வித்தியாசமின்றி  ஏழைப் பணக்காரார் என்ற் பாகுபாடுமின்றி கொண்டாடும்  பண்டிகை இந்த ஹோலி ,,இதை இன்னும்  ஒரு ஒழுங்குடன்   ஒழுக்கத்துடன்கொண்டாடினால் மிகவும் நன்றாக இருக்கும்   .இந்த ஹோலியின் அருகிலேயே   கிருஸ்தவ திருநாள் புனித வெள்ளியும்  அத்துடன் முருகனுடய திருநாளான “பங்குனி உத்திரமும் வருகிறது இது முடிந்தவுடன்  ஜைன மதத்தின் தலைவர் ஸ்ரீ மகாவீர் ஜயந்தியும்   ,தலித் மக்களுக்கும் உரிமை வாங்கித்தந்து அவர்களது முன்னேற்றத்திற்காகப் போராடிய டாக்டர் அம்பேத்கரின்  பிறந்த நாள்  வருகிறது  இத்துடன் புரட்சிகவிஞர் திரு பாரதிதாசன் அவர்களின் நினைவு நாள் அத்துடன் அவரது  பிறந்த நாளும் எப்ரலில் வருகிறது.முஸ்லிம்  திருநாளும் இந்த மாதத்தில் வருகிறது “மிலாத் உன் நபி “என்ற் திருநாளும் மொஹிதின் ஆண்டவர் உர்ஸ் என்பதும்  வருகின்றன பல கோவில்களில் கொடியேற்றி ப்ங்குனி உத்திரம் திருவிழா நடப்பதும் இம்மாதத்தில் தான் தவிர ராம நாமத்தின்  பெருமையை உணர்த்தும்  ஸ்ரீ ராமநவமியும்  நம் பாப புண்யங்களைக் கணக்கெடுக்கும்  ஆடிட்டர் ஸ்ரீ சித்திரபுத்திரன்   பிறந்த
    சித்திராபௌர்ணமியும்  இந்த ஏப்ரலில் தான்  இதனால் தானோ வங்கியிலும் வருடக் கடைசி கணக்கு வழக்குகள் சரிப்பார்த்து முடித்து புதிதாக ஆரம்பிக்ககிறார்களோ என்னவோ?தவிர மாணவ மாணவிகள் பரீட்சை டென்சன் முடிந்து  சுதந்திரமாக கொண்டாடும் மாதமும் இதுதான் தவிர தெலுங்கு கன்னட மஹாராஷ்ட்ர  வருடபிறப்பும் தமிழ் ,பெங்காலி ஒரிஸ்ஸா மக்களின் வருடப் பிறப்பும்  இந்த ஏபரல் மாதத்தில் தான் வருகிறது ,இந்த வசந்தக் கால பல விதமான கலாச்சாரத் திருநாட்கள் வந்து ஏப்ரல் மாதத்தை மேலும் பெருமைப்படுத்துகிறது.

    Share
  • பாடுங்கள் தமிழாள் வாழ!

     

    சத்தியமணி

    வாருங்கள் பலகோடி சேர மகளிர் நிலமேக‌!

    பாடுங்கள் தமிழாள் வாழ! நிலத்து நலமாக !

    பருவங்கள் மாறும் தமிழகராதியில் பெண்ணின் வாழ்க்கை

    புருவங்கள் ஏறும் அறிவீர்!அவள் புன்னகை சேர்க்கை ()

     

    பேதைமெய் சிறுமிகுறுமி பாலை வடிவெடுத்தாள் (5-7)

    பெதும்பையே ஆகத்தருவி தும்பை நுனிபிடித்தாள் (8-11)

    மங்கையாய் பருவமெய்தி பெண்மை பெயர்ந்தாள் (11-13)

    மடந்தையாள் மாந்தளிராகி மலராய் சிரித்தாள் (14-19) ()

     

    அன்னமன் னந்நடை அரிவையாகி காதல் கற்றாள் (20-25)

    தெரிவை எம்மைத் தெரிவாயென இல்லறம் கண்டாள் (26-31)

    பேரிளம்பெண் அன்னை யென்றே பாசம் பொழிந்தாள் (32-40)

    நுங்கையாகி நற்றமிழ் எழுதிட கற்று கொடுத்தாள் ()

     

    நங்கையாகி உறவுகள் ஏற்று  பெண்ணின் பெருமை – மாலன்

    தங்கையிவளே ! மகளாய்  பிறந்தாள்!  சக்தி மகிமை !

    முதுமையென முடிவெண்மை யாகினும் என்றுமிளமை

    புதுமையாய்   இதைக்கவியில் வடிக்க தந்தேனுவமை ()

    Share
  • நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள் – 29

    பெருவை பார்த்தசாரதி

     

    அதிர்ஷ்டம் வேணும் சார், இல்லண்ணா ஒண்ணும் நடக்காது.

    ஏன் சார் இப்படிச் சொல்றீங்க?….

    அது ஒண்ணுமில்ல, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.

    அட என்ன சார், ஒண்ணுமே இல்லாத விஷயத்த, பெரிசாக்கி ஏதோ சொல்ல வர்ரீங்கன்னு நினைக்கிறேன்?…

    ‘தலகீழ நிண்ணு தண்ணி குடிச்சாலும் நடக்கிறதுதான் நடக்கும்’ போல இருக்கு.

    ‘என்ன சார்’ மறுபடியும் தத்துவம்!..

    வேற ஒண்ணுமில்ல எவ்வளவுதான் விழுந்து புரண்டாலும், ஒட்றதுதான் ஒட்டும்னு சொல்றேன்.

    சரீங்க போதும், சொல்ல வந்தத நேரடியாச் சொல்லுங்க, எதுக்கு சுத்திவளச்சு பெரிசா!….இழுக்கிறீங்க…

    ஒண்ணுமில்ல, போனவாரம், வெளிநாடு போயிருந்தேனா, அங்க வாங்கின லாட்ரி சீட்ல, ஒரு நம்பர்ல பல லட்சம் ஏமாந்துட்டேன். எனக்கு பக்கத்து நம்பர்காரணுக்கு ஒரு கோடி விழுந்திருக்கு.

    ஏங்க அதிர்ஷ்டத்த நம்பி வெளியூர் போறீங்க, இங்கதான் அறிவுக்கு முதலிடம் கொடுக்கறாங்களே, டிவில குரோர்பதில கலந்துக்க வேண்டியதுதான, கரெக்டா பதில் சொல்லி கிட்டே வந்தா, உங்களுக்கும் ஒரு கோடி கிடச்சிடுமில்ல.

    அட அதுலகூட மோசடி உண்டுங்க, வரிசயா கரெக்டா எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிட்டே வரும்போது, கடைசி கேள்விக்கு பதில் தப்பா இருந்தா, மொத்த பணமும் அவுட்டுல்ல.

    அது போகட்டும் போனவாரம் கையில ஏதோ அடிபட்டுடுச்சுன்னு சொன்னிங்களே?..

    அத ஏன் கேக்கிற, என் போறாத பாத்ரூம்ல காலம் வழுக்கி விழுந்தேன், கையிலே சரியான அடி, ஆஸ்பிடல், செக் அப், எக்ஸ்ரே அது, இதுன்னு ஒரு வாரம் ஓடிருச்சு. ஒரே டென்ஷன், கவல. நல்லவேள பெரிசா ஒண்ணுமாகல.

    சின்ன விஷயம்தானே இதுக்கு போய் இவ்வளவு அலட்டிக்கிருங்கீளே?..

    சின்னகாயம்தான், ஆனா பெரிசா கொண்டுபோயி விட்டுட்டா?…

    சின்ன விஷயத்துக்கெல்லாம், ரொம்ப அலட்டிக்காம இருக்கிறதுக்கு, ஒரு வழி இருக்கு, அதாவது சில பிரச்சினைகள பெரிதாக்காம, கண்டுக்காம இக்னர் பண்ணிட்டா எப்பவுமே சந்தோஷம்தான் என்பது, பாண்டிச்சேரி அன்னையின் பொன்மொழிகளுள் ஒன்று……தெரியுமா!…..

    ===========

    இந்த இரண்டு பேரின் உரையாடலைச் சற்று உன்னிப்பாக கவனித்தால், ஒன்று தெளிவாகும், ஒருவர் எதிர்மறை எண்ணங்களோடு உரையாடும்போது, மற்றொருவர் நேர்மறை எண்ணங்களின் மூலம் பதில் சொல்கிறார் என்பது தெரியவரும்.

    இதுபோல் பொது இடங்களிலும், விழாக் கூட்டத்திலும், பலர் புலம்பக் கேட்டிருக்கிறோமல்லவா?… இந்த உரையாடலில் இருந்து என்ன தெரிகிறது. இருப்பதை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழாமல், தன்னிடம் திறமை இல்லை என்ற சுய பச்சாதாபம் உள்ளவர்கள்தான் இப்படிப்பட்ட புலம்பலுக்கு ஆளாகின்றனர் என்கிறது மனநல ஆய்வு ஒன்று. எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் நடக்கும் என்று அலுத்துக்கொண்டு, ‘இது நம்மால் முடியாது’ என்கிற எண்ணமே இவர்களிடம் மேலோங்கி இருப்பதைக் காணமுடியும்.

    வெற்றி வந்தால், அது கடின உழைப்பால் வந்தது என்று பீற்றிக்கொள்வது, இல்லையேல் நமக்கு ‘நேரம் சரியில்லை’ என்று வெறுத்துக் கொள்வது. தன்னால் ஒன்றும் சாதிக்கமுடியாது என்று தெரிந்ததும், மற்றவர்களின் உண்மையான சாதனையை ஒரு போதும் ஒத்துக்கொள்ளாமல் ‘ஏதோ அதிர்ஷ்டம் அவனுக்கு’ என்று  விளக்கமளிப்பது. இல்லாவிட்டால், அந்தச் சாதனைப் பற்றி ஏதாவதொரு அவதூறு சொல்வது, இதுவே எதிர்மறை எண்ணங்கள் நிறைந்தவர்களின் வாடிக்கையான வழக்காக இருக்கும் என்பதை நாம் பணிபுரிகின்ற இடங்களில் பழகுபவர்களிடம் உணரமுடியும்.

    இதுபோல் அதிர்ஷ்டத்தின் மீது பழிபோட்டு, தம்முடைய திறனைக் குறைவாக மதிப்பிட்டு தம்மைத் தாழ்த்திக்கொள்வதால் ஒரு காரியத்தையும் முழுமையாகச் செய்யமுடியாது.  துன்பங்கள் வருவது எல்லோருக்கும் சகஜம், அதை எப்படி சமாளிக்கிறான் என்பதைப் பொருத்தே அவன் மற்றவருக்கு வழிகாட்டியாகிறான். நம்மால் முடியும் என்கிற நேர்மறை எண்ணம் இருந்தால் மனிதனால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை என்பதை இதுவரை எடுத்துச் சொல்லாத எழுத்தாளர்களே இல்லை என்று கூடச்சொல்லலாம்.

    வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன், பசியினால் இளைத்தே வீடுதோ றிரந்தும், பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்” என்று பாடிய வடலூர் வள்ளலார், பயிர்கள் வாடுவதைக் கூட சகிக்கமுடியவில்லை, வயிற்றுப் பசியால் வாடும் மாந்தர்களை கண்டார், அதன் தாக்கமாக, ‘பசியால் வாடும் அனைவருக்கும் உணவளிக்க முடியும்’ என்ற அற்புதமாகத் தோன்றிய, அந்தச் சிந்தனைத்துளி என்கின்ற சிறு நெருப்புதான், இன்று அணையா நெருப்பாய் அனைவருக்கும் உணவளித்துக் கொண்டிருக்கிறது. சிந்தனை தோன்றியபோது, பணமில்லை, ஸ்பான்சர் செய்யவும் யாரும் இல்லை. ஆனால், இவரது ஆக்கப்பூர்வமான சிந்தனையாலும், மனவலிமையாலும், எந்தச் செயலையும் செய்துவிட முடியும் என்பதைத்தான் வள்ளலாரின் வாழ்க்கைமுறை நமக்கு வழிகாட்டுகிறது.

    இது போன்று, மன வலிமை கொண்ட எத்துணையோ சாதனையாளரின் வரலாறுகளைப் படிக்கிறோம். அனைத்திலும் ஒரே மாதிரியாக ஒரு உண்மை நிலவுவதை அறிகிறோம். அதாவது துன்பத்திலும், மன வலிமை ஒன்றே உயர்வு தரும் என்பதும், மனோபலம் இருந்தால் நினைத்த காரியம் கைகூடுகிறது. ஆப்பர்சுனிட்டி என்பது எல்லொர் வீட்டுக்கதவையும் ஒன்றாக ஒரே நேரத்தில்தான் தட்டுகிறது. ஆனால் சந்தர்ப்பத்தை சரியான நேரத்தில் பயன்படுத்தியவர்கள்தான் சாதனை படைத்தவனாகி வரலாற்றில் இடம் பெறுகிறார்கள்.

    அரசாங்க அலுவலங்களில் பலர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள், அதில் தினமும் வேலைக்கு வருவது மட்டுமே தன்னுடைய கடமை என்றும், வேலை செய்வது மற்றவரது வேலை என்றும் நினைப்பவர்களே அனேகர். அரசாங்க உத்தியோகம் என்றாலே, கேட்கவே வேண்டாம், ஏதோ வேலைக்கு வந்தோமா, சொந்தப் பணிகளை மட்டுமே முன்னிறுத்தி அலுவலகப் பணியைப் பின்னே தள்ளி அன்றயப் பொழுதைக் கழித்துவிட்டு வீடு வந்து சேர்வதற்குப் பெயர்தான் ‘பணி’.  இதில் சற்று விதிவிலக்காக ஒர்க்கஹாலிக்காக இருப்பவர்கள், அபாரமான திறமைகள் கொண்டவர்களுக்கு மட்டுமே, வாய்ப்புகள் அதிகமாகக் காத்திருக்கின்றன.

    இப்படிப்பட்ட திறனுள்ளவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னும், திறமைக்கு விலையாகத் தொடர்ந்து வேறு இடத்தில் பணி செய்ய முடிகிறது. இங்கே பலருக்கு அதிர்ஷ்டம் வேலை செய்யாது. திறனுக்கும், முயற்சிக்குமே முதலிடம். ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது, எத்தகய இடையூறு வந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், அசாத்தியமான மனோபலத்துடன் செயல்படுபவர்கள், முடிவில் வெற்றிகரமாக செயலை முடித்து விடுவதைப் பார்க்கிறோம். பின்னாளில், எதிர்த்து நின்றவர்கள் கூட, அச்செயலை வியந்து பாராட்டுவதும் சகஜம்.

    எத்துணையோ பேருக்கு எண்ணம்தான் பெரிதாக இருக்கிறது. ஆனால் அதை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபாடு இல்லை. அப்படியென்றால் ஆசை மட்டும் இருந்தால் போதுமா?…குழந்தைகள் மேதையாகவேண்டும் என்று நினைக்கிறோம். அதற்கான முயற்சி ஏதும் எடுத்தால்தானே ஓரளவுக்கு நடக்கும். வெறும் ஆசை மட்டும் இருந்தால் போதுமா?..ஆக “ஆசை இருக்கு தாசில் பண்ண அருகதை இருக்கு கழுதை மேய்க்க” என்பது போல், ஆசை மட்டும் இருந்தால் போதுமா?.. முயற்சி எடுத்தால் முடியாது உண்டா. எடுத்த காரியத்தை முடிக்க மனோபலம் அவசியம் என்பதை சாதனையாளரின் வரலாற்றிலிருந்து அறிகிறோமல்லவா?…

    ஒவ்வொரு நிமிடமும் உலகில் ஏதாவதொரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பு நிகழ்ந்து கொண்டுதானிக்கிறது. புதிய, புதிய கண்டுபிடிப்புகளுக்கு குறிக்கோள்தானே முன்னோடியாக இருக்கிறது. இன்றய உலகத்தில் நான்கு சக்கர வாகனங்களின் வசதிகளில் வளர்ச்சி, அலைபேசியின் அபரிமிதமான செளகர்யங்கள் இதெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு.  நித்தம் ஒரு சிந்தனையோடு, புதிது புதிதாக ஆராய்ச்சி செய்து புகழின் உச்சிக்கு சென்ற ஆப்பிள் நிறுவனர் ‘ஸ்டீவ் ஜாப்ஸ்’ என்பவரை அவ்வளவு எளிதில் உலகம் மறந்து விடுமா?… மேன்மேலும் சாதிக்க வேண்டிய தருணத்தில், இளம் வயதிலேயே இறந்து விட்டார் என்பதுதான் வருந்துதற்குறியது.

    நமது உடலில் எல்லா அவயங்களும் நன்றாக வேலை செய்கிறது. அங்க ஹீனம் இல்லை. ‘எப்படி இருக்கிறீர்கள்’ என்று கேட்டால் ‘ஏதோ இருக்கிறேன்’, ‘காலம் ஓடிக்கிட்டுருக்கு’ என்ற சலிப்பான பதில் வருவதைப் பார்க்கிறோம். கால்கள் நன்றாக இருந்தும். அவசரமாக ஒரு பஸ்ஸைப் பிடிப்பதற்குக்கூட சிறிது தூரம் ஓடமுடியவில்லை. ‘நேற்று இடுப்பிலே ஒரே வலி, கால்களிலே வெரிகோஸ் ப்ராப்ளம்’, ஒரு வேலையுமே செய்ய முடியலே, கொஞ்சதூரம் நடக்க முடியல’ இப்படி தினமும் அலுத்துக் கொள்பவர்களை நம்மிடம் பழகுபவர்களிடம் அதிகம் காண முடியும்.

    குழந்தைகள் படித்து, பட்டம் பலபெற்று நல்வாழ்க்கை வாழவேண்டுமென்பதுதானே, அனைவரின் லட்சியம். அதற்காகத்தானே எல்லாத் தாய்மார்களும் எத்தகய துன்பம் வந்தாலும் சகித்துக் கொண்டு மனோபலத்துடன் பிள்ளகளின் வளர்ச்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இப்படித்தான், ஒரு தாயும் கனவு கண்டாள். எட்டு வயதே நிரம்பிய தன்னுடைய பிள்ளை எப்போதும் போல் அன்றும் பள்ளி சென்றான். அங்கு குளிர் மிகுந்த வகுப்பறையை சூடேற்றுவதற்காக ஸ்டவ் பற்ற வைத்தான், ஸ்டவ் வெடித்து, வகுப்பறை முழுவதும் தீ பரவியது, மாணவனின் உடம்பும் இடுப்புக்கு கீழ் பாதிக்குமேல் எரிந்து விட்டது. கெரோசினுக்கு பதில் தவறுதலாக கேஸோலின் நிரப்பி இருந்ததால் இந்த விபத்து நிகழ்ந்தது. தீ விபத்தில், 13 வயதான தனது சகோதரரை இழந்தார்.

    உடம்பில் ஒரு பாதி முழுவதும் தீக்காயங்களுடன் எரிந்து விட்டதால், இவன் இனி வாழ்ந்து துன்பத்தை அனுபவிப்பதைவிட இறப்பதே மேல் என்று தன் அன்னையிடம் டாக்டர் சொல்வதை, அரைகுறை நினைவோடு இருந்த அந்த தைரியமான மாணவன் கேட்கிறான். பள்ளிக்கூடமே பாதி எரிந்து அணைந்து விட்டாலும், கடவுள் பக்தி நிரம்பிய அவன் மனதில் “நான் வாழ்வேன்” என்கிற மன வலிமை, மனோசக்தி(‘தீ) மட்டும் அணையவில்லை.

    மருத்துவரே வியக்கும்வண்ணம் எப்படியோ பிழைத்து விடுகிறான். ஆனால் செயலிழந்த கால்கள் இரண்டையும் வெட்டி எடுத்துவிடவேண்டும் என்ற மருத்துவரின் கோரிக்கையை, அவனது அம்மா நிராகரித்து விடுகிறார். தினமும் தந்தையும் தாயும், அவனது கால்களுக்கு மருந்துகள் தடவி நீவி விடுகின்றனர். காலில் சுரணையோ, சக்தியோ ஒரு முன்னேற்றமும் இல்லை. “நான் கண்டிப்பாக நடந்து காட்டுவேன்” என்ற எண்ணம் மட்டும் சிறுவனின் மனதை விட்டு அகலவில்லை.

    ஒரு நாள் அவனது தாய், தன் மகனை ஒரு தள்ளு வண்டியில் உட்காரவைத்து, தோட்டத்தின் பக்கம் சுகாதாரமான காற்றைச் சுவாசிக்கும்படி அழைத்துச் செல்கிறாள். திடீரென்று எழுந்த அவன், காம்பெளண்ட் சுவரின் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு தரையில் தவழ்ந்த வாறு சிறிது தூரம் செல்கிறான். தினமும் அவ்வாறு செய்ய ஆசைப் படுகிறான். தாயும், தந்தையும் அவனது கால்களுக்கு மஸாஜ் செய்து, தினமும் தெம்பூட்டுகிறார்கள்.

    படுக்கையையும், வீல்சேரையையும் வெறுத்த அவன், எப்படியாவது ஒரு நாள் நடந்து விடவேண்டும், ஓடிக் காட்டவேண்டும் என்ற வைராக்கியம் அவனை தினமும் இதே முறையில் பயிற்சி செய்ய வைக்கிறது. இரும்பு மனதால் ஆன அவனால், இப்போதெல்லாம் சிறிது சிறிதாக அவனால் நடக்கமுடிந்து பல நாள் தொடர்ந்தது. எதிர்பாராதவிதமாக ஒரு நாள், தன்னால் ஓடமுடிவதைக் கண்டு அவன் மனம் மேலும் சக்தி பெற்றது.

    நீண்ட நாள் ஆசையை நிறைவு செய்ய, நடந்து செல்லவேண்டிய பள்ளிக்கு, ஓடிச் சென்றடைகிறான். நினைத்த இடத்திற்கெல்லாம், அவனால் ஓடமுடிகிறது. அவனைப் பார்த்த அனைவருக்கும் வியப்பு. மன வலிமையால் “எந்த இடத்திற்கும் என்னால் ஒடிச் சென்றடய முடியும்” என்று நிரூபித்துக் காட்டிய அவனுக்கு ‘கான்ஸாஸ் ஃப்ளையர்’ (&), கான்ஸாஸ் இரும்புமனிதன் என்ற அடைமொழியைக் கொடுக்கிறார்கள்.

    இச்சிறுவனால் வாழமுடியாது,

    இவனால் நடக்க முடியாது,

    இவனால் ஒருபோதும் ஓடமுடியாது,

    என்று எல்லோராலும் கருதப்பட்ட, அவ்வாலிபன், 1934 ல், நியூயார்க்கில் புகழ்பெற்ற ‘மேடீஸன் ஸ்கொயர் கார்டன்’ (Madison Square Garden) என்ற இடத்தில் நடந்த போட்டியில் ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடம் எட்டு நொடிகளில் கடந்து சாதனை புரிந்ததை, 25000 பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். வலிமையான எண்ணமும், மன வலிமையும் கொண்ட அவ்வாலிபனின் பெயர் ஃக்ளன் கன்னிங்காம். தொடர்ந்து 1936, 38, 40 என்று அனைத்து போட்டிகளிலும் முதலிடம் வகித்தார்.

    இவரைப் பற்றிய மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள:-

    http://en.wikipedia.org/wiki/Glenn_Cunningham_(athlete)

    உடம்பிலே ஒரு குறையும் இல்லாத, இன்றய இளைய சமுதாயத்தினர், ‘ஃக்ளன் கன்னிங்ஹாம்’ (Glen Cunningham) என்ற வீரரின், சுயரசரிதையை முழுவதுமாகப் படித்து, அவரது மன வலிமையையும், திறமைகளையும் அறிந்து கொள்ள முயற்ச்சி செய்தால், கண்டிப்பாக நாமும் சாதனை புரிய வேண்டும் எண்ணம் உருவாகும். இதேபோல் இரண்டு கால்களையும் இழந்த பிறகு, செயற்கைக் கால்களுடன் எட்டு முறை ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற ஆஸ்கார் பிஸ்டோரியஸ்’ (Oskar Pistorius) என்ற ஓட்டப்பந்தய வீரரை ‘பிளேட் ரன்னர்’ (Blade runner) என்ற பெயரில் உலகமே அறியும். இவர்களைப் போன்றோரின் வரலாறுகளை தேடிக் கண்டுபிடித்து அறிந்து கொள்ளவேண்டும்.

    உடல் நலத்தைப் பேணுவதற்கு, சத்தான உணவு தேவைப்படுவதைப்போல, மனநலத்துக்கும், மனஉறுதிக்கும், மனவலிமைக்கும் தேவை நல்ல எண்ணங்கள். இத்தகய எண்ணங்களைத் தூண்டும் தகவல்களை, இளைஞர்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருந்தால், படிப்படியாக வெற்றிப் படிகளை எட்டி சாதனை படைக்க முடியும்.

    கட்டுரையின் சாராம்சமாக,

    ஒண்ணுமில்லாத விஷயத்துக்கெல்லாம், பெரிதாக மனதைப் போட்டு அலட்டிக்கொண்டிராமல், கடந்தகாலத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிராமல், இருப்பதை வைத்துக் கொண்டு, இன்புற்று வாழ, தினமும் புதிது புதிதாக சிந்தனை செய்தால், இன்பம் என்றும் நிலையானது என்பதை மஹாகவி பாரதி, தனது பாடல் ஒன்றை மிக அருமையாக, பாமர மக்கள் கூட எளிதில் அறிந்துக்கொள்ளும் விதமாக அமைத்திருக்கிறார்:-

    சென்றது இனி மீளாது மூடரே!… நீர்

    எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

    கொன் றொழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து

    குமையாதீர்!… சென்றதனைக் குறித்தல் வேண்டாம்

    இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்

    எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

    தின்று விளையாடி இன்புற்று வாழ்வீர்

    தீமை எல்லாம் அழிந்து போம் திரும்பி வாரா!…

    இன்றய இளய சமுதாயத்துக்கு எழுச்சியூட்டும் விதத்தில் இப்பாடல் அமைந்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

     தொடரும்……..

     

    Share
  • நீ வரு நாளப் பாத்திருக்கேன்

     

    -பார்வதி இராமச்சந்திரன்

     

    கொதிக்கிற வெயிலிலே கூலி வேல நாம்பாத்து

    கொண்டார காச கேட்டு கன்னத்துல அடிக்கிறியே

    வடி கஞ்சி கடங்கேட்டு வாங்கிக் குடிச்சுப்புட்டு

    ஒம் பிள்ள படுத்திருக்கே  ஒனக்கிது தா(ன்)  தெரியலயா?

     

    பச்ச புள்ள மடியிருத்தி பால் கொடுக்குற வேளையிலே

    எச்சி துப்பி அடிக்கிறியே எட்டி நீயும் மிதிக்கிறியே

    கத்தி  கதறி அலறுகிற கைப்பிள்ள முகம் பாத்து

    குத்தி மனச‌ பிடுங்குதய்யா எ வயிறு கொதிக்குதய்யா

     

    நாலு வருச முன்ன நா வாழ்ந்த பவுச கண்டு

    நாலூரு சீம எல்லா(ம்) நாம் போனா மதிப்பாக‌

    நாம் பொறந்த ஊருலயும் நாம் புகுந்த வூட்டிலயும்

    எம் போல வாழணுன்னு எப்பவுந் தா வாழ்த்துவாக‌

     

    எரிஞ்ச கண்ணு பட்டு எம் பொழப்பு போச்சுதய்யா

    எங்கிருந்தோ வந்த குடி எங்குடியக் கெடுத்ததய்யா

    எட்டூரு விட்டெறியும் எ ராசா பேரு சொன்னா

    பட்டுன்னு தள்ளி வுட்டுப் பாத்திருச்சே இந்தக் குடி!!

     

    எம்புட்டோ சொன்னேனே!! என்ன நீயும் மதிக்கலயே

    எதுத்துக் கேட்டாக்க ஒன் மனசு சகிக்கலையே

    மந்திரிச்ச கோழி போல, மறுக்கா மறுக்கா நீயும்

    சந்தியிலே கள்ளுக் கட போறதயும் நிறுத்தலையே

     

    பத்திரமா பொட்டியில வச்ச நக போச்சுதய்யா

    பத்திரத்த வச்சதுல பழய வீடு போனதய்யா

    சத்திரத்த கட்டி வச்சு தருமஞ் செஞ்ச பரம்பரய‌

    புத்தியில்லா மனுசெ ‘குடி’, கொக்கரிச்சு தின்னதய்யா

     

    வெறுப்பு மீறிப் போய் வெசங் குடிச்சுப் போகலான்னு

    வெவரங் கெட்டுப் போய் ஒரு நேரம் மயங்கிப் புட்டேன்

    வெனயம் இல்லாத எம் பிஞ்சுக மொகம் பாத்து

    வாழ்ந்து தே  பாப்போம்னு வீராப்பா நெனைச்சுப் புட்டேன்

     

    இனிமேட்டும் ஒ(ன்) அடி தாங்க என்னால முடியாது

    இனி பொறுத்துப் போனாக்கா ஒரு நாளும் விடியாது

    ஒங் குடியும் குடுத்தனமும்  ஒரு கூட்டா சேராது

    ஒன் நெனப்பு மாறலென்னா ஒறவிருக்க ஏலாது

     

    எப்பத் தா(ன்) குடிக்காம இங்கிருக்க‌ நீ வரியோ,

    தப்பாம அது வரக்கும் தவிப்போட  காத்திருக்கேன்

    பாழாப் போற குடி பாதகத்த தொலைச்சுப் புட்டு

    வாழ்வு வேணுமுன்னு நீ வரு நாளப் பாத்திருக்கேன்.

     

    படத்துக்கு நன்றி: https://www.facebook.com/WeNeedTotalAlcoholProhibition

    Share
  • அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை- (3)

    சாகர் பொன்னியின்செல்வன் 

    3. காலத்தை வென்ற பிரமிட்கள்

    காலை எழுந்து அறையில் இருந்த மிணரல்(mineral) தண்ணீரில் பல் துலக்கும் படி பசங்களுக்கு திரும்ப திரும்ப சொல்லி, குளித்து முடித்து கிழே வருவதற்கு எட்டு மணியானது. காலை வெளிச்சத்தில் ஹோட்டல் இன்னும் விசாலமாக தெரிந்தது. நான்கு வகை உணவு விடுதிகள், பெரிய நீச்சல் குளம், சூடுப்படுத்தபட்ட உள்நீச்சல் குளம்,உடல்பயிற்சி கூடம் என்று எல்லா வசதிகளும் இருந்தன.

    காலை உணவு சாப்பிடப் போனால் அங்கே உணவுக்கூடம் முழுவதும் இந்திய முகங்கள். கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் என்றறிந்ததும் ஒரே வியப்பு. மேல்நாட்டு பதப்படுதப்பட்ட மாமிசம், புலவு சாதம், பலவகை வெண்ணை, பன்னீர் மற்றும் பதப்படுத்தபட்ட பாலாடைக்கட்டிகள் இருந்தன.  பலவகை பழம் மற்றும் காய்கறி கலவைகளும், ரொட்டிகளும் இருந்தன. என்ன சைவவகை உணவுகள் மிக கம்மியாக இருந்தன. ஏற்கனவே எகிப்தில் வரும் உடல் உபாதைகள் பற்றி தெரிந்ததாலும் தடுப்பு ஊசிகள் போடாததாலும் முடிந்த வரையில் சமைக்கப்பட்ட உணவுகளை மட்டும் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தோம்.

    எங்களோடு விமானத்தில் வந்த இரண்டு பயணிகளும் மெம்பிஸ் டூர்ஸ் வழிகாட்டிக்காக காத்திருந்தனர். சரியாக ஒன்பது மணிக்கு அப்துல் ஹோட்டல் வரவேற்பிற்கு வந்தார்.அவர் கூட எங்கள் வழிகாட்டி மஹ்மூத் வந்தார். வெளியே வந்ததும் எங்களுக்காக ஒரு ஹயுண்டாய் (Hyundai)வேன் காத்திருந்தது,அதேபோல் மற்ற பயணிகளுக்கு இன்னுமொரு தனி வேண் நின்றது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனியே ஒரு வண்டி மற்றும் வழிகாட்டி! அப்பொழுதுதான் மெம்பிஸ் டூர்ஸ் ஒரு பெரிய கிளைகள் உள்ள ஒரு நிறுவனம் என்று புரிந்தது. பயணிகளை ஏற்பாடு செய்வது தலைமை அலுவலகம், அங்கிருந்து  அவர்களின் பிரதிநிதிக்கு பயணிகளின் தகவல் விவரம் அளிக்கப்படுகிறது, அந்த பிரதிநிதி எண்ணிக்கைக்கும் போகவேண்டிய இடங்களை பொருத்தும் வழிகாட்டி மற்றும் ஒட்டுனர்களை ஏற்பாடு செய்தார்.

    மஹ்மூத் முதலில் நாம் உலகபுகழ் பெற்ற பிரமிடுகளை பார்க்கப் போகிறோம் என்றார். போகும் வழியில் அவரிடம் சமீபத்தில் நடந்த புரட்சி பற்றி பேச்சுக்கொடுத்தபோது, மிகவும் பெருமையோடு நினைவுகூர்ந்தார். தானும் தனது பத்து வயது மகனுடன் தினமும் போய் போராட்டத்தில் கலந்து கொண்டதையும் எப்படி கடைசியாக மக்களாட்சி வந்தது என்பதையும் மதியம் சொல்லுவதாக கூறினார். ஏனெனில் எங்கள் வண்டி பத்து நிமிடத்திலேயே பிரமிடுகள் வந்தடைந்துவிட்டது.

    வண்டியை விட்டு இறங்கியதும் எங்களை பிரமிக்க வைத்தது பிரமிட்! எவ்வளவு பெரியது! என்ன ஒரு கம்பீரம்! மெல்ல ஒரே பனிமூட்டத்தில் வானம் வரை எழும்பி மேகத்தில் மறைந்தது போல ஒரு காட்சிப்பிழை.

    “வாருங்கள் கிட்டே சென்று பார்க்கலாம்” என்று நடத்தி சென்றார் மஹ்மூத், மணலில் மெல்ல நடந்தவாறு முன்னே நின்ற பிரமிடுகளை ஏறெடுத்து பார்த்தவாறு சென்றோம். நடைபாதையோரம் எல்லாம் எகிப்தய தெய்வங்களும் பிரமிடுகளும் குவியல் குவியலாக கடையெங்கும் நிறைந்திருந்தது. பாபிரஸ்(papyrus) எனப்படும் எகிப்திய காதிதத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் மற்றும் ஹீரோகிளிபிக்ஸ்(heroglypics) ஓவியங்கள் என்று ஒரே வண்ணமயமான கலை பொருட்கள் கண்ணை கவர்ந்தன.

    பார்த்தவாறு நடந்தபோது , “ஏய் இந்தியா இங்கே வாங்கு! அமிதாப்பச்சன் என்கடைக்கு வா! ஷாருக்கான் இங்கே வா! கரீணா கபூர் இந்த பிரமிடை பார் !” எங்களைதான் இப்படி எல்லாம் விதவிதமாக கூவி அழைத்தனர் கடைகளில் உள்ள வியாபாரிகள். மஹ்மூத் இங்கே விற்பதெல்லாம் சீனாவில் மிஷினில் செய்தவை நான் உங்களை எகிப்திய அரசாங்கத்தால் அங்கிகாரம் பெற்ற கடைக்கு அழைத்து செல்கிறேன் அங்கு வேண்டியதை வாங்குங்கள் என்றார். மேலும் இந்திய தொலைக்காட்சியும் படங்களும் எகிப்தில் மிக பிரபலம் என்றும் அதிமாக இந்திய பயணிகள் வருவதால் வியாபாரிகள் இப்படி ஒரு யுக்தியை கடைப்பிடிக்கிறார்கள் என்றார்.எங்களை நிறைக்க சொல்லி நுழைவுச்சீட்டு வாங்கி வந்தார்.

    மணலில் நான்காயிரம் வருடம் முன் கட்டப்பட அந்த மாபெரும் கல்காவியத்தை பார்த்து வியந்தோம். பண்டை எகிப்திய மன்னர்கள் இறக்கும் முன் தங்கள் உடலையும் தங்கள் பரலோக பயணத்திற்கு தேவையான வேலையாட்கள், உணவு, மது,நகை போன்றவையும் சமாதி போன்ற கோவில்களில் புதைத்தனர்.இந்த கோவில்கலை பெரிய கோபுரம் போன்ற பிரமிடுகளின் நடுவே அமைப்பது பண்டை எகிப்திய கலாச்சாரம்.

    கீஸாவில்(Giza) உள்ள பிரமிடுகளில்  மூன்று உலகபுகழ் பெற்றவை,இவை எகிப்திய அரசர்களுக்கு கட்டப்பட்டது, அதைவிடுத்தது மூன்று சிறிய பிரமிடுகள் அரசிமார்களுக்கு கட்டப்பட்டவை என்று அறிந்தபோது பாலியல் வித்தியாசம் பண்டை எகிப்தியர் காலம் முதல் இருந்தது என்று புரிந்தது.

    சக்கரா (Sakkara) என்ற இடத்தில் தான் முதல் பிரமிட் கட்டப்பட்டது, அதன் பிறகு பல்வேறு மன்னர்கள் தங்கள் வசதிக்கும் புகழுக்கும் ஏற்றவாறு வெவ்வேறு அளவில் பிரமிடுகள் அமைத்தனர்.

    உலக புகழ் பெற்ற கீஸா பிரமிடுகள் மூன்று. இவை தொன்மையான சரித்திர ஏழு அதிசியங்களில் ஒன்று. ஏழு அதிசயங்களில் மிகவும் பழமையானது பிரமிடுகள் தான் என்றாலும்,அன்று கட்டிய அளவில் இன்றும் கம்பீரமாக நிற்பது பிரமிட் மட்டுமே மற்ற ஆறு அதிசயங்களும் காலப்போக்கில் அழிந்தும் உடைந்தும் போய்விட்டன!

