பலா மரங்கள்
தமிழ்த்தேனீ
இந்த ஜென்மத்திலே நான் அவளைத் திரும்பிக் கூட பாக்கமாட்டேன். எவ்ளோ திமிர் இருந்தா இப்பிடி ஒரு காரியத்தை செய்வா அவ ? என் தங்கை கல்யாணியும் அவ புருஷன் ரமேஷும் என்னா குறை வெச்சாங்க இந்தப் பொண்ணு ரேணுகாவுக்கு . பாத்துப் பாத்து வளத்தாங்க, கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க, ஒரே பொண்ணு ஒரே பொண்ணுன்னு தலைமேலே வெச்சுக் கூத்தாடினாங்க, செல்லமோ செல்லம் அப்பிடி ஒரு செல்லம்.
இந்தப் பொண்ணு ரேணுகா மேலே எவ்ளோ பாசம் வெச்சிருந்தாங்க ரெண்டு பேரும், நான் அப்பவே சொன்னேன் அளவுக்கு மீறி செல்லம் குடுக்காதீங்க அப்புறம் மதிக்கமாட்டான்னு ,கேட்டாங்களா. இப்போ அவதிப்படறாங்க. இந்தப் பொண்ணு ரேணுகா இப்பிடிச் செஞ்சிடிச்சே.
எவ்ளோ தைரியம் இருந்தா நான் அவனைத்தான் கட்டிக்குவேன் , நீங்க சம்மதிக்கலேன்னாக் கல்யாணமே செஞ்சிக்க மாட்டேன் அப்பிடீன்னு சொல்லுவா . ஆனாலும் இந்தக் காலத்துப் பசங்களுக்கு ரொம்பத் திமிருங்க , நம்மை யாரு என்னா செய்ய முடியும் நாமதான் சம்பாதிக்கிறோமே அப்பிடீங்கற திமிரு . இந்தத் திமிரும் ,தைரியமும் எங்கேருந்து வருதுன்னே தெரியலை.
உங்களுக்குத் தெரியுமா கல்யாண ஏற்பாடெல்லாம் செஞ்சு வெச்சிட்டு அப்பா அம்மாகிட்டே சொல்றாளாம் நாளன்னிக்கு கல்யாணம் நீங்க ரெண்டு பேரும் வந்து நடத்தி வையுங்க. எனக்கு வேற வழி தெரியலேன்னு .
அக்கா நான் என்னா செய்யறதுன்னே தெரியலே. நாளைக்கே எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சுன்னா எனக்கு மானமே போயிடும். பொண்ணை சரியா வளக்கலேன்னு என்னைத்தான் குதறி எடுப்பாங்க உறவுக்காரங்க அத்தனை பேரும். அப்பிடீன்னு அழறா கல்யாணி.
இனிமே அந்தப் பொண்ணு ரேணுகா இந்த வீட்டு வாசப்படியை மிதிக்கக் கூடாது. என்று கத்திக் கொண்டே இருந்தாள் ருக்மணி.
ஆனது ஆயிப் போச்சு . இந்தக் காலத்துப் பசங்க சொன்னா கேக்குமா, அதுவும் வேலைக்கு போற பொண்ணு. நாலு பேருகிட்ட பழகணும் . அப்போ இப்பிடி ஏதாச்சும் ஆகும் , என்னா செய்யறது. என்றார் சொக்கலிங்கம்.
நீங்க சும்மா இருங்க ! வேலைக்கு போனா என்னா நாலு பேருகிட்ட பழகினா என்னா? நம்ம குடும்ப பாரம்பரியம் இன்னா, தகுதி என்னான்னு தெரியாம எது வேணா செய்யலாமா? எனக்கு வர ஆத்திரத்துக்கு அப்பிடியே போயி கன்னத்திலே ரெண்டு அறைவிட்டாத்தான் மனசு அடங்கும் போல இருக்குது.
.என்னாலே ஜீரணிக்கவே முடியலைங்க. நீங்க எப்பிடித்தான் எல்லாத்தையும் கேட்டுட்டு இப்பவும் நிதானமா இருக்கீங்களோ எனக்கு புரியவே இல்லே என்றாள் ருக்மணி.
இதோ பாரு நாம கத்தி ,பதறி என்னா ஆகப் போகுது . எல்லாம் அது இஷ்டத்துக்கு நடக்குதுங்க. சரி நாம கல்யாணத்துக்கு போக வேணாம், நீ கத்தி உடம்பைக் கெடுத்துக்காதே. என்றார் சொக்கலிங்கம்.
நான் எப்பிடிங்க போவேன் கல்யாணத்துக்கு . போகமாட்டேன், நீங்களும் போகக் கூட்து சொல்லிபுட்டேன் . வரவர இந்தக் காலத்துப் பசங்களுக்கு எல்லாமே அவசரம். எதிலேயும் நிதானமில்லே. கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு அலையுதுங்க.
மூணு மாசமா நானும் பாத்துகிட்டுதான் இருக்கேன் . உன் தங்கை கல்யாணி போன் செஞ்சு பேசும்போது என்ன விஷயம்னு நான் கேட்டா ஒண்ணுமில்லேங்க ,இதெல்லா பொம்பளைங்க சமாச்சாரம் அப்பிடீன்னு மழுப்புவே. அப்புறம் மறைவாப் போயி நின்னுகிட்டு கண்ணைத் துடைச்சிக்குவே . கவனிச்சிகிட்டுத்தான் இருக்கேன். சரி நமக்கெதுக்கு வம்புன்னு நானும் தள்ளிப் போயிடுவேன்.
ஆனாலும் என் மனசுக்குள்ளே இது ஏதோ விவகாரம்னு ஒரு பக்ஷி சொல்லிகிட்டே இருந்துது. கல்யாணிகிட்டே நீ பேசும்போதெல்லாம் உன்னையறியாமே நீ கவலைப்படறது எனக்கு புரிஞ்சுது. என்னதான் நீ சிரிப்பா முகத்தை வெச்சிகிட்டாலும் நான் உன்னோட பெட்டர் ஹாஃப் தானே எனக்குத் தெரியாதா. இருந்தாலும் நீயே சமாளிச்சு சரி செஞ்சிடுவேன்னு நம்பி இருந்தேன்.
சரி விடு நாம என்னதான் செஞ்சாலும் ஒவ்வொரு விஷயத்துக்கும் அதுக்குன்னு ஒரு தலையெழுத்து இருக்கு. மாத்த முடியாது. சரி இதெல்லாம் மனசிலேருந்து தூக்கிப் போட்டுட்டு போயி கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடு. காலையிலேருந்து வேலை செஞ்சு களைச்சுப் போயிருக்கே என்றார் சொக்கலிங்கம்.
முடியலைங்க நிம்மதியா தூங்க முடியலே இந்தப் பொண்ணு செஞ்ச காரியம் என்னையும் கல்யாணியையும் தூங்க விடாம செஞ்சிருச்சு என்று பேசிக்கொண்டே இருந்தவள் அயற்சியில் அப்படியே உறங்கிப் போனாள் ருக்மணி. அவளுக்கு போர்த்திவிட்டுவிட்டு வந்து கூடத்தில் உட்கார்ந்தார் சொக்கலிங்கம்.
தொலைக் காட்சியில் சிறப்புச் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்த சொக்கலிங்கம். எழுந்து சமையலறைக்குப் போய் சுடச்சுட காப்பி போட்டு எடுத்துக் கொன்டு வந்து ருக்மணி எழுந்திரு இந்தக் காப்பியைக் குடி என்று அவளிடம் காப்பிக் கோப்பையை நீட்டினார்.
தொலைபேசி அழைத்தது கல்யாணிதான் பேசுவான்னு நெனைக்கிறேன் என்றபடி ரிசீவரை எடுத்து சொல்லு கல்யாணி என்றாள் ருக்மணி. தொலைபேசியில் பேசிவிட்டு சொக்கலிங்கம் அருகே வந்து உட்கார்ந்து யாரு பேசினா தெரியுமா ! என்றாள் ருக்மணி.
அதெல்லாம் இருக்கட்டும் முதல்லே காப்பியைக் குடி ஆறியே போச்சு.நான் வேணா போயி சுடவெச்சிக் கொண்டுவரட்டுமா என்றார். வேணாங்க இப்பிடியே குடிக்கறேன் என்றபடி கடகடவென்று காப்பியைக் குடித்தாள் ருக்மணி
இதைக் கேளுங்க ரேணுகாவே பேசிச்சு ! அவ எல்லா விஷயத்தையும் சொன்னா. கேக்கக் கேக்க அவ சொல்றதிலேயும் நியாயம் இருக்குறா மாதிரிதான் தெரியுது. தப்போ தவறோ ஏதோ தெரியாத்தனமா காதலிச்சிட்டோம். கல்யாணம்தானே செஞ்சிக்கப் போறோம் . இல்லேன்னா என் வாழ்க்கையே கெட்டுப் போகாதா? அப்பிடீங்கறா.
அவ என்ன செய்வா சின்னப் பொண்ணு பாவம். பெரிய மனுஷி மாதிரி பேசறாங்க. பெரியம்மா நீங்களும் பெரியப்பாவும்தான் பெரியவங்களா இருந்து கல்யாணத்தை நடத்தி வைக்கணும் அப்பிடீங்கறா.. நாம வளத்த குழந்தையா இப்பிடி இவ்ளோ விவரமா பேசுதுன்னு ஆச்சரியமா இருக்கு என்றாள் ருக்மணி.
நீ என்ன சொல்றே என்றார் சொக்கலிங்கம்.
இதெல்லாம் பொம்பளைங்க சமாசாரம் , சொன்னாலும் உங்களுக்குப் புரியாது, நீங்க உடனே கிளம்புங்க நாம நல்லி சில்க் கடைக்குப் போயிட்டுஅப்பிடியே ஜீஆர் டீ தங்க மாளிகை கடைக்கும் போகணும். எல்லாத்தையும் நானும் நீங்களும்தான் செய்யணும்னு ரேணுகா சொல்றா. பாவங்க அந்தப் பொண்ணு ,
ஆனது ஆய்ப்போச்சு இப்போ விட்டுக் கொடுத்துட்டோம்னா அந்தப் பொண்ணு போயி வாழப் போற இடத்திலே மரியாதை இருக்காது. அதுனாலே கல்யாணிகிட்டேயும் அவ புருஷன் ரமேஷ் கிட்டேயும் பேசி ஒப்புக்க வெச்சு உறவுக்காரங்க எல்லாரையும் அழைச்சு நல்லபடியாக் கல்யாணத்தை நடத்தி வைக்கணும் சீக்கிரம் கிளம்புங்க நிறைய வேலை இருக்கு என்றாள் ருக்மணி.
சரிம்மா இதோ கிளம்பறேன் என்றார் சொக்கலிங்கம் புன்சிரிப்புடன்.
சுபம்