Author: ஸ்ரீஜா வெங்கடேஷ்

  • நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-16)

    ஸ்ரீஜா வெங்கடேஷ்

    நிகில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று பி.ஈ பரீட்சையில் தேறி விட்டான். அமெரிக்காவுக்கு செல்லத் தேவைப்படும் தேர்வுகளான ஜி.ஆர்.ஈ, டோஃபில் இவற்றிலும் நல்ல மார்க்குகள் எடுத்துப் பாஸ் செய்திருந்தான். மூன்று புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களிலிருந்து அவனுக்கு அட்மிஷன் கிடைத்து விட்டது. அதில் மிகச் சிறந்ததான டெக்சாஸ் பல்கலைக் கழகத்தைத் தேர்ந்தெடுத்து அதில் சேர்வதாக முடிவெடுத்திருந்தான் நிகில். அங்கு படிப்பதற்குரிய ஸ்காலர்ஷிப்பும் அவனுக்குக் கிடைத்து விட்டது.

    சுந்தரத்துக்கும் கல்யாணிக்கும் பெருமை தாங்கவில்லை. அது மட்டுமா? இப்போது சுந்தரம் மேனேஜர் ஆகி விட்டான். அது வேறு அவர்கள் பெருமையைப் பூரிக்கச் செய்தது.

    தங்களுடைய மகன் அமெரிக்கா செல்லப் போவதை நினைத்து நினைத்து இருவரும் வானில் பறந்தனர். சுமதி அக்கா, சுந்தரத்தின் தங்கை என எல்லாருக்கும் ஃபோனில் விஷயத்தைச் சொன்னார்கள். அவர்களுக்கும் சந்தோஷம். அதைக் கொண்டாடவும், நிகில் வெளிநாட்டுக்குப் போவதற்கு முன் கடவுளிடம் வேண்டிக் கொள்ளவும் என ஒரு பூஜை ஏற்பாடு செய்தாள் கல்யாணி.

    அதற்கு அனைவரையும் அழைத்திருந்தாள். நாளை தான் பூஜை. கம்ப்யூட்டரில் அழைப்புகளை அனுப்பிக் கொண்டிருந்தவளுக்கு ஒரு இ-மெயில் வந்தது. அதைப் பார்த்ததும் அவள் மனம் ஒரு வருடம் முன்னோக்கிப் பறந்தது. தன்னிடம் சுந்தரம் சீறி விட்டு டாக்குமெண்டுகளை எடுத்துக் கொண்டு ஆபீசுக்கு அரக்கப் பறக்க ஓடிய அந்த நாள் நினைவுக்கு வந்தது. ஏனெனில் இந்த இ-மெயிலும் அந்த இ-மெயிலைப் போலவே பல கோடி ரூபாய் பரிசு விழுந்திருப்பதாக எழுதப்பட்டிருந்தது.

    அதை ஒரு புன்னகையோடு டெலீட் செய்தாள் கல்யாணி.

    மனம் மீண்டும் அந்த நாளில் போய் உட்கார்ந்து கொண்டது.

    அடேயப்பா! சுந்தரத்துக்கு இனி கெட்ட பெயர் இல்லை எனத் தெரிந்ததும் அவர்கள் குடும்பம் அடைந்த மகிழ்ச்சிக்கு ஏது அளவு? அதுவும் சுந்தரம் தன் மேல் உள்ள கோபமெல்லாம் தீர்ந்தது என்று அறிந்த போது ஏற்பட்ட மகிழ்ச்சி இருக்கிறதே! அதை விட ஒரு சந்தோஷத் தருணம் இனி இருக்குமா? மனம் பின்னோக்கி ஓடியது.

    “கல்யாணி! போனாப் போகுது போ! ஏதோ தெரியாம செஞ்சிட்ட! இனிமே இப்டிப் பண்ணதே சரியா?” என்ற வார்த்தைகளோடு விளையாட்டாய் அவள் காதைப் பிடித்துத் திருகினான்.

    “ஆஆ.. வலிக்குது விடுங்க! நீங்க என்ன ஸ்கூல் வாத்தியாரா இருந்தீங்களா? காதைப் பிடிச்சுத் திருகுறீங்க?”

    “பின்ன? தப்புப் பண்ணினா! அப்டித்தான் தண்டனை குடுப்பாங்க! என்னடா நிகில்?”

    “ஆமாம்ப்பா! விடாதீங்க அம்மாவை! என்னை எத்தனை தடவை திருகியிருக்காங்க சின்ன வயசுல”

    கலகலவென்ற சிரிப்பொலியால் அந்த வீடு நிறைந்தது.

    அதற்கப்புறம் எல்லாம் சரியாவதற்கு எத்தனை நாள் பிடித்தது?

    ஒரு பக்கம் கல்யானியின் நாத்தனார் செல்வி கோபித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் என்றால், மறு புறம் நிகில் பல பரீட்சைகளுக்குத் தன்னை தயார் செய்து கொண்டிருந்தான். அது போதாதென்று இஞ்சினியரிங் பரீட்சை வேறு நெருங்கிக் கொண்டிருந்தது. கல்யாணி வேறு கிட்டத்தட்ட எல்லா உறவினர்களோடும் சண்டை போட்ட நிலை. வட பழனி முருகனுக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டியது வேறு பிரார்த்தனை பாக்கி.

    மூச்சு முட்டியது கல்யாணிக்கு. இந்த முறை எதிலும் தவறு நேராமல் நிதானமாக யார் மனதும் நோகாமல் பேச வேண்டும். எல்லோருடனும் சமாதானமாகப் போக வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள் அவள். சுந்தரத்தை இதில் நுழைக்க விரும்பவில்லை. தான் ஏற்படுத்திய சிக்கலைத் தானே தான் விடுவிக்க வேண்டும் என்ற வைராக்கியம் அவளுக்கு.

    இந்தக் கம்ப்யூட்டர் வேலையாலும், அந்தப் பரிசாலும் யார் யார் மனதை நோகடித்திருக்கிறோம் என்று எண்ணிப் பார்த்தாள் கல்யாணி.

    முதலில் சுஜாதா, அவள் அந்த மெயிலை ஃபிராடு என்று சொன்னாள் என்பதற்காக அவள் மனம் நோகப் பேசியாயிற்று, அடுத்து சுமதி அக்கா, அவள் சவுத் ஆப்பிரிக்காவில் அந்த அட்ரசைப் பற்றி விசாரித்துச் சொன்ன பிறகு ஒரு நாள் வெறுப்பில் ஃபோன் செய்து அவளையும் கடுமையாகப் பேசி விட்டாள். அந்த நிகழ்ச்சிக்கப்புறம் சுமதி அக்கா ஃபோன் செய்வதேயில்லை.அதற்கு அடுத்தது செல்வி தான். தன்னுடைய கவலையினால் வீட்டிற்கு வந்தவளை வெறுப்பாகப் பேசித் துரத்தி விட்டாள். சுந்தரத்துக்கு அந்தக் கோபம் இன்னும் உள்ளூர இருப்பது கல்யாணிக்குத் தெரியும்.

    முதலில் சுஜாதாவிலிருந்து ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்தாள் அவள்.

    கல்யாணிக்கு மிகவும் அவமானமாக இருந்தது. “ஒரு சிறு பெண் அவளிடம் போய் நாம் மன்னிப்புக் கேட்பதா?” என்றிருந்தது. இருந்தாலும் “தவறு செய்தது நாம், அதனால் மன்னிப்புக் கேட்பது தான் முறை. இதில் அவமானம் ஒன்றுமில்லை” என்று திரும்பத் திரும்ப தனக்குத்தானே கூறிக் கொண்டு பின் சுஜாதாவுக்கு ஃபோன் செய்தாள். முதலில் சுஜா எடுக்கவேயில்லை. நான்கைந்து முறை முயற்சி செய்த பின் எடுத்தாள்.

    “ஹலோ! சுஜா! நான் கல்யாணி பேசறேம்மா!”

    “தெரியுது!”

    “உங்கிட்ட மன்னிப்புக் கேக்கத்தான் நான் ஃபோன் பண்ணினேன் சுஜா! பிளீஸ் என்னை மன்னிச்சிடும்மா! ஐ ஆம் சாரி”

    “————“

    “இல்ல சுஜா! நான் சும்மா மேலுக்கு உங்கிட்ட மன்னிப்புக் கேக்கறேன்னு நினைக்காதே! நீ சொன்னா மாதிரி அது எவ்ளோ பெரிய ஃபிராடுங்கறதை அனுபவ பூர்வமா தெரிஞ்சுக்கிட்டேன். நீ சொல்றதை முதல்லேயே கேட்டிருந்தா இந்தப் பிரச்சனை எல்லாம் வந்திருக்காது. “

    “பரவாயில்லை மேடம்! விடுங்க! எப்டியோ நீங்க அதெல்லாம் ஃபிராடுன்னு புரிஞ்சிக்கிட்டீங்கல்ல அது போதும்”

    “ஆமாம்மா! என் மேல உனக்கு கோபம் இல்லை தானே”

    “இல்ல! இல்ல! போதுமா?”

    “சரி சுஜா” என்று ஃபோனை வைத்தவள் மனது சற்று லேசாகியது. “ஒரு மன்னிப்பு கேட்டால் நல்லபடியாக முடிந்தது, அடுத்தது சுமதி அக்கா” என்று அவர்களுக்கு ஃபோனைச் சுழற்றினாள். இரண்டு ரிங்குகளிலேயே எடுத்து விட்டாள் அக்கா.

    “ஹலோ! கல்யாணி! எப்டி இருக்க?” கொஞ்சமும் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் சுமதி அக்கா பேசியது கல்யாணிக்குக் கண்களில் நீரை வரவழைத்தது.

    “ஹலோ! அக்கா!” என்றாள் தொண்டை அடைக்க.

    “”சொல்லு! கல்யாணி! எதும் பிரச்சனையா? சொல்லும்மா!”

    “அதெல்லாம் ஒண்ணுமில்லக்கா! கடவுள் அருளால எல்லாம் நல்லபடியா முடிஞ்சது”

    “நானும் எல்லாமே கேள்விப் பட்டேன்மா! நல்லவங்களுக்கு இப்படிப்பட்ட சோதனைகள் வரது சகஜம் தான்”

    “என்னவோ போங்க! நான் முக்கியமா ஃபோன் பண்ணது உங்க கிட்ட மன்னிப்புக் கேக்கத்தான்”

    “மன்னிப்பா? எதுக்கு?”

    “அக்கா! எதுக்குன்னு நீங்க கேக்கறதுலருந்தே நீங்க எவ்ளோ உசந்தவங்கன்னு தெரியுது! அன்னிக்கு நீங்க சவுத் ஆப்பிரிக்கா வரைக்கும் கேட்டு விசாரிச்சு எனக்குச் சொன்னீங்கள்ல்ல அதுக்கப்புறம் நான் உங்களைத் தப்பாப் பேசிட்டேங்கா! அதுக்கு சாரி கேக்கத்தான்….”

    “சீ! பைத்தியம்! நான் அதை ஒண்ணும் தப்பாவே நினைக்கல்ல!”

    “அப்ப ஏன் எனக்கு அதுக்கப்புறம் ஃபோன் பண்ணல்ல?”

    “அதுவா? நீ ஏற்கனவே சங்கடத்துல இருக்க! அப்பப் போயி சும்மா உன்னை நொய் நொய்னு தொந்தரவு பண்ணுவானேன்னுதான் நான் ஃபோன் பண்ணல்ல”

    “உண்மையிலேயே அது தான் ரீசனா?”

    “அட! ஆமாம்! ஆமாம்! ஆமாம்! போதுமா? உன்னை எனக்குத் தெரியாதா? அவசர அவசரமா காரியங்களைச் செஞ்சுட்டு நிதானமா வருத்தப்படுவ நீ! சின்ன வயசுல இருந்த அதே மாதிரி தான் இன்னமும் இருக்க! உன்னைப்போயி தப்பா நெனப்பேனா?”

    “ரொம்ப தேங்க்ஸ்க்கா” என்று ஃபோனை வைத்தவள் மனது இப்போது குதூகலமாயிருந்தது. “அக்கான்னா அக்காதான்” என்று நினைத்துக் கொண்டாள்.

    அடுத்து ஃபோன் செய்ய வேண்டிய ஆளை நினைத்த போது அவளுக்கு வயிறு கலங்கியது. நாத்தனார்.. அதிலும் கோபித்துக் கொண்டு போன நாத்தனார். என்ன சொல்லி சமாதானப்படுத்த? மிகவும் யோசித்தவள் கடைசியில் உண்மையைச் சொல்லி விட வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தாள்.

    அதேபோல ஃபோனைச் சுழற்றினாள். மறு முனையில் எடுத்தபோதே மன்னிப்புக் கேட்டாள். நாத்தனார் கொஞ்சம் இறங்கி வருவது போலத் தோன்றவே விஷயம் முழுவதையும் சுந்தரத்துக்கு வந்த ஆபத்தையும் சேர்த்துக் கொட்டித் தீர்த்து விட்டாள்.

    “அண்ணி! இவ்ளோ நடந்திருக்கா? அண்ணன் என் கிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லல்ல! நிகில் நடுவுல ரெண்டு தரம் வீட்டுக்கு வந்தான் ஏண்டா ஒரு மாதிரி இருக்கன்னு கேட்டதுக்கு ஒண்ணுமில்ல அத்தன்னு மழுப்பிட்டானே!”

    “அதெல்லாம் ஒண்ணுமில்ல! எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லி உங்களையும் ஏன் மனசு கஷ்டப்பட வைக்கணும்னுதான் சொல்லல்ல! ரொம்ப சாரிம்மா! நீ அன்னிக்கு ஆசையா வீட்டுக்கு வந்த!”

    “பரவாயில்லீங்க அண்ணி! நாம அடுத்த வாரமே ஒரு நாள் போவோம் சரியா?”

    “கண்டிப்பா” என்று சொன்னவள் அதே போல மறு வாரமே நாத்தனாரோடு மனம் போல ஷாப்பிங் போய் வந்து திருப்தியாகச் சமைத்துச் சாப்பிட்டு ஜாலியாக இருந்தார்கள்.

    கனவிலிருந்து மீண்டாள் கல்யாணி.

    இந்தக் கம்ப்யூட்டர் தான் தன் வாழ்க்கையை எப்படி மாற்றி விட்டது? முதலில் நிறைய சந்தோஷம், பணம் எல்லாம் கிடைத்தது. அதன் பிறகு அவமானம், அவச்சொல், பண நஷ்டம் எல்லாம் உண்டாக்கியது. யோசித்துப் பார்த்தாள் கல்யாணி “கம்ப்யூட்டர் நஷ்டம் உண்டாக்கியதா? இல்லை உன் பேராசை நஷ்டம் உண்டாக்கியதா? என்று அவள் மனசாட்சி தட்டிக் கேட்டது.

    “ஆமாம்! என் பேராசைதான் எனக்கு எதிரியாக வந்தது. கம்ப்யூட்டர் என்பது இன்றைய நாளின் அத்தியாவசியம். ஆனால் அதன் நல்லது கெட்டது தெரிந்து உபயோகிக்க வேண்டும். அதிலும் இண்டர் நெட் என்பது தொழில் நுட்பப் புதையல். யாருக்கு என்ன தகவல் வேண்டுமோ அவை அனைத்துமே விரல் நுனியில் அதில் கிடைக்கும். அதனாலேயே அதை மிகவும் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும். ஏதாவது ஒரு எழுத்து மாறிப் போனால் கூட மிகவும் அசிங்கமான மனதைத் தூண்டும் விதமான தகவல்கள் கிடைக்கும் அபாயமுள்ளது.

    எப்படி துப்பாக்கி சுடுபவர்கள் அதை மிகவும் ஜாக்கிரதையாகக் கையாளுகிறார்களோ அதே போலத்தான் நாமும் இண்டர் நெட்டைக் கையாள வேண்டும். இதையெல்லாம் அறியாத பல பெண்கள் இருக்கிறார்கள். நாம் ஏன் அவர்களுக்கு இதன் ஜாக்கிரதை பற்றிச் சொல்லிக் கொடுக்கக் கூடாது?” என்று தோன்றியது கல்யாணிக்கு.

    முதல் தனக்கு தெரிந்தவர்கள் அவர்களுக்குத் தெரிந்தவர்கள் என்று எல்லோரிடமும் இண்டர் நெட் பற்றியும் அதன் பயன், ஆபத்து இரண்டைப் பற்றியும் எடுத்துக் கூறினாள். இது சம்பந்தமான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட அவள் கலந்து கொண்டாள். அதில் மிகவும் நல்ல பெயர் அவளுக்கு. தனக்குக் கிடைத்த கசப்பான அனுபவத்தை மற்றவரோடு பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு அந்த அனுபவம் நேராமல் காத்தாள்.

    இப்போதெல்லாம் கல்யாணி யாருடனும் சேட்டிங் செய்வதில்லை. சுந்தரத்துக்குப் பிரமோஷன் கிடைத்ததும் பிரீதாவே வலிய இரு முறை ஃபோனில் பேசி சேட்டிங்கில் வரச் சொன்னாள். ஆனால் கல்யாணி அதற்கெல்லாம் இடம் கொடுக்கவேயில்லை. வீட்டை கவனித்துக் கொண்ட நேரம் போக மற்ற நேரம் வேலை செய்து திருப்தியாகச் சம்பாதிக்கிறாள்.

    இதிலெல்லாம் சுந்தரத்துக்கு ஏகப் பெருமை.

    பூஜை சிறப்பாக நடைபெற்றது. சுமதி அக்கா, கல்யாணி இருவரும் சேர்ந்து வருபவர்களுக்கு விருந்து தயாரித்து விட்டார்கள். செல்வி எல்லாரையும் வரவேற்று உட்கார வைக்கும் பொறுப்பையும், பூஜைக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக் கொடுக்கும் பொறுப்பையும் செய்தாள். வந்திருந்த உறவினர்கள் அனைவரும் மனாதார சாமி கும்பிட்டு வயிறாரச் சாப்பிட்டு விட்டு வாழ்த்தியபடி சென்றார்கள்.

    அனைவரும் விடை பெற்றுக் கொண்டு போயாகி விட்டது.

    வீட்டில் கல்யாணி, சுந்தரம் மற்றும் நிகில் இந்த மூவர் தான்.

    இதோ நிகில் இன்னும் ஒரு மாதத்தில் அமெரிக்கா கிளம்புகிறான். அதற்குள் செய்ய வேண்டியது ஏராளம் இருக்கிறது. தேவையான சாமான்கள் வாங்க வேண்டும், உணவுப் பண்டங்கள் பார்சல் செய்ய வேண்டும், நிகிலுக்கு அடிப்படைச் சமையல் கற்றுக் கொடுக்க வேண்டும், நிகிலை அழைத்துக் கொண்டு வட பழனி முருகன் கோயிலுக்குச் செல்ல வேண்டும் இப்படிப் பல.

    எல்லா வேலைகளும் முடிந்து நிகில் அமெரிக்கா கிளம்பும் நாளும் வந்து விட்டது.

    நடு இரவு 2:30க்கு ஃபிளைட். 12 மணிக்கு இவர்கள் ஏர்போர்ட் சென்று விட்டார்கள். விமானம் கிளம்பும் மூன்று மணி நேரத்துக்கு முன்பே பயணிகள் தங்கள் உடமைகளோடு உள்ளே சென்று விட அதாவது செக் இன் செய்து விட வேண்டும் என்பதால் ஒரு மணி வாக்கில் நிகிலிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டு வெளியில் வந்தனர் கல்யாணியும் சுந்தரமும். இருவர் கண்ணிலும் ஆனந்த வெள்ளம், கவலைக் கண்ணீர் இரண்டும் சேர்ந்து காணப் பட்டது.

    ஏர்போர்ட்டிலிருந்து திரும்பும் டாக்சியில் ஆதரவாகக் கணவனின் தோள் மேல் சாய்ந்த கல்யாணியை மெதுவாகத் தட்டிக் கொடுத்தான் சுந்தரம். டாக்சி விரைந்தது. மானசீகமாக நிகிலுக்கு டாட்டா காட்டியபடி வீடு திரும்பிக் கொண்டிருந்தனர் அந்தத் தம்பதி.

    முற்றும்.

     

    படத்திற்கு நன்றி: http://www.teluguone.com/nri/thkts/pages/events-2-387.html

    Share
  • ஒரு முடிவின் மறு பக்கம்

    ஸ்ரீஜா வெங்கடேஷ்

    நேற்றுவரை பிரபல கிரிமினல் வக்கீலாக இருந்த சத்தியமூர்த்தி இன்று நீதிபதி ஆகிவிட்டார். வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. அவர் நீதிபதியானதில் அவருடைய பெற்றோருக்குத்தான் மிகவும் மகிழ்ச்சி. வருவோர் போவோரிடத்தில் எல்லாம் சொல்லிச் சொல்லிப் பெருமைப் பட்டனர். சத்திய மூர்த்திக்கு வயது ஐம்பத்து எட்டு. 65 வயது வரை நீதிபதி பதவியில் இருக்கலாம் என்பது சட்டம். அதனால் அவருக்கு இன்னும் ஏழு வருட சர்வீஸ் இருக்கிறது.

    சத்திய மூர்த்தியை நீதிபதியாக நியமித்ததை எதிர்த்து மற்றொரு வக்கீலான சங்கரன் கோர்ட்டில் ஸ்டே வாங்க முயற்சி செய்தார். கிடைக்கவில்லை. சத்தியமூர்த்தியின் பழைய ரெக்கார்டுகள் அப்பழுக்கில்லாமல் இருந்தன. அதனால் சங்கரனால்  ஒன்றும் செய்ய முடியவில்லை. இருந்தாலும் மனதுக்குள் கருவிக் கொண்டிருந்தார்.

    சத்திய மூர்த்தியின் குடும்பத்துக்கென்று ஒரு பெரிய பங்களா ஒதுக்கப் பட்டது. சென்னையில் அமைச்சர்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் இருந்த அந்த மாளிகை மிகவும் பெரியது. ஏழோ  எட்டோ அறைகள் இருந்தன. போதாததற்கு விசாலமான சாப்பாட்டுக் கூடம் அதற்கு அளவில் சற்றே குறைந்த சமையலறை மாடியில் வேறு அறைகள் என்று வீடு பிரம்மாண்டமாக இருந்தது. இது போதாதென்று தோட்டம் வேறு இருந்தது. மா  கொய்யா  மாதுளை போன்ற பழ மரங்கள் நிறைந்து ஒரு வனம் போலக் காட்சியளித்தது. இவற்றை எல்லாம் பராமரிக்க கூப்பிட்ட குரலுக்கு வேலையாட்கள் வேறு. கிட்டத்தட்ட ஒரு அரசனைப் போன்ற அந்தஸ்து. பின்னே நீதிபதி என்றால் சும்மாவா? நாட்டில் தூண்களில் ஒன்றல்லவா அவர்?

    சத்தியமூர்த்தியும்  அவர் மனைவியுமாக இரண்டே பேர் அத்தனை பெரிய வீட்டில் குடியேறினர். அவர்கள் மகன்கள் இருவரும் வெளி நாட்டில் இருந்ததால் அவர்கள் வரவில்லை. இது அனைவருக்கும் தெரியும். ஆனால் சத்திய மூர்த்தியின் தாய் தந்தையர் வராதது அனைவரின் கேள்விக்கும்  விமரிசனத்துக்கும் ஆளானது. இது குறித்து நேரிடையாக யாரும் நீதிபதியிடம் கேட்கவில்லை. கேட்கும் தைரியமும் இல்லை. சனி ஞாயிற்றுக் கிழமைகளில்  நீதிபதியும்  அவர் மனைவியும் அவர்களுடைய சொந்த வீட்டிற்குப் போய்விடுவார்கள். அந்த இரண்டு நாளும் சத்தியமூர்த்தி தான் ஒரு ஜட்ஜ் என்பதையே மறந்து சாதாரணமாகக்  காய் வாங்குவது  ஒட்டடை அடிப்பது  சோஃபா கவர் மாற்றுவது போன்ற வேலைகளைச் செய்வார். சாயங்காலம் ஆனால் பக்கத்தில் இருக்கும் பெசண்ட் நகர் பீச்சுக்கு பெற்றோர்களோடு போவார். ஞாயிறன்று முழு ஓய்வு. மீண்டும் திங்கட் கிழமை நீதிபதிகள் குடியிருப்புக்கு வந்துவிடுவார்கள்.ஒரு வாரம் கூட இந்த நியதி தவறியதில்லை.

    நீதிபதியின் மனைவியின் கை வண்ணத்தில் தோட்டம் அவர்கள் தோட்டம் மிளிர்ந்தது. வெற்றிலை  மிளகு போன்ற அபூர்வக்கொடிகள் இடம் பெற்றன. அதோடு பூசணி வெள்ளரி போன்றவையும் பயிரிடப் பட்டு  அவர்கள் தேவை போக வேலைக்காரர்கள் அவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். கத்தரி  வெண்டைச் செடிகளும் போடப்பட்டுக் காய்த்துக் குலுங்கின. அந்த அம்மையார் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால் தானே முன்னின்று தோட்ட வேலைகள் எல்லாவற்றையும் மேற்பார்வை பார்த்தார்.

    கொஞ்சம் கொஞ்சமாக ஜட்ஜ் தன்னுடைய தாய் தந்தையரை தன்னுடன் வைத்துக்கொள்ளவில்லை என்ற செய்தி பரவியது. அது வக்கீல் சங்கரன் காதிலும் விழுந்தது. இந்தச் செய்தியை அவர் தனக்கு சாதகமாக எப்படி உபயோகித்துக் கொள்ளலாம் என்று சிந்தித்ததில்  அவர் மனதில் ஒரு யோசனை உதித்தது. அதைச் செயலாக்க வேண்டி நீதிபதி சத்தியமூர்த்தியின் பழைய வீட்டைத் தேடி ஒரு செவ்வாய்க் கிழமை சென்றார்.

    சங்கரன் எதிர்பார்த்தபடியே வயாதான தம்பதிகள் தனியாக இருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் சரியான படிக்காத கிராமத்து ஆட்கள் என்பது தெரிந்து போனது அவருக்கு. ‘இவர்களைத் தன் பெற்றோர் என்று சொல்லக் கூச்சப்பட்டுத்தான் சத்தியமூர்ததி அவர்ளை உடன் அழைத்துச் செல்ல வில்லை போலும்’ என்று நினைத்துக் கொண்டார் சங்கரன். தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தார். அவர்கள் வந்தவரை உபசரித்து  காபி கொடுத்தனர். சங்கரன் மெதுவாக அவர்கள் மன நிலையை அறிய சத்தியமூர்த்தியைப் பற்றிக் கேள்விகள் கேட்டுப் பார்த்தார். அவர்கள் பதில் ஒன்றும் திருப்தி அளிப்பதாக இல்லை. இருந்தும் முயற்சியைத் தளர விடாத வக்கீல் இ இப்படித் தனியாக வாழ்வதன் கொடுமையைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

    ‘இத்தனை வசதிகள் இருந்தும்  மகனோடு இருக்க முடியலியேன்னு உங்களுக்கு ஏக்கமா இருக்கும் இல்லேம்மா?’

    ‘ஆமாம்ப்பா! என்ன பண்ண? பல்லக் கடிச்சுப் பொறுத்துக்கத் தான் வேணும். மகன் பெரிய பதவியிலே இருக்காம்லா?’

    ‘ஏன் நீங்க கூடப் போயி இருந்தா என்ன?’

    ‘அது சரியா வராதுல்லா! எங்களுக்கு இங்ஙனக்குள்ள பழகிட்டு. அதான் நாங்க அங்கே போகல’ என்றார்கள்.

    ‘மகனை விட்டுக் கொடுக்கிறார்களா பார்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவர் மீண்டும் தொடர்ந்தார். ‘அம்மா! உங்களை மாதிரி வயசான பெத்தவங்களை பையன் கவனிக்கல்லேன்னா  மகனுக்குத் தண்டனை வாங்கிக் குடுக்கலாம்னு சட்டம் வந்துடுச்சு தெரியுமா? நீங்க ஒண்ணும் பண்ண வேணாம் ! நான் சொல்ற இடத்துல கையெழுத்து மட்டும் போட்டா போதும். மிச்சத்தை நான் பாத்துக்கறேன் ‘ என்றார்.

    ‘யாரு நீ? எதுக்கு எங்களை என் மகனுக்கு எதிராத் தூண்டி விடுதே? உனக்கு என்னலே வேணும்? ‘என்று பெரியவர் கேட்டார் என்றால்

    ‘வாரியலால சாத்துங்க சொல்லுதேன். என்ன தைரியம் இருந்தா நம்ம வீட்டுப் படியேறி வந்து இப்பிடிப் பேசுவான்? நாசமத்துப் போறவனே! போ வெளியே’ என்று கடுமையாகத் திட்டி சங்கரனை வீட்டை விட்டு விரட்டாத குறையாக வெளியேற்றினார்கள். வெளியில் யாருக்கும் இந்த அவமானம் தெரியாமல் மறைத்து விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு அங்கிருந்து அசடு வழியத் திரும்பினார் சங்கரன்.

    இது நடந்து சில நாட்களுக்கெல்லாம் நீதிபதி சத்தியமூர்த்தி  சங்கரனைக் கூப்பிட்டு அனுப்பினார். அவருக்கு உள்ளூர உதறல். தான் செய்தது நீதிபதிக்குத் தெரிந்து விட்டதோவென்று கவலைப் பட்டார். அப்படித் தெரிந்தால் நீதிபதி என்ன செய்வார்? அவர் நினைத்தால் தன்னைப் பழி வாங்க வழியா இல்லை? ஐயையோ அவசரப்பட்டுத் தவறு செய்து விட்டோமேயென்று பயந்து கொண்டு இருந்தார் சங்கரன். கூப்பிட்டனுப்பியும் போகவில்லை என்றால் அது மரியாதை இல்லை என்று நினைத்து பலியாடு போல அவருடைய அறைக்குச் சென்றார்.

    சங்கரன் எதிர்பார்த்துச் சென்றது போல நீதிபதி அவ்வளவு கோபமாக இல்லை. சாதாரணமாகப் பேசி டீ கொடுத்து உபசரித்தார். சங்கரனுக்குத்தான் முள் மேல் உட்கார்ந்திருந்தது போல இருந்தது. சற்று நேரம் உலக விஷயங்கள் எல்லாம் பேசிய பிறகு விஷயத்துக்கு வந்தார் நீதிபதி.

    ‘ஏன் சங்கரன் நீங்க எங்க வீட்டுக்குப் போயிருந்தீங்களாமே? ‘

    ‘ஆமாம் சார்’

    ‘ஏன் சார் ? எங்க அம்மா அப்பாவை எனக்கு எதிராத் தூண்டி விட்டதாகக் கேள்விப்பட்டேனே உண்மையா அது?’

    இதற்கு சங்கரன் என்ன பதில் சொல்லுவார்? மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டு தொடர்ந்தார் நீதிபதி. ‘உங்களுக்கு இந்தப் போஸ்ட் கிடைக்கல்லேன்னு நீங்க கோபத்துல ஸ்டே வாங்க முயற்சி பண்ணுனீங்க ! அது சரி. ஏன்னா அது நேரிடையான அணுகுமுறை. அதை விட்டுட்டு வீட்டுல வயசானவங்க கிட்ட போயி இல்லாத்தையும் பொல்லாததையும் சொல்றது சுத்தக் கோழைத்தனம் சார். அது ஏன் உங்களுக்குப் புரியல்லே?’

    இதற்கும் மௌனம் சாதித்தார் வக்கீல்.

    ‘நான் ஏன் எங்க அப்பா அம்மாவை கூட வெச்சுக்கல்லேங்கறதுக்கு உங்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இருந்தாலும் சொல்றேன் ஏன்னா மத்தவங்களும் நீங்க செஞ்ச மாதிரி முயற்சி செய்யக் கூடாது. எங்கப்பா அம்மாவை யாரும் தொந்தரவு பண்ணி அவங்களுக்கு மனசுக் கஷ்டம் குடுக்கக் கூடாது அதனால சொல்றேன்.’ என்றவர் ஒரு வாய்த் தண்ணீர் குடித்து விட்டுத் தொடர்ந்தார்.’ கவர்ன்மெண்ட் சார்பா எனக்குப் பெரிய வீடு  வேலைக்காரங்க எல்லாம் குடுத்திருக்காங்கன்னு நீங்க பொறாமைப் படறீங்க இல்லே! அது தான் காரணம் நான் என் பேரண்ஸை கூட வெச்சிக்காததுக்கு. ‘

    வக்கீல் விழித்தார்.

    ‘புரியும்படியாவே சொல்றேன். நான் வக்கீலா இருந்தப்போ என் சக்திக்குத் தகுந்த மாதிரி திருவான்மியூர் தாண்டி 900 சதுர அடியில ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கினேன். அங்க தான் நாங்க எல்லாரும் இருந்தோம். இப்போ புதுசா பெரிய வீடு  வேலை ஆளுங்கன்னு எல்லா வசதியும் இருக்கு. இதெல்லாம் அவங்களுக்குப் பழகிடுச்சுன்னா  நான் ஏழு வருஷம் கழிச்சு ரிடயர் ஆகும் போது திரும்ப அந்த சின்ன வீட்டுல அட்ஜஸ்ட் பண்ணிக்க ரொம்பக் கஷ்டப் படுவாங்க. அது மட்டுமில்லே  இத்தனை வேலை ஆட்களையும் அவங்களுக்கு என்னால குடுக்க முடியாது. அப்போ அவங்க மனசு ரொம்ப வருத்தப்படும். வயசான காலத்துல அவங்க மனசு அதையெல்லாம் நெனச்சு ஏக்கப் படக் கூடாதுன்னும் இ எங்களுக்கும் பழைய பழக்கம் விட்டுப் போகக் கூடாதுங்கறதாலயும் தான் நான் அவங்களை என் பழைய வீட்டுலேயே ஒரு குறையும் இல்லாமே வெச்சிருக்கேனே தவிர வேற எந்தக் காரணமும் இல்லை.’ என்று நீண்ட தன் பிரசங்கத்தை முடித்தார்.

    மிகவும் உயர்ந்து விட்ட அந்த நீதிபதியின் எதிரில் கூனிக் குறுகியபடி ஒன்றும் பேசாமல் வெளியேறினார் சங்கரன்.

     

    Share
  • நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-15)

    ஸ்ரீஜா வெங்கடேஷ்

    சுந்தரத்தின் ஆபீசில் பரபரப்பாகப் பல நிகழ்ச்சிகள் அரங்கேறின. சுந்தரத்தைச் சந்தேகப்பட்டு அவனிடம் பேசிய பிறகு மேனேஜருக்கு விஜிலன்ஸ் டிபார்ட்மெண்ட் ஆசாமி ஒருவரிடமிருந்து ஃபோன் வந்தது. அவர் சொன்ன செய்தியைக் கேட்டு மேனேஜருக்கு ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் தேவையில்லாமல் சுந்தரத்தைச் சந்தேகித்தோமே என்று தோன்றியது. விஷயம் இது தான்.

    சுந்தரம் பெயருக்குக் கெட்ட பெயர் உண்டு பண்ணும் நோக்கத்தோடு வந்த மொட்டை லெட்டர்களைப் பற்றி மேனேஜரிடம் விஜிலன்ஸ் டிபார்ட்மெண்ட்காரர்கள் சொன்ன போதே அவர் சுந்தரத்தின் மேல் தப்பு இருக்க முடியாதே என்று யோசித்தார். அதனால் அவர்”எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு! இந்த எல்லா லெட்டரையுமே ஒரே நபர்கள் தான் எழுதியிருக்கணும். சுந்தரத்தைப் பிடிக்காத யாரோ தான் இதைச் செஞ்சிருக்கணும். அதனால நீங்க எதுக்கும் இந்த லெட்டர்சை ஒரு கையெழுத்து ஸ்பெஷலிஸ்ட் கிட்ட அனுப்பி ஒரு ஒப்பினியன் வாங்கிக்குங்க” என்று கூறியிருந்தார்.

    அவர் சொன்னதைக் கேட்டு விஜிலன்ஸ் டிபார்ட்மெண்டைச் சேர்ந்த சுப்பிரமணியமும், போலீசில் இருந்த தன் நண்பரின் உதவியோடு ஒரு கையெழுத்து நிபுணரிடம் கொடுத்தார். அவரும் அதைப் பரிசோதித்துப் பார்த்து விட்டு,”மொத்தம் 10 லெட்டர்கள் இருக்கு, ஆனா இதை எதோ ரெண்டு பேர் தான் எழுதியிருக்காங்க!” என்று கூறியியிருந்தார். அந்த விஷயத்தைச் சுப்பிரமணியம் மேனேஜரிடம் தெரிவித்தார். அதைக் கேட்டதும் மேனேஜருக்குப் பொறி தட்டியது.

    வேலுமணி, கணேசன் இவர்கள் இரண்டு பெயருடைய கையெழுத்தும் அடங்கிய ஃபைலை சுப்பிரமணியத்திடம் கொடுத்து அவற்றைப் பரிசோதிக்கும்படி சொன்னார். அதன் ரிசல்டைத்தான் இப்போது சுப்பிரமணியம் மேனேஜரிடம் ஃபோனில் தெரிவித்தார். சுப்பிரமணியம் கூறியது மேனேஜர் நினைத்ததைப் போலவே இருந்தது. அந்த மொட்டை லெட்டர்களை எல்லாம் எழுதியவர்கள் வேலுமணியும்,கணேசனும் தான் என்று கையெழுத்து நிபுணர் தெரிவித்து விட்டதாகச் சுப்பிரமணியம் கூறினார்.

    அதை வைத்து வேலுமணியிடமும், கணேசனிடமும் துருவித்துருவிக் கேட்ட போது அவர்களே ஒரு கட்டத்தில் சுந்தரத்தின் மேல் உள்ள பகையால் தாங்கள் சுந்தரத்தைப் பழி வாங்க அவ்வாறு செய்தோம் என்று ஒப்புக் கொண்டார்கள். ஆனால் வெளி நாட்டுக்குப் பணம் அனுப்பிய விவரம் சம்பந்தமாக தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினர்.

    அதைக் கேட்டதிலிருந்து மேனேஜருக்கு சுந்தரத்தின் மேல் மரியாதை ஓங்கியது.

    “சே! நான் அவசரப்பட்டிருக்கக் கூடாது. இந்த ரிசல்ட் வந்தப்புறம் சுந்தரத்துக் கிட்ட பேசியிருக்கணும். ஏன் அவசரப் பட்டேன்னு தெரியல. இப்போ அவருக்குத் தேவையில்லாத மனசு கஷ்டம். ஆனா வெளி நாட்டுக்குப் பணம் அனுப்புன வெவகாரம்? அதுக்கு என்ன பதில்” என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே சுந்தரம் வந்து விட்டான்.

    “சார்! நான் என்னை நிரபராதின்னு நிரூபிக்க வேண்டிய ஆதாரங்களோடு வந்துருக்கேன் சார்!”

    “சுந்தரம் உங்க ஆதாரங்களை எல்லாம் நான் கண்டிப்பாப் பாக்குறேன்! ஆனா உங்க மிஸஸ் ஏன் வெளி நாட்டுக்குப் பணம் அனுப்புனாங்கன்னு தெரிஞ்சுதா?”

    “தெரிஞ்சுது சார்! அவங்க ஒரு இ-மெயிலை நம்பி ஏதோ ஒரு அட்ரசுக்கு பரிசு விழும்னு நம்பி சவுத் ஆப்பிரிக்காவுக்கு பணம் அனுப்பியிருக்காங்க! தன்னோட சொந்த சேமிப்புலர்ந்தும், ஒரு நகையை அடமானம் வெச்சும் தான் அந்தப் பணத்தை அனுப்பியிருக்காங்க! அதுக்குண்டான ஆதாரங்கள் எல்லாம் நான் கைவசம் வெச்சுருக்கேன் சார்” என்றான் பரபரப்போடு.

    “கவலைப் படாதீங்க சுந்தரம்! கடவுள் உங்க பக்கம் இருக்கார். அந்த பேப்பர்சை எல்லாம் குடுங்க!” என்று அவற்றை வாங்கி ஒவ்வொன்றாகப் பார்த்தார். அவற்றைப் பார்த்து விட்டு நிமிரும்போது அவர் முகம் தெளிவடைந்திருந்தது. நேரே சுப்பிரமணியத்துக்கு ஃபோனைச் சுற்றி ஸ்பீக்கரில் போட்டார்.

    “மிஸ்டர். சுப்பிரமணியம், சுந்தரம் வீட்டுக்கு ரெய்டு போகணும்ங்கற அவசியம் இல்ல. அவரு அந்தப் பணம் சம்பந்தமான எல்லா டாக்குமெண்ட்சையும் நீட்டாக் கொண்டு வந்திட்டாரு. அது மட்டுமில்ல தன்னோட ரெண்டு வருஷ பேங்க் அக்கவுண்ட் ஸ்டேட்மெண்டையும் கொண்டு வந்திருக்காரு அதுல அப்டி ஒண்ணும் நெறயப் பணம் போடப் படல. அதனால வீடு ரெய்டு செய்யப்படத் தேவையில்ல”

    “அப்டியா சார்? ரொம்ப சந்தோஷம். நீங்க சொன்னா மாதிரியே அவரு நிரபராதின்னு ப்ரூவ் ஆய்டிச்சே! ரொம்ப சந்தோஷம் சார்!”

    “ஆமா மிஸ்டர். சுப்பிரமணியம். எனக்கே கூட ரொம்பக் கஷ்டமா இருந்தது. எனக்கு சுந்தரத்தை ரொம்ப வருஷமாத் தெரியும். அவரு இப்டி ஒரு காரியத்தைச் செஞ்சிருப்பாருன்னு என்னால கற்பனை கூடப் பண்ணிப்பாக்க முடியல. ஆனா என்ன பண்ண? சூழ்நிலை அவருக்கெதிரா இருந்ததே? அதான் உங்க கிட்ட சொல்ல வேண்டியதாயிடுச்சு”

    “போனது போகட்டும் சார். இப்போ மிஸ்டர். சுந்தரம் எங்கே? அவர் கிட்ட சொல்லிட்டீங்களா? அவர் நிரபராதின்னு?

    “இல்ல! இன்னும் சொல்லல்ல! இப்போ அவரு இதையெல்லாம் கேட்டுக்கிட்டு என் எதுத்தாபோலத்தான் உக்காந்துருக்காரு. நான் இப்பவே அவருக்கு வெளக்கமாச் சொல்லிடறேன்” என்று கூறி ஃபோனை வைத்தார்.

    எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த சுந்தரத்துக்கு ஆகாயத்தில் பறப்பது மாதிரி இருந்தது.

    “என் மேல இருந்த களங்கம் போயிடுச்சா? எங்க வீட்டுக்கு ரெய்டு வராதா? எப்படி இந்த திடீர் மாத்தம்? கடவுளே உனக்கு நன்றி! முருகா! நீ என்னைக் காப்பத்திட்டப்பா” என்று அவன் மனம் கனிந்து கசிந்து உருகியது.

    “என்ன சுந்தரம் அப்டியே பிரமிச்சுப் போயி உக்காந்துட்டீங்க?”

    மேனேஜர் குரலைக் கேட்டதும் கனவிலிருந்து மீண்டவன் மாதிரி திடுக்கிட்டவன் அவரை நோக்கி,

    “சார்! நீங்க இப்போ ஃபோன்ல பேசினது எல்லாம் நிஜமா? நான் நிரபராதின்னு ப்ரூவ் ஆயிடிச்சா? எப்டி? இப்போ ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி கூட என்னைச் சந்தேகப் பட்டீங்களே? நான் வீட்டுக்குப் போயிட்டு டாக்குமெண்ட்சையெல்லாம் கொண்டு வரதுக்குள்ள எப்டி சார் நான் நிரபராதின்னு ப்ரூவ் ஆச்சு? என்னால நம்பவே முடியல சார்!”

    “பதறாதீங்க சுந்தரம். உக்காருங்க! முதல்ல இந்தத் தண்ணியக் குடிங்க!” என்றவர் தண்ணீரை நீட்டினார். அதை வாங்கிப் பருகியவனை நோக்கி

    “எல்லாம் விவரமா மொதல்லருந்து சொல்றேன் கேளுங்க! நீங்க வீட்டுக்கு டாக்குமெண்ட்சை எடுக்கப் போனதும் எனக்கு விஜிலன்ஸ் டிபார்ட்மெண்ட் சுப்பிரமணியத்துக்கிட்டருந்து ஃபோன் வந்துது. மொட்டை லெட்டர்கள்ள இருக்குற கையெழுத்தும், கணேசன், வேலுமணி கையெழுத்தும் ஒண்ணுதான்னு கையெழுத்து எக்ஸ்பெர்ட் ரிப்போர்ட் குடுத்துட்டாரு. அதை வெச்சிக்கிட்டு இவங்க அந்த ரெண்டு பேரையும் கொடஞ்சிருக்காங்க! ஒரு ஸ்டேஜில அவங்களே கொடச்சல் தாங்க முடியாம மொட்டை லெட்டர் போட்டது தாங்கதான்ன்னு ஒப்புக்கிட்டாங்க!. அதனால் உங்க மேல இருந்த சந்தேகம் 80% குறஞ்சிடுச்சு. இப்போ நீங்க வெளி நாட்டுக்குப் பணம் அனுப்புன ரெக்கார்ட்சையும், உங்க பேங்க் ஸ்டேட்மெண்டையும் கொண்டு வந்தீங்க அப்போ உங்க மேல இருந்த மீதி 20% சந்தேகமும் தீந்து போச்சு.”

    “சார்! உண்மையாவா சொல்றீங்க? கணேசனும்,வேலுமணியுமா அந்த மொட்டை லெட்டர்களைப் போட்டது?”

    “ஆமா சுந்தரம்! அவங்க திட்டம் போட்டு வேலை செஞ்சிருக்காங்க! மத்தவங்க பாக்கும் போது வேணும்னே உங்க கிட்ட நெருங்கிப் பேசறா மாதிரி நடிச்சிருக்காங்க! அப்பத்தான் மத்தவங்களளுக்கும் உங்க மேல சந்தேகம் வரும்னு. என்ன ஒரு வில்லத்தனம் பாத்தீங்களா?”

    ” ஏயப்பா! இவ்ளோ வேலை செய்துருக்காங்களா அவங்க? அவங்க கேட்டு நான் அந்த ஃபைலைத் தர மாட்டேன்னு சொல்லிட்டேன். அந்தக் கோவத்துல என்னை இப்டிப் பழி வாங்கியிருக்காங்க!”

    “ஆமா சுந்தரம்! கொஞ்ச நேரத்துக்கு நான் கூட உங்களைத் தப்பா நெனச்சேன். ஐ ஆம் சாரி! உங்களுக்குப் புரமோஷன் கெடைக்க சிபாரிசு பண்றேன். நான் பண்ண தப்புக்கு அது பரிகாரமா இருக்கட்டும்”

    “ரொம்ப தேங்க்ஸ் சார்! ஆமா! இப்போ அவங்க ரெண்டு பேர் நெலம என்னாகும்?”

    “யாரு வேலுமணி, கணேசனா? அவங்க மேல ஏகப்பட்ட புகார் இருக்கு. இப்போ நீங்க அவங்க மேல உங்க புகார் குடுத்தீங்கன்னா கண்டிப்பா வேலை போயிடும். ஊழல் செஞ்சதாச் சொல்லப் படற அமௌண்டையும் கட்ட வேண்டி வரும்.”

    “ஏன் சார் நான் புகார் குடுத்தாலும், குடுக்காட்டாலும் அவங்களுக்கு வேலை போறது உறுதியா சார்?”

    “ஆமா! அப்டித்தான் சுப்பிரமணியம் சொன்னார்”

    “அப்டீன்னா நான் அவங்க மேல எந்தப் புகாரும் குடுக்கல்ல சார்!”

    “வாட்? நீங்க அவங்களுக்கு எதிரா கம்பிளெயிண்ட் குடுக்கப் போறதில்லியா? ஏன் சுந்தரம்? அவங்களால உங்களுக்கு எவ்ளோ மனசுக் கஷ்டம் வந்துச்சு? அதையெல்லாம் மறந்துட்டீங்களா?”

    “மறக்கல சார்! ஆனா நான் கம்பிளெயிண்ட் குடுத்ததால தான் அவங்களுக்கு வேலை போச்சுன்னு நெனச்சுக்கிட்டு என் மேல மேலும் பகை வரும் சார். பாவம் சார் அவங்களும். பிள்ளைக்குட்டிக்காரங்க! பொழச்சுப் போகட்டும்! என் விஷயத்துல தலையிடாம இருந்தா அதுவே போதும்.”

    “சுந்தரம் யூ ஆர் கிரேட்! இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்னு குறளுக்கு நீங்க தான் எக்சாம்பிள். வெல் டன்! எனக்கு மனசுக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு”

    “தேங்க்ஸ் சார்! நான் அப்போ வீட்டுக்குப் போயி நான் நிரபராதின்னு ப்ரூவ் ஆயிடிச்சுன்னு என் மகன் கிட்ட சொல்லலாமா சார்?”

    “கண்டிப்பா! இப்பவே கிளம்புங்க! உங்க மனைவி கிட்ட மொதல்ல சொல்லுங்க அவங்க பாவம் எவ்ளோ டென்ஷனோட இருக்காங்களோ?”

    மனைவி என்ற சொல்லைக் கேட்டதும் சுந்தரத்தின் முகம் இறுகியது. மேற்கொண்டு ஒன்றும் பேசாமல் மேனேஜரிடம் விடை பெற்றுக் கொண்டு வீட்டை நோக்கி விரைந்தான்.

    கதவைத்திறந்தவன் நிகில் தான். அப்பாவின் புன்னகை பூத்த முகத்தைப் பார்த்ததுமே வந்த ஆபத்து நீங்கி விட்டது என்று உணர்ந்து கொண்டான் அவன். கதவைத் திறந்தவனை அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டான் சுந்தரம்.

    “நிகில்! கண்ணா! என் மேல இருந்த பழி நீங்கிடுச்சுடா கண்ணா! உங்கப்பா நிரபராதின்னு எல்லாரும் சொல்லிட்டாங்க! நாக்கு மேல பல்லைப் போட்டு என்னைக் குத்தம் சொன்னவங்க எல்லாம் எங்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிட்டாங்கடா நிகில்!” சொல்ல சொல்லவே கண்களில் நீர் பெருகியது கல்யாணிக்கு.

    “அப்பா! வடபழனி ஆண்டவா! என் மனக்குறையைத் தீர்த்தியே! வேண்டிக்கிட்டபடியே உனக்கு பாலாபிஷேகம் பண்றேம்ப்பா!” என்றவள் ஓடிப் போய் திருநீறை எடுத்துப் பூசிக் கொண்டாள். ஆவலோடு சுந்தரத்தின் அருகே வந்து

    “என்னங்க? எப்டி நீங்க தப்பு செய்யல்லன்னு கண்டு பிடிச்சாங்க?”

    அவள் இருப்பதையே லட்சியம் செய்யாமல் நிகிலையே பார்த்துப் பேசிக் கொண்டிருந்தான் சுந்தரம்.

    “அப்பா! அம்மா கேக்குறாங்க ஏன் பதில் சொல்ல மாட்டேங்கறீங்க?”

    முகம் கடுமையானது. அதைப் பார்த்து நிகிலுக்கே பயம் வந்தது. கல்யாணி நொந்து போனாள்.

    “டேய் நிகில்! இனிமே உங்கம்மாவோட பேச்சை எங்கிட்ட எடுக்காதே! அவ என் எதிரி. என் நேர்மையையே கேள்விக்குறி ஆக்கின ராட்சசி.”

    “என்னப்பா இப்டிச் சொல்றீங்க? இப்போதான் எல்லாம் சரியாயிடுச்சே? அப்புறம் என்ன?”

    “என்ன இருந்தாலும் கொஞ்ச நாள் எல்லாரும் என்னை ஆபீசுல சந்தேகமாப் பாத்தாங்க இல்லியா? அதுக்குக் காரணம் யாரு? இவ தானே?”

    “என்னங்க பிளீஸ் நாந்தான் தெரியாமப் பண்ணிட்டேன்னு சொல்றேனே! உங்க கால்ல விழுந்துனாலும் மன்னிப்புக் கேட்டுக்கறேன்”

    “நிகில்! உங்கம்மாவைப் பேசாம இருக்கச் சொல்லு, நான் இப்போ ரொம்ப சந்தோஷமான மூட்ல இருக்கேன். அதைக் கெடுக்கச் சொல்லாதே”

    “சரி சரி! இதை அப்புறமாப் பாத்துக்குவோம். நீங்க முதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லுங்க? எனக்கு எதுவுமே தெரியாது” என்றான் நிகில்.

    எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னான் சுந்தரம். வேலுமணியும்,கணேசனும் ஊழல் செய்தது, திட்டம் போட்டு சுந்தரத்தை மாட்டி வைத்தது, மொட்டை லெட்டர் போட்டது எல்லாம் சொன்னான்.

    “இதெல்லாம் போதாதுன்னு உங்கம்மா வெளி நாட்டுக்கு பணத்தை அனுப்பி என்னைத் தலையே தூக்க முடியாதபடி செஞ்சா! ஆனாலும் தெய்வம் என் பக்கம். என்ன இருந்தாலும் நியாயம் ஒரு நாள் ஜெயிக்கத்தானே செய்யும்? நான் கொண்டு போன டாக்குமெண்ட்சையெல்லாம் பாத்துட்டு எங்க மேனேஜர் தன் தப்பை உணர்ந்துட்டார். அதோட லெட்டர் போட்டது அவங்க தன்னு ரெண்டு பேரும் ஒத்துக்கவே நான் தப்பிச்சேன்”

    கல்யாணியின் கண்களிலிருந்து பெருகிய கண்ணீர் நிற்கவேயில்லை. தான் செய்த காரியத்தின் தீவிரம் அப்போதுதான் அவளுக்கு உறைத்தது.

    “என்ன காரியம் செஞ்சிட்டோம்? நான் அந்த ரசீதுகளை மட்டும் பத்திரமா வெச்சுருக்கல்லன்னா என்ன ஆகியிருக்கும்? அவரு பேருக்குத் தீராத களங்கம் இல்ல உண்டாயிருக்கும்? அப்போ இந்தக் குடும்ப நிலைமை என்ன? நல்ல வேளை கெட்ட நேரத்துலயும் ஒரு நல்ல நேரம் நான் இந்த ரசீதுகளைப் பத்திரமா வெச்சேன். முருகா நன்றி!” என்று முருகனுக்கு மனத்துள் நன்றி சொன்னாள்.

    நிகில் மீண்டும் ஆரம்பித்தான்.

    “அப்பா உங்களுக்குக் கெட்ட பேர் வரணும்னு வேலை செஞ்ச அந்த ரெண்டு பேர் மேலயும் கம்பிளெயிண்ட் குடுத்தீட்டீங்க இல்ல? மான நஷ்ட கேஸ் போட்டு நல்லா உள்ள தள்ளணும் அப்பத்தான் இவங்களுக்கு எல்லாம் புத்தி வரும்”

    “இல்ல நிகில். நான் அவங்க மேல கம்பிளெயிண்ட் குடுக்கல்ல! ஏற்கனவே கஷ்டத்துல இருக்காங்க பாவம்! ஏதோ தெரியாம தப்பு செஞ்சிட்டாங்க! நானும் கூடச் சேர்ந்து சொன்னா அவங்களுக்கு பாவம் எதிர்காலமே இல்லாமப் போயிடும். எப்படி இருந்தாலும் அவங்களுக்கு வேலை போகப் போகுதுன்னு உறுதியாயிடுச்சு, இந்நேரத்துல போய், மான நஷ்ட வழக்கு அது இதுன்னிக்கிட்டு, அவங்களும் குடும்பஸ்தங்க தானே! போறாங்க விடு”

    நிகிலுக்கு தன் தந்தையை நினைத்துப் பெருமையாக இருந்தது.

    “அப்பா!, உங்களை அம்மா கூப்புடுறாங்க!” என்றான் வேண்டுமேன்றே.

    “நிகில்! நான் சொன்னா சொன்னது தான். உங்கம்மாவோட நான் இனிமேப் பேசறதாயில்ல. அவ செஞ்ச காரியம் அப்டிடா! உனக்கு பைக் வாங்க வெச்சிருந்த பணத்தைத் தூக்கி விட்டுருக்கா! அம்பதாயிரம் சாதாரணத் தொகையா? நான் எதை வேணா மன்னிப்பேன் ஆனா உன் பைக் பணத்தை எடுத்து என் நேர்மைக்கு களங்கம் உண்டாக்க முயற்சி பண்ணாளே அதை என்னால மன்னிக்கவே முடியாது.”

    “அம்மா தெரியாம தானே செஞ்சாங்க!”

    “தெரிஞ்சோ தெரியாமலோ! எனக்குப் பிடிக்கல்ல!”

    “அப்பா, நான் ஒண்ணு சொன்னாத் தப்பா நெனைக்க மாட்டீங்களே?”

    “சொல்லுடா”

    “உங்களை வேணும்னே பிளான் பண்ணி மாட்டி விட்ட அவங்களை ரெண்டு பேரையும் மன்னிச்சு சும்மா விட்டுட்டீங்க ஏதோ அம்மா நம்ம வீட்டுக்கு நிறையப் பணம் வரணும் நம்மள்ளாம் சந்தோஷமா இருக்கனும்கறதுக்காக தெரியாமக் கொண்டு போயி பணத்தைக் கட்டி ஏமாந்துருக்காங்க! அவங்களை மன்னிக்க மாட்டீங்க ஏன்ப்பா அப்பிடி?”

    கல்யாணிக்கு நிகிலா இவ்வளவு பெரிய மனிதத்தனமாகப் பேசுகிறான் என்று இருந்தது.

    “அப்பா! ஒரு வேளை அம்மா பணம் கட்டி எதிர் பார்த்தபடி அந்த அஞ்சு கோடி ரூவா வந்திருந்துதுனா நாம எல்லாரும் தானே அதை எஞ்சாய் பண்ணியிருப்போம்? அதுக்கு மட்டும் அம்மா வேணும் , இப்போ மட்டும் மன்னிக்க மாட்டோம்னா எப்டிப்பா?”

    “டேய்! நிகில் அவ பணம் கட்னதால எனக்கு ஏற்பட்ட அவமானத்தையே நான் மறந்துட்டேன்னே வெச்சிக்கோ! ஆனா பணம்? உன் பைக்குக்குன்னு ஆசப்பட்டு சேத்ததுடா! என்னால இப்போ உடனடியாப் பணம் குடுத்து உனக்கொரு பைக் வாங்கித் தர முடியாது! நீ அதை மறந்துடாதே”

    “பைக்! பைக்! அது போனாப் போகட்டும்ப்பா! நம்ம வீடு எப்பவும் போல கலகலப்பா இருந்தாப் போதும் எனக்கு! அம்மா வேலை செய்ய ஆரம்பிச்சதுலருந்து வீடு வீடாவே இல்ல! அப்போ என் மனசுக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா? இப்போ எல்லாம் சரியானப்புறமும் நீங்க அம்மாவோட பேச மாட்டேன்னு சொன்னா அப்புறம் நம்ம வீடு நரகமாத்தான் ஆகும். இன்னும் ஒரு வருஷத்துல நான் யூ.எஸ் போயிடுவேன். அப்போ ரெண்டு பேரும் மோட்டு வளையைப் பாத்துக்கிட்டு உக்காந்துருப்பீங்களா இல்ல என் கிளாஸ் மேட் சுப்ரியாவோட அம்மா அப்பா மாதிரி டைவர்ஸ் பண்ணிடுவீங்களா?”

    “டேய் நிகில்!”

    “பின்ன என்னப்பா? அம்மா தான் தெரியாம செஞ்சுட்டேன் உங்க கால்ல கூட விழறேன்னு சொல்றாங்க அப்புறமும் நீங்க இப்டிப் பேசினா?”

    சுந்தரத்தின் மனம் இளகியது. “பாவம் கல்யாணி! ஏதோ எங்கள் மேல் இருக்கும் அன்பினால் தான் இதையெல்லாம் செய்திருக்கிறாள். எனக்கு மானக்கேடு வருமென்று தெரிந்திருந்தால் ஒரு நாளும் அந்த வேலையைச் செய்யவே மாட்டாள். நானும் தான் ரொம்பக் கடுமையாப் பேசிட்டேன். என் கிட்ட சொல்லப் பயந்துக்கிட்டு தான் அவ சொல்லல்ல! இத்தனை நாளா அவ மனசு என்ன பாடு பட்டிருக்கும்?” என்று எண்ணமிட்டான்.

    கல்யாணியை அவன் பார்த்த பார்வையில் இப்போது அன்பும் காதலும் இருந்தது. அதைப் புரிந்து கொண்டவள் ஓடோடி வந்து சுந்தரத்தின் அருகில் நின்றாள்.

    “என்னங்க? என்னை மன்னிச்சிடுங்க! எனக்கு இனிமே இந்தக் கம்ப்யூட்டரே வேணாம். போதும் போதும் நான் சம்பாதிச்சது. எல்லாத்தையும் தான் தொலச்சுட்டேனே”

    “அப்டிச் சொல்லாதே கல்யாணி! இதை ஒரு நல்ல எக்ஸ்பீரியன்சா எடுத்துக்கோ! இனிமே உனக்கு இந்த மாதிரி இ-மெயில் வந்தா அதைக் கண்டுக்கவே கண்டுக்காதே. இக்னோர் பண்ணிடு! உன்னோட இந்த எக்ஸ்பீரியன்சை நாலு பேருக்கு எடுத்துச் சொல்லு. அவங்களாவது ஏமாறாம இருப்பாங்க இல்ல? ஆனா சுஜாதாவோட ஆபீஸ்ல செய்யற பார்ட் டைம் வேலையை விடாதே!”

    “சரிங்க”

    “அதுக்குன்னு முன்ன மாதிரி வீட்டை விட வேலை முக்கியம்னு இருக்காதே! நீ ஓய்வா இருக்கற நேரத்துல மட்டும் வேலை செய். அதனால எவ்ளோ குறையப் பணம் வந்தாலும் பரவாயில்ல, பணம் முக்கியம்தான் வாழ்க்கைக்கு. ஆனா அதை விட நிம்மதி முக்கியம் அதை மறந்துடாதே!”

    “சரிங்க! நான் எப்டி பைத்தியமா இருந்திருக்கேன்னு இப்போ நெனச்சுப் பாக்கும்போது தாங்க தெரியுது”

    “அம்மா! அதுக்குன்னு என் ஃபிரெண்ட்ஸ் வீட்டுக்கு வந்தா அவங்க கூட உக்காந்து டேட்டிங், சேட்டிங்ன்னு பேச ஆரம்பிச்சுடாதீங்க! நீங்க நீங்களாவே இருங்க. அப்டி இருந்தாத்தான் நல்லாயிருக்கு”

    அம்மா, அப்பா, மகன் மூவரின் சிரிப்பையும் அந்த வீடு எதிரொலித்தது.

    (தொடரும்) 

    படத்திற்கு நன்றி: http://www.srikaliyammansecurityserviceanddetectivebureau.com/contactus.aspx#

    Share