Blog

  • இஸ்ரேல் பயணம் 2

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை இஸ்ரேல் 1948-இல்  உருவாக்கப்பட்டதிலிருந்து இருந்து வருகிறது.  சுமார் 3000 வருட யூதர்களின் சரித்திரத்தைப் புரிந்துகொண்டால்தான் இப்போதைய இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையின் பின்னணி விளங்கும்.  யூதர்களின் பழைய சரித்திரத்தை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

    மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியில் யூதர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.  அப்போது அவர்கள் சிறு சிறு பழங்குடிகளாக வாழ்ந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.  இவர்கள்தான் முதன் முதலில் ஒரே கடவுள் (monotheism) என்ற கோட்பாடுடைய மதத்தைப் பின்பற்றினார்கள் என்று சொல்லப்படுகிறது.

    இவர்கள் வாழ்ந்த இடம் கிட்டத்தட்ட பாலைவனம் போன்றிருந்தது.  செழிப்பான நிலம் இல்லையாதலால் பலர் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வாழ்க்கை நடத்தி வந்தனர்.  தண்ணீருக்குப் பக்கத்தில் இருந்தவர்கள் மீன் பிடிப்பவர்களாக தொழில் நடத்தினர்.  ரோம், எகிப்து, கிரீக் போன்ற நாட்டு மன்னர்கள் இவர்களை வென்றபோது யூதர்கள் அவர்களின் ஆதிக்கத்தில் இருந்திருக்கின்றனர். ஒரு முறை நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது இவர்கள் இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர்.

    ஒரு காலத்தில் எகிப்தின்  அரசர்களான ஃபேரோக்களின் அடிமைகளாக யூதர்கள் வாழ்ந்தனர் என்றும்   ஃபேரோவின் கொடுமைக்கு இலக்காகி இவர்கள் வாழ்ந்துகொண்டிருந்த போது இவர்களின் தலைவரான மோசஸ் இறைவன் இவருக்குக் கட்டளையிட்டபடி இவர்களை இப்போதைய இஸ்ரேல் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார் என்றும் கதை உண்டு.  Ten Commandments என்னும் ஆங்கிலப் படத்தின் கதை இதுதான்.  இஸ்ரேல் அவர்களுக்குக் கடவுள் அருளிய இடமாகக் கருதப்பட்டது.  அன்றிலிருந்து அதைத் தங்கள் புனித பூமியாக (Holy Land) யூதர்கள் கருதுகின்றனர்.  யூதர்களைப் புனித பூமிக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே மோசஸ் இறந்துவிட்டார்.  நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு கனான் என்று அப்போது அழைக்கப்பட்ட, இப்போது இஸ்ரேல் இருக்கும், இடத்தை யூதர்கள் அடைந்தனர்.  இயேசு பிறப்பதற்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இது நடந்ததாகக் கூறப்பட்டாலும் இதற்குச் சரித்திர ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை.  எகிப்தின் பிரமிடுகளைக் கட்டியதில் யூதர்களின் உழைப்பு எந்த விதத்திலும் இல்லை என்கிறார்கள் சில சரித்திர ஆசிரியர்கள்.  ஆனால் மேலே கூறிய படத்தில் இவை உண்மை என்று சித்தரிக்கப்படுகிறது.

    யூதர்களின் மூதாதையர்  ஆபிரகாம், ஐசக் மற்றும் ஜேக்கப் என்றும் ஜேக்கப்பின் பன்னிரண்டு மகன்களின் வாரிசுகள்தான் யூதர்கள் என்றும் பழைய ஏற்பாடு பைபிள் (Old Testament) சொல்கிறது.  (இந்த ஆபிரகாம்தான் தங்களுடைய மூதாதையர் என்று கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் கூறுகிறார்கள்.)  ஆபிரகாமின் சந்ததியினர் என்று கருதப்படும் யூதர்கள் இப்போதைய ஜெருசலேமிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் வாழ்ந்தனர்.  இவர்களுடைய மன்னர்களில் டேவிட் அரசரும் அவருடைய மகன் சாலமனும் குறிப்பிடத் தகுந்தவர்கள்.  ரோமானியர்கள், கிரேக்கர்கள், எகிப்தியர்கள் ஆகிய அந்நியர்களின் படையெடுப்பால் பல முறை அவர்களின் ஆட்சியின் கீழ் வாழ்ந்தனர்.

    சாலமன் காலத்தில்  ஜெருசலேமில் கட்டப்பட்ட யூதர்கள் கட்டிய முதல் கோவில் கி.மு. 587-இல் அவர்களுடைய பகைவர்களால்  அழிக்கப்பட்டது.  அதன் பிறகு  கட்டிய இரண்டாவது கோவில் கி.பி. 70-இல் ரோமானியர்களால் அழிக்கப்பட்டது.  அதனுடைய கிழக்குப் பகுதியில் இருந்த ஒரு வெளிச்சுவரின் ஒரு பகுதி மட்டும் இப்போது இருக்கிறது.

    கிறிஸ்துவர்கள் கடவுளின் குமாரர் என்று கருதும்  இயேசு, யூத சமுதாயத்தில் ஒரு யூதராகப் பிறந்தார்.  அவர் ஜெருசலேமில் இருந்த யூதர்களின் இரண்டாவது கோவிலில் மதகுருமார்களும் செல்வந்தர்களும் ஏழைகளையும் எளியவர்களையும் தங்கள் நலத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டதையும் அவர்களைச் சுரண்டிப் பிழைத்ததையும் கண்டித்தார்.  அவர்களுக்கு இழைத்த கொடுமைகளைக் கண்டித்தார்.  இவர்களை அவர்களிடமிருந்து காப்பாற்றப் பல சமூக சீர்திருத்தங்களைக் கொண்டுவர முயன்றார்.  அப்போதைய யூத சமூகத்தில் இருந்த குறைகளைக் களைந்து அதை நேர் வழியில் திருப்ப முயன்றார்.    இவருடைய சீர்திருத்தங்களினால் தங்கள் நலன்கள் பாதிக்கப்படலாம் என்று எண்ணிய செல்வந்தர்கள் மற்றும் சமூகத்தில் மேல்மட்டத்தில் இருந்தவர்கள் இவரைச் சதிசெய்து ரோமானிய அரசன் பிலாத்துவின் உதவியோடு சிலுவையில் அறைந்தனர்.  அந்தக் காலத்தில் சமூக விரோதிகளைச் சிலுவையில் அறைந்து கொல்வதுதான் பழக்கமாக இருந்தது.  சமூக சீர்திருத்தவாதியான இயேசு ஒரு சமூக விரோதியாகக் கருதப்பட்டார்.  அதனால் அப்போதைய யூத சமூகம் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றது.  இயேசுவின் போதனைகளை ஏற்றுக்கொண்ட சில யூதர்கள் கிறிஸ்துவ மதத்தை நிறுவினர்.  இயேசு கடவுளின் உண்மையான தூதர் என்றும் இறந்த மூன்றாம் நாள் அவர் உயிர்த்தெழுந்தது உண்மையென்றும் நம்பினர்.  தங்களிடையே கடவுளின் தூதர் ஒருவர் தோன்றித் தங்களில் நல்லவர்கள் எல்லோரையும் ஒரு நாள் இறைவனிடம் அழைத்துச் செல்வார் என்று நம்பிக்கொண்டிருந்த யூதர்கள், அந்தத் தூதர் இயேசு என்பதையோ, இயேசு இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதையோ  நம்பத் தயாராக இல்லை.  இயேசு ஒருவரை மட்டும் கடவுள் கல்லறையிலிருந்து உயிர்த்தெழவைத்தார் என்று இயேசுவின் ஆதரவாளர்கள் கூறியது அவர்களுக்கு வினோதமாக இருந்தது.  நல்லவர்கள் எல்லோரையும் இறைவன் கல்லறையிலிருந்து உயிர்த்தெழ வைத்திருக்க வேண்டும் என்பது அவர்கள் வாதம்.  ஆனால் இயேசுவைப் பின்பற்றிய யூதர்கள் கடவுளின் தூதர் இயேசுதான் என்றும் அவர் வருவார் என்று வேதங்களில் இருப்பதாகவும் கூறினர்.

    தங்கள் சமூகத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர முயன்ற இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றுவிட்டபோதிலும், ரோமானியர்களோடு யூதர்களின் உறவு நலிந்துகொண்டே போனது.  தங்கள் சுதந்திரத்திற்காக இவர்கள் ரோமானியப் பேரரசிற்கு எதிராகப் போராடிய போதெல்லாம் நசுக்கப்பட்டனர்.  கடைசியாக கி.பி. 132-இலிருந்து யூதர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறி ஐரோப்பாவின் பல நாடுகளிலும் குடியேறினர்.   இவர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேற நேர்ந்த போதும், அவர்களுடைய இரண்டாவது கோவில் ரோமானியர்களால் கி.பி. 70-இல் இடிக்கப்பட்ட போதும் இயேசுவைக் கொன்ற குற்றத்திற்காகக் கடவுள் இவர்களைத் தண்டித்தார் என்று பின்னால் வந்த சில கிறிஸ்துவ போதகர்கள் எழுதினர்.

    கடவுளால் அனுப்பப்பட்ட அவருடைய தூதரைக் கொன்றதன் மூலம் யூதர்கள் மிகுந்த  பாவத்தைச் செய்தவர்கள்  ஆகிறார்கள் என்றும் அவர்களுடைய மதமும் வேதங்களும் உண்மையானவை அல்ல என்றும் அவர்களோடு  கிறிஸ்துவர்கள் எந்த உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் கிறிஸ்துவ மத போதகர்கள்  கூற ஆரம்பித்தனர்.  இதைத்தான் யூத எதிர்ப்பு (Anti-Semitism) என்கிறார்கள்.  இது உலக சரித்திரத்தில் அன்றிலிருந்து இன்று வரை இருக்கிறது.  அமெரிக்காவில் கூட இது இன்று வரை இருக்கிறது என்று சொல்லலாம்.

    கிறிஸ்துவிற்குப்  பிறகு கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகளுக்கு கிறிஸ்துவ  மதம் தழைக்கவில்லை.  அது  மட்டுமல்ல கிறிஸ்துவர்கள் மற்றக் குடிமக்களாலும் மன்னர்களாலும்  பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.  மூன்றாம் நூற்றாண்டு வரை  கிறிஸ்துவர்கள் பல தொல்லைகளுக்கு  ஆளாயினர்.  ஆனால் ரோமானிய அரசன் கான்ஸ்ட்டாண்டினின் தாய்க்குக் கனவில் ஒரு சிலுவை காட்சி அளித்ததோடு இறைவன் அவளிடம் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றும்படியும் அதைப் பரப்பும்படியும் கட்டளையிட்ட பிறகு கிறிஸ்துவ மதத்திற்கு எதிர்ப்பு இல்லாமல் போனதோடு அது வேகமாகவும் பரவியது.

    கான்ஸ்ட்டாண்டின்  தன்னுடைய கடைசிக் காலத்தில்  கிறிஸ்துவனாக மாறினான்.  அவனுக்குப் பின் வந்த முதல்  தியோடிசியஸ் கிறிஸ்துவ  மதத்தை நாட்டின் அதிகாரபூர்வ  மதமாக அறிவித்தது யூதர்களின் சரித்திரத்தில் பெரிய மாற்றமாக அமைந்தது.  கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை கூடியது.  தியோடிசியஸ்  யூதர்களின் குடியுரிமைகளுக்குப்  பங்கம் எதுவும் விளைவிக்கவில்லை  என்றாலும் கிறிஸ்துவ குருமார்கள்  யூதர்களையும் அவர்களுடைய மதத்தையும் தீவிரமாக விமர்சித்தனர்.  இருப்பினும் கிறிஸ்துவிற்குப் பிறகு சுமார் 600 ஆண்டுகளாக  ரோமானியர்களின் பல கடவுள்களைக்  கொண்ட பேகன் மதம்தான் கிறிஸ்தவர்களுக்கும்  யூதர்களுக்கும் பொது எதிரியாக விளங்கியது.  பக்கத்தில் பக்கத்தில் வாழ்ந்த அவர்களுக்கிடையே  சிற்சில சச்சரவுகள் தோன்றினாலும், யூதர்களின் நலன்கள் பாதிக்கப்படாமலேயே இருந்தன.  முதல் கிரிகிரி என்னும் போப் காலத்தில் யூதர்களை வற்புறுத்திக் கிறிஸ்துவ மதத்தில் சேர்ப்பதை அவர் கண்டித்தார்.  ஆயினும் யூதர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ஆதரவு தொடர்ந்து நீடிக்கவில்லை.

    ஹிரக்லியஸ் என்னும்  ரோமானிய அரசன் பாரசீகர்களோடு நடத்திய யுத்தத்தில் ஜெருசலேமை இழந்த பிறகு அந்த இழப்பிற்கு யூதர்கள் பாரசீகர்களோடு சேர்ந்து செய்த சதிதான் காரணம் என்று நினத்ததால் யூதர்களின் மதப் பழக்க வழக்கங்களை அடியோடு நிறுத்தினான்.  அவர்களின் பல உரிமைகள் பறிக்கப்பட்டன.  அதே சமயம் பிரான்ஸிலும் ஸ்பெயினிலும் யூதர்கள் வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.  ஸ்பெயினில் 694-இல் யூதர்களுக்குக் கிறிஸ்துவ மதத்தைத் தழுவ வேண்டும் அல்லது அடிமைகளாக வாழ வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.  பின்னால் பல நாடுகளிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டதற்கு அரசியல் காரணங்கள், அந்நியர் வெறுப்பு, தங்கள் பிரச்சினைகளுக்கு அவர்களைப் பலிகடா ஆக்குவது போன்ற பல காரணங்கள் இருந்தாலும், தங்களுடைய இறைவனின் தூதரான இயேசுவைக் கொன்றவர்கள் என்ற காரணத்தால் கிறிஸ்துவர்கள் யூதர்களை வெறுத்ததுதான் முதன்மைக் காரணம்.

    வரலாற்றின் இடைக்  காலமான 600-1500-இல் யூதர்கள் பல நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்; பல கிறிஸ்துவ போப்கள் அவர்கள் மீது பல அவதூறுகளைக் கிளப்பினர்.  பல யூதர்கள் மருத்துவத்தில் சிறந்து விளங்கினர்.  வியாதிகள் மனிதர்கள் செய்த தவறுகளால் வருபவை, மத குருமார்களிடம் சென்றுதான் அதற்குத் தீர்வு காண வேண்டும் என்றும் யூத மருத்துவர்களிடம் வைத்தியம் செய்துகொள்ள வேண்டாம் என்றும் கிறிஸ்தவ போப்புகள் மக்களிடம் கூறினர்.  யூதர்கள் வணிகம், வியாபாரம் ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினர்.  அதிலிருந்தும் இவர்கள் விலக்கிவைக்கப்பட்டதால் யூதர்கள் வட்டிக்குக் கடன் கொடுக்கும் பழக்கத்தை ஆரம்பித்தனர்.  அதிக வட்டி வசூலிக்கிறார்கள் என்னும் குற்றமும் யூதர்கள் மேல் சுமத்தப்பட்டது.  (அதிக வட்டி வாங்கும் பழக்கம் யூதர்களிடம் இருந்ததால் இயேசு அவர்களைக் கண்டித்திருக்கிறார்.)

    ஏழாம் நூற்றாண்டில் முகம்மது நபி, இஸ்லாம் மதத்தைத் தோற்றுவித்த பிறகு முஸ்லீம் அரசர்கள் பாலஸ்தீனத்தைப் பிடித்துக்கொண்டனர்.  அவர்களை வென்று பாலஸ்தீனத்தை மீட்கச்சென்ற, பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்த சிலுவைப் போராளிகள் (crusaders) (கிறிஸ்துவ மதத்தைக் காப்பாற்ற வந்தவர்கள்) வழியில் பல யூதர்களுக்கும் நிறைய தீமைகள் விளைவித்தனர்.  முஸ்லீம் அரசர்களின் ஆதிக்கத்தில் இருந்தபோது ஸ்பெயின் அரசு யூதர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் அதிக வரி விதித்தது என்றாலும் யூதர்களை பலவந்தமாக மதம் மாறச் சொல்லவில்லை.  ஆனால் மறுபடி கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் ஆட்சியைப் பிடித்த பிறகு யூதர்கள் மீது 1265-இல் மத விசாரணையை (Inquisition) ஆரம்பித்தனர்.  கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய யூதர்களின் வாரிசுகளில் பலர் மத போதகர்களாக, துறவிகளாக மாறிய போதிலும் விசாரணை அவர்களையும் விட்டு வைக்கவில்லை; அவர்கள் உண்மையிலேயே மதம் மாறிவிட்டார்களா என்று பரிசோதித்தனர்.  1492-இல் போப் வெளியிட்ட ஆணை, கிறிஸ்தவர்கள் அல்லாத முஸ்லீம்களும் யூதர்களும் அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாலொழிய நாட்டை விட்டுக் கடத்தப்பட வேண்டும் என்று அறிவித்தது.  (இதே போப்தான் ஸ்பெயின் அரசியால் அமெரிக்கக் கண்டத்திற்கு அனுப்பபட்ட கொலம்பஸ் செல்லும் இடங்களில் கிறிஸ்துவரல்லாதவர்களைச் சந்தித்தால் அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் அவர்களின் சொத்துக்களை அபகரித்துக்கொள்ளலாம் என்றும் அனுமதி கொடுத்தார்.  இப்படி போப்பின் ‘ஆசீர்வாதத்தைப்’ பெற்ற கொலம்பஸும் அவரைப் பின்பற்றிச் சென்றவர்களும் அமெரிக்கக் கண்டங்களில் பல பழங்குடி மக்களைக் கொன்று குவித்தனர்.)

    பதினான்காம், பதினைந்தாம் நூற்றாண்டுகளில் ஜெர்மனியிலும் யூதர்கள் பல கொடுமைகளுக்கு ஆளாயினர்.  இந்தக் கொடுமைகளிலிருந்து தப்பிக்கப் பலர் போலந்து போன்ற நாடுகளுக்குச் சென்றனர்.  போலந்தில் யூதர்களின் வணிகத் திறமையைக் கற்றுக்கொள்வதற்காக பல செல்வந்தர்கள் இவர்களை ஆதரித்தனர்.  யூதர்கள் அங்கு அவர்களுடைய கல்வி நிறுவனங்களை நிறுவினர்.  ஆனால் மறுபடி பதினேழாம் நூற்றாண்டில் கத்தோலிக்கக் கிறிஸ்தவ மதத்தில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களினால் யூதர்கள் பாதிக்கப்பட்டனர்.

    ரஷ்யப் பேரரசி கேத்தரின்  பத்து லட்சம் யூதர்களை ரஷ்யாவில்  குடியேற அனுமதித்தார்.  அரசி இவர்களுக்கு ஆதரவு  அளித்தாலும் அவர்களை மண்ணில்  பாடுபடும் விவசாயிகளாகவே  அனுமதித்திருந்தார்.  யூதர்களைத் தொழில்களில் அனுமதிக்கவில்லை.  இவருக்குப் பின் வந்த முதலாம்  அலெக்ஸாண்டர், முதலாம் நிக்கலஸ் காலத்தில் யூதப் பையன்கள் பன்னிரெண்டு முதல் இருபத்தைந்து வயது வரை ராணுவத்தில் பணிபுரிய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாயினர்.  யூதர்களுக்குப் பாதுகாப்பில்லாமல் இருந்ததால் பெரிய வெள்ளி போன்ற நாட்களில் (அன்றுதான் இயேசு சிலுவையில் அறையப்பட்டதைக் கிறிஸ்துவர்கள் நினைவுகூருவார்கள்) யூதர்கள் வெளியே வராமல் வீட்டிலேயே அடைந்துகிடந்தனர், சில கிறிஸ்துவர்கள் அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கலாம் என்பதால்.

    பதினாறாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் வாழ்ந்த, புராடஸ்டெண்ட் கிறிஸ்துவப் பிரிவைத் தோற்றுவித்த மார்ட்டின் லூத்தர் யூதர்களைப் பற்றிப் படித்திருந்ததால் ‘இயேசு ஒரு யூதராகப் பிறந்தார்’ என்னும் நூலை எழுதி யூதர்களை கிறிஸ்துவ மதத்திற்கு இழுக்கலாம் என்று நினைத்தார்.  ஆனால் அப்படி நடக்காததால் யூதர்களையும் அவர்கள் மதத்தையும் தூற்ற ஆரம்பித்ததோடு வங்கித் தொழில், வர்த்தகம் ஆகியவற்றிலிருந்து யூதர்கள் நீக்கப்பட வேண்டும் என்றும், முடிவாக பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டதைப் போல் ஜெர்மனியிலிருந்தும் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்தார்.

    பல நாடுகளில் யூதர்கள் தங்கள் திறமையினால் செல்வந்தர்களாகவும் அரசியலில் அதிகாரம் உள்ளவர்களாகவும்  விளங்கினாலும் அவர்களுடைய இந்த வாழ்க்கை வெற்றியே மற்றவர்களுக்கு அவர்கள் மேல் பொறாமையையும் வெறுப்பையும் உண்டாக்கியது.  மேலும் யூதர்கள் தாங்கள்  மற்றவர்களை விட உயர்ந்தவர்கள்  என்ற எண்ணத்தையும் எப்போதும்  கொண்டிருந்தனர்.  பல நாடுகளில்  மற்றவர்களிடமிருந்து தனித்தே  வாழ்ந்திருக்கிறார்கள்.  குடியேறிய எல்லா இடங்களிலும்  அந்தந்தச் சமுதாயங்களோடு  அவர்களால் இணைய முடியவில்லை.  இதனாலோ என்னவோ அந்தச் சமுதாய மக்களும் இவர்களைச் சரியாக நடத்தவில்லை.  தங்கள் யூத மதத்தையும் அதன் கோட்பாடுகளையும் இவர்களுடைய மதத்தலைவர்கள் தவறாமல் கடைப்பிடித்திருக்கிறார்கள்.  குடியேறிய நாடுகளில் பேசப்பட்ட மொழிகளைக் கற்றுக்கொண்டாலும் மதச் சடங்குகளில் தங்கள் மொழியான ஹீப்ருவைத் தொடர்ந்து உபயோகித்திருக்கிறார்கள்.  ஜெர்மனியில்தான் யூதர்களின் எண்ணிக்கை மற்ற எல்லா நாடுகளையும் விட அதிக அளவில் இருந்தது.  இங்கு ஜெர்மன் மொழியிலிருந்து உருவாகிய யிட்டிஷ் (Yiddish) மொழியைப் பேசினர்.

    ரஷ்யா, போலந்து, ஃபிரான்ஸ், ஸ்பெயின் என்று பல நாடுகளிலும் யூதர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டாலும் ஜெர்மனியில் கத்தோலிக்க கிறிஸ்துவப் பிரிவைச் சேர்ந்த ஹிட்லர் இவர்களை லட்சக் கணக்கில் கொன்று குவித்தது ஐரோப்பாவில் இருந்த யூத எதிர்ப்பின் உச்சக் கட்டம் எனலாம்.  டிசம்பர் ஆறாம் தேதியிட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் கூறியிருப்பது போல் ஹோலகாஸ்ட் (Holocaust) என்று அழைக்கப்படும், ஹிட்லர் நடத்திய, யூதர்களின் படுகொலையைத் தொடர்ந்து தப்பிய யூதர்கள் ஜெர்மனியை விட்டு அகதிகளாக ஓடிவராமல் இருந்திருந்தால் இஸ்ரேல் என்ற நாடே உருவாகியிருக்காது.

    பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்தே தங்களுக்கென்று ஒரு நாடு இருந்தால்தான் தங்களுடைய  நலன்களைக் காத்துக்கொள்ள  முடியும் என்று நினைக்க  ஆரம்பித்த யூதர்கள் தங்களுக்குத் தனி நாடு வேண்டும் என்று அப்போதிலிருந்தே கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

    யூதர்கள் முதலிலிருந்தே – அதாவது பல ஆயிரம் ஆண்டுகளாகவே – தங்கள் எல்லோரையும் தங்களுடைய பழைய சொந்த நாடான பாலஸ்தீனத்தில் ஒன்று சேர்க்கக் கடவுளின் தூதர் ஒருவர் வருவார் என்று காத்திருந்தார்கள்.  இருந்தாலும் ஐரோப்பாவில் நிலவிய யூத எதிர்ப்பு கடவுளின் தூதர் வருவதற்காகக் காத்திருப்பதை விட தாங்களாக முயன்று தங்களுக்கென்று தனி நாடு ஒன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை இவர்களிடம் தோற்றுவித்தது.  மேலும் அந்த நாடு அவர்களின் பழைய புண்ணிய ஸ்தலமான பாலஸ்தீனமாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினர்.  இவர்கள் அங்கு வாழ்ந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன என்பதையும் அங்கு இப்போது வேறு இன மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கலாம் என்பதையும் துரதிருஷ்டவசமாக (தங்களின் வசதிக்காக) அவர்கள் மறந்துவிட்டிருந்தனர்.  இவர்களின் இந்த ஆசையின் (பேராசை என்று கூடச் சொல்லலாம்) விளைவே இப்போதைய இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்கு வித்திட்டது என்று கூறலாம்.  (இந்தப் பிரச்சினைக்குத் தீர்வே இல்லையென்றும் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இயேசு பூமிக்கு மறுபடி வந்து உலகம் பூராவையும் தன் ஒரே குடையின் கீழ் பாரபட்ச முறையில் ஆள்வார் என்றும் அப்போது உலகில் நேர்மை, நியாயம் கோலோச்சும் என்றும் பைபிளில் கூறப்பட்டிருக்கிறதாம்.  காஷ்மீர் பிரச்சினை போல் இப்போதைக்குத் தீர்வு காண முடியாத பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.  இந்த இரண்டு பிரச்சினைகளும் பிரிட்டிஷ் அரசால் ஏற்படுத்தப்படவை என்று கூறினால் அது மிகையாகாது.  இந்தப் பிரச்சினை உருவான கதையைப் பின்னால் பார்ப்போம்.)

    (தொடரும்)

    Share
  • நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’:: தொடர்-22

    பெருவை பார்த்தசாரதி

    அன்றாடம் அதிகாலை எழுந்தவுடன், தேனீர் அருந்திவிட்டு, தினசரிகளை முழுவதும் படிக்காமல், தலைப்புச் செய்திகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அவசரமாக ஒவ்வொரு பக்கத்தையும் திருப்பி, மனதுக்குப் பிடித்த விஷயங்களில் ஓரளவுக்கு கவனம் செலுத்தும் போது, முழுவதும் படிக்க முடியாமல் அலுவலகத்துக்கு நேரம் ஆகிவிடுகிறது. அவசர அவசரமாக குளித்து முடித்துவிட்டு உடலில் துவளும் தண்ணீர்த் துளிகளைக் கூட துவட்டாமல் அப்படியே நின்று கொண்டு சாப்பிட்டுவிட்டு, மீண்டும் அவசரகதியில் அலுவலகம் சென்று விடுகிறோம். அவரவர் வேலைக்கேற்றபடி அயறும் வரை உழைத்துவிட்டு மறுபடி பசியாறுகிறோம். அந்திசாயும் வேளையில் சிற்றுண்டி அருந்திவிட்டு, மறுபடி கணிணியின் மானிட்டரில் முகத்தை நுழைத்து, மெளஸைக் (mouse) கையில் பிடித்துக்கொண்டு, காதில் ஹெட்போனுடன் நேரம் தெரியாமல் எதையோ, யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டேயிருக்கிறோம். அலுவலகப் பணி முடிந்தவுடன் வாகனத்தை வேகமாக ஓட்டி, வீடு வந்து சேர்கிறொம். என்ன சாப்பிடுகிறோம் என்றுகூடத் தெரியாமல், காதைப் பிளக்கும் சத்தத்துடன் டிவி பார்த்துவிட்டு, பத்து பதினோரு மணிக்கு நித்திரா தேவி அருளால் கண்ணைமூடி, உண்ட களைப்பில் கிடந்து உறங்குகிறோம். அடுத்த நாள் காலை அதிகாலையில் எழுந்திருப்பதற்கு அலாரம் வைத்துவிட்டு, மணி ஒலித்ததும் நிதானமாக அணைத்துவிட்டு, மீண்டும் தூங்குவதற்கு எத்தனிக்கிறோம். இதுதான் இன்றய வாழ்க்கை முறை என்பது பொதுவாக அனைவருக்குமே பொருந்தும் விஷயமாக ஆகிவிட்டது.

    இயல்பாக நம்முடைய வாழ்க்கை முறையை நாம் சிந்தித்துப் பார்த்தோமானால், நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் நாம் எதற்காகச் செய்கிறோம் என்று கூடத் தெரியாமல் அதைச் செய்துகொண்டே இருக்கிறோம். இவற்றையெல்லாம் தீர ஆராய்ந்து பார்த்தால், பல விஷயங்கள் நமக்குப் புலப்படாது. இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்த நமது முன்னோர்கள் பின்வரும் சந்ததியினருக்கு சூட்சுமமான விஷயங்களை எளிதில் புரியும்படி ஏட்டில் எழுதிவைத்துச் சென்றிருக்கிறார்கள். இதையெல்லாம் படித்துத் தெரிந்து கொள்ளவோ?..சிந்தித்துப் பார்க்கவோ நேரமில்லாமல் எதை எதையோ தேடி அலைந்து கடைசியில் மனிதப் பிறவி எடுத்த வாழ்க்கை முற்றுப் பெறாமலேயே முடிந்து விடுகிறது. நம்முடைய உடலும் உள்ளமும் சில நாள் சுறு சுறுப்பாக இயங்குகிறது, மறுநாள் உழைக்க மறுக்கிறது. நமது வயிறும் நான்கு வேளை உண்டதை, ஒரு சில நாள் ஒரு வேளை போதும் என்று மறுக்கிறது. சுறுசுறுப்பாக இயங்கிய மூளை சில நேரம் மக்கர் செய்து, சிந்தனையை மழுங்கச் செய்து, தேவையில்லாத கற்பனை உலகத்துக்குள் அழைத்துச் சென்று விடுகிறது. அமைதியாக இருந்த மனதுக்குள் புயலை உண்டாக்குகிறது. ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு பயம் வந்து, எதிர்காலத்தை நம் கண்முன் காட்டி நம்மை ஆட்டிப்படைக்கிறது. ஒரு வீடுதானெ இருக்கிறது, இரண்டு குழந்தைகள் ஆயிற்றே, இன்னமும் அலுவலகத்தில் அசிஸ்டண்டாகவே (&) இருக்கிறோமே, நம்மோடு சேர்ந்தவர்கள் அனைவரும் வானில் பறக்கும் (&) போது, நம்மிடம் கார் மற்றும் ஏசி இல்லையே, என்றெல்லாம் மனம் அலைபாய்கிறது. அடுத்த ஐந்து வருடத்தில் ரிடையர்மெண்ட் (&) வரப்போகிறது, அதற்குப் பிறகு எந்த அலுவலகத்தில் ‘கன்சல்டண்ட்’ (&) ஆகப்போகிறோம்?…………….மனது இன்றிலிருந்தே கணக்குப் போடத் தொடங்குகிறது. பன்னெடுங்காலத்திற்கு நல்ல வாழ்க்கை வாழ பட்ஜெட் போட்டுக்கொண்டே ஓவ்வொரு நாளையும் கூட்டி அதை மாதமாக்கி, வருடமாக்கி காலம் கழிந்து கொண்டே இருக்கிறது.

    இப்படியாக, சிறுவயது முதல் யாரோ ஒருவரது வழிகாட்டுதலின் உதவியுடன், பல இன்னல்களைக் கடந்து படிப்படியாக முன்னேறி, பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்து, 25 வயது நிரம்பிய வாலிபனாக மனதில் பலவித ஆசைகளுடன் வேலைதேடிச் செல்லும்போது சிந்தனையும், செயலும் சுறுப்பாக செயல்படுகிறது. விருப்பப்பட்ட வேலை கிடைத்தவுடன் மனது மகிழ்ச்சியில் தாண்டவமாடுகிறது. முழு குதூகலத்துடன் எட்டாவது மாடியில் உள்ள அலுவலகத்துக்கு, லிஃப்டைத் தவிர்த்து மாடிப்படிகளை  வேகமாகக் கடந்து சென்றடைகிறோம். பால்ய வயதில் நடந்த சம்பவங்கள் அவ்வப்போது நினைவுக்கு வருகிறது. வேகமாக ஓடும் ஆற்றிலே எதிர் நீச்சல் போட்டதெல்லாம் நினைவுக்கு வரும். எங்கும் எதிலும் வேகம்தான். பல மைல் தொலைவில் உள்ள பள்ளிக்கு, சைக்கிளில் பத்து நிமிடத்தில் சென்றடைந்தோம். சைக்கிள் இல்லையேல் நடையும் ஓட்டம்தான். அன்றைக்குத் தொடர்ந்த ஓட்டம் இன்று வரையில் தொடர்கிறது. ஒவ்வொரு நாளாக ஓட்டமெடுத்து,  பல வருடங்கள் கடந்து விட்டதை நினைக்கும்போது மனதுக்கு மலைப்பாகக் தோன்றும். இன்றும் ஓய்வில்லாமல் ஓடி ஓடி உழைத்து, நாம் நினைத்தையெல்லாம் அடைந்து விட்டோம். சாதிக்க நினைத்தை சாதித்துவிட்டோம். இன்று நம் வயதைக் கேட்டால், ஓட்டமாக ஓடிய அனுபவங்களை முன்வைத்து 45, 50, 60 என்று நம் வயதைச் சொல்லிவிட்டு, மீண்டும் வாழ்க்கைப் பாதையில் ஓட எத்தனிக்கிறோம். ஆனால் முடியவில்லை, நடை தளர்ந்து, வேகம் குறைந்து, தள்ளாமையால் ஓடமுடியாமல் நிதானத்தை அடைந்து விடுகிறோம்.

    பாதை முடிந்துவிட்டாலும் பயணம் முடியவில்லை என்பது போல ஒவ்வொரு நாளும் ஓடிக்கொண்டிருக்கிறோம். இப்படி தினமும் கவலையுடனோ, கவலை இல்லாமலோ, ஒரு நாள் என்பது, ஒரு நிமிடம் போல் கழிந்து விடுகிறது. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் எங்கு நாம் ஓடிக்கொண்டிருகிறோம், எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று கூடத் தெரியாமல், வாழ வேண்டிய வாழ்க்கையேல்லாம் சட்டெனக் கழிந்து கொண்டே வருகிறது. ‘நாளை’ என்பதே நிச்சமில்லாமல் இருக்கும்போது, அடுத்த ஐந்து, பத்து ஆண்டுகள் என்றில்லாமல், நூற்றாண்டுகளை நல்ல முறையில் கடக்க நம் மனம் எந்நேரமும் கணக்குப் போட்டுக் கொண்டே இருக்கிறது. ஓய்வில்லாமல் மனதில் எழும் கேள்விகளுக்கு விடை தேடி எண்ண அலைகள் விரிவடைந்து கொண்டே செல்கிறது.

    குடியிருக்கும் வீடு பழுதடைந்து, கூரை எந்த நேரமும் விழக்கூடிய நிலையில் இருந்தால், அந்தவீட்டில் குடியிருப்போமா, இதைப்போலவே, இந்த உடம்பு நன்றாக இருக்கும் வரையில், நம்மால் இயன்றவரை பொருள் ஈட்டுகிறோம். இங்கிருப்பது போதாதென்று சீமை தேடி ஓடுகிறோம். மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், பார்க்கும் இடமெல்லாம் விலையுயர்ந்த பொருட்கள், மார்பில் தவழும் முத்து மாலைகள் இவையெல்லாம் நமது உடம்பு நன்றாக இருக்கும்போது ஓடி, ஓடி சம்பாதித்தவை. வசதியாக வாழும்போது, உற்றார், உறவினர், நண்பர்கள், சுற்றத்தார் போன்றோர்களின் கூட்டம் நம் அருகே என்றுமே உண்டு.  வசதி இல்லாதபோதோ அல்லது கடைசி காலத்தில் யார் நம்மோடு கூட வருவார்கள் போன்ற எண்ண அலைகள் வரும்போது, ‘வீடு வரை உறவு, காடு வரை பிள்ளை, கடைசிவரை யாரோ’?…………….என்ற கவியரசர் பாட்டுதான் நம் நினைவுக்கு வரும். அந்திமகாலத்தில் உயிர்பிரியும்போது இவையெல்லாம் கூட வருமா?  என்றால், “எதுவுமே கூடவராது” என்பதுதான் நமக்கு முன் வாழ்ந்த ஞானிகளின் கூற்று. இத்தொடரில் இடம்பெற்ற அனைத்துக்கும் முற்றுப் புள்ளி வைப்பது போல், சிறந்த சிவனடியார்கள் என்ற பெயர்பெற்ற 63 நாயன்மார்களில் ஒருவரும், திருமாலே சரணாகதி என்று வாழ்ந்த பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரும் நமது சிந்தனைக்கு விருந்தாக, செவிக்கு இனிதான பாடல் மூலம் மனதில் எழும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக நமக்கெல்லாம் நல் வழிகாட்ட வருகிறார்கள்.

    ஒன்றே ஒன்றைத்தவிர, நாம் வாழ்ந்த காலத்தில்  சம்பாதித்தது எதுவுமே இறந்த  பிறகு நம்முடன் வராது என்கிறார் திருமூல நாயனார். நம்முடன் காலம் பூராவும் வாழ்ந்து, நம்மோடு ஒட்டி உறவாடிய மனைவி மற்றும் நாம் சம்பாதித்தையெல்லாம் அனுபவித்து வாழ்ந்த நம் மக்களும் கூட வரமாட்டார்கள்.  அப்படியென்றால் எதுதான் நம்முடன் கடைசி வரையில் வரும்?…என்ற வினாவுக்கு அருமையான பதிலை இங்கே நம் முன் வைக்கிறார் நாயனார். வாழ்க்கையின் அனுபவத்தில் நாம் பெறுகின்ற ஞானமும், நாம் கற்றுக்கொண்ட நல்லொழுக்கம் தவிர வேறொன்றும் கூட வராது என்பதை நான்கே வரிகளில் பின் வருமாறு விளக்குகிறார்:-

    பண்டம்  பெய் கூரை பழவி விழுந்தக்கால்
    உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
    கொண்ட விரதமும் ஞானமும் அன்றி
    மண்டி அவ்வழி நடவாதே.

    நாயனாரை ஆழ்வாரோடு  ஒப்பிட்டு நோக்கையில், வாழ்க்கை அனைத்தையும் பெருமானிடத்தில்  சமர்ப்பித்து விட்டு, இப்பூவுலக  வாழ்க்கையில் கிடைக்கும் பணம், பதவி, புகழ் எதுவுமே  வேண்டாமென்கிறார் ஆழ்வார்களில் ஒருவரான விப்ர நாராயாணர். வாழ்க்கையில் வழிதவறும் போது, உறவினர்கள் அல்லது நண்பர்கள் போன்றோர் நமக்குதவ முன்வருவார்கள். ஒரு பெண்ணிடம் மனதைப் பறிகொடுத்து, வாழ்க்கையில் அனைத்தையும் இழந்த ஆழ்வாருக்கு உதவ அரங்கனே வந்தான் என்கிறது வரலாறு. ஒவ்வொரு மனிதனும் நிம்மதி தேடி, அது எங்குமே கிடைக்காமல் கடைசியில் இறைவனைச் சரணடைவது இயற்கை. துன்பம் வரும்போது இறைவனை நினைந்து பிறகு மகிழ்ச்சியில் திளைக்கும்போது மறந்து விடுவது மனித இயல்பு. உலகத்திலேயே உயர்ந்த பதவியினால் கிடைக்கும் சுகத்தைவிட இறையுணர்வுதான் மிகப்பெரியது என்கிறார் ஆழ்வார். அடியார்களின் காலடி பட்ட மண்ணை தன் தலையில் சுமந்து தொண்டரடிப்பொடி என்ற பெயர் பெற்ற இவர் இறைவனிடம் பின்வருமாறு வேண்டுகிறார்.

    பச்சைமா மலைபோல்  மேனி, பவளவாய்க் கமலச்  செங்கண்
    அச்சுதா அமரர்  ஏறே, ஆயர்தம் கொழுந்தே என்னும்
    இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
    அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.

    வாழ்க்கைப்  பயணத்தில் சாதாரண மனிதன் அனுபவிக்கின்ற இன்ப துன்பங்கள் அனைத்தையும் சமாளிக்கும் திறனையும், கடைபிடிக்க வேண்டிய அறநெறிகளையும் மேற்கூறிய ஒன்றிரண்டு பாடல்கள் மட்டுமல்ல, அரிய பெரிய பல்லாயிரம் பாடல்கள் (ப்ரபந்தம்-4000, திருமந்திரம்-3000) மூலம் நாம் எளிதில் அறிந்துகொள்ளுமாறு நம்மிடையே விட்டுச் சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

    தொடரும்…….

    Share
  • வார ராசி பலன் 10.12.2012-16.12.2012 வரை

    காயத்ரி பாலசுப்பிரமணியன்

    மேஷம்: வீண் பேச்சுகள் குறைந்து ஆக்கப்பூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்துவது மாணவர்களின் உயர்வுக்கு வழி வகுக்கும்.  குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலக, பெண்களின் பொறுமை கை கொடுக்கும்.  கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில் வியாபாரிகளுக்கு, சாதகமான பலன் கிடைக்கும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு, உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியில் உள்ளவர்கள், புதிய நபர்களுக்காக ஜாமீன் போடுவதை தவிர்ப்பது நல்லது.  பண முடை தலை காட்டும் வாய்ப்பிருப்பதால், சுய தொழில் புரிபவர்கள் நிதானமாக செயல்படவும். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்தாலும் பிரகாசிப்பது கடினமாக இருக்கும்.

    ரிஷபம்: சேமிக்க வேண்டும் என்று நினைத்தாலும், பெண்கள் இந்த வாரம், பிள்ளைகளின் நலனுக்காக  செலவு செய்யவேண்டி இருக்கும். புதிதாக வேலையில் சேர்ந்தவர்கள், பணி நிமித்தமாக வெளி இடங்களில் தங்க வேண்டிய நிலை ஏற்படலாம். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு, உடன் இருப்பவர்களால், தேவையற்ற கவலை வந்து நீங்கும். பொறுப்பில்  இருப்பவர்களுக்கு கூடுதல் உழைப்பு இருக்கும். கடன் விவகாரம் கட்டுக்குள் இருக்க, வியாபாரிகள் தேவையான முயற்சிகளை அவ்வப்போது .எடுக்கவும். கலைஞர்கள் வெளியிடங்களில், தங்களின் மதிப்பு, மரியாதை கெடாமல் கவனமாக பேசுவது நல்லது. மாணவர்கள் போடும் உழைப்பிற்கு நல்ல பலன் கிட்டும்.

    மிதுனம்: இந்த வாரம், பெண்கள் பண விஷயத்தில்,  தகுந்த முடிவுகள் எடுக்கமுடியாத சூழலுக்குத் தள்ளப்படலாம். மாணவர்கள் செலவுகளில், கவனமாக இருந்தால், வாகனங்களால் உண்டாகும் வீண் செலவுகள் குறையும். தடுமாற்றத்தைத் தரும் விவகாரங்களிலிருந்து, க்லைஞர்கள் ஒதுங்கியிருப்பதே புத்திசாலித் தனம்.  பணத்தேவையால், .வியாபாரிகளுக்கு நெருக்கடி தோன்றி மறையும். பொது வாழ்வில் உள்ளவர்கள், எதிலும், நல்ல பெயர் வாங்குவார்கள். பணியில் இருப்பவர்கள், சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது மூலம், வேலைகள் தேங்காமல் பார்த்துக் கொள்ளலாம். .சுய தொழிலில் இருப்பவர்கள், புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது கவனத்துடன் செயல்படுவது அவசியம்.

    கடகம்: இல்லத்தில் எழும் பிரச்சனைகளைத் தீர்க்க, பெண்கள் நிதானத்தைக் கடைபிடித்து வந்தால்,உறவுகள் சீராக இருக்கும். பணியில் இருப்பவர்கள் தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் இருந்தால், மன அமைதி கெடாமல் வேலைகளில் ஈடுபடலாம். பொதுவாழ்வில் இருப்பவர்கள் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளும் முன் பணியின் தன்மை அறிந்து செயல்பட்டால், பொறுப்புக்களை நிறைவேற்றுவதோடு நல்ல பெயரையும் தக்க வைத்துக் கொள்ளலாம். இந்த வாரம் கடின முயற்சி மற்றும் அலைக்கழிப்புக்குப்பின் கலைஞர்களின் உண்மையான உழைப்பிற்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    சிம்மம்: இந்த வாரம் வியாபாரிகள் கடனைத் தீர்ப்பதற்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளைக் காப்பாற்ற முழு முயற்சியில் இறங்கி வேலை செய்து கடனை அடைத்து, லாபத்தைப் பெருக்கிக் கொள்வார்கள். மாணவர்கள் மேற்கொள்ளும் பயணம் ஆதாயத்தை ஏற்படுத்துவதாக அமையும். பெண்கள் மனதில் குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் வேலை செய்வதன் மூலம் குடும்பப் பொறுப்புக்களை சரிவர செய்து நல்ல பெயரைப் பெறலாம். கலைஞர்கள் தங்கள் கடன் பற்றிய நிலவரத்தை முழுமையாக தெரிந்து கொண்டு செயல்பட்டால்,பொருளாதாரச் சரிவுகளை ஓரளவு சரிக்கட்டமுடியும்.

