Blog

  • உலகமே ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும் அமெரிக்கத் தேர்தல்!

     

    பவள சங்கரி

    தலையங்கம்


    அனைத்துலகும் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒபாமா மற்றும் மிட் ராம்னி என் இரு பெரும் தலைவர்கள் பங்கேற்கும் மிகப்பெரிய ஜனநாயக விழா, பல ஆயிரம் கோடி (5500 டாலர்) செலவில் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் எதுவாக இருப்பினும் நிலையான முடிவுகள் என்று சில உண்டு. இந்தியாவுடனான தொடர்புகள் தொடரப்போவதில் சந்தேகம் இல்லை. சீனாவுடனான வணிகத் தொடர்புகள் கட்டுப்பாட்டுக்குள் வரலாம். பாகிஸ்தானுக்கான உதவிகள் தொடர்ந்தாலும் அவைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். தகவல் தொழில்நுட்பத் துறையில் வெளிநாட்டவருக்கான வேலை வாய்ப்பு, போன்றவைகள் யார் ஆட்சிக்கு வந்தாலும் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்வதற்கான சாத்தியங்கள் அதிகம். வெற்றிகரமான தொழில் அதிபரா அல்லது மக்களின் மனதில் குடிகொண்டிருக்கும் அதிபரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  இன்னும் 48 மணி நேரத்தில் ஓரளவிற்குத் தெரிந்துவிடும். பணக்காரத் தத்துவம் நிறைந்த , சிறந்த தொழிலதிபரான மிட் ராம்னி தேர்ந்தெடுக்கப்பட்டால் செல்வந்தரின் நலனுக்காக மட்டுமே முடிவெடுத்து, செயல்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு தொழிலகங்களிலும் கொத்துக் கொத்தாக மக்கள் வேலை இழக்கக்கூடிய அபாயம் மேலும் அதிகரிக்கலாம். அமெரிக்க முதலாளித்துவ தத்துவங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும். அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் பெரும்பாலும் பெரும் செல்வந்தர்களின் முதலீடுகளைப் பாதுகாப்பதாகவே அமையும். அதிபர் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டால் ஏழை மக்களின் நலவாழ்வு பாதுகாக்கப்படும் வாய்ப்பு அதிகம்.  புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் தொடர்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். ஏழை மக்களின் கண்ணீர் துடைப்புகளுக்கான நம்பிக்கை அதிகரிக்கலாம். ஏழை மக்களின் கண்ணீரா அல்லது செல்வந்தரின் பாதுகாக்கப்படும் செல்வமா என்று பொறுத்திருந்து பார்ப்போம். வாழ்க அமெரிக்க ஜனநாயகம்!

    படத்திற்கு நன்றி :

    http://www.bbc.co.uk/news/world-us-canada-20180630

     

    Share
  • பிழைத்திட…

     

     செண்பக ஜெகதீசன்

    பேருந்து ஓட்டை அடைக்கக்கூட
    பலி கேட்கிறது சட்டம்,
    பள்ளிச்சிறுமியின் உயிரை..

    சட்டத்தின் ஓட்டை அடைத்திட
    முயன்றால்,
    சாவு எத்தனையோ..

    அட,
    அதுமட்டும் நடக்காது-
    அதை வைத்துத்தானே
    ஆட்சியாளர்கள் மற்றும்
    பலரது பிழைப்பே…!

    படத்துக்கு நன்றி

    http://www.thehindu.com/news/cities/chennai/article3682688.ece

               

    Share
  • திருத்தப்பட்ட தீர்ப்புகள்

     

    முகில் தினகரன்

    பிரசவ வார்டின் முன்பகுதியில் கேட்டுக் கொண்டிருந்த அந்தக் கத்தல்களும்…களேபரங்களும் சீஃப் டாக்டர்  நந்தினி வர சட்டென்று அடங்கிப் போயின.

    “என்ன…என்ன இங்க சத்தம்?…இதென்ன பிரசவ வார்டா இல்ல மீன் கடையா?” குரலில் இருந்த கம்பீரம் எல்லோரையும் ஸ்தம்பித்து நிற்கச் செய்ய சற்று தைரியமான ஒரு நர்ஸ் மட்டும் முன் வந்து பதில் சொன்னாள்.

    “டாக்டா;…ஒரு சிக்கலான பிரசவ கேஸ் அட்மிட் ஆகியிருக்கு, இவங்கெல்லாம் அந்தப் பொண்ணோட உறவுக்காரங்க..”

    “இருக்கட்டும்…அதுக்காக சத்தம் எதுக்குப் போடணும்?”

    “இல்ல டாக்டா;…அந்தப் பொண்ணு…சொன்ன பேச்சுக் கேட்காம இந்த நிலைல டூவீலர் ஓட்டிப் பழகப் போயி கீழ விழுந்திருக்கு…வயத்துல எக்கச்சக்கமா அடிபட்டிருக்கு… அதான் சொந்தக்காரங்கெல்லாம் …அதோட புருஷன் உட்பட அந்தப் பொண்ணைத் திட்டித் தீர்த்துட்டிருக்காங்க”

    “வாட் நான்சென்ஸ்?..எதுக்கு அந்தப் பொண்ணைத் திட்டணும்?…அவளைத் திட்டிட்டா எல்லாம் சரியாய்டுமா?…இந்தக் கூட்டத்துல அந்தப் பொண்ணோட புருஷன் யாரு காட்டு… நான் கேட்கறேன்..” சீஃப் டாக்டர் நந்தினி கடுப்பாகி நோக்க,

    சற்று மாநிறமாய்…அகன்ற முகத்துடன்…குள்ளமாய்…குண்டாய் இருந்த ஒருவனை நர்ஸ் முன்னுக்கு அழைத்தாள்.

    வந்தவனிடம் பேச சீஃப் டாக்டர் நந்தினி வாயெடுக்கும் முன் அவனே முந்திக் கொண்டு,

    “த பாரு டாக்டர்…நானும் எங்காத்தாவும் இந்தச் சனியன் புடிச்சவகிட்ட படிச்சுப் படிச்சுச் சொன்னோம்… “வாயும் வயிறுமாய் இருக்கறே..வண்டிய எடுக்காதே”ன்னு…கேட்டாளா?…இப்ப வந்திடுச்சல்ல…கேடு வந்திடுச்சல்ல?…அதான் சொல்லிப் போட்டோம்.. அதோட வயத்துல இருக்கறது எங்க வம்சத்தோட வாரிசு… அதுக்கு மட்டும் ஏதாச்சும் ஆகியிருக்கட்டும்… மவளே.. அப்புறம் கவனிச்சுக்கறோம் அவளை…”

    “எங்க குல விளக்கு மட்டும் உசுரோட பொறக்கலே….இந்தச் சிறுக்கி மவளுக்கு நானே சங்கு ஊதி…நானே கொள்ளி போட்டுடுவேன்… ”மாமியார்க்காரி போல் தெரிந்த ஒருத்தி சாமியாடினாள்.

    டென்ஷனாகிப் போன சீஃப் டாக்டர் நந்தினி, “இங்க பாருங்க…இதெல்லாம் எதிர்பாராம நடக்கற விபத்துக்கள்…யாரும் வேணுமின்னு எதுவும் செய்யறதில்லை…”

    “நீ…என்ன வேணா சொல்லு டாக்டரம்மா..எங்க வம்ச விளக்கு மட்டும் நல்லபடியா வரலை… இங்க நடக்கறதே வேற…”

    சொல்லித் திருத்த முடியாத இந்த ஜென்மங்களிடம் தொடர்ந்து பேசுவதில் சிறிதும் பிரயோஜனமில்லை என்பதை உணர்ந்த சீஃப் டாக்டா; பிரசவ அறையை நோக்கி வேகவேகமாக நடக்க,

    கத்தல்களும்… களேபரங்களும் மறுபடியம் மெல்லமாய்த் தலை தூக்க ஆரம்பித்தன.

    பிரசவ அறை.

    கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் கடுமையாகப் போராடிய சீஃப் டாக்டர் நந்தினியால் பெரிய உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.

    “எங்க குல விளக்கு மட்டும் உசுரோட பொறக்கல….இந்தச் சிறுக்கி மவளுக்கு நானே சங்கு ஊதி…நானே கொள்ளி போட்டுடுவேன்…” என்ற மாமியாரின் மிரட்டலும்

    “எங்க வம்ச விளக்கு மட்டும் நல்லபடியா வரலை…இங்க நடக்கறதே வேற…” என்ற புருஷனின் அதட்டலும்,  சீஃப் டாக்டா; நந்தினியின் காதுகளில் திரும்பத் திரும்ப எதிரொலிக்க, குழம்பிப் போனார்.

    “இப்ப என்ன செய்யறது…எப்படி சமாளிக்கறது…இந்தச் சூழ்நிலைல வெளிய நிக்கற கூட்டத்துக்கு தகவல் தெரிஞ்சுது அவ்வளவுதான்…இந்தப் பொண்ணோட கதி அதோ கதிதான்”

    “டாக்டா;…இப்ப என்ன பண்றது?” அசிஸ்டெண்ட் சர்ஜன் விமலா கேட்க,

    நெற்றியைத் தடவிக் கொண்டு யோசித்த சீஃப் டாக்டா; நந்தினி, திடிரென ஒரு முடிவுக்கு வந்தவராய் “கரெக்ட்…அதுதான் ஒரே வழி” எனத் தனக்குள் சொல்லிக் கொள்ள,

    “டாக்டா;…?”

    “ம்ம்ம்…மிஸ்.விமலா..ஆறாவது வார்டுல இன்னிக்குக் காலைல ஒரு பெண்ணுக்கு பிரசவம் ஆச்சே..பெண் குழந்தை பிறந்ததே?…,”

    “ஆமாம் டாக்டர்”

    “அந்தப் பொண்ணு மயக்கம் தெளிஞ்சு எழுந்தாச்சா?”

    “இல்ல டாக்டா;…இன்னும் தெளியலை” என்ற அசிஸ்டெண்ட் சர்ஜன் “ஏன் டாக்டர்?..எதுக்குக் கேட்கறீங்க?”

    “அந்தப் பொண்ணு நேத்திக்கு என்கிட்ட ஒரு வேண்டுகோள் வெச்சுது”

    “என்ன வேண்டுகோள் டாக்டர;?”

    “ஏற்கனவே அவளுக்கு மூணு பெண் குழந்தைகளாம்..நாலாவதா ஒண்ணு போன வருஷம் பொறந்திச்சாம்… அதுவும் பொண்ணாப் போயிட்டதால அவளோட புருஷனும் மாமியார்காரியும் சேர்ந்து அந்தப் பெண் குழந்தையை கள்ளிப் பாலுக்கு பலியாக்கிட்டாங்களாம்… இப்ப ஐந்தாவதா பொறக்கப் போறதும் ஒரு வேளை பொண்ணாயிருந்திட்டா அவ மயக்கம் தெளியறதுக்கு முன்னாடியே அதை நான் அழிச்சிடனுமாம்… இல்லென்னா எங்காவது கொண்டு போய் அனாதை ஆசிரமத்துல சேர்த்துடனுமாம், ஏன்னா… எப்படியும் வீட்டுக்குப் போனதும் அவ புருஷனும் மாமியாரும் அந்தக் குழந்தையைக் கொல்லத்தான் போறாங்களாம்.. ஹூம்…ஒரு டாக்டரான நான் உயிர்களை காப்பாற்ற மட்டுமே செய்வேன் எந்தச் சூழ்நிலையிலும் அதை அழிக்க முற்பட மாட்டேன்னு பாவம் அந்தப் பொண்ணுக்குத் தெரியலை”

    “டாக்டர் நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலை” அசிஸ்டெண்ட் சர்ஜன் விமலா புருவத்தைச் சுருக்கிக் கொண்டு கேட்க,

    “அந்தப் பெண் மயக்கம் தெளியறதுக்கு முன்னாடி அந்தக் குழந்தையை எடுத்திட்டு வந்து இங்க போட்டுடு…அதே மாதிரி இறந்து பிறந்த இந்தக் குழந்தையைக் கொண்டு போய் அங்க போட்டுடு”

    “டாக்டா;…..”

    “யோசிக்கவே வேண்டாம்…எப்படியும் அந்தப் பெண் குழந்தை வீட்டுக்குப் போனதும் கள்ளிப் பாலுக்கு இரையாகத்தான் போகின்றது.. எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டாத அந்த ஜென்மங்க கிட்டயிருந்து இந்தப் பெண் குழந்தையைக் காப்பாத்த ஒரே வழி இதுதான்”

    “டாக்டர் …நீங்க சொல்றதெல்லாம் சரிதான்…ஆனாலும்…இது…”

    “மிஸ்.விமலா அப்படியே இந்தப் பக்கமும் கொஞ்சம் பாருங்க… “குழந்தை மட்டும் செத்துப் பிறக்கட்டும் உன்னையக் கவனிச்சுக்கறேன்”னு கட்டினவனும் அவளோட உறவுக்காரங்களும் குமுறிக்கிட்டிருக்கற இந்த நெலைல நாம போய் “குழந்தை இறந்துதான் பிறந்தது”ன்னு சொன்னா என்ன நடக்கும்?….யோசிச்சுப் பாரு”

    “அய்யோ டாக்டர், அந்தக் கும்பல் அந்தப் பொண்ணை இங்கியெ வெச்சுக் கொன்னாலும் கொன்னு போட்டுடுவாங்க” சொல்லும் போதே அசிஸ்டெண்ட் சர்ஜன் விமலாவின் உடல் லேசாக நடுங்கியது.

    “புரியதா?…இப்பப் புரியதா..நான் ஏன் அப்படிச் செய்யச் சொன்னேன்னு?”

    “இருந்தாலும் டாக்டர், இது தப்பில்லையா?”

    “மிஸ்.விமலா…ஆண்டவன் சில சமயம் சில தவறுகளை செய்து விடுகிறான்…அதாவது வேண்டாம்னு நெனைக்கறவங்களுக்கே திரும்பத் திரும்ப நிறையக் குடுக்கறான்…அதே சமயம் “வேணும்…வேணும்”னு  ஏங்கறவங்களுக்கு ‘இல்லை’ன்னு ‘பொசுக்’குன்னு கையை விரிச்சிடறான்…அதான் ஆண்டவனோட இந்தச் சிறிய தவறை நான் திருத்தறேன்… அவ்வளவுதான்… நான் செய்யற இந்தச் செயலினாலே ஒரு குழந்தை இந்த உலகத்துல உயிரோட இருக்கும்…ஒரு தாய் இந்த உலகத்துல சந்தோஷமா வாழ்வா…அது போதும்மா எனக்கு…”

    அசிஸ்டெண்ட் சர்ஜன் விமலா பதிலேதும் பேசாது அமைதி காக்க,

    “என்னடா இது…அதிகப் பிரசங்கித்தனமா ஆண்டவனையே திருத்தறேன்னு சொல்றாளே அப்படின்னு நீ நினைக்கறது எனக்குப் புரியது மிஸ்.விமலா…அதே நேரம் நீயும் ஒண்ணைப் புரிஞ்சுக்கோ டாக்டர்களுக்கு ஆண்டவனைத் திருத்தற அந்த உரிமை இருக்கு! ஏன்னா… அவங்க ஆண்டவனோட பிரதிநிதிகள்”

    நெகிழ்ந்து போய் சீஃப் டாக்டர் நந்தினியை தலையாட்டலில் பாராட்டிய அந்த அசிஸ்டெண்ட் சர்ஜன் அவர; இட்ட கட்டளையை படு நாசூக்காக யாருக்கும் சிறிதும் சந்தேகம் ஏற்படாத வகையில் செய்து முடித்தாள்.

    ஆறாவது வார்டில்

    “இன்னாது…பொட்டக் கொளந்த செத்துப் பொறந்திச்சா?..ரொம்ப சந்தோஷம்..நமக்கு வேலை மிச்சம்” கல் மனசுக் கணவன் கரகரத்த குரலில் சொல்ல, அவன் தாய் முக மலர்ச்சியுடன் மேலும் கீழுமாய்த் தலையாட்டினாள்.

    அதே நேரம்….பிரசவ வார்டில்…

    “எப்படியோ டாக்டர் எங்க வம்ச வாரிச…மகாலட்சுமிய…உசுரோட பொறக்க வெச்சுக் குடுத்துட்டீங்க… நீங்க நல்லா இருக்கோணும்” புருஷன்காரன் சீஃப் டாக்டர்; நந்தினியைக் கும்பிட,

    அவன் அம்மாக்காரி மருமகளின் தலையைத் தடவிக் குடுத்தபடி சொன்னாள் “பின்னே…எப்பேர்ப்பட்ட வம்சத்துல வந்து உதிச்சிருக்கற குழந்தை இது…இந்த மாதிரியான சின்னச் சின்ன விபத்துக்கெல்லாம் செத்துடுமா என்ன?”

     

    Share
  • பனங்காய் சுமக்கும் குருவி

     

     சு. கோதண்டராமன்

    சீக்கிரம் போவணும், சீக்கிரம் போவணும்

    அடுத்த வீட்டுக்காரி முந்திக்கிட்டான்னா,

    நம்ம பூ விக்காது.

    எல்லாப் பூவும் வித்து,

    பூக்காரருக்குக் கணக்குத் தீர்த்து,

    அரிசி வாங்கியாந்து,

    சோறாக்கணும்.

    நேரமாச்சுன்னா,

    அப்பா குடிச்சிட்டு வந்து,

    அம்மாவை அடிக்கும்.

    இனியும் அடிவாங்கினா,

    அம்மா செத்துடும்.

    சீக்கிரம் போவணும், சீக்கிரம் போவணும். 

     

    படத்துக்கு நன்றி

     

    http://www.photographersdirect.com/buyers/stockphoto.asp?imageid=1194193


    Share
  • he Science of Stock Market Investment – Practical Guide to Intelligent Investors

    பிரபு

    பங்குச் சந்தை முதலீடு பற்றி ஏராளமான புத்தகங்கள் வந்துள்ளன்ன. எல்லாப் புத்தகமும் தன்னளவில் ஒரு அடிப்படைக் கோணத்தை நமக்கு ஊட்டுகின்றது. சில புத்தகங்கள் அவற்றில் சொல்லியிருக்கிற விஷயத்தின் ஸ்திரத்தன்மை காரணமாக காலத்தை வென்று நீடித்து நிலைத்து விடுகின்றன. சில புத்தகங்கள் செய்தித்தாளைப் போல நாளைக்கு பழசாகிப் போவதும் உண்டு. காலத்தைக் கடந்து நிற்கிற புத்தகங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படையான ஒரு அம்சம் இருக்கும். அது வாசிக்கிற வாசகர் மனதில் சிந்தனை மாற்றத்தை உண்டுபண்ணுவது. அல்லது ஒரு குறிப்பிட்ட சங்கதியை நோக்கி அணுகும் பார்வையை மாற்றுவது. சரியான பார்வையில் நோக்குமாறு பார்க்கத் தூண்டுவது.

    அப்படியாகப்பட்ட புத்தகங்கள் நிறையவே உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்க பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க வாசகர்களுக்காக எழுதப்பட்டு, வேறு வழியில்லாமல் இந்திய வாசகர்களாலும் ஏற்றுக்கொள்ளபட்டவை. பங்கு முதலீட்டின் அடிப்படை சாராம்சங்களை இந்திய பங்குச் சந்தை தொடர்பான உதாரணங்களோடு வெளிக்கொணர்ந்த புத்தகங்கள் வெகு சிலவாகவே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு புத்தகம்தான் The Science of Stock Market Investment – Practical Guide to Intelligent Investors by Chellamuthu Kuppusamy (www.amazon.com/dp/B009XUI1X6)

    பொதுவாக ஒரு துறை சார்ந்த நூல்கள் அது தொடர்பான டெக்னிகல் சொற்களைக் கூடுதலாகக் கொண்டிருக்கும். படிக்கிற எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்கும் என்ற நினைப்பில் அப்படியான புத்தகங்களை எழுதிகிறார்களா அல்லது நாங்கள்தான் வல்லுனர் கூட்டம், படிக்கிற நீங்களெல்லாம் பாமரர்கள், என்ன வேண்டுமானாலும் எங்களைச் சார்ந்துதான் நீங்கள் இருந்தாக வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்களா தெரியவில்லை. செல்லமுத்து குப்புசாமியின் The Science of Stock Market Investment மிகவும் அடிப்படையான விஷயங்களை, ஆழமாகவும், எளிமையாகவும் விளக்குகிறது.

    பங்குச் சந்தை என்பது பெரிய கம்ப சூத்திரமல்ல. அதே நேரத்தில் அது சூதாட்டமுமல்ல. தொடர்ச்சியாக தன்னை மேம்படுத்திக்கொள்ள முனையும் ஒருவனால் முழுமையான முதலீட்டாளர் ஆக முடியும். நாம் முதலில் முதலிட வேண்டியது நமது அறிவை. பிறகு கொஞ்ச நேரத்தை. அதற்குப் பிறகுதான் பணத்தை என்று இந்தப் புத்தகம் வலியிறுத்துகிறது. (ஆனால் அநேகம் பேர் இந்த வரிசையில் கடைசியில் தொடங்குகிறார்கள். முதல் படியைத் தொடுவதேயில்லை) அறிவை முதலீடு செய்வதென்று முடிவெடுத்தால் அதற்கான முக்கியமான படியாகவும் இந்தப் புத்தகம் அமையும்.

    முதலில் கதை சொல்வதைப் போலத்தான் புத்தகம் ஆரம்பிக்கிறது, கடற்கரையில் காலை நனைப்பதைப் போல. பிறகு போகப் போக நமக்கே தெரியாமல் உள்ளே இழுத்துச் சென்று மூழ்கி முத்தெடுப்பது போன்ற உணர்வு உண்டாகிறது. முத்துக் குளிப்பதும், மூச்சையடக்குவதும் இவ்வளவுதானா என ஆகி விடுகிறது. கம்பெனி என்றால் என்ன, பங்குதாரர்கள் யார், மேனேஜ்மெண்ட் என்ன, டைரக்டர்களின் பாத்திரம் என்ன, பங்குச் சந்தைகள் எனப்படும் ஸ்டாக் எக்சேஞ்ச்களில் என்ன செய்கின்றன, ஷேர் புரோக்கர்கள் யார், அவர்கள் நம்மைப் பயன்படுத்திக்கொள்ளாமல் நாம் அவர்களை எப்படிப் பயன்படுத்துவது,  சென்செக்ஸ்-நிஃப்டி என்றெல்லாம் பேசுகிறார்களே அது என்ன, அதில் என்னென்ன கம்பெனிகள் இருக்கின்றன, அதை ஒரு அளவுகோலாகக் கொண்டு பொதுவான பொருளாதாரத்தையும், ஒரு தனி நபரின் முதலீட்டு வெற்றியையும் ஒப்பிடலாமா, அப்படி ஒப்பிட்டால் எப்படி நம்மை நாமே அளந்து கொள்வது, IPO எனப்படும் பிரைமரி மார்க்கெட் – அதில் கவனிக்க வேண்டிய பல தரப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசுகிறது புத்தகம்.

    பிறகு முதலீட்டாளர்களுக்கும், சூதாடிகளுக்குமான வேறுபாட்டைப் புலப்படுத்துகிறது. தன்னை முதலீட்டாளர் என நினைத்துக்கொண்டு உண்மையில் சூதாட்டம் செய்துகொண்டிருக்கும் ஆட்களை இது எச்சரிக்கிறது. சூதாடியாக இருப்பதில் தவறில்லை. ஆனால் அப்படி இருப்பதே தெரியாமல் இருப்பதில் உள்ள சிக்கலை உணர்த்துக்கிறது. யாரோ சொன்னார்கள், பத்திரிக்கையில் எழுதினார்கள், பிசினஸ் நியூஸ் சேனலில் ஆலோசனை கூறினார்கள் என்றெல்லாம் முதலீடு செய்யாமல் சுயமாக ஆராய்ந்து குறை நிறைகளை சீர் தூக்கிப் பார்த்த பின் முதலீடு செய்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஒரு மனிதன் தான் எடுக்கும் முடிவுகளுக்கும், தனது செயல்களுக்கு தானே பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவது எல்லா இடத்திலும் நல்லது. பங்குச் சந்தையில் கூடுதலாக நல்லது. அதே போல அளவுக்கு அதிகமான ஆசையை வளர்த்து, பங்குச் சந்தையில் ராவோடு ராவாக கோடீஸ்வரர் ஆகி விடலாம் என நம்பும் மடத்தனத்தையும் எச்சரிக்கிறார் செல்லமுத்து குப்புசாமி. அளவான எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டு இயங்குவோர் நிபுணர்கள் என தம்மை அழைத்துக்கொள்வோரை விட கூடுதலான வெற்றியை ஈட்ட முடியும் என்பதைப் புரிய வைக்கிறார்.

    உலகமே போற்றிய விஞ்ஞானி ஐசக் நியூட்டனே பங்கு விலை அதிகமாக இருக்கிறடு என்று முதலீடு செய்வதத் தவிர்த்திருக்கிறார். மார்க்கெட் ஏறிக்கொண்டே போயிருக்கிறது. அவர் வேண்டாம் என நினைத்த விலையை விட அதிக விலைக்கு பிற்பாடு வாங்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில் மார்க்கெட் ஒரேயடியாகச் சரிந்து கிட்டத்தட்ட போண்டியாகி விட்டாராம். நியூட்டனுக்கே அந்த நிலையென்றால் யோசிக்க வேண்டும் என்கிறார் செல்லமுத்து. பங்கு முதலீடு முழுக்க முழுக்க கலையுமில்லை, முழுக்க முழுக்க வாய்ப்படுகளால் அடக்கி விட முடிகிற விஞ்ஞானமும் இல்லை. இவை இரண்டும் மானுடமும், உளவியலும் கலந்த கலவை.

    அடுத்தபடியாக, பணவீக்கம், வட்டி வீதம், இவை இரண்டும் பங்குச் சந்தை முதலீட்டையும் ஏனைய பிற முதலீடுகளையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றிய ஒரு அத்தியாயம் வருகிறது. பணத்தின் ஆற்றல், காலத்தின் ஆற்றல் மற்றும் இவை இரண்டும் சேர்ந்தால் உண்டாகும் சூப்பர் பவர் பற்றிப் பேசுகிறது. உதாரணங்களோடு தெளிவாக விளக்குகிறது. ஐன்ஸ்டீன் power of compounding ஐ எட்டாவது அதிசயம் என்று சொன்னதை நினைவூட்டுகிறது. அதன் பின்னர், இலாபம் சம்பாதிக்கிறோமோ இல்லையோ நஷ்டம் அடையக் கூடாது என்பதை ஒரு அத்தியாயம் வலியுறுத்துகிறது.

    இப்படி விளையாட்டு விதி முறைகளைப் பற்றிச் சொல்லி விட்டு, விளையாடுவதற்குக் கற்றுக்கொடுக்கும் அத்தியாயங்கள் வருகின்றன. பங்குகளை எப்படி ஆராய்வது, ஒரு பிசினசை எப்படி மதிப்பீடு செய்வது, பேலன்ஸ் ஷீட், லாப நட்டக் கணக்கு, பங்கு வல்லுனர்கள் உபயோகப்படுத்தும் பல நம்பர்கள், குறியீடுகள், அளவிகள், அவற்றில் அடங்கியிருக்கும் சூட்சுமங்கள் எல்லாவற்றையும் அலசுகிறது. பிறகு பல்வேறு முதலீட்டு அணுகுமுறைகளை அலசுகிறது. Value investor Vs growth investor, அடிப்படை ஆயுவு Vs டெக்னிகல் ஆய்வு, டிவிடெண்ட்கள், போனஸ், ஸ்பிலிட், உரிமைப் பங்குகள் முதலிய கார்ப்பரேட் நடவடிக்கைகளை நமக்குப் புரிய வைக்கிறது.

    அதன் பிறகு எனக்குப் பிடித்த ஒரு அத்தியாயம் வருகிறது. ராகுல் திராவிட் பேட்டிங் ஸ்டைலை ஆராய்ந்து அதை எப்படி பங்கு முதலீட்டுக்கு முன் மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வெகு இலாவகமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. உலகின் மிக வெற்றிகரமான முதலீட்டாளர் வாரன் பஃபட் உபயோகித்த ஆர்பிட்ரேஜ் அணுகுமுறை விளக்கப்படுகிறது. வாரன் பஃபட் மற்றும் அவரது குருநாதர் பெஞ்சமின் கிரஹாம் பயன்படுத்திய, பயன்படுத்தச் சொல்லி மற்றவர்களை ஊக்கப்படுத்திய உத்திகளை எல்லாம் விளக்குகிறார் செல்லமுத்து குப்புசாமி. நல்ல கம்பெனியாக இருந்தாலும் மோசமான மேனேஞ்மெண்ட் இருந்தால் ஆபத்து என்பதற்காக ஒரு அத்தியாயத்தை ஒதுக்கியிருக்கிறார். பெரும்பாலான முதலீட்டாளர்கள் செய்யக்கூடிய அடிப்படைத் தவறுகளைப் பட்டியலிடுகிறார். வாரன் பஃபட் கூட ஒரு தருணத்தில் தனது முதலீட்டு வாழ்வில் செய்த அபத்தமான தவறுகளைப் பட்டியலிட்டிருந்தார். தான் செய்த தவறுகளில் இருந்து மட்டுமல்லாமல், பிறரது தவறுகளில் இருந்து பாடம் கற்பதற்கு இந்த அத்தியாயம் உதவும். இன்னும் சில அத்த்தியாயங்களின் பெயர்கள் நான் இங்கே குறிப்பிடவில்லை. அதற்காக அவை முக்கியமில்லை என்றல்ல என்பதைச் சொல்லிக்கொள்கிறேன்.

    குறிப்பாகக் கவனிக்க வேண்டிய இன்னொரு அத்தியாயம் Behavioral Finance தொடர்பானது. பலரும் அலட்சியப்படுத்தும் ஒரு துறை. இதைப் பற்றியே பல ஆயுவுகளை வெளியிட முடியும் என்று சொல்லும் நூலாசிரியர், பங்கு முதலீட்டில் இது செலுத்தும் ஆதிக்கம், அது எவ்வாறு முடிவுகளைத் தீர்மானிக்கிறது என்பதை விளக்குகிறார். பிறகு தன்னைத் தானே தொடர்ச்சியாக மேம்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். கூடவே பொருளாரத் துறையின் பிற சங்கதிகளைப் பற்றி ஒரு அத்தியாயத்தில் பேசுகிறார். அது எவ்வாறு பங்கு முதலீட்டைப் பாதிக்கிறது என்பதை விளக்குகிறார். முடிவாக மேலதிகத் தகவல்களை எப்படிப் பெறுவது, ஏதேவது பிரச்சினை என்றால் எங்கே முறையிடுவது, விதிமுறைகள், நெறிமுறைகள் பற்றியெல்லாம் விளக்குகி ஆல் த பெஸ்ட் சொல்கிறார்.

    The Science of Stock Market Investment – Practical Guide to Intelligent Investors என்ற இந்தப் புத்தகம் அச்சு வடிவில் வெளிவரவில்லை. அமேசான்.காமில் (www.amazon.com/dp/B009XUI1X6) மின் புத்தகமாக வாங்கிக் கொள்ள்ளலாம். வாங்கிய பின் Kindle ரீடர் இருந்தால் அதன் மூலம் வாசிக்கலாம். இல்லையென்றால் Kindle for PC  என்ற இலவச சாஃப்ட்வேரை http://www.amazon.com/gp/feature.html/ref=sv_kstore_1?ie=UTF8&docId=1000493771 இல் இருந்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் பண்ணிக்கொண்டு நமது கம்ப்யூட்டரிலேயே வாசிக்கலாம்.

    மிகவும் நல்ல முயற்சி. ஊக்குவிக்கப்பட வேண்டியது. ஏனென்றால், இது தியரியாக வறட்சியான விஷயங்களைப் பற்றி மட்டும் பேசாமல் நடைமுறை உதாரணங்களைக் கொண்டிருக்கிறது. படிக்கிற விஷயத்தை இலகுவாக செயல்படுத்துவதில் சிக்கலில்லாத அருமையான நூல்.
    ****

    Share
  • தனக்கொரு நியாயம்

     

    விசாகை மனோகரன்

    திவாகர் ஆபீஸ் வந்து, சீட்டில் அமர்ந்தான். பக்கத்து சீட்டில் இருக்கும் அவன் நண்பன் சதீஷ் இன்னும் வரவில்லை. வந்துவிடுவான். ஏதாவது டிராபிக் ஜாமாயிருக்கும். சிங்காரச் சென்னையில் அதற்க்குத்தான் பஞ்சமேயில்லையே. பத்து வருடங்களுக்கு முன்பு இரண்டு பேரும் ஒரே நாளில் இந்த பெரிய தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்கள். நல்ல நண்பர்கள். அதோ சதீஷ் வந்துவிட்டான்.

    வாடா, ஏன் லேட்டு? டிராபிக் ஜாமா?

    ஆமாண்டா. எலெக்டிரிக்  டிரெய்ன்ல ஏறமுடியல கூட்டம், பஸ்ல வந்தேன்.

    ஏண்டா இன்னிக்கு தெரியுமா நம்ம சம்பள உயர்வு பத்தி?

    ஆமாம். என்ன பண்ணப்போறாங்களோ!

    எப்படியும்  மாசம் ஒரு 5000/ உசராது? பாக்கலாம்.

    சுமார் 11மணி  வாக்கில் அவர்களது மேஜையில் வந்து விழுந்தன சம்பள சீட்டுக் கவர். இரண்டு பேரும் ஆவலுடன்  பிரித்தார்கள். சதீஷ் சந்தோஷத்துடன் “திவா, நீ சொன்னமாதிரியே 5000/ ரூபா உசந்திருக்குடா!” திவாகர் பேசவில்லை. பேயறைஞ்ச மாதிரி இருந்தான்.

    திவா, திவா என்னடா?

    ஒண்ணூம் சொல்லாமல் சீட்டை அவனிடம் நீட்டினான் திவாகர். அதில் அவனுக்கு வெறும் 2000/ தான் உயர்வு என்று இருந்தது. என்ன சொல்லவதென்று புரியவில்லை சதீஷ்க்கு. மவுனமாயிருந்தான்.

    திவாகர் சீட்டை எடுத்துக் கொண்டு மேலதிகாரியிடம் சென்றான்

    சார், என்ன இது? வெறும் 2000/ ரூபா உசந்திருக்கு?

    ஆமாம் திவாகர், நீங்க பன்ற வேலைக்குத் தகுந்த  மாதிரி கம்பெனி கொடுத்திருக்கு.

    எப்படி சார் இது நியாயம்? நானும் சதீஷும் ஒண்ணா சேந்தோம். ஒரே வேலை பாக்கறோம். அவனுக்கு 5000, எனக்கு 2000மா?

    நீங்களும் அவரும் ஒண்ணா சேர்ந்திருக்கலாம், ஆனா ஒரே வேலை பாக்கறோம்னு சொல்லாதீங்க. அவர் டேபிள்ல பாத்தீங்களா? ஒரு ஃபைல் பெண்டிங் இருக்கா? சரி, மாசம் எவ்வளவு லீவ் போடறாரு? நீங்க? போங்க ஸார், போயி வேலைய ஒழுங்கா பாருங்க. அப்பறம் கேளுங்க.

    ஒன்றும் பேசாமல், பேச முடியாமல், சாயங்காலம் வீட்டிற்கு டல்லாக வந்து, உட்கார்ந்தான். அவன் முகத்தைப் பார்த்து, என்னவோ சரியில்லை என்று புரிந்து கொண்ட அவன் மனைவி, கல்லூரிக்குச் செல்லும் மகனையும், பள்ளிக்கு செல்லும் மகளையும் அருகில் அழைத்து “அப்பா மூஞ்சி சரியில்ல, ஆபீஸ்ல ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன். இரண்டு பேரும் சத்தம் போடாதீங்க” அப்படின்னு சொன்னா.

    கொஞ்ச நேரம்  கழித்து காபியுடன் நுழைந்த அவள்..

    “ஏங்க ஒரு  மாதிரி இருக்கீங்க? ஏதாவது பிரச்சனையா” ந்னு கேட்டாள்.

    ஆமாம்டி, நான் ஆபீஸ்ல வேலையே செய்யறதில்லையாம், ஃபைல் பெண்டிங் வெக்கறேனாம், லீவ் நிறைய போடறேனாம், அது இதுன்னு சொல்லி என்னைய சதீஷோட கம்பேர் பண்ணி, அவனுக்கு 5000, எனக்கு வெறும் 2000 தான் சமபளம் உயர்வுன்னு சொல்றாங்கடி.

    விடுங்க போகட்டும், ஏன் டென்சன்?

    அதில்ல எனக்கு. அவங்க “உனக்கு இவ்வளவுதான்”னு சொன்னா கூட பரவாயில்ல. அதென்ன இன்னொருத்தன் கூட கம்பேரிசன். அதான் எனக்கு பிடிக்கல.

    விடுங்க. வந்து  சாபிடுங்க வாங்க

    நான் கொஞ்ச  நேரம் கழிச்சு வரேன். நீ பசங்களுக்கு குடு.

    கொஞ்ச நேரம்  கழிச்சு, சாப்பிடப் போனா, பையன்  அம்மாகிட்ட அப்பான்னு ஏதோ சொல்லிக்கிட்டிருந்தான்.

    “ஏம்மா, போன  மாசம் நான் நம்ம பக்கத்து வீட்டு விஷ்ணுவோட ஃபைக் மாதிரி எனக்கும் வாங்கித்தாங்கப்பான்னதுக்கு, அவன மாதிரி நீயும் மார்க் வாங்கிக் காமி, பாக்கலாம்ன்னு கம்பேர் பண்ணினாரே அது கரெக்ட்டு, ஆபீஸ்ல பண்ணினா மட்டும் தப்பா?. இது என்னம்மா தனக்கொரு நியாயம், மத்தவங்களுக்கு வேறயா?”

    எனக்கு சுருக்குன்னு குத்திச்சு. அது கரெக்ட்டுன்னா  இதுவும்….

    சிரிப்பு  வந்தது, அறிவும் வந்தது. நாளைக்கு பையனுக்கு ஃபைக் வாங்கணும்

    எங்கியோ ஒரு பாட்டு கேட்டது..

    “துன்பம் வரும் வேளையில சிரிங்க
    என்று சொல்லிவெச்சான் வள்ளுவரு சரிங்க”.

    Share
  • ரசிகன்

    தமிழ்த்தேனீ

    ஆகாஷ் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்துடன் தெளிவான பார்வையுடன் நின்றிருந்தான்.“ஏண்டா, உங்க டீச்சர் உன் மேலே புகார் குடுக்கறாங்க, நீ அதிகப் பிரசங்கித் தனமா நடந்துக்குறியாமே?” என்று அதட்டினான் ரமேஷ்.

    “இல்லேப்பா நான் சரியாத்தான் நடந்துக்கறேன். டீச்சர் என்னை ஆஃல்பாபெடிக் ஆர்டர்லே ஏ பீ சீ டீ எழுதச் சொன்னாங்க, எழுதினேன். மறுபடியும் அதையே தலைகீழா எழுதச் சொன்னாங்க, எனக்கு கையெல்லாம் வலிச்சிதுப்பா. அதுனாலே ஒரு ஐடியா பண்ணேன், நான் ஆஃல்பாபெடிக்லே எழுதியிருந்ததை தலைகீழாக் காமிச்சேன், அப்போ தலைகீழாத் தெரியுமில்லே அதான். அந்த டீச்சருக்குப் புரியலைப்பா, திட்றாங்க” என்றான் ஆகாஷ்.

     “அப்புறம் தமிழ்லே ஒரு பாடம் எழுதச் சொன்னாங்க, அதிலே ஒரு வரிலே “அவள் சென்றாள்” ன்னு எழுதினேன், அதைப் படிச்சிட்டு எல்லாம் சரியாத்தான் எழுதி இருக்கே. ஆனா இந்த “அவள்“ அப்பிடீங்கிறதுலே மட்டும் தப்பா எழுதி இருக்கே. “அவல்” ன்னு எழுதி இருக்கே, அதுனாலே பெரிய “ள்” போடணும்னாங்க. சரின்னு சொல்லிட்டு ‘அவல்’ன்னு பெரிசா எழுதிக் காட்டினேன் திட்றாங்க” என்றான்.

    பேரனை உச்சி மோந்தபடி, “என் பேரன் கெட்டிக்காரன் நல்லா யோசிக்கறான்” என்றாள் பாக்கியம். “போதும்மா, நீங்க அவனுக்கு ரொம்பச் செல்லம் குடுக்கறீங்க அதான்” என்றான் ரமேஷ். ஆனாலும் மனதுக்குள் இந்தச் சிறு வயதில் ஆகாஷோட புத்திசாலித் தனம் அவனுக்குள் ஒரு சிரிப்பை வரவழைத்திருந்தது. மகனை ரசித்துக் கொண்டே உணவருந்தினான் ரமேஷ்.

    “பாட்டி, ஒரு கதை சொல்றியா?” அன்பாகக் கேட்டான் பேரன் ஆகாஷ்.   “என்னாலே முடியாது!” என்றாள் பாக்கியம் தீர்மானமான குரலில். உண்டு முடித்துக் கை கழுவித் துடைத்துக் கொண்டே வந்த ரமேஷ், “ஏம்மா? அவன் ஆசையாக் கதை கேக்கறான், ஏன் சொல்ல மாட்டேங்கற? என்றான்.

     “உன் பையனுக்குக் கதை சொல்ல என்னாலே முடியாதுப்பா. நீ சொல்லு, அவன் கேக்கட்டும்” என்றாள் பாக்கியம்.

    “டேய் கண்ணா ஆகாஷ், இங்கே வா” என்று மடியில் உட்கார வைத்துக் கொண்டு, “அப்பா நான் சொல்றேன் கதை” என்றான் ரமேஷ். “போப்பா, உனக்குக் கதை சொல்லத் தெரியாது” என்றான் ஆகாஷ். அதிர்ந்தான் ரமேஷ். இன்றைக்குத் திரை உலகமே வியந்து பாராட்டும் ஒரு முதன்மை இயக்குனன் அவன். ஆகாஷ் சொன்னது ரமேஷின் தன்மானத்தையே பாதித்து விட்டது. “இல்லைடா கண்ணா, நான் நல்லாக் கதை சொல்லுவேன், இப்போ ஒரு கதை சொல்றேன், நீ கேக்கணும்” என்றான் அதட்டும் குரலில். ஆகாஷ் பயந்து போய் வேறு வழியில்லாமல் கதை கேட்க ஆரம்பித்தான்.

     பாக்கியம் நமுட்டுச் சிரிப்புடன் அவனையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். “ராமாயணம் கதை உனக்குச் சொல்லட்டுமா? ராமரோட பொண்டாட்டி சீதையை ராவணன் தூக்கிண்டு போயிட்டான். அவங்களை எங்கே வெச்சிருக்கான் ராவணன்? அப்பிடீன்னு கண்டு பிடிக்க அனுமாரை அனுப்பினாங்க”

    “போங்கப்பா, இது வரைக்குத்தான் சொல்லிக் கிட்டே இருக்கீங்க, அதுக்கு மேலே சொல்ல மாட்டேங்கறீங்க, அது சரி, உங்களுக்குப் புதுசா எதுவும் கதை சொல்லத் தெரியாதா? எனக்கு இந்தக் கதை வேணாம், உண்மையாக் கதை வேணும்” என்றான் ஆகாஷ்.

     “சரிதான், உனக்குப் பாட்டி ஏன் கதை சொல்ல மாட்டேங்கறாங்கன்னு இப்போ புரியுது. பெரியவங்க சொன்னாக் கேட்டுக்கணும். எதுத்துப் பேசக் கூடாது” என்றான் ரமேஷ். “அப்பிடித்தான் கேப்பேன், பாட்டிதான் சொன்னாங்க. சந்தேகம் வந்தாக் கேக்கணும். அப்போத்தான் அறிவு வளரும்ன்னு” என்றான் ஆகாஷ்.

     “ஏம்ப்பா. உன்னோட ரசிகர்கள் உன்னைக் கேள்வி கேக்கறதில்லே? அதே மாதிரிப் பையனும் உன்னைக் கேள்வி கேக்கக் கூடாதுன்னா முடியுமா? ரசிகர்கள் எதிர்க் கேள்வி கேட்டா எப்பேர்ப்பட்ட டைரக்டரும் பதில் சொல்ல முடியாதுப்பா. ஆனாப் பையன் கிட்டே உன் பாச்சா பலிக்காது” என்றாள் பாக்கியம்.    “சரி.. சரி.. நீ பாட்டி கிட்டயே கதை கேட்டுக்கோ” என்றபடி அங்கிருந்து நழுவினான் ரமேஷ்.

     “பாட்டி ஒரு கதை சொல்லு பாட்டி, நான் சமத்தாக் கேக்கறேன்” என்றான் ஆகாஷ். மனமிளகிய பாட்டி பாக்கியம், “சரி உங்க அப்பா சொன்னாரே, அந்தக் கதையைச் சொல்றேன். அனுமார் கதை சொல்றேன் சரியா” என்றாள் ஆர்வமாகக் கதை கேட்க உட்கார்ந்தான் ஆகாஷ்.

     “அனுமார் வானத்திலே பறந்து போயி” என்று ஆரம்பித்தாள் பாட்டி, உடனே “ஆகாஷ் ஏன் அப்போல்லாம் ஏரோப்ளேன் கிடையாதா?” என்றான். “இல்லேடா, அப்போக் கண்டு பிடிக்கலே”

     “சரி, மேலே கேளு. லங்கைக்குப் போனார். அங்கே போயிப் பார்த்தா அந்த நாட்டுலே ஒரு அழகான வனம் இருந்துது, அங்கே போயி இறங்கினார். அவருக்கு மனசுக்குள்ளே ஒரே கோவம். அவர் தெய்வமா நினைக்கிற ஶ்ரீராமனோட பொண்டாட்டி சீதையை ராவணன் கடத்திண்டு வந்துட்டான். அந்தக் கோவத்திலே ஆக்ரோஷமாப் போயிண்டு இருக்கார். அப்போ இந்திரஜித்னு ஒரு ராட்சசன் பிரும்மாஸ்திரம் போட்டு அவரைக் கட்டிப் புட்டான்.”

     “அங்கே இருந்த ராக்‌ஷசா எல்லாம் அனுமாரைக் கேலி செஞ்சுண்டே அவரோட வால்லே நெருப்பு வச்சா” என்றாள் பாக்கியம்.   “ஏன் பாட்டி, உடனே அனுமார் ஃபயர் இஞ்சினுக்குப் போன் போட்டுக் கூப்பிட வேண்டியதுதானே?” என்றான் ஆகாஷ்.

     “இதோ பாரு, எனக்குத் தூக்கம் வருது, நானும் நீயும் தூங்கலாமா” என்றாள் பாக்கியம்.

     

    Share
  • “யாமும் சேறுகம். நீயிரும் வம்மின்…” [3வது தொகுப்பு]: [4] வாலி வதைப் படலம்

     

    இன்னம்பூரான்

    இராவணனால் வாலியின் வாலைக் கூட அசைக்கமுடியவில்லை. அத்தனை வலிமை, வாலிக்கு. பாற்கடல் கடைந்த போது தேவாசுரர்கள் களைத்துப் போயினர். ஆபத்துக்கு உதவும் நண்பனாக வந்து அமிர்ததைக் கடைந்த வானரோத்தமன் வாலியை, ஆலகால நஞ்சு போல் முறித்து மாற்றியது, சுக்ரீவனின் வீண்வம்பு அறைகூவல்.  கம்பரின் உயர்வு நவிற்சி அணி எப்படியெல்லாம் வாலியின் பராக்கிரமத்தை வருணித்தது என்பதைப் பார்த்தோம். அதிபராக்கிரமசாலியான வாலியின் இராமபக்தி அபாரம்.

    தாரையின் எச்சரிக்கை உதறித்தள்ளக்கூடியது அல்ல. இளவல் சுக்ரீவனுக்கு பயந்த ஸ்வபாவம். சஞ்சலபுத்தி. அவனொரு அசட்டுப்பிறவி. கிஷ்கிந்தா காண்டத்தில், அவன் சுய அறிவு இழந்தவனாகத் தான் தோற்றம். தன்னை பாதுகாத்துக்கொள்ள தெரியாது, அவனுக்கு. அத்தனை பலவீனம். சந்தேகப்பிராணி. ராமலக்ஷ்மணர்கள் கிஷ்கிந்தையில் நுழைந்ததே அவனுக்கு அச்சம் விளைவித்தது. எளிதில் குழப்பம் அடையும் குணமுண்டு, அவனுக்கு. இராமலக்ஷ்மணர்களை வாலி தான் தன்னைக்கொல்ல அனுப்பினான் என்று அனுமனிடம் புலம்புகிறான். இந்த அசட்டு வானரத்திடம், மிகவும் மரியாதையுடன் தஞ்சம் புகுந்தனர், தசரதனின் மைந்தர்கள். அந்த அசடும், இவர்களின் உன்னத நிலையை அனுமன் சொல்லியும், அதற்கு செவி சாய்க்காமல், இராமனின் தன்னடக்கமான நட்புரிமை நாடும் சொல்லையும் காதில் போட்டுக்கொள்ளலாம், கைலாகு கொடுத்து, தனக்கு சமானமாக அமரச்சொல்கிறான்! என்னே டாம்பீகம்! நான் வால்மீகி ராமாயணம் பக்கம் போகவில்லை. அங்கும் சுக்ரீவனுக்கு பெத்த பெயரில்லை. இராம லக்ஷ்மணர்கள் அவனிடன் தஞ்சம் புகுந்ததாகத் தான் நான் படித்த உரை கூறுகிறது.

    இப்பேர்ப்பட்ட சுக்ரீவன் வாலியை வம்புக்கு இழுத்தால், அவனுக்கு ஏதோ வலிமை மிகுந்த துணை கிடைத்திருக்கவேண்டும் என்பது – சரி – வெள்ளிடை மலை. அந்த துணை இராமன் என்பதால், எச்சரிக்கையின் தீவிரம் வாலிக்கு புரிந்திருக்க வேண்டும்.

    ‘அன்னது கேட்டவள், ‘அரச! “ஆயவற்கு

    இன் உயிர் நட்பு அமைந்து இராமன் என்பவன்,

    உன் உயிர் கோடலுக்கு உடன் வந்தான்” என,

    துன்னிய அன்பினர் சொல்லினார்’ [3964]

    என்றாள். இராமன் வந்தது உன் உயிரை பறிக்கவே’ என்று அவள் தெளிவாகத்தான் எச்சரித்தாள்.  

    (‘…தாரை அரசியல் அறிவு கொண்டவளாய் ஆங்காங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை அறிந்து வந்தனள் என்பது புலனாகிறது.  தன்னை எதிர்ப்பவர் எவர் எனப் புறப்படும் வாலியிடம், மாற்றான் வலிமை குறைந்தவனாயினும், அவனுக்குத் துணையாகவரும் துணைவனது வலிமையை எண்ணித்துணிந்தபின் போருக்குச் செல்லுதல் நன்று எனக்கூறும் தாரையின்அரசியலறியும் ஈண்டு நினைக்கத்தக்கது…’ ~ உரை.)

    அந்த எச்சரிக்கையை உதறிவிட்டான், இராமபக்தனான வாலி. ‘…இயல்பு அல இயம்பி என் செய்தாய்?…’ என்ன பேச்சு இது? ‘…பிழைத்தனை; பாவி! உன் பெண்மையால்’ என்று அவளுக்கு ஈவிரக்கம் காட்டினான், சினம் மிகுந்த கால கட்டத்தில் கூட. இராமனிடம் உள்ள பக்தியால் தான், தாரையை கடிந்து கொண்டான், வாலி.

    உழைத்த வல் இரு

          வினைக்கு ஊறு காண்கிலாது

    அழைத்து அயர் உலகினுக்கு

          அறத்தின் ஆறு எலாம்

    இழைத்தவற்கு, இயல்பு அல

          இயம்பி என் செய்தாய்?

    பிழைத்தனை; பாவி! உன்

          பெண்மையால்’ என்றான். [3965]
        

    இனி அவன் ஶ்ரீராமசந்தர மூர்த்தியின் கீர்த்தியை சொல்வதை கவனியும்.

    1. ‘… அயர் உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம் இழைத்தவற்கு…’

    ~ தருமத்தின் வழிகளையெல்லாம் தன் நடைமுறையால் காட்டிய அந்த
    இராமபிரான் என்கிறான், வாலி.

    2.’இருமையும் நோக்குறும் இயல்பினாற்கு இது பெருமையோ?

    ~ இராமன் குறுகிய நோக்கம் உள்ளவன் அல்ல. இம்மைக்கும், மறுமைக்கும் உரிய பலாபலன்களை சீர்த்தூக்கிப் பார்க்கும் இயல்பு உடையவன். (சுக்ரீவனுடன் கூட்டு சேர்வதால்) அவனுக்கு பயன் யாதும் இல்லை. (என்ன உளறுகிறாய்?) தரணிதனில் வாழும் உயிர்களின் ரக்ஷகனான தருமமே தன்னை அழித்துக்கொள்ளுமோ? என்றெல்லாம் இராமனின் உன்னத நிலையை தன் புரிந்து கொண்டதைக்கூறி, தாரையை கடிந்து கொள்கிறான்.

    ‘இருமையும் நோக்குறும்

         இயல்பினாற்கு இது

    பெருமையோ? இங்கு இதில்

         பெறுவது என்கொலோ?

    அருமையின் நின்று, உயிர்

         அளிக்கும் ஆறுடைத்

    தருமமே தவிர்க்குமோ

         தன்னைத் தான்அரோ? (3966)

    ‘இருவர்க்கிடையில் நடைபெறும் போரில் ஒருவர்க்கு உதவியாய் இருந்து
    மற்றொருவரைக் கொல்லுதலாகிய அறமல்லாத செயலை இராமன்
    செய்யமாட்டான் என்பது வாலியின் கருத்தாகும். இராமன் தருமமே
    உருவெடுத்து வந்தவனாதலின், தருமத்திற்கு மாறான செயல்களைச் செய்ய
    மாட்டான் என்பதால் ‘தருமமே தவிர்க்குமோ தன்னைத்தான்’ என்றான்.
    ‘அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான்’ (1349) ‘மெய்யற மூர்த்தி வில்லோன்’
    (5882) என்பன காண்க.’ (உரை)

    3. ‘ஏற்ற பேர் உலகு எலாம் எய்தி. ஈன்றவள்

    மாற்றவள் ஏவ, மற்று, அவள்தன் மைந்தனுக்கு

    ஆற்ற அரும் உவகையால் அளித்த ஐயனைப்

    போற்றலை; இன்னன புகறல்பாலையோ?’ [3967]

    (அடி பேதாய்!) தன்னுடைய மாற்றாந்தாயின் கட்டளைக்கு பணிந்து ராஜ்யபாரத்தை பரதனுக்கு உவகையுடன் தந்துருளிய சான்றோன் இராமனை புகழ்ந்து பாராட்டாமல், நீ அவரை இகழலாமா?)

    ‘பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி’ என்றார் குலசேகரர்.(பெருமாள்திருமொழி-8-5) என்று உரையில் கூறியதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

    4. நின்று பேர் உலகு

    எலாம் நெருக்கி நேரினும்,

    வென்றி வெஞ் சிலை

          அலால், பிறிது வேண்டுமோ?

    தன் துணை ஒருவரும்,

          தன்னில் வேறு இலான்,

    புன் தொழில் குரங்கொடு

          புணரும் நட்பனோ? (3968)

    இராமன் நிகற்ற மாவீரன்.  அவனுக்கு தன்னுடையை வில் ஒன்றே போதும், உலகெலாம் திரண்டு வந்து அவனை எதிர்த்தாலும். போய்ம் போயும் இந்த அற்பனாகிய குரங்குடன் அவன் கூட்டு சேர்வானா?

    தம்பியர் அல்லது தனக்கு

          வேறு உயிர்

    இம்பரின் இலது என

          எண்ணி ஏய்ந்தவன்,

    எம்பியும் யானும் உற்று

          எதிர்ந்த போரினில்

    அம்பு இடை தொடுக்குமோ,

          அருளின் ஆழியான்? [3969]

     சகோதர பாசத்தின் அருமையை உணர்ந்தவன் இராமன். கருணைக்கடலான இராமன் தன் சகோதரர்களிடமிருந்து தன்னை பிரித்துப் பார்ப்பதை அறியாதவன். என் தம்பியும் நானும் சண்டை போட்டால், இடையில் புகுந்து என் மீது அம்பு தொடுக்கமாட்டான்.

    ‘தம்பியரைத் தன் உயிரெனக் கருதும் இராமன், உடன் பிறந்தார்க்கிடை
    ஏற்பட்ட போரில், பகைமையை நீக்கி ஒன்றுபடுத்த முயல்வானேயன்றி ஒரு
    பக்கம் சார்ந்து தனக்கெதிரே அம்பினைத் தொடுக்க மாட்டான் என்ற
    நம்பிக்கையில் வாலி ‘எம்பியும் யானும் உற்றெதிர்ந்த போரினில் அம்பு இடை
    தொடுக்குமோ’ என்றான். ‘தள்ளா வினையேன் தனி ஆர் உயிராய் உள்ளாய்’
    (3608) என்ற அடிகள் இராமன் தம்பியரை உயிரெனப் போற்றி ஒன்றி
    வாழ்ந்ததை உணர்த்துவன. அருளின் ஆழி – கருணைக்கடல். இராமனைக்
    ‘கருணைக்கடல்’ (1257) எனக் கம்பர் முன்னரும் குறிப்பிட்டுள்ளார்.’ (உரை)

    வாலியின் அதிபராக்கிரமமும், அவன் பார்க்கடலை கடைந்து தேவாசுரர்களை உய்வித்ததும், ராவணனை நசுக்கியதும், அவனுடைய இராமபக்திக்கு முன் சிறிய விஷயங்கள். அத்தகைய பக்தனை பற்றி இராமன் அறியாமலும் இல்லை. அவனை விட்டு விட்டு, சஞ்சலபுத்தியும், டாம்பீகமும் குடி கொண்டுள்ள சுக்ரீவனிடம் இராமலக்ஷ்மணர்கள் தஞ்சம் புகுந்தது ஏன்?

    பழவினையோ?

    (தொடரும்)

    இன்னம்பூரான்

    04 11 2012  

    உசாத்துணை (மூலமும், உரையும்): http://www.tamilvu.org/library/libindex.htm

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

     

    திவாகர்

    ஆங்கில எழுத்தாளர்கள் பலர் கடந்த கால சரித்திர நாயகர்களை – குறிப்பாக இருபதாம் நூற்றாண்டு சரித்திரத்தில் இடம் பெற்ற தலைவர்களின் வாழ்க்கையை மிகச் சீரிய வகையிலும், மிக ஆழமாகவும் ஆராய்ந்து அதையே கதை போல எழுதி எத்தனையோ வாசகர்களை ஆச்சரியப் படுத்தியுள்ளார்கள். அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் இர்விங் வால்லஸ், இவர் எழுதிய கதை ஒன்றில் ஜெர்மனியின் ஹிட்லரைப் பற்றிய விவரங்களை மிக ஆராய்ந்து ஹிட்லர் 1945 இல் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் 1962 இல் இயற்கையாக இறந்ததாகவும், மனைவி ஈவா இன்னமும் உயிருடன் இருப்பதாகவும் எழுதி பரபரப்பு ஏற்படுத்துவார். அதற்காக அவர் கொடுத்த தரவுகள் மிகப் பலமான சான்றுகளாக கதையோடு ஒன்றி இருக்கும். இருந்தும் உண்மையில் அது கற்பனைதான் என்பதே உண்மை. நான் விரும்பிப் படித்த புத்தக்ங்களில் இது ஒன்று.

    ஆனால் இந்தியாவில் இர்விங் வாலஸுக்கும் முன்பாகவே ஒரு எழுத்தாளர்  இதே போல தோற்றம் கொண்ட கதையை ஆங்கிலத்தில் எழுதினார். அவர்தான் பாரதிய வித்யா பவனின் ஸ்தாபகரான மறைந்த கே. எம். முன்ஷி. இவர் எழுத்தின் கதாநாயகன் வேறு யாருமல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பாரத மக்களின் உணர்வோடு ஒன்று கலந்து புகழப்பட்டு வரும் மதுராபுரி மாயன் அந்தக் கண்ணபிரானே. ஆனால் புராணங்கள் வழியாகப் போகாமல் புராணங்களை ஒரு அடிப்படையாக மட்டும் வைத்துக் கொண்டு கண்ணன் எப்படி இந்த உலகுக்கு வந்திருப்பான், எப்படி சிந்தித்திருப்பான், எப்படி பாரதப் போரை முடித்திருப்பான் என்ற தீர்க்க சிந்தனையின் பேரில் ஒரு புத்தகம் எழுதினார். கிருஷ்ணா சீரிஸ் என்ற பெயரில் ஏழு புத்தக்ங்களாக அவரே வெளியிட்டார். இந்தப் புத்தகத்தில் கண்ணன் தெய்வீகப் பிறவி அல்லவே அல்ல. சாதாரண மானுடன். ஆனால் ஒவ்வொரு சாகசத்தையும் அவன் வெற்றியுடன் முடித்துக்கொடுக்கும்போது அவன் மகுடத்தில் மயிலிறகு ஒன்றொன்றாக ஏறும். மிக அருமையாக இப்படித்தான் நடந்தது என்பதை நமக்கு அடித்துச் சொல்வது போல ஒவ்வொரு அத்தியாயமும் இருக்கும். திரௌபதி சுயம்வரமும் அவள் ஏன் ஐவரை மணக்க ஒப்புக் கொண்டாள் என்பதையும் தன் பாணியில் இவர் விவரிக்க விவரிக்க, அட, அனைத்தும் சரிதான் என்றுதான் நமக்குத் தோன்றும்.
     
    இந்த கிருஷ்ணா கதையைத் தமிழில் எழுதி வருகிறார் திருமதி கீதா சாம்பசிவம். வாரா வாரம் இவர் பிளாக்கில் வந்து கொண்டிருக்கிறது.http://kannanvaruvan.blogspot.in/ இந்த வார அத்தியாயத்தில் இயற்கையை வர்ணித்திருப்பார். எத்தனைதான் முன்ஷி ஆங்கிலத்தில் எழுதினாலும் தமிழில் அந்த வர்ணனையைப் படிக்கும்போதே அந்த இடத்தையே நாம் உணர்வது போல ஒரு நினைவலை..

    கண்ணன் கங்கையின் அகலத்தையும் அக்கரை வெகு தூரத்தில் தெரிந்ததையும் பார்த்து ஆச்சரியம் அடைந்தான்.  எத்தனை எத்தனை அதிசயங்களையும், அற்புதங்களையும், சரித்திரங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு இந்த நதி ஓடுகிறது என நினைக்க அவனுக்குப் பிரமிப்பாக இருந்தது.  சமுத்திரத்தில் எழுவது போலவே கங்கையிலும் அலைகள் எழும்பிக் குதித்து அடங்குவதையும், சில அலைகள் கரையோரத்தில் மோதித்திரும்புவதையும் பார்த்தான்.  வாழும் தெய்வமான இந்தக் கங்கையில் தான் எத்தனை நீர்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன!  அதோ, கங்கையில் நீந்திச் செல்லும் வாத்துக்கள்.  இதோ இந்தப் பகுதியில் அன்னங்கள் மிதக்கிறதைப் பார்த்தால் நீரின் பச்சையும், அன்னங்களின் வெண்மையும் சேர்ந்த வண்ணக்கலவை மனதை அள்ளியது.  ஆஹா, சித்திர விசித்திரமான மீன்கள், இங்கே தங்கள் வால்களைத் தூக்கிக் கொண்டு , எழும்பிக் குதித்து விளையாடுகின்றனவே!  படகு செல்கையிலேயே முதலைகள் தங்கள் முகத்தைத் தூக்கிக் கொண்டு சிறிய கண்களால் உற்றுப் பார்க்கின்றன.  படகுகள் அருகே வரும் சப்தம் கேட்டதும், துடுப்புகளின் ஓசை கேட்டதும் தங்கள் வாலால் தண்ணீரை அடித்துக்கொண்டு மூழ்கிப் போகின்றன.  விதவிதமான நீர்ப்பறவைகள் தலைக்கு மேலே பறந்து ஏதேனும் தின்னக் கிடைக்குமா எனப் பார்க்கின்றன.  அவைகளின் மதுரமான த்வனி காதுக்கு இனிமையாக இருக்கிறது.  இரு கரைகளிலும் அழகிய புடைவைக்குக் கரை போட்டாற்போல் கரும்பச்சை மரங்கள் அணி வகுத்து நிற்கின்றன.  அவற்றிலிருந்து  உதிர்ந்திருக்கும் வண்ண, வண்ண மலர்கள் ஆழ்ந்த பச்சைக்கரைப் புடைவையில் போட்ட ஜரிகைப் புட்டாக்கள் போலக் காட்சி அளிக்கின்றது.  மேலே பார்த்தால் ஆழ்ந்த நீலத்தில் தெரியும் வானமும், கரும்பச்சை நிற மரங்களும், அவற்றின் வண்ண, வண்ணமான மலர்களும், ஆழ்ந்த பச்சை நிறத்து நீரும் சேர்ந்து ஒரு இந்திரலோகத்தையே சமைத்துவிட்டதே.  தன் மனம் நிறையக் கண்கள் நிறைய அந்தக் காட்சிகளை உள்ளுக்குள் பதித்துக் கொண்டான் கண்ணன்.

    எழுத்துப் பணிகளை ஆரவாரமில்லாமல் செய்து வருபவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் கீதாம்மா என நான் பிரியமுடன் அழைக்கும் திருமதி கீதா சாம்பசிவம். இவர் எழுத்துகள் அனைத்தும் ஆன்மீக சம்பந்தப்பட்டதாக இருப்பினும் விவரங்கள் ஏராளமாக சேகரிக்கப்பட்டு அதை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.அவைகளில் இவரது கடின உழைப்பு தெரியும். சிதம்பர ரகசியம் எனும் தல வரலாற்றினை மிக அருமையாக எழுதினார். பல சமயங்களில் எனக்கு ஆச்சரியம் வருவது உண்டு என்றால் அது இந்த கீதா சாம்பசிவம் அவர்களின் சில அயராத பணிகளைக் கண்டுதான். எல்லோருக்கும் சலிக்காமல் ஊக்குவித்து பின்னூட்டம் இடுவது, தன்னிடம் கிடைக்கப்பெற்ற எல்லாவற்றையும் கூர்ந்து படிப்பது (இது மிகவும் முக்கியம்),

    ஆனாலும் சென்றவாரம் அவர் முன்ஷியின் கிருஷ்ணா அத்தியாயத்தில் இயற்கைக் காட்சிகள் எழுதிய விதம் என்னை  மிகவும் ஆர்வத்துக்குள்ளாக்கினதான். இந்த வார வல்லமையாளராக திருமதி கீதா சாம்பசிவத்தைத் தேர்வு செய்வதில் வல்லமையாளர் குழு பெருமை கொள்கிறது. வாழ்க அவரது எழுத்துப் பணி!

    இந்த வார கடை பாரா: எனக்கு மிகவும் பிடித்த திருமூலர் பாடல். பாடலுக்கு உள்ளார்ந்த விளக்கத்தோடு கூடிய பொருளோடு வல்லமையில் வெளியிட்ட சுலோச்சனா அவர்களுக்கு நன்றி. http://www.vallamai.com/literature/articles/28444/

    யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை
    யாவர்க்குமாம் பசுவிற்கோர் கையுறை
    யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி
    யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே

    Share
  • கால இயந்திரம்-(பாகம்-2)

     

    பர்வத வர்தினி

    ஒரு சில நிமிடங்களிலேயே கால இயந்திரம் அமைதியடைந்தது போல் தோன்றியது. மெல்ல கண்களைத் திறந்து பார்த்தாள் சாரு. கிருஷ்ணசாமி அவளைக் கண்டு “நாம வந்து சேர்ந்துட்டோம் சாரு” என்றார். பிறகு கதவைத் திறக்க ஒரு பொத்தானை அழுத்தினார். கதவு சத்தமின்றி மெல்லத் திறந்தது. இருவரும் கால இயந்திரத்தை விட்டு இறங்கினார்கள். அவர்கள் இருந்த இடத்தை சுற்று முற்றும் பார்த்தார்கள். அது இரவு நேரம். வானில் வெண்ணிலா பால்மழை பொழிந்து கொண்டிருந்தது. அந்த இடம் நிறைய மரம் செடிகளுடன் ஏதோ காடு போல் தோன்றியது. 

    சாரு மெல்ல நடக்கத் துவங்கினாள். கிருஷ்ணசாமி அவளிடம் சற்று பொறுமையுடன் இருக்கும்படி கூறிவிட்டு அந்த இடத்தை ஆராயத் துவங்கினார். அவர் ஏதோ தேடுவது போல் தோன்றியது. சற்று நேரத் தேடுதலுக்குப் பிறகு அவர் சாருவை அழைத்தார். “இங்கே பாரு சாரு” என்று ஓரிடத்தைக் காண்பித்தார். அங்கே செடிகளும் புதர்களும் மிகவும் அடர்த்தியாக இருந்தன. “நம்மோட கால இயந்திரத்தை இந்த இடத்திலே மறைச்சு வெச்சுட்டு கிளம்புவோம்” என்றார். பிறகு மெல்ல கால இயந்திரத்தை புதர்களுக்கு நடுவில் மறைத்து வைத்தார். 

    “நாம போயிட்டு சீக்கிரம் வந்துடணும். நாம சரியான காலத்துக்கும் இடத்துக்கும் வந்திருக்கோமான்னு பார்த்துட்டு,நீ தெரிஞ்சிக்க விரும்பினதையும் தெரிஞ்சிக்கிட்டு கூடிய சீக்கிரம் வரணும். இது யார் கண்ணிலேயும் பட்டுடக்கூடாது” என்று கூறினார் கிருஷ்ணசாமி. 

    “நிச்சயமா அங்கிள்! இப்போ நாம போகலாம்” என்றாள் சாரு. 

    அவர்கள் இருவரும் அந்தக் காட்டில் வழி தேடி நடந்து சென்றார்கள். 

    சற்று தூரம் சென்ற போது காட்டில் ஏதோ வினோதமான சத்தம் கேட்டது. மிகவும் எச்சரிக்கையாக இருவரும் தொடர்ந்து முன்னேறினார்கள். சற்று தொலைவில் மங்கலான வெளிச்சத்தில் மிகவும் வியப்பிற்குரிய காட்சி தெரிந்தது. அங்கே மரங்களின் ஓரத்தில் ஒரு கோட்டை மதில் சுவரும் அதன் மீதிருந்து இறங்க யத்தனிக்கும் ஒரு வாலிபனும் தெரிந்தார்கள். அவனது கையில் ஒரு வாள் இருந்தது. அவனது உடை பழங்கால வீரர்களின் உடையைப் போன்று தோன்றியது. கீழே ஒரு நாய் ஓயாமல் குரைத்துக் கொண்டிருந்தது, அருகில் ஒருவன் சிரித்துக் கொண்டிருந்தான். எதற்கும் முன் ஜாக்கிரதையாக இருவரும் மெல்ல நடந்து சென்று ஒரு மரத்தின் பின் மறைந்து கொண்டார்கள். கீழேயிருந்தவன் மேலிருந்தவனோடு ஏதோ பேசினான். பிறகு மேலிருந்தவன் கீழிருந்தவன் மீதே குதித்தான். இருவரும் சண்டையிட்டனர். இடையில் தடிமனான மற்றொருவன் ஒரு மரத்தின் பின்னிருந்து வந்து நாயின் மீது ஒரு கயிற்றையிட்டு மரத்தில் கட்டினான். பிறகு மேலிருந்து குதித்தவனுக்கு உதவியாக கீழே நின்றிருந்தவனோடு சண்டையிட்டான். கீழேயிருந்தவன் மயங்கி விழுந்தான். 

    இவையெல்லாம் ஏதோ ஊமைப்படம் போலே சாருவுக்கும் கிருஷ்ணசாமிக்கும் தெரிந்தது. அவர்கள் பேசியது ஏதும் காதில் விழவில்லை. ஆனால் நடந்த நிகழ்வுகளைக் கொண்டு சாரு மேலிருந்து குதித்தவன் வந்தியத்தேவன் என்றும் உதவி செய்த  குண்டு மனிதன் ஆழ்வார்க்கடியான் என்றும் நாயுடன் வந்து சண்டையிட்டவன் தேவராளன் என்றும் தெரிந்துகொண்டாள். அவளுக்கு உற்சாகம் கரைபுரண்டோடியது. அதை வெளியில் சொல்ல வாயெடுத்தவளை கிருஷ்ணசாமி தடுத்து தாழ்ந்த குரலில் கூறும்படி சைகை செய்தார். அவளும் இவர்கள் யாராக இருக்கக்கூடும் என்று கிருஷ்ணசாமிக்குக் கூறினாள். “நாம சரியான இடத்துக்கு சரியான காலத்திற்கு வந்துட்டோம்” என்று அவரும் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார். 

    “நீ வந்தியத்தேவனைத் தானே பார்க்கணும்னு சொன்னே? இப்போதான் பார்த்தாச்சே? நாம போகலாமா?” என்று கேட்டார். 

    “அங்கிள் ப்ளீஸ்… இவ்வளோ தூரம் வந்துட்டோம். அவர்கிட்ட கொஞ்சம் பேசிட்டு போகலாமே. அதோட ஆதித்தகரிகாலனைக் கொன்னது யாருன்னும் தெரிஞ்சிக்கலாம்னு ஆசைப்பட்டேன்” என்றாள் கெஞ்சும் பாவனையில். 

    “சரி சாரு. ஆனா ஒரு விஷயம் நினைவுல வெச்சுக்க. நாம கடந்த காலத்துக்கு வந்திருக்கோம். நம்முடைய செயல் எதுவும் வரலாற்றை பாதிக்காதபடி பார்த்துக்கணும்.  இல்லைன்னா அதன் பின்விளைவுகள் ரொம்ப பயங்கரமா போயிடும். ஜாக்கிரதையா நடந்துக்கோ. அதேபோல இந்த காலத்துல வாழற இவங்களுக்கு தன்னுடைய எதிர்காலம் பத்தி முழுமையா தெரியக்கூடாது. அதுவும் பிரச்சினையா ஆகிடும். ஜோசியர்கள் சொல்ற மாதிரி பட்டும் படாமயும் தெரிஞ்சா பரவாயில்லை. ஆனா முழுசா தெரியக்கூடாது. இதெல்லாம் நீ மறக்கவே கூடாது. புரிஞ்சுதா? இனி நாம தொடர்ந்து போகலாம் வா” என்று கூறிவிட்டு கிருஷ்ணசாமி முன்னேறினார். 

    மயங்கியிருந்த தேவராளனைத் தாண்டி வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் சென்றனர். அவர்களுக்கு பின் சிறிது இடைவெளி விட்டு சாருவும் கிருஷ்ணசாமியும் தொடர்ந்தார்கள். வனாந்தரத்தின் இருள் கரியதாக இருந்தாலும் நிலவு போதிய வெளிச்சத்தைத் தந்திருந்தது. சற்று தூரம் சென்றதும் சட்டென்று வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் கண்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் எங்கே சென்றிருப்பார்கள் என்று தேடியபடியே சாருவும் கிருஷ்ணசாமியும் சுற்றும் முற்றும் பார்த்தார்கள். அப்போது சடாரென பக்கத்திலிருந்த பெரிய மரத்தின் பின்புறமிருந்து வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் இவர்களை சூழ்ந்து கொண்டனர். 

    “யார் நீங்கள்? எதற்காக எங்களைத் தொடர்ந்து வருகிறீர்கள்?” என வந்தியத்தேவன் கோபத்துடன் கேட்டான். 

    வந்தியத்தேவனையும் ஆழ்வார்க்கடியானையும் அத்தனை அருகில் பார்த்து சாருவும் கிருஷ்ணசாமியும் பேசத் திராணியற்று பிரமிப்புடன் நின்றனர். அந்த நேரத்தில் தான் வந்தியனும் நம்பியும் அவர்களை ஆராய்ந்தார்கள். சுடிதார் அணிந்திருந்த சாருவும் பேண்ட் சட்டை சகிதம் இருந்த கிருஷ்ணசாமியும் அவர்களுக்கு விந்தையாகத் தோன்றியதில் ஆச்சரியம் ஏதும் இருக்க முடியாதல்லவா? வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானை பார்த்து, “வீர வைஷ்ணவரே, இவர்களைப் பாரும்! இவர்கள் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் போன்று தெரியவில்லையே. ஏதோ அயல்தேசத்திலிருந்து வந்திருப்பார்கள் போலும். அயல் நாட்டவர் இங்கெ எப்படி ஊடுருவியிருக்க முடியும்? மேலும் இவர்களுக்கு நாம் பேசுவது விளங்குமோ என்னமோ தெரியவில்லை. நான் கேள்வி கேட்டும் இவர்கள் திருதிருவென முழிக்கிறார்களே! நாம் அவசரமாக செல்லும் இவ்வேளையில் இவர்களை என்ன செய்வது?” என்று கேட்டான். 

    ஆழ்வார்க்கடியானும் “சற்று பொறு தம்பி! ஏதேனும் கேட்டுப் பார்ப்போம். அல்லது சைகையினாலே கேட்போம்” என்றான். 

    “சரியாகச் சொன்னீர்கள் வைஷ்ணவரே! ஆனால் எனக்கு சைகை மொழியெல்லாம் தெரியாது. நீங்களே முயன்று பாருங்கள்” என்று கூறினான் வந்தியத்தேவன். 

    இவர்களது சம்பாஷணையின்போதே தனது ஆச்சரியம் நீங்கப் பெற்ற சாரு மெலிதாக புன்னகைத்தாள். 

    “நாங்கள் அயல் தேசத்தை சேர்ந்தவர்கள் இல்லை. நாங்களும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான்” என்று தன்னால் இயன்ற அளவிற்குத் தூய தமிழில் பேசினாள் சாரு. 

    “நல்ல வேளை! நீங்கள் தமிழில் பேசி நாங்கள் சைகை புரிய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் நீங்கள் யார் என்று இன்னும் கூறவில்லையே. இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்கிறீர்கள், ஆனால் உங்கள் நடை,உடை, பாவனை அனைத்தும் மிகவும் வேறுபட்டு உள்ளதே” என்றான் வந்தியத்தேவன். 

    “என் பேரு கிருஷ்ணசாமி, இவ பேரு சாருலதா. நாங்க உங்களையெல்லாம் பாக்கலாம்னு தான் எதிர்காலத்துலேர்ந்து வர்றோம்” என்றார் கிருஷ்ணசாமி. 

    வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் ஒருவரை  ஒருவர் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டனர். வந்திருந்த இருவரையும் சந்தேகக்கண்ணுடன் நோக்கி “என்ன எதிர்காலத்திலிருந்து வருகிறீர்களா? நீங்கள் என்ன மாயாவிகளா? இது எப்படி சாத்தியம்? மேலும் செந்தமிழ் ஏன் உங்கள் நாவில் இப்படி அவஸ்தைக்குள்ளாகிறது?”என்று கேள்விகளை அடுக்கினான் ஆழ்வார்க்கடியான். 

    “சார், இதைப் பத்தி விரிவா சொல்றது கஷ்டம். ஆனால் ஒரு இயந்திரத்தை உருவாக்கி 1043 வருஷங்கள் தாண்டி உங்களைப் பாக்க வந்திருக்கோம். அதுலேயும் சாருவுக்கு வந்தியத்தேவரைப் பாக்க அவ்வளோ ஆசை. அதனாலே தான் வந்தோம்” என்று பதில் கூறினார் கிருஷ்ணசாமி. “உங்களோட சில தினங்கள் இருந்துட்டு போகலாம்னு எங்க விருப்பம்” என்றும் கூறினார். 

    “சார் – அப்படியென்றால்?” என்று கேட்டான் ஆழ்வார்க்கடியான். சாரு முந்திக் கொண்டு “சார் என்றால் ஐயா என்று அர்த்தம்” என்றாள். “ஓ அப்படியா சேதி!” என்று வந்தியத்தேவனைப் பார்த்தான் ஆழ்வார்க்கடியான். 

    வந்தியனோ சந்தோஷத்தில் திளைத்தான். பிறகென்ன 1000 ஆண்டுகள் கடந்தும் தன் புகழ் பரவியிருக்கிறதே!தன்னைப் பார்க்க ஒரு பெண் காலங்களைத் தாண்டி வந்திருக்கிறாள் என்றால் கேட்கவா வேண்டும்! பெருமையுடன் ஆழ்வார்க்கடியானைப் பார்த்தான். அவனுக்கோ அவன் பார்வையின் பொருள் விளங்கியது. “1000ஆண்டுகள் கழித்தும் வந்தியனின் புகழ் பரவியிருக்கிறதா என்ன?” என்றான் சந்தேகத்துடன். 

    உடனே சாரு, “ஐயா! இவரது புகழ் மட்டுமல்ல. தங்கள் புகழும் பரவியிருக்கிறது. மேலும் இளவரசர் அருள்மொழிவர்மர், இளவரசர் ஆதித்தகரிகாலர், இளவரசி குந்தவைதேவியார் என அனைவரின் புகழும் பரவியிருக்கிறது. உங்களைப் பற்றியெல்லாம் நாங்கள் அறிந்துகொள்ள முக்கிய காரணமாயிருந்தவர் திரு. கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள். உங்களையெல்லாம் நாங்கள் அறியும் வண்ணம் அற்புத காவியம் படைத்திருக்கிறார்” என்று கூறினாள். 

    ஆழ்வார்க்கடியான், “அம்மா நீ சொல்வது எவ்வளவு தூரம் உண்மையோ எமக்குத் தெரியாது. ஆனால் நீ சொல்வதைக் கேட்டு எங்கள் மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. 

    தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

    தோன்றலின் தோன்றாமை நன்று 

    என்று வள்ளுவப் பெருமான் கூறியிருப்பதற்கிணங்க எங்கள் புகழ் நாங்கள் மறைந்த பின்பும் இருப்பதைக் காட்டிலும் வேறென்ன வேண்டும். கல்கி​யெனும் அந்தப் பெருந்த​கைக்கு நன்றிக் கடன்பட்டிருக்கி​றோம்” என்று கூறி ஆனந்தித்தார். 

    சட்டென்று ஏதோ நினைவிற்கு வந்தவராக “உங்கள் இருவரையும் சந்தித்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. ஆனால் நாங்கள் இப்போது அவசர வேலையாகச் செல்கிறோம். எங்களுக்கு விடை கொடுங்கள்” என்றான். 

    “ஆதித்தகரிகாலரை கடம்பூருக்கு வரவிடாமல் தடுக்கத்தானே போகிறீர்கள்?  நாங்களும் உங்களுடன் வருகிறோம்” என்றாள் சாரு. 

    கிருஷ்ணசாமி உடனே “சாரு நாம இங்கே வந்திருக்கறது யாருக்கும் தெரியக்கூடாது. இவங்களை நீ பாக்கணும்னு சொன்னதாலே இவங்களை சந்திக்க அனுமதிச்சேன். மத்தபடி நாம இவங்களோட போறது சரியில்லை என்று இடைமறித்தார் கிருஷ்ணசாமி. 

    சாருவின் முகம் வாட்டமடைந்தது. “அப்படின்னா அட்லீஸ்ட் நாம இங்கே எங்கேயாவது தங்கலாம் அங்கிள். நான் பாக்க வந்த விஷயம் என்னன்னு உங்களுக்குத்தான் தெரியுமே” என்றாள். 

    வந்தியத்தேவன் அவர்களிடம் “உங்களை எங்களுடன் அழைத்துச் செல்வது இயலாத காரியம். வேறேதும் உதவி தேவையென்றால் கூறுங்கள். முடிந்ததை செய்கிறோம்” என்றான். 

    “நாங்க சில நாளு தங்க ஏற்பாடு செஞ்சு தர முடியுமா?” என்று கிருஷ்ணசாமி கேட்டார். 

    ஆழ்வார்க்கடியான் சற்று யோசித்து “எனக்குத் தெரிந்த ஒரு விவசாயி​கோட்டைக்கு வெளி​யே குடிசை அ​மைத்துக்​கொண்டு தன் பேத்தியுடன் வாழ்ந்து வருகிறார். நீங்கள் அவர்களுடன் சில காலம் தங்கியிருங்கள். உங்களுக்கு சம்மதமா?” என்று கேட்டான். 

    இருவரும் அதற்கு சம்மதம் தெரிவிக்க​வே, நால்வரும் காட்​டை விட்டு மெல்ல​வெளி​யேறினர். சிறிது தூரத்தி​லே​யே ஏகாந்தமான ஓரிடத்தில் ஒரு குடி​சை அமைந்திருந்தது. நால்வரும் அங்​கே​ சென்றனர். ஆழ்வார்க்கடியான் மெல்ல கதவைத் தட்டினார். சில விநாடிகளில் குடி​சையின் கத​வைத் திறந்து கொண்டு ஒரு முதியவர் வெளி​யே வந்தார். ஆழ்வார்க்கடியா​னைக் கண்டதும் “திரும​லை நீங்களா? வாருங்கள் வாருங்கள்” என்று முகம் மலர வர​வேற்றார். 

    அ​னைவரும்  உள்​ளே நு​ழைந்ததும் ஆழ்வார்க்கடியான்​”பொன்னும​லையா​னே! இவர்கள் இருவரும் நம் ஊ​ரைப் பார்க்க வெளி​தேசத்திலிருந்து வந்திருக்கிறார்கள். இவர்க​ளை சில நாட்கள் உனது விருந்தாளிகளாக வைத்திருக்க வேண்டும். மேலும் நம் தேசத்தின் மக்கள் உடுத்தும் உ​டைக​ளையும்​ கொடுத்து உதவ​வேண்டும். நான் அவசர காரியமாக சென்று கொண்டிருப்பதால் உன்னிடம் இந்தப் பொறுப்​பைத் தருகி​றேன். செய்வாயா?” என்று கேட்டான். 

    “அதற்​கென்ன திரும​லை, நிச்சயம் ​செய்கி​றேன்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் பொன்னும​லையான் எனும் அந்த முதியவர். “உன் பேத்தி பூங்​கொடி எங்​கே?” என்று ஆழ்வார்க்கடியான் விசாரிக்கவும், “அவள் பின்புறம் வே​லை செய்து​கொண்டிருக்கிறாள். இ​தோ அ​ழைக்கி​றேன்” என்று​ சொல்லி “பூங்​கொடி பூங்​கொடி” என்று அ​ழைத்தார். 

    பூங்​கொடி பின்புற கத​வைத் திறந்து கொண்டு வந்தாள். அவ​ளைப் பார்த்த மாத்திரத்தி​லே​யே சாருவிற்கு பிடித்துவிட்டது. பூங்​கொடி ஆழ்வார்க்கடியானுக்கு வணக்கம் செலுத்திவிட்டு புதிதாக வந்திருந்த மூவ​ரையும் பார்த்தாள். முக்கியமாக சாரு மற்றும் கிருஷ்ணசாமியின் உ​டைக​ளையும் வியப்புடன் பார்த்துக்​கொண்டிருந்தாள்.“என்ன பார்க்கிறாய் அம்மா? இவர்கள் நம் விருந்தாளிகள். சில காலம் நம்முட​னே இருப்பார்கள். இவர்களுக்கு வேண்டிய மாற்று​டைக்கும் உணவிற்கும் ஏற்பாடு செய்” என்றார் பொன்னும​லையான். 

    ஆழ்வார்க்கடியான் கிருஷ்ணசாமியிடம் “நாங்கள் சென்று வருகி​றோம். விரைவிலே​யே தங்க​ளை திரும்பவும் சந்திக்கி​றேன்” என்று கூறி வி​டை ​பெற்றான். வந்தியத்​தேவனும் வணக்கம் கூறி விட்டு ​வெளி​யே ​சென்றான். 

    ஏ​னோ சாருவிற்கு மிகுந்த வருத்தமாக இருந்தது. தான் வந்தது வந்தியத்​தேவனுடன் அளவளாவுவதற்கும் அவனது வீரப்பயணத்தில் பங்கு​கொண்டு மகிழ்ச்சிய​டையவும் அல்லவா? ஆனால் அதற்கு வாய்ப்பின்றி பிரிந்து ​செல்கிறானே என்று​ தோன்றியது. இருப்பினும் அவள் தனது நிலை​யையும் மறக்கவில்​லை. எதிர்காலத்​தை​சேர்ந்த நாம் கடந்த காலத்திற்கு வர முடிந்த​தே பெரிய விஷயம். இதற்கும் மேல் ஆ​சைப்படக்கூடாது என்று தன்​னைத் தா​னே சமாதானம் செய்து​கொண்டாள். 

    அதற்குள் பூங்கொடி அவர்களுக்கு மாற்றுடைகளைக் கொண்டு வந்து கொடுத்தாள். இரவு உணவருந்தி விட்டு சாருவும் பூங்கொடியும் இரவெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள். சாரு வித்தியாசமான தமிழில் பேசுவதாக பூங்கொடிக்குத் தோன்றியது. நிறைய பேசிய போதும் தான் கால இயந்திரம் கொண்டு கடந்த காலத்திற்கு வந்ததை மட்டும் சாரு தெரிவிக்கவில்லை. 

    பொன்னுமலையானும் கிருஷ்ணசாமியும் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசிக் கொண்டனர். பொன்னுமலையானுக்கு தன் விருந்தாளி பேசுவது சரிவர புரியவில்லை. இவர் வேறேதோ மொழியை கலந்து வேறு பேசுகிறார். அதனால் சீக்கிரமே ஓய்வெடுக்கச் சென்று விட்டார். 

    மறுநாள் காலை பொன்னுமலையான் தன் வயலில் வேலை செய்ய கிளம்பினார். பூங்கொடி வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். சாரு அவளிடம் ஊரைச் சுற்றிப் பார்க்க தன்னை அழைத்துச் செல்லும்படி கேட்கவும் தன் வேலைகளை சீக்கிரம்முடித்துக் கொண்டு இருவரும் கிளம்பினார்கள். 

    அழகிய தோட்டங்கள், வயல்வெளி, எங்கு பார்த்தாலும் பச்சைபசேல் என்று இருந்தது. விதவிதமான மலர்களும் பழங்களும் நிறைந்து அற்புதக் காட்சியாக இருந்தது. ஊருக்குள்சென்றால் சில மாட்டு வண்டிகள் காணப்பட்டன.சென்னையில் மிகுந்த போக்குவரத்து நெரிசலுக்கு இடையில் வளர்ந்திருந்த சாருவிற்கு இந்த இடம் சொர்க்கம் போல் தோன்றியது. ஊருக்கு நடுவில் ஒரு சிறிய சிவன் கோயிலும் வெளியில் ஒரு ஐயனார் கோயிலும் இருந்தன. தெருக்கள் சுத்தமாக காணப்பட்டன. ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் சாணமிட்டு மெழுகி கோலம் போட்டிருந்தனர். கோலத்தின் நடுவில் பூ வைத்து அழகுபடுத்தியிருந்தார்கள். 

    மாலை வேளையில் கோயிலில் தேவாரப்பாடல் ஒலித்தது. ரம்மியமான இந்த சூழலைப் பற்றியே சாரு பூங்கொடியிடம் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தாள். சொர்க்கமயமான இந்த வாழ்வு சாருவிற்கு மிகவும் பிடித்துப் போனது. 

    கிருஷ்ணசாமியோ தன் கால இயந்திரத்திற்கு ஏதும் ஆபத்து நேராதிருக்க அவ்வப்போது யாரும் பார்க்காத தருணத்தில் காட்டிற்கு சென்று பார்த்து விட்டு வந்தார். 

    இப்படியாக இரண்டு நாட்கள் நகர்ந்தன. மறுநாள் காலை ஊரே உற்சாகத்தில் காணப்பட்டது. மக்கள் அனைவரும் தத்தம் வேலைகளை விட்டுவிட்டு எங்கோ விரைந்து கொண்டிருந்தனர். சாரு பூங்கொடியிடம் அது பற்றி கேட்கவும் “இன்றைக்கு சோழநாட்டின் நிகரில்லா வீரரும் நமது இளவரசருமாகிய வீரபாண்டியன் தலைகொண்ட ஆதித்தகரிகாலர் கடம்பூருக்கு விஜயம்செய்கிறார். அவரது  திருமண ஏற்பாடு நடக்குமென தெரிகிறது. அவரைக் காணத் தான் எல்லோரும் செல்கிறார்கள். நாமும் அங்கே செல்லலாம் சாரு” என்றாள். 

    சாருவின் மனம் சட்டென தான் வந்த நோக்கத்தை நினைவுபடுத்தியது. ஆதித்தகரிகாலரின் ஆயுள் முடியும் தருணம் வரப்போகிறது.  அவரைக் கொலை செய்யப் போவது யாராக இருக்கும்? யாருடைய கரத்தின் வாள் அவரது உயிரை மாய்க்கப்போகிறது? இதை அறியத் தானே நாம் இங்கு வந்திருக்கிறோம். ஆனால் அதை அறிய கோட்டைக்கு வெளியில் இருந்து கொண்டு என்னசெய்வது? எப்படி கோட்டைக்குள் செல்வது? இளவரசர் வருவதால் கோட்டையில் பலத்த பாதுகாப்பு இருக்குமே என்று தீவிரமாக யோசித்தாள். 

    பூங்கொடி, பொன்னுமலையான், சாரு மற்றும் கிருஷ்ணசாமி ஆகிய நால்வரும் மக்களுடன் மக்களாக காத்திருந்து இளவரசர் வருகையைக் கண்டனர். கட்டியக்காரன் வருவோரின் கீர்த்தியையும் பெயரையும் அறிவிக்கலானான். உயரமாக கம்பீரமாக தனது குதிரையை லாவகமாக செலுத்திக்கொண்டு ஆதித்தகரிகாலர் கடம்பூர் கோட்டை வாயிலை அடைந்தார். அவருடன் கூடவே வந்தியத்தேவன் மற்றுமொரு குதிரையில் வந்தான். அவர்களுக்குப் பின் மேலும் ஒருவர் வந்தார். கட்டியக்காரன் அவரை பார்த்திபேந்திர பல்லவன் என்று அறிமுகம் செய்தான். அவருக்குப் பின் படை வீரர்கள் வந்து சேர்ந்தார்கள். 

    இளவரசருக்கு தடபுடலான வரவேற்பு அளிக்கப்பட்டது. இத்தனைக்கும் நடுவில் வந்தியத்தேவன் சாருவைக் கண்டுகொண்டு கண்களினாலே தெரியப்படுத்தினான். சாருவிற்கு பெருமகிழ்ச்சி ஏற்பட்டது. விழிபிதுங்கும் கூட்டத்திற்கு நடுவிலும் வந்தியத்தேவன் தன்னைக் கண்டது பேரானந்தமாக இருந்தது. 

    இளவரசர் ஆதித்தகரிகாலர் உள்ளே சென்றதும் கோட்டைக்கதவுகள் தாளிடப்பட்டன. இனி தான் எப்படி உள்ளே செல்வது என்ற யோசனையுடனேயே பூங்கொடியின் வீட்டிற்கு திரும்பி சென்றாள் சாரு. 

    அன்று மாலை கிருஷ்ணசாமி தனித்திருக்கும்போது தன் சந்தேகத்தைக் கேட்டாள் சாரு. “அங்கிள், இப்போ என்ன பண்றது? ஆதித்தகரிகாலருடைய கொலை நடக்கும் சமயம் நான் அங்கே இருந்தா தானே யாரு கொலை செய்தாங்கன்னு கண்டுபிடிக்கமுடியும்? அதுக்கு கோட்டைக்குள்ளே போகணும். எப்படி போறது? ஒண்ணுமே புரியலையே” என்றாள். 

    கிருஷ்ணசாமியோ, “எனக்கென்னமோ நாம இப்போ திரும்பி போயிடலாம்னு தோணுது சாரு. வீணா வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாம்” என்று அவர் கூறிக்கொண்டிருக்கையிலேயே யாரோ வருவது போல் தோன்றியது. திரும்பிப் பார்த்தால், அங்கே ஆழ்வார்க்கடியான் வந்துகொண்டிருந்தான். “இதோ இவரிடமே கேட்போம்” என்று சாரு உற்சாகமடைந்தாள். 

    “நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இருவரையும் கண்டு விடைபெறவே நான் வந்தேன். நான் இப்போது நெடுந்தூரம் செல்ல வேண்டியிருக்கிறது” என்றான் ஆழ்வார்க்கடியான். 

    உடனே சாரு, “எங்களுக்கு நீங்கள் மற்றுமொரு உதவி செய்ய வேண்டும். நான் ஒரு முறை வந்தியத்தேவரை சந்திக்க வேண்டும். அதன் பின் நாங்கள் திரும்பவும் எங்களுடைய காலத்திற்கே சென்று விடுவோம். அவரோ கோட்டைக்குள் இருக்கிறார். தாங்கள் தான் உதவ வேண்டும்” என்று கெஞ்சும் பாவனையில் கேட்டுக்கொண்டாள். 

    “அம்மா, இப்போது இளவரசர் கடம்பூருக்கு வந்திருக்கிறார். மேலும் அவரது உயிருக்கு ஆபத்து நேருமென நிமித்தங்கள் கூறுகின்றன. இந்நேரத்தில் நீ கோட்டைக்குள் செல்வது கடினம். அதிக அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடக்கின்றன” என்றான் அவன். 

    “ஐயா, அதை அறிந்திருக்கிறேன். அதனாலேயே நான் வந்தியத்தேவரை சந்திக்க வேண்டியது அவசியமாகிறது. வந்தியத்தேவர் வீண் பழியில் மாட்டிக் கொள்ளும் அபாய நிலை ஏற்படக்கூடும். அதிலிருந்து அவரை காக்க விரும்புகிறேன். இதற்கு மேல் கூறுவதற்கு எனக்கு உரிமையில்லை. தயவு செய்து என் விருப்பத்தை நிறைவேற்ற உதவி செய்யுங்கள்” என்றாள். 

    ஆழ்வார்க்கடியான் யோசித்தான். பிறகு “சரி. இன்னும் இரண்டு நாட்கள் கழித்து அரசாங்க வேலைக்காக பூங்கொடி கோட்டைக்குள் செல்ல வேண்டியுள்ளது. நான் அவளிடம் கூறி விடுகிறேன். அரசாங்க வேலைக்கான ஆணைப் பத்திரம் அவளிடம் உள்ளது. அதை நான் உனக்குப் பெற்றுத் தருகிறேன். அவளுக்கு பதில் நீ உள்ளே சென்று விடு. சாமர்த்தியமாக நடந்து கொள். ஜாக்கிரதை. பத்திரமாக நீ உன் காலத்திற்கு திரும்பி செல்ல வேண்டும், நினைவு கொள்!” என்று கூறினான். 

    “ஐயா! இந்த உதவியை என் ஆயுள் உள்ளவரை நான் மறக்கமாட்டேன்” என்று சாரு கூறினாள். 

    அவர்களிடம் விடை பெற்று கொண்டு ஆழ்வார்க்கடியான் புறப்பட்டான். போவதற்கு முன் தான் வாக்களித்தப்படி அரசாங்க ஆணைப்பத்திரத்தை சாருவிடம் சேர்ப்பித்தான். 

    கிருஷ்ணசாமி சாருவிடம் “இதனாலே உனக்கு ஏதாவது ஆபத்து வருமோன்னு பயமா இருக்கும்மா” என்றார். 

    “ஒண்ணு பண்ணலாம் அங்கிள். பூங்கொடி தன் தாத்தா பொன்னுமலையானோடதான் கோட்டைக்குள்ளே போறதா இருந்தது. நீங்க வேண்ணா அவருக்கு பதில் என் கூட கோட்டைக்குள்ளே வந்துடுங்க. நம்மோட காரியம் முடிஞ்சதும் சீக்கிரமே இங்கிருந்து கிளம்பிடலாம். சரியா?” என்று கேட்டாள். 

    இந்த யோசனை கிருஷ்ணசாமிக்கும் பிடித்திருந்தது. அவர் அதற்கு சம்மதித்தார். 

    (அடுத்து வரும்)

    படங்களுக்கு நன்றி –

    http://zaraahatke.blogspot.in/2008/02/ponniyin-selvan.html

    Share
  • தேர்ப்பாகன் மகன்…(பாகம்-3)

     

    ராமஸ்வாமி ஸம்பத்

    “அன்றிலிருந்து எங்கள் நட்பு மேலும் மேலும் மெருகடைந்து நகமும் சதையும் போல் இணைபிரியாதவர் ஆனோம். எம் நட்பின் நெருக்கம் என்னை அவன் அந்தப்புரத்திற்குள்ளும் தங்கு தடையின்றி செல்லக்கூடிய உரிமையை அளித்தது. அஸ்தினாபுரத்தின் வருங்கால மஹாராணி எனக்கருதப்பட்ட இளவரசி பானுமதியுடன் நான் சொக்கட்டான் ஆடுவதையும் துரியன் வெகுவாக ரசித்தான்.

    “அவ்வாறு ஒருநாள் அவளுடன் தனிமையில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று அங்கு வந்த தன் நாயகனைக் கண்டு பானுமதி மரியாதை நிமித்தம் எழுந்து நின்றாள். அதை அறியாத நான் ‘ஓஹோ, தோல்விக்குப் பயந்து ஓட நினைக்கிறாயா?’என்று அவளைப் பிடித்து நிறுத்த முயன்றபோது அவள் மேகலாபரணம் சிதைந்து அதில் உள்ள முத்துக்கள் நாலாபுறமும் சிதறி ஓடின. அப்போது துரியன் மலர்ந்த முகத்துடன் என்னை நோக்கி ‘கர்ணா, முத்துக்களை எடுக்கவா கோர்க்கவா?’ என்றான். கண்ணா, இப்போது சொல்லுங்கள். எந்த கணவன், அதுவும் இந்நாட்டின் அரசனாகப் போகிறவன், இப்படி கல்மஷம் இல்லாமல் நட்பைப் போற்றி நடந்துகொள்வான்? இந்த நிகழ்வு ஒன்று போதாதா எங்கள் நட்பின் ஆழத்தினைப் புரிந்துகொள்ள?”

    “நன்று கர்ணா, உண்மை நட்பின் இலக்கணத்தை உங்கள் இருவரின் தோழமை பறைசாற்றுகிறது. எனினும் அறம் பெரிதா நட்பு பெரிதா எனக்கேட்பின் தர்மத்திற்கே முதலிடம் கொடுக்கப் படவேண்டும். அதனையே உன்னிடம் யாசிக்கிறேன்,” என்றான் கண்ணன்.

    சினத்தில் கர்ணன் முகம் சிவந்தது. “நீங்கள் ’பாண்டவ பக்‌ஷபாதி’ என்பது அனைவரும் அறிந்ததல்லவா? அவ்வைவருக்காகத்தானே என்னை துரியனிடமிருந்து பிரிக்க முயலுகிறீர்கள்?”

    ”இல்லை கர்ணா! உன்னை உரியவர்களிடம் சேர்க்கத்தான் துடிக்கிறேன்.”

    கண்ணனின் கூற்று கர்ணனுக்கு விளங்கவில்லை. “என்ன, எனக்கு உரியவரா? யார் அவர்கள்? என்னை உயிருக்கும் மேல் நேசிக்கும் துரியோதனன்தான் எனக்கு உரியவன். இந்தத் தேரோட்டி மகனான ராதேயனுக்கு வேறு எவரும்  உரியவர்கள் இல்லை,” என்றான்.

    “அப்படி சொல்லாதே கர்ணா. உன் பிறப்பின் ரகசியம் உனக்குத் தெரியாது. அது தெரிந்தால் நீ இப்படி அதர்மத்திற்கு அடிவருடமாட்டாய்.”

    “என் பிறப்பின் ரகசியத்தை நீங்கள் அறிந்திருந்தால் அதைத்தெரிந்து கொள்ள எனக்கும் ஆவல்தான். ஆனால் அதற்கும் துரியனுடன் என் நட்புக்கும் என்ன இணைப்பு?”

    கண்ணன் மிக நிதானமாகப் பேச ஆரம்பித்தான்.

    “கர்ணா! உனக்கு மிக்க அதிர்ச்சி அளிக்கப்போகும் அந்த ரகசியத்தை இப்போது வெளிப்படுத்துகிறேன். நீ மூத்த பாண்டவன். மஹாராணி குந்திக்கும் கதிரவனுக்கும் பிறந்தவன். நீ பாண்டவர்களுடன் இருக்கவேண்டியவன். ஆனால் நீயோ அதர்மத்தின் உருவான துரியனின் முகாமில் இருக்கிறாய்.”

    கண்ணனின் இக்கூற்றினைக் கேட்ட கர்ணனுக்குத் தொண்டையில் ஒரு அடைப்பு ஏற்பட்டதுபோல் இருந்தது. பூமி தன் கால்களைவிட்டு நழுவதுபோல் தோன்றியது. தன் முன் ப்ரபஞ்சமே சுற்றுவது போல உணர்ந்தான். ‘நான் குந்தி புத்திரனா?…..நான் குந்தி புத்திரனா?’ என்ற கேள்விக்கணைகள் அவன் உள்ளத்தை துளைக்கத் தொடங்கின.

    “கண்ணா, என்னைக் குழப்புவதற்காக தாங்கள் பிரயோகிக்கும் மாயை இது என நினைக்கிறேன். இதற்கு என்ன ஆதாரம்?” என்றான்.

    “இதற்கான ஆதாரத்தை நாளை காலை என் அத்தையே உன் ஜன்ம விருத்தாந்தத்தைக் கூறி உன் முன் வைப்பாள். நான் சொல்வதை நம்பு. இவ்வுண்மை சூரியனுக்கும் மஹாராணி குந்திக்கும் எனக்கும் விதுரர் மற்றும் பீஷ்மருக்கும் மட்டுமே தெரியும். பாண்டவர்களுக்குக்கூட இது தெரியாது. தெரிந்தால் தர்மபுத்திரன் உன்னையே அஸ்தினாபுரத்து அரசனாக்கி விடுவான். ஐவருக்கு ஊசிமுனை அளவு நிலம் கூட கொடுக்கமாட்டேன் என்று கொக்கரித்த துரியனும் உன்னை அஸ்தினாபுர அரசனாக்க அங்கிகாரம் அளித்து விடுவான். நாளை நடக்க இருக்கும் குருக்‌ஷேத்திரப் போரும் தொலைந்துவிடும். அப்படிப்பட்ட அமைதி நிலவவேண்டும் என்பதே எனது ஆவல். அதற்கு உன் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்” என்று கண்ணன் அடுக்கிக்கொண்டே போனான்.

    “இந்த உண்மையை இத்தனை நாள் ஏன் மறைத்து வைத்தீர்? என்னை எல்லோரும் தேரோட்டி மகன் என்று இழிவாக அழைத்த காலத்தில் நீங்கள் ஏன் அதனை மறுக்க முற்படவில்லை? இப்போது என்னை ஏன் குழப்பத்தில் ஆழ்த்துகிறீர்கள்?”

    “குழப்பம் தேவையில்லை கர்ணா. உண்மையை என்றும் மறைக்க முடியாது. எவ்வாறாகிலும் அதற்குரிய நேரத்தில் தக்க சூழ்நிலையில் அது வெளிப்பட்டே ஆகவேண்டும். அத்தருணம் வந்துவிட்டது இப்போது.”

    “விதி சதி செய்து என்னை என் சகோதரர்களுக்கு எதிராக போரிட வைத்துள்ளதே! ’அண்மையில் வெளிப்பட்ட உடன்பிறப்புகளா அல்லது நெடுநாளைய உற்ற நண்பனா?’ என்ற கேள்வியால் நான் ஒரு  தர்ம சங்கடத்தில் ஆழ்த்தப் பட்டுள்ளேனே. கண்ணா, இது என்ன கொடுமை? நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன்? இந்த ரகசியத்தை என்னிடம் ஏன் கூறினீர்கள்?”

    “நீ ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ள மறுத்தாலும், நாம் எப்பாடுபட்டும் நலிந்த தர்மத்தை நிலைநாட்டவேண்டும். இதுதான் என் எண்ணம். அவ்வெண்ணம்  வெற்றி பெறவே இந்த முயற்சி. அது பலிப்பதற்கு உன் ஒத்துழைப்பு தேவை கர்ணா.”

    கண்ணனின் இக்கூற்று மூத்த கெளந்தேயனை மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஆனாலும் விரைவில் தெளிவு பெற்றான். சில நொடிகள் அமைதியாக இருந்தபின் கர்ணன் பேசலுற்றான்.

     (தொடரும்)

    படத்திற்கு நன்றி:

    http://www.tamilhindu.com/2010/06/chariot-great-hindu-cultural-symbol/

    Share
  • வயிறாற நன்றி

    முகில் தினகரன்

    தொலைக்காட்சியில் கார்ட்டுன் பார்த்துக் கொண்டிருந்த பாபு அறையின் வெளிச்சத்தைக் குறைப்பதற்காக வேண்டி எழுந்து ஜன்னலை மூடப் போனான். அங்கே….. ஜன்னலுக்கு வெளியே வேலைக்காரி முனியம்மா தன் மகன் கண்ணனுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாள். அவனை மடியில் அமர்த்தி வைத்து…விளையாட்டுக் காட்டிக் கொண்டே ஒவ்வொரு கவளமாக அவள் ஊட்ட..ஊட்ட அவன் சிரித்தபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அதைப் பார்க்கப் பார்க்க பாபுவின் மனம் ஏங்கியது. ‘ஹூம்..அந்தக் கண்ணனுக்கும் என் வயசுதான்!…இருந்தும் அவனோட அம்மா அவனை மடியில் வெச்சு ஊட்டி விடறாங்க..எங்கம்மாவுந்தான் இருக்காங்க..ஒரு நாள் என் கூட உட்கார்ந்து நான் சாப்பிடறதை பார்த்திருப்பாங்களா?…எப்பப் பார்த்தாலும் லேடீஸ் கிளப்…மீட்டிங்….இதேதான்’

    ‘ம்மா…போதும்மா…வயிறு நெறைஞ்சிடுச்சும்மா’ கண்ணன் முகத்தைத் திருப்ப ‘இந்தா..இந்த வடையாச்சும் சாப்பிடு’ என்றபடி அவள் வடையை நீட்ட, வாங்கிக் கொண்டான்.

    ‘அய்யய்ய…இது நேத்திக்கு காலைல நம்ம வீட்டுல செஞ்ச வடையாச்சே.!.அது கெட்டுப் போச்சுன்னு நான்தானே வேண்டாம்னு எறிஞ்சேன்..அதைய அம்மா இந்த வேலைக்காரிக்குக் குடுத்திருக்கா போலிருக்கே’ தனக்குள் சொல்லிக் கொண்டே தொலைக்காட்சிக்கு முன் வந்து அமர்ந்த பாபுவிற்கு மனசு வலித்தது. ‘ஹூம்…நான் வேண்டாம்ன்னு வீசியெறியறதை சாப்பிடறவங்க கூட சந்தோஷமா இருக்காங்க..மூணு நேரமும் சுடச்சுட..வகைவகையா சாப்பிடற நான்…இஷ்டமேயில்லாம…வேண்டா வெறுப்பா சாப்பிடறேன்’

    மறுநாள் பள்ளி விடுமுறையானதால் வழக்கம் போல தொலைக்காட்சிப் பெட்டி முன்னாலேயே தவம் கிடந்தான் பாபு.

    ‘தம்பி…வாப்பா… சாப்பிடலாம்… மணி ஒம்பதாகப் போகுது…பசிக்கலையா?’ வேலைக்காரி முனியம்மா அன்போடு அழைக்க அதில் தொனித்த தாய்ப்பாசத்திற்குக் கட்டுப்பட்டு மௌனமாய் வந்து அமர்ந்தான் பாபு. போதாதற்கு முனியம்மா பக்கத்திலேயே நின்று கொண்டு ‘இன்னும் கொஞ்சம் சாப்பிடுப்பா..இன்னும் கொஞ்சம் சாப்பிடுப்பா’ என்று அன்பொழுக பரிமாற தன்னையுமறியாமல் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிட்டுவிட்டான் பாபு.

    ‘எதுக்கப்பா இந்த ஒரு சப்பாத்தி மட்டும் பாக்கி…இதையும் சாப்பிட்டுடப்பா’ அவள் நீட்ட மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவனாய் அதையும் தீர்த்தான். தாயப்பாசத்திற்கு ஏங்கிய அந்த பிஞ்சு மனசு வேலைக்காரியின் அன்பையே தாய்ப்பாசமாய் ஏற்று மகிழ்ந்தது.

    முற்பகல் பதினோரு மணியிருக்கும், வெளியே முனியம்மாவின் மகன் கண்ணனின் அழுகுரல் கேட்க ஜன்னலில் வந்து எட்டிப் பார்த்தான் பாபு.

    ‘அட..என்னைய என்ன சாமி பண்ணச் சொல்றே..எப்பவும் அரைகுறையாச் சாப்பிடுற அந்தத் தம்பி இன்னிக்குத்தான் பாவம் நல்லா சாப்பிட்டுச்சு…அதான் அந்த சந்தோஷத்துல எல்லா சப்பாத்தியையும் குடுத்து சாப்பிட வெச்சேன்..பரவாயில்லை விடுப்பா…இன்னொரு நாளைக்கு சாப்பிட்டுக்கலாம்’ ஆறுதலாய்க் கூறினாள். எப்படியும் இன்று மீந்து போன சப்பாத்தி கிடைக்கும் என்ற ஆசையில் மண் விழுந்ததைத் தாங்க முடியாத கண்ணன் அழுது கொண்டேயிருந்தான.;

    பாபுவின் மனதில் முனியம்மா மீதிருந்த மரியாதை பன்மடங்கு உயர்ந்தது. ‘ஆஹா…என்ன ஒரு மனசு இந்த தாய்க்கு…இதுவே வேறு யாராவதாயிருந்தால்..வேண்டுமென்றே எனக்குக் குறைவாகப் பரிமாறிவிட்டு மீந்து போனதை தன் மகனுக்குக் கொண்டு போய்க் குடுத்திருப்பாங்க..ஆனா..இந்த முனியம்மா என்னடான்னா…நான் நிறைய சாப்பிடறதைப் பார்த்து சந்தோஷப்பட்டு தம்மகனுக்கு இல்லாட்டியும் பரவாயில்லைன்னு மொத்தத்தையும் எனக்கே ஊட்டி விட்டுட்டாளே…! ஆனா ஒண்ணு நல்லா புரியது..நான் நல்லா சாப்பிட்டா..அந்தப் பையனுக்குக் கிடைக்காது…நான் அரைகுறையாய்ச் சாப்பிட்டு மீதம் வெச்சாத்தான் அவனோட வயிறு நெறையும்!…அப்ப சரி…’

    அன்று பாபுவுக்கு பிறந்த நாள்.

    ‘முனியம்மா..இன்னிக்கு அவனுக்கு பிறந்த நாள்…அவன் என்ன கேக்கறானோ..அதைச் செய்து குடு!….பாபு…உனக்கு இஷ்டமானதைக் கேளு…முனியம்மா சமைச்சுத் தருவாள்…சாப்பிடு..நான் ஒரு மீட்டிங்க்கு போயிட்டு ஈவினிங் வந்திடறேன்’ மேக்கப்பைச் சரி செய்தபடியே அவசரமாய்ச் சொல்லிவிட்டுப் பறந்தது அம்மாக்கிளி.

    அப்பாக்கிளியொ வந்திருந்த வியாபார நண்பர்களுடன் பேசியவாறே சொல்லாமல் கொள்ளாமல் பறந்து போனது.

    பாபு ஆசை தீரப் பட்டியலிட்டான். முனியம்மா மலைத்துப் போனாள். ‘அட என் ராசா…என் கண்ணே பட்டுடும் போலிருக்கே’ சந்தோஷமாய் சமையலில் இறங்கினாள.;

    மதியம். டைனிங் டேபிளில் பாபுவின் விருப்பப்படி சமைக்கப்பட்ட பதார்த்தங்கள் ஏகமாய்க் காத்திருக்க, பாபுவை அழைக்க அவன் அறைக்குள் சென்ற முனியம்மா அதிர்ந்து போனாள்.

    பையன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

    ‘என்னப்பா..என்னாச்சு?’

    ‘வயிறு ரொம்ப வலிக்குது முனியம்மா’ துடித்தான்.

    ‘அய்யய்யோ…பொறந்த நாளும் அதுவுமாய் இப்படிச் சொல்றியே…என்ன சாப்பிட்டே?’

    ‘ஒண்ணுமே சாப்பிடலையே முனியம்மா’

    ‘சரி வா டாக்டர்கிட்ட போய்க் காட்டிட்டு வந்துடலாம்’

    ‘ம்ஹூம் மாட்டேன்..டாக்டர் ஊசி போடுவார் அது இதை விட வலிக்கும்’ அவசரமாய் மறுத்து விட்டு மெத்தையில் குப்புறப் படுத்துக் கொண்டவனை உசுப்பினாள்.

    ‘அதுக்காக சாப்பிடாமப் படுத்தா எப்படி தம்பி..கொஞ்சமாச்சும் சாப்பிடேன்’

    ‘அய்யோ…வயிறு வலிக்குதுன்னு சொல்றேனல்ல?..அப்புறம் ஏன் என்னைய ‘சாப்பிடு…சாப்பிடு’ன்னு உயிரெடுக்கறே..சாயந்திரம் வரைக்கும் நான் படுத்துத் தூங்கப் போறேன்…என்னைய தொந்தரவு பண்ணாதே..போ’ பாபுவின் பேச்சில் திடிரென்று ஏறி;ய கடுமை முனியம்மாவின் வாயை அடைத்துவிட, முக வாட்டத்துடன் அந்த அறையை விட்டு வெளியே வந்தாள். ‘பாவம்..பொறந்த நாளன்னைக்கா இந்தப் பாழும் வயித்து வலி பையனுக்கு வரணும்’

    செய்த பலகாரங்கள் அனைத்தும் வீணாகிப் போக, அன்று இரவு அத்தனையையும் தூக்கி முனியம்மாவிடம் கொடுத்து விட்டு மகனை வலுக்கட்டாயமாக டாக்டரிடம் அழைத்துச் சென்றாள் பாபுவின் தாய்.

    மூன்று நாட்களுக்குப் பிறகு ‘ஏம்பா..டாக்டர் எல்லா டெஸ்டும் பண்ணிப் பாத்துட்டு ‘வயித்துல ஒண்ணுமே மிஸ்டெக் இல்லே’ன்னுட்டாராம..பொய்யாப்பா சொன்னெ நீ?’ முனியம்மா பாபுவிடம் ரகசியமாய்க் கேட்க,

    ‘ஆமாம் பொய்தான் சொன்னேன்’

    ‘ஏன்?..எதுக்குப் பொய் சொன்னே?..நீ கேட்டதையெல்லாம்தான் நான் சமைச்சு வெச்சிட்டேனே’

    லேசாய்க் குறுஞ்சிரிப்பு சிரித்த அந்தச் சிறுவன் ‘முனியம்மா நான் அப்படிப் பொய் சொன்னதுனாலதான் மொத்தப் பலகாரமும் கண்ணனுக்குக் கெடைச்சுது…பாவம்…அன்னிக்கு ஒரு சப்பாத்திகூட விடாம சாப்பிட்டு அவனை அழ வெச்சுட்டேனல்ல…அதுக்காகத்தான் அத்தனை பலகாரமும் அவனுக்குக் கெடைக்க இப்படி ஒரு ஏற்பாடு பண்ணினேன்..அது சரி…கண்ணன் நல்லா திருப்தியா சாப்பிட்டானா?’

    பதில் சொல்ல முடியாதபடி தொண்டை அடைக்க கண்களில் ‘குபுக்’கென கண்ணீர் பொங்க மேலும் கீழுமாய்த் தலையாட்டினாள் முனியம்மா.

    (முற்றும்)

     

    Share
  • அம்பாரி

    தமிழ்த்தேனீ

    நேர்மையா இருக்கறவனுக்கு எந்தப் பலனுமே கிடையாதா ? “கடமையைச் செய் பலனை எதிர் பாராதே” அப்பிடீங்கிற கீதை வாசகம் மட்டும் தான் சொந்தமா?

    எரிச்சலாய் வந்தது  முரளிக்கு. பல வணிக ஸ்தலங்களுக்கு அதிபர் திரு மகாலிங்கம். அவராய்த் தன்னைத் தேடி அழைத்ததை தன்னுடைய அதிர்ஷ்டமாக  மனதில்  நினைத்துக்கொண்டு   அவரைச் சந்திக்க அவருடைய அலுவலகத்துக்கு சென்றார் முரளி.

    மரியாதையான வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளே அமரவைக்கப்பட்டான் முரளி. திரு மகாலிங்கம் வந்தார். வாங்க மிஸ்டர் முரளி  உக்காருங்க , உங்க திறமையைப் பத்தி நிறையப் பேரு சொல்லி இருக்காங்க, அதுனாலேதான் நானும் உங்க திறமையை உபயோகிக்கணும்னு உங்களை வரச்சொன்னேன்.

    உங்களுக்குத் தெரியும், எனக்கு பல நிறுவனங்கள் இருக்கு.  குறிப்பா எல்லாத்திலேயும் நல்ல லாபம் வந்திட்டு இருக்கு. இந்த மகாலிங்கம் என்டெர்ப்ரைஸ் அப்பிடித்தான் ஓடிண்டு இருந்தது.

    இப்போ இந்த நிறுவனம்,  சிலபேரோட அலட்சியப் போக்காலே லாபம் கொறைஞ்சது மட்டுமில்லே. என் மனசிலே இதை எப்பிடி சரிப்படுத்தி லாபம் வரா மாதிரி இயங்க வைக்கறது அப்பிடீன்னு ஒரு கவலையே வந்துடிச்சு. இந்தக் கம்பனி விஷயமாத்தான் உங்களை வரச் சொன்னேன். 

    என்னோட மேனேஜர் எல்லா விஷயங்களையும்  உங்களுக்கு சொல்வார். எல்லாத்தையும் கேட்டப்புறம் ஒரு நல்ல  தீர்வு குடுப்பீங்கன்னு நான் நம்பறேன் என்றார்.

    ஒரு மாசமா  அவர் சொன்னதை கவனத்திலே வெச்சிண்டு  எல்லா வேலையையும் ஒதுக்கி வெச்சிட்டு, “சரி நம்மை மதிச்சுக் கூப்பிட்டிருக்கார். அதுனாலே அவருக்கு வேண்டிய இந்த முக்கியமான வேலையை செய்துகொடுப்போம்” அப்பிடீன்னு ராப்பகலா தூக்கத்திலேயும் இதே நினைப்போட யோசிச்சு யோசிச்சு உண்மையா, சுயநலமே பாக்காம நேர்மையா உழைச்சு உருவாக்கி  இந்த திட்டத்தை அவர்கிட்ட சொன்னார் முரளி.

    “இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். உங்களை எப்பிடிப் பாராட்டறதுன்னே தெரியலை”ன்னு சொல்லி  எழுந்து நின்னு கைகொடுத்துட்டு, “இவ்ளோ நாளா  உங்க திறமையை நான் உபயோகிக்காம விட்டது எவ்ளோ தப்புன்னு எனக்கு உணர்த்திட்டீங்க” அப்பிடீன்னு கண்கலங்க அவர் சொன்ன போது, “சரி நாம உழைச்ச உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கும். ஒரு தகுதி உணர்தல் கிடைக்கும்னு நம்பி அது வரை அந்த திட்டத்துக்காக அவர் செலவழித்த தொகையைக் கூட இன்று வரை அவரிடம் சொல்லாமல் எப்படியும் அவர் கணிசமான ஒரு தொகையைக் கொடுப்பார் என்று நம்பி காத்திருந்து”, சே எல்லாமே வீணாகிவிட்டதே.

    திட்டத்தை செயலாற்றும் வரை  தினமும் பலமுறை போனில் தொடர்பு கொண்டு அவருடைய அலுவலகத்துக்கே வரச்சொல்லி, மற்ற யாரையும் உள்ளே விடாமல் அவரிடம் மட்டுமே தனியாக விவாதித்து அவருடைய திறமையை மட்டுமே நம்புவதாகச் சொல்லி ஊக்கமளித்து அவரை நம்ப வைத்து வேலையை வாங்கிக் கொண்ட பின் ஒரு வாரமாக அவரிடமிருந்து அழைப்போ அல்லது அவன் செலவழித்த பணமோ எதுவுமே இல்லை. 

    இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் மௌனம் காப்பது என்று யோசித்து அது வரை அவர் செலவழித்த தொகைக்கு கணக்கை எழுதி அவருக்கு அனுப்பினார் முரளி.  ஒரு மாதமாக  அவரிடமிருந்து எந்த ஒரு செய்தியும் வரவில்லை, இவரே தொடர்பு கொண்டாலும் கிடைக்கவில்லை. தொலைபேசியில் அழைத்தார். அவர் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை என்றது ஒரு இனிய குரல்.

    கொள்ளென்றால் வாய்திறக்கும், கடிவாளமென்றால் வாய் மூடிக்கொள்ளும் குதிரை போல் அவரும் என்ற உணர்வில்  மனம் கசந்து போனது முரளிக்கு.

    தெய்வத்துக்குப் பொதுவா நேர்மையா உழைச்சு அவன் கண்டு பிடித்த வழிகள் பின்பற்றப்படுகின்றன  என்று ஒருவர் மூலமாகத் தெரிந்தது.

    மகிழ்ச்சியாய் இருந்தாலும், தன்னை மதித்து ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் அவர் ப்ரச்சனை தீர்ந்தவுடன் தன்னை ஒதுக்கிவிட்டாரே என்னும் வருத்தம் மனதுக்குள்  மையம் கொண்டது.

    துபாயிலிருந்து ஒரு போன். கால்  எடுத்து  யாரு என்றார் முரளி.  அப்பா நான்தான்  ரஞ்சனி பேசறேன் என்றாள் அவருடைய மகள். உங்க பேரன் கிண்டர் கார்டன்லே  பாஸ்பண்ணிட்டான். உங்ககிட்ட பேசணுமாம் என்றாள்.

    பேரன் போனில் “தாத்தா நானு எங்க ஸ்கூல்லே பாஸ் பண்ணிட்டேன்’, என்றான் மழலை மாறாத குரலில்.

    “வெரிகுட் சமத்துப் பையண்டா நீ. கங்ராஜுலேஷன்” என்றார் முரளி.

    “தாத்தா நீங்க  உம்மாச்சி  சேவிச்சீங்களா”,  என்றான்  பேரன்.  யாரோ பொட்டில் அறைந்தாற்போன்ற உணர்வு.

    சற்று நேரத்துக்கு முன்தான் இனி தெய்வங்களை சேவிப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்திருந்தார் முரளி.  குழந்தையும் தெய்வமும் ஒன்றுதான் என்று தோன்றியது.

    “அம்மா தாத்தா பேசமாட்டேங்கறாங்க”, என்றான் பேரன்.

    “சரி ரஞ்சனி, ஒரு முக்கியமான  அழைப்பு வந்திருக்கு. நான் மறுபடியும்  பேசறேன்” என்று இணைப்பைத் துண்டித்துவிட்டு அப்படியே அயர்ந்து போய் உட்கார்ந்தார் முரளி. 

    தொலைபேசி அழைத்தது.  எதிர்முனையில் திரு மகாலிங்கம் பேசினார்.

    “நீங்க கொடுத்த யோசனையை அமல்படுத்திவிட்டேன். இனி நீங்கதான் அந்தக் கம்பனியின் பொறுப்பாளர். உங்களைவிடத் தகுதியானவர் வேறு யாருமில்லை. அதனால்  நானே வந்து உங்களை நாளைக் காலையில் அழைத்துப் போய் பொறுப்பாளர் நாற்காலியில் உட்காரவைப்பேன் தயாராய் இருங்கள்” என்றார்.

    மனம் என்பது யானையைப் போன்றது. அதைப் பழக்கப்படுத்டும் விதத்தில் தானாகவே ஒரு கட்டுப் பாட்டுக்குள் வந்துவிடும். கட்டுக்குள் கொண்டு வந்துதான் அதன் மேலே அம்பாரி  அமைத்து உட்கார முடியும்.

    பழக்கப்படுத்திவிட்டால் யானை யாருக்கு வேண்டுமானாலும் மாலை போடும்.

    ஆனால் யானைக்கு மாலை போடுவது அவ்வளவு எளிதல்ல என்று உணர்ந்த   முரளி  மகளை தொலைபேசி மூலமாக அழைத்து, “என் பேரன்கிட்ட குடு அவன்கிட்ட பேசணும்” என்றான்.

    “தாத்தா  என்னா செய்யறே”, என்ற குழந்தைக் குரலைக் கேட்டு மகிழ்ந்து   “டேய் குட்டிப் பையா,  நேத்தும் உம்மாச்சி சேவிச்சேன் இனிமே எப்பவும் சேவிப்பேன் சரியா” என்றான் முரளி.

    குழந்தை “அம்மா தாத்தா என்னவோ சொல்றான்ங்க  ஒண்ணும் புரியலை”  என்றது மழலைக் குரலில்.

    தியானத்தில் ஆழ்ந்தாலும் அதிலே மூழ்காமல் மிதப்பவன்தான் ஞானி என்று புரிந்தது  முரளிக்கு. 

    (சுபம் )

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 44 (05.11.12)

    மலர் சபா
     
    புகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை
     
     
    விழா முடிந்தபின் மாதவி அலங்காரக்கோலம் பூண்டு கோவலனுடன் கூடியும் ஊடியும் இருத்தல்
     
     
    விண்ணவரும் வந்திருந்து
    கண்டு களித்திருந்த
    இந்திரவிழாவும்
    மாதவியின் ஆடலும் கோலமும்
    இனிதே நிறைவேறின.
     
     
    பலரும் கண்டு மகிழ்ந்திருந்த
    தன் ஆடல் அழகை, கோலத்தை
    தொடர்ந்தே இராமல்
    சடுதியில் முடித்தனள் மாதவி.
     
    இதன் காரணமாய்
    ஊடல் கொண்டவன் போல்
    கோவலன் அவளுடன் பேசுவது தவிர்த்தனன்.
     
     
    அவனை மகிழ்வித்து
    ஊடல் நீங்க வேண்டி
    அலங்காரக் கோலங்கள் பலவும்
    புனையலானாள் மாதவி.
     
     
    மாதவி நீராடிய முறை
     
     
    பத்துவகை மருந்து மணப்பொருட்கள்
    ஐந்து வகை நறுமணப் பொருட்கள்
    முப்பத்தியிரண்டு வகை நீராடு மணப்பொருட்கள்
    இவையனைத்தும் ஊறிய
    நறுமண நன்னீரிலே
    வாசநெய் பூசிய
    மணம் கமழும் கரிய கூந்தல்
    நலமே பெற்றிட மஞ்சள் நீராடினாள்.
     
     
    கூந்தலுக்குக் கத்தூரி
     
    நீராடிய பின்
    மண அகிற்புகையால் கூந்தல் உலர்த்தி
    ஐந்து பகுதியாய் அதைப் பிரித்துக்
    கொழுவிய கத்தூரிக் குழம்பது ஊட்டினாள்.
     
     
    கால்விரல் அணிகள்
     
     
    செம்பஞ்சுக் குழம்பு பூசிய
    அழகிய சிவந்த சிறிய அடிகளில்
    நன்மை பொருந்திய மென் விரல்களில்
    காலாழி, மகரவாய் மோதிரம், பீலி
    அணிந்திட்டாள்.
     
     
    பாதத்துக்கான அணிகள்
     
     
    காலுக்குப் பொருத்தமான
    பரியகம், நூபுரம், பாடகம்,
    சதங்கை, அரியகம்
    முதலான
    அணிகலன்களை அணிந்திட்டாள்.
     
     
    தொடை அணி
     
    திரள்தொடைப் பகுதியில்
    குறங்குசெறி எனும்
    அணிகலன் அணிந்திட்டாள்.
     
     
    இடை அணி
     
     
    அளவில் பெரிய
    முத்துகள் முப்பத்தியிரண்டால்
    கோவையாகத் தொடுக்கப்பட்ட
    விரிசிகை எனும் அணியைத்
    தன் இடையை அலங்கரித்த
    பூவேலைப்பாடு செய்த
    நீலப்பட்டாடையின் மீது
    மேகலையென அணிந்திட்டாள்.
     
     
    தோள் அணி
     
     
    கண்டவர் காமமுற வைக்கும்
    அழகிய கண்டிகை எனும்
    தூய மணிகள் சேர்த்துக் கோர்த்த
    முத்துவளையைத்
    தம் தோளுக்கு அணியாய்
    அணிந்திட்டாள்.
     
     
    அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 74 – 90
     
    படத்துக்கு நன்றி:

    http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=section&layout=blog&id=13&Itemid=59

    Share
  • சிங்கை கொலு & அன்னை நீலாயதாக்ஷி ஊஞ்சல் 2012

     

    நாகை வை. ராமஸ்வாமி

    அனைத்து உலக  ஹிந்துக்கள்  கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு வாய்ந்த நவராத்திரியில்  அன்னை தேவி     துர்கை, லக்ஷ்மி,  சரஸ்வதி ஆகிய சக்திகளாகவும்  பத்தாவது நாளில், விஜயதசமியில்,    வெற்றி தேவியாகவும்   வணங்கப்படுகிறாள்.     

    எங்கள் இல்லத்தில்  ( நாங்கள் எங்கு வசித்தாலும், மும்பை முதல், பங்களூர், தற்சமயம் சிங்கப்பூர் ) பொம்மைக் கொலுவுடன்,  எங்கள் ஊர் நாகப்பட்டினம் அன்னை நீலாயதாக்ஷி தேவியை ஒரு சிறு ஊஞ்சலில் தோரணம் மலர் மாலைகளால்  அலங்கரித்துப போற்றி உற்றம் சுற்றம் அழைத்து பாடல்கள் பாடி, வரும் சுமங்கலிகளுக்கும கன்னியர்களுக்கும் மங்கலப்பொருட்கள் அளித்து மகிழ்ந்து வருகிறோம். 

      இந்த ஆண்டு சிங்கப்பூரில் எங்கள் இல்ல கொலு, ஊஞ்சல் புகைப்படங்கள் இத்துடன்.    அன்னை நீலாயதாக்ஷி போற்றி நான் எழுதி வரும் பாடல்களில் பத்து தேர்வு செய்து இசை வடிவம் அமைத்து குறுந்தகடாகவும் வெளியிட்டிருக்கிறோம்.  சில கணினி இசைத் தளத்திலும் (தள  முகவரி கீழே).    

     
    Amudame Kumudame
    Neelaayadaakshi Vandhaal
    Navarathna Kreedam
    Ulagaalum Umaiyavale
    Kaatharul Purivai
    Nityam Pooji Devi
    Kaarmegham Pozhindhidum
    Vidamunda Kandan
    Kallam Illaa Vellai Ullam
    Thiruvarul Mevidum
     

    Share