ஸ்ரீஜா வெங்கடேஷ்

நேற்றுவரை பிரபல கிரிமினல் வக்கீலாக இருந்த சத்தியமூர்த்தி இன்று நீதிபதி ஆகிவிட்டார். வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. அவர் நீதிபதியானதில் அவருடைய பெற்றோருக்குத்தான் மிகவும் மகிழ்ச்சி. வருவோர் போவோரிடத்தில் எல்லாம் சொல்லிச் சொல்லிப் பெருமைப் பட்டனர். சத்திய மூர்த்திக்கு வயது ஐம்பத்து எட்டு. 65 வயது வரை நீதிபதி பதவியில் இருக்கலாம் என்பது சட்டம். அதனால் அவருக்கு இன்னும் ஏழு வருட சர்வீஸ் இருக்கிறது.

சத்திய மூர்த்தியை நீதிபதியாக நியமித்ததை எதிர்த்து மற்றொரு வக்கீலான சங்கரன் கோர்ட்டில் ஸ்டே வாங்க முயற்சி செய்தார். கிடைக்கவில்லை. சத்தியமூர்த்தியின் பழைய ரெக்கார்டுகள் அப்பழுக்கில்லாமல் இருந்தன. அதனால் சங்கரனால்  ஒன்றும் செய்ய முடியவில்லை. இருந்தாலும் மனதுக்குள் கருவிக் கொண்டிருந்தார்.

சத்திய மூர்த்தியின் குடும்பத்துக்கென்று ஒரு பெரிய பங்களா ஒதுக்கப் பட்டது. சென்னையில் அமைச்சர்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் இருந்த அந்த மாளிகை மிகவும் பெரியது. ஏழோ  எட்டோ அறைகள் இருந்தன. போதாததற்கு விசாலமான சாப்பாட்டுக் கூடம் அதற்கு அளவில் சற்றே குறைந்த சமையலறை மாடியில் வேறு அறைகள் என்று வீடு பிரம்மாண்டமாக இருந்தது. இது போதாதென்று தோட்டம் வேறு இருந்தது. மா  கொய்யா  மாதுளை போன்ற பழ மரங்கள் நிறைந்து ஒரு வனம் போலக் காட்சியளித்தது. இவற்றை எல்லாம் பராமரிக்க கூப்பிட்ட குரலுக்கு வேலையாட்கள் வேறு. கிட்டத்தட்ட ஒரு அரசனைப் போன்ற அந்தஸ்து. பின்னே நீதிபதி என்றால் சும்மாவா? நாட்டில் தூண்களில் ஒன்றல்லவா அவர்?

சத்தியமூர்த்தியும்  அவர் மனைவியுமாக இரண்டே பேர் அத்தனை பெரிய வீட்டில் குடியேறினர். அவர்கள் மகன்கள் இருவரும் வெளி நாட்டில் இருந்ததால் அவர்கள் வரவில்லை. இது அனைவருக்கும் தெரியும். ஆனால் சத்திய மூர்த்தியின் தாய் தந்தையர் வராதது அனைவரின் கேள்விக்கும்  விமரிசனத்துக்கும் ஆளானது. இது குறித்து நேரிடையாக யாரும் நீதிபதியிடம் கேட்கவில்லை. கேட்கும் தைரியமும் இல்லை. சனி ஞாயிற்றுக் கிழமைகளில்  நீதிபதியும்  அவர் மனைவியும் அவர்களுடைய சொந்த வீட்டிற்குப் போய்விடுவார்கள். அந்த இரண்டு நாளும் சத்தியமூர்த்தி தான் ஒரு ஜட்ஜ் என்பதையே மறந்து சாதாரணமாகக்  காய் வாங்குவது  ஒட்டடை அடிப்பது  சோஃபா கவர் மாற்றுவது போன்ற வேலைகளைச் செய்வார். சாயங்காலம் ஆனால் பக்கத்தில் இருக்கும் பெசண்ட் நகர் பீச்சுக்கு பெற்றோர்களோடு போவார். ஞாயிறன்று முழு ஓய்வு. மீண்டும் திங்கட் கிழமை நீதிபதிகள் குடியிருப்புக்கு வந்துவிடுவார்கள்.ஒரு வாரம் கூட இந்த நியதி தவறியதில்லை.

நீதிபதியின் மனைவியின் கை வண்ணத்தில் தோட்டம் அவர்கள் தோட்டம் மிளிர்ந்தது. வெற்றிலை  மிளகு போன்ற அபூர்வக்கொடிகள் இடம் பெற்றன. அதோடு பூசணி வெள்ளரி போன்றவையும் பயிரிடப் பட்டு  அவர்கள் தேவை போக வேலைக்காரர்கள் அவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். கத்தரி  வெண்டைச் செடிகளும் போடப்பட்டுக் காய்த்துக் குலுங்கின. அந்த அம்மையார் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால் தானே முன்னின்று தோட்ட வேலைகள் எல்லாவற்றையும் மேற்பார்வை பார்த்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக ஜட்ஜ் தன்னுடைய தாய் தந்தையரை தன்னுடன் வைத்துக்கொள்ளவில்லை என்ற செய்தி பரவியது. அது வக்கீல் சங்கரன் காதிலும் விழுந்தது. இந்தச் செய்தியை அவர் தனக்கு சாதகமாக எப்படி உபயோகித்துக் கொள்ளலாம் என்று சிந்தித்ததில்  அவர் மனதில் ஒரு யோசனை உதித்தது. அதைச் செயலாக்க வேண்டி நீதிபதி சத்தியமூர்த்தியின் பழைய வீட்டைத் தேடி ஒரு செவ்வாய்க் கிழமை சென்றார்.

சங்கரன் எதிர்பார்த்தபடியே வயாதான தம்பதிகள் தனியாக இருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் சரியான படிக்காத கிராமத்து ஆட்கள் என்பது தெரிந்து போனது அவருக்கு. ‘இவர்களைத் தன் பெற்றோர் என்று சொல்லக் கூச்சப்பட்டுத்தான் சத்தியமூர்ததி அவர்ளை உடன் அழைத்துச் செல்ல வில்லை போலும்’ என்று நினைத்துக் கொண்டார் சங்கரன். தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தார். அவர்கள் வந்தவரை உபசரித்து  காபி கொடுத்தனர். சங்கரன் மெதுவாக அவர்கள் மன நிலையை அறிய சத்தியமூர்த்தியைப் பற்றிக் கேள்விகள் கேட்டுப் பார்த்தார். அவர்கள் பதில் ஒன்றும் திருப்தி அளிப்பதாக இல்லை. இருந்தும் முயற்சியைத் தளர விடாத வக்கீல் இ இப்படித் தனியாக வாழ்வதன் கொடுமையைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

‘இத்தனை வசதிகள் இருந்தும்  மகனோடு இருக்க முடியலியேன்னு உங்களுக்கு ஏக்கமா இருக்கும் இல்லேம்மா?’

‘ஆமாம்ப்பா! என்ன பண்ண? பல்லக் கடிச்சுப் பொறுத்துக்கத் தான் வேணும். மகன் பெரிய பதவியிலே இருக்காம்லா?’

‘ஏன் நீங்க கூடப் போயி இருந்தா என்ன?’

‘அது சரியா வராதுல்லா! எங்களுக்கு இங்ஙனக்குள்ள பழகிட்டு. அதான் நாங்க அங்கே போகல’ என்றார்கள்.

‘மகனை விட்டுக் கொடுக்கிறார்களா பார்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவர் மீண்டும் தொடர்ந்தார். ‘அம்மா! உங்களை மாதிரி வயசான பெத்தவங்களை பையன் கவனிக்கல்லேன்னா  மகனுக்குத் தண்டனை வாங்கிக் குடுக்கலாம்னு சட்டம் வந்துடுச்சு தெரியுமா? நீங்க ஒண்ணும் பண்ண வேணாம் ! நான் சொல்ற இடத்துல கையெழுத்து மட்டும் போட்டா போதும். மிச்சத்தை நான் பாத்துக்கறேன் ‘ என்றார்.

‘யாரு நீ? எதுக்கு எங்களை என் மகனுக்கு எதிராத் தூண்டி விடுதே? உனக்கு என்னலே வேணும்? ‘என்று பெரியவர் கேட்டார் என்றால்

‘வாரியலால சாத்துங்க சொல்லுதேன். என்ன தைரியம் இருந்தா நம்ம வீட்டுப் படியேறி வந்து இப்பிடிப் பேசுவான்? நாசமத்துப் போறவனே! போ வெளியே’ என்று கடுமையாகத் திட்டி சங்கரனை வீட்டை விட்டு விரட்டாத குறையாக வெளியேற்றினார்கள். வெளியில் யாருக்கும் இந்த அவமானம் தெரியாமல் மறைத்து விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு அங்கிருந்து அசடு வழியத் திரும்பினார் சங்கரன்.

இது நடந்து சில நாட்களுக்கெல்லாம் நீதிபதி சத்தியமூர்த்தி  சங்கரனைக் கூப்பிட்டு அனுப்பினார். அவருக்கு உள்ளூர உதறல். தான் செய்தது நீதிபதிக்குத் தெரிந்து விட்டதோவென்று கவலைப் பட்டார். அப்படித் தெரிந்தால் நீதிபதி என்ன செய்வார்? அவர் நினைத்தால் தன்னைப் பழி வாங்க வழியா இல்லை? ஐயையோ அவசரப்பட்டுத் தவறு செய்து விட்டோமேயென்று பயந்து கொண்டு இருந்தார் சங்கரன். கூப்பிட்டனுப்பியும் போகவில்லை என்றால் அது மரியாதை இல்லை என்று நினைத்து பலியாடு போல அவருடைய அறைக்குச் சென்றார்.

சங்கரன் எதிர்பார்த்துச் சென்றது போல நீதிபதி அவ்வளவு கோபமாக இல்லை. சாதாரணமாகப் பேசி டீ கொடுத்து உபசரித்தார். சங்கரனுக்குத்தான் முள் மேல் உட்கார்ந்திருந்தது போல இருந்தது. சற்று நேரம் உலக விஷயங்கள் எல்லாம் பேசிய பிறகு விஷயத்துக்கு வந்தார் நீதிபதி.

‘ஏன் சங்கரன் நீங்க எங்க வீட்டுக்குப் போயிருந்தீங்களாமே? ‘

‘ஆமாம் சார்’

‘ஏன் சார் ? எங்க அம்மா அப்பாவை எனக்கு எதிராத் தூண்டி விட்டதாகக் கேள்விப்பட்டேனே உண்மையா அது?’

இதற்கு சங்கரன் என்ன பதில் சொல்லுவார்? மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டு தொடர்ந்தார் நீதிபதி. ‘உங்களுக்கு இந்தப் போஸ்ட் கிடைக்கல்லேன்னு நீங்க கோபத்துல ஸ்டே வாங்க முயற்சி பண்ணுனீங்க ! அது சரி. ஏன்னா அது நேரிடையான அணுகுமுறை. அதை விட்டுட்டு வீட்டுல வயசானவங்க கிட்ட போயி இல்லாத்தையும் பொல்லாததையும் சொல்றது சுத்தக் கோழைத்தனம் சார். அது ஏன் உங்களுக்குப் புரியல்லே?’

இதற்கும் மௌனம் சாதித்தார் வக்கீல்.

‘நான் ஏன் எங்க அப்பா அம்மாவை கூட வெச்சுக்கல்லேங்கறதுக்கு உங்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இருந்தாலும் சொல்றேன் ஏன்னா மத்தவங்களும் நீங்க செஞ்ச மாதிரி முயற்சி செய்யக் கூடாது. எங்கப்பா அம்மாவை யாரும் தொந்தரவு பண்ணி அவங்களுக்கு மனசுக் கஷ்டம் குடுக்கக் கூடாது அதனால சொல்றேன்.’ என்றவர் ஒரு வாய்த் தண்ணீர் குடித்து விட்டுத் தொடர்ந்தார்.’ கவர்ன்மெண்ட் சார்பா எனக்குப் பெரிய வீடு  வேலைக்காரங்க எல்லாம் குடுத்திருக்காங்கன்னு நீங்க பொறாமைப் படறீங்க இல்லே! அது தான் காரணம் நான் என் பேரண்ஸை கூட வெச்சிக்காததுக்கு. ‘

வக்கீல் விழித்தார்.

‘புரியும்படியாவே சொல்றேன். நான் வக்கீலா இருந்தப்போ என் சக்திக்குத் தகுந்த மாதிரி திருவான்மியூர் தாண்டி 900 சதுர அடியில ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கினேன். அங்க தான் நாங்க எல்லாரும் இருந்தோம். இப்போ புதுசா பெரிய வீடு  வேலை ஆளுங்கன்னு எல்லா வசதியும் இருக்கு. இதெல்லாம் அவங்களுக்குப் பழகிடுச்சுன்னா  நான் ஏழு வருஷம் கழிச்சு ரிடயர் ஆகும் போது திரும்ப அந்த சின்ன வீட்டுல அட்ஜஸ்ட் பண்ணிக்க ரொம்பக் கஷ்டப் படுவாங்க. அது மட்டுமில்லே  இத்தனை வேலை ஆட்களையும் அவங்களுக்கு என்னால குடுக்க முடியாது. அப்போ அவங்க மனசு ரொம்ப வருத்தப்படும். வயசான காலத்துல அவங்க மனசு அதையெல்லாம் நெனச்சு ஏக்கப் படக் கூடாதுன்னும் இ எங்களுக்கும் பழைய பழக்கம் விட்டுப் போகக் கூடாதுங்கறதாலயும் தான் நான் அவங்களை என் பழைய வீட்டுலேயே ஒரு குறையும் இல்லாமே வெச்சிருக்கேனே தவிர வேற எந்தக் காரணமும் இல்லை.’ என்று நீண்ட தன் பிரசங்கத்தை முடித்தார்.

மிகவும் உயர்ந்து விட்ட அந்த நீதிபதியின் எதிரில் கூனிக் குறுகியபடி ஒன்றும் பேசாமல் வெளியேறினார் சங்கரன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.