    கன்னி: இந்த வாரம் சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு சரக்குகளை வாங்குதல் நலம். மாணவர்கள் மற்றவர் கூறும் குறைகளையும், விமர்சனங்களையும் பொருட்படுத்தாது, கல்வியில் கவனமாக இருந்தால் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய இயலும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் சுமூகமாக நடந்து கொண்டால், குற்றங்குறை என்பது தேய்பிறையாக கரைந்துவிடும்.குடும்பத்தில் சந்தோஷம் நிலவி வந்தாலும், உறவினர் வருகையால், சிறு சலசலப்பு தோன்றி மறையும். பொது வாழ்வில் இருப்பவர்கள் நிர்வாக விவகாரங்களில், தகுந்த ஆலோசனையின் பேரில் செயல்படவும்.

    துலாம்: பெண்கள் பொறுமையாக நடந்து கொண்டால், குடும்பத்தில் சச் சரவு, கருத்து வேறுபாடு ஆகியவை நுழையாமல் இருக்கும். மாணவர்கள் பாடங்களை கவனமாக பயில்வதன் மூலம் கடைசி நேர பதற்றத்தையும், பரபரப்பையும் குறைத்துக் கொள்ளலாம். சுய தொழில் புரிபவர்கள் சோம்பலையும், பணிகளை தள்ளிப் போடுதலையும் தவிர்த்தால், வாய்ப்பும், அதிர்ஷ் டமும் உங்களை தேடிவரும். பொது வாழ்வில் இருப்பவர்கள் குற்றம் குறைகளை பெரிது படுத்தாமலிருந்தால்,கூட்டு முயற்சிகள் மூலம் அதிக லாபமும், நல்ல பெயரும் பெற முடியும்.

    விருச்சிகம்: பெண்கள் பிள்ளைகளின் போக்கை அவ்வப்போது கவனித்து வாருங்கள். அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும். மாணவர்கள் நண்பர்கள் நடுவே தோன்றும் கருத்து வேறுபாடுகளை பெரிது படுத்தாமலிருப்பது புத்திசாலித்தனம். இந்த வாரம் வீட்டை விரிவுபடுத்துவதில் அதிக பணம் முடங்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் மாணவர்கள் அவசரப்பட்டு அடுத்தவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். சுய தொழில் புரிபவர்கள் வேண்டாத தொல்லைகளிலிருந்து விடுபட எல்லாவற்றிலும் கவனமாக இருப்பதோடு பணம் செலவு செய்வதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

    தனுசு: இந்த வாரம் பூர்வீகச் சொத்தில் சில தொல்லைகள் வந்து போகும் நிலை இருப்பதால், பெண்கள் ஆவணங்கள் அனைத்தையும் பத்திரமாக வைப்பது அவசியம். இந்த வாரம் எவ்வ ளவு பாடுபட்டாலும்,நல்ல பெயரைப்பெறுவது என்பது சற்று கடினமாக இருக்கும். நண்பர்க ளிடம் ஏற்பட்ட மனஸ்தாபம் தீருவதால் மாணவர்களின் மீண்டும் நட்பு பலம் பெறும். கலைஞ ர்கள் தங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ள எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். முதியவர்கள் உணவு , உரையாடல் இரண்டிலும் கட்டுப்பாடாக இருப்பது நல்லது

    மகரம்: மாணவர்கள் பிறரிடம் கைமாற்றாய் பணம் பெறுவது கொடுப்பது-இரண்டையும் தவிர்த்தால் வீண் தலைவலி வராமலிருக்கும். உயர் படிப்பிற்காக வெளியிடம் செல்பவர்கள் எதிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பது நன்மை தரும். பெண்கள் சேமிப்பைக் கரைக்கும் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.பொறுப்பில் இருப்பவர்கள் வழக்கு விவகாரங்களை நேரடியாக கவனித்துக் கொண்டால், நஷ்டங்களைத் தவிர்த்து விடலாம். பணியில் இருப்பவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களையும், அதன் மூலம் வெற்றிகளையும் பெற்று மகிழ்வர்.

    கும்பம்: பெண்கள் ஆகாரத்தில் கட்டுப்பாடாய் இருந்தால், ஆரோக்கியமும் சீராக இருக்கும். வியாபாரிகள் பணியாளர்கள் கொடுத்த பொறுப்புக்களை சரிவர செய்கிறார்களா என்று கவனித்துக் கொள்ளவும். பொது வாழ்வில் இருபவர்கள் வேண்டாத பிரச்னைகளில் ஈடுபட வேண்டாம். பணியில் இருப்பவர்கள் உங்களைத் தேடி வரும் இடமாற்றத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளுங்கள்.அது நல்ல திருப்பு முனையாக இருக்கும். சுய தொழில் புரிபவர்கள் நிலவும் சூழலுக்கேற்ப, திட்டங்களை செம்மைப்படுத்துவதோடு தங்கள் அணுகு முறைகளையும் மாற்றினால், அதிக லாபம் பெறலாம்.

    மீனம்: பெண்கள் அனுசரணையான போக்கை மேற் கொண்டால், குடும்பம் அமைதியாக இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பணியில் இருப்பவர்கள் பல சலுகைகள் எதிர்பார்த்திருந்தாலும், அவற்றில் சில மட்டுமே நிறைவேறும். கலைத் துறையினர் புதிய முயற்சிகளுக்கு வரும் தடைகளை தங்கள் திறமையால் வென்று சாதனை படைப்பார்கள். சரளமான பணப் புழக்கத்தால், வியாபாரிகள் மனதில் கூடாரமிட்டிருந்த சஞ்சலங்கள் குறைந்து உற்சாகம் கூடும்.

    Share
  • கைப்பாவை

    வெள்ளிக்கிழமை என்றாலே குதூகலம்தான்.  எப்படியும் காலை நேரம் முழுக்க அடுத்த வாரத்திற்கான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் கூட்டங்கள் இருக்கும். அவை நடந்து முடிந்து தத்தம் இருக்கைகளுக்குச் செல்லும் போது நண்பகல் உணவு வேளை வந்து விடும். வார ஈறில் நீ என்ன செய்யப் போகிறாய் எனக் கேட்பதும், நான் என்ன செய்யப் போகிறேன் எனச் சொல்வதிலுமாக ஓரிரு மணி நேரங்கள் கழியும். பிறகென்ன? வார ஈறும், அதையொட்டிய  விடுமுறை நாட்களும்தான். மகிழ்ச்சி!

    அந்நினைப்பினால் மேலிட்ட மனத் துள்ளாட்டத்தினூடாக வந்து கொண்டிருந்த என்னை, அலேக்காகத் தூக்கியது கமகம வாசனை. தகவல் தொழில்நுட்பப் பொறியாளராக நான் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்துதான் கமழ்ந்தடிக்கிறது அந்த நறுமணம்.

    நான் குடியிருக்கும் மிச்சிகன் மாகாணத்தில் இருக்கும் மார்ஷல் எனும் சிற்றூரிலிருந்து பதினேழாவது மைல் தொலைவில், டெட்ராய்ட் நகரிலிருந்து சிகாகோ செல்லும் விரைவுச்சாலையில் அமைந்திருக்கிறது கெலாக்( Kellogg Cereal Company )  தானியத்திண்டித் தொழிற்சாலை. இத்தொழிற்சாலை அமைந்திருக்கும் சிறுநகரான பேட்டில்கிரீக் நகர், சீரியல் சிட்டி என்றும் அழைக்கப்படுகிறது. எங்கள் நிறுவனத்தின் போட்டி நிறுவனமாகிய போஸ்ட் சீரியலும் இதே ஊரில்தான் அமைந்திருக்கிறது.

    கெலாக்  நிறுவனத்தை, வில் கீத் கெலாக் என்பவர் 1906ஆம் ஆண்டு நிறுவினார். அவரது தம்பியாகிய ஜான் ஹார்வே கெலாக் என்பவரே தானியத்திண்டி( cereal )யைக் கண்டு பிடித்தவர் என்று சொல்லிக் கொள்வதில் எங்களுக்கும் பெருமை. ஆங்கிலத்தில் சீரியல் எனப்படுகிற தானியத்திண்டி இல்லாத வீடு அமெரிக்காவில் கிடையாது. காலையிலேயே சமைக்கப்பட்ட உணவும் இறைச்சியும் உண்டு கொண்டிருந்த மேலைநாட்டைத் திருப்பிப் போட்டது தானியத்திண்டி எனச் சொல்லலாம். அதிலும் கெலாக் தானியத்திண்டிக்கென்றே ஒரு தனியிடம் சந்தையில் எப்போதும் உண்டு.

    வாகனத் தரிப்பிடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு நேராக என் அறைக்குச் சென்ற நான், மின்னஞ்சல்களைப் பார்த்து மறுமொழி கூற வேண்டியவற்றுக்கெல்லாம் பதில் மடல் அனுப்பினேன். அதன் பிறகு, அடுத்தடுத்து நடந்த கூட்டங்களில் முனைப்புடன் பங்கேற்றுக் கொண்டிருந்தேன். பொதுவாக கூட்ட அறைக்குள் என் அலைபேசியை எப்போதும் எடுத்துச் செல்வதில்லை. எப்படியாகிலும் அது என் கவனத்தைச் சிதற வைப்பதோடு மற்றவரது கவனிப்புக்கும் ஊறு விளைவிக்கும் என்பதாலேயே.

    தானியத்திண்டிக்கான சில்லறை வணிகத்தை இணையத்தினூடாக மேம்படுத்துவது எப்படி என்பதைப் பற்றி காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது. இடையிடையே அதற்கான மென்பொருள் கட்டமைப்பு குறித்த வினாக்களை நான் விடுத்துக் கொண்டிருந்தேன். அதே நேரத்தில் எங்கள் துறையின் நேர்முக உதவியாளர் மேரி அறைக்கு வெளியே நின்றபடி என்னைப் பார்த்துச் சைகை செய்து கொண்டிருந்தாள். இவள் எதற்கு என்னை அழைக்கிறாள் எனக் கோபமாகவும் இருந்தது; காரணத்தை அறியும் பொருட்டு ஆவலும் மேலிட்டது எனக்கு. அமைதியாக கூட்ட அறையினின்று வெளியேறினேன்.

    “என்ன மேரி? நான் முக்கியமான ஒரு கூட்டத்தில இருக்கேன். கொஞ்சம் பொறுத்திருக்கக் கூடாதா?”

    “மன்னிக்கணும் மணி. உன்னோட மனைவி சுமதி அழைப்புக்கு மேல அழைப்பு விடுத்து, உடனே உன்கிட்ட பேசியே ஆகணும்னு சொல்றாங்க!!”

    ஒரே குழப்பமாக இருந்தது. பக்கத்து ஊரான ஆல்பியனில் இருக்கும் மருத்துவமனையில் உடலியக்க மருத்துவராக வேலை பார்க்கும் என் மனைவி இந்நேரம் வேலைக்குப் போயிருப்பாள். மகள் அமிழ்தா குழந்தைகள் காப்பகத்தில் இருப்பாள். ஒரு வேளை ஊரிலிருக்கும் அம்மா, அப்பாவுக்கு உடல்நலக் குறைவு ஏதாவதா? எப்போதும் இல்லாதபடிக்கு என்னை எதற்கு இவள் அழைக்க வேண்டும்??

    அலைபேசி அறையில் இருக்கிறது. கையில் கடிகாரம் கட்டும் பழக்கமும் கிடையாது. மேரியிடமே நேரம் என்னவெனக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். காலை மணி பதினொன்று ஆகிறது. ஆக, இந்தியாவில் இரவு ஒன்பதரை மணி. சரி, முதலில் அம்மாவையே அழைத்துப் பேசி விடுவோமென நினைத்து நேராக எனதறைக்குச் சென்றேன். அலைபேசியினூடாக ஊரிலிருக்கும் எங்கள் வீட்டுக்கு அழைக்க, தொடர்பில் வந்த அப்பாதான் பேசினார்.

    “அப்பா, நான் மணி பேசுறேன். எதும் பிரச்சினையா?”

    “ஏம்ப்பா? நானும் அம்மாவும் இப்பதான் படுக்கலாம்னு விளக்கை அணைச்சோம். என்ன இந்த நேரத்துல?”

    “ஒன்னும் இல்லப்பா. எனக்கு எதோ போன் வந்திச்சின்னு இங்க சொன்னாங்க. சரி, அம்மாகிட்ட குடுங்க!”

    அம்மாவிடம் சுருக்கமாகப் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டேன். இனி சுமதியை அழைக்க வேண்டும். மருத்துவமனையில் அலைபேசிகளுக்கு செயலிழப்புச் செய்து விடுவார்கள். எனவே சுமதியின் அலைபேசிக்கு நேரிடையாக அழைப்பு விடுத்துப் பயனில்லை. சுமதியின் அலுவலக உதவியாளரை அழைத்து, சுமதியை என் அலைபேசிக்கு அழைப்பு விடுக்கச் சொன்னேன். ஓரிரு மணித்துளிகளில் மருத்துவ மனையிலிருந்து அழைப்பு வருவதைக் காட்டிக் கொடுத்தது அலைபேசியின் எண் காட்டி.

    “அலோ!”

    “சார், சுமதி இஸ் நாட் இன் டுடே!!”

    அதிர்ச்சியாக இருந்தது. சுமதி, வேலைக்குப் போகலையா? ஏன்?? போகும் வழியில் எதுவும் விபத்து நேர்ந்திருக்குமோ? இவளுக்கு மட்டுந்தான் பிரச்சினையா? குழந்தை அமிழ்தா??  ஒரு மாதிரி நெஞ்சு படபடத்தது. இது போன்ற நேரத்தில் நெஞ்சுத் துடிப்பு அதிகரிப்பது இயல்புதானே? சுமதியின் அலைபேசி எண்ணுக்கே அழைப்பு விடுத்தேன்.

    ”அலோ!”

    “ஏங்க, எத்தினிவாட்டி கூப்பிடுறது? போனை எடுக்க மாட்டீங்களா??”

    “சொல்றா! சாரி, நான் மீட்டிங்ல இருந்தேன்.  எதும் பிரச்சினையா? என்ன ஆச்சி??”

    “ஒன்னும் இல்ல. கொஞ்சம் எனக்கு ஒடம்புக்கு செரியில்ல. ஆஃப் எடுத்திட்டேன்!”

    “ஆமா!  நீ டுயூட்டில இருப்பன்ட்டு அங்க கூப்ட்டிருந்தேன்; சொன்னாங்க!”

    “ஆமா, நீங்க அங்க கூப்பிட்டிருப்பீங்கல்ல? நான் வீட்டிலதான இருக்கன்னு நினைச்சி, அமிழ்தாவை லஞ்ச்சுக்கு நான் பிக் அப் செய்யறேன்னு சொல்லிட்டு வந்தங்க. இப்ப எனக்கு ரொம்பவும் முடியலை. நீங்க போக முடியுமா?”

    “இவ்வளவுதானா? நான் ரொம்ப டென்சன் ஆயிட்டேன். ஆனா, அமிழ்தாவுக்கு கார் சீட்டு??”

    “அதான் கழட்டிப் போட்ட இன்ஃபேன்ட் சீட்டை, உங்க கார்ல பின்னாடி வெச்சிருக்கீங்கல்ல?”

    “கரெக்ட்! அப்ப,  நூன் டைம், பனிரெண்டுக்கு போயி அழைச்சிட்டு நேரா வீட்டுக்கு வந்துடுறேன்!”

    “வேண்டாம். வெளியிலயே சாப்பிட்டுட்டு, விட்டு கூப்பிட்டுட்டு வந்திடுங்க.  வெள்ளிக் கிழமைங்றதால, சாயுங்காலம் அஞ்சு மணிக்கு முன்னமே பிக் அப் செய்திடணுங்க!”

    மகள் அமிழ்தாவுடன் வீட்டிற்குச் சென்று சுமதியுடன் இருந்து விட்டு வரலாம் என நினைத்தேன். அது நடக்கவில்லை எனும் ஏமாற்றத்துடன் கேட்டேன், “ஏன்டா, உனக்கு ஒடம்புக்கு என்ன பிரச்சினை?”

    “ஏங்க, இதென்ன கேள்வி? கல்யாணம் ஆயி ஆறு வருசம் ஆச்சி. இன்னுமா? வீட்டுக்கு தூரம், ரொம்பப் படுத்துது; அதான்! அவ வீட்டுக்கு வந்தா, என்ன மம்மி, ஏது மம்மீன்னு கேட்டுக் கொடைஞ்செடுப்பா!! வெளியில எதனாவது வாங்கிக் குடுத்து சமாளிங்க!!”

    “சாரிடா; நாம் பாத்துக்குறேன்!”

    மகள் அமிழ்தாவுக்கு மூன்று வயதுக்கும் மேலாகிறது. மிகவும் சுட்டி. எதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளுமட்டும் கேள்விக் கணைகளால் துளைத்தெடுப்பாள். நண்பகற் பொழுது அவளுடன் கழியப் போவதை எண்ணி மகிழ்ச்சியெனக்கு. ஆனால் என்னை எதிர்பார்த்திருக்க மாட்டாள். அவள் என்னைக் கண்டு இன்ப அதிர்ச்சி கொள்ளப் போவது உறுதி. நாளைக்கு அருகில் இருக்கும் காலாமசு ஆற்றில் படகு சவாரிக்கு அழைத்துப் போகிறேன் எனச் சொல்லி இருக்கிறேன். அதை நினைத்தாலே எனக்கும் குதூகலம் பிறக்கிறது. அழைத்துப் போக வேண்டும். ஆற்றங்கரைப் பூங்காவில் படங்கள் நிறைய எடுத்து, அம்மா அப்பாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  இந்த மாதத்தில் செய்தால்தான் உண்டு. அடுத்த மாதமான ஆகஸ்டில் இருந்து மிச்சிகன் மாகாணத்தில் குளிரோ குளிர்தான்.

    பதினொன்றரை மணிக்கெல்லாம்  அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு, மார்ஷல் குழந்தைகள் காப்பகத்துக்கு  சென்று சேர்ந்துவிட்டேன். கண்ணாடித் தடுப்புச் சுவரில் பார்க்கிறேன். இடது கையில் கைப்பாவையான க்யூட்டெடியுடன் இருக்கையில் அமர்ந்திருந்தவள் என்னைப் பார்த்து விட்டாள். இன்னும் பத்து மணித்துளிகள் இருக்கிறது உணவு இடை வேளைக்கு.  என்னைக் கண்டதில் அவளால் அங்கு இருக்க முடியவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது.

    அவள் வருவதற்கு முன்பாக அவளது கைப்பாவையான ’க்யூட்டெடி’யைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். நாங்கள் சார்லட் பெருநகரத்தில் குடியிருந்த போது அவளது முதல் பிறந்த நாளைக் கொண்டாடினோம். அப்போது ஆந்திர நண்பர் வெங்கட்டா பரிசாகக் கொடுத்த துணியாலான சிறு கரடி பொம்மைதான் அது.  அமிழ்தாவின் கைக்கு அடக்கமாக மூன்று இஞ்ச் உயரத்தில் இருக்கும். குளிக்கும் போது தவிர, எப்போதும் அதைத் தனது இடது கையில் கவ்விப் பிடித்தபடி இருப்பாள்.

    இந்த இரண்டரை ஆண்டுகளாக அமிழ்தாவிடம் சிக்குண்ட அந்தப் பொம்மை, படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது. அழுக்குப் படிந்து, கிழிந்து, நைந்து, சிதையும் தருவாயில் இருக்கிறது க்யூட்டெடி. உறக்கத்தில் கூட கை நழுவிவிடக் கூடாது; அவ்வளவுதான், அழுது ஆர்ப்பாட்டம் செய்து விடுவாள். அந்த அளவுக்கு க்யூட்டெடியோடு அமிழ்தா ஒருமித்துப் போயிருக்கிறாள்.

    இதோ நண்பகல் மணி பனிரெண்டு ஆகிவிட்டது. எழுச்சியோடு ஓடி வந்து கொண்டிருக்கிறாள் என் செல்லம் அமிழ்தா.

    “அப்பா, அப்பா, அம்மா எங்கப்பா?”

    “அம்மா, டூட்டிக்குப் போயிட்டாங்கப்பா!”,  வேறு வழியில்லை; பொய் சொல்லித்தான் ஆக வேண்டும். அல்லாவிடில் வீட்டுக்குப் போக வெண்டுமென அடம் பிடிப்பாள்.

    “இம்… இம்…  என்னை வந்து பிக் பண்ணுறேன்னு சொன்னாங்க?”, மழழையோடு குழைந்தாள்.

    “இல்ல தங்கம்; எதோ அசஸ்மெண்ட் இருக்குன்னு வரச் சொல்லிட்டாங்களாம். அதான் அப்பா வந்திருக்கன்ல?”, ஒரு பொய் பல பொய்களைப் பெற்றெடுக்கும் என்பது இதுதான் போலிருக்கு.

    ஒரு மணி நேரம் கரைந்ததே தெரியவில்லை. அருகிலிருந்த ஜேசன் டெலி உணவகத்தில் இருவருமாக உண்டு மகிழ்ந்தோம். அவளுக்கு உருளைக்கிழங்கு நொறுக்கு என்றால் மிகவும் விருப்பம். அவள் விருப்பமே எனது விருப்பமும். நன்றாக அடித்து நொறுக்கினோம். போதாக்குறைக்கு அவளது அம்மாவும் அருகில் இல்லை. அல்லாவிடில், கொலஸ்டிரால், அது இது என்று படுத்துவாள்.

    ”அப்பா, வீட்டுக்கு போலாம்ப்பா!”, சொல்லி வாயைக் கூட மூடவில்லை. வெடுக்கென தனது இடது கையை இழுத்து, அக்கையிலிருக்கும் க்யூட்டெடிக்கு அரும்பிஞ்சு இதழ்களால் முத்தம் கொடுத்தாள்.

    “இல்லடா கண்ணு. அப்பாவுக்கு இன்னும் ரெண்டு மீட்டிங் இருக்கு; ஆபிசுக்குப் போகணும். ஃபோர் தெர்ட்டி, நான் வந்திடுவேன், சரியா? ”

    “போங்கப்பா!”, சலித்துக் கொண்டாள்.

    “நாளைக்குதான் நாம காலாமசு(Kalamazoo) போறம்ல? போட் ரைடு, பிஷ்ஷிங் எல்லாம் இருக்கல்ல??”

    அவ்வளவுதான், கதிரவன் கண்ட மலர் போல முகம் மலர்ந்தது. அதே மலர்ச்சியுடன் காப்பகத்தில் விட்டுவிட்டு வந்து அலுவலகத்தை அடைந்ததும், சுமதிக்கு அழைத்து விபரத்தை தெரியப்படுத்தி ஆயிற்று.  அதன் பிறகு அலுவலக நண்பர்களிடம் வார ஈறுக் களிப்புகள் குறித்தான பேச்சு நீடித்தது. பேச்சின் போது காலாமசு ஆற்றைப் பற்றியும் தகவல்கள் பரிமாறப்பட்டது.

    காலாமசு ஆறு மற்றும் ஆற்றுப்படுகையானது கிட்டத்தட்ட 11000 ஆண்டுகளாக மனிதர்களால் பல்வேறு பணிகளுக்குப் பாவிக்கப்பட்டு வருகிறதாம். அதிலிருந்தே தெரிகிறது இதுவொரு செவ்விந்தியர்களின் களம் என்பது. மிச்சிகன் ஏரியில் கலக்கும் இந்த ஆறானது மிகச்சிறிய ஆறாக இருந்தாலும், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமாக, ஜீவநாடியாக இன்றும் விளங்குகிறது.

    மாலை நான்கரை மணிக்கெல்லாம் மார்ஷல் காப்பகத்திற்குப் போய்ச் சேர்ந்து விட்டேன். நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள் அமிழ்தா. என்னைக் கண்டதும், வகுப்பு ஓம்புநரான ஜில் கோஃபர் புன்னகைத்தாள். எழுப்பி விடட்டுமா என சமிக்கையிலேயே வினவ, நானும் சரியெனும் பாங்கில் தலையசைத்தேன்.

    வாரக் கடைசி நாளான வெள்ளிக்கிழமை தோறும், குழந்தைகள் படுத்துறங்கும் படுக்கை விரிப்பு, மாற்று உடுப்பு உள்ளிட்ட குழந்தைகளின் உடைமைகளைப் பையில் போட்டுக் கொடுத்தனுப்பி விடுவார்கள். அவற்றைச் சலவை செய்து மீண்டும் திங்கட்கிழமை கொடுத்தனுப்ப வேண்டும். அமிழ்தாவை எழுப்பி,  அவர்களே அவளது உடைமைகளை எல்லாம் பையில் போட்டுக் கொடுத்தபடியால் நான் எதையும் கவனித்திருக்கவில்லை. அப்பாவைக் கண்ட குதூகலத்தில் அமிழ்தாவும் எழுந்து துள்ளலாய் ஓடி வந்து என்னுடன் சேர்ந்து கொண்டாள்.

    காப்பகத்திற்கும் எங்கள் வீட்டிற்கும் ஆறு மைல் தூரம்.  வீட்டிற்குச் செல்லும் வழியில், காலாமசு ஆறு, அதன் படகுத்துறை, மீன்பிடித்துறை, நாளை யாரெல்லாம் அங்கு வருவார்கள் முதலானவற்றைப் பற்றி நாங்கள் இருவரும் பேசிக் கொண்டே சென்றோம். அமிழ்தாவுக்கு மிக்க மகிழ்ச்சி. எனது அலுவலக நண்பர் ஸ்டீவ் என்பாரின் மகள் ஜேனட்டும் வருவாள் எனச் சொன்னதில் அவளுக்குக் கூடுதல் மகிழ்ச்சி.

    வீட்டிற்குள் நுழைந்து, இருக்கையில் அமர்ந்த நான் எனது கவ்வுகழலிகளைக் கழற்ற எத்தனிக்கிறேன். ‘ஓ’வென்று பெரும் ஓலம். பேரொலி கேட்டெழுந்த அவளது அம்மா சுமதியும்  என்னவென்று கேட்டுக் கொண்டே முன்னறைக்கு வந்தாள். சற்று நேரத்திற்கு அமிழ்தா என்ன சொல்கிறாளென்றே  எனக்குப் புரியவில்லை.

    “மம்மீ… ஐ வான்ட் இட்!  ஐ வான்ட் மை க்யூட்டி, ஐ வான்ட் மை க்யூட்டி!!”

    புரிந்து விட்டது. சத்தியமாக நான் இப்போதுதான் கவனிக்கிறேன். அவளது கையில் எப்போதுமிருக்கும் அவளது அருமைப் பாவையான க்யூட்டெடி இருக்கவில்லை. என் சொகுசுந்து வாகனத்துக்கு நாலுகால்ப் பாய்ச்சலில் உடனே விரைந்தேன். அரக்கப்பரக்கத் துழாவுகிறேன். பின்னிருக்கையில் இருக்கும் குழந்தைகளுக்கான சிற்றிருக்கையைக் கழற்றுகிறேன். கார் முழுவதையும் பார்க்கிறேன். பார்த்த இடங்களை மீண்டும் பார்க்கிறேன். எனக்கு அது அகப்படவே இல்லை.

    “அம்மாக்காரியும்  சேர்ந்து என்னை வறுத்தெடுப்பாளே? கடவுளே, நான் இனி என்ன செய்வேன்??”, நினைத்துக் கொண்டே மீண்டும் வீட்டுக்குள் ஓடினேன். அவர்கள் கொடுத்தனுப்பிய பையினைக் கமுத்தித் தேடிக் கொண்டிருந்தாள் சுமதி. அவளுக்குப் பக்கத்தில் பெருங்குரலெடுத்து அழுதபடியே அமிழ்தா.

    ”ஏங்க, குழந்தையப் பார்த்துக் கூட்டிட்டு வர முடியாதா? இதுல இல்ல. சரி நடங்க, கார்லதான் இருக்கும். நான் பார்க்குறேன்!”, சினம் தலைக்கேறிய சுமதி, அழுது கொண்டே அமிழ்தா, கடுப்புடன் நான் என எல்லாருமாகப் போனோம் வாகனத் தரிப்பிடத்திற்கு. எல்லாவற்றையும் பிரித்துப் போட்டுத் தேடினாள் சுமதி.

    “என்னங்க, இங்கயும் காணோம்?”

    “சென்ட்டர்லயே எடுக்காம வந்துட்டம் போலிருக்கு?”

    “ஏங்க, வெள்ளிக்கிழமை நாளுங்க இது? எல்லாம் போயிருப்பாங்க?”

    அவ்வளவுதான். சங்குசங்கென்று குதிக்க ஆரம்பித்தாள் அமிழ்தா. ஒரு கட்டத்தில், டமால் எனத் தரையில் விழுந்து படுத்துக் கொண்டாள்.

    “புதுசு வேணா வாங்கித்….”, நான் முடிக்கவே இல்லை.  இருவரும் ஒருசேர அவரவர்பாட்டுக்கு இரைந்தார்கள்.

    “இல்ல, அது வேலைக்காவாது. ஏற்கனவே நாம அது ட்ரை பண்ணுனதுதானே? மண்டே வரைக்கெல்லாம் வெயிட் பண்ணினா அவ்ளோதான். கொழந்தை அழுது அழுது காய்ச்சலாகி ஃபிட்ஸ் வந்தாலும் வந்திடும்! போயிப் பார்க்கலாம் வாங்க!!”

    வீடு திறந்தது திறந்தபடி இருந்தது; வீட்டினுள் கிடந்தது கிடந்தபடி இருந்தது. எப்படிக் காரை எடுத்தேன்; எப்படிப் போய்ச் சேர்ந்தேன் என்றே எனக்குத் தெரியாது. கேவிக் கேவி அழுது கொண்டிருந்த அமிழ்தா விசும்பலுக்கு மாறியிருந்தாள். அவ்வப்போது மூச்சிரைப்பு வந்து போனது. பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. காலையில் சுமதியிடமிருந்து அழைப்பு வந்த போதே எனக்கு மனதில் சஞ்சலம். யாரையோ இழந்து பிரிந்த மனத்துயரம் மேலிட்டது. அப்படி ஏதும் நிகழவில்லை என்ற ஆறுதல் வெகுநேரம் நீடித்திருக்கவில்லை.

    முன்பொருநாள் வீட்டிலிருக்கும் சோபாவுக்குள் அகப்பட்டுக் கொண்ட க்யூட்டெடியைக் கண்டு பிடித்தெடுப்பதற்கு ஓரிரு மணி நேரம் ஆகிவிட்டிருந்தது. அதற்குள் அழுது ஆர்ப்பாட்டம் செய்ததில் காய்ச்சல் கண்டு படுத்துவிட்டாள் அமிழ்தா. அந்த நினைவெல்லாம் வந்து ஆட்டுவிக்கிறது இப்போது. அரும்பாவை க்யூட்டெடியை விட்டுவிட்டு எப்படி இருக்கப் போகிறாள்? மனம் முழுதும் கப்பிய சோகம் நிரம்பிப் பொங்கி இப்போது என் முகத்தில் படர்ந்து கொண்டிருந்தது.

    அமிழ்தாவைப் பார்க்கவே எனக்கு தயக்கமாய் இருக்கிறது.  சுமதி, அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். நான் காருக்கே திரும்பி வந்து தேடத் துவங்கினேன். இது சும்மா ஒரு போங்காட்டம். அவர்களுக்கு அருகில் இருக்கக் குற்ற உணர்வும் அச்சமும் என்பதுதான் உண்மை.

    பாதுகாப்புப் பணியாள் உட்பட அவர்கள் மூவரும் என்னருகே வந்து கொண்டிருக்கிறார்கள். அமிழ்தா இன்னும் விசும்பிக் கொண்டுதானிருக்கிறாள்.

    “டேனியல்கிட்டப் பேசினேன். அவர் இன்னும் அரை மணி நேரத்துல வர்றாராம். நீங்க லன்ச்சு முடிச்சிட்டு ட்ராப் பண்ணும் போது கையில வெச்சிருந்தாளா?”

    “ஆமா. இருந்திச்சி.  ரூமுக்குள்ள போயி உட்கார்ந்தப்புறங்கூட முத்தங் குடுத்திட்டு இருந்ததை நான் பார்த்தேன்!”

    “ம்”, அவளுக்கு இன்னமும் என் மேல் கோபம் என்பதை அந்த ஒற்றை எழுத்து பதிலே காட்டிக் கொடுத்தது.

    பாவம் அமிழ்தா, அது குழந்தை. முதல் பிறந்த நாளுக்குப் பின்னர் இந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் சற்றுக் கூடுதலாய், 365 கூட்டல் 365, எழுநூற்று முப்பது, இதிலொரு 75 நாட்கள்,  ஆகமொத்தம் எண்ணூற்று ஐந்து நாட்கள் க்யூட்டெடியோடு பின்னிப் பிணைந்தபடி இருந்தவள் எப்படித்தான் தாங்குவாளோ இப்பிரிவை? பிஞ்சு மனம் நொந்து கொண்டிருப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை எனக்கு.

    டேனியல் வந்து சேர்ந்து விட்டான்.  அவனிடம் சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்தாள் சுமதி.  குழந்தையின் மனநலமும், மகிழ்ச்சியுமே எங்களுக்கு முக்கியம் எனப் பரிவாய்ச் சொல்லிக் கொண்டே எங்கள் எல்லாரையும் உள்ளே அழைத்துச் செல்கிறான். உள்ளே கும்மிருட்டாக இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் ஆள் நடமாட்டம் கண்ட விளக்குகள் தன்னிச்சையாய் ஒளிரத் துவங்குகிறது. அமெரிக்காவில் எல்லாமே தானியக்கம்தான்.

    என்னையறியாமல் ஆனைமலை மாசாணியம்மனை நினைத்து வேண்டிக் கொண்டிருக்கிறேன். “ஆத்தா, உன்னை விட்டா எனக்கு யார் இருக்கா? எப்படியாவது அதை இங்க இருக்கப் பண்ணு!”, திரும்பத் திரும்ப மனம் இதையே சொல்லிக் கொண்டிருக்கிறது.

    அமிழ்தாவின் வகுப்பறைக்கு முன்னால் வந்தாயிற்று. இனி அறைக்கதவைத் திறக்க வேண்டும். நடைபாதையில் இருக்கும் மின்விளக்கின் வெளிச்சம் கண்ணாடிச் சுவரையும் ஊடுருவி உள்ளே பாயத்தான் செய்கிறது. எனினும் அந்த பாவையது கண்களுக்கு அகப்படவில்லை. டேனியலைப் பார்க்கிறேன். அவன் கையிலிருக்கும் சாவிக் கொத்தில் ஒரு பத்துப் பதினைந்து சாவிகள் இருக்கும் போலிருக்கிறது. ஒவ்வொன்றாய்ப் போட்டுத் திறக்க முயற்சிக்கிறான்.  நேரம் கூடக் கூட மனத்தின் பாரமும் வலியும் கூடிக் கொண்டே போகிறது. எனக்கே இப்படியென்றால் அந்த பச்சைமண்ணுக்கு? ”மாசாணியாத்தா, அது கிடைக்கலைன்னா நீ ஒரு பொய்! வேசக்காரி!!”, என் வலியெல்லாம் சினமாகி ஆனைமலை ஆத்தாளின் மேல் பாயத் துவங்கியது.

    அப்பாட, ஒருவழியாய் டேனியல் அறைக்கதவை திறந்து விட்டான். அமிழ்தா துள்ளிக் குதித்து உள்ளே ஓடினாள். அதற்குள் டேனியல் மின்விளக்குக்கான சொடுக்கியைத் தட்டினான். ஒளி ஒளிரவும், அமிழ்தா குதித்தெழவும் சரியாய் இருந்தது. பிற்பகலில் அவள் உறங்கிக் கொண்டிருந்த இடத்திற்கருகே, சுவரோரத்தில் கிடந்தது க்யூட்டெடி.  முத்த மழையில் நனைந்து பரவசமாகிக் கொண்டிருந்தது க்யூட்டெடி.   காலையில் எழும் போது கண்ட என் மனைவியின் கண்களை, அதற்குப் பிறகு இப்போதுதான்  முதன்முதலாய்  எதிர்கொள்கின்றன செம்மாந்து ஒளிரும் என் கண்கள்.

    “சாரி மாமாய்!”, என்னைப் பார்த்துக் கனிவாய்ச் சொன்ன சுமதியின் கண்கள் சோர்வாயும் களைப்பாயும் இருந்தன. நான் டேனியல் கைகளைப் பற்றி எதோ சொல்லிக் கொண்டிருக்கிறேன் மகிழ்ச்சி பொங்க. வாசலுக்கு வந்ததும், டேனியலுக்கு ஹக் தர வேண்டுமென அமிழ்தா சொன்னாள்.

    அவர்களிடம் விடை பெற்ற பின்னர், வீட்டிற்கு வரும் போது இரவு ஏழு மணி ஆகிவிட்டிருந்தது.

    அடுக்களைக்குச் சென்று சூடாய்க் காப்பி போட்டு இரண்டு கோப்பைகளில் எடுத்துக் கொண்டு போகிறேன்.  இடது கையானது அவளது அன்புப்பாவை க்யூட்டெடியை இறுகப் பற்றிக் கொண்டிருக்க,  வலதுகைக் கட்டை விரல் சூப்பிய நிலையிலிருந்து விட்டுச் சற்று விலகியிருக்கிறது. தன் ஒரு காலைத் தன் தாயின் மேல் அவள் போட்டிருக்க, தாயின் ஒரு கை தன் மகளை வாஞ்சையாய்ப் பிடித்தபடி தூங்குகிறார்கள் இருவரும்.

    இன்னும் அங்கு விடிந்திருக்காது. அதனாலென்ன? அழைத்துப் பேச வேண்டியதுதான். ஆமாம், எனக்கு என் அம்மா வேண்டும் போல இருக்கிறது.

    Share
  • அவர்தான்…

      செண்பக ஜெகதீசன்

    கடவுளைக் காத்திட
    மதமென்ற பேரில்
    கத்தி எடுத்து,
    அவர் படைத்த
    மனிதனைத் தாக்கிடும்
    மனிதனைப் பார்த்து
    மனவேதனையில்
    மனம்விட்டு அழுகிறார்
    மார்க்கம் தெரியாமல் கடவுள்…!

       படத்துக்கு நன்றி

    http://www.ebharat.in/gallery/ramchaura-mandir-rambhadra-hajipur/footage-marks-god-shree-ram

    Share
  • பலா மரங்கள்

       தமிழ்த்தேனீ                

     

    இந்த ஜென்மத்திலே நான் அவளைத் திரும்பிக் கூட பாக்கமாட்டேன். எவ்ளோ திமிர் இருந்தா இப்பிடி ஒரு காரியத்தை செய்வா அவ ?     என் தங்கை கல்யாணியும்  அவ புருஷன் ரமேஷும் என்னா குறை வெச்சாங்க இந்தப் பொண்ணு ரேணுகாவுக்கு . பாத்துப் பாத்து வளத்தாங்க, கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க, ஒரே  பொண்ணு ஒரே பொண்ணுன்னு தலைமேலே வெச்சுக் கூத்தாடினாங்க, செல்லமோ செல்லம் அப்பிடி ஒரு செல்லம்.

    இந்தப் பொண்ணு ரேணுகா மேலே எவ்ளோ பாசம் வெச்சிருந்தாங்க ரெண்டு பேரும், நான் அப்பவே சொன்னேன்  அளவுக்கு மீறி செல்லம் குடுக்காதீங்க அப்புறம் மதிக்கமாட்டான்னு ,கேட்டாங்களா. இப்போ அவதிப்படறாங்க.  இந்தப் பொண்ணு ரேணுகா இப்பிடிச் செஞ்சிடிச்சே.

    எவ்ளோ தைரியம் இருந்தா  நான் அவனைத்தான்  கட்டிக்குவேன் , நீங்க  சம்மதிக்கலேன்னாக்   கல்யாணமே செஞ்சிக்க மாட்டேன் அப்பிடீன்னு சொல்லுவா . ஆனாலும் இந்தக் காலத்துப் பசங்களுக்கு ரொம்பத் திமிருங்க  , நம்மை யாரு என்னா செய்ய முடியும் நாமதான் சம்பாதிக்கிறோமே அப்பிடீங்கற திமிரு . இந்தத் திமிரும் ,தைரியமும் எங்கேருந்து வருதுன்னே தெரியலை.

    உங்களுக்குத் தெரியுமா  கல்யாண ஏற்பாடெல்லாம் செஞ்சு வெச்சிட்டு அப்பா அம்மாகிட்டே சொல்றாளாம் நாளன்னிக்கு கல்யாணம் நீங்க ரெண்டு பேரும்  வந்து நடத்தி வையுங்க. எனக்கு வேற வழி தெரியலேன்னு .

    அக்கா நான் என்னா செய்யறதுன்னே தெரியலே. நாளைக்கே எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சுன்னா எனக்கு மானமே போயிடும். பொண்ணை சரியா வளக்கலேன்னு  என்னைத்தான் குதறி எடுப்பாங்க உறவுக்காரங்க அத்தனை பேரும். அப்பிடீன்னு அழறா கல்யாணி.

    இனிமே அந்தப் பொண்ணு ரேணுகா இந்த வீட்டு வாசப்படியை மிதிக்கக் கூடாது.  என்று கத்திக் கொண்டே இருந்தாள் ருக்மணி.

    ஆனது ஆயிப் போச்சு . இந்தக் காலத்துப் பசங்க சொன்னா கேக்குமா, அதுவும் வேலைக்கு போற பொண்ணு. நாலு பேருகிட்ட  பழகணும் . அப்போ இப்பிடி ஏதாச்சும்  ஆகும் , என்னா செய்யறது. என்றார் சொக்கலிங்கம்.

    நீங்க சும்மா இருங்க ! வேலைக்கு போனா என்னா நாலு பேருகிட்ட பழகினா என்னா? நம்ம குடும்ப பாரம்பரியம் இன்னா, தகுதி என்னான்னு தெரியாம எது வேணா செய்யலாமா? எனக்கு வர ஆத்திரத்துக்கு  அப்பிடியே போயி கன்னத்திலே ரெண்டு அறைவிட்டாத்தான் மனசு அடங்கும் போல இருக்குது.

    .என்னாலே ஜீரணிக்கவே முடியலைங்க. நீங்க எப்பிடித்தான் எல்லாத்தையும் கேட்டுட்டு இப்பவும் நிதானமா இருக்கீங்களோ எனக்கு புரியவே இல்லே என்றாள் ருக்மணி.

    இதோ பாரு நாம கத்தி ,பதறி என்னா ஆகப் போகுது . எல்லாம் அது இஷ்டத்துக்கு நடக்குதுங்க. சரி நாம கல்யாணத்துக்கு போக வேணாம், நீ கத்தி உடம்பைக் கெடுத்துக்காதே. என்றார் சொக்கலிங்கம்.

    நான் எப்பிடிங்க போவேன் கல்யாணத்துக்கு . போகமாட்டேன், நீங்களும் போகக் கூட்து சொல்லிபுட்டேன் . வரவர இந்தக் காலத்துப் பசங்களுக்கு  எல்லாமே அவசரம். எதிலேயும் நிதானமில்லே. கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு அலையுதுங்க.

    மூணு மாசமா நானும் பாத்துகிட்டுதான் இருக்கேன்  . உன் தங்கை கல்யாணி போன் செஞ்சு பேசும்போது  என்ன விஷயம்னு நான் கேட்டா ஒண்ணுமில்லேங்க ,இதெல்லா பொம்பளைங்க சமாச்சாரம் அப்பிடீன்னு மழுப்புவே.  அப்புறம் மறைவாப் போயி நின்னுகிட்டு கண்ணைத் துடைச்சிக்குவே . கவனிச்சிகிட்டுத்தான் இருக்கேன். சரி நமக்கெதுக்கு வம்புன்னு நானும்  தள்ளிப் போயிடுவேன். 

    ஆனாலும் என் மனசுக்குள்ளே இது ஏதோ விவகாரம்னு ஒரு பக்ஷி சொல்லிகிட்டே இருந்துது.   கல்யாணிகிட்டே நீ பேசும்போதெல்லாம்  உன்னையறியாமே நீ கவலைப்படறது எனக்கு புரிஞ்சுது. என்னதான் நீ சிரிப்பா முகத்தை வெச்சிகிட்டாலும் நான் உன்னோட பெட்டர் ஹாஃப் தானே எனக்குத் தெரியாதா. இருந்தாலும் நீயே சமாளிச்சு சரி செஞ்சிடுவேன்னு நம்பி இருந்தேன்.

    சரி விடு  நாம என்னதான் செஞ்சாலும் ஒவ்வொரு விஷயத்துக்கும் அதுக்குன்னு ஒரு தலையெழுத்து இருக்கு. மாத்த முடியாது.  சரி இதெல்லாம் மனசிலேருந்து தூக்கிப் போட்டுட்டு போயி கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடு. காலையிலேருந்து வேலை செஞ்சு களைச்சுப் போயிருக்கே என்றார் சொக்கலிங்கம்.

    முடியலைங்க நிம்மதியா தூங்க முடியலே  இந்தப் பொண்ணு செஞ்ச காரியம் என்னையும் கல்யாணியையும்  தூங்க விடாம செஞ்சிருச்சு என்று பேசிக்கொண்டே இருந்தவள்  அயற்சியில் அப்படியே உறங்கிப் போனாள் ருக்மணி. அவளுக்கு போர்த்திவிட்டுவிட்டு வந்து  கூடத்தில் உட்கார்ந்தார்  சொக்கலிங்கம்.

    தொலைக் காட்சியில் சிறப்புச் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்த  சொக்கலிங்கம். எழுந்து சமையலறைக்குப் போய்  சுடச்சுட காப்பி போட்டு எடுத்துக் கொன்டு வந்து ருக்மணி  எழுந்திரு இந்தக் காப்பியைக் குடி என்று அவளிடம் காப்பிக் கோப்பையை நீட்டினார்.

    தொலைபேசி அழைத்தது  கல்யாணிதான் பேசுவான்னு நெனைக்கிறேன் என்றபடி  ரிசீவரை எடுத்து சொல்லு கல்யாணி என்றாள்  ருக்மணி.   தொலைபேசியில் பேசிவிட்டு சொக்கலிங்கம் அருகே வந்து உட்கார்ந்து  யாரு பேசினா தெரியுமா ! என்றாள் ருக்மணி. 

    அதெல்லாம் இருக்கட்டும் முதல்லே காப்பியைக் குடி ஆறியே போச்சு.நான் வேணா போயி சுடவெச்சிக் கொண்டுவரட்டுமா என்றார். வேணாங்க இப்பிடியே குடிக்கறேன் என்றபடி கடகடவென்று காப்பியைக் குடித்தாள் ருக்மணி

    இதைக் கேளுங்க ரேணுகாவே  பேசிச்சு !  அவ எல்லா விஷயத்தையும் சொன்னா. கேக்கக் கேக்க  அவ சொல்றதிலேயும் நியாயம் இருக்குறா மாதிரிதான் தெரியுது. தப்போ தவறோ ஏதோ தெரியாத்தனமா காதலிச்சிட்டோம். கல்யாணம்தானே செஞ்சிக்கப் போறோம் . இல்லேன்னா என் வாழ்க்கையே கெட்டுப் போகாதா? அப்பிடீங்கறா.

    அவ என்ன செய்வா சின்னப் பொண்ணு பாவம். பெரிய மனுஷி மாதிரி பேசறாங்க. பெரியம்மா நீங்களும் பெரியப்பாவும்தான்  பெரியவங்களா இருந்து கல்யாணத்தை நடத்தி வைக்கணும் அப்பிடீங்கறா..  நாம வளத்த குழந்தையா இப்பிடி இவ்ளோ விவரமா பேசுதுன்னு ஆச்சரியமா இருக்கு என்றாள் ருக்மணி. 

    நீ என்ன சொல்றே  என்றார்  சொக்கலிங்கம்.

    இதெல்லாம் பொம்பளைங்க சமாசாரம் , சொன்னாலும் உங்களுக்குப் புரியாது,  நீங்க உடனே கிளம்புங்க நாம நல்லி சில்க் கடைக்குப் போயிட்டுஅப்பிடியே ஜீஆர் டீ தங்க மாளிகை கடைக்கும் போகணும். எல்லாத்தையும் நானும் நீங்களும்தான் செய்யணும்னு ரேணுகா  சொல்றா.  பாவங்க அந்தப் பொண்ணு ,

    ஆனது ஆய்ப்போச்சு இப்போ விட்டுக் கொடுத்துட்டோம்னா அந்தப் பொண்ணு போயி வாழப் போற இடத்திலே மரியாதை இருக்காது. அதுனாலே  கல்யாணிகிட்டேயும் அவ புருஷன் ரமேஷ் கிட்டேயும் பேசி ஒப்புக்க  வெச்சு உறவுக்காரங்க எல்லாரையும் அழைச்சு நல்லபடியாக் கல்யாணத்தை நடத்தி வைக்கணும் சீக்கிரம் கிளம்புங்க நிறைய வேலை இருக்கு  என்றாள் ருக்மணி.

    சரிம்மா இதோ கிளம்பறேன் என்றார் சொக்கலிங்கம் புன்சிரிப்புடன். 

                                                                                             சுபம்

    Share
  • உணவு உற்பத்தியில் தன்னிறைவு காணும் வழி

     

    தேமொழி

     

    மனித இனத்தினர் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதைப் பற்றிச் சில தவறான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர் என்கிறார் ஜெர்ட்ஜன் மீயுவ்ஸ். நெதர்லாந்தில் இருக்கும் ‘டச்சு’ ஆராய்ச்சி நிறுவனமான ‘ப்ளாண்ட் லாபில்’ தோட்டயியல் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிகிறார் ஜெர்ட்ஜன் மீயுவ்ஸ் (Gertjan Meeuws, Horticultural Engineer at Dutch based group called PlantLab, Netherlands).

     

    Gertjan Meeuws

     

    பல்கிப் பெருகி வரும் மனித இனத்திற்குத் தேவையான உணவுத் தேவைகளைத் தற்பொழுது இருக்கும் விவசாயத் தொழில் நுட்பத்தை வைத்தே சமாளித்துவிட முடியும் என்பது தவறான கருத்துகளில் முதன்மையானது என்கிறார் இந்த ஆராச்சியாளர்.

    உலக மக்கட்தொகை இப்பொழுது ஏழு பில்லியனில் இருந்து ஒன்பது பில்லியன்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அவற்றில் பெரும்பான்மையான மக்கள் நகரங்களில் வசித்து வருகிறார்கள். மக்கள் அனைவர்க்கும் தேவையான உணவை உற்பத்தி செய்ய மிக முக்யமாகத் தேவைப்படுவது நீர். எதிர்காலத்தில் பெட்ரோலை விட நீர்தான் ஒரு நாட்டின் முக்கிய சொத்து எனக் கருதப்படும் நிலை வந்துவிடும்.

    அத்துடன் அனைவரது உணவுத் தேவையையும் நிறைவு செய்வதற்காக விவசாயத்திற்கு பொருத்தமற்ற நிலங்களையும் விளைநிலமாக மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இது போன்ற ஒவ்வாத வளரும் சூழ்நிலைகளில் உள்ள விளைநிலங்களில் வளரும் தாவரங்கள் பூச்சிகளினாலும், நோய்களினாலும் எளிதில் பாதிக்கப்படும். இதனை நிவர்த்தி செய்ய நாமும் வேதிப்பொருட்களில் தயாரிக்கப்பட்ட உரங்களையும், பூச்சிக்கொல்லி இரசாயன மருந்துகளையும் உபயோகிக்க வேண்டிவரும். மேலும், இவ்வாறு பயிர் செய்த உணவை தேவையான இடத்திற்கு கொண்டுசென்று சேர்க்கவும், மீண்டும் விளைநிலங்களுக்கு கொள்முதல் செய்ய வரும் செய்கைகளே 35 சதவிகித போக்குவரத்து ஊர்திகளின் வேலையாகவும் இருக்கும். இவை போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு நாம் உணவு உற்பத்தி முறையில் பலப் புதுமைகள் செய்யவேண்டும்.

     

    விவசாயத்தைப் பற்றிய மற்றொரு தவறான கருத்து: பயிர் வளர்ப்பு இயற்கை முறையைச் சார்ந்ததாக இருக்கவேண்டும் என்று கருதுவது. இக்கருத்தும் உணமையல்ல என்பது ஜெர்ட்ஜன் மீயுவ்ஸ் அவர்களின் கருத்து.

    இயற்கையிலோ அல்லது சிறந்த சோதனைக்கூட சூழ்நிலையிலோ தாவரங்கள் தங்களுக்குத் தேவையாக 9% திறனை மட்டுமே உபயோகித்துக் கொள்கின்றன. தாவரங்கள் எந்த சுற்றுப்புற சூழலுக்கும் ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொண்டு உயிர் வாழும் தன்மை வாய்ந்தவை. தாவரங்களின் இந்தப் பண்பினை நமக்கு சாதகமாக்கி விவசாயத்தில் புதுமைகளை நாம் புகுத்தலாம்.

     

    தாவரம் நன்கு வளர நல்ல சூரிய ஒளி தேவை என்பதும் மற்றொரு தவறான கருத்து என்கிறார் ஜெர்ட்ஜன் மீயுவ்ஸ்.

    தாவரங்கள் சூரிய ஒளிக்கற்றையில் உள்ள சிவப்பு, நீலம் மற்றும் ஊதா வண்ண (Purple) ஒளிக்கதிர்களை மட்டுமே உபயோகிக்கின்றன. இதனால் செயற்கைமுறையில் கட்டிடங்களின் உட்புறம் விவசாயம் செய்து உணவு உற்பத்தியைப் பெருக்க நம்மால் முடியும். நகரங்களில் ஊர்திகளை நிறுத்துவதற்கு கட்டப்படும் பல அடுக்குமாடி கட்டிடங்கள் போன்றவற்றில் பயிர் செய்யத் தகுந்த சூழ்நிலையை உருவாக்கி ஊதாக்கதிர்களையும், குறைந்த அளவு நீரையும் பயன்படுத்தி உணவு உற்பத்தியைப் பெருக்க முடியம். பயிர் செய்ய சூரிய ஒளியை உபயோகிக்கத் தேவையில்லை என்ற காரணத்தால் அடுக்குமாடிக் கட்டிடங்களைப் பயன்படுத்துவது ஏதுவாகிறது.

    ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு உணவாக 200 கிராம் காய் மற்றும் பழங்களை உற்பத்தி செய்ய ஒரு சதுரகிலோமீட்டர் பரப்பளவு போதுமானது. எனவே ஒரு லட்சம் மக்களுக்கு தேவையான தாவரங்களைப் பயிரிட நூறு மீட்டர் நீள அகலமுள்ள, பத்து அடுக்குகளைக் கொண்ட அடுக்கு மாடிக்கட்டிடம் போதுமானது.

    plant lab production unit

    indoor farming

    Plant lab product

     

    இந்த முறையைப் பயன்படுத்தினால், தாவரங்களின் மரபணுக்களில் எந்த ஒரு மாற்றமும் செய்யத் தேவையில்லாமலே, சுத்தமான சுகாதாரமான முறையில், ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த தாவரங்களைக் குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தி, இரசாயன பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை உபயோகப்படுத்தாமல், குறைந்த செலவில் விளைவிக்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த பயிராக வளர்வதால் நோயை எதிர்க்க மருந்துகள் தேவையில்லை. தோட்டங்களில் அல்லது வயல்வெளிகளில் பயிரிடுவதைவிட 40% அதிக மகசூலை 90% குறைந்த அளவு நீரை உபயோகித்துப் பெற முடியும். அதனால், இந்த விவசாய முறை, பயிரிட நிறைய நிலப்பரப்பும், நீரும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் தேவை என்பது எவ்வளவு தவறான கருத்து என்பதையம் புலப்படுத்துகிறது.

     

    indoor farming benefits

     

    எந்த ஒரு தாவரத்தையும் இந்த உட்புறப் பண்ணை முறையைப் பயன்படுத்தி பயிரிட முடியும். தக்காளி, ஸ்டராபெர்ரி, கீரைவகைகள், வெள்ளரிக்காய், அவரை, மருத்துவத்திற்கான மூலிகைகள், என எந்தப் பயிரையும் பயிரிடலாம். இதனால், தாவரங்கள் நன்கு வளரக்கூடிய தட்பவெப்ப நிலை உள்ள இடங்களில் பயிரடப்பட்டு, அதிக தொலைவில் வசிப்பவர்களுக்கு ஊர்திகளில் கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டும் என்ற கருத்தும் தவறானக் கருத்தாகிறது. ஆனால் தற்பொழுது அதிக தொலைவு பயணத்திற்கு ஏற்றவாறு காய்கனிகள் அவைகள் பக்குவம் பெரும் முன்னரே பறிக்கப்பட்டு அவை அழுகி வீணாகும் நிலை குறைக்கப்படுகிறது. சரியான தருணத்தில் அறுவடை செய்யாத காய்கனிகள் சுவையற்றும் இருக்கின்றன.

    தட்பவெட்பத்தைக் கட்டுப்படுத்திப் பயிரிடப்படும் உட்புறப் பண்ணை முறை இந்த நிலையை மாற்றியமைக்கும். நுகர்வோர்கள் இருக்கும் இடத்திலேயே பயிரிட்டு, பக்குவமான நேரத்தில் தேவையானவற்றை மட்டும் பறித்துப் பயன்படுத்தலாம், இதனால் வீணாவதும் தவிர்க்கப்படும்.பழங்காலத்தில் மக்கள் எவ்வாறு தங்கள் தேவைக்கேற்ப சுவையான காய்கனிகளை உடனே பறித்துப் பயன்படுத்தினார்களோ, அது போலவே நாமும் பயன் பெறலாம். தட்பவெட்பத்தைக் கட்டுப்படுத்திப் பயிரிடப்படும் உட்புறப் பண்ணை முறையினால் எக்காலத்திலும், இரவோ பகலோ, கோடையோ மழைக்காலமோ எந்தக் காலத்திலும் பயிரிடலாம். அது போலவே எந்த ஒரு இடத்திலும், துருவப் பிரதேசம், பாலைவனம், பெரிய நகரங்கள் என எந்த இடங்களிலும் பண்ணைகள் அமைக்கப்பட்டு பயிரிடமுடியும்.

     

    பொதுவாக விவசாயத்தைப் பொறுத்தவரை உள்ள மற்றொரு தவறான கருத்து பெரிய அளவில் பயிரிடப்பட வேண்டும் என்பது. இந்த உட்புறப் பண்ணை முறையினால் அந்தக்கருத்தும் பொய்யாகிறது.

    உட்புறப் பண்ணை முறையில் பயிரிட சிறிய இடங்கள் கூடப் போதுமானது. எனவே, காய்கறி அங்காடிகளின் ஒரு பகுதியிலோ, உணவகங்களின் ஒரு பகுதிகளிலோ, ஏன் நமது வீட்டின் சிறிய சமயலறைகளிலோக் கூட நம் தேவைக்கேற்ப பயிரிட முடியும். நமக்குத் தேவையான தக்காளிகளை நம் சமயலறையிலேயே அலமாரியைத் திறந்தும் பறித்துக் கொள்ளலாம். உன் சமையலறையில் நான் கீரையா? புதினாவா? என்றும் பாடலாம்.

     

    அனைத்தையும்விடத் பெருந்தவறான கருத்து இதுபோன்ற முறையில் பயிரிடத் தயாராவதற்குப் பல்லாண்டுகள் ஆகும் என்பது. உட்புறப் பண்ணை முறையில் பயிரிடுவதை இன்றே எந்த நாட்டிலும், இந்தியா உட்பட, தொடங்க முடியும். அதிக மூலதனம் தேவை இல்லை.

     

    சிந்தனைக்கு: முதற்படியாக சென்னை மாநகரின் கடற்கரையை ஒட்டி (நீரில்லாவிட்டால் கடற்கரை ஊற்று நீரைக்கொண்டு பயிரிடும் வகையில்) அரசு ஒரு அடுக்கு மாடியைக் கட்டி உட்புறப் பண்ணையை அமைக்கலாம். அதனை ஆர்வமுள்ளவர்களுக்கு குத்தகைக்கு விட்டு வருமானமும் ஈட்டலாம். வெளிப்புறம் காய்கனிகளை விற்க அங்காடியும் துவங்கலாம். அது உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற முதல் கட்டப் பரிசோதனை நடவடிக்கையாக இருக்கும்.

     

    “பண்ணையெல்லாம் பொன் கொழிக்கச் செய்திடுவோம், அதில் பன்மடங்கு உற்பத்தியைப் பெருக்கிடுவோம்”

     

    ஆதாரம்: TEDxBrainport 2012 – Indoor planting
    படங்கள் உதவி: PlantLab, Netherlands
    காணொளி சுட்டி: http://www.youtube.com/watch?v=Ct3dK2_ksvk

     

    Share
  • ஒருவர் சுயத்தனம் பற்றி எனது பாடல் -1

     

                                                                                                         (1819-1892)


                                                                                  (புல்லின் இலைகள் -1)

                                                                                மூலம் : வால்ட் விட்மன்


                                                               தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

    வால்ட் விட்மன் வாழ்க்கை வரலாறு:

    அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன் 1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார்.  தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார்.  அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி யிலிருந்து தந்தையால் நிறுத்தப் பட்டார்.  ஆகவே அவர் சிறு வயதிலேயே ஓர் அச்சகத்தில் பணிசெய்ய வேண்டிதாயிற்று.  பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு நாளிதழ்களுக்கு எழுதியும், அவற்றுக்குப் பிறகு தொகுக்கும் ஆசிரியராகவும் பணியாற்றினார்.  அவரது 17 வயதில் பள்ளி ஆசிரியராகச் சில காலம் வேலை செய்தார். 27 ஆவது வயதில் புரூக்லின் தின இதழின் ஆசிரியரானார். புரட்சிகரமான அவரது கவிதைப் படைப்புகள் மிகவும் தனித்துவ முறையில் பாலுறவு உட்பட ஆவேச உணர்ச்சியில் எழுதப் பட்டவை.  அவர் அமெரிக்கக் குடியாட்சியை பேரளவு மதிப்புடன் கொண்டாடியவர்.  படைப்புகளில் குறிப்பாக அவர் முதலில் வெளியிட்ட சிறிய கவிதைத் தொகுப்பு “புல்லின் இலைகள்” [Leaves of Grass] அவராலே பன்முறைத் திருத்தமாகிப் பின்னால் விரிவு செய்யப் பட்டது.

    வால்ட் விட்மன் தனது கவிதைகளில் ஒளிமறைவின்றி எதையும் வெளிப்படையாக வெளியிட்டதால், அவரது படைப்புகள் ஆபாசமானவை, வெறுக்கத் தக்கவை என்று முதலில் பலரால் ஒதுக்கப் பட்டன !  அவரது கவிதைகள் அனைத்தும் எதுகை, மோனைத் தளை அசையின்றி இலக்கண விதிக்கு அப்பாற்பட்ட வசன நடைக் கவிதைகளாய் [Free Verse] எழுதப் பட்டவை.  அவரது கவிதைகளை உயர்வாகப் பாராட்டி யவருள் ஒருவர் கவிஞர் எமர்ஸன் [Ralph Waldo Emerson].  1855 இல் 12 பாடல்களுடன் முதற்பதிப்பு “புல்லின் இலைகள்” புத்தகத்தை வெளியிட்டார்.  பின்னால் அது 300 கவிதைகளுடன் விரிவானது. அதற்கு ஆரம்பத்தில் அமெரிக்கர் ஆதரவு கிடைக்க வில்லை.

    1848 இல் வால்ட் விட்மன் நியூயார்க்கிலிருந்து நியூ ஆர்லியன்ஸ் சென்றார்.  அவர் அங்கேதான் முதன் முதலில் அடிமைகள் நடுத்தெருவில் ஏலம் விடப்படும் அருவருப்பு வாணிபத்தையும், அடிமைக் கறுப்பர் படும் கொடுமைகளையும் கண்டு மனவேதனை அடைந்தார்.  ஆர்வமாய்ப் படிக்கும் வேட்கை மிகுந்த வால்ட் விட்மன் 1848 இல் தனது சொந்தச் செய்தித்தாள் “உரிமைப் பூமி“ [Free Soil] என்பதை வெளியிட்டு அதற்கு அதிபதி ஆனார்.  மின்சார உடல் பற்றி என் பாடல் [I Sing the Body Electric] & என்னைப் பற்றிய எனது பாடல் [Song of Myself] ஆகிய இரண்டு நூல்களும் மனித உடம்பைப் பற்றியும், உடல் நலம், பாலுறவு பற்றியும் எழுதப் பட்டவை.

    தென்னக மாநிலங்களில் கொடுமைப் படுத்தப்படும் அடிமைகளை விடுவிக்க ஆப்ரஹான் லிங்கன் கடுமை யான போர் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. அதுவே சகிக்க முடியாத “சிவில் போர்” [Civil War] எனப்படும் உள்நாட்டுப் போரானது. அரசாங்க ஐக்கியப் படைக்கும், “கூட்டு மாநிலங்கள்” என்னும் கன்ஃபெடரேஷன் படைக்கும் யுத்தம் உண்டானது.  இறுதியில் இருபுறமும் சமப்போர் புரிந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 30,000 மேற்பட்டது. அப்போது ஐக்கியப் படைகளுடன் போர் புரிந்த வால்ட் விட்மன் சகோதரன் ஜார்ஜ் விட்மன் காய முற்றதால் அவரைக் குணப்படுத்த வால்டயர் வாஷிங்டன். D.C.. வர வேண்டியதாயிற்று. அவர் சுயப்பணி யாளராய்ச் சேர்ந்து காயமுற்ற சுமார் 100,000 நபர்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தது.  வாஷிங்டன் D.C., மருத்துவ மனைக்கு பணிபுரிய வால்ட் விட்மன் 600 தடவை வந்ததாக அறியப் படுகிறது.

    சிவில் போர் வெற்றியில் முடிந்து, ஆப்ரஹாம் லிங்கன் இரண்டாம் முறையாக நின்று, ஜனாதிபதி தேர்வு வெற்றி பெற்ற விழாவில் வால்ட் விட்மன் கலந்து கொண்டவர் என்று அறியப் படுகிறது.  போர் முடிந்து சட்ட மூலமாக அடிமை வைப்பு முறை அமெரிக்காவில் நீக்கப் பட்டது.  போர் நின்ற ஐந்தாம் நாள், அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் பலியானார்.  லிங்கன் சுடப்பட்டு மரித்ததைப் பற்றி வால்டர் விட்மன் எழுதிய இரங்கற்பா “ஓ காப்டன், என் காப்டன்” படிப்போரை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவது. 19 ஆம் நூற்றாண்டில் கவிதைப் படைப்புகள் எழுதிய வால்ட் விட்மனுக்கு 20 ஆம் நூற்றாண்டில்தான் அவரது படைப்புகளின் உன்னதம் வெளியாகிப் பரவியது. அவருடைய படைப்புகளின்  செல்வாக்கு, மேன்மை புகழ்பெற்ற கவிஞர்கள் பாப்லோ நெரூடா, அல்லன் கின்ஸ்பெர்க், [அமெரிக்கா] ஃபெர்னான்டோ பெஸ்ஸோவா [போர்ச்சுகல்] ஆகியோர் ஆக்கங்களில் தெரிகிறது.  வால்ட் விட்மன் கவிதைப் படைப்புகள் சில : அடிமை ஒழிப்புப் போர் பற்றி “டிரம் டாப்ஸ்”, “பீட் பீட் டிரம்ஸ்”, “இரங்கற்பா ஆப்ரஹாம் லிங்கனுக்கு”, குடியாட்சித் திறப்புகள்,” “இந்தியா நோக்கிப் பாதை.” [Drum-Taps, Beat ! Beat ! Drums !” “When Lilacs Last in the Dooryard Boom’d”, Democratic Vistas,” “A Passage to India.”].

    1873 இல் மூளை அடிப்பில் [Stroke] அவர் பாதிக்கப் பட்டு ஒரு பகுதி உடலுறுப்புகள் பயன்படுத்த இயலாது போயின. அதோடு ஒன்பது ஆண்டுகள் காலந் தள்ளி 1892 இல் அமெரிக்கக் கவிதை மேதை வால்ட் விட்மன் தனது 73 ஆம் வயதில் காலமானார்.

    +++++++++++++++++++++++++++++

    தன்னைப் பற்றி

    [வால்ட் விட்மன்]

     

    வாவென அழைத்த தென் ஆத்மா

    எழுதுவோம் அவ்விதப் பாக்கள்

    எனது உடல் நலத்துக்கு.

    (ஏனெனில் நாம் இருவரும் ஒருவரே)

    மரணத் துக்குப் பின் நானிங்கு

    மறைவாய், அல்லது வேறு அண்டங்களில்

    நீண்ட காலம் வாழ

    வேண்டி வந்தால், அங்கே சில

    தோழர் குழுவுக்கு இவை

    சுலோகங் களாய் மீண்டும் கேட்கும்

    (இப்பூமி, மரங்கள், காற்றும் கொந்தளிக்கும்

    அலைகளுக் கேற்ப)

    எனதினிய புன்னகையில் நான்

    எப்போதும் நீடிக்கலாம்

    அடுத்தடுத்து

    எனது சொந்தப் பாக்கள் மூலம் !

    இப்போது முதலில் நான்,

    இங்கு இடுகிறேன்

    எனது கையொப்பம்

    என் உடலுக்கும், ஆத்மா வுக்கும்

    என் பெயரை இட்டு !

    ++++++++++++++++++++

    ஒருவர் சுயத்தனம் பற்றி

    எனது பாடல்    

    ஒருவன் சுயத்தனம் பற்றி

    ஒரு பாட்டு பாடுகிறேன்.

    எளிய தனி மனிதன் ஒருவன் பற்றி

    எனினும் உரைப்பேன் ஒரு வார்த்தை

    அது குடியாட்சி !

    ஒருமித்து ஓங்கிச் சொல்லும்

    ஒரு வார்த்தை.

    தலை முதல் கால் வரை

    உடலியல் பற்றிப் பாடுவேன் !

    உறுப்பமைப்பு, மூளை மட்டுமல்ல

    என் வழிகாட்டி

    குருவாய்த் தகுதி பெற !

    கூறுவேன் நான் :

    பூரணத் தோற்றம் பெறுவது

    நேர்மை உடையது !

    ஆண்பால், பெண்பால் இரண்டுக்கும்

    நான் பாடுவேன்

    ஒரே சமத்துவ முறையில் !

    உணர்ச்சி யோடு துடிப்போடு,

    உன்னத சக்தி யோடு, உற்சாக மோடு

    உரிமை இயக்கத்தை

    உருவ மாக்கும் தெய்வீக விதியில்.

    நான் பாடுவேன்

    நவீன மனிதன் பற்றி !

    +++++++++++++

    தகவல்:

    1.   The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

    2.   Penguin Classics : Walt Whitman  Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]

    3.   Britannica Concise Encyclopedia [2003]

    4.   Encyclopedia Britannica [1978]

    5.  http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]

    6.  http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/ [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

    ********************

    jayabarat@tnt21.com [S. Jayabarathan (December 6, 2012)

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (35)

     

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    கலாச்சாரமும், மதமும் எவ்வகையில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கிறது? ஒரு ஆழமான கேள்வி மனதில் எழுகிறது.

    குறிப்பாக இங்கிலாந்து நாட்டின் கலாச்சாரம் மிகவும் வலுவானது.

    என்னடா இவன் ?

    நாகரீகத்தின் உச்சியில் ஓடிக்கொண்டிருக்கின்ற இங்கிலாந்து தேசம் கலாச்சாரத்தில் வலுவானது என்கிறானே ! சக்தி லூசுப் பயல் போல பேசுகிறானே ! என்று எண்ணுகிறீர்களா?

    உண்மைதான் நாகரீகம் எனும் பெயரில் கலாச்சார மாற்றங்களுக்கு முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் தான் கலாச்சார வலிமையும் இருக்கிறதென்பது எனது அபிப்பிராயம்.

    குறிப்பாக அவர்கள் தங்கள் நாட்டு அரச பரம்பரைக்குக் கொடுக்கும் முக்கியத்துவம், கலாச்சார விழுமியங்களை பாதுகாக்கும் பண்பு, பழைய ஏடுகள். கவிஞர்களைப் போற்றும் வகை என்பன இந்நாட்டின் அப்பண்புக்கு உகந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன.

    இங்கிலாந்து நாட்டின் நிதியமைச்சர் இன்று தனது இலையுதிர்கால பட்ஜெட் அறிக்கையைச் சமர்ப்பிக்கிறார். அவரது முந்தைய கணிப்புகளின் படி இங்கிலாந்து நிதி நிலைமைகள் 2015ம் ஆண்டுக்குள் சரிசெய்யப்படுவது முடியாத காரியம் என்பது போன்ற சமிக்ஞைகள் தென்படுகின்றன.

    சே ! மீண்டும் ஒரே இடர் மிகுந்த செய்திகளா என்று மக்கள் அங்கலாய்க்கும் வேளையிலே எங்கிருந்தோ அவர்கள் காதில் ஒரு நற்செய்தி விழுகிறது.

    அடேங்கப்பா ! அது என்ன அப்படிப்பட்ட நற்செய்தி ? உங்கள் ஆர்வம் புரிகிறது.

    இங்கிலாந்தின் இளவரசர் “பிரின்ஸ் சார்ல்ஸ் “

    என்னடா இவன் 60பதுகளில் அல்லாடுபவரை இளவரசர் என்கிறானே என்று கோபப்படாதீர்கள்.. . . . என்ன செய்வது அதுதான் அவரது அந்தஸ்து அழைத்துத்தானே ஆக வேண்டியிருக்கிறது !

    அவர் மன்னர் ஆவாரோ? மாட்டாரோ ? ஆண்டவனுக்குத்தான் . . . . இல்லையில்லை மகாராணியாருக்குத்துத்தான் வெளிச்சம் !

    ஆமாம் இளவரசர் சார்ல்ஸ் அவர்களின் மூத்த மைந்தன் இளவரசர் வில்லியம் அவர்களுக்கும் அவரது மனைவி கேட்டி அவர்களுக்கும் ஒரு வாரிசு வரப்போகிறது எனும் மகிழ்வான செய்திதான் அது.

    மோசமான பொருளாதாரச் சுழலுக்குள் சிக்கி அழுந்திக்கொண்டிருந்த இங்கிலாந்து மக்கள் “ஒலிம்பிக்” எனும் கட்டையைப் பற்றிக்கொண்டு சிறிது நேரம் கழுத்தளவு தண்ணீரில் தததளித்துக் கொண்டிருந்தார்கள்.

    அவ்வொலிம்பிக் கட்டையும் காலவெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டதும் மீண்டும் மூழ்கத் தொடங்கும்போது இதோ அவர்களை நோக்கி மற்றுமொரு கட்டை வீசப்பட்டிருக்கிறது இனி ஒரு வருடம் அக்கட்டையைப் பிடித்துக் கொண்டு தத்தளிக்க வேண்டியதுதான்.

    இரண்டே இரண்டு மாதக் கர்ப்பிணியான இளவரசி கேட்டி அவர்கள் கருவுற்ற செய்தியை இவ்வளவு சீக்கிரம் வெளியிட்ட காரணம் யாது என்று பார்க்கையில் கர்ப்பம் அடைந்த பெண்கள் மிகவும் அரிதாக அல்லலுறும் “தொடர் வாந்தி” நிலையினால் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் இந்தச் செய்தியை அவசரமாக ஊடகங்களுக்கு அறிக்கை வடிவில் வெளியிட வேண்டி நேர்ந்தது என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள் (யார் அவர்கள் ? அயல் வீட்டுக்காரரோ ! )

    இளவரசியாரின் இக்கர்ப்பந்தரிப்புச் செய்தியறிந்தவுடன் உலக ஊடகங்களின் இந்தியப் பிரதிநிதிகள் தமது உபகரணங்கள் சகிதம் இவ்வைத்திய்ச்சாலையின் முன்னால் படையெடுத்து விட்டார்கள் போங்கள் . . .

    என்ன ஒரு சாதாரண கர்ப்பந்தரிப்புச் செய்திக்கு ஏனிந்த ஆர்ப்பாட்டம் ? புரிகிறது உங்கள் யதார்த்தமான கேள்வி . . .

    கர்ப்பந்தரித்தவர் என்ன சாதாரணமானவரா ? அன்றிப் பிறக்கப் போகும் குழந்தைதான் சாதாரணமான குழந்தையா?

    கர்ப்பந்தரித்தவர் இங்கிலாந்தின் முடுசூட்டும் வரிசையில் இரண்டாவது தகமையுள்ள இளவரசரின் மனைவி, பிறக்கப் போகும் குழந்தையோ அதே வரிசையில் மூன்றாவது இடத்தைப் பெறப் போகிறது .

    அதுவுமின்றி பொதுநல்வாய நாடுகளின் தலைமைத்துவ நாடான இங்கிலாந்து தேசத்தின் எதிர்கால ராஜ சரித்திரத்தில் இடம்பெறப்போகும் ஒரு நிகழ்வல்லவா? இது.

    சரி இங்கிலாந்து அரசியல் சட்டத்தின் படி ஒரு ராஜாவுக்கோ ராணிக்கோ பிறக்கும் வாரிசுகளில் மூத்த ஆண் வாரிசுக்கே முடிசூட்டும் அந்தஸ்தும் தகமையும் கிடைப்பது எனும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

    அதுசரி அப்படியாயின் பிரின்ஸ் வில்லியம் அவர்களின் வாரிசு பெண்குழந்தையாக இருந்து விட்டால் . . . . ஓ அப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா ?

    அங்கேதான் இங்கிலாந்து நாட்டின் ஆண்,பெண் சம உரிமைக் கொள்கை ஓங்காரமிடுகிறது. அது என்ன அப்படிப்பட்ட ஓங்காரம் . . . எங்களுக்குக் கேட்கவில்லையே ! அவசரப்படாதீர்கள் அன்பு உள்ளங்களே !

    அவசரம், அவசரமாக இங்கிலாந்து நாட்டின் அரசியல் சட்டத்தில் உள்ள இச்சமத்துவமற்ற சட்டம் மாற்றியமைக்கப்படவிருக்கிறது.

    ஆமாம் இதற்கான அதிகாரத்தினை இங்கிலாந்து மகாராணியர் தலைவியாக இருக்கும் பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த 16 நாடுகளின் தலைவர்களும் ஏகமனதாக அளித்து விட்டார்கள்.

    மேலும் ஒரு சிறிய கருத்துப் பரிமாறலின் பின்னால் இதற்கான முழு அதிகாரமும் இங்கிலாந்து அரசாங்கத்திற்கு அளிக்கப்படும்

    இம்மாற்றம் ஏறத்தாழ 300 ஆண்டுகளின் முன்னால் அமைக்கப்பட்ட இங்கிலாந்து சட்டத்தை மாற்றியமைக்கும் அதிகாரத்தை இங்கிலாந்துப் பாராளுமன்றத்திற்கு அளிக்கிறது. இம்மாற்றத்தைக் கொண்டுவரும் முகமாக 1689ம் ஆண்டு நிறுவப்பட்ட “உரிமைகளுக்கான சட்டம்”, 1701ம் ஆண்டு நிறுவப்பட்ட வதிவுரிமைச் சட்டம், 1772ம் ஆண்டு நிறுவப்பட்ட அரச குடும்பத் திருமணச் சட்டம் என்பனவற்றிலும் திருத்தங்கள் கொண்டு வரப்படவிருக்கின்றன.

    எமது நாட்டின் பிரதமரின் கூற்றுப்படி இளவரசர் வில்லியத்திற்கு பிறக்கும் குழந்தை பெண்குழந்தையானால் எதிர்காலத்தில் எமது நாட்டின் ராணியாக ஆகும் உரிமை அவருக்கு அதிகாரப்பூர்வமாக அளிக்கப்படுகிறது.

    அதுசரி என்ன பிதற்றுகிறாய் ? இங்கிலாந்து நாட்டிற்கு ராணியாக இருப்பது இப்போதும் பெண்தானே ? உங்கள் கேள்வி புரிகிறது.

    இப்போதய ராணியாரின் தந்தை கிங் ஜந்தாவது ஜார்ஜ் அவர்களின் குழந்தைகள் இரண்டும் பெண் குழந்தைகள் ஆனதினால் தான் அவர்களுள் மூத்தவரான எலிசபெத் அவர்கள் ராணியாகும் தகுதி பெற்றார்.

    அது என்ன ஆண்குழந்தைதான் நாட்டிற்கு ராஜாவாக முடியுமா? ராணியான விக்டோரியா மகாராணி, தற்போதைய எலிசபெத் மகாராணி அவர்கள் இருவரும் சிறந்த வகையில் தமது பதவியை நிர்வகிக்கவில்லையா?

    ஏன் இந்த வேறுபாடு ?

    நியாயமான கேள்விதான் இவ்வேறுபாட்டின் நியாயமற்ற தன்மையை மனதில் கொண்டுதான் இன்றைய காலத்திற்கு ஏற்ற வகையில் இச்சட்டம் இப்போது மாற்றியமைக்கப்படுகிறது.

    ஆணுக்குப் பெண் சளைத்தவளல்ல என்னும் உண்மையை பல முன்னேற்றமான மாற்றங்களை உள்வாங்கிச் செயல்படுத்திவரும் இங்கிலாந்து சட்டமூலம் அங்கீகரிக்கிறது எனும் செய்தி மனதுக்கு இதமாக இருக்கிறது.

    தமக்குப் பிறக்கும் முதல் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு உலகில் பல சமுதாயங்களின் மத்தியில் நிலவி வருகிறது. இக்காரணத்தினாலேயே பிறக்கும் பெண்குழந்தைகளை வெறுக்கும் நிலை கூட சிலசமயங்களில் நிகழ்கிறது.

    இப்படிப்பட்ட அர்த்தமற்ற அநாகரீக செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனது பல முன்னேற்றமான முயற்சிகளுக்கு இத்தகைய முன்னோடிகளான நிகழ்வுகள் உந்து சக்தியாக விளங்கும் என்பதில் எதுவித ஜயமுமில்லை.

    உங்களை நோக்கி நான் இம்மடலின் ஆரம்பத்திலே ஒரு கேள்விக் கணையைத் தொடுத்திருந்தேன். அதாவது மதத்திற்கும், கலாச்சாரத்திற்கும் உள்ள பிணைப்பு என்ன? என்ப்துவே அது.

    அந்தக்கேள்வியின் காரணத்தை இப்போது விளக்குகிறேன். நான் போனவாரம் எழுதிய மடலில் இங்கிலாந்து நாட்டினில் பெண்களை “பிஷப்” பதவிக்கு நியமிப்பதை சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று எழுதியிருந்தேன்.

    ஆனால் அதே சமுதாயம் இன்று முடிசூட்டிக் கொள்ளும் தகமைக்கு பெண்களும் சம உரிமை பெறவேண்டும் என்பதை சட்டமூலமாக்க முயல்கிறது என்று வரைந்திருக்கிறேன்.

    மதம் ஒரு மனிதனுக்கு அணிகலனே அன்றி ஆடையல்ல அது அணியப்படுவதன் காரணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    அதேசமயம் சட்டமூலம் இயற்றப்பட்ட கலாச்சாரச் சம்பிரதாயம் ஆணுக்குப் பெண் சமமற்ற தன்மையைக் கொண்டிருக்குமானால் அதை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் ஏனெனில் இது அனைத்து மக்களாலும் பின்பற்றப்படும் காரணத்தினால் .

    மனதைப் பண்படுத்திக் கொள்ள மதத்தைப் புரிந்து கொள்வோம் . . . எமது அடையாளங்களைத் தக்க வைத்துக் கொள்ள கலாச்சாரத்தை வலுப்படுத்திக் கொள்வோம்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

     

    Share
  • தமிழார்வம் திரிகடுகம்: அபாயம் தவிர்

    இன்னம்பூரான்

    8. அபாயம் தவிர்


    வழங்காத் துறை இழிந்து நீர்ப் போக்கும், ஒப்ப
    விழைவு இலாப் பெண்டிர் தோள் சேர்வும், உழந்து
    விருந்தினனாய் வேற்றூர் புகலும்,-இம் மூன்றும்
    அருந் துயரம் காட்டும் நெறி.              
            [5]

    8.1. Look before you leap. பெருக்கெடுத்தோடும் நதிகளில் அபாயம் இருக்கலாம். -நீர்ச்சுழல்/ பொதி மணல்/ அதி வேகம்/ முதலை போன்றவை. கவனமில்லாமல், புழக்கத்தில் இல்லாத  ஆற்றின் துறைகளில் இறங்குவது அபாயத்தை ஆசிரியர் நல்லாதனார் எடுத்துரைத்திருக்கிறார். நான் இந்த ‘தமிழார்வம்’ துறையில் இறங்கியது கூட எனக்கு வழங்காத்துறையில் இறங்கிவிட்டேனோ என்ற ஐயம் தலை தூக்க, சற்றே கரையோரம் ஒதுங்கி நின்றேன். ஆன்ரே கைட் (Andre Gide) என்ற ஃபிரென்ச் தத்துவ ஞானி ‘கரையிலே நின்று கொண்டிருந்தால், புது சமுத்திரங்களை காண்பது எவ்வாறு?(“Man cannot discover new oceans unless he has the courage to lose sight of the shore.”) என்று கேட்கிறார். அதுவும் நியாயமாகத்தான் படுகிறது. தவிர, இதையெல்லாம் பத்தாம் பசலி என்று தமிழகத்தில் ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். இறங்கியாச்சு. நல்லாதனாரின் எச்சரிக்கையை கவனத்தில் வைத்துக்கொண்டு பயணம் தொடர்கிறது.

    8.2. ‘ஒப்ப விழைவு இலாப் பெண்டிர் தோள் சேர்வும்…’
    : ஆணும், பெண்ணும் இணைந்து வாழும் நெறியை இல்லறம் என்று பல இடங்களில் போற்றும் நல்லாதனார், வாழ்வியலின் மென்மை ஒன்றை உணர்த்துகிறார்.  விருத்தியுரையில் ‘ஒப்ப விழைவு இலாப் பெண்டிர்’ வேசையர் என்று கூறப்பட்டிருக்கிறது. அன்பும், காதலும் இல்லாத போது இணைந்து வாழ்வது எளிதல்ல என்று பொருள் கொள்ளலாம். காஞ்சனையின் கனவு என்று ஒரு திரைப்படத்தை பல வருடங்களுக்கு முன்னால் பார்த்த ஞாபகம். அதில் விலைமாது என்று சித்திரிக்கப்பட்டவர் உண்மையில் கதாநாயகனை நேசிக்கிறாள்; தியாகம் செய்கிறாள்; அவரின் குடும்பத்தால் மதிக்கப்படுகிறாள் என்று ஞாபகம். தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ என்ற புதினத்தில் ‘ஆசைக்கிழத்தி’ உறவும் அதன் பின்விளைவும் நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறது.

    பரத்தையிடம் சென்று வந்தால் ஊடல் தான் தலை தூக்கும் என்றொரு பக்கமும், பரத்தையிடம் சென்று வந்த சின்னங்களை பட்டியலிட்டுத் தலைவனை கேலி செய்து, அவனுக்கு காதற்பரத்தையாக இருந்த மாதை, தலைவி ‘நீடூழி வாழ்க’ என்று வாழ்த்துவதாக ஒரு பக்கமும் வருணிக்கிறது, நற்றிணை 20: (பின்னத்தூர்.அ.நாராயணசாமி ஐயர் அவர்கள் எழுதிய உரையும் விளக்கமும்).

    20 மருதம் – ஓரம்போகியார்


    ஐய குறுமகட் கண்டிகும் வைகி 
மகிழ்நன் மார்பில் துஞ்சி அவிழ் இணர்த் 
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல் 
துளங்குஇயல் அசைவர கலிங்கம் துயல்வர 
செறிதொடி தௌ ர்ப்ப வீசி மறுகில் 
பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி 
சென்றனள் வாழிய மடந்தை நுண் பல் 
சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள் 
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழை 
பழம் பிணி வைகிய தோள் இணைக் 
குழைந்த கோதை கொடி முயங்கலளே

    ஒரு இலக்கிஅய சுவைக்கு இவற்றையெல்லாம் சொன்னேன். நல்லாதனார் கூறும் வகையில் இல்லறம் போற்றுவது சாலத்தகும்.

    8.3. ‘…உழந்து விருந்தினனாய் வேற்றூர் புகலும்…’: வேற்றூர் என்றாலே பொதுவாக, அது ஒரு பிரச்னை தான். முதலில் வழி தெரியாது. மொழி தெரியாது. மாந்தர்களின் மரபு வேறு படலாம். எனினும் சாமி சிதம்பரனார் கூறிய படி எல்லா அறிவுரைகளையும் காலத்துக்கேற்ப கடை பிடித்தால் நலம். ‘When in Rome, do as the Romans do.’ இருந்தாலும், பல பிரச்னைகள் தொக்கி நிற்கலாம். ‘மதியாதார் தலைவாசல் மிதியவேண்டாம்’ என்றார், மயிலேறும் பெருமானை போற்றும் உலகநாதர். அது என்னமோ சரி தான்.
    (தொடரும்)
    இன்னம்பூரான்
    06 12 2012
    உசாத்துணை:

    திரிகடுகம்: மூலமும், உரையும்: http://noolaham.net/project/35/3423/3423.pdf
    தமிழ் இணையக் கல்விக்கழகம்
    திரிகடுகம்:மூலமும்,விருத்தியுரையும்: http://www.tamilvu.org/library/libindex.htm

    நற்றிணை: http://www.tamilvu.org/library
    சித்திரத்துக்கு நன்றி:http://img249.imageshack.us/img249/7429/im0021334mg.jpg
    Share
  • அணுவின் உள்ளமைப்பை விளக்கிய விஞ்ஞான மேதை நீல்ஸ் போஹ்ர்

     

                                                                                                                          (1885-1962)

                                                                              சி. ஜெயபாரதன்,B.E.(Hons),P.Eng.(Nuclear) Canada

     

     


    பிரபஞ்சப் பெரு வெடிப்பில் சிதறி
    பொரி உருண்டை ஒன்று
    பரமாணுக்களாகி,
    துணுக்காகி அணுவாகி,
    அணுவுக்குள் அணுவாகித்
    துண்டுக் கோள்கள் திரண்டு
    அண்டமாகி,
    அண்டத்தில் கண்டமாகித்
    கண்டத்தில்
    துண்டமாகிப் பிண்டமாகி,
    பிண்டத்தில் பின்னமாகிப்
    பிளந்து தொடரியக்கப் பிளவில்
    பேரளவுச் சக்தி யாகித்
    சீராகிச் சேர்ந்து
    சின்னஞ் சிறு அணுக்கருக்கள்
    பிணைந்து, பேரொளி யாகிப்
    பிரம்மாண்டப் பிழம்பாகி,
    பிணைவு சக்தியாகிப்
    பரிதியாகி,
    பரிதியின் பம்பரப் பந்துகளாகி,
    பாசபந்த ஈர்ப்பில்
    ஊசலாடி
    அகில வெளியில்
    மகத்தான தோரணமாய்
    அம்மானை ஆடுகிறாள், என்
    அன்னை !

     

    ++++++++++++

     

     

    “குவாண்ட யந்திரவியல் கோட்பாடு பூர்வீகப் பௌதிகத்தின் ஏற்புடைய பொதுவிதி என்று நீல்ஸ் போஹ்ர் கூறுவதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. ஆயினும் அவரது விஞ்ஞானப் பணி சிந்தனா முறையில் ஓர் உன்னத இன்னிசை வடிவம் என்பது என் எண்ணம்.”

    ஆல்பர்ட்ஐன்ஸ்டைன்


    அணுவின் உள்ளமைப்பை முதலில் விளக்கிய நீல்ஸ்போஹ்ர்

    டேனிஷ் விஞ்ஞானி நீல்ஸ் போஹ்ர் [Niels Bohr] என்பவர் பிரிட்டீஷ் விஞ்ஞான மேதைகளான ஜே.ஜே. தாம்ஸன், ஏர்னெஸ்ட் ரூதர்ஃபோர்டு ஆகியோருடன் விஞ்ஞான ஆய்வுகள் செய்து, புதிய முறையில் அணுவின் உள்ளமைப்பைப் பற்றி எளிதாக, ஏற்றதாக, ஏனையோர் ஒப்புக் கொள்ளும் படி  அறிவித்தவர். 1913 ஆம் ஆண்டில் நீல்ஸ் போஹ்ர் ரூதர்ஃபோர்டு விளக்கிய அணு மாடலையும், விஞ்ஞானி பிளான்க் குவாண்டம் நியதியையும் [Planck’s Quantum Theory] ஒருங்கிணைத்து, ஓர்  ஒப்பற்ற அணு உள்ளமைப்புக் கருத்தை முதன்முதல் தெளிவாக வெளியிட்டார்.

     

     

    நீல்ஸ் போஹ்ர்தான் துணிச்சலுடன் குவாண்டம் நியதியை இணைத்து அணுவின் உள்ளமைப்புக்கும், மூலக்கூறுகளின் அமைப்புக்கும் விஞ்ஞான விளக்கத்துக்கு எடுத்தாண்டார்.  மேலும் போஹ்ர்தான் முதன்முதல் மூலகம் ஒவ்வொன்றும் தன் அணுக்கருவில் கொண்டுள்ள அணுவியல் இலக்கத்தின் [Element’s Atomic Number (Total Number of Protons in the Nucleus)] முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டார். அவரது கோட்பாடு: “எந்த ஓர் அணுவும் தனிப்பட்ட நிலைகளில் குறிப்பிட்ட ஓரளவு சக்தியை கொண்டுதான் நிலவி வருகிறது.”  அவரது அரிய அந்த அணுவியல் நியதியே, பின்னால் அணுப்பிளவு இயக்கத்துக்கு [Nuclear Fission] அடிகோலிப் பேரளவு  அணுசக்தியை வெளியே கொண்டுவர உதவியது. 1922 ஆம் ஆண்டு நீல்ஸ் போஹ்ர் அவரது ஒப்பற்ற அந்த அணுவியல் நியதிக்கு நோபெல் பரிசைப் பெற்றார்.

     


    அணுவைப் பற்றி நாம் இதுவரை அறிந்தவை

    பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் பொருட்களின் உள்ளே அணுக்களின் இருக்கையை இரசாயன நிபுணர்கள் கோட்பாடு மூலமாக நிரூபித்துக் காட்டினார்கள். ஆனால் 1909 ஆம் ஆண்டில் சோதனை மூலம் காட்டி முதன் முதலில் அணுக்களின் நுட்ப அளவை மதிப்பிட்டவர் பிரெஞ்ச் விஞ்ஞானி ஜீன் பெர்ரின் [Jean Perrin (1870-1942)]. அவர் எக்ஸ்-ரே கதிர்களையும், எதிர்முனைக் கதிர்களையும் [Cathode Rays] ஆராய்ச்சி செய்தவர். 1895 ஆம் ஆண்டில் பெர்ரின் எதிர்முனைக் கதிர்களில் எதிர்மின் கொடையுள்ள துகள்கள் [Negatively Charged Corpuscles] இருப்பதாகக்  காட்டினார். அவையே பின்னால் எலெக்டிரான்கள் என அழைக்கப் பட்டன. அவர்தான் அவொகேட்ரோ இலக்கத்தைப் [Avogadro’s Number (6×10^23)] பலமுறைகளில் கணித்துத் தெளிவு படுத்தியவர்.

     

    இத்தாலிய விஞ்ஞானி அமெடியோ அவொகேட்ரோ [Amedeo Avogadro] கணித்த கோட்பாடு சொல்வ தென்ன? “ஒரே உஷ்ணத்திலும், ஒரே அழுத்தத்திலும் நிலைத்துச் சமக் கொள்ளளவு கொண்ட வாயுக்கள் மூலக்கூறுகளின் [Molecules] ஒரே எண்ணக்கை அளவைக் கொண்டுள்ளன.” ஆனால் அந்தக் கோட்பாடு தூய வாயுக்களுக்கு [Ideal Gases] மட்டுமே உடன்பாடானது.

    இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானிகளின் முக்கிய கண்ணோட்டம் அணுவின் உள்ளமைப்பை அறிந்து கொள்ளக் குறிவைத்துத் திசை திரும்பியது. அந்த தேடல் பயணம் 1897 இல் ஜே.ஜே. தாம்ஸன் (1856-1940) முதன்முதல் கண்டுபிடித்த எலெக்டிரான் பரமாணுக்களுடன் துவங்கியது.  எதிர்முனைக் கதிர்களில் பிரிக்க முடியாத நுட்பத் துகள்கள் இருப்பதாகத் தாம்ஸன் கூறினார்.  பிறகு எலெக்டிரான்கள் எதிர் மின்கொடை கொண்டவை என்றும் எலெக்டிரான் துகளின் நிறை இத்தனை அளவென்றும் கணித்தவர்கள் இருவர்: ஜான் டௌன்செண்டு [John Townsend (1868-1937)], ராபர்ட் மிக்கில்லிக்கன் [Robert Millikan (1868-1953)].



    அணு யுகத்தின் பலகணியும் வாயிற் கதவும் திறந்தன !

    1895 ஆம் ஆண்டில் ஜெர்மென் விஞ்ஞானி ராஞ்ஜென் [Wilhelm Roentgen (1845-1923)] எக்ஸ்-ரே கதிர்களைக் கண்டுபிடித்து 1901 இல் நோபெல் பரிசு பெற்று முதன்முதல் அணுவியல் யுகத்தின் பலகணியைத் திறந்து வைத்தார். அதற்குப் பின் 1896 ஆம் ஆண்டில் பிரெஞ்ச் விஞ்ஞானி ஹென்றி  பெக்குவரல் [Henri Becquerel (1852-1908)] யுரேனியத் தாது பிட்ச் பிளண்டியில் [Uranium Ore  Pitch-Blende] பொதிந்துள்ள கதிரியக்கத்தைக் [Radioactivity] கண்டுபிடித்து அணுயுகத்தின் வாயிலைத் திறந்து வைத்தார். பெக்குவரலைப் பின்பற்றி (1898) மேடம் கியூரி, அவரது கணவர் பியரி கியூரி இருவரும் [Madame Marie (1867-1934) & Pierre Curie (1859-1906)] பிட்ச் பிளண்டியில் யுரேனியத்தை போல், கதிரியக்கம் உள்ள ரேடியம், பொலோனியம் என்னும் புது மூலங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்.

    அணுக்கள் உடைந்து கதிரியக்கம் வெளியாவதற்கு விளக்கம் அளித்த பெக்குவரல், மேரி & பியரிக் கியூரி ஆகிய மூவருக்கும் ஒன்றாக 1903 இல் நோபெல் கிடைத்தது. யுரேனியத் தாதுவில் வெளியான மூன்று வித நூதனக் கதிர்களுக்கு ஆல்ஃபா, பீட்டா, காமா [Alpha, Beta & Gamma Rays] என்று  பிரிட்டீஷ் விஞ்ஞானி ஏர்னெஸ்ட் ரூதர்ஃபோர்டு [Ernest Rutherford (1871-1937)] முதன் முதல் பெயரிட்டார். 1900 ஆம் ஆண்டில் விஞ்ஞானி பெக்குவரல் பீட்டா கதிர்கள் எதிர்க்கொடை உள்ள “எலெக்டிரான்” [Negatively Charged Electron] என்பதைக் கண்டார்.  1903 இல் ரூதர்ஃபோர்டு யுரேனியம் போன்ற உலோகங்களில் கதிரியக்க வெளியேற்றத் துக்குக் காரணம், அணு  முறிவு தான் (அணுக்கருத் தேய்வு) என்று விளக்கம் தந்தார். அடுத்து ஆல்ஃபா துகள் ஒரு ஹீலிய அணுக்கரு [Helium Nuclei] வென்றும் அவரே முதலில் கண்டுபிடித்தார்.

     

    1911 ஆம் ஆண்டில், ரூதர்ஃபோர்டு ஜெர்மென் விஞ்ஞானி ஹான்ஸ் கைகருடன் [Hans Geiger (1882-1945] சேர்ந்து ஆராய்ச்சிகள் செய்து அணுவின் உள்ளமைப்பை முதலில் விளக்கினார். அதாவது அணுக்கருவை எப்போதும் சுற்றிவரும் எலெக்டிரான்கள் கொண்ட வடிவே அணுவின் உள்ளமைப்பு என்பது அவர் முதன்முதலில் அறிவித்த மாடல். அதற்குப் பிறகு ரூதர்ஃபோர்டு 1914 இல் அணுக்கருவில் நேர்கொடை யுள்ள புரோட்டான் [Positively Charged Proton] இருக்கையை எடுத்துக் கூறினார். அடுத்து 1919 இல் ரூதர்ஃபோர்டு நைடிரஜன் மூலகத்தை ஆஃல்பா துகளால் தாக்கி, முதன்முதல் செயற்கை அணுக்கருத் தேய்வை [Artificial Atomic Disintegration] ஏற்படுத்திக் காட்டினார். அதே போல் பின்னால் மேரி கியூரியின் மகள் ஐரீன் கியூரி, அவளது கணவர் ஃபிரெடெரிக் ஜோலியட் இருவரும் செயற்கை மூலக மாற்றத்தைச் [Artificial Transmutation of  Elements] செய்து காட்டிப் புதியதோர் வரலாற்றை உருவாக்கினர். அணுயுகப் பொற்காலத்துக்குப் பெக்குவரலும், கியூரி குடும்பத்தாரும், ரூதர்ஃபோர்டும் ஆரம்ப விழா நடத்தியவர்கள் என்பதை 20 ஆம் நூற்றாண்டு வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டும்.

    அணுவியல் அமைப்பில் நீல்ஸ்போஹ்ரின் புதியஆராய்ச்சிகள்

    நீல்ஸ் போஹ்ர்தான் முதன்முதலில் துணிச்சலுடன் குவாண்டம் நியதியை [Quantum Theory] இணைத்து அணுவின் உள்ளமைப்புக்கும், மூலக்கூறுகளின் அமைப்புக்கும் விஞ்ஞான விளக்கத்துக்கு எடுத்தாண்டார். மேலும் போஹ்ர்தான் முதன்முதல் மூலகம் ஒவ்வொன்றும்  கொண்டுள்ள அணுவியல் இலக்கத்தின் [Element’s Atomic Number (Total Number of Protons in  the Nucleus)] முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டார். அவரது கோட்பாடு: “எந்த ஓர் அணுவும்  தனிப்பட்ட நிலைகளில் குறிப்பிட்ட ஓரளவு சக்தியை கொண்டுதான் நிலவி வருகிறது.” அவரது  அரிய அந்த அணுவியல் நியதியே, பின்னால் அணுப்பிளவு இயக்கத்துக்கு [Nuclear Fission]  அடிகோலிப் பேரளவு அணுசக்தியை வெளியே கொண்டுவர உதவியது. 1922 ஆம் ஆண்டு நீல்ஸ்  போஹ்ர் அவரது ஒப்பற்ற அந்த அணுவியல் நியதிக்கு நோபெல் பரிசைப் பெற்றார்.

     

     

    நீல்ஸ் போஹ்ர் 1885 ஆம் ஆண்டில் டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகனில் ஒரு செல்வாக்கான விஞ்ஞானக் குடும்பத்தில் பிறந்தார். தந்தையார் கிறிஸ்டியன் போஹ்ர் கோபன்ஹேகன் பல்கலைக் கழகத்தில் உயிரியல் விஞ்ஞானப் பேராசிரியர் [Professor of  Physiology]. தந்தையார் உயிரினச் சுவாசத்தின் பௌதிக, இரசாயன பண்பாடுகளைப் [Physical &  Chemical Aspects of Respiration] பற்றி முதன்முதல் விளக்கியவர். தாயார் டேனிஷ் யூதச் செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். நீல்ஸ் போஹ்ரின் இளைய சகோதரன் மாபெரும் கணித மேதை.

    பல்கலைக் கழகத்தில் நீல்ஸ் போஹ்ர் தனது இள வயதிலேயே அபார விஞ்ஞானத் திறமையைக் காட்டினார். முதன்முதலாக “நீர்த்தள முறுக்கேற்றத்தைத்” [Surface Tension of Water] தீர்மானிக்க, நீர்வீச்சுகளின் அதிர்வுகளைத் [Vibrations of Water Jets] துள்ளியமாகச் சோதனை மூலம்  கணித்து நியதி முறைகளில் பதிவு செய்து, டேனிஷ் விஞ்ஞானக் கழகத்தின் [Royal Danish Academy of Sciences & Letters] தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

    அவரது பட்டப் படைப்பாய்வு  இதுதான்: அணுசார்ந்த நிலையில் பிண்டங்களின் இயக்கத்தைப் பற்றிப் பூர்வீகப் பௌதிகம் விளக்க முடியாதைச் சொல்லும், உலோகங்களின் எலெக்டிரான் கோட்பாடு [Thesis on the Electron  Theory of Metals that stressed the inadequacies of Classical Physics for treating the  Behaviour of Matter at the Atomic Level] 1911 இல் தான் எழுதிய அந்த ஆய்வுக் கருத்துரைக்கு டாக்டர் பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற பிறகு இங்கிலாந்துக்குச் சென்று புகழ்பெற்ற விஞ்ஞானி  ஜே.ஜே. தாம்ஸனிடம் பணியாற்றித் தன் எலெக்டிரான் கோட்பாடு ஆய்வுகளை மேற்கொண்டு தொடர ஆரம்பித்தார்.

     

    உலோகத்தில் எழுந்த எலெக்டிரான் மீதிருந்த ஆர்வத்திற்கு தாம்ஸன் ஊக்கம் அளிக்காததால்,  நீல்ஸ் போஹ்ர் 1912 ஆம் ஆண்டில் மான்செஸ்டரிலிருந்த பிரிட்டீஷ் விஞ்ஞானி ஏர்னெஸ்ட்  ரூதர்ஃபோர்டை அணுகினார். அப்போது ரூதர்ஃபோர்டு குழுவினர் அணுவின் உள்ளமைப்பு பற்றி  பல்வேறு ஆய்வுகள் நடத்திக் கொண்டிருந்தனர். ரூதர்ஃபோர்டு சமீபத்தில் நிர்மாணித்த அணு  உள்ளமைப்பு மாடல் நியதிப்பாடை விளக்கும் [Theoretical Implications] விஞ்ஞான  முறைப் பாடுகளில் அவரும் மூழ்கினார். அணுக்கருவின் புரோட்டான் எண்ணிக்கையைக் கூறும் அணு எண்ணின் [Atomic Number] முக்கியத்தை உணர்ந்தவர்களில் நீல்ஸ் போஹ்ரும் ஒருவர்.

     

     

    அதுவே அணுக்கருவின் மின்கொடை [Electric Charge] எண்ணிக்கையும் ஆகும். பின்னாளில் அமைக்கப்பட்ட மூலகங்களின் சீரணி அட்டவணை (Periodic Table of Elements) புரோட்டான் எண்ணிக்கை கூறும் அணு எண்ணை வைத்தே உருவானது.

    நீல்ஸ் போஹ்ர் கூறியது: மூலங்களின் இரசாயனப் பௌதிகப் பண்பாடுகள் அணுக்கருவைச் சுற்றிவரும் எலெக்டிரான்களைப் பொருத்தவை; அணுவின் திணிவு அல்லது நிறை [Atomic Mass] அணுக்கருவின் புரோட்டான், நியூட்ரான் ஆகிய பரமாணுக்களின் நிறையைச் சார்ந்தது; மூலகத்தின் கதிரியக்கத்துக் காரணமும் அணுக்கரு தாங்க முடியாமல் உள்ள ஏராளமான பரமாணுக்கள்தான். ரூதர்ஃபோர்டின் அணு உள்ளமைப்பு மாடல் எந்திரவியல் முறைப்படியும், மின்காந்த முறைப்படியும் நிலையற்றது [Mechanically & Electro-magnetically Unstable]. ஆனால் மாக்ஸ் பிளான்க், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், மற்ற விஞ்ஞானிகளும் விருத்தி செய்த “குவாண்டம்  நியதியை” நீல்ஸ் போஹ்ர் உட்புகுத்தி அணுக்கருவின் “நிலைப்பாடை” வடித்துக் காண்பித்தார்.

     

    பூர்வீகப் பௌதிக [Classical Physics] விதிப்பாட்டிலிருந்து விலகி, நீல்ஸ் போஹ்ர் ஒரு புதிய கோட்பாடை ஆக்கினார்: “எந்த ஓர் அணுவும் குறிப்பிட்ட ஓரளவு சக்தியை கொண்டுதான், தனிப்பட்ட நிலைப் பாடுகளில் நிலவி வருகிறது.” [Any atom could exist only in a discrete set of  stable or stationary states by a definite value of its energy]. இதுவே போஹ்ர் அணு  உள்ளமைப்பு மாடல் என்றும் கூறப்படுவது.   போஹ்ர் விளக்கிய அணுவின் குவாண்டம் நியதி இதுதான். ஹைடிரஜன் அணு வெளிவிடும்  ஒளிப்பட்டைக் கோடுகளுக்கு [Series of Lines observed in the Spectrum of Light emitted by  Atomic Hydrogen] அந்த நியதி விளக்கம் கூறியது. அந்த ஒளிப்பட்டைக் கோடுகளின் அதிர்வுகளை [Frequencies] வெகு துல்லியமாக அந்த நியதி மூலம் கணித்துக் காட்டினார். அந்த அதிர்வுகளை அணுவின் எலெக்டிரான் மின்கொடை, திணிவு மூலமாகக் கணித்தார் [In terms of the charge & mass of the Electron]. அவற்றை எடுத்துக் காட்ட போஹ்ர் கூறியது: அணு தனது நிலைப் பாடில் உள்ளபோது எலெக்டிரான் கதிர்வீச்சு வெளியாக்கு வதில்லை. எலெக்டிரான் பரமாணு ஒரு  நிலைப்பாடி லிருந்து அடுத்த நிலைக்கு மாறும் போதுதான், கதிர்வீச்சை உமிழ்கிறது.

     

     

    (தொடரும்)

    +++++++

    தகவல்:

    1. The World of Science, The Paragon Publishing, UK (2006)

    2. The Biographical Dictionary of Scientists By: David Abbott. Ph.D. (1984)

    3. Encyclopaedia of Britannica (1978)

    4. Britannica Concise Encyclopedia (2003)

    5.  Wikipedia – Niels Bohr  (February 24, 2011)

    +++++++++

    S. Jayabarathan [jayabarat@tnt21.com]  (February 24, 2011) (Revised R-1)

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • நவம்பர் (2012) மாதச் சிறுகதைப் போட்டி முடிவுகள்!

     

     

    வெங்கட் சாமிநாதன்

     

    இம்மாத கதைகள் அதிக மகிழ்ச்சி தரும் வகையில் நல்ல எழுத்தின் பெருக்கத்தை தந்துள்ளன.

     

    வந்துள்ள 24 கதைகளில் நான்கு கதைகள் ஒன்றோடொன்று போட்டியிடும் வகையில் புதிய விஷயத்தைச் சொல்வனவாகவும் அதைத் திறமையுடன் ஒரு தேர்ச்சியுடன் கையாள்வதாகவும் உள்ளன.

    1. இருவேறு பார்வைகள் : கே. எஸ். சுதாகரன். 2. கல் – மணி ராமலிங்கம், 3. நந்தியாவட்டை – பழமை பேசி  4. கைக்குட்டைகளும் ட்ரான்ஸ்வெஸ்டிஸமும்.அரவிந்த் சச்சிதானந்தம்.

     

    இக்கதைகளில் அரவிந்த் சச்சிதானந்தம் எழுதியுள்ள கைக்குட்டைகளும் ட்ரான்ஸ்வெஸ்டிஸமும் கதையை இம்மாத வல்லமை பரிசுக்குரியதாகச் சொல்ல விரும்புகிறேன்.

     

    மிகச் சிக்கலான ஒரு ஆளுமை தன்  அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சின்ன சின்ன கஷ்டங்கள், மனப் பிரள்வுகள், தன் இச்சைக்கும் மற்றோர் எதிர்பார்ப்புக்கு வாழும் முரண்களுமான நிரந்தர மனப் போராட்டம். ஆணாகப் பிறந்தும் பெண்மை சார்ந்த விருபபங்கள் மறைத்தே மறைந்தே தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நிர்ப்பந்தங்கள் தன் திருமணத்திற்குப் பின்னும் தொடர்கிறது.  இதன் உண்மை பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் கதை சொல்லத் சம்பவங்கள், விருப்பங்கள் நம்பக வட்டத்துக்கு வெளியே போவதில்லை. நன்றாக, திறமையுடன் எழுதப்பட்டுள்ளது.

    மற்ற மூவருடைய கதைகளை நான் ஒதுக்க விரும்பவில்லை. இவர்களும் புதிய கதைக் களன்களைக் கொண்டு சேர்த்துள்ளார்கள். அதைத் திறமையுடனும் கையாண்டிருக்கிறார்கள். ஆனால்,  அவர்கள்  ஒரு முறை பரிசு பெற்று விட்டதால், . கடைசியான ஆண்டுத் தேர்வுக்கு அவர்களின் இம்மாதக் கதைகளும் சேர்க்கப்படட்டும். ஒரு முறை பரிசு பெற்ற காரணத்தால் இவை ஒதுக்கப்பட வேண்டாம்.  இம்முறை புதியவருக்கு, திறமையுடன் எழுதப்பட்ட ஒரு புதிய கதைக்கு தரப்படட்டும்

    அரவிந்த சச்சிதானந்தத்துக்கு என் வாழ்த்துக்கள். . .

     

    சிறுகதைப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்:

     

    1. கணினி, ஜகம் நீ

    2. 3ஒரு வினாடி உயிர்

    3.சரிங்க…நீங்க சொல்றபடியே செஞ்சிடலாம்ங்க!

    4. அம்பாரி

    5. வயிறாற நன்றி

    6. ரசிகன்

    7. தனக்கொரு நியாயம்

    8. திருத்தப்பட்ட தீர்ப்புகள்

    9. இசைக்க மறந்த வீணை

    10. கைக்குட்டைகளும் டிரான்ஸ்வெஸ்டிசமும்

    11. வெளி

    12. எங்க வீட்டு சர்வெண்ட்

    13. யாருக்காக அழுதாள்?

    14. பாசம்

    15. தங்க விமானங்கள்

    16. காதல் கல்யாணம்

    17. நன்மையே தீமையாய்!

    18. நந்தியாவட்டை

    19. ஒரு புறம் வேடன்…மறு புறம் நாகம்!

    20. கல்

    21. போதுமடா சாமி

    22.குப்பை

    23. இருவேறு பார்வைகள்

    24. வைரக்கீரிடம்

     

    பரிசு பெற்ற அரவிந்த் சச்சிதானந்தம் அவர்களுக்கு வல்லமையின் மனம் நிறைந்த பாராட்டுகள்.  கௌரவப் பரிசு பெறும்  திரு கே.எஸ். சுதாகர், திரு மணி ராமலிங்கம் மற்றும் திரு பழமைபேசி ஆகியோருக்கும் பாராட்டுகள். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து போட்டியில் பங்கு பெற்று பரிசு பெறவும் வாழ்த்துக்கள்.

     

    அன்புடன்

    ஆசிரியர்

     

     

     

     

     

    Share
  • பத்திரிகையாளர்கள் எதிர் கட்சியாக செயல்பட வேண்டும்

     

    டி .எஸ்ஆர் சுபாஷ்


    02.12.2012 நெல்லை மாவட்டம்  தென்காசியில் அமைந்துள்ள பத்திரிக்கையாளர் சங்க கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் மாநிலத் தலைவர் டி .எஸ் .ஆர் .சுபாஷ் கலந்து கொண்டு பேசியபோது, ”எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எந்த கட்சி எதிர்கட்சியாக விளங்கினாலும் பத்திரிக்கையாளர்கள் எதிர்க்கட்சிப் போல செயல்படவேண்டும் என்று பேசினார். மகாகவி பாரதியைப் பற்றி பேசுகையில் தேசப்பிதாவாக     விளங்கிய மகாத்மா காந்தியையே விமர்சித்து, அவருக்குகே கடிதம் எழுதிய தைரியப் பத்திரிக்கையாளராக விளங்கிய பாரதிக்கு மட்டுமே இருந்தது என்றும், பாரதி பிறந்த தினத்தை தமிழக அரசு பத்திரிக்கையாளர் தினமாக அறிவிக்க வேண்டும் என்றும் பேசினார்.

    நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசிய  ‘தமிழக கதர் மற்றும் கிராமத்தொழில் துறை அமைச்சர்’ மாண்புமிகு ராஜா P.செந்தூர்பாண்டியன் அவர்கள் பேசுகையில் “பத்திரிகையாளர்கள் எதிர்க்கட்சிப் போல செயல்பட வேண்டிய அவசியம் அம்மாவின் ஆட்சியில் இருக்காது”  என்றும், எதிர்க்கட்சிகளும், பத்திரிகையாளர்களும் குறை சொல்ல முடியாதவாறு  செயல்பட்டுக் கொண்டு வருவதாகும் பதில் அளித்து பேசினார்.

    சங்க  கட்டிடத்திற்கு நிதி உதவி செய்த தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தோழர். பொ.லிங்கம்  பத்திரிகையாளர்களின் கடமையை பற்றி பேசினார்.

     

    திருநெல்வேலி  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமிகு. எஸ். விஜயேந்திரபிதாரி I.P.S, அவர்கள் சமுதாயத்தில் பத்திரிகையாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
     
    தென்காசி  சட்டமன்ற உறுப்பினரும் சமத்துவ  மக்கள் கட்சி தலைவருமான, ‘சுப்ரீம் ஸ்டார்” ஆர்.சரத்குமார் அவர்கள் பேசுகையில், ‘மாநில தலைவர்’ டி.எஸ்.ஆர்.சுபாஷ் பேசுகையில் பத்திரிக்கையாளர்கள் எதிர்க்கட்சி போல செயல்பட வேண்டும் என்று பேசினார். நான்  திரைப்பட உலகிற்கும், அரசியல் உலகிற்கும் வரும் முன்பே நான் பத்திரிகையாளராகத்தான் என் பொது வாழ்க்கையை துவங்கினேன் என்றும் ஜனாதிபதியையே கேள்வி கேட்கும் வலிமை பத்திரிகையாளருக்கே இருக்கிறது என்றும், வாள் முனையை விட பேனாவின் முனை கூர்மையானது என்றும் பேசினார்.

    அரசு  செயல்பாடுகள் சிறப்பாக அமைவதாலும், பத்திரிகையாளர்களின்  நியாயமான கேள்விகளுக்கு செவி சாய்ப்பதாலும், எந்த எதிர் கட்சிகளுக்கும் வேலை இல்லை என்றும், பத்திரிகையாளர்கள்  எதிர்க்கட்சி போல் செயல்படவேண்டிய அவசியம் இருக்காது என்றும்  பதில் அளித்து பேசினார்.

    மேலும்  இந்நிகழ்ச்சிக்கு, தென்காசியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களான, கோட்டாட்சித் தலைவர் P.இராஜா  கிருபாகரன், காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் R.பாண்டியராஜன், நகரமன்ற தலைவி  திருமதி S.பானு, V.சுடலை, R.இசக்கியப்பன், M.இப்ராஹிம், மற்றும் ஏராளமான  அரசியல் பிரமுகர்களும்  பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டனர்.

    (TUJ) சங்கத்தின் பொதுச்செயலாளர்கள்  கு.வெங்கட்ராமன், ‘கடலூர்’ K.ரமேஷ்குமார், ‘விருதுநகர்’  பழனிகுமார், ‘நெல்லை’ ராமகிருஷ்ணன், சென்னை மாவட்ட நிர்வாகிகள், “வாசன் பார்வை” செல்லப்பாண்டியன், “கழுகு” K.ராஜேந்திரன், “கடலூர்”  முனுசாமி, பக்ருதீன், , ஏ.வி.பி  ஜான்சன், பீர் ஹுசைன் I.ஆனந்தராஜ் ‘உடுமலை செல்வராஜ், எஸ்.செல்வரகு-PRO, ‘திருப்பூர்’ முரளி, விஜயா, இளங்கோ, ‘ஆடிட்டர்’ கண்ணன் மற்றும் பலர்.  

    கலந்து  கொண்டு சிறப்பித்தார்கள்.

     
    சிறப்பு அழைப்பாளராக புதுவை பிரஸ்கிளப் தலைவர் மதி மகாராஜா பங்குபெற்றார். முன்னதாக தென்காசி பத்திரிகையாளர் சங்க கௌரவ தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான தோழர் M. சண்முகம் வரவேற்புரை வழங்க, தென்காசி பத்திரிகையாளர் சங்கத் தலைவர் தோழர் M.முத்துசாமி நன்றியுரையாற்றினார்.

    இந்த  வரலாற்று சிறப்பு மிக்க  நிகழ்ச்சியில் டி.யூ.ஜெ வின் மாநில துணைப் பொதுச்செயலாளரும், நெல்லை மாவட்டத்தின் செயல்  வீரருமான தோழர் ஜி.பரமசிவம் அவர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து அனைவரையும் வியக்க வைத்தார்.

     

     

    Share
  • தாமிர சபை

    பவள சங்கரி

    காந்திமதியமமன் உடனமர் ஸ்ரீ நெல்லையப்பர் ஆலயம்

    மூலவர்    :     நெல்லையப்பர்  (வேண்ட வளர்ந்தநாதர் )
    அம்மன்/தாயார்    :     காந்திமதி, வடிவுடையம்மை
    தல விருட்சம்    :     மூங்கில்
    தீர்த்தம்    :     பொற்றாமரைக்குளம் (ஸ்வர்ண புஷ்கரணி கருமாறித் தீர்த்தம், சிந்துபூந்துறை
    பழமை    :     1000-2000 வருடங்களுக்கு முன்

    சிவபெருமானாரின், நடராசத் திருமேனியின் அருட்கூத்து நடத்துகின்ற ஐம்பெரும் சபைகளான, ரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை ஆகியவற்றில் “தாமிர சபை” என்று போற்றப்படுகிற காந்திமதியம்மன் உடனமர் நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலியில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து சபைகளில், இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர சபையாகவும், ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன.

    தேவாரப் பாடல் பெற்ற பாண்டிநாட்டுத் தலங்களில் இது 14வது தலம்.

    திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப்பதிகம்

    அக்குலா மரையினர் திரையுலா

    முடியினர் அடிகளன்று தக்கனார்

    வேள்வியைச் சாடிய சதுரனார்

    கதிர்கொள் செம்மை புக்கதோர்

    புரிவினர் வரிதரு வண்டுபண் முரலும்

    சோலைத் திக்கெலாம் புகழுறுந்

    திருநெல்வேலியுறை செல்வர் தாமே.

     தெற்கிலிருந்து வடக்காக 756 அடி நீளமும் மற்றும் மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும்  கொண்ட ஆசியாவிலேயே மிகப்பிரமாண்டமான சிவன் ஆலயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.  இடையில் அழகிய கல் மண்டபம் மூலம் இணைக்கப்பட்ட அம்மன் ஆலயம் ஒரு புறமும், மறுபுறம் நெல்லையப்பர் ஆலயமும் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.

    ஆல்யத்தினுள் நுழையும் போதே மேற்கூரையில் கேரள ஆலயங்களில் உள்ளது போன்று அற்புதமான மர வேலைப்பாடுகளைக் காணலாம். உள்ளே நுழைந்தவுடன்  10 அடி உயர மிகப்பெரிய நந்தி நம்மை வரவேற்கிறது. அவரை வழிபட்டுச் சென்றால் உடன் நெடிதுயர்ந்து நிற்கும் பளபளவென்ற கொடிமரம் சுற்றி வணங்கி மேலே சென்றால், மூலவர் ச்ன்னிதானத்தின் முகப்பில் 9 அடி உயரமுள்ள மிகப் பெரிய விநாயகர் திருவுருவம் காணலாம். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ளது போன்று   இங்குள்ள விநாயகரும் இதே திருநாமத்துடன் முக்குறுணி விநாயகர்’ என்றே அழைக்கப்படுகிறார். ஆனால், வலது கையில் மோதகம், இடது கையில் தந்தம் என மாற்றி வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    மூலவர் சன்னிதானத்தைச் சுற்றி மூன்று பிரகாரங்கள் அமைந்துள்ளது இக்கோவிலின் தனிச்சிறப்பு. தமிழகத்திலேயே மூன்று மூலவர்களைக் கொண்ட கோவில் என்றால் அது ஸ்ரீ நெல்லையப்பர் கோவில் மட்டுமே. சுயம்பு மூர்த்தியான, மூலவர் “வேண்ட வளர்ந்தநாதர்’  பிரதான சன்னதியில் “நெல்லையப்பர்’ என்று அழைக்கப்படுகிற பெரிய திருமேனி லிங்கமாக அருள்பாலிக்கிறார்.  மூங்கில் வேணுவனேசுவரர், வெய்முத்தீசர் ஆகிய திருநாமங்களும் வழங்கப்படுகிறது. இந்த சிவலிங்கத்தின் மத்தியில்  அபிஷேகத்தின் போது அம்பிகையின் திருஉருவத்தைக் காணலாம். சிவனுக்குள் சக்தி அடக்கம் என்பதை இக்கோலம் உணர்த்துவதாகக் கொள்ளலாம் அல்லவா. இதனால் பெருமானுக்கு “சக்தி லிங்கம்’ என்ற திருநாமமும் வழங்கப்படுகிறது.

    மூலவர் சன்னதிக்கு முன்புள்ள பாதாளத்தில் திருமூல மகாலிங்கம் சன்னதி உள்ளது. இங்கு மகாவிஷ்ணு பூசித்த லிங்கம் ஒன்று உள்ளது. பாதாள லிங்கத்தில் உள்ள சிவபெருமானே ஆதிமூலவர் என்றழைக்கப்படுகிறார். சாலி வாடீசுவரன், (சாலி என்பது நெல்), விருகி விடுதீசுவரன், ஸ்ரீதான மூர்த்தி ஆகிய திருநாமங்கள் கொண்ட இவரே இக்கோயிலின் முதல் லிங்கம் எனக் கருதப்படுவதால், இவருக்குத் தான் முதல் பூசை நடக்கிறது.  இங்கு பஞ்சமுக தெட்சிணாமூர்த்தி வடிவங்களையும் தரிசிக்கலாம். சண்டிகேசுவரர், மகிசாசுரமர்த்தினி, கால பைரவர் திருவுருவங்களும் காணலாம். சிவபெருமானுக்கு அருகிலேயே வேங்கடவனும் பள்ளி கொண்டிருக்கும் அற்புதக் காட்சியைக் காணலாம்.

    பெரிய அளவிலான இரண்டாவது பிரகாரத்தின் முகப்பிலேயே “இசைத்தூண்கள்” மற்றும் “தாமிர சபை”, அறுபத்து மூவர் சிலைகள், அஷ்ட லட்சுமி, சகசுவரலிங்கம், சனி பகவான் ஆலயமும் காணலாம்.

    மூன்றாவது பிரகாரத்தின் வழியாக அம்மா மண்டபம் உள்ளது. இதிலிருந்து அம்மன் சன்னதி செல்லலாம். ஆஞ்சநேயர், மஞ்சனத்தி அம்மன், ஐயப்பன், சரசுவதி, பிரம்மா ஆகிய மூர்த்தங்களுக்கு தனி சன்னதிகளும் உண்டு. அம்மன் சன்னதியில் மிகப்பெரிய  உள் தெப்பமும் ஆலயத்திற்கு வெளியே சற்று தொலைவில் வெளித்தெப்பம் ஒன்றும் காணப்படுகிறது.

    அம்மை, அப்பன் என இரு சன்னிதானங்களின் கிழக்குப் புறத்திலும் தனித்தனியே இராச கோபுரம் அமைந்துள்ளது. அம்மன் கோவிலுக்குத் தென் புறத்தில் ஒரு வாசலும், வடபுறத்தின் சங்கிலி மண்டபத்தின் மூலையில் ஒரு வாசலும் , வடபுறமும், மேற்புறமும் தனித்தனி வாசல்களும் உள்ளன. 2000 ஆண்டுகள் பழமையான இத்தலம் திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற தலம். 32 தீர்த்தங்கள் கொண்ட இத்தலம் அருணாசல கவிராயரால் வேணுவன் புராணத்திலும் காந்தியம்மை பதிகம், சொக்கநாதப் பிள்ளையாலும் பாடல் பெற்றுள்ளது.

    காந்திமதி அம்மன் ஆலயம்


    இத்தலத்தில் உள்ள அம்மன் காந்திமதி வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். பிரதோச காலங்களில்  இக்கோவிலில் அம்பிகைக்கு பிரதோச வழிபாடு நடப்பது தனிச்சிறப்பு. வழமையாக அனைத்துக் கோவில்களிலும் சிவன் சன்னதி எதிரேயிருக்கும் நந்திக்கு மட்டுமே பூசை நடக்கும். ஆனால், இங்கு அம்மன் சன்னதியிலுள்ள நந்திக்கும் பிரதோச பூசை நடைபெறுகிறது. அப்போது அம்பிகை ரிஷப வாகனத்தில் எழுந்தருளுவது கண்கொள்ளாக் காட்சி.. அம்மன் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.  மகாசிவராத்திரியன்றும் நள்ளிரவில் நெல்லையப்பருக்கு மட்டுமின்றி, அம்பிகைக்கும் நான்கு கால அபிசேகம், மற்றும் பூசைகள் நடைபெறுகிறது

    ”கணவர் நெல்லையப்பருக்கு அன்னம் பரிமாறும் அம்பிகை” என்று போற்றப்படும் காந்திமதி அம்மன்,  உச்சிக் காலத்தில் ஐயனுக்கு அன்னம் பரிமாறி உபசரிப்பதாக ஐதீகம். இதன் அடிப்படையில் அம்மன் சன்னதி அர்ச்சகர்கள் மேளதாளத்துடன் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, பருப்பு, சாம்பார் சாதம், ஊறுகாய் என வகைவகையான நைவேத்யங்களை சிவன் சன்னதிக்குக் கொண்டு சென்று அங்குள்ள அர்ச்சகர்கள் மூலமாக சிவ பெருமானுக்கு படைக்கின்றனர். இந்த பூசை முடிந்தபின், அம்மனுக்கு அதே நைவேத்யம் வைத்து பூசை நடக்கிறது.

    இங்குள்ள துர்க்கை தெற்கு நோக்கியபடி, சிங்கம் மற்றும் மான் வாகனத்துடன் காட்சி அளிக்கிறாள். சிம்மமும், மானும் ஒரு சேர இருப்பதால், எதிரிகளையும் அன்பால் அடக்கும் வல்லமையை அருளுகிறாள். மேலும் பண்டாசுரனை வதம் செய்த அம்மன் சிலையும் இங்கு உள்ளது. துர்கையின் வடிவான இந்த அம்மன் “மஞ்சன வடிவாம்பிகை’ என்று போற்றப்படுகிறாள்.

    உலகிலேயே வேறு எங்குமே இல்லாத  ’மிடறு’ என்ற் இசைத்தூண்கள்:

    இரண்டாம் பிரகாரத்தின் முகப்பில் அமைந்துள்ள மண்டபத்தில், இசைத் தூண்கள் உள்ளன. ஒவ்வொரு சிறிய தூண்களிலிருந்தும்  ” ச, ரி, க, ம, ப, த, நி ” என்ற ஏழு சுரங்களையும் கேட்க முடிவதே இதன் சிறப்பு! ஒவ்வொரு பெரிய தூண்களைச் சுற்றியும் பல சிறிய தூண்கள் கட்டப்பட்டுள்ளது.. இதிலிருந்து ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களைக் கேட்க முடியுமாம். .  பெரிய தூணிலிருந்து கர்நாடக சங்கீதமும்., அதைச் சுற்றியுள்ள சிறிய தூண்களிலிருந்து, மிருதங்கம், வீணை, கடம், சலங்கை, மணி போன்ற இசைக் கருவிகளின் நாதத்தையும் கேட்க முடியுமாம். மெலிதாக விரல்களில் மீட்டினாலே எந்த வலியும் இல்லாமல் சுகமான நாதம் இசைக்கிறது. நல்ல இசை ஞானம் உள்ளவர்களால் இதன் வேறுபாடுகளை நன்கு உணர முடியும். ’மிடறு’ என்று அழைக்கப்படும்  இது போன்ற இசைத் தூண்கள் உலகில் வேறு எங்குமே இல்லையென்கிறார்கள். தொழில்நுட்பங்கள் முன்னேறாத அந்த காலத்திலேயே இது எங்கனம் சாத்தியமானது என்று நினைக்கும் போது ஆச்சரியமே மேலிடுகிறது.இன்றைய நவீன தொழில்நுட்ப முறையைக் கொண்டு (spectral analysis) ஆய்வு செய்த போது இத்தூண்களிலிருந்து வரும் இசைகள் தன்மைகளுக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றையினால் சப்தம் உருவாகிறது என்று தெரிவிக்கின்றது இத்தூண்களில் ஒரு சிறு துவாரமோ அல்லது வேறு ஏதும் தூண்டுகோலோ இல்லாமல் அழகாக இசைப்பதுதான் அதிசயத்தின் உச்சம்.

    இக்கோவிலில் எழுந்தருளியுள்ள திருமாலின் திருமார்பில் லிங்கம் உள்ளது மற்றொரு சிறப்பம்சம். கருவறையின் அருகில் தனி சன்னதியில் திருமால், பள்ளி கொண்ட கோலத்தில், சிவலிங்க பூசை செய்தபடி இருக்கிறார். அருகில் மார்பில் சிவலிங்கத்துடன் காட்சி தரும் உற்சவர் விஷ்ணுவையும் காண முடிகிறது. திருமாலை இத்தகைய கோலத்தில் காண்பது அரிது.

     

    இக்கோவிலின் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது. தினசரி சிறப்பான பூசைகளுடன், ஆண்டுதோறும் ஆனி மாதம். 10 நாட்களுக்கு திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும் இத்திருவிழாவில் தேரோட்டம் நிகழ்வு சிறப்பான ஒன்றாகும். கார்த்திகை மாத உற்சவம், ஆடிப்பூர உற்சவம், புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா என்று மற்ற பிற திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.

     

     

     

    Share
  • காதல் கொடி!

    பாகம்பிரியாள்  
    நம் காதல் மலையைப்போல்,
    மௌனமாகவே இருக்கிறது
    என்றே நீ அங்கலாய்த்தாய்.
    அதற்கு  அருகில் நீ சென்றதுண்டா?

    துள்ளியோடும் மானைப் போல்,
    நினைவுகள் அங்கும் இங்கும்
    ஓடிக் கொண்டேயிருக்கும்
    நீ வரும் வழி பார்த்தே!

    நம் கோபம் போல், சில நினைவுகள்
    இறுகிக்கிடக்கும்  கரும் பாறையாய்.
    சில இடங்களிலோ புதிதான நிறத்தில்,
    பச்சைப்பாசி படர்ந்திருக்கும் மெலிதாய்!

    சொல்லத் தெரியாத சோகம் போல், பெயர்
     தெரியாத பறவைகள் புலம்பிக் கொண்டிருக்கும்.
    இளங் கொடிகள் கட்டுண்டு கிடந்தாலும்,
    அவ்வப்போது புதிய இலைகள் தலை காட்டும்.

    அன்பை  ஏற்கிறேன் என்று நீ சொன்ன  செய்தி
    வந்தவுடனே , சந்தோஷம்  எங்கும் பற்றிக் கொண்டு,
    குல்மொகர் பூக்களைக் கட்டி காதல்,  தன் கொடியை  ஏற்றிவிடும்
    காடெங்கும் கண்ணை பறிக்கும் ஆரஞ்சு நிறத்தில்!    
     
    படத்திற்கு நன்றி

    http://blogs.gonomad.com/traveltalesfromindia/2012/05/gulmohar-flowers.html

    Share