தமிழார்வம் திரிகடுகம்: அபாயம் தவிர்

0

இன்னம்பூரான்

8. அபாயம் தவிர்


வழங்காத் துறை இழிந்து நீர்ப் போக்கும், ஒப்ப
விழைவு இலாப் பெண்டிர் தோள் சேர்வும், உழந்து
விருந்தினனாய் வேற்றூர் புகலும்,-இம் மூன்றும்
அருந் துயரம் காட்டும் நெறி.              
        [5]

8.1. Look before you leap. பெருக்கெடுத்தோடும் நதிகளில் அபாயம் இருக்கலாம். -நீர்ச்சுழல்/ பொதி மணல்/ அதி வேகம்/ முதலை போன்றவை. கவனமில்லாமல், புழக்கத்தில் இல்லாத  ஆற்றின் துறைகளில் இறங்குவது அபாயத்தை ஆசிரியர் நல்லாதனார் எடுத்துரைத்திருக்கிறார். நான் இந்த ‘தமிழார்வம்’ துறையில் இறங்கியது கூட எனக்கு வழங்காத்துறையில் இறங்கிவிட்டேனோ என்ற ஐயம் தலை தூக்க, சற்றே கரையோரம் ஒதுங்கி நின்றேன். ஆன்ரே கைட் (Andre Gide) என்ற ஃபிரென்ச் தத்துவ ஞானி ‘கரையிலே நின்று கொண்டிருந்தால், புது சமுத்திரங்களை காண்பது எவ்வாறு?(“Man cannot discover new oceans unless he has the courage to lose sight of the shore.”) என்று கேட்கிறார். அதுவும் நியாயமாகத்தான் படுகிறது. தவிர, இதையெல்லாம் பத்தாம் பசலி என்று தமிழகத்தில் ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். இறங்கியாச்சு. நல்லாதனாரின் எச்சரிக்கையை கவனத்தில் வைத்துக்கொண்டு பயணம் தொடர்கிறது.

8.2. ‘ஒப்ப விழைவு இலாப் பெண்டிர் தோள் சேர்வும்…’
: ஆணும், பெண்ணும் இணைந்து வாழும் நெறியை இல்லறம் என்று பல இடங்களில் போற்றும் நல்லாதனார், வாழ்வியலின் மென்மை ஒன்றை உணர்த்துகிறார்.  விருத்தியுரையில் ‘ஒப்ப விழைவு இலாப் பெண்டிர்’ வேசையர் என்று கூறப்பட்டிருக்கிறது. அன்பும், காதலும் இல்லாத போது இணைந்து வாழ்வது எளிதல்ல என்று பொருள் கொள்ளலாம். காஞ்சனையின் கனவு என்று ஒரு திரைப்படத்தை பல வருடங்களுக்கு முன்னால் பார்த்த ஞாபகம். அதில் விலைமாது என்று சித்திரிக்கப்பட்டவர் உண்மையில் கதாநாயகனை நேசிக்கிறாள்; தியாகம் செய்கிறாள்; அவரின் குடும்பத்தால் மதிக்கப்படுகிறாள் என்று ஞாபகம். தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ என்ற புதினத்தில் ‘ஆசைக்கிழத்தி’ உறவும் அதன் பின்விளைவும் நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறது.

பரத்தையிடம் சென்று வந்தால் ஊடல் தான் தலை தூக்கும் என்றொரு பக்கமும், பரத்தையிடம் சென்று வந்த சின்னங்களை பட்டியலிட்டுத் தலைவனை கேலி செய்து, அவனுக்கு காதற்பரத்தையாக இருந்த மாதை, தலைவி ‘நீடூழி வாழ்க’ என்று வாழ்த்துவதாக ஒரு பக்கமும் வருணிக்கிறது, நற்றிணை 20: (பின்னத்தூர்.அ.நாராயணசாமி ஐயர் அவர்கள் எழுதிய உரையும் விளக்கமும்).

20 மருதம் – ஓரம்போகியார்


ஐய குறுமகட் கண்டிகும் வைகி 
மகிழ்நன் மார்பில் துஞ்சி அவிழ் இணர்த் 
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல் 
துளங்குஇயல் அசைவர கலிங்கம் துயல்வர 
செறிதொடி தௌ ர்ப்ப வீசி மறுகில் 
பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி 
சென்றனள் வாழிய மடந்தை நுண் பல் 
சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள் 
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழை 
பழம் பிணி வைகிய தோள் இணைக் 
குழைந்த கோதை கொடி முயங்கலளே

ஒரு இலக்கிஅய சுவைக்கு இவற்றையெல்லாம் சொன்னேன். நல்லாதனார் கூறும் வகையில் இல்லறம் போற்றுவது சாலத்தகும்.

8.3. ‘…உழந்து விருந்தினனாய் வேற்றூர் புகலும்…’: வேற்றூர் என்றாலே பொதுவாக, அது ஒரு பிரச்னை தான். முதலில் வழி தெரியாது. மொழி தெரியாது. மாந்தர்களின் மரபு வேறு படலாம். எனினும் சாமி சிதம்பரனார் கூறிய படி எல்லா அறிவுரைகளையும் காலத்துக்கேற்ப கடை பிடித்தால் நலம். ‘When in Rome, do as the Romans do.’ இருந்தாலும், பல பிரச்னைகள் தொக்கி நிற்கலாம். ‘மதியாதார் தலைவாசல் மிதியவேண்டாம்’ என்றார், மயிலேறும் பெருமானை போற்றும் உலகநாதர். அது என்னமோ சரி தான்.
(தொடரும்)
இன்னம்பூரான்
06 12 2012
உசாத்துணை:

திரிகடுகம்: மூலமும், உரையும்: http://noolaham.net/project/35/3423/3423.pdf
தமிழ் இணையக் கல்விக்கழகம்
திரிகடுகம்:மூலமும்,விருத்தியுரையும்: http://www.tamilvu.org/library/libindex.htm

நற்றிணை: http://www.tamilvu.org/library
சித்திரத்துக்கு நன்றி:http://img249.imageshack.us/img249/7429/im0021334mg.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *