Blog

  • சங்கரா தொலைக்காட்சி – குலதெய்வங்கள்

     

    குலதெய்வங்கள்

    ஒரு கிராமத்து மக்களின் வாழ்வியலை  அறிய வேண்டுமானால், அக்க்ராமத்தில் உள்ள கோவில்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.  தம் வாழ்க்கை மேம்பாட்டுக்காக, வழிமுறைகள் சீர் குலையாமல் இருப்பதுற்காக அமைந்ததுதான் குல தெய்வம். 

     

    தம் முன்னோரை தெய்வமாக கொண்டு கல் நட்டு  போற்றிய மனிதனின் வழிபாட்டில் வளர்ச்சி ஏற்பட்டு, வீட்டுக்கு என்று, காட்டுக்கு என்று தெய்வ வழிபாடு பெருகி வீட்டுத் தெய்வமாய், உயிர்த தெய்வமாய் வளர்ந்த வரலாற்றை கூறும் நிகழ்ச்சியிது.

     

    நாட்டுபுற  தெயுவங்களின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய நிகழ்ச்சி.  கள ஆய்வு மேற்கொண்டு வழிபடும் ஆண் தெய்வங்கள், பெண் தெய்வங்கள், குல தெய்வங்கள் பற்றிய தொகுப்பு.  நாட்டுப்புறத் தெய்வங்களின் வழிபாட்டு சடங்குகள் குறித்தும், வழிபாட்டு பாடல்களையும், தெய்வங்களின் பெயர்களையும் இணைத்து வழங்கும் நிகழ்ச்சியிது.

     

    படித்தவரை விட பாமரர் இடத்துச் செல்வாக்கு பெற்றது  குல தெய்வங்கள்.  இது அவர்கள் தொழிலோடும், ஒழுக்கத்தோடும் நெருங்கிய தொடர்பு

    கொண்டது.

    குல தெய்வம் பற்றிய புதுமையான நிகழ்ச்சி சங்கரா தொலைகாட்சியில் ஒளிபரப்பவிருக்கிறது .

    இந்நிகழ்ச்சியில் உங்கள் குல தெய்வமும் இடம் பெற வேண்டுமானால் தொடர்பு கொள்ள வேண்டியது – mariappan@srisankaratv.net (o) 95000 52250. 

     

    Thanks & Regards

    S.Selvaragu-PRO (Film & Channel)
    9003024334
    9382209649
    8015765631
    selvaragu.s.pro@gmail.com
    tweet to @selvaragupro

    Share
  • பாரதத்தைத் தொடர்ந்து ராமாயணம் !

     

    மஹாபாரதத்தை அப்படியே மூலத்தில் உள்ளது உள்ளபடி இலட்சக்கணக்கான பாடல்கள், 18 பர்வங்கள் அப்படியே தமிழ் உரைநடையில் முதன்முறையாகத் தமிழில் கொண்டுவந்தவர் ஒரு பெரும் சாதனையாளர். 1906 ஆம் வருஷம் ஆரம்பித்துக் கிட்டத்தட்ட 25 வருஷ உழைப்பில் திரு ம வீ  ராமாநுஜாசாரியார் செய்த சாதனை அந்தத் தமிழாக்கத் தொகுதிகள்.

    இத்தனைக்கும் 1906ல் ஆரம்பிக்கும் போது ஜயம் என்னும் மஹாபாரதம் ஜயமாக நிறைவேறுமா என்று ப்ரசனம் பார்த்தார். ஜோஸியர் எழுதியே தந்துவிட்டார். ‘முடிவு வரை போகாது’ என்று. அந்தக் காகிதத்தை மடித்து ஓர் உறையில் இட்டார் ம வீ  ரா. அதை அவர் மீண்டும் பிரித்துப் படித்துக் காண்பித்தது நண்பர்களுக்கு 25 வருஷம் கடந்து முழு தொகுதிகளும் வெற்றிகரமாக வெளிக்கொணர்ந்த பின்னர்தான்.

    ஊழையும் உப்பக்கம் காண்பர் – என்னும் திருவள்ளுவர் வாக்கு பலித்தது.

    அதற்குப் பிறகு 1952ல் திரு சிவராமகிருஷ்ணய்யர் ம வீ ரா இடமிருந்து உரிமையை வாங்கி ஒரு அச்சு போட்டார். அதற்குப் பின் மறைந்துவிட்ட அந்தத் தமிழாக்கத் தொகுதிகளைத் திரு சிவராமிருஷ்ணய்யரின் பேரனான திரு S வெங்கடரமணன் என்பவர் 9 பகுதிகளாக முழு நூலையும் அப்படியே நம் காலத்தில் கொண்டு வந்து விட்டார். இதைப் பற்றி முன்னரே மின் தமிழில் எழுதியுள்ளேன் ’பாரதம் கொணர்ந்த பகீரதர்’ என்னும் தலைப்பில் — http://groups.google.com/group/mintamil/msg/c77d889a41f68c87

    சாதனை செய்தவர்களின் கை சும்மா இருக்காது என்பார்கள். மஹாபாரதம் 9 வால்யூம்கள் போட்டு அவையே இன்னும் முழுக்க விற்கவில்லை. அதற்கே உதவி தேவைப் படுகிறது. இதில் அடுத்து அடுத்துச் சாதனை புரிகிறார் திரு வெங்கடரமணன்.

    பாரதம் போட்டுவிட்டுச் சும்மா இருக்கலாமா? அதில் வரும் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்கு அனைத்து மத ஆசாரியர்களும் உரை எழுதியுள்ளார்களே! அந்த ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தை ஸ்ரீ சங்கர பாஷ்யம், ஸ்ரீ பராசர பட்டர் பாஷ்யம் என்னும் இரு சித்தாந்த உரைகளுடனும் எளிய தமிழில் மொழிபெயர்த்துப் படித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்து, அந்தக் காலத்தில் ம வீ ரா செய்து வைத்த தமிழாக்கம் சங்கர பாஷ்யம், பட்டர் பாஷ்யம் இரண்டு உரைகளுக்கும் தமிழாக்கம் – இவற்றையெல்லாம் அப்படியே ஒரு நூலாக இப்பொழுது கொண்டு வந்துவிட்டார் திரு வெங்கடரமணன். வடமொழி தெரியாது, நாங்க எப்படி அதையெல்லாம் படிப்பது என்ற கவலை இனி இல்லை.

    அதோடு விட்டாரா? ஸ்ரீவால்மீகி ராமாயணம் போடாமல் பாரத நாட்டு இதிகாசங்கள் நிறைவடையுமா? ராமாயணத்தையும் தமிழ் மொழிபெயர்ப்பு கொண்டு வர வேண்டும் என்று தேடி, 1900ல் பண்டிதர் ச. மகா. நடேச சாஸ்திரிகள் மிக எளிய தமிழில் மொழிபெயர்த்ததைக் கண்டு பிடித்து அதையும் ஆறு புத்தகங்களாகக் கொண்டு வந்துவிட்டார். திரு நடேச சாஸ்திரிகளின் நூலைக் கண்டு பிடிக்க அவர் அலைந்ததும், பின்னர் ஏனாத்தூர் பல்கலைக் கழகத்தில் தேடிய போது எதேச்சையாகக் கிடைத்ததும் பெரும் கதையாகும்.

    1900ல் முதலில் தமிழ் மொழிபெயர்ப்பு ஸ்ரீ வால்மீகி ராமாயணத்திற்கு எழுதும் போது திரு நடேச சாஸ்திரியார் எழுதுகிறார் —

    “ஸம்ஸ்க்ருத அப்யாசம் இல்லாதவர்கள் பிறர் உதவியைக் கொண்டே அறிய வேண்டியிருக்கிறது. எல்லாரும் பண்டிதர்களுக்குப் பொருள் கொடுத்துக் கேட்கச் சக்தி உள்ளவர்கள் அல்லர். போதுமான அவகாசமும் கிட்டுவது அரிது. ஆகையால் இதனை மொழிபெயர்த்தால் பலருக்கும் உபயோகமாயிருக்குமென்று கருதிப் பரோபகாரச் சிந்தையுடன் மொழி பெயர்க்கத் தொடங்கினோம். கூட்டியும் குறைத்தும் மொழிபெயர்க்காமல் கறந்த பால் கறந்தவண்ணம் வால்மீகி சொன்னவாறே தமிழில் எழுதியிருக்கின்றோம். “

    இப்பொழுது இந்த நூல் திரு வெங்கடரமணன் தயவினால் நம் கைக்கு வந்துவிட்டது.

    இந்த நூலையும் என் கையில் தந்துவிட்டு, ‘சார்! உங்க உதவி வேண்டும். இதைப் பற்றிப் பிறருக்கும் சொல்லவேண்டும்’ என்கிறார் திரு வெங்கடரமணன். எனக்கு வெட்கமாகப் போய்விட்டது. நான் அல்லவா ஐயா உமக்கு நன்றி சொல்ல வேண்டும்! மிகப்பெரும் உதவி செய்துவிட்டு நீரா கெஞ்சிக் கேட்பது? என்று.

    அவருடைய செல் நம்பர் — திரு S  வெங்கடரமணன், 9894661259.

    10 % தள்ளுபடி தருகிறேன் என்கிறார் முயற்சி எடுத்துத் தொடர்பு கொள்வோருக்கு.

    காந்தி ஜயந்தி அன்று இதை உங்களுக்குத் தெரிவிப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. பண்டித நடேச சாஸ்திரியாரின் எளிய தமிழ் நடை அருமை. மூலத்திற்கு ஒட்டிய மொழிபெயர்ப்பு என்பது மிகப்பெரும் உதவி. எளிமையான நடையில் அதை அவரால் சாதிக்க முடிந்தது வியப்பு.

    அதுவுமில்லாமல் பண்டித நடேச சாஸ்திரியாரே குமார சம்பவம், ரகுவம்சம் ஆகியவற்றையெல்லாம் தமிழில் மொழிபெயர்த்திருப்பதாகத் தெரிகிறது. அந்த நூல்களை வைத்திருப்போர், அல்லது ஆன்லைனில் இருந்தால் அதன் சுட்டிகள் அறிந்தோர் திரு வெங்கடரமணனுக்கு உதவலாம், நூலாக வெளிவரும்.

    பலரும் கேட்டதற்கிணங்க அவருடைய தற்சமயம் முகவரியைத் தருகிறேன். செல்லில் தொடர்பு கொண்டு நிச்சயித்துப் பின் போவது சிறந்தது —

    Sri S Venkataraman
    New No 9, Old No 135,
    Nammalavar Street
    East Tambaram 600059
    cell 9894661259

     

    மிக அரிய நூல்கள், தமிழில் செம்பதிப்புகளாக…

    ஸ்ரீ மஹாபாரதம் :

    மஹாபாரதத்தை அப்படியே மூலத்தில் உள்ளது உள்ளபடி லட்சக்கணக்கான பாடல்கள், 18 பர்வங்கள் அப்படியே தமிழ் உரைநடையில் முதன்முறையாகத் தமிழில் கொண்டு வந்தவர் ஒரு பெரும் சாதனையாளர். 1906 ஆம் வருஷம் ஆரம்பித்துக் கிட்டத்தட்ட  25 வருஷ உழைப்பில் திரு ம வீ  ராமாநுஜாசாரியார் செய்த சாதனை அந்தத் தமிழாக்கத் தொகுதிகள்.

    18 பர்வங்கள் 9 பகுதிகளாக , மொத்தம் 9,000 பக்கங்கள்.

    ஸ்ரீமத்வால்மீகி ராமாயணம் :

    தமிழாக்கம் : பண்டித ஸ்ரீ நடேச சாஸ்த்ரிகள்
    2,250 பக்கம் ரூ 900/-
    ஸுந்தர காண்டம் மட்டும் ரூ90/-

    ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம் :
    ஆதி சங்கரர், ஸ்ரீ பட்டர் உரைகள்

    தமிழாக்கம் : ம. வீ . ராமாநுஜாசார்யர்
    விலை : ரூ 180/-

    கிடைக்குமிடம் :

    Sri S Venkataramanan
    New No 9, Old No 135,
    Nammalavar Street
    East Tambaram : 600059

    cell +91 9894661259

    Share
  • பேரா. ம. ரா. ப. குருசாமி காலமானார்

     

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    பேரா. ம. ரா. ப. குருசாமி அவர்கள் நேற்று 06.10.2012 கோயம்புத்தூரில் காலமானார் என்ற செய்தியால் உலுங்கினேன்.

    1963இல் கலைக்கதிர் இதழுக்கு அறிவியல் கட்டுரைகளை நான் எழுதிய காலங்களில் பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி அவர்கள் பதிப்பாசிரியராக இருந்து என்னை ஊக்குவித்தாராயினும் நேரில் காணும் வாய்ப்புப் பெற்றிலேன்.

    கோவைக் கம்பன் கழகம் பதிப்பித்த கம்பராமாயணம் தொகுதியை அச்சிடல் தயாரிக்கும் பணியை என்னிடம் தந்தனர். அப்பணி தொடங்கிய காலத்தில் பேரா. அ. ச. ஞா. அறிமுகம் செய்ய 1987இல் பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி அவர்களின் அன்புக்கு உரியவனானேன்.
     
    சென்னைக்கு வருவார். பேரா. அ. ச. ஞா. இல்லத்தில் சந்திப்பேன். என்னிடம் வண்டி இருந்த காலங்களில் சென்னைத் தொடர்வண்டி நிலையத்திலிருந்து அழைத்துவரும் பேறும் பெற்றிருக்கிறேன்.  

    1991-1993 ஆண்டுகளில் என் ஆண் மக்கள் கோவையில் கற்ற காலங்களில் அவரின் பாதுகாப்பு அவர்களுக்குக் கிடைத்தது.

    அவரின் தாமு நகர் இல்லத்துக்குப் பலமுறை போயிருக்கிறேன்.

    அந்தணர், அறவோர், செந்தண்மை பூண்டவர், செயல்வீரர் என்ற தகைமைகளைத் தேடுகையில் என் கண்முன் தோன்றுபவர்களுள் பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி அவர்களும் ஒருவர்.

    தன்மானம் மிக்கவர். புலமைக்கு மதிப்பளித்தவர். எவரையும் செல்வந்தர் என்றோ, அரசியல்வாதி என்றோ, அதிகாரி என்றோ கருதி அளவுக்கு அதிகமாகப் பணிவுகாட்டார். அதில் அவருக்கும் பேரா. அ. ச. ஞா.வுக்கும் ஒற்றுமை அதிகம்.

    என் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தார். அவர் சொற்களுக்கு அச்சுப் பதிப்புச் செயல்வடிவம் தரும் ஆற்றல் எனக்குண்டு எனக் கருதியவர்.

    1990களில் நான் அச்சிடத் தயாரித்த முருகன் பாடல் தொகுதி முழுவதையும் 2011இல் என்னிடம் கேட்டார், என்னிடம் இருந்த படிகளைக் கொடுத்தேன். கௌமார மடத்தாரிடம் சேர்த்தார்.

    முருகன் பாடல் தொகுதி முழுவதையும் மீள அச்சிடவேண்டும் என்ற ஆர்வத்தை அருட்செல்வர் நா. மகாலிங்கத்துக்குப் பேரா. ம. ரா. பொ. குருசாமி அவர்கள் ஊட்டியதால் அந்தப் பணி இப்பொழுது முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    அவரது அண்ணர் திரு. ம. ரா. போ. பாலகணபதி அவர்களைப் பிஜி நாட்டில் 1971இல் சந்தித்தேன். அப்பொழுது அவர் அங்குள்ள விவேகானந்த தமிழ்ப் பள்ளியின் தலைமை ஆசிரியர். ஓய்வுக் காலத்தில் நியுசீலாந்தில் வாழ்ந்தார். ஒருமுறை சென்னை வந்தார். கந்தரனுபூதி ஆங்கில மொழிபெயர்ப்பைப் பதிப்பிக்குமாறு என்னிடம் கேட்டார். பதிப்பித்தேன்.

    2012 ஆனியில் பன்னிரு திருமுறைச் சொல்லடைவு தொடர்பாக அருட்செலவர் நா. மகாலிங்கம் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி அவர்களின் வழிகாட்டலில் பேராசிரியர் பலருடன், கணிணி வல்லுநர் பலருடன், புலவர் மணியன் அவர்களுடன் மூன்று நாள்கள் கோவையில் தங்கிக் கலந்துரையாடினேன்.

    1963 தொடக்கம் 2012 வரை ஏதோ ஒரு வழியில் தொடர்பாக இருந்தோம். தமிழ் அமைத்த பாலத்தால் இணைந்திருந்தோம்.

    2012 ஆனியில் தாமு நகரில் அவர் இல்லம் சென்றிருந்தபொழுது பழுத்த பழமாக இருந்தார்.
    அவர் நூல்களுக்கு நான் கூறும் கருத்துரைகளால் ஈர்க்கப்பட்டவர்.

    காலனுக்கு ஏனிந்த அவசரம்?
    தமிழ் மொழிக்கு ஏனிந்த அவலம்?
    தமிழறிஞர் குழாமுக்கு ஏனிந்த இழப்பு?
    அறவோர் அணிக்கு ஏனிந்தக் குறைவு?
    அரற்றுவேனாயினேனுக்கு ஏனிந்த அழுகை?

    Share
  • முதன்முதல் பூமியிலிருந்து காணக் கிடைத்த காட்சி : கருந்துளை ஏவு பீடம் (World’s First Glimpse of Black Hole Launchpad)

     

                                                                         சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    கண்ணுக்குத் தெரியாத கருந்துளை
    கருவிக்குத் தெரியுது !
    கதிரலைகள் விளிம்பில்
    குதித்தெழும் போது
    கருவிகள் துருவிக் கண்டுவிடும் !
    அகிலவெளிக் கடலில்
    அசுரத் தீவுகளாய் மறைந்துள்ள
    பூதத் திமிங்கலங்கள் !
    உறங்கும் கருந்துளை உடும்புகள்
    விண்மீன் விழுங்கிகள் !
    பிண்டத்தைக் கைப்பற்றி முடங்கும்
    மரணக் கல்லறைகள் !
    பிரபஞ்சச் சிற்பியின்
    செங்கல் மண்
    சேமிக்கும் இருட் களஞ்சியம் !
    கருந்துளை சுழற்சி, செங்குத்து
    கதிர்வீச்சு எழுச்சி
    சுற்றும் ஆப்பத் தட்டு
    இவற்றின் தொடர் பென்ன ?
    இயற்கை அன்னையின்
    கைத்திறம் காண்பது
    மெய்ப்பா டுணர்வது,
    மர்மங்களை உளவிச் செல்வது
    மானுடர் மகத்துவம் !

    ++++++++++++++++++++

    முதலில் நாங்கள் கற்றுக் கொண்டது : கருந்துளை ஏவு அரங்கம் மிகச் சிறியது !    எழுந்திடும் ஒளிக்கதிர் வீச்சுகள் கருந்துளையின் விளைவுத் தொடுவானுக்கு [Black Hole’s Event Horizon ] மிக்க அருகிலிருந்து  பீறிட்டெழுகின்றன.    அந்த விளிம்பிலிருந்து எந்த அண்ட ஒளியும் தப்பிச் செல்ல முடியாது.   அப்படியே கருந்துளை உறிஞ்சி விழுங்கிவிடும்.   இந்த ஒளிக்கதிர் வீச்சுகள் பேரளவு சக்தி கொண்டவை.   இந்த சக்தி எங்கிருந்து வருகிறது ?   கருந்துளையே ஏராளமான அளவில் ஒளிந்துள்ள சக்திக் களஞ்சியம்.   அடுத்து கருந்துளை சுழற்சி [Black Hole Spin]  நிரம்ப அளவு வட்டச் சக்தி [Rotational Energy] கொண்டது.   மேலும் கருந்துளையைச் சுற்றி உருவாகும் ஆப்பத் தட்டு வடிவத்தில் [Pan Cake] தட்டாக்கும் ஈர்ப்பு  இயக்கத்தால் [Accretion Process] ஒளிக்கதிர் வீச்சசுக்கு பேரளவு சக்தி உண்டாகலாம்.   கருந்துளை சுழற்சி ஒளிக்கதிர் வீச்சு உற்பத்திக்கு ஒரு மூல காரணம் என்பதை நாங்கள் அறிய ஆரம்பித்திருக்கிறோம்.  மெய்யாகக் கருந்துளை ஒளிவீச்சு உண்டாக்கும் ஓர் அதிசய எஞ்சின்  !

    ஆவரி பிராடெரிக் [Avery Broderick, Event Horizon Telescope Team]

    “சமீபத்திய ஹப்பிள் தொலைநோக்கியின் கண்டுபிடிப்புகள் வானியல் விஞ்ஞானிகளுக்கு மாபெரும் பிரபஞ்சச் சவாலாகி விட்டன !  காரணம் அது ஒவ்வொரு காலாக்ஸியின் மையத்திலும் பூதகரமான கருந்துளை ஒன்று இருப்பைத் திறந்து காட்டி விட்டது !”

    ஸ்டீவ் நாடிஸ், (Astronomy Science Editor)

    “புதிய பொறிநுணுக்க முறை “விளைவுத் தொடுவானைத்” (Event Horizon) தெளிவாகக் காட்டுகிறது.  அதுவே கருந்துளை இருப்பை நேரிடைச் சான்றாக நிரூபிக்கிறது.”

    ஸ்டீவ் நாடிஸ், (Astronomy Science Editor)

    “கருந்துளைகள் மெய்யாகக் கருமை நிறம் கொண்டவை அல்ல !  அவை ஒளித்துகள் மினுக்கும் கனல் கதிர்களை (Quantum Glow of Thermal Radiation) வீசுபவை.

    ஸ்டீஃபென் ஹாக்கிங் (1970)

    விண்மீன் முந்திரிக் கொத்தில் (Star Cluster) இடைத்தரக் (Medium Size) கருந்துளை ஒன்று இருக்கு மானால், அது சிறிய கருந்துளையை விழுங்கும் அல்லது கொத்திலிருந்து விரட்டி அடிக்கும்.

    டேனியல் ஸ்டெர்ன் Jet Propulsion Lab (JPL), California

    பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தின் மர்மமான விசித்திரங்கள் !  அந்தக் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன !  எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்து போய் எஞ்சிய திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் அடர்த்தியாகி “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை அடைவதுதான் கருந்துளை.  அந்தச் சமயத்தில் கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்கற்று முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) !

    விண்வெளி விடைக் கைநூல் (The Handy Space Answer Book)

    முதன்முதல் கருந்துளை ஏவு பீடம் காணக் கிடைத்தது

    சமீபத்தில் வெளியான விஞ்ஞான இதழின் [Science Express] வலை முன்பதிப்பில் விளைவுத் தொடுவான் விண்ணோக்கிக் குழு  [Event Horizon Telescope Team] உறுப்பினர் ஆவரி பிராடெரிக் [Avery Broderick] உட்பட எழுதிய ஒரு தகவலில் கருந்துளைகள் வெளியேற்றும் ஒளிமிக்க எழுச்சிகளின் [Bright Jets] மூலாதாரம் பற்றி முதன்முதல் அறிவிக்கப்பட்டுள்ளது.   வெகு தூரத்தில் உள்ள ஒரு கருந்துளையைக் கண்டு அந்தக் குழுவினர் அவ்வித ஒளிவீச்சு ஏவப்படும் தளத்தைத் தீர்மானிக்க முடிந்தது.   இதுவே ஓர் துவக்க நிலை நிரூபண முதற் சான்றாகும் [First Empirical Evidence].   இதன் மூலம் கருந்துளை சுழற்சிக்கும் [Black Hole Spin] கருந்துளை ஒளிவீச்சுக்கும் [Black Hole Jets] உள்ளை இணைப்பு நிரூபிக்கப் படுகிறது.   இதுவரை இந்த முடிவு வெறும் சித்தாந்த முறையில்தான் [Theoretical Grounds] தெரிவிக்கப் பட்டது.

    நமது பால்மய வீதி உட்பட பல காலக்ஸிகளின் மையத்தில் மிகப் பெரும் கருந்துளை ஒன்று ஒளிந்து கொண்டுள்ளது.    அவற்றில் 10% காலக்ஸிகள்  ஒளிவேகத்துக்கு ஒட்டிய வேகத்தில் எலெக்டிரான் போன்ற மின்துகள்கள் நிறைந்த மிக நீண்ட திரட்சி ஒளிக்கதிர் வீச்சுகளை வெளியேற்றுகின்றன.    ஒளிக்கதிர் வீச்சுகளின் நீளம்  பல்லாயிரம் ஒளியாண்டு தூரம் செல்பவை.   காலக்ஸி ஒளிமந்தையைக் காட்டிலும் ஒளிமயமானவை அந்த ஒளிவீச்சுகள்.    ஆயினும் அந்த ஒளிக்கதிர் வீச்சுகளைப் பற்றிய விபரம் எதுவும் இல்லை.    இப்போது அந்தப் பணியைத்தான் இந்த ஆய்வுக் குழு செய்ய முயல்கிறது.   பூமி முழுதும் கண்காணிக்கும் மூன்று ரேடியோ விண்ணோக்கிகளின் தகவலைத் திரட்டி ஒப்பிட்டு, அந்த ஒளிவீச்சின் அடிப்படை அதன் ஏவு பீடம் [Launchpad] என்று முதன்முதல் அறிவித்துள்ளது.   குழு உறுப்பினர்கள் குறிக்கோளாக 50 மில்லியன் ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் உள்ள  M87 பூதவடிவ நீள்வட்ட ஒளிமந்தையை  [M87  Supergiant Elliptical Galaxy] எடுத்துக் கொண்டார்கள்.

    “முதலில் நாங்கள் கற்றுக் கொண்டது : கருந்துளை ஏவு அரங்கம் மிகச் சிறியது !    எழுந்திடும் ஒளிக்கதிர் வீச்சுகள் கருந்துளையின் விளைவுத் தொடுவானுக்கு [Black Hole’s Event Horizon ] மிக்க அருகிலிருந்து  பீறிட்டெழுகின்றன.    அந்த விளிம்பிலிருந்து எந்த அண்ட ஒளியும் தப்பிச் செல்ல முடியாது.   அப்படியே கருந்துளை உறிஞ்சி விழுங்கிவிடும்.   இந்த ஒளிக்கதிர் வீச்சுகள் பேரளவு சக்தி கொண்டவை.   இந்த சக்தி எங்கிருந்து வருகிறது ?   கருந்துளையே ஏராளமான அளவில் ஒளிந்துள்ள சக்திக் களஞ்சியம்.   அடுத்து கருந்துளை சுழற்சி [Black Hole Spin]  நிரம்ப அளவு வட்டச் சக்தி [Rotational Energy] கொண்டது.   மேலும் கருந்துளையைச் சுற்றி உருவாகும் ஆப்பத் தட்டு வடிவத்தில் [Pan Cake] தட்டாக்கும் ஈர்ப்பு  இயக்கத்தால் [Accretion Process] ஒளிக்கதிர் வீச்சசுக்கு பேரளவு சக்தி உண்டாகலாம்.   கருந்துளை சுழற்சி ஒளிக்கதிர் வீச்சு உற்பத்திக்கு ஒரு மூல காரணம் என்பதை நாங்கள் அறிய ஆரம்பித்திருக்கிறோம்.  மெய்யாகக் கருந்துளை ஒளிவீச்சு உண்டாக்கும் ஓர் அதிசய எஞ்சின்  !” என்று சொல்கிறார்  ஆவரி பிராடெரிக் [Avery Broderick, Event Horizon Telescope Team].   விளிம்பில் உண்டாகும் ஆப்பத் தட்டு, விளவு தொடுவானைப் போல் 5.5 மடங்கு விட்டமுள்ளது என்பது குழுவினரால் இப்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

    பூதக் கருந்துளைகள் தெரிவிக்கும் புதிய மர்மங்கள் !

    சமீபத்தில் வெளிவந்த “இயற்கை” விஞ்ஞான வெளியீட்டில் பாஸ்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அமெரிக்க ஆய்வாளர்கள், எப்படிக் கருந்துளைகள் ஒளிவேகத்தை ஒட்டிக் கதிர்த் துகள்களை வீசுகின்றன என்பதைக் கணித்து விட்டதாகக் கூறினர்.  அந்தக் கதிர்த் துகள்களின் உந்து எழுச்சி (Jet Streams of Particles) கருந்துளைகளின் விளிம்பில் உள்ள காந்த தளத்திலிருந்து உண்டாகிறது என்றும் கூறினர்.  அதாவது கருந்துளை விளிம்பு அரங்கிற்குள்ளே கதிர்த் துகள்கள் விரைவாக்கம் பெற்று குவிகின்றன என்று விளக்கினர்.

    நமது பால்வீதி மையத்தில் ஒரு கருந்துளை இருப்பதாகக் கருதினாலும் விஞ்ஞான நிபுணர் அருகில் வந்த எந்தப் பிண்டத்தையும் அண்டத்தையும், ஏன் ஒளியைக் கூட விழுங்கி விடும் அந்த விண்வெளிப் பூதங்களைப் பற்றி இன்னும் மிகக் குறைந்த அளவே அறிந்துள்ளார்.  பாஸ்டன் பல்கலைக் கழகப் பேராசிரியர் அலன் மார்ஸ்செர் கருந்துளை இதயத்தைத் துளைத்து அரிய தகவலை அறிந்து விட்டதாக வலுவுறுத்தினார் !  சக்தி வாய்ந்த பத்துத் தொலைநோக்கிகள் மூலம் ஒரு காலாக்ஸியை (Galaxy BL Lacertae) உற்று நோக்கி எங்கிருந்து, எப்படிக் கதிர்த்துகள்கள் உந்தி எழுகின்றன என்று உளவிக் கண்டுபிடித்து விட்டதாக பேராசியர் மார்ஸ்செர் உறுதியாக நம்புகிறார்.  மேலும் கருந்துளையில் உந்தி எழும் கதிர் ஊற்றின் உட்புறப் பகுதியைக் கூடத் தெளிவாகக் கண்டு விட்டதாகக் கூறினார்.

    பிரம்மாண்ட அளவுள்ள கருந்துளை கார்க் மூடிச் சுருளாணிபோல் (Winding Corkscrew) ஒளிப்பிழம்பு வெள்ளத்தை (Plasma Jets) உமிழ்கிறது என்று வானியல் விஞ்ஞானிகள் முதலில் ஐயுற்றுப் பிறகு அந்த உளவு நோக்குகள் மெய்யென உறுதிப்படுத்துவதாகக் கூறினர். அவ்விதம் கதிர் எழுச்சிகளின் உட்பகுதிகளைக் கண்டாலும் கருந்துளைக்குள் என்ன உள்ளது என்பதை இன்னும் விஞ்ஞானிகள் காண முடியவில்லை என்று பி.பி.சி. விஞ்ஞான வல்லுநர் நீல் பௌட்ளர் குறை கூறினார்.  கோட்பாட்டு பௌதிக விஞ்ஞானிகள் (Theoretical Physicists) கூறுவது மெய்யானால், அந்த மர்மமான கருந்துளையின் உட்பகுதியைக் காணவே முடியாது என்றும் பி.பி.சி. நிபுணர் கூறினார்.

    காலாக்ஸியில் சிறு கருந்துளைகள் & பெருங் கருந்துளைகள்

    சிறு கருந்துளைகள், பெருங் கருந்துளைக்கள் இரண்டுக்கு மிடையே இருக்கும் நடுத்தரக் கருந்துளையைக் காலாக்ஸிகளில் காண்பது அபூர்வம் என்று வானியல் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.  கருந்துளைகள் என்பவை எண்ண முடியாத அளவு அடர்த்தியைக் கொண்ட முனைப் பிண்டம் (Incredibly Dense Points of Matter).  அவற்றின் ஈர்ப்பாற்றல் ஒளிப் போக்கை வளைக்கும்.  அருகில் வந்தால் ஒளியையும் கருந்துளை இழுத்து உட்கொள்ளும் ! சிறிய கருந்துளை அருகில் இருந்தால் பெருங் கருந்துளை அதைக் கவ்வி விழுங்கி விடும். பூத விண்மீன்கள் சூப்பர்நோவாவாக வெடிக்கும் போது சிறு நிறையுடைய கருந்துளைகள் தோன்றுகின்றன !  அந்த மிகச் சிறிய கருந்துளை கூட நமது பரிதியைப் போல் 10 மடங்கு நிறையுள்ளது !  பேரளவு நிறையுடைய கருந்துளைகள் பரிதியைப் போல் பல பில்லியன் மடங்கு திணிவு உள்ளவை !  அத்தகைய பூதக் கருந்துளைகள் ஏறக்குறைய எல்லா காலாக்ஸி வயிற்றிலும் இருக்கின்றன !  ஆயினும் 1000-10,000 மடங்கு பரிதி நிறையுள்ள நடுத்தரக் கருந்துளைகள் விண்மீன் கொத்துக்களின் இடையே இருக்கலாம் என்று கோட்பாட்டுப் பௌதிக வாதிகள் கூறுகிறார்.  சென்ற ஆராய்ச்சி வெளியீட்டு ஒன்றில் டாக்டர் ஸெ·ப் (Dr. Zepf) குழுவினர் 50 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் ஓர் அண்டை காலாக்ஸியின் கருந்துளை (Black Hole : RZ-2109) இருப்புக்குச் சான்றுகள் தேடினார்.

    ஈரோப்பியன் விண்வெளி ஆணையகத்தின் நியூட்டன் தொலைநோக்கி (ESA’s XMM-Newton Telescope)

    1999 டிசம்பர் 10 இல் விண்வெளியில் ஏவப்பட்ட நியூட்டன் எக்ஸ்ரே விண்ணோக்கி உளவி பூமியிலிருந்து 4000 – 68000 மைல் உயரத்தில் நீள்வட்டப் பாதையில் சுற்றி வந்து காலாக்ஸிகளில் உள்ள கருந்துளைகளின் கதிர்த்துகள் எழுச்சிகளை உளவியது.  இரண்டு ஆண்டுப் பணிக்குத் திட்டமிட்ட அந்த விண்ணோக்கி இப்போது 2010 ஆண்டுகள் வரைப் பணிபுரிய நீடிக்கப் பட்டது.  அந்த எக்ஸ்ரே விண்ணோக்கி மூலம் தனித்துவ எக்ஸ்ரே முத்திரை கொண்ட ஓரியங்கும் கருந்துளையைக் கண்டுபிடித்தார்கள்.  அதன் ஒளிப்பட்டை மூலம் அறிந்தது அது பரிதியைப் போல் 10 மடங்கு நிறையுடைய ஒரு சிறிய கருந்துளை என்பது.  அத்தகைய சிறிய கருந்துளை கொண்ட ஒரு விண்மீன் கொத்து, நடுத்தரக் கருந்துளை ஒன்றைக் கொண்டிருக்காது என்று கருதப்படுகிறது.  அவ்விதம் ஓர் நடுத்தரக் கருந்துளை இருந்தால் அது சிறிய கருந்துளையை விழுங்கி விடும் அல்லது அங்கிருந்து விரட்டி விடும் என்று டாக்டர் ஸ்டெர்ன் கூறினார் !

    ஜப்பானிய வானியல் விஞ்ஞானிகள் நாசா விஞ்ஞானிகளோடு இணைந்து தமது எக்ஸ்ரே துணைக்கோளையும், ஈசாவின் நியூட்டன் எக்ஸ்ரே விண்ணோக்கியையும் பயன்படுத்தி நமது பால்வீதி காலாக்ஸியின் மையத்திலுள்ள கருந்துளை 300 ஆண்டுகளுக்கு முன்பே வெளிவிட்ட பேராற்றல் கொண்ட கதிர்வீச்சைக் கண்டார்கள் !  அந்த கருந்துளையின் பெயர் ஸாகிட்டேரியஸ் ஏ ஸ்டார் (Sagittarius A-Star) என்பது.  அது ஒரு பூதகரமான பெருங் கருந்துளை !  அதனுடைய நிறை பரிதியைப் போல் 4 மில்லியன் மடங்கு !  ஆனால் அதிலிருந்து வெளியாகும் கதிர்த்துகள் வீச்சுகள் மற்ற காலாக்ஸிக் கருந்துளைகளின் கதிர்வீச்சை விட பல மில்லியன் மடங்கு குறைந்தது !  காரணம் அது ஒரு பெரிய வெடிப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு முதிர்ந்து போய் ஓய்வாக இருக்கிறது !

    பிரபஞ்சத்தில் கண்ணுக்குப் புலப்படாத கருந்துளைகள்

    1916 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியின் அடிப்படையில் ஜெர்மன் வானியல் விஞ்ஞானி கார்ல் சுவார்ஸ்சைல்டு (Karl Schwarzschild), பிரபஞ்சத்தில் முதன்முதல் கருந்துளைகள் இருப்பதாக ஓரரிய விளக்கவுரையை அறிவித்தார்.  ஆனால் கருந்துளைகளைப் பற்றிய கொள்கை, அவருக்கும் முன்னால் 1780 ஆண்டுகளில் ஜான் மிச்செல், பியர் சைமன் லாப்பிளாஸ் (John Michell & Pierre Simon Laplace) ஆகியோர் இருவரும் அசுர ஈர்ப்பாற்றல் கொண்ட “கரும் விண்மீன்கள்” (Dark Stars) இருப்பதை எடுத்துரைத்தார்கள்.  அவற்றின் கவர்ச்சிப் பேராற்றலிலிருந்து ஒளி கூடத் தப்பிச் செல்ல முடியாது என்றும் கண்டறிந்தார்கள் !  ஆயினும் கண்ணுக்குப் புலப்படாத கருந்துளைகள் மெய்யாக உள்ளன என்பதை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ள நூற்றி முப்பது ஆண்டுகள் கடந்தன !

     

    1970-1980 ஆண்டுகளில் பேராற்றல் படைத்த தொலைநோக்கிகள் மூலமாக வானியல் விஞ்ஞானிகள் நூற்றுக் கணக்கான காலாக்ஸிகளை நோக்கியதில், கருந்துளைகள் நிச்சயம் இருக்க வேண்டும் என்னும் கருத்து உறுதியானது.  கருந்துளை என்பது ஒரு காலவெளி அரங்கில் திரண்ட ஓர் திணிவான ஈர்ப்பாற்றல் தளம் (A Black Hole is a Region of Space-time affected by such a Dense Gravitational Field that nothing, not even Light, can escape it).  பூமியின் விடுதலை வேகம் விநாடிக்கு 7 மைல் (11 கி.மீ./விநாடி).  அதாவது ஓர் ஏவுகணை விநாடிக்கு 7 மைல் வீதத்தில் கிளம்பினால், அது புவியீர்ப்பை மீறி விண்வெளியில் ஏறிவிடும்..  அதுபோல் கருந்துளைக்கு விடுதலை வேகம் : ஒளிவேகம் (186000 மைல்/விநாடி).  ஆனால் ஒளிவேகத்துக்கு மிஞ்சிய வேகம் அகிலவெளியில் இல்லை யென்று ஐன்ஸ்டைனின் நியதி எடுத்துக் கூறுகிறது.  அதாவது அருகில்  ஒளிக்கு ஒட்டிய வேகத்திலும் வரும் அண்டங்களையோ, விண்மீன்களையோ கருந்துளைகள் கவ்வி இழுத்துக் கொண்டுபோய் விழுங்கிவிடும்.

    கண்ணுக்குத் தெரியாத அந்த அசுரக் கருந்துளைகளை விஞ்ஞானிகள் எவ்விதம் கண்டுபிடித்தார்கள் ?  நேரடியாகக் காணப்படாது, கருந்துளைகள் தனக்கு அருகில் உள்ள விண்மீன்கள், வாயுக்கள், தூசிகள் ஆகியவற்றின் மீது விளைவிக்கும் பாதிப்புகளை விஞ்ஞானிகள் கண்டு ஆராயும் போது அவற்றின் மறைவான இருப்பை அனுமானித்து மெய்ப்பிக்கிறார்கள். நமது சூரிய மண்டலம் சுற்றும் பால்மய வீதியில் பல விண்மீன் கருந்துளைகள் (Stellar Black Holes) குடியேறி உள்ளன !  அவற்றின் திணிவு நிறை (Mass) சூரியனைப் போன்று சுமார் 10 மடங்கு !  பெருத்த நிறையுடைய அவ்வித விண்மீன் ஒன்று வெடிக்கும் போது அது ஓர் சூப்பர்நோவாக (Supernova) மாறுகிறது !  ஆனால் வெடித்த விண்மீனின் உட்கரு ஒரு நியூட்ரான் விண்மீனாகவோ (Neutron Star) அல்லது திணிவு நிறை பெருத்திருந்தால் கருந்துளையாகவோ மாறிப் பின்தங்கி விடுகிறது.

    பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தின் மர்மமான விசித்திரங்கள் !  அந்தக் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன !  எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்து போய் எஞ்சிய திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் அடர்த்தியாகி “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை அடைவதுதான் கருந்துளை.  அந்தச் சமயத்தில் கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்கற்று முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது. (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) !

    அண்டவெளிக் கருந்துளைகள் பற்றி ஹாக்கிங் ஆராய்ச்சிகள்

    1965-1970 இவற்றுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில், பிரபஞ்சவியலைப் [Cosmology] பற்றி அறியப் புதியக் கணித முறைகளைக் கையாண்டு, ஹாக்கிங் பொது ஒப்பியல் நியதியில் [General Theory of Relativity] “ஒற்றை முடத்துவத்தை” [Singularities] ஆராய்ந்து வந்தார்.  அப்பணியில் அவருக்கு விஞ்ஞானி ராஜர் பென்ரோஸ் [Roger Penrose] கூட்டாளியாக வேலை செய்தார்.  1970 முதல் ஸ்டீஃபென் அண்டவெளிக் கருந்துளைகளைப் [Black Holes] பற்றி ஆய்வுகள் செய்ய ஆரம்பித்தார்.  அப்போது அவர் கருஙந்துளைகளின் ஓர் மகத்தான ஒழுக்கப்பாடைக் [Property] கண்டுபிடித்தார்!  ஒளி கருந்துளைக் கருகே செல்ல முடியாது!  ஒளித்துகளை அவை விழுங்கி விடும்!  ஆதலால் அங்கே காலம் முடிவடைகிறது!  கருந்துளையின் வெப்பத்தால் கதிர்வீச்சு எழுகிறது!  ஜெர்மன் விஞ்ஞானி வெர்னர் ஹைஸன்பர்க் ஆக்கிய கதிர்த்துகள் நியதி [Quantum Theory], ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் படைத்த பொது ஒப்பியல் நியதி இரண்டையும் பயன்படுத்திக் கருந்துளைகள் கதிர்வீச்சை [Radiation] வெளியேற்றுகின்றன என்று ஹாக்கிங் நிரூபித்துக் காட்டினார்!

    கருந்துளைகள் கருமைப் பிண்டம் சேமிப்புக் களஞ்சியம் !

    சக்தி அழியாதது போல் பிண்டமும் அழியாது !  வலுவற்ற சிறிய கருந்துளைகளை விழுங்கி விடுகின்றன பெருங் கருந்துளைகள் !  அண்டையில் வரும் விண்மீன்களைக் கவ்வி இழுத்துக் கொள்கிறது கருந்துளையின் ஈர்ப்பு விசை !  அது போல் அருகில் நெருங்கும் ஒளிச்சக்தியையும் உறிஞ்சி விடும் கருந்துளைகள் !  பூத வாயு முகிலை வைத்துப் கணனிப் போலி இயக்கம் செய்ததில் (Computer Simulation of Giant Gas Clouds) வாயு முகில் நீரைச் சுழலில் இழுக்கும் நீர்ச்சுழலி போல் கருந்துளை இழுத்துக் கொள்வது அறியப் பட்டது.  அந்தப் போலி இயக்கங்கள் காட்டுவது என்னவென்றால், பூதப் பெருங் கருந்துளைகளின் அருகே காலாக்ஸியிலிருந்து பேரளவு வாயு முகில் கிடைத்தால், புதிய விண்மீன்கள் உண்டாக வாய்ப்பு ஏற்படுகிறது என்று பிரிட்டனின் ஸெயின்ட் ஆன்டிரூஸ் பல்கலைக் கழகத்தின் இயான் பான்னெல் கூறுகிறார்.

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Comman are Black Holes ? & Can Light Escape from Black Holes ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20 Astronomy Magazine – What Secrets Lurk in the Brightest Galaxies ? By Bruce Dorminey (March 2007)
    21 National Geographic Magazine – Dicovering the First Galaxies By : Ron Cowen (Feb 2003)
    22 Astronomy Magazine Cosmos – The First Planet By : Ray Villard & Adolf Schaller & Searching for Other Earths By : Ray Jayawardhana [Jan 2007]
    23 Discover Magazine – Unseen Universe Solar System Confidential [Jan 2007]
    24 A Discover Special – Unseen Universe – Comets Captured By : Jack McClintock (Jan 31, 2007)
    25 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40711221&format=html (கருமைப் பிண்டம்) (Dark Matter)
    26 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40711291&format=html (கருமைச் சக்தி) (Dark Energy)
    27 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40712061&format=html (கருந்துளை) (Dark Hole)
    28 Scientific American – Does Dark Matter Really Exits ? By : Moredehai Milgrom
    29 Astronomy Magazine – Peering into Black Holes By : Steve Nadis (Feb 2001)
    30 Scientific American – Echoes of Black Holes By : Theodore Jacobson (Dec 2005)
    31 Astronomy Magazine – Black Holes Seeing Unseeable ! New Technology will Prove Black Holes Exit By : Seteve Nadis (April 2007)
    32 BBC News : Black Holes Reveal More Secrets [Aug 24, 2008]
    33 BBC News : Black Holes Dodge Middle ground [Aug 24, 2008]
    34 Milky Way’s Core Black Hole Beamed out Massive Flares 300 Years Ago [Aug 26, 2008]
    35 European Space Agency Report on XMM-Newton X-Ray Space Telescope Launch (Dec 10, 1999)
    36 BBC News : Huge Black Hole Tips the Scale By : Paul Rincon, Austin Texas.
    37 BBC News : Rapid Spin for Giant Black Holes By : Paul Rincon, Austin Texas

    38  http://en.wikipedia.org/wiki/Messier_87  [A Supergiant Elliptical Galaxy] [September 29, 2019]

    39 Time and Space : Measuring the Universe’s Exit door By Jennifer Chu  [MIT News, Boston, MA] [Oct 2, 2012]

    40  Time and Space : World’s First Glimpse of Black Hole Launchpad [Oct 3, 2012]

    ******************
    jayabarat@tnt21.com [October 5,  2012]

    Share
  • அம்மணி

    தலைக்கோழி கூப்பிட்ட சித்த நேரத்துக்கெல்லாம் பழநி போகும் அஞ்சு மணி ரயில் கூகூவென சங்கூதியபடி, அக்கம்பக்கத்து கிராமங்களை எழுப்பிக் கொண்டே போனது.  இயற்கை வளம் வாசு அய்யா வீட்டிலிருந்து கேட்கிறது உலக்கை போடும் சத்தம். இந்த நவீன காலத்திலும் கைக்குத்தல் அரிசிதான் வாசு அய்யா வீட்டில். ஒவ்வொரு வீட்டுப் புறக்கொல்லையிலும் ஏதாகிலும் வீட்டுவளர்ப்புச் செடிகள் பயிரிட வேண்டுமென்பதைச் செயல்படுத்துவதில் ஊரே அவருக்கு ஒத்தாசை செய்கிறது.

    கிழபுறத் தாழ்வாரத்தின் கீழ் எல்லுசாமி இன்னும் படுத்திருக்க, அம்மணி எழுந்து போய் விட்டிருந்தாள். அவள் இந்நேரம் கொல்லையிலிருக்கும் மாடுகளுக்குத் தீவனம் போட்டுக் கொண்டிருக்கலாம்; கட்டுத்தறியைத் துப்புரவாக்கிய கையோடு, சாணம் கரைத்து சாணவாயுத் தொட்டியில் ஊற்றிக் கொண்டுமிருக்கலாம். விலகியிருந்த சத்திரப்பட்டி துப்பட்டியை நன்கு போர்த்தியபடி புரண்டு ஒருக்களித்துப் படுத்தார் எல்லுசாமி. வாசல் தெளிக்கும் ஓசை கேட்டது.

    மாடு கன்னுகளுக்குத் தீவனம் போட வேண்டுமென்றால்,  கொல்லைக்குப் போய் வெளியில் நறுக்கி வைத்திருக்கும் தட்டுக் கத்தைகளைக் கொஞ்சம் அள்ளிப் போட வேண்டும். இதெல்லாம் எதுவும் எல்லுசாமி செய்ய மாட்டார். தட்டுப்போரிலிருந்து நான்கு கத்தைகளை உருவி, ஒவ்வொன்றையும் மூன்றாகக் கத்தரித்து மூலையில் அடுக்கி வைப்பதோடு முடிந்தது அவரது வேலை. இராத்திரிக்கு ரெண்டு தரம் எழுந்து தீவனம் போடுவது என்னவோ அம்மணிதான்!

    ரெண்டாங்கோழி கூப்பிட்டு வெகுநேரமாயிற்று. தமயந்தியம்மா வீட்டுக்குப் பால் கறக்க வரும் பால்காரன் சைக்கிள் மணியடித்துக் கொண்டு போகிறான். இன்னும் தூங்கிக் கொண்டிருந்தால் அம்மணி வந்து சத்தம் போட்டு ஊரைக் கூட்டுவாள். ‘விருக்’கென்று எழுந்து பால்கும்பாவோடு பால் கறக்கப் போனார் எல்லுசாமி.

    தவுட்டுத் தொட்டியிலிருக்கும் எஞ்சிய புழுதண்ணியை இறைத்துக் கீழே கொட்டிய பிறகு, ரெண்டு குடம் தண்ணீரைத் தவுட்டுத் தொட்டியில் ஊற்றினாள் அம்மணி. அதனுள் சாமைத் தவிட்டோடு எள்ளுப் புண்ணாக்கு கொஞ்சமும் போட்டுக் கரைத்து விட்டு, கறந்த பாலை எடுத்துக் கொண்டு சமையற்க் கொட்டத்திற்குப் போனாள். எல்லுசாமியும் பின்னாடியே போய் அடுப்படியின் அருகே உட்கார்ந்து கொண்டார். அடுப்புச்சூட்டின் கதகதப்பு இதமாக இருந்தது. பால்கும்பாவை அப்படியே பெரிய அடுப்பில் வைத்து விறகு தள்ளியபின், பால் இருந்த சுண்டாச்சட்டியை கண்ணடுப்பில் இருக்கும் காப்பிச்சட்டியின் மேல் வைத்தாள். ஓரிரு மணித்துளிகளில் கண்ணடுப்புப்பால் சட்டிக்குள்ளேயே பொங்கிக் கொதித்தது.

    கண்ணடுப்புக் காப்பியுடன் சற்றுப் பாலையும் சீனியையும் கலந்து ஆத்தி நல்ல பெரிய லோட்டா ஒன்றில் ஊற்றிக் கொடுத்தாள். குத்திட்டு உட்கார்ந்திருந்த எல்லுசாமி காப்பியை அனுபவித்துக் குடித்தார். ஒவ்வொரு வாய் குடித்துக் கொண்டே அதை எடுப்பதும் இதை எடுப்பதுமாக இருந்தாள் அம்மணி. ஏரித்தோட்டத்து மராமத்து வேலைகளைப் பற்றிச் சொல்லி, என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பது குறித்து அம்மணியிடம் யோசனை கேட்டார் எல்லுசாமி.

    கொட்டாவி விட்டபடியே உள்கொட்டத்திலிருந்து எழுந்து வந்தான் பெரியவன் துரைசாமி. “அம்மா காப்பி ஆச்சா?!”

    “பெரிய தங்கம்! ஊர் சோலியெதுக்கும் போகாம நாலு வண்டி மண்ணாச்சும் இன்னிக்கு அடிச்சிப் போடோணும். வேசை இருக்குறப்பவே இந்த குப்பை மேட்டு மண்ணு முச்சூடும் தோட்டத்துக்குக் கடத்திப் போடோணுஞ் சரியா கண்ணூ?”

    “சரிம்மா! எத்தினிவாட்டிதான் இதையே சொல்லுவ? கொண்டா காப்பிய!”

    தோளில் இருந்த துண்டையெடுத்து உதறிய பின், தலைக்கு உருமாலையாகக் கட்டிக் கொண்டு கிளம்பினார் எல்லுசாமி. தூக்குப் போசியில் முதல் நாள் சோத்துடன் மோர் ஊற்றிக் கரைத்து, அதையே தோட்டத்து நாய் பேச்சிக்குக் கொடுத்தனுப்பினாள் அம்மணி.

    அடுப்படியில் விறகு தள்ளிவிட்டுக் கொண்டிருந்தவள், வேகமாகத் தண்ணிக் கொட்டத்துக்குப் போனாள். அங்கிருந்த தண்ணியடுப்பில் தென்னை மட்டை ரெண்டினை வைத்துப் பற்ற வைத்தாள். பெரியவன் குளிக்காமல் சாப்பிடமாட்டான். பெரியடுப்பில் உலை காய்ந்து விட்டிருந்தது. கழுவி அரித்த அரிசியை உலையில் போட்டு, அதன் மேல் தட்டத்தை வைத்து மூடினாள். கண்ணடுப்பில் இன்னும் காப்பிச்சட்டி சுண்டிக் கொண்டிருந்தது. பருப்புச்சட்டியைக் கண்ணடுப்பில் வைத்து, அதற்கு மேல் காப்பிச்சட்டியை இடம் மாற்றிக் கொண்டாள்.

    “நேராப் போயி ஒரு வண்டி மண்ணடிச்சுட்டு வந்துரு. அதுக்குள்ள சோறாக்கி, தெவரைப் பருப்பு கடைஞ்சி கத்தரிக்காக் குழம்பும் செய்து போடுறன் நானு!”

    “செரீம்மா”, கிளம்பிப் போனான் பெரிய மகன் துரைசாமி. போடிபட்டியில் இருக்கும் தன்னுடைய அண்ணன் வீட்டுக்குப் போன சின்னவன் மணியன் இன்னைக்காவது வருவானா மாட்டானா? யோசித்துக் கொண்டே தயிர் மொடாவைச் சிலுப்பு கொக்கிகளுக்குக் கீழே வைத்தாள் அம்மணி.

    கழுவிக் கொண்டு வந்த ஆளுயர தயிர்மத்தினை மொடாவில் நிறுத்தி, மேல்க்கொக்கிக்கும் கீழ்க்கொக்கிக்கும் உண்டான பனம்பட்டைகளைப் பூட்டினாள். பட்டைகளுக்கு இடையில் நின்று சுழலத் தயாரானது மத்துக்கோல். மத்துக்கோலில் சுருட்டிக் கட்டப்பட்டிருந்த கயிறினை அவிழ்த்து முன்னும் பின்னுமாக மத்தினை இழுத்தாடியபடி தயிர் சிலுப்பினாள். இடையிடையே அடுப்படியில் நடந்து கொண்டிருந்த சமையல் வேலைகளும் கவனிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

    வெண்ணெய் திரண்டு மிதக்கத் துவங்கியது. மத்துக்கீற்றிலும் நிறைய வெண்ணெய் திரண்டு அப்பிக்கொண்டிருந்தது. வெண்ணெய் திரண்டிருந்த மொடாவிலும், மத்துக் கீற்றிலும் இருந்த வெண்ணெய் முழுவதையும் ஒன்று திரட்டிப் பெரிய உருண்டையாக்கினாள். திருப்பதி இலட்டு அளவுக்குத் திரண்டு இருந்தது. மோர் வித்த காசும், வெண்ணெய் வித்த காசும் போதும் அவளுக்கு, வீட்டு செலவுகளைச் சரிக்கட்ட.

    பாத்திரங்கழுவுதல், மோர் சிலுப்புதல், பண்டங்கன்னுக்கு தீவனம் போடுதல், கொல்லையில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல், பால் மோர் கேட்டு வருபவர்களுக்கு ஊற்றிக் காசு வாங்குதல், துணி துவைத்தல், சில்வானங்கேட்டு வந்தவர்களுக்கு நோட்டு முறித்துக்  கொடுத்தல், குறியாப்புக் கேட்டு வந்தவர்களிடம் குறியீடாக ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டு மற்றொன்றைக் கொடுத்தல் என பதினாறு கவனக வேலையாகப் பலதையும் ஒரே நேரத்தில் செய்து, காலைநேரப் பணிகளை முடித்தாள் அம்மணி.

    பெரியவன் துரைசாமி முதல் வண்டி மண்ணடித்து விட்டு வந்திருந்தான். “கைகால் மூஞ்சி கழுவீட்டு வந்து உக்காரு கண்ணு!”, அவனுக்கு வட்டல் வைத்து சோத்தைப் போட்டுவிட்டு, கூடையில் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டாள்.

    ”செரி கண்ணூ. நான் பொடக்காளிக்குப் போயி பண்டங்கன்னுக்குத் தண்ணி காமிச்சிர்றேன். அப்படியே தோட்டத்துக்குப் போயி அப்பங்கூடவே உக்காந்து சோறுண்டுக்குறேன். நீ ஊட்டைப் பூட்டி தொறப்புக்குச்சியை எறவாரத்து மேப்படி மேல வெச்சிட்டு, மாடு கன்னுகளையும் ஓட்டிட்டு வந்துரு! செரியா?”

    லெட்சுமாபுரத்திலிருந்து குண்டலப்பட்டி எல்லையில் இருக்கும் ஏரித்தோட்டத்துக்கு ஒன்னரை மைல் தூரம். அந்த ஒன்பது ஏக்கர் ஏரித்தோட்டம்தான் எல்லுசாமி அம்மணி தம்பதியினருக்குக் கிடைத்த பூர்விகச் சொத்து.

    சும்மாட்டுத் தலையில் இருந்த கூடையில் காலைச்சோறு, மத்தியானச் சோறு எல்லாமும் இருந்தது. வலது கை கூடையைப் பிடித்திருக்க, இடது கையில் காப்பி இருந்த திருகணிச் சொம்பினைத் தொங்கவிட்டபடி புறப்பட்டுப் போனாள். ஊர் எல்லை தாண்டும் வரையிலும், மாறி மாறி யாராவது ஒருவர் எதிரில் வந்து கொண்டே இருந்தனர். அவர்களிடம் ஞாயம் பேசுவதும் நலம் விசாரிப்பதுமாகப் பேசிக்கொண்டே தன் வழியில் போய்க் கொண்டிருந்தாள்.

    தோட்டத்து இட்டேரிக்கு இவள் போனதுமே தோட்டத்து நாய் பேச்சி ஓடோடி வந்து இவளை முகர்ந்து பார்த்து நக்கியபடியே வளைய வந்தது.

    “அடியே பேச்சி, சும்மா போ! எதோ காணாதவளைக் கண்டவளாட்ட? என்ன நீயி?! உங்க அப்பன் உனக்கு சோறு ஊத்துனாரா, ஊத்தாமயே உட்டுட்டாரா? செரி வா, சாளைக்கு வந்ததும் நான் ஊத்தறேன்!”, வாஞ்சையாகத் தன் மகளைச் செல்லம் கொண்டாடினாள். அம்மணி வருவதைக் கவனித்த எல்லுசாமி கிணற்றடியில் இருந்து வேப்பங்குச்சிப் பல்துலக்கோடு சாளையை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    சாளைத் திண்ணையில் கூடையையும், திருகணிச்சொம்பினை சாளைக்குள் இருந்த மரப்பொட்டி ஒன்றின் மேலுமாகத் தன் சுமையை இறக்கி வைத்தாள்.

    “டே பேச்சி, வாடா கண்ணு!! கூழ் குடிப்பியாமா!!” எறவாரத்தில் தொங்கிக் கொண்டிருந்த தூக்குப் போசியில் இருந்த கூழை பேச்சியின் தட்டில் ஊற்றிவிட்டு, தண்ணித்தொட்டிக்குப் போய் தூக்குப் போசியைக் கழுவினாள். அது நிரம்ப தண்ணீர் கொண்டு வந்து எல்லுசாமியின் அருகே வைத்தாள். ஏற்கனவே கூடையை எல்லுசாமி இறக்கி வைத்திருந்தார். அதில் இருந்தவற்றை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள, காலை வேளைச் சாப்பாடு ஆனது.

    உண்ட மசமசப்பு தீரக் கையில் பீடியோடு உலாத்தப் போனார் எல்லுசாமி. தான் கொண்டு வந்திருந்த கொத்தினைக் கையில் எடுத்துக் கொண்டு, பருத்திக்காடு களையெடுக்கப் போனவள் மத்தியானம் ரெண்டுமணி நெகமத்து வண்டியின் சத்தம் கேட்டுத்தான் சாளைக்குத் திரும்பினாள். களையெடுப்பதில் மற்றவரை விட எப்போதும் ரெண்டு மூணு பாத்தி முன்னாடிதான் இருப்பாள். ஒரு களை தப்பாது; பயிருக்கும் சேதாரம் ஆகாது. பண்ணையத்து வேலைகளில் அம்மணியோடு போட்டியிடுவதற்கு சிஞ்சுவாடி கிராமத்தில் இருப்பவர் எவரும் யோசிக்கவே செய்வர்.

    சொல்லி வைத்தாற்போல பெரியவன் துரைசாமியும் மத்தியானச் சாப்பாட்டுக்கு வந்து சேர்ந்து கொண்டான். எல்லுசாமி மேவரத்துக்குழியில் இருந்த பட்டுப் போன மரமொன்றை வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்தார்.

    “ஏனுங்! உங்களைத்தானுங்.. வாங்க. உச்சி மேக்க சாஞ்சு வெகுநேரமாயிருச்சு பாருங்க. வாங்க, வந்து சோறுண்ட்டு பார்ப்பீங்களாமா!!”, தண்ணித்தொட்டி மேல் ஏறி நின்று குரல் கொடுத்தாள்.

    அருகே இருந்த வாழை மரத்தில் மூன்று கீற்று இலையைக் கொய்துவந்து, கடை பரப்பிச் சோறு பரிமாறினாள். தன் வாலைக் குழைத்தபடி பேச்சியும் அருகில் வந்து நின்று கொண்டது. அம்மணியின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தது அது. அதற்கும் வட்டல் கொண்டுவரப்பட்டு சோறு போடப்பட்டது. ஊர் நாயத்தோடு பண்ணையத்து நடப்பு வேலைகள் குறித்தும் பேசியபடி மத்தியான வேளை உண்டியை முடித்துக் கொண்டனர்.

    உண்ட மயக்கம் தொண்டனுக்கும்! இட்டேரியிலிருக்கும் பூவரச மரத்தின்கீழ் இருக்கும் வண்டியின் மீது ஏறிப்படுத்துக் கொண்டார் எல்லுசாமி. ஆனைமலைக் காற்று சில்லென்று அடிக்க, தென்னை மரத்தோப்பிலிருந்து செம்போத்தும் குயிலும் அதனதன் சுதியில் பாடிக் கொண்டிருந்தன. பெரியவன் பக்கத்துச் சாளையில் இருக்கும் சோடிக்காரப் பையன் தங்கவேலுவிடம் போனான். சோத்துப் போசியை கழுவிக் கமுத்திவிட்டு, சாளை முழுவதையும் கூட்டிப் பெருக்கினாள் அம்மணி.

    தெற்கே எரிசனம்பட்டி வரை போய்த் திரும்பிய நெகமத்து வண்டி, வடதிசையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. அதைக்கவனித்த அம்மணி, “ஏனுங், நாம்போயி மிச்சமிருக்குற கொஞ்சநஞ்ச பாத்திகளையும் செதுக்கிட்டு வந்துர்றேன்”. மறுபேச்சுக்குக் காத்திராமல் பருத்திக்காட்டுப் போய்த் தன் வேலையைத் தொடர்ந்தாள்.

    குண்டலப்பட்டியில் யாருக்கோ தெரட்டிச்சீர் போலிருக்கிறது. பாட்டுப்பொட்டி கொண்டு வந்து பாட்டெல்லாம் போட்டிருந்தார்கள். அதையும் மீறி எதோ சிலுசிலுவென்ற சத்தம் கேட்டது. தலையைத் தூக்கிப் பார்த்தால்  கஞ்சம்பட்டி மூலையிலிருந்து படைக்குருவிகள் ரெண்டு படைகளாக ஆகாயத்தில் வந்து கொண்டிருந்தன. படை ஒன்றுக்கு ரெண்டாயிரத்திலிருந்து ஐயாயிரம் குருவிகள் வரை கூட இருக்குமாம். பெரிய நாவற்பழம் போன்ற வடிவில் ஒரு படையும், ஆலிலை வடிவில் ஒரு படையும் தோற்றமளித்தது. இலாகவமாய் ஒரு சேர வளைந்து நெளிந்து பறக்கும் படைக்குருவிகளின் சாகசக் காட்சியைச் சொக்குண்டு பார்த்துச் சிரித்தாள் அம்மணி.

    பெரியவன் மாய்ந்து மாய்ந்து வேலை பார்க்கிறான். எப்போதும் நாலு வண்டி மண்ணடிப்பவன் இன்றைக்கு ஆறாவது நடை போய்க் கொண்டிருந்தான்.

    “செரி நீ கிளம்பு! பொழுது வுழுகுறதுக்கு முன்னாலயே ஊடு போய்ச்சேரு. சின்னவன் மேக்க இருந்து வந்தாலும் வருவான்!!”

    ஊரெல்லாம் நிழல் படர்ந்திருந்தது. நேராக புறக்கொல்லைக்குப் போய், எல்லாம் இருந்தது இருந்தபடி இருக்கிறதா எனச்சரி பார்த்ததும் அவளுக்கு மனம் நிறைந்தது. தண்ணித்தொட்டியில் இருந்து தண்ணீர் மொண்டு, கை கால் முகம் கழுவித் தன் முந்தானையாலேயே துடைத்துக் கொண்டாள்.

    அவ்வளவுதான், வீட்டுக்கு வந்தாயிற்று! பத்துப் பதினாறு கவனத்துடன் பல வேலைகளை ஒருசேர ஒருங்கே பார்க்கத் துவங்கினாள். துணிகளை அலசிப் போட்டாள். நல்லதண்ணிக் கிணத்துக்கு ஒரு நடை போய் தலையில் ஒரு குடம், இடுப்பில் ஒரு குடமாக இரண்டு குடந்தண்ணி கொண்டு வரப்பட்டது. கரியூட்டுச் சேந்து கிணத்திலிருந்து நாற்பது குடம் சப்பைத் தண்ணி கொண்டு வரப்பட்டு பண்டங்கன்னுகளுக்கெல்லாம் தண்ணி காண்பிக்கப்பட்டது. வீடெல்லாம் பெருக்கித் துப்புரவு செய்யப்பட்டது.

    முதலில் அம்மணி குளித்து முடித்தாள். அதே கையோடு வாசல் தெளிக்கப்பட்டு வீட்டில் விளக்கேற்றப்பட்டது. தோட்டத்தில் இருந்து வந்த எல்லுசாமியும் பெரியவனும் குளிக்கப் போகுமுன்னர், ஒருவர் பால் கறந்து கொடுக்க மற்றவர் வைக்கோற் போரிலிருந்து வக்கிப்புல் அரிந்து வந்தார்கள். கறந்த பாலில் மணக்க மணக்க காப்பி தரப்பட்டது. அம்மணியும் ஒரு லோட்டா குடித்துக் கொண்டாள்.

    விநாயகங்கோயில் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ஊர்ப்பெரியவர்களும் எல்லுசாமியும் ஊர்ப்பழமை பேசிக் கொண்டிருந்தனர். பெரியவன் அவஞ்சோட்டுப் பையன்களோடு தலைவாசலில் நின்றுகொண்டு, கரட்டுமடம் சுகந்தி கொட்டாயில் என்ன படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தான்.

    அரிசிபருப்புக் கூட்டாஞ்சோறு ஆக்கி ’பயித்தம்பயிறு அடை’யும் சுட்டு வைத்திருக்க, எல்லாருமாகச் சேர்ந்து சாப்பிட்டார்கள். திண்ணையில் மற்றவர்களோடு என்ன பேசிக்கொண்டிருந்தோம் என்பதை எல்லுசாமி சொல்லச் சொல்ல, அம்மணியும் கிணத்தடியில் தான் அறிய நேர்ந்தவற்றைப் பகிர்ந்து கொண்டாள். பேச்சு நெடுகிலும், பெரியவன் தன் அம்மாவைக் கிண்டலடித்துக் கொண்டே இருந்தான்.

    சாப்பாட்டு வேளை முடிந்ததும், எல்லுசாமி புறக்கொல்லைக்குப் போனார் பீடி இழுக்க. பழுதான மருந்துத் தெளிப்பானை நோண்டிக் கொண்டிருந்தான் பெரியவன் துரைசாமி.

    காற்று பதமாய் வீசியது. மதுரைவீரன் கோயில் பாட்டுச் சத்தம் விட்டுக் விட்டுக் கேட்டது. நான்கு வீடு தள்ளி இருக்கும் சுசீலா டீச்சர் வீட்டில் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாய் இருந்தது. யாரோ அவர்களுடைய உறவினர்கள் வந்திருக்கிறார்கள் போலத் தெரிகிறது. காரவாசலில் உட்கார்ந்து, அம்மணியும் பக்கத்து வீட்டு ருக்மணியும் புளியம்பழம் தட்டிக் கொட்டைகளைத் தனியாகவும் புளியைத்தனியாகவும் பிரித்தெடுத்துக் கொண்டே ஊர் ஞாயம் பேசிக் கொண்டிருந்தனர்.

    முதலில் எல்லுசாமி வந்து படுக்கையைப் போட்டார். சித்த நேரத்திலெல்லாம் பெரியவன் போய்ப் படுத்துக் கொண்டான். ருக்மணி அக்காவை அனுப்பி வைத்த கையோடு, பண்டங்கன்னுக்கெல்லாம் தீவனம் போட்டு வந்தாள் அம்மணி. முன்வாசக்கதவு, பின்வாசக்கதவு எல்லாம் நாதாங்கி பூட்டப்பட்டு இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொண்டாள்.

    கீழ்த்தாழ்வாரத்தில் எல்லுசாமி கட்டிலில் படுத்திருக்க, அதனருகே தரையில் பாயை விரித்து தலையணை இடப்பட்டது. கம்மாளபட்டி போர்வை ஒன்றும் தலையணை மேல் கிடத்தப்பட்டது.

    பித்தளைச் சொம்பு நிறையத் தண்ணீரும் அதை மூடிய வாக்கில் டம்ளர் ஒன்றுமாகக் குடிதண்ணீரைக் கட்டிலின் கீழ் கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக் கொண்டாளவள்.

    தூங்குவதாய் இருந்தாலும் அது ஒரு வேலையாக இருக்க வேண்டும். அல்லாவிடில் அம்மணிக்குத் தூக்கம் வராது. மின்விளக்கெல்லாம் அணைக்கப்பட்டு, ஒளிரும் குறுஞ்சிமினி விளக்கொன்றைத் தலைமாட்டில் வைத்துப் படுத்துக் கொண்டாள்.

    முதலாவது வேலையாகப் பெரியவன் எப்படி ஒன்பது ஏக்கர் நிலத்தை பதினெட்டு ஏக்கராக்கப் போகிறான் எனும் யோசனை; அடுத்து, சின்னவனை எப்படிப் படிக்க வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பலாமென்கிற யோசனை; குடிக்கத் தண்ணீர் கேட்பது போன்ற உதவிகளைத் தன் மணவாளன் கேட்டால் உடனே அதைச் செய்ய வேண்டும் என்கிற ஆவல்; புறக்கொல்லையில் மாடு கன்றுகள் இருக்குமிடத்திலிருந்து ஏதாவது சலசலப்புக் கேட்டால், உடனே போய் எட்டிப் பார்க்க வேண்டும் என்கிற எச்சரிக்கையுணர்வு. இப்படியான பலவற்றுடன்தான்  இரவு கழியப் போகிறது அவளுக்கு.

    தூக்கத்தில் திடீரென எதையோ நினைத்துத் தனக்குத்தானே பேசிச் சிரித்துக் கொண்டாள். சிரிப்பொலி கேட்ட எல்லுசாமி தன் தலையைச் சற்றுத் தூக்கித் தன்னருகே தரையில் படுத்திருக்கும் அம்மணியை ஏறிட,   இன்று பூத்த பூப்போலக்  கொள்ளை அழகாய் இருந்தாள் அவள்!

    Share
  • ஆதாமிண்டேமகன்அபு – மலையாளபடவிமர்சனம்

    மோகன் குமார்

    இயல்பான கதையும், இயற்கையான நடிப்பும்  சேர்ந்த படங்கள் மொழியையும் தாண்டி நம்முள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விடும். அத்தகைய ஒரு படம் தான் மலையாளத்தில் வெளியான -ஆதாமிண்டே மகன் அபு. 

    இரண்டு கோடிக்கும் குறைவான செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் 2010-ல் வெளியாகி விமர்சகர்களின் பெரும் ஆதரவை பெற்றது.

    கதை என்னவென்று பார்ப்போமா?

    அபு – ஐஷு என்கிற வயதான  தம்பதி  – கேரள கிராமத்தில் தனியே வசிக்கின்றனர். வெளிநாட்டில் குடும்பத்துடன் வசிக்கும் அவர்களின் மகன் இவர்களை வந்து பார்ப்பதோ இவர்களுடன் பேசுவதோ கூட இல்லை. இதில் பெற்றோர் இருவருக்கும் ஏகமாய் வேதனை.

    அத்தர் என்கிற வாசனை திரவியம் மற்றும் சில புத்தகங்கள் விற்று பிழைப்பு நடத்துகிறார் அபு. மனைவி வீட்டில் மாடுகள் வளர்த்து சற்று பணம் ஈட்டுகிறார். இருவருக்கும் இந்த தள்ளாத வயதில் ஒரே லட்சியம் – ஒரு முறையாவது ஹஜ் பயணம் செல்ல வேண்டும் என்பதே! ஹஜ் மானியம் பெற்று பயணம் செல்வது எந்த அளவு சாத்தியம் எனத் தெரியாததால் தனியார் டிராவல்ஸ் மூலம் பயணிக்க முடிவு செய்கிறார்கள்.

    அவர்கள் இத்தனை வருட சேமிப்பு பணம், மனைவியின்  நகைகள், மாட்டை விற்பது  என பணம் திரட்டுகிறார்கள். மீதமுள்ள பணத்துக்கு தங்கள் வீட்டில் உள்ள பலா மரத்தை விற்க முடிவு செய்து அதே ஊரில் உள்ள கலாபவன் மணியிடம் பேசுகிறார்கள். அவர் இவர்கள் ஹஜ் பயணத்துக்கு உதவும் எண்ணத்தில் அறுபதாயிரம் தர ஒப்புக்கொண்டு முன் பணமாக பத்தாயிரம் தருகிறார்.

    பாஸ்போர்ட் வாங்குவதில் துவங்கி எல்லா ஏற்பாடுகளும் செய்கிறார்கள். ஹஜ் பயணத்துக்கான தடுப்பூசி போடுவது, ஒவ்வொரு நண்பராய் சந்தித்து அவர்களிடம் பிரியா விடை பெறுவது என அனைத்தும் சரியே நடக்கும் நிலையில், ஒரு விஷயம் இடியாய் வந்து இறங்குகிறது.

    பலா மரத்துக்கு மீதம் பணமான ஐம்பதாயிரம் தரும் கலாபவன் மணி, அந்த மரம் பட்டு போய் விட்டது என்று கூறி விட்டு –  இருந்தாலும் நான் ஒப்பு கொண்ட படி  இந்த பணம் தருகிறேன் என்று சொல்ல, அபு அந்த பணத்தை வாங்க மறுத்து விடுகிறார்.

    ” நான் செல்வது நல்ல காரியத்துக்கு- கடனாகவோ, தவறான முறையிலோ பணம் ஈட்டி செல்ல கூடாது” என்று கூறி விடுகிறார்.

    வீட்டின் அருகில் இருக்கும் நண்பர் நெடுமுடி வேணு, டிராவல்ஸ் மேனேஜர் உள்ளிட்டோர் பணம் தர முன் வந்தாலும் “சொந்த ரத்த சம்பந்தத்தினர் மட்டுமே ஹஜ் பயணத்துக்கு உதவலாம்” என  மறுக்கிறார்.

    “மரம் வெட்டியது கூட அல்லாவிற்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். அதுவும் ஒரு உயிர் தானே? அந்த மரத்தை நம்பி எத்தனை உயிர்கள் இருந்தன? அதனால் தான் ஹஜ் பயணம் வாய்க்க வில்லை;  அடுத்த முறை  நிச்சயம் செல்வோம்” என மனைவியிடம் கூறி விட்டு, பக்ரீத் அன்று  புதிதாய் ஒரு பலா மரம் நடுவதுடன் படம் நிறைவடைகிறது.

    சலீம் குமார் அபுவாக வாழ்ந்துள்ளார். சிறந்த நடிகருக்காக மத்திய அரசின் விருதும் கேரள அரசின் விருதும் பெற்றுத் தந்த நடிப்பு. அந்த பாத்திரத்தின் எதிர்பார்ப்பு, ஏக்கம், கோபம், இயலாமை எல்லாமே மிக சரியே பிரதிபலிக்கிறது இவர் நடிப்பில். இவர் மட்டுமல்லாது குடை ரிப்பேர் செய்பவர் உள்ளிட்ட ஒழிந்து வரும் பல சிறு தொழில்கள் குறித்த வேதனை படத்தின் ஊடே தெரிகிறது.

    கலாபவன் மணி, நெடுமுடி வேணு, முகேஷ் போன்ற பல பெரிய நடிகர்கள் முக்கியமான சிறு சிறு பாத்திரங்களில் நடித்துள்ளனர். அபுவின் மனைவியாக வருபவர் சலிமை விட நிச்சயம் மிக இளமையாக தெரிகிறார்.

    படம் மெதுவாக ஒரு ஆர்ட் பிலிம் போல துவங்கும் போது மிக போர் அடிக்குமோ என்று தோன்றுகிறது. போக போக அவர்களின் பயணத்தில் நாமும் இணைந்து விடுகிறோம். ” எப்படியாவது அவர் ஹஜ் சென்றால் நன்றாயிருக்கும்” என ஒரு பக்கம் நினைத்தாலும், மறு பக்கம் “இது மலையாள படம்; நிச்சயம் அப்படி முடிக்க மாட்டார்கள்” என்று தெளிவாகப் புரிகிறது.

    படத்தில் வில்லன் என்று யாரும் கிடையாது. வரும் அத்தனை பாத்திரங்களும் நல்லவர்களே. ஒரு விதத்தில் பார்த்தால் கதை முழுக்க முழுக்க அபுவின் பார்வையில் சொல்லப்படுகிறது. அவர் மற்றவர்களிடம் நல்ல விதமாய் நடந்து கொள்வதால், மற்றோரும் அப்படியே நடந்து கொள்கிறார்கள்.

    கடைசியில் எல்லாரும் அபுவிற்கு உதவத் தயாராய் இருந்தும் கூட, யார் உதவியையும் அவர் பெற்று கொள்ளாத போது படம் பார்க்கும் நமக்கு அவர் மீதுதான் கோபம் வருகிறது. ஒவ்வொருவர் உதவியையும் பெறாமல் இருக்க ஒவ்வொரு காரணம் சொல்கிறார் அபு. ” நல்லவனாய் இருக்கலாம். ரொம்ப நல்லவனாய் இருக்கவே கூடாது”  (Too good  is bad ) என்பார்கள், அது தான் நினைவிற்கு வந்தது.

    படத்தில் உஸ்தாத் என்று ஒரு ஞானி பாத்திரம். அவரிடம் அபு சென்று ” உங்களுக்கு தான் எல்லாம் தெரியுமே ! நாங்கள் இந்த முறை ஹஜ் செல்வோமா?” என்று கேட்க, அதற்கு உஸ்தாத்  ஆம் என்றோ இல்லை என்றோ சொல்லாமல் “முயற்சி செய், முயற்சி செய்”  என்றே மறுபடி மறுபடி சொல்கிறார். நமக்கு இங்கேயே கூட அவர்கள் ஹஜ் செல்ல போவதில்லை என உணர்த்தப்படுகிறது.

    உண்மையில் தங்களிடம் சிறு சிறு குறைகள் இருக்க, ஒவ்வொரு நியாயம் சொல்வார்கள் மனிதர்கள். ”  ஆண்டவன் நல்லவங்களை தான் சீக்கிரம் கூட்டிப்பான்” என்பது உதாரணத்துக்கு ஒன்று ! ஆனால் நல்லவனாய் இருப்பது சாதாரண விஷயமில்லை. அது முள் மேல் படுப்பது போன்ற ஒரு விஷயம். நல்லவர்களுக்கு தான் தொடர் சோதனைகள் வந்து கொண்டே இருக்கும். அவற்றை மீறி நல்லவனாய் தொடர்ந்து இருப்பது சாதாரண விஷயமில்லை.

    பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள், மத நல்லிணக்கம் (அபுவிற்கு உதவுவோர் இந்து அல்லது கிறித்துவர்கள்), சுற்று சூழல் பாதுகாப்பு (மரங்களை வெட்டாதீர்கள்) போன்ற பல விஷயங்களை பூடகமாய்ப் பேசிப் போகிறது படம். மத்திய அரசின் பல விருதுகளைத் தட்டிச் செல்ல இவையும் காரணங்களாய் இருந்திருக்கலாம்.

    மொத்தத்தில் மனதை கனக்கச் செய்யும் இந்த படம் – ஒரு வித்தியாசமான அனுபவம். நீங்களும் ஒரு முறை இந்த படம் பார்ப்பதன்  மூலம் இதனை அனுபவியுங்கள் !

    Share
  • ஒரு முடிவின் மறு பக்கம்

    ஸ்ரீஜா வெங்கடேஷ்

    நேற்றுவரை பிரபல கிரிமினல் வக்கீலாக இருந்த சத்தியமூர்த்தி இன்று நீதிபதி ஆகிவிட்டார். வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. அவர் நீதிபதியானதில் அவருடைய பெற்றோருக்குத்தான் மிகவும் மகிழ்ச்சி. வருவோர் போவோரிடத்தில் எல்லாம் சொல்லிச் சொல்லிப் பெருமைப் பட்டனர். சத்திய மூர்த்திக்கு வயது ஐம்பத்து எட்டு. 65 வயது வரை நீதிபதி பதவியில் இருக்கலாம் என்பது சட்டம். அதனால் அவருக்கு இன்னும் ஏழு வருட சர்வீஸ் இருக்கிறது.

    சத்திய மூர்த்தியை நீதிபதியாக நியமித்ததை எதிர்த்து மற்றொரு வக்கீலான சங்கரன் கோர்ட்டில் ஸ்டே வாங்க முயற்சி செய்தார். கிடைக்கவில்லை. சத்தியமூர்த்தியின் பழைய ரெக்கார்டுகள் அப்பழுக்கில்லாமல் இருந்தன. அதனால் சங்கரனால்  ஒன்றும் செய்ய முடியவில்லை. இருந்தாலும் மனதுக்குள் கருவிக் கொண்டிருந்தார்.

    சத்திய மூர்த்தியின் குடும்பத்துக்கென்று ஒரு பெரிய பங்களா ஒதுக்கப் பட்டது. சென்னையில் அமைச்சர்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் இருந்த அந்த மாளிகை மிகவும் பெரியது. ஏழோ  எட்டோ அறைகள் இருந்தன. போதாததற்கு விசாலமான சாப்பாட்டுக் கூடம் அதற்கு அளவில் சற்றே குறைந்த சமையலறை மாடியில் வேறு அறைகள் என்று வீடு பிரம்மாண்டமாக இருந்தது. இது போதாதென்று தோட்டம் வேறு இருந்தது. மா  கொய்யா  மாதுளை போன்ற பழ மரங்கள் நிறைந்து ஒரு வனம் போலக் காட்சியளித்தது. இவற்றை எல்லாம் பராமரிக்க கூப்பிட்ட குரலுக்கு வேலையாட்கள் வேறு. கிட்டத்தட்ட ஒரு அரசனைப் போன்ற அந்தஸ்து. பின்னே நீதிபதி என்றால் சும்மாவா? நாட்டில் தூண்களில் ஒன்றல்லவா அவர்?

    சத்தியமூர்த்தியும்  அவர் மனைவியுமாக இரண்டே பேர் அத்தனை பெரிய வீட்டில் குடியேறினர். அவர்கள் மகன்கள் இருவரும் வெளி நாட்டில் இருந்ததால் அவர்கள் வரவில்லை. இது அனைவருக்கும் தெரியும். ஆனால் சத்திய மூர்த்தியின் தாய் தந்தையர் வராதது அனைவரின் கேள்விக்கும்  விமரிசனத்துக்கும் ஆளானது. இது குறித்து நேரிடையாக யாரும் நீதிபதியிடம் கேட்கவில்லை. கேட்கும் தைரியமும் இல்லை. சனி ஞாயிற்றுக் கிழமைகளில்  நீதிபதியும்  அவர் மனைவியும் அவர்களுடைய சொந்த வீட்டிற்குப் போய்விடுவார்கள். அந்த இரண்டு நாளும் சத்தியமூர்த்தி தான் ஒரு ஜட்ஜ் என்பதையே மறந்து சாதாரணமாகக்  காய் வாங்குவது  ஒட்டடை அடிப்பது  சோஃபா கவர் மாற்றுவது போன்ற வேலைகளைச் செய்வார். சாயங்காலம் ஆனால் பக்கத்தில் இருக்கும் பெசண்ட் நகர் பீச்சுக்கு பெற்றோர்களோடு போவார். ஞாயிறன்று முழு ஓய்வு. மீண்டும் திங்கட் கிழமை நீதிபதிகள் குடியிருப்புக்கு வந்துவிடுவார்கள்.ஒரு வாரம் கூட இந்த நியதி தவறியதில்லை.

    நீதிபதியின் மனைவியின் கை வண்ணத்தில் தோட்டம் அவர்கள் தோட்டம் மிளிர்ந்தது. வெற்றிலை  மிளகு போன்ற அபூர்வக்கொடிகள் இடம் பெற்றன. அதோடு பூசணி வெள்ளரி போன்றவையும் பயிரிடப் பட்டு  அவர்கள் தேவை போக வேலைக்காரர்கள் அவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். கத்தரி  வெண்டைச் செடிகளும் போடப்பட்டுக் காய்த்துக் குலுங்கின. அந்த அம்மையார் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால் தானே முன்னின்று தோட்ட வேலைகள் எல்லாவற்றையும் மேற்பார்வை பார்த்தார்.

    கொஞ்சம் கொஞ்சமாக ஜட்ஜ் தன்னுடைய தாய் தந்தையரை தன்னுடன் வைத்துக்கொள்ளவில்லை என்ற செய்தி பரவியது. அது வக்கீல் சங்கரன் காதிலும் விழுந்தது. இந்தச் செய்தியை அவர் தனக்கு சாதகமாக எப்படி உபயோகித்துக் கொள்ளலாம் என்று சிந்தித்ததில்  அவர் மனதில் ஒரு யோசனை உதித்தது. அதைச் செயலாக்க வேண்டி நீதிபதி சத்தியமூர்த்தியின் பழைய வீட்டைத் தேடி ஒரு செவ்வாய்க் கிழமை சென்றார்.

    சங்கரன் எதிர்பார்த்தபடியே வயாதான தம்பதிகள் தனியாக இருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் சரியான படிக்காத கிராமத்து ஆட்கள் என்பது தெரிந்து போனது அவருக்கு. ‘இவர்களைத் தன் பெற்றோர் என்று சொல்லக் கூச்சப்பட்டுத்தான் சத்தியமூர்ததி அவர்ளை உடன் அழைத்துச் செல்ல வில்லை போலும்’ என்று நினைத்துக் கொண்டார் சங்கரன். தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தார். அவர்கள் வந்தவரை உபசரித்து  காபி கொடுத்தனர். சங்கரன் மெதுவாக அவர்கள் மன நிலையை அறிய சத்தியமூர்த்தியைப் பற்றிக் கேள்விகள் கேட்டுப் பார்த்தார். அவர்கள் பதில் ஒன்றும் திருப்தி அளிப்பதாக இல்லை. இருந்தும் முயற்சியைத் தளர விடாத வக்கீல் இ இப்படித் தனியாக வாழ்வதன் கொடுமையைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

    ‘இத்தனை வசதிகள் இருந்தும்  மகனோடு இருக்க முடியலியேன்னு உங்களுக்கு ஏக்கமா இருக்கும் இல்லேம்மா?’

    ‘ஆமாம்ப்பா! என்ன பண்ண? பல்லக் கடிச்சுப் பொறுத்துக்கத் தான் வேணும். மகன் பெரிய பதவியிலே இருக்காம்லா?’

    ‘ஏன் நீங்க கூடப் போயி இருந்தா என்ன?’

    ‘அது சரியா வராதுல்லா! எங்களுக்கு இங்ஙனக்குள்ள பழகிட்டு. அதான் நாங்க அங்கே போகல’ என்றார்கள்.

    ‘மகனை விட்டுக் கொடுக்கிறார்களா பார்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவர் மீண்டும் தொடர்ந்தார். ‘அம்மா! உங்களை மாதிரி வயசான பெத்தவங்களை பையன் கவனிக்கல்லேன்னா  மகனுக்குத் தண்டனை வாங்கிக் குடுக்கலாம்னு சட்டம் வந்துடுச்சு தெரியுமா? நீங்க ஒண்ணும் பண்ண வேணாம் ! நான் சொல்ற இடத்துல கையெழுத்து மட்டும் போட்டா போதும். மிச்சத்தை நான் பாத்துக்கறேன் ‘ என்றார்.

    ‘யாரு நீ? எதுக்கு எங்களை என் மகனுக்கு எதிராத் தூண்டி விடுதே? உனக்கு என்னலே வேணும்? ‘என்று பெரியவர் கேட்டார் என்றால்

    ‘வாரியலால சாத்துங்க சொல்லுதேன். என்ன தைரியம் இருந்தா நம்ம வீட்டுப் படியேறி வந்து இப்பிடிப் பேசுவான்? நாசமத்துப் போறவனே! போ வெளியே’ என்று கடுமையாகத் திட்டி சங்கரனை வீட்டை விட்டு விரட்டாத குறையாக வெளியேற்றினார்கள். வெளியில் யாருக்கும் இந்த அவமானம் தெரியாமல் மறைத்து விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு அங்கிருந்து அசடு வழியத் திரும்பினார் சங்கரன்.

    இது நடந்து சில நாட்களுக்கெல்லாம் நீதிபதி சத்தியமூர்த்தி  சங்கரனைக் கூப்பிட்டு அனுப்பினார். அவருக்கு உள்ளூர உதறல். தான் செய்தது நீதிபதிக்குத் தெரிந்து விட்டதோவென்று கவலைப் பட்டார். அப்படித் தெரிந்தால் நீதிபதி என்ன செய்வார்? அவர் நினைத்தால் தன்னைப் பழி வாங்க வழியா இல்லை? ஐயையோ அவசரப்பட்டுத் தவறு செய்து விட்டோமேயென்று பயந்து கொண்டு இருந்தார் சங்கரன். கூப்பிட்டனுப்பியும் போகவில்லை என்றால் அது மரியாதை இல்லை என்று நினைத்து பலியாடு போல அவருடைய அறைக்குச் சென்றார்.

    சங்கரன் எதிர்பார்த்துச் சென்றது போல நீதிபதி அவ்வளவு கோபமாக இல்லை. சாதாரணமாகப் பேசி டீ கொடுத்து உபசரித்தார். சங்கரனுக்குத்தான் முள் மேல் உட்கார்ந்திருந்தது போல இருந்தது. சற்று நேரம் உலக விஷயங்கள் எல்லாம் பேசிய பிறகு விஷயத்துக்கு வந்தார் நீதிபதி.

    ‘ஏன் சங்கரன் நீங்க எங்க வீட்டுக்குப் போயிருந்தீங்களாமே? ‘

    ‘ஆமாம் சார்’

    ‘ஏன் சார் ? எங்க அம்மா அப்பாவை எனக்கு எதிராத் தூண்டி விட்டதாகக் கேள்விப்பட்டேனே உண்மையா அது?’

    இதற்கு சங்கரன் என்ன பதில் சொல்லுவார்? மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டு தொடர்ந்தார் நீதிபதி. ‘உங்களுக்கு இந்தப் போஸ்ட் கிடைக்கல்லேன்னு நீங்க கோபத்துல ஸ்டே வாங்க முயற்சி பண்ணுனீங்க ! அது சரி. ஏன்னா அது நேரிடையான அணுகுமுறை. அதை விட்டுட்டு வீட்டுல வயசானவங்க கிட்ட போயி இல்லாத்தையும் பொல்லாததையும் சொல்றது சுத்தக் கோழைத்தனம் சார். அது ஏன் உங்களுக்குப் புரியல்லே?’

    இதற்கும் மௌனம் சாதித்தார் வக்கீல்.

    ‘நான் ஏன் எங்க அப்பா அம்மாவை கூட வெச்சுக்கல்லேங்கறதுக்கு உங்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இருந்தாலும் சொல்றேன் ஏன்னா மத்தவங்களும் நீங்க செஞ்ச மாதிரி முயற்சி செய்யக் கூடாது. எங்கப்பா அம்மாவை யாரும் தொந்தரவு பண்ணி அவங்களுக்கு மனசுக் கஷ்டம் குடுக்கக் கூடாது அதனால சொல்றேன்.’ என்றவர் ஒரு வாய்த் தண்ணீர் குடித்து விட்டுத் தொடர்ந்தார்.’ கவர்ன்மெண்ட் சார்பா எனக்குப் பெரிய வீடு  வேலைக்காரங்க எல்லாம் குடுத்திருக்காங்கன்னு நீங்க பொறாமைப் படறீங்க இல்லே! அது தான் காரணம் நான் என் பேரண்ஸை கூட வெச்சிக்காததுக்கு. ‘

    வக்கீல் விழித்தார்.

    ‘புரியும்படியாவே சொல்றேன். நான் வக்கீலா இருந்தப்போ என் சக்திக்குத் தகுந்த மாதிரி திருவான்மியூர் தாண்டி 900 சதுர அடியில ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கினேன். அங்க தான் நாங்க எல்லாரும் இருந்தோம். இப்போ புதுசா பெரிய வீடு  வேலை ஆளுங்கன்னு எல்லா வசதியும் இருக்கு. இதெல்லாம் அவங்களுக்குப் பழகிடுச்சுன்னா  நான் ஏழு வருஷம் கழிச்சு ரிடயர் ஆகும் போது திரும்ப அந்த சின்ன வீட்டுல அட்ஜஸ்ட் பண்ணிக்க ரொம்பக் கஷ்டப் படுவாங்க. அது மட்டுமில்லே  இத்தனை வேலை ஆட்களையும் அவங்களுக்கு என்னால குடுக்க முடியாது. அப்போ அவங்க மனசு ரொம்ப வருத்தப்படும். வயசான காலத்துல அவங்க மனசு அதையெல்லாம் நெனச்சு ஏக்கப் படக் கூடாதுன்னும் இ எங்களுக்கும் பழைய பழக்கம் விட்டுப் போகக் கூடாதுங்கறதாலயும் தான் நான் அவங்களை என் பழைய வீட்டுலேயே ஒரு குறையும் இல்லாமே வெச்சிருக்கேனே தவிர வேற எந்தக் காரணமும் இல்லை.’ என்று நீண்ட தன் பிரசங்கத்தை முடித்தார்.

    மிகவும் உயர்ந்து விட்ட அந்த நீதிபதியின் எதிரில் கூனிக் குறுகியபடி ஒன்றும் பேசாமல் வெளியேறினார் சங்கரன்.

     

    Share
  • தாசரி

    நாகை வை. ராமஸ்வாமி

    ‘ஹாய் ரியாஸ் ஹௌ ஆர் யூ? வாட்ஸ் குகிங்?’

    ‘ஹல்லோ சந்திரன் வாங்க குகிங் நதிங்?’

    ‘அட அந்த ரியல் குகிங் இல்லப்பா என்ன விசேஷம்னு கேட்டேன்?’

    ‘அது தெரியுமில்ல நானும் சும்மா தான் சொன்னேன் ஒண்ணும் விசேஷம் இல்ல. ஆமா இன்னிக்கு ஹாலிடே தானே ஜாலிடேயா கொண்டாடுவோமே?’

    ‘அந்த ஐடியாவோட தாம்ப்பா நான் வந்தேன் தனியா சமைச்சு சமைச்சு போரடிச்சு போச்சு வெளிலே சாப்பிடுவோமா?’

    ‘ஓ சாப்பிடலாமே ஒய் நாட் கால் தாமஸ் டூ?’

    ‘யா ஐ வாஸ் ஆல்ஸோ தின்கிங் அபவுட் ஹிம்’

    ‘ஓகே கால் ஹிம்’

    ‘ஹலோ தாமஸ் ரியாஸ் ஹியர்’

    ஹை ப்ரதர் சர்ப்ரைசிங் அட் திஸ் அவர் ஆஃப் ஹாலிடே சொல்லுங்க’

    ‘ஒண்ணுமில்ல ப்ரதர் நானும் சந்திரனும் சந்திச்சோம். இன்னக்கு ஹாலிடேயை ஜாலிடேயாக்கலாமுன்னு யோசிச்சோம். என்ன ரெடியா? வீ வில் எஞ்சாய் டுடே நாளைக்கு கட் அடிப்போம். தென் சாடர்டே ரூ சன்டே. ரெஸ்ட் அண்ட் வாஷிங் எட்செட்ரா.’

    ‘யா லவ்லி ஐடியா. எங்க வரணும் எப்ப வரணும் டெல் மீ வில் பீ தேர் பிஃபோர் யூ’

    இந்தியாவின் வெவ்வேறு மாநிலத்திலுள்ளவர்களானாலும் வேறு வேறு மதத்தவர்களானாலும் தாமஸ் சந்திரன் ரியாஸ் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். வெவ்வேறு கம்பெனிகளின் வேலை
    நிமித்தம் மும்பையிலிருந்து ஒரே நாளில் ஒரே விமானத்தில் அமெரிக்காவின் ‘சான் ஃப்ரான்ஸில்கோ’ விமான தளத்தில் இறங்கிய பின் மிக நெருங்கிய நண்பர்கள்.

    அமெரிக்காவில் ‘ஸான் ஹோஸே (ளுயn துழளந)’யில் வாசம். ஆறு மாதங்களே ஆனாலும் அடிக்கடி சந்திப்பு ஊர் சுற்றல் அரட்டை சாப்பாடு.

    மாதச் சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பில் ஐந்து லட்சம். இந்த ஆரம்ப நிலை வேலையே இந்தியாவிலிருந்தால் ரூபாய் ஒன்றிலிருந்து ஒன்றரை லட்சம். அமெரிக்காவில் மேக்டோனால்ட் போன்ற இடங்களில் ஒரு கப் காபி 300 ரூபாய். அதுவே இந்தியாவில் ஒரு சாதாராண ஹோட்டலில் முப்பது.

    அவர்கள் அப்பா காலத்தில் அமெரிக்காவில் காபி 150 ரூபாயும் இந்தியாவில் ஐந்தாகவும் இருந்தது. அதற்கேற்ற சம்பளம் விலைவாசி. எதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மலைப்பாகத்தான் இருக்கும்.

    ஒரு டாக்சி பிடித்து ஒரு இந்திய ஹோட்டலைக் கண்டுபிடித்து மூவருக்கும் பொதுவான வட இந்திய பஞ்சாபி வெஜ் ரோடி சாப்பாடு ஒரு பிடி பிடித்தார்கள்.

    பிறகு அங்கிருந்து கோல்டன் கேட் ஃபிஷர்மேன் வார்ஃப் முதலிய இடங்களுக்குச் சென்றுவிட்டு அன்று இரவு எல்லோருமே சந்திரன் ரூமிற்குச் சென்றுவிட்டார்கள்.

    எல்லோரும் டயர்டாக இருந்தாலும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததால் தூக்கம் வரவில்லை.

    ‘என்ன தாமஸ் ஆறு மாதமாக பழகி வருகிறோம் இன்னும் நாம் ஒருவருக்கொருவர் முழுவதுமாக தெரிந்து கொள்ளவில்லையே?’ என்றான் ரியாஸ்.

    ஒவ்வொருவராக அவர்களைப்பற்றி சொல்லவேண்டியது என்று தீர்மானித்தார்கள்.

    ‘முதலில் நீங்க சொல்லுங்க சந்திரன். வேர் ஆர் யூ ஃப்ரம்இ அபவுட் யுர் ஃபமிலி’

    ‘என்னத்த….சொல்ல?’

    ‘நிறைய தமிழ் படம் பார்ப்பீர்களா? என்னத்த கன்னயா மாதிரி இழுக்கிறீங்க?’

    ‘நாட் லைக் தட். எப்படி பிகின் பண்ணறது?…..ம்?.. ஓகே. ஐ வில் ஸ்டார்ட். ஐ வாஸ் பார்ன் ரூ ப்ராட் அப் இன் மும்பை. மை ஃபாதர் வாஸ் ஆல்சோ எ ஸாஃப்ட்வேர் எஞ்ஜினீர் ஆஃப் தோஸ் டேஸ் அண்ட் வீ ஆர் ஆல் மிடில் க்ளாஸ். ரென்டல் அகாமொடேஷன் தான் சொந்த வீடு கிடையாது.’ கொஞ்சம் அப்செட் ஆனான் சந்திரன்.

    ‘கமான் டியர். நன் ஆஃப் அஸ் ஆர் ஃப்ரம் ஹெவன். ப்ளீஸ் கன்டின்யூ.’ என்றார்கள் மற்ற இருவரும்.

    ‘எங்க கிராண்ட் டாட் தான் முதலில் மும்பை வந்தார் சம்வேர் இன் 1960. அவங்க அப்பா மை கிரேட் கிராண்ட் டாட் எல்லாம் மதுரை பக்கம் ஒரு கிராமம்.’

    ‘ஈஸ் இட்?’

    ‘யெஸ். மை கிராண்ட் டாட் லைஃப்ல ரொம்ப ஃபேமிலிக்காக சேக்ரிஃபைஸ் பண்ணி ஸஃபர் பண்ணியிருக்காங்கன்னு மை டாட் யூஸ்டு டெல்.’

    ‘ஒய்?’

    ‘அவங்க ஃபேமிலி ரொம்ப பெரிசு வித் லெஸ் இன்கம். அதனால தான் கிராண்ட் டேட் மும்பைக்கு வந்தாராம். அந்த காலத்து எஸ்.எஸ்.எல்.சி. மட்டும் 10 டைப்ரைட்டிங் ரூ ஷார்ட்ஹேண்ட்’

    ‘வாட் ஈஸ் திஸ் ஷார்ட்ஹேண்ட்?’

    ‘எ மெதேட் ஆஃப் ரைடிங் ஸ்போகன் வேர்ட்ஸ் இன் ஷார்ட் சைன் ஃபார்ம். அப்போ அவங்களுக்கு நல்ல டிமாண்ட்..’

    ‘ஓ நல்ல சேலரி கிடைத்திருக்கும்?’

    ‘யூ வில் நாட் பிலீவ். ஸ்டார்ட்டிங் சேலரி ஜஸ்ட் ருபீஸ் 150.’

    ‘வாட்? பெர் டே?’

    ‘நோ யார் மந்த்லி. அண்ட் அவங்க சிலவு போக மாதம் ரூபாய் ஐம்பது ஊருக்கு அனுப்பிடுவாங்களாம்.’

    ‘கிரேட். தென்?’

    தென் ஹி காட் மேரீட் அண்ட் மை ஃபாதர் வாஸ் பார்ன். அவங்க எஞ்னீயிரிங் படித்து யுஎஸ்ல ஸேன்ஹோஸேயில் ஒன் அண்ட் ஹாஃப் யியர்ஸ் இருந்தாங்க. அப்பத்தான் அவங்க மேரேஜ் ஃபிக்ஸ் ஆச்சு. அதாவது இங்கே ட்வின் டவர்ஸ் தாக்கப்பட்டதே அப்போ.’

    ‘ஓ மை காட். வேர் வாஸ் ஹி அட் தட் டைம்.?

    ‘வெரி ஃபார். நோ ப்ராப்ளம். அதுக்கப்புறம் இந்தியாவுக்கு திரும்பிவிட்டார். அப்புறம் அவருக்கு கல்யாணம். பட் ஹீ குட் நாட் ரிடர்ன் டு யு எஸ்.’

    ‘தென் ஐ வாஸ் பார்ன் என்னை நல்லா படிக்க வச்சார். போஸ்ட் கிராஜுவேட் இன் கம்ப்யூட்டர் டெக்னாலஜி பிஸைட்ஸ் சம் அடிஷனல் க்வாலிபிகேஷன் இன் மேனேஜ்மெனட் அண்ட் ஹியர் ஐ ஆம் வித் யூ ஆல். மை அம்பிஷன் ஈஸ் டு மேக் மை பேரன்ட்ஸ் ஹேப்பி ஹெல்தி அண்ட் கம்ஃபர்டபிள். தட்ஸ் ஆல் அபவுட் மீ. நௌ ரியாஸ் யூ ஸ்டார்ட்.’

    ‘வொன்டர்ஃபுல் அண்ட் இன்டரஸ்டிங். தாமஸ் நீங்க சொல்லுங்க. தென் ஐ வில்.’

    ‘ஓகே.. கொஞ்சம் வாக் போய்விட்டு வரலாம். வெதர் நல்லா இருக்கே. தூக்கம் வரலே. நாளைக்கு எல்லோரும் ப்ரேக் அடிச்சிட்டு ரெஸ்ட் எடுப்போம்.’

    ‘தட்ஸ் நைஸ். இப்போ வாக் போய்க்கிட்டே பேசுவோமே. தாமஸ் சொல்லுங்க.’

    ‘யா நாங்க டெல்லியிலே இருக்கோம். எங்க மதர் கிரிஸ்டியன் பட் டாட் ஹிந்து ஃப்ரம் மும்பை. மை மாம் இன்ஸிஸ்டட் தட் மை டாட் ஆல்ஸோ ஷுட் பிகம் எ கிரிஸ்டியன் பிஃபோர் மேரேஜ்னு கண்டிஷன் போட்டாங்க. ஸோ ஹீ பிகேம் ஜார்ஜ் ஃப்ரம் ஜானகிராம்.’

    ‘அப்படியா?’

    ‘யா டெல்லி ஈஸ் லவ்லி நாட் லைக் தோஸ் டைம்ஸ். எல்லாம் இன்டர் நேஷனல் ஸ்டான்டர்டு. மை டாட் ஒரு ஸ்மால் பிசினஸ்மேன்.’

    ‘ஓ ஆண்டர்ப்ரனர்?’

    ‘யெஸ். அப்பர் மிடில் க்ளாஸ். நல்லா படிக்க வெச்சாங்க. எனக்குப் பிடித்த டெக்னாலஜி. வேலை கிடைச்சுது. வந்துட்டேன். அவ்ளோதான்.’

    ‘ஹேய் வாட் ஈஸ் திஸ்? ஸோ சிம்பிள். உங்களுக்கு எந்த ஊர்?’

    ‘ஓ மை டாட் டோல்டு மீ தட் ஹிஸ் டாட் வாஸ் ஃப்ரம் டமில்நாட்.’

    ‘விச் ப்ளேஸ் இன் டமில் நாட்?’

    ‘மதுரைன்னு தான் சொன்னாங்க.’

    ‘அட என்ன ஒற்றுமை? ரியாஸ் நீங்க கூட சொன்னீங்க இல்ல? ஒங்க கிராண்ட்ஃபாதர் வாஸ் ஃப்ரம் மதுரை?’

    ‘யெஸ். யூ நோ வீ ஆர் கன்வர்டட் முஸ்லிம்ஸ். எங்க மதர் ஹிந்து. பட் எங்க ஃபாதர் முஸ்லிம்.

    ‘அவங்களும் மும்பையிலிருந்துதான் வந்தாங்க. சண்டிகர்ல செட்டில் ஆகிட்டாங்க.’

    ‘ஃபாதர் என்ன செய்றாங்க?’

    ‘லாயர்.’

    ‘நிறைய நடந்துட்டோம். ரூமுக்குப் போவோமா? வீ வில் டேக் சம் ஸ்லீப். நாளைக்குத் தான் ப்ரேக் அடிக்கப் போறோமே. பாக்கி நாளைக்குப் பேசலாம்.’

    ‘தட்ஸ் பெட்டர். கொஞ்சம் டயர்டாகத்தான் இருக்கு.’

    அடுத்த நாள் அவர்கள் எல்லோரும் சூரியனைப் பார்க்கும்பொழுது சூரியன் உச்சிக்கு வந்தாகிவிட்டது.

    குளித்து காபி போட்டு குடித்துவிட்டு வெளியே சாப்பிடக் கிளம்பும் நேரம் சந்திரனுக்கு இந்தியாவிலிருந்து செல் ஃபோனில் அழைப்பு வந்தது.

    ‘ஹலோ சந்திராஇ கண்ணா எப்படிப்பா இருக்கே? நீ இல்லாம ரொம்ப லைஃப்லெஸ்ஸா இருக்குப்பா. நல்லா சாப்பிடுகிறாயா? உடம்பு நல்லா இருக்கா?’

    ‘அப்பா நீங்க எப்படி இருக்கீங்க? அம்மா எப்படி இருக்காங்க? ரெண்டு பேரும் ‘செக்கப்’ போனீங்களா?’

    ‘எக்சலன்ட். ஒன்லி திங் ஈஸ் வீ மிஸ் யூ டூ மச்.’

    ‘அப்பா ஒங்க ரெண்டு பேரையும் நான் த்ரீ மச் மிஸ் பண்றேன்.’

    ‘டேய் என்ன கடி ஜோக்கா? சரி ஃப்ரண்ட்ஸ் எல்லாம் பிடிச்சிட்டியா?’

    ‘யெஸ். அப்பா நானே சொல்லணும்னு இருந்தேன். எனக்கு பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் ரெண்டு. ப்யூட்டி ஈஸ் அவங்க ஒருத்தர் தமிழ் கிரிஸ்டியன் இன்னொருத்தர் தமிழ் முஸ்லிம் பட் அவங்க கிராண்ட் பேரண்ட்ஸ் எல்லாம் மதுரை தான்.’

    ‘அப்படியா? இன்டரஸ்டிங்.’

    ‘அப்புறம் ஒரிஜினலி அவங்க ஹிந்துக்கள்.’

    ‘ஈஸ் இட்?. ஓகே ஜாக்கிரதையா இருப்பா. அம்மா தூங்கியாச்சு’

    ‘ஓகே. அம்மாவை எழுப்ப வேண்டாம். என்னுடைய வந்தனம் சொல்லிட்டு கவலைப்படாமல் இருக்கச் சொல்லுங்க. டேக் கேர்.’

    மற்ற இரு நண்பர்களும் அவர்கள் பெற்றோர்களுடன் பேசி நண்பர்கள் பற்றி சொன்னார்கள்.

    எல்லோருடைய பெற்றோர்களுக்கும் நண்பர்களின் தாத்தா பாட்டி மதுரை என்று கேள்விப்பட்டதும் அவர்களைப் பற்றி விபரம் சேகரிக்கச் சொன்னார்கள்.

    முதலில் ரியாஸ் அவன் அம்மாவிடம் பேசினான். ‘அமீ எப்படி இருக்கீங்க’

    ‘ரியாஸ் ரியாஸ்…’

    ‘அமீ ஏன் பேச மாட்டேங்கறீங்க? ரோத்தீ ஹை? (அழுகிறீர்களா?) நல்லா இருக்கீங்களா? வாப்பா எப்படி இருக்காங்க?’

    ‘நஹீ பேட்டா ஒன்ன நினைச்சு கண் கலங்கிட்டேன். இன் ஷா அல்லா நல்லா இருக்கோம். நீ எப்படி இருக்கே? சாப்பாடு கிடைக்குதா? வேலை பிடிச்சிருக்கா? நேத்து தானே பேசினே? உடம்பு சுகமில்லையா?’

    ‘நஹீ அமீ. ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும். இங்க எனக்கு பெஸ்ட் தோஸ்த் கிடைச்சிருக்காங்க. தமிழ்காரங்க அவங்க பேரண்ட்ஸ் கூட மும்பையிலிருந்தவங்க. ஆனால் அவங்க தாத்தா பாட்டி மதுரை பக்கம் ஏதோ குள்ளிப் பள்ளம்னு சொன்னாங்க. நம்ம தாத்தா ஊரும் மதுரை பக்கம்னு நீங்க சொல்லியிருக்கிங்களே?’

    ‘ஹாங் பேட்டா. அது குள்ளிப் பள்ளம் இல்ல முள்ளிப் பள்ளம். ஆமா. எதுக்கு இந்த கபர் (விஷயம்) எல்லாம் கேக்கிற? அதெல்லாம் வாணாம்ப்பா நானே மறந்துகிட்டிருக்கேன்.’

    ‘சும்மா சொல்லுங்க அமீ. எங்க தோஸ்த்துங்களுக்கு தெரிஞ்சிருக்கலாமில்ல?’

    ‘அவிங்களுக்கு எப்படிப்பா தெரியும்? தாத்தா பாட்டி இறந்து 35 40 வருஷம் ஆகிப்போச்சே?’

    ‘அவங்க அப்பா அம்மாவுக்குத் தெரிந்திருக்குமில்ல?’

    ‘டீக் ஹை டீக் ஹை. அவங்க பேர் சங்கரன் கௌரி.’

    ‘தேங்க் யூ அமீ. அப்புறம் எங்க மாமா பேரும் சொல்லுங்க.’

    ‘அதெல்லாம் வாணாம்ப்பா எங்க அண்ணன் ரெண்டு பேரும் என்னய மறந்துட்டாங்கப்பா’ என்ற போது அம்மாவின் துயரம் தெரிந்தது ரியாஸுக்கு.

    ‘நஹீ தோ சோட் தீஜியே அமீ (வேண்டாமென்றால் விட்டு விடுங்கள்). நீங்க வருத்தப் படாதீங்க.’

    ‘நஹீ பேட்டா பெரிய மாமா பேர் சுந்தரம் சிறியவர் ஜானகிராம்.’

    ‘பஹுத் அச்சா அமீ. இது போதும். நான் அப்புறம் பேசுகிறேன். வாப்பாகிட்ட சொல்லுங்க சப் டீக் சல்தா ஹை. குதா ஹாஃபிஸ்’

    ‘ஓகே பேட்டா நல்லா இரு ஜாக்கிரதையா இரு. குதா ஹாஃபிஸ்’

    இந்த விபரங்களைக் கேட்ட தாமசுக்கு ஏதோ பொறி தட்டினாற் போல் இருந்தது. ஏனென்றால் அவன் அப்பா கிறிஸ்தவராக மாறுவதற்கு முன் அவர் பெயர் ஜானகிராம்.

    உடனே அவன் அப்பாவுடன் தொடர்பு கொண்டு விபரங்களைச் சொன்னவுடன் அவருக்கு அதிர்ச்சியான மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் அவரது தங்கை தான் ரியாஸின் அம்மா.

    சந்திரனும் அவன் அம்மாவிடம் பேசியதில் அவன் அப்பாதான் ரியாஸின் பெரிய மாமா சுந்தரம் என்பதும் தெரிந்தது.

    விபரங்கள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்து பெற்றோர்களிடம் தெரிவித்ததும் தான் ஆச்சரியம் காத்திருந்தது. ஒரே தாத்தா பாட்டியின் பேரர்கள் தான் நண்பர்கள் மூவரும் என்று தெரிந்ததும் வியப்பும் மகிழ்ச்சியும் பொங்கின.

    சகோதர் இருவரும் சகோதரி ஒருவரும் திருமணத்திற்குப் பின் மதத்தால் வேறுபட்டதால் பேச்சு வார்த்தை அறுந்தது. உறவு முறிந்தது. இழந்த உறவு அவர்களின் குழந்தைகளால் ஒன்றாகியது.

    அதைக் கொண்டாட மூவரின் பெற்றோர்களும் அமெரிக்காவுக்கு வரவழைக்கப்பட்டனர். எல்லோருக்கும் உலகம் மிகச் சிறியது அதில் வாழும் காலமோ கொஞ்சமே அதை ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது

    இளமைப் பிராயத்தில் பிரிந்து சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின் முதுமையைத் தொடும் வயதில் சந்தித்த, அந்த ரத்த பாச பழுத்த இலைகள் (மலர்கள் என்று சொல்லலாம் என்றால் வயதானவர்களாயிற்றே) கண்கள் குளமாகி வார்த்தைகள் குளறி, நெஞ்சங்கள் விம்மின. பிரிந்தவர் கூடினால் பொங்கும் மகிழ்ச்சி வெள்ளம் அங்கும் பெருகியது.

    50 ஆண்டுகளுக்கு முன் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெற்றோர்களுக்குத் தெரிந்தும் தெரியாமலும் ஒப்புதலுடனும் ஒப்புதல் இல்லாமலும் காதல் கலப்புத் திருமணங்கள் நடக்கத்தொடங்கிய காலம்.

    காலப்போக்கின் கட்டாயத்தினாலும் சமூக நிர்பந்த்தத்தினாலும் சினிமா தொலைக்காட்சி ஊடகங்களின் தாக்கத்தினாலும் இம்மாதிரி நிகழ்வுகளை பல பெற்றோர்கள் சங்கடத்துடனும் சிலர் சந்தோஷத்துடனும் ஏற்றுக்கொள்ளும் கட்டாய நிலை உருவாகிவிட்டது.

    இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பின் இந்நிலை இன்னும் மாறுதல் அடையக் கூடும். சாதி மத அடையாளம் காட்ட முடியாத அளவுக்கு கலப்புத் திருமணங்கள் பெருகிவிடுமாதலால் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரே சாதி மத வகுப்பைச் சேர்ந்தவர்களுக்குள் (அப்படி எங்காவது இருந்தால்) திருமணங்கள் நடைபெற குறைந்த பக்ஷ வாய்ப்புக்கள் மட்டுமே இருக்கும்.

    கலப்பு காதல் திருமணங்கள் ஏறத்தாழ ஒவ்வொரு குடும்பத்திலும் ஏன் சாதி சம்பிரதாயத்தில் ஊறி வெளியே வர இயலாத குடும்பங்களிலும் கூட சகஜமாகி விடும்.

    ஆனால் இந்நிலை வருங்கால சந்ததியினரின் நன்மைக்கா இல்லையா என்பதை காலம் தான் சொல்லவேண்டும். மதச் சார்பில்லா மனிதத்தை நேசிப்பவர்கள் நன்மையே என்று தான் வாதாடுவார்கள்.

    Share
  • தாமரைகளே !…….தளர வேண்டாம்

    செழியன்

    பருவ குளத்தில்
    பூத்திருக்கும்
    இந்த தாமரையை ….
    பார்த்து  ..பார்த்து
    செல்கின்றனர் …பறிக்காமலேயே
    வறுமை  சேற்றில்
    அது இருக்கிறதாம் .
    வரதட்சணை  பாலம்
    இருந்தால்தான்
    வருவார்களாம்  அதனிடம் .
    தாமரைகளே ! தளரவேண்டாம் .
    உம்மை பறிக்கும்
    காலம் தொலைவில் இல்லை .
    பறிக்காமலேயே ,,
    உங்களை  பார்த்து கொண்டிருக்க
    ஆண்கள்  ஒன்றும்
    உங்களை  போல
    பொறுமைசாலிகள் அல்ல .
     
    படத்திற்கு நன்றி

    http://www.naturecultures.com/0020.php

    Share
  • பாடமாய்…

     
    செண்பக ஜெகதீசன்

    நல்ல பாடங்கள்
    நமக்குக் கிடைப்பது மோசமான
    நேரங்களில்தான்..

    அடிமேல் அடிபடும் தங்கம்தான்
    ஆபரணமாகிறது
    அழகாய்ப் பெண்ணுக்கு..

    சிதைக்கும் சிற்றுளியால்தான்
    உதிக்கிறது
    உயர்ந்த சிற்பம்…!

    எத்தனை அடிவாங்கினாலும்
    ஏன் திருந்தவில்லை
    மனிதன் மட்டும்…!

               
    படத்துக்கு நன்றி

    http://www.colourbox.com/image/a-hammer-and-a-pencil-laying-on-plywood-image-2871064

    Share
  • தென்னாட்டு சாந்தாராம்

    வெங்கட் சாமிநாதன்

    நினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 51)

    தினசரி செய்தித் தாள் வாங்கிப் படிக்கும்  பழக்கம் இங்கு ஹிராகுட் அணைக்கட்டுக்கு வேலைக்கு சேர்ந்து நானே சம்பாதிக்க ஆரம்பித்ததிலிருந்து ஏற்பட்டது. இருந்த போதிலும், அதில் Wanted பகுதியையும் படிக்கும் கால கட்டம் ஒன்று புதிதாக ஆரம்பித்துவிட்டது. வேலை தேடவேண்டும் என்ற முனைப்பு இருந்தாலும் அது எத்தகைய கவலையும் தோய்ந்ததாக என்ன ஆகுமோ, என்னவோ, வேலை கிடைக்குமோ கிடைக்காதோ, கிடைக்காவிட்டால் என்ன செய்வது, பெற்றோருக்கு எப்படி பணம் அனுப்புவது என்ற கவலைகளில் பீடிக்கப்பட்டதாக உணரவே இல்லை. எப்படி நான் அதை ஏதோ சினிமா விளம்பரம் பார்ப்பது போல எவ்வித கலவரமும் இல்லாது வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டேன் என்பது தெரியவில்லை. அதிக நாட்கள் இங்கு இருக்கப் போவதில்லை, ஒரு சில மாதங்கள், அல்லது அதிகம் போனால் ஒரு வருடம் இங்கு காலம் தள்ள முடியும். அதன் பின்? சிக்கல் தான். நிச்சயமின்மை தான். ஆனாலும் எப்படி ஒரு அமைதியான மனத்துடன் அந்த நாட்களில் இருந்தேன் என்பது இப்போது எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஏதோ வீரன், தீரன் என்றும் மனத்திடம் என்றும் எல்லாம் என்னைச் சொல்லிக் கொள்வதற்கும் இல்லை.

    எப்படியோ தெரியவில்லை. எப்போதும்  போல் அமைதியாக, சுற்றியிருப்பவர்கள் எல்லாம் ஒருவர் இருவராக, நாலைந்து பேராக ஊரைக் காலி செய்து கொண்டிருந்த போது, நான் பத்திரிகைகளில் வந்த விளம்பரங்களுக்கு மனு போட்டுக் கொண்டிருந்தேன். முதலில் வந்த அழைப்பு Northern Railway யிலிருந்து.. நேர்காணலுக்கும் பரிட்சைக்கும். கூடவே சம்பல்பூரிலிருந்து அலஹாபாதுக்கு போக வர இலவச ரயில்வே பாஸும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. முதல் தடவையாக இலவசமாக ரயிலில் வெகுதூரம் பிரயாணம் செய்யப் போகிறேன். கூட வேலை சம்பந்தப்பட்ட ஒரு நேர்காணலுக்கும் போகப்போகிறேன். புதிய அனுபவம். யாரும் சிபாரிசு செய்து அல்ல. கூட அழைத்துச் சென்று அல்ல. நானே என் தகுதியில் என் முயற்சியில் ஒரு வேலை தேடிக்கொள்ளப் போகும் முதல் அடிவைப்பு. பெருமை யாக இராதா?

    எப்படிப் போவது? யாருக்கு வழி தெரியும்.? தெரிந்தால் என்ன, தெரியாவிட்டால் தான் என்ன? ரயில்வே பாஸ் இருக்கிறது. இலவசம். எங்கே வேண்டுமானாலும் இறங்கி எந்த வண்டியில் வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம். சம்பல்பூரிலிருந்து ஒரு வழியா, இல்லை நேராகச் செல்லும் வண்டி ஏதுமா? இல்லை. எத்தனை வண்டி ஏறி இறங்கி மாறவேண்டுமோ. இஷ்டம் போல் செய்யலாம். ஆனால் குறித்த தேதிக்கு முன்னால் போய்ச் சேர்ந்து விடவேண்டும்.

    சேர்ந்தேன். எப்படி என்றெல்லாம்  இப்போது நினைவில் இல்லை. அலஹாபாத் ஸ்டேஷனில் இறங்கியதும், அது இரவு நேரம். மணி ஏழரை எட்டு இருக்கும். ஒரு ரிக்‌ஷாக்காரன் ஒரு நல்ல ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லவே, வேறு வழி? சரி என்று ஏறி உட்கார்ந்து அவன் இட்டுச் சென்ற இடத்தில் இறங்கினேன்.

    அது ஹோட்டலாகத் தெரியவில்லை. வளைந்த குறுகிய மாடிப்படி ஏறினால் அறைகள். என் அறைக் கதவு ஒரு மாதிரிதான் இருந்தது. பழங்காலத்துக் கதவு. தாட்பாள் இல்லை. கதவின் மேலே ஒரு சின்ன சங்கிலி. அதை நிலைப்படியின் மேல் சட்டத்தின் வளைவில் கோர்த்து அறையைப் பூட்ட வேண்டும். உள்ளே ஒரு கட்டில். அவ்வளவே. ஒன்றும் சரியாகத் தோன்றவில்லை. இடமும் அதிக நடமாட்டம் உள்ள இடமாகத் தோன்றவில்லை. அப்போது தான் எனக்குச் சற்று, கவலை பயமாக பூதாகரிக்கத் தொடங்கியது. இருப்பதா, இல்லை வேறு இடம் தேடுவதா? வேறு இடம் எங்கே என்று தேடுவது?. இரண்டு நாட்களுக்கு காசும் கொடுத்தாய்விட்டது.  சரி நடப்பது நடக்கட்டும் பார்ப்போம் என்ற ஒரு அசட்டு  தைரியம். உள்ளே பையை வைத்துவிட்டு சாப்பிடப் போனேன். அது ஒன்றும் பெரிய தேடலாக இல்லை. வெளியே பெஞ்ச் மேஜை போட்டு இது தான் பஞ்சாபி ஹோட்டல் என்று விளம்பரம் இல்லாது தன்னைக் காட்டிக்கொள்ளும் ஒன்று. சாப்பிட்டேன். அதில் ஒன்றும் கஷ்டம் இல்லை. பஞ்சாபி உணவு பழகியது. புது இடம். எதாக இருந்தாலும் நன்றாகத் தான் தோன்றும். லாட்ஜுக்குத் திரும்பி வந்து படுத்துக்கொண்டேன்.

    வழியில் சினிமா விளம்பரம்  ஒன்று பார்த்தேன். புதிய படம். ஜனக் ஜனக் பாயல் பாஜே. நல்ல பாட்டுக்கள். நல்ல நடனங்கள் கொண்ட படம். என்று படித்திருக்கிறேன். சாந்தாராம். தாஹேஜ் என்ற பழைய படம் ஒன்று சம்பல்பூர் விஜயலட்சுமி டாக்கீஸில் பார்த்திருக்கிறேன். எரியும் சமூகப் பிரச்சினைகளை கையாள்பவர் என்று புகழ் பாடப்படுபவர். தஹேஜ் என்றால் வரதட்சணை என்று பொருள். அதில் வரதட்சணைக் கொடுமையில் தவிக்கும் பெண்ணின் அவலம் பற்றிய கதை. அதெல்லாம் சரி. ஆனால் ஒரே மெலோட்ராமா. அழுகை. ஸ்டாக் பாத்திரங்கள். ஸ்டாக் சம்பவங்கள். புதிதாக சாந்தாராம் டச் என்று சொல்லப் படுவதைத் தேடினால், அதில் ஒரு காட்சி. ஜயஸ்ரீ, தான் கதாநாயகி. சாந்தாராம் தான் காதலித்து மணம் புரிந்து கொண்ட  மனைவியை கதாநாயகியாக்கிக் கொண்டதில் ஒன்றும் தவறில்லை. பணம் மிச்சம். தன் மனைவிக்கும் புகழ் தேடித்தரும் காரியம் தான். ஆனால் அவளை இடுப்பை வளைத்து தன் செழிப்பான பின்புறங்களை ஆட்டிக்கொண்டே நடக்க வைப்பது தான் பெண்ணின் அழகைக் காட்டுவதற்கான ஒரே வழி என்று சாந்தாராமுக்குப் பட்டிருக்கிறது. ஜயஸ்ரீயின் பின் புற அழகைப் பற்றி ரொம்பவும் பெருமைப் பட்டுக்கொள்கிறவர் சாந்தாராம், அப்பெருமையை உலகறியச் செய்ய்யும் விருப்பம் அவருக்கு  என்றும் தோன்றுகிறது. ஆரம்பக் காட்சிகளில் ஒரு பந்து வீசப்படும். அது முன்னே தன் அழகான பின்புறத்தை ஆட்டிக்கொண்டே போய்க்கொண்டிருக்கும் ஜயஸ்ரீயின் பின்புறத்தை அடித்துத் திரும்பும். ஜயஸ்ரீ திரும்பிப் பார்த்து பொய்க்கோபம் கொள்வாள். இப்படித்தான் இருக்கும் அவர் சமூகப் பிரச்சனைகளைக் கையாளும் பார்வையும் அதற்கு அவர் தேடும் உத்திகளும். இப்போது அவர் இந்திய சினிமாவில் ஒரு பெரிய சகாப்த புருஷர். நம்மூர் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர், மணிரத்தினம் போல. நம்மூர் ஸ்ரீதர் வாழ்வில் ஒரு நாள் நாம் காசியாத்திரை போகும் ஆசை கொண்டிருப்பது போல, அவர் ஒரு நாள் சாந்தாராம் ஷூட்டிங் பார்க்கப் போயிருக்கிறார். “உங்களைத் தென்னாட்டு சாந்தாராம் என்று சொல்கிறார்களாமே? “ என்று சாந்தாராம் கேட்டாராம். “ஸ்ரீதர் அதற்கு சற்று வெட்கப்பட்டு ஆமாம் என்றாராம். எல்லாம் விவரமாக அந்த சைதன்யத்தைப் பற்றி தமிழ் பத்திரிக்கை ஒன்றில் அவரே எழுதியிருக்கிறார். இல்லையெனில் எனக்கு எப்படித் தெரியும். இன்னொரு காட்சி. மேலே ஒரு ஹரிகேன் விளக்கு ஒன்று தொங்கும். மாமனாரும் மருமகளுமோ இல்லை மாமியாரும் மருமகளுமோ ஒரு சூடான விவாதத்தில். மேலே தொங்கும் ஹரிகேன் விளக்கு ஆடும். ஒரு பக்கம் சாயுந்து ஆடும்போது மாமனாரின் முகம் கோபாக்கினியில் சுடர் விட்டு எரியும். விளக்கு மறுபக்க முனைக்கு ஆடிச் செல்லும் போது மறுமகளின் துக்கத்தில் பீறிடும் முகம் காணும். இப்படி அந்த விளக்கு ஒரு மூலைக்கு மறு மூலை என்று ஆட, இருவர் முகமும் மாறி மாறி உணர்ச்சிகளின் உச்ச கட்டத்தைத் தொடும். அரங்கில் அழுகையும் மூக்கை உறிஞ்சலும் கேட்கும் அமைதி. இது இன்னொரு சாந்தாராம் டச்.

    சரி நல்ல பாட்டுக்கள், நல்ல நடனங்கள் இந்தப் படத்தில் என்று சொல்லப்படுகிறது. நடனமும் பாட்டுமே படத்தின் மையக் கரு. அதுவே படம் முழுதும் விரவியிருக்கும் என்றும் படித்திருந்தேன். சரி பார்த்து வைப்போம். ஆனால் அது நாளைக்கு. நேர்காணல், பரிட்சை எல்லாம் முடிந்த பிறகு என்று தீர்மானித்துக் கொண்டேன்.

    இரவு அமைதியாகக் கழியவில்லை. எந்நேரமும் கதவு தட்டப்படலாம், எதுவும் நேரும் என்ற ஒரு  திகில் இருந்து கொண்டே இருந்தது. இப்போதாவது சரி. நாளை, அறையைப் பூட்டிக் கொண்டு இண்டர்வ்யூக்குப் போனால் இங்கு என்ன நடக்கும்? என்றும் கவலை. இது தான் முதல் தடவை என்பதால் இந்தக் கவலையா, இல்லை இந்த இடம் ஒரு மாதிரியாக அதிகம் நடமாட்டம் இல்லாத இடமாக இருப்பதால் இப்படித் தோன்றுகிறதா என்று தெரியவில்லை.

    இரவு எப்படியோ கழிந்துவிட்டது தான். துக்கத்தில்  எதுவும் தெரியவில்லை. புது இடம், பழக்கமில்லாத் சூழல். அது தான் வேண்டாத சிந்தனைகளையும் கவலைகளையும் தூண்டியதோ என்னவோ. காலையில் குளித்துவிட்டு காலை உணவும் சாப்பிட்டுவிட்டு நேர்காணலுக்குக்குறித்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்திருக்கவேண்டும். இ[ப்போது அது நினைவில் இல்லை. ஆனால் எல்லாம் முடிந்த பிறகு இரண்டு மூன்று இடங்களுக்குப் அலஹாபாத் சுற்றிப் பார்க்கப் போனது நினைவில் இருக்கிறது. ஒன்று மோதிலால் நேரு புகழும் செல்வாக்கும் மிக்க வக்கீலாக இருந்த போது தனக்கென கட்டிக்கொண்ட ஆனந்த் பவன். அதைப் பின்னர் காங்கிரஸ் பார்ட்டிக்கு என கொடுத்துவிட்டதாகச் சொல்லப்பட்டது. அங்கு தான் இந்திரா காந்தி வளர்ந்ததும், பெரோஸ் காந்தியுடன் பழக்கமேற்பட்டதும், இத்யாதி. ஆனால் இப்போது அந்த பவனின் வெளித்தோற்றம் தான் நினைவிலிருக்கிறதே தவிர உள்ளே சென்று பார்த்த நினைவுகள் மறந்துவிட்டன. அதைத் தான் இப்போது ஸ்வராஜ் பவன் என்று அழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பின்னர் ஏதோ ஒரு மொகலாய கட்டிடம் என்னவென்று நினைவில் இல்லை.

    பின்னர் கங்கைக்  கரைக்குச் சென்றது நினைவில் இருக்கிறது. அங்கு ஒரு  படகுக்காரனைப் பிடித்து சங்கமத்துக்கு சென்றது நினைவில் இருக்கிறது. இவ்வளவு தூரம் வந்த பிறகு பிரயாகைக்குப் போய் திரிவேணி சங்கமம் பார்க்காமல் போவியா என்ன? என்று ஒரு படகுக்காரனே கேட்டான். இல்லாவிட்டால் எனக்கு எப்படித் தெரியும் படகில் திரிவேணி சங்கமத்துக்குப் போகலாம், அதற்கு படகோட்டிகள் தயாராக இருப்பார்கள் அந்த வாடிக்கை உண்டு என்று?. சரி என்று உட்கார்ந்து விட்டேன். ஐந்து ரூபாய் பேசினதாக நினைவு. சரியாகச் சொல்வதற்கில்லை. ஆனால் இதுவல்ல நான் சொல்ல வந்த விஷயம்.

    எவ்வளவு பெரிய  பிரம்மாண்டமான நதி அது. கங்கை. அதில் நான் படகில் தனியாகப் போய்க்கொண்டிருந்தேன். படகோட்டி என்னவோ சொல்லிக்கொண்டிருந்தான். படகில் உட்கார்ந்து பாதி தூரம் அந்த பிரும்மாண்டத்தின் மத்திக்குப் போனபின் தான் பயம் ஏற்பட்டது. இப்போது ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது? நீச்சல்கூட தெரியாதே. நீச்சல் தெரிந்தாலே இந்த சமுத்திரம் போன்ற பிரவாகத்தில் எப்படி தப்பிப்பது? ராமக்ரிஷ்ண கதாம்ருதத்தில் தான் படித்த ஒரு கதை. கதையில் படகில் சவாரி செய்துகொண்டிருப்பது ஒரு பண்டிதர். சகல சாஸ்திரங்களும், வேதங்களும், புராணங்களும் கரைத்துக்குடித்தவர். படகோட்டியை, ”உனக்கு இது தெரியுமா, அது தெரியுமா?” என்று தன் தொணதொணப்பில் வறுத்துக்கொண்டிருக்கிறார். படகோட்டி அவர் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் தனக்குத் தெரியாது என்றே சொல்லிவருகிறான். பண்டிதருக்கு தன் வித்வத்தின் கர்வம் தலைக்கேறுகிறது. “கடைசியில் அவனுக்காக பச்சாதாபப்பட்டு, “இப்படி ஒன்றுமே தெரியாது வாழ்க்கையை வீணாக்கிவிட்டாயே அப்பா? என்று இரக்கப்படுகிறார். கொஞ்ச நேரத்தில் பலமான காற்று வீச படகு ஆட்டம் காண்கிறது. படகோட்டி அந்த வித்வானைக் கேட்கிறான். ”ஐயா, தங்களுக்கு நீச்சல் தெரியுமா? என்று கேட்க அவர் தெரியாது என்று சொல்ல, இப்போது படகோட்டியின் முறை, “ஐயா, வாழ்க்கை முழுதும் என்ன புராணமும், சாஸ்திரங்களும் கற்று என்ன பயன்?, இப்போது நீச்சல் தெரியாத உங்கள் வாழ்க்கை தான் முடியப் போகிறது? என்று சொல்லி ஆற்றில் குதித்து நீந்தத் தொடங்குகிறான் என்பது அந்தக் கதை. எனக்கும் எந்தப் பயனும் இப்போது இல்லாத படிப்பும், நேர்காணலும், வேலை வாய்ப்பும் என்ன பயன் தரப்போகிறது,? எல்லாமே முடிந்து விடுமோ என்ற பயம் தோன்றியது என் கவலை ஏதும் அறியாத படகோட்டியோ, ”ஐயா வந்துவிட்டோம் மையப் பகுதிக்கு. இதோ பாருங்க இங்கே தான் இரண்டு நதியும் சேர்கிறது” என்றான் பார்த்தால் ஏதோ நடுக்கடலில் இருப்பது போல ஒரு பிரம்மாண்டத்தின் நடுவில் அகப்பட்டுக்கொண்டு அந்த படகோட்டியின் கையில் தயவில் என் உயிர் சிக்கிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது.

    திரிவேணி சங்கமம்  வந்து, கிடைத்தற்கரிய ஒரு  அனுபவத்தின் திளைத்து பக்தி பாவத்தில் மூழ்குவதற்கு பதிலாக நான் இப்படி வேண்டாத சிந்தனையில் எல்லாம் ஆழ்ந்து ஏன் அவதிப்பட வேண்டும்? படகு இருக்கிறது. இதையே தொழிலாகக் கொண்ட படகோட்டி இருக்கிறான். என் உயிரைக் காப்பதில் தானே அவன் பிழைப்பும் என்று நினைத்துக்கொண்டேன். நேற்று இரவு இப்படித் தானே வேண்டாத சிந்தனைகளில் அவதிப்பட்டோம் என்றும் ஒரு எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.

    இருப்பினும் இது  தானா திரிவேணி சங்கமம்? சரஸ்வதி  இல்லை. யமுனையும் கங்கையும்  தான். ஆனால், இரண்டு நதிகளும், சங்கமிக்கும் இடத்தில் படகு இருக்கமுடியுமா? எங்கோ நிறுத்தி விட்டு இது தான் த்ரிவேணி என்கிறானோ. எதாக இருந்தால் என்ன? இரண்டு நதிகளும் சங்கமிக்கும் புள்ளியில் இருந்து தான் ஆகவேண்டுமா என்ன? தூரத்தில் இரு பக்கங்களிலும் விஸ்தாரமாக, ஏதோ கடல் விஸ்தரித்து இருப்பது போல ஒரே நீர்ப்பரப்பாக, தொடுவானம் வரை, இப்படி எங்கே பார்த்திருக்கிறோம். சங்கமிக்கும் புள்ளியிலிருந்து வெகுதூரம் தள்ளியே இருந்து விட்டுப் போகட்டும். இப்படி அகன்ற ஒரு நீர்ப்பரப்பை எங்கு காணப் போகிறோம். இந்த பிரம்மாண்டத்தின் நடுவில் நாம் எவ்வளவு சிறுத்துப் போய்விட்டோம். நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருந்தது. சிந்தனை மறுத்த பிரமிப்பில் ஆழ்ந்திருக்கும் போது படகோட்டி திரும்பிக்கொண்டிருந்தான். ஒன்றும் பேசத் தோன்றவில்லை. படகோட்டி என்னவோ சொல்லிக் கொண்டிருந்தான். அவன் சொல்வது எதுவும் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. அவனும் இந்த ஆள் பயந்து கிடக்கிறான் என்று தெரிந்திருப்பான்.

    மாலை சினிமாவுக்குப் போனேன். ஜனக் ஜனக் பாயல் பாஜே. ஜனக் ஜனக் என்று சலங்கைகள் ஒலித்தன என்று பொருள். தேகி நா தார் மூக், தேகினா தார் பாணி, கேவல் ஸூனி தாஹார் பாயேர் த்வனி கானி. (அவன் முகத்தை நான் பார்க்கவில்லை. அவன் குரலையும் நான் கேட்கவில்லை. அவன் கால் சலங்கை ஒலி மாத்திரமே எனக்குக் கேட்டது) தாகூரின் பாடல் வரிகள். சலங்கை ஒலிகள் தான் என்னென்ன கற்பனைகளை சிறகடித்துப் பறக்க விடுகின்றன. இன்று காலை கூட பீம்சேன் ஜோஷியின் பாட்டு கேட்டது. இரண்டே வரிகள

    சலங்கை ஒலி தான் கேட்கிறது. அவளை யார் சமாதானப் படுத்துவது? கேட்க மாட்டேன் என்கிறாளே? போதும் அரை மணி நேர கயாலுக்கு. சில காட்சிகள், படிமங்கள்  காலம் காலமாக நம்மை சிலிர்க்க வைக்கின்றன. ஏங்க வைக்கின்றன. அதை நினைத்து நினைத்து நாமும் ஏங்க விரும்புகிறோம் என்பது தான் விந்தை. வெகுதூரப் பயணி. கிணற்றடியில் ஒரு பெண். நீர் வார்க்கிறாள். படகோட்டி. ஒரு கரையிலிருந்து மறு கரைக்குப் பயணம். இப்படியான எல்லா இலக்கியங்களிலும் எல்லாக் காலத்திலும் திரும்பத் திரும்பத் தோன்றும் படிமங்களில் காட்சிகளில் சலங்கை ஒலியும் ஒன்றாகத் தோன்றுகிறது.

    முதல் தடவையாக சாந்தாராமின் படம் ஒன்றில் சிலகாட்சிகள் ரசிக்கும் படியாக இருந்தன. பாட்டுக்கள். சில நடனங்கள். இளம் வயது சந்தியா, சாந்தாராமின் புதிய சேர்க்கை, படத்திலும், வாழ்விலும்,. ஜெயஸ்ரீ, பிரிந்தாயிற்று. சாந்தாராமுக்கு சினிமாவைப் பத்தி என்ன தெரியும் என்று ஜெயஸ்ரீ சொல்ல ஆரம்பித்து விட்டாள். பாபுராவ் படேலின் ஃபில்ம் இந்தியாவில் படித்தேன் ஏதோ ஆத்திரத்தில் சொல்கிறாள் என்று தோன்றும். ஆனால் உண்மையும் அது தானே.

    மற்றபடி படம் சினிமாவாக  இல்லை. பழைய சாந்தாராம். கலர்ப் படம். கதக் நடனம் பார்க்கும் படியாக இருந்தது. மற்றபடி  அது என்னைக் கவரவில்லை. திரும்ப ஒரு முறை நான் அந்தப் படத்தைப் பார்க்கும் ஏற்படவில்லை. புர்லாவிலும் சரி, தில்லியிலும் சரி.

     தொடரும

    முந்தைய பகுதியை வாசிக்க:

      படங்களுக்கு நன்றி :

    http://en.wikipedia.org/wiki/File:V._Shantaram_%281901-1990%29.jpg

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . .(26)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    சிலநேரங்களில், சில பொழுதுகளில் ஏதோ உணர்வுகள் மனதினில் ஊசலாடும். கண்முன்னே, ஊடகங்களில் என்று பலவழிகளில் நாம் பார்த்தும் கேட்டும் அறிந்து கொண்ட நிகழ்வுகள் மனதை ஏதோ செய்யும். அப்படியான ஒரு பொழுதை, அந்தப் பொழுதினில் எனது மனதில் பதிந்த கருத்துக்களை உங்களுடன் இம்மடலில் பகிர்ந்து கொள்ள எழுந்த ஆசையின் விளைவே இது.

    ஒரு ஐந்து வயதுச் சிறுமி ஈழத்தின் அவலத்திலிருந்து தப்பி தனது குடும்பத்தினருடன் இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்து இனியாவது வாழ்வில் அமைதி கிட்டும் எனும் நம்பிக்கையுடன் வாழ்ந்து வரும் ஒரு ஈழத்து இளம் சிறுமி. தனக்கேயுரிய குழந்தைகளுக்கான விளையாட்டாகத் தனது மாமனின் கடைதனில் ஆடி மகிழ்ந்திருந்த வேளை அச்சிறுமியின் வாழ்வையே திசை திருப்பும் நிகழ்வு நடைபெறுகிறது.

    என்ன ஒரேயடியாகக் கதையளக்கிறானே என எண்ணுகிறீர்களா? இல்லை உண்மையாகவே சுமார் ஒன்றரை வருடங்களின் முன் நடந்த ஒரு நிகழ்வையே குறிப்பிடுகிறேன்.

    துஷா கமலேச்வரன் எனும் ஈழத்தின் குழந்தைகளில் ஒன்று. ஐந்தே ஐந்து வயதாக இருக்கும் போது சுமார் ஒன்றரை வருடங்களின் முன்னால் லண்டனில் உள்ள “ஸ்டாக்வெல் (Stockwell) எனும் இடத்தில் உள்ள தனது மாமனின் கடையில் ஆடி மகிழ்ந்திருந்தது.

    அப்போதுதான் லண்டனின் பெயரையே மாசுபடுத்தும் கோஷ்டி மோதல்களில் ஈடுபடும் குழுக்களைச் சேர்ந்த மூவர் அக்கடையினில் நுழைகிறார்கள் தொடர்ந்து நடந்த அசம்பாவிதங்களில் அக்காடையர்களால் விடுக்கப்பட்ட அகோரத் துப்பாக்கி வேட்டு ஒன்று வழி தவறி இந்தச் சிறுமியைத் தாக்கி விடுகிறது..

    பலத்த காயத்துடன் விழுந்த சிறுமி அவசரச் சத்திர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். அன்றிரவு இருமுறை துடிப்பிழந்த அந்தச் சிறு இதயத்தை அரும்பாடுபட்டு இயங்க வைத்தார்கள் அற்புத வைத்திய நிபுணர்கள்.

    இன்று ஒன்றரை வருடங்களின் பின்னால் சக்கர நாற்காலியின் உதவியுடன் புன்னகை பூத்த வதனத்துடன் வலம் வரும் அந்தச் சிறுமியின் முகத்தில் ஒளிவிட்ட நம்பிக்கையை பி.பி.ஸி இணையத்தளத்தில் பார்த்த போது உள்ளம் நெகிழ்ந்தது.

    பள்ளிக்கூடம் போகப் பிடிக்குமா? எனக்கேட்ட நிருபருக்கு புன்னகையுடன் ஆமாம் என்று பதிலளித்த சிறுமி தான் ஒரு டாக்டராக வேண்டும் என்பதுவே தனது கனவு என்று கூறியது.

    இனி இக்குழந்தை தன் வாழ்நாளில் நடப்பது சந்தேகமே என்கிறார்கள் வைத்திய நிபுணர்கள்.

    இக்குழந்தையின் எதிர்காலப் பராமரிப்புக்கு ஏற்படப்போகும் செலவினை எண்ணும் போது நெஞ்சமே பதைக்கிறது. இந்த நேரத்தில் தான் நாம் வாழும் இந்த நாட்டில் வாழும் மனிதாபிமானத்தின் ஆழம் புரிகிற செயலொன்று கடந்த சில நாட்களின் முன்னால் நடைபெற்றது.

    அது என்ன என்கிறீர்களா?

    ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் போலீஸாரைப் பற்றிய அபிப்பிராயம் சிறிது எதிர்மறையாகவே இருக்கும் ஆனால் இல்லை நாமும் மனிதர்தாம் எமக்கும் உணர்வுகள் உண்டு சில போலீசார் விடும் தவறுகளுக்கு நாமனைவரும் பொறுப்பல்ல என்று நிரூபித்திருக்கிறார்கள் இந்தச் சிறுமியின் வழக்கை விசாரித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்த துப்பறியும் பிரிவைச் சேர்ந்த இலண்டன் போலீஸார்.

    பொதுவாக ஒரு வாகன விபத்தில் ஒரு சிறுமி அகப்பட்டு அவரது இயக்கத்தை இழந்து விட்டால் காப்புறுதியின் மூலம் அக்குழந்தையின் வாழ்நாள் பராமரிப்புக்கு ஏற்ற நஷ்ட ஈட்டுத்தொகை கிடைக்கும் ஆனால் இத்தகைய ஒரு காயரின் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு கிடைக்கும் நஷ்ட ஈடோ மிகவும் சொற்பமானது.

    அதை உணர்ந்த இந்த வழக்கிலீடுபட்ட போலீஸார் இங்கிலாந்தின் அதி உயரமான மூன்று மலைகளில் ஏறுவதன் மூலம் இக்குழந்தைக்காக நிதிச் சேகரிப்பில் ஈடுபட்டு ஏறக்குறைய £180,000 பவுண்ட்ஸ் வரையில் சேகரித்துள்ளார்கள். இது இக்குழந்தையின் எதிர்காலத்திற்காக அவர்களுக்கு கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்கள்.

    இந்த மலையேறும் கருணைப் பயணத்தில் ஈடுபட்ட ஒரு போலீஸ் ஆபிசர் கூறும்போது “இப்பயணத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் குழந்தைகள் உண்டு, இந்தக் குழந்தைக்கு நடந்த கொடுமை எங்கள் மனதை மிகவும் பாதித்தது. இக்குழந்தையின் ஊனத்தின் காரணமான காடையரைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்ட வகையிலும், இக்குழந்தைக்கும் அவரது ஏனைய குடும்ப அங்கத்தவர்களுக்கும் அனுசரணை அளிப்பதிலும் நாம் இக்குழந்தையுடன் சுமார் ஒரு வருடத்துக்கு மேலாகப் பழகி வந்துள்ளோம். எமக்கு இது அவர் மீது பாசத்தை ஏற்படுத்தியது ” என்றார்.

    பறிபோய்விட்ட அந்த இனிய சிறுமியின் சுதந்திரத்தை எத்தனை கோடிப் பணமும் பெற்றுத் தந்து விடாது ஆனால் மிகவும் சிக்கலாக அமையப் போகும் அவரது எதிர்கால வாழ்க்கையின் சிரமத்தை ஓரளவு குறைக்க உதவும்.

    மனித நேயம் என்பது மதம், மொழி, இனம், நிறம் எனும் அனைத்து வேறுபாடுகளையும் கடந்து நிற்பது. மனிதம் ஒன்றே உலகின் மகத்துவம். இதனை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இந்த போலீசாரின் கருணை உணர்த்தி நிற்கிறது.

    அது மட்டுமின்றி போலீஸாரும் மனிதரே அவர்களின் நெஞ்சிலும் ஈரம் இருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

    நம்பிக்கையின் சிகரத்தையே இச்சிறுமி தொட்டுக்காட்டி எம் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளார். அவரது விருப்பப்படியே அவர் ஒரு டாக்டராகி சமுதாயத்திற்கு அரும்பணியாற்றி தமிழன்னையைத் தலைநிமிரச் செய்வார் என்பது எனது திடமான நம்பிக்கை.

    இதற்காகத்தான் ஒரு கவிஞர்

    எங்கே போய்விடும் காலம் அது
    என்னையும் வாழவைக்கும் – உன்
    இதயத்தைத் திறந்து வைத்தால் அது
    உன்னையும் வாழ வைக்கும் ” என்றாரோ

    நன்றி — படங்களுக்காக (பல இணையத்தளங்கள்)

    Share
  • Pizza Ready to Serve

     

    Nikhil murugan


    The romantic thriller directed by Karthik Subburaj starring Vijay Sethupathi, Remya Nambeesan titled ‘ Pizza’ is ready to hit the screens on 19th of this October month worldwide. And Sangam Cinemas will be officially releasing all over Tamil Nadu. The story revolves around the circumstances faced by a Pizza Delivery boy after landing into mysterious place and how it dramatically changes his life. Vijay Sethupathi is playing the lead. He is well known among the critics for the critically acclaimed Thenmerku Paruvakatru.

    The teaser of the movie also received well among the audience. Audio of the movie was released on September. Produced by C V Kumar, it has camera crooned by Gopi Amarnath and editing by Leo John Paul. Story and Screen play both by Karthik Subburaj. The rest of the cast includes Adukalam Narain. Jaikumar, Simha, Pooja, Karuna and Veera Santhanam. Its quiet going to be a fresh look with almost new team. As the teaser and trailer created a hype, hope the movie gives us extravaganza ride. Hopes are on for Karthik, Vijay and Ramya, and the whole team ,as the movie is expected to give them a big break in Tamil Industry.

    Share
  • திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-16)

    விஜயகுமார்

    பஞ்சுமிட்டாய் வண்ணத்தில் ஒன்று, கிளிப் பச்சை நிறத்தில் ஒன்று, கோவிந்தா நிறத்தில் ஒன்று, மஞ்சள் நிறத்தில் இன்னொன்று, கடல் நீல நிறத்தில் ஒன்று, சிவப்பு நிறத்தில் இன்னொன்று, இது போதாதென்று பாதிப் பச்சை பாதி மஞ்சள், பாதி சிவப்பு பாதி நீலம் – முன்னாடி விவேக் சொன்னது போல ஏதோ ஜாங்கிரியைப் பிசைந்து போட்ட மாதிரி ஒரு சைன் (போர் ஹயார்) – எல்லாம் வண்ண வண்ண டாக்ஸிகளின் பவனி. எந்த இடமாக இருக்கும்?

    சின்ன பட்ஜெட் தமிழ்ப் படம் என்றால் ஊட்டி, பெரிய பட்ஜெட் என்றால் ஐரோப்பா, இரண்டுக்கும் நடுவில் என்றால் – தாய்லாந்து தானே – தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயம் ஆன இடங்களில் இந்தத் தாய்லாந்தும் ஒன்று – கதாநாயகி கடைக்கண் பார்வை பட்டவுடனே அங்குள்ள பீச்சுக்குக் கேமரா போய்விடுமே! கதைப்படி குடிசையில் அடுத்த வேளைச் சோத்துக்கு சிங்கி அடிக்கும் நிலையில் இருந்தாலும் கூட அரைகுறை ஆடையில் பிகினி அணிந்த நனைத்த ஆடையுடன் ஆடிப் பாட வேண்டும்!

    இந்த ரசிகர்களின் அபிமான ஸ்டார்களின் வானுயர வருமானம் வீணாகும் இடங்கள் பல என்றாலும் அவை மிகவும் வீணாவது இந்த நாட்டில் தான். அப்படி என்ன இந்த நாட்டுக்கு ஒரு மோகம்? இங்கே கட்டிளம் காளைகள் முதல் சொட்டை விழுந்த மனதளவு வாலிபர் வரை மந்தை மந்தையாக வந்து இறங்குகிறார்கள்?

    இந்தியா போன்ற மூன்று பக்கம் கடலாலும் தலையில் இமாலய மலைத்தொடராலும் சூழப்பட்ட நாடுகளில் அயல் நாட்டிற்க்குப் பயணம் செய்யும் வாய்ப்பு அந்நாளில் பலருக்குக் கிடைக்கவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம். பர்மா, சிங்கை போன்ற நாடுகளுடன் பயணக்கப்பல் தொடர்பு இருந்த போதிருந்த சிறு வாய்ப்பும் விமானங்கள் வந்தவுடன் அடங்கி விட்டது. இலங்கைச் சூழல் பல காலம் தடையாகவும் இருந்தது. அப்படி இருக்க நம்மவருக்கு சிங்கை, மலாயா மற்றும் தாய்லாந்து சென்று அரை டஜன் லக்ஸ் சோப்பு, ரெண்டு செண்டு பாட்டில் ( நல்ல வேளை இப்போதெல்லாம் ரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதா அவர்கள் அணிந்த சிங்கப்பூர் புலி மார்க் பச்சை நிற ஜாம் ஜாம் பெல்ட் எல்லாம் வாங்கி வரச் சொல்வதில்லை!!) வாங்கி வந்து பந்தா காட்ட வேண்டும். நம் நாட்டிலேயே வரலாறும் எழிலும் சொட்டும் பல இடங்கள் இருந்தும் – இதன் பெயர் கூட பெரும்பாலானவருக்குத் தெரியாது – எனினும் ட்ராவல் ஏஜெண்டுகள் பாகேஜ் டூர் மிக மலிவு விலை – முதல் முறை செல்வோருக்கும் நம்மில் எங்கு சென்றாலும் தயிர் சாதம் ஊறுகாய் கேட்கும் நபர்களுக்கும் ஏதுவாகச் சுற்றுலா என்றதும் லாலா கடை அல்வாவுக்கு மொய்க்கும் ஈக்களைப் போல தாய் ஏர்வே விமானம் தான் மோட்சம் என்று சென்று விடுகிறார்கள். அந்தக் காசுக்கு நம்ம ஊரில் இதை விடப் பல மடங்கு பார்க்கலாம் என்றாலும் யாருமே கேட்பதில்லை.

    இதைத் தவிர நம்ம ஆட்கள் இங்கே இந்த நாட்டுக்கு ஈ போல வந்து மொய்க்க வேறு ஒரு முக்கிய காரணமும் உண்டு. அதைப் பின்னர் பார்ப்போம். கிழக்கு ஆசிய நாடுகளில் நம்மவருக்கு தாய்லாந்தின் சிறப்பு – மலேசியா மற்றும் சிங்கை போன்ற நாடுகளில் இந்தியர்களுக்கு முன்கூட்டியே விசா எடுக்க வேண்டும் – தாய்லாந்தில் அது தேவை இல்லை, இறங்கியதும் “விசா ஆன் அரைவல்” வசதி உண்டு. தர்ம தர்ஷன் – நார்மல் ஆயிரம் பாட், ஸ்பெஷல் ஆயிரத்தி ஐநூறு ( ஆனால் ரசீது ஆயிரத்து இருநூறுக்கு தான் தருவார்கள் ). நல்ல நாளில் நார்மல் அரை மணி நேரம் எடுக்கும், சில கெட்ட நேரத்தில் ஏடுகொண்டலவாடா ரேஞ்சுக்கு இரண்டு மணி எடுக்கும். சுவர்ணபூமி விமான நிலயம் திறக்கும் முன்னர் பழைய விமான நிலையத்தில் இந்த விசா தாமதம் பெரும் தொல்லையாக இருந்தது. மினிமம் ஒரு மணி நேரம் எடுக்கும். ஒருமுறை முந்தைய பாஸுடன் சென்றபோது பெரும் அதிர்ச்சி – ஐந்தே நிமிடத்தில் அவரது கடவுச்சீட்டு வந்து விட்டது – அதுவும் ராஜ மரியாதையுடன் – அவர் பெயரில் ஒரு ராம், அவர் அப்பா பெயரிலும் ராம் இருந்ததே அதற்க்கு காரணம் என்று பிறகு தான் தெரிந்தது. தாய்லாந்தில் பொதுவாக மன்னர் பரம்பரையில் உள்ளவர்களே இப்படிப் பெயர் இருக்கும் போல!

    புதிய சுவர்ணபூமி விமான நிலையத்தில் விசா பிரச்சனை கொஞ்சம் குறைவே என்றாலும் மற்ற சௌகரியங்கள் கொஞ்சம் குறைவுதான். பெரிய விமான நிலையம் என்பதால் சிங்கை போல பல டெர்மினல்கள் வைக்காமல் ஒரே டெர்மினல் என்பதால் பல கிலோ மீட்டர் உள்ளுக்குள்ளே நடக்க வேண்டி உள்ளது!! உள்ளே நுழைந்தவுடனே ஒரு பெரிய பாற்கடல் கடையும் காட்சியை வைத்து விட்டனர் – இதன் முன்னால் நின்று போட்டோ எடுக்காவிட்டால் தாய்லாந்து சென்றதை யாருமே நம்ப மாட்டார்கள் போல! முதல் முறை வெளிநாடு பயணம் வந்துள்ளவர்களைப் பார்க்கும் போதே அடையாளம் காணலாம். தழைய தழையப் புடவை கட்டிக்கொண்டு காலில் ரீபோக் சூ! ஒவ்வொரு கடையிலும் விலை கேட்டு அதை இந்தியா ரூபாய்க்கு கால்குலேடர் கொண்டு மாற்றி – இது நம்ம ஊரிலேயே பாதி விலைக்கு கிடைக்குமே என்ற ரியாக்‌ஷன்!!

    வெளியில் வந்தால் இந்தக் கலர்களின் அணிவகுப்பு – அதுதாங்க வண்ண வண்ண டாக்ஸிகள் பார்க்கலாம். சரி, தாய்லாந்தைப் பற்றிய “அந்த” விஷயத்துக்கு வருவோம். அதுதாங்க தாய் மசாஜ்! முதலில் நாம் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் – உலகின் எல்லா நாடுகளிலும் இந்தத் “தொழில்’ இருக்கிறது. “இலை மறைவு காய் மறைவாய்” நம்ம ஊரிலும் இது உண்டு. அதனால் தாய்லாந்து தான் ஒன்றும் தெரியாத அப்பாவிகளைக் கெடுக்கிறது என்று சொல்வது தவறு. இதற்காகவே அலையும் பலரை நமது பஸ் நிலையங்களிலும், பல்லவன் பஸ்களிலும் பார்க்க முடிகிறது. பெண்களைத் தெய்வமாக மதிக்கும் நாடு என்று பறைசாற்றும் நமது கலாச்சாரத்தின் சீர்குலைவைப் பஸ்ஸில் பயணம் செய்யும் பெண்கள் படும் பாட்டைப் பார்த்தாலே புரியும். வெறும் குச்சிக்குப் புடைவை சுற்றினாலே வெறித்துப் பார்க்கும் இந்தச் சமுதாயச் சீர்குலைவுக்கு எது காரணம்? ஏது விமோசனம்?

    ஆமாம் சார், தாய்லாந்தில் வெளிப்படையாக இவை உண்டு – காபரே, சில்மிஷம் முதல் ஹாப்பி எண்டிங் மசாஜ் வரை பல ஷோ உண்டு – அதே போல நல்ல (கௌரவமான) ஹெல்தி மசாஜும் உண்டு – ஏன் நம்ம ஊரில் இல்லாததா? ஜோதி தியேட்டர் முதல் பாண்டிச்சேரியில் அந்தக் கிரகம் பெயர் கொண்ட ஹோட்டலில் காட்டாததா? தவறாக என்ன வேண்டாம் – தாய்லாந்தை பற்றிய இந்த தவறான நோக்கம் எங்கும் பரவி உள்ளது. அருமையான நாடு அது – பார்த்ததும் குனிந்து “ஸ்வாதிகா” என்று பணிவுடன் வரவேற்பது முதல் – அழகிய கடற்கரை, அற்புதமான சுவை மிகுந்த சாப்பாடு என்று பல நல்லவை அந்த நாட்டில் உள்ளன. சொல்லப் போனால் அந்த நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டமே கிடையாது. இங்கே பெண்களுக்கு நம் நாட்டை விட அங்கே மிகுந்த மதிப்பும் சுதந்திரமும் உண்டு.

    உதாரணத்துக்கு நம்ம ஊரில் நன்கு பரிச்சயம் ஆன – தெரிந்த பையனுடன் இரண்டு சக்கர வாகனத்தில் செல்வதையே கொச்சைப்படுத்திப் பல சினிமா காட்சிகள் வந்துள்ளன. பின்னால் பெண்ணை அமரவைத்து ஸ்பீட் பிரேக்கரில் ஏறி இறங்குவது போல காட்சி அமைப்பது என்ன ஒரு வக்கிரமான சித்தனை! இதை எவருமே கண்டிப்பது இல்லை! ஆனால் தாய்லாந்தில் எங்கும் நம்ம ஊரு ஆட்டோ மாதிரி பைக் டாக்ஸி பிரபலம். அது என்ன பைக் டாக்ஸி? இரு சக்கர டாக்ஸி – ஆரஞ்சு நிற அரைச்சட்டையை அணிந்து இவர்கள் பத்து பாட் (சுமார் பதினேழு ருபாய்!) வாங்கிக்கொண்டு சிறு சிறு ட்ரிப் அடிக்கிறார்கள். ஆண் பெண் என்ற எந்த வித பாகுபாடுகள் இல்லை. பறக்கும் ரயில் இருந்து இறங்கி டப் என்று எதோ ஒரு பைக் டாக்சியில் ஏறி அமரும் அழகுப் பெண்களை பார்க்கும்போது – இது நம்மூரில் சாத்தியமாகுமா என்ற கேள்வி தான் எழுகிறது.

    சங்க இலக்கியம் படிக்கும்போது அந்தக் காலத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருந்த உறவை அவர்கள் பார்த்த கண்ணோட்டம் எங்கோ வழியில் சிக்கிச் சிதறி இன்று அடையாளமே தெரியாமல் மாறிவிட்டது. இப்போது உள்ள இளைய தலைமுறைக்கு ஒரு பெண்ணின் முன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூடத் தெரியவில்லை. ஒரு பெண்ணுடன் நட்பு, இல்லை வேண்டாம்.. வெறுமனே கூட வேலை பார்ப்பது முதல் – ஒரு சாதாரண சம கால நடப்பு, ஏன் காதலே உண்டாகட்டும், பின்னர் “எல்லைகளை” மீறினாலும் இவை அனைத்தும் இயற்கையே – அதைப் பற்றிய ஒரு புரிதல் தேவை. இதை பற்றிப் பேசாமல் மூடி மூடி வைப்பது பிரச்சனையை இன்னும் பெரிதாக்கப் போவதுதான் நிச்சயம். எதனால் நம் நாடு HIV, AIDS போன்ற நோய்களில் முதலிடம் வகிக்கிறது? இவை ஏதோ தெய்வ குத்தமா அல்லது பூர்வ ஜென்மத்து சாபம் என்றோ தள்ளி விட முடியாது. பழம் பெருமை பேசி இவற்றை மூடி மறைப்பதை விட நம்ம ஊரு ஓட்டலில் சோப்பு, சீப்பு, ஷாம்பூ வைப்பது போல தாய்லாந்து ஓட்டலில் ஆணுறையையும் வைத்து விடுவதே முதிர்ச்சி.

    Share
  • Moodar Koodam – press details rgd yesudhas sir’s Neeyum Bommai song remix

     

    ILM TITLE   : MOODAR KOODAM (Fools Gathering)

    COMPANY   : WHITE SHADOWS PRODUCTIONS
     

    TECHNICAL CREW

     

    DIRECTOR   : NAVEEN

    D.O.P.    : TONY CHAN

    MUSIC     : NATARAJAN SANKARAN

    EDITOR   : ATHIYAPPAN SIVA

    ART DIRECTOR  : PREM NAVAS

    LYRICS    : NAVEEN

     

    CAST

     

        RAJAJ
        OVIYA
        JAYAPRAKASH
        ANUPAMA
        SENTRAYAN
        KUBERAN
        FIVESTAR KRISHNA
        MAHESWARAN
        NAVEEN

     

    About The Movie
     

    The movie is a black comedy based on Gautama Buddha’s saying “It’s better to travel well than to arrive”. A thorough entertainer, scripted and filmed in a way to make the audience laugh, have fun and if possible think. Scripted and directed by debutant Naveen who has assisted director Chimbu Deven in ‘Imsai Arasan 23m Pulikecei’, ‘Arai En 305il Kadavul’ and Director Pandiraj in national award winning ‘Pasanga’.

    Director Note

    Every person who thinks he has tasted success in life and understood life successfully, every person who searches outwardly for happiness and satisfaction of life, every person who considers himself superior or inferior than others – everyone of them is a fool. Because whenever we think we are equipped to deal with life’s next challenges, we are given a rude awakening. The experiences that we accumulate over a lifetime still might not be enough to deal with the next puzzle that life will throw at us. Life outfoxes and outwits us all the time. Life’s meaning and perception changes ever day and life teaches us and makes us understand it in a new form every other day till we die. So, all of us who think we are wiser, smart, competitive, better than another being, are fools. And this world is a beautiful stage where all these fools gather. This film deals with a bunch of fools like us. It’s not mandatory they do foolish things and act foolishly, but they are fools in their own way.

     

    K.J.Yesudhas sings his first song after 50 years

     

    ‘Moodar Koodam’ is a black comedy based on Gautama Buddha’s saying “It’s better to travel well than to arrive”, a thorough entertainer, scripted and filmed in a way to make the audience laugh, have fun and if possible think. As the script subtly deals with the meaning and purpose of life, the climax song needed to be more philosophical. According to me the song ‘neeyum bommai naanum bommai’ from the 1963 cult classic movie ‘Bommai’ directed by the legendary director S.Balachander is the best song that explains life in a more philosophical but rather simpler way. So, I thought a remix version of the song with the same lyrics and mesmerizing voice of Yesudhas sir would do more justice to the climax of the film. After finishing the track, we visited S.balachnder sir’s Mylapore house, met his family members and told them about our idea of remixing and using the song in our movie and played the track for them. After hearing the remixed version, srimiti Vasantha Balachander and Mr.S.B.Raman (son of S.Balachander), readily agreed and issued a legal NOC for the usage of the song in our film. But later when we were planning to proceed with the recording, I thought that reaching Yesudhas sir will be a herculean task for an independent filmmaker like me and decided to record the song with Vijay Yesudhas’s voice. Vijay listened to the track and was very impressed. he himself suggested that none other than the legend himself can do justice to the song. He played the track to Yesudhas sir and Yesudhas sir immediately accepted to sing the song. Yesudhas sir has recreated his magic once again after 50 years with this song. He was very pleased with the way the song has been remixed. He appreciated music director Natarajan Sankaran for having preserved the soul of the song while remixing it. He recorded the song in 20 minutes and shared his experience for more than an hour and a half. I would cherish those 2 hours with the legend throughout my life. I consider it a boon. It makes us feel proud to present the classic song ‘Neeyum Bommai Naanum Bommi’ to the present day audience. It’s a pride to have such a song in our movie to have associated with legends like Yesudhas sir and S.Balachander sir’s family. We are grateful to them. This song will sure bring tears out of music lovers and Yesudhas fans. The song with it’s visual will be a treat for the audience to watch. The audio will be released in a month. We are planning to felicitate the two legends, K.J.Yesudhas and late Mr.S.balachander during the audio release.

     

    Share