Blog

  • கொழுகொம்பு

    நித்திரை கலைந்து நினைவுக்கண் விழித்துக் கொண்டதிலிருந்து நாட்டம் எம்மை படுத்தி எடுத்திக் கொண்டிருந்தது. வீட்டில் மனைவி மக்கள் என்ன செய்கிறார்கள் எனச் சிரம் உயர்த்திப் பார்த்தேன். ஆழ்ந்த உறக்கத்தில் மெய்ப்புலங்கள் யாவும் நான்கு உருவங்களுக்குள் கட்டுண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. நான் மெதுவாய் எனும் கூட்டுக்குள் புகுந்து சன்னல் ஓரத்துக்குப் போய், சிறிதே சிறிதாய் திரை விலக்கிப் பார்த்தேன். ஒட்டு மொத்த நீலவண்ணத்தையும் வானக்கூரைக்கு அடித்திருந்தான் இயற்கை தேவன்.

    தூரத்தில் நிற்கும் பெரி மரம் ஒன்று முழுக்க முழுக்க கத்தரிப்பூ வண்ணத்திலான பூக்களால் தன்னைத் தன் நிர்வாணத்திலிருந்து காப்பாற்றிக் கொண்டு நின்றிருந்தது. ஓடிப் போய் அந்த ஆடையின் ஒரு கங்கினைப் பிடித்து இழுத்தாலென்ன என்கிற குறும்பு நினைப்பில் நானிருக்க, அதனுள்ளிருந்து பொத்துக் கொண்டு வெளியேறியது எதையோ ஒன்றை இழுத்துப் பிடிப்பதற்கான வெறிபிடித்த அமெரிக்கன் டிப்பர் குருவியொன்று.  ஆடை கிழிபட்டதில் சிறிதுக்கும் பெரிதுக்குமான இடைப்பட்ட நடுக்கத்தோடு நடுங்கி நின்றது பெரி மரம்.

    இனியும் பொறுத்துக் கொண்டிருந்தால் மனசாட்சி நம்மை, ”நீ ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறாய்? செத்துத் தொலையேண்டா!!” என நாக்கைப் பிடுங்கிக் கொள்ளுமளவுக்கு கேட்டுத் தொலைக்கும் அபாயம் இருக்கிறபடியால், துரிதகதியில் காலைக்கடன்கள் முடிக்கப்பட்டு ஓடுகளப் பாதைக்கு ஏதுவான உடுப்புகளில் உடம்பைப் புகுத்திக் கொண்டேன். உறக்கத்தில் இருக்கும் மனிதங்கள் நான்கும் உறக்கத்திலேயே இருக்கட்டுமென விழைந்து அரவமேதும் இல்லாதிருக்கும்படியாகக் கதவைச் சாத்தி வெளியே வந்தாயிற்று.

    இளங்காலை வெயில் நம்மீது போர்த்தப்பட்டிருக்கும் தோலாடையையும் ஊடுருவி உள்ளே வந்து தசைநார்களை குதூகலத்தால் தோய்த்தது. ஊடுருவப்பட்ட தோலாடையை மேவிவிட்டது மிசிசிப்பி ஆற்றைத் தழுவி வந்த சாரக்காற்று. செவிப்புலத்தில் இசைஞானியின் இசையில் ஜானகியின் மெல்லிசை மதுரம் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது. மனம் சொக்கி போதையில் ஆர்ப்பரித்துக் கொண்டே உடலுக்குள் இருந்து வெளிக்கிளம்பி குளத்திலிருக்கும் நீர்ப்பரப்புக்கும் மேலாக இறக்கை கட்டிப் பறக்கின்றன. சுகித்துக் கொண்டன ஏனைய மெய்ப்புலங்கள் யாவும்.

    இன்னபிற புலங்கள் யாவும் தன்னிலை மறந்து உவப்புக் கொண்டிருந்ததைப் பயன்படுத்திக் கொண்ட கால்கள் இரண்டும் ஓட்டம் பிடித்தன குளத்தின் மருங்கிலிருந்த ஓட்டப்பாதையினூடக! ஐந்தரை மைல் தொலைவு ஓடியதை விழிகளிரண்டு தவிர மற்ற புலங்கள் எதுவும் கவனித்திருக்கவில்லை. வாழ்க்கைச் சுழலில் குளக்கரையில் ஓடுவதென்பதும் வழமையான நிகழ்வாகிவிட்டது.

    காலவெள்ளத்தில் அகப்பட்ட நாம் அவரவர்க்கு விருப்பமான ஏதோவொன்றைப் பிடித்துக் கொண்டபடியே வெள்ளத்தின் போக்கில் பயணிக்கிறோம். இதைச் சொன்ன மாத்திரத்தில் சண்டைக்கு வருபவர்கள் உண்டு. யார் வருகிறார்களோ இல்லையோ, தாய் நாட்டு மக்கள் மீது பாசம் கொண்டவளும் பெண்ணிய மனப்பான்மை கொண்டவளுமான மச்சினிச்சி ஒப்புக்கொள்ள மாட்டாள். எனவே மிகுந்த கவனத்தோடு அமெரிக்காவில் என்பதை இடைச்செருகலாகப் பாவித்து திருத்திச் சொல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் இருக்கின்றன.

    ஒருவர் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதெல்லாம் கூட மற்றவர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது உலகின் ஏனைய பகுதிகளில். அத்தகைய தீர்மானங்கள் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. தனி மனிதர்களால் தன் அகத்தின் விருப்புக்கொப்ப வாழ இயலவில்லை. இதன் காரணமாய் எனக்கும் என் மச்சினிக்குமிடையே முரண்பாடு எழுகிறது. எனவே ஏற்கனவே சொன்னது சற்று மாற்றிச் சொல்லப்படுகிறது.

    காலவெள்ளத்தில் அகப்பட்ட அமெரிக்காவாழ் மக்கள் அவரவர்க்கு விருப்பமான ஏதோவொன்றைப் பிடித்துக் கொண்டபடியே வெள்ளத்தின் போக்கில் பயணிக்கிறார்கள். தகுந்த காரணங்கள் இருப்பின், காலத்தின் போக்கையும் தேவைக்கொப்ப மாற்றிக் கொள்கிறார்கள்

    வாய்ப்புக் கிடைக்கிற போதெல்லாம் குளக்கரையில் ஓட வேண்டும். இது எமக்குக் கிடைத்த மிதவுகோல். இதைப் பற்றி மிதந்து பயணிக்கிறேன் காலவெள்ளத்தினூடாக. என்னுடைய அலுவலக நண்பன் மனோஜ் வதேரா என்பவனுக்குக் கிடைத்திருப்பது மற்றொன்று. கால அவகாசம் கிடைக்கும் போதெல்லாம் ஆற்றுப்படுகைக்குச் சென்று விடுகிறான்.

    மெம்ஃபிசு நகரத்தில் இதற்கென்றே ஒரு தனிப்பட்ட குழுமம். குழும உறுப்பினர்கள் யாவரும் தன்னார்வலர்கள். யாருடைய அறிவுறுத்தலுக்கோ நிபந்தனைக்கோ ஆட்படாதவர்கள் இவர்கள். எனக்கும் கூட ஆசையுண்டு. இருக்கிற ஆசையெல்லாம் நிறைவேறிவிட்டால் வேறென்ன இருக்கும்? இக்குழுமத்தில் இருப்பவர்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து சேர்க்கும் அந்த நாட்டச்சுவை எதில் கிடைக்கிறது? கைப்படகுகளில் ஏறி ஆற்றுக்குள் பயணித்துத் தூய்மைப்படுத்துவதில் கிடைக்கிறது மனத்துக்கு இனிமையூட்டும் காயகல்பம்.

    வார ஈற்று நாட்களில் வீட்டில் இருக்க மாட்டான் மனோஜ். கைப்படகும் நீர்நிலைத் தூய்மையாளர்களுமென எங்காவது துடுப்படித்துக் கொண்டிருப்பான்.  அவனோடு அவனது குழுமத்தைச் சார்ந்த மற்றவர்களும் அவரவர் கைப்படகுகளோடு ஆற்றங்கரைக்கு வந்து விடுகிறார்கள். கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து நாட்டு நடப்பு, உலக நடப்பு, ஊர்க்கதை, வீட்டுக்கதை, பகடி, எள்ளல், கேலி, சிரிப்பு எனப் பலதையும் மென்று தின்று கொண்டே ஆற்றுக்குள் படகைச் செலுத்துகிறார்கள். உடலுக்கு நல்ல பயிற்சி. மனத்துக்கு நல்ல களிப்பு. ஆற்றின் அழகுக்கும் செயலுக்கும் ஊறு விளைவிக்கிற எதைக் கண்டாலும் களைந்து அப்புறப்படுத்தி மகிழ்கிறார்கள். ஆற்றின் கரைகளைத் தன்னுடல் போலக் காதலித்து அவற்றோடு வாழ்வுப் புணர்ச்சி கொள்கிறார்கள்.

    மனோஜ் வதேராவின் மனைவி பாருல் வதேரா. பழகுவதற்கு மிகவும் இனிமையானவள். மருத்துவராக வேலை பார்க்கிறாள். தான் பார்க்கும் மருத்துவர் வேலையைக் காட்டிலும் அவளுக்குப் பிடித்தது குப்பை பொறுக்குவது. பொறுக்கி என்பதில் அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவளுக்குக் கிடைத்த கொழுகொம்பு அது. பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர்கள், கணக்கர்கள் எனப் பலதுறைகளைச் சார்ந்த தன் நண்பர்களோடு குப்பை பொறுக்குவதில் புணர்ச்சியுச்சம் கொள்வது அவளது வாடிக்கை. விடுப்பு நாட்கள், மாலை நேரங்கள் என்கிற போதெல்லாம் பூங்காங்கள், பெருந்தெருக்கள் முதலான இடங்களுக்குச் சென்று குப்பை பொறுக்கிப் போடுகிறாள். இதற்கென ட்ரேஷ் பிக்கப் கிளப்புகள் இருக்கின்றன. இவற்றின் வாயிலாக நிறையத் தொடர்புகள் கிட்டுகிறது, கும்பலாய்ச் சென்று வெளியில் திரிந்து வருவதில் சுவாரசியம் என்கிறாள் பாருல்.

    தெருவின் கடைக்கோடி வீட்டிலிருக்கும் ஸ்டெஃபனி தனித்து வாழும் தாய். ஒரே மகன் ஜேசன். பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களின் போதான சந்திப்பில் நாங்கள் அறிமுகம் ஆகிக் கொண்டோம். அவளுக்கு காப்பீட்டு நிறுவனமொன்றில் நுகர்வோர் தொடர்பாளர் வேலை. வீட்டைச் சுற்றிலும் சர்க்கரைப்பாகுத் தூக்கிகளை அங்கங்கே வைத்திருக்கிறாள். ஓசனிச் சிட்டுகளுக்கு ஊணூட்டி உயிரூட்டுவது அவளுக்கான பற்றுதல். மரங்களை வளர்த்து, செடிகளுக்கு மராமத்துச் செய்து சூழல்பாதுகாப்புக்கு நல்கும் உழைப்பே அவளுக்கான துணை.

    இடைக்கிடையே ‘ஹம்மிங்பேர்டு’ பட்டறைகளை நடத்தி விழிப்புணர்வு வேலைகளைச் செய்கிறாள். காடுகளுக்குப் போகிறாள். இவளுக்கு தனிப்பட்ட உதவிகள் தேவைப்படும் போதெல்லாம் ஹம்மிங்பேர்டு குமுகத்தினர் வந்து உதவுகிறார்கள். இப்படியானவை மனிதனுக்கும் மனிதனுக்குமான பிணைப்பைக் கொண்டு வந்து விடுகின்றன. உயிர்த்தோம்;இருந்தோம்;மரித்தோம் என்பதை மாற்றி, வாழ்ந்தோம் என்பதற்கான இலக்கணத்தை ஊட்டி விடுகின்றன.

    மென்மையாகப் பேசுவாள் ஸ்டெஃபனி. ஓசனிச்சிட்டுவைப் போலவே இருப்பாள் அவளும். அவள் வீட்டைக் கடந்து வரும் போதெல்லாம் நின்று பார்த்து வருவது தவிர்க்க இயலாதது. நான் எதுவும் செய்வதில்லை. ஓசனியோடு ஓசனியாய் அவளும் இருந்திட மாட்டாளா எனக் கண்கள் தேடுகின்றன. ஓசனியின் சிறகடிப்பு, சிலுசிலுப்பு ஒலிகள், இணுக்குகள் ஒடிந்து விடாதபடிக்கு உட்கார்ந்து தாவிச்செல்லும் பாங்கு முதலானவற்றைத்தான் நான் பார்க்கிறேன். அவ்வளவுதான்!

    குளக்கரைக்கு வரும் போது கூட அவளைப் பார்த்தேன். மண் அள்ளிப் போட்டுச் செடிகளை நட்டுக் கொண்டிருக்கிறாள்.  பெட்டூனியா பூச்செடிகளிருக்கும் பூந்தொட்டியிலிருந்து தவழ்ந்து வரும் ஓசனியின் இளமஞ்சள் இறகொன்று, குனிந்திருக்கும் அவளது பின்னங்கழுத்தினை வருடிக் கொஞ்சியது. தலை நிமிர்ந்து பார்க்கையில் அவள் கண்ணெல்லையில் நான் நிற்கிறேன். ஓசனிச் சிறகடிப்பின் அதிர்வை ஒத்திருந்த அவளது கண்ணிமைகளின் அதிர்வில் அவளையண்டி இருந்த மொனார்டா மலர்கள் நாண, மலரின் கருநீல வண்ணம் வெண்மையேகி நீலமாய் ஒளிர்ந்தது. “ஹாய் மணி” சொன்னவளின் வெண்மணிப் பற்களில் நீலம் பட்டுத் தெறிப்பதைக் கண்டு இளமுறுவல் பூக்கிறேன் நான். இனிமேலும் நான் இங்கு நின்றால் ஓசனிகள் படையெடுத்து வந்து என்னை விரட்டக் கூடும். என் வேலையை நான் பார்க்க வேண்டுமென்கிறபாட்டில் இங்கு வந்து விட்டேன் நான்.

    காலியர்வில் நகராட்சியின் நூலகத்தை ஒட்டினாற்போல இருக்கும் ’ஹால்’ பூங்காவிலிருக்கும் குளக்கரையில்தான் ஓடிக் கொண்டிருக்கிறேன். நாளொரு முறையாவது வந்து குளத்தடியில் ஓட வேண்டும். அப்படிச் செய்யும் போது எனக்கான அந்த நாள் சிறப்புக் கொள்கிறது. மொத்தத்தில் மனமும் வளம் பெறுகிறது. யார் யாருக்கோ என்னவெல்லாமோ இருக்கையில், குளக்கரையே எனக்கான தொடுப்பு.

    அதோ குளத்தின் அந்த மூலையிலிருக்கும் வங்குக்கு நேர் மேலே குத்திட்டிருக்கும் பெரியவருக்கு மீன்பிடிப்பது குதூகலம். சனி, ஞாயிறுகளில் தன் பேரனையும் கூடக் கூட்டி வந்து இன்னோர் இடத்தில் உட்கார வைத்து விடுகிறார். மீனுக்காக மீன் பிடிப்பதில்லை இங்கு யாரும். தூண்டிலில் அகப்பட்ட மீனைக்கூட மீண்டும் குளத்திலேயே விட்டு விடுகிறார்கள்.

    குளக்கரையில் மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கிறார்கள். பொறுமையாக உட்கார்ந்திருக்கிறார்கள். மெளனத்தைச் சுவாசித்து சிலையாய் வீற்றிருந்து காலத்தைப் புசிக்கிறார்கள். ’தூண்டிலாளர்கள்’ என்ற பெயரில் நீர்நிலையெங்கும் உலாப் போகிறார்கள். தூண்டில் போட்டு மீன் பிடிக்க தனி உரிமங்கள் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். அலுவலகத்தில் இருக்கும் ’கிடாயன்’ ரோபர்ட் ஜான்சன் ஒரு தூண்டிலான். எப்போது பார்த்தாலும் ஃபிஷ்ஷிங் பற்றியே பினாத்திக் கொண்டிருப்பான். அதற்கென்ற வார, மாத இதழ்களோடு மீன்பிடிப் பெட்டியையும் வெத்தலை பாக்குப் பெட்டி போல கொண்டு திரிவான். அலுவலக அரட்டைகளின் போது, தூண்டிலாளர் குமுகாய அனுபவங்களைத் தின்று ஏப்பம் விடுவான். இரத்த அழுத்தம், மனநோய் போன்றவர்களுக்கு மீன்பிடிப்பு ஒரு நிவாரணம் என்கிறான். தன்னம்பிக்கையை வளர்த்து இணக்கத்தைப் பெருக்கும் என்கிறான். இந்தக் குளத்திலும் எப்போதும் யாராவது மீன்பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மன அமைதியும், வெளியின் இலக்கணமற்ற இசையும், நீர்நிலையின் மணமும் முகில்களின் காற்றுக்கொத்த ஓடுபராக்கும் விலையில்லாப் பண்டமாய்க் கிடைக்கின்றன. அனுபவிப்பவன் பேறு கொண்டவனாகிறான்.

    குளத்தையொட்டி இருக்கும் மரங்களுக்கும் எனக்குமிடையில் நேசம் உண்டு. சென்ற கோடையில் இட்டுச் சென்ற கனடியக் கீசுகளின் முட்டைகள் எல்லாமும் வசந்தகாலக் குஞ்சுகளாய் பூத்திருக்கிறது குளத்தின் கீழ்க்கரையில். வசந்தகால இலை துளிர்ப்புக்கான காத்திருத்தலுடன் குச்சி மரங்களாய் இருக்கும் செரி மரங்களின் நுனிக் கிளைகளில் அமர்ந்து  உச்சி மாநாடு நடத்திக் கொண்டிருக்கின்றன கருந்தாரிச் சிட்டுகள்.

    அந்த வெள்ளைக்காரப் பெண்மணியின் பெயர் எனக்குத் தெரியாது. ஆனால் அவளுடையதன் பெயர் சோமா. அவள் அவனை அப்படித்தான் விளித்து அழைக்கிறாள். வாட்டசாட்டமாய் இருக்கிறான் சோமா. கருமைநிற வெல்வெட்டுத் துணியைப் போர்த்தினாற்போல அவனது மயிர்க்கற்றைகள். அருகிலிருக்கும் வளவு ஒன்றில்தான் வசிக்கிறாள். அவ்வப்போது சோமாவை அழைத்துக் கொண்டு அவளும் வந்து விடுகிறாள் குளக்கரைக்கு.

    ஐந்தாவது மைல் ஓட்டத்தின் துவக்கத்தில்தான்  காட்சியொன்று அங்கே ஈடேறியது. குளத்தின் மடுவிறக்கத்திலிருந்த அந்தப் பெண் மஞ்சள் வண்ணப் பந்தொன்றை ககனமார்க்கத்தினூடாக குளத்துக்குள் விட்டெறிந்தாள். கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த நாயொன்று தரைமார்க்கத்தினூடாக பந்தின் வேகத்துக்கொப்ப இணையாக ஓடி, ஓடி, குளத்தின் நீருக்குள் பாய்ந்து, வேகத்துக்கிணையாகவே நீச்சலடித்து வீரியமிழந்து வீழ்ந்த பந்தினை லபக்கென்று தன் வாயால் கவ்வி எடுத்துக் கொண்டு வந்தது. மீண்டும் பந்தை வீசாமல் கையை மட்டும் தம் திறம் கொண்ட மட்டும் பின்னால் இழுத்து வேகமாய் வீசினாள். பந்து அவளது கையிலேயே இருப்பதைக் கூர்ந்த நாய் ஒரு இம்மி கூட நகரவில்லை. வாலை ஆட்டிக் குழைந்தது.

    பந்தினை வேகமற்ற வேகத்தோடு செங்குத்தாய் வீசி இலாகவாமாய்ப் பிடித்துக் கொண்ட பின்னர், மீண்டும் திறம் கொண்ட மட்டும் கையை வீசி எறிந்தாள். நாய் வாளாமல் அதே இடத்தில் நின்று கொண்டே வாஞ்சையாய் அவளைப் பார்த்தது. பந்தினை இரு உள்ளங்கைகளுக்குள் பிடித்தபடி அதை உருட்டிப் படுத்தினாள் அவள். இவளுக்கென்ன விசர் பிடித்திருக்கிறதா எனும் பாங்கில் அவளை வேடிக்கையாய்ப் பார்த்துக் கொண்டு நின்றது அந்த நாய்.

    பிணையல் முடிந்ததும் இடத்தை விட்டு விறுக்கென்று ஓடி மறையும் பாம்பினது வேகத்தில், பந்தினை விட்டு வீசுவதைப் போலத் தன் வலக்கையை குளத்தை நோக்கி வீசினாள் அவள். நாயும் வானைப் பார்த்துக் கொண்டே குளத்தை நோக்கி ஓடி ‘தபோர்’ என குளத்து நீருக்குள் பாய்ந்து வீழ்ந்தது. பந்து மட்டும் இன்னமும் அவள் கைகளிலேயே இருந்தது. வெற்றிப் பெருமிதத்தில் திளைப்பும் செருக்கும் அவளுக்கு.

    கடைசி வட்ட ஓட்டத்தினை ஓடி நிறைக்கும் நோக்கில் நம் கால்கள் வேகமெடுத்தன. அலைகளின் ஒத்திசைவுக்கொப்ப மதகில் நீர் துள்ளிக் குதித்து கடை போனதைக் கவனித்த விழிகள் வியப்பில் நகைத்துக் கொண்டன. நம்மைப் பார்த்த டென்னசி நீல பூபிப் பறவைகள் விருட்டென மேலெழும்பிப் பறந்து போயின. இனி வீடு நோக்க வேண்டும். அல்லாவிடில் மனைவியென்னும் அதிரூபத்துக்கு முன்னால் வீழ வேண்டி இருக்குமெனக் கருதி கால்கள் ஓட்டத்தினின்று தாழ்ந்தன. மெய்ப்புலங்கள் யாவும் சொக்கு நிலையிலிருந்து திரும்பிக் கொண்டன. அப்போதுதான் கவனித்தேன். இன்னமும் அந்த நாய் குளத்துக்குள்ளேயேதான் இருக்கிறது. பல நேரங்களில் நாய்களும் பாடங்கள் பல கற்பிக்கும்.

    “சோமா, ஐ அம் சாரி. ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மி திஸ் டைம். ஐ வில் நெவர் டு திஸ் டு யூ. இனிமேல் இப்படி செய்யவே மாட்டேன் சோமா. மன்னிச்சிடு. குளத்துக்குள்ள பந்து வீசுற மாதிரி நடிச்சி உன்னை ஏமாத்த மாட்டேன். வெளியில வா. ப்ளீஸ் சோமா!!”, இனி அது எப்போது மனம் இளகி மன்னிப்பு வழங்குமோ தெரியாது.  கீரியைக் கீறுவானேன்? பிராண்டலுக்கு பச்சிலை தேடுவானேன்??

    அறிவியல் கோட்பாடொன்றைக் கண்டு கொண்ட ஆர்க்கிமிடிசு அம்மணமாய்த் தெருவில் ஓடியதைப் போல, எதையோ கண்டு கொண்ட பாவனையில் தாவித் தாவி தப்படி போட்டு ஓடிக் கொண்டிருக்கிறது அது. ஆமாம்!  பூங்காவின் ஓரத்திலிருக்கும் ப்ளாக்பெரிச் செடிகள் அடர்த்தியாய் வளர்ந்து நிற்கும் அந்தப் புதரிலிருந்து ‘விருட்’டென வெளிக்கிட்டு ஓடிக் கொண்டிருக்கிறது பெருமுயலொன்று!!

    Share
  • நாகரிக மனிதனின் வியாதிகளும், காட்டுமிராண்டி உணவுமுறையும்- 5

    செல்வன்

    இன்றைய மருத்துவர்களால் பரிந்துரைக்கபடும் உடல்நல குறிப்புக்களை ஆதிமனிதன் பின்பற்றி இருந்தால் மனித இனமே பரிணாம வளர்ச்சியில் பின் தங்கி இருக்கும். அந்த அளவு மோசமான அறிவுரைகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கபடுகின்றன. உதாரணம் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் உண்ணச் சொல்லி இவர்கள் கொடுக்கும் அறிவுரை. முட்டையில் உள்ள மினரல்கள், வைட்டமின்கள் எல்லாமே மஞ்சள் கருவில் தான் உள்ளன. முட்டையின் மஞ்சள் கரு என்பது ஒரு உயிருக்குத் தேவையான அனைத்து மூலப்பொருளையும் கொண்டது. அத்தகைய சத்தான மஞ்சள் கருவை தூக்கி எறிந்து வெள்ளைக் கரு ஆம்லட்களை உண்டு பலரும் உடல்நலனை கெடுத்து கொண்டார்கள். முட்டைக்கு பதில் கடைகளில் விற்பனைக்கு வந்த எக் ஒயிட்டில் பல கெமிக்கல்கள், பிரசர்வேடிவ்கள் கலக்கப்பட்டு இருந்தன.

    இதே மாதிரி பாலைக் குடிக்க வேண்டாம் எனச் சொல்லி கொழுப்பு நீக்கிய ஸ்கிம் மில்க்கை குடி என இவர்கள் கூறிய அறிவுரையையும் சேர்த்துக் கொள்ளலாம். கொழுப்பு எடுத்த பாலை கொட்டிய பால் என தமிழகத்தில் அழைப்பார்கள். அதில் புரதம், கால்ஷியம் தவிர்த்து எதுவும் கிடையாது. பாலில் இருக்கும் கொழுப்பை நீக்கியவுடன் அதில் உள்ள வைட்ட்மின் ஏ, வைடமின் டி எல்லாம் அகன்றுவிடும். அதனால் செயற்கையாக வைட்டமின் ஏவையும், வைட்டமின் டியையும் கொட்டிய பாலில் கலந்து வந்தார்கள். ஆனால் வைட்டமின் ஏவும், வைட்டமின் டியும் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள். பாலில் உள்ள கொழுப்பு இன்றி அவை உடலில் சேருவது இல்லை. கழிவில் அப்படியே அந்த வைட்டமின்கள் வந்துவிடும். கொட்டிய பாலில் செயற்கையாக சேர்க்கப்பட்ட அந்த வைட்டமின்கள் நம் உடலில் சேரவேண்டும் எனில் கொட்டிய பாலை உண்கையில் பாலுடன் வெண்ணையை உண்ண வேண்டும்!!!!

    கொட்டிய பால் உடலுக்கு நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைத்ததும் பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்கள். அதற்கு முன் கொட்டியபாலை அவர்கள் விற்காமல் கொட்டித்தான் வந்தார்கள். அதற்கு இப்படி ஒரு சந்தை கிடைத்ததும் அவர்களுக்கு மகிழ்ச்சி.

    2 வயது முதல் குழந்தைகளுக்கு கொட்டியபாலை கொடுக்கச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சமீபத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் உங்கள் வயது ஐம்பதை தாண்டி உங்களுக்கு ரத்த அழுத்தம் இருந்தால் உங்களுக்கு ஸ்டாடினை பரிந்துரைக்கலாம் என எப்.டி.ஏ ஒரு விதியை அறிமுகபடுத்தியது. இதனால் கொலஸ்டிரால், இதய அடைப்பு பிரச்சனை எதுவும் இல்லாத  65 லட்சம் அமெரிக்கர்கள் ஸ்டாடினை உட்கொள்ளக்கூடிய நிலைக்கு ஆளானார்கள்.

    ஆனால் ஆய்வுகள் இதுகுறித்து என்ன கூறுகின்றன? மந்காட்டன், நியூயார்க் பகுதியில் வாழ்ந்த முதியவர்கள் 2277  பேரைப் பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ந்ததில் கிடைத்த புள்ளிவிவரங்கள் கொல்ஸ்டிராலும், எல்டிஎல்லும் மோசமானவை எனக் காட்டவில்லை. மாறாக எத்தனைக்கெத்தனை கொலஸ்டிராலும், எல்டிஎல் விகிதமும் அதிகமாக இருந்ததோ அத்தனைக்கு அத்தனை அவர்கள் அதிகமாக உயிர்வாழ்ந்தார்கள்.

    Inline image 2

    இந்த ஆய்வின்படி மொத்த கொலஸ்டிரால் அளவு 175க்கு கீழ் இருந்தவர்களில் 97% 10 ஆண்டுகளில் உயிர் இழந்தார்கள்.

    கொலஸ்டிரால் 176ல் இருந்து 200 வரை இருந்தவர்களில் 78% பேர் 10 ஆண்டுகளில் உயிர் இழந்தார்கள்.

    கொலஸ்டிரால் 200 தாண்டியதும் மரணங்கள் கிட்டத்தட்ட சரிபாதியாக (57%) குறைந்தன.

    அதேபோல் கெட்ட கொலஸ்டிரால் எனப்படும் எல்டிஎல் கொலஸ்டிரால் 97க்கு கீழ் இருந்தவர்களில் 90% பேர் 10 ஆண்டுகளில் உயிர் இழந்தார்கள். ஒப்பீட்டளவில் மருத்துவர்கள் ஸ்டாடின் கொடுக்கும் அளவு “மோசமாக” கருதப்படும் 144 என்ற அளவைத் தாண்டி எல்.டி.எல் இருப்பவர்களில் 53% பேர் 10 ஆன்டுகளில் மரணம் அடைந்தார்கள்.

    இன்றைய மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அதிகபட்ச எல்.டி.எல், மொத்த கொலஸ்டிரால் அளவு என்ன?எல்.டி.எல் 130.மொத்த கொலஸ்டிரால் 200. நீங்கள் வயதானவராக இருந்து, மருத்துவர் சொல்லும் அளவுகளுக்கு உங்கள் கொலஸ்டிராலை குறைத்தால் என்ன ஆகும்?

    முட்டையை குறித்து நடத்தபட்ட்ட ஆய்வுகள் மருத்துவ அறிவுரைகள் எவ்வளவு தவறானவை எனக் காட்டின.

    கிட்டத்தட்ட 10 லட்சம் பேரை வைத்து சீனாவில் நடத்தபட்ட இந்த மெகா அனாலிசிஸ் ஆய்வு முட்டை உண்பதற்கும், ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் அளவுக்கும், இதயநோய்களுக்கும் ஸ்னானபிராப்தி இல்லை என்றது. உங்களுக்கு சக்கரை இருந்தால் முட்டை உங்களுக்கு இதய்நோயை வரவழைக்கும் (ஆனால் அது இந்த நிலையில் கூட ஒரு சந்தேகத்துக்கு உரிய கருதுகோள் தான்). டயபடிஸ் இல்லாதவர்கள் முட்டையை உண்டால் அது அவர்கள் ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் அளவை எந்த விதத்திலும் பாதிப்பது இல்லை, இதயநோயும் வருவது இல்லை என்கிறது பேராசிரியர் லியூவின் ஆய்வு.

    முட்டையின் வெள்ளைக் கருவை உண்டு, கொழுப்பு எடுத்த பாலை குடித்துத் தான் நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக இருந்தார்களா என்ன?

    (தொடரும்)

    Share
  • அமெரிக்கப் பெண்கள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்கப் பெண்கள்  எல்லாவற்றிலும் ஆண்களுக்குச் சமமாகத் தாங்களும் செயல்பட  வேண்டும் என்று நினைக்கிறார்கள்.  இப்போது ராணுவத்திலும் ஆண்களோடு சமஉரிமை வேண்டும் என்று கேட்கிறார்கள்.  ஆண்களுக்குத் தரப்படும் எல்லாப் பதவிகளும் இவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டுமாம்.  ஆண்கள் செய்யும் எல்லா முரட்டு வேலைகளையும் (பெரிய பளுக்களைத் தூக்குவது இதில் ஒன்று), செய்வது, ஈவு இரக்கமற்று எதிரிகளைக் கொல்வது, சண்டையில் சகாக்கள் அடிபட்டு வேதனையால் துடிப்பதையும் உயிருக்குப் போராடுவதையும் பார்த்து மனதைக் கல்லாக்குவது என்று ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் இவர்களும் செய்ய வேண்டுமாம்.  இதற்காக இராணுவத்தில் எல்லா வேலைகளையும் பெண்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற விதியை ராணுவ அமைச்சர் அமுகலுக்குக் கொண்டுவந்திருக்கிறார்.  சம உரிமைகளுக்காகப் போராடுவதற்கு ஒரு எல்லையே இல்லையா?  நான் எப்போதும் கூறுவதுபோல் இயற்கை  பெண்களையும் ஆண்களையும் ஒன்றாகப் படைக்கவில்லை.  ஆணின் உடம்பிற்குள்ள பலம் பெண்ணின் உடம்பிற்கு இல்லை.  பெண்ணால்தான் பிள்ளை பெற முடியும்.  சம உரிமை வேண்டும் என்பதால் ஆண்களையும் பிள்ளை பெறும்படி இவர்களால் பணிக்க முடியுமா?

    மேலும் இராணுவத்தில் பணிபுரியும்  பல பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுகிறார்கள்.  ஆண்களுக்கும் இந்தக் கொடுமை நடக்கிறதாம்.  இருந்தாலும் இப்படிப் பெண்கள்  தேவையில்லாமல் ஆபத்திற்குத் தங்களை உட்படுத்திக்கொள்ள  வேண்டுமா?

    எனக்குத் தெரிந்த ஒரு  பெண் ஒரு டிபார்ட்மெண்ட் கடையில் மெத்தைகள் விற்கும் பகுதியில் மேனேஜராக வேலைபார்க்கிறாள்.  இவள் மேனேஜர் என்பதால் மெத்தைகளை  இவளே தூக்க வேண்டியதோ நகர்த்த  வேண்டியதோ இல்லை.  ஆனாலும்  குழந்தை பெற்றுக்கொண்ட  ஒன்றரை மாதங்களிலேயே வேலைக்குச் சேர்ந்து (அதற்கு மேல் விடுமுறை இல்லை) கனமான மெத்தைகளைத்  தூக்குகிறாள்.  தன்னால்  இனியும் இந்த மாதிரி வேலைகளைச்  செய்ய முடியும் என்பதைப் பிறருக்கு எடுத்துச் சொல்வது போல் இருக்கும் இவள் செய்யும் வேலை

    குழந்தை பெறுவது மட்டுமில்லை, அதன் பிறகு கொஞ்ச காலத்திற்காவது பாலூட்டி வளர்க்க வேண்டியது பெண்ணின் கடமை ஆகிறது.  இந்தக் கடமையையும் ஆண் சேர்ந்து சுமக்க வேண்டும் என்கிறார்களா?  பாலுறவுச் சுதந்திரம் வேண்டும் என்று கேட்டதால் இன்று சமூகத்தின் தூண்களில் ஒன்றான குடும்பம் என்ற அமைப்பு வலுவிழந்து போயிருக்கிறது.  இப்போது இராணுவத்தில் பணிபுரிய விரும்புவதால் இந்த அமைப்பு இன்னும் வலுவிழக்கும் என்று ஏன் இவர்கள் உணரவில்லை?  மேலும் பல ஆண் போர்வீரர்களே இராணுவத்தில் பணிபுரியும்போது அங்குள்ள கோரங்களைப் பார்த்துவிட்டு மனவியதியால் (Post traumatic disorder) பாதிக்கப்படுகிறார்கள்.  சிலர் இந்த வியாதியின் காரணமாக கொலைகாரர்களாகவும் மாறுகிறார்கள்.  ஆண்களே இவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டால் பெண்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுவார்கள்?  பெண்கள் தங்கள் புத்திசாலித்தனத்தை உபயோகித்துச் செய்யக் கூடிய வேலைகள் எத்தனையோ இருக்கின்றன.  இராணுவத்தில் சில வேலைகள் பெண்களுக்கு மறுக்கப்படுவதால் பெண்களுக்கு ஆண்களோடு சம வேலைவாய்ப்புகள் இல்லையாம்.  அதனால் போராடித் தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக்கொண்டார்களாம்!  அமெரிக்கா செல்லும் திசை சரியில்லை என்று நான் நினைப்பதற்குப் பல காரணங்கள் உண்டு.  இராணுவத்தில் எந்த வேலைக்கும் பெண்களும் நியமிக்கப்படலாம் என்ற விதியும் அந்தக் காரணங்களில் ஒன்று.

    சில தினங்களுக்கு முன் வந்த ஒரு செய்தி பெண்கள் குற்றம் புரிவதிலும் ஆண்களோடு தங்களுக்குச் சமஉரிமை வேண்டும் என்று கேட்பது போல் இருக்கிறது.

    டெலவேர் என்னும் மாநிலத்திலுள்ள லிங்கன் என்னும் ஊரைச்  சேர்ந்த மார்கரெட் ஸ்மித் என்னும் 89 வயதான மூதாட்டி வரப் போகும் ஈஸ்டர் பண்டிகைக்காக தன் வீட்டிற்கு வரப் போகும் உறவினர்களுக்குப் பரிசுகள் வாங்கக் கடைக்கு தன் பியூக் காரில் சென்றார்.  இவர் உயரம் 4’ 11” தான்.  தாட்டியான உடம்பில்லை.  காரின் ஸ்டியரிங்கைப் பிடித்து ஓட்டுவதற்கு டிரைவர் இருக்கையின் மீது ஒரு தலையணைய உயரத்திற்காக வைத்திருந்தார். வழியில் ஒரு இடத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என்று எண்ணி அந்தக் கடையின் முன் உள்ள கார்கள் நிறுத்துமிடத்தில் காரை நிறுத்தினார்.

    இவருடைய வாழ்க்கைச் சரித்திரத்தைக் கொஞ்சம் பார்ப்போம். லிங்கன்  ஊரின் ஸ்லாட்டர் நெக் என்னும்  தெருவில் பெற்றோரின் பன்னிரெண்டு குழந்தைகளில் ஒருவராக மார்ச் 1924-இல் பிறந்தார்.  தந்தை தொழிற்சாலையில் வேலைபார்த்ததோடு விவசாயமும் செய்துவந்தார். பெரும்பான்மையாக கருப்பு அமெரிக்கர்கள் வாழும் இடம் ஸ்லாட்டர் நெக்.  அவர்கள் வீடு, நிலம், பள்ளி எல்லாம் அங்குதான்.  அவர்கள் இறைவனை வழிபடும் சர்ச் கூட அங்குதான் இருக்கிறது. அங்குள்ள பள்ளியிலேயே பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு பிலடெல்பியாவிற்குப் போய் முடி அலங்காரம் செய்யும் படிப்பை முடித்துவிட்டு மறுபடி ஸ்லாட்டர் நெக்கிற்கே திரும்பி அங்கு ஒரு அழகு நிலையத்தைத் துவங்குகிறார்.  முதல் திருமணம் விவாகரத்தில்முடிந்தது; இரண்டாவது கணவர் இளவயதிலேயே இறந்துவிட்டார்.  மூன்றாவது கணவரோடு 42 வருடங்கள் வாழ்ந்தார்.  2010-இல் அவர் இறந்துவிட்டார்.

    எல்லோரிடமும் மார்கரெட் அன்பாகப் பழகுவார்.  சர்ச்சில் பாட்டுப் பாடுவார். தன்னார்வத் தொண்டு செய்வார்.  இவருடைய அழகு நிலையத்திற்கு பல மைல் தொலைவிலிருந்து வருபவர்களும் உண்டு.  உள்ளூரில் இவருக்கு நல்ல பெயர்.  பத்து வருடங்களுக்கு முன் தொழிலிருந்து ஓய்வு பெற்றார். பக்கத்து வீட்டுக்காரர் இறந்து போனதும் அவருடைய பூனையை மிகவும் அன்போடு வளர்த்து வந்தார்.

    கார் நிறுத்துமிடத்தில்  காரை நிறுத்தியிருந்த இவரை இரண்டு இளம் பெண்கள் – வயது 15,14 – அணுகி நகரின் அடுத்த கோடிக்குப் போக வேண்டும் என்றும் தங்களை அவர் அவருடைய காரில் கூட்டிச் சென்றால் பனம் கொடுத்துவிடுவதாகவும் கூறினர்.  முதலில் தயங்கிய மூதாட்டி பின் அவருக்கே உரிய இரக்க சுபாவத்தினால் அவர்களைத் தன் காரில் கொண்டுவிடுவதாகவும் ஆனால் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும் கூறி அவர்களைத் தன் காரில் ஏற்றிக்கொண்டார்.  அந்தப் பெண்கள் மீது இரக்கம் காட்டியதுதான் அவர் செய்த பெரிய தவறாகப் போய்விட்டது.

    காருக்குள் ஏறியவுடனேயே  கார்ச் சாவியை மூதாட்டியிடமிருந்து  பறித்துக்கொண்ட அந்த இரு  பெண்களும் மூதாட்டியை கார் டிக்கிக்குள் தள்ளிப் பூட்டிவிட்டு காரை ஓட்டத் தொடங்கினர். இடையில் ஒரு இடத்தில் காரை நிறுத்தி டிக்கியைத் திறந்து மூதாட்டியிடமிருந்த 500 டாலர் பணத்தைப் பறித்துக்கொண்டு மறுபடி டிக்கியிலேயே வைத்துப் பூட்டினர்.  அவரிடமிருந்த செல்போனையும் பறித்துக்கொண்டனர்.  இரண்டு நாட்கள் நாற்பது டிகிரி குளிரில் ஆகாரமும் இருதய வியாதிக்கும் இரத்த அழுத்தத்திற்கும் தேவையான மருந்துகளும் இல்லாமல் அந்த டிக்கியில் காலம்கழித்த அவரை மறுநாளைக்கு மறுநாள் டிக்கியிலிருந்து விடுவித்து ஒரு கல்லறைத் தோட்டத்தில் விட்டுவிட்டு அந்தப் பெண்கள் ஓடிவிட்டனர்.

    எங்கிருக்கிறோம் என்பதே தெரியாமல்  மூதாட்டி வெறும் கால்களோடு அந்த மண் ரோட்டில் தவழ்ந்து வந்துகொண்டிருந்ததை நல்ல வேளையாக ஒரு பெண் பார்த்து அவரை அருகிலுள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தார்.

    ஒரு மூதாட்டியை இப்படி வஞ்சித்து  அவரிடமிருந்து பணத்தைத் திருடி,  அவரை டிக்கியில் இரண்டு நாட்கள் இருக்கும்படி செய்து, பட்டினி போட்டு அரக்கத்தனமாக ஆள் நடமாட்டமில்லாத ஒரு கல்லறைத் தோட்டத்தின் அருகில் அம்போ என்று விட்டுவந்த இந்த அரக்க அமெரிக்கப் பெண்களை எதில் சேர்ப்பது?  இவர்கள் ஆண்களுக்கு நிகராகக் குற்றம் புரிகிறார்களா?

    இந்தியாவில் இப்படிப்பட்ட வக்கிர நடத்தை கொண்ட பதின்ம வயதுப் பெண்களை சமூகம் உருவாக்காது  என்று நினைக்கிறேன்.

    அமெரிக்கப் பெண்கள் தங்கள் உடல் அமைப்பை மீறி இயற்கை எல்லையைத் தாண்டினால் அது அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று நினைக்கிறேன்.

    Share
  • மை லிட்டில் ரெட் வேகன்

     

    தேமொழி

    மாற்றுடைகளைத் தோளில் போட்டுக்கொண்டு துவாலையும் கையுமாகக் குளிக்கக் கிளம்பிக்கொண்டிருந்தார் பானுமதி. அவரது கணவன் சுந்தர் ஜெயா பிளஸ் செய்தி பார்த்துக் கொண்டிருந்தார்.

    செய்திகள் வாசிப்பவர், கட்சியின் இளைஞர் பாசறையைச் சேர்ந்த ஒருவர் சாலை விபத்தில் இறந்ததாகவும், முதலமைச்சர் அவர் குடும்பத்திற்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உதவித் தொகை வழங்கியதாகவும், கட்சி அன்பர்கள் பயணம் செய்யும்பொழுது இனிமேல் மிகவும் கவனத்துடன் இருக்குமாறு முதலமைச்சர் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டதாகவும் அறிவித்துக் கொண்டிருந்தார்.

    பேரன் ரவி ஹைசேரில் உட்கார்ந்து அதன் ட்ரேயில் பரப்பியிருந்த ஹனி நட் சீரியோஸ்ஸை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். மருமகள் கீதா மாடிப்படிக்கு அடியில் உள்ள க்லோசெட்டில் இருந்து சில அட்டைப் பெட்டிகளை வெளியில் எடுத்து அவற்றில் உள்ளவற்றைப் பரிசோதித்துக் கொண்டிருந்தாள்.

    “இப்போ எதுக்கு இதக் கடை வைக்கிற கீதா?” என்று அவற்றை அருகில் வந்து பார்வையிட்ட வண்ணம் கேட்டார் பானுமதி.

    “ரெண்டு நாள் முன்னால கேன்சர் ரிசெர்ச் செய்யிற நிறுவன ஆளுங்க வந்து பழசை நன்கொடையாக் கேட்டு வாசல்கதவில ஒரு பெரிய பிளாஸ்டிக் பை வச்சாங்க அத்தை, இன்னைக்கு அவங்க வண்டில வந்து கொடுக்கிறத சேகரிச்சிட்டுப் போவாங்க. நமக்குத் தேவையில்லாத பொருளையெல்லாம் நடைபாதையில் மூட்டை கட்டிப் போட்டால் எடுத்திட்டுப் போவாங்க.”

    “நல்ல காரியம்தான், நமக்கு உபயோகப்படாதது யாருக்காவது உபயோகமா இருந்தா சரி, இவ்ளோ பெரிய பணக்கார நாடான அமெரிக்காவில ஆராய்ச்சி செய்ய அரசாங்கமே பணம் கொடுக்காதா? இப்படி பழசு பண்டத்த சேகரிச்சு வித்து, காசாக்கி ஆராய்ச்சி செய்யிற அளவுக்கு மோசமான நிலைமையா?” என்று சொல்லிக் குளியலறை கதவைச் சார்த்திக் கொண்டார் பானுமதி.

    “பிளேன தூக்கிட்டுப் போய் அடுத்த நாட்டோட சண்டைக்குப் போகச் சொல்லு, உடனே செய்வாங்க, அதுக்கு மட்டியும் பணம் எங்கிருந்துதான் வருதோ?” என்றார் எரிச்சல் மிகுந்த குரலில் சுந்தர்.

    அதைக் கேட்டுச் சிரித்தவண்ணம், அளவில் சிறியதாகிப் போன மகன், மகளில் உடைகளையும், காலணிகளையும், பொம்மைகளையும் எடுத்து, அவற்றில் சேதம் ஆகாமலும் மிகவும் பழையதாகத் தோற்றமளிக்கதவற்றையும் தேர்ந்தெடுத்து அட்டைப் பெட்டிகளில் நிரப்பிக் கொண்டிருந்தாள் கீதா.

    கார் காரேஜின் கதவைத் திறந்து, அதன் வழியாக அப்பெட்டிகளைக் கொண்டு சென்று வீட்டின் முன் உள்ள நடைபாதையில் வைத்தாள். நன்கொடை கேட்ட நிறுவனம் விட்டுச் சென்ற பிங்க் கலர் பையையும் அதன் மேல் அடையாளத்திற்காகக் கட்டி வைத்தாள். குளித்த பின்பு ஈரத் தலையைத் துவட்டியவாறு வாசலுக்கு வந்த பானுமதி, “பொம்மையெல்லாம் கூடவா எடுத்துப்பாங்க?” என்றார்.

    “ஓ, எடுத்துப்பாங்களே”

    “அப்ப இதையும் அதோட போட்டுடு,” என்று கீதாவின் பதிலுக்குக் காத்திராமல், கார் காரேஜில் கிடந்த அவளது பேத்தி ராதிகாவின் ரெட்வேகனைத் தரதரவென இழுத்துச் சென்று நடை பாதையில் மற்ற பெட்டிகளுக்கருகில் விட்டு விட்டு வந்தார்.

    குழந்தை ரவியை தோளில் தூக்கிக் கொண்டு வெளியில் வந்த சுந்தர், கீதாவின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைப் பார்த்து, “பானு என்ன இது? ராதிகா அழாதா? திருப்பி எடுத்திட்டு வா” என்றார்.

    இதற்குள் தன்னை சமாளித்துக் கொண்ட கீதா, “பரவாயில்லை மாமா, அவளும் கொஞ்சம் பெரிய பொண்ணா வளந்திட்டால்ல, காணாமப் போனாக் கொஞ்சம் தேடுவா, அழுவா, அப்புறம் மறந்திடுவா. அப்படியே அழுது அடம் பிடிச்சாலும், அது பழசாயிடுச்சி கிறிஸ்துமஸ் கிஃப்ட்டா வேற வாங்கிக்கலான்னு சொல்லிடலாம்” என்றாள்.

    *

    பானுமதியும் சுந்தரும் கோடையில் அமெரிக்காவின் தட்பவெட்பம் நன்றாக இருக்கும் காலமாகப் பார்த்து மகன் பரணியுடன் அமெரிக்காவில் தங்க வந்திருந்தார்கள். இதோ இன்று நவம்பர் முதல் தேதி, செப்டெம்பரில் துவங்கிய குளிர் வர வர அதிகமாகிக் கொண்டிருந்தது. அடுத்த வாரம் கிளம்பி விடுவார்கள். தீபாவளிக்கு இந்தியாவில் இருப்பார்கள். பேரன் பேத்திகளுடன் விளையாடியதில் நாட்கள் ஓடியதே தெரியவில்லை.

    பானுமதிக்கு உலக மகா எரிச்சல் தருவது பேத்தியின் அந்த ரெட்வேகன் பொம்மைதான். இதெல்லாம் என்ன பொம்மைன்னு நீ வாங்கிக் கொடுத்தே என்று மகனிடம் முடைவார். ராதிகாவிற்கு மிகவும் விருப்பமான பொம்மை அவளது அந்தச் சிவப்பு நிற, சக்கரங்கள் கொண்ட , நீண்ட கைப்பிடியுடன் இருக்கும் ரெட் வேகன்தான். வீட்டிற்குள் அவளது பொம்மைகளை வேகனில் நிரப்பி வைத்திருப்பாள். வெளியில் அடுத்த வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடப் போனால் அதில் அவளது ‘டெட்டி’ கரடிப் பொம்மையையும், ‘டாமி’ பூனைப் பொம்மையையும், ‘மிக்கி’ மவுஸ் பொம்மையையும், ‘ஸ்னூப்பி’ நாய் பொம்மையையும் வைத்து சவாரி அழைத்துப் போவாள். கடற்கரைக்கு விளையாடப் போனாலும் மணல் வீடு கட்டும் பிளாஸ்டிக் உபகரணங்கள் அதில் வைத்துதான் இழுக்கப் பட்டு வரும். தபால் பெட்டியில் இருந்து தபால்களை சேகரித்து வேகனில் வைத்துதான் இழுத்து வருவாள். கடைக்குப் போய் வந்தால், கார் ட்ரங்க்கில் இருந்து சாமான்கள் நிரம்பியப் பைகளை அதில் வைத்து இழுத்து வந்து அப்பாவிற்கு உதவி செய்வாள். ஒரு நாள் தம்பி ரவியை வேகனில் வைத்து வீட்டிற்குள் அங்கும் இங்கும் இழுத்து அவள் விளையாடிய பொழுதுதான் எரிச்சல் தாளாமல், கோபம் தலைக்கேறி பானு அவளை அடிக்கவே போய்விட்டார். பிறகு இந்த நாட்டில் இதெல்லாம் செய்தால் கம்பியை எண்ண வேண்டும், வந்த இடத்தில் ஏன் பொல்லாப்பு என்று தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டார்.

    “நம்ம ஊர்ல முடமானவங்களத்தான் இந்த மாதிரிதான் வச்சு இழுத்துக்கிட்டுப் போய் பிச்சை கேக்கிறதப் பார்த்திருக்கேன். பார்க்கவே சகிக்கல, முதல்ல புள்ளைய வண்டில இருந்து தூக்கு,” என்று கீதாவிடம் சீறி விழுந்தார்.

    நேற்று அக்டோபர் 31 என்று ‘ஹாலோவின்’ (Halloween) கொண்டாடினார்கள் அந்தப் பகுதியில் வாழ்ந்தவர்கள். இருட்டிய பிறகு ராதிகாவும் கோமாளி போல உடை உடுத்திக் கொண்டு, கையில் ஆரஞ்சு வண்ண பிளாஸ்டிக்கில் கோர முக வடிவம் வரைந்த பூசணிக்காய் பாத்திரத்தைத் தூக்கிக் கொண்டு கிளம்பினாள். பெரியவர்கள் யாராவது சிறுவர்களுடன் துணைக்குப் போகவேண்டும் என்பதால் பரணியும் கிளம்பினான்.

    ஏற்கனவே பேத்தியின் கோமாளி உடையைப் பார்த்து பொருமிக் கொண்டிருந்தார் பானு. நம்மூரில் நவராத்திரிக்கு என்ன அழகாக குழந்தைகளை அலங்கரிப்பார்கள், இங்கே பார்த்தால், கோமாளியாம், பேயாம், பிசாசாம், சூனியக்கரியாம், என்ன ஒரு அலங்காரம்? என்ன ஒரு கேவலமான ரசனை? ச்சே,” என்று திட்டிக் கொண்டிருந்தார். போதாகுறைக்கு மகனும் உடன் கிளம்ப “நீ எங்கே கிளம்புற?” என்று விரட்டினார்.

    “இல்லம்மா, வந்து… நான் துணைக்குப் போகணும்மா…” என்று வார்த்தைகளை மென்று முழுங்கினான் பரணி.

    “அப்பாவும் பொண்ணுமா சேர்ந்து வீடு வீடாய்ப் போய் மிட்டாய் பிச்சை வாங்கப் போறீங்களா? நாடு விட்டு நாடு வந்து, அமெரிக்கா வந்து மிட்டாய் பிச்சை எடுக்கணும்ணு தலையெழுத்தா? சரி, சரி என்னவோ செய், நீயாச்சு, உன் பொண்ணாச்சு. ஆனா, இதையெல்லாம் பெருமைன்னு மட்டும் நினைச்சி படம் எடுத்து ஃபேஸ்புக்கில போட்டு என் மானத்த வாங்காத? என்றுத் திட்டி அனுப்பினார். ராதிகா பூசணிக்காய் பாத்திரத்தை வேகனில் வைத்து இழுத்துக் கொண்டு சென்றாள். இருக்கட்டும் இந்த பொம்மையை ஒழிச்சுக் கட்டிட்டுத்தான் மறுவேலை என்று மனதிற்குள் கருவிக் கொண்டார். இப்பொழுது அதனை செயலிலும் காட்டி விட்டார்.

    *

    பானுமதியும் சுந்தரும் வீட்டைச் சுற்றி உள்ள பகுதிகளில் வழக்கம் போல வாக்கிங் சென்றுவரக் கிளம்பி விட்டார்கள். நேரம் பத்து மணிபோல இருக்கும், அப்பொழுது தொலைபேசி வந்தது. கீதா எடுத்துப் பேசினாள், அழைப்பு ராதிகாவின் பள்ளியிலிருந்து. ராதிகா பள்ளியில் வாந்தி எடுத்ததால், பள்ளி நர்ஸ் அவளை உடனே வந்து அழைத்துப் போகச் சொன்னார். கீதா பதட்டத்துடன் பரணியின் கைபேசி எண்ணை அழைத்தாள், வழக்கம் போல பதில் இல்லை. உடனே கூப்பிடுங்கள் என்று செய்தி வைத்தாள்.

    ரவிக்கு அவசர அவசரமாக டயாப்பர் மாற்றி, காரின் பின்னிருக்கையில் குழந்தையின் கார் சீட்டில் பெல்ட் போட்டுக் கட்டி வைத்தாள். அவன் அழ ஆரம்பிக்கவும் அவனது பாசிஃபயரை மறந்து விட்டது நினைவு வந்தது மீண்டும் உள்ளே ஓடினாள். ராதிகாவிற்கு ஏன் இப்படி உடம்பு சரியில்லாமல் போனது என்ற குழப்பத்தில் அவளால் சரிவர சிந்திக்க முடியவில்லை. அவசரத்திற்குத் தொடர்பு கொள்ள முடியாத பரணியின் மீதும் எரிச்சல் வந்தது. அவள் காரை ரிவர்ஸ் கியரில் போட்டு கேரேஜுக்கு வெளியில் கொண்டு வரும்பொழுது பானுவும் சுந்தரும் வீடு திரும்பிக்கொண்டிருப்பது தெரிந்தது. கீதாவும் குழந்தையும் வெளியில் கிளம்பத் தயாராக இருப்பதைப் பார்த்து அவர்கள் நடையை எட்டிப் போட்டுக் காரை அடைந்தார்கள்.

    காரணம் தெரிந்தும், ஐயையோ, என்னாச்சு? நாங்களும் வருகிறோம் என்று காரில் ஏறிக் கொண்டார்கள். அந்நேரத்தில் பள்ளிக்கும் வேலைக்கும் செல்பவர்களின் கூட்டம் குறைந்து சாலை சிறிது அமைதியாக இருந்தது.

    “காலையில ராதிகா நல்லாத்தானே இருந்தது, பரணி ஸ்கூல்ல விடறப்போ எப்படி இருந்துச்சாம்?”

    “தெரியல அத்தை, அவரோட பேச முடியல,உடனே கூப்பிடச் சொல்லி மெசேஜ் வச்சிருக்கேன்.”

    “எல்லாம், ஹாலோவீன், ஹாலோவீன் அப்படின்னு ஆட்டம் போட்டு, கண்ட கண்ட மிட்டாய படுக்க போறதுக்கு முன்னால கணக்கு வழக்கில்லாம திண்ண வேண்டியது, அப்புறம் உடம்பக் கெடுத்துக்க வேண்டியது, சொன்னா யார் கேக்கிறாங்க, இன்னைக்கு பரணி வீட்டுக்கு வரட்டும், அவன உண்டு இல்லன்னு ஆக்கிடுறேன்.”

    பானு சொல்வதிலும் உண்மை இருக்கலாம் என்பதால் சுந்தரும் கீதாவும் அமைதியாக இருந்தார்கள்.

    அவர்கள் பள்ளிக்குச் சென்றபொழுது மணி பதினொன்றுதான் என்றாலும், காலை நேர, பகுதி நேர அரைநாள் கிண்டர்கார்ட்டன் வகுப்புகள் முடியும் நேரம் என்பதால் பார்க்கிங் பகுதியில் கார்களுடன் பெற்றோர்கள் கூட்டம் நிரம்பி இருந்தது. இடம் தேடி காரை நிறுத்திவிட்டு, ரவியைக் காரில் பானுவுடனும், சுந்தருடனும் விட்டு விட்டு பிரின்ஸ்பால் அறையை நோக்கி விரைந்தாள் கீதா. சில வகுப்புகளுக்கு மட்டும் மதிய உணவு நேரம் ஆரம்பித்து அந்த மாணவர்கள் கேஃப்டீரியாவிற்கு சென்று கொண்டிடுந்தார்கள்.

    பள்ளி அலுவலகத்தில் ஸ்கூல் நர்ஸ்ஸின் அறைக்கு வழி சொன்னார்கள். கீதா அங்கு சென்றபொழுது ஒரு ஒரமான நாற்காலியில் ராதிகா உட்கார்ந்திருந்தாள். சோர்ந்திருந்தாலும் அவள் சரியான நிலையில் இருப்பதைப் பார்த்து கீதாவின் மனதிற்கு நிம்மதி ஏற்பட்டது.

    அவளை வரவேற்ற நர்ஸ், “ராதிகா சரியாகத்தான் இருக்கிறாள், எனக்கு அவள் உணவில் சந்தேகம், வேறு வகையான உணவு எதுவும் கொடுத்தீர்களா? அடுத்தவர்கள் கொடுத்த ஹாலோவீன் மிட்டாய்களை நன்குப் பரிசோதித்துவிட்டுத்தானே உண்ண அனுமதித்தீர்கள்? உங்கள் வீட்டுக்கருகில் உள்ள வேறு ஏதாவது குழந்ததைகளுக்கும் இப்படி ஏதாவது நடந்ததாகத் தெரிந்தால் உடனே போலீசுக்குத் தகவல் கொடுங்கள். மிட்டாய்களில் நச்சு கலக்கும் ஏதாவது கிறுக்கர்களின் சதி வேலையாக இருக்கக்கூடும். வீட்டிற்கு அழைத்துப் போய் ஓய்வு கொடுங்கள். மீண்டும் வாந்தி எடுத்தால் டாக்டரிடம் அழைத்துப் போங்கள்,” என்று ஆலோசனைக் கூறினார்.

    காரின் பின்னிருக்கையில் ராதிகா பாட்டியின் மடியில் தலையை வைத்துப் படுத்துக் கொண்டாள். தாத்தாவும் பாட்டியும் கவலை நிறைந்த முகத்துடன் அவளது கழுத்தையும் நெற்றியையும் தொட்டுத் தொட்டு காய்ச்சல் ஏதும் அடிக்கிறதா என்று பார்த்தார்கள். வீட்டிற்குக் காரைக் கிளப்பும் நேரத்தில் பரணியிடம் இருந்து அழைப்பு வந்தது. கீதா அவனுக்கு நிலைமையைச் சொல்லி அவன் வரத் தேவையில்லை, தேவை ஏற்பட்டால் டாக்டரிடமும் அழைத்துச் செல்கிறேன் என்று கூறினாள்.

    காரில் வீடு திரும்பும் பொழுது அனைவரும் அமைதியாக இருந்தார்கள். வீடு இருக்கும் சாலைக்குக் காரைத் திருப்பிய பொழுது கீதாவிற்குப் பகீரென்றது. நன்கொடை கேட்டவர்கள் இன்னமும் வந்து நடைபாதையில் வைத்திருந்த பொருட்களைச் சேகரித்துக் கொள்ளவில்லை. கிளம்பிய அவசரத்தில் அதைப் பற்றிய நினைவே இருந்திருக்கவில்லை. கீதா பின்னால் திரும்பி பானுவிடம் கண்ணால் ரெட் வேகனைக் காட்டி ஜாடை செய்தாள். பானு மடியில் படுத்திருந்த ராதிகா தனது தலையைத் தூக்கிவிடாதவாறு அழுத்திக் கொண்டாள். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, எதிரில் வந்த கார் ஒன்று ஒருவீட்டின் காரேஜில் இருந்து சரியாகக் கவனிக்காமல் பின்னோக்கி வந்த காருடன் மோதலைத் தவிர்க்கப் போட்ட சடன் ப்ரேக்கின் ஒலியும், டயர் கிறீச்சிடும் ஒலியும், விபத்தைத் தவிர்த்த கார்காரர் எழுப்பிய எரிச்சல் நிறைந்த கார் ஹாரன் ஒலியும் அவர்கள் திட்டத்தைத் தவிடு பொடியாக்கியது. ராதிகா தலையைத் தூக்கிப் பார்த்து விட்டாள். அவளது ரெட் வேகன் மற்ற நடைபாதைப் பொருட்களுடன் இருப்பதையும் பார்த்து விட்டாள்.

    “மாம்! ஹவ் குட் யு டூ திஸ்?” என்றவள் கேள்வியை முடிக்கும் முன் அழத் தொடங்கினாள்.

    காரை சாலையில் இருந்து திருப்பி கேரஜில் கொண்டு நிறுத்தும் வரை நிலைகொள்ளாமல் இருந்தவள், கார் நின்றவுடன் கதவைத் திறந்து, குதித்து உடனே நடைபாதையை நோக்கி வேகமாக ஓடினாள். குற்ற உணர்ச்சியுடன் தாத்தா, பாட்டி, அம்மா அனைவரும் அவளைத் தொடர்ந்தார்கள். ஆனால் விரைந்து ஓடிய ராதிகா சடாரென நின்றுவிட்டாள்.

    அழுக்காடை அணிந்து “ஹோம்லெஸ், வில் வொர்க் ஃபார் ஃ புட்” என்று எழுதிய அட்டையைக் கையில் வைத்திருந்த ஒரு வயதான ஆள் ராதிகாவின் ரெட் வேகன் அருகில் நின்றிருந்தார். தோளில் சுமந்திருந்த அவரது உடமைகள் நிறைந்த மூட்டையை ரெட் வேகனில் இறக்கி வைத்து இழுக்க ஆரம்பித்தவர் வேகமாக ஓடி வந்திருந்த ராதிகாவின் காலடி ஓசையால் திரும்பினார். அது அவளது வேகன் என்பது அவருக்குச் சட்டெனப் புரிந்துவிட்டது.

    “சாரி யங் லேடி, ஐ தாட் யு லெஃப்ட் திஸ் வேகன் அஸ் எ டோனஷன், ஃபார்கிவ் மீ. பை தி வே, ஐ ஆம் ஜோயி”

    “நைஸ் டு மீட் யு மிஸ்டர் ஜோயி, நெவெர் மைண்ட். ஐ ஜஸ்ட் காட் ஃபெட் அப் வித் தட் டாய் ஆல்ரெடி. ஐ தின்க் தட்ஸ் வொய் மை மாம் லெப்ஃட் தட் அஸ் எ டொனேஷன் ஃபார் தி குட் வில் பீப்பிள். பட், இஃப் யூ லைக், யூ கேன் ஹேவ் இட்”

    தனது உடமை நிறைந்த மூட்டையை வைத்திருந்த வேகனை இழுத்துக் கொண்டு நகர்ந்த ஜோயி திரும்பிப் பார்த்து, “பை தி வே, சைல்ட், டூ யூ நோ தி மீனிங் ஆஃப் தி சேயிங் …”இட்ஸ் யுவர் லிட்டில் ரெட் வேகன், அண்ட் யூ ஹாவ் டு புல் இட்?”

    “அஃப் கோர்ஸ், ஜோயி, ஐ நோ இட். இட் மீன்ஸ் எவெரி ஒன் மஸ்ட் பி அக்கவுண்ட்டபிள் ஃபார் தேர் ஓன் ஆக்க்ஷன்ஸ்”

    “யூ ஆர் எ ஸ்மார்ட் கிட், தேங்க் யூ, மே காட் ப்ளஸ் யூ மை ஸ்வீட்டி, பை …பை”

    “பை …பை…ஜோயி”

     

     

    படங்கள் உதவி:
    http://www.alabamarealestateinstitute.com/wp-content/uploads/2013/01/Red-Wagon-300×200.jpg
    https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRs6evCUQbUooOJZKLlQPVzpX_l_10tHjC_W5PYtee6gdkdiIba

    Share
  • பாரதியின் வேத முகம் – 7

    – சு.கோதண்டராமன்

    ஓம்

    வேதம் ஓதத் துவங்கும் போதும், முடிக்கும் போதும், ஓம் என்னும் மந்திரத்தைச் சொல்வது வழக்கமாக உள்ளது. எந்த மந்திரத்தைக் கூறினாலும் அதற்கு முன் ஓங்காரம் உச்சரிக்கப்படுகிறது. இது எல்லா வேதங்களின் சாரம் என்று சாந்தோக்கிய உபநிஷத்தும், ஓங்காரமே பிரம்மம் (பரம்பொருள்) என்று தைத்திரீய, பிரச்ன உபநிடதங்களும் கூறுகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் ஓங்காரத்தின் பொருள் என்ன?

    ஓங்காரத்துக்குப் பொருளே சொல்ல முடியாது என்று சிலரும், இறைவன் தான் ஓங்காரத்தின் உட்பொருள் என்று சிலரும் கூறுவர். இன்னும் சிலர், உலகிலுள்ள அனைத்து ஒலிகளின் சங்கமமே ஓங்காரம் என்பர்.

    வேத மந்திரங்களில் பாரதிக்கு மிகவும் பிடித்தமான சொல் ஓம். கந்தர்வ லோகத்தில் பிரதிமைகள் இல்லாத கோவில்களும் சில உண்டு. அங்கு ஓம் என்று ஒளி எழுத்தில் எழுதி வைத்திருப்பதாக ஞானரதம் என்ற கட்டுரையில் அவர் கூறுகிறார். பாஞ்சாலி சபதத்தின் இறை வணக்கப் பாடலில் ஓம் எனப் பெரியோர்கள் ஓதுவது தான் பிரமம் எனப்படும் அறிவும் அனந்தமும் ஆகிய நிர்மலப் பொருள் என்கிறார். இறைவனை வணங்கும் போது ஓம் எனும் பொருளை உளத்திலே நிறுத்த வேண்டும் என்று அவரது விநாயகர் நான்மணிமாலை கூறுகிறது.

    ஓங்காரம் ஆசீர்வாதத்திற்கு உரிய மங்கலச் சொல் என்று பாரதி கருதியதை, “தருமன் முகமலர்ந்து வருக என்று சொல்லி ஓம் என்று ஆசீர்வதித்தான்” என்று அவரது தர்மலோகம் கூறுகிறது. ஓங்காரத்தை தியானத்திற்குரிய எளிய மந்திரமாகவும் மன அமைதி் தருவதாகவும் அவர் கருதினார் என்பது தருமலோகம் என்ற கட்டுரையில் “முனிவர்கள் இருவரும் பிரம்மத் தியானத்திலே அமர்ந்திருந்தார். நான் ஓம் என்று ஜெபித்து சாந்தி தேவியை வரிக்கலானேன்” என்று கூறுவதிலிருந்து அறியலாம்.

    இறைவனை ஓங்கார வடிவினனாகச் சொல்வது ஏன்?

    ஓங்காரத்துக்கு இன்னொரு பெயர் பிரணவம் என்பது. ப்ரணவ என்ற வட சொல் ப்ர+நவ என்ற இரு சொற்களின் கூட்டு. ப்ர என்ற முன்னொட்டு முதன்மை அல்லது சிறப்பைக் குறிக்கும். நவ என்பதற்குப் புதுமை என்பது பொருள். எனவே ப்ரணவம் என்பது புதுமைக்குச் சிறப்பு என்று பொருள் தருகிறது.

    புதுமைக்குச் சிறப்பு அளித்தல் என்பது, அடிப்படையை மாற்றாமல் பிற விஷயங்களில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்து கொள்ளுதல் ஆகும்.

    பிரபஞ்சத்தில் ஒவ்வொரு பொருளும் கணம் தோறும் மாறிக் கொண்டே, புதுமை அடைந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு பிரபஞ்சமே ஓங்கார ஸ்வரூபமாக உள்ளது. இந்த இடை விடாத மாற்றங்களின் காரண கர்த்தாவான இறைவனும் ஓங்கார ஸ்வரூபனாகக் கருதப்படுகிறான். இறைவனை முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே என்று போற்றிய மாணிக்கவாசகர் அடுத்த அடியில் பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே என்று கூறுவதை நோக்குக.

    பதஞ்ஜலி யோக சூத்ர உரையில் பாரதி கூறுவதைக் கேட்போம். ஓம் என்பது பிரணவ மந்திரம். இந்த மந்திரத்துக்கு ஆகமங்கள் கோடி வகைகளில் பொருள் சொல்கின்றன. ப்ரணவம் என்ற சொல் எப்போதும் புதுமையானது என்ற பொருள் தருவது.

    வேதத்தில் ஓங்காரத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுவதன் நோக்கம் புதுமையில் நாட்டம் கொண்டவனாக இரு என்று அறிவுறுத்துவதற்கே.

    சாதாரணமாகக் குழந்தைகள் தாம் புதுமையில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். புதிய கற்பனைகள், புதிய சிந்தனைகள், புதிய விளையாட்டுகள், புதிய நண்பர்கள் என்று நாள் தோறும் புதுமையை வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைப் பருவம் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம் இது தான். குழந்தைகளிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது.

    புராணங்களின் மெய்ப் பொருள் கண்டு பயன் பெற வேண்டும் என்ற பாரதியின் கருத்துக்கு இணங்க, ஓங்காரம் தொடர்பான ஒரு புராணக் கதையின் உட்பொருள் காண முயல்வோம்.

    பிரணவத்தின் பொருள் தெரியாத பிரமனைக் குட்டிச் சிறையில் அடைத்து சிவனார் மனம் குளிர அவர் செவியில் முருகன் ஓதினார் என்று புராணம் கூறுகிறது. புதுமையைப் போற்று என்று குழந்தைகள் சொல்கின்றனர். புதியனவற்றை ஏற்க மறுக்கும் முதியவர்களே, குழந்தைகளிடம் இதைக் கற்றுக் கொள்ளுங்கள் என்பது தான் முருகனின் உபதேசம்.

    இந்த நெறிப்படி, காலத்திற்கேற்பத் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வந்ததால் தான் இந்து சமயம் எத்தனையோ சோதனைகள் வந்தும், அவற்றைக் கடந்து வந்து இன்று உலகளாவப் பரவத் தொடங்கியுள்ளது. ரிக் வேத ஸம்ஹிதையே இந்தப் பரந்த மனப்பான்மைக்கு அடித்தளம் இட்டது. பின்னர் எழுந்த நூல்களும் இத் தடத்திலேயே சென்றன. எனவே அவையும் வேதம் என்ற தலைப்பின் கீழ்க் கொண்டு வரப்பட்டன.

    வேதம் காலம் தோறும் புதுப்பிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதற்கு இந்த ஓங்காரமே சாட்சி. ஆம். வேதத்தின் ஸம்ஹிதை என்ற காலத்தால் மூத்த பகுதியில் இந்த ஓங்காரம் ஒரு சொல்லாக அமையவில்லை. இது ஒரு பிற்காலக் கண்டுபிடிப்புத் தான் என்றாலும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இன்று எந்த வேத மந்திரம் சொல்வதானாலும் ஓங்காரத்துடன் தான் துவக்கப்படுகிறது, ஓங்காரத்துடன் முடிக்கப்படுகிறது.

    நிகழ்காலத்திலும் இந்தப் புதுப்பி்க்கும் செயல் தொடர்ந்து நடைபெற வேண்டுமென்பது பாரதியின் விருப்பம். அதனால் தான் ஆத்திசூடியில் வேதம் புதுமை செய் என்கிறார். நாம் புதுமையை விரும்பினாலும் அதை ஏற்றுக் கொள்வதற்கும் பழமையைக் கைவிடுவதற்கும் நமக்குத் தயக்கம் அதிகம். இதைப் பாரதி தன் மனத்துக்கு அறிவுறுத்தும் பாடலில் காட்டுகிறார்.

    புதியது காணில் புலனழிந்திடுவாய்

    புதியது விரும்புவாய் புதியது அஞ்சுவாய்

    அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டு போல்

    பழமையாம் பொருளிற் பரிந்து போய் வீழ்வாய்

    பழமையே அன்றிப் பார்மிசை ஏதும்

    புதுமை காணோம் எனப் பொருமுவாய்

    பாரதி மற்றவர்க்கு உபதேசித்ததைத் தான் நடைமுறைப்படுத்திக் காட்டினார். முந்தைய புலவர்களினின்றும் மாறுபட்டு்க் காலத்திற்கு ஏற்ற புது வகையான பாடல்கள், புது வகையான கருப் பொருள்கள் கொண்டு தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியது போல, மானிட சமுதாயம் நலம் பெறுவதற்கான ஒரு புதிய மந்திரத்தையும் உருவாக்கினார்.

    சொல் புதிது

    வேத மந்திரங்களைச் சொல்லி முடிக்கும்போது, ‘எங்கும் அமைதி நிலவுவதாக’ என்று பொருள்பட ‘ஓம் சாந்தி’ என்று மும்முறை சொல்லி முடிப்பது வழக்கம். இந்தியா தாழ்வுற்றுப் பாழ்பட்டு நின்ற நிலையில் நமக்குத் தேவை செயலற்றுக் கிடக்கும் அமைதி அல்ல, செயல்படுவதற்கான வலிமையே என்று உணர்ந்து பாரதி ஓம் சக்தி என்ற புதிய மந்திரத்தை அறிமுகப்படுத்துகிறார். இம்மந்திரம் வேத வழக்கில் இல்லாதது. ஆனால் இதன் கருத்து வேத சம்மதமானதே என்பதை விவேகானந்தரின் இந்த உபநிடத மேற்கோள் மெய்ப்பிக்கிறது.

    உபநிஷத் கூறுகிறது, “வலிமை, வலிமை. மனிதா, பலவீனனாக இராதே. பலவீனத்தைப் பலவீனத்தால் குணப்படுத்த முடியுமா? அழுக்கை அழுக்கால் போக்க முடியுமா? மனிதா, நிமிர்ந்து நில். வலிமையாக இரு.”

    இவ்வாறு ஓம் சக்தி மந்திரம் பாரதியால் வேத நெறி அடிப்படையில் காலத்தின் தேவை கருதி உருவாக்கப்பட்டதை அறிகிறோம்.

     

    படத்துக்கு நன்றி: http://www.vallamai.com/wp-content/uploads/2013/01/பாரதி.jpg

     

     

    Share
  • திருமுருகன் துதிமாலை (5)

    இப்பிறவி முப்பிறவி வினையெல்லாம் போக்கி

    முக்தியே சேர்க்க வேண்டும்

    தப்பியான் செய்கின்ற பிழையெலாம் நீக்கி

    பக்தியை ஏற்க வேண்டும்

    சிப்பியில் முத்தான வித்தகா ஷண்முகா

    சித்தனே செந்தில்நாதா

    அப்பிய நீறெலாம் அதிசய மருந்தாக்கி

    அமுதாக்கும் குமரதேவே

    மயில்தோகை விரித்தாடும் எழிலோடுஏறி

    விளையாடும் வேலகுகனே

    துயில்நீங்கத் துணைவியர் துதிபாடக் காதல்

    முகங்காட்டும் சக்திமகனே   (5)

    Share
  • அமெரிக்க அனுபவங்கள் – ஒரு சமூகவியல் பார்வை – புத்தக மதிப்புரை

    பவள சங்கரி

    ஆசிரியர் – நாகேஸ்வரி அண்ணாமலை
    முதல் பதிப்பு – 2012
    மொத்த பக்கங்கள் – 210
    விலை – 165

    பொதுவாக ஒரு சிறு பிரயாணம், அது வியாபார நிமித்தமாகவோ அல்லது சுற்றுலா மற்றும் வேறு ஏதாவது காரணங்களுக்காகவோ செல்வதென்றாலே பல முன்னேற்பாடுகள் அவசியமாகிறது. அதுவும் எங்கு பார்த்தாலும் தீவிரவாதமும், கொள்ளையும், பாலியல் வன்கொடுமைக்ளும் மலிந்து கிடக்கின்ற இந்த காலகட்டத்தில் நாடு விட்டு நாடு பயணம் செய்யும் போது, குறிப்பிட்ட அந்த நாட்டைப்பற்றிய அனைத்து தகவல்களும் அறிந்து கொண்டு பயணம் செய்யும்போது ஒரு தற்காப்பு உணர்வை அது கொடுக்கும்  பயண ஏற்பாடுகளைச் செய்வதற்கு முன்பு அந்த நாட்டைப் பற்றிய பொருளாதாரம், வரலாற்று செய்திகள், பருவ நிலைகள், பார்க்க வேண்டிய இடங்கள் என அனைத்துத் தகவல்களையும் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் அனைத்துத் தகவல்களும் ஓர் இடத்தில் கிடைப்பது என்றால் அது பயணத்தை மிக சுவாரசியமாக மாற்றிவிடக்கூடுமல்லவா?

    “அமெரிக்காவைப் பற்றி வரும் கட்டுரைகளையும், துணுக்குகளையும் படித்திருக்கிறேன். பெரும்பாலான துணுக்குகள் அவை எழுதப்பட்ட, சொல்லப்பட்ட சூழ்நிலையைப் பற்றிக் கூறாததால் படிப்பவர்களுக்கு வேறு விதமான அர்த்தத்தைக் கொடுத்திருக்கக் கூடும்; அவை சில சமய்ம் உண்மையை திரித்துக் கூறுவது போலவும் இருக்கும்” ஆசிரியர், நாகேஸ்வரி அண்ணாமலை ஆரம்பத்திலேயே தம் முன்னுரையிலேயே, இப்படி நூலின் கருத்து பற்றிய பெரும் எதிர்பார்ப்பை விதைத்து விடுகிறார். வெளிநாடுகளில் முதல் அடி எடுத்து வைக்கும் எவருக்கும் தோன்றும் சுத்தம் பற்றிய அந்த திகைப்பு பல்லாண்டுகளாக அமெரிக்காவில் வாழும் இவருக்கும் ஏற்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை.

    அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பற்றி குறிப்பிடும்போது, “ஜனாதிபதி ரீகன் காலத்திலிருந்து, அமெரிக்க முதலாளித்துவப் பொருளாதாரம் வேறு பாதையில் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு முன்புவரை மனிதனை மனிதன் கபளீகரம் செய்யும் பொருளாதாரமாக முதலாளித்துவம் இருக்கவில்லை. இந்த முப்பது ஆண்டுகளில்தான் ஏழை, பணக்காரர்களுக்கிடையே இடைவெளி அதிகமாகி இருக்கிறது. அமெரிக்கா போகும் திசையைத் திருப்ப ஜனாதிபதி ஒபாமா எவ்வளவோ முயன்று கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சி இதை ஒபாமாவின் சோஷலிசம் என்கிறது. சோஷலிசம், கம்யூனிசம் போன்றவை அமெரிக்காவிற்கு அலர்ஜியைக் கொடுப்பவை. ….. அமெரிக்காவில் இப்போது எங்கே கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது? இரண்டாவது உலகப் போருக்குப் முன்னால் சிறிய அளவில் முளைவிட்டுக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியைத்தான் கிள்ளியெறிந்து விட்டார்களே! …. உலக நாடுகளிடையே மிகவும் தாழ்ந்து போயிருக்கும் அமெரிக்காவின் படிமத்தை மேம்படுத்துவது பற்றி ஒபாமா பேசினால் அமெரிக்காவின் தனித்தன்மையை குறைத்து மதிப்பிடுகிறார் என்று அவர்மீது குற்றம் சாட்டுகிறார்கள். அமெரிக்கா செய்த தவறுக்கு அமெரிக்கா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றால் ஒபாமா அமெரிக்கரே இல்லை என்கிறார்கள்” என்று தன்னுடைய ஆதங்கத்தை மிகத்தெளிவாகப் பதிவிட்டிருக்கிறார் ஆசிரியர்.

    இன்றைய அமெரிக்கப் பொருளாதாரம் கார்ப்பரேட்டுகளின் கைகளில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பதுதானே நிசம். இவர்களுக்குப் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டால் அது மொத்த அமெரிக்காவையே பாதிக்கக்கூடிய சூழ்நிலையில்தானே இருக்கிறது. ஆனால் நம் இந்தியப் பொருளாதாரத்தை எடுத்துக் கொண்டால் ஒருநாளும் அது கார்ப்பரேட்டுகளின் கைகளில் சிக்கும் வாய்ப்பு இல்லை. ஆகவே எந்த சூழ்நிலையிலும் இந்தியப் பொருளாதாரம் நலிவடையும் வாய்ப்புகள் மிகக்குறைவு. எந்த நிலையிலும் நம் இந்தியப் பொருளாதாரம் முட்டி மோதி மீண்டும் துளிர்விட்டு தளைப்பதற்கும் இதுவேதான் காரணம். திரு ராஜீவ் காந்தி பிரதமராகவும், திரு மன்மோகன்சிங் அவர்கள் நிதியமைச்சராகவும் இருந்த காலகட்டத்தில் பெரும் பொருளாதார சீர்திருத்தம் ஏற்பட்டிருந்ததை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்த வகையில் ஆசிரியரின் கருத்து ஏற்புடையதாக்வே உள்ளது.

    ”அமெரிக்க ஜனநாயக நாகரீகம் பற்றிப் பெருமையாகப் பேசப்பட்டாலும் அமெரிக்காவை இப்போது ஆள்வது பணம் படைத்த அமெரிக்கக் கார்ப்பரேட்டுகள்தான் , அமெரிக்காவின் உண்மை நிலையை ஓரளவிற்குப் படம்பிடித்துக் காட்ட வேண்டும் என்ற என் ஆசையின் விளைவே இந்தப் புத்தகம்” என்ற வரிகள் நம்மை மேலும் ஆழ்ந்து வாசிக்கத் தூண்டுகிறது.

    அமெரிக்க நகரங்களுள் மக்கள் தொகையில் மூன்றாவது இடத்தில் இருக்கும், உலகப்புகழ் பெற்ற ,ஓவியர் பிக்காசோவின் ஐம்பதடி உயர இரும்புச் சிற்பம் அலங்கரித்துக் கொண்டிருக்கிற மற்றும் வரலாற்று சிறப்புமிக்க சிகாகோ நகரம் பற்றி பல மாறுபட்ட கருத்துக்களை முன்வைக்கிறார் ஆசிரியர். ஊழல் அரசியல் மலிந்து கிடப்பதோடு, பனிப்புயல் போன்ற இயற்கை சீற்றமும் அதிகமாக உள்ள சிகாகோ மாநிலத்தின் அழகான மற்றொரு பகுதியை படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.

    தன் கணவருடன் தான் அங்கு தங்கியிருந்த காலங்களில் நடத்தப்பட்ட விண்வெளி ஆராய்ச்சிகள் முதல் நியூயார்க் நகர வணிக மையத்தின் சின்னமாக விளங்கிய இரட்டைக் கோபுரங்கள் விமானம் மூலம் தாக்கி அழிக்கப்பட்ட சம்பவம், கறுப்பர் இனத்தின் தலைவர்கள் பற்றிய குறிப்பு, நகரத்தின் வளர்ச்சி, அதன் அமைப்பு, கறுப்பர் வாழும் பகுதி பற்றிய ஆதங்கம், நகரின் முக்கியத்துவம் என அனைத்தையும், மிகத்தெளிவாக படங்களுடன் பதிவிட்டிருப்பது பாராட்டிற்குரியது.

    ’மாறும் பருவநிலைகள்’ என்ற தலைப்பில் ஆசிரியர் மிக விளக்கமாக அளித்திருக்கும் தகவல்கள் பயணம் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளவை. நான்கு பருவங்கள், மாறும் காலம், கோடைச் செயல்கள், புயல், வானிலை என அனைத்துத் தகவல்களும் நல்ல இரசனையுடன் அழகு நடையில் எழுதியிருப்பதும் வரவேற்கத்தக்கது. முதல் முறையாக பனிக்காலத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் சென்று மாட்டிக்கொண்டால் அதிலிருந்து மீண்டு வருவது ஒரு பெரிய சாதனைதான் என்று அனுபவத்தில் உணர்ந்ததால் இவருடைய விளக்கங்களின் வலிமையை உணர முடிகிறது. பனியை அகற்றுவதற்கும், தோட்டங்கள் பராமரிப்பு  என பெரும்பாலான வேலைகளுக்கு மெக்சிகோவிலிருந்து வரும் குடியேறிகள் பன்னிரண்டு மில்லியன் பேர்கள் என்ற தகவலும், இவர்கள்  சரியான விசா இல்லாமல் இருக்கும் குடியேறிகள் என்றாலும், இவர்கள் இல்லாமல் முதுகை ஒடியச் செய்யும் வேலைகளை அமெரிக்கர்கள் செய்யமாட்டார்கள் என்பதால் இரு அரசியல் கட்சிகளும் மிகுந்த கருத்து வேறுபாட்டுடன்  குழப்பத்தில் இருப்பது போன்ற தகவல்களும் அளிக்கிறார்.

    ‘உணவுகள் பலவிதம்’ என்ற தலைப்பில் அமெரிக்காவில் கிடைக்கக்கூடிய பல நாட்டு உணவு வகைகள், உணவு உற்பத்தி முறைகள், அதிக அள்வில் வீணாக்கப்படும் உணவுகள், சமைக்கும் முறைகள் மற்றும் அதன் மாற்றங்கள், சமைக்கும் வகைகள், விதம் விதமான ச்மையல் சாதனங்கள் நண்பர்களோடு உணவருந்தும் பழக்கம், தயார் நிலை உணவு, நலம் கெடுக்கும் உணவு, இயற்கை உணவு போன்ற பல சுவாரசியமான தகவல்களை வழங்கியுள்ளது சிறப்பு. வீணாக்குவதில் அவர்களின் வல்லமை குறித்து மிக விளக்கமாகவே கூறியிருக்கிறார்.

    ”பருவ வயது வந்தவுடன் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பாலுணர்வு தோன்றுவது இயற்கை. அதற்கு வடிகால் அமைத்து அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு ஒவ்வொரு சமூகமும் சில விதிகளை வகுத்திருக்கிறது. அமெரிக்கச் சமூகம் என்ன செய்திருக்கிறது என்று பார்ப்போம்”  என்று ’திருமணத்தின் புதிய அர்த்தங்கள’ என்ற பகுதியில் கலாச்சார ஒப்பீடுகள் மிகச் சுவையாக அமைந்திருக்கிறது. திருமணம் செய்யாமலே பிள்ளை பெற்றுக்கொள்ளும் தற்போதைய நிலையையும், லிங்கன் (1809 – 1865) திருமணம் குறித்த சுவையானதொரு சம்பவமும் கொண்டு பலவிதமான மாறுபட்ட கலாச்சாரங்களை தெளிவாகவே விளக்கியுள்ளார். பெற்றோர்களின் விவாகரத்தினால் அல்லலுறும் குழந்தைகளின் நிலை, ஓரினச் சேர்க்கை, ஓரினத் திருமணம் கருப்பு – வெள்ளைத் திருமணம் என அங்கு நடக்கும் அனைத்து வகைகளையும் தகுந்த ஆதாரங்களுடன் விளக்கியிருப்பதும் சிறப்பு.

    ’இந்தியர்களின் இக்கட்டு நிலை’ என்ற தலைப்பில் அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களின் நிலை குறித்த தம் கருத்தையும் பகிர்ந்துள்ளார். 1950ம் ஆண்டு முதல் இன்றைய நிலைவரை தெள்ளத் தெளிவாக, நிதர்சனத்தை சொல்லியிருக்கிறார் என்பது அன்றாடம் நம் செவிவழி மற்றும் செய்தித் தாள்களில் காணும் செய்தியாக இருப்பது மூலம் ஒப்புக்கொள்ள முடிகிறது. இவர் விளக்கியுள்ள பல சம்பவங்கள் வேதனை அளிக்கக் கூடியதாகவே உள்ளது. அமெரிக்காவில் குடியேறியுள்ள பிள்ளைகளின் பெற்றோரின் நிலை குறித்து மிகச் சிறப்பாக புரிந்துணர்ந்து சொல்லியிருக்கிறார். தம் இறுதிக் காலங்களை பிள்ளைகளுடன் கழிக்க விரும்பி அமெரிக்காவில் சென்று தங்கும் முதியவர்களுக்கு ஏற்படும் மிக முக்கியமான மருத்துவக் காப்பீட்டுப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை இவர் அலசியுள்ள விதம், அங்கு சென்று தங்க விரும்பும் ஏனையோருக்கும் ஒரு படிப்பினையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. குடியேறிய நாட்டின் கலாச்சாரத்திற்கு ஏற்ப தங்கள் வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்வதின் சிரமங்கள் போன்ற அனைத்தையும் நன்றாகவே விளக்கியுள்ளார். ஆன்மீக நாட்டம் உள்ளவர்களின் பழக்க வழக்கங்களையும், அதற்கான ஏற்பாடுகள் தொழில்நுட்பங்களின் உதவியுடன் நடத்தப்படுவதையும்கூட அழகாகவே சொல்கிறார். குடியேறியவர்களின் திருமணப் பிரச்சனை, கல்விப் பிரச்சனை பெற்றோர் பிரச்சனை கறுப்பர்களை மதியாமை, இவை அனைத்திற்கும் மேலாக பெயர்ப் பிரச்சனை என அனைத்தையும் மிகச் சுவையாகவே அலசி ஆராய்ந்திருக்கிறார்.

    பொதுவாகவே நீண்ட ஆயுள் கொண்டவர்களாக இருக்கும் அமெரிக்கர்கள் முதுமையில் படும்பாட்டையும், ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதற்காகக் கண்டறியப்பட்ட தீர்வுகள் என அனைத்தும் படித்து அறிய வேண்டிய தகவல்கள். மருத்துவச் செலவு என்பது அங்கு எத்துனை பெரிய தலைவேதனை என்பதை அறியும் போது அந்த வேதனை நம்மையும் தொற்றிக் கொள்வதும் உண்மை.

    கார் கலாச்சாரம் பற்றி பல தகவல்களும், தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்தும், மிகப்பெருமையாக அவர் குறிப்பிட்டாலும், Keyless entry போன்ற தொழில் நுட்பங்கள் நம் நாட்டிலும் பல ஆண்டுகள் முன்பே வந்துவிட்டதும் உண்மை என்பதை பதிவிடவில்லை… ஆனாலும் கடன் பெறுவது முதல் வரி வட்டி கட்டுவதுவரை மிகத் தெளிவாகச் சொல்லியிருப்பது பாராட்டிற்குரியது.

    நம் இந்தியத் திருநாட்டில் லஞ்சம் மற்றும் அரசியல் வியாதிகளால் கொள்ளை போகும் சொத்துக்களுடன், நம் நிம்மதியும் போவது குறித்த கவலை மிக அதிகமாகிறது இவருடைய நூலின் சில பகுதிகளை வாசிக்கும்போது! இந்த லஞ்ச இலாவண்யமும், அரசாங்கம் மற்றும் மக்கள் சொத்தை கொள்ளையடிக்காத நேர்மையான அரசியல்வாதிகளும் இருந்திருந்தால் நம் நாடும் என்றோ வல்லரசாகியிருக்குமோ என்ற் ஏக்கமும் வராமல் இல்லை.

    ‘வரிவிதிப்பு முறையும் சமூக அமைப்பும்’ என்ற தலைப்பில் அ முதல் ஃ வரையிலான அனைத்துத் தகவல்களையும் வழங்கியுள்ளதும் சிறப்பு. அதே போல நீதியின் இரு பக்கங்கள் குறித்த கட்டுரையில் பல சம்பவங்களுடன் விளக்கியுள்ள பாங்கும் இனிமை. கடன் அட்டைகளின் பிடியில் சிக்கித் திணறும் அமெரிக்கர்களை விடுவிக்கப் போவது யார் என்ற இவருடைய கவலையும் நியாயமானதாகவே உள்ளது. கடன் அட்டைக்கான தவணைகளை சரியான நேரத்தில் கட்டத் தவறினால் வட்டி கூடிப்போய் எத்துனை சிரமப்பட வேண்டியிருக்கும் என்பதைக்கூட தன்னுடைய கவனக் குறைவினால் ஏற்பட்ட சம்பவத்தின் ஒப்பீடு மூலம் அழகாக விளக்கியுள்ளார்.

    ‘இதம் தரும் சேவை, பணம் பண்ணும் ஆசை’ என்ற தலைப்பில் இந்தியாவின், இரயில் நிலையம், அஞ்சல் நிலையம், மருத்துவமனை, அரசுத்துறை அலுவலகம் போன்ற  பொதுப்பணித் துறைகளில் பணிபுரிபவர்கள் சேவை மனப்பான்மை என்பதே துளியும் இல்லாமல் இருப்பதையும், கிம்பளம் எதிர்பார்த்திருப்பதையும் நொந்துபோய் சாடியுள்ளார். அமெரிக்காவில் அதற்கு நேர்மாறாக, தேவை அறிந்து சேவை செய்பவர்கள் மற்றும் அன்பான மருத்துவ சேவை செய்பவர்கள் பற்றியும், தனக்கு ஏற்பட்ட இதமான அனுபவங்கள் கொண்டே விளக்கியிருக்கிறார் ஆசிரியர். அதேபோல் இந்தியாவில் தனக்கு ஏற்பட்ட மிக மோசமான மருத்துவமனை அனுபவத்தையும் பகிர்ந்திருக்கிறார் மிக வேதனையுடன். அன்றாடம் இந்தப் பிரச்சனைகளுடனேயே உழன்று உறவாடி வாழும் நம்க்குத்தான் இது பெரிதாகப்படவில்லை போலும்!  கருத்துக் கணிப்பிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம்கூட ஆச்சரியம் அளிக்கிறது நமக்கு.

    பின்னுரையில் ஆரம்பத்தில் அமெரிக்காவின் வளமான வாழ்க்கையில் நிறைவு கண்ட தான் சில ஆண்டுகளில் குறைகளைக் கவனிக்கத் தொடங்கியதையும், 1929ல் பொருளாதார வீழ்ச்சியின் பிறகு ப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் காலத்தில் ஏற்பட்ட சீர்திருத்தம் முதல் இன்றைய அரசியல் நிலை வரை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். பெண்ணியம் முதலில் அமெரிக்காவில் தோன்றியதற்கான காரணம் அவர்களின் பொருளாதார சுதந்திரம் என்றாலும், குடும்பம் என்ற சமூக நிறுவனம் குலையத் தொடங்கியதும் அதனால்தான் என்கிறார். உண்ணும் உணவு முறையிலிருந்து, திருமண பந்தம் என்ற கட்டமைப்பு வரை தவறான கலாச்சாரங்களினால், பாதிக்கப்படும் குழந்தைகளின் நிலை குறித்தும் வெளிப்படையாகக் கூறுகிறார்.

    ஒபாமா ஒருவேளை பதவியிலிருந்து இறங்க நேர்ந்தால் குடியரசுக் கட்சிகள் நாட்டை அவர்கள் பாதையில் கொண்டு செல்லக்கூடிய நிலை உருவானால், அமெரிக்காவில் ஏழை, பணக்காரர்களுக்கிடையே உள்ள இடைவெளி கூடுவதோடு, உலக அரங்கிலும் அமெரிக்கா பெரிய அபாயங்களை விளைவிக்கும். அந்த வகையில் 2012 தேர்தல் எல்லோருக்கும் ஒரு முக்கியமான தேர்தல் என்று சொல்லி நம்மையும் பெரிதும் சிந்திக்க வைக்கிறார்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    இன்றைக்கு உலகமக்களையே ஆட்டுவிக்கும் துறை ஒன்று உண்டென்றால் அது திரைப்படத்துறை மட்டும்தான். ஒரு திரைப்படம் ஒன்று வெற்றிகரமாக ஓடினால் அந்த வெற்றியின் பின்னே பலர் இருக்கிறார்கள் என்ற செய்தியெல்லாம் மறந்து போய் அந்த வெற்றியின் முழுப்புகழையும் அந்த நடிக நடிகையருக்கே இந்த மக்கள் வழங்கி வருவதுதான் வேடிக்கை. எத்தனைதான் அந்த நடிகர்களுமே சேர்ந்து இது ஒரு கூட்டணியால் ஏற்பட்ட வெற்றி என்று சொன்னாலும் மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை.. அவர்களுக்கு அந்த வெற்றிப்படத்தில் காண்பிக்கப்பட்ட முகங்கள் மட்டுமே தெரிகின்றன.  அந்த முகங்களுக்குப் பின்னால் நிற்கும் மிகப்பெரிய தொழில் வல்லுநர்கள் கூட அதிகமாக அறியப்படுவதில்லை. இதனால் புகழ்ச்சியானது பங்கு பிரிக்கப்படாமல் ஓரிடத்திலேயே சென்று பாய்ச்சப்படுகிறது.

    ஆனாலும் இப்படி வரும் புகழ் என்பது போதை மருந்துக்கு ஒப்பானதாகும். போதை மருந்து முதலில் போட்டுக்கொண்டால் சுகமாக இருக்கிறதே என்பதால் இது அடிக்கடித் தேவைப்பட போதை மருந்துக்காக மனம் ஏங்கும்.. பின்னர் அதற்கே அடிமையாகி வீணாகிப் போவோரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த புகழ் போதை கூட இப்படித்தான்.. ஒரு படத்தில் கிடைத்த ஏராளமான புகழைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவர்கள் போராட வேண்டிய நிலையை நாளுக்கு நாள் சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

    இந்தப் போராட்டத்தில் அவர்கள் இந்தப் புகழுக்கு ஈடாக எத்தனையோ தியாகங்கள் செய்யவேண்டிய நிலையில் இருப்பார்கள். அன்பு பாசம் கருணை எல்லாமே இரண்டாம் பட்சத்துக்குத் தள்ளப்படவேண்டிய நிலையில் இந்தப் பணமும் புகழும் இவர்கள் வாழ்க்கையை சோபிக்கச் செய்யுமா? இந்தக் கேள்விக்கு ஒரு நடிகையின் மனதில் புகுந்து கொண்டு அழகான கவிதையைப் பதிலாகத் தந்துள்ளார். பொன் இராம்.

    வண்ணச்சாயப் பூவிதழ்
    உதடுகள் கூறும்
    கண்ணீர் வரிகள்!
    அடிமை விலங்கு
    அவிழ்க்கப்பட்டும்
    அரிதார பொம்மைகளாய்
    நனவுலகில் சிரிக்கின்றோம்!
    கள் மட்டுமே
    போதை!
    இங்கு நாங்கள்
    திரையுலகக்
    கண்ணாடிக் குடுவைக்குள்
    போதைப் பதுமைகளாய்
    வாழ்கின்றோம்!
    இடியாக  மாறி
    படியாத ஆணுலகை
    மாற்றிவிட எத்தனையோ முயன்றாலும்
    பணமழை தான் ஜெயிக்குதடி!
    பட்டமொன்று பெற்றாலும்
    பாவி மனம்
    புகழுக்கு ஏங்குதடி!
    விடியாத பெண்ணுலகத்
    திரையுலகக் கும்மிருட்டில்
    விரைவாய்  யார் வருவார்
    அறிவு விளக்கேற்ற?

    பொதுவாகவே திரைப்படக் கலைஞர்களில் இந்த நடிகைகளின் உள்ளக் குமுறல்கள் சற்று அதிகம்தான். பெண்ணாகப் பிறந்து, அதிலும் அழகாகவும் அலங்காரமாகவும் ஆண்களின் பார்வைக்குப் படும்போதும், அதை அவர்கள் கவர்ச்சியாகக் காட்டி செல்வம் ஈட்டும்போதும், அவள் படும் மனத் துயரங்கள் இந்தப் புகழ் எனும் போதை மருந்து மூலம் சற்று நேரத்துக்கு மறக்கடிக்கப்பட்டாலும், இப்படிப்பட்ட போதை மருந்துதான் நிரந்தரத் தீர்வா என்றால் அதைவிடக் கொடுமை ஏது என்ற இன்னொரு கேள்விதான் பிறக்கும்.

    நடிகையின் குரல் மூலம் சிந்தனையைத் தூண்டிவிட்ட பொன் இராம் அவர்கள் இந்த வார வல்லமையாளராக வல்லமைக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு நம் வாழ்த்துக்கள்.

    கடைசி பாரா:   முதலைக் கண்ணீர்:

    முதலை அழுவதால் வருகிற கண்ணீர் இல்லை அது. சும்மாவே அதோட உடம்புல ஊறுகிற நீர் கண்கள் வழியா வெளியே வருமாம். அதனால் அந்தக் கண்ணீருக்கு எந்த அர்த்தமும் இல்லைதானே. அதுபோலத்தான் சில பேர் உலகத்துல தன் காரியம் ஆகணும்கறதுக்காக முதலையாட்டமா போலிக் கண்ணீர் வடிப்பாங்க.. நாமதான் அவங்ககிட்ட சூதானமா இருந்துக்கணும். இல்லேனா முதலைக் கண்ணீர் வடிச்சி நம்மளையும் ஏமாத்திப்புடுவாங்க (பவளசங்கரி)

    Share
  • மனிதன்

    வீட்டு
    மூலையில்
    நூலாம்படையொன்று
    ஒய்யாரமாய்
    ஆடியாடி
    பசப்பிக் கொண்டிருந்தது
    புகலிடம் தருகிறேன்
    வாருங்கள் பூச்சிகளே!
    அருகிற்சென்று
    நோக்குகையில்
    அது சொல்கிறது
    உமக்கு
    இங்கு இடமில்லை
    எம்மிலும் கொடிய
    களங்கிய இனத்தைச்
    சார்ந்தவர் நீர்!!
    சடுதியில்
    காலை விட்டெறிந்து
    இல்லாதொழித்துத்
    திரும்பும்போதுதான்
    வந்து அறைகிறது
    சொன்னது சரியோ?

    Share
  • கனம் கோர்ட்டார் அவர்களே! – 17

    இன்னம்பூரான்


    சில செய்திகளைப் பார்த்தால் வாளாவிருக்கமுடியவில்லை. அது என்னுடைய பலவீனம். ‘வல்லமை’க்கு அது வலிமை தரும் என்ற பகற்கனவு வேறே. இன்று உலகளவில் ஊடகங்களில் பெரிதும் பேசப்படும் ‘நோவார்ட்டீஸ்’ வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 1, 2013 அன்று  அளித்த தீர்வு ‘சாலமன்’ ஜட்ஜ்மெண்ட்டுக்கு இணையானது என்று சொன்னால் அது மிகையல்ல. அது என்ன ‘சாலமன்’ ஜட்ஜ்மெண்ட்? சாலமன் சக்கிரவர்த்தி அதி மேதாவி. ஒரு வழக்கு. இரு பெண்மணிகள் ஒரு குழந்தையை ‘தனது’ என்று வாதாடுகிறார்கள், அவர் முன்னிலையில். இக்கட்டான நிலை. இரு தரப்பும் பலத்த சாட்சியங்கள். அதனால் என்ன? குழந்தையை சரி பாதியாக வெட்டி, ஆளுக்குப் பாதி என்று தீர்ப்பு அளிக்க, ஒருவள் கதறினாளாம், ‘ஐயோ வேண்டாம். அவளே வைத்துக்கொள்ளட்டும்’ என்று. அவள் தான் உண்மையான அன்னை என்று கூறி அவளிடம் குழந்தையை ஒப்படைத்தாராம்.  அது நினைவுக்கு வந்தது.

    திடீர் குபேரனாக வேண்டுமானால் ஒன்று கள்ளுக்கடை வைக்கவேண்டும்; அல்லது மருந்து வியாபாரம் செய்யவேண்டும். முதலில் ஒரு கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். 1977: தீவிரமான வியாதி, எம் குடும்பத்தில்.  ஒரு மருந்து கொடுத்து, தினம் மூன்று மாத்திரை. சிங்கப்பூரிலிருந்து வரவழைக்க வேண்டும் என்றார்கள். ஒரு மாத்திரையின் விலை ரூபாய் 200/-. தவித்துப்போய்விட்டோம். சில வசதிகள் இருந்ததால், வழி பிறந்தது. எங்கள் சொந்தப் பிரச்னை தணிந்தது. ஆனால், சமுதாயப் பிரச்சனை மேருமலை அளவு என்றும் புரிந்தது. வியாதியின் தீவிரம், பாதிப்பு, ஏழை மக்கள் பாடு ஆகியவற்றைப் பற்றி விவரங்களை சேகரித்துக்கொண்டு, Drug Controller இடம் சென்று, இந்தியாவில் இந்த மருந்து தயாரிக்க வேண்டும், விலையும் குறைய வேண்டும் என்று பரிந்துரை செய்தேன். அவர் விழித்துக்கொண்டு சிரிக்கவில்லை. அது தான் பாக்கி. ‘இதெல்லாம் நடக்கற காரியம் இல்லை. போய் வா, மகனே’ என்று அவர் ஆசீர்வதித்தார். நானும் விடாக்கொண்டன் ஆச்சே. மேலிடங்கள் சென்று வாதிட்டேன். ஸ்க்ரூவை முடுக்கினேன். பத்து வருடங்களுக்குள் அதை இந்தியாவில் தயாரித்து, மூன்றாவது வருடம் அதன் விலை ரூபாய் 5/-. ஆனால், அதற்குள் ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது. எங்கள் வீட்டில், அதை நிறுத்தச்சொல்லி அறிவுரை வந்ததால், கையில் இருந்ததை ஒரு ஏழை நோயாளிக்குக் கொடுத்தோம். சில மாதங்கள் தாக்குப்பிடித்தாலும், சில உதவிகள் பெறமுடிந்தாலும், கட்டுபடி ஆகவில்லை. நாங்களும் வேறு ஊருக்கு மாறி போய்விட்டோம். அந்தப்  பெண்மணி அகால மரணமடைந்தார்.

    அத்தகைய துர்பாக்கியம் ஏற்படுவதைத் தடுக்கிறது, இந்தத் தீர்வு. மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் ஆய்வு செய்ய செலவு அதிகம் செய்கிறார்கள். அதை மீட்க விரும்புவது நியாயம். அதனால் காப்புரிமை பெற்று, கணிசமாக யானை விலை/குதிரை விலையேற்றம் செய்கிறார்கள். அத்துடன் திருப்தி அடையாமல், முலாம் பூசும் (evergreening) சித்து வித்தை செய்து மறுபடியும் காப்புரிமை பெற்று, வெளுத்து வாங்குகிறார்கள். நோவார்ட்டீஸ் என்ற பிரபல கம்பெனி புற்று நோய் தணிக்கும் க்ளைவக் (Glivec or Gleevec,) என்ற மருந்துக்கு 1996ல் பெற்ற காப்புரிமை காலாவதி யாகும் வேளையில், சின்ன மாறுதல் ஒன்று செய்து, தங்களுடைய ஏகபோகத்தை நிலை நாட்ட முயன்றார்கள். அந்த மருந்து ஆயுசு பரியந்தம் சாப்பிட வேண்டும். மாதம் ரூ. 1.20 லக்ஷம் ஆகும். ஒரு இந்திய கம்பெனி அதே மருந்தை மாதம் எட்டாயிரம் ரூபாயில் தருகிறது. அதைத் தடுக்க நோவார்ட்டீஸ் போட்ட வழக்கை, உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இந்த தீர்வு 300 ஆயிரம் நோயாளிகளுக்கு பேருதவி.

    தீர்வின் மைய கருத்து: “…புதியது என்று சொல்லப்படும் இமாடினிப் மெஸைலேட் புதியது அல்ல. 1996ல் காப்புரிமை வாங்கிய ஜிம்மர்மென் பேடண்டிற்கும், இதற்கும் வித்தியாசமில்லை. நோவர்ட்டிஸின் விண்ணப்பத்திலேயே இது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதனால் சென்னை காப்புரிமை அலுவலகமும், அதனுடைய அப்பீல் அலுவலகமும், இந்த விண்ணப்பத்தை நிராகரித்தது சரியே…”.

    பின்னணி என்று பார்க்கப்போனால், ஃபைனான்சியல் டைம்ஸ் என்ற இங்கிலாந்து இதழ் சொன்ன மாதிரி, இந்தியாவின் காப்புரிமை அணுகுமுறை, சர்வதேச வணிக மன்றத்தின் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துப்போனாலும், மருந்து கம்பெனிகளால் வெறுக்கப்பட்டது. இப்போது கூட நோவர்ட்டீஸ், இந்தத் தீர்வு நோயாளிகளுக்கு உபத்ரவம்; நாங்கள் புதிய மருந்துகளை இந்தியாவில் விற்பனை செய்யப்போவதில்லை என்பதால் என்கிறது. அதனுடைய விண்ணப்பத்தில் உள்ள முரண், வாசாலகம் பற்றியெல்லாம் காஷ்டமெளனம். இது இங்கிலாந்தின் பிரபல சட்டம் சார்ந்த பேராசிரியர் டாக்டர் த்விஜேன் ரங்கனேகரின் கருத்து.

    இன்றைய (ஏப்ரல் 6, 2013) அப்டேட்: மெர்க் ஷார்ப் அண்ட் டோஹ்ம் என்ற பிரபல அமெரிக்க கம்பெனி தன்னுடைய நீரழிவு நோய் மருந்துகளின் காப்புரிமையை ஒரு இந்திய கம்பெனி மீறுகிறது என்ற வழக்கை டில்லி உயர் நீதி மன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

    சிக்கலான/ நுட்பமான செய்திகளை நான் விவரிக்க வில்லை. இதுவே அலுத்துப்போய்விடுகிறது அல்லவா!

    சித்திரத்துக்கு நன்றி:

    http://2.bp.blogspot.com/-RVUgUWAEfY4/T6Idc2X4PTI/AAAAAAAAAhc/rhE-vQNOd7A/s1600/medicine.jpg

    Share
  • இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்றவரே சிங்களவர்??

    மறவன்புலவு க.சச்சிதானந்தன்


    இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்றவரே சிங்களவர் எனத் தில்லியிலுள்ள இலங்கைத் தூதர் காரியவாசம் சில வாரங்களுக்கு முன் சொன்னாரல்லவா?

    மகாவமிசம் (கிபி 500 அளவில் வெளியானது) என்ற நூலும் அதற்கு முன்பு வெளியான அட்டகதை, தீபவமிசம் (கிபி 100 அளவில் வெளியானவை) ஆகிய பாளி நூல்களுமே காரியவாசம் கூற்றுக்கு ஆதாரம்.

    பண்டைய இந்திய நூலாசிரியர் எவரின் குறிப்போ, வேறு வரலாற்றுச் சான்றுகளோ இந்தக் ‘கதைக்கு’ ஆதாரமாக இதுவரை கிடைக்கவில்லை.

    இலங்கைக்குப் புத்தர் பயணித்தமையை மகாவமிசமும் அதற்கு ஆதாரங்களாக அமைந்த அட்டகதை, தீபவமிசம் போன்ற நூல்களும் சொல்கின்றன. மணிமேகலைக் காப்பியத்திலும் (கிபி 200 அளவில் வெளியான நூல்) இக் குறிப்பு உண்டு. பிற்காலத்தில் சீனப் பயணிகளும் இக்குறிப்பைப் பதிவுசெய்துளர் (See: Foreign Notices of South India by Neelakanda Sastri, Uni. of Madras).

    இலங்கைக்குப் புத்தர் பயணித்த செய்தியை வட இந்திய நூலாசிரியர் எவரும் சொன்னதாகத் தெரியவில்லை, வரலாற்றுச் சான்றுகளும் அங்கில்லை.

    காரியவாசம் சொன்ன விசயனின் வருகை பற்றிய குறிப்பும் படமும் கீழே பார்க்க. சென்னை – காந்தளகத்தில் (0091 44 2841 4505) இந்தப் படங்கள், நான் எழுதிய இச்செய்திகள் தாங்கிய நூல் விற்பனைக்கு உண்டு.

    மணிமேகலை ஆங்கில மொழிபெயர்ப்பு (சைவ. சித். நூற் பதி. கழகம்) மற்றும் Foreign Notices of South India by Neelakanda Sastri, (Uni. of Madras) காந்தளகத்தில் கேட்டால் பெற்றுத் தருவர்.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 66

     

    மலர் சபா

     

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    (35)
    பிரியேன் என்று
    அன்று சொல்லிச் சென்ற
    அன்பு பொருந்திய காதலரின்
    உருளையுடைய பெரிய வலிய தேர்
    சென்ற வழியது சிதையும்படி
    பரந்து விரிகின்ற கடல் வெள்ளமே!

    குளிர்பூக்கள் கொண்ட சோலையே!
    துணையுடன் கூடி மகிழும் அன்னமே!
    ஈரம் பொருந்திய குளிர் நீர்த்துறையே!
    இங்ஙனம் எமைப் பிரிதல் தகாது என்று
    அவரிடம் உரைக்க மாட்டீரோ!

    (36)

    பிரியேன் என்று
    அன்று சொல்லிச் சென்ற
    அன்பு பொருந்திய காதலரின்
    உருளையுடைய பெரிய வலிய தேர்
    சென்ற வழியது சிதையும்படி
    பரந்து விரிகின்ற கடல் வெள்ளமே!

    நீ வாழ்வாயாக!
    முன்பு எம்முடன் அன்புடன்
    உறவாடியிருந்த கடலே!
    இன்று உன் செயலால்
    உறவு கெடப் பகைமை ஆனாய்!
    என்றாலும் நீ வாழ்வாயாக!

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram21.html

    படத்துக்கு நன்றி:
    http://www.tamilvu.org/courses/degree/c012/c0123/html/c01234l3.htm

    Share
  • திருமுருகன் துதிமாலை (4)

    நிலைக்கின்ற பொருளோடு கொடுக்கின்ற வள்ளல்

    குணம் வேண்டும் கொள்கை வேண்டும்

    அலைகின்ற   மாயத்தின் சுழல்மாட்டும் முன்னாலே

    வந்து நீ காக்க வேண்டும்

    சிலையென்று ஆகாமல் தினந்தோறுமே வந்து

    தரிசனம் காட்ட வேண்டும்

    மலைவந்து காண்கின்ற காட்சியும் தானிந்த

    நிலம்நின்று காட்ட வேண்டும்

    மயில்தோகை விரித்தாடும் எழிலோடுஏறி

    விளையாடும் வேலகுகனே

    துயில்நீங்கத் துணைவியர் துதிபாடக் காதல்

    முகங்காட்டும் சக்திமகனே   (4)

    Share
  • பனிப்பொழிவு

     

    -பிரசாத் வேணுகோபால்

     

    இதோ கொட்டிக் கொண்டிருக்கிறது
    குளிர்காலப் பனிப்பொழிவு

    வேலை நாள்தான்
    ஆனால் விடுப்பு கொடுத்து விட்டார்கள்
    அலுவலகத்தில்.

    என்ன செய்ய?

    இறுக்கி அணைத்து
    சல்லாபித்திருக்க
    மனைவி இன்னும் அமையவில்லை…

    குளிருக்கு இதமாய்
    ஆல்கஹாலைப் பருக
    இன்னும் கற்றுக் கொண்டிருக்கவில்லை

    உடன் பிறந்தவர்களுடனோ
    நட்புகளுடனோ
    பனியை வீசியெறிந்து விளையாட
    நான் இந்த நாட்டுக்காரனில்லை…

    சில காலம்
    பணி நிமித்தமாய் கடல் கடந்த
    வந்தேறிகளுள் ஒருவன்

    வெப்பமூட்டப்பட்ட அறையில் நின்றவாறு
    சாளரத்தின் வழியே வேடிக்கை பார்க்கிறேன்

    துணையேதுமின்றி
    ஓடியாட…
    உறங்க…
    வழியேதுமின்றி

    பசிக்கு கத்தவும் வழியின்றி
    ஒடுங்கிக் கொண்டு
    பனிப்பொழிவை வெறித்துக் கொண்டிருக்கிறது அது….

    என்னைப் போல.!

     

    படத்துக்கு நன்றி: http://wuppenif.com/tag/nature/

     

    Share