நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’ :: தொடர்-20

0

 

பெருவை பார்த்தசாரதி

புராண காலத்தில் மட்டுமில்லாமல், இன்று கூட நம் வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறவர்களை வெவ்வேறு காலகட்டத்தில் கைக்கொண்டு வாழ்க்கை நலம் பெறவும், வாழ்வில் உயர்ந்த நிலை அடையவும் ஒவ்வொருவரும் முயற்சித்துக் கொண்டேயிருக்கிறோம். நாம் நமது சொந்தக்காலில் நிற்கமுடியும், நமது உழைப்பிலே நாம் வாழமுடியும் என்கிற தளராத தன்னம்பிக்கை வளர இவர்கள் காட்டும் வழி நமக்கு ஒளிகாட்டுகிறது. பண்டைக்காலத்தோடு இன்றய காலக்கட்டத்தை ஒப்பிடுகையில், தடைக்கற்களை சுட்டிக்காட்டி தன்னம்பிக்கையை வளர்க்கும் சூழ்நிலைகளை உருவாக்கித் தருபவர்களை Counsellors, Advisors, Organisers, TeamLeader, Members என்று பெயர் சூட்டி அழைப்பெதெல்லாம் இன்று பெயரளவிலே தான் மாற்றமே தவிர,  செயல் அளவில் பெரிய மாற்றமிருக்காது. அன்று ‘குரு’ என்று சொல்கிறவர்களை இன்று ‘தலைவர்’, ‘வழிகாட்டுபவர்’ என்று சொல்கிறார்கள் அவ்வளவுதான். ஒரு திறமையான தலைவனாகச் செயல்படக்கூடிய ஒருவர் (Leader) தன்னுடைய உறுப்பினர்களுக்கு (Team Members) வழிகாட்டியாக இருந்தால், அவர் எடுக்கின்ற செயலும், முடிவும் வளரும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. திறமை இருந்தும் ஒரு காரியத்தைத் திறம்பட செய்ய முடியாமல் திணறுபவர்களுக்கு, முதலில் அவர்களை மனக் குழப்பத்தில் இருந்து விடுவித்தால்தான் அவர்கள் திறம்பட செயல்படமுடியும். தன்னுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, தாம் சொல்கின்ற பணிகளைத் திறம்பட செய்யும் ஊழியனிடத்தில் காணும் மன சஞ்சலங்களை அகற்றி, அவனிடத்தில் இருக்கும் திறமையை எடுத்துக் காட்டுபவன்தான் மற்றவரிடமிருந்து தனிப்பட்டு “தலைவன்” என்ற தகுதியைப் பெறுகிறான்.  அறிவு, திறமை, பொருமை, ஆற்றல் இவை எல்லா அம்சத்திலும் சிறந்து விளங்கினாலும், தலைவனாகச் செயல்படுபவனுக்கு ‘தெளிவான சிந்தனை’ என்பது மிக மிக அவசியம். அப்பொழுதான் அவனைப் பின்பற்றுபவர்களுக்கு எடுத்துக் காட்டாக அமையமுடியும். ஒரு வண்டி சீராக ஓட வேண்டுமானால், இரண்டு சக்கரங்களும் ஒரே அளவாக இருக்கவேண்டும், அதுபோல எண்ணங்கள், செயல்கள் என்ற இரு சக்கரங்கள் ஒன்றாக இருந்தால்தான் வண்டியாகிய செய்கின்ற செயல் சிறப்பாக அமையமுடியும். இந்த எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் மூலக்காரணமாக அமைவது தெளிவான “மனம்”. என்பதை மையமாக வைத்துதான் கவியரசரின் சிந்தனையில் “வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும், அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்” தமது பாடல் வரிகளை அமைத்து இருப்பார்.

மனதைக் கட்டுப்படுத்தி, ஆசைக்கு அளவிட்டால் கடையனும் கடைத்தேற்றம் பெறலாம் என்கிறார்கள் நம் முன்னோர்கள். ஆசையை அடக்க முடியாமல் இன்று பலர் வாழ்வில் வழி தவறுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். எல்லாவித இன்ப துன்பங்களுக்கும் மனம் ஒன்றுதான் காரணமாக அமைகிறது. நல்ல மனைவி, தகராறு செய்யாத குழந்தைகள், உறவாடும் சுற்றத்தார்கள் இவர்களோடு அமைதியான முறையில், தனது வருமானத்திற்கேற்றவாறு குடும்பம் நடத்திக்கொண்டிருந்தான் ஒருவன். அக்கம் பக்கத்தில் குடியிருப்போர்கள் எல்லாம் வசதியாக காரில் போவதைப் பார்க்கிறான். இவனுக்கும் லேசாக ஆசை பிறக்கிறது. தன்னிடம் ஒரு கார் இருந்தால் எப்படி இருக்கும்?..ஆசை துளிர் விடுகிறது. உடனே வாங்கிவிடு என்று மனது சொல்கிறது, மறு நிமிடம் வேண்டாமென்று மறுக்கிறது. அடுத்த நிமிடம் கடன் வாங்கியாவது கார் வாங்கிவிடு என்று உத்தரவிடுகிறது. படிப்படியாக இந்த சாதாரண ஆசை பேராசையாக உருவெடுத்தது. இப்படித்தான் ஒவ்வொரு நிமிடமும் மனம் என்பது குரங்காக மாறிவிடுகிறது. மனதைக் கண்டபடி அலைபாய விட்டதால் அமைதியான வாழ்க்கையில் சூறாவளி வீசத்தொடங்கியது. இதுவரை கடன் என்று அறியாதவன், ஒரு காலகட்டத்தில் கடனைத் திரும்பச் செலுத்தமுடியாத பெரும் கடனாளி ஆகி  விடுகிறான். பணத்திற்காக ஒழுக்கத்திலிருந்து வழுவுகிறான். ஒழுக்கம் கெட்டவன், நடத்தை கெட்டவன் என்று பெயரெடுக்கிறான். முடிவில் தன்னையும், தன்னைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையையும் சீரழித்துக் விடுகிறான்.

மக்கள் அறவழியில்  சென்று ஒழுக்கத்தை முறையாகக்  கடைபிடித்து நல்வாழ்க்கை  வாழவேண்டும் என்ற உயரிய  நோக்கத்திற்கு வித்திடுவது ஒழுக்கம் என்பதை வலியுறுத்தினார்கள் பெரியோர்கள். நல்லொழுக்கத்துக்கு முக்கிய வழி ‘மன அடக்கம்’ மற்றும் ‘மனத்தூய்மை’. இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளலார் மனதைக் கட்டுப்படுத்தி தனது வாணாள் முழுவதும் நல்லொழுக்கத்தை பேணிக்காத்து தனது வாழ்வில் அதை முழுமையாகக் கடைபிடித்தும் வந்தார். மனதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்து, கருணைக்கும் இரக்கத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி அருட்செயல் புரிந்து மற்றவரிடமிருந்து தன்னை வேறுபடுத்தி சமுதாயத்தை சீர் செய்த சீர்திருத்தவாதியாக, மிகச்சிறந்த மனிதனாக வாழ்ந்து காட்டினார். மனிதன் என்ற சொல்லுக்கு நினைப்பவன் என்ற பொருள் படும். நினைப்பதற்கு உறுதுணையான கருவி மனம். மனத்தையுடையவன் மனிதன். அதிலும் மனத்தை அடக்கியவனே சிறந்த மனிதன் என்கிறார் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள். அவருடைய சொற்பொழிவில் இருந்து ஒரு செய்தி, திருவொற்றியூரிலே ஒரு மகான் இருந்தாராம். அவர் ஆலய வழிபாட்டிற்காகச் செல்லும்பொருட்டு, வீதியில் தம்மைக் கடந்து செல்பவர்களைப் பார்த்து அதோ ‘எருமை போகிறது’, ‘நாய் போகிறது’, ‘ஆடு போகிறது’, ‘பூனை போகிறது’ என்று கூறுவாராம். வள்ளலார் தெருவிலே செல்லும்போது அவரைப்பார்த்து “மனிதன் போகின்றான்” என்பாராம். ஆகவே எல்லோரையும் அந்த மகான் மனிதனாகக் கருதவில்லை என்று தெரிகிறது. மண்ணாசை, பொருளாசை, பெண்ணாசையால் நிரம்பி ஆசையினால் லயிக்கப்பட்டுக் கிடந்த மனதை வெறுத்து துறவறம் பூண்ட பட்டினத்தடிகளுக்கு “காதற்ற ஊசியும் வாராதே காணும் கடைவழிக்கே” என்ற வாசகம் தான் அவருக்கு ஞான வழி காட்டியது. ஒரு நொடியில் சட்டென்று மனம் மாறியதால், பெரும் செல்வந்தராக இருந்தும், கடைசியில் சகலத்தையும் துறந்து கோவணம் கட்டிய துறவியானார்

எண்ணிலடங்கா மஹான்கள், பதினென் சித்தர்கள், இன்றய சிறந்த எழுத்தாளர்கள், மனநல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பலர் மனதைப் பற்றிய எண்ணற்ற விஷயங்களை பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படி சொல்லியிருக்கிறார்கள். மனதை ஒடுக்க, ஒடுக்க மனம் விரிவடைந்து விசாலமடைகிறது. மனம் விசாலமாகிவிட்டால் அங்கே ஈகைக் குணம் குடிகொண்டு விடுகிறது. தீக்குணங்களை விரட்டி அடித்து விடுகிறது. சங்க காலத்தில் வாழ்ந்த அரசர்கள் பொன்னையும் பொருளையும் புலவர்களுக்கும், வறியவர்களுக்கும் வாரி வழங்கினார்களே, இவர்கள் மனத்தைச் செம்மை படுத்தியது எது?…முன்னூருக்கும் மேற்பட்ட கிராமங்களை புலவர் கபிலருக்கு ஈந்தான் பாரி, முல்லைக்கொடிக்குத் தனது பொற்றேரைக் கொடுத்தான். தன்னிடமுள்ள பொருளைக் கொடுக்க இசைகின்ற அதேமனம், தன்னிடம் சேர்ந்து இருக்கின்ற உடலைக் கொடுக்க இசையுமா?… ஒரு புறாவின் அற்ப உயிருக்காக தன் தசையறுத்து துலாவில் ஏறிய வள்ளல்தன்மையைக் கண்டு வியக்காதவர் உண்டோ?…………அவர்களுடைய விசாலமடைந்த மனதிற்குள் விகாரத்து அங்கே இடமில்லை.

மனத்தை பேய் என்றே குறிப்பிடுகிறார் பதினென் சித்தர்களில் ஒருவரான  அகப்பை சித்தர். அகம் என்றால் மனம் என்றும் பொருள் படும். இவரது உண்மைப் பெயர் அகப்பேய் சித்தர். இவருடைய பாடல்களில் அகத்தை (மனதை) பேய் என்று சித்தரித்து பாடல் எழுதியதாலேயே இவர் அகப்பேய் சித்தர் எனப் பெயர் பெற்றார். பின்னாளில் அகப்பேய் என்ற பெயர் மருவி அகப்பை ஆகிவிட்டார் என்பது பலரது கருத்து. மனதில் தூய்மையான எண்ணங்கள் எழும்போது, நமது முகம் பிரகாசமடைகிறது. மனம் எப்படி இருக்கிறதோ அப்படியேதான் முகத்தின் அழகு அமையும். இதைத்தான் “அகத்தின் அழகு முகத்திலே தெரியும்”, “ எண்ணம்போல வாழ்வு”, “எண்ணம்போல செயல்” என்பர். “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” என்பதும் வள்ளுவன் வாக்கு. மனதைப் ஒருநிலைப்படுத்துவது மற்றும் சஞ்சலப்படாமல் எப்படி ஒடுக்குவது என்பது பற்றி அகப்பேய் சித்தர் பாடல்களில் முக்கியத்துவம் பெற்று இருக்கும்.

குரங்கானது சிறிது நேரமேனும் சும்மாயிராது, ஏதாவது விஷமம் செய்து கொண்டேயிருக்கும். மரத்துக்கு மரம் தாவுவதும், குதிப்பதும், தொங்குவதும் இவற்றுக்குச் சாதாரமான செயல். அதனால்தான் நிலையில்லாத மனித மனத்தையும் குரங்குக்கு ஒப்பிடுகிறார்கள் கவிஞர்கள். ‘மனித மனம் ஒரு குரங்கு’ என்ற கவியரசரின் பாடல்கள் இங்கே  நினைவுக்கு வரவேண்டும்…….மனதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தன்னிச்சையாக இயங்கவிடாமல் செய்துவிட்டால், மனமானது தூய்மையாகி என்நேரமும் சஞ்சலத்திற்கு இடம் கொடாமல், அமைதியாகவே இருக்கும்.

‘’நில்லென்று  மனதை நிலை நிறுத்தவல்லார்க்கு

கொல்லென்று  வந்த எமன் குடியோடிப் போனாண்டி’’

என்பது சித்தர்கள் கண்ட வித்தை. மனதை அடக்கி ஒரு நிலைப்படுத்தி விட்டால், மரணத்தையும்கூட வென்றுவிடலாம் என்பதே சித்தர்கள் கூற்று, இக்கலையைக் கைவரப்பெற்றவர்களின் உயிரை எடுக்க வந்த எமன் கூட அருகில் வராமல் ஒடிவிடுவானாம்.

‘குறுமுனி’ என்றும் ‘தலைமைச் சித்தர்’ என்றும் புகழ்பெற்ற அகத்தியர் “மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டா’’ என்கிறார். மனதைச் செம்மைப் படுத்தினால் எல்லாவித சித்திகளையும் பெற்றும் விடலாம் என்கிறார். எல்லா வியாதிகளுக்கும் மருந்துண்டு, மன உளைச்சலுக்கும் உண்டு, ஆனால் மருந்தைவிட மனதில் உள்ள அழுக்குகளை அகற்றிடும் பயிற்ச்சியே அருமருந்தென்று அகத்தியமுனி இங்கே உட்கருத்தாக சூசகமாகத் தெரிவிக்கிறார் என்றே பொருள் கொள்ளவேண்டும்.

தற்காலத்தில்  அனைத்துமே கணிணியில் சேகரிக்கப்பட்டு சேமிக்கப் படுகிறது. இதில் அவ்வப்போது தேவையில்லாத சமாச்சாரங்களை ரிசைக்கிள் பின் (Recycle bin) என்ற இடத்திற்கு தள்ளிவிடுகிறோம். தேவையில்லாமல் கணிணியின் இடத்தை நிரப்பிக் கொண்டிருக்கும் கோப்புகளை (unwanted files) குப்பைத்தொட்டிக்கு (Recycle bin) அனுப்புவது போல, அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மனதில் இருத்திக்கொள்ளாமல் உடனே மனதிலிருந்து களைந்து எரிந்து நல்லதைத் தவிர, ஒன்றுக்கும் உபயோகப்படாததை மனதில் சேமித்து வைப்பதை தவிர்க்கவேண்டும்.  இந்தப் பயிற்ச்சி மூலம் விரக்தி, கோபம், துவேஷம், எதற்கெடுத்தாலும் எரிச்சல் போன்றவற்றைத் தவிர்த்து மனதைப் பாதுகாத்து வைத்துக் கொள்ள வழி சொல்லுகிறார்கள் மனநல ஆராய்ச்சியாளர்கள்.

பகவத் கீதையை ஆழ்ந்து படிப்போருக்கு மனதைப் பற்றிய விஷயங்களெல்லாம் தெளிவாக விளங்கும். ஒரு சமயம் மனதைக் கட்டுப்படுத்தமுடியாமல் தடுமாறிய அருச்சுனன், பகவான் கிருஷ்ணனிடம் “ஒரு நிலையில் இல்லாத மனதை எவ்வாறு கட்டுப்படுத்துவது?”…என்று வினவுகிறான். அதற்கு பகவான், நம்முடைய மனதுதான் எல்லாவித செயலுக்கும் காரணமாக அமைகிறது, காற்றைப்போல எந்நேரமும் அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதைக் கட்டுப்படுத்த இடைவிடாத பயிற்ச்சியினால் மட்டுமே சாத்தியமாகும் என்றும் இது யோகத்தினால் கைவரப்பெறும் என்றும் உரைக்கிறார். இறைநம்பிக்கையோடு இடைவிடாத பயிற்சியினால் மனதை ஒரு கட்டுக்குள் வைக்கமுடியும் என்பதை கீதை மூலம் வலியுறுத்தினார். பலவித மனக்குழப்பத்துக்கும் மனசஞ்சலத்துக்கும் அடிமையாகியிருந்த அருச்சுனனக்கு நல்லுபதேசம் செய்து மனிதப் பிறவிக்கும் கீதையுரை மூலம் நல் வழிகாட்டினான் மாயக் கிருட்டினன்.  மனமே ஒருவரது வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. மனோதைரியமும், மனக்கட்டுப்பாடும் இருந்தால் மகத்தான சாதனை புரியமுடியும் என்பதை கீதோபதேசத்திலிருந்து எளிதாக அறிந்து கொள்ளமுடியும். சாதனைகளையும், குறிக்கோளையும் எட்டுவதற்கு இந்த ‘மனோதைரியம்’ மனிதனுக்கு மிக அவசியம் என்பதற்கு ஒர் உதாரணத்தை இங்கு எடுத்துச் சொல்ல விழைகிறேன். ஒவ்வொரு வருடமும் ஸ்பெயின் நாட்டில் நடக்கும் வீரவிளையாட்டு, அதாவது ‘காளைச்சண்டை’ (Bull Fight) என்பது உலகப் பிரசித்தம். வழக்கமாக நடைபெறும் இந்த மரண விளையாட்டில், ஆக்ரோஷமாக சீறிவரும் காளையை அடக்கி, எப்போதும் வெற்றிவாகை சூடும் ஒரு வாலிபன் கடைசி நேரத்தில் வீரவிளையாட்டில் பங்கேற்கவில்லை என்ற அறிவிப்பு வந்தவுடன் பத்திரிகையாளர்கள் கூட்டம் அவரிடம், ஏன் இந்த திடீர் முடிவு? என்ற கேட்டனர். அதற்கு அவருடைய உடன் பிறந்த சகோதரர் ஒருவர் போட்டியின் போது காளை முட்டி உயிர்துறந்த சம்பவத்தால்தான், வருகின்ற போட்டியில் நான் கலந்து கொள்ள இயலவில்லை என்று பதில் சொன்னார். மைதானத்தில் காளையோடு சண்டைபோடுவதைவிட யாருக்கு வெற்றி?…..யாருக்கு மரணம்?..என்று மனத்துக்குள் நடக்கும் போராட்டமே மேலோங்கி இருக்கிறது. போட்டியில் பங்கேற்கும் ஆறறிவு படைத்த மனிதனுக்கும், ஐந்தறிவு பெற்ற விலங்குக்கும் ஒருவரை ஒருவர் வெல்வதே குறிக்கோள். வெற்றி, தோல்வி, மரணம் என்பதெல்லாம் விலங்குக்குத் தெரியாது, ஒன்று போராடும் அல்லது போராட முடியாமல் தன்னை மாய்த்துக்கொள்ளும். ஆனால் மனிதனோ ஒரு நொடியில் மனம் தளர்ந்து, தன்னம்பிக்கை இழந்து விட்டால் போட்டியிலிருந்து விலகிவிடுகிறான். இப்படித்தான் அந்த வாலிபனும் போட்டி நடக்கும் ஒரு சில வினாடிக்கு முன்பு மனம் மாறிவிட்டான். அன்று பகவான் கீதையில் அருச்சுனனுக்கு வழிகாட்டியதுபோல், அந்த வாலிபனின் திறமையை அறிந்த அவரது ‘கோச்’ என்று சொல்லக்கூடிய(அவரைப் போட்டிக்குத் தயார்படுத்தியவர்) மனக்குழப்பத்தில் இருந்த வீரனுக்கு உற்சாகம் கொடுத்து, போட்டியில் பங்கேற்கச் செய்து காளையை அடக்கி மரணத்தை வென்று வெற்றியைத் தேடித்தந்தார்.

ஏதோ ஒரு காரணத்தால், சோர்வடைந்த மனதை தக்க சமயத்தில் திசைதிருப்பி உற்சாகமளித்தால், ஆக்கப்பூர்வமான திறமைகள் மனதிலிருந்து வெளிப்படும் என்பதையே இந்த சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது. ஆக நமது மனதை உற்சாகத்தோடும், உறுதியோடும் பாதுகாத்துக் கொள்ள நாம் பல வகைகளில் முயற்சி எடுத்துக் கொண்டே இருக்கிறோம். மூலைக்கு மூலை வினையகற்றுபவனுக்கு ஆலயம் இருப்பதுபோல, இன்றைக்கு எங்கு நோக்கினும் யோகாசன மையங்கள் ஆக்கிரமித்து விட்டன.  இங்கெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ‘’மனஅமைதிக்கான வழிகள்’’ என்று பெரிய அளவில் விளம்பரம் செய்து வியாபாரமும் செய்கிறார்கள். யோகசன மையங்கள் இன்று வாழ்வில் முக்கியத்துவம் பெற்று மனதையும் உடலையும் பாதுகாக்க வழிசொல்வது அவசியமாகிறது. மருத்துவ மனைகளில் உடல்நிலை பரிசோதனை முடிந்த பிறகு, கடைசியாக ‘மனதை அலசி ஆய்வு செய்யும்’ மனநல மருத்துவரின் சான்றிதழும் (psychiatrist certificate) உடல் நல மருத்துவத்துக்கு அவசியமாகி வருகிறது என்பது இங்கே நினைவு கூறத்தக்கது.

யார் சொன்னாலும், எங்கு தேடினாலும் எண்ணற்ற  புத்தகங்களைப் புரட்டினாலும், முடிவாக அனைத்தும் ஒரே ஒரு விஷயத்தைத்தான் வலியுருத்துகிறார்கள். அதாவது மனசஞ்சலங்களை அகற்றுவதற்கு எங்கும் செல்லவேண்டாம், மன அமைதியில்லாமல் இருக்கும் போது உங்கள் இஷ்ட தேவதையை மனதில் இருத்தி அலுவலகத்திலோ, வீட்டில் தனியாக இருக்கும் போதோ அல்லது அமைதியான ஏதோவதொரு இடத்தில் அமர்ந்து ஒரு பத்து நிமிட நேரம் அமைதி காத்து தியானம் செய்யுங்கள் போதும் என்பதே இதன் ஒட்டுமொத்த சாராம்சம். இதைத்தான் நமது முன்னோர்களும், முனிவர்களும், சித்தர்களும், யோகிகளும் நமக்கு விட்டுச் சென்ற ‘வாழ்க்கை ரகசியம்’ என்று கூடச் சொல்லலாம்.

தொடரும

படத்திற்கு நன்றி :

http://suddhasanmargham.blogspot.in/2012_02_01_archive.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.