    தூரத்திலிருந்து பார்க்க ஒரு பெரிய முக்கோண கோபுரம் போல காட்சியளித்தாலும் கிட்டே வந்ததும் தான், பிரமிட் பல்வேறு கற்பாறைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கியிருக்கும் அதிசயம் தெரிகிறது. கிறிஸ்து பிறப்பதற்கு 2560 வருடங்கள் முன்னர் கட்டப்பட்ட இந்த அதிசயம் 481 அடி உயரம் கொண்டது. இரண்டு தஞ்சை பெரியகோவில்களை ஒன்றன் மீது ஒன்றாக நிறுத்தினாலும் பிரமிடை விட உயரம் கம்மி என்றால் பார்த்துகொள்ளுங்கள்.

    நான்காம் வம்சத்தின் குபு (Khufu) என்கிற மன்னரால் சுமார் இருபது வருட காலம் கட்டப்பட்டது.இந்த மன்னனை கிரேக்கர்கள் சியாப்ஸ் (Cheops) என்றழைத்தனர். சுண்ணாம்பு பாறைகளால்(limestone) கட்டப்பட்ட இந்த கட்டடதின் மொத்த எடை சுமார் என்னூறு டன். பெரிய பாறை கற்களை உருட்டி ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி சரிசமமாக நேர்த்திசெய்து எழுப்பிய பண்டை எகிப்தியரின் தொழில் நுட்பம் அசர வைத்து. மேலும் கட்டிய காலத்தில் பாறைகளின் சுவடு தெரியாமல் சுண்ணாம்பு பாறைகளால் மேல்பூச்சு செய்திருந்ததின் சுவடு சில இடங்களில் தெரிந்தது. 1300 வருடம் வந்த நிலநடுக்கத்தில் மேல்பூச்சு பாறைகள் கழண்டு விழ அவற்றை கொண்டு கைரோவில் மசூதிகளும் கொட்டைசுவர்களும் கட்டப்பட்டன!

     Courtesy: Sagar

    இந்த பிரமிட் ஒரு இறவுகோயில்(necropolis), எகிப்தில் உள்ள பிரமிடுகளில் இது ஒன்றில் தான் உள்வழி பாதைகள் மேலும் கீழும் செல்லும். உள்ளே உள்ள சமாதி(tomb) உள்வழி பாதைகளை பார்ப்பதற்கு சிறப்பு கட்டணம். எங்கள் வழிகாட்டி மஹ்மூத், இந்த கோயிலில் இப்போது ஒன்றும் இல்லை. ஒரு சின்ன அறையை பார்த்துவர வீண் செலவு செய்யாதீர்கள், நீங்கள் லக்சோரில்(Luxor) இதைவிட சிறந்த கோயில்களை பார்க்கமுடியும். இப்போதைக்கு சுற்றிபாருங்கள். மேலே ஏறி பாருங்கள், சிறிது நேரம் சென்று நாம் இரண்டாவது பிரமிட் பொய் பார்க்கலாம் என்றார்.

    ஏறலாம் என்றவுடன் பசங்க இருவரும் மிக உற்சாகத்துடன் படிகளில் ஏற ஆரம்பித்தனர். பத்து இருபது படிகள் தான் ஏறமுடியும், ஏறியதும் ஒரு குடைவரை பாதை இரவு கோவிலை அடைவதற்கு தோதாக அமைக்க பட்டிருந்தது. இது 820ம் ஆண்டு காலிப் அல்-மாமுன்(Caliph al-Mamon) காலத்தில் அமைத்த சுரங்க பாதை இதை திருடர்கள் சுரங்கபாதை (Robber’s tunnel) என்று அழைத்தனர்.

    மஹ்மூத் ஏற்கனவே உள்ளே போகாதீர்கள் என்றதால் என்றதால் வெளியவே இருந்தது பார்த்தோம். எங்கு பார்த்தாலும் பல்வேறு தேச சுற்று பயணிகள். பிரமிடுகளின் மேல் ஏறக்கூடாது என்று பல்வேறு பலகைகள் அறிவித்தாலும் மக்கள் முதல் இரண்டு சுற்றளவின்  மேலே ஏறிக்கொண்டுதான் இருந்தனர். மற்றவர் ஏறும் போது மலை மடு எதுவானாலும் ஏறும் நம் பிள்ளைகள் சொன்ன பேச்சை கேட்கவா போகின்றார்கள் அவர்கள் ஆசைக்கு அவர்களும் ஏறினர்.

    நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு இரண்டாவது பிரமிடுக்கு வண்டியில் ஏறி பாலைவன பாதையில் சென்றோம்.க்ஹப்ரே (Khafre) என்ற மன்னனால் கட்டப்பட்ட இந்த பிரமிட் க்ஹுபுவின் பிரமிடைவிடவும் கொஞ்சம் சிறியது சற்றே தெற்கில் அமைக்கப்பட்டது. குபுவின் மகன் இந்த  க்ஹப்ரே. அவரது மகனான மேன்குவரே(Menkaure) அமைத்தது மூன்றாவது பிரமிட்.

    சுற்றியிருந்த மணல் வெளியில் எப்படி பாறைக் கண்டுபிடித்து கட்டினார்கள் என்றென்னும் போது மிகவும் வியப்பாக இருந்தது.பிரமிடுகளை அடிமைகளை கொண்டு கட்டினார்கள் என்றும், எகிப்திய வல்லுனர்களை கொண்டு கட்டினார்கள் என்றும் இரண்டு கருத்து நிலவுகிறது. எது எப்படியானாலும் , இப்பெரிய கோயில்களை அமைத்தது மிகவும் பெரிய செயல் அன்றோ! சில கற்பாறைகள் 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அஸ்வான்(Aswan) கல்குவாரிகளில் இருந்து கொண்டுவரப்பட்டன.

    படகுகளில் கொண்டுவரப்பட்ட இந்த கற்களை இறக்குவதற்கு படகுதுறைளும் இருந்தது என்று வரலாற்று வல்லுனர்கள் உறுதி செய்துளார்கள். பிரமிடுக்கு அருகில் மூன்று படகு போன்ற அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. 1954ம் வருடம் நான்காவதாக மேலும் ஒரு படகு போன்ற அமைப்பு கண்டுப்பிடிக்கப்பட்டது. அதன் உள்ளே பல்வேறு உடைந்த மரத்துண்டுகள் இருந்தன. அவற்றை ஒரு எகிப்திய படகுகட்டும் வல்லுணரிடம் ஒப்படைத்துஆராய்ச்சி செய்ய சொன்னார்கள். ஹாஜி அஹ்மத் யூசுப் (Haji Ahmed Yusuf) என்ற வல்லுநர் 14 வருடம் அரும்பாடுபட்டு 143 அடி கொண்ட சிடார்மர (cedar wood) படகை நிலைநிறுத்தினார். இன்று அந்த படகு ஒரு அருங்காட்சியகத்தில் காட்சிபொருளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பமியான் மலை(Bamian) புத்தர் சிலைகள் தலிபான் காலத்தில் உடைக்கப்பட்டன, இஸ்லாமிய மதம் சிலை மற்றும் கோவில் வழிபாடு கூடாது என்று சொல்லுவதால் அவை உடைக்கப்பட்டன. எகிப்து இன்று இஸ்லாமிய தேசம், பண்டை கலாச்சாரத்தின் அம்சமாக பிரமிடுகளும் சிலைகளும் உள்ளனவே இது எப்படி சாத்தியம் என்று மஹ்மூதை வினவினேன்.

    இன்றைய எகிப்தியர் தங்கள் வரலாற்று தொன்மையை மதிப்பவர்கள் மேலும், இந்த புராதன கோவில்கள் கலையாகவும், அந்நிய செலவானி ஈட்டும் ஒரு வியாபார பொருளாகவும் கருதப்படுகிறது. மேலும் பெரும்பாலான எகிப்திய புராதனமான கோவில்கள் இன்று யுனெஸ்கோவின் (UNESCO) உலக புரதான சின்னமாக (World Heritage Centre) அறிவிக்கப்பட்டுலதால் அவற்றை யாரும் பாழ்ப்படுத்தமுடியாது என்றார். இருந்தாலும் எகிப்தியர்கள் கோவில்களும் சிலைகளும் எகிப்தியர்கள் மற்றும் கிரேக்கர் மற்றும் அராபியர்களால் சிதைக்கபட்டுள்ளன என்றார்.

    Courtesy: Wikipaedia

    12ம் நூற்றாண்டில் சுல்தான் சல்லாதினின் (Saladdin) மகன் அல்-மலேக் அல்-அஸிஸ் ஒத்தாமன் பென் யூசுப் ( al-Malek al-Aziz Othman ben Yusuf), என்பவர் எகிப்திய கலாச்சாரத்தின் முக்கிய அடையாளமான பிரமிடுகளை அழிக்க முயன்றாராம். மேன்குவரே கட்டிய பிரமிடை முதலில் கல்கல்லாக பிரிக்கவும் முயன்று தோல்வி அடைந்தனர்.கற்களை நகர்த்தி தள்ளுவது பிரமிடை கட்டுவது போன்று மிகவும் கடினமான காரியம் என்றும், மேலும் கீழே தள்ளிய கற்களை மணலில் நகர்த்துவது பெரும்பாடு என்று அறிந்ததும் இடிப்பதை நிறுத்திவிட்டனர் என்றாலும், அவர்கள் தொடங்கிய சிதைப்பினால் இன்றும் இந்த பிரமிடின் வடக்கு முகத்தில் ஒரு பெரிய பிளவு உள்ளது.  12ம் நூற்றாண்டில் உள்ள தொழில்நுட்பம் மற்றும் எந்திர திறனால் தகர்த்து நகர்த்தமுடியாத பாறைக்கற்களை எப்படி நகர்த்தி செதுக்கி இவ்வளவு நேர்த்தியாக கணிதகோட்பாடுக்குள் கட்டிய பிரமிடுகளும் அதை கட்டிய எகிப்தியர்களையும் தலைவணங்கி வாழ்த்துவதுத்தானே சரி!

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 64

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    (31)
    திணைநிலை வரி
    “அறியேன் என்று வலிதாகச் சொல்லி, பாங்கி குறைநயப்பித்தல்”

    தன் துணையோடு கலந்து விளையாடும்
    புள்ளிகள் பொருந்திய உடம்பினை உடைய
    ஆண் நண்டினைக் கண்டான் தலைவன்.
    அதே நேரம்
    பூங்கொத்துகள் செறிந்த
    கானற்சோலையில் இருந்த
    என்னையும் நோக்கினான்.
    தன் உணர்வு ஒழியச் சென்றான்;

    வளைந்த சுருள் கூந்தல் உடையவளே!
    அவ்வாறு சென்ற தலைவனின்,
    ஒலிக்கும் அலைகள் கொண்ட
    அக்கடற் சேர்ப்பனின் நிலைமைதனை
    நானும் அறிந்திலேனடீ!

    (32)

    குளிர்ந்த தம் அருளைத் தரவென்று
    தம் குதிரை பூட்டிய தேரிலே
    வருபவர் நம் தலைவர்!
    இப்போது எனை நினைக்காது
    கைவிட்டுவிட்டாரே அவர்!

    அழகிய மென்கொத்துகளையுடைய
    அடும்புகளே!
    அன்னங்களே!
    நம்மை அவர் மறந்தாலும்
    நாம் அவரை மறக்காதிருப்போம்!

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram21.html

    படத்துக்கு நன்றி:
    http://www.dollsofindia.com/product/contemporary-hand-painted/lady-in-moonlight-raja-ravi-verma-painting-painting-on-woven-bamboo-strands-BJ98.html

    Share
  • அகவுறை ஆற்றுப்படுகை!!!

     
    மகேந்திரன்

    பிறந்த இடமதை
    துறந்து பாய்ந்தேன்!
    திறந்த மடையாய்
    கறந்த பால்போல்
    குறவஞ்சி பாடிவந்தேன்!!

    ‘ஆ’வென்று
    அரற்றினேன்
    ‘ஓ’வென்று
    ஓலமிட்டேன்
    ‘கோ’வினின்று
    தாவியபின்!!

    உச்சிதனை விட்டு
    கூச்சல் தணித்து
    நீச்சம் வியாபித்து
    சிச்சிலிகள் சுற்றிநிற்க
    மச்சம் சுமந்தேன்!!

    கன்மம் ஈடேற்ற
    மண்மிசை தவழ்ந்து
    குன்னம் உறையும் முன்
    காண்டிகை உரைத்திட
    எண்ணம் செய்வித்தேன்!!

    சுனையாக பொங்கிய நான்
    அணைக்கட்டில் சிக்குண்டேன்!
    திணைவழி ஏகிட
    ஏனைய செயலுக்காய்
    சுனைத்தெழுந்தேன் மதகுவழி!!

    அழகு நடைபயின்று
    கூழாங்கல் உருட்டி
    கழனி வழி பாய்ந்து
    உழவின் உயிரேற்றி
    சோழகம் ஏந்திவந்தேன்!!

    சிதறாது கரையடங்கி
    சதங்கை ஒலியெழுப்பி
    மிதமான வேகத்தில்
    இதமாக ஓடிய நான்!
    மேதகு தாகம் தணித்தேன்!!

    சற்றே அகம் களைத்து
    முற்றாய் உரகடல் இணையுமுன்
    வற்றாத நினைவுகளுடன்
    ஆற்றுப் படுகையாகி
    நோற்புடை ஆழி கண்டேன்!!

    அகச்சுவை அரங்கேற்றிய
    உகப்புறை சமவெளியானேன்!
    சேகரமாய் எனக்குள்ளே
    சாகரமாய் வழித்தடத்தை
    போகணியில் போட்டுவைத்தேன்!!

    மலையகம் அவதரித்து
    விலையில்லா பயனளித்து
    இலையமுதம் புறம்கொண்டு
    கலைக்கதிர் தொட்டிலென
    தலைச்சங்கம் தாங்கி நின்றேன்!!

    செங்குவளை மணமெடுத்து
    பாங்குடனே முடிதரித்த
    அங்குச மன்னவனாய்
    எங்கனம் பிறப்பெனினும்
    இங்கனம்தான் முடிவதுவோ?!!

    நெஞ்சின் கனமது
    பஞ்சுக்குவியல் ஆனது
    எஞ்சிய உணர்வது
    சிஞ்சிதமாய் ஒலிக்கிறது
    துஞ்சாது என்னுள்ளே!!

    Share
  • மலேசிய நாட்டில் தமிழ் இலக்கிய வளர்ச்சியும் எதிர்காலமும்!

    வே.ம.அருச்சுணன் – மலேசியா

    முன்னுரை

    மலேசியத் தமிழ் இலக்கியம் ஏறக்குறைய 126ஆண்டுகளுக்கும் மேலான   பழமை வாய்ந்ததாகும். மலேசியத் தமிழ் இலக்கியத்தின் செவிலித்தாய்களாக  விளங்கியவை பத்திரிக்கைகளாகும். மலாயாவில் தோன்றிய முதல்  பத்திரிக்கையாகக் கருதப்படுவது சி.கு.மகுதும் சாயபு அவர்களால் 1875-இல் வெளியிடப் பட்ட “சிங்கை வர்த்தமானி” என்னும் இதழே.( மா.இராமையா,1996) அதனை- யடுத்து மலேசியாவில், பினாங்கில் 1876 இல் “ தங்கை நேசன்” என்னும் பத்திரிக்கை வெளிவந்துள்ளது . “உலக நேசன்”,  “சிங்கை நேசன்”,  “இந்து நேசன்”  ஆகிய பத்திரிக்கைகள் 1887-இல் வெளிவந்துள்ளன.(இரா.தண்டாயுதம்,1986).

    சிங்கப்பூரில் 1887-இல் சி.ந. சதாசிவப் பண்டிதரின் “வண்ணையந்தாதி”என்ற நூல் தொடக்கமாக அமைந்தது. (ஏ.ஆர்.எ.சிவகுமாரன்: “சிங்கப்பூர் மரபுக்கவிதைகள்)  மலேசியாவின் முதல் தமிழ் இலக்கியப் படைப்பாகக் கருதப்படுவது  நாகப்பட்டினம் மரு.வெங்கடாசலம் பிள்ளை அவர்களால் இயற்றப் பெற்ற “ ஆறு முகப் புதிகம்” என்ற கவிதை நூலாகும்.( இராஜம் இராஜேந்திரன்,1988) மலேசியத் தமிழ்ப் படைப்பிலக்கிய வகைகளுள் கவிதை இலக்கியமே முதலில் தோன்றியது. அதற்கடுத்த நிலையில் நாவலைக் குறிப்பிடலாம். மலேசியாவின் முதல் நாவல் க.வெங்கடரத்தினம் அவர்களால் 1917-இல் எழுதப்பட்ட “கருணாசாகரன் அல்லது காதலின் மாட்சி(வே.சபாபதி,2004) முதல் மலேசியத் தமிழ்ச் சிறுகதை வே.சின்னையா 1930 இல் வெளியிடப்பட்ட “ நவரச கதா மஞ்சரி” எனும் தொகுப்பில் அடங்கியுள்ள ஐந்து சிறுகதைகளாகும்.( ந.பாஸ்கரன்,1995).

    மலேசியாவில் வெளிவந்த ஆரம்ப கால எழுத்துக்கள் தமிழ்நாடு மற்றும் இலங்கையிலிருந்து தருவிக்கப்பட்டவை.அவை மலேசியாவின் சூழலை மையமாகக் கொண்டு எழுதப்படவில்லை.மேலும் எழுதிய எழுத்தாளர்கள் தமிழ்நாடு மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களாவர். ( முரசு நெடுமாறன்& கிருஷ்ணன் மணியம்,2005). உண்மையான மலேசியத் தமிழ் இலக்கியம் 1946-ஆம் ஆண்டுக்குப் பின்னரே தோன்றியது என்ற கருத்தை மா.இராமையா(1978) முன் வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    இந்தத் தொடக்கங்களிலிருந்து இலக்கிய வரலாறு எழுச்சியும் தளர்ச்சியும் கண்டு தொடர்ந்து வளர்ந்திருக்கிறது. அச்சு வசதியும் ஊடக வளச்சியும்,அவற்றைப் பெறவும் பெருக்கவும் நிதி வசதியும் உள்ள இந்த நவீன காலகட்டத்தில் வாழும் நாம்,இவையெல்லாம் மிக அரிதாக இருந்த ஒரு மங்கிய தொடக்க காலத்தில் உண்மையான தமிழ்மொழி பண்பாட்டு அர்ப்பணிப்பு உணர்வுடன், இந்த இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்ட வித்தகர்களான நம் முன்னோடிகளை மானசீகமாகப் போற்றி வணங்குதல் வேண்டும்

    2. மலேசியத் தமிழ் இலக்கியத்தை வளர்ப்பதில் கல்வி சார்ந்த மையங்களின் பங்களிப்பு

    பொருளீட்டுவதற்கும் நாட்டை மேம்படுத்தவும் மலாயாவுக்கு வந்த உடல் உழைப்புத் தொழிலாளார்களான தமிழர்கள் தங்களின் தாய்மொழியை மறக்காமல் இருந்ததோடு அம் மொழியை வளர்ப்பதிலும் கவனம் செலுத்தினர். ஆங்கில அரசு 1912-இல் கொண்டுவந்த தொழிலாளர் சட்டம் (Labour Ordinance) தோட்டங்களில் சிறு சிறு தமிழ்ப்பள்ளிகள் உருவாக வழி வகுத்தன. ஏழு வயதிற்கும் பதினான்கு வயதிற்கும் இடைப்பட்ட பத்து பிள்ளைகள் இருப்பார்களேயானால் அவர்களுக்குத் தோட்ட நிருவாகம் கட்டாயமாகக் கல்வி வழங்க வேண்டும் என்பதை இச்சட்டம் வலியுறுத்தியது. இந்தச்சட்டம் அமுலுக்கு வந்த பதினாறு ஆண்டுகளுக்குள்(1938) இந்நாட்டில் 535 தமிழ்ப்பள்ளிகள் இருந்ததோடு 28,098 மாணவர்கள் பயின்றனர்.(சோ.சுப்பிரமணி,2005)அன்று முதல் இந்நாட்டிலே பிறந்து வளர்ந்த தமிழர்களின்பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிக்கப்பட்டதால் இந்நாட்டில் இன்றும் தமிழும் தமிழ் இலக்கியமும் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றன; வளர்கின்றன என அழுத்தமாகக் கூறலாம். நாடு சுதந்திரம் அடைந்த நேரத்தில் (1957-இல்) 888 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன.அந்த எண்ணிக்கை தற்போது (2011-இல்) 523 ஆக குறைந்துள்ளதாக சமூகவியூக அறவாரியம் அறிவித்துள்ளது.

    (Social Strategic Foundation,2003).

    இராசக் கல்வி அறிக்கை(Razak Repot,1956) தொடக்கத் தமிழ்ப் பள்ளி- களில் ஆறு ஆண்டுகளுக்குத் தாய்மொழி வழி கற்றல் கற்பித்தலுக்கு வழிவகுத்தது. இரஹ்மான் தாலிப் அறிக்கையின் (1960) வழி இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் தமிழ் மாணவர்களும் தங்கள் தாய்மொழியைக் கற்க வழி பிறந்தது. பெற்றோர் விருப்பத்தின் பேரில்,குறைந்தது பதினைந்து மாணவர்கள் இருப்பின்,தாய்மொழிக் கல்வி ( Pupils Own Language) வழங்கப்படுவதற்கு இக்கல்விச் சட்டம் வகை செய்கிறது .

    மூன்றாம் படிவதில் நடத்தப்படும் கீழ்நிலை மதிப்பீட்டுத் தேர்விலும் (Lower Secondary Evaluation) ஐந்தாம் படிவத்தில் நடத்தப்படும் மலேசியக் கல்விச் சான்றிதழ் (Malaysian Certificate of Education) தேர்விலும் தமிழ்மொழி ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது
    இத்தேர்வில் தமிழ் இலக்கியத்தைத் தனியொரு விருப்பப் பாடமாக எடுத்துத் தேர்வெழுத விரும்பும் மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது (சுப்பிரமணி,2005). மேலே குறிப்பிடப்படுள்ள இம்மூன்று தேர்வுகளையும் மலேசிய த் தேர்வு வாரியம் ( Malaysian Examination Syndicate) நடத்துகிறது . பல்கலைக்கழக நுழைவுத்தேர்வாக விளங்கும் மலேசிய உயர்கல்விச் சான்றிதழ்த் தேர்விலும் ( Malaysian Higher School Certificate) தமிழ்மொழியும் தமிழ் இலக்கியமும் ஒரு பாடமாக வைக்கப் பட்டுள்ளது. இத்தேர்வினை மலேசியத் தேர்வுப் பேரவை ( Malaysian Examination Council) நடத்துகிறது.

    3. மலேசிய தேர்வு வாரியத்தின் அரிய பணியும் ‘ இலக்கியகம் ‘ தோற்றமும்

    மலேசியத் தேர்வு வாரியம் ( Malaysiyan Examination Syndicate) தொடக்கப்பள்ளி முதல் இடைநிலைப்பள்ளி வரையிலான எல்லா அரசாங்கத் தேர்வுகளையும் நடத்துகிறது . இதில் தமிழ்மொழியும் அடங்கும். தேர்வு வாரி- யத்தில் பணியாற்றும் தமிழ் அதிகாரிகள் தொடக்கப் பள்ளிகள் நடைபெறும் ஆறாம் ஆண்டு மதிப்பீட்டுத் தேர்வுக்கான ( Ujian Penilaiyan Sekolah Rendah) தமிழ்த்தாளில் சிறுகதை,நாவல் முதலிய நவீன இலக்கியப் பனுவல்களைக் கருத் துணர்க் கேள்விகளுக்குப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும். இது கட்டாயமான கேள்வியாகவும் விளங்குவதைக் காண முடிகிறது. அதுமட்டுமின்றி கட்டுரைக் கேள்வியாக சிறுகதை எழுதப்பனிக்கும் கேள்விகள் வழ்ங்கப்படுவதையும் காண முடிகிறது. மூன்றாம் படிவத்தில் நடத்தப்படும்கீழ்நிலை மதிப்பீட்டுத் தேர்வுக்கான (Lower Secondary Evaluvation) தமிழ்த் தாள்களிலும் நவீன இலக்கியப் பனுவல்கள் கருத்துணர்க் கேள்விகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. அதுமட்டுமன்றி ஒரு கதையின் தொடக்கத்தையோ முடிவையோ வழங்கி கதையெழுதப் பணிக்கும் கேள்விகளும் தேர்வுக்கு வழங்கப்பட்டுள்ளதைக் காணலாம். ஐந்தாம் படிவத்தில் நடத்தப்படும் மலேசியக் கல்விச் சான்றிதழ் ( Malaysian Certificate of Education) தேர்வுக்கான தமிழ்த் தாள்களில் மாணவர்களின் உள்ள உணர்வை வெளிப்படுத்தக் கோரும் கருத்துணர்க் கேள்விகள்
    (Affective Questions) பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய அணுகுமுறைகள் யாவும் இள வய- திலேயே மாணவர்களின் மனதில் இலக்கியச் சிந்தனைகளை விதைக்கும் பாராட்டுக்குரிய செயல்களாக் விளங்குகின்றன.

    மலேசியத் தேர்வு  வாரிய அதிகாரி திரு. ப.மூர்த்தி அவர்கள் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களோடு இணைந்து பெரும் அதிரடி முயர்சிகளை மேற்கொண்டு இலக்கியம் எடுக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழிகாட்டி நூல்களை வழங்கியதுடன் இடைநிலைப்பள்ளி இலக்கிய ஆசிரியர்களுக்கு பாடத்திட்டம்,பாடத்திட்ட விளக்கவுரை, வழிகாட்டி நூல்கள்,பயிற்சிகள்(modules) முதலியவற்றைத் தயாரித்து வழங்கினார். தேர்வுக்கான நூல்களான“பொன் விலங்கு” நாவல், காவிய நாயகி” நாடகம் ஆகிய நூல்களை முன்பணம் கட்டி தமிழகத்திலிருந்து 15,000 நூல்களைத் தருவிக்க  உமா பதிப்பகத்தார் பெரிதும் உதவியதுடன், “கவிதைப்பூங்கொத்து” எனும் தொகுப்பு நூலையும் இங்கேயே அச்சிட்டு வழங்கினர். அதுமட்டுமின்றி இலக்கியக் கலஞ்சியம் எனும் வழிகாட்டி நூலையும் வெளியிட்டு உதவினர். பொருள்ஈட்டுவதைக் கிறிக்கோளாகக் கொள்ளாமல், ஈக உணர்வோடு இந்நாட்டில் இலக்கியக் கல்வி சிறக்க.அந்நூல்களை அடக்கச் செலவுக்கும் குறைவாக வழங்கி அளப்பரிய சேவையை வழங்கியுள்ள உமா பதிப்பகத்தாரின் தொண்டு வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இரவல் நூல் திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் 2005-ஆண்டில் தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 4000 ஆக உயர்வு கண்டது.

    இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் இலக்கியத்தை மேலும் வளர்க்க மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர்க் கழகம் (இலக்கியகம்) 22.4.2008 இல்அமைக்கப்பட்டுப் பதிவுப்பெற்றுள்ளது. இக்கழகத்தில் இடைநிலைப் பள்ளியில் இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியர்கள் உறுப்பியம் பெற்றுள்ளனர். இதன்வழி நமது எதிர்கால சந்ததியினர் இலக்கியப் பயிர் வளர்க்க அரசு வழி திறந்து விட்டிருக்- கிறது.மேலும், மலேசிய எழுத்தாளர் சங்கம் பிற இலக்கிய அமைப்புகளின் தொடர் முயற்சிகளின் பயனாக எதிர்வரும் 2012-ஆம் தொடக்கம் மலேசிய எழுத்தாளர், பாவலர் ஐ.இளவழகு அவர்கள் எழுதிய “இலட்சிய பயணம்” எனும் நாவல் எஸ்.பி.எம். தேர்வுக்காக முதல் முதலாகத் தேர்வு செய்யப் பட்டுள்ள செய்தி மலேசிய எழுத்தாளர்களின் வயிற்றில் பாலை வார்த்த ஒரு செய்தியாகும். எதிர்காலத்தில் தொடர்ந்து மலேசிய எழுத்தாளர்களின் படைப்புகள் இடம் பெறும் எனும் திடமான நம்பிக்கை எழுத்தாளர்களின் உள்ளத்தில் ஏற்படுத்தி விட்டது எனலாம். இந்நாட்டின் இலக்கியப் பயிர் மேலும் வளர்வதற்கு அமைந்த மற்றுமொரு சிறப்பான வழியாகும். தேர்வுகளில் இலக்கியம் எடுக்கும் எஸ்.பி.எம் மற்றும் எஸ்.டி.பி.எம். மாணவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும்.

    4. மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையின் பங்களிப்பு

    மலாயாப் பல்கலைக்கழ்க இந்திய ஆய்வியல் துறை தொடங்கப்பட்ட 1957- ஆண்டு முதல் மலேசியாவில் தமிழ்மொழி,தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ்ப் பண்பாடு வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது. இத்துறையின் முதலாவது தலைவராக விளங்கிய பேராசிரியர் முனைவர் சேவியர் தனிநாயகம்அவர்களைத் தலைவராகவும் பேராசிரியர் முனைவர் ச.சிங்காரவேலு அவர்களைச் செயலாளர்- களாகவும் கொண்டு 1996-ஆம் ஆண்டில் உலகத் தமிழ் ஆரய்ச்சி நிறுவனத்தோடு (International Association for Tamil Reserch) இணைந்து முதலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை இத்துறை நடத்தி வரலாறு படைத்துள்ளது ( மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்,1999). அது மட்டுமின்றி மலேசிய இந்தியர் காங்கிரசுடன் இணைந்து ஆறாவது உலகத் தமிழ் ஆரய்ச்சி மாநாட்டினையும் இந்திய ஆய்வியல் துறை வெற்றிகரமாக நடத்தியது. இவற்றோடு,1978-ஆம் ஆண்டில் மலேசியத் தமிழ்ச் சிறுகதைக் கருத்தரங்- கினையும்  1988-ஆம் ஆண்டில் தமிழ்க் கவிதைக் கருத்தரங்கினையும் 1996-ஆம் ஆண்டில் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து மலேசிய புதுக்- கவிதைக் கருத்தரங்கினையும் நடத்தியுள்ளது. பொது அமைப்புகளுடன்- இணைந்து வேறு சில மாநாடுகளையும் நடத்தியுள்ளது. அவற்றுள் குறிப்பிடத் தக்கவையாக விளங்குபவை 2005=ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது திருக்குறள் மாநாடு மற்றும் 2007-ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது உலகச் சித்தர் மாநாடு ஆகியவையாகும். மேலும் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை அண்டு தோறும் ஆய்விதழ் ஒன்றையும் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்மொழி,இலக்கியம்,பண்பாடு,சமுதாயவியல்,  வாழ்வியல், சமயம் போன்ற துறைகளைச் சார்ந்த தரமான கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. இத்துறையின் செயல்படுகள் இந்நாட்டின் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அடித்தலம் அமைக்கிறது என்றால்  அது மிகையாகாது.

    5.மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் செயல்கள்

    மலாயாப் பல்கலைக் கழகத்தின்இலக்கியப் பணியை நினைவுகூறத்தக்கதாகும். மலேசிய இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் வகையில் மலாயாப் பல்கலை மாணவர்களால் 1986-ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக ஆண்டு தோறும் தேசிய அளவிலான சிறுகதைப் போட்டியை நடத்தி இன்று முதற்பரிசு இரண்டாயிரம் ரிங்கிட், இரண்டாம் பரிசு,  ஆயிரத்து ஐநூறு ரிங்கிட், மூன்றாம் பரிசு ஆயிரம் ரிங்கிட் மற்றும் ஒன்பது ஆறுதல் பரிசுகள் தலா இருநூறு ரிங்கிட் வழங்கப் படுகின்றன. பழைய புதிய எழுத்தாளர்கள் ஆர்வமுடன் எழுத உத்வேகத்தைக் கொடுக்கிறது. மாணவர்களுக்கும் தனியாகப் பரிசுகள் வழங்கி புதிய எழுத்தாளர்களை உருவாக்கின்றது. தொடர்ந்து இருபது ஆண்டுகளாக இப்போட்டி நடத்தப்படுவதுடன் வெற்றி பெற்ற சிறுகதைகளைத் தொகுத்து சிறப்புடன் தொய்வின்றி வெளியீடு செய்வது தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரும் சாதனையாகும். இப்பணியினை மேற்கொண்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களுக்கு வழிகாட்டிகளாகத் திகழும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் பாராட்டுக்குரியவர்களாவர்.

    6. மலேசியத் தேசிய பல்கலைக்கழக இந்து பிரதிநிதித்துவ சபையின் சாதனைகள்

    மலேசிய தமிழ் இலக்கியத்திற்கு தன்னால் இயன்ற பணிகளை மலேசியத் தேசிய பல்கலைக்கழக இந்து பிரதிநிதித்துவ சபையின் மாணவர்கள் 1998-ஆம் ஆண்டு தொடங்கி பதின்மூன்று ஆண்டுகளாக “இலக்கியப் பயணம்” எனும் அரிய பணியை மிகவும் நேர்த்தியுடன் செய்து வருகின்றனர். ஆண்டு தோறும் சிறுகதை மற்றும் புதுக்கவிதைப் போட்டிகளை நடத்தி வெற்றி பெற்ற முதல் சிறுகதைக்கு ஆயிரத்து ஐந்நூறு ரிங்கிட்டும் இரண்டாம் பரிசாக எழுநூறு ரிங்கிட்டும் மூன்றாம் பரிசு ஐந்நூறு ரிங்கிட்டும் வழங்கப்படுகிறது. புதுக்கவிதைக்கு  முதல் பரிசு ஆயிரம் ரிங்கிட்டும் இரண்டாம் பரிசாக ஐந்நூறு ரிங்கிட்டும் வழங்கிச் சிறப்பிக்கின்றர்.இந்த மாணவர்களின் தொடர் நடவடிக்கைகள் இந்நாட்டு இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் நம்பிக்கையை ஊட்டுகிறது.

    7. பொது அமைப்புகளின் இலக்கிய பணிகள்

    1946-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்நாட்டு தமிழ்ப் புத்திலக்கியத் துறையில் இடம்பெற்ற மிக முக்கியமான நிகழ்வு அக்காலத்து முன்னோடி எழுத்தாளர் களாகவும் விமசர்களாகவும் இருந்த சுப. நாராயணனும் பைரோஜி நாராயணனும் “தமிழ் நேசன்” நாளேட்டில் 1950-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி 1951-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் வரையில் “கதை வகுப்புகள் நடை பெற்றுள்ளன. இக்கதை வகுப்பு மூலம் கதை எழுதுவோர் மட்டுமின்றி கவிதை, உரை நடை ,நாடகம் ஆகியனஎழுதுவோர்ருக்கும் தக்கவழிகாட்டியாக அமைந்தது.இந்த வகுப்பின் மூலமாக பல சிறந்த எழுத்தாளர்கள் உருவானார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அ.இராமநாதன்(சுங்கை சிப்புட்); பி.ஏ.கிருஷ்ணதாசன் (தைப்பிங்); சி.மாரியப்பன்(காஜாங்):பெ.மு.இளம் வழுதி (குவாலசிலாங்கூர்); கா.பெருமாள் (ரிங்லட்); சி.வடிவேல்(லாபு); சி.வேலு- சாமி(ரந்தாவ்):எஸ்.எஸ்.சர்மா(சிங்கப்பூர்);மா.இராமையா (மூவார்);  கு.நா.மீனாட்சி (குவால சிலாங்கூர்) போன்றவர்களைக் குறிப்பிடலாம்.

    மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சிங்கையிலிருந்து 1935-ஆம் ஆண்டுதொடங்கி  தமிழ்வேள் கோ.சாரங்கபாணி அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த “தமிழ்முரசு” ஆற்றிய அரும் பணிகள் குறிப்பிடத் தக்க தாகும் (மா.இராமையா,1996).மாணவர் மணிமன்றத்தின் வழியாகப் பல இளம் எழுத்தாளர்களை பெருமை இவரைச்சேரும்.

    தமிழர்களிடையே இனமான உணர்வையும் மொழிப்பற்றையும் ஏற்படுத்திய “தமிழர்த் திருநாள்” கொண் டாட்டத்திற்கும் மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை அமைவதற்கும் வழிவகுத்தார். மாணவர் மணிமன்றத்தின் விரிவாக்கமே 1956-ஆண்டில்   தோற்றம் பெற்றதே தமிழ் இளைஞர் மணி மன்றமாகும். இம்மன்றம் மலேசியத்  தமிழ் இலக்கியப் பணிகளுக்குப் பெரும் பங்காற்றியுள்ளது. பல்வேறு கவியரங்கங்களையும், சிறுகதை,கவிதை,கட்டுரைப் போட்டிகளையும் பட்டி மன்றங் களையும், இலக்கியப் பயிலரங்குகளையும் நடத்தி மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்துள்ளது.

    பத்து பகாட்டிலிலிருந்து செயல்பட்ட கவிதா மணடலம் கவிதை வளர்ச்சியில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க பணியினை ஆற்றிய அமைப்புகளாகச் சிலவற்றைக் குறிப்பிடலாம்.அவற்றுள் 1943-ஆம் ஆண்டில் பத்து பாகாட்டில் தோற்றுவிக்கப்பட்ட “கவிதா மண்டலம்.” முரசு.நெடுமாறன்(2005) இந்த அமைப்பே இந்நாட்டில் தமிழ் இலக்கிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு  தொடங்கப்பட்ட முதல் அமைப்பு என குறிப்பிடுகிறார். இந்த அமைப்பு கவிதைகள்மட்டுமன்றி கதை,கட்டுரை,நாடகம் இலக்கிய வடிவங்களின் வளர்ச்சிக்கும் இட மளித்துள்ளது.(முரசு நெடுமாறன்,2005)

    8.சுவாமி இராமதாசரின் செந்தமிழ்க் கலா நிலையம்

    பினாங்கு மாநிலத்தில் 1939-ஆண்டு முதல்  செந்தமிழ்ப்பாடசாலையத் தொடங்கி, இலக்கண இலக்கிய வகுப்புகளைப் பெரும்புலவர் சுவாமி இராமதாசர் நடத்தி வந்தார். கலா நிலையத்தை தொடங்கி, இலக்கண இலக்கிய வகுப்பு களைப் பெரும்புலவர் சுவாமி இராமதாசர் நடத்தி வந்துள்ளார். 1943-ஆம் ஆண்டில் இளந்தமிழ்ப்பாடசாலை என்றும் கலா நிலையமென்றும் இரண்டு பிரிவுகளாக நடத்தியுள்ளார். செந்தமிழ்க் கலா நிலையத்தில் நளவெண்பா, இனி யவை நாற்பது, திணைமொழி ஐம்பது, நன்னூல் முதலிய   நூல்களை  மாணவர்களுக்குக் கற்பித்துள்ளார்.(முரசு நெடுமாறன்,2005). மலேசியாவில் தமிழ் எழுத் துத் துறை வளர்ச்சிக்கு குறிப்பாக கவிதைத்துறை வளர்ச்சிக்குச் செந்தமிழ் கலா நிலையம் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளது. மரவுவழி நின்று புலமை மிக்கவர்களை உருவாக்கியதில், செந்தமிழ் கலாநிலையத்திற்கு இணையாக வேறு எந்த இயக்கமும் செயல்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.(முரசு நெடுமாறன்,2005: 159)

    9.கிள்ளான் மாணவர் பண்பாட்டு இயக்கம்

    கவிஞர் முரசு நெடுமாறன் அவர்கள் 1978-ஆன் ஆண்டு கிள்ளானில் தோற்றுவிக்கப்பட்ட  “மாணவர் பண்பாட்டுஇயக்கம்” தொடர்ந்து பதினெட்டு ஆண்டுகள் கிள்ளான் வட்டாரத்திலுள்ள 35 இடைநிலைப் பள்ளி மாணவர் களிடையே  தேர்வு வழிக்காட்டிக் கருத்தரங்குகளை நடத்தியதுடன் கலை,இலக்கியப் பண்பாட்டு போட்டிகளை நடத்தினர்.இதன் வழி மாணவர்கள் சிறந்தமொழி,இலக்கிய அறிவினைப் பெற்ரு விளங்கியதோடு பண்பாட்டிலும் நல்லொழுக் கத்திலும் சீலர்களாகத் திகழ்ந்தனர்.

    10.கவிதைக் களமும் தமிழ்ச் சங்கமும்

    கோலாலம்பூரில் 1989-ஆம் ஆண்டு கவிஞர்களான பாதாசன் மற்றும் காரைக்கிழார்,வீரமான்,மைதி சுல்தான்,சமூகக் கலைமணி சா.ஆ.அன்பானந்தன் ஆகியோரின் தொலை நோக்குப் பார்வையில் உதயமானது.மாதம் ஒருமுறை கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் இக்களம் கூடும்.படைத்தவை,சுவைத்தவைஅங்கத்தில் கவிஞர்களாலும் கவிதைப்பிரியர்களாலும் சுவைத்த கவிதைகள்படைக்கப்பட்டு அவற்றைப் பற்றிய குறை நிறைகள்அலசப்பட்டன.

    இந்நிகழ்வில்திடீர்கவிதைப் போட்டியும் நடத்தப்பட்டது. தேர்வு பெறும் கவிதைக்குப் பரிசும் வழங்கப்பட்டது.தேர்வு பெற்ற கவிதைகள் தமிழ் ஓசையில் பிரசுரிக்கப்பட்டன.மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கவிதைப் போட்டி நடத்தினர். முதல் கட்டமாக “கோம்பாக் ஆறு” எனும் தலைப்பில் குறுங்காவியப் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் கவிஞர் கரு.வேலுசாமியும் முதல் பரிசையும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி இரண்டாம் பரிசையும் பெற்றனர். இரண்டாவது நடத்தப்பட்டபோட்டிக்கான பரிசுகளை டான்ஸ்ரீ உபைதுல்லா அவர்கள் வழங்கினார்.1984-ஆம் ஆண்டில் கவிதைக் களத்தின் செயலாளராக இருந்த கவிஞர் பாதாசன் விபத்துக்குள்ளானதும்.1994-ஆம் ஆண்டில் தமிழ் ஓசை நாளிதழ் நிறுத்தப் பட்டதும் கவிதைக்களம் நிறுத்தப்பட்டது. எனினும் கவிதைக்களத்தின் தொடர்பணிகளுள் ஒன்றாக விளங்கியதுதான் 2000-ஜூலை திங்கள் 1,2, ஆம் நாள் களில் நடைபெற்ற மலேசியத் தமிழ்க்கவிதை மாநாடு. மொழியை ஆரோக்கிய வழியில் வளர்க்க பதிவுபெற்ற ஓர் அமைப்பு தேவைக்கருதி பாதாசன்,காரைக்கிழார், வீரமான்,மைதி சுல்தான் ஆகியோர் 2001-ஆம் ஆண்டில் முச்சங்கம் எனும் அமைப்பை உருவாக்கினர். தமிழ் உணர்வை மீண்டும் தமிழர்களிடையேஏற்படுத்தும் வகையில் தலைநகரில் தைமாதத்தில்“தமிழர்த்திருநாள்” நிகழ்ச்சியை மிகச்சிறப்புடன் நடத்திவருகிறது. இவ்வமைப்பு 2002-ஆம் ஆண்டு முதல்“தமிழ்ச்சங்கம்”எனப்பெயர் மாற்றம் பெற்று சிறப்புடன் செயல்பட்டு வருகிறது .

    11.மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

    மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 1962-ஆம் ஆண்டு பதிவு பெற்றது. இந்நாட்டில் படைப்பிலக்கியம் சிறந்து விளங்குவதற்கு பல்வேறு வகையிலும் அரும்பணி ஆற்றிவருகிறது. இதன் முதல் தலைவர் முத்தமிழ் வித்தகர் முருகுசுப்பிரமணியன், திரு.எம்.துரைராஜ், திரு.ஆதிகுமணன்,இப்போது தலைவராக பொறுபேற்றிருக்கும் திரு.பெ.இராஜேந்திரன் வரைக்கும் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கினால் மலேசிய இலக்கியம் உலக தரத்திற்கு உயர்ந்துள்ளதை மகிழ்சியுடன் காணலாம்.அண்மைய காலமாக இலக்கியப்போட்டிகள் குறிப்பாக சிறுகதை, கவிதை, புதுக்கவிதை  மற்றும்  நாவல்  போட்டிகளைநடத்தி பெருந் தொகைகளைப்  பரிசாக  வழங்கி  எழுத்தாளர்களை நாளும்  ஊக்குவித்து வருகிறது. மலேசிய  எழுத்தாளர்களில் பலர், குறிப்பாக தமிழ்நாட்டு இலக்கிய இதழ்களில் இன்று தங்களின் தரமான படைப்புகள் மூலமாக திறனை வெளிப் படுத்தியுள்ளனர்.தமிழக ஏடுகளில் மிக அதிகமாக  எழுதிப்பெயர் பெற்றவர் முத்தமிழ்ச் செல்வர் நா.ஆ.செங்குட்டுவன் கலைமகளில் மிக அதிகமாக இவரு டைய படைப்புகள் வெளிவந்திருக்கின்றன.தவிர, குமுதத்திலும் எழுதியிருக்கின்றார். இப்படைபுகளையெல்லாம் தொகுத்துத்‘தமிழகத்தில் தவழ்ந்தவை’(சிறுகதை,குறுநாவல்,நாவல்) எனும் தலைப்பில் தொகுப்பு ஒன்றும் 2005-இல் வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தில் மட்டுமல்லாது உலகலாவிய நிலையிலும்அறிமுகமாகியுள்ள எழுத்தாளர்களுள்  மிக  முக்கியமானவர் பேராசிரியர்  ரெ.கார்திகேசு.தமிழ்நாட்டு ஏடுகள் மட்டுமின்றி இணைய ஏடுகளிலும் எழுதி யுள்ளார்.கல்கி இதழின் வைரவிழாச் சிறுகதைப் போட்டியில் தம்முடைய ‘ஊசி இலை மரம்’ என்னும் சிறுகதைக்கு 10,000 ரூபாய் பரிசைப் பெற்றார்.குமுதம் இதழ் நடத்திய சிறுகதப்போட்டியில் சீ.முத்துசாமி ‘இரைகள்’எனும் சிறுகதை கதையும் ஆனந்தவிகடன் நடத்திய போட்டியில் சங்கு சண்முகம் எழுதிய ‘இரை தேடும் பறவைகள்’   எனும்   சிறுகதையும்   முதல்  பரிசுகள்  பெற்று   மலேசிய எழுத்துகளுக்குப் பெருமையும் அங்கீகாரமும் தேடித்தந்தன. மா.இராமையா, நா.மகேசுவரி,மு.அன்புச்செல்வன்,. கோ.புண்ணியவான் போன்று பலரும் எழுதி மலேசிய  இலக்கியத்தை  மேலோங்கச்  செய்துள்ளனர். தமிழ்நாடு, இலங்கை மற்றும் சிங்கப்பூர் நாட்டுடான அணுக்கமான உறவின் பயனாக இந்நாட்டு இலக்கியங்கள் அங்கிகாரம் பெறுவதுடன்,”பாரதிதாசன்” மற்றும் “கரிகாலச்சோழன்”விருதுகளை நமது படைப்பாளர்கள் பெறுவதற்கு சங்கதின்  தற்போதைய
    தலைவரின்  அரிய பணிகளால் விளைந்த பயன் என்றால் மிகையில்லை.

    13. தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம்

    இந்நாட்டில்,தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமூட்டி வரும்மற்றுமொரு அமைப்பு தேசிய நில நிதிக்கூட்டுறவுச் சங்கமாகும். துன் வீ.தி.சம்பந்தனால்அவர்களால் 1960ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இச்சங்கம் நாட்டில் தலைச்சிறந்த  சங்கமாக இருப்பதுடன், இலக்கியத்திற்கும்  ஆண்டு தோறும் 19-ஆம் ஆண்டாகசிறுகதை,கவிதை புதுக்கவிதைமற்றும் கட்டுரைப் போட்டிகளை மாணவர் மற்றும் பொதுப்பிரிவு என்று இரு பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டுமுதல்பரிசு  ரிங்.2000,   இரண்டாம் பரிசு ரிங். 1250,   மூன்றாம் பரிசு ரிங்.750 வழங்கப்  படுவதுடன் வெற்றியாளர்களின்  படைப்புகள்  நூலுல்  வடிவம் பெற்று அதனை இலவசமாக பொதுமக்களுக்கு அளித்து வருகிறது. இச்சங்கம் இந்நாட்டில் தமிழ்மொழி,தமிழ் இலக்கியம்,தமிழர்கலை முதலியவை மேலும்தொடர்ந்து நிலைக்கச் செய்ய அறவாரியம் அமைத்து அவ்வறவாரியத்திற்கு 120இலட்சியம் ரிங்கிட்டை  தேசிய  நிலநிதி  கூட்டுறவுச்  சங்கம்  ஒதுக்கீடு  செய்துள்ளது. மொழி இலக்கியப்  பிரிவுக்கு  டான்ஸ்ரீ  குமரன்  அவர்களும்  கவிஞர்   காரைக்கிழாரும் பொறுப்பு   வகிக்கின்றனர்.  கலைப்பிரிவுக்கு   திருமதி   இந்திரா   மாணிக்கமும், பழனிச்சாமி  அவர்களும்  பொறுப்பு  வகிக்கின்றனர். இலக்கிய வளர்ச்சி இந்நாட் டில் தொடர்ந்து வளரும் என்பதற்கு இச்சங்கம் பெரும் நம்பிக்கையைக் தருகிறது.

    14.  அரசியல் கட்சியின் செயல்கள்

    இந்நாட்டு இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் பெரிய அரசியல் கட்சி 1946-ஆம்ஆண்டில் ஜான்திவி அவர்களால் தொடங்கப்பட மலேசிய இந்தியர் காங்கிரஸ்(ம.இ.கா) விளங்குகிறது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் (ம.இ.கா) தமிழ்க் கல்வி,தமிழ் இலக்கியம்,தமிழர் பண்பாடு சமயம் ஆகியவற்றைக் காத்துவருகிறது. 1980-ஆம் ஆண்டு முதல் அதிகமான மலேசிய எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டு தலைவர்கள் கணிசமான தொகைகளைக் கொடுத்து உற்சாகப் படுத்தி வந்தனர்.இன்று அவர்களின் பணி தொடர்வது பாராட்டுக்குரியதும் நம்பிக்கைத்தருவதாகவும் அமைகிறது.

    15.தினசரிகளும்,வார,மாத சஞ்சிகைகளும்

    தமிழ்நேசன் 1924-ஆம் ஆண்டு முதல் இன்று வரைநாட்டில் வெளிவந்து கொண்டிருக்கும் வெற்றிப் பத்திரிக்கையாகும்.அன்று முதல்இன்று வரை தொய்வின்றி இலக்கியப் பணியாற்றிக் கொண்டிருக்கிறது.தரமான இலக்கிய வாதிகள் ஆயிரக்கணக்கிலும், இலட்சக்கணக்கில் வாசகர்களையும் தனகத்தே கொண்டு பீடுநடைபோடுகிறது. மக்கள்ஓசை மலேசிய நண்பன் பத்திரிக்கைகள் இந்நாட்டு இலக்கியப் பயிர்கள் தழைத்தோங்க அரிய பணிகளைச் செவ்வனே செய்து வருகின்றன.  தமிழ் இலக்கியம் இந்நாட்டில் மிகச்சிறப்பாக அமையும் என்பதற்கு இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் வார,மாத சஞ்சிகளைக் குறிப்பிடலாம். வாசகர்களின் பெருக்கமும் நம்பிக்கை   தருவதாக இருக்கிறது. மிக நீண்ட காலமாக வெளிவரும் வானம்பாடி பெரிய எண்ணிக்கையிலான வாசகர்களைக் கொண்டிருக்கிறது. நயனம் வார இதழும்  நிரந்திரமான வாசகர் களைத் தன்னகத்தே ஈர்த்துள்ளது. நாயகன் இதழும் அவ்வப்போது அரசியல் கருத்துக்களால் வாசகர்களைக் கவர்ந்துள்ளது. தேசம்,ஆலமரம் போன்ற இதழ்களோடு தென்றல்,நிலா,சங்கமணி வார இதழ்கள் மற்றும் மவுனம்,அநங்கம் போன்ற சிற்றிலக்கிய இதழ்களும் வாசகர்களின் இலக்கியத் தாகத்தைத் தீர்க்கும் களமாகத்திகழ்கின்றன. மயில்,உங்கள்குரல்,வல்லினம் போன்ற இதழ்களும் வாசகர்களிடையே இலக்கிய அறிவைப் பரப்புவதில் சளைக்க வில்லை.மேலும் சுட்டிமயில்,குயில்,இளந்தளிர் போன்ற மாணவர்இதழ்கள்எதிர்கால சந்ததியினரை அறிவுமிக்க சமுதாயமாக வளர்த்துக் கொண்டிருக்கின்றன்.

    16 எதிர்கால இலக்கிய வளர்ச்சிக்கு நாம் செய்யவேண்டிய பணிகள்

    அன்மையில் மலேசிய்த் துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான டான்ஸ்ரீ முகைதின் யாசின் அவர்கள் மலேசியக் கல்விச்சான்றிதழ் ( Malaysian Certificate pf Education) தேர்வில் மாணவர்கள் பத்துப் பாடங்கள் மட்டுமே எடுக்க அனுமதி வழங்கப்படும் என்ற முடிவு மலேசியாவில் தமிழ்க்கல்விக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு முடிவாகவே உள்ளது.மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டாலும் அதன் முடிவுகள் தனிச் சான்றிதழில் வழங்கப்படுவதால்மாணவர்கள் பெறுகின்ற மொத்த மதிப்பெண்களைக் கணக்கிடுவதில் அப்புள்ளிகள் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது. இதனால் மாணவர்கள் தமிழ் இலக்கியத்தை தேர்ந்தெடுத்துப் படிப்பதைத் தவிர்த்துவிடுவர் என்பது திண்ணம்.பல பள்ளிகளில் அதன் நிர்வாகம் மாணவர்களைத் தமிழ் இலக்கியப் பாடத்தை எடுப்பதற்கும் அனுமதிப்பதில்லை.இதனால்,மலேசிய உயர்கல்விச் சான்றிதழ்த் தேர்விலும்( Malaysian Higher School Certificate) மாணவர்கள் தமிழ்மொழி பாடத்தைத் தவிர்க்கக்கூடும்.காலவோட்டத்தில் பல்கலைக் கழகங்களுக்கும் இந்நிலை பரவலாம். இறுதியில் தமிழ்ப்பள்ளிகள் எதற்கு? என்ற நிலையும் வரக்கூடும்.மலேசியாவில் தமிழர்கள் தங்கள் அடையாளத்தை ( Etnic Identity ) தொலைப்பதற்கான முதல் படியாக இது அமையும் என்றால் மிகையாகாது. இந்நாட்டு ஒட்டுமொத்தஇந்தியர்கள் அனைவரும் இதனைச் சிந்தித்து, திட்டமிட்டே ஒரு சிறுபான்மை இனத்தின் மொழியை அழிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளத் தடுப்பது  அவசியமாகும். ‘மொழி இனத்தின் உயிர்’ கண் கெட்ட பின் சூரிய வணக்கம் பயன் தராது. எதிர்காலத்தில் தமிழர்கள் தங்களின் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கண்டிப்பாக அனுப்ப வேண்டும். நமது சமயம்,கலை,கலாசாரம் வழுவாமல் பேணிகாக்க வேண்டும்.தமிழ்ப்பத்திரிக்கைகளைத் தினம் வாங்கி வாசிக்க வேண்டும். தமிழிலேயே பேசவேண்டும். அரசாங்கத் தேர்வுகளில் நமது பிள்ளைகள் தமிழைக் கட்டாயமாக எடுப்பதை ஊக்குவைக்க வேண்டும். தமிழ்மொழி இலக்கியங்களைத் தேடிப்படித்து வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். இலக்கிய அறிவை பெற்றோர்தங்களின் பிள்ளைகளுக்கு இளமையிலேயே ஊட்ட வேண்டும். இது அவர்களின் வாழ்வைச் செம்மைப்படுத்துவதோடு எதிர்காலத்தில் ஒழுக்கச் சீலர்களாகத் திகழ்வதற்கு வழிவகுக்கும

    முடிவுரை

    இணையத்தளம் இந்நாட்டு இலக்கியங்கள் உலகளவில் பரந்து விரிந்து வளர்வதற்கு வாய்ப்புகள் சிறப்பாகவே இருக்கின்றன. இளையவயதினர் இந்த வாய்ப்புகளை நன்கு பயன் படுத்திக் கொள்ள வேண்டும். இலக்கியம் வளர்ப்பதில் நாம் அனைவரும் பொறுப்புள்ள வர்களாக மாறவேண்டும். இளைய சமுதாயத் தினருக்கு நாட்டிலுள்ள ஊடகங்கள் அவசியம்   வழிகாட்டிகளாகத் திகழவேண்டும். படிக்கும் சமுதாயமே மதிக்கப்படும் சமுதாயமாகமாகும். இளைஞர் இயக்கங்கள் வாசிக்கும் செயல்களில் மும்முரமாமும் ஈடுபாடும் காட்ட வேண்டும். கத்தியைத் தூக்கும் கலாசாரத்தை வீசியெறிந்துவிட்டு கற்கும் வழியினைத் தேட வேண்டும். நாட்டிலுள்ள இளைஞர் இயக்கங்கள் நூலகத்திற்குச் சென்று வாசிக்கும் தீவிர பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இந்நாட்டில் இயங்கும் பொது நூலகங்களில் செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ள தமிழ் நூல்களை மக்களின் தேவை உணர்ந்து வாசிப்புக்கு வைக்குமானால்   பண்பட்ட இளைஞர்களை உருவாக்கிய பெருமை இன்றைய அரசைச்சாரும். ‘டேவான் பஹசா டான் புஸ்தகா’ (DBP) மொழி நிறுவனம் உள்நாட்டு தமிழ் இலக்கியங்களை  மலாய் மொழியில் மொழி மாற்றம் செய்தால் இந்நாட்டின் இலக்கிய வளர்ச்சி மேலும் உயரும்.

    முற்றியது

    Share
  • ‘தேர்தலும் தேடுதலும்’ கவி யரங்கம் – 29-03-09 தமிழ் சங்கம் – தில்லி

     

    சத்திய மணி

     

    தமிழ் வணக்கம்

    குமரியாய் சிறக்கும் உன்னை யமுனையில் குளிக்கவைத்து

    அழகியாய் அலங்கரித்து சங்க அரியணை அமர வைத்தோம்

    கவிஞர்கள் கவரி வீசும் சபையினர் மகிழ்ந்து சேர்க்கும்

    கரவொலி வாழ்க சொல்லும் தமிழுந்தன் ஆட்சி வெல்லும்

    என்றும் எங்களுக்கு உன்னருள் ஆட்சிதானே

    அவை வணக்கம்

    பாலருந்த மொழி பேசும் தன் குழந்தைக் கண்டவள் போல்

    பாசமுடன் பரவசமாய் கவி காணும் சபையோரே !

    நேசமிகு நம்முறவு நெடிது வளர்கவென நிறை

    வாசமிகு செந்தமிழால் வணங்கியான் வேண்டுகிறேன்

    வாய்ப்பும் தந்தமைக்கு நன்றியுடன் தொடருகிறேன்

    தொடக்கம்

    கவிதைத் திருவிழா…கவி தைக்கு திருவிழா

    உங்களுக்கு கவிதைத் திருவிழா…

    எங்கள் கவிதைக்கு திருவிழா….

    திருவிழாக் காணும் தெய்வம் தமிழ் அன்றோ

    தேரெடுத்து வந்தாள் பக்தருக்கு படையலிட்டாள்..கவியமுதிற்கு

    தேர்ந்தெடுத்தாள் ‘தேர்தலும் தேடுதலும்’ எனும் தலைப்பு..இனிப்பு

    அதில் வாக்காளராய் எமைத் தேடச் சொன்னாள்

    தேடியதைப் பாடச் சொன்னாள் பாடுகிறேன்.

    உங்களுக்குத் தெரியுமா  ஓருண்மை புரியுமா

    கூட்டணியாய் இருந்தாலும் குணத்தாலே வாக்காளர்

    வேற்றணியாய் கலந்தாலும் விதத்தாலே வாக்காளர்

    வேட்பாளர் ஆயினும்தான் வேடத்தால் வாக்காளர்

    கேட்பாளராய் இங்கு இருப்போரும் வாக்காளர்

    தலைவர்கள் ஆனாலும் தகுதியால் வாக்காளர் – அரசு

    அதிகாரி யெனும்போதும் அவரும் தான் வாக்காளர் – ஆக

    ஏக மனதாக எல்லோரும் வாக்காளர் – என்பதனால்

    எமக்காகத் தேடவில்லை ..நமக்காகத் தேடுகிறேன் – முன்

    எல்லோரும் முன் மொழிந்தார் .யாம் மீதி பொழிந்தோம்

    தேவைகள் தானே தேடவும் தூண்டும்…

    தேடலும் பட்டியல் ஆனது மீண்டும்.

    இதுவும் வாக்காளர் பட்டியல் தான்…

    வாக்களிக்க தகுதி ( அரசு ) தரும் வாக்காளர் பட்டியல் அல்ல – வரும்

    தேர்தலுக்கு வாக்காளர் தேடலுடன் தரும் வாக்காளர் பட்டியல்.

    வாக்காளர்

    தேடுவது முதலில் “தகுதிக்கான வாக்காளர் அட்டை”

    தேடுவது அடுத்து “தொகுதிக்கான வாக்காளர் பட்டியல்”

    தேடுவது தொடரும் “ஓட்டளிக்கும் வாய்ப்பை”

    தேடுவது பிறகு ” தன் அணியின் ஆட்சி”……

    சிரிப்பாக இருக்கிறது… சிந்திக்கவும் வைக்கிறது …என்றதனால்

    வழிகாட்ட வணங்கினேன் தமிழ்ப் பெற்ற தாயை…

     

    சூரிய விழிகள் ஈர்க்கும் ..தாமரை யிதழ்கள் பூக்கும்

    காவிய இலைகள் சேர்க்கும் …கையினில் ஊன்றுகோலை

    வீசிய படி நடந்தால்….யானையும் நின்று பார்க்கும் –

    நொய்யையில் சீராட்டும் அவையிலே பாராட்டும்

    பாட்டியே..தமிழ் மூதாட்டியே .அவ்வையே வந்தருள்க என்றபோது ..

    இறைஞ்சினேன்…இறைச்சலெனக் கேட்டதுபோல் எதிரே

    ” நன்று நன்று என் பேரா….சத்தியா…உன் பேரா

    இன்று சின்னங்களாய் எனைத் துதித்தாய்..எதர்க்கழைத்தாய் ? ”

    “முழுதும் அறிந்தவளே மூதுரை மொழிந்தவளே – ஏதோ

    கவியெழுத வாக்களித்தாய்…கருவேற்ற நோக்களித்தாய்

    வாக்காளராக்கி தேடுவதால் ..இந்நிலமை..என் செய.

    காண்பதெல்லாம் சின்னங்கள்…கேட்பதெல்லாம் வாக்குறுதி.

    கருத்தாய்வு தேடுகிறேன்….தருவீரே.சிறப்பாக !”

    என்றதுமே சிரித்தார்… இடைப்பட்டு உரைத்தார்

    “அக்காலப் பாட்டிக்கு …இக்காலப் பேட்டிகள் ஏனப்பா?

    வம்புக்கிழுக்காதே….போட்டிக்கு வயதில்லை..குடியரசில்

    தேடுகின்ற மூவரைக் கேள்…முடிவிலே நீயும் சேர்…

    தேவைகளைத் தீர்ப்போரின் ஆட்சிக்கு ஆதரவாய்”

    என்றே இயம்பி விட்டு ஏட்டில் கலந்துவிட்டர்.

    ஆசியுடன் ஆசையுடன் தேடப் புறப்பட்டேன்.

     

    தில்லி நகர் வீதியிலே

    ராஜபாதையிலே……ராஜபாத்திலே ….சாலைப் புழுதியிலே

    வேதனையால் தேடிடுவாரிடம் தேடுகிறீர் யாது ?” என்றேன்

    “தம்பி சாலைகளைத் தேடுகிறேன்……சரியாக்கி செல்லும்…”

    “இருமருங்கும் சாலைகள் தானே”

    “தேடுகிறேன் படிப்புக்கு வணிகம் செய்யாக் கல்விச் சாலைகளை

    தேடுகிறேன் துடிப்புடனே உழைப்பு நல்கும் தொழிற்சாலைகளை

    தேடுகிறேன் எதிர்காலம் வளர்க்கின்ற திட்டச்சாலைகளை

    தேடுகிறேன் எப்போதும் நியாயம் தரும் நீதிச் சாலைகளை”

    என் தேடுதலும் ஓயவில்லை…..தேர்தலும் ஓயவில்லை…..என்றார் நகர்ந்தபடி

     

    ஜனப்பாதையிலே…ஜன்பாத்திலே… நெரிசலில் தள்ளாடும் மூதாட்டி

    தனைப்பார்த்து தேடலுக்கு உதவிடவே துணை வரவா நான் என்றேன்.

    பதிலாய்…”அகத்தைத் தேடுகிறேன் அறுபது வருடங்களாய்..

    …அகத்தில் அல்லவா சுகம் தெரியும்……”

    “அகம் என்றால்…..பிறந்தகமா புகுந்தகமா மகன் அகமா மகள் அகமா”

    “ராசா….

    தேடுகிறேன் இலவசமாய் சிகைச்சைத் தரும் மருந்தகம்

    தேடுகிறேன் உரம் கொடுத்து ஊட்டம் தரும் விருந்தகம்

    தேடுகிறேன் கற்றோர் சிறப்பு தரும் கருத்தகம் –

    தேடுகிறேன் இந்நாட்டைப் பெற்றோர் யெனக்காக்கும் வித்தகம் ..

    ( தேடுகிறேன் பெற்றோர் தமைக் காக்கும் பிறந்தகம் )…

    என் தேடுதலும் முடியவில்லை…..தேர்தலும் ஓயவில்லை…..என்றார் தளர்ந்தபடி

    ———-

    “இந்தியா கேட்டதிலே ..இந்தியா கேட்டதிலே ….கேட்காமல் நான் நுழைந்தேன்….(ஆங்கில நுழைவுக்கு மன்னிக்கவும்)

    படகோடும் நீரோடை…..தியாகவொளிப் பெருஞ்சுடர்

    பசுஞ்சோலை காணாது …தேடலென்ன இளையவரே”

    “தாரம் தேடுகிறேன்” என்றார் குனிந்தபடி

    “முத்தாரமா…முதல் தாரமா…அன்றி….? நல்லிக்கோ…..அன்றி..பாளிகாவிற்கோ…நகர்ந்திருப்பாள்”

    “நண்பா…..நான்

    தேடுகிறேன் நாட்டினை வளரவைக்கும் பொருளாதாரம்

    தேடுகிறேன் சுற்றுபுறம் பொளிரவைக்கும் சுகாதாரம்

    தேடுகிறேன் கலாச்சாரம் ( அன்பைக்) கற்றுதரும் அருளாதாரம்

    தேடுகிறேன் இல்லங்கள் களிக்கும் அன்பாதாரம்

    என் தேடுதலும் தீரவில்லை…..தேர்தலும் ஓய்வதில்லை…..என்றார் விரைந்தபடி

    நான்காவதாக நமது பங்குக்கு யாம்..

    நெல்லைக் கொடுத்து ஜயத்தை நல்கும் காவிரி நீர்வரத் தேடுகிறோம்

    எல்லை சேது பாலம் ஆகியோர் இணைக்கும் நட்பைத் தேடுகிறோம்

    புதியவன் வந்தாரிணி ஆங்கே புலரும் நாளைத் தேடுகிறோம்

    விதியெனக் கோரும் பசிப்பேய் வீழ்த்தும் சத்திய சோதியை தேடுகிறோம்

    பகைவரெல்லாம் நண்பரென்றாக்கும் பக்குவ பாரதம் தேடுகிறோம்

    பத்திரமாக நம்முயிர் காக்கும் பாதுகாவலரைத் தேடுகிறோம்

    சக்தியெல்லாம் பெரும் சிக்கனப் படுத்திடும் யுக்த்தியாளனைத் தேடுகிறோம்

    இந்திய நாட்டை ஏய்த்திடுவார் தமை பணிய வைப்பவரை தேடுகிறோம்

    வறுமை நீக்கி பெருமைச் சேர்க்கும் வள்ளல் தம்மைத் தேடுகிறோம்

    வலிமை யெல்லாம் வல்லமை ஆக்கும் இளையபாரதம் தேடுகிறோம்

    கற்க கசடற குறள் நெறியின் வழி வள்ளுவன் தன்னைத் தேடுகிறோம்

    கங்கைக்காவிரி இணைக்கும் பாரதி கனவு மெய்ப்படத் தேடுகிறோம்

    தேடும் ஆட்சி நமக்கு கிடைப்பின் அது போல் ஏது மகிழ்ச்சியடி – தமிழே

    தேர்தல் ஏமாற்றிவிட்டால் அதுவும் அனுபவ முதிர்ச்சியடி.

    உனக்கும் தானிது புரியாதோ தேர்தலும் தேடலும் சுழற்சியடி – அதனால்

    உனக்கு ஜயகோ ஜயகோ என்றே முடித்தேன் ! இதுவும்வோர் சிறு முயற்ச்சியடி.

    பிழைப் பொறுத்து வாழ்த்தருள வணங்குகிறேன்…வாழியத் தமிழ்

    வணங்குகிறேன் உங்களின் அன்புடன் சத்தியமணி ….

     

    Share
  • தொல்லை காட்சி – ஆசை- விசு -தகேஷிஸ் கேசில் – ராதிகா சரத்குமார்

    மோகன் குமார்

     

    தொல்லை காட்சி – ஆசை- விசு -தகேஷிஸ் கேசில் – ராதிகா சரத்குமார்

    சீரியல் பக்கம் ஆசை – விஜய் டிவி 
    தெரியாத்தனமா ஒரே ஒரு நாள் இந்த சீரியலை பாத்து தொலைச்சிட்டேன். வழக்கமா மாமியார், மருமகள் பத்தி தான் பேசுவாங்க. இதில் எதோ ஆபிஸ் பத்தி மட்டுமே வருதேன்னு தான் பார்த்தேன்.
    எந்த ஆபிசில் இப்படி எந்த வேலையும் பார்க்காம பேசுவாங்களோ தெரியலை ! 8  மணி நேரமும் , பெண்களை பார்த்த படி, அல்லது பெண்களுடன் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே சண்டையிட்டவாறு, நண்பரிடம் அரட்டை அடித்தவாறு  எங்கு சார் இருப்பாங்க? எப்பவாவது அலுவலகத்தில் வேலை செய்தவரை விட்டு திரைக்கதை ,வசனம் எழுத சொல்லலாம். அதிலும் அந்த டயலாக் எல்லாம் சுத்த டிராமாத்தனம் ! 

    டிவி என்கிற மீடியாவை எவ்வளவு அழகா உபயோகிக்கலாம் ! அதவும்… ஆபிஸ் அங்குள்ள பாலிடிக்ஸ் என்பது மிக பெரிய கதைக்களம். அதை எவ்வளவு சொதப்ப முடியுமோ அவ்வளவு சொதப்பியிருக்காங்க தயவு செய்து பாத்துடாதீங்க.. இந்த சீரியலை !
    மக்கள் டிவியில் திருக்குறள் 

    மக்கள் டிவி சத்தமின்றி பல நல்ல நிகழ்சிகள் தந்து வருகிறது. அவற்றில் ஒன்று… திருக்குறள் குறித்த நிகழ்ச்சி. 

    தொலை பேசியில் நிலையத்துக்கு போன் செய்ய, நிகழ்ச்சி தொகுப்பாளினி (யப்பா. இதை சொல்லவே கஷ்டமா இருக்கு ! எப்படி தான் முழுக்க தமிழில் பேசுறாங்களோ !)  ஒரு திருக்குறளின் ஆரம்ப வார்த்தையும்  நடுவில் வரும் சில வார்த்தைகளும் சொல்லி கண்டு பிடிக்க சொல்கிறார். ” வேணும்னா வீட்டில் இருக்கவங்க கிட்டே கேளுங்க” என சொன்னாலும் கூட, மக்கள் பெரும்பாலும் திருக்குறள் வரிகளை தவறாகவே சொல்லுகிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் கேட்கும் அனைத்தும் மிக பிரபல குறள்களே !
    லைன் கிடைச்சா ஒரு தடவை பேசி பாக்கணும்னு அப்பப்ப தோணும்..அப்புறம் அப்படியே மறந்துடும் !
    தகேஷிஸ் கேசில் 
    போகோ டிவி யில் வரும் நிகழ்ச்சியில் ஒன்று தகேஷிஸ் கேசில் 

    ரொம்ப வினோதமான விளையாட்டுகள் நடத்துவார்கள். சறுக்கு பாறையில் ஓடுவது, உயரமான வழுக்கும் இடத்தில் கயிறு பிடித்து கொண்டு  தொங்குவது.. இப்படி பல விளையாட்டுகள். பங்கேற்கும் மக்கள் விழுவதும், தோற்பதும் தான் பார்க்க காமெடியாய் இருக்கும். 

    எல்லா விளையாட்டிலும் பெரும்பாலானோர் தோற்க ஒருவரே ஜெயிப்பர்.  மொழி தான் பேஜாரா இருக்கும்.  சைனீசோ, வேறு என்ன கருமமோ.. புலம்பி தள்ளுவாங்க ஒண்ணும் புரியாது.

    குட்டி பசங்க ஆர்வமாய் பார்த்தாலும் நாமும் கொஞ்ச நேரம் சேர்ந்து  சிரிக்க கூடிய நிகழ்ச்சி இது !
    விசுவின் மக்கள் அரங்கம் 
    சன்னில் பல வருடங்கள் வந்த அரட்டை அரங்கம் அப்புறம் சில வருடங்களாய்  ஜெயாவில் தொடர்கிறது.
    சன்னில் வரும்போது அடியேன் 3 முறை அரட்டை அரங்கத்தில் பேசியுள்ளேன். இதற்கான செலக்ஷன் – 3 நாள் நடக்கும். நீங்கள் 3 அல்லது 4 நாள் ஆபிசுக்கு லீவு போட்டு விட்டு, கியூவில் காத்திருந்து  பேசணும். ஒவ்வொரு ரவுண்டிலும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டு வந்து கடைசியில் பேசும்போது வீடியோ எடுத்து அதை விசுவே பார்த்து பின் டிவியில் யார் பேசணும் என தேர்வு செய்வார். நான்காம் நாள் தான் ஷூட்டிங் !
    சன்னில் வரும்போது நின்று கொண்டும் நடந்து கொண்டும் இருந்த விசு இப்போது சேர் போட்டு அமர்ந்து விட்டார். நிகழ்ச்சி ஏனோ முன்பளவு சுவாரஸ்யம் இல்லை.
    இருந்தாலும் எப்போதேனும் சானல் மாற்றும் போது சிலர் நன்கு பேசினால் பார்க்கிற வழக்கம். இவ்வாரம் மிலிட்டரியில் பணியாற்றிய ஒருவர் தங்கள் பணி எத்தனை கடினமானது என்றும், மிலிட்டரி காரர்கள் வாழ்க்கையையும் நெகிழ்ச்சியுடன் பேசினார். திரும்ப வந்த பிறகு சமூகம் தங்களை அதிகம் மதிப்பதில்லை என்றும் வருத்தத்தை பதிவு செய்தார். ஆயினும் நம்பிக்கை குறையாத இவர் இப்போது ரிலையன்ஸ் நிறுவனத்தில் நல்ல பதவியில் இருப்பதாகவும்,   வாழ்க்கையில் வெல்ல முக்கிய தேவை அவரவர் “attitude  ” தான் என்றும் பேசியது நிறைவு 
    சென்னையில் ஒரு நாள் ஆடியோ ரிலீஸ் 
    ராதிகா சரத் குமார் தயாரிப்பில் சன் பிக்சர்ஸ் வெளியீடு – சென்னையில் ஒரு நாள். மலையாளத்தில் டிராபிக் என்று வந்த சக்கை போடு போட்ட படத்தின் ரீ மேக். (டிராபிக் விமர்சனம்: இங்கு) 

    ஆடியோ ரிலீசில் சரத்குமார், தனுஷ், சேரன் என பலரும் ஜாலியாக பேசினர். குறிப்பாக சரத் குமார் – தன் மனைவி ராதிகாவை செமையாக நக்கல் அடித்தார்.   அவரும் அதை ஸ்போர்டிவ் ஆக எடுத்து சிரித்து கொண்டிருந்தார் (வீட்டுக்கு போனதும் பாடி பில்டரின் பாடி என்ன ஆனதோ?) 

    தனுஷ் கூட ராதிகா மாதிரியே பேசி கலாய்த்தார். சேரன் டிரைவர் ஆக நடிப்பது தான் சற்று பயமா இருக்கு. சீனிவாசன் அற்புதமாக நடித்த பாத்திரத்தை இவர் எவ்ளோ டிராமா செய்ய போ றாரோ? 

    சின்ன தலைவி ரம்யா நம்பீசன் ஒரிஜனலில் ஒரு சிக்கலான பாத்திரத்தில் நடித்தார். தமிழில் அவரை நடிக்க வைக்காததை வன்மையாக கண்டிக்கிறோம். (நடிக்கா விட்டாலும் , ஆடியோ ரிலீசுக்கு அந்த குயில் வந்து அழகாய் கூவியது ஹீ ஹீ )
    Share
  • இந்த வார ராசி பலன்!..(25-03-13 – 31-03-13)

    காயத்ரி பாலசுப்ரமணியன்

     

    இந்த வார ராசி பலன்: 

    மேஷம்:இந்த வாரம் வியாபாரிகள் பயணங்களில் கவனமாக இருந்தால் பொருள் இழப்பைத் தவிர்க்கலாம். பெண்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்தி வந்தால், அலைச்சல், வேதனை- இரண்டையும் கட்டுக்குள் வைத்து விடலாம். பெற்றோர்கள் பிள்ளைக்காக அதிக செலவுகள் செய்ய நேரிடும். உற்சாகம் குறையாமலிருக்கமுதியவர்கள் உணவு , உரையாடல் இரண்டிலும் கட்டுப்பாடாக இருப்பது நல்லது பணியிடங்களில் கவனமாக நடந்து கொண்டால், சிறு பிரச்னைகளால் சிந்தனை சிதறாமலிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் வேண்டாத ,செலவுகளை அதிகபடுத்தாம லிருப்பது அவசியம்

    ரிஷபம்: உங்கள் ,வாகனங்களை தகுந்த விதத்தில் பராமரித்து வந்தால், வீண் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பணியில் இருப்பவர்கள் கவனக் குறைவிற்கு இடம் கொடாமல், உங் கள் பணியில் விழிப்பாய் இருங்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களுக்கு  நல்ல யோசனை சொல்பவர்களின் மனம் நோகாமல் நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.  கலைஞர்கள் திறமை என்பதுடன் பொறுமையும் உடனிருக்குமாறு பார்த்துக் கொண்டால், எளிதில் பணிகள் முடியும்.முதியவர்கள் உணவில் கவனமாக இருக்கவும். வியாபாரம், தொழிலிடங்களில் உங்களின் சொல்லுக்கு தனி மதிப்பிரு க்கும்.

    மிதுனம்;மாணவர்கள் யோசித்து நிதானமாகச் செயல்பட்டால், எல்லா விஷயங்களும் ஏற்றமாகவே முடியும். குழந்தைகள் பெறக் கூடிய பெருமையால், பெற்றோரின் பெருமை உயரும்.. வியாபாரிகள் கணக்கு வழக்குக்களில் நேர்மையான போக்கைக் கையாள்வது சிறந்தது. பொது வாழ்வில் இருப்பவர்கள் வீண் தர்க்கங்கள் எழாதவாறு பேசி வந்தால்,மனதில் அமைதி நிலவும். பணியில் இருப்பவர்கள் விலைஉயர்ந்த பொருள்களை கையாளுவதில் கவனம் தேவை. பெண்கள் அடிக்கடி வரும் கோபத்தை குறைத்து கொண்டால், இல்லத்தில் சச்சரவு எழாது.

    கடகம்: மாணவர்கள் படிப்பில் நம்பிக்கையுடன் செயல்பட்டால், அதிக மதிப்பெண் பெறுவது உறுதி. சேமிக்கும் வகையில் பண வரவு தாராளமாய் இருக்கும். உறவினர் இடையே சிறு பிரச்னைகள் எழக்கூடும். எனவே சிறிய விஷயங்களை பெரிதுபடுத்தாமலிருப்பது நல்லது. சிலர் குடும்பத்தோடு இனிய சுற்றுலா சென்று வருவார்கள். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் குறைந்து விடும். கர்ப்பிணிப் பெண்கள் அதிக அலைச்சல்,அறிமுகமில்லாத புதிய உணவு வகைகள் ஆகியவற்றை விலக்குவது நலம் . அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு தகுந்த மதிப்பும், மரியாதையும் அளிப்பார்கள்.

    சிம்மம்: இந்த வாரம் நண்பர்களிடையே வேண்டாத விஷயங்களுக்காக சிறு வாக்குவாதங்கள் உண்டாகும்.. மாணவர்கள் பிறரிடம் கைமாற்றாக பணம் பெற்று செலவழித்தால், வீண் தொல்லைக்கு ஆளாக வேண்டியிருக்கும்   பெண்கள் ,பணச் செலவில் கட்டுப்பாடாய் இருந்தால்,கடன்களும் கட்டுக்குள் இருக்கும். வேலையில் இருப்பவர்கள் பணியில் கவனமாய் இருந்தால், உயரதிகாரிகளின் சீற்றத்தித்திலிருந்து தப்பிக்க இயலும். வியாபாரிகள் பங்குதாரரின் எண்ண ஓட்டங் களை அறிந்து கொண்டு செயல்பட்டால், லாபம் குறையாது. . பெற்றோர்கள் பிள்ளைகளிடம் பக்குவமாக நடப்பது அவசியம்

    கன்னி: மாணவர்கள் வாகனம் ஓட்டும் போது விவேகத்தைக் கடைபிடித்து வந்தால், பயணங்கள் இனிமை யாய் இருக்கும்  வீடு, நிலம் வாங்குகையில், பத்திரத்தை சரிபார்த்த பின் பணத்தைக் கட்டுவது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்தால், இல்லறம் நல்லறமாகத் திகழும். பெண்கள் அக்கம் பக்கத் தாரிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாமல் அளவாகப் பழகுவது புத்திசாலித் தனம்.  . பொது வாழ்வில் இருப்பவர்கள் பிறர் மனம் புண்படாமல் பேசுவதை மேற்கொண்டால், அதிக நன்மை பெறலாம். கலைஞர்கள் ,நேரம் காலம் பாராமல் உழைக்க வேண்டியிருக்கும்  .

    துலாம்: பெண்கள் நிதிநிலைமைக்கேற்றவாறு செலவுகளை மேற்கொண்டால், கடன் தொல்லை இராது.  மாணவர்கள் கவனத்தை திசை திருப்பும் இடங் களுக்கு போவதைத் தவிர்த்து விடவும். வியாபாரிகள் சமயோசிதமாக செயல்பட்டால், எதனையும் சாதிக்க முடியும் . பொது வாழ்வில் இருப்பவர்கள் உங்கள் கோபமே பல சமயம் உங்களுக்கு வர வேண்டிய நன்மை க்குத் தடை போடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கலைஞர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து விட்டால், அவசியமான செயல்கள் நல்ல முறையில் நடைபெறும். உறவுகள் மற்றும் நண்பர்களோடு செலவு செய்யும் நேரம் இனிமையாகவும், மனதுக்கு இதமாகவும் அமையும்.

    விருச்சிகம்: பெண்கள் உறவுகளிடம் இன்முகம் காட்டினால், அவர்களின் அன்பும் குறையாமலிருக்கும்.. மேலும் குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொண்டால், கணவன் மனைவி இடையே வாக்குவாதங்கள் ஏற்படாமல் இருக்கும்.வியாபாரிகள் இந்த வாரம் வாகன பயணங்கள் மற்றும் பராமரிப்பிற்கென கணிசமாக பணம் செலவு செய்யும் நிலை இருக்கும்.முதியவர்களின் உடல் நலம் சீராக இருப்பதால், உற்சாகத்துடன் செயல்படுவார்கள். வழக்குகளில் நீங்கள் எதிர்பார்த்த நல்ல தீர்ப்பு கிடைக்கும். பொறுப்பில் இருப்பவர்கள் பணியாளர்களிடம் உங்கள் கோப தாபங்களை பிரதிபலிக்க வேண்டாம்.

    தனுசு: வேலைக்குப் போகும் பெண்கள் இல்ல வேலை , அலுவலக பொறுப்பு இரண்டும் மோதாமல் பார்த்துக் கொண்டால், மன அமைதி குலையாமலிருக்கும். கலைஞர்கள் தொல்லை தந்து கொண்டிருப் பவர்களிடமிருந்து தள்ளியே இருப்பது நலம். . கல்வியில் மேற்படிப்பு க்கான வாய்ப்புகளுக்கு மாணவர்கள் எதிர்பார்த்த வங்கி உதவி கிட்டும்.  அடுத்தவர்க்கு உதவி செய்கையில் உங்கள் இரக்க குணத்தை பிறர் தவறாகப் பயன்படு த்த அனுமதிக்க வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் எளிமையாய் இருத்தல், இனிமை யாய் பேசுதல் இரண்டையும் கடை பிடித்தால், அனைவரும் உங்கள் பக்கமே இருப்பார்கள்.

    மகரம்: பெண்கள் பக்குவமாக நடந்து கொண்டால், குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் தானே நீங்கும். உங்கள் வரவு செலவுகள் கட்டு க்குள் இருந்தால், பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு இடமிராது. கலைஞர்கள் வாழ்க்கையில் உயர, வரும் வாய்ப்பு நல்லபடியாக பயன்படுத்திக் கொள்வது உங்கள் கையில் உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில், கூட்டு முயற்சி முலம் புதிய முயற்சிகளை மேற்கொண்டால் அதிக லாபம் பெறலாம். நம்பிக்கையுடன் செயல்படும் குணத்தால்மாணவர்கள் , தொட்ட காரியம் யாவிலும் எளிதான் வெற்றி கிடைக்கும்.

    கும்பம்: சச்சரவுகள் பெரிதாகாமலிருக்க பெண்கள் இணக்கம், பொறுமை இரண்டையும் கடை பிடிப்பது அவசியம். மாணவர்கள் பேச்சில், படபடப்பும், பதற்றமும் காட்ட வேண்டாம்.. தொந்தரவுகள் புதிதாக முளைக்காமலிருக்க, பொது வாழ்வில் உள்ளவர்கள் இடம், பொருள் ஏவலறிந்து நடந்து கொள்வது நல்லது. சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகள் விரைந்து முடியும். வியாபாரிகள் பொருளாதாரத்தில் அகலக்கால் வைப்பதை தவிர்த்தால், செலவுப் பட்டியல் குறையும். கலைஞர்களின் வாழ்க்கை வளம் பெற்று விளங்க, உடன் இருப்பவர்களிடம் இதமாக நடந்து கொள்ளுங்கள்.

    மீனம்: பெண்களுக்கு இல்லத்தில் மகிழ்ச்சியும், பரபரப்பும் நிறைந்திரு க்கும்.மாணவர்களுக்கு புதிய நட்புகள் கிடைக்கும். எனினும் தராதரமறிந்து அளவோடு பழகுதல் நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள் விழிப்புணர்வோடு இருந்தால், வீண் சஞ்சலங்களிலிருந்து தப்பிக்கலாம் .  கலைஞர்கள் மேற்கொள்ளும் பிரயாணங்கள் மூலம் புதிய உறவுப் பாலம் உருவாகும். வியாபாரிகளுக்கு தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும்.  . பணி புரியும் இடத்தில் அவ்வப்போது எழும் கருத்து வேறுபாடுகளை மனம் விட்டு பேசி தீர்த்துக் கொண்டால், நிம்மதியாக வேலை செய்ய முடியும்.

    Share
  • பாரத விண்வெளி ஆய்வுப் பிதா டாக்டர் விக்ரம் சாராபாய்​

    Dr. Vikram Sarabhai

    (1917 – 1971)


    சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng. (Nuclear) Canada.


    “முன்னேறி வரும் ஓர் நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினா எழுப்பி வருகிறார்கள்!  இந்த முயற்சியில் நாங்கள் இரு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்சிமிழ்ப் பயணத்திற்கோ முற்படும், செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை!”

    டாக்டர் விக்ரம் சாராபாய்.

    இந்தியாவில் எழுந்த விண்வெளி ஆய்வுப் புரட்சி

    1963 இல் முதன் முதல் ரஷ்யாவும், அமெரிக்காவும் மனிதர் இயக்கும் விண்சிமிழ்களில் [Spacecrafts] அமர்ந்து அண்டவெளியில் சுற்றி வந்த போது, இந்தியாவின் விண்வெளிப் புரட்சி சிறிய அளவிலே ஆரம்பம் ஆனது!  அந்த ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி பாரதத்தின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை, நைக்-அபாச்சி [Two Stage Sounding Rocket, Nike-Apache], திருவனந்தபுரம் தும்பா ஏவு தளத்திலிருந்து, இடிக்கனலுடன் உறுமிக் கொண்டு, வானைக் கிழித்துக் கொண்டு, புவியீர்ப்பை எதிர்த்துக் கொண்டு உயரத்தில் எழுந்தது!  அது 50 பவுண்டு எடையுள்ள சோடியம் ஆவி வீசு கலனைச் [Sodium Vapour Release Payload] சுமந்து கொண்டு, 125 மைல் உயரத்தை எட்டி இந்தியா விண்வெளிப் படையெடுப்பில் தனது முன்னடியை வைத்தது!  தேர்ந்தெடுக்கப்பட்ட தும்பா ஏவுகணை மையம், ராக்கெட் ஏவிடச் சாதகமானப் பூகோளத்தின் காந்தசக்தி பூமத்திய ரேகையில் [Earth’s Magnetic Equator] அமைந்துள்ளது!

    “முன்னேறி வரும் ஓர் நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினா எழுப்பி வருகிறார்கள்!  இந்த முயற்சியில் நாங்கள் இரு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்சிமிழ்ப் பயணத்திற்கோ முற்படும், செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை!  ஆனால் மனித, சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்!  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஓர் பணியை மேற்கொள்கிறோம் என்னும் உறுதியில் இருக்கிறோம்!” என்று இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் குறிக்கோளை ஆணித்தரமாக அறிவித்தவர், விஞ்ஞான மேதை டாக்டர் விக்ரம் சாராபாய்.

    புதிய பாரதத்தைச் செதுக்கிய பொற்காலச் சிற்பி

    சுதந்திர சூரியன் பாரத தேசத்திலே உதித்ததும், மேதைகளிடம் அடங்கிக் கிடந்த ஆக்க வெள்ளத்தை மடைதிறந்து விட்டவர், பிரதமர் ஜவஹர்லால் நேரு!  விண்வெளி ஆராய்ச்சியைத் துவங்க, விக்ரம் சாராபாயைக் கண்டு பிடித்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சிப் பேரவையை [Indian National Committee for Space Research] நிறுவி, அவரை அதிபர் ஆக்கியவர், நேரு.  இப்போது இந்தியா ஆசியாவிலே அண்டவெளி ஏவுகணை விடுவதில் முன்னணியில் நிற்கிறது.  அண்டவெளி ஏவுகணைகள், துணைக் கோள்கள் முழுக்க முழுக்க இந்தியப் படைப்பு.  அப்பெரும் விஞ்ஞானச் சாதனைகள் நிகழ்ந்த, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியைப் இந்திய விஞ்ஞானத் தொழிற்துறையின் பொற்காலம் என்று வரலாற்றில் அழுத்தமாக எழுதி வைக்கலாம்!

    பொற்காலத்தைப் பாரதத்தில் உருவாக்கிய ஒப்பிலாச் சிற்பிகளான அரசியல் மேதை ஜவஹர்லால் நேரு, அணுவியல் மேதை டாக்டர் ஹோமி பாபா ஆகியோர் வரிசையில் டாக்டர் விக்ரம் சாராபாய் ஒருவராகக் கருதப்படுகிறார்.  பாரதத்தின் விண்வெளிப் படையெடுப்பு, விக்ரம் சாராபாயின் குறிப்பணியோடு அடி எடுத்து வைத்து ஓங்கி வளர்ந்தது!  இந்திய விண்வெளி யுகத்தின் தந்தை என்று போற்றப்படும், விக்ரம் சாராபாய் அண்டவெளிப் பௌதிக நிபுணர்.  அதில் அகிலக்கதிர் [Cosmic Rays] விஞ்ஞானத்தில் சிறப்பறிவு பெற்றவர்.  விக்ரம் சாராபாய் பல்துறைப் பகுதிகளில் திறமை யுள்ள ஓர் தொழிற் துறைஞர்.  விஞ்ஞானப் பொறியியல் தொழிற்துறைக் கூடங்களை நிர்மாணிக்கும் அமைப்பாளர்.  நிர்வாக வல்லமை மிக்க திறமைசாளி.  பயிற்சிப் பணியில் கருமமே கண்ணான கல்வி ஆசிரியர்.

    விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் வாழ்க்கை வரலாறு

    1919 ஆம் ஆண்டு ஆகஸ்டு 12 ஆம் தேதி விக்ரம் அம்பலால் சாராபாய் [Vikram Ambalal Sarabhai] குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரில் பிறந்தார்.  ஆரம்பத்தில் தாயார் சரலாதேவி நடத்திய தனியார் பள்ளிக்கூடத்தில் படித்துப், பிறகு குஜராத் கல்லூரியில் இடைநிலைக் கல்வியை முடித்தார்.  அதன்பின் மேற்படிப்புக்கு 1939 இல் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் ஸெயின்ட் ஜான் கல்லூரியில் சேர்ந்து, இயற்கை விஞ்ஞானத்தை [Natural Science] எடுத்துப் படித்தார். அப்போது இரண்டாம் உலகப் போர் மூண்டதால், அவர் உடனே இந்தியாவுக்குத் திரும்ப வேண்டிய தாயிற்று.

    இந்தியாவுக்கு மீண்டதும் விக்ரம் சாராபாய் நேராகப் பெங்களூர் சென்று இந்திய விஞ்ஞானக் கழகத்தில் [Indian Institute of Science] சேர்ந்தார்.  நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞான மேதை ஸர் சி.வி. ராமன் வழிகாட்ட அகிலக்கதிர் விளைவுகளின் [Cosmic Ray Effects] ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.  அங்கே அதே சமயத்தில் அகிலக்கதிர், மேஸான் [Meson] ஆராய்ச்சியில் ஆழ்ந்திருந்தவர் டாக்டர் ஹோமி ஜெ. பாபா. பாரதத்தின் எதிர்கால உன்னத விஞ்ஞான மேதைகள் இருவர் சி.வி. ராமனின் சிஷ்யர்கள்!  அவரது அடுத்த ஆய்வு, அகிலக்கதிர் வேறுபாடுகளின் புதிய சூரிய உறவுகள் [New Solar Relationships of Cosmic Ray Variations].  உலகப் போர் முடிந்த பிறகு, விக்ரம் சாராபாய் மறுபடியும் இங்கிலாந்துக்குச் சென்று மேற்படிப்பைத் தொடர்ந்தார். 1947 இல் சமர்ப்பித்த, “வேனில் வரம்பு மட்டங்களில் அகிலக்கதிர் ஆய்வுகள் [Cosmic Ray Investigations in Tropical Latitudes]” என்னும் ஆராய்ச்சிக் கோட்பாடுக்கு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டத்தை [Ph.D] விக்ரம் சாராபாயிக்கு அளித்தது.

    விக்ரம் சாராபாய் ஓர் உன்னதக் கலை ஞானி.  கலைமேல் இருந்த மோகத்தால், அவர் கேரள நாட்டிய அரசி மிரிநாளினி சுவாமிநாதனைக் கலப்புமணம் புரிந்து, பாரத மக்கள் ஒருமைப்பாட்டுக்கு ஓர் வழிகாட்டியாக விளங்கினார்.  அவருக்குக் கார்த்திகேயன் என்ற புதல்வனும் மல்லிகா என்ற புத்திரியும் உள்ளார்கள்.  அவரது மனைவி மிரிநாளினி சாராபாய் [Mrinalini Sarabhai], அருமை மகள் மல்லிகா சாராபாய் [Mallika Sarabhai] இருவரும் புகழ் பெற்ற இந்திய நாட்டியக் கலா மேதைகள்.  கலைத்துவக் கலாச்சாரத்தில் மிகவும் ஈடுபாடுள்ள அவரும் அவரது மனைவி மிரிநாளினியும் சேர்ந்து தர்பனா கலைக்கூடத்தை [Darpana Academy] அமைத்து பாரத நாட்டின் பூர்வீகக் கலைகள் புத்துயிர் பெற நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார்கள்.

    விக்ரம் சாராபாய் தோற்றுவித்த தொழிற்துறைக் கூடங்கள்

    டாக்டர் பட்டம் பெற்று சாராபாய் இந்தியாவுக்கு மீண்டதும், அகமதாபாத்தில் 1947 நவம்பர் மாதம் பௌதிக ஆய்வுக் கூடத்தை [Physical Research Laboratory (PRL)] நிறுவனம் செய்து அங்கே தனியாகத் தனது விஞ்ஞான ஆராய்ச்சிகளைத் தொடங்கினார்.  அடுத்து அகமதாபாத் நெசவுத் தொழில் ஆராய்ச்சிக் கூட்டகத்தை [Ahmedabad Textile Industries’ Research Association] அதே ஆண்டு நிறுவனம் செய்து 1956 வரை அவரே அதன் ஆணையாளராய்க் கண்காணித்து வந்தார்.  தொழில் நிர்வாகத் துறையில் சாராபாயிக்கு மிகுந்த வேட்கை இருந்தது.  அந்த ஆர்வத்தை நிறைவேற்ற 1957 ஆம் ஆண்டு அகமதாபாத் நிர்வாகக் கூட்டகத்தைத் [Ahmedabad Management Association] துவக்கம் செய்தார். 1950 முதல் 1966 வரை பரோடாவில் சாராபாய் கெமிகல்ஸ், சாராபாய் கிளாஸ், சாராபாய் எஞ்சினியரிங் போன்ற பல தொழிற் சாலைகள் நிறுவ சாராபாய் காரண கர்த்தா வாகினார். இந்தியாவில் ஓர் ஒழுங்கான நிர்வாகத் துறைக் கல்வி வளர 1962 இல் இந்திய நிர்வாகக் கூடத்தை [Indian Institute of Management] நிறுவி, 1965 வரை சாராபாய் அதன் ஆணையாளராக இருந்தார்.

    விக்ரம் சாராபாய் நேரு, டாக்டர் ஹோமி பாபா போல் ஓர் தீர்க்க தரிசி!   இந்தியாவில் பிரம்மாண்டமான அணுசக்தியைப் பயன்படுத்தி, செழிப்புள்ள கங்கை நதி வளத்தைத் திருப்பி விட்டு தெற்கே உள்ள வரட்சிப் பிரதேசங்களுக்குப் பாய்ச்ச வேண்டும் என்ற பெரிய திட்டங்களை வகுத்தவர்!  1965 இல் அகமதாபாத்தில் பள்ளிச் சிறுவர்களுக்கு விஞ்ஞானத்தைப் பரப்ப சமூக விஞ்ஞான மையத்தை [Community Science Centre] நிறுவினார்.

    இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவு மையம் அமைப்பு

    பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு 1962 இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சிப் பேரவையை [Indian National Committee for Space Research (INCOSPAR)] நிறுவனம் செய்து, அதன் அதிபராக டாக்டர் விக்ரம் சாராபாய் அவர்களை நியமித்தார்.  அதன் திட்டப்படி முதலில் தும்பா பூமத்திய ராக்கெட் ஏவு நிலையத்தை [Thumba Equatorial Rocket Launching Station (TELRS)], விக்ரம் சாராபாய் திருவனந்த புரத்தில் அமைக்க ஏற்பாடு செய்தார்.  தேர்ந்தெடுக்கப்பட்ட தும்பா ஏவுகணை மையம், ராக்கெட் ஏவிடச் சாதகமானப் பூகோளத்தின் காந்தசக்தி பூமத்திய ரேகையில் [Earth’s Magnetic Equator] அமைந்துள்ளது! இந்தியாவில் முதன் முதலாக ராக்கெட் டிசைன் செய்து, பல்வேறு அங்கங்களை இணைத்து, அதனைச் சோதனை செய்யத் திட்டங்கள் வகுத்தார்.  அடுத்து செயற்கைத் துணைக்கோள் [Artificial Satellite] ஏவும் திட்டத்தை வகுத்தார்.  அப்பணிகளில் அவருடன் உழைத்தவர் தற்போதைய இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்.  துணைக் கோள்களின் வழியாகக் கல்வியைத் தொலைக்காட்சிச் சாதனங்களின் மூலம் [Satellite Instructional Television Experiment (SITE)] பரப்பிக் கிராமங்களில் பாமர மக்களும் பயில வசதி செய்தார்.

    1966 ஜனவரி 24 ஆம் தேதி வியன்னாவில் அகில நாட்டு அணுவியல் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளச் செல்லும் போது, ஆல்·ப்ஸ் மலைத்தொடரில் விமானம் மோதி, இந்திய அணுசக்தித் துறையகத்தின் அதிபர், டாக்டர் ஹோமி பாபா அகால மரணம் எய்தினார்.  அப்போது பிரதமரான இந்திரா காந்தி பாபாவின் இடத்தை நிரப்ப விக்ரம் சாராபாயை அழைத்து, இந்திய அணுசக்தித் துறையகத்தின் அதிபராக 1966 ஆம் ஆண்டில் நியமித்தார்.  விண்வெளி ஆராய்ச்சித் துறைகளின் பொறுப்பையும் மேற்கொண்டு, விக்ரம் சாராபாய் புதிய அணுசக்தி துறையகப் பணிகளையும் கண்காணித்து வந்தார்.

    இந்திய விண்வெளி ஆய்வுத் துறையின் சாதனைகள்

    சுதந்திரம் பெற்று 25 ஆம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது, 1972 இல் பொதுவான முறையில் ஆரம்பிக்கப் பட்டு, இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் சீராக அமுலாக்கப் பட்டன.  முக்கியமாகப் பாரதத்தின் விண்வெளிப் பேரவை [Space Commission (SC)], விண்வெளித் துறையகம் [Dept of Space (DOS)] இரண்டும் முதலில் நிறுவனம் ஆயின.

    இந்திய விண்வெளித் திட்டத்தில் வானியல் பௌதிகம், கோட்பாடு பௌதிகம் [Theoretical Physics], பூகோளத்தின் விஞ்ஞானம், விண்கோள்களின் சூழ்நிலை, சூரிய குடும்பத்தின் ஆராய்ச்சி ஆகியவற்றை நுணுக்கமாய் அறிந்து கொள்ள வழிமுறைகள் வகுக்கப் பட்டுள்ளன.  அவற்றைத் திட்டமிட்டு நிறைவேற்ற நான்கு ஆய்வு நிலையங்கள் பணி புரிந்து வருகின்றன.  அகமதாபாத்தில் பௌதிக ஆராய்ச்சிக் கூடம், விண்வெளிப் பயன்பாடு மையம் [Physical Reseach Laboratory & Space Application Centre], திருவனந்தபுரத்தில் விண்வெளிப் பௌதிக ஆய்வகம் [Space Physics Laboratory], பெங்களூரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பகம் [Indian Space Research Organization].  அந்த மையங்களில் செயற்கைத் துணைக் கோள்கள் [Satellites], ஏவிடும் வாகனங்கள் [Launch Vehicles], உளவு ராக்கெட்டுகள் [Sounding Rockets] ஆகிய விண்வெளிச் சாதனங்களின் ஆராய்ச்சி, வளர்ச்சி முயற்சிகள் நிகழ்ந்து வருகின்றன.

    முதல் துணைக்கோள் ஆரியபட்டா 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி ரஷ்ய ராக்கெட் மூலம் சுமக்கப் பட்டுச் சுழல் வீதியில் விடப் பட்டது.  அடுத்து மூன்று துணைக் கோள்களும் [பாஸ்கரா-I, பாஸ்கரா-II, ஆப்பிள்] ரஷ்ய ராக்கெட் மூலமே [1979-1981] எடுத்துச் செல்லப் பட்டன.  ஐந்தாவது துணைக்கோள் ரோகினி முதன் முதல் இந்திய ராக்கெட் SLV-3 மூக்கில் அமர்ந்து கொண்டு விண்வெளியில் விடப்பட்டது.

    இதுவரை 32 துணைக் கோள்களை இந்தியா அண்டவெளியில் ஏவி இருக்கிறது. அவற்றில் 16 துணைக் கோள்களை இந்தியாவில் அமைக்கப் பட்ட நான்கு வித ராக்கெட்டுகள் SLV-3 [Satellite Launch Vehicle-3], ASLV [Augmented Satellite Launch Vehicle], PSLV [Polar Satellite Launch Vehicle], GSLV [Geo-Synchronous Satellite Launch Vehicle] வெற்றிகரமாக விண்வெளியில் தூக்கிச் சென்றுள்ளன.  மற்ற 16 துணைக் கோள்களை, ரஷ்ய, அமெரிக்க, ஈரோப்பியன் ராக்கெட்டுகள் சுமந்து சுழல்வீதிகளில் எறிந்துள்ளன.  1993 இல் ஏவப்பட்ட ஒரே ஒரு துணைக்கோள் [Indian Remote Sensing Satellite (IRS-1E)] மட்டும் சுழல்வீதியைத் தொட முடியாது தவறி இழக்க நேரிட்டது!

    செயற்கைத் துணைக் கோள்கள் செய்துவரும் பணிகள்

    1983 ஆகஸ்டு 30 ஆம் தேதி அமெரிக்க விண்வெளி மீள்கப்பல் [Space Shuttle] இன்சாட் [INSAT-1B] இந்தியத் துணைக் கோளை சுழல்வீதியில் ஏவி விட்டது.  ஏவப்பட்ட பல இன்சாட் இணைப்பணித் துணைக் கோள்களில் [INSAT Network Satellites] அதுவும் ஒன்று.  இந்திய தேசியத் துணைக்கோள் கூட்டு ஏற்பாடு [Indian National Satellite System] உள்நாட்டுத் தொடர்பு, சூழகக் காலநிலைக் கண்காணிப்பு [Meteorology], நேரடித் துணைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பி [Direct Satellite Television Broadcasting] ஆகியவற்றுக்குப் பயன்படுகிறது.  இன்சாட் இணைப்பணியில் [INSAT Network] 167 தொலைத் தொடர்பு முனைகள் [Telecommunication Terminals], ஏறக்குறைய 4172 இருவழிப் பேச்சு இணைப்புகளை [Two-Way Speech Circuits] ஏற்படுத்த முடியும்.  இன்சாட் இணைப்பு இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் கிராமியத் தொலைவரைவை [Rural Telegraphy] ஏற்கனவே நிலை நாட்டியுள்ளது.  இன்சாட் துணைக்கோள் இணைப்பு, சமிக்கைகளை 650 தொலைக்காட்சி அலை அனுப்பிகளுக்குப் [TV Transmitters] பரிமாறி, 80 சதவீத இந்திய மக்களுக்குக் கலைக் காட்சிகளையும், செய்திகளையும் அனுதினமும் அளித்து வருகிறது.

    குறிப்பாக துணைக்கோள் மூலம் தொடர்பு [Communication through Satellite], காலநிலை முன்னறிவிப்பு செய்ய பூகோளச் சூழக ஆய்வு [Meteorology] ஆகியவற்றைச் செய்ய செயற்கைத் துணைக்கோள்கள் உதவுகின்றன.  சூறாவளி, கடல் கொந்தளிப்பு [Cyclone] போன்றவை ஊர்களைத் தாக்கும் முன்பே, துணைக்கோள் மூலம் பேரழிவு எச்சரிக்கை விடும் அபாய அறிவிப்பிகள், கிழக்குக் கடலோர ஊர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடத்தில் அமைக்கப் பட்டுள்ளன. அவை சரியான சமயத்தில் எச்சரிக்கை செய்து, பெரும்பான்மையான மக்களையும், ஆடு மாடுகளையும் காப்பாற்றி யுள்ளன.  அத்துடன் விண்வெளித் தூர உளவு [Remote Space Sensing] வேளாண்மை, நீர்வளம், நிலவளம், தாதுக்கள் [Minerals], வனவியல் [Forestry], சூழக நிலை [Environment], கடல்துறை வளர்ச்சி [Ocean Development], வெள்ளத்தால் சேதங்கள், மழையற்ற பஞ்சத்தின் விளைவுகள் போன்றவற்றையும் கண்காணிக்க உதவுகிறது.

    2002 செப்டம்பர் 12 இல் ஏவப்பட்ட மெட்சாட் [METSAT] துணைக்கோள் முதன் முதல் பூகோள இணைவு மாற்றுச் சுழல்வீதியில் [Geo-synchronous Transfer Orbit] வெற்றிகரமாக எறியப்பட்டது.  அது 22,000 மைல் உயரத்தில் சுற்றிவரும் போது பூமியின் ஒரே முகத்தை நோக்கிக் கொண்டு தேவையான வானலைச் சமிக்கைகளை அனுப்பும்!  மெட்சாட் மிக்க உயரத்தில் பறந்து, பூகோளம் முழுவதையும் படமெடுத்துப் பூமிக்கு அனுப்பியுள்ளது!

    தும்பாவில் டாக்டர் விக்ரம் சாராபாயின் மர்மான மரணம்

    1962 இல் பௌதிகச் சாதனைகளுக்கு விக்ரம் சாராபாய் சாந்தி ஸுவரூப் பட்நாகர் பரிசைப் [Shanti Swaroop Bhatnagar Award] பெற்றார்.  பாரத அரசு 1966 இல் பத்ம பூஷண் [Padma Bhushan] கௌரவப் பெயரையும், அவர் காலமான பிறகு பத்ம விபூஷண் [Padma Vibhushan] கௌரவப் பெயரையும் விக்ரம் சாராபாயிக்கு அளித்தது.  1968 இல் ஆக்க வினைகளுக்கு அண்டவெளி ஆய்வு ஐக்கியக் கூட்டத்தின் [United Nation Conference on the Exploration & Peaceful Uses of Outer Space] அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  1970 இல் உலக நாடுகளின் அணுசக்திக் கூட்டக [International Atomic Energy Agency, Vienna] ஐக்கிய பேரவையின் தலைவராகவும், ஆக்க வினைகளுக்கு அணுசக்தி ஐக்கியக் கூட்டத்தின் [United Nation Conference on the Peaceful Uses of Atomic Energy] துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    டாக்டர் விக்ரம் சாராபாய் 1971 டிசம்பர் 30 இல் தும்பா ராக்கெட் ஏவுதளத்தைப் பார்வை யிடச் சென்ற சமயம், திருவனந்தபுரம் தங்குமிடத்தில் இரவில் தூங்கச் சென்றவர் தூங்கிக் காலையில் எழுந்திருக்கவே வில்லை!  சாராபாய் குடும்பத்தினர் மரணச் சோதனை [Autopsy] எதுவும் செய்ய வேண்டாம் என்று தடை செய்து உடம்பை நேரே அகமதாபாத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்!  ஆதலால் அவரது அகால மரணம் எப்படி உண்டானது என்று அறிய முடியாமல் மர்மமாகவே போய் விட்டது!

    இந்திய விண்வெளி யுகத்தின் தந்தை என்று போற்றப்படும், விக்ரம் சாராபாய் அண்டவெளிப் பணிகளுக்கு அடிகோலி, வளரும்படிச் செய்து, பெருகும்படி வழிகாட்டி, ஆசியாவிலே சிறந்த நிறுவனத்தைத் திறமையுடன் உருவாக்கிய விஞ்ஞான மேதை.  ஐம்பத்திரண்டு வயதிலே மறைந்த அந்த அரிய விஞ்ஞானியின் இடத்தை நிரப்ப இந்தியாவில் யாருமில்லை!  அவர் காலமான பின்பு தும்பா ராக்கெட் ஏவுதள நிலையம், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் [Vikram Sarabhai Space Centre] எனப் பெயரிடப்பட்டு யாவரது நினைவிலும் அவரது பெயரை நிலைநாட்டி யிருக்கிறது.

    ************************
    jayabarathans@gmail.com/   S. Jayabarathan [Sep 2002]

    1.  http://jayabarathan.wordpress.com/2007/05/19/dr-abdul-kalam-2/

    2.  http://jayabarathan.wordpress.com/2007/04/20/dr-abdul-kalam/

    Posted by Jayabarathan S on ஜனவரி 10, 2007 at 5:16 மு.பகல்
    Filed under: விஞ்ஞான மேதைகள், விஞ்ஞானம்Leave a commentTrackback URI

    Share
  • தளிர் உலகில்!

    பழமைபேசி

    யோகா கிளாசுக்கு
    பாரதி நகர் போயிருக்கும்
    அம்மாவுக்குத் தெரியாமல்
    தாத்தாவுக்கு காப்பி
    போட்டுக் கொடுக்கிறாள்
    தாயம்மா பாட்டி!
    அந்த மாமாவிடம்
    இனிமேல் இங்கு
    வர வேண்டாமென்று
    சொல்லி அழும்
    சின்னமணி அக்காவுக்கு
    கன்னத்தில் நல்ல அறை!!
    சாக்கடையில்
    தவறி விழுந்த
    பிரவீணாவுக்கு
    கைகால் கழுவிவிட்ட
    பிச்சைக்காரத் தாத்தாவை
    பிடித்துக் கொண்டு
    போகிறது போலீசு!
    சதர்ன் மில்
    முரளி அண்ணனுக்கு
    ஷிப்ட் மாறினது தெரியாமல்
    மொட்டை மாடிக்குப் போகும்
    மெளலி மாஸ்டர் வீட்டு
    சந்திரகலா அக்கா!
    மேரி மிஸ்ஸுடைய
    செல்போனில் ரீடையல்
    போட்டுப் பார்த்ததில்
    அது எங்க ஸ்கூல் பஸ்
    டிரைவர் அண்ணன்தானாம்
    பிடீ பிரியடில் சொன்னான்
    த்ரீ ஏ தினேஷ் குமார்!
    அம்மாவிடம் சொல்லி
    பெர்மிசன் வாங்க வேண்டும்
    என்னுடைய ஸ்கூல் டே
    பெர்பாமன்சுக்கு ட்ரீட்
    ஓசன் ரெஸ்டாரண்ட்டில்!
    ஆமாம் நான் இன்றைக்கு
    கலைமகள் வித்யாலயா
    பிரைமரி ஸ்கூலில்
    ஒன் சீ படிக்கும் வித்யா!!

    Share