Blog

  • நான் அறிந்த சிலம்பு – 45 (12.11.12)

     

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை

     
     
    மாதவியின் அணிகலன்கள்
     
     
    முன்கை அணிகள்
     
     

    வயிரங்களும் பதித்துவைத்த
    சித்திர வேலைப்பாடமைந்த சூடகம்,
    செம்பொன்வளை,
    நவமணி வளையாம் பரியகம்
    சங்கு வளையாம் வால்வளை
    பலவகைப் பவழவளை
    ஆகிய அணிகலன்களை
    மெல்லிய மயிர்கள் காணப்பெறும்

    முகப்பில் கட்டிய மாணிக்கக்கற்களுடன்

    தன் முன்கைகளில்
    பொருத்தமுறவே
    மாதவி அணிந்திட்டாள்.
     
     
    கைவிரல் அணிகள்
     
     
    வாளைமீனின் பிளந்த வாயை ஒத்த
    வாயகன்ற முடக்கு வணக்குறு மோதிரம்
    செந்நிற ஒளிவீசும் மாணிக்கம் பதித்த
    கிளர்மணி மோதிரம்,
    சுற்றிலும் ஒளி உமிழும்
    வயிரம் சூழ்ந்த மரகதத் தாள்செறி மோதிரம்,
    இவ்வகை மோதிரங்களைக்
    காந்தள் மலர் போன்ற
    தன் விரல்கள் முழுதும் மறையும்படி
    மாதவி அணிந்திருந்தாள்.
     
     
    கழுத்து அணிகள்
     
     
    வீரச்சங்கிலி
    நுண்ணியத் தொடர் சங்கிலி
    பூணப்படும் சரடு பூண்ஞாண்
    புனைவேலைகள் அமைந்த
    சவடி, சரப்பளி இவற்றினோடு
    முத்தாரம் அதுவும்
    அழகிய கழுத்தினில் அணிந்திருந்தாள்.
     
     
    பிடரி அணி
     
     
    முற்கூறிய சங்கிலிகள் முழுவதையும்
    ஒன்றாய் இணைத்துப் பூட்டிய
    கொக்கி ஒன்றில் இருந்து
    பின்புறமாகச் சரிந்து தொங்கிய,
    அழகிய தூயமணிகளால் செய்யப்பட்ட
    கோவை அவள் பிடரி மறைத்துக் கிடந்தது.
     
     
    காது அணிகள்
     
     
    இந்திர நீலக்கற்களுடன்
    இடையே பெரிய வயிரங்கள் பதித்த
    குதம்பை எனும் அணியை அழகுறத்
    தன் இரு காதுகளிலும் அணிந்திருந்தாள்.
     
     
    கூந்தல் அணிகள்
     
     
    சிறந்த வேலைப்பாடு அமைந்த
    செழுநீர், வலம்புரிச்சங்கு,
    தொய்யகம், புல்லகம் இவற்றைத்
     
    தன் கருத்து நீண்ட கூந்தலில்
    அழகுற அணிந்திருந்தாள்.
     
     
    அணிகள் பலவும் கொண்டு
    அழகுக்கு அணிசேர்த்த மாதவி,
    கோவலனுடன் ஊடியும் கூடியும்
    மகிழ்வதற்கென்றே அமைக்கப்பட்டிருந்த
    பள்ளியறையில் இன்புற வீற்றிருந்தாள்.
     
     
    அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
     
    படத்துக்கு நன்றி:
    Share
  • தொல்லைகாட்சி: நாஞ்சில் சம்பத் :உங்களில் யார் பிரபுதேவா

     

    மோகன் குமார்

    உங்களில்  யார் பிரபு தேவா

     

    விஜய் டிவி நடத்தும் உங்களில் யார் பிரபு தேவா – சீசன் டூ முடிவை நெருங்கி கொண்டிருக்கிறது . டிவிக்கள்  ஒவ்வொன்றிலும் பாட்டு நிகழ்சிகள், டான்ஸ் நிகழ்சிகள் உள்ளன ஆனால் விஜய் டிவி போல பலரும் பார்க்கும் விதமாய் சண், கலைஞர், ஜெயா போன்ற டிவிக்களால் செய்ய முடிவதில்லை என்பதே நிஜம் !

     

    ஒய்ல்ட் கார்டில் கண்ணை கட்டி கொண்டு ஒருவர் ஆடினார். கிட்டத்தட்ட செட் முழுதும் போய் ஆடினார். அவ்வப்போது கண்ணை கட்டியதால் லேசாய் தடுமாறினாலும் அருமையான ஆட்டம் ! நாங்கள் எப்போதுமே இந்த நிகழ்ச்சியை தொடர்ந்தேல்லாம் பார்ப்பதில்லை. சானல் மாற்றி மாற்றி பார்க்கிறது தான். அதனால் அன்று மற்றவர்கள் ஆடியதை அதிகம் பார்க்கலை

     

    இந்நிகழ்ச்சி பிரபலம்  என்றாலும் சூப்பர் சிங்கர்  அளவு ஹிட் ஆகலை என்று தான் சொல்லணும்

     

    ரோடில்  செயினை திருடிய போலிஸ் ஏட்டு

     

    சண் நியூஸ் செய்தியில் காட்டிய செய்தி இது (இத்தகைய  செய்தி ஜெயா டிவியிலா வரும்?) மதுராந்தகத்தில் சாலையில் நடந்து வந்த ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்து ஏழு பவுன் செயினை அறுத்து கொண்டு தப்ப முயற்சித்துள்ளார் ஒருவர். அந்த பெண்மணி அந்த திருடர் வந்த பைக்கை விடாமல் பிடித்து கொண்டு ஓட விடாமல் தடுத்துள்ளார். சாலையில் இருவருக்கும் பெரும் சண்டை நடந்துள்ளது. அப்போது அந்த வழியே போலிஸ் வர, அவர்கள் முதலில் புருஷன் பெண்டாட்டி சண்டை என நினைத்துள்ளனர் அப்புறம் இந்த பெண் செயினை அறுத்துகிட்டு ஓடுறார் திருடன் திருடன் என கத்தவும், போலிஸ் அந்த திருடனை வந்து பிடித்துள்ளது

     

    ” நான் போலிஸ் ஏட்டுயா; விட்டுடுங்க ” என கெஞ்சியுள்ளார் அவர். விடாமல் கைது செய்து ஸ்டேஷன் அழைத்து சென்றால் நிஜமாவே அவர் போலிஸ் ஏட்டு தான் என்று தெரிந்துள்ளது. டிவி யில் காட்டும் போது அவரது முகத்தை முழுதும் மறைத்து காட்டினர் போலீசார் ! (தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் அல்லவா?)

     

    யாராச்சும் திருடன்  வந்தா போலிஸ் கிட்டே போகலாம்  அந்த போலிசே திருடன் ஆனா  நாம யார் கிட்டே போறது ?

     

    டிவி யில் பார்த்த படம் : Taken

     

    எல்லாரும் இப்போது  ரிலீஸ் ஆன Taken – II பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நாங்கள் அதன் முதல் பார்ட் இப்போதான் ஸ்டார் மூவிஸில் பார்த்தோம்.

     

    அட இந்த கதையை  நாம முதல்லேயே பாத்திருக்கோமே ! நம்ம கேப்டன் இயக்கி நடிச்ச விருதகிரி இதே கதை தானே என தோணியது. சும்மா சொல்லக்கூடாது  கேப்டன் பல சீன் டிப்பி காப்பி அடிச்சிருக்கார்

     

    ஹீரோவின் டீன் ஏஜ் பெண்ணை ஒரு கூட்டம்  கடத்தி விற்க பார்க்க, ஹீரோ பல தடைகளை தாண்டி எப்படி மீட்டார் என்பது தான் கதை. முழுக்க முழுக்க ஆக்ஷன் படம். தெரிந்த கதை என்றாலும் gripping ஆக இருந்தது பார்க்க.

     

    ஸ்டார் மூவிஸில் படம் பார்ப்பதில் ஒரு நல்ல விஷயம். விளம்பரம் போடும்போது மறுபடி படம் வர எவ்வளவு நிமிடம் ஆகும் என சைடில் தெரியும் அதை பொறுத்து நாம் மற்ற சானல் போய்விட்டு ஜாலியா வரலாம் !

     

    அமில மழை  பொழிந்த நாஞ்சில் சம்பத்  
     
    ம.தி.மு.க வில் வைக்கோவிற்கு அடுத்த இடம் என்று கருதப்பட்ட நாஞ்சில் சம்பத்திற்கும் வைக்கோவுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது.  இதையடுத்து  சன் டிவி நாஞ்சில் நாஞ்சில் சம்பத்திடம்  விரிவான பேட்டி எடுத்தது. வைக்கோவின் மினியேச்சர் போலவும், சிராக்ஸ் போலவும் தோற்றமும், பேச்சும்  கொண்ட அவர் பேசியதிலிருந்து சில பகுதி:  
     
    – அஞ்சு வருஷம் திட்டி விட்டு, நான்கு சீட் அதிகம் என்றதால் கடைசி நேரத்தில் அணி மாறியவர் வைகோ. அவர் எந்த கட்சியுடன் சேர்வது என்று கடைசி நிமிடம் வரை தடுமாறியதால் தான் நாங்களும் ஒவ்வொரு தேர்தலிலும் தடுமாற வேண்டியிருந்தது.
     
    – தேர்தலின்போது நடந்த ஒரு திருமணத்தில் என்னை தனி அறைக்கு அழைத்து சென்று ” ஸ்டாலினை முதல்வராக்க நான் உழைக்கணுமா?” என்று பேசியவர் வை.கோ.  
     
    – இந்த கட்சிக்காக வைகோவை விட அதிகம் உழைத்தவன் நான். அதிகம் பேரை ஈர்த்தவன் நான். நானாக கட்சியை விட்டு விலக மாட்டேன் அந்த பழி சொல் எனக்கு வேண்டாம். அவராக வேண்டாமானால் என்னை நீக்கட்டும்.  
     
    – அவரை விட மிக அதிககூ ட்டங்களில் என்னை பேச அழைக்கிறார்கள். தன்னை விட இன்னொருவர் அதிக புகழ் பெறுவது பிடிக்காமல் அவர் செய்யும் செயல் தான் இது  
     
    – நாஞ்சிலை கொளுத்தியது போல் இதையும் கொளுத்துங்கள் என்று சர்ச்சைக்குரிய புத்தகம் பற்றி பேசுகிறார் என் மீது இவ்வளவு வன்மம் அவருக்கு உண்டு என இப்போது தான் தெரிகிறது. இப்படி வன்மத்துடன் உள்ளவரை எப்படி என் மகள் கல்யாணத்துக்கு அழைக்க முடியும்? அதனால் தான் அழைக்க வில்லை  
     
    – என் வீட்டார் என்னை எந்த கட்சியிலும் சேராதே. இலக்கிய பணி மட்டும் செய் என்கிறார்கள். 18 வருடமாய் எந்த சொந்தகாரர் கல்யாணம், சாவுக்கும் செல்லாமால் கட்சி, கட்சி என்று இருந்து விட்டேன். நான் இறந்தால் எந்த சொந்த காரரும் வர மாட்டார் கட்சி காரர்கள் வந்தால் தான் உண்டு  
     
    பிளாஷ்பேக் : ரயில் சிநேகம்  
     
    சண் டிவியில் முதன் முதலில் சீரியல் என்று ஆரம்பித்த போது பாலச்சந்தர் செய்த தொடர் ரயில் சிநேகம். நிழல்கள் ரவி, இந்திரா நடித்தது. “ரயில் சிநேகம் ..ரயில் சிநேகம் ” என்று ஜேசுதாஸ் பாடும் பாடல் இன்றும், ஒரு வரி விடாமல் நியாபகம் இருக்கிறது. குழந்தையை வைத்து கொண்டு பாடும் ” இந்த வீணைக்கு தெரியாது” கூட மிக அழகான இன்னும் பலர் விரும்பி கேட்கும் பாடல் தான்.  
     
    நிழல்கள் ரவியின் பெண்ணாக வளரும் இந்திராவிற்கு திடீரென அவர் தன் தந்தை இல்லை என தெரிய வருகிறது. அப்போ நிழல்கள் ரவி ஏன் அவரை வளர்க்கிறார் என சொல்வது தான் ரயில் சிநேகம்.  

    வாரம் ஒரு பகுதி மட்டுமே  வரும் இந்த தொடரை எவ்வளவோ  பேர் விரும்பி பார்த்தோம். நல்ல சினிமா பார்க்கிற சந்தோசம் அப்போது இந்த சீரியலில் கிடைத்தது !

     

    ஒரு நாள் போதுமா?  
     
    விஜய் டிவியின் மியூசிக் அவார்ட்சில் நிகழ்ச்சி துவக்கி வைத்து ” ஒரு நாள் போதுமா? ” பாட்டை முழுமையாய் பாடினார் பாலமுரளி கிருஷ்ணா. ஏறக்குறைய நிஜ பாட்டை கேட்கும் விதத்திலேயே இன்றும் அவர் பாடுவது ஆச்சரியமாய் இருந்தது. ஜானகி, சுசீலா, டி.எம். எஸ் போன்றோர் குரலில் மிக அதிக நடுக்கமும் முன்பு போல் இப்போது பாட முடியாததையும் காண்கிறோம். ஆனால் இவரால் எண்பது வயதுக்கு மேலும் எப்படி அருமையாய் பாட முடிவதுடன், குரலும் அப்படியே இருக்கிறது ?  
     
     
    இக்கேள்விக்கு ஒரு விடை தான் இருக்கமுடியும் ! பயிற்சி ! விடாமல் தினம் பயிற்சி மேற்கொள்கிறார் என நினைக்கிறேன்.  
     
     
    நம் வாழ்க்கைக்கும் இது பொருந்தும் தானே ! நாம் மனதில் கொண்ட லட்சியத்திற்கு தினம் உழைத்தால், பயிற்சி எடுத்தால் நினைத்ததை அடைய முடியும் தானே !

    Share
  • தீக்கொழுந்தில் ஒரு பனித்துளி (19)

     

    முகில் தினகரன்

    அத்தியாயம்  – 19

    மதியம் மூன்று மணியிருக்கும்,

    மாலையில் மகன் வந்ததும் அவனிடம் எப்படிப் பேசுவது….எதைச் சொல்லி அவனைச் சரிக்கட்டி, தேவியின் கணவனுக்கு கிட்னி தானம் செய்யச் சொல்வது, என்று தனக்குள் ஒத்திகை பார்த்தபடி அமர;ந்திருந்தாள் லட்சுமி.

    அப்போது கதவு ‘பட..பட”வெனத் தட்டப்பட,

    ஓடிப் போய்த் திறந்தாள்.

    சுந்தர் பணி புரியும் தறிக் கூடத்து சிப்பந்தியொருவன் நின்று கொண்டிருந்தான்.  அவன் முகத்தில் கலவரம். எதையோ சொல்ல துடிக்கும் உதடுகள். கண்களில் பீதியின் வெளிப்பாடு.

    ‘என்னப்பா…இந்த நேரத்துல?”

    ‘அ…ம்…..மா…!  வந்து…வந்து…தறிக் கூடத்துல தீப்பிடிச்சிடுச்சம்மா!”

    ‘அய்யய்யோ….என்னாச்சு…என் பையனுக்கு என்னாச்சு?” பதறினாள் லட்சுமி.

    ‘ஆளுங்களுக்கெல்லாம் ஒண்ணுமில்லை….ரெண்டு மூணு பேருக்குத்தான்…கொஞ்சம் தீக்காயம்!” அவன் எதையோ மறைக்கிறான் என்பதை அவன் தயக்கத்திலிருந்தே புரிந்து கொண்ட லட்சுமி,

    ‘தம்பி…சாமி சத்தியமா உண்மையச் சொல்லுப்பா..என் மகன் எப்படியிருக்கான்?’ லட்சுமி அவனை நெருங்கி வந்து அவன் தாடையைத் தொட்டுத் திருப்பிக் கேட்டாள்.
     

    ‘ஆமாம்மா…சுந்தருக்கு கொஞ்சம் அதிகப்படியாவே தீக்காயம் ஏற்பட்டிடுச்சும்மா!…ஈரோடு ஜி.ஹெச்.சுக்குத்தான் கொண்டு போயிருக்காங்க!”

    ‘அய்யோ…சுந்தர்;!” அலறியபடியே அவள் சாய,

    வந்தவன் செய்வதறியாது திகைத்து நின்று, பிறகு சட்டென்று சுதாரித்துக் கொண்டு, அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தான்.
    —–

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரி.

    உடல் முழுதும் தீக்காயங்கள் வாங்கி, தலை முடிகள் முற்றிலுமாய் கருகி, முகம் கோரமாகி, குற்றுயிரும் குலையுயிருமாய் அவசர சிகிச்சைப் பிரிவில் கிடந்தான் சுந்தர்.

    முதல் கட்ட சிகிச்சையை முடித்து விட்டு, அடுத்த கட்ட சிகிச்சைக்குப் போகும் முன், அவன் மயக்கம் தெளியக் காத்திருந்தார; டாக்டா;.

    ‘எக்ஸ்க்யு+ஸ் மீ டாக்டர;!” என்றபடி உள்ளே நுழைந்த ஒரு இளம் டாக்டர;, ‘டாக்டர;…இவரோட வந்தவங்க…வெளிய நின்னுட்டு கேள்வி மேல கேள்வி கேட்டுத் துளைச்செடுக்கறாங்க டாக்டர்;…பேஸண்டடோட கண்டிஷன் என்னன்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா அதை அவங்களுக்கு கன்வே பண்ணி லேசா அவங்களை ஆஃப் பண்ணிடுவேன்!”

    ‘ம்ஹூம்….பேஸண்ட் இன்னும் சுயநினைவுக்கு வரலை…வந்தாத்தான் எதுவும் சொல்ல முடியும்!…ஓ.கே!…’இன்னும் அபாய கட்டத்துலதான் இருக்கார்;”ன்னு சொல்லி வைங்க!” என்றார; சீப் டாக்டர்.

    ‘டாக்டர்…இப்ப நான் தெரிஞ்சுக்க கேட்கறேன்…சொல்லுங்க…பேஸண்டோட உண்மையான நிலமை என்ன?” அந்த இளம் டாக்டர; சற்று தாழ்வான குரலில் கேட்க,

    ‘ப்ச்!..”என்றவாறு உதட்டைப் பிதுக்கிய  சீப் டாக்டர்;, ‘ம்ஹூம்…தேறாது!” எனறார்…ஒரே வார்த்தையில்.

    ‘மை காட்!” என்றபடி அந்த இளம் டாக்டர் வெளியேறினார்.

    அவர் வெளியேறிய சில நிமிடங்களில் அந்த அறைக்குள் முனகல் சத்தம் கேட்க, திரும்பிப் பார்த்தார; சீப் டாக்டர்.

    சுந்தர்தான்.

    கண்களைத் திறந்து விழிகளை மட்டும் இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் நகர்த்தி எதையோ பார;வையால் தேடிக் கொண்டிருந்தான்.

    அவனை நெருங்கி நின்று கூர்ந்து கவனித்தார; டாக்டர்;.

    ரணங்களின் வேதனை அவன் கண்களில் அப்பட்டமாய்த் தெரிந்தது.

    அவன் எதையோ சொல்லத் தவிப்பது உதடுகளின் துடிப்பில் தெரிய,

    டாக்டர; குனிந்து அவன் காதருகில் சென்று, ‘மிஸ்டர், சுந்தர்;….பயப்படாதீங்க!…உங்களுக்கு பெரிசா ஒண்ணுமில்லை…ஒன்றிரண்டு சிறிய தீக்காயங்கள்தான்!”

    ‘டா…க்…ட…ர்!…. டா…க்…ட…ர்;!” மூச்சு விடவே சிரமப்பட்டான்.

    ‘ம்..சொல்லுங்க…”

    ‘டா…க்…ட…ர்!…நான் பொழைக்க….மாட்டேன்!….எ…ன…க்…கு…த்  தெரியும்!…’மிகவும் கஷ்டப்பட்டுப் பேசினான்.

    ‘யார; சொன்னது?…நிச்சயம் நீங்க பொழைச்சுக்குவீங்க!”

    ‘இல்ல….டாக்டா;….நீ…நீங்க….அந்த…டாக்டர்கிட்ட…பேசிட்டிருந்ததை…நான் கேட்டேன்!”

    திணறிப் போன டாக்டர்;, ‘அது…அது வந்து…சும்மா…” சமாளிக்கப் பார;த்தார்.

    ‘இ…ல்….ல   டா…க்…ட…ர்! எப்படியும்…நான்…சாகத்தான்…போறன்!… அதுக்கு முன்னாடி…. என்னோட… என்னோட கிட்னிய…எடுத்து…சிவா மருத்துவமனைல…இருக்கற…ரத்ன…வேலுவுக்கு…குடுத்திடுங்க!’ சொல்லிட்டு டாக்டரையே ஊடுருவிப் பார;த்தான்.  அந்தப் பார்வையில் ஒரு கெஞ்சல் தெரிந்தது. வாழ்க்கையின் விளிம்பில்…மரணத்தில் வாசலில் இருந்து கொண்டு கெஞ்சும் அந்த ஜீவனின் இறுதி ஆசை டாக்டரை நெகிழச் செய்தது.

    ‘இப்படியும் ஒரு மனுசனா?…தான் சாகப் போறோம்னு தெரிஞ்சதும்…’எப்படியாவது என்னைக் காப்பாத்துங்க டாக்டர்” ன்னு கேட்காம எங்கியோ..ஏதோ ஒரு ஆஸ்பத்திரில இருக்கற யாரோ ஒருத்தனுக்கு தன்னோட கிட்னிய எடுத்துக் குடுத்திடுங்கன்னு சொல்றானே!”

    ;டாக்டர; யோசிக்காதீங்க டாக்டர்!…நான் சாகறதுக்கு முன்னாடி ஆபரேஷன் பண்ணி என்னோட கிட்னிய எடுத்திடுங்க டாக்டர்!” அவன் கண்களில் அவசரம் தெரிந்தது.

    டாக்டருக்கும் அவன் எண்ணம் சரியெனவே பட்டது.

    நீண்ட யோசனைக்குப் பிறகு, நர;ஸை அழைத்து சுந்தரின் மெடிக்கல் ரிப்போர்ட் பைல்களை எடுத்து வரச் சொன்னார்.

    அவனது ஸ்கேன் ரிப்போர;ட்டை காஷுவலாகப் பார;த்த டாக்டர; அதிர்ந்தார்;.

     

    Share
  • வார ராசி பலன்11/11/201 to 17/11/202 வரை

     

    காயத்ரி பாலசுப்பிரமணியன்

    மேஷம்: உயரதிகாரிகள் காட்டும் ஆதரவு புதிய உற்சாகத்தை அளிப்பதோடு,உங்களின் ஆர்வத்திற்கு உரிய வாய்ப்பும் உங்களைத் தேடி வரும். மாணவர்கள் படிப்புக்கு முக்கியத்துவம் தந்தால், பாடங்கள் கரும்பாய் இனிக்கும். பொது வாழ்வில் இருப்போர் ஆவேசமான பேச்சு, மற்றும் செயல்பாடு இரண்டும் எல்லா நேரங்களிலும் விரும்பிய பலனைத் தராது என்பதை உணர்ந்து செயல்படுங்கள். வேலையில் இருக்கும் பெண்கள் சில மறைமுக எதிர்ப்புகளைச் சமாளித்து, தங்களின் திறமையைத் தக்க வைத்துக் கொள்வர். பிறரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருந்து வந்தால், மன அமைதி குறையாமல் இருக்கும்.

     

    ரிஷபம்: மாணவர்கள் எட்டாக் கனியான விஷயங்களில் உங்கள் கவனத்தையும் திறமையையும் வீணடிக்காதிருப்பது நல்லது. கலைஞர்கள் போட்டா போட்டியில் வெற்றி பெற, உங்களின் அனுபவ அறிவு கை கொடுக்கும். முக்கியமான பொறுப்புகளைக் கையாள்பவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களை உங்கள் அருகில் வைத்துக்கொள்வது சிறந்தது. வியாபாரிகள் பழைய பாக்கிகளை வசூலிக்க அலைய நேரிடும். பெண்கள் இரவலாக உங்கள் பொருள்களைத் தருவதை நாசுக்காகத் தவிர்த்துவிடுங்கள். பாதிப் பிரச்னைகள் குறைந்து விடும். தொழிற்சாலைகளில் பணி புரிவோர் இரும்பு உபகரணங்களை எச்சரிக்கையுடன் கையாள்வது அவசியம் .

     

    மிதுனம்: சரக்குகள் தேங்காதவாறு வியாபாரத்தை முடுக்கிவிடும் வியாபாரிகளுக்கு லாபத்தோடு புதிய ஒப்பந்தங்களும் உடன் வந்து சேரும்.பிறர் செய்யும் தவறுக்கு, நீங்கள் பதில் சொல்லும் சூழல் உருவாகும் நிலை இருப்பதால், மாணவர்கள் கவனத்துடன் செயல்படவும். தந்தை-மகள் உறவு நெருக்கமாகும். இதுவரை இருந்த மனத் தாங்கல் நீங்கி, ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வீர்கள். பெண்கள் அவ்வப்போது தோன்றும் சிறிய பிரச்சினைகளைத் தெளிவுடனும் திறமையுடனும் கையாண்டால் உறவுகளின் ஆதரவு உங்கள் பலமாய் மாறும். ஆன்மீகப் பயணங்களுக்கான அழைப்பு உங்களைத் தேடி வரும்!

     

    கடகம்: இதுநாள் வரை மந்த கதியில் சென்று கொண்டிருந்த வேலை, புதிய வேகத்துடன் நடைபெறுவதால், சுய தொழில் புரிபவர்கள் உற்சாகத்துடன் திகழ்வார்கள். கல்விப் பணியில் இருப்பவர்க்கு இது ஏற்ற வாரமாகும்.அனுசரித்து நடந்து கொள்ளும் கொள்கை உடையவரின் கூட்டு முயற்சி வெற்றியாய் முடியும். வியாபாரிகள் எதிரிகளின் செயல்களைக் கண்காணிப்பது அவசியம். இது வரை தன் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று வருந்தியவர்க்கு பாராட்டு வந்து சேரும். முக்கியமான முடிவு எடுக்கும் தருணங்களில் அவசரப்பட வேண்டாம். சிலர் பழைய நண்பர்களை சந்தித்துப் பேசி மகிழலாம்.

     

    சிம்மம்: நீங்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள், உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளமாகும் . இளம் வயதினர் புதிய சூழலில் கவனமாகப் பழகுவதோடு யோசித்துச் செயல்படுவது அவசியம். தொழிலதிபர்கள் தங்கள் நாவன்மையால் தங்கள் கருத்துகளை எடுத்துச் சொல்ல ஏற்ற வாரம். வீடு, மனை விற்பனை அவ்வளவு லாபகரமாய் இராது. எனவே பணத்தை அதில் முடக்க வேண்டாம். இல்லச் சூழலோடு பணிச்சுமை மோதாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம், பயணம் என்று மகிழ்ச்சியாய் இருப்பார்கள். பணியில் இருப்போர் தம் திறமைக்குரிய வாய்ப்பு வரும் வரை பொறுமை காப்பது அவசியம்.

     

    கன்னி: பெண்கள் பேச்சில், படபடப்பைக் குறைத்து இனிமையைக் கூட்டுங்கள். இல்லறம் நல்லறமாய்த் திகழும். பெற்றோர்கள் பிள்ளைகள் கேட்டவுடன் பணம் கொடுப்பதை விட, அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வைப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் இடம், பொருள், ஏவல் தெரிந்து உங்கள் கோரிக்கைகளை முன் வைப்பது அவசியம். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும். எனவே செலவுப் பட்டியலைக் குறைவாக்குங்கள். சுய தொழிலில் இருப்பவர்கள், சிரமங்களுக்கு இடையே வெற்றி காண்பர். சில நேரங்களில் நண்பர்கள் உங்களை முழுமையாய்ப் புரிந்து கொள்ளாமல் செயல்படலாம்.

     

    துலாம்: மாணவர்கள் புது நட்புடன் வளைய வருவார்கள். கணவன் வழி உறவுகளுக்காகப் பெண்கள் தங்கள் சேமிப்பைக் கரைப்பர். கலைஞர்களுக்கு வெளிவட்டாரம் மூலம் மகிழ்ச்சி வரும். கூடவே சுற்றி இருப்பவர்களால் வீண் செலவுகளும் வந்து வந்து போகும். சில குழப்பங்கள் உருவாகும் சூழல் இருப்பதால், வியாபாரிகள் தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டு வாருங்கள். நிலைமை மீண்டும் சகஜமாகிவிடும். வேலை நிமித்தம் அங்கும் இங்கும் அலைபவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்தி வந்தால், உங்களின் அன்றாட அலுவல்கள் சீராக நடைபெறும். பொருளாதார வரவால், நீங்கள் மன உற்சாகத்துடன் செயல்படலாம்.

     

    விருச்சிகம்: பெண்கள் தங்கள் துணைவரின் உடல்நலத்தில் விசேஷ கவனம் செலுத்தி வந்தால், இல்லப் பணிகள் தடையின்றித் தொடரும். மாணவர்கள் சோர்வை விரட்டியடிக்கும் சத்தான பானங்களைக் குடித்து வந்தால், சிந்தனை வளம் மேலும் பெருகும். வியாபார விஷயங்களில் வெளுத்ததெல்லாம் பால் என்றிருப்பதைத் தவிர்த்தல் நலம். பணியில் இருப்போர் புதிய விஷயங்களை அறிந்து கொள்ளும் துடிப்புடன் செயலாற்றுவார்கள். பிள்ளைகளிடம் உங்கள் கருத்துகளை இதமான முறையில் எடுத்துச் சொன்னால், அவர்களின் ஒத்துழைப்பையும் பெறலாம். பழைய கடன்கள் அடைவதால், பொருளாதார இறுக்கம் குறையும்.

     

    தனுசு: குடும்ப விஷயத்தில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். பிரச்சினைகள் சுமூகமாக முடியும். வெளி இடங்களில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் அவசியமற்ற இரவு நேரப் பயணங்களைத் தவிர்த்து விடுதல் நலம். கலைஞர்கள் கவனமாக இல்லை என்றால், சிலரின் சூழ்ச்சியால், வரும் வாய்ப்புகள் திசை மாறலாம். குழந்தைகள் பெறக் கூடிய பெருமையால், உங்களின் பெருமையும் உயரும். அலுவலக கொடுக்கல் வாங்கலில் கவனமாய் இருந்தால், மன இறுக்கமின்றி வேலையில் ஈடுபட முடியும். மற்றவருக்கு ஜாமீன் போடுவதைத் தவிர்த்துவிடவும்.

     

    மகரம்: குடும்ப உறுப்பினர் உங்களின் திட்டங்களுக்கு, வலிமை சேர்க்க முன் வருவார்கள். பங்குச் சந்தை விஷயங்களில் ஏற்றம், ஏமாற்றம் இரண்டும் கலந்திருக்கும். எனவே பணத்தை முதலீடு செய்யும் முன் யோசனை செய்வது நல்லது. பெண்கள் பேச்சில் கடுமை கலவாதவாறு பார்த்துக் கொண்டால், குடும்ப உறவுகள் சுமூகமாக இருக்கும். வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் உள்ள குழறுபடிகளைக் கவனமாகச் சரிசெய்தால், அபராதம் செலுத்தவதைத் தவிர்த்துவிடலாம். வெளியூர்ப் பிரயாணங்களில், உணவு விஷயத்தில் மிதமாக இருப்பது நல்லது. பொறுப்புகளில் உள்ளவர்கள் கோப்புகளை நன்கு படித்தபின், கையெழுத்திடுவது அவசியம்.

     

    கும்பம்: சில நேரங்களில் கண் மற்றும் பல் சம்பந்தமான உபாதைகள் உங்கள் இயல்பு வாழ்வைப் பாதிக்கக் கூடும். எனவே சிறு தொந்தரவுகளை உடன் கவனித்து விடுங்கள். கலைஞர்கள் விழா, விருந்து போன்றவற்றில், உங்கள் எல்லையை அறிந்து, நடந்து கொள்வது அவசியம். வியாபாரிகள் எழுத்துப்பூர்வமாகவே ஒப்பந்தங்களை முடிப்பது நல்லது. பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வேலையாட்களை நம்பி முழுப் பொறுப்பை அளிக்காமல், உங்கள் கவனமும் அதில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பணியில் இருப்போர் வரும் இடமாற்றத்தை விரும்பி ஏற்றுக் கொள்வதால், வாழ்க்கையில் உயரும் வாய்ப்பு உங்களை நாடி வரும்.

     

    மீனம்: நண்பர்களிடையே பணம் கைமாற்றாக கொடுப்பதைத் தவிர்த்தால், நட்பு கெடாமல் இருக்கும். மாணவர்கள் தெளிவான சிந்தனையுடன் செயலாற்றினால் தடுமாற வேண்டியிருக்காது. பெண்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் முன் அவற்றைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். சிலருக்குப் புதிய மனை மற்றும் இடம் வாங்கும் வாய்ப்பு கனிந்து வரும். அலுவலக விழா, விருந்து ஆகியவற்றிற்குக் கணிசமான பணம் செலவழியும். நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களை நண்பர்கள் இனிமையாய் மாற்றிடுவார்கள். உறவுகளிடையே கருத்து வேறுபாடு தோன்றி மறையும். அவசர கதியில் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொண்டால், தேக நலன் சீராக இருக்கும்.

     

    Share
  • கங்கா ஸ்னானம் 2012

     தமிழ்த்தேனீ   

     

       1961 ம் வருடம்   

                    

     டேய் கண்ணா  சீக்கிரம் படுத்துண்டு தூங்கு, பட்டாசு வெடிச்சது போறும். காத்தாலே 4 மணிக்கெல்லாம் எழுப்பிடுவேன். சீக்கிரம் எழுந்து கங்கா ஸ்னானம் செய்யணும். .போறும் போய் படுன்னு அம்மா சொல்லச் சொல்ல பட்டாசுகளும், மத்தாப்புகளும், புஸ்வாணமும் ,கம்பி மத்தாப்பும் கொளுத்தி மகிழ்ந்ததும், அதுவும் போதாக் குறைக்கு, சின்னதா பொடி டப்பி மாதிரி இருக்குமே ஏரோப்ளேன் அதுமேலே சின்னதா திரி இருக்கும் அதைக் கொளுத்தி விட்டா சர்ருன்னு மேலே கிளம்பி உயரமாய்ப் போய் சுற்றிக்கொண்டே எங்காவது போய் விழும்.

     

    அது எங்கே விழுந்தது என்று தேடிப்பார்க்க அடுத்த வீடு ,அடுத்த வீடு என்று ஓட்டின் மேலேயே தாவித் தாவிப் போயி நாலாவது வீட்டு மாடிலே விழுந்திருக்கறதைப் பாத்து அப்பா நாம விட்ட ஏரோப்ளேன் எவ்ளோ தூரம் பறந்து ,எவ்ளோதூரம் போயி விழுந்திருக்கு என்று ஆச்சரியப்பட்டு நின்றபோது ,

     

     மாடியிலிருந்து அப்பா சைகை செய்தார் , வா என்று . அடேடே அப்பாவே மாடிக்கு வந்தாச்சா. நான் வேற நாலாவது வீட்டு மாடிலே இருக்கேன். தயங்கித் தயங்கி ஓட்டுமேலே ஏறி இறங்கி  வீட்டு மாடிக்கு வந்தான் கிருஷ்ணன். 

     

     கிருஷ்ணா இப்பிடியெல்லாம் ஓட்டுமேலே ஏறக் கூடாது, எங்கேயாவது தடுக்கி விழுந்தா என்ன ஆகும் . சரி சரி இனிமே ஓட்டுமேலே ஏறாதே  என்றபடி அப்பா கீழேருந்து உங்க அம்மா குரல் குடுத்திண்டே இருக்கா ,வா வா சீக்கிரம் போயிடலாம்  என்றார் அப்பா.

     

     நான் சொல்லிண்டே இருக்கேன் இப்போ கீழே இறங்கி வரப் போறியா இல்லே அப்பாகிட்டே சொல்லட்டுமான்னு அம்மாவோட குரல் கேட்டு பயந்து தாவித் தாவி  வீட்டு மாடிக்கு வந்து கடகடன்னு கீழே இறங்கி ஓடி வந்து அம்மாவுக்குத் தெரியாம உள்ளே போயி  அம்மா நான் அப்பவே வந்துட்டேன் நீங்கதான் என்னைக் கவனிக்காம கத்திண்டே இருக்கீங்க.  என்று சொல்லிவிட்டு ,நான் படுத்துண்டு ரொம்ப நேரமாச்சுன்னு சொல்லிட்டு அப்பாவைப் பார்த்து  சிரித்தான் கிருஷ்ணன் .

     

     குட் நைட்  ,சீக்கிரம் தூங்கு காத்தாலே  சீக்கிரம் எழுந்துக்கணும் என்றபடி போர்த்திவிட்டுவிட்டு போனார் அப்பா.    கனவிலும் பட்டாசுகளும், மத்தாப்புகளும், புஸ்வாணமும் ,ஏரோப்ளேனும் பூப்பூவாய் வாரி இறைத்தன.   டேய் எழுந்திருடா எவ்ளோ நேரமா எழுப்பறது , தலைக்கு மேலே வேலை இருக்கு , எல்லாரும் எழுந்தாச்சு ,வாடா கண்ணு என்று அம்மாவின் குரல் கேட்டு ,நான் எப்பவோ வந்து தூங்கியாச்சும்மா, ஏன் தொந்தரவு செய்யறே என்று திரும்பிப் படுத்தான் கிருஷ்ணன்,

     

     என் கண்ணோல்லியோ திரும்பித் திரும்பி படுத்துக்காதே, எழுந்திருடா செல்லம், மணி நாலாயிடுத்து , சீக்கிரம் எழுந்து வாடா கண்ணு  என்று அம்மா என்னை அணைத்து தூக்கி எழுப்பியவுடன், அரைகுறையாய் தூக்கம் கண்ணை அழுத்த அலங்க மலங்க விழித்து எழுந்தான் கிருஷ்ணன்.

     

     எவ்ளோ பெரிய பையனாயிட்டே என்று கூறி ஒரு முத்தம் கொடுத்து  அப்படியே தூக்கி அணைத்துக் கொன்டு வாடா கண்ணு என்று கையைப் பிடித்து கூடத்துக்கு அழைத்துப் போனாள் அம்மா கமலம். 

     

     நடுக் கூடத்தில் வரிசையாக மணைகள் போடப்பட்டு இருந்தன, அதில்  சமீபத்தில் கல்யாணம் ஆன  அக்கா, அத்திம்பேர், அவர்கள் பக்கத்தில் அண்ணா ,  மன்னி, அடுத்தடுத்து மணைகளில் இரு அக்காக்கள் ,  நடு நாயகமாய் இரு மணைகள், அதில் ஒன்றில் அப்பா உட்கார்ந்திருந்தார்,

     

    வாடா குட்டிப் பையா வா வந்து உக்காரு என்று தன் பக்கத்தில் உட்காரவைத்துக் கொண்டார். எதிரே பெரிய தாம்பாளத்தில்  வெற்றிலை பாக்கு, பழங்கள், குங்குமச் சிமிழ், சுண்ணாம்பு,  எண்ணைக் கிண்ணத்தில் நல்லெண்ணெய், எல்லாம் வைக்கப் பட்டிருந்தன. குத்துவிளக்கு மங்கலமாய் ஒளிர்ந்தது. அம்மா புடவைத் தலைப்பை நன்றாக இழுத்துப்  போர்த்திக்கொண்டு,நான் முதல்லே அப்பாவுக்கு நலங்கு இடறேன் , அதைப் பாத்து மாப்பிள்ளைக்கு நீ இட்டுவிடு என்றாள்  அக்காவிடம்.

     

     சரிம்மா  என்று  அக்கா அத்திம்பேர் எதிரே வந்து உட்கார்ந்து கொண்டாள்,   எழுந்து  குனிஞ்சு இடணும் உக்காரப்படாது, என்றாள் அம்மா, சரிம்மா என்று அக்கா அத்திம்பேர் எதிரே வந்து நின்றாள்.  அம்மா அப்பாவிடம் காலை நீட்டுங்கோ என்றாள்,  அத்திம்பேர் காலை நீட்டுங்கோ என்றான் கிருஷ்ணன், மப்பிள்ளையும் சிரித்துக் கொண்டே காலை நீட்டினார். அப்பாவும் குத்துக் கால்போட்டுண்டு காலை நீட்டினார். அம்மா அப்பாவின் காலுக்கு முதலில் மஞ்சள் பூசினாள், அக்காவும் அதேபோல் செய்ய ,அம்மா இதோ பாரு பின் காலிலே நன்னாதடவு, என்றாள். அதேபோல் அக்காவும் அத்திம்பேர் காலிலே மஞ்சளைப் பூசினாள், 

     

     நீயும் என்  பிள்ளைக்கு  அப்பிடியே  காலிலே மஞ்சள் பூசி  நான் செய்யறதை அப்பிடியே செய்யி என்றாள் கமலம் மருமகளிடம் . மன்னியும் சரிம்மா என்று அண்ணாவுக்கு காலில் மஞ்சள் பூசினாள்.  அடுத்து இப்போ இதோ மஞ்சளையும் சுண்ணாம்பையும் கலந்து வெச்சிருக்கேன் பாரு நலங்கு மாவு அதை எடுத்து  புறங்காலிலே நடுவிலே ஒரு பொட்டு வையி.

     

    அப்புறம் காலோட பக்கவாட்டிலே நலங்கு இடற மாதிரி இடு அப்பிடீன்னு  சொல்லிக் கொடுத்துக்கொண்டே தானும் அப்பாவுக்கு இட்டு முடித்தாள். அடுத்து அண்ணாவுக்கு  மன்னி  அம்மாவைப் பாத்து அப்பிடியே நலங்கு இட்டு முடித்தாள். அக்காக்களுக்கும் அம்மா நலங்கு இட்டு முடித்து  காலை நீட்டுடா குழந்தே என்று என் காலைப் பிடித்து நீட்டி  அதிலும் மஞ்சள் பூசி நலங்கு இட்டாள்.   இப்போ அம்மாவை உட்கார வைத்து  நீங்க அம்மாவுக்கு நலங்கு இட்டு விடுங்கோ என்று ஏகோபித்த குரலில் அக்காக்கள், அத்திம்பேர், அண்ணா, மன்னி எல்லாரும் குரல் கொடுத்தார்கள்.

     

     அம்மா வெட்கப்பட்டுக் கொண்டே வந்து மணையில் உட்கார்ந்தாள். அப்பா  ஏற்கெனவே பழக்கமானவர் போல அம்மாவின் காலில் மஞ்சளைப் பூசி நலங்கு இட்டார். எல்லோரும் சந்தோஷமாக ஆர்ப்பரித்து கைகொட்டி சிரித்து மகிழந்தனர்.

     

     சரி சரி என்று வெட்கப்பட்டுக் கொண்டே எழுந்த அம்மா இப்போ  நல்லெண்ணை  தேய்க்கணும், நான் எப்பிடி தேய்க்கணும்னு  சொல்லித் தரேன் , என்றபடி அப்பாவிடம் வந்து வேஷ்டியை மடிச்சுக் கட்டிண்டு உக்காருங்க  என்றபடி  அவருடைய துடையில் எண்ணெய்க் கிண்ணத்தில் விரலைத் .தோய்த்து மேலிருந்து கீழாக ஏழு பொட்டுக்கள் வைத்தாள்.

     

     ஏம்மா  எதுக்கு  தொடையிலே எண்ணெய் வைக்கிறே என்றான் கிருஷ்ணன்  நல்ல கேள்விடா  நானும் ரொம்ப நாளா கேக்கணும்னு நெனைப்பேன். அப்புறம் மறந்து போயிடும் என்றாள் சின்ன அக்கா. இந்த ஏழு பொட்டு ஏன் வெக்கிறோம்னு யாருக்காவது தெரியுமா? என்றாள் கமலம். சொல்லுங்கம்மா தெரிஞ்சிக்கறோம் என்றனர் எல்லோரும்.

     சப்த சிரஞ்சீவிகள்: அஸ்வத்தாமர் , மஹாபலி, வேத வியாசர் ‘ விபீஷணன் , கிருபர்,ஆஞ்சநேயர் ,நாரதர் 

     

     சப்த தரிசனம்:  கோபுரம், விமானம், திருவாயில், பிரகாரம், பலிபீடம், உற்சவர், மூலவர் இவர்களைப் பார்த்து வணங்குவது சப்த தரிசனம் ஆகும்

     

    சப்த கன்னியர்கள் :- பிராஹ்மி, மஹேச்வரி,நாராயணி,வராஹி, ருத்திராணி, கௌமாரி,சாமுண்டா

     

     சப்தரிஷிகள் :-  காஸ்யபர்,   கௌதமர்,   பாரத்வாஜர்,  விஸ்வாமித்திரர், வசிஷ்டர்  ஜமதக்னி  ,அத்ரி. 

     

    சப்தலோகம்:- பூலோகம், புவலோகம்,சுவலோகம், மகலோகம், சனலோகம்,தவலோகம், சத்தியலோகம்.

     

    அதே மாதிரி புண்ணிய நதிகள்னு சொல்ற   கங்கா, யமுனா, சரஸ்வதி, காவேரி, கோதாவரி, நர்மதா, சரயு, கிருஷ்ணா, கோமதி, மகாநதி,  பல்குனி  எல்லாத்தையும் இது மாதிரி இந்த நல்ல நாள்ளே,  எல்லாரையும் நெனைச்சுக்கணும். 

     

    முக்கியமா கங்கை நதிலேருந்து  புனிதமான தண்ணீர் இந்த காசிச் சொம்பிலே இருக்கு பாருங்க இதை நாம  ஸ்னானம் செய்யற தண்ணீலே கலந்து ஸ்னானம் செய்யணும். கங்கா மாதாவை வேண்டிண்டு ஸ்னானம் செய்யணும். 

     

    அது மட்டுமில்லே நிகமாந்த மஹா தேசிகரைப் பிடிக்காத ஒருத்தர் அவர் மேலே பாம்புகளை ஏவி விட்டுட்டானாம். மஹா தேசிகர் கருட தண்டகத்தை சொல்லி  ஏழு பொட்டு வெச்சாராம். அவரை எந்த துஷ்ட ஜந்துக்களும் நெருங்காம ஓடிப் போயிடுத்தாம், அதுக்குதான் இந்த ஏழு எண்ணெய்ப் பொட்டு என்று கூறியபடியே எண்ணெய் தடவி முடிச்சா. 

     

    அதேபோல் அக்காவும், மன்னியும் அவரவர் கணவர்களுக்கு செய்ய,   அம்மா அப்படியே அந்த எண்ணெயைத் தேய்த்துவிட்டு , அப்பாவின்  தலையில்  எண்ணெய் ஒரு பொட்டு வைத்துவிட்டு லேசாகத் தடவி விட்டுவிட்டு, நிமிர்ந்தாள். 

     

    அதே போல எல்லோரும் செய்ய , அடுத்து அம்மா கிருஷ்ணனுக்கும்  அதே போல் பொட்டு வைத்து தலையில் எண்ணெய் தடவிவிட்டுவிட்டு,  அப்பிடியே இருங்கோ இப்போ பொண்கள் எல்லாரும்  ஒரு வெத்தலை எடுத்து கொஞ்சம் பாக்கு வெச்சு , அதிலே கொஞ்சமா சுண்ணாம்பு தடவி மடிச்சு  ஆத்துக்காரருக்கு குடுங்கோ என்றாள். எல்லோரும் அதேபோல் செய்தனர்,  எனக்கும் அம்மா அதே போல் வெத்தலை பாக்கு கொடுத்தாள். 

     

    படிக்கற பசங்க  வெத்தலை பாக்கு போட்டா படிப்பு வராதுன்னு நீங்கதானே சொல்வீங்க, இப்போ எனக்கு வெத்தலைபாக்கு குடுக்கறீங்களே  எனக்கு படிப்பு வரவேணாமா  என்றேன் நான்.  எல்லோரும் கொல்லென்று சிரித்தனர். இன்னிக்கு ஒரு நாள் நான் குடுக்கறேன் சாப்புடு, ஆனா இனிமே அடுத்த வருஷம் தீபாவளி அன்னிக்கு மறுபடியும் நான் குடுக்கும்போதுதான் வெத்தலை பாக்கு போடணும் சரியா என்றாள். 

     

    சரிம்மா என்று அதை வாங்கி மென்றேன். அப்பிடியே எல்லாரும் உக்காருங்கோ என்றபடி ஆரத்தி தட்டை எடுத்து  கையில் வைத்துக் கொண்டு  இங்க வா லக்ஷ்மி என்று மருமகளை அழைத்து நீயும் நானும் ஆரத்தி எடுக்கலாம் என்றபடி ஆரத்தி தட்டை எல்லோருக்கும் பொதுவாக சுத்திவிட்டு ஆரத்தி எடுத்தா தட்டிலே துட்டு போடணும் என்றாள் லக்ஷ்மி. 

     

    மாப்பிள்ளை உடனே பர்சிலிருந்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து தட்டில் போட்டார்.  அம்மா ஆரத்தி தட்டை எடுத்துக்கொண்டு நான் வாசல்லே போயி இதக் கொட்டிட்டு வரேன், அதுக்குள்ளே  நீங்க இந்தக் குட்டிக் கண்ணனுக்கு குளிப்பாட்டி விட்டுட்டு நீங்களும் குளிச்சிட்டு வாங்கோ என்றாள் அப்பாவைப் பார்த்து. அப்பா வாடா போயி குளிக்கலாம் என்றார். 

     

    அப்பா அப்பா நான் ஒரே ஒரு மத்தாப்பு கொளுத்திட்டு வரேம்பா என்று கெஞ்சினான்  கண்ணன், சரி ஒண்ணே ஒண்ணுதான், சீக்கிரம் வரணும், மாப்பிள்ளை நீங்க குளிச்சிடுங்க, நான் இந்தப் பையனைக் கூட்டிண்டு வரேன் என்று கூறியபடி தானும் வாசலுக்கு வந்தார் ரங்கசாமி.. 

     

    ஒரு மத்தாப்பு ,ஒரு புஸ்வாணம், ஒரு சங்கு சக்கரம் என்று தொடர்ந்து கொண்டே இருந்தது பட்டாசுகள்.   சீக்கிரம் வாங்க வந்து குளிங்க ,அவனையும் குளிப்பாட்டி  ரெண்ட பேரும் புது சொக்கா போட்டுக்கோங்க,  மாப்பிள்ளை குளிச்சாச்சு, அவருக்கும் நாம வாங்கி வெச்சிருக்கற வேஷ்டி ,சொக்கா, மாலதிக்கு புடவை ,எல்லாம் எடுத்துக் குடுங்க , அப்பிடியே எல்லாருக்கும் புதுத் துணி குடுத்திருங்க. 

     

     எனக்கு சமையல் கட்டிலே வேலை இருக்கு, சீக்கிரமா பக்ஷணம் எல்லாம் செஞ்சு சமையல் செஞ்சு நைவேத்தியம் செய்யணும், எல்லாரும் சாப்படணும். சீக்கிரம் வாங்கன்னு கூப்பிட்டுக் கொண்டே உள்ளே போனாள் கமலம்.

     

    டேய் வாடா போறும் அப்புறம் அம்மா டென்ஷனாயிடுவா சீக்கிரம் குளிக்கலாம் வா என்று என்னையும் அழைத்துக் கொண்டு போய் குளிப்பாட்டிவிட்டு தலையைத் துடைத்துவிட்டு, போ போயி புது ட்ரெஸ் போட்டுக்கோ ,என்றபடி குளிக்கத் தொடங்கினார் அப்பா. 

     

    நான் புதுத் துணிக போட்டுக்கொள்ள உள்ளே போனேன். டேய் கண்ணா ஸ்வாமி கிட்டே வெச்சிருக்கேன் பாரு சுவாமியை நமஸ்காரம் செஞ்சிட்டு அப்புரம் போட்டுக்கோ. என்றாள் அம்மா. புது பேண்ட் சொக்காயை எடுத்து மாட்டிக்கொண்டு  பட்டாசு பெட்டியை நோக்கி ஓடினேன் நான். இருடா  கையைக் காலை ஓடவிடாம செஞ்சிண்டு இருக்கே ,கொஞ்சம் இரு , 

     

    இந்தா இனிப்பு இதைச் சாப்புடு என்று ஒரு மைசூர் பாகுத் துண்டை எடுத்து ஊட்டினாள் அம்மா, இந்த  இனிப்பை சாப்டுட்டு அப்பிடியே  இந்த தீபாவளி லேகியம் இருக்கு பாரு இதையும் கொஞ்சம் சாப்புடு நன்னா செரிமானம் ஆயிடும் . இந்த லேகியத்திலே சுக்கு ,மிளகு,  திப்பிலி எல்லாம் போட்டு வெல்லம்,நெய் எல்லாம் போட்டு செஞ்சிருக்கேன். 

     

    இதுக்குப் பேரு திரிகடுகம்னு சொல்லுவாங்க  ,தீபாவளி லேகியம்ன்னு சொல்வாங்க இது நல்ல மருந்து வியாதியே வராதுன்னு வாயிலே ஊட்டிவிட்டுவிட்டு இப்போ ஓடிப்போயி பட்டாசு வெடின்னு சொல்லி அனுப்பினாள் . 

     

    இந்தப் பட்டாசு மட்டும் எவ்ளோ வெடிச்சாலும் திருப்தியே வராது,  தெருவே கூடி பட்டாசுகள் வெடித்துக்கொண்டே இருந்தோம், பாவம் சில ஏழைச் சிறுவர்கள் வெடித்தும் வெடிக்காமல் இருக்கும் பட்டாசுகளை பொறுக்கிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கூப்பிட்டு கொஞ்சம் பட்டாசுகளைக் கொடுத்தார் அப்பா. 

     

    அப்பா நீங்களே ஒரு மத்தாப்பு செய்வீங்களே  அதை இந்த தடவை செய்யலையா என்றான் கண்ணன் அப்பாவிடம் , நீ கேப்பேன்னு தெரியும் ஏற்பாடெல்லாம் செஞ்சு வெச்சிருக்கேன்  என்றபடி  அவர் ஏற்கெனவே பொடித்து வைத்திருந்த உப்பு , கொஞ்சம் கரி  இரண்டையும்   ஒரு பழைய வேட்டித் துணியைப் பரப்பி அதில் போட்டு நீளமாக சுருட்டி அதன் ஒரு முனையை கயிற்றால் கட்டி,  இன்னொரு முனை வரை  மெல்லிய கம்பியால் சுற்றி முடிந்து  கட்டினார்.

     

     இப்போ  சொக்கப் பனை கொளுத்தலாமா  என்று கேட்டுக்கொண்டே ஒரு முனையில் பற்ற வைத்து  கயிற்றைப் பிடித்துக்கொண்டு  வேகமாகச் சுழற்ற  அதிலிருந்து மத்தாப்பூ சிதறுவது போல ஒளிவண்ணமாய் சிதறி சுழன்று கண்ணுக்கு விருந்தாக ஆனது. கைகொட்டிச் சிரித்து மகிழந்தான் கண்ணன். 

     

    கண்ணா இந்த பட்டாசுக்கு பேரு என்னான்னு தெரியுமா ?  சொக்கப்பானை கொளுத்தறதுன்னு சொல்வாங்க . இப்போ மட்டும் இல்லே கார்த்திகைப் பண்டிகைக்கும் செஞ்சு தரேன். அப்பவும் சொக்கப் பானை கொளுத்தலாம் ,இப்ப சீக்கிரமா உள்ளே போகலாம் வான்னு அழைத்துக் கொன்டு போனார் அப்பா. 

     

    உள்ளே இருந்து அம்மா சீக்கிரம் எல்லாரும் சாப்பிட வாங்க  என்றாள். சரி கண்ணா  வா போயி விருந்து சாப்பாடு சாப்படலாம். அம்மா பக்ஷணமெல்லம் செஞ்சு வெச்சிருப்பா, வடை பாயசம் , சர்க்கரப் பொங்கல் ,எல்லாம் செஞ்சிருப்பாங்க. 

     

    வா போயி சாப்டுட்டு அப்புறமா  மறுபடியும் பட்டாசு வெடிக்கலாம்  என்றார். சரிப்பா என்று அப்பாவின்  கையைப் பிடித்துக்கொண்டு உள்ளே வந்தான் கிருஷ்ணன்.   தலைவாழை இலை போட்டு  அதிலே ஒரு ஓரத்தில் வாழைப்பழம் சர்க்கரை, கூட்டு அவியல், உருளைக்கிழங்கு கறி,அப்பளம், என்று வரிசையாக பறிமாறப்பட்டு பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக அம்மாவின் கைமணத்தோடு கூடிய சமையல் பசியைத் தூண்டியது.  உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினோம். 

     

    ரங்கசாமி  சாப்பிட்டுக்கொண்டே   கமலம்  நீ பாத்தியா நம்ம வீட்டிலே குளவி கூடு கட்டி இருக்கு என்றார். வீட்டிலே குளவி  கூடு கட்டினா வீட்டுப் பெண்கள் யாராவது கர்ப்பமாவா  அப்பிடீன்னு பெரியவங்க சொல்வாங்க என்றாள் லக்ஷ்மி. சாப்பிட்டு முடித்து எல்லோரும் கையை கழுவிக்கொண்டு  கூடத்தில் வந்து ஊஞ்சலில் உட்கார்ந்தோம். உக்காருங்க மாப்பிள்ளை வெத்தலை போடறீங்களா என்று வெற்றிலைபாக்குத் தட்டை நகர்த்தினார் அப்பா. 

     

    உள்ளே யாரோ வாந்தி எடுப்பது போல் சத்தம் கேட்டது, யாரு வாந்தி எடுக்கறது என்றார் அப்பா. சற்று நேரம் கழித்து அம்மா உள்ளே இருந்து வந்து உங்க மாட்டுப் பொண்ணு லக்ஷ்மி தான் வாந்தி எடுத்தா என்றாள். சரிதான் உன் சமையல் அதுக்குள்ளே வேலை செய்ய ஆரம்பிச்சுடுத்தா என்றார் அப்பா நமட்டுச் சிரிப்புடன். அதில்லேங்க உங்க  மாட்டுப் பொண்ணு கர்ப்பமா இருக்கா  அதைச் சொல்லத்தான் வந்தேன் என்றாள் கமலம். 

     

    ஓ நல்ல செய்திதான், டேய் கண்ணா நீ சித்தப்பா ஆயிட்டே என்றார் அப்பா. எனக்கும் மகிழ்ச்சியாய் இருந்தது ஆனால் ஒன்றும் புரியவில்லை. ஆமாண்டா நான்  தாத்தா ஆயிட்டேன்  என்றார் மகிழ்ச்சியுடன்.

     

       13/11/2012    

     

     நந்தன வருடம் ஐப்பசி மாதம் 28 ம் தேதி ஆங்கிலம்  நவம்பர் மாதம் செவ்வாய்க் கிழமை இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.  நமது தொலைக் காட்சியிலிருந்து நேரடியாக வாழ்த்துகிறோம் என்று அறிவிப்பாளர் கைகூப்பி வணங்கினார். 

     

    ஏங்க எழுந்திருங்க  இன்னிக்கு தீபாவளி மணி இப்பவே அஞ்சாகறது. எழுந்து போயி கங்கா ஸ்னானம் செஞ்சிட்டு வாங்கோ என்றாள் சசிரேகா. தூக்கம் கண்களைச்  சொருகியது. ஓ இவ்ளோ நேரம் கனவா கண்டேன். சரி சரி நான் போயி பல்தேச்சுட்டு குளிச்சிட்டு வரேன் என்றபடி  அரைகுரையாய் தூக்கம் கண்ணை அழுத்த அலங்க மலங்க விழித்து எழுந்த கிருஷ்ணன். ஆமா அது என்னா தீபாவளி அன்னிக்கு மட்டும் இப்பிடி தூக்கம் கண்ணை அழுத்தறது என்றார். 

     

    தொலைபேசி அழைத்தது  இனிய தீபாவளி  வாழ்த்துக்கள் அப்பா என்றாள் அண்ணா நகரிலிருந்து பெரிய பெண்.  இந்தா  நம்ம பொண்ணு உனக்கு தீபாவளி வாழ்த்து சொல்லணுமாம் என்று ரிசிவரை அவளிடம் கொடுத்தார். அம்மா தீபாவளி வாழ்த்துக்கள் என்றாள் சரி ஆசீர்வாதம் மாப்பிள்ளைகிட்டேயும் சொல்லு  முக்கியமா என் பேரப்பசங்களுக்கு  சொல்லு, ஜாக்கறதையா பட்டாசு வெடிக்க சொல்லு என்றால், சரிம்மா நான் பாத்துக்கறேன்  .அங்கே தீபாவளி கொண்டாடிட்டு அப்பாவும் நீங்களும் இங்கே சாப்பிட வந்துடுங்க என்றாள் பெண் , 

     

    எப்பிடி நாங்க வரமுடியும்   நீயும் மாப்பிள்ளையும் குழந்தைகளும் இங்கே வந்துடுங்க , இங்கே  அமெரிக்காவிலேருந்து , துபாயிலேருந்து எல்லாரும் வந்திருக்காங்க, நீங்களும் வந்தா தீபாவளிக்காவது சேந்து இருக்கலாம் வீடு கலகலப்பா இருக்கும் என்று சொல்லிவிட்டு, 

     

    ஏங்க உங்க பேரப் பசங்களை எழுப்புங்க மணி ஆச்சு சீக்கிரம் கங்கா ஸ்னானம் செய்யணும் எனக்கு தலைக்கு மேலே வேலை கிடக்கு என்றாள். டேய் பேரப் பசங்களா சீக்கிரம் எழுந்திருங்கடா . உங்க பாட்டி டென்ஷனாயிடுவா, இப்பவே  மணி அஞ்சாச்சு எழுந்திருங்கடா என்று பேரப் பசங்களை எழுப்பிக் கொண்டிருந்தார் கிருஷ்ணன் . போங்க தாத்தா தூக்கம் தூக்கமா வருது , இன்னும்  கொஞ்ச நேரம் தூங்கறோம் என்று புரண்டு படுத்தனர் பேரப் பசங்க நால்வரும். 

     

    எழுந்திருங்கோ எல்லாரும் எல்லாருக்கும் பட்டாசு வெச்சிருக்கேன்  யாரு முதல்லே எழுந்துக்கறாங்களோ அவங்களுக்கு நிறையப் பட்டாசு தருவேன் என்றாள். நான்தான் முதல்லே எழுந்தேன் நான்தான் முதல்லே எழுந்தேன் எனக்குதான் நிறைய பட்டாசு என்று கும்மாளம் போட்டனர்  பேரன்கள்.  நாம இவ்ளோ நாழி எழுப்பியும் எழுந்துக்காத  பசங்க இவ வந்தவுடனே எழுந்துட்டாங்க, என்று ஆச்சரியமாகப் பார்த்தார் கிருஷ்ணன். 

     

    எதுக்கு பாட்டி தீபாவளி கொண்டாடறோம் அப்பிடீன்னு பேரன் கேட்ட கேள்விக்கு ,பூமாதேவியோட பிள்ளை  நரகாசுரன். நரகாசுரன் பிரம்மாகிட்ட ஒரு வரம் வாங்கினான். தன்னோட தாயைத் தவிர வேறு யாருக்கும் சக்தி இருக்கக் கூடாது அவனைக் கொல்லன்னு பிரம்மாகிட்ட வரம் வாங்கியிருந்தான். வரத்தை வாங்கிட்டோம்ங்கிற தைரியத்துல எல்லாரையும் கொடுமைப் படுத்தினான்.  இராத்திரியில யாரும் வீட்டுல வெளக்கேத்தக் கூடாதுன்னு உத்தரவு போட்டான். 

     

    நரகாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள் எல்லாரும் , பகவான் கிருஷ்ணரிடம் போயி எங்களைக் காப்பத்துங்க அப்பிடீனு வேண்டினாங்க  பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவோட சேந்து சண்டைபோடும்போது நரகாசுரன் விட்ட அம்பு கிருஷ்ணர் மேல பட்டு கிருஷ்ணர் மயக்கமாயிட்டார். உடனே சத்யபாமா நரகாசுரனை கத்தியாலே வெட்டி வீழ்த்தினாங்க, சாகறதுக்கு முன்னாடி நரகாசுரன். 

     

    எனக்குச் இந்த கதி  வரதுக்கு காரணம், நான் எல்லோரையும் வெளக்கேத்தக் கூடாதுன்னு சொன்னதுதான்! அதனால நான் இறக்கிற இந்த நாளை மக்கள் விளக்கேத்தி சந்தோஷமாக் கொண்டாட நீங்கதான் ஏற்பாடு செய்யணும்ன்னு கேட்டான்.  அதுனாலேதான்  தீபம் ஏத்தி திருவிழாவா, தீபாவளியாக நாம கொண்டாடறோம். 

     

     கங்கா ஸ்னானம்  செஞ்சிட்டு புது துணியெல்லாம் போட்டுண்டு சீக்கிரம் வாங்க இன்னிக்கு  குபேர பூஜை செஞ்சுட்டு பட்டாசெல்லாம் வெடிச்சுட்டு விருந்து சாப்படணும்.  பூஜை செய்யலாம் என்று பேரப் பசங்களுக்கு எண்ணெய் தேச்சுவிட்டுக்கொண்டே கதை சொல்லிக் கொண்டிருந்தாள் சசிரேகா. 

     

    நம்ம வீட்டிலே குளவி கூடு கட்டி இருக்கு பாத்தியா என்றார் கிருஷ்ணன் . உள்ளே யாரோ வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டது. யாரு  வாந்தி எடுக்கறா நேத்து ராத்திரி உன் சமையலோட மகிமையா  என்றார் கிருஷ்ணன். அய்யே போதும் காலங்காத்தாலே  வழியாதீங்கோ,  குளவி நம்ம வீட்டுலே கூடு கட்டினா வீட்டுலே இருக்கற பொண்கள். யாராவது பிள்ளை உண்டாவாங்கன்னு சொல்வாங்க பெரியவங்க , சரியாத்தான் இருக்கு ,நம்ப மாட்டுப்பொண்ணு, பொண்ணு  ரெண்டுபேரும் பிள்ளை உண்டாயிருக்காங்க என்றாள் அவள்.  

     

    அப்பிடியா  சந்தோஷம் . பிள்ளை உண்டாயிருக்கான்னு சொல்லாதே பொண்ணு உண்டாயிருக்கான்னு சொல்லு . பேத்தி வேணும்.அதுவும் ரெண்டு பேத்தி வேணும் .  வீட்டுக்கு மங்களகரமே பொண்குழந்தைகள்தானே என்றார்  கிருஷ்ணன் . 

     

    காருகுறிச்சி அருணாசலம், திருவாவடுதுரை ராஜரத்தினம் பிள்ளை இருவரும் வாசித்த  வாசித்த  ரெட்டை நாதஸ்வரம்  ஒன்றாய்க் கலந்து ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே என்று சுநாதமாய் ஒலிக்க ஆரம்பித்தது. 

     

                                                                                                                   சுபம்

     

    Share
  • கூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா ?

     

                                                                                                                                    (கட்டுரை – 1)

                                                                                    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


    அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி ஆக்குவோம்.

    தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921]

    மின்சாரத்துக்கு எரிசக்தி இல்லாதது போல் விலை மிக்க எரிசக்தி எதுவும் இல்லை. (No Energy is so costly as No Energy)

    இந்திய அணுசக்திப் பிதா டாக்டர் ஹோமி பாபா.

    அணுமின் எரிசக்தி போல் விலை மிகுந்த வேறோர் எரிசக்தி எதுவும் இல்லை. (No Energy is as costly as Nuclear Energy)

    கட்டுரை ஆசிரியர்

    “புகுஷிமா அணு உலை விபத்துக்களின் தீவிரப் பாதிப்புக்களை யாரும் இன்னும் தெளிவாக ஆழ்ந்து அறியும் நிலைக்கு நெருங்க வில்லை !  வெப்பக் கட்டுப்பாடு இன்னும் அணுமின் உலைகளில் நடந்து கொண்டிருப்பதால், கதிரியக்க வெளியேற்றத்தின் அளவு ஏறத்தான் போகிறது.  அகில நாட்டு அணுவியல் நிபுணர் புகுஷிமாவில் ஆய்வு செய்ய ஜப்பானியர் அனுமதி அளிக்க வேண்டும்.”

    நில்ஸ் போமர், ஆஸ்லோ பெல்லோனா அணுவியல் பௌதிக நிபுணர் (ஜூன் 6, 2011)

    “இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”

    பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert)

    நவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவ தென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமையாக எழுதப்பட்டுள்ளன.  அணு உலை எரிகோல்களின் அபாய வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்திருக் கிறோம்.  எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் இயக்க முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக்கோல்களின் அபாய வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டைக்குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன.

    அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைக்கப்பட்டு உள்ளது.  மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் போன்ற வையும் அமைக்கப் பட்டுள்ளன.  செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.

    லியோனிட் போல்ஸோவ் (Director, Institute of Safe Development of Nuclear Power Industry)

    “விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார்.  முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து.  எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப் புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.

    விலாடிமிர் குபரேவ் (Vladimir Gubarev, Chernobyl Burial Drama Author)

    கடற்கரையில் நிறுவியுள்ள கூடங்குள அணு உலைகளில் புகுஷிமா விபத்துக்கள் போல் நேருமா ?

    ஜப்பான் புகுஷிமா அணு உலைகள் வெப்பத் தணிப்பு நீரனுப்ப முடியாது மேற்தளங்கள் வெடிப்பதைத் தொலைக் காட்சியில் நேராகக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்களுக்குத் தமிழகத்தின் தென்கோடிக் கரையில் கட்டப் பட்டு இயங்கப் போகும் கூடங்குள ரஷ்ய அணு உலைகளின் அபாயப் பாதுகாப்பு பற்றிப் பல ஐயப்பாடுகள் எழுந்துள்ளன.  இந்திய அணுமின் நிலையங்களைக் கட்டி வரும் நிறுவகத் தலைமையகம் (Nuclear Power Corporation India Ltd – NPCIL) புகுஷிமாவில் சுனாமிப் பேரலைகள் விளைவித்த அணு உலைப் பேராபத்துகள் போல் கூடங்குளத்தில் நேரா என்று அழுத்தமாய் உறுதி அளித்துள்ளது.  இரு நாட்டு அணுமின் நிலையத் தளங்கள் வெகு தூரத்தில் அமைக்கப் பட்டிருந்தாலும் கடற்கரையைச் சுனாமி தாக்கக் கூடிய அபாயத் தளங்களாக அவை இரண்டும் கருதப் படுகின்றன.  அத்தகைய கோரப் பேரலை விபத்துகள் கூடங்குள அணு உலைகளில் நேருமா என்று தனியாகக் கேரளா பொறியியல் குழுவினர் (Kerala State Centre of The Institution of Engineers India) பங்கெடுத்த கருத்தரங்கு மார்ச் 30, 2011 தேதி திருவனந்தபுரத்தில் நிகழ்ந்தது.  அந்த கருத்தரங்கின் முக்கிய முடிவுகளைத் தான் இக்கட்டுரை விளக்கிக் கூறுகிறது.

    2001 ஆம் ஆண்டில் அடித்தளம் கட்டக் குழி தோண்டி ஆரம்பமான கூடங்குள அணுமின் நிலையம் பல காரணங்களால் பத்தாண்டுகள் வரை நீடித்து இன்னும் ஓரிரு மாதத்தில் (ஆகஸ்டு 2011) இயங்கத் தயாராகி வருகிறது.  முதன்முதல் இரண்டு பெரிய அன்னிய 1000 மெகா வாட் நிலையம் கட்டப் படுவதால் ஈராண்டுகள் தாமதம் ஆகி விட்டது ! அணுமின் உலை இயக்க ஏற்பாடுகள் அனைத்தும் சோதிப்பாகி ‘அணுசக்தி நெறிப்பாடு ஆணைய கத்துக்கு (Atomic Energy Regulatory Board – AERB) விளைவுகள் சமர்ப்பணம் ஆகியுள்ளன.  அது பச்சைக் கொடி காட்டியதும் கூடங்குளம் முதல் யூனிட் இயங்கத் துவங்கும்.  இரண்டாவது யூனிட் 2012 மே மாதத்தில் இயங்க ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  சென்னை மாநிலத்துக்கு 2011 இறுதிக்குள் 1000 மெகா வாட் மின்சாரமும், 2012 இறுதிக்குள் அடுத்து 1000 மெகா வாட் மின்சாரமும் (மொத்தம் 2000 மெகா வாட்) பேரளவில் பரிமாறப்படும் என்று அறியப் படுகிறது.

    கூடங்குளத்தில் முதன்முறை இயங்கப் போகும் ரஷ்ய இரட்டை VVER அணுமின் நிலையம் 1986 இல் நேர்ந்த செர்நோபில் விபத்துக்குப் பிறகு ‘மூன்றாம் பிறப்பு முறைப்பாட்டில்’ (Third Generation Design) செம்மைப் படுத்தப் பட்ட முற்போக்கு அணுமின் உலைகள் என்று IAEA அறிவிக்கிறது.  2004 இல் அடித்த இந்து மாக்கடல் சுனாமிப் பேரலை விளைவை ஆய்ந்து அணுமின் உலைச் சாதனங்களும், கட்டடமும் கடல் வெள்ளம் மூழ்க்கி விடாதபடி கடல் மட்டத்துக்கு மேல் 25 அடி உயரத்தில் அமைக்கப் பட்டுள்ளன.

    1.  அணு உலை எரிக்கோல் உருக்கைத் தாங்கும் கும்பா

    அபாய வெப்பத் தணிப்பு நீரின்றிக் கூடங்குளம் அணு உலை எரிக்கோல்கள் உருகிப் போனால் அந்த கனல் உலோகத் திரவத்தை ஏந்தி உருக்கை ஏற்றுக் கொள்ள குவளைச் சாதனம் (Core Melt Catcher) ஒன்று அணு உலைக்கு அடியில் அமைக்கப் பட்டுள்ளது.  வெப்பத் தணிப்பு நீரின்றி எரிக்கோல்களின் உருக்குத் திரவம் உண்டாவது ரஷ்யன் VVER அணு உலைகளில் எதிர்பார்க்க முடியாத ஓர் அபூர்வ நிகழ்ச்சியாகும்.

    ஹைடிரஜன் வாயு பேரளவில் சேமிப்பாகி வெடிப்பைத் தூண்டாதிருக்க கூடங்குள அணுமின் நிலையத்தில் அது ஆக்சிஜனோடு தீவிரமாய்க் கலந்து வெடிக்காது ஹைடிரஜன் இணைப்பிகள் (Hydrogen Recombiners) என்னும் சிறப்புக் சிமிழ்கள் அமைக்கப் பட்டுள்ளன.  அதில் ஹைடிரஜன் மெதுவாய் ஆக்ஸிஜனுடன் சேர்ந்து நீராகும்படி செய்யப் படுகிறது.  இந்தச் சிறப்புச் சாதனங்கள் அணு உலையில் ஹைடிரஜன் வாயு தீவிர வெடிப்பளவாய்ச் (< 4%) சேராதபடித் தடுக்கின்றன.  நிலநடுக்கம், சுனாமிப் பேரலை அடிப்புகள் சாதனங்களைப் பாதிக்காதபடி கூடங்குளம் ரஷ்ய அணுமின் உலைகள் டிசைனில் மேம்பாடு செய்யப் பட்டுக் கட்டப் பட்டுள்ளன.

    2.  கூடங்குள அணு உலை இயக்கப் பாதுகாப்பு ஏற்பாடுகள்

    கூடங்குள அணுமின் நிலையத் திட்டத்தின் பாதுகாப்பு நெறிப்பாடுகள் (Safety Aspects of Kudungulam Power Project) என்னும் தலைப்பில் அணுமின் நிலைய டைரக்டர் காசிநாத் பாலாஜி தலைமையில் ஒரு தனிக் கருத்தரங்கு நடந்தது.  அந்தக் கருத்தரங்கில் நிலநடுக்கத்தைத் தாங்கிக் கொள்ளும் அணுமின் உலை அரண், கட்டடங்கள், துணைச் சாதனங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், ஆட்சி அறை, டர்பைன் ஜனனி, அவற்றின் துணை ஏற்பாடுகள் ஆகியவற்றின் டிசைன் திட்ட அமைப்பாடுகள் அறிவிக்கப் பட்டன.

    கூடங்குள அணுமின் நிலைய தளம் ‘குன்றிய அபாய எதிர்பார்ப்பு அரங்கம் : 2 இல் (Zone : 2 – Low Damage Risk Area) இருந்தாலும் கட்டடங்களும் சாதனங்களும் 25 அடி (7.5 மீடர்) உயரச் சுனாமிப் பேரலைத் தாக்குதலும் பாதிக்காதபடி பாதுகாக்கப் படும்.  2004 ஆண்டு தாக்கிய இந்து மாக்கடல் சுனாமி அலை அடிப்புக்கு ஏற்ப சாதனங்கள், கட்டடங்கள் செம்மைப்பாடு செய்யப் பட்டன.

    செர்நோபில் விபத்துக்குப் பிறகு ஆழ்ந்து மீளாய்வு செய்யப்பட்டுக் கூடங்குள அணுமின் நிலையம் ரஷ்ய பொறியியல் விஞ்ஞான நிபுணரால் செம்மைப் படுத்தப்பட்டு மேன்மை செய்யப் பட்டது என்று IAEA அறிவிக்கிறது.  அணு உலை நிறுத்தமாகி, அபாய வெப்பத் தணிப்பு வேளை களில் நீரின்றிப் போனால் மாபெரும் 12 நீர் அழுத்தக் கலனிலிருந்து (Huge Water Accumulators) நியூட்ரான் விழுங்கி போரான் (Neutron Absorber Boron) கலந்த நீர் செலுத்தப் பட்டு எப்போதும் எரிக்கோல்களை நிரப்பிச் சூழ்ந்திருக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    அத்துடன் வெப்ப வேறுபாட்டாலும், ஈர்ப்பு விசையாலும் மேலும் கீழும் சுற்றும் நீரோட்டம்  (Natural Circulation By Heat & Gravity) நிகழும்படி நீராவி மாற்றிகள் அணு உலைக்கு மேல் மட்டத்தில் இணைக்கப் பட்டுள்ளன.

    ஒவ்வோர் அணுமின் உலைக்கும் அபாயத் தேவைக்கு மின்சாரம் அனுப்ப தனிப்பட்ட நான்கு மின்சார டீசல் எஞ்சின் ஜனனிகள் தானாக இயங்கத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கின்றன.  நான்கில் ஒரு டீசல் மின்சார இணைப்பே அபாயத் தணிப்பு நீரனுப்பப் போதுமானது.  டீசல் ஜனனிகள் கடல் மட்டத்திலிருது 30 அடி (9 மீடர்) உயரத்தில் அமைக்கப் பட்டுள்ளன.  டீசல் ஜனனிகள் ஓட்டும் நீரனுப்புப் பம்புகளும் பாதுகாப்பான இடத்தில் நிறுவப் பட்டுள்ளன. ஏதோ ஒரு காரணத்தால் டீசல் எஞ்சின் இயங்க முடியாது போனால், ஓய்வு வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் (Two Passive Heat Removal Systems) உடனே இயங்க ஆரம்பிக்கும்.  அவற்றில் முதலில் இயங்கும் 12 நீரழுத்த கலன்கள் போரான் நீரை அணு உலைக்குள் விரைவாகச் செலுத்தும்.

    இரட்டை ஓய்வு வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் (Two Passive Heat Removal Systems)

    1. 12 நீரழுத்த கலன்கள் போரான் நீரை விரைவில் அணு உலைக்குள் செலுத்துவது.

    2. ஈர்ப்பு விசையால் அணு உலை எரிக்கோள்களுக்குத் தானாய் இயங்கும் வெப்பத் தணிப்புச் சுற்று நீரோட்டம் நிகழ்த்துவது.

    அணுமின் நிலையம் இயங்குவதற்கு முன்பு இறுதிச் சோதனையாக அபாயப் பாதுகாப்பு பயிற்சிகள் (Emergency Safety Drills) கூடங்குள நகராண்மை மக்களுக்குக் காவல்துறை உதவியோடு நடத்தப்படும்.

    விஞ்ஞானி மிசியா காக்கு புகுஷிமா அணு உலை விபத்து பற்றிப் பேசுகிறார்.

    2011 ஜூன் 17 இல் விஞ்ஞானி மிசியோ காக்கு (Michio Kaku) புகுஷிமா அணு உலை விபத்தைப் பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  பல வாரங்கள் இரும்புத் திரையிட்டு ஜப்பான் டெப்கோ (Tepco) நிறுவகம் இப்போது முன்வந்து சில உண்மைகளை வெளியிட்டுள்ளது என்று கூறுகிறார்.

    1.  அமெரிக்க விஞ்ஞானிகள் ஐயுற்றபடி மூன்று அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் அபாய வெப்பத் தணிப்பு நீரின்றி ஏறக்குறைய முற்றிலும் உருகிப் போயிருக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.  இது நேரடியாக அறியப் படாத செய்தி.  உலக விஞ்ஞானிகள் தமது கணினி மாடல் படைப்பில் உருவாக்கி ஜப்பான் அரசாங்கம் இதுவரை அறிவித்த கதிரியக்க விளைவுகளை விடக் கோரமானது என்று முடிவு செய்கிறார்.

    2.  மூன்று அணு உலைகளின் எரிக்கோல்கள் முற்றிலும் உருகிப்போயின என்றால் ஏன் மூன்று ‘சைனா பேரழிவு விபத்துகள்’ (China Syndrome*) நேரவில்லை என்ற வினா எழுகிறது !  காரணம் :  நீண்ட நாட்கள் கடல் நீரால் மூன்று அணு உலைகளும் வெப்பத் தணிவு செய்யப் பட்டன.  அதனால் உருகிய யுரேனியும் எஃகு அரணில் துளையிட வில்லை.  ஆயினும் அணுமின் உலை இயக்க மேலதிகாரிகள் வெப்பத் தணிப்புக்குக் கடல் நீர் அனுப்புவதை முற்றிலும் ஆதரிக்க வில்லை.  அப்படிச் செய்வதால் கடல் நீர்த் துருவேற்றும் மிகையாகி அணு உலைச் சாதனங்கள் அனைத்தும் இறுதிச் சமாதி நிலை அடையும்.  மேல்நிலை அதிகாரிகள் அணு உலைக்குள் கடல் நீர் அனுப்புதலைத் தடுத்தும் கீழ்நிலை இயக்குநர் ஆணைக்குக் கீழ்ப்படியாது அதைத் தொடர்ந்து நிறைவேற்றினர்.  மேலதிகாரிகள் ஆணையை மீறிய அவர் யாவரும் மெய்யான தீரர் என்று இப்போது பாராட்டப் படுகிறார்.

    3.  வெளியேறிய கதிரியக்கக் கழிவுகளின் மதிப்பளவு 700 டிரில்லியன் பெக்குவரல் என்பதை டெப்கோ நிர்வாகிகள் வற்புறுத்தலுக்குப் பிறகு ஒப்புக் கொண்டனர்.  அந்த அளவு செர்நோபில் விபத்தில் வெளியேறிய அளவில் 20% பங்கு மதிப்பாகும் என்று அறியப் படுகிறது.

    4.  பொதுநபர் வெளியேற்றப் பட்ட பகுதியில் தீவிர கதிர்வீச்சுள்ள நான்கு தளங்கள் கண்டுபிடிக்கப் பட்டன.  ஒரு மாவட்டத்தில் பள்ளித் தளங்களில் கதிரியக்கம் பரவியதால்  8000 பள்ளி மாணவர் பள்ளிக்கூடத்துக்குப் போகையில் கதிர்மானிகள் அணிவிக்கப் பட்டார்.  அதனால் சிறுவரின் பெற்றோர்கள் அரசாங்கத்தின் மீதும், டெப்கோ மீதும் சீறினார்.

    5.  புகிஷிமாவின் நான்கு அணுமின் நிலையச் சிதைவுகளைச் சீராக்கிச் செம்மைப் படுத்த 10 ஆண்டுகள் ஆகலாம் என்று டோஷீபா நிறுவகம் (Toshiba Corporation) மதிப்பீடு செய்தது.  ஹிட்டாச்சி நிறுவகம் (Hitachi Corporation) 30 ஆண்டுகள் ஆகலாம் என்று மதிப்பீடு செய்தது.   திரீமைல் தீவு அணு உலைச் சிதைப்பைச் சீர்படுத்த 14 ஆண்டுகள் எடுத்தன.  25 ஆண்டுகள் கடந்தும் செர்நோபில் கதிரியக்கத் தீங்குகள் இன்னும் தொல்லைகள் தருகின்றன.

    6.  புகிஷிமா அணு உலைகளில் 2011 இறுதிக்குள் ‘பூரணத் தணிப்புலை நிறுத்தம்’ (Cold Shutdown State) செய்ய முடியும் என்று நிலைய அதிகாரிகள் கருதுகிறார்.  அதைச் செய்வது கடினம் என்றும் அடுத்த ஆண்டுவரை நீடிக்கலாம் என்று டெப்கோ நிறுவகம் அறிவித்துள்ளது.

    (தொடரும்)

    **************
    China Syndrome* – The China Syndrome is a 1979 American thriller film that tells the story of a reporter and cameraman who discover safety coverups at a nuclear power plant.
    The title is a fanciful term – not intended to be taken literally – that describes one possible worst-case result of a nuclear meltdown, where reactor components melt through their containment structures and into the underlying earth, “all the way to China” (</wiki/China_Syndrome>).

    ***************

    தகவல்:

    1. Russia & India Report –  Lessons of Fukushima – Expert Opinions.  (March 28, 2011)

    2 Macleans Magazine – Japan Fearing the Fallout  (March 28, 2011)

    3. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension  (May 12, 2010)

    4. Fukushima & Chernobyl Compared (April 11, 2011)

    5.  World Nuclear Association Report – Nuclear Power in Japan & Nuclear Safety and Seurity in the wake of Fukushima Accident (Updated in April 2011)

    6. Fukushima : What Happened and What Needs to be done ? (April 10, 2011)

    7. Japan Fukushima Damaged Nuclear Reactors’ Status (April 13, 2011)

    8. Setbacks at Japan (Fukushima) Nuclear Plants (May 12, 2011)

    9. World Nuclear Association Report : Fukushima Accident 2011 (May 30, 2011)

    10. World Nuclear Association Report : Policy Responses to the Fukushima Accident. (May 31, 2011)

    11 Wikipedea Report : http://en.wikipedia.org/wiki/Paks_Nuclear_Power_Plant (Hungarian Paks Atomic Plant Loss of Coolant Accident) (May 27, 2011)

    12. Wikipedea Report :  List of Civilian Nuclear Accidents (June 4, 2011)

    13. BBC News – Japan Nuclear Crisis : Fukushima Cold Shutdown for January 2012 (May 17, 2011)

    14 BBC News – Fukushima Lessons may take 10 years to Learn By : Richard Black (June 8, 2011)

    15. Environment News Service – Analysis: Japan Underestimated Fukushima Radiation Releases By Half – Author Charles Diggs (June 8, 2011)

    16. IAEA Briefing on Fukushima Nuclear Accident (June 2, 2011)

    17  2011 Fukushima’s Nuclear Accident is not Chernobyl (March 18, 2011)

    18 Kudankulam Nuclear Plant Equipped to deal with Tsunami Threats By : Vinson Kurian (April 3, 2011) Kerala State Centre of The Institution of Engieers (India) – IEI

    19. Three-Month Update of Fukushima Tragic Accident & Flood of Information Coming Out (June 16, 2011)

    20.  http://www.npcil.nic.in/pdf/Atoms_in_Japan.pdf  (December 19, 2011)  (Nuclear Power Costs Estimated at JP Yen 8.9 per kWh, 

    Matching Wind and Geothermal

     

    ************************
    S. Jayabarathan  (jayabarat@tnt21.com)  November 9, 2012
    http:jayabarathan.wordpress.com/

    Share
  • உங்களுக்குத் தெரியுமா?

    தமிழ்த்தேனீ 

    தீபாவளி  வருது  வீட்டை சுத்தம் செய்யலாமென்று சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கினோம்.

     

    ஒட்டடை அடித்து முதலில் சுத்தப் படுத்திவிட்டு, எல்லாக் குப்பைகளையும் பெருக்கி முறத்தில் சேகரித்து, அவற்றை வெளியே கொண்டுபோய்க் கொட்டி  அந்தக் குப்பைகள் எல்லாம் பறந்து அடுத்தவருக்கு தொல்லை தராமல் இருக்க அவைகளைக் கொளுத்தி  எல்லாவற்றையும்  சீர்படுத்திக் கொண்டிருந்தோம்.

     

    ஒரு குளவி என்னையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அதைக் கையாலே விரட்டி விட்டு மீண்டும் வேலையைத் தொடர்ந்தேன். மீண்டும் அந்தக் குளவி என்னிடம் பறந்து வந்து வாயிற் கதவிலே இரும்பு கிரில் கேட் டிலே சென்று ஓரிடத்தில் உட்கார்ந்தது. அதை அடிக்க கையை ஓங்கினேன். அது உட்கார்ந்திருந்த இடத்தில் பர்த்தால் ஒரு குளவிக் கூடு,

     

    என் மனைவி அங்கே வந்தாள் ,அதைப் பார்த்துவிட்டு அதை ஒண்ணும் செய்யாதீங்க.இது மாதிரி குளவி வீட்டுலே கூடுகட்டினால் பொண் குழந்தை பொறக்கும்னு சொல்வாங்க என்றாள்.

     

    அடேடே  நமக்குதான் ரெண்டு பொண்ணு, ஒரு பையன் எல்லாம் ஏற்கெனவே பொறந்து அவங்களுக்கெல்லாம் கல்யாணமும் செஞ்சு வெச்சாச்சே , என்றேன் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொன்டு போறும் வழியாதீங்கோ, நம்ம பொண்ணு முழுகாம இருக்காளே, அதான் பிள்ளை உண்டாயிருக்காளே  அவளுக்கு பொண்ணு பொறக்கும்னு சொன்னேன் என்றாள் முகவாய்க் கட்டையை  தோளில் இடித்துக் கொண்டு.

     

    அப்பிடி சொல்றியா அப்போ சரி இந்த குளவிக் கூட்டை அப்பிடியே விட்டுடறேன் பத்திரமா. அது சரி பொறக்கப் போறது பொண்ணா  ஆணான்னே தெரியாம எல்லாதுக்கும் பொதுவா  பிள்ளை உண்டாயிருக்கானு சொல்றீங்களே இது என்ன சொல் வழக்கு என்றேன்.

     

    கேள்வி ஞாயம்தான்  ஆனா  பிள்ளைத் தாச்சியா இருந்தா  பிள்ளை உண்டாயிருக்கான்னுதான் சொல்வாங்க என்றாள். அதான் கேக்கறேன் பிள்ளைத் தாச்சி, பிள்ளை உண்டாயிருக்கானு சொல்றீங்களே.  பொண்தாச்சியா, பொண்ணுண்டாயிருக்கான்னு ஏன் சொல்ல மாட்டேங்கறீங்க என்றேன்.

     

    சற்று நேரம் என்னையே கவலையுடன் பார்த்துக் கொன்டிருந்துவிட்டு , இதுக்குதான் சொல்றேன் கம்ப்யூட்டர்லே ரொம்ப நேரம் உக்காந்து   எழுதி  ,படிச்சு  செஞ்சிண்டே இருக்காதீங்கோ  , கொஞ்சம் கண்ணுக்கும் , மூளைக்கும்  ரெஸ்ட் குடுங்கோன்னு சொல்றேன் கேட்டாதானே  என்று மறு படியும் முகவாய்க் கட்டையை தோளில் இடித்துக் கொண்டு  தள்ளிப் போனாள் என் மனைவி,

     

    நான் என்ன தப்பாக் கேட்டுட்டேன்  எனக்கு ஒண்ணும் புரியலை, உங்களுக்கு விடை தெரியுமா?

     

    அன்புடன்

     

    தமிழ்த்தேனீ

    Share
  • சட்டம் ஆலோசனைகள் (19)

    மோகன் குமார்

    கேள்வி: முரளி தரன், மடிப்பாக்கம் 

    எங்கள் தந்தை ஒரு கிரவுண்டில் வீடு வைத்திருந்தார். அவர் மரணத்துக்கு பின் அந்த வீட்டை அண்ணன்- தம்பியான நாங்கள் இருவரும் பிரித்து கொண்டோம். இப்போது வீடு எங்கள் இருவர் பெயரில் இருக்கிறது. இந்த வீட்டில் நான் மட்டும் குடியிருக்கிறேன். எனது அண்ணன் இன்னொரு இடத்தில் உள்ளார். 

    இந்த வீடு பழசாகி விட்டதால், இதனை இடித்து விட்டு புதிதாக இங்கு வீடு கட்டி கொள்ளும் எண்ணம் உள்ளது. ஆனால் எனது அண்ணன் தற்போது வீடு கட்டி கொள்ள போவதில்லை. 40 X 60  உள்ள இந்த இடத்தை வீட்டுடன் சேர்த்து நாங்கள் பிரித்து கொள்ள முடியுமா? 

    பதில்:  

    உங்கள் தந்தை இறந்த பின் அவரது உயில்படி, வீடு அவரது வாரிசுகளுக்கு வந்துள்ளது. அதை நீங்கள் ஏற்கனவே உங்கள் இருவர் பெயருக்கும் மாற்றி கொண்டு விட்டீர்கள். இப்போது அதே சொத்தை சரி பாதியாக பிரித்து கொள்ள நினைக்கிறீர்கள். 

    இப்படி பிரிக்கும் போது ஒரு பக்கம் வீட்டின் கட்டிடம் அதிகமாகவும், இன்னொரு பக்கம் காலி இடம் அதிகமாகவும் இருக்க வாய்ப்புண்டு. அதில் அண்ணன் -தம்பிக்கு பிரச்சனை ஏதும் இல்லை என்றால் நீங்கள் நிலத்துடன் இருக்கும் ஒரு கிரவுண்ட் வீட்டை அப்படியே இரு பாதியாக பிரித்து கொள்ளலாம். உங்கள் இருவருக்கும் இடையே ஒரு அக்ரிமென்ட் போல் போட்டு அதில் அனைத்து தகவல்களும் சொல்லி இருவர் பெயரிலும் தனித்தனியே பிரித்து எழுதி கொள்ளவும்.

    இதனை பிறகு ரிஜிஸ்டரும் செய்து விட்டால் இடம் இருவருக்கும் தனித்தனியே கிடைத்து விடும். 

    மேலும் சந்தேகம் இருந்தால் ஒரு வழக்கறிஞரை அணுகவும் 

     

    Share
  • ஊனம்

     

    கோபி சரபோஜி

    கூந்தல்
    கருமேகம்.

    நெற்றி
    நிலா.

    புருவம்
    பிறை.

    விழி
    மீன்.

    நாசி
    கிளி.

    வாய்
    கோவைப்பழம்.

    பல்
    முத்து.

    கழுத்து
    சங்கு.

    தனம்
    கவிழ்ந்தமலை.

    இடை
    கொடி.

    தொடை
    வாழை.

    இப்படியான
    உருவகங்களால்
    ஊனமாகிப்போனது
    உன்னையும்
    தன்னைப் போன்றதொரு
    சக மனுசியாய் மதிக்காத
    என் ஆண்மை தனம்!

     
    படத்துக்கு நன்றி
     
    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (31)

     

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    2012 தனது முடிவை நோக்கி அவசரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் எத்தனையோ நிகழ்வுகளைத் தனக்குள்ளே தாங்கியவாறு ஓடிக் கொண்டிருக்கிறது. இவற்றிலே சில மகிழ்ச்சியானவை சில துன்பகரமானவை ஆனால் அனைத்துமே நடந்த நிகழ்வுகளின் நிழல்களாகத்தான் மக்களின் மனங்களிலே பதிந்து போய் இருக்கின்றன.

    எமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளாமல் எம்மை அடக்கி ஆள்பவர்களால் எமக்கு நடத்தப்படும் நிகழ்வுகள் எமது வாழ்க்கையில் பல திருப்பங்களை ஏற்படுத்தி விடுகிறது. இவைகளில் சில எம் வாழ்க்கைகளை முன்னேற்றுகிறது வேரு சிலவோ எமது வாழ்க்கையில் பல இன்னவொன்னா தொல்லைகளைத் தந்து அனுபவம் எனும் அத்தியாயத்தோடு இதயத்தை உறைய வைத்து விடுகிறது.

    என்னடா இது ஏதோ ஒரு பெரிய பீடிகையுடன் ஆரம்பிக்கிறானே என்று எண்ணுவது போலத் தெரிகிறது ! பயப்படாதீர்கள் என்னுடைய ஆரம்பத்திற்கு ஒரு காரணம் உண்டு.

    2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் வாழும் பல வம்சாவழி இந்தியர்களின் மனதினிலே நீங்காத வடுவைத் தாங்கி நிற்கிறது. ஆமாம் உகாண்டா நாட்டின் அதிபதியால் அந்நாட்டில் வாழ்ந்த இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட 40 ஆண்டு நிறைவேயாகும்.

    உலகத்தில் எந்த நாட்டிலுமே கண்டிராத வகையில் மிக அதிக அளவில் மக்கள் நாடு கடத்தப்பட்டமை சமீப காலத்து உலக வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.

    எப்படி இந்த இந்தியர்கள் உகாண்டா நாட்டிற்கு இடம், பெயர்ந்தார்கள்.

    1882ம் ஆண்டு வாணிபம் செய்வதற்கு உள்ளே நுழைந்து நாட்டின் அதிகாரத்தையே வாணிபமாக மாற்றிய இங்கிலாந்து அரசியல் வியாபாரிகளே இதற்கு மூல காரணம்.

    உலகின் பல நாடுகளையும் தமது Gun Boat Diplomacy எனும் கட்ற்படை ஆக்கிரமிப்பால் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பிரித்தானிய ஏகாதிபத்திய ராஜ்ஜியத்தில் ஆதவன் மறைவதே இல்லை என்று பறை தட்டிய இங்கிலாந்து அரசாங்கத்தினால் புலம் பெயரப் பண்ணப்பட்டவர்களே இவ்விந்தியர்களின் மூதாதையர்கள் எனலாம்.

    1890களில் உகாண்டா நாட்டில் இரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபடுத்த சுமார் 32000 இந்தியர்கள் பிரித்தானிய அரசினால் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

    இப்புகையிரதப் பாதை அமைப்பு முடிவுற்றதும் உயிருடன் எஞ்சிய பலர் மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பினர் ஆனால் 6724 பேர் உகாண்டாவைத் தமது நிரந்தர வசிப்பிடமாக மாற்றிக் கொண்டனர்.

    இந்தியர்கள் தையல் தொழிலும், வங்கித் தொழிலும் செய்து மேன்மையடைந்தார்கள். இயற்கையாகவே கடும் உழைப்பளிகளான என் தாயக மக்கள் தமது கடும் உழைப்பினால் உகாண்டா நாட்டின் பொருளாதாரத்தில் அதி முக்கிய நிலை வகித்தார்கள்.

    எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் இந்தியர்கள் பெரும்பான்மையான உகாண்டா நாட்டு கறுப்பின மக்களை விட அதியுயர்ந்த நிலையில் இருப்பதா என வெகுண்டெழுந்த சில துவேஷ அரசியல்வாதிகளால் உகாண்டா நாட்டு மக்களுக்கு இந்தியர்கள் மீதிருந்த காழ்ப்புணர்ச்சி ஊதிப் பெருப்பிக்கப்பட்டது.

    1968 ம் ஆண்டே அந்நாளில் உகாண்டா நாட்டு அதிபராக இருந்த மில்டன் ஓபட்டோ என்பவர் உகாண்டா நாட்டின் வணிகத்துறையையும், தொழிற்துறையையும் ஆப்பிரிக்க மக்கள் வசப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முடுக்குவதாகக் கூறி இந்தியர்களின் மீது பாரபட்சமாக நடந்து கொள்ளும் விதிமுறைகளை இயற்றினார்.

    இந்தியர்களின் செல்வாக்கை மட்டுப்படுத்துவதற்காக 1969ம் ஆண்டு பல வேலை அனுமதிப் பத்திர முறையும், வியாபார அனுமதிப் பத்திர முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டன.

    மில்டன் ஓபட்டோ , இடி அமீன் எனும் இராணுவ அதிகாரியால் தூக்கியெறியப்பட்டு இடி அமீன் உகாண்டா நாட்டின் அதிபராக பதவி ஏற்றதும் இந்தியர்கள் மீதான துவேஷத்தின் அடிப்படையில் தமது பதியை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக இந்திய எதிர்ப்புப் பிரச்சாரங்களை மேலும் முடுக்கி விட்டார்.

    விளைவு !

    1972ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி உகாண்டா நாட்டு இந்தியர்கள் உகாண்டாவை விட்டு வெளியேறுவதற்கு இடி அமீன் 90 நாட்கள் கெடு விதித்தார்.

    கடுமையான உழைப்பை மூலதனமாகப் போட்டு தமது வியாபாரங்களைக் கட்டி எழுப்பி தமது தாயகத்திலிருந்து வலுக்கட்டாயமாக புலம்பெயர்க்கப்பட்டும் மன உறுதியை இழந்து விடாமல் தமக்கென ஒரு ஸ்திரமான வாழ்வை ஏற்படுத்தி வைத்திருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கண்ணீருடன் தமது வியாபாரங்களையும், தாம் கடினமாக உழைத்துச் சேமித்த தமது உடமைகளையும் கைவிட்டு உகாண்டாவை விட்டு வெளியேறினார்கள்.

    அவர்களுடன் சேர்ந்து உகாண்டா நாட்டின் மனிதாபிமானமும் வெளியேறியது.

    இங்கிலாந்து நாட்டு பிரஜாவுரிமை கொண்டவர்களில் இங்கிலாந்து நாட்டிற்கு இடம்பெயர விரும்பியவர்கள் சுமார் 30000 பேருக்கு இங்கிலாந்தில் அகதிகள் அந்தஸ்து அளிக்கப்பட்டது.

    இவர்களில் பலர் 0 எனும் எண்ணிலிருந்து ஆரம்பித்து இன்று இங்கிலாந்து நாட்டின் கோடிஸ்வரர்களில் இருவர்களாகத் திகழ்ந்து எமது இந்திய நாட்டு மக்களின் உழைப்பின் மகிமைக்கு கிடைத்த வெற்றி என்று இங்கிலாந்து நாட்டின் பழுத்த அரசியல்வாதிகள் பலர் போற்றுவதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.

    இவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராக மிக் ஜட்டெனியா (Mike Jatania) உம் அவரது மூன்று சகோதரர்களும் திகழ்கிறார்கள். உகாண்டா நாட்டிலிருந்து அகதியாக இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்படும் போது நிராதரவாக வந்த இவர்கள் இன்று 850 மில்லியன் பவுண்ஸ் பெறுமதியான சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளது ஒன்றே இம்மனிதர்களின் கடுமையான உழைப்பிற்கு உதாரணமாகத் திகழ்கிறது.

    தமது தாய்நாட்டிலிருந்து அதனுடன் எந்த சம்பந்தமுமேயில்லாத ஒரு நாட்டின் அதிகாரவர்க்கத்தினால் நாடு கடத்தப்பட்டு தாம் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்ட நாட்டில் தமக்கென ஒரு வாழ்வைத் தமது கடுமையான உழைப்பினால் எற்படுத்திக் கொண்ட பின்னால் தமது உடமைகள் அனைத்தையும் பறிகொடுத்து மூன்றாம் நாட்டிற்கு அகதியாக இடம் பெயர்ந்து இன்று அந்த நாட்டின் கோடீஸ்வரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்களென்றால் அவர்களின் மனத்திடத்தையும், நம்பிக்கையையும் எதற்கு ஒப்பிட முடியும்.

    இத்தகைய வாழ்க்கைகளை அலசுவதன் மூலம் இளய தலைமுறையின் நம்பிக்கை மேலும் வலுவடையும் என்பது எனது நம்பிக்கை.

    இதற்காகத்தான் கவியரசர்,

    வாழ்ந்து பார்க்க வேண்டும் அறிவில்
    மனிதனாக வேண்டும்
    வாசல் தேடி உலகம் உன்னை
    வாழ்த்திப் பாட வேண்டும்!     என்று எழுதி வைத்தாரோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

    Share
  • நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’ :: தொடர்-20

     

    பெருவை பார்த்தசாரதி

    புராண காலத்தில் மட்டுமில்லாமல், இன்று கூட நம் வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறவர்களை வெவ்வேறு காலகட்டத்தில் கைக்கொண்டு வாழ்க்கை நலம் பெறவும், வாழ்வில் உயர்ந்த நிலை அடையவும் ஒவ்வொருவரும் முயற்சித்துக் கொண்டேயிருக்கிறோம். நாம் நமது சொந்தக்காலில் நிற்கமுடியும், நமது உழைப்பிலே நாம் வாழமுடியும் என்கிற தளராத தன்னம்பிக்கை வளர இவர்கள் காட்டும் வழி நமக்கு ஒளிகாட்டுகிறது. பண்டைக்காலத்தோடு இன்றய காலக்கட்டத்தை ஒப்பிடுகையில், தடைக்கற்களை சுட்டிக்காட்டி தன்னம்பிக்கையை வளர்க்கும் சூழ்நிலைகளை உருவாக்கித் தருபவர்களை Counsellors, Advisors, Organisers, TeamLeader, Members என்று பெயர் சூட்டி அழைப்பெதெல்லாம் இன்று பெயரளவிலே தான் மாற்றமே தவிர,  செயல் அளவில் பெரிய மாற்றமிருக்காது. அன்று ‘குரு’ என்று சொல்கிறவர்களை இன்று ‘தலைவர்’, ‘வழிகாட்டுபவர்’ என்று சொல்கிறார்கள் அவ்வளவுதான். ஒரு திறமையான தலைவனாகச் செயல்படக்கூடிய ஒருவர் (Leader) தன்னுடைய உறுப்பினர்களுக்கு (Team Members) வழிகாட்டியாக இருந்தால், அவர் எடுக்கின்ற செயலும், முடிவும் வளரும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. திறமை இருந்தும் ஒரு காரியத்தைத் திறம்பட செய்ய முடியாமல் திணறுபவர்களுக்கு, முதலில் அவர்களை மனக் குழப்பத்தில் இருந்து விடுவித்தால்தான் அவர்கள் திறம்பட செயல்படமுடியும். தன்னுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, தாம் சொல்கின்ற பணிகளைத் திறம்பட செய்யும் ஊழியனிடத்தில் காணும் மன சஞ்சலங்களை அகற்றி, அவனிடத்தில் இருக்கும் திறமையை எடுத்துக் காட்டுபவன்தான் மற்றவரிடமிருந்து தனிப்பட்டு “தலைவன்” என்ற தகுதியைப் பெறுகிறான்.  அறிவு, திறமை, பொருமை, ஆற்றல் இவை எல்லா அம்சத்திலும் சிறந்து விளங்கினாலும், தலைவனாகச் செயல்படுபவனுக்கு ‘தெளிவான சிந்தனை’ என்பது மிக மிக அவசியம். அப்பொழுதான் அவனைப் பின்பற்றுபவர்களுக்கு எடுத்துக் காட்டாக அமையமுடியும். ஒரு வண்டி சீராக ஓட வேண்டுமானால், இரண்டு சக்கரங்களும் ஒரே அளவாக இருக்கவேண்டும், அதுபோல எண்ணங்கள், செயல்கள் என்ற இரு சக்கரங்கள் ஒன்றாக இருந்தால்தான் வண்டியாகிய செய்கின்ற செயல் சிறப்பாக அமையமுடியும். இந்த எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் மூலக்காரணமாக அமைவது தெளிவான “மனம்”. என்பதை மையமாக வைத்துதான் கவியரசரின் சிந்தனையில் “வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும், அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்” தமது பாடல் வரிகளை அமைத்து இருப்பார்.

    மனதைக் கட்டுப்படுத்தி, ஆசைக்கு அளவிட்டால் கடையனும் கடைத்தேற்றம் பெறலாம் என்கிறார்கள் நம் முன்னோர்கள். ஆசையை அடக்க முடியாமல் இன்று பலர் வாழ்வில் வழி தவறுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். எல்லாவித இன்ப துன்பங்களுக்கும் மனம் ஒன்றுதான் காரணமாக அமைகிறது. நல்ல மனைவி, தகராறு செய்யாத குழந்தைகள், உறவாடும் சுற்றத்தார்கள் இவர்களோடு அமைதியான முறையில், தனது வருமானத்திற்கேற்றவாறு குடும்பம் நடத்திக்கொண்டிருந்தான் ஒருவன். அக்கம் பக்கத்தில் குடியிருப்போர்கள் எல்லாம் வசதியாக காரில் போவதைப் பார்க்கிறான். இவனுக்கும் லேசாக ஆசை பிறக்கிறது. தன்னிடம் ஒரு கார் இருந்தால் எப்படி இருக்கும்?..ஆசை துளிர் விடுகிறது. உடனே வாங்கிவிடு என்று மனது சொல்கிறது, மறு நிமிடம் வேண்டாமென்று மறுக்கிறது. அடுத்த நிமிடம் கடன் வாங்கியாவது கார் வாங்கிவிடு என்று உத்தரவிடுகிறது. படிப்படியாக இந்த சாதாரண ஆசை பேராசையாக உருவெடுத்தது. இப்படித்தான் ஒவ்வொரு நிமிடமும் மனம் என்பது குரங்காக மாறிவிடுகிறது. மனதைக் கண்டபடி அலைபாய விட்டதால் அமைதியான வாழ்க்கையில் சூறாவளி வீசத்தொடங்கியது. இதுவரை கடன் என்று அறியாதவன், ஒரு காலகட்டத்தில் கடனைத் திரும்பச் செலுத்தமுடியாத பெரும் கடனாளி ஆகி  விடுகிறான். பணத்திற்காக ஒழுக்கத்திலிருந்து வழுவுகிறான். ஒழுக்கம் கெட்டவன், நடத்தை கெட்டவன் என்று பெயரெடுக்கிறான். முடிவில் தன்னையும், தன்னைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையையும் சீரழித்துக் விடுகிறான்.

    மக்கள் அறவழியில்  சென்று ஒழுக்கத்தை முறையாகக்  கடைபிடித்து நல்வாழ்க்கை  வாழவேண்டும் என்ற உயரிய  நோக்கத்திற்கு வித்திடுவது ஒழுக்கம் என்பதை வலியுறுத்தினார்கள் பெரியோர்கள். நல்லொழுக்கத்துக்கு முக்கிய வழி ‘மன அடக்கம்’ மற்றும் ‘மனத்தூய்மை’. இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளலார் மனதைக் கட்டுப்படுத்தி தனது வாணாள் முழுவதும் நல்லொழுக்கத்தை பேணிக்காத்து தனது வாழ்வில் அதை முழுமையாகக் கடைபிடித்தும் வந்தார். மனதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்து, கருணைக்கும் இரக்கத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி அருட்செயல் புரிந்து மற்றவரிடமிருந்து தன்னை வேறுபடுத்தி சமுதாயத்தை சீர் செய்த சீர்திருத்தவாதியாக, மிகச்சிறந்த மனிதனாக வாழ்ந்து காட்டினார். மனிதன் என்ற சொல்லுக்கு நினைப்பவன் என்ற பொருள் படும். நினைப்பதற்கு உறுதுணையான கருவி மனம். மனத்தையுடையவன் மனிதன். அதிலும் மனத்தை அடக்கியவனே சிறந்த மனிதன் என்கிறார் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள். அவருடைய சொற்பொழிவில் இருந்து ஒரு செய்தி, திருவொற்றியூரிலே ஒரு மகான் இருந்தாராம். அவர் ஆலய வழிபாட்டிற்காகச் செல்லும்பொருட்டு, வீதியில் தம்மைக் கடந்து செல்பவர்களைப் பார்த்து அதோ ‘எருமை போகிறது’, ‘நாய் போகிறது’, ‘ஆடு போகிறது’, ‘பூனை போகிறது’ என்று கூறுவாராம். வள்ளலார் தெருவிலே செல்லும்போது அவரைப்பார்த்து “மனிதன் போகின்றான்” என்பாராம். ஆகவே எல்லோரையும் அந்த மகான் மனிதனாகக் கருதவில்லை என்று தெரிகிறது. மண்ணாசை, பொருளாசை, பெண்ணாசையால் நிரம்பி ஆசையினால் லயிக்கப்பட்டுக் கிடந்த மனதை வெறுத்து துறவறம் பூண்ட பட்டினத்தடிகளுக்கு “காதற்ற ஊசியும் வாராதே காணும் கடைவழிக்கே” என்ற வாசகம் தான் அவருக்கு ஞான வழி காட்டியது. ஒரு நொடியில் சட்டென்று மனம் மாறியதால், பெரும் செல்வந்தராக இருந்தும், கடைசியில் சகலத்தையும் துறந்து கோவணம் கட்டிய துறவியானார்

    எண்ணிலடங்கா மஹான்கள், பதினென் சித்தர்கள், இன்றய சிறந்த எழுத்தாளர்கள், மனநல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பலர் மனதைப் பற்றிய எண்ணற்ற விஷயங்களை பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படி சொல்லியிருக்கிறார்கள். மனதை ஒடுக்க, ஒடுக்க மனம் விரிவடைந்து விசாலமடைகிறது. மனம் விசாலமாகிவிட்டால் அங்கே ஈகைக் குணம் குடிகொண்டு விடுகிறது. தீக்குணங்களை விரட்டி அடித்து விடுகிறது. சங்க காலத்தில் வாழ்ந்த அரசர்கள் பொன்னையும் பொருளையும் புலவர்களுக்கும், வறியவர்களுக்கும் வாரி வழங்கினார்களே, இவர்கள் மனத்தைச் செம்மை படுத்தியது எது?…முன்னூருக்கும் மேற்பட்ட கிராமங்களை புலவர் கபிலருக்கு ஈந்தான் பாரி, முல்லைக்கொடிக்குத் தனது பொற்றேரைக் கொடுத்தான். தன்னிடமுள்ள பொருளைக் கொடுக்க இசைகின்ற அதேமனம், தன்னிடம் சேர்ந்து இருக்கின்ற உடலைக் கொடுக்க இசையுமா?… ஒரு புறாவின் அற்ப உயிருக்காக தன் தசையறுத்து துலாவில் ஏறிய வள்ளல்தன்மையைக் கண்டு வியக்காதவர் உண்டோ?…………அவர்களுடைய விசாலமடைந்த மனதிற்குள் விகாரத்து அங்கே இடமில்லை.

    மனத்தை பேய் என்றே குறிப்பிடுகிறார் பதினென் சித்தர்களில் ஒருவரான  அகப்பை சித்தர். அகம் என்றால் மனம் என்றும் பொருள் படும். இவரது உண்மைப் பெயர் அகப்பேய் சித்தர். இவருடைய பாடல்களில் அகத்தை (மனதை) பேய் என்று சித்தரித்து பாடல் எழுதியதாலேயே இவர் அகப்பேய் சித்தர் எனப் பெயர் பெற்றார். பின்னாளில் அகப்பேய் என்ற பெயர் மருவி அகப்பை ஆகிவிட்டார் என்பது பலரது கருத்து. மனதில் தூய்மையான எண்ணங்கள் எழும்போது, நமது முகம் பிரகாசமடைகிறது. மனம் எப்படி இருக்கிறதோ அப்படியேதான் முகத்தின் அழகு அமையும். இதைத்தான் “அகத்தின் அழகு முகத்திலே தெரியும்”, “ எண்ணம்போல வாழ்வு”, “எண்ணம்போல செயல்” என்பர். “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” என்பதும் வள்ளுவன் வாக்கு. மனதைப் ஒருநிலைப்படுத்துவது மற்றும் சஞ்சலப்படாமல் எப்படி ஒடுக்குவது என்பது பற்றி அகப்பேய் சித்தர் பாடல்களில் முக்கியத்துவம் பெற்று இருக்கும்.

    குரங்கானது சிறிது நேரமேனும் சும்மாயிராது, ஏதாவது விஷமம் செய்து கொண்டேயிருக்கும். மரத்துக்கு மரம் தாவுவதும், குதிப்பதும், தொங்குவதும் இவற்றுக்குச் சாதாரமான செயல். அதனால்தான் நிலையில்லாத மனித மனத்தையும் குரங்குக்கு ஒப்பிடுகிறார்கள் கவிஞர்கள். ‘மனித மனம் ஒரு குரங்கு’ என்ற கவியரசரின் பாடல்கள் இங்கே  நினைவுக்கு வரவேண்டும்…….மனதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தன்னிச்சையாக இயங்கவிடாமல் செய்துவிட்டால், மனமானது தூய்மையாகி என்நேரமும் சஞ்சலத்திற்கு இடம் கொடாமல், அமைதியாகவே இருக்கும்.

    ‘’நில்லென்று  மனதை நிலை நிறுத்தவல்லார்க்கு

    கொல்லென்று  வந்த எமன் குடியோடிப் போனாண்டி’’

    என்பது சித்தர்கள் கண்ட வித்தை. மனதை அடக்கி ஒரு நிலைப்படுத்தி விட்டால், மரணத்தையும்கூட வென்றுவிடலாம் என்பதே சித்தர்கள் கூற்று, இக்கலையைக் கைவரப்பெற்றவர்களின் உயிரை எடுக்க வந்த எமன் கூட அருகில் வராமல் ஒடிவிடுவானாம்.

    ‘குறுமுனி’ என்றும் ‘தலைமைச் சித்தர்’ என்றும் புகழ்பெற்ற அகத்தியர் “மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டா’’ என்கிறார். மனதைச் செம்மைப் படுத்தினால் எல்லாவித சித்திகளையும் பெற்றும் விடலாம் என்கிறார். எல்லா வியாதிகளுக்கும் மருந்துண்டு, மன உளைச்சலுக்கும் உண்டு, ஆனால் மருந்தைவிட மனதில் உள்ள அழுக்குகளை அகற்றிடும் பயிற்ச்சியே அருமருந்தென்று அகத்தியமுனி இங்கே உட்கருத்தாக சூசகமாகத் தெரிவிக்கிறார் என்றே பொருள் கொள்ளவேண்டும்.

    தற்காலத்தில்  அனைத்துமே கணிணியில் சேகரிக்கப்பட்டு சேமிக்கப் படுகிறது. இதில் அவ்வப்போது தேவையில்லாத சமாச்சாரங்களை ரிசைக்கிள் பின் (Recycle bin) என்ற இடத்திற்கு தள்ளிவிடுகிறோம். தேவையில்லாமல் கணிணியின் இடத்தை நிரப்பிக் கொண்டிருக்கும் கோப்புகளை (unwanted files) குப்பைத்தொட்டிக்கு (Recycle bin) அனுப்புவது போல, அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மனதில் இருத்திக்கொள்ளாமல் உடனே மனதிலிருந்து களைந்து எரிந்து நல்லதைத் தவிர, ஒன்றுக்கும் உபயோகப்படாததை மனதில் சேமித்து வைப்பதை தவிர்க்கவேண்டும்.  இந்தப் பயிற்ச்சி மூலம் விரக்தி, கோபம், துவேஷம், எதற்கெடுத்தாலும் எரிச்சல் போன்றவற்றைத் தவிர்த்து மனதைப் பாதுகாத்து வைத்துக் கொள்ள வழி சொல்லுகிறார்கள் மனநல ஆராய்ச்சியாளர்கள்.

    பகவத் கீதையை ஆழ்ந்து படிப்போருக்கு மனதைப் பற்றிய விஷயங்களெல்லாம் தெளிவாக விளங்கும். ஒரு சமயம் மனதைக் கட்டுப்படுத்தமுடியாமல் தடுமாறிய அருச்சுனன், பகவான் கிருஷ்ணனிடம் “ஒரு நிலையில் இல்லாத மனதை எவ்வாறு கட்டுப்படுத்துவது?”…என்று வினவுகிறான். அதற்கு பகவான், நம்முடைய மனதுதான் எல்லாவித செயலுக்கும் காரணமாக அமைகிறது, காற்றைப்போல எந்நேரமும் அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதைக் கட்டுப்படுத்த இடைவிடாத பயிற்ச்சியினால் மட்டுமே சாத்தியமாகும் என்றும் இது யோகத்தினால் கைவரப்பெறும் என்றும் உரைக்கிறார். இறைநம்பிக்கையோடு இடைவிடாத பயிற்சியினால் மனதை ஒரு கட்டுக்குள் வைக்கமுடியும் என்பதை கீதை மூலம் வலியுறுத்தினார். பலவித மனக்குழப்பத்துக்கும் மனசஞ்சலத்துக்கும் அடிமையாகியிருந்த அருச்சுனனக்கு நல்லுபதேசம் செய்து மனிதப் பிறவிக்கும் கீதையுரை மூலம் நல் வழிகாட்டினான் மாயக் கிருட்டினன்.  மனமே ஒருவரது வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. மனோதைரியமும், மனக்கட்டுப்பாடும் இருந்தால் மகத்தான சாதனை புரியமுடியும் என்பதை கீதோபதேசத்திலிருந்து எளிதாக அறிந்து கொள்ளமுடியும். சாதனைகளையும், குறிக்கோளையும் எட்டுவதற்கு இந்த ‘மனோதைரியம்’ மனிதனுக்கு மிக அவசியம் என்பதற்கு ஒர் உதாரணத்தை இங்கு எடுத்துச் சொல்ல விழைகிறேன். ஒவ்வொரு வருடமும் ஸ்பெயின் நாட்டில் நடக்கும் வீரவிளையாட்டு, அதாவது ‘காளைச்சண்டை’ (Bull Fight) என்பது உலகப் பிரசித்தம். வழக்கமாக நடைபெறும் இந்த மரண விளையாட்டில், ஆக்ரோஷமாக சீறிவரும் காளையை அடக்கி, எப்போதும் வெற்றிவாகை சூடும் ஒரு வாலிபன் கடைசி நேரத்தில் வீரவிளையாட்டில் பங்கேற்கவில்லை என்ற அறிவிப்பு வந்தவுடன் பத்திரிகையாளர்கள் கூட்டம் அவரிடம், ஏன் இந்த திடீர் முடிவு? என்ற கேட்டனர். அதற்கு அவருடைய உடன் பிறந்த சகோதரர் ஒருவர் போட்டியின் போது காளை முட்டி உயிர்துறந்த சம்பவத்தால்தான், வருகின்ற போட்டியில் நான் கலந்து கொள்ள இயலவில்லை என்று பதில் சொன்னார். மைதானத்தில் காளையோடு சண்டைபோடுவதைவிட யாருக்கு வெற்றி?…..யாருக்கு மரணம்?..என்று மனத்துக்குள் நடக்கும் போராட்டமே மேலோங்கி இருக்கிறது. போட்டியில் பங்கேற்கும் ஆறறிவு படைத்த மனிதனுக்கும், ஐந்தறிவு பெற்ற விலங்குக்கும் ஒருவரை ஒருவர் வெல்வதே குறிக்கோள். வெற்றி, தோல்வி, மரணம் என்பதெல்லாம் விலங்குக்குத் தெரியாது, ஒன்று போராடும் அல்லது போராட முடியாமல் தன்னை மாய்த்துக்கொள்ளும். ஆனால் மனிதனோ ஒரு நொடியில் மனம் தளர்ந்து, தன்னம்பிக்கை இழந்து விட்டால் போட்டியிலிருந்து விலகிவிடுகிறான். இப்படித்தான் அந்த வாலிபனும் போட்டி நடக்கும் ஒரு சில வினாடிக்கு முன்பு மனம் மாறிவிட்டான். அன்று பகவான் கீதையில் அருச்சுனனுக்கு வழிகாட்டியதுபோல், அந்த வாலிபனின் திறமையை அறிந்த அவரது ‘கோச்’ என்று சொல்லக்கூடிய(அவரைப் போட்டிக்குத் தயார்படுத்தியவர்) மனக்குழப்பத்தில் இருந்த வீரனுக்கு உற்சாகம் கொடுத்து, போட்டியில் பங்கேற்கச் செய்து காளையை அடக்கி மரணத்தை வென்று வெற்றியைத் தேடித்தந்தார்.

    ஏதோ ஒரு காரணத்தால், சோர்வடைந்த மனதை தக்க சமயத்தில் திசைதிருப்பி உற்சாகமளித்தால், ஆக்கப்பூர்வமான திறமைகள் மனதிலிருந்து வெளிப்படும் என்பதையே இந்த சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது. ஆக நமது மனதை உற்சாகத்தோடும், உறுதியோடும் பாதுகாத்துக் கொள்ள நாம் பல வகைகளில் முயற்சி எடுத்துக் கொண்டே இருக்கிறோம். மூலைக்கு மூலை வினையகற்றுபவனுக்கு ஆலயம் இருப்பதுபோல, இன்றைக்கு எங்கு நோக்கினும் யோகாசன மையங்கள் ஆக்கிரமித்து விட்டன.  இங்கெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ‘’மனஅமைதிக்கான வழிகள்’’ என்று பெரிய அளவில் விளம்பரம் செய்து வியாபாரமும் செய்கிறார்கள். யோகசன மையங்கள் இன்று வாழ்வில் முக்கியத்துவம் பெற்று மனதையும் உடலையும் பாதுகாக்க வழிசொல்வது அவசியமாகிறது. மருத்துவ மனைகளில் உடல்நிலை பரிசோதனை முடிந்த பிறகு, கடைசியாக ‘மனதை அலசி ஆய்வு செய்யும்’ மனநல மருத்துவரின் சான்றிதழும் (psychiatrist certificate) உடல் நல மருத்துவத்துக்கு அவசியமாகி வருகிறது என்பது இங்கே நினைவு கூறத்தக்கது.

    யார் சொன்னாலும், எங்கு தேடினாலும் எண்ணற்ற  புத்தகங்களைப் புரட்டினாலும், முடிவாக அனைத்தும் ஒரே ஒரு விஷயத்தைத்தான் வலியுருத்துகிறார்கள். அதாவது மனசஞ்சலங்களை அகற்றுவதற்கு எங்கும் செல்லவேண்டாம், மன அமைதியில்லாமல் இருக்கும் போது உங்கள் இஷ்ட தேவதையை மனதில் இருத்தி அலுவலகத்திலோ, வீட்டில் தனியாக இருக்கும் போதோ அல்லது அமைதியான ஏதோவதொரு இடத்தில் அமர்ந்து ஒரு பத்து நிமிட நேரம் அமைதி காத்து தியானம் செய்யுங்கள் போதும் என்பதே இதன் ஒட்டுமொத்த சாராம்சம். இதைத்தான் நமது முன்னோர்களும், முனிவர்களும், சித்தர்களும், யோகிகளும் நமக்கு விட்டுச் சென்ற ‘வாழ்க்கை ரகசியம்’ என்று கூடச் சொல்லலாம்.

    தொடரும

    படத்திற்கு நன்றி :

    http://suddhasanmargham.blogspot.in/2012_02_01_archive.html

    Share
  • கைக்குட்டைகளும் டிரான்ஸ்வெஸ்டிசமும்

     

    அரவிந்த் சச்சிதானந்தம்

    “Transvestism (also called transvestitism) is the practice of cross-dressing, which is wearing clothing traditionally associated with the opposite sex.”-Wikipedia

    கைக்குட்டை  என்பது உங்களுக்கு வேண்டுமென்றால் ஒரு சாதாரண விடயமாக இருக்கலாம். எனக்கு அதிமுக்கியமான ஓர்  விடயம்.  கைகுட்டைக்கென்ன பெரிய முக்கியத்துவம் இருந்துவிடப்போகுதென்று  நீங்கள்  நினைக்கலாம். ஆனால்  கடந்த இரண்டு மாதத்தில்  நான் ஆயிரம் ரூபாய்க்கு கைகுட்டை வாங்கிட்டேன்னு சொன்னால் , அதனுடைய முக்கியத்துவம் உங்களுக்கு புரியும். ஒரு வருடத்திற்கு சுமார்  ஆறாயிரம் ரூபாய் கைகுட்டைக்கே செலவளிக்கிறேன். நான் என்ன செய்வது ! வேறு வழி இல்லை…

    ஏதோ நான் கைகுட்டையை  வைத்து பாய்மரக்கப்பல் செய்வதாக  நீங்கள் நினைத்துவிடாதீர்கள். நீங்கள் எதற்காக கைக்குட்டை பயன் படுத்துகின்றீர்களோ அதே காரணங்களுக்காக கைக்குட்டையை பயன்படுத்தும்  ஒரு சாதாரண  மனிதன் தான்.. ஆனால் என் வாழ்க்கையில் கைக்குட்டைகள் ஏற்படுத்திய, ஏற்படுத்தும் விளைவுகள் சாதரனமானவையன்று.

    “பத்திரம்டா ! எங்கேயும் கீழ விட்டுறாத…” ஒவ்வொரு முறையும் அம்மா சொல்லுவாள், அந்த கைகுட்டைய என் யுனிபார்ம்  ட்ரௌசரோட சேர்த்து ஊக்கை குத்தும் போது.

    அழகான பூ போட்ட  வெள்ளை நிறக் கைக்குட்டை அது. என் வாழ்க்கையில் அதன் பின் ஏனோ பூ போட்ட கைக்குட்டை உபயோகப்படுத்தவில்லை. யாரும் உபயோகப்படுத்த விடவில்லை. பூ போட்ட கைகுட்டைகளும்  குடைகளும் பெண்களுக்கு  மட்டுமே உரித்தானவையென்று இங்கு ஏனோ நம்பப்படுகிறது. பூக்கள்,ஜனனம் முதல் மரணம் வரை மனிதனின் வாழ்கையை ஏதோ ஒரு வகையில் அலங்கரிகின்றன.

    ஆண் கடவுளுக்கு பூ சூட்டி அழகு பார்க்கும் இந்த சமுதாயம், பூவை பற்றி ஒரு சராசரி ஆண் பேசினாலே அவனை விசித்திரமாகப் பார்க்கிறது. பூக்கள் ஆண்மையின் பலவீனமாகவும் பெண்மையின் அடையாளமாகவும் பார்க்கப்படுவது ஆணாதிக்கத்தின் உச்சம்.

    ஆறாம் வகுப்பு  படிக்கும் போது பூ வரைந்த கைக்குட்டையை வைத்திருந்த  ராமஜெயத்தை எல்லாரும் அழும்  வரை கேலி செய்தது எனக்கு இன்னும் நினைவிலுள்ளது. எனக்கும் அந்தக் கைக்குட்டை ரொம்பப் பிடித்திருந்தது. ஆனால் அதை வெளியே சொல்ல  இயலவில்லை. நண்பர்கள் என்னை  ஒதுக்கி வைத்திடுவார்களோ  என்ற பயம்.வீட்டிலும் ஒரு  நாள் பூ போட்ட புடவையை  முகர்ந்து பார்த்ததற்கு அம்மா சூடு போட்ட அந்த தழும்பு இன்னும் என்  வலது துடையை உறுத்திக்கிட்டிருக்கு. அதனால் எனக்கு பிடித்த பல விடயங்களை வெளியே சொல்லாமல்  ஆசையை மனதில் வைத்தே பூட்டிக் கொண்டேன்…

    சிறு வயதிலிருந்தே எனக்கும் கைகுட்டைக்கும் முரண்பட்ட ராசி. ஒவ்வொரு  முறையும் நான் கைக்குட்டையை தொலைத்துவிட்டு வந்து நிற்கும் போது  விளக்குமாற்றில்  அடி விழும். கீழே சிதறி விழும் குச்சிகளை மீண்டும் எடுத்து  சொருவி மறுபடியும் அம்மா அடிப்பாள். என்னை அடிக்கிறதுக்கு அவளுக்கு  ஏதாவதொரு காரணம் வேண்டும்.

    “ஒரு கைக்குட்டையை தொலச்சதற்க்கா இப்படி போட்டு அடிக்குற”, வினவிய பக்கத்து வீட்டு அத்தையை அம்மா பார்வையாலேயே வெட்டினாள்.

    “எம் புள்ளைய தான அடிக்கிறேன் …நீ யாருடி சக்காளத்தி !” அம்மா எல்லாரையும் இப்படிதான் தரைக்குறைவாக பேசுவாள். அதனாலேயே யாரும் மத்தியஸ்தத்திற்கு வரமாட்டார்கள்.

    ஒவ்வொரு முறையும் கைக்குட்டையை தொலைத்து விட்டு நான்  ‘தேமே’ என்று அம்மா முன்னாடி வந்து நிக்கும் போதெல்லாம், அம்மா சாமியாட தொடங்கிவிடுவாள்.

    அம்மா அடிக்கும்போது  அவள் கண்கள் சிவந்து, முகம் சிடு சிடுவென்று  இருக்கும். எதுவும் பேசமாட்டாள். என்றாவது கோபம் உச்சத்தை அடையும் போது, வெறிபிடித்தவள் போல் கத்துவாள். என்னை அடிக்கும் போது அவள் உடம்பு குளிர் ஜுரம் வந்தது போல் நடுங்கும்.மூச்சு இறைக்கும். ஆனாலும் முயன்று என்னை அடிப்பாள்.

    “ஏன்டா உன் புத்தி இப்படி போகுது…பொருள தொலைச்சதற்கு பேயாடுறேன்னு சொல்ற முண்டைகளுக்கு என்ன தெரியும்,என் கவலை… !!!! “ ஒவ்வொரு முறையும் இதை சொல்லிடும் போது அவள் கண்கள் கலங்கிடும்.

    “……..பொட்ட புத்தி உனக்கெதுக்கு டா !” அப்போது தான் எனக்கு விளங்கிற்று. நேற்று மொட்டைமாடியில் உலர்ந்துக் கொண்டிருந்த என் அக்காவின் சிகப்பு தாவணியை நான் நிரடிக்கொண்டிருந்ததை அம்மா பார்த்துவிட்டிருக்கிறாள்.

    பெரும்பாலும்  அம்மா எதற்காக அடிக்கிறாள்  என்ற காரணம் மறந்து போய்விட்டிருக்கும். ஏதேதோ காரணங்களுக்காக அடிப்பதாலும், எந்த காரணங்களுக்காக அடித்தாலும் அடியும் வலியும் ஒரே மாதிரிதான் இருக்கும் என்பதாலும், நானும் காரணங்களை நினைவில் வைத்துக் கொள்வதில்லை.

    “ஆண் பிள்ளைடா நீ …”என்று கூறி விட்டு மீண்டும் கலங்குவாள். கலங்கும் அவள் கண்களை காண தாளாமல் நான் அவள் கால்களை கட்டிக் கொள்வேன்.

    “இனிமே இப்படி செய்ய மாட்டேன்மா ! நீ அழாத !”.

    நான் என்ன தப்பு  செய்தேனென்று  எனக்கு விளங்காது. ஆனால் எங்க அம்மாவை ஆசுவாசப் படுத்த அப்படி சொல்லிவிடுவது வழக்கம். ஓரிரு நாட்களுக்குப் பின் எல்லாம் மறந்துவிடும். அக்காவின் தாவணியை எடுத்து உடலில் சுற்றிக் கொள்வேன். மறுபடியும் விளக்குமாறு குச்சிகள் சிதறும்.

    அப்போதெனக்கு  பத்து வயதுதான் இருக்கும். நான் செய்வது தப்பென்று  எனக்கு தோன்றியதே இல்லை. ஆண்கள் மாதிரி சட்டை போடுற  பெண்களை நான் பார்த்திருக்கிறேன். எங்க பக்கத்துக்கு வீட்டு அக்கா எப்பவும் சட்டை பேன்ட் தான் போடும். ஆனால்  நான் புடவையை உற்றுப் பார்த்தாலே அம்மாவுக்கு கோபம் வந்திடும்.

    “திருட்டுப் புத்தி வேறயா ?” மீண்டும் ஒருநாள் அம்மா சாமியாடினாள். இப்போது திருட்டுப் பட்டத்தையும் கொடுத்துவிட்டாள். அக்காவின் பூ போட்ட கைக்குட்டை என் பைக்குள் இருந்ததற்காக அம்மா சொல்லி சொல்லி அடித்தாள் “இது எப்படிடா உன் பையில வந்துது..குடிய கெடுக்கனே பொறந்திருக்கியா ! கோடரிக் காம்பே…”

    அந்த கைக்குட்டை எப்படி என் பைக்குள் வந்தது என்பது எனக்கும் விளங்கவில்லை. ஒரு வேளை நான் தான் பையினுள் வைத்திருப்பேன். அப்போதெல்லாம்  ரயிலில் பத்து ரூபாய்க்கு மூன்று என பல வகையான   கைக்குட்டைகள் விற்கப்படும். அம்மா பெரும்பாலும் அதைத்தான் வாங்கித் தருவாள், எனக்கு கட்டம் போட்ட கைக்குட்டைகள், அக்காவிற்கு பூ வரைந்த கைக்குட்டைகள்.

    இருதினங்களுக்குமுன் அக்காவிற்கு கைக்குட்டை வாங்கிவந்தாள். அம்மாவிற்குத்  தெரியாமல் நான் எடுத்து  வைத்துக் கொண்டேன். எடுத்து  வைத்திருக்கலாம்… புடைவைகள், பூ வரைந்த கைக்குட்டைகள், தாவணிகள் போன்றவற்றை பார்த்தால் என் மனம் கட்டுப்பாட்டை இழந்து விடும். நடப்பது எதுவும் பெரும்பாலும் ஞாபகம் இராது. யாருக்கும் தெரியாமல் என் பையில் திருடி வைத்துக் கொள்வேன், ஓரிரு நாட்களுக்குபின் மீண்டும் அதே இடத்தில் வைத்துவிடுவேன்.

    அன்று என் அம்மா  அக்காவின் கைக்குட்டையை திருடியதற்காக சாடும் போது சிரிப்புதான் வந்தது. ஒரு  நாள் அவள் மாங்காடு கோவிலுக்கு சென்றிருத்த போது, வீட்டிலிருந்த நான் அவளின் பழைய புடவையை எடுத்து சுற்றிக் கொண்டேன்.அது அவளுக்கு இன்னும் தெரியாது. தெரிந்திருந்தால் என்னை அடித்தே கொன்றிருப்பாள். ஆனால் இன்று வெறும் கைகுட்டைக்காக அடிக்கிறாள்.

    அம்மா ரொம்ப  நல்லவள், என்னை அடித்தாலும்…

    பெரும்பாலும்  பிச்சைக்காரிகளுக்கு கொடுப்பதற்காகவே  தன் பழைய புடவைகளை எடுத்து  மூட்டைக் கட்டி வைத்திருப்பாள்.அவள் இல்லாத போது அதிலிருந்து  சில புடவைகளை எடுத்து ஒளித்து  வைத்துக் கொள்வேன். நிறைய  புடவைகள் இருப்பதால் அவளால் புடவை தொலைந்து போவதை கண்டு பிடிக்க இயலாது. யாரும் இல்லாத இடங்களில் அந்தப் புடவை என் தோளைத் தழுவும். பின் சாக்கடையில் நழுவும். பெரும்பாலும் யாரும் தென்படாத அந்த சுடுகாடு மண்டபத்தில்தான் நான் புடவையைப் பதுக்குவது, நெருடுவது, தோளில்சுற்றிக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவேன் .

    என் தனிமையின்  பின்னால் ஒளிந்திருக்கும்  ரகசியங்களை  அம்மா எப்படியோ கண்டு கொண்டுவிட்டாள்.. அதன் பின் நான் பெரும்பாலும் தனியாக எங்கேயும் சென்றதில்லை. அம்மாவின் கழுகுப் பார்வையிலேயே என் வாழ்க்கை நகரத் தொடங்கியது. சாமி படத்திற்கு பூ நான் தான் வாங்கி வருவேன். அதற்கும் தடை வந்து விட்டது.அம்மா தன் தலையில் பூ வைப்பதைக் கூட நிறுத்திவிட்டாள்…

    நான் செய்வது  சரியா தவறா என்று தெரியாத  குழப்பத்தில் தான் என் வாழ்க்கை நகரத் தொடங்கியது. சரி-தவறென்று  பகுத்துச் சொல்ல வேண்டிய அப்பாவும் என்னுடன் இல்லை. என் அப்பாவை இது வரை நான் இரண்டு முறை தான் பார்த்திருக்கிறேன். என் அம்மா அவரின் புகைப்படத்தை எடுத்து வைத்துக் கொண்டு பார்க்கும் போதெல்லாம் நானும் பார்ப்பதால் அவர் முகம் எனக்கு மறக்கவில்லை.அவர் துபாய் சென்று பல வருடங்களாகிறது. நான்கைந்து வருடத்திற்கு ஒரு முறைதான் வீடு வருவார். கடைசியாக மூன்றாம் வகுப்பு படிக்கும் போது பார்த்ததாக ஞாபகம். நான் வளர்ந்ததெல்லாம் என் தாய், தமக்கை அரவணைப்பில்தான்.

    முழு ஆண்டு  விடுமுறையில் என் சித்தி வீட்டில் கொண்டு விட்டுவிடுவாள் அம்மா. அங்கு சித்தியும், அவளின் பெண் மட்டும்தான் . என் சித்தப்பா நான் பிறப்பதற்கு முன்னே இறந்து விட்டார். என் சித்தி பெண் என்னைவிட வயதில் மூத்தவள். அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும், என் உடன் பிறந்த தமக்கையை விட. எப்போது நான் சித்தி வீட்டுக்கு போனாலும் அவளோடும் அவள் தோழிகளுடனும் தான் விளையாடிக் கொண்டிருப்பேன். என்னை அவள் தன் அனைத்து  தோழிகளிடமும் அறிமுகப் படுத்தி வைப்பாள். எல்லாரும் என்னை ‘தம்பி’ ‘தம்பி’ என்று செல்லமாக அழைப்பார்கள். அங்கேயே இருந்துவிடலாம் என எண்ணும் போது, அம்மா வந்துவிடுவாள், விடுமுறை முடிந்ததால் அழைத்து செல்வதற்காக.. வாழ்க்கையின் அழகான தருணங்கள் மிக வேகமாக கரைந்து விடுகின்றன… மீண்டும் விடுமுறையை எதிர்பார்த்து நான் வீட்டில் காத்துக் கொண்டிருப்பேன்…

    “இந்த வருஷம் சித்தி வீட்டுக்கு போகல !” அம்மா கூறியவுடனே தூக்கி வாரிப் போட்டது.

    “அப்பா வறார்டா….!”

    எனக்கு எந்த சந்தோசமும் ஏற்படவில்லை. ‘அடுத்த வருஷம் வர வேண்டியவர் ஏன் இப்பவே வராரு’ என்றே தோன்றியது.

    அம்மா ஏதோ வத்தி  வைத்திருக்கிறாள். ஒரு வேலை என் நடவடிக்கைகளைப் பற்றி  சொல்லி இருக்கலாம்.  பூமியே இருண்ட மாதிரி ஒரு மாயை. நான் செய்வதைப் பகுத்துப் பார்த்தறிய எனக்கு அந்த பத்து வயதில் விளங்கவில்லை. அம்மாவும் அக்காவும்தான் நான் செய்வது தப்பென்பார்கள். அப்பாவின் வருகையினால் சித்தி வீட்டு பயணம் தடைப்பட்டு விட்டது என்றதும் அப்பாவின் மீது வெறுப்பு தான் மிஞ்சியது .

    அப்பா நிறைய பரிசுப் பொருட்கள் வாங்கி வந்திருந்தார். ‘உனக்குதான்டா’ என்றவாறே அவர் கொடுத்த அந்த பையை திறந்ததும், என்னால் என் சந்தோசத்தை அடக்கிக் கொள்ள இயலவில்லை. கலங்கிய கண்களுடன் அப்பாவைப் பார்த்தேன், அந்தப் பையினுள் இருந்த சுடிதாரை வெளியே எடுத்தவாறே.

    “பை மாறி போச்சா ! அக்காகிட்ட கொடு…உன் பை இங்கிருக்கு ”
    பின் அவர் கொடுத்த எந்த பொருட்களும் என்னைக் கவரவில்லை . என் கவனம் முழுக்க அக்காவிற்கு வாங்கிய அந்த நீல நிறச் சுடிதாரிலேயே இருந்தது….

    அப்பா எதற்காக  வந்திருக்கிறார் என்றெனக்கு விளங்கவில்லை. அடிக்கடி அம்மாவும்  அப்பாவும் ஏதோ ரகசியம்  பேசிக் கொண்டனர். நான் அறையினுள்  நுழைந்தால்,பேச்சை நிறுத்திவிடுவார்கள். ஆனால் அப்பா என்னிடம் சகஜமாகத்தான் பழகினார். பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார். நிறைய பொருட்கள் வாங்கித் தந்தார். எங்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்துக் கொண்டிருப்பது கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்தது.

    அம்மா மலிவு  விலை கைக்குட்டைகளை வாங்குவதைக்  கண்டு அப்பா கடிந்துரைத்தார். “உடம்ப தொடுற எந்தப் பொருளும் நல்ல ரகமா இருக்கணும்” அப்பா  சொல்லிக்கொண்டே இருப்பார். என்னை அறியாமலேயே என்மனதில்  அவர் வார்த்தைகள் பதிந்து  விட்டது. இன்று வரை எந்தப் பொருள் வாங்கினாலும் அப்பாவின்  வார்த்தைகளை பின்பற்றுவதன்  விளைவே பிராண்டட் கைகுட்டைகளுக்காக நான் பல ஆயிரங்கள் இறைக்கிறேன்….

    “அக்கா கல்யாணம்டா….” இதற்கு தான் அப்பா வந்திருக்கிறார், கல்யாணம் முடிந்தவுடன் கிளம்பிவிடுவார் என்று நான் நினைத்துக் கொண்டேன். அதை உணர்ந்ததினாலோ என்னவோ ஏதோ சொல்ல வந்த என் தந்தை பேச்சை நிறுத்திக் கொண்டார்.

    அடுத்த ஒரு  மாதத்தில் எங்கள் வீடு திருவிழாக் கோலம் பூண்டது. வேக வேகமாக கல்யாண ஏற்பாடுகள் நடந்தது. தினம் தினம் விருந்தாளிகள்  வீட்டை நிரப்பிக் கொண்டிருந்தனர். பக்கத்துக்கு தெருவில் ஒரு  லாட்ஜில் விருந்தினர்களுக்கு ரூம் போடப்பட்டிருந்தது. வரும் விருந்தாளிகளை லாட்ஜிற்கு  அழைத்து செல்வதே என் வேலை. எத்தனை வகையான மனிதர்கள் ! வகை வகையான ஆடை  அலங்காரங்கள் ! எங்கள் குடும்பம் இவ்வளவு பெரியது என இது நாள் வரை தெரியாது. அம்மா யாருடனும் ஓட்டமாட்டாள் என்பது விருந்தாளிகளாக வந்த பல பாட்டிமார்கள் சொல்லியே எனக்கு தெரிந்தது. என் வயது பையன்கள் நிறையப் பேர் வந்திருந்தனர். நாங்கள் அனைவரும் தெருவில் கிரிக்கெட் விளையாடுவோம். இரவில் கூட தெரு விளக்கின் துணையோடு கிரிக்கெட் கலைகட்டி கொண்டிருக்கும். இதுநாள் வரை இவர்களை அறிமுகம் கூட செய்து வைக்காத அம்மாவை எண்ணி நான் உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்தேன்.

    ஊரிலிருந்து சித்தி தன் மகளுடன் வந்துவிட்டாள். நான் கிரிக்கெட்டில் நேரம்  செலவழித்ததால் என் சித்தி பெண்ணிடம் அதிகம் ஒட்டவில்லை.அவளிடம்  நான் திடீரென ஒட்டாமல் போனதை  அவள் ஒரு பெரிய அதிசயம்  போல் தன் தோழிகளிடம் விவரித்துக்  கொண்டிருந்தாள்.

    “என் தம்பிய பாத்தீங்களா…பெரிய மனுஷன்…நம்ம யாருகிட்டயும் பேசமாட்றான்”
    தோழிகள், அவர்கள் காதுகளுக்குள் ஏதோ பேசி சிரித்துக் கொள்வார்கள். என்னை கேலி செய்கிறார்கள் என தெரிந்ததும் நான் என் உடன்பிறந்த அக்காவிடம் போய் சொல்லுவேன்.அவளும் எனக்காக மத்துசம் வாங்கிட வந்திடுவாள்…

    “ஏண்டி கல்யாணப் பொண்ணே ! நீ உன் வேலைய பார்த்துகிட்டு போ…உன் தம்பிக்கு பத்து வயசுதான்…ஆனா.. ” நிறுத்திவிட்டு மீண்டும் என் தமக்கையின் காதில் ஏதோ சொல்லிட்டாள் என் சித்தி மகள். இப்போது எல்லாரும் என்னை நோக்கி சிரித்தார்கள், என் உடன் பிறந்தவள் உட்பட…

    அக்காவின் கல்யாண வைபவத்தோடு சேர்த்து கேலிகளும்  கூத்துகளும் முடிவுக்கு வந்துவிட்டன. அக்கா புகுந்த  வீட்டிற்க்கு சென்று விட்டாள். வீட்டிற்க்கு வந்த விருந்தாளிகளும்  ஒவ்வாருவராக சென்றுவிட்டனர். இறுதியாக சென்றார்கள் என்  சித்தியும் அவளின் மகளும்.

    “அடுத்தது இவளுக்குதான்டி.இப்பவே பைய்யன் தேட ஆரம்பிச்சாதான் இன்னும் ரெண்டு வருசத்துல முடியும்…அவரு திரும்பி துபாய் போகல…ஏதோ வியாபாரம் செய்றதா சொன்னாரு. அதனால அவரே எல்லாம் முன்னாடி நின்னு செஞ்சு வைப்பார்…நீ நல்ல பைய்யனா பார்த்து சொல்லு…” வாசலில் நின்று கொண்டே அம்மா சித்தியிடம் மனப்பாடம் செய்தவள் போல் ஒப்புவித்தாள்.

    வெட்கத்துடன்  சித்தி மகள் “போயிட்டு வறேன் பெரியம்மா!” என்றவாறே என்னை பார்த்து குறும்பாக கண் சிமிட்டினாள்.

    “மொட்டை பைய்ன் மாதிரி ஆடாத…வீட்ல அடக்கமா இரு.“ அம்மா அக்காவின் தோளில் தட்டியவாறே  கூறினாள்.சித்தியும் அவள் மகளும் வாசலில் இறங்கி நடந்தார்கள். ஆட்டோ பிடித்துக் கொண்டு வந்த அப்பா அவர்களை  பஸ் ஏற்றி விடுவதற்காக உடன் சென்றார்.

    ஆட்டோ மறையும்  வரை கலங்கிய கண்களுடன்  நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.மணமாகிப் போய்விட்டாள். நெருடுவதற்க்கு அவள் தாவணி இனி இருக்காது. சித்தியின் மகளும் விரைவில் மணமாகி போய்விடுவாள். அப்பா  மீண்டும் வெளிநாடு போக போவதில்லை. ஏதோ மிகப் பெரிய சதி  என்னை சுற்றி நடந்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை மீண்டும் மீண்டும் இருள்கிறது. மருள்கிறது,  ஆட்டோவின் சக்கரத்தோடு சேர்ந்து சுழன்றன எண்ணங்கள். கலங்கின கண்கள். ஆட்டோ மறையும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆட்டோவின் பின் எழுதி இருந்தது, ‘எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்க்கு’ நான் எதையோ இழந்துக் கொண்டிருக்கிறேன். எது என்றுதான் விளங்கவில்லை……

    அப்பா முன்னொருநாள் சொல்லாமல் தவிர்த்ததை அன்று  சொன்னார்,நிச்சயம் அம்மா உண்மைகளை ஓதி விட்டிருக்கிறாள். ”நான் துபாய்க்கு போகல. அம்மாக்கும் உடம்பு சரிபடல. அதனால உன்னை ஹாஸ்டெல்ல சேர்ந்த்துவிடலாம்னு இருக்கேன். நல்ல ஸ்கூல்டா. நிச்சயம் நீ பெரிய டாக்டரா இஞ்சினீயரா வரலாம். “

    டாக்டரும் இஞ்சினீயருமே வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் படிப்புகள் என நம்பும் இந்த மூட நாட்டில்,என் தந்தை ஒன்றும் விதிவிலக்கல்ல, அவரும் மற்றவர்களை போல என்னை இஞ்சினீயராக, டாக்டராக உருவாக்கிப்  பாக்க வேண்டும் என ஆசைப்பட்டார். என்னை முதல் நாள் அப்பா ஹாஸ்டலில் கொண்டு விடும் போது,வாங்கிய காசுக்கு அங்கிருந்தவர்கள் சொன்னார்கள், “நிச்சயம் இவனை பன்னிரண்டாவது வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்க வைக்குறோம்”

    எனக்கு கண்கள் மீதும் இருட்டியது. நான் அப்போதுதான்  ஆறாம் வகுப்பு போக வேண்டும். அதற்குள் என் பன்னிரெண்டாம்  வகுப்பும் பிற்கால வாழ்க்கையும் நிர்ணயிக்கப்படுகிறது.

    “மாதம் ஒரு முறை நீங்க வந்து  பார்க்கலாம், வருடா வருடம் முழு ஆண்டு விடுமுறையில் 15 நாள் அவனைக் கூட்டி போய் வச்சுக்கலாம்” இன்னும் ஏதேதோ எழுதியிருந்தது அந்த தாளில். அப்பா உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்தார்.

    “அப்பா எங்கயாவது போலாம்பா “ அப்பா எதுவும் பேசவில்லை. உடனே என்னை வெளியில் அழைத்து சென்றார். நான் அழுது கொண்டே இருந்தேன். அப்பா என்னை ஆசுவாசப் படுத்த முயற்சித்தும் பயனில்லை.  திடீரென்று அங்கு அமைதி குடிகொண்டது. நான் அழுகையை நிறுத்தியதற்கான காரணத்தை அப்பா கண்டுகொண்டார். அவருக்கு இந்நேரம் என்னைப் பற்றி எல்லாம் தெரிந்திருக்கும். உபயம்:அம்மா.நான் தெருவில் ஒருவன் விற்றுக் கொண்டிருந்த கைக்குட்டைகளை உற்று நோக்கிக் கொண்டிருந்தேன்.

    “என் கூட வா” அப்பா வேகமாக ஒரு பெரிய துணிக் கடையினுள் என்னை அழைத்துச்சென்றார். எதிர்பாராத விடயங்கள் எதிர்பாராத
    சமயத்தில் எதிர்பாராத மனிதர்களால் நிறைவேற்றிவைக்கப்பட்டு
    விடுகிறது.பரந்த இவ்வுலகத்தில்
    சந்தோசங்கள் சிறுசிறு விடயங்களிலும் ஒளிந்திருக்கிறது…

    கடையை விட்டு நான் மலர்ந்த முகத்துடன் இறங்கினேன். அப்பாவின் முகமும்  மலர்ந்திருந்தது. அப்பாவின்  மீது பாசம் கூடிவிட்டது  எனவும் சொல்லலாம். அன்று  முழுக்க பல இடங்களுக்கு  அழைத்துச் சென்றார். எதிலும்  எனக்கு நாட்டமில்லை. என்  கவனம் முழுக்க அப்பா  வாங்கி தந்த அந்த பூ வரைந்த வெள்ளைக் கைக்குட்டையில் பதிந்திருந்தது..

    ஹாஸ்டலில் கொண்டு விடும் போது கைக்குட்டையை அப்பா வாங்கி வைத்துக் கொண்டார்.என்னால்  எதுவும் பேச இயலவில்லை. அப்பா என் தலையை கோதியவாறே  சொன்னார், “நல்லா படிக்கணும், எது நல்லது எது கெட்டதுனு உனக்கே தெரியும்.”

    அப்பா எதைக்  கெட்டதென்கிறார்….! சமுதாயம் வரையறுத்த கவைக்குதவா சட்டங்கங்களை கேள்விக் கேட்காமல் பின்பற்றுபவர்கள் நல்லவர்கள். அதில் சற்றே  பிறழ்ந்தாலும் ஒட்டுமொத்த சமுதாயமும் ஏசிடும். ஊரோடு  ஒத்து வாழ் என்பதே அப்பா  சொல்ல வந்தது.

    போவதற்கு  முன் ஹாஸ்டல் வார்டனிடம் அப்பா வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். இந்தியாவை  வல்லரசாக்குவதைப் பற்றியா  பேசியிருக்கப் போகிறார்கள் ! என்னை பற்றித்தான் பேசியிருப்பார்கள். ஹாஸ்டல் வார்டனும் என்னை  இரண்டு முறை திரும்பிப் பார்த்தது  எனக்கு என்னவோ போல் இருந்தது. இவர்கள் எல்லாரும் சேர்ந்து நான் செய்யாத தவறுக்கு என் மனதில் குற்ற உணர்ச்சியை ஏற்ப்படுத்தப் பார்க்கிறார்கள். அதில் அவர்கள் வெற்றியும் பெற்று விட்டார்கள்.

    அதனால் தான் பள்ளியை முடிக்கும்வரை  என் ஆசைகளை கட்டுப்படுத்திக் கொண்டேன், நான் தங்கியது ஆண் விடுதி என்பதால் நெருடுவதற்க்கு புடவைகளும் கிட்டவில்லை. என் நண்பர்கள் புடை சூழ வலம் வந்ததால் எனக்கும் புடவைகள் இன்னபிற இத்யாதிகள் மீது ஆர்வம் போய்விட்டதாகவே எண்ணினேன்……

    ஆனால் கல்லூரி  வந்தபின் சக மாணவிகளின் ஆடைகளைப் பார்க்கும் போது என் உடலுக்குள்ளும் மூளைக்குள்ளும் மீண்டும் மணியடிக்கத் தொடங்கியது. பெண்களின்  சகவாசமேயின்றி பள்ளிப்  படிப்பு முடிந்ததால் எனக்குள் ஒரு  கூச்ச சுபாவம் குடிகொண்டுவிட்டது. அதனால் கல்லூரியில் நான் எந்த பெண்ணிடமும் பேச முயற்சித்ததில்லை.ஆனால் நீல நிற சுடிதார்கள் மீது எப்போதும் என் கண் படரும். அப்படி நின்று அந்த பெண்களின் ஆடைகளை பார்த்துக்கொண்டிருப்பேன் நான் அவ்வாறு வெறித்துப் பார்ப்பதைக்கண்டு, தங்கள் அழகில் மயங்கித்தான் நான் சொக்கி நிற்கிறேன் என்றெண்ணி உள்ளுக்குள் குளிர்ந்த அதிரூபசுந்தரிகள் என் கல்லூரியில் நிறைய உண்டு…

    கல்லூரியிலும் விடுதி வாழ்க்கைதான். எப்போதாவது வீட்டிற்குச் சென்றால், அம்மா சில நேரங்களில் சந்தேகத்துடன் பார்த்தது இன்னும் நினைவிருக்கிறது.

    “நான் இப்பெல்லாம் அப்படி இல்லைமா ” என்னை அறிமாலேயே ஒரு நாள் என் தாயிடம் சொன்னேன்.

    “இன்னும் உன்னால சுதார்ப்பா இருக்க முடியல இல்லை”, சிடுசிடுத்தாள் அம்மா. ஆம். கல்லூரியிலும் என்னால் கைக்குட்டைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள இயலவில்லை. எல்லாம் விலையுயர்ந்த கைக்குட்டைகள்.எத்தனை கைக்குட்டைகள் வாங்கினாலும் இரண்டு நாட்களில் தொலைத்துவிடுவேன்.அம்மா காத்து கருப்பின் வேலையோ என எண்ணி கோவிலுக்கெல்லாம் அழைத்துச் சென்று மந்திரித்து விட்டிருக்கிறாள். எதுவும் பயன் தரவில்லை. இன்று வரை கைக்குட்டைகளை தொலைக்கும் பணியினை நான் செவ்வென செய்துவருகிறேன்.இன்று என் சுய சம்பாத்தியத்தில் வாங்கும் கைகுட்டைகளும் என்னிடம் நிலைப்பதில்லை.

    பிராண்டட் கைக்குட்டைகள் மீது ஒரு வகையான  மோகம் படர்ந்திருப்பதால் ஒவ்வொருவாரமும் பல நூறுகள் செலவு செய்து
    கைக்குட்டைகள் வாங்கிடுவேன்.
    ஓரிரு நாளில் தொலைத்தும் விடுவேன் ….

    அம்மா ஒரு முறை சொன்னது நன்றாக நினைவில் உள்ளது,
    ” நீ வேணும்னே தான்  தொலைச்சுட்டு வந்து நிக்கிற….”.
    நானும் அன்று பல்லை
    இளித்துக்கொண்டு நின்றிருந்தேன். ஒரு வேளை அம்மா சொன்னது உண்மையாக இருக்கலாம். நான் என் பாக்கெட்டில் கைக்குட்டை வைப்பது வரை நினைவிருக்கும். பின் தேடும்போது கைக்குட்டை அங்கிருக்காது. கைக்குட்டை எங்காவது விழுந்திருக்கலாம். பறந்திருக்கலாம். இல்லையேல் நானே தூக்கி எறிந்திருக்கலாம். பிடிக்காத பொருளை ஏன் வைத்திருக்கனுமென்று நான் எண்ணியிருக்கலாம். எதுவும் சரியாக நினைவிலிராது.

    ஒரு பொருள் பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்கும் காரணங்கள் தேவையில்லை. ஆனால்  அடுத்தவருக்கு இன்னது தான் பிடிக்க வேண்டும் என கட்டாயப் படுத்தும்போது காரணங்கள்  நிச்சயம் தேவை . பூ வரைந்த கைக்குட்டைகள்  எனக்குப் பிடிக்கும். அது எனக்கு பிடிக்கும் என்பது என்னை  சூழ்ந்தோருக்கு பிடிக்கவில்லை. எனக்கு ஏன் பிடிக்கும் என்பதற்கு  காரணங்கள் தேவையில்லை. ஆனால்  அதை நான் ஏன் வைத்துக் கொள்ளகூடாது என்பதற்கு  இச்சமுகம் காரணம் சொல்ல  முன்வரவில்லை. அவர்களைப் பொறுத்த  வரையில் பூ பெண்மை சார்ந்தது. என்னை பொறுத்த வரை பெண்மை, பெண்ணை மட்டும் சார்ந்ததன்று. இதை என்னால் தர்க்கம் செய்திடமுடியும். ஆனால் செய்திட திராணியில்லை. உலகம் என்னை விசித்திரமாகப் பார்த்துவிடுமோ என்றொரு விசித்திரமான உணர்ச்சி, குற்ற உணர்ச்சி, என்னுள் விதைக்கப் பட்டுவிட்டது. விசித்திரமாகப் பார்த்தால் என்ன !

    சம்பாதிக்க  தொடங்கிய,பின் ஒரு முறை அந்த எண்ணத்தோடுதான் கடையில்  சென்று பூ வரைந்த கைக்குட்டை வாங்கினேன்.
    “சார்! இது உங்களுக்கா !” ஆச்சர்யத்துடன் வினவினான் கல்லாவில் அமர்ந்திருந்தவன். நான் எதுவும் பேசமால் நின்று கொண்டிருந்தேன்.
    “இல்ல சார். பூ போட்டு இருக்கே அதான் !” மீண்டும் சற்று ஏளனமாக வினவினான் அவன்.
    “ஓ! மாறி போச்சா…வேற எடுத்திட்டு வரேன் “என்று நான் வேகமாக உள்ளே சென்றேன். பின் வேறொரு கைக்குட்டையை, உலக மொழியில் சொல்லவேண்டுமெனில், ஆண்கள் பயன்படுத்தும் கைக்குட்டையை வாங்கிவந்தேன்.
    நான் நினைத்திருந்தால்,அது எனக்கு தான் என்று தைரியமாக சொல்லியிருக்கலாம். இல்லை என் தமக்கைக்கு என்று பொய் சொல்லிருக்கலாம். ஆனால் எதுவும் செய்யவில்லை. செய்ய முடியவில்லை. அவனும் ஏன் அப்படி வினவினான் என்று எனக்கு விளங்கவில்லை. என்னைப் பார்த்தவுடேனே ஏதாவது கண்டுகொண்டு விட்டானா? அவனின் ஏளனப் பார்வை நான் ஏதோ தவறு செய்துவிட்டதாக எண்ண வைத்தது. நான் என்ன தவறு செய்துவிட்டேன் !

    பெண்மையை போற்றுவோம் எனக்கூறும் சமுதாயம் ஆண்களிடத்தில்  பெண்மை இருந்தால் ஏன் ஏற்றுக்  கொள்வதில்லை? நான் அவ்வாறு கேள்வி கேட்பதே   தவறோ ! ஆண்மை பெண்மை என பாகுபாடுகள் எவ்வாறு வந்தது. ஆண்மையின் குணங்கள் இவை, பெண்மையின் குணங்கள் இவை என வரையறுத்தது யார் ! வரையறுக்கும் உரிமையை அவர்களுக்கு யார் வழங்கியது. பெண்மையும் பெண்ணியமும் வெவ்வேறோ ! ஆண் போல் வாழ்வதே பெண்ணியம் என ஏன் பெண்ணியம் பேசும் பெரும்பாலானோர் கருதுகின்றனர்  ! அப்படியெனில் பெண்மைக்கான அடையாளம் எது ! ஆண்மைக்கான அடையாளம் எது ! அடையாளங்களை அடையாளப்படுத்த யாரால் முடியும். !
    தாய்மை பெண்மையின் அடையாளமெனில், தாய்மை ஒரு உணர்வெனில், ஆணாலும் தாய்மை உணர்வை வெளிப்படுத்த இயலுமெனில், ஆணினுள்ளும் பெண்மை இருக்கு என்றுதானே அர்த்தமாகிறது. அவ்வாறெனில் ஆணும் இங்கு பெண்ணாகிப் போகிறான். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள். பெண்மையின் அடையாளங்களை துறப்பதே பெண்ணியம் என ஆண்கள் பெண்கள் உட்பட பலரும் ஏன் கருதுகிறார்கள்? பெண்ணியம் என்பது சமுக உரிமை சார்ந்த விடயமாயிற்றே ! அதை ஏன் பெண்மையோடு குழப்புகிறார்கள். பெண்மையை துறப்பதுதான் பெண்ணியமென்று ஏன் கூறுகிறார்கள். பெண்மை துறப்பதெனில் ஆண்மையை தழுவவேண்டும் என்றுதானே அர்த்தப்படுகிறது. அவ்வாறெனில் இங்கு பேசப்படும் பெண்ணியம் ஆணாதிக்கத்தை மறைமுகமாக ஆதிரிக்கின்றதோ !

    பெண்ணியம் பேசும் ஆண்களும், ஆண்களிடத்தில் இருக்கும் பெண்மையை ஏன் வெறுக்கிறார்கள். பெண்ணியம் பெண்மை சார்ந்ததெனில் அவர்கள் (ஆண்கள்) பெண்மையை, அது யாரிடம் இருந்தாலும் ஏற்றுக் கொண்டுதானே ஆகவேண்டும். பெண்ணியத்திற்கும் பெண்மைக்கும் சம்பந்தம் இல்லையெனில், பெண்ணியம் என்பது யாது ! பெண்ணியம் பெண்களின் உரிமை சார்ந்தது என்றால், பெண்மைக்கும் பெண்ணியத்திற்கும் சம்பந்தம் இல்லையென்றால், பெண்மை பெண்களுடையது எனக் கருதும் பெண்ணியவாதிகள் பெண்ணியத்தை பெண்களோடு எவ்வாறு பொருத்துவார்கள் ! அவவாறு பெண்மை என்னும் உணர்வு பொருத்தப்படமால் அகற்றப் படும்போது, எல்லாரும் உணவற்ற ஒரே ஜடநிலையை தானே அடைகிறோம் ! ஜட நிலை உயிர் நிலை ஆகாதே . !

    அப்படியெனில்  எல்லோரும் ஜடமா ! ஜடமில்லையெனில், உணர்வுகள் உண்டெனில், எல்லாவகையான உணர்வுகளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமம்தானே ! அப்போது பெண்மை எனவும் ஆண்மை எனவும் எப்படி பாகுபாடுவருகிறது ! மெல்லிய குணம் பெண்மை, முரட்டு குணம் ஆண்மை என்கிறார்களா ! எத்தனை மென்மையான ஆண்கள் இங்குண்டு. அவர்களெல்லாம் பெண்களா? ஆதிகாலத்தில்-தாய் மண் சமுதாயத்தில்  வேட்டையாடியது பெண்கள்தானே ! அவ்வாறெனில் அவர்கெல்லாம் ஆண்களா ! இப்படி அடிக்கடி மாறிவரும் வரையறைகள் எப்படி நியமாக இருக்க முடியும்? நியாமற்ற வரையறைகளை ஒதுக்கிவிட்டால் ஆண்களும் பெண்களும் ஒன்றுதான் என்று தெளிவாகப் புரிந்துவிடுமே. ஆண்களும் பெண்களும் ஒன்றெனும் பட்சத்தில் இது ஆண்மைக்கான குணம், பெண்மைக்கான குணம் என்ற வாதம் உடைபட்டு போய்விடுகிறது. பாகுபாடுகள் தகர்ந்துவிடுகிறது. ஒரு மனிதனின் குணங்கள் தனிப்பட்ட மனித வாழ்க்கை சார்ந்ததாக மாறிவிடுகிறது. அவ்வாறெனில் தனிப்பட்ட மனிதனின் விருப்பு வெறுப்புகளில் தலையிட சமுதாயத்திற்கு யார் உரிமை அளித்தது ? சேலைகளை சுற்றிக்கொள்வதும், பூ வரைந்த கைக்குட்டைகளை பயன்படுத்துவதும் என் தனிப்பட்ட விடயமாயிற்றே ! இதற்க்கு இந்த உலகம் என்ன பதில் வைத்திருக்கிறது !

    இது போன்று என்னுள் ஆயிரம் கேள்விகள் ஓடும். குறிப்பாக பெண்கள் உடை விற்கும் கடைகளுக்கு சென்றால் பல லட்சம் கேள்விகள் மனதில் எழும். அன்றும் இது போன்று சிந்தித்துக்கொண்டு நிற்கையில்தான் இனிமையான அந்த குரல் கேட்டு திரும்பினேன்.
    “அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க, இந்தப் புடவை எப்படி இருக்குனு பார்த்து சொல்லுங்க ” இனிமையான அந்த குரலுக்கு சொந்தக்காரி என் மனைவி. நான் ஏதோ அவளுக்கு புடவை தேர்ந்தெடுக்கத்தான் ஆவலுடன் ஒவ்வொரு முறையும் கடைக்கு வருகிறேன் என இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறாள் என் அப்பாவி மனைவி . ஒவ்வொரு முறையும் அவள் புடவையை உற்றுப்பார்க்கும் போது, “உங்களுக்கு என் மேல ரொம்பத்தான் ஆசை” என்பாள் வெகுளியாக. இப்போது புடவையை அவள் உடுத்தியிருக்கும்போதே நெருடலாம்.என் மனைவியாயிற்றே !

    “உன் புடவை நல்லாயிருக்கு,எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”ஒவ்வொரு முறையும் நான் சொல்லக் கேட்டு ரசிப்பாள். ஆனால் அதனுள் பொதிந்திருக்கும் உண்மையான உண்மைகளை, நான் சொல்லவந்த அர்த்தங்களை அவளால் புரிந்துக் கொள்ள முடியாது. புரிந்து கொண்டு விட்டால் நிச்சயம் அவளால் என்னோடு நிம்மதியாக வாழமுடியாது.

    பல முறை யோசித்திருக்கிறேன், அவளின் கரங்களை பற்றி என்னைப் பற்றின உண்மைகளை சொல்லிவிடலாமென்று. ஏதோ சொல்லமுடியாத உணர்ச்சி, குற்ற உணர்ச்சி, என்னுள் விதைக்கப்பெற்ற அந்த உணர்ச்சி என்னைத் தடுத்திடும்.

    பில் கவுண்ட்டரில் சொன்னேன், “அந்த நீலக் கலர் புடவை ரொம்ப நல்லாயிருக்கு. வாங்கிக்கோ “

    “ஐ. மீன், உனக்கு ரொம்ப நல்லாயிருக்கும்”

    “ஐம் மூவ்ட். எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்க என் மேல ! லெம்மீ டேக் இட்” என்றவாறே அந்த நீல நிற புடவையையும் வாங்கிக் கொண்டாள்…

    என்னைப் பற்றிய ரகசியங்கள் யாருக்கும் தெரியாது. என் பெற்றோர்கள் என்  தமக்கையின் குடும்பதோடு  வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டனர். அவர்கள் என் ரகசியங்களை மறந்திருப்பார்கள். கால  ஓட்டத்தில் நான் மாறிவிட்டதாகவே அவர்கள் எண்ணுகிறார்கள். நான் என்ன தவறு செய்துவிட்டேன் ! மாற்றிக் கொள்வதற்க்கு…

    என் மனைவியை  பொறுத்த வரையில் நான் ஒரு  உன்னதமான கணவன்.  ரகசியங்களை வெளிப்படுத்தி அந்த உறவினை நான் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ரகசியங்கள் ரகசியமாகவே வைத்துக் கொள்ளப்பட வேண்டும். வெளியே சொல்லிவிட்டால் அது ரகசியமாகாது.என்றாவது ஒரு நாள் என் மனதில் குற்ற உணர்ச்சி எழும், சமுதாயத்தால் விதைக்கப்பட்ட குற்ற உணர்ச்சி. என் மனைவியின் புன்சிரிப்பில் அது மறைந்துவிடும். என்னுள் ரகசியங்களை நான் புதைத்து வைத்திருந்தாலும், நாங்கள் எந்தக் குறையுமின்றி சந்தோசமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நானும் எந்தத் தடங்கலுமின்றி- தடங்களுமின்றி என் மனைவி வீட்டில் இல்லாத சமயங்களில் அந்த நீல நிறப் புடவையை என் மீது சுற்றிக் கொண்டுதான் இருக்கிறேன். பூ வரைந்த கைக்குட்டைகளையும் யாருக்கும் தெரியாமல் பயன்படுதிக் கொண்டுதான் இருக்கிறேன். யாரையும் பாதிக்காத இந்த விடயங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இது ஒரு சிதம்பர ரகசியம். உங்களுக்குள்ளும் ஆயிரம் ரகசியங்களுண்டென்று எனக்குத் தெரியும். அதையும் சிதம்பர ரகசியாமாகவே வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்களை பாதிக்காத எந்த விடயமும் தவறில்லை, தப்பில்லை.அதனால் தைரியமாக உங்கள் ரகசியங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ரகசியங்கள் ரகசியமாகவே வைத்துக் கொள்ளப்பட வேண்டும்….

    இன்னும் சொல்வதற்க்கு நிறைய உண்டு. இப்போது நான் செல்ல வேண்டும், என் மனைவிக்குப் புடவை வாங்குவதற்காக. அப்படியென்று அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள். உங்களுக்குத் தெரியும், நான் யாருக்காக புடவை வாங்கப் போகிறேனென்று…

    Share
  • உங்களுக்கும் வியர்க்கிறதா

     

    தமிழ்த்தேனீ –              

    தொலைக்காட்சிப் நிகழ்ச்சியில் நடிக நடிகையர் நிகழ்ச்சிகள் பார்த்துக் கொண்டிருக்கும் தாய்மார்களே, தகப்பன்மார்களே!  தினசரி, வாராந்தரி, மாதாந்திரப் பத்திரிகைகளில் கிளு கிளு சமாச்சாரங்கள் படித்து மனதைக் கிளுகிளுப்பாக வைத்துக் கொண்டிருக்கும் தாய்மார்களே, தகப்பன்மார்களே!

    ஆங்கிலப் படங்கள் பார்த்து அதில் வரும் கொச்சையான காட்சிகளை , ரசித்துக்கொண்டிருக்கும் தாய்மார்களே ,தகப்பன்மார்களே!  செல்போனில் நண்பர் அனுப்பிய கிளுகிளு தொடுப்பை சொடுக்கி நீலப்படம் பார்த்துக்கொண்டிருக்கும் தாய்மார்களே தகப்பன்மார்களே!

    நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை தோலுரிக்கிறோம் பேர்வழியே என்று கண்டதையெல்லாம் , காணாததையெல்லாம் கிசுகிசுக்களாகப் பரப்பி வரும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையதளங்களில் இனிமை காணும் தாய்மார்களே, தகப்பன்மார்களே!    உங்களுக்கெல்லாம் ஒரு எச்சரிக்கைக் கடிதமாகவே இந்தக் கடிதத்தை வரைகிறேன்.

    உங்களுக்கு பருவ வயதை நெருங்கும் பிள்ளைகள், பெண்கள் இருக்கிறார்களா?  அவர்களை இன்னமும் குழந்தைகள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா.? சற்றே விழிப்புணர்வு பெறுங்கள்!

    பல வருடங்களுக்கு முன் என் தாயார் கூறியது காதில் ஒலிக்கிறது.

    1. பெண்கள் முதல் படியில் கால் வைக்கும் போதே மிகுந்த கவனத்துடன் கவனத்துடன் வைக்க வேண்டும்.
    2. தவறான அணுகு முறையில் கால் வைத்து உருண்டு விட்டால் கடைசீப் படி வரை அவளால் எழவே முடியாது.

    3. அதே போல் ஆணோ பெண்ணோ அடிப்படை தர்மத்தை மறந்து வேறுபாதையில் சென்றால் பலன்கள் மிகவும் விபரீதமாக இருக்கும்

    4. எப்போதும் தன் நிலை தவறாமை இருபாலருக்கும் நன்மை செய்யும்

    மேற்கண்ட வாசகங்களை இப்போதும் கவனத்தில் வைத்திருக்கிறேன்.

    தவறு செய்ய சந்தர்ப்பம் கிடைக்காமையினால் நேர்மையாக இருப்பது பெரிதல்ல . தவறு செய்ய சந்தர்ப்பம் கிடைத்தாலும் தவறு செய்யாதவரே நேர்மையாளர்கள், என்று கூறுவார் என் தாயார்.

    ” தீய வழக்கங்கள் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி பாயும் நீரைப் போன்றது. ஆனால் நேர்மை என்னும் ஒழுக்கம் அதே நீர் பாதாளத்திலிருந்து மலை உச்சியை அடைவதைப் போன்றது. அதற்கு முயற்சி தேவை. கடினமான முயற்சியும் ஒரு விசையும் தேவை. அந்த விசைதான் ஒழுக்கம் , மனோதிடம், என்பார்கள்.”

    இப்போது நடைமுறையில் இருக்கும் காலம் சிறுவர்களுக்கும் ,சிறுமியர்களுக்கும், இளைஞர்களுக்கும் மிகவும் மோசமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு காத்திருக்கும் தாய்மார்களே, தகப்பன்மார்களே சற்றே நினைத்துப் பாருங்கள், எத்தனை மணித் துளிகள் உங்களால் உங்கள் பிள்ளைகளோடு செலவிட முடிகிறது? மிகக் குறைவான நேரமே செலவிடமுடிகிறது என்பதை மனதில் உணருங்கள்.

    அந்தக் குறைவான நேரத்தில் உங்கள் பிள்ளைகளின் எதிர்கால மேன்மைக்கு திட்டமிடுகிறீர்களா? உங்கள் பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேச உங்களால் முடிகிறதா? அல்லது நீங்கள் பேசுவதை உங்கள் பிள்ளைகள் காதில் வாங்குகின்றார்களா? அப்படியே காதில் வாங்கினாலும் கடைப் பிடிக்கிறார்களா? எப்படி அறிந்து கொள்வது இவற்றையெல்லாம் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. இயலாது என்று ஒரு பதிலும் கேட்கிறது.

    நான் காலையில் எழுந்து சமைத்து பள்ளிக்குச் செல்ல பிள்ளைகளுக்கு எடுத்து வைத்து , கணவருக்கு வேண்டியவற்றை செய்து, அவர்களை அனுப்பிவிட்டு மீதமிருக்கும் கடமைகளை முடிக்கவே நேரம் போதவில்லையே என்று வருத்தப் படும் தாய்மார்களே , உங்கள் கஷ்டம் புரிகிறது.

    காலையில் இந்த வாகன நெரிசலில் அலுவலகத்துக்கு சென்று அங்கே கஷ்டப்பட்டு வேலை செய்துவிட்டு களைத்துப் போய்த் திரும்புகிறோம் நாங்கள் என்று கூறும் உங்கள் குரலும் காதில் விழுகிறது தகப்பன்மார்களே , உங்கள் கஷ்டமும் புரிகிறது.  நாங்களும் உங்கள் வயதில் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டுத்தானே உங்களையெல்லாம் வளர்த்து ஆளாக்கினோம்.  ஆனால் இவையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்கள் எப்போதும்.

    ஏனென்றால் முடிவில் உங்கள் பிள்ளை அல்லது பெண் எப்படி வளர்ந்திருக்கிறார்கள் என்னும் முடிவை ஆராயும்போது நல்லவிதமாக வளர்ந்திருந்தால் சரி, மாறாக தீய வழிகளில் கவனம் செலுத்தி வழிமாறியிருந்தால்? இந்த வாதங்கள் அனைத்துமே ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்களாக மாறும் அல்லவா?

    யாரையும் பயமுறுத்துவதற்காக சொல்லவில்லை . உண்மையைச் சொல்கிறேன். உங்கள் பிள்ளைகளைக் கவனியுங்கள்.

    “பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா?
    பேணி வளர்க்க வேணும் தெரியுமா? “    என்று ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.

    எங்கள் வாலிப வயதில் இலைமறை காய்மறைவாக இருந்த அத்துணை விஷயங்களும் அம்பலத்துக்கு வந்துவிட்டது இப்போது. தொலைக்காட்சி, இணையம், செல்போன் .எல்லாவற்றிலுமே விரல் நுனியில் உலகம் என்று எல்லாவற்றையும் பார்க்கும் வசதிகள் பெருகிவிட்டன.

    அதனால் பயமாக இருக்கிறது. சரியான நேரத்தில் முறையாக வழிகாட்டி வளர்க்கப்படும் பிள்ளைகளே எதிர்காலத்தில் சரியான பாதையில் வளர்ந்து நல்லவிதமாக வாழ்வார்கள் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.

    அலுவலகத்துக்கு போகும் மனைவியையோ, கணவரையோ, அல்லது பள்ளிக்கு, கல்லூரிக்கு செல்லும் குழந்தைகளையோ வேவு பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. அப்படி நினைத்தாலும் நம்மால் அது இயலாது ,ஆனால் கண் காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறேன்.

    ஆதரவான, அனுசரணையான, அன்பான கவனிப்பினால் அவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறேன். குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று ஒரு முறையை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் பெரியவர்கள்.

     

    1. ஐந்து வயது வரை இளவரசனாக, அல்லது இளவரசியாக வளர்க்க வேண்டும்.

    2. ஐந்து வயதிலிருந்து 12 வயது வரை அடிமையாக வளர்க்க வேண்டும்

    3. 13 வயது முதல் 19 வயது வரை ராஜ குமாரனாக ,அல்லது ராஜ குமாரியாக வளர்க்க வேண்டும்.
    20 வயதிலிருந்து தோழனாக, தோழியாக பழகவேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

    ஆனால் அப்போது குழந்தைகள் குழந்தைகளாகவே இருந்தார்கள். இப்போது ஐந்து வயதுக் குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற நம்மால் முடியவில்லை. ஆமாம் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி, பொது அறிவு வளர்ச்சி போன்றவை முற்காலத்தைவிட அதிகரித்திருக்கிறது. இளம் வயதிலேயே அதிகம் யோசிக்கிறார்கள்,

    அதிகம் தெரிந்து கொள்கிறார்கள். ஆகவே நாமும் அவர்களுக்கு இணையாக தெரிந்துகொண்டால்தான் அவர்களைக் கையாள முடியும்.  ஆகவே பழைய காலம் போல் வளர்க்க முடியாது என்னும் நடைமுறை தெரிகிறது இருந்தாலும் இன்னமும் அதிக கவனம் எடுத்துக்கொன்டு அவர்களின் கவனம் வேண்டாத தீய வழக்கங்களை நாடாத அளவுக்கு , அவர்களுக்கு புரியவைத்து, அவர்களுடன் கலந்து பேசி , அவர்களை வழிநடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம்.

    இணையத்தில் மேய அவர்களை அனுமதிக்காமல் இருந்தாலோ, செல்போன் போன்ற நவீன கருவிகளை உபயோகிக்க அனுமதி அளிக்காமல் இருந்தாலோ, திரைப்படங்கள் போன்றவற்றை பார்க்க அனுமதிக்காமல் இருந்தாலோ தவிர்த்துவிடலாம் என்னும் குறுகிய மனோபாவத்தை விட்டுவிட்டு.

    எல்லாவற்றுக்கும் அவர்களை அனுமதித்து, அப்படி அனுமதிக்கும்போதே அவற்றிலுள்ள தீயவைகளைச் சுட்டிக் காட்டி அவற்றினால் வரும் கெடுதல்களை எடுத்துச் சொல்லி அவர்களை அதிலிருந்து விலக்கி, இணையம் போன்ற நவீன விஞ்ஞான முன்னேற்றத்தினால் எப்படி நற்பலன்களைப் பெறலாம் என்று அவர்களுக்கு அறிவுறுத்தி அவர்களை முன்னேற்ற வேண்டிய காலத்தில் இருக்கிறோம் நாம்.

    பொதுவாக சைக்கிளை குழந்தை ஓட்டினால் உடனே தாய் ஜாக்கிறதை இங்கேயே ஓட்டு ப்ரதான சாலைக்கு செல்லாதே என்று எச்சரிக்கிறாள், இதற்கு காரணம் குழந்தையின் மேலுள்ள அக்கறை ஒருபுறமென்றாலும் அந்தத் தாய்க்கு இருக்கும் பயம் மற்றொரு காரணம்.

    நம் பயத்தையெல்லாம் அந்தப் பிஞ்சு மனதில் ஏற்றக்கூடாது, அப்படி ப்ரதான சாலையில் சைக்கிள் ஓட்டாவிட்டால் அந்தக் குழந்தைக்கு எப்படி சாலை விதிகள், சாலையில் வண்டியோட்டும் முறை, நெளிவு சுளிவுகள் மனதில் பாடமாகும். ஆகவே அனுமதியுங்கள், ஆனால் பாதுகாப்பான முறையை கற்றுக் கொடுங்கள், அதுதான் வாழ்க்கையில் அவர்களை முன்னேற்றும் கருவி.

    இந்த உலகத்தில் இத்தனை தீமைகள் நிறைந்த உலகத்தில்தானே நம் பிள்ளைகள் வாழவேண்டும்? அப்படியானால் இந்த உலகத்தில் வாழ முறையான ,சரியான வழியை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்நாம். இந்தக் கட்டுரை எழுதக் காரணமாயிருந்த ஒரு நிகழ்வை பகிர்ந்துகொள்கிறேன்

    ஒரு நண்பர் வீட்டிற்கு சென்றேன், வாயிலில் இருந்து குரல் கொடுத்தேன் எதிர் விளைவு இல்லை ,ஆகவே எப்போது வழக்கமாக செல்லும் நண்பர் வீடுதானே என்று உள்ளே நுழைந்தேன். எதிரே கணிணியில் அந்த நண்பரின் பிள்ளை பள்ளியில் படிக்கும் பிள்ளை தன்னை மறந்து எதையோ பார்த்துக்கொண்டிருந்தான்.

    அடுத்தவர் கணிணியை எட்டிப் பார்க்கும் வழக்கமில்லாத நான் என் கண்ணைத் திருப்பும் ஒரு வினாடிக்குமுன் என் கண்ணில் பட்ட காட்சி என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. ஆம் அது ஒரு நீலப்படம். நான் வந்தது கூடத் தெரியாமல் அந்தப் பிள்ளை அதிலே மூழ்கியிருக்கிறான். சத்தம் போடாமல் வெளியே வந்தேன்.

    வியர்த்துக் கொட்டியது எனக்கு. எனக்கு ஏன் வியர்க்கிறது என்று எண்ணிப் பார்த்தேன், நம் நாட்டின் ,நம் பாரம்பரியத்தின் நம் வம்சாவழியின் வருங்காலத் தூண்கள் இந்தப் பிள்ளைகள் , அவர்களின் வாழ்க்கை சிதறிவிடுமோ என்கிற பயம் எனக்கு வந்ததால் எனக்கு வியர்த்தது.

    உங்களுக்கும் வியர்க்கிறதா?

     

    Share
  • இசைக்க மறந்த வீணை

      

    பொன்-ராம்    

     

    சன்னலோரத்து ரோஜா தலையை ஆட்டியபடி, கண்ணாடிக் கதவைத் தன் இதழ்வாயால் முத்தமிட்டுத் திறக்க முயற்சித்தபடி இருந்ததைக்கண்ட சிவா, “அப்பா! சூரியவெளிச்சம்  செடிக்குத் தேவை தானே! ஏன் கதவைச் சாத்தியிருக்கு? எனக் கேட்க,

     

    ஓவரா வெயில்பட்டா செடி வாடிப் போயிடும்பா, அந்த வெள்ளை ரோஜாவைப் பாத்தியா, ஓரத்தில பிங்க் நிறம் வச்சமாதிரி அதுக்கு பார்டர் வேற,  ஏம்பா நீதான் கதை எழுதறேன்னு உக்காண்டுருக்கியே, எழுந்து தண்ணீ ஊத்தறது, கதவைத் திறந்து வைக்கறது, ஏதோ சாஃப்ட்வேர் கம்பெனில வேலைல இருக்கோம்னு பொழுதன்னிக்கும் சிஸ்டத்தோட மல்லடிச்சிண்டு இருக்க, நீ காதுல பாட்டுக் கேட்க வயர் வயரா போட்டுக்கற,! ஆனா வாட்ச் கூட கட்டறதுல்ல. கேட்டா டிஸ்டர்ப்புங்கற.  ஏதோ இப்பதான் கொஞ்சம் நான் சொல்றேன்னு உனக்குப் பிடிச்ச லைனுக்கு வந்துண்டிருக்க.

     

      அப்பா இந்தக்காலத்து இளைஞர்களைப் பத்தி நீங்க இன்னும் புரிஞ்சுக்கலப்பா,     என்ன புரிஞ்சுக்கல?      அதோ பாருங்க பஸ் போயிண்டிருக்கு, ரோடு ஃபுல்லா தூசி பறக்குது, ரோடு போடறதா சொல்லி நாலு மாசம் ஆகுது. அங்கங்க பள்ளம், இன்னமும் யாரும் அதைச்  சரி செஞ்சமாதிரி தெரியல.

     

    பக்கத்துல டாஸ்மாக், விழுந்தான்னா அவன் வீட்டு கதி,   மழைக்காலமும் நெருங்கிடுச்சு, பக்கத்தாத்து சமையல்வேலை செய்யற மாமி பையன் இப்பத்தாம்பா வந்துசொல்லிட்டுப்போனான் அவன் இன்னும் ஸ்கூல் ஃபீஸ் கட்டலையாம்.

     

     உனக்கென்ன அதைப்பத்தி,     நீ தான் ஃபாரின் போய் கை நிறைய சம்பாதிக்கப் போற,   அப்புறம் என்ன உனக்கு அதைப்பத்தியெல்லாம் என்ன கவலை?       படிச்ச படிச்சதுக்குத் தகுந்த  வேலை கிடைச்சுது.  ஃபாரின் சான்ஸ் வந்தா  கிளம்பு. அதானே இந்தக் காலத்துப் பசங்களுக்கு கார்ல போகணும்.  வேணுங்கறத வாங்கணும், நிக்க ஒரு இடம், படுக்க ஒரு இடம், உட்கார ஒரு இடம், உலகம் ஃபுல்லா சுத்தி வரணும். சனி, ஞாயிறுன்னா ஃப்ரெண்ட்ஸ் இதானே உங்க எய்ம்?

     

    நிறையபேர் அப்படித்தாம்பா நினைச்சுண்டிருக்கா. நான் என்ன சொல்ல வர்றேன்னா.       நம்ம அப்புறமா பேசலாம், ”வா! கோயிலுக்குப் போகலாம்.சரி அப்படியே அம்மா படத்துக்கு அந்த ரோஜாவைப் பறிச்சு வச்சுட்டு வாப்பா.     அப்பா உங்களை நான் ஒரு கேள்வி கேக்கட்டுமா,

     

     ஏம்பா! நீங்க அம்மா இறந்ததுக்கப்புறம் இரண்டாம் கல்யாணம் செஞ்சுக்கலை.    மௌனமாக சுவரில் தொங்கியிருந்த தன் மனைவியின் படத்திலிருந்த கண்களை உற்றுநோக்கினார் அரவிந்த்.

     

     பூமியில பிறந்த மனிதர்கள் எல்லாம் அவங்க குழந்தைகள்னு நினைச்சுத்தாம்பா கடவுள் படைச்சாரு. நாம நம்ம கல்வி கத்துக்கறது, நம்ம பேரண்ட்ஸ், நமக்கு வழி காட்டின பெரியவங்க இவங்கள முன்னுதாரணமா வச்சுத்தாம்பா வாழறோம்,  என்னைப் பொறுத்தவரைக்கும் அப்பா, அம்மா, நமக்குக் கிடைத்த லைஃப் பார்ட்னர் எல்லாமே ஒரே ஒருத்தர் தாம்பா, பிடிச்சா வேற சட்டைய மாத்தியோ, வெரைட்டி ஃபுட் சாப்புடற மாதிரியோ இஷ்டத்துக்கும் இந்த உறவு முறையை மாத்திக்க முடியாதுப்பா.

     

     வாழ்க்கைன்னா நெளிவு சுளிவுன்னு இருக்கத்தான் செய்யும்.    அதுக்காக இஷ்டத்துக்கு வாழறது இல்லை வாழ்க்கை. இதாம்பா நா உங்கம்மாவோட வாழ்ந்த வாழ்க்கையில அனுபவிச்சு தெரிஞசுக்கிட்டது.  அதுக்காக நம்ம வசதியான லைஃபை நாம தொலைக்கணுமா?  பழகிய குரல் கேட்டு நிமிர்ந்தார் அரவிந்த்.  அப்துல்லா வாடா எப்ப வந்தே?  ஆச்சு   சன்னலோரத்து ரோஜாவுல ஆரம்பிச்சப்பவே வந்துட்டேன்.

     

    ஏண்டா வந்தவுடனே உள்ள வர்றதுக்கு என்னடா,   வாசப்படியிலேயே நின்னுண்ட,  அப்பாவுக்கும் பையனுக்கும் நடுவுல நான் யார்.     நான் கேக்க நினைச்சு மௌனமாகிப் போனதை உம் பையன் கேக்கறானே? நீ என்ன சொல்றன்னு பார்ப்போம்னு தான் வெயிட்  பண்ணினேன்.என்றார் அப்துல்லா.

    ஆமா என்ன கேட்ட, மனைவி இல்லாம இருக்கறத சொல்றியா,  இதோ இந்த படம் வெறும் உயிரற்ற ஜடமா வேணும்னா பாக்கறவங்க கண்ணுக்குத் தெரியலாம்,ஆனா  சில உறவுகளைப் பற்றி வெளியே பேசலாம்.ஆனா தாம்பத்ய துணை அப்படியில்லைன்னு நினைக்கிறேன், மௌனமானார் அரவிந்த்.

     

    பதில ரொம்ப கரெக்டா சொல்லிட்ட  என்றார் மேரி கொண்டுவந்த காப்பியை உறிஞ்சியபடி.  அவிக எப்பயுமே இப்பிடித்தான், நானும் இந்தப் பையன் மூணு வயசு இருக்கறப்பதான் இங்கு தோட்ட வேலைக்கு வந்தேன், உங்கப்பா தான் வீட்டு வேலை அத்தனையும்,  இதோ தம்பிக்கும் கல்யாண வயசு வந்தாச்சு.

     

    மேரி பாட்டி, சும்மா கல்யாணம்னு இப்பவே பேசாதீங்கோ,  எனக்குன்னு இன்னமும் சில கடமைகள் இருக்கு,   என்ன  செய்யப் போற?      நான் இங்க வந்ததே அதுக்குத்தான், நல்ல அலயன்ஸ் ஒண்ணு வந்துருக்கு,   உனக்கேத்த நல்ல குணம். உன் படிப்பு, அழகு, உன் கொள்கை எல்லாத்துக்கும் பொருத்தமா இருக்கும்னு எடுத்துட்டு வந்துருக்கேன். சாதகத்தோட   முடிச்சிட்டு ஸ்டேட்ஸ்க்குப் போயிடு“ என்றார் அப்துல்லா.

     

    அங்கிள்   நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க,   சாதகம்   அது இதுன்னு,  செல்ஃபோனில் ஒலித்த குறையொன்றுமில்லை, பாடலை நிதானமாக இரசித்த சிவா, ஹலோ என்றான்.  கிடைச்சா வாங்கிடு,  உன் ஹஸ்பெண்ட் என்ன சொல்றார்?

     

    நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா, என் கொள்கையும், உன் கொள்கையுமே என்னைக்குமே ஒண்ணு தான் நிவி.     இசைக்க மறந்த வீணையாய் பெட்டிக்குள்ள இருக்கறத நான் விரும்பல நிவி.   ரி  அப்புறம் பேசறேன்.   அங்கிள் வந்திருக்கார் பேசுறியா, சரி வைக்கிறேன்,    என் ஃப்ரெண்டுப்பா, உங்களுக்கும் தெரியும்.  நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருந்தாளே நிவின்னு. அவதான் பண்ணா, அப்பறமா சொல்றன்பா அதப்பத்தி.

     

    அவளா, சரிப்பா, சரி எங்க விட்டோம், முடிவா  என்ன சொல்ற,   அப்பா 5  ரூபாய்க்கு ஷேர் ஆட்டோவுல டிராவல் பண்ணா தஞ்சாவூர்ல டிக்கட் தர்றவனுக்கும், சென்னைல கடைல குடை வாங்கினாகூட பில் தராம இருக்கறவன் மனசும் வேறயா இருக்கறதுப்பா.இடமும் வேறயா இருக்கறதுப்பா. மனசு அது போலத்தாம்பா சில நேரங்கள்ல ரொம்ப கனமாயிடுதுப்பா.

     

    பச்சை சாயத்துல தோச்செடுத்த வெள்ளை ரோஜா மாதிரி, இன்னைக்கு நாங்களும் தப்பா உங்க பார்வைல நிக்கறோம்,  நீங்க பணத்தை பிள்ளைங்க கிட்ட எதிர்பார்க்கறதில்ல,  உங்க சொந்தம், உங்க ஊர்,பெருமையா பிள்ளை ஸ்டேட்ஸ்ல இருக்கான், அப்படின்னு சொல்லிக்க மட்டும்தான் நினைக்கிறீங்க, சோஷியல் சர்வீசும் செய்யறீங்க,

     

    சில பேர் இருக்காங்கப்பா, கஷ்டப்பட்டுட்டேதாம்பா இருப்பாங்க, கடைசிவரை பிள்ளைங்க பணத்தை எடுக்கக்கூடாதுன்னு.  அவங்க ஐடியா என்னன்னே தெரியலப்பா,   வெளிநாட்டுக்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கறதுன்னு போறோம். விவேகானந்தரையும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்” புறநானூறையும் நினைச்சுத்தாம்பா வாழணும்னு நினைக்கிறோம்.   அதுக்காக குடும்ப ஸ்டைல மாத்திக்க மாட்டோம்.

     

    இப்படித்தான் சொல்லுவீங்க, அப்பறம் உலக அழகி மாதிரி வேணும்பீங்க. சிரித்தார் அப்துல்லா.  நோ நோ  இட்ஸ் இம்பாஸிபிள்,  .உங்க லைஃப் ஸ்டைல்தாம்பா கரெக்ட். உலகெங்கும் இந்த லைஃப் ஸ்டைல் வரக்கூடாதா? அப்படின்னு நாங்க நினைக்காத நாளில்லை.

     

    இதெல்லாம் இந்தக்காலத்துக்கு சரிப்படுமா, தம்பி ” என்றாள் மேரி. ஏன் சரிப்படாது பாட்டி? எங்களால் முடிஞ்சவரைக்கும் செய்யறோம். அங்கங்க சாஃப்ட்வேர் இன்ஜினியர்ஸ் நாங்கள்லாம் இடம் வாங்கறோம்னு சொல்றீங்கள்ல. நீங்க உங்க அளவுல சோஷியல் சர்வீஸ் செய்யறத நாங்க உலகளவுல செய்யத்தான் பாடுபடறோம். இவ்வளவு செஞ்சும் அங்க பாருங்க, நாய்க்குப் பிஸ்கட் வாங்கிப் போடும் அந்தப் பிச்சைக்காரப்பாட்டியை.

     

    மாமரத்தில் ஒற்றைக்குயிலொன்று சடசடவென்று கூட்டமாகப் பறக்கும் வெள்ளைப்புறாக்களைத் துரத்தியதைக்   கண்கொட்டாமல் பார்த்தபடி, ஓரமாக இருந்த ஊன்றுகோலைத் தன் தோளுக்கு இடையில்  கொடுத்தபடி ரோஜாவைப் பறிக்க கட்டைக்கால்கள் சப்திக்க வேகமாக நடந்தான் சிவா.

     

    நடந்து கொண்டேகொஞ்ச நாளைக்கு முன்னாடி படிச்சேம்பா,   கட்டு கட்டா பண மூட்டையை டாய்லெட்ல யாரோ வச்சுட்டு போய்ட்டாங்களாம். கண்டுபிடிச்சாங்களான்னு தெரியல,   என .ஃபோட்டோவில் தெரசா சிரித்தபடி இருந்ததைப் பார்த்தபடி பேசினான்.

     

    மனுஷனுக்கு மனுஷன் அன்பு செலுத்த ஆளில்லைங்கறபோது அந்தப் பணத்தை வைக்கிற இடம் எதுன்னு பாத்தீங்களாப்பா   என்றான் சிவா.   பறித்த ரோஜாவை உள்ளங்கையில் வைத்து அதன்  வெள்ளை வண்ணத்தைப் பார்த்தபடி மௌனமானான்.

     

     எங்கோ துல்லியமான வீணையின் ஒலி கேட்க, அப்துல்லா வா! பக்கத்துல கௌரி ஆசிரமத்துல சில்ட்ரன்ஸ்டே செலிப்ரேஷன் இருக்கு,  அதுக்கு ஏதோ ப்ரோக்ராம் அரேஞ்ச் பண்றான்னு நினைக்கிறேன்,  ஆறு நாள்ல தீபாவளி வேற,   அதுக்கு வேற நிறைய வேலை கிடக்கு.    மகனே வா கோயிலுக்குப் போய்ட்டு   அவரவர் வேலையைப் பார்க்கலாம்”என்றார் அரவிந்த்.

     

    வீணை இசை நல்லாயிருக்குப்பா… பெட்டிக்குள்ளே இருந்திருந்தா இதெல்லாம் கேட்க முடியுமா? என்றார் அப்துல்லா. அதை அங்கீகரிப்பதுபோல் மௌனமாக சிவாவின் தோளைத் தட்டினார் அரவிந்த்.      

        

    டீபாயின் மேலிருந்த புத்தருடைய சிலையில் வைத்திருந்த பூ காற்றில் ஆடியபடி மௌனமாகச் சிரித்தது.

     

    Share
  • தமிழார்வம் ‘திரிகடுகம்: தகைமை

     

    இன்னம்பூரான்

    4. தகைமை மூன்று

    தன்குணங் குன்றாத் தகைமையும் தாவில்சீர்
    இன்குணத்தார் ஏவின செய்தலும் – நன்குணர்வின்
    நான்மறை யாளர் வழிச்செலவும் இம்மூன்றும்
    மேன்முறை யாளர் தொழில்.

    4.1. நமது மூதாதையரின் பேரும், புகழும், குணாதிசயங்களும் நீடூழி நிலைத்திருப்பதற்கு நாம் கடமை பட்டிருக்கிறோம். அதற்கு சுயகட்டுப்பாட்டுடன் இயங்கும் நல்லொழுக்கம் (தகைமை) வழி வகுக்கும். அதை கடைப்பிடிப்போமாக.  அழிவிலா கீர்த்தியுடைய நற்குணமுடையோர் இனிமையாக பேசுவார்கள். அவர்கள் இட்ட பணியை செய்வது நன்மை பயக்கும். நான்கு வேதங்களின் அறிவுரை படி நடக்கவேண்டும். இது எல்லாம் மேலோர்களின் பண்பு.  இன்குணத்தாருக்கு ‘அழிவிலா கீர்த்தி’ என்ற அடை மொழி, உரை அளிக்கும் பாடம். ‘இன்குணத்தார் ஏவின செய்தலும் ‘ என்பதற்கு, குணஞ் சான்றவர்க்கு ஆவன செய்தல்’ என்பது விருத்தியுரை அளிக்கும் பாடம்.

    4.2. பௌடிகமும், தைத்திரியமும், சாமவேதமும், தலவகாரமும்’ என்று, நச்சினிக்கினியாரை தழுவி கூறும் விருத்தியுரை, அவற்றை இக் காலத்தவர் இருக்கு, யசுர், சாம, அதர்வணம் என்பர் என்று விளக்குகிறது.  உரையாசிரியர்  அக்காலத்திலேயே யசுர், சாம, அதர்வணம் என்று தான் கூறியிருக்கிறார். அதர்வணத்தை, விருத்தியுரை, தலவகாரம் என்று சொல்வது வியப்பை அளிக்கிறது. அது சாமவேதத்தின் ஒரு கூறு என்றும்  எசுர், சாமவேதம் என்ற   பெயர்கள் வால்மீகியார் காலத்திலேயே வழக்கில் இருந்தன என்றும் பேராசிரியர் தி.வே. கோபாலையர் அவர்களும் கூறியிருக்கிறார். திருமங்கையாழ்வார்   அருளிய   பெரிய   திருமொழியிலும்   ‘…சந்தோகா,பௌழியா, தைத்திரியா, சாம   வேதியனே,   நெடுமாலே…’ (7-7-3)   என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடும் பண்டை வேதப் பெயர்கள்  வழங்குகின்றன என்பதையும் சுட்டிய ‘தமிழ்க்கடல்’ அவர்கள், ‘… இராமனை   முதன்முறை   கண்டு   தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அநுமன்   கூற்றினைச்   செவிமடுத்த   இராமன்   இவன் இருக்கு, எசுர்,சாமவேதம்    என்ற   வேதங்களில்   பயிற்சியுடையனாதல்   வேண்டும்.அதனால்தான் இவன் பேச்சு   வணக்கமும்   தொடர்ச்சியும்   இனிமையும் உடையதாய் உள்ளது என்று   இலக்குவனிடம்   குறிப்பிட்டதாக  வான்மீகி குறிப்பிடுகிறார். இருக்கு, எசுர், சாமவேதம் என்ற   பெயர்கள் வான்மீகியார் காலத்திலேயே   வழக்கில்   இருந்தன…’ என்றும் எழுதியுள்ளார்.

    5.3. ‘தண்குணங் குன்றாத் தகைமை’ குடும்பம், குலம், மொழி, தேசாபிமானம், மனித நேயம் ஆகிய பல படிநிலைகளில் இயங்குகிறது என்று நான் கருதுகிறேன். அதன் பொருட்டு அதை சமுதாயத்துக்கே நிவாரணம் அளிக்கும் ஒளஷதம் என்றால் மிகையல்ல. ‘இன்குணத்தார் ஏவின செய்தல்’ அவர்கள் இட்ட பணியாக இருந்தாலும், அவர்களுக்கு ஆவன செய்வதாக இருந்தால், நன்மை தான் பயக்கும். காழ்ப்புணர்ச்சியும், இனபேதமும், தன்னலமும் மேலாண்மை செய்யும் தற்காலத்தில் இன்குணம் அரிய மருந்து என்பதில் ஐயமேதுமில்லை. வேத அத்யயனம் குறைந்து விட்டது. வேத அறிவுரைகளை பொறுப்புடன் எடுத்துக்கூறும் விற்பன்னர்கள் மிகவும் குறைந்து விட்டனர். அதை பற்றிய ஆராய்ச்சியில் இறங்குவதற்கு முன் நல்லாதனாரின் திரிகடுகம் படிப்பது மேல்.

    (தொடரும்)

    இன்னம்பூரான்

    07 11 2012

    உசாத்துணை:

    திரிகடுகம்: மூலமும், உரையும்: http://noolaham.net/project/35/3423/3423.pdf

    தமிழ் இணையக் கல்விக்கழகம்

    திரிகடுகம்:மூலமும்,விருத்தியுரையும்: http://www.tamilvu.org/library/libindex.htm

    தி.வே. கோபாலையர்:http://www.tamilvu.org/slet/l0100/l0100pd1.jsp?bookid=1&auth_pub_id=11&pno=5

     

    சித்திரத்திற்கு நன்றி:

    http://www.uyirmmai.com/Images/ContentImages/Uyirosai/uyirosai-23/namu1.jpg

     

    Share