சு. ரவி
வணக்கம், வாழியநலம்,
அந்த ஒரு வருடம். விரதமிருந்த கார்த்திகை மாதத்தில் ஒருமாலைப்போதில், விரதநெறிகளுக்குப் பொருந்தாத நினைவுகளில் மனம் அலைபாய்ந்த நேரம்! எனையாளும் சபரிகிரீசனைத் தொழுது எழுந்த திருப்புகழ்…
படிக்க, (பாடிப் பார்க்க) ரசிக்க
ராகம்: பைரவி ( பாடலும் By RAVI)
ஐயப்பன் திருப்புகழ் – 4
தனத்தனந்தன தனதன தனதன
தனத்தனந்தன தனதன தனதன
தனத்தனந்தன தனதன தனதன தனதான
மனத்துறங்கிய நினைவுகள் அலையென
கதித்தெழுந்திட உறுதியும் அனலினில்
உருக்குலைந்திடு மெழுகென உருகிட மதன்வீசும்
மலர்ச்சரம்பல மறுபடி மறுபடி
துளைத்தநெஞ்சொடு துயர்தரு விளைவுகள்
சுமக்கவென்றெனை நிலைகெட விடுவது முறையாமோ?
நினைப்பணிந்துநின் அழகிய பதமலர்
அடைக்கலம்புகும் அடியவர் நடுவினில்
இருத்தி,என்பவ வினையற கதிபெற அருள்தாராய்!
நிருத்தனம்பயில் இறையவர் அருளிய
வரத்தையங்கவர் சிரமிசை முயலுமொர்
அரக்கனும்பட நிலவென உருவொடு வருமாயன்
வனப்புபொங்கிய வதனமும் அதிலிரு
நிறைத்த அஞ்சனம் எழுதிய விழிகளும்
நினைப்பழுந்திட அரனுறு மயலினில் உருவாகி
வனத்தடங்களை வருடிய படிதவழ்
அலைக்கரங்களொ டுலவிடு நதிநுரை
கொழித்தபம்பையின் எழுகரை மிசைவளர் மணிமார்பா!!
தனத்தனந்தன தனதன தனவென
இடக்கை,திண்டிமம் ஒலிதர அழுதையில்
அரக்கிதுஞ்சிட அழகிய நடமிடு சபரீசா!!
தரித்தசந்தன மணமுற இருசெவி
தமிழ்ப்பெருங்கவி பருகிட சபரியில்
தவப்பிழம்பென வளரொளி யுடனமர் பெருமாளே!
(அடைக்கலம்புகும் அடியவர் நடுவினில்
இருத்தி,என்பவ வினையற கதிபெற அருள்தாராய்!)
செண்பக ஜெகதீசன்
குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
யுடம்போ டுயிரிடை நட்பு.
-திருக்குறள்- 338 (நிலையாமை)
புதுக் கவிதையில்…
மண்ணில் மனிதனின்
உடலுயிர்
தொடர்பு இதுவே-
முட்டை ஓட்டைத்
தனியே
விட்டுவிட்டுப் பறவைக் குஞ்சு
வெளியேறிடும் நிலைதான்…!
குறும்பாவில்…
முட்டை ஓட்டைத் தனியேவிட்டு
பறவைக்குஞ்சு பறந்திடுவதாய்,
உடலைவிட்டு உயிர் பிரிவதும்…!
மரபுக் கவிதையில்…
முட்டை மீது தாய்ப்பறவை
மிகுந்த அன்பால் அடைகாக்கும்,
முட்டையை விட்டு வரும்குஞ்சு
முட்டை ஓட்டை விட்டுவிட்டே
எட்டிக் கூடப் பாராமல்
எட்டப் பறக்கும் கதையதுதான்,
விட்டுச் செல்லும் உயிரதுவும்
உடம்பும் கொண்ட தொடர்பதுவே…!
லிமரைக்கூ…
குஞ்சுவந்ததும் கைவிடப்படும் முட்டை ஓடு,
உடலதைத் தனியேவிட்டு
உயிர்போன இடமதுதான் எங்கே தேடு…!
கிராமியப் பாணியில்…
கூடுகெட்டி முட்டவுட்டு
அடகாக்கும் பறவ- பாசமா
அடகாக்கும் பறவ..
குஞ்சி வந்தா,
மறந்துபோவும் ஒறவ
முட்டஓட்டு ஒறவ- காத்த
முட்டஓட்டு ஒறவ..
முட்டஓட்டத் தனியாவுட்டு
பறந்துபோவும் பறவ- ஒறவ
மறந்துபோவும் பறவ..
மனுச உசுரு கதயிதுதான்,
ஒடம்பத் தனியா உட்டுப்புட்டு
உசுரு போவும்- இந்த
உசுரு போவும் தன்னந்தனியா…!
தேமொழி
![]()
காலிக் கோப்பையில் எறும்புகள்
கண்டன இனிப்புச் சுவைதனை
கழுவும் வேளையும் வந்ததுவே
கண்டேன் நானும் எறும்புகளை
கவனக் குறைவால் அலசிவிட்டால்
கண்டிடும் மரணத்தை அவ்வுயிர்கள்
அக்கறை கொண்டு செயல்பட்டால்
அத்தனை உயிர்களையும் என்னால்
அன்புடன்தான் காத்திட இயலும்
அன்றுடன் முடியாது தொடர்வதற்கு
அச்சிற்றெறும்புகளின் வாழ்க்கையிலோர்
அல்லல் நீக்கும் தேவதையாவேன்
சின்னஞ்சிறு தட்டல்களினால் தரையில்
சிதறியோடின எறும்புகள் எங்கும்
சிற்றெறும்பொன்றோ தன்கால் மாட்டிச்
சிக்கித் தவித்தது கோப்பைப் பிசுக்கில்
சிறுகுச்சியினால் விடுவித்தேன் அதனை
சிறிது தள்ளாடியே விழுந்தது தரையில்
நடக்க முடியாது தவித்த எறும்பின்
நட்பும் சுற்றமும் விட்டு விரைந்தோடின
நலிவுற்றுப் போகும்படி முடமாக்கினேனோ
நாளும் அதற்கினி தனிமையில் உயிர்வதையோ
நானும் துயருற்றேன் கொன்றிருந்தால் அதை
நல்லதோர் முடிவாக இருந்திருக்குமோ ஐயகோ
படம் உதவி:
http://thumbs.dreamstime.com/x/cup-saucer-ants-16755972.jpg
மேகலா இராமமூர்த்தி
கருணை மறவன்
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் இன்றளவும் மக்கள் மனத்தில் நீங்கா இடம்பிடித்து நிலைத்து நின்றுவிட்ட ஓர் ஒப்பற்ற காப்பியமாகும். பண்டைத் தமிழர்தம் பண்பட்ட வாழ்க்கை முறையினையும், நாகரிகத்தையும் அறிந்து கொள்வதற்கு ஓர் சிறந்த இலக்கியச் சான்றாகவும் இக்காப்பியம் விளங்கிவருகின்றது.
அக்கால வழக்கத்தையொட்டி எழுதப்பட்ட மற்ற காப்பியங்கள் எல்லாம் அரசர்களையோ, குறுநில மன்னர்களையோ, அல்லது வள்ளல்களையோ பெரிதும் போற்றுவதாகவும், அவர்தம் கொடைச் சிறப்பினையும், போர் வெற்றிகளையும் வானளாவப் புகழ்வதாகவுமே இயற்றப்பட்டிருக்க, அவற்றினின்று முற்றிலும் மாறுபட்டுச் சாதாரணக் குடிமக்களைக் காப்பியத் தலைவனாகவும், தலைவியாகவும் தேர்ந்தெடுத்து அவர்தம் வாழ்வையே காப்பியக் களனாக்கிய ’புரட்சிச் சிந்தனையாளர்’ இளங்கோவடிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
அதுமட்டுமல்லாமல் தம்முடைய காப்பியத் தலைவனைக் குணத்திலே குன்றாகவும், குறைகளற்ற கோமகனாகவும் படைத்திடாமல் அதிலும் வேறுபட்டவராய்க் குற்றம் குறைகள் நிறைந்த சாதாரண மனிதனாகவே அவனைப் படைத்திருப்பதும் புதுமையே. ஆம்.. கோவலனின் வாழ்க்கைமுறை பற்றிப் புகார்க் காண்டத்தின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் செய்திகள் அவனைப் பற்றிய உயர்ந்த மதிப்பீடு எதனையும் நமக்கு ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.
இதனைக் காணும்போது நற்குடிப் பிறப்பாளனான கோவலன் நற்செயல்கள் எதனையுமே செய்யவில்லையா? கட்டிய மனைவியைப் பிரிந்து மற்றொரு பெண்ணோடு வாழ்பவனாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றானே…இஃது அவனுடைய ஒழுக்கக் குறைவைக் காட்டுவதாக அல்லவா அமைந்திருக்கிறது! என்றெல்லாம் நாம் சிந்திக்கத் தலைப்படுகின்றோம்.
கண்ணகி தன் நல்வாழ்வைத் தொலைத்ததும், அவளுடைய தனிமைத் துயருமே நம் நெஞ்சமெங்கும் நிறைந்து நம்மை வருந்தச் செய்யும் வகையில் கதையின் நிகழ்வுகள் சிலம்பின் முற்பகுதியில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே கணிகையர் குலத்தில் பிறந்தும் கற்புக்கரசியாக வாழ்ந்த மாதவி நல்லாளுடன் கோவலன் நடத்திய இல்வாழ்க்கையைப் பற்றியும், அப்போது நிகழ்ந்த சம்பவங்கள் குறித்தும் அதிகம் அறிந்துகொள்ளக்கூடிய சந்தர்ப்பமே நமக்கு வாய்க்கவில்லை. அதனால்தானோ என்னவோ..அருளும், வீரமும் நிறைந்த கோவலனின் இனிய மறுபக்கத்தை நாம் உணராதவர்களாயிருக்கிறோம். கோவலன் செய்த அறச் செயல்களுக்கும் ஓர் அளவில்லை என்பதனை மதுரைக் காண்டத்திலேதான் (அவன் கொலை செய்யப்படுவதற்குச் சற்றுமுன்பு) நமக்கு அறியத் தருகின்றார் காப்பிய உத்திகளை அமைப்பதில் கைதேர்ந்தவரான இளங்கோவடிகள்!
கோவலனின் கருணை உள்ளத்தையும், எளியோர்மாட்டு அவன் காட்டும் பேரன்பையும் நாம் அறிந்து மகிழும் வகையில் அவற்றைப் பற்றிய செய்திகளை ’அடைக்கலக் காதை’ எனும் பகுதியில் வைத்துள்ளார் ஆசிரியர். நமக்கு மர்மமாகவும், புரியாத புதிராகவும் விளங்கும் கோவலனின் பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்குமுரிய மறுபக்கம் இங்குதான் வெளிச்சத்திற்கு வருகின்றது.
பூம்புகாருக்கு அருகிலுள்ள ’தலைச்செங்காடு’ என்னும் ஊரில் வசித்துவரும் கோவலனின் நெருங்கிய நண்பனான, நான்கு மறைகளையும் நன்குணர்ந்த, அந்தண குலத்தைச் சேர்ந்த ’மாடலன்’ என்பவன் தன் திருத்தல யாத்திரையை முடித்துவிட்டுத் திரும்பி வரும் வழியில் மதுரையை ஒட்டிய பகுதியில் சமணத் துறவியான கவுந்தியடிகளுடன் (சமணப் பள்ளியில்) தங்கியிருக்கும் கோவலனையும், கண்ணகியையும் சந்திக்கின்றான்.
கோவலனின் உருவழிந்த, வாடிய தோற்றத்தைக் கண்டு வருந்திக் கோவலன் மதுரை வந்த காரணம் என்ன? என்று மாடலன் வினவ, பொருளினை இழந்து வறுமையுற்றிருக்கும் தன் நிலையை மாற்றி வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய பொருள் ஈட்டவே தாம் அங்கு வந்ததாகக் கோவலன் கூறுகின்றான். அதுகேட்டு அவனுடைய முந்தைய வளமான வாழ்வையும், இன்றைய அவல நிலையையும் நினைந்து மட்டிலா மனவேதனை அடைகின்றான் மாடலன். அவ்வேதனையினூடே வெளிப்படும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நமக்குக் கோவலனின் கடந்த காலத்தை, அவனுடைய அரிய குணங்களைப் புலனாக்கி நம்மையும் அவனிடம் பேரன்பும், பெருமதிப்பும் கொள்ளவைக்கின்றன.
மாடலன் கோவலனைப் பற்றி அப்படி என்னதான் சொல்லியிருப்பான் என்ற ஆவல் நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் பொங்குகின்றதல்லவா? கோவலனுடைய கடந்த காலத்திற்கு நாமும் சற்றுச் சென்று அங்கு நிகழ்ந்தவற்றை அறிந்துகொள்வோமா?
கோவலனும், மன்னனிடம் ’தலைக்கோல்’ பெற்ற (சிறந்த நாட்டிய நங்கைக்கு மன்னனால் செய்யப்படும் சிறப்பு) புகழ்மிக்க மாதவியும் மகிழ்வோடு நடத்திய இல்லறத்தின் பயனாய் அருஞ்சாதனைகளைப் புரிவதற்கென்றே தோன்றியது ஓர் ஒப்பற்ற பெண் மகவு. அக்குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று மாதவியின் குலத்தைச் சேர்ந்த கணிகையர் அனைவரும் யோசித்திருக்கும் வேளையில் கோவலன் ஓர் சிறந்த பெயரைத் தேர்ந்தெடுக்கின்றான்; அப்பெயரைத் தான் தேர்ந்தெடுத்த காரணத்தையும் அனைவருக்கும் அறியத் தருகின்றான்.
”முன்பொரு காலத்தில் எம்குல முன்னோனான வணிகன் ஒருவன் கடற்பயணம் செய்தபோது அவனுடைய மரக்கலம் பேரலைகளினால் தாக்கப்பட்டு உடைய, கரையை அடையமுடியாமல் அவன் துயருற்றான். அப்போது அவன்முன் தோன்றிய ’மணிமேகலா தெய்வம்’ என்ற பெண்தெய்வம் அவனுக்கு ஏற்பட்ட ஆபத்திலிருந்து அவனைக் காத்துக் கரை சேர்த்தது. அத்தெய்வமே எங்கள் குலதெய்வம் ஆகும். அத்தெய்வத்தின் பெயரையே என் மகளுக்குச் சூட்டுக” என்கின்றான் கோவலன்.
அதுகேட்டு, அங்குக் கூடியிருந்த ஆயிரம் கணிகையரும் (ஆயிரம் பேர் என்பது கவிச்சுவைக்கான மிகைப்படுத்தலாயிருக்கலாம்) அக்குழந்தைக்கு “மணிமேகலை” என்ற அழகிய பெயரைச் சூட்டி வாழ்த்தினர். இதனை இளங்கோவடிகள்,
“அணிமே கலையார் ஆயிரம் கணிகையர்,
மணிமே கலையென வாழ்த்திய ஞான்று” (அடைக்கலக் காதை: 38-39) எனக் குறிப்பிடுகின்றார்.
மகிழ்ச்சி நிறைந்திருந்த அவ்வேளையிலே அழகிய மடந்தையாகிய மாதவியோடு சேர்ந்து செம்பொன்னைத் தானம் பெறுவதற்காக அங்கு வந்திருந்தவர்கட்கெல்லாம் வாரி வாரி வழங்குகின்றான் கோவலன்.
அப்போது அங்கே அச்சம் தரத்தக்க ஓர் காட்சி தென்படுகின்றது. நிறைந்த ஞானத்தையுடைய வயது முதிர்ந்த அந்தணர் ஒருவர் கையில் கோலூன்றியபடித் தானம் பெறுவதற்காகக் கோவலன் இல்லத்தை நோக்கி வந்துகொண்டிருக்கின்றார். கோவலன் இல்லத்தில் குழுமியிருந்த அனைவரும் அம்முதியவரையே அச்சத்தோடும், கவலையோடும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஏன்…அவருக்கு ஏதேனும் ஆபத்து நெருங்குகிறதோ? நம் யூகம் சரியே! தள்ளாடியபடியே நடந்துவரும் அப்பெரியவரைப் பாகனிடமிருந்து தப்பித்த மதம் கொண்ட யானை ஒன்று துரத்தி வருகின்றது; அத்தோடு நில்லாமல் அவரைத் தன் துதிக்கையில் பற்றியும் கொண்டுவிட்டது. அதனைக் கண்டோர் அனைவரும் செய்வதறியாது பயத்துடன் திகைத்து நிற்க, அதுகண்ட கோவலன் பாய்ந்துசென்று ’ஒய்’யென்ற (யானையைத் திட்டும் ஆரிய மொழி) ஒலி எழுப்பியபடியே மின்னல் வேகத்தில் அந்த முதிர்ந்த அந்தணரை யானையின் பிடியினின்றும் விடுவித்து அவர் உயிரைக் காக்கின்றான்; அத்தோடு நிறுத்தவில்லை. அந்த யானையின் வளைந்த துதிக்கையின் இடையே புகுந்து அதன் மதத்தையும் அடக்கிக் ’கருணை மறவனாக’த் திகழ்கின்றான். இங்குப் பயன்படுத்தப்பட்டுள்ள ’கருணை மறவன்’ என்ற சொல்லாட்சிப் புதியதாகவும், சுவையாகவும் இருக்கக் காண்கிறோம்.
அந்த முதிய அந்தணர் மீது கொண்ட கருணையால்தானே தன் உயிரையும் துச்சமாக மதித்து ’மறவனாக’ மாறி மதயானையை அடக்கி வீரனாகத் திகழ்கின்றான் கோவலன். ஆகவே ’அருள்வீரன்’ என்னும் பொருள்பட அமைந்த ’கருணை மறவன்’ என்ற பெயர் அவனுக்குச் சாலப் பொருத்தமானதுதானே?
”…………………………உயர்பிறப் பாளனைக்
கையகத்து ஒழித்ததன் கையகம் புக்குப்
பொய்பொரு முடங்குகை வெண்கோட்டு அடங்கி,
மையிருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப்
பிடர்த்தலை இருந்து பெருஞ்சினம் பிறழாக்
கடக்களிறு அடக்கிய கருணை மறவ!” (அடைக்கலக் காதை: 48-53) என்பவை மேற்சொன்ன நிகழ்வை விளக்கும் இனிய வரிகள்.
இவ்வாறு அளவற்ற அருளாளனாகத் திகழும் கோவலன் ஓர் அபலைப் பெண்ணுக்கு அரிய உதவி ஒன்றைச் செய்து அவள் வாழ்வைக் காக்கின்றான். அது என்ன?
(தொடரும்)
அன்று தேவன் எழுதிய எழுத்து- அதை
அழித்திட நினைப்பது ஆகுமோ பெண்ணே,
தொன்று நிகழ்ந்ததின் தொடர்ச்சியிவ் வாழ்வு- அதைத்
தொலைத்திடத் திட்டம் தகுமோ கண்ணே..
நாளை நடப்பதை நன்றாய் அறிவான்- அவன்
நம்மைப் படைத்தவன் நன்கறி தம்பி,
காளைப் பருவம் வாழ்வினில் கொஞ்சம்- அதில்
கவலைத் தீயில் கருகிடாய் வெம்பி..
ஆடும் பம்பரம் அகிலம் மீதுநாம்- அதை
ஆட்டும் ஒருவனை அறிவையோ அண்ணா,
நாடும் வீடும் நம்முடன் வருமா-அந்த
நிலையிலா வாழ்வை நினைப்பயோ கண்ணா..
கடலலை இரைச்சல் காதைப் பிளக்கும்- அதைக்
கருத்தில் கொளாதே கலம்விடு நண்பா,
உடலெனும் காவில் உணர்ச்சிப் பூக்கள்- அவை
உதிரச் செய்வது உயர்ந்தவர் பண்பா…!
படத்துக்கு நன்றி
நாகேஸ்வரி அண்ணாமலை
பல சந்தர்ப்பங்களில், பல சூழ்நிலைகளில் நான் அமெரிக்க நன்றி தெரிவிக்கும் பண்டிகை (Thanksgiving) பற்றி எழுதியிருக்கிறேன். இந்த வருஷம் அதில் ஏற்பட்டிருக்கும் முக்கிய மாற்றம் பற்றி இப்போது எழுதுகிறேன்.
இந்தியாவில் பல காரணங்களுக்காக விடிய விடிய விழித்திருந்திருக்கிறோம். முதலாவதாக இறைவனைப் பற்றிச் சதாகாலமும் சிந்தித்து அவனைத் தொழுவதற்காக சிவராத்திரி அன்று விழித்திருப்பவர்கள் இருக்கிறார்கள். அடுத்ததாக தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுப் பெண்கள் இரவெல்லாம் விழித்திருந்து பலகாரங்கள் செய்வார்கள். பலகாரங்கள் செய்யும் வேலையை இரவில் முடித்துவிட்டுத் தீபாவளி அன்று பகல் கொஞ்சம் ஓய்வு எடுப்பதோடு சினிமாவுக்குப் போவது போன்ற பொழுதுபோக்குகளிலும் காலம் கழிப்பார்கள். அடுத்து பரீட்சைக்குப் படிக்கும் மாணவர்கள் சிலர் இரவெல்லாம் விழித்திருந்து விழுந்து விழுந்து படிப்பார்கள். அந்தக் காலத்தில் கிராமங்களில் நாடகங்கள் நடத்தும்போது இரவு முழுவதும் ஊர் ஜனங்கள் விழித்திருந்து அந்த நாடகங்களைப் பார்ப்பார்கள்.
ஆனால் அமெரிக்காவில் இந்த ஆண்டு நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கு சாமான்கள் வாங்குவதற்குப் பலர் இரவு விழித்திருந்திருக்கிறார்கள். ஐரோப்பியக் குடியேறிகள் முதன் முதலில் அமெரிக்காவிற்கு வந்தபோது அப்போது அங்கு வாழ்ந்துவந்த பழங்குடி மக்கள் அவர்களை வரவேற்று நிறைய உதவிகள் புரிந்தார்கள். ஒரு ஆண்டு கழிந்த பிறகு குடியேறிகள் தாங்கள் புது இடத்தில் உயிர்பிழைத்ததற்கு இறைவனுக்கு நன்றி தெரிவித்தனர். இப்படி இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் பழக்கம் நாளடைவில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடும் பண்டிகையாக வளர்ந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் இந்தப் பண்டிகையை நவம்பர் மாதக் கடைசி வியாழனன்று கொண்டாடும் பண்டிகையாக சட்டபூர்வமாக்கினார். இருபதாம் நூற்றாண்டில் ஜனாதிபதி பிராங்ளின் ரூஸ்வெல்ட் நவம்பர் மாத நாலாவது வியாழக் கிழமையன்று அதைக் கொண்டாட ஏற்பாடு செய்தார். நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கு மறு நாளிலிருந்து கிறிஸ்துமஸுக்கு பரிசுகள் வாங்கும் வழக்கம் இருந்ததால் பரிசுகள் வாங்குவதற்கு நிறைய நாட்கள் இருந்திருக்கும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு!. அப்போதே சாமான்களை வாங்கிக் குவிக்கும் வழக்கம் அமெரிக்கர்களிடம் இருந்திருக்கும்போலும்.
நாளடைவில் நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கு மறு நாள் கிறிஸ்துமஸுக்குப் பரிசுகள் வாங்குவது எல்லோரும் பின்பற்றும் செயலாக மாறியது. இதை நன்றாகப் பயன்படுத்திக்கொண்ட வணிக நிறுவனங்கள் அன்று பெரிய அளவில் பொருள்களின் விலையில் தள்ளுபடி கொடுத்து அவற்றை விற்க முற்பட்டார்கள். அப்படித் தள்ளுபடி செய்யப்பட்ட சாமான்கள் ஒரு சிலவே கடைகளில் இருக்கும். ஆனால் அவற்றை வாங்குவதற்கு வரும் வாடிக்கையாளர்கள் தள்ளுபடியில் உள்ள பொருள்கள் தீர்ந்து போய்விட்டாலும் மற்றப் பொருள்களை வாங்குவார்கள். இதற்காகவே கடைகளையும் நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கு மறு நாள் அதிகாலையிலேயே திறந்துவிடுவார்கள். அந்த வெள்ளிக்கிழமையை கறுப்பு வெள்ளி (Black Friday) – ‘அதாவது வரவு வரும் நாள்’ – என்று அழைப்பார்கள். வணிகர்கள் தங்கள் கணக்குப் புத்தகத்தில் நஷ்டம் வந்தால் சிவப்பு மையில் கோடிடுவார்களாம். இந்த வெள்ளியன்று லாபம் அதிகமாக கிடைக்கும் என்பதால் இதைக் கறுப்பு வெள்ளி என்கிறார்கள்.
முதலில் கறுப்பு வெள்ளியன்று காலையில் எட்டு மணிக்குக் கடை திறக்கும் வழக்கத்தை ஆரம்பித்தார்கள். இதுவே காலை ஐந்து மணிக்கே திறக்க ஆரம்பிக்கும் பழக்கமாக உருவெடுத்தது. ஒரு கடை எட்டு மணிக்குத் திறந்தால் அதற்குப் போட்டியான கடை ஏழு மணிக்கே திறக்க ஆரம்பித்து அடுத்த ஆண்டு இன்னொரு கடை ஆறு மணிக்கே திறக்க ஆரம்பித்து, பின் எல்லாக் கடைகளும் காலை ஐந்து மணிக்கே திறக்கும் பழக்கத்தை ஆரம்பித்தன.
வாடிக்கையாளர்களை சாமான்கள் வாங்கக் கடைக்கு வரவழைப்பதில் கடைகளுக்குள் பலத்த போட்டி இருப்பதால் நன்றி தெரிவிக்கும் பண்டிகை அன்றே கடைகளைத் திறக்கும் பழக்கத்தை சில கடைகள் மேற்கொள்ளத் தொடங்கின. அன்று குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் ஒன்று கூடி மூன்று மணியிலிருந்து நொறுக்குத் தீனி சாப்பிட ஆரம்பித்து ஆறு மணிக்கு வான்கோழியோடு கூடிய பெரிய விருந்தை உண்ண ஆரம்பிப்பார்கள். மதுபானங்களைத் தாராளமாக அருந்தும் இந்த விருந்து முடிய இரவு வெகு நேரம் ஆகும். அதனால் அன்று அத்தியாவசிய சேவைகள் புரியும் மருத்துவமனைகள், போக்குவரத்து போன்றவை தவிர எல்லா நிறுவனங்களுக்கும் விடுமுறை. இதில் டிபார்ட்மெண்ட் கடைகளும் அடக்கம். ஆனால் கடைகளுக்கிடையே போட்டிகள் வலுத்து வருவதால் போன வருடம் வியாழக் கிழமை அன்றே விருந்து முடிந்தும் முடியாமலும் இருக்கும்போதே கடைகளைத் திறந்துவிடும் பழக்கத்தை ஓரிரண்டு கடைகள் ஆரம்பித்தன.
இந்த வருடம் இது வரை செய்திருந்த சாதனைகளை எல்லாம் முறியடிப்பது போல் எல்லா கடைகளும் வியாழக் கிழமை இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்குத் திறக்கப்பட்டு விடிய விடிய வியாபாரம் செய்துகொண்டிருந்தன. (ஓரிரண்டு டிபார்ட்மெண்ட் கடைகள் மற்ற நாட்களைப்போல் வியாழன் காலையிலேயே திறந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். அடுத்த வருடம் எல்லாக் கடைகளும் இதைப் பின்பற்றலாம்.) வாடிக்கையாளர்களும் இரவு முழுவதும் பொருள்களை வாங்கிக்கொண்டிருந்தார்கள். கடை ஊழியர்களும் அவசர அவசரமாக விருந்தை முடித்துக்கொண்டு கடைக்கு வந்துவிடுகிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்னால் கூட மறுநாள் வெள்ளியன்று கடைகளை காலையில் சீக்கிரமே திறந்தாலும் நன்றி தெரிவிக்கும் பண்டிகையான வியாழனன்று எல்லா நிறுவனங்களும் மூடியிருக்குமாதலால் எப்போதும் கார்கள் நிறைந்து காணப்படும் அமெரிக்கச் சாலைகள் அன்று ஒரு சில கார்கள் தவிர – இந்தக் கார்களில் செல்லுபவர்களும் நன்றி தெரிவிக்கும் பண்டிகையைக் கொண்டாட உறவினர்கள் வீடுகளுக்கோ அல்லது நண்பர்கள் வீடுகளுக்கோ போய்க்கொண்டிருப்பவர்கள் – வெறிச்சோடிப் போயிருக்கும். அன்று வெறிச்சோடிப் போயிருக்கும் இந்த சாலைகளைப் பார்ப்பதற்காகவென்றே நான் கொஞ்ச தூரம் வெளியே செல்வதுண்டு. ‘இன்று ஒரு நாள் எல்லோரும் வீட்டில் இருந்துகொண்டு சந்தோஷமாக பொழுதைக் கழிக்கிறார்கள்’ என்ற ஒரு நினைப்பே எனக்கு ஒரு வித சந்தோஷத்தைக் கொடுக்கும். இனி அதெல்லாம் கிடையாது போலும்.
இந்தியாவில் பல மதங்களைப் பின்பற்றுபவர்கள் வாழ்வதால் அவர்களுடைய பண்டிகைகளுக்கெல்லாம் விடுமுறை உண்டு. வருடத்தில் இருபது நாட்களாவது விடுமுறை நாட்களாக இருக்கும். அமெரிக்காவில் மிகக் குறைந்த நாட்களே விடுமுறை நாட்கள். ஈஸ்டர், மே தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், நன்றி தெரிவிக்கும் பண்டிகை நாள், கிருஸ்துமஸ் பண்டிகை நாள் ஆகியவையே. டிபார்ட்மெண்ட் கடைகள் ஈஸ்டர், நன்றி தெரிவிக்கும் பண்டிகை,கிறிஸ்துமஸ் ஆகிய தினