சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

கலாச்சாரமும், மதமும் எவ்வகையில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கிறது? ஒரு ஆழமான கேள்வி மனதில் எழுகிறது.

குறிப்பாக இங்கிலாந்து நாட்டின் கலாச்சாரம் மிகவும் வலுவானது.

என்னடா இவன் ?

நாகரீகத்தின் உச்சியில் ஓடிக்கொண்டிருக்கின்ற இங்கிலாந்து தேசம் கலாச்சாரத்தில் வலுவானது என்கிறானே ! சக்தி லூசுப் பயல் போல பேசுகிறானே ! என்று எண்ணுகிறீர்களா?

உண்மைதான் நாகரீகம் எனும் பெயரில் கலாச்சார மாற்றங்களுக்கு முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் தான் கலாச்சார வலிமையும் இருக்கிறதென்பது எனது அபிப்பிராயம்.

குறிப்பாக அவர்கள் தங்கள் நாட்டு அரச பரம்பரைக்குக் கொடுக்கும் முக்கியத்துவம், கலாச்சார விழுமியங்களை பாதுகாக்கும் பண்பு, பழைய ஏடுகள். கவிஞர்களைப் போற்றும் வகை என்பன இந்நாட்டின் அப்பண்புக்கு உகந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன.

இங்கிலாந்து நாட்டின் நிதியமைச்சர் இன்று தனது இலையுதிர்கால பட்ஜெட் அறிக்கையைச் சமர்ப்பிக்கிறார். அவரது முந்தைய கணிப்புகளின் படி இங்கிலாந்து நிதி நிலைமைகள் 2015ம் ஆண்டுக்குள் சரிசெய்யப்படுவது முடியாத காரியம் என்பது போன்ற சமிக்ஞைகள் தென்படுகின்றன.

சே ! மீண்டும் ஒரே இடர் மிகுந்த செய்திகளா என்று மக்கள் அங்கலாய்க்கும் வேளையிலே எங்கிருந்தோ அவர்கள் காதில் ஒரு நற்செய்தி விழுகிறது.

அடேங்கப்பா ! அது என்ன அப்படிப்பட்ட நற்செய்தி ? உங்கள் ஆர்வம் புரிகிறது.

இங்கிலாந்தின் இளவரசர் “பிரின்ஸ் சார்ல்ஸ் “

என்னடா இவன் 60பதுகளில் அல்லாடுபவரை இளவரசர் என்கிறானே என்று கோபப்படாதீர்கள்.. . . . என்ன செய்வது அதுதான் அவரது அந்தஸ்து அழைத்துத்தானே ஆக வேண்டியிருக்கிறது !

அவர் மன்னர் ஆவாரோ? மாட்டாரோ ? ஆண்டவனுக்குத்தான் . . . . இல்லையில்லை மகாராணியாருக்குத்துத்தான் வெளிச்சம் !

ஆமாம் இளவரசர் சார்ல்ஸ் அவர்களின் மூத்த மைந்தன் இளவரசர் வில்லியம் அவர்களுக்கும் அவரது மனைவி கேட்டி அவர்களுக்கும் ஒரு வாரிசு வரப்போகிறது எனும் மகிழ்வான செய்திதான் அது.

மோசமான பொருளாதாரச் சுழலுக்குள் சிக்கி அழுந்திக்கொண்டிருந்த இங்கிலாந்து மக்கள் “ஒலிம்பிக்” எனும் கட்டையைப் பற்றிக்கொண்டு சிறிது நேரம் கழுத்தளவு தண்ணீரில் தததளித்துக் கொண்டிருந்தார்கள்.

அவ்வொலிம்பிக் கட்டையும் காலவெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டதும் மீண்டும் மூழ்கத் தொடங்கும்போது இதோ அவர்களை நோக்கி மற்றுமொரு கட்டை வீசப்பட்டிருக்கிறது இனி ஒரு வருடம் அக்கட்டையைப் பிடித்துக் கொண்டு தத்தளிக்க வேண்டியதுதான்.

இரண்டே இரண்டு மாதக் கர்ப்பிணியான இளவரசி கேட்டி அவர்கள் கருவுற்ற செய்தியை இவ்வளவு சீக்கிரம் வெளியிட்ட காரணம் யாது என்று பார்க்கையில் கர்ப்பம் அடைந்த பெண்கள் மிகவும் அரிதாக அல்லலுறும் “தொடர் வாந்தி” நிலையினால் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் இந்தச் செய்தியை அவசரமாக ஊடகங்களுக்கு அறிக்கை வடிவில் வெளியிட வேண்டி நேர்ந்தது என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள் (யார் அவர்கள் ? அயல் வீட்டுக்காரரோ ! )

இளவரசியாரின் இக்கர்ப்பந்தரிப்புச் செய்தியறிந்தவுடன் உலக ஊடகங்களின் இந்தியப் பிரதிநிதிகள் தமது உபகரணங்கள் சகிதம் இவ்வைத்திய்ச்சாலையின் முன்னால் படையெடுத்து விட்டார்கள் போங்கள் . . .

என்ன ஒரு சாதாரண கர்ப்பந்தரிப்புச் செய்திக்கு ஏனிந்த ஆர்ப்பாட்டம் ? புரிகிறது உங்கள் யதார்த்தமான கேள்வி . . .

கர்ப்பந்தரித்தவர் என்ன சாதாரணமானவரா ? அன்றிப் பிறக்கப் போகும் குழந்தைதான் சாதாரணமான குழந்தையா?

கர்ப்பந்தரித்தவர் இங்கிலாந்தின் முடுசூட்டும் வரிசையில் இரண்டாவது தகமையுள்ள இளவரசரின் மனைவி, பிறக்கப் போகும் குழந்தையோ அதே வரிசையில் மூன்றாவது இடத்தைப் பெறப் போகிறது .

அதுவுமின்றி பொதுநல்வாய நாடுகளின் தலைமைத்துவ நாடான இங்கிலாந்து தேசத்தின் எதிர்கால ராஜ சரித்திரத்தில் இடம்பெறப்போகும் ஒரு நிகழ்வல்லவா? இது.

சரி இங்கிலாந்து அரசியல் சட்டத்தின் படி ஒரு ராஜாவுக்கோ ராணிக்கோ பிறக்கும் வாரிசுகளில் மூத்த ஆண் வாரிசுக்கே முடிசூட்டும் அந்தஸ்தும் தகமையும் கிடைப்பது எனும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

அதுசரி அப்படியாயின் பிரின்ஸ் வில்லியம் அவர்களின் வாரிசு பெண்குழந்தையாக இருந்து விட்டால் . . . . ஓ அப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா ?

அங்கேதான் இங்கிலாந்து நாட்டின் ஆண்,பெண் சம உரிமைக் கொள்கை ஓங்காரமிடுகிறது. அது என்ன அப்படிப்பட்ட ஓங்காரம் . . . எங்களுக்குக் கேட்கவில்லையே ! அவசரப்படாதீர்கள் அன்பு உள்ளங்களே !

அவசரம், அவசரமாக இங்கிலாந்து நாட்டின் அரசியல் சட்டத்தில் உள்ள இச்சமத்துவமற்ற சட்டம் மாற்றியமைக்கப்படவிருக்கிறது.

ஆமாம் இதற்கான அதிகாரத்தினை இங்கிலாந்து மகாராணியர் தலைவியாக இருக்கும் பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த 16 நாடுகளின் தலைவர்களும் ஏகமனதாக அளித்து விட்டார்கள்.

மேலும் ஒரு சிறிய கருத்துப் பரிமாறலின் பின்னால் இதற்கான முழு அதிகாரமும் இங்கிலாந்து அரசாங்கத்திற்கு அளிக்கப்படும்

இம்மாற்றம் ஏறத்தாழ 300 ஆண்டுகளின் முன்னால் அமைக்கப்பட்ட இங்கிலாந்து சட்டத்தை மாற்றியமைக்கும் அதிகாரத்தை இங்கிலாந்துப் பாராளுமன்றத்திற்கு அளிக்கிறது. இம்மாற்றத்தைக் கொண்டுவரும் முகமாக 1689ம் ஆண்டு நிறுவப்பட்ட “உரிமைகளுக்கான சட்டம்”, 1701ம் ஆண்டு நிறுவப்பட்ட வதிவுரிமைச் சட்டம், 1772ம் ஆண்டு நிறுவப்பட்ட அரச குடும்பத் திருமணச் சட்டம் என்பனவற்றிலும் திருத்தங்கள் கொண்டு வரப்படவிருக்கின்றன.

எமது நாட்டின் பிரதமரின் கூற்றுப்படி இளவரசர் வில்லியத்திற்கு பிறக்கும் குழந்தை பெண்குழந்தையானால் எதிர்காலத்தில் எமது நாட்டின் ராணியாக ஆகும் உரிமை அவருக்கு அதிகாரப்பூர்வமாக அளிக்கப்படுகிறது.

அதுசரி என்ன பிதற்றுகிறாய் ? இங்கிலாந்து நாட்டிற்கு ராணியாக இருப்பது இப்போதும் பெண்தானே ? உங்கள் கேள்வி புரிகிறது.

இப்போதய ராணியாரின் தந்தை கிங் ஜந்தாவது ஜார்ஜ் அவர்களின் குழந்தைகள் இரண்டும் பெண் குழந்தைகள் ஆனதினால் தான் அவர்களுள் மூத்தவரான எலிசபெத் அவர்கள் ராணியாகும் தகுதி பெற்றார்.

அது என்ன ஆண்குழந்தைதான் நாட்டிற்கு ராஜாவாக முடியுமா? ராணியான விக்டோரியா மகாராணி, தற்போதைய எலிசபெத் மகாராணி அவர்கள் இருவரும் சிறந்த வகையில் தமது பதவியை நிர்வகிக்கவில்லையா?

ஏன் இந்த வேறுபாடு ?

நியாயமான கேள்விதான் இவ்வேறுபாட்டின் நியாயமற்ற தன்மையை மனதில் கொண்டுதான் இன்றைய காலத்திற்கு ஏற்ற வகையில் இச்சட்டம் இப்போது மாற்றியமைக்கப்படுகிறது.

ஆணுக்குப் பெண் சளைத்தவளல்ல என்னும் உண்மையை பல முன்னேற்றமான மாற்றங்களை உள்வாங்கிச் செயல்படுத்திவரும் இங்கிலாந்து சட்டமூலம் அங்கீகரிக்கிறது எனும் செய்தி மனதுக்கு இதமாக இருக்கிறது.

தமக்குப் பிறக்கும் முதல் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு உலகில் பல சமுதாயங்களின் மத்தியில் நிலவி வருகிறது. இக்காரணத்தினாலேயே பிறக்கும் பெண்குழந்தைகளை வெறுக்கும் நிலை கூட சிலசமயங்களில் நிகழ்கிறது.

இப்படிப்பட்ட அர்த்தமற்ற அநாகரீக செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனது பல முன்னேற்றமான முயற்சிகளுக்கு இத்தகைய முன்னோடிகளான நிகழ்வுகள் உந்து சக்தியாக விளங்கும் என்பதில் எதுவித ஜயமுமில்லை.

உங்களை நோக்கி நான் இம்மடலின் ஆரம்பத்திலே ஒரு கேள்விக் கணையைத் தொடுத்திருந்தேன். அதாவது மதத்திற்கும், கலாச்சாரத்திற்கும் உள்ள பிணைப்பு என்ன? என்ப்துவே அது.

அந்தக்கேள்வியின் காரணத்தை இப்போது விளக்குகிறேன். நான் போனவாரம் எழுதிய மடலில் இங்கிலாந்து நாட்டினில் பெண்களை “பிஷப்” பதவிக்கு நியமிப்பதை சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று எழுதியிருந்தேன்.

ஆனால் அதே சமுதாயம் இன்று முடிசூட்டிக் கொள்ளும் தகமைக்கு பெண்களும் சம உரிமை பெறவேண்டும் என்பதை சட்டமூலமாக்க முயல்கிறது என்று வரைந்திருக்கிறேன்.

மதம் ஒரு மனிதனுக்கு அணிகலனே அன்றி ஆடையல்ல அது அணியப்படுவதன் காரணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேசமயம் சட்டமூலம் இயற்றப்பட்ட கலாச்சாரச் சம்பிரதாயம் ஆணுக்குப் பெண் சமமற்ற தன்மையைக் கொண்டிருக்குமானால் அதை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் ஏனெனில் இது அனைத்து மக்களாலும் பின்பற்றப்படும் காரணத்தினால் .

மனதைப் பண்படுத்திக் கொள்ள மதத்தைப் புரிந்து கொள்வோம் . . . எமது அடையாளங்களைத் தக்க வைத்துக் கொள்ள கலாச்சாரத்தை வலுப்படுத்திக் கொள்வோம்.

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.