பேராளுமை மிக்க அந்தணப் பெரியார் வைத்தீஸ்வரக் குருக்கள்

0

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
ஸ்திரேலியா

அந்தணக் குலத்தில் ஆளுமைகள் பலர் இருந்து அரும்பணிகள் ஆற்றி இருக்கிறார்கள். அவர்கள் ஆலயங்களில் கிரியைகளை ஆற்றும் நிலையிலும் அரச பணிகளை ஆற்றும் பதவிகளிலும் இருந்திருக்கிறார்கள்.எங்கு அவர்கள் இருந்தாலும் தங்களின் அகவொழுக்கம்புறவொழுக்கங்களை எந்த நிலையிலும் கைவிடாதவர்களாகவே வாழ்வில் விளங்கியிருக்கிறார்கள் என்பது மனங்கொள்ளத் தக்கதாகும். அப்படி அவர்கள் வாழ்ந்த காரணத்தால் சமூகத்தில் அவர்கள் பெரிதும் மதிக்கப்படுகின்ற நிலையிலே இருந்தார்கள், இன்னும் இருக்கிறார்கள் எனலாம்.

வேதம் ஒதுவது வேதியர்க்கு அழகு. விக்கிரகங்களைத் தொட்டு ஆராதித்து அவனைப் பக்தி சிரத்தையுடன் பூசிக்கும் நிலையில் தம்மை ஆட்படுத்திக் கொண்டிருப்பதும் அந்தணரின் அழகெனலாம். கிரியைகளை ஆற்றி ஆலய கும்பாபிஷேகங்களை முறைப்படி செய்து மக்களும் நாடும் வளமுடன் இருக்கும் வழியிலே பயணிப்பதும்கூட அந்தணர்க்கு அழகு எனலாம்.

கிராமத்தின் நன்மதிப்பைப் பெற்று அங்கு வாழும் மக்களுக்கு நாளும் பொழுதும் நல்ல குருவாய்நல்ல வழிகாட்டியாய்நல்ல ஆலோசகராய்விளங்கிய அழகும் –  விளங்கும் அழகும் அந்தணப் பெரியோருக்கு வாய்த்திருக்கிறது எனலாம். இப்படிப் பார்க்கின்ற வேளை, ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாண மண்ணுக்கு, அந்தணப் பெரியார்கள் பெருந்துணையாகவே விளங்கி இருக்கிறார்கள் என்பதை மனமிருத்தல் அவசியமாகும்.

வித்துவான் கணேசையர்வித்தியாதிபதி சதாசிவ ஐயர்காசிவாசி செந்திநாத ஐயர் வித்தியாதிபதி லக்ஷ்மண ஐயர்பேராசிரியர் கா.கைலாசநாதக் குருக்கள்பண்டிதர் பஞ்சாட்சரசர்மா இந்த வரிசையில் வந்து நிற்பவர்தான் காரைநகர் ஈந்த பேராளுமை வைத்தீஸ்வரக் குருக்கள் ஆவர். ஆலயத்திலும் நிற்பார். ஆன்றோர் அவையிலும் நிற்பார். வேதமும் ஓதுவார். வித்துவான்கள் மத்தியில்  தொல்காப்பியமும் செப்புவார். இறைவனைப் பற்றி அருட்பாடல் களையும் பாடுவார். இலக்கியக் கூட்டங்களில் இலக்கியப் பாடல்களையும் எடுத்து நயமுரைப்பார். ஆனாலும் அந்தண ஆசாரத்தை அகமிருத்தியே அனைத்தையும் ஆற்றுவார்.

இப்பேராளுமை 1916ஆம் ஆண்டு கணபதீஸ்வரக் குருக்கள் சிவயோக சுந்தராம்பாள் தம்பதிகளுக்கு நற்புத்திரனாய் நானிலத்தில் இறையருளால் பிறந்தார்கள். ஆண்டவனையே அனுதினமும் நினைக்கும் ஆசாரசீலரான கணபதீஸ்வரக் குருக்களின் உதிரத்தில் உதித்த காரணத்தால் அவரின் புத்திரராய் பிறந்த வைத்தீஸ்வரக் குருக்களும் ஆண்டவன் அருளினைப் பெற்றே இம்மண்ணில் நல்லவண்ணம் வந்தார் மலர்ந்தார் எனலாம். தந்தையைக் குருவாய் கொண்டு தனது கல்வியை ஆரம்பித்தார். தந்தையின் வழி காட்டலில் நல்ல ஆசான்கள் இவருக்கு வந்தமைந்தார்கள். பண்டிதர் பஞ்சாட்சரசர்மாபண்டிதர் சுப்பிரமணிய தேசிகர்மகாவித்துவான் கணேசையர் இவருக்கு நல்ல வெளிச்சத்தைக் காட்டினார்கள். சமயத்தைக் கற்றார். அன்னைத் தமிழையும் ஐயந்திரிபறக் கற்றார்.சமஸ்கிருதத்தையும் கற்றுத் தேர்ந்தார். ஆங்கிலமும் அறிவார். ஆனாலும் அவரின் கற்றல் தாகம் அடங்கிவிடவே இல்லை.

வைத்தீஸ்வரக் குருக்கள், பேராளுமையாய் மிளிர்வதற்கான பாதையில் பயணிக்கத் தொடங்கினார். நல்ல ஆசான்களிடம் கற்றதோடு அமையாது மேலும் கற்றலின் வழியில் பண்டிதராய்,  பயிற்றப்பட்ட ஆசிரியராய், நற்றமிழ் நாயகராய் உயரும் நிலைக்கு வந்து நின்றார் எனலாம்.

கற்றுத் தேர்ந்த குருக்கள் அவர்கள் கற்றதைக் கொடுக்க வேண்டும் என்னும் ஆவலினால் ஆசிரியப் பணியினை அணைத்துக்கொண்டார். கொழும்பு விவேகானந்த வித்தியாலயத்தில் தொடங்கிய  ஆசிரியப் பணி நாட்டின் பல இடங்களில் பயணித்து நிறைவில் தலைமை ஆசிரியர் நிலையில் இருந்து ஓய்வுபெற்றார்.

கொழும்பில் பணியாற்றும் வேளை கற்பித்தலோடு அமையாது ஏனைய நிலையிலும் தன்னுடைய ஆற்றலைப் பகிர்ந்துகொண்டார். விவேகானந்த சபையில் நடத்தப்படும் சைவ சமயப் பாடக் குழுதினகரன் பத்திரிகை செய்திப் பிரிவு ஆகிய இவற்றில் தனது பங்களிப்பினை வழங்கினார். அத்துடன் சிறைச்சாலைக்குச் சென்று அறப்போதனையும் ஆற்றினார்.

ஓய்வு பெற்றபின்னர் மேடையில் பேசுவார், எழுதுவார். அத்துறைக்கு வருகின்றவர்களுக்கும் ஊக்கம் ஊட்டுகின்றவராகவும் இருப்பார். சைவத்தையும் தமிழையும் நாவலர் பெருமான் தனது இரு கண்களாகவே கொண்டாரென்று பலரும் விதந்து போற்றுவார்கள். அந்த நிலையில் எங்கள் குருக்கள் அவர்களும் விளங்கினார் என்றால் அதனை எவரும் மறுத்துரைக்கவே மாட்டார்கள். அந்த அளவுக்கு அவரின் பணிகள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன என்பது வெள்ளிடை மலையாகும்.

யாழ்ப்பாண ஆன்மீகப் பேரொளி யோகர் சுவாமிகளின் நல்லாசியுடன் 1940ஆம் ஆண்டில் குருக்கள் அவர்களால் “காரைநகர் மணிவாசக சபை” ஆரம்பிக்கப்பட்டது. இச்சபையின் பிறப்பால் இளைய சமுதாயத்திடம் சைவத்தைப் பற்றிய சிறப்பான புரிதல் உருவாகியது என்பது முக்கியம் எனலாம். காரை நகருக்கு மட்டுமல்லாது யாழ்மண்ணுக்கே இந்த அமைப்பு நல்லதோர் சமய வழிகாட்டுதலை வழங்கியது எனலாம். இந்தச் சபையினை அமைத்ததோடு நின்றுவிடாமல் இந்தியாவில் இருக்கின்ற சைவ ஆதீனங்களையும் இணைக்கும் பாலமாகவும் குருக்கள் விளங்கினார் என்பது மிகவும் முக்கியம்.

ஈழத்துச் சிதம்பரம் என பக்தி சிரத்தையுடன் போற்றி நிற்கும் காரைநகர் சிவன் சன்னிதானத்தில் அமைந்துள்ள மணிவாசகர் சபையினூடாக 1955ஆம் ஆண்டு தொடக்கம் திருவெம்பாவைக் காலத்தில் “மணிவாசகர்” விழா நடைபெறத் தொடங்கியது. தொடர்ந்து ஆண்டுதோறும் இவ்விழாவினை நடத்துவதில் குருக்கள் அவர்களின் பணி மிகவும் போற்றப்பட வேண்டியதென்றே கொள்ளல் வேண்டும். இந்த விழாக்களில் தமிழகத்து அறிஞர் பெருமக்கள் கலந்து சிறப்பிப்பதும் ஈழத் திருநாட்டின் அறிஞர் பெருமக்கள் அவர்களோடு இணைந்து நிற்பதும் குருக்கள் அவர்களின் சிந்தனையால்.  செயற்றிறனால் விளைந்த நல்ல பலனல்லவா! சங்கமிக்கும் அறிஞர்களால் பல அரிய பெரிய விஷயங்கள் எல்லாம் யாவருக்கும் கிடைக்கும் பெருவாய்ப்பும் வாய்த்திருந்தது. ” காரைநகர் மணிவாசகர் சபை” சைவமும் தமிழும் நல்கும் பொக்கிஷமாய் மிளிர்ந்தது. அந்தப் பொக்கிஷத்தை ஆக்கி அளித்த பேராளுமையாக எங்கள் குருக்கள் திகழ்கிறார்.

“‘காரை நகரில் சைவ சமய வளர்ச்சி” என்னும் குருக்கள் அவர்களின் நூல்  பல்கலைக்கழத்தில் வைக்கப்படவேண்டிய பெறுமதியான நூலென்றே சொல்லலாம். பெறுமதியான நூலை ஆக்கிய வைத்தீஸ்வரக் குருக்களென்னும் பேராளுமை – பதிப்புத் துறையிலும் தன்னுடைய கவனத்தைச் செலுத்தினார் என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும். கந்தர் மடத்தைச் சேர்ந்த சுவாமிநாதப் பண்டிதரால் ஆக்கப்பட்ட “திருமுறைப் பெருமை ” பிரம்மஶ்ரீ கார்த்திகேயப் புலவரின் “திண்ணைபுர அந்தாதி” திருப்போசை வெண்பா” , “”தன்னை அந்தாதி” திக்கை அந்தாதி” வித்துவான் எவ்.எக்ஸ்.சி. நடராசா அவர்களின் “நன்நூல் காண்டிகை உரையும் நாவலர் பெருமானும்”, “தெரி நிலை வினயெச்சம்”, “வினைத் தொகை” ஆகியவற்றைப் பதிப்பித்ததோடு அமையாது; ஏழாலைப் பண்டிதர் கந்தையா அவர்களின் ” நாவலர் பிள்ளைத்தமிழ்”, “ஷேத்திரத் திருவெண்பா”மற்றும் திருவாளர் சபாபதியால் எழுதப்பட்ட” அருள் நெறித் திரட்டு ” ஆகிய நூல்களையும் பதிப்பித்தார் என்பது குருக்கள் அவர்களின் பதிப்புத்துறைப் பக்கம் எனலாம். அவரின் பதிப்புத்துறைக்கு முத்திரை பதிக்கும் வகையில் அமைந்த நூல்தான் – தங்கத்தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் மகனார் புலவர்மணி சோஇளமுருகனார் ஆக்கிய “திருத்திண்ண புரச் சுந்தரேசர் புராணம் என்னும்  ஈழத்துச் சிதம்பர புராணம்” ஆகும்.

திருவாதிரைக் கால நிகழ்வுகளை மலராக்கி ஐந்து மலர்களாய் குருக்கள் அவர்கள் வெளியிட்டிருக்கிறார். அது மட்டுமன்றி ” காரைநகர் சைவ மகாசபைப் பொன்விழா மலர்”காரைநகர் மணிவாசகர் சபைப் பொன்விழா மலர் “, “காரைநகர் வியாவில் ஐயனார் கோவில் கும்பாவிஷேக மலர்” என்று வெளிவந்த மலர்கள் அனைத்துக்கும் எங்கள் பேராளுமை குருக்கள் அவர்களே ஆசிரியராய் இருந்து நெறிப்படுத்தி இம்மலர்களை மணம் கமழ வைத்தார் என்பது மனக்கொள்ளத் தக்கதாகும்.

திருவாசகத்தை தந்தை தாயார் வழியில் பெற்றுக் கொண்ட குருக்கள் அவர்கள் தானும் அதனுட் புகுந்து மணிவாசகரின் உருகும் வாசகத்தை அகமிருத்தியதன் விளைவே மணிவாசகர் சபை ஆகியது எனலாம்.சைவத்தின் உயர் தத்துவங்கள் பொதிந்திருக்கும் திருவாச கத்தைக் கையில் எடுத்த பாங்குடன் நின்று விடாது – சைவத்துக்குத் தமிழும் இன்றியமையாதது என்பதை மனமிருத்தி 1960 ஆம் ஆண்டில் ” தமிழ் வளர்ச்சிக் கழகத்தை ” ஆரம்பித்தார். இதன் வாயிலாகப் பல தமிழ்ப்பணிகளுக்கு வழி சமைத்தார் எனலாம். காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் வாயிலாக இருபத்து ஆறு நூல்களை வெளியிட்டார். மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் இக்கழகம் பெரிதும் துணையாக விளங்கியது என்பதை மறுத்துவிட முடியாது. இக்கழகத்தின் செயற்பாடு 1970 தொடக்கம் 1980 காலப் பகுதியில் பெரு வெளிச்சமாய் அமைந்தது எனலாம்.

பேராளுமை வைத்தீஸ்வரக் குருக்கள் சைவத்தையும் தமிழையும் அகமிருத்தி தன்னாலான பணிகளை மேற்கொண்டார் என்பதை பலரும் காய்தல் உவத்தலின்றி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்குச் சான்றாக அவரை வந்து சேர்ந்த விருதுகளும் பட்டங்களும் குவிந்து கிடக்கின்றன எனலாம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமே அவரை வியந்து அவருக்குத் “தத்துவக் கலாநிதி” என்னும் பட்டத்தை 2020ஆம் ஆண்டில் வழங்கி பெருமைப்படுத்தியிருக்கிறது.

இலங்கைக் கம்பன் கழகம் “மூதறிஞர்” என்னும் பட்டத்தை வழங்கி குருக்கள் அவர்களைக் கெளவித்தமையும் மனங்கொள்ளத்தக்கதாகும். குருக்கள் அவர்களைக் கெளரவிப்பதன் மூலமாக கெளரவித்த அமைப்புகளே பெருமையுற்றன எனலாம். அந்த வகையில் – வடக்குக்கிழக்கு புனர்வாழ்வு அமைச்சு “கலைஞான கேசரி” என்னும் பட்டத்தையும்சர்வதேச இந்துமத குருமார் ஒன்றியம் “சிவாகம கிரியா பூஷணம்” என்னும் பட்டத்தினையும் வழங்கிப் பெருமைப்பட்டன எனலாம்.

நூல்கள்மீது தீராத காதல் கொண்டிருந்தார் குருக்கள். அதனால் அவரின் இருப்பிடமே பெரியதொரு நூல்நிலையமாய் திகழ்ந்தது என்பதைப் பலரும் அறிவார்கள். மலர்கள்பத்திரிகைகள்பல்வேறு வகையான நூல்கள் குருக்கள் அவர்களைச் சூழ்ந்தே இருந்தன எனலாம். தனது சேமிப்பில் இருந்த ஐயாயிரத்துக்கு மேற்பட்ட நூல்களை – அவரின் தந்தையாரும் ஈழத்துச் சிதம்பர நூலின் ஆசிரியருமான சிவஶ்ரீ கணபதீஸ்வரக் குருக்கள் பெயரில் அமைக்கப்பட்ட ” கணபதீஸ்வரக் குருக்கள் நூல் நிலையத்துக்கு ” வழங்கி யாவரும் என்றுமே பயனுறச் செய்தார்.

தள்ளாத வயதானாலும் தமிழையும் சைவத்தையும் மனங்கொண்டவராகவே குருக்கள் அவர்கள் திகழ்ந்தார்கள் என்பதற்கு அவரின் தொண்ணூற்று ஏழாவது வயதில் “சைவக் களஞ்சியம்” என்னும் அரிய நூலின் தொகுப்பு ஆசிரியராய் இருந்து 2013 ஆம் ஆண்டில் வெளியீடு செய்தமை பெருஞ் சான்றாகும்.

எழுதிபேசிபதிப்பித்துசமூகத்தில் முன்னின்ற குருக்கள் அவர்கள் அறவழியினையும் உபதேசிக்கும் ஆசானாயும் விளங்கி இருக்கிறார்கள். முப்பத்து இரண்டு விதமான அறங்களைத் தேர்ந்தெடுத்து தன்னுடைய நாட்குறிப்பில் எழுதிவைத்திருந்தார் என்று அறிய முடிகிறது. திருமணம் செய்ய இயலாத நிலையில் இருக்கும் ஏழைப் பெண்களுக்கு உதவுதல் வேண்டும் என்பார். இறந்தவர் உடலைத் தகனம் செய்ய இயலா நிலையில் இருப்பார்க்கு உதவ வேண்டும் என்று எடுத்துரைப்பார். ஆதரவற்றோரை அரவணைத்தல்அவருக்கு இருப்பிட வசதியினை ஏற்படுத்திக் கொடுத்தல்கற்கும் மாணவர்களுக்கு உணவளித்தல்என்று பலவகை அறங்கள் செய்வது பெரும் புண்ணியம் என்றும் அவற்றைச் செய்தல் வேண்டும் என்பதும் குருக்கள் அவர்களின் விரிந்த பரந்த சிந்தனையாய் இருந்திருக்கிறது என்றும் அவரின் வரலாற்றால் அறிந்திட முடிகிறது.

ஈழத்து மண்ணில் அதுவும் வட புலத்தில் காரைநகர் என்னும் புனித ஊரில் இப்படி ஒரு பேராளுமை, அந்தணப் பெரியோர் – சிவத்தமிழ் வித்தகராக, பண்டிதமணியாக, கலாநிதியாக, விளங்கி இருக்கிறார் என்பது சைவத்துக்கும் தமிழ்மொழிக்கும் கிடைத்த பெருமை என்று சொல்லுவது பொருத்தமாய் இருக்கிறதல்லவா!

அந்தணர்க்குண் மனையனையான் அருங்கலைகள்
மிகப் பயின்றான் அருமை ஆசான்
சந்தததும் சிவனன்பு தழைக்கின்ற
உள்ளத்தான் தகைசால் நண்பன்
கந்தமலி பூம்பொழில் சூழ் திண்ணாபுரங்
கவினோங்குங் கருத்து மிக்கான்
வந்தவருக்கு அமுதளிப்பான வண்பெயர்கொள்
வைத்தீஸ்வரக் குருக்கள்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *