தொல்லைகாட்சி: நாஞ்சில் சம்பத் :உங்களில் யார் பிரபுதேவா

0

 

மோகன் குமார்

உங்களில்  யார் பிரபு தேவா

 

விஜய் டிவி நடத்தும் உங்களில் யார் பிரபு தேவா – சீசன் டூ முடிவை நெருங்கி கொண்டிருக்கிறது . டிவிக்கள்  ஒவ்வொன்றிலும் பாட்டு நிகழ்சிகள், டான்ஸ் நிகழ்சிகள் உள்ளன ஆனால் விஜய் டிவி போல பலரும் பார்க்கும் விதமாய் சண், கலைஞர், ஜெயா போன்ற டிவிக்களால் செய்ய முடிவதில்லை என்பதே நிஜம் !

 

ஒய்ல்ட் கார்டில் கண்ணை கட்டி கொண்டு ஒருவர் ஆடினார். கிட்டத்தட்ட செட் முழுதும் போய் ஆடினார். அவ்வப்போது கண்ணை கட்டியதால் லேசாய் தடுமாறினாலும் அருமையான ஆட்டம் ! நாங்கள் எப்போதுமே இந்த நிகழ்ச்சியை தொடர்ந்தேல்லாம் பார்ப்பதில்லை. சானல் மாற்றி மாற்றி பார்க்கிறது தான். அதனால் அன்று மற்றவர்கள் ஆடியதை அதிகம் பார்க்கலை

 

இந்நிகழ்ச்சி பிரபலம்  என்றாலும் சூப்பர் சிங்கர்  அளவு ஹிட் ஆகலை என்று தான் சொல்லணும்

 

ரோடில்  செயினை திருடிய போலிஸ் ஏட்டு

 

சண் நியூஸ் செய்தியில் காட்டிய செய்தி இது (இத்தகைய  செய்தி ஜெயா டிவியிலா வரும்?) மதுராந்தகத்தில் சாலையில் நடந்து வந்த ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்து ஏழு பவுன் செயினை அறுத்து கொண்டு தப்ப முயற்சித்துள்ளார் ஒருவர். அந்த பெண்மணி அந்த திருடர் வந்த பைக்கை விடாமல் பிடித்து கொண்டு ஓட விடாமல் தடுத்துள்ளார். சாலையில் இருவருக்கும் பெரும் சண்டை நடந்துள்ளது. அப்போது அந்த வழியே போலிஸ் வர, அவர்கள் முதலில் புருஷன் பெண்டாட்டி சண்டை என நினைத்துள்ளனர் அப்புறம் இந்த பெண் செயினை அறுத்துகிட்டு ஓடுறார் திருடன் திருடன் என கத்தவும், போலிஸ் அந்த திருடனை வந்து பிடித்துள்ளது

 

” நான் போலிஸ் ஏட்டுயா; விட்டுடுங்க ” என கெஞ்சியுள்ளார் அவர். விடாமல் கைது செய்து ஸ்டேஷன் அழைத்து சென்றால் நிஜமாவே அவர் போலிஸ் ஏட்டு தான் என்று தெரிந்துள்ளது. டிவி யில் காட்டும் போது அவரது முகத்தை முழுதும் மறைத்து காட்டினர் போலீசார் ! (தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் அல்லவா?)

 

யாராச்சும் திருடன்  வந்தா போலிஸ் கிட்டே போகலாம்  அந்த போலிசே திருடன் ஆனா  நாம யார் கிட்டே போறது ?

 

டிவி யில் பார்த்த படம் : Taken

 

எல்லாரும் இப்போது  ரிலீஸ் ஆன Taken – II பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நாங்கள் அதன் முதல் பார்ட் இப்போதான் ஸ்டார் மூவிஸில் பார்த்தோம்.

 

அட இந்த கதையை  நாம முதல்லேயே பாத்திருக்கோமே ! நம்ம கேப்டன் இயக்கி நடிச்ச விருதகிரி இதே கதை தானே என தோணியது. சும்மா சொல்லக்கூடாது  கேப்டன் பல சீன் டிப்பி காப்பி அடிச்சிருக்கார்

 

ஹீரோவின் டீன் ஏஜ் பெண்ணை ஒரு கூட்டம்  கடத்தி விற்க பார்க்க, ஹீரோ பல தடைகளை தாண்டி எப்படி மீட்டார் என்பது தான் கதை. முழுக்க முழுக்க ஆக்ஷன் படம். தெரிந்த கதை என்றாலும் gripping ஆக இருந்தது பார்க்க.

 

ஸ்டார் மூவிஸில் படம் பார்ப்பதில் ஒரு நல்ல விஷயம். விளம்பரம் போடும்போது மறுபடி படம் வர எவ்வளவு நிமிடம் ஆகும் என சைடில் தெரியும் அதை பொறுத்து நாம் மற்ற சானல் போய்விட்டு ஜாலியா வரலாம் !

 

அமில மழை  பொழிந்த நாஞ்சில் சம்பத்  
 
ம.தி.மு.க வில் வைக்கோவிற்கு அடுத்த இடம் என்று கருதப்பட்ட நாஞ்சில் சம்பத்திற்கும் வைக்கோவுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது.  இதையடுத்து  சன் டிவி நாஞ்சில் நாஞ்சில் சம்பத்திடம்  விரிவான பேட்டி எடுத்தது. வைக்கோவின் மினியேச்சர் போலவும், சிராக்ஸ் போலவும் தோற்றமும், பேச்சும்  கொண்ட அவர் பேசியதிலிருந்து சில பகுதி:  
 
– அஞ்சு வருஷம் திட்டி விட்டு, நான்கு சீட் அதிகம் என்றதால் கடைசி நேரத்தில் அணி மாறியவர் வைகோ. அவர் எந்த கட்சியுடன் சேர்வது என்று கடைசி நிமிடம் வரை தடுமாறியதால் தான் நாங்களும் ஒவ்வொரு தேர்தலிலும் தடுமாற வேண்டியிருந்தது.
 
– தேர்தலின்போது நடந்த ஒரு திருமணத்தில் என்னை தனி அறைக்கு அழைத்து சென்று ” ஸ்டாலினை முதல்வராக்க நான் உழைக்கணுமா?” என்று பேசியவர் வை.கோ.  
 
– இந்த கட்சிக்காக வைகோவை விட அதிகம் உழைத்தவன் நான். அதிகம் பேரை ஈர்த்தவன் நான். நானாக கட்சியை விட்டு விலக மாட்டேன் அந்த பழி சொல் எனக்கு வேண்டாம். அவராக வேண்டாமானால் என்னை நீக்கட்டும்.  
 
– அவரை விட மிக அதிககூ ட்டங்களில் என்னை பேச அழைக்கிறார்கள். தன்னை விட இன்னொருவர் அதிக புகழ் பெறுவது பிடிக்காமல் அவர் செய்யும் செயல் தான் இது  
 
– நாஞ்சிலை கொளுத்தியது போல் இதையும் கொளுத்துங்கள் என்று சர்ச்சைக்குரிய புத்தகம் பற்றி பேசுகிறார் என் மீது இவ்வளவு வன்மம் அவருக்கு உண்டு என இப்போது தான் தெரிகிறது. இப்படி வன்மத்துடன் உள்ளவரை எப்படி என் மகள் கல்யாணத்துக்கு அழைக்க முடியும்? அதனால் தான் அழைக்க வில்லை  
 
– என் வீட்டார் என்னை எந்த கட்சியிலும் சேராதே. இலக்கிய பணி மட்டும் செய் என்கிறார்கள். 18 வருடமாய் எந்த சொந்தகாரர் கல்யாணம், சாவுக்கும் செல்லாமால் கட்சி, கட்சி என்று இருந்து விட்டேன். நான் இறந்தால் எந்த சொந்த காரரும் வர மாட்டார் கட்சி காரர்கள் வந்தால் தான் உண்டு  
 
பிளாஷ்பேக் : ரயில் சிநேகம்  
 
சண் டிவியில் முதன் முதலில் சீரியல் என்று ஆரம்பித்த போது பாலச்சந்தர் செய்த தொடர் ரயில் சிநேகம். நிழல்கள் ரவி, இந்திரா நடித்தது. “ரயில் சிநேகம் ..ரயில் சிநேகம் ” என்று ஜேசுதாஸ் பாடும் பாடல் இன்றும், ஒரு வரி விடாமல் நியாபகம் இருக்கிறது. குழந்தையை வைத்து கொண்டு பாடும் ” இந்த வீணைக்கு தெரியாது” கூட மிக அழகான இன்னும் பலர் விரும்பி கேட்கும் பாடல் தான்.  
 
நிழல்கள் ரவியின் பெண்ணாக வளரும் இந்திராவிற்கு திடீரென அவர் தன் தந்தை இல்லை என தெரிய வருகிறது. அப்போ நிழல்கள் ரவி ஏன் அவரை வளர்க்கிறார் என சொல்வது தான் ரயில் சிநேகம்.  

வாரம் ஒரு பகுதி மட்டுமே  வரும் இந்த தொடரை எவ்வளவோ  பேர் விரும்பி பார்த்தோம். நல்ல சினிமா பார்க்கிற சந்தோசம் அப்போது இந்த சீரியலில் கிடைத்தது !

 

ஒரு நாள் போதுமா?  
 
விஜய் டிவியின் மியூசிக் அவார்ட்சில் நிகழ்ச்சி துவக்கி வைத்து ” ஒரு நாள் போதுமா? ” பாட்டை முழுமையாய் பாடினார் பாலமுரளி கிருஷ்ணா. ஏறக்குறைய நிஜ பாட்டை கேட்கும் விதத்திலேயே இன்றும் அவர் பாடுவது ஆச்சரியமாய் இருந்தது. ஜானகி, சுசீலா, டி.எம். எஸ் போன்றோர் குரலில் மிக அதிக நடுக்கமும் முன்பு போல் இப்போது பாட முடியாததையும் காண்கிறோம். ஆனால் இவரால் எண்பது வயதுக்கு மேலும் எப்படி அருமையாய் பாட முடிவதுடன், குரலும் அப்படியே இருக்கிறது ?  
 
 
இக்கேள்விக்கு ஒரு விடை தான் இருக்கமுடியும் ! பயிற்சி ! விடாமல் தினம் பயிற்சி மேற்கொள்கிறார் என நினைக்கிறேன்.  
 
 
நம் வாழ்க்கைக்கும் இது பொருந்தும் தானே ! நாம் மனதில் கொண்ட லட்சியத்திற்கு தினம் உழைத்தால், பயிற்சி எடுத்தால் நினைத்ததை அடைய முடியும் தானே !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *