Blog

  • சேக்கிழார் பாடல் நயம் – 126 (தலைப்பட்டார்)

    சேக்கிழார் பாடல் நயம் – 126 (தலைப்பட்டார்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு

    படைப்  பயிற்சியில்  சிறந்தவன்  அதிசூரன். அவன் ஏனாதி நாதரின்  தாயத்து உறவினன். தம் படைக்கலத்  திறத்தை  மற்றவர்க்கும்பயிற்றினான். அதனால் அவனுக்குத்  தற்பெருமை அதிகரித்தது. தம்மை வியந்து கொண்ட அதிசூரன் அரசர்  ஏனாதி நாதர் மேல் பகைமை கொண்டான். அதனால் அரசனை எதிர்த்துப்  போர் புரிய நினைத்தான். தாயத்து  உரிமையை வலியவரே  பெறவேண்டும் என்று சிலருடன் கூடி ஆலோசித்தான். ஆகவே சிறுநரி  சிங்கத்தை எதிர்ப்பது போல், ஏனாதி நாதர் மேல் போர் தொடுக்க எண்ணிப் போருக்கு அழைத்தான்.

    ஏனாதி நாதரும் போராட ஆயத்தமானார். இருவர் பக்கமும் படை திரண்டது. ஊருக்கு வெளியே பொதுவான இடத்தில் எதிர்த்துப் போர் புரிந்து வென்றோர் அரசுரிமை கொள்ளலாம்  என முடிவுசெய்து, போர்க்களத்தில் திரண்டனர்.

    இருவகைப் படையினரும் கடுமையாக மோதிப் போர் புரிந்தனர். ஈசன் அருளாலும், தம் வலிமையாலும் அதிசூரன் படைகளை  ஏனாதி நாதர் அழித்தார். அப்போது அதிசூரன் படையின் நிலையைச்  சேக்கிழார் கூறுகிறார்.

    பாடல்:

    தலைப்பட்டார்  எல்லாரும்  தனிவீரர் வாளிற்
    கொலைப்பட்டார்; முட்டாதார் கொல்களத்தை விட்டு,
    நிலைப்பட்ட மெய்யுணர்வு நேர்பட்ட போதில்
    அலைப்பட்ட ஆர்வம் முதல்  குற்றம்போல்  ஆயினார்.

    பொருள்

    கூடி எதிர்ந்தவர்கள் எல்லாரும், ஒப்பற்ற வீரராகிய ஏனாதிநாதருடைய வாளினாற் கொல்லப்பட்டொழிந்தனர். இது கண்டு, வந்தெதிர்க்காத படைஞர் படுகளத்தை விட்டு, நிலைத்த மெய்யுணர்வின் முன் அலைந்து ஒழிகின்ற ஆர்வ முதலிய குற்றங்கள் போல ஆயினார்கள்.

    விளக்கம்

    தலைப்படுதல் – கூடுதல் – ஒன்றுதல். இங்குப் போரில் முனைந்து ஒருவரோ டொருவர் பொருந்தக் கிட்டுதல் குறித்தது. அவர்களுள்  அதிசூரன் பக்கத்தார் அரசன் வாளால்  கொல்லப்பட்டார்.

    போர்க்களம்  பலவகைப்படும்;   ஓர் இடத்திற்குப் பெயர் அவ்வப்போது அங்கு நிகழும் நிகழ்ச்சியாற் கூடுவதியல்பு. இங்கு இந்த இடம், முதலில் இந்தவெளி, போர் குறித்து இருபடையும் சேர்ந்தபோது “செருக்களம்”ஆயிற்று. அதன்பின் போர் மூண்டு நிகழும்போது போர்செய்களம் என்றாயிற்று. பின் படைஞரது போர் ஓய்ந்தபின் மேலும் போர் நிகழ நிற்றலின் பறந்தலை  எனப்பட்டது. இங்குத் தனிவீரர் வாளிமுன் எதிர்ந்தார் தம் படைஒன்றும் பயன்படாது கொல்லப்பட்டாராதலின் கொல்களம் எனப்பட்டது காண்க. பின்னர் இவ்வகையிலும் நிகழ்ச்சி உளதாகாமையின் வேறிடம்  அக்களம்,  இடம்  எனப்பட்டது. இவ்வாறு  காலம் மாறிய வகையைச்  சேக்கிழார் பாடுகிறார்.

    முட்டாதார் என்ற சொல்,  மாற்றானது படைவீரர்களுள், அவ்வாறு எதிர் வந்து போரில் முனையாதவர்களைக்  குறித்தது. போர்க்களத்தில் கொல்லப் படாதவர்கள் வேறிடத்திற்குச் சென்று மறைந்தனர். பொதுவாக நமக்கு மெய்யுணர்வு  வெளிப்படும்போது, முன்னிருந்த ஆர்வம் முதலான மறைந்தது போல் ஒளிந்தனர். . செயலற்றுப் போய் அங்கு எதிர் நிற்கலாற்றாது மறைந்து போயினர் என்பது. ஒளிந்து மறைந்தனர் என்னாது “குற்றம்போல் ஆயினார்” என்றிவ்வாறு கூறியது அவர்கள் யாதாயினர் என்றே தெரியா வகை மறைந்தனர் என, வீரச்சுவை நீங்க நகைச் சுவைபடக் கூறியவாறு.

    நிலைப்பட்ட மெய்யுணர்வு – மெய்யுணர்வு – உண்மைப் பொருள் உணரும் உணர்வு. ஞானமென்ப. வீட்டிற்கு நிமித்தமாகிய செம்பொருளைக் காண்பதுவே மெய்யுணர்வாம். அஃதாவது அருட்கண்ணாகிய சிவஞானத்தால் விளங்கிச் சிவம் – உயிர் – பாசம் என்ற பொருளைக் காணும் மெய்யுணர்வாம். அவ்வகை உணர்வின் முன்னர் ஆர்வம் முதலிய குற்றங்கள் முனைந்து நிற்கலாற்றாது காட்டுத்தீ முன்னர்ப் பஞ்சுத்துய் போலவும், ஒளியின்முன் இருள் போலவும் ஒழிந்துபோம், இவைகளைச் “சார்புணர்ந்து சார்புகெட”, “மூன்றன் நாமம்கெட” என்ற திருக்குறட் பாக்களின் கீழ்க் கண்டு கொள்க.

    மெய்யுணர்வின் இயல்பும், ஆர்வம் முதற்குற்றங்களி னியல்பும், மெய்யுணர்வின் முன் குற்றம் நில்லாத இல்பும் ஞான சாத்திரங்களுள்  காண்க.

    நிலைப்பட்ட – “கல் லெறியப் பாசி கலைந்து நன்னீர் காணுதல்போல” அப்போதைக்குக் காணப்பட்டு மறையும் உணர்வாயின், அது பின்னர் அப்பாகத்தால் மறைக்கப்படுமாதலின், அவ்வாறல்லாது குற்றங்கள் அறவே ஒழியுமாறு நிலை நின்ற மெய்யுணர் வென்பாார் நிலைப்பட்ட என்று சிறப்பித்தார்.

    “இடையறாத ஞான யோகங்களின் முன்னர் இக்குற்றங்கள் மூன்றும் காட்டுத் தீ முன்னர் பஞ்சுத்துய் போலுமாதலின்” என்றார் பரிமேலழகர். நிலைப்பட்ட மெய்யுணர்வாவது திருவடி மறவாதிருத்தல். “மறக்குமா றிலாத வென்னை”  என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரமும், “பண்டு திருவடி மறவாப் பான்மையோர்”  என்ற புராணமும் முதலிய திருவாக்குக்களிற் குறித்த நிலை இது. ஆர்வம் முதல் குற்றம் – இவை காமம் – வெகுளி – மயக்கம் என்ற மூன்றென்பர்.

    “காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன்
    நாமங் கெடக்கெடும்  நோய்”

    என்ற குறளின் கீழ் “அநாதியாய அவிச்சையும், அது பற்றி யானென மதிக்கும் அகங்காரமும்; அது பற்றி எனக்கிது வேண்டுமென்னும்  அவாவும், அதுபற்றி அப்பொருட்கண்   செல்லும் ஆசையும், அது பற்றி அதன் மறுதலைக்கண்  செல்லுங் கோபமும் என வடநூலார் குற்றம் ஐந்தென்பர். இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சையின் கண்ணும், அவாவுதல் ஆசைக்கண்ணும் அடங்குதலால் மூன்றென்றார்” என்றெல்லாம்   பரிமேலழகர்  உரைத்தவை காண்க. இவற்றைக் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என ஆறாகவும் வகுப்பர்.

    “கலையமைத்த காமச்செற்றக் குரோத லோப மதவருடை,
    உலையமைத்திங்கு  ஒன்றமாட்டேன்  ஓணகாந்தன் தளியுளீரே”

    என்ற ஆளுடைய நம்பிகள் தேவாரம்  காண்க. இவையெல்லாம்  அடங்க “ஆர்வமுதற் குற்ற” மென்றார். இவை மூலமலத்தின் காரியம். நெல்லிற்கு உமி தவிடும் நீள்செம்பினில்  களிம்பும்போல.

    அலைப்பட்ட என்ற தொடர் ,  இக்குற்றம் உயிரைப்பற்றி நின்ற முன்னை நிலையினின்றும் மெய்யுணர்வு இவற்றை அலைக்க, அதிலேபட்டுப் பெயர்ந்த என்க. மெய்யுணர் வொன்றே நிலைப்படுவதென்றும்,ஏனைய குற்றங்கள் ஒரு காலத்து அலைப்பட்டொழிவன என்றும் குறித்ததும் காண்க.

    இங்கு உவமான உவமேயங்களில் நிலைப்பட்ட மெய்யுணர்வுடையார் ஏனாதி நாதரும், ஆர்வமுதற் குற்றமுடையார் அதிசூரனும் அவன் படை வீரருமாயின பொருத்தமும் அழகும் கண்டு களிக்க.

    கொல்களத்தினும் நிலைப்பட்ட மெய்யுணர்வு மயமாக விளங்கினார் நாயனார் என்பது, பின்னர்த் திருநீற்றின் பொலிவினை மாற்றான் நெற்றியிற் கண்டபோதே அவனது கொள்கைக்கு குறிவழிநின்ற நேர்மையாலும், அதன்மேலும் நிராயுதரைக் கொன்றானெனும் தீமை அவனுக்கு எய்தாமைப் பொருட்டே மலைவார்போற் காட்டி அவன் கருத்து முற்றுமளவும் வாளா படைதாங்கி நின்ற நேர்மையாலும் துணியப்படும்.

    இவையெல்லாம் ஈண்டு விரிப்பிற் பெருகும்; உண்மையுணர்ந்த ஞான தேசிகர்பால்  அறியத்தக்கன.

    வெம்போரில் தமது உயிர் கொடுத்தும் மெய்யுணர்வின்கண் நின்ற நாயனார் திறத்தின் முன் மாற்றார் படை ஒழிந்த திறத்திற்கு உரியவாறு கொலைக்களத்திலும் நிலைப்பட்ட மெய்யுணர்வும் அலைப்பட்ட குற்றமும் உவமித்த ஆசிரியரது நிலைப்பட்ட மெய்யுணர்வு கண்டு வியக்கற்பாலதாம். இங்குப் போரில்  படை மக்கள் சிகரமுந் தோளும் தாளும் துணிக்கப்பட்டுக் கிடக்கும் கொல்களத்தின் இடையிற் பிறழாது மெய்யுணர்வின் நின்றதுபோலவே கண்ணப்ப  நாயனார்  புராணத்தில், திண்ணனார் வேட்டையில் மாக்கள் படும் கொல்களத் தினிடையும்,

    “பலதுறைகளின்   வெருவரலொடு    பயில்வளையற    நுழைமா
    வுலமொடுபடர்    வனதகையுற    வுறுசினமொடு    கவர்நாய்
    நிலவியவிரு   வினைவலையிடை   நிலைசுழல்பவர்   நெறிசேர்
    புலனுறுமன   னிடைதடைசெய்த    பொறிகளினள   வுளவே”

    என்று மெய்யுணர்விற் பிறழா நேர்மையின் உவமித்ததும், இவ்வாறுள்ளன பிறவுங் கண்டுய்வோமாக.

    ஆகவே  இப்பாடலின்மூலம், சித்தாந்தக் கருத்தின் வழியே, வெகுளி  மயக்கம் முதலான  குற்றங்கள்   காமத்தின் வழியே உருவாதலைச் சேக்கிழார்  மிகவும் நுட்பமாக  விளக்குவதை  அறிந்து மகிழ்கிறோம்; உணர்ந்து நெகிழ்கிறோம்! இப்பாடலில் ஏனாதி நாத நா யனார் அருள்  வரலாற்றையும் முற்படக்  கிளந்த  நுணுக்கத்தை உரையாசிரியர் திறம் போற்றுதற்குரியது.

    Share
  • நவி மும்பை நகர்வலம்

    நவி மும்பை நகர்வலம்

    எப்போதும் பரபரப்பாக இயங்கும் நவி மும்பை, ஊரடங்கின்போது எப்படி இருக்கிறது என்று பாருங்கள். இதை நமக்காகப் படமெடுத்து அனுப்பிய சாந்தி மாரியப்பனுக்கு நன்றி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குயிலின் அமுத கானம் – 8

    குயிலின் அமுத கானம் – 8

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு குயிலின் அமுத கானத்தைப் பதிவு செய்யும் வாய்ப்பு அமைந்தது. நம் ஜன்னலோரத்து வேப்ப மரத்தில் அமர்ந்த குயில், குரலெடுத்துப் பாடுவதையும் வேப்பங்கொட்டையைத் துப்புவதையும் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆலயம் அருளாலயம் – தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி

    ஆலயம் அருளாலயம் – தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி

    சித்திரா பவுர்ணமியில் குருவை வணங்குவது மரபு. அந்த வகையில், தபோவனம் சத்குரு ஞானானந்த கிரி சுவாமிகளைப் பற்றி, ஜி.எஸ்.மணி இயற்றிய ‘ஆலயம் அருளாலயம்’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். குருவருள் பெறுங்கள்.

    ராகம் – திலங்
    தாளம் – ஆதி

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மலையாளக் கரையோரம் – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 13

    மலையாளக் கரையோரம் – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 13

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    திருச்சூர் பூரம் திருவிழா அனுபவங்களில் தொடங்கி, ஒட்டுமொத்தக் கேரள அனுபவங்களையும் சுவையாக விவரிக்கிறார், ஓவியர் ஸ்யாம். இதில் யானை பவனி, வெடிகட்டு, தொலைக்காட்சியில் பூரம் திருவிழாவைப் பார்த்தபடி நடனமாடும் மலையாளி எனப் பலவற்றின் காணொலிக் காட்சிகளையும் இடையிடையே நீங்கள் கண்டு களிக்கலாம். சுவையான இந்த உரையாடலைப் பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பேராளுமை மிக்க அந்தணப் பெரியார் வைத்தீஸ்வரக் குருக்கள்

    பேராளுமை மிக்க அந்தணப் பெரியார் வைத்தீஸ்வரக் குருக்கள்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஸ்திரேலியா

    அந்தணக் குலத்தில் ஆளுமைகள் பலர் இருந்து அரும்பணிகள் ஆற்றி இருக்கிறார்கள். அவர்கள் ஆலயங்களில் கிரியைகளை ஆற்றும் நிலையிலும் அரச பணிகளை ஆற்றும் பதவிகளிலும் இருந்திருக்கிறார்கள்.எங்கு அவர்கள் இருந்தாலும் தங்களின் அகவொழுக்கம்புறவொழுக்கங்களை எந்த நிலையிலும் கைவிடாதவர்களாகவே வாழ்வில் விளங்கியிருக்கிறார்கள் என்பது மனங்கொள்ளத் தக்கதாகும். அப்படி அவர்கள் வாழ்ந்த காரணத்தால் சமூகத்தில் அவர்கள் பெரிதும் மதிக்கப்படுகின்ற நிலையிலே இருந்தார்கள், இன்னும் இருக்கிறார்கள் எனலாம்.

    வேதம் ஒதுவது வேதியர்க்கு அழகு. விக்கிரகங்களைத் தொட்டு ஆராதித்து அவனைப் பக்தி சிரத்தையுடன் பூசிக்கும் நிலையில் தம்மை ஆட்படுத்திக் கொண்டிருப்பதும் அந்தணரின் அழகெனலாம். கிரியைகளை ஆற்றி ஆலய கும்பாபிஷேகங்களை முறைப்படி செய்து மக்களும் நாடும் வளமுடன் இருக்கும் வழியிலே பயணிப்பதும்கூட அந்தணர்க்கு அழகு எனலாம்.

    கிராமத்தின் நன்மதிப்பைப் பெற்று அங்கு வாழும் மக்களுக்கு நாளும் பொழுதும் நல்ல குருவாய்நல்ல வழிகாட்டியாய்நல்ல ஆலோசகராய்விளங்கிய அழகும் –  விளங்கும் அழகும் அந்தணப் பெரியோருக்கு வாய்த்திருக்கிறது எனலாம். இப்படிப் பார்க்கின்ற வேளை, ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாண மண்ணுக்கு, அந்தணப் பெரியார்கள் பெருந்துணையாகவே விளங்கி இருக்கிறார்கள் என்பதை மனமிருத்தல் அவசியமாகும்.

    வித்துவான் கணேசையர்வித்தியாதிபதி சதாசிவ ஐயர்காசிவாசி செந்திநாத ஐயர் வித்தியாதிபதி லக்ஷ்மண ஐயர்பேராசிரியர் கா.கைலாசநாதக் குருக்கள்பண்டிதர் பஞ்சாட்சரசர்மா இந்த வரிசையில் வந்து நிற்பவர்தான் காரைநகர் ஈந்த பேராளுமை வைத்தீஸ்வரக் குருக்கள் ஆவர். ஆலயத்திலும் நிற்பார். ஆன்றோர் அவையிலும் நிற்பார். வேதமும் ஓதுவார். வித்துவான்கள் மத்தியில்  தொல்காப்பியமும் செப்புவார். இறைவனைப் பற்றி அருட்பாடல் களையும் பாடுவார். இலக்கியக் கூட்டங்களில் இலக்கியப் பாடல்களையும் எடுத்து நயமுரைப்பார். ஆனாலும் அந்தண ஆசாரத்தை அகமிருத்தியே அனைத்தையும் ஆற்றுவார்.

    இப்பேராளுமை 1916ஆம் ஆண்டு கணபதீஸ்வரக் குருக்கள் சிவயோக சுந்தராம்பாள் தம்பதிகளுக்கு நற்புத்திரனாய் நானிலத்தில் இறையருளால் பிறந்தார்கள். ஆண்டவனையே அனுதினமும் நினைக்கும் ஆசாரசீலரான கணபதீஸ்வரக் குருக்களின் உதிரத்தில் உதித்த காரணத்தால் அவரின் புத்திரராய் பிறந்த வைத்தீஸ்வரக் குருக்களும் ஆண்டவன் அருளினைப் பெற்றே இம்மண்ணில் நல்லவண்ணம் வந்தார் மலர்ந்தார் எனலாம். தந்தையைக் குருவாய் கொண்டு தனது கல்வியை ஆரம்பித்தார். தந்தையின் வழி காட்டலில் நல்ல ஆசான்கள் இவருக்கு வந்தமைந்தார்கள். பண்டிதர் பஞ்சாட்சரசர்மாபண்டிதர் சுப்பிரமணிய தேசிகர்மகாவித்துவான் கணேசையர் இவருக்கு நல்ல வெளிச்சத்தைக் காட்டினார்கள். சமயத்தைக் கற்றார். அன்னைத் தமிழையும் ஐயந்திரிபறக் கற்றார்.சமஸ்கிருதத்தையும் கற்றுத் தேர்ந்தார். ஆங்கிலமும் அறிவார். ஆனாலும் அவரின் கற்றல் தாகம் அடங்கிவிடவே இல்லை.

    வைத்தீஸ்வரக் குருக்கள், பேராளுமையாய் மிளிர்வதற்கான பாதையில் பயணிக்கத் தொடங்கினார். நல்ல ஆசான்களிடம் கற்றதோடு அமையாது மேலும் கற்றலின் வழியில் பண்டிதராய்,  பயிற்றப்பட்ட ஆசிரியராய், நற்றமிழ் நாயகராய் உயரும் நிலைக்கு வந்து நின்றார் எனலாம்.

    கற்றுத் தேர்ந்த குருக்கள் அவர்கள் கற்றதைக் கொடுக்க வேண்டும் என்னும் ஆவலினால் ஆசிரியப் பணியினை அணைத்துக்கொண்டார். கொழும்பு விவேகானந்த வித்தியாலயத்தில் தொடங்கிய  ஆசிரியப் பணி நாட்டின் பல இடங்களில் பயணித்து நிறைவில் தலைமை ஆசிரியர் நிலையில் இருந்து ஓய்வுபெற்றார்.

    கொழும்பில் பணியாற்றும் வேளை கற்பித்தலோடு அமையாது ஏனைய நிலையிலும் தன்னுடைய ஆற்றலைப் பகிர்ந்துகொண்டார். விவேகானந்த சபையில் நடத்தப்படும் சைவ சமயப் பாடக் குழுதினகரன் பத்திரிகை செய்திப் பிரிவு ஆகிய இவற்றில் தனது பங்களிப்பினை வழங்கினார். அத்துடன் சிறைச்சாலைக்குச் சென்று அறப்போதனையும் ஆற்றினார்.

    ஓய்வு பெற்றபின்னர் மேடையில் பேசுவார், எழுதுவார். அத்துறைக்கு வருகின்றவர்களுக்கும் ஊக்கம் ஊட்டுகின்றவராகவும் இருப்பார். சைவத்தையும் தமிழையும் நாவலர் பெருமான் தனது இரு கண்களாகவே கொண்டாரென்று பலரும் விதந்து போற்றுவார்கள். அந்த நிலையில் எங்கள் குருக்கள் அவர்களும் விளங்கினார் என்றால் அதனை எவரும் மறுத்துரைக்கவே மாட்டார்கள். அந்த அளவுக்கு அவரின் பணிகள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன என்பது வெள்ளிடை மலையாகும்.

    யாழ்ப்பாண ஆன்மீகப் பேரொளி யோகர் சுவாமிகளின் நல்லாசியுடன் 1940ஆம் ஆண்டில் குருக்கள் அவர்களால் “காரைநகர் மணிவாசக சபை” ஆரம்பிக்கப்பட்டது. இச்சபையின் பிறப்பால் இளைய சமுதாயத்திடம் சைவத்தைப் பற்றிய சிறப்பான புரிதல் உருவாகியது என்பது முக்கியம் எனலாம். காரை நகருக்கு மட்டுமல்லாது யாழ்மண்ணுக்கே இந்த அமைப்பு நல்லதோர் சமய வழிகாட்டுதலை வழங்கியது எனலாம். இந்தச் சபையினை அமைத்ததோடு நின்றுவிடாமல் இந்தியாவில் இருக்கின்ற சைவ ஆதீனங்களையும் இணைக்கும் பாலமாகவும் குருக்கள் விளங்கினார் என்பது மிகவும் முக்கியம்.

    ஈழத்துச் சிதம்பரம் என பக்தி சிரத்தையுடன் போற்றி நிற்கும் காரைநகர் சிவன் சன்னிதானத்தில் அமைந்துள்ள மணிவாசகர் சபையினூடாக 1955ஆம் ஆண்டு தொடக்கம் திருவெம்பாவைக் காலத்தில் “மணிவாசகர்” விழா நடைபெறத் தொடங்கியது. தொடர்ந்து ஆண்டுதோறும் இவ்விழாவினை நடத்துவதில் குருக்கள் அவர்களின் பணி மிகவும் போற்றப்பட வேண்டியதென்றே கொள்ளல் வேண்டும். இந்த விழாக்களில் தமிழகத்து அறிஞர் பெருமக்கள் கலந்து சிறப்பிப்பதும் ஈழத் திருநாட்டின் அறிஞர் பெருமக்கள் அவர்களோடு இணைந்து நிற்பதும் குருக்கள் அவர்களின் சிந்தனையால்.  செயற்றிறனால் விளைந்த நல்ல பலனல்லவா! சங்கமிக்கும் அறிஞர்களால் பல அரிய பெரிய விஷயங்கள் எல்லாம் யாவருக்கும் கிடைக்கும் பெருவாய்ப்பும் வாய்த்திருந்தது. ” காரைநகர் மணிவாசகர் சபை” சைவமும் தமிழும் நல்கும் பொக்கிஷமாய் மிளிர்ந்தது. அந்தப் பொக்கிஷத்தை ஆக்கி அளித்த பேராளுமையாக எங்கள் குருக்கள் திகழ்கிறார்.

    “‘காரை நகரில் சைவ சமய வளர்ச்சி” என்னும் குருக்கள் அவர்களின் நூல்  பல்கலைக்கழத்தில் வைக்கப்படவேண்டிய பெறுமதியான நூலென்றே சொல்லலாம். பெறுமதியான நூலை ஆக்கிய வைத்தீஸ்வரக் குருக்களென்னும் பேராளுமை – பதிப்புத் துறையிலும் தன்னுடைய கவனத்தைச் செலுத்தினார் என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும். கந்தர் மடத்தைச் சேர்ந்த சுவாமிநாதப் பண்டிதரால் ஆக்கப்பட்ட “திருமுறைப் பெருமை ” பிரம்மஶ்ரீ கார்த்திகேயப் புலவரின் “திண்ணைபுர அந்தாதி” திருப்போசை வெண்பா” , “”தன்னை அந்தாதி” திக்கை அந்தாதி” வித்துவான் எவ்.எக்ஸ்.சி. நடராசா அவர்களின் “நன்நூல் காண்டிகை உரையும் நாவலர் பெருமானும்”, “தெரி நிலை வினயெச்சம்”, “வினைத் தொகை” ஆகியவற்றைப் பதிப்பித்ததோடு அமையாது; ஏழாலைப் பண்டிதர் கந்தையா அவர்களின் ” நாவலர் பிள்ளைத்தமிழ்”, “ஷேத்திரத் திருவெண்பா”மற்றும் திருவாளர் சபாபதியால் எழுதப்பட்ட” அருள் நெறித் திரட்டு ” ஆகிய நூல்களையும் பதிப்பித்தார் என்பது குருக்கள் அவர்களின் பதிப்புத்துறைப் பக்கம் எனலாம். அவரின் பதிப்புத்துறைக்கு முத்திரை பதிக்கும் வகையில் அமைந்த நூல்தான் – தங்கத்தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் மகனார் புலவர்மணி சோஇளமுருகனார் ஆக்கிய “திருத்திண்ண புரச் சுந்தரேசர் புராணம் என்னும்  ஈழத்துச் சிதம்பர புராணம்” ஆகும்.

    திருவாதிரைக் கால நிகழ்வுகளை மலராக்கி ஐந்து மலர்களாய் குருக்கள் அவர்கள் வெளியிட்டிருக்கிறார். அது மட்டுமன்றி ” காரைநகர் சைவ மகாசபைப் பொன்விழா மலர்”காரைநகர் மணிவாசகர் சபைப் பொன்விழா மலர் “, “காரைநகர் வியாவில் ஐயனார் கோவில் கும்பாவிஷேக மலர்” என்று வெளிவந்த மலர்கள் அனைத்துக்கும் எங்கள் பேராளுமை குருக்கள் அவர்களே ஆசிரியராய் இருந்து நெறிப்படுத்தி இம்மலர்களை மணம் கமழ வைத்தார் என்பது மனக்கொள்ளத் தக்கதாகும்.

    திருவாசகத்தை தந்தை தாயார் வழியில் பெற்றுக் கொண்ட குருக்கள் அவர்கள் தானும் அதனுட் புகுந்து மணிவாசகரின் உருகும் வாசகத்தை அகமிருத்தியதன் விளைவே மணிவாசகர் சபை ஆகியது எனலாம்.சைவத்தின் உயர் தத்துவங்கள் பொதிந்திருக்கும் திருவாச கத்தைக் கையில் எடுத்த பாங்குடன் நின்று விடாது – சைவத்துக்குத் தமிழும் இன்றியமையாதது என்பதை மனமிருத்தி 1960 ஆம் ஆண்டில் ” தமிழ் வளர்ச்சிக் கழகத்தை ” ஆரம்பித்தார். இதன் வாயிலாகப் பல தமிழ்ப்பணிகளுக்கு வழி சமைத்தார் எனலாம். காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் வாயிலாக இருபத்து ஆறு நூல்களை வெளியிட்டார். மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் இக்கழகம் பெரிதும் துணையாக விளங்கியது என்பதை மறுத்துவிட முடியாது. இக்கழகத்தின் செயற்பாடு 1970 தொடக்கம் 1980 காலப் பகுதியில் பெரு வெளிச்சமாய் அமைந்தது எனலாம்.

    பேராளுமை வைத்தீஸ்வரக் குருக்கள் சைவத்தையும் தமிழையும் அகமிருத்தி தன்னாலான பணிகளை மேற்கொண்டார் என்பதை பலரும் காய்தல் உவத்தலின்றி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்குச் சான்றாக அவரை வந்து சேர்ந்த விருதுகளும் பட்டங்களும் குவிந்து கிடக்கின்றன எனலாம்.

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமே அவரை வியந்து அவருக்குத் “தத்துவக் கலாநிதி” என்னும் பட்டத்தை 2020ஆம் ஆண்டில் வழங்கி பெருமைப்படுத்தியிருக்கிறது.

    இலங்கைக் கம்பன் கழகம் “மூதறிஞர்” என்னும் பட்டத்தை வழங்கி குருக்கள் அவர்களைக் கெளவித்தமையும் மனங்கொள்ளத்தக்கதாகும். குருக்கள் அவர்களைக் கெளரவிப்பதன் மூலமாக கெளரவித்த அமைப்புகளே பெருமையுற்றன எனலாம். அந்த வகையில் – வடக்குக்கிழக்கு புனர்வாழ்வு அமைச்சு “கலைஞான கேசரி” என்னும் பட்டத்தையும்சர்வதேச இந்துமத குருமார் ஒன்றியம் “சிவாகம கிரியா பூஷணம்” என்னும் பட்டத்தினையும் வழங்கிப் பெருமைப்பட்டன எனலாம்.

    நூல்கள்மீது தீராத காதல் கொண்டிருந்தார் குருக்கள். அதனால் அவரின் இருப்பிடமே பெரியதொரு நூல்நிலையமாய் திகழ்ந்தது என்பதைப் பலரும் அறிவார்கள். மலர்கள்பத்திரிகைகள்பல்வேறு வகையான நூல்கள் குருக்கள் அவர்களைச் சூழ்ந்தே இருந்தன எனலாம். தனது சேமிப்பில் இருந்த ஐயாயிரத்துக்கு மேற்பட்ட நூல்களை – அவரின் தந்தையாரும் ஈழத்துச் சிதம்பர நூலின் ஆசிரியருமான சிவஶ்ரீ கணபதீஸ்வரக் குருக்கள் பெயரில் அமைக்கப்பட்ட ” கணபதீஸ்வரக் குருக்கள் நூல் நிலையத்துக்கு ” வழங்கி யாவரும் என்றுமே பயனுறச் செய்தார்.

    தள்ளாத வயதானாலும் தமிழையும் சைவத்தையும் மனங்கொண்டவராகவே குருக்கள் அவர்கள் திகழ்ந்தார்கள் என்பதற்கு அவரின் தொண்ணூற்று ஏழாவது வயதில் “சைவக் களஞ்சியம்” என்னும் அரிய நூலின் தொகுப்பு ஆசிரியராய் இருந்து 2013 ஆம் ஆண்டில் வெளியீடு செய்தமை பெருஞ் சான்றாகும்.

    எழுதிபேசிபதிப்பித்துசமூகத்தில் முன்னின்ற குருக்கள் அவர்கள் அறவழியினையும் உபதேசிக்கும் ஆசானாயும் விளங்கி இருக்கிறார்கள். முப்பத்து இரண்டு விதமான அறங்களைத் தேர்ந்தெடுத்து தன்னுடைய நாட்குறிப்பில் எழுதிவைத்திருந்தார் என்று அறிய முடிகிறது. திருமணம் செய்ய இயலாத நிலையில் இருக்கும் ஏழைப் பெண்களுக்கு உதவுதல் வேண்டும் என்பார். இறந்தவர் உடலைத் தகனம் செய்ய இயலா நிலையில் இருப்பார்க்கு உதவ வேண்டும் என்று எடுத்துரைப்பார். ஆதரவற்றோரை அரவணைத்தல்அவருக்கு இருப்பிட வசதியினை ஏற்படுத்திக் கொடுத்தல்கற்கும் மாணவர்களுக்கு உணவளித்தல்என்று பலவகை அறங்கள் செய்வது பெரும் புண்ணியம் என்றும் அவற்றைச் செய்தல் வேண்டும் என்பதும் குருக்கள் அவர்களின் விரிந்த பரந்த சிந்தனையாய் இருந்திருக்கிறது என்றும் அவரின் வரலாற்றால் அறிந்திட முடிகிறது.

    ஈழத்து மண்ணில் அதுவும் வட புலத்தில் காரைநகர் என்னும் புனித ஊரில் இப்படி ஒரு பேராளுமை, அந்தணப் பெரியோர் – சிவத்தமிழ் வித்தகராக, பண்டிதமணியாக, கலாநிதியாக, விளங்கி இருக்கிறார் என்பது சைவத்துக்கும் தமிழ்மொழிக்கும் கிடைத்த பெருமை என்று சொல்லுவது பொருத்தமாய் இருக்கிறதல்லவா!

    அந்தணர்க்குண் மனையனையான் அருங்கலைகள்
    மிகப் பயின்றான் அருமை ஆசான்
    சந்தததும் சிவனன்பு தழைக்கின்ற
    உள்ளத்தான் தகைசால் நண்பன்
    கந்தமலி பூம்பொழில் சூழ் திண்ணாபுரங்
    கவினோங்குங் கருத்து மிக்கான்
    வந்தவருக்கு அமுதளிப்பான வண்பெயர்கொள்
    வைத்தீஸ்வரக் குருக்கள்

    Share
  • புதிய பிள்ளைப்பருவங்கள் – 5

    புதிய பிள்ளைப்பருவங்கள் – 5

    மீனாட்சி பாலகணேஷ்

    ஆடல் பாடல் பயிலல்
    (புதிய பிள்ளைப்பருவங்கள்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    ஆடலும், பாடலும் பெண்ணினத்துடன் பிறந்தது. அழகுக்கலைகளில் பெண்குழந்தைகளுக்குள்ள ஆர்வத்தைக் கண்டு வருகிறோம். தன்னை மட்டும் அழகு படுத்திக் கொள்வதோடன்றி, நுண்கலைகள் எனப்படும் நடனம், இசை ஆகியனவற்றையும் வாய்ப்புக் கிடைத்தபோது ஆர்வமுடன் பயில்வர் பெண்குழந்தைகள். பெற்றோர்களும், அவருள்ளும் தாய்மார்கள், தத்தம் பெண்குழந்தைகள் இசை, நடனம் இவை கற்க வேண்டுமென்பதில் பெரும் ஆர்வம் காட்டுவர்.

    பெண்குழந்தைகளின் இசை, நடனம் இவை தொடர்பான சில சுவையான செய்திகளைக் காண்போமா?

    பண்டைக்காலத்தில், அரசகுடும்பத்துப் பெண்களும் ஆண்களும் அறுபத்து நான்கு நுண்கலைகளையும் கற்றுத் தேர்ந்திடுதல் மரபாகும். வீணை வாசிப்பதில் சிறந்த உதயணன்போல், ஆட்டத்தில் சிறந்து விளங்கிய ஆட்டனத்தி எனும் சேரமன்னன்போல் சிலர் இவற்றில் மிகச் சிறந்தும் விளங்குவர். பெண்மக்கள் வீணை, யாழ் என பலப்பல இசைக்கருவிகளையும் இசைப்பதில் வல்லவர்களாக இருப்பர்.

    வளர்ந்த பெண்மக்கள், ஆடவர் (இளைஞர்கள்) ஆகியோர் பற்றிய பல செய்திகளை இலக்கியங்களில் காண்கிறோம். உதயணன்- வாசவதத்தை, ஆட்டனத்தி- ஆதிமந்தி, ஆகியோர் இவர்களுள் சிலர். சிறுபிள்ளைகள் பற்றிய செய்திகளைக் கண்டறியோம்.

    ஆதிசங்கரர் இயற்றிய சௌந்தர்யலஹரி எனும் அம்பிகை மீதான ஸ்லோகத்தொகுப்பில் உள்ளதொரு பாடல் அம்பிகை எவ்வாறு ஈசனுக்கு இணையாக உலகம் வாழ நடனமாடுகிறாள் எனக் கூறுகிறது. இதனைக் குற்றாலம் வள்ளிநாயகம் என்பவர் தமிழில் அழகுற மொழிபெயர்த்துள்ளார்.

    அம்பிகையும் சிவபிரானும் இந்தப் பிரபஞ்சத்திற்குத் தாயும் தந்தையும் ஆகியவர்கள். சிவபிரான் ‘தாண்டவம்’ எனும் ஆண்களுக்கான நடனத்தையும், அம்பிகை ‘லாஸ்யம்’ எனும் பெண்களுக்கான நடனத்தையும் ஒருவரையொருவர் பார்த்தபடி ஆடுவதனால் இந்த உலகம் படைத்துக் காக்கப்படுகின்றது. இவர்களின் இடையறாத நடனம் நின்றுவிட்டால் உலகம் அழிந்துவிடும். ஆகவே தம் குழந்தைகளாகிய நம்மீது கருணைகொண்டு நாம் இனிதுவாழ அன்னையும் அத்தனும் இடையறாது நடனமாடுகின்றனர் என்பது இதன் உட்பொருள்.

                ஆதார மூலத்தின் சக்கரத்தே ‘சமயா’
                       ஆடுகின்ற நவரசத்தி னோடு
             பாதார விந்தத்தின் பைரவத் தாண்டவம்
                       பார்த்துநான் கைகூப்பி னேன்
             சேதார ஊழிக்குப் பின்னாலே உருவாகும்
                       ஜெகத்தில்வாழ் உயிர்களுக்குங் கூட
             நீதானே யம்மை! சிவன்தானே தந்தை!
                       நின்னருளே அவ்வுலகும் ஆளும்!1

                                          (குற்றாலம் வள்ளிநாயகம்)

                                       *****
    ஒருமுறை சிவபிரான் அம்மையுடன் (காளி) நடனம் ஆடியபோது தனது தோல்விக்கு அஞ்சி, தனது காதுக் குண்டலத்தை வேண்டுமென்றே நழுவ விடுகிறார். பின்பு நடனமாடியவாறே கால்விரலால் அதை எடுத்துச் செவியில் திரும்ப அணிந்து கொள்கிறார். இவ்வாறுசெய்ய காலைச் செவியின் உயரத்திற்கு உயர்த்த வேண்டியதாயிற்று. அம்மையால் அவ்வாறு செய்ய முடியாமையால் (பெண்கள் நடனமாடும்போது அடக்கம் கருதி காலை அவ்வண்ணம் உயர்த்த மாட்டார்கள்!) அன்னை நாணித் தலைகுனிந்து தனது தோல்வியை ஒப்புக்கொள்கிறாள். இதைக் குறிப்பிட்டு பாபநாசம் சிவன் அவர்கள் ஒரு அழகான பாடல் புனைந்துள்ளார்.

                            பல்லவி

             ஆடும் தெய்வம் நீ அருள்வாய்
             இடது பாதம் தூக்கி  (ஆடும்)

                       அனுபல்லவி

                நாடும் அடியர் பிறவித் துயரற
             வீடும் தரும் கருணைநிதியே நடம் (ஆடும்)

                       சரணம்

             சுபம்சேர் காளியுடனாடி படு தோல்விக்கஞ்சி திருச்செவியிலணிந்த மணித்
             தோடு விழுந்ததாக மாயம் காட்டியும் தொழுபதம் உயரத்தூக்கியும் விரி
             பிரபஞ்சம் முழுதும் ஆட்டும் நின் திருப்பதம் தஞ்சமென உனை அடைந்தேன்
             பரிந்தென் திண்டாட்டம் கண்டு பரிசு தரும் துரையே
                                                                      சபைநடுவில் தத்திமியென்று2

                                                                                                  (ஆடும்)

    அடியார்களின் கற்பனை எவ்வாறெல்லாம் சிறகுவிரிக்கிறது என்பதற்கு இதுவுமொரு அழகிய எடுத்துக்காட்டு.

    உளுந்தூர்பேட்டை திரு. சண்முகம் அவர்களால் இயற்றப்பட்டு, இசைப்பேரறிஞர் திரு. சீர்காழி கோவிந்தராஜன் அவர்களால் மிகவும் பிரபலமாகியதொரு பாடல்தான் ‘சின்னஞ்சிறு பெண்போலே’ எனும் பாடல்.

                            பல்லவி

             சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடையுடுத்தி
             சிவகங்கைக் குளத்தருகே ஸ்ரீதுர்கை சிரித்திருப்பாள் (சின்னஞ்சிறு)

                       அனுபல்லவி

             பெண்ணவளின் கண்ணழகைப் பேசிமுடியாது
             பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது (சின்னஞ்சிறு)

                      சரணம்

             மின்னலைப்போல் மேனி அன்னை சிவகாமி
             இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்
             பின்னல் ஜடைபோட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்

    பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள்3  எனச் சிவகாமி அன்னையை ஒரு சின்னஞ்சிறுமியாக, ஆடலரசனான நடராசனுக்கு இணையாக நடனம் ஆடுபவளாக அவர் சித்தரித்துள்ளது என் கற்பனையைத் தூண்டியது எனில் மிகையேயில்லை!

    இத்தகைய தெய்வீக நடனம் கற்கும் சிறுபெண்ணான உமையம்மையைப் பற்றி நாம் ஓரிரு ‘பிள்ளைத்தமிழ்’ பாடல்களாவது பாடிப்பரவ வேண்டாமோ? என் எளிய காணிக்கை இதோ!

    நாதாந்த வெளியினில் சிவபிரானுடன் இடையறாது நடனம் ஆடுபவள் எம்மன்னையான சிவகாமி! வேதாந்த வெளி, விரியும் கற்பனைகள், பிரானின் திருவுள்ளம், வேதங்களின் உட்பொருள் இவற்றுள் எல்லாம் கலந்து ஆடுபவள் அவள்! அவளுடைய இந்த ஆனந்த நடனத்தை உள்ளத்தில் எண்ணும்போது புரியாத தத்துவங்கள் புரியும். அடியார் இன்பவெள்ளத்தில் மூழ்குவர். ஆகவே உனது திருவடிகளை சிறிய சீரடிகளைப் பதித்துப் பேரண்ட வெளியினில் ஆனந்தமாக நடனமாடி அருளுகவே! சிறுமியான அன்னையை உலகையாளும் பேரரசியாகக் கண்டமையால் அவ்வழியமைந்த பாடலிதுவாகும்.

                நாதாந்த வெளியினில் நாதனாம் சிவனுடன்
                       ஆனந்த நடமிடும் ஆதிசக்தியே!
                 நன்மைதீ மைகளுக் கென்றும் சாட்சியாய்
                       நடுவா யிருக்கும் நாரணியே!
             வேதாந்த வெளிக்குள் வேரானகற் பனைக்குள்
                       வெட்டவெளி தன்னில் நட்டமிடுபவளே!
                 வெண்ணீற ணியய்யன் தன்னுள்ள வெளியினில்
                       வேதங்கள் ஒலிக்கநா தங்கள்கிளர்க்க
             போதாந்த வெளியினில் புரியாத பொருள்சிறக்க
                       பொங்கிடும் களியினில் சிந்தைகளிகூர
                 போற்றிடு மடியவர்பெ ருகுமின் பவெள்ள                
                       வூற்றினில் மூழ்கியே உள்ளங்குவிந்திட
             ஆதாரந்தந் திடுமுனற் புதப்பொற் சீரடிபதித்து
                       ஆனந்தமாக வேபேரண்ட வெளியினில்
                  ஆடிடுக வம்மையே நடமாடி யருள்கவே!        
                       ஆடலரச னுடனாடி யருள்கவே!4

    சிறுமி சிவகாமி நடனமாடிக் கொண்டிருக்கிறாள். வாணி தனது வீணையில் இன்னிசை எழுப்ப, இலக்குமி கைத்தாளமிட்டு ஜதி கூறுகிறாள். சசிதேவி மத்தளம் வாசிக்கிறாள். அம்மையின் நடனத்தால் ஈர்க்கப்பட்டு ஆடலரசனாகிய சிவபிரான் தானும் வந்து உடனாடுகின்றான். ஒருகட்டத்தில் நடனம் போட்டியாக மாறி உச்சத்தை அடைகிறது. இருப்பினும் சிவனும் சக்தியும் ஒன்றேயாதலால் வெற்றி தோல்வியின்றி அனைவரும் மனம் மகிழும் வண்ணம் நிறைவுறுகின்றது. உலகில் அனைவரும் இன்புற்று வாழும் வண்ணம் சிவகாமி அம்மையே நீ நடனமாடுவாயாக!- என வேண்டுகிறோம்.

                அன்னையே இன்னமுதே ஆனந்த நடராசன்
                       அகங்களிக்கு மானந்தசிவகாமியே!
                 அலைமகள் தாளமிட கலைமகடன் கைக்கொண்ட
                       வீணையினி லின்னிசையெழுப்ப      
             பன்னும்பனு வற்சிறக்கப் பரமனும் நின்றுடன்
                       பாடற்கிணங் கப்பரதமாடிட
                 பாங்கான நடனங்கள் பலவுங் கூட்டிட
                       பற்பலநர்த் தனங்கள்செய்திட
             மன்னுபுகழ் மாதவத் தோர்மனங் களிகூர்ந்திட
                       மாதேவிநீ யாடியபொழுதில்
                 மகாதேவ னவன்மன் றில்தோல் விக்கஞ்சிட
                       மற்றவனு ளமறிந்தம்மைகனிந்திட
             பின்னுமிவ் வுலகுய்ய பெற்றதாய் தந்தையும்
                       ஒன்றானதொரு வடிவல்லவோ?
                 பேருலகி லானந்தம்பெற் றுயிர்கள் வாழ்ந்திட
                       பேரானந்த நடமாடியருளுகவே!5      

                                       ****************

    இது ஆடல்; இனி அம்பிகையின் பாடலைக் காண்போமா?

    அம்பிகையின் மீதான பல பிள்ளைத்தமிழ் நூல்களில் அம்மானைப் பருவத்தில் அம்மானையாடும் சிறுமியான அன்னை இனிமையாகப்  பாடிக்கொண்டே ஆடுவதனைப் பற்றிப் புலவர்கள் கூறிப்பிட்டிருப்பார்கள்.

    மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் அம்மானைப்பருவத்தில் மீனாட்சி பாடியவாறே அம்மனையாடுவது விவரிக்கப்பட்டுள்ளது. கொத்தான மணிக்கக் கூட்டத்தால் செய்யப்பட்ட அம்மானைக்காய்கள் குயிலைப் போல் பேசும் உனது இனிய குரலின் குழல் போன்ற இசைக்கு உருகி, குளிர்ந்த துளிகளைச் சிந்துகின்றன.

                ‘கொத்து மணித்திர ளிற்செயும்அம்மனை
               குயிலின்மி ழற்றியநின்
                குழலினி சைக்குருகிப்பனி தூங்கு
               குறுந்துளி சிந்தியிட6 என்பன பாடல் வரிகள்.

    பெண்குழந்தைகள் தமது எல்லா விளையாட்டுகளிலும் பாடலைச் சேர்த்துக் கொள்வர் என்பது கண்கூடு!

    அன்னையின் உறைவிடமான சிந்தாமணி கிருகம். அன்னை ஆனந்தமாக ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு தாம்பூலம் தரித்துக் கொண்டிருக்கிறாள். அப்போது கலைவாணியான சரஸ்வதி அவள் முன்னமர்ந்துகொண்டு தனது வீணையை மீட்டிப் பசுபதியாகிய பரமசிவனின் பிரதாபங்களைப் பற்றிய பாடல்களை வாசித்துக் கொண்டிருக்கிறாள். தலையை ஆட்டித் தன் தலைவனின் பெருமைகளைக் கேட்டுப்பூரித்த உமையம்மை, “நன்றாக உள்ளது,” எனக்கூறுவதற்காக “ஸா” எனக் கூறத் துவங்கவும், வீணையின் தொனி மங்கி விடுகிறது. கலைமகள் நாணமடைந்து வீணையை அதன் உறையினில் இட்டு மூடிவைக்கிறாள்.

    இந்த ஆதிசங்கரரின் சமஸ்கிருதச் சுலோகத்தின் தமிழாக்கம்.

                வரமருளும் பரமேசன் சரிதத்தைப் பாடலாய்
                       வாணியவள் வீணையிலே மீட்ட
             பரமசந் தோஷத்தால் தலையசைத்த தேவிநீ
                       சபாஷ் என சரஸ்வதியை வாழ்த்த
             அதிமதுரச் சொல்தனது இசைமிஞ்சிய தாலே
                       அவள்வீணை தனையுறையுள் பூட்டி
             நிதியாக நின்வாக்கை மதித்தடுத்துச் சொல்கின்ற
                       வார்த்தைக்குக் காத்திருப்பாள் தாயே!7

                                                            (குற்றாலம் வள்ளிநாயகம்)

    இத்தகைய புகழ்வாய்ந்த அம்பிகையை, இசையின் உள்ளாய்ப் பொலிபவளை, ஈசன் பங்கில் உறைபவளை என்னென்று புகழ்வது? குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரமெனும் ஏழு சுரங்களாலான பல பண்களால் மேகராகக் குறிஞ்சியையும், மேற்செம்பாலைப் பண்ணையும் இசைக்கிறாள் சிறுமியான சிவகாமி. தனது உள்ளங்கவர் அண்ணலின் பெருமைகளைப் பாடி மகிழ்கிறாள். இந்த அனைத்துலகங்களையுமே தன் அருள் எனும் இசையால் ஆரபி, கௌரிமனோகரி, வசந்தபைரவி, வகுளாபரம், தோடி எனப் பலப்பல ராகங்களால் காதலுடன் நிறைக்கிறாள். இந்தக் கருணையைப்போற்றி உன் தாளிணைகளைப் பணிந்து, ‘இவ்வுலகம் செழிக்க, வல்வினைகள் கெட தர்மவதியான சிவகாமி அன்னையே! இன்னிசை பொழிவாயாக!’ என வேண்டுவோமா?

                ஏழிசையா யிசைப்பயனாய் இலங்கிடு மீசன்பங்கில்
                       ஏந்திழையே நீயுறைந்தாய்
                 எழிலோங்கும் உன்நாவில் குரலொடு துத்தம்கைக்
                       கிளையுழை இளிவிளரிதாரமெனு
             மேழிசையாற் பண்ணனைத் தும்பாங்கா கப்பாடுவாய்!
                       மேகராகக்கு றிஞ்சியினுமேற்செம்
                 பாலைப்பண் ணினிலும் மூண்டெழுந்த புகழ்மாலை
                       பெருமான்மேற் சாற்றிடுவா
             யாழிசூழ னைத்துலகு முன்னருளிலு மிசையிலும்
                       ஆரபியெனகௌரி மனோகரியெனவ
                 சந்தபைரவி யெனவகுளா பரணமென சுந்தரத்
                       தோடியென நிறைக்குமுன்றன்
             தாளிணை தான்பணிந்து தரணியெ லாஞ்செழிக்க
                       தவங்கள் தானியற்றும்
        தாபதருக் கருளுநல் தர்மவதி சிவகாமீ
                       தீங்குரற்றே னிசைபொழிகவே!8

    (தொடரும்)

                                       ————————–

    பார்வை நூல்கள்:

    1, 7. சௌந்தர்ய லகரி- தமிழாக்கம்- குற்றலம் வள்ளிநாயகம்

    2. பாடல்- பாபநாசம் சிவன்

    3. பாடல்- உளுந்தூர்பேட்டை சண்முகம்

    4, 5, 8- சிவகாமியன்னைமீது பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள்- மீனாட்சி பாலகணேஷ்

    6. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 12

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 12

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் –  613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    திருக்குறளும் நன்னூலும்

    முன்னுரை

    ‘இலக்கியத்திற்குத்தான் இலக்கணமே தவிர இலக்கணத்திற்காக இலக்கியமன்று’ என்பது மரபு. இலக்கியம் என்பது ஈண்டு வாய்மொழி இலக்கியங்களையும் உள்ளடக்கியதே. அதனால்தான் இலக்கண விதிகளுக்கு மாறுபட்டு மக்கள் வழக்கு அமைகிறபோது இலக்கண ஆசிரியர்கள் அவற்றுக்குப் புறனடை கண்டு அமைத்துத் தழுவிக்கொண்டனர். இந்தக் கட்டுரை ‘இலக்கியத்திற்கு இலக்கணம்’ என்பதை இலக்கியத்தில் பயின்று வந்துள்ள உவமங்கள் இலக்கணத்துள்ளும் பயின்று வரும் பாங்கினை ஆராய்வதாக அமைகிறது. தனித்தமிழ் மறை திருக்குறள். தொல்காப்பியத்தின் வழிநூல் நன்னூல். திருக்குறளில் பல்வேறு நேர்வுகளில் பல்வேறு அதிகாரங்களில் கையாளப்படும் உவமங்களை அவற்றின் பொருண்மை விளக்கப் பொருத்தம் கருதிப் பவணந்தியார் அவற்றை அப்படியே தமது நூலில் தொகுத்துரைப்பதை அறிய முடிகிறது. முந்தைய இலக்கியத்திலிருந்து பிந்தைய இலக்கணம் உரிமையோடு எடுத்துக் கையாண்ட சில உவமங்களின் சிறப்புக்களை ஆராய்வதாக இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.

    நல்லாசிரியருக்கான அளவுகோல்

    தற்காலத்தில் குறிப்பிட்ட பட்டமும் அதற்கான ஆசிரியர் பயிற்சிக்கான பட்டமுமே ஆசிரியர்க்கான தகுதி என வரையறுக்கப்பட்டுள்ளது. கல்லூரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பயிற்சியும் தேவையில்லை. ஆனால் பழந்தமிழ்க் கல்விக் கோட்பாட்டில் பண்புகளே ஆசிரியர்களை நிர்ணயம் செய்தன. மாணவர்க்கும் அவை வலியுறுத்தப்பட்டன. ‘உடையார்முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார்கள்’. கற்பித்தலைத் தற்காலத்தைப் போல் வணிமயமாக்காமல் ‘ஈதல் இயல்பு’ என்றார்கள். கல்வி செல்வமானதால் கற்பித்தல் ஈதலாயிற்று. செல்வம் இரத்தற்குரியதாதலின் கற்றல் ‘கோடல்’ மரபாயிற்று. கல்விச் செல்வத்தைத் தகுதியுடையார்க்கு வழங்கும் ஆசிரியரின் பண்புநலன்களைப் பொருளாகவும் உவமத்தோடு பொருத்தியும் கூறும் நன்னூல் நிலம், மலை, மலர், துலாக்கோல் என்னும் பொருள்களை ஆசிரியர்க்கு உவமமாக்கியிருக்கிறது. இந்த நான்கையும் திருவள்ளுவர் பல்வகை நேர்வுகளில் தமது குறட்பாவில் பயன்படுத்தியுள்ளார். நீதி இலக்கியமொன்றில் பயன்படுத்தப்படும் உவமங்கள் இலக்கண நூலொன்றில் பயன்பட்டிருக்கும் பாங்கு இனி ஆராயப்படும்.

    நிலமும் ஆசிரியரும்

    பொறையுடைமை என்னும் அதிகாரத்தில் ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்’ என ‘இகழ்ச்சியைப் பொறுக்கும் தன்மைக்கு’ நிலத்தை உவமமாக்குவார் திருவள்ளுவர். நிலத்தின் மேன்மையும் திண்மையும் பொறுமையும் அளவிட முடியாதது. நிலத்தைப் பயன்படுத்திக் கொள்கிற அளவிற்குத்தான் அதனால் பெறும் பயனும் இருக்கும். இந்தப் பண்புகளை ஆசிரியர்க்குப் பொருத்தினால்  வகுத்தறியப்பட இயலாத கல்வியின் பெருமை வாதப் பிரதிவாதங்களால் கலங்காத திண்மையும் இகழ்ச்சி கண்டு கலங்காத பொறுமையும் கற்பவனின் உழைப்புக்கேற்ற பயன் தரும் தன்மையுமாகிய சிறப்புக்கள் புலப்படும்.

    “தெரிவரும் பெருமையும் திண்மையும் பொறையும்
    பருவ முயற்சி அளவில் பயத்தலும்
    மருவிய நன்னில மாண்பா கும்மே!”

    என்னும் நூற்பாவால் நிலத்தின் தன்மையை விளக்கிக் காட்டும் நன்னூல், நல்லாசிரியர் ஒருவர்க்கே இது பொருந்தும் என்பதை நன்னிலம் என்ற சொல்லால் குறிப்பிடுவதைக் காணலாம்.

    மலையும் ஆசிரியரும்

    மலையுச்சியை ஐம்புலன் அடக்கியார் உயர்ச்சியோடு ஒப்பிடுவார் திருவள்ளுவர். ‘அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப்பெரிது’ என்பது குறட்பா. இந்த மலையென்னும் பொருண்மையின் சிறப்பை,

    “அளக்க லாகா அளவும் பொருளும்
    துலக்க லாகா நிலையும் தோற்றமும்
    வறப்பினும் வளந்தரும் வண்மையும் மலைக்கே”

    என விளக்கியுரைப்பார். மலை பற்றிய பவணந்தியாரின் இந்த விளக்கத்தால் அளக்கவும் காணவும் இயலாத கல்வியின் அளவும் புலமையுடையோராலும் அசைக்கமுடியாத அதன் நிலையும் தொலைவிலுள்ளார் பார்வையிலும் படும் உயர்ச்சியும் பொருள் வரும்வழிக் குறுகினாலும் குறையாத கல்விச் செல்வத்தைக் கொடுக்கும் தன்மையும் ஆசிரியர் தம் பண்புகளாகக் கொள்ள முடிகிறது.

    மலரும் ஆசிரியரும்

    மலர் மென்மைக்கும் மலர்ச்சிக்குமானது. ‘மோப்பக் குழையும் அனிச்சம்’ ‘அனிச்சப்பூ கால்களையாள்’, ‘மலரினும் மெல்லிது காமம், என்றெல்லாம் திருக்குறள் பேசும். ஏனைய பணிகளினின்றும் முற்றிலும் வேறுபட்டது கற்பித்தல் பணி. மற்ற பணிகளில் செய்பவனுக்குத்தான் உயிர் இருக்கும். ஆனால் கற்பித்தல் பணி உயிரும் உள்ளமும் உள்ளவரைச் சார்ந்தவருக்கே அமையும். எனவே ஆசிரியரின் பணிக்கு அறிவைவிட மனநிலையே இன்றியமையாதது. அந்த மனம் மென்மையாக இருத்தல் வேண்டும். அந்த மென்மையை முகம் புலப்படுத்தல் வேண்டும். பூவை வெறுப்பார் பூவுலகில் யாருமிலர். மங்கலப் பொருட்களுள் தலையாயது. மங்கல நிகழ்வுகள் பூவின்றி அமையாது. ஆசிரியரின் உள்ளத்தின் மென்மைக்கும் புன்னகை பூத்த முகத்திற்கும் மலரை உவமமாகச் சொல்லியிருக்கிறார் பவணந்தியார்.

    “மங்கலமாகி இன்றி யமையாது
    யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
    பொழுதின் முகமலர் வுடையது பூவே”

    என்பது நன்னூல். இதனுள் மங்கல நிகழ்வுகளில் இடம்பெறுவதோடு அதன் இன்றியமையாமையையும் புலப்படுத்தியதன் மூலம் கற்றல் பணி ஆசிரியர்க்கு இன்றி அமையாது என்னும் நுட்பம் உணர்த்தியது காண்க.

    துலாக்கோலான ஆசிரியர்

    பகை, நொதுமல், நட்பு என்னும் முத்திறத்தார் மாட்டும் ஒப்ப நிற்கும்  நடுவுநிலைமை என்னும் பண்பு சான்றோர்க்கு அணியாகக் கருதப்படும். ‘உள்ளத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி’ என்பார் திருவள்ளுவர். அதற்கு உவமமாகக் காட்டப்படும் பொருள் துலாக்கோல் ஆகும். நீதிமன்றங்களில் அறமகள் கண்கள் கறுப்புத் துணியால் கட்டப்பட்டுக் கையில் துலாக்கோல் பிடித்திருப்பதன் நோக்கம் யாவரும் அறிந்ததே. பொருளின் எடையைச் சரியாகக் காட்ட வேண்டுமானால் துலாக்கோல் தன்னைச் செம்மைப்படுத்திக் கொள்ளல் வேண்டும். திருவள்ளுவர் இதனைச் ‘சமன் செய்து’ என்னும் வினையால் குறிப்பார். ‘முன்னே தான் சமமாக நின்று பின்னே தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் கோல்’ என்று விளக்கமளிப்பார் பரிமேலழகர். கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர் விருப்பு வெறுப்பின்றி நடுவுநிலைமையோடு தன் பணியைச் செய்ய வேண்டும். துலாக்கோல் மாறாது. எடைக்கற்கள் மாறாது. ஆனால் பொருள்கள் மாறும். சிறப்பான பொருள்களும் சிறப்பற்ற பொருள்களும் மதிப்பிடப்படலாம். பொருளின் சிறப்புக் கருதி எடையை மாற்றிக் காட்டுதல் துலாக்கோலின் பெருமைக்கு ஏலாது.

    “ஐயம் தீரப் பொருளை உணர்த்தலும்
    மெய்ந்நடு நிலையும் மிகுநிறை கோற்கே”

    என்னும் உவம விளக்கத்தால் கற்பித்தற்பொருளை ஐயத்திற்கிடமின்றிக் கற்பித்தலும் விருப்பு வெறுப்பின்றிக் கற்பித்தலுமாகிய பண்புகள் ஆசிரியருக்கு இருத்தல் வேண்டும் என்பது பெறப்படும்.

    நிறைவுரை

    ஊழ் ஆகூழ், போகூழ் என இருவகைத்தாதலின் அறிவும் இயற்கை அறிவு, செயற்கை அறிவு என இருவகைப்படும். முன்னது ‘உண்மையறிவு’ என்றும் பின்னது ‘நூலறிவு’ என்றும் திருக்குறள் குறிக்கும். குறிக்கவே ஆற்றலும் இயற்கையாற்றல் எனவும் செயற்கையாற்றல் என இருவகைத்து என்பதும் பெறப்படும். ஆசிரியருக்கு வரைவிலக்கணம் சொல்லவந்த பவணந்தியார் நற்குடிப் பிறப்பு, அருளுடைமை, தெய்வ நம்பிக்கை, உண்மையறிவு, சொல்லாற்றல் முதலிய இயற்கையமைதிகளைத் தொகுத்துச் சொல்லுகிறார். கற்பித்தல் பணிக்குத் தன்னை வடிவமைத்துக் கொள்ளும் ஆசிரியரின் இயல்புகளைச் சுட்டுகிறபோது நேரடியாக இன்னின்ன பண்புகள் எனச் சுட்டாது,  நிலமாகவும், மலையாகவும், மலராகவும், நிறைகோலாகவும் இருத்தல் வேண்டும் என உவமவழியாக அறிவுறுத்தியிருப்பதை அறியலாம். கற்பித்தல் பணி உள்ளம் சார்ந்த பணியாதலின் உள்ளத்தின் மென்மையை முன்னெடுப்பதே பவணந்தியாரின் கற்பித்தல் கொள்கை என்பதையும் அறியலாம். இனி இதற்கு முரணாக அமைந்த ஆசிரியர்களுக்கான உவமங்களை அடுத்த கட்டுரையில் காணலாம்.

    (தொடரும்…)   

    Share
  • பூத வாயுக்கோள் வியாழனில் விந்தையான பெரும் காந்த மண்டலம் உண்டானது எப்படி?

    பூத வாயுக்கோள் வியாழனில் விந்தையான பெரும் காந்த மண்டலம் உண்டானது எப்படி?

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    https://www.youtube.com/watch?v=GMbWzJll0lE&feature=player_detailpage

    2016 ஆண்டு ஆகஸ்டு மாதம் பூதக்கோள் வியாழனைச் சுற்றப் போகும் அமெரிக்க விண்ணுளவி ஜூனோ புதிய தகவல் அனுப்பி, அதன் உட்கருவைப் பற்றியும்,  விந்தையான அதன் காந்த மண்டலத்தைப் பற்றியும் மேற்கொண்டு விளக்கம் கூறும்.

    ஜொஹான்னஸ் விக்ட் [மாக்ஸ் பிளாங்க் சூரிய மண்டல ஆய்வுக் குழுத் தலைமை விஞ்ஞானி]

    பூதக்கோள் வியாழனில் பெருங் காந்த மண்டலம் இருப்பது அறிவிக்கப்பட்டது.

    சூரிய குடும்பத்திலே மிகப் பெரிய வாயுக்கோள் வியாழன்.  வாயுக்கோளில் பூமியைப் போல் பத்து மடங்குக்கு மேற்பட்ட  ஆற்றலுள்ள ஒரு பெரும் காந்த மண்டலம் இருப்பது சமீபத்தில் கணனிப் போலி மாடல் மூலம் [Computer Simulation Model]  நிரூபிக்கப் பட்டது.  உலோகப் பாறைக் கோளான பூமிபோல் எப்படி ஒரு திணிவு வாயுக் கோளான வியாழனில் காந்த மண்டலம் உண்டானது என்பது விஞ்ஞானிகளைப் பெரு வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 2014 ஆகஸ்டு 21 இல் ஜெர்மன் மாக்ஸ் பிளாங்க் ஆய்வுக் கூடத்தின் சூரிய ஏற்பாடு ஆராய்ச்சியினர்  ஒரு விளக்கமான கணனிப் போலி மாடலை அமைத்து, வியாழன் வாயுக்கோளத்தின் உட்கருவில் எப்படிக் காந்த மண்டலம் உண்டானது என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார்கள். அறிக்கை வெளியிட்ட மாக்ஸ் பிளாங்க் சூரிய ஆராய்ச்சிக் குழுவினரின் தலைமை விஞ்ஞானி :  ஜொஹான்னஸ் விக்ட் என்பவர்.

    Jupiter Magnetic field -1

    பூதக்கோள் வியாழனின் காந்த மண்டல ரேகைகளை ஆராய்ந்தால் அவை உட்புறத்தில் மிக்க சிக்கலான நிலையில் இருப்பது தெரியவரும்.  உட்தள உலோகவியல் எல்லையைத் தாண்டிக் காந்த தளத்தின் தீவிரம் சிறிது சிறுதாய்க் குறைகிறது.  வியாழனின் மேற்தளத்தில் இருதுருவப் பகுதி ஒன்று [Dipolar Region] சுற்றச்சுக்கு 10 டிகிரி கோணத்தில் சாய்ந்து ஆளுமை செய்கிறது.  காந்த ரேகைகளின் தடிப்பு காந்த தளத்தின் உறுதியைக் காட்டுகிறது. மத்திய ரேகைப் பகுதியில் [Equatorial Region]  உலோக அடுக்கு எல்லை அருகே [Metallic Layer Transition] ஓர் உந்து சக்தி கிழக்கு-மேற்கி திசைநோக்கி அழுத்தமாகச் செல்லும் காந்த ரேகைகளை உண்டாக்குகிறது.

    மின்சார ஓட்டம் நிகழும் போது எப்போதும் காந்த ரேகைகள் தோன்றுகின்றன.   நமது பூமியில் அவ்விதம் ஓர் காந்த தளம் சூழ்ந்துள்ளது.   ஏனெனில்  பூமியின் உட்கரு ஆழத்தில் இரும்பு-நிக்கல் உருகிய திரவம் உள்ளது.   பூமியின் சுழற்சியில் அது சுற்றும் போது மின்சார ஓட்டம் உண்டாகி, இருதுருவக் காந்த தளம் தோன்றுகிறது.   பௌதிக விஞ்ஞானிகள் அதைப் பூதள-ஜனனி [Geo-Dynamo] என்று குறிப்பிடுகின்றார். ஆனால் பூதக்கோள் விழானின் வியப்பான மின் ஜனனி எவ்விதம் வேலை செய்கிறது என்னும் வினா  இப்போது எழுகிறது.

    Jupiter Core

    பூதக்கோள் வியாழனின் உட்கரு

    பூதக்கோள் வியாழனில் ஹைடிரஜன், ஹீலிய வாயுக்கள் தவிர வேறு எதுவும் இருப்பதாக இதுவரை அறியப்பட வில்லை.  அதிக அழுத்தமுள்ள ஹைடிரஜன் பனிக்கட்டி உலோகமாக [Metallic Hydrogen] மாறி இருப்பதுபோல் தெரிகிறது.   பூதக்கோள் மீது பல்லாண்டுகளாய் பெரும் சூறாவளிப் புயல் முகில்கள் அடிப்பது தெரிகிறது.  முகிலின் மேற்புற உஷ்ணம் (– 100)  டிகிரி செல்சியஸ்.   ஆனால் உஷ்ணம், அழுத்தம், மின்சக்தி கடப்பு, ஆழத்தில் செல்லச் செல்ல பேரளவு மிகையாகின்றன.  10,000 கி.மீடர் ஆழத்தில் ஹைடிரஜன் வாயுவின் அழுத்தம் பல மில்லியன் பூவழுத்தம் [Several Million Atmospheres]. அந்த கொடூர அழுத்தத்தில் திணிவு ஹைடிரஜன் வாயு கூட உலோகம் போல் மின்கடத்தி ஆகிறது. இதுபோல் ஓர் அழுத்த நிலை நமது பூமியில் எங்கும் இருப்பதில்லை. பூதக்கோள் வியாழனின் உட்கருவில், பூமிபோல் பாறை உள்ளதா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. 2016 ஆண்டு ஆகஸ்டு மாதம் பூதக்கோள் வியாழனைச் சுற்றப் போகும் அமெரிக்க விண்ணுளவி ஜூனோ புதிய தகவல் அனுப்பி, அதன் உட்கருவைப் பற்றியும்,  விந்தையான அதன் காந்த மண்டலத்தைப் பற்றியும் மேற்கொண்டு விளக்கம் கூறும்.

    [Juno Spacecraft Travels to Orbit Jupiter] (2011 – 2016)

    “பரிதி மின்சக்தித் தட்டுகள் இணைத்தியங்கும் (Solar Panel Powered) விண்ணுளவிப் பயணத் திட்டமானதால், துருவ நீள் வட்டத்தில் சுற்றும் ஜூனோவின் பரிதி மின்தட்டுகள் எப்போதும் சூரியனை நோக்கியே பறந்து செல்லும்.  விண்ணுளவி வியாழக் கோளின் மறைவுப் புறத்தில் பயணம் செய்யாதபடி நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்.”

    ஸ்காட் போல்டன்,  ஜூனோ திட்டப் பிரதம விஞ்ஞானி

    (ஜூனோ விண்ணுளவியின்) முக்கிய முதலிரண்டு சோதனைகள் :

    1.  பூதக்கோள் வியாழனில் எவ்வளவு நீர் உள்ளது ?

    2.  வியாழக் கோளின் மைய உட்கருவில் இருப்பது கன மூலகங்களின் திரட்சியா அல்லது நடு மையம் வரை இருப்பது அழுத்த வாயுத் திணிவா ?

    ஸ்காட் போல்டன்

    Juno Space Probe

    “கடந்த நூற்றாண்டுகளில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன்”

    காலிலியோ (1564-1642)

    நாமறிந்தவை எல்லைக்கு உட்பட்டவை. நாமறியாதவை கணக்கில் எண்ணற்றவை. புரிந்து கொள்ள முடியாத கரையற்ற ஒரு கடல் நடுவே, சிறு தீவு ஒன்றில் அறிவு படைத்த நாம் அடைபட்டுள்ளோம். நமக்குத் தொழில் ஒவ்வொரு பிறவியிலும் நாம் மேலும் சிறிது புதுத் தளத்தைக் கைப்பற்றுவதுதான்.

    தாமஸ் ஹக்ஸ்லி [Thomas Huxley] (1825-1895)



    2011 இல் பூதக்கோள் வியாழனை நோக்கி மீண்டும் நாசா பயணம்

    ஒரு பில்லியன் டாலருக்கு மேற்பட்ட நிதிச் செலவில் மீண்டும் நாசா 2011 ஆகஸ்டு 5 ஆம் நாள் பிளாரிடா கெனாவரல் ஏவுமுனைத் தளத்தில் சுமார் 200 அடி (60 மீடர்) உயரமுள்ள அட்லாஸ் – 5 ராக்கெட்டில் (Atlas -5 Rocket) மனிதரற்ற ஜூனோ விண்ணுளவியை ஏற்றிக் கொண்டு ஆய்வுகள் செய்ய அனுப்பியுள்ளது. ஜூனோ விண்ணுளவி 5 ஆண்டுகள் 1740 மில்லியன் மைல்கள் பயணம் செய்து செந்நிறக் கோள் செவ்வாயைக் கடந்து, கோடிக் கணக்கான முரண்கோள்கள் சுற்றும், முரண்கோள் வளையத்தை ஊடுருவிச் (Asteroid Belt) சென்று, 2016 இல் புறக்கோள் வியாழனை நெருங்கி ஓராண்டு சுற்றி வரத் திட்டமிடப் பட்டுள்ளது.  அட்லாஸ் -5 ராக்கெட் சுடப்படும் முன்பு அதன் மேலடுக்கில் ஹீலியம் ஏற்றும் சாதனத்தில் கசிவு உண்டாகி பிரச்சனை எழுந்ததால், அதை அடைக்க ஏவுக் காலம் சற்று தாமதமானது.  ஆகஸ்டு 5 ஆம் தேதி ஏவப்பட்ட ஜூனோ விண்கப்பல் இப்போது சுமுகமாகப் பயணம் செய்து வருகிறது.

    ஜூனோ விண்ணுளவி முதல் இரண்டு ஆண்டுகள் பரிதியைச் சுற்றி வந்து, பூமிக்கு மீண்டு அதன் ஈர்ப்பு வீச்சு விசையில் மேலும் உந்தப்பட்டு (Earth Flyby) அடுத்த மூன்று ஆண்டுகள் வியாழனை நோக்கி வேகமாய்ச் செல்லும்.  பூமியிலிருந்து 390 மில்லியன் மைல் (640 மில்லியன் கி.மீ.) தூரத்தில் இருக்கும் பூதக்கோள் வியாழனுக்குப் பயணம் செய்ய முதன் முதலாக பரிதி மின்சக்தித் தட்டுகள் (Solar-Panelled Mission) மூன்று அமைக்கப் பட்டு இயங்கும் விண்வெளித் திட்டம் இது.  சூரிய மின்தட்டு ஒன்றின் நீளம் 30 அடி.  அகலம் 9 அடி.  பூதக்கோள் வியாழன் மீது படும் பரிதி ஒளி பூமியின் மீது விழும் ஒளியைப் போல் 25 மடங்கு குறைந்தது.  ஆகவே ஜூனோ விண்ணுளவி வியாழனின் மறைவுப் புறத்தில் சுற்றாமல் துருவங்களைச் சுற்றி வரப் போகிறது. இதற்கு முன்பு வியாழன், சனிக்கோள் நோக்கிச் செல்லும் இவ்வித நீண்ட பயணங்களுக்குக் கதிரியக்க முள்ள புளுடோனிய மின்கலம் பயன்படுத்தப் பட்டது.  ஜூனோவில் பரிதி மின்சக்தி திரட்ட, 120 டிகிரிக் கோணத்தில் இருக்கும் மூன்று சூரியத் தட்டுகளில் 18,000 பரிதிச் செல்கள் (Solar Cells) அமைப்பாகி உள்ளன.  பூதக்கோள் வியாழனின் துருவச் சுற்று வீதியில் 33 நீள்வட்டச் சுற்றுக்களை 3000 மைல் (5000 கி.மீ.) உயரத்தில் ஓராண்டு புரிந்து வர ஜூனோ திட்டமிடப் பட்டுள்ளது.  இறுதியில் பரிதி மின்தட்டுகள் பழுதடையும் போது வியாழக் கோளில் ஜூனோ விண்ணுளவி சுற்றுவீதியை முறித்துக் கொண்டு வியாழனில் விழும்படி நாசா விஞ்ஞானிகள் ஏற்பாடு செய்துள்ளார்.

    Magnetic field

    பூதக்கோள், பூமி காந்த மண்டலம்

    ஜூனோ விண்ணுளவித் திட்டத்தின் முக்கிய குறிப்பணிகள் என்ன?

    பூதக்கோள் வியாழனே பரிதி மண்டலத்தில் சுற்றிவரும் மற்ற கோள்களை விடப் பெரியது.  அது சூரியனைப் போலிருக்கும் ஒரு வாயுக் கோள்.  வியாழனின் தோற்றத்தை யும் வளர்ச்சியையும் புரிந்து கொண்டால் ஓரளவு சூரிய மண்டலத்தின் ஆரம்பத்தை அறிந்து கொள்ள முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் எண்ணுகிறார்.  ஜூனோ விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள ‘தூர முகர்ச்சிக் கருவிகள்’ (Remote Sensing Instruments) பூதக்கோளின் பல்லடுக்குச் சூழ்வெளியை உளவி அவற்றின் உஷ்ணம், உட்பொருட்கள், முகில் நகர்ச்சி, மற்றுமுள்ள தளப் பண்பாடுகளைப் பதிவு செய்து, பூமிக்கு மின்தகவல் அனுப்பி வைக்கும்.  மேலும் வியாழனில் தோன்றும் முகில் வண்ணப் பட்டைகளின் உள்ளமைப்பைக் கண்டறியும்.  சிறப்பாக கடந்த 300 ஆண்டு களாகக் காணப்படும் விந்தையான ‘கொந்தளிக்கும் செந்திலகம்’ (Violently-Active Red Spot) என்ன வென்று ஆழ்ந்து அறியப்படும்.  எல்லாவற்றும் மேலாக பூதக்கோள் வியாழனில் உள்ள நீரின் செழிப்பை அறிந்து ஆக்ஸிஜன் எத்தனை அளவு இருந்தது என்று கணக்கிடவும், பரிதி மண்டலத் தோற்றத்தை உறுதிப் படுத்தவும் பயன்படும்.. அத்துடன் பூதக்கோள் வியாழனுக்கு நடுவே உள்ளது திண்ணிய கடும் பாறையா அல்லது வாயுத் திணிவு மிகுந்து வியாழன் உட்கருவில் அழுத்தமுடன் உறைந்து போய் உள்ளதா என்றும் அறியப்படும்.

    Fig 5 Jupiter Exploration

    வியாழக் கோளின் காந்த தளத்தையும், ஈர்ப்புக் களத்தையும் பதிவு வரைபடக் கருவி வரையும்.  பூதக்கோள் வியானின் துருவக் காந்தக் கோளத்தை (Polar Magnetosphere) உளவி அது எப்படி வியாழனின் சூழ்வெளி வாயு மண்டலத்தப் பாதிக்கிறது என்று ஆராயும். ‘வியாழனில் தென்படும் தென்துருவ, வடதுருவ ஓவியக் கோலங்களையும்’ (Polar Auroras) ஜூனோ ஆராயும்.

    வியாழக் கோளை முன்பு சுற்றிய நாசாவின் விண்கப்பல்கள்

    நாசா காஸ்ஸினி விண்கப்பல் (1997- 2004) இல் சனிக்கோளைச் சுற்ற அனுப்புவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே, காலிலியோ விண்வெளிக் கப்பல், வியாழனைச் சுற்றிவர ஏவப்பட்டு, ஏராளமான விஞ்ஞானத் தகவல்களைப் பூமண்டலத்துக்கு அனுப்பியுள்ளது. விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ‘நவீன பெளதிகத்தின் பிதா’ [Father of Modern Physics] என்று புகழ் மாலை சூட்டிய, காலிலியோவின் பெயரைக் கொண்ட நாசாவின் விண்கப்பலே, வியாழனை ஆராயும் முதல் ‘விண்ணுளவி’ [Space Probe] ஆனது! தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளி யின் முகத்திரையை உலகுக்குத் திறந்து வைத்தவர், காலிலியோ! பூதக்கோள் வியாழனைச் சுற்றும் நான்கு துணைக் கோள்களை முதலில் கண்டு பிடித்து உலகை வியக்க வைத்தவர், காலிலியோ!


    நாசா 1972 இல் ஏவிய பயனீயர்-10, பயனீயர்-11 [Pioneer-10, Pioneer-11], அடுத்து 1977 இல் அனுப்பிய வாயேஜர்-1, வாயேஜர்-2 [Voyager-1, Voyager-2] ஆகிய நான்கு முன்னோடி விண்சிமிழ்கள் பயணம் செய்து முதன் முதலில் வியாழன், சனிக்கோளின் விஞ்ஞான விபரங்களை உளவிப் பூமிக்கு ஏராளமான தகவல் அனுப்பின. 1987 இல் அனுப்பிய காலிலியோ விண்கப்பல் எட்டாண்டுகள் பயணம் செய்த பிறகு, 1995 இல் வியாழக்கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் இழுக்கப்பட்டு, நீள்வட்ட வீதியில் சுற்றி, ஓர் உளவுச்சிமிழை [Probe Module] வியாழ தளத்தில் இறக்கி, விண்வெளி வரலாற்றில் முதன்மை பெற்றது. ஒரு ‘சுற்றுச்சிமிழும்’ [Orbiter] ஒரு ‘சூழ்வெளி உளவுச் சிமிழும்’ [Atmospheric Probe] இணைக்கப் பட்டிருந்த, காலிலியோ விண்வெளிக் கப்பல் இரண்டு முக்கியப் பணிகளை நிறைவேற்றத் தயாரானது. முதல் பணி வியாழனை நெருங்கி, சுற்றுச்சிமிழ் சுழல்வீதியில் விழானைச் சுற்றிவருவது. அடுத்த பணி உளவுச்சிமிழை விடுவித்து, வியாழ தளத்தில் அதை மெதுவாக இறக்குவது.  மின்சக்தி பரிமாறப் புளுடோனியம் டையாக்ஸைடு [PuO2] பயன்படும் இரண்டு ‘கதிர்வீச்சு வெப்ப ஜனனிகள்’ [RTG, Radioisotope Thermal Generators] அமைக்கப் பட்டிருந்தன.

    கொந்தளிக்கும் செந்திலகம்! பூதக்கோளில் புயல் காற்று!

    வியாழச் சூழகத்தில் பொங்கி எழும் வாயு மண்டலம் வடக்கிலும் தெற்கிலும் பாய்ந்து விரிகிறது! மத்திம ரேகைப் பிரதேசத்தை நோக்கி வீசும் காற்று நீண்ட பாதையில் செல்லும் போது, துருவ முனை நோக்கிப் போகும் காற்றுக் குறுகிய பாதையில் அடிக்கிறது. அவ்வாறு திருப்பம் அடையும் காற்றுகள், மேக மண்டல அடுக்குகளை அறுத்துப் பட்டை, பட்டையாய் [Bands] பிரிக்கின்றன! அப்பட்டை நிற மேகங்கள், சுற்றும் அச்சுக்கு ஒப்பாக 24 மணி நேரத்தில் கிழக்கு நோக்கி 11 டிகிரி கோண அளவு திரிந்து மாறுகிறது! புயல் காற்று மத்திம ரேகையில் அடிக்கும் உச்ச வேகம் 360 mph!

    வியாழனின் பெயர் பெற்ற ‘மாபெரும் செந்திலகம் [Great Red Spot] சீரிய தொலை நோக்கி தோன்றிய நாள் முதல், 300 ஆண்டுகளுக்கும் மேலாகக் காணப்பட்டு கொந்தளித்து வருகிறது! செந்திலகம் முட்டை வடிவானது! அதன் கொந்தளிப்புக்குக் காரணம் இன்னும் அறியப் படவில்லை.

    முகில் ஆட்டத்திற்குச் செந்நிறத்தைத் தருபவை, புறவூதா [Ultraviolet] ஒளியை விழுங்கும், கந்தகம் [Sulfur], ஃபாஸ்ஃபரஸ் [Phosphorus] போன்றவற்றின் இரசாயனக் கூட்டுறுப்புகள் [Compounds]. மாறிக் கொண்டே வரும் செந்திலகத்தின் தற்போதைய பரிமாணம் 16200 மைல் நீளம்; 8700 மைல் அகலம்.

    மாபெரும் புயல்கள் வியாழ மண்டலத்தில் திடீர் திடீரென வீசி அடிக்கின்றன!சூரியனின் தட்ப, வெப்ப மாறுதலால், பூமியில் சூறாவளி, ஹரிக்கேன் ஆகியவை ஏற்படுகின்றன. ஆனால் வியாழக் கோளின் சூறாவளிப் புயல்கள், கொந்தளிக்கும் உட்தள வாயுக் குமிழ்களால் [Gas Bubbles] எழும்பி, அடர்த்தியான முகில் அடுக்குகளைக் கலக்கி அடிக்கின்றன! வாயுக் குமிழ்கள் தாறுமாறான வெப்பத் திட்டுகளை தாங்கிக் கொண்டு, புயல் காற்றுக்களைக் கட்டுப் படுத்த, வியாழனில் மேடு, பள்ளங்கள், மலைகள் ஏதும் இல்லாது, எல்லாத் திசைகளிலும், குறுக்கு நெடுக்காக முறுக்கி அடிக்கின்றன!

    chart Earth - Jupiter

    (தொடரும்)
    ++++++++++++++++

    தகவல்:

    Picture Credit : NASA, ESA,

    1. Galileo Project Informationhttp://www.nssdc.gsfc.nasa.gov/planetary/galileo.html
    2. Exploration of the Planets By: Brian Jones [1991]
    3. Jupiter By: Garry Hunt & Patrick Moore
    4. Galileo Orbiter & Probe By: Michael Wilcox [Nov 16, 1995]
    5. Solar System Exploration: Mission Jupiter, Galileo
    6. Astronomy By: Reader ‘s Digest [1998]
    7. Galileo Project: http://www.jpl.nasa.gov/galileo NASA/JPL Press Release [Feb 26, 2003]
    8. National Geographic News : On August 5th NASA Spacecraft is Slated to Launch on a     Five-year Journey to Jupiter (August 4, 2011)
    9. Space Daily : NASA Launches Juno to Jupiter (August 5, 2011)
    10. BBC News : Juno Probe Heads for Jupiter from Cape Canaveral (August 5, 2011)
    11. NASA Report : NASA’s Juno SpacecraftLaunches to Jupiter (August 5, 2011)
    12.  http://en.wikipedia.org/wiki/Jupiter  [August 12, 2014]
    13.  http://www.dailygalaxy.com/my_weblog/2014/08/origins-of-jupiters-vast-magnetic-field-deciphered.html  [August 21, 2014]

    Share
  • குறளின் கதிர்களாய்…(347)

    குறளின் கதிர்களாய்…(347)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(347)

    ஆற்றுவா ராற்றல் பணித லதுசான்றோர்
    மாற்றாரை மாற்றும் படை.

    – திருக்குறள் -985 (சான்றாண்மை)

    புதுக் கவிதையில்...

    செயலொன்றைச்
    செய்து முடிப்பவர் திறமை,
    தம்முடன் பணியாற்றுபவர்களுடன்
    பணிந்தே வேலைவாங்குவதாகும்..

    சான்றோர்க்கு அதுவே
    பகைவரையும் நண்பராக
    ஆக்கிவிடும் ஆயுதமாகும்…!

    குறும்பாவில்...

    தம்முடன் பணியாற்றுபவர்களுடன் பணிந்தே
    வேலைவாங்குதல்தான் செயலைச் செய்துமுடிப்போர் திறமை,
    பகைவரை நண்பராக்கச் சான்றோர்க் காயுதமுமது…!

    மரபுக் கவிதையில்...

    செயல தொன்றைத் திறம்படவே
    செய்து முடிப்போர் ஆற்றலது,
    செயலி லுடன்பணி செய்வோருடன்
    சேர்ந்தே பணிவுடன் வேலைவாங்கலே,
    உயர்ந்த பண்புடை சான்றோர்க்கே
    உதவிடு மிதுவே ஆயுதமாய்
    வயவரை மாற்றி நண்பராக்கும்
    வழிய தாகவும் ஆகிடுமே…!

    லிமரைக்கூ..

    செயலில் துணைபுரிவோருடன் பணிந்தே
    வேலைவாங்குதலே ஆற்றல்மிகு சான்றோரின் திறமை, ;
    அதனாலவர் பகையை நட்பாக்குவர் துணிந்தே…!

    கிராமிய பாணியில்...

    தெரியும் தெரியும்
    தெறம தெரியும்,
    செய்யும் செயலுல
    சான்றோர்களின் தெறம தெரியும்..

    செய்யிற செயல நல்லாச்
    செய்து முடிப்பவன் தெறம,
    அவன் கூட வேலபாக்கவங்களோடு
    பணிஞ்சி வேலவாங்கிறதிலதான் இருக்குது..

    அதுவேதான் சான்றோருக்கு
    எதிராளியையும் நண்பனா
    ஆக்கிற ஆயுதமாகும்..

    அதால
    தெரியும் தெரியும்
    தெறம தெரியும்,
    செய்யும் செயலுல
    சான்றோர்களின் தெறம தெரியும்…!

    Share
  • எதில் முதலீடு செய்யலாம்? – ஸ்ரீராம் நாராயணன் நேர்காணல் – 1

    எதில் முதலீடு செய்யலாம்? – ஸ்ரீராம் நாராயணன் நேர்காணல் – 1

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    பரவலாக வட்டி விகிதங்கள் குறைந்துவிட்ட நிலையில், இனி வட்டி வருவாயை மட்டும் நம்பி வாழ்க்கையை நடத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வட்டி வருவாயை மட்டுமே நம்பி இருந்த ஏழை, நடுத்தர மக்கள், சிறு முதலீட்டாளர்கள் பலரும் செய்வதறியாது நிற்கின்றார்கள். இந்தப் பின்னணியில் இப்போது நாம் என்ன செய்வது? நமக்கு முன்னுள்ள வாய்ப்புகள் என்னென்ன? அமெரிக்கவாழ் நண்பரும் இந்திய நிதிச் சந்தையைத் தொடர்ந்து கவனித்து எழுதி வருபவருமான ஸ்ரீராம் நாராயணன், நம் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார். பார்த்துப் பயன் பெறுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பிரமிடு விளையாட்டு

    பிரமிடு விளையாட்டு

    அடுக்குகளை வைத்து எப்படி விதவிதமாகப் பிரமிடு கட்டுவது என்று ஒரு விளையாட்டு. இங்கே நமக்காகப் பிரமிடுகளை உருவாக்கிக் காட்டுகிறார், சகஸ்ரா அஜய்.

    இதைப் பார்த்த பிறகு ஒரு யோசனை. இப்படியான அடுக்குகளை வைத்து எப்படிக் கோவில் கட்டுவது என்பதை ஒரு விளையாட்டாகச் சொல்லித் தரலாமே. நம் தஞ்சாவூர்ப் பெரிய கோவிலை, திருவரங்கம் கோவிலை, திருவில்லிபுத்தூர்க் கோவிலைச் சீனாவிலும் ஜப்பானிலும் கொரியாவிலும் கட்டி எழுப்பிக் குழந்தைகள் விளையாடினால் எப்படி இருக்கும்?

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஜெயகாந்தனின் 87ஆவது பிறந்த நாள்

    ஜெயகாந்தனின் 87ஆவது பிறந்த நாள்

    தன் எழுத்துகளால் சமூகத்தில் வலுவான அதிர்வுகளை ஏற்படுத்தியர், ஞானபீட விருது பெற்றவர், கம்பீரத்துடன் தலைநிமிர்ந்து வாழ்ந்தவர், எந்தக் கருத்தையும் துணிவுடன் உரைக்கும் ஆளுமை படைத்தவர், ஆற்றல்மிகு எழுத்தாளர், ஜெயகாந்தன். அவருடைய 87ஆவது பிறந்த நாளான இன்று, அவரது குரலைக் கேளுங்கள். உடன் உரையாடுபவர், மூத்த பத்திரிகையாளர் சுகதேவ்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பூலோக வைகுந்தம் ஸ்ரீரங்கம்

    பூலோக வைகுந்தம் ஸ்ரீரங்கம்

    பூலோக வைகுந்தம் எனப் போற்றப்படும் திருவரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்குள் ஒரு சிறு உலா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஒரு போஸ்ட் பொக்ரான் ஷெனோரியா (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    ஒரு போஸ்ட் பொக்ரான் ஷெனோரியா (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    முனைவர் நா.தீபாசரவணன்
    உதவிப் பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி: மலையாளம்
    தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன்

    என்னுடைய பேரு தயாவந்தி”, தொலைக்காட்சி கேமராவுக்கு நேராகப் பார்த்துக்கொண்டு அவள் தடுமாறாமல் கூறினாள்,” எனக்கு மூணு புள்ளைகள். மல்லிகா, மதுரிகா, பிரவீன், அவுங்க அப்பா ஆதித்யா ஆப்தெ.

    சென்ற மார்ச் மாதம் எங்களைப் பொறுத்தவரை துன்பங்கள் நிறைந்த மாதம். மார்ச்சில் தான் நான் விதவையானேன். என் கணவரை யார் கொன்றார்கள் என்று எனக்குத் தெரியும். அதனால் ஒரு பிரயோசனமும் இல்லை. நான் என் புள்ளகளயும் அழச்சிட்டு பல முறை போலீஸ் ஸ்டேஷன் ஏறி இறங்கிட்டேன். சந்திரகாந்த் ஷெட்டி, ஏகநாத் சவான். இவங்க ரெண்டு பேரும்தான் கொன்னாங்கன்னு சப் இன்ஸ்பெக்டர் கிருபாஷங்கர் மைத்ரனிடம் பலமுறை கூறினேன். அவங்கதா குற்றம் செய்தாங்கனு சொல்றதுக்கு ஆதாரம் இல்லை என்பது தான் இன்ஸ்பெக்டரோட கருத்து. இது அநியாயமில்லையா? நான் அவருக்குப் புரிய வைக்க பலமுறை முயற்சி செய்து பார்த்திட்டேன். நேத்து கூட நான் அவரைப் பார்க்கப் போனேன். அவருக்கு ஒரு மாற்றமுமில்லை. அவருடைய நெற்றியில் குங்குமப் பொட்டைப் பார்த்ததுமே நான் எல்லாக் கடவுளையும் வெறுத்துவிட்டேன்.

    நீங்க சொன்னது சரிதான். இதெல்லாம் எனது தனிப்பட்ட சமாச்சாரங்கள். ஆனா, நீங்க முதல்ல கேட்ட கேள்விக்குப் பதில் சொல்றதுக்கு முன்னாடி இந்த விஷயங்கள விமர்சிக்காமல் இருக்க முடியாது. கணவன் கொலை செய்யப்பட்டதற்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட ஒரு பெண் நான். எனக்கு மூணு புள்ளகளையும் கவனிக்கணும். கூடவே கொலை செய்யப்பட்ட என் கணவருக்கு நீதி கிடைப்பதற்காகப் போராடவும் வேண்டும். அவர் கொல்லப்படுவதற்கான சந்தர்ப்பத்தை விளக்க நீங்க எனக்கு அனுமதி தரணும்.

    நாங்கள் பேள் மான்ஷன் என்ற பெயருள்ள கட்டடத்தில் வசித்து வந்தோம். இரண்டாவுது மாடியில், ஒன்பதாம் எண்ணிட்ட வீடுதான் எங்களுடையது. அதில் ஒரு ஜன்னலுக்குக் கீழாக ஒரே ஒரு கொய்யாமரம் வளர்வதை மல்லிகாதான் பார்த்தாள். அது வளர்ந்து எங்களது ஜன்னல்வரை வந்தது. ஒரு நாள் மல்லிகா ஜன்னல் வழியாக கைவிட்டு ஒரு கொய்யாவைப் பிடுங்கினாள். அன்றைக்கு அப்படியொரு மகிழ்ச்சி. எங்களுக்கு இத்தகைய சின்னச் சின்ன சம்பவங்களே எங்க வாழ்க்கையை மகிழ்ச்சிப்படுத்தும். அதனால்தான் சின்னச் சின்ன நிகழ்ச்சிகளுக்குக்கூட நாங்க ரொம்ப முக்கியத்துவம் கொடுத்தோம்.

    பேள் மான்ஷன் மிகப் பழைமையான கட்டடம். வெளியிலிருந்து பார்த்தால் ஒரு பேய்வீடு போலத் தோன்றும். சிலர் அதை ‘கோஸ்ட் மான்ஷன்’ என அழைப்பர். கட்டட உரிமையாளர் சமீர் இராணி,  கட்டடத்தின் அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட சிறு பழுது வேலைகளைக் கூட செய்யவில்லை. தண்ணீர் சப்ளை கூட அடிக்கடி தடைபடும். யாரவது புகார் சொன்னா இராணி காலி பண்ணச் சொல்லீருவாங்க. அங்கு வசிக்கும் ஒவ்வொரு குடும்பமும் பல வருடங்களாக அங்கேயே தங்கியிருப்பவர்கள். வேறொரு புகலிடம் அவர்களுக்குத் தெரியாது.

    அதற்கிடையில் சமீர் இராணி, இங்கிலாந்திற்கு சென்று அங்கேயே வசிக்கப் போகிறார் என்ற செய்தி பரவியது. பேள் மான்ஷனில் வசிப்பவர்கள் அனைவரும் எதிர்பார்ப்போடு அதப்பத்தி விவாதித்தாங்க. கட்டடத்தின் அதிகார உரிமையைக் கை மாற்றுவது குறித்து சமீர் இராணியுடன் பேசுவதற்காக விநாயக் மாத்ரெ, சுயோக் சாவந்த் என்ற இருவரை அனைவரும் சேர்த்து நியமித்தனர். விநாயக் மாத்ரெவும் சுயோக் சாவந்தும் அந்தேரியில் ஒன்றாக பிசினஸ் செய்கிறவர்கள். அவர்கள் மிக்க சந்தோசத்துடன் அவ்வேலையை ஏற்றுக்கொண்டனர்.

    ”நிம்மதி! , இனி இருக்கறத அவங்க பார்த்துப்பாங்க” என் கணவர் கூறினார்.

    வசிப்பிடத்தின் அதிகார உரிமை கிடைக்க வேண்டுமெனில் கையில் பணம் வேண்டுமே? நாங்க பணம் சேர்ப்பதற்கான முயற்சில இறங்கினோம். எங்க அப்பா கடைசி நாட்கள்ல கொஞ்சம் பணத்தைப் பேரன் பேத்திகளின் பேரில் போட்டு வைத்திருந்தார். அதை எடுத்தோம். எங்கிட்ட இருக்கற கொஞ்சம் நகைகளையும் விக்கறதுக்கு அவருக்கு விருப்பமில்லை. ஆனால் நான் கட்டாயப்படுத்தினதும் கேட்டுட்டாரு. சில நண்பர்களும் சரியான நேரத்துக்கு உதவனது ரொம்ப சந்தோஷம். மொத்தத்தில் குழம்பத் தேவையில்லை என்று எங்களுக்குத் தோன்றிற்று. எங்களைப் போலவே மற்றக் குடியிருப்போரும் தேடல் தொடங்கினர். சிலர் தொலைவில் உள்ள உறவினர்களின் வீட்டுக்குச் சென்றனர். சிலர் கடனளிக்கக்கூடிய தனியார் நிறுவனங்களை அணுகினர். கம்பெனி, போன்ற இடங்களில் வேலை செய்கிறவர்கள் கடனுக்காக அப்ளிகேஷன் போட்டுவிட்டுக் காத்திருந்தனர். வசந்த் குல்கர்னியும், தீனநாத் மெஹ்தாவும் வர்லியிக்குப் போய் குதிரைப் பந்தயத்தில் தங்களது அதிர்ஷ்டத்தை பரிசோதித்தனர். கேரளாவிலிருந்து வந்த ஒரு மேனோன் குடும்பம் ஊரில் உள்ள தனது பரம்பரை சொத்துக்களை விற்றுவிட்டு, காசுடன் நம்பிக்கையுடன் வந்தனர்.

    பேள் மான்ஷனில் வசிப்பவர்களைப் பொறுத்தவரை மிக்க உற்சாகமான காலமாக இருந்தது. பனிக் காலத்திற்காக உணவு சேகரித்து வைக்கும் எறும்புகளைப் போல அனைவரும் உற்சாகத்தோடு வேலை செய்தோம். எல்லோருடைய முகத்திலும் பிரகாசம் தெரிந்தது. நாங்க மதிப்பற்ற எதையோ அடையப் போகிறோம் என்று ஒவ்வொருவரும் நினைத்திருந்தோம்.

    வசந்த் குல்கர்னியையும், தீனநாத் மெஹ்த்தாவையும் பந்தயக் குதிரைகள் ஏமாற்றவில்லை. சில போட்டிகள் அவர்களுக்கு நன்மை செய்தன.

    சமீர் இராணி குடும்பத்துடன் இங்கிலாந்திற்குப் போயிட்டார் என்கிற செய்தியுடன் புள்ளகளோட அப்பா ஒரு மாலை நேரம் வந்தார்.

    “ஒரு முடிவு எடுக்காமலா?” நான் ஆவேசத்தோடு கேட்டேன்.

    விநாயக் மாத்தெரவும், சுயோக் சாவந்தும் சமீர் இராணியுடன் நடத்தின பேச்சுவார்த்தைகள் எதுவரை நடந்தது என்று யாருக்கும் தெரியாது. இராணியின் பயணம் எதிர்பார்த்ததுக்கும் முன்னாடியே அமைஞ்சதால பேள் மான்ஷனின் அதிகார உரிமை கை மாறுவதற்கான பேச்சுவார்த்தை முடிவாகவில்லை என்றும், உடன்படிக்கைகள் குறித்த விரிவான பேச்சுவார்த்தை இனியும் நடக்கவேண்டும் என்றும், அதற்காக ஆறு மாசத்திற்குள் இராணி மும்பைக்குத் திரும்பி வருவார் என்றும் அவர்கள் புரியவைத்தனர்.

    ”உங்களுக்கு அவசர வேலை இருக்கு இல்லையா? ஆனா நான் சொல்லி முடிக்கலையே!”

    சமீர் இராணி, இங்கிலாந்திற்குச் சென்ற அடுத்த மாச வாடகையை யாருக்குக் கொடுக்கணும்னுங்கற குழப்பம் எங்களுக்குள் உருவாச்சு. அவர் வாடகை வசூலிக்கிற பொறுப்பை யாருக்கும் கொடுக்கல.

    ”என்ன ஆனாலும் நமக்கே உரிமையைத் தரப்போறாரு அதுவரை வாடகையும் வாங்க வேண்டாம்ன்னு நினைச்சிருப்பாரு”

    கோபால் சித்ரை கூறினான்.

    அவர் மூன்றாவது மாடியில் வசிப்பவர். மாட்டுங்காவில் ஒரு பேக்கரி நடத்துகிறார். இரண்டு நாள் கழித்து விநாயக் மாத்ரேவும், சுயோக் சாவந்தும் வசிப்பிடத்தை மாத்தினாங்க. தாதரில எங்கேயோ புதிய ஒரு கம்பெனி தொடங்கறதுக்குன்னு கேள்விப்பட்டோம் பேள் மான்ஷனில் அவங்க ரெண்டு பேரோட வீடும் சாத்தியிருந்துச்சு.

    பிப்ரவரி முதல் வாரத்தில் ‘மாத்ரெ அண்ட் சாவந்த்’ என்ற நிறுவனத்தின் விளம்பர அறிவிப்பு ஆதித்யா ஆப்தேவின் பேருக்கு வந்தது. அதில் பேள் மான்ஷனின் உரிமையாளர்கள் விநாயக் மாத்ரேவும் சுயோக் சாவந்தும் சேர்ந்து உருவாக்கின நிறுவனம் என்று தெளிவாக இருந்தது. நாங்க கொஞ்ச நேரம் இருட்டுல அகப்பட்டது போலானோம்.

    “இது ஏமாற்று வேலை, கொடூரமான ஏமாற்று?” என் கணவர் சத்தமிட்டுக் கூறினார்.

    தாமதிக்காம வேறொரு நோட்டீஸ் வந்தது. பேள் மான்ஷனின் வசிப்பிடங்களின் வாடகை நான்கு மடங்கு அதிகரித்ததற்கான அறிவிப்பு.

    “அவங்க நம்மள ஏமாத்தறாங்க. நாம இதுக்கு ஒத்துக்கக் கூடாது”.

    கோபால் சித்ரெ, ஆஸ்துமாவின் இழுப்போடு கூறினார். அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். மார்ச் முதல் வாரத்தில காலி செய்வதற்கான நோட்டீசும் வந்துச்சு. கட்டடத்தில நிறைய இடிச்சு  புதுமையா மாத்தணும் என்றும், வசிக்கறவங்க ஏழு நாள்ல காலி பண்ணணும் என்றும் நோட்டீஸ்ல இருந்துச்சு. அன்னைக்கே சந்திரகாந்த் ஷெட்டியும், ஏகநாத் ஷவானும் ஒரு பைக்கில பேள் மான்ஷனுக்கு வந்தாங்க. ஒரு பெரிய கூட்டத்தில சிக்கின அவங்கள நாங்க கேவலமாவும் பயத்தோடயும் பார்த்தோம்.

    கீழ்த் தளத்தில படிக்கெட்டுக்குப் பக்கத்தில இருக்கற பெயர்ப் பலகையை அகற்றத்தான் வந்தாங்க. எந்தக் காரணத்துக்காகவும் அதை அனுமதிக்க மாட்டேனு என் கணவர் கூறினார். கோபால் சித்ரெவும், கமலெஷ் தேஷாயியும், தலால் பாபுவும் அவரோடு சேர்ந்து சத்தம் போட்டாங்க. எல்லாரும் சேர்ந்து ஒன்றாகச் சத்தமிட்டதும் சந்திரகாந்த் ஷெட்டியும், ஏகாநாத் ஷவானும் வண்டில ஏறிக் கிளம்பிட்டாங்க. அதுக்கப்புறம் என் கணவர் எப்பவும் போல வேலைக்குப் போயிட்டாரு.

    சாயங்காலம் நா பாத்தது வெடிகுண்டுகள் துளைக்கப்பட்டு விழுந்து கிடக்கிற, உயிர் போன என் கணவர் உடம்பை. நான் அதைக் கட்டிப் பிடிச்சு மறுபடியும் மறுபடியும் அலறினேன். மும்பை முழுசா என்னோட அலறல் கேட்டிருக்கும். அந்த நிமிஷத்தில எனக்கு நினைவு போயிடுச்சு. எனக்குச் சுற்றிலும் இருட்டா இருந்துச்சு. எனக்கு ஒண்ணுமே ஞாபகமில்லை.

    கேட்கட்டுமா? பேள் மான்ஷன் என்கிற கட்டடத்தை நீங்க யாராவது பார்த்திருக்கீங்களா? இனி அத எப்பவுமே பார்க்க முடியாது. விநாயக் மாத்ரேவனுடையவும், சுயோக் சாவந்தியோடவும் ஆளுங்க அத மீதமில்லாம தகர்த்து ஒடச்சிட்டாங்க. அந்த இடத்தில் புதிய வசிப்பிடங்கள் கட்டற வேல துரிதமா நடந்திட்டிருக்கு. கட்டடம் கட்டும் வேலையோட சத்தம் சுற்றுவட்டாரமே முழங்குது. கான்க்ரீட் பொருட்கள் அங்க மலை போல கொட்டிக் கெடக்குது. எந்திரங்கள் முழங்குது.

    என் கணவர் ‘பேள் மான்ஷன்’ இருந்த இடத்துக்குத் தட்டுத் தடுமாறி வந்து கம்பிகளுக்கும் கருங்கற்களுக்கும் சிமெண்ட் மூட்டைகளுக்குமிடையே நின்று பயத்தோட நான்கு பக்கமும் பார்த்து இரத்தத்தில் மூழ்கின இனிப்புப் பலகாரங்களையும் கையிலேந்தி புள்ளகள பேரு சொல்லி கூப்பிடற சத்தம் பல இரவிலயும் புள்ளகளோடு சேர்ந்து தூக்கம் வராமல் இருக்கும்போது நான் கேட்டிருக்கேன்.

    இது  ஒரு சேரிப் பகுதி. நான் சோனாலி என்ற ஒரு பெண். ஆமாம் உங்களுக்குத் தெரிய வேண்டியது இதில்லை. பொக்ரைனில் நடந்த வெடி வெடித்த சம்பவத்தைக் குறித்த என்னோட கருத்தை.

    புள்ளகளக் காப்பாற்ற நான் எப்போதிருந்து ஆண்களை வரவேற்று ஏற்றுக்கொள்ளத் தொடங்க வேண்டுமென்று சோனாலி பொறுமையற்றுக் கேட்கிறாள்.

    நீங்களோ? நீங்க எங்கிட்ட பொக்ரனைப் பற்றிக் கேட்கறீங்க………………………..”

    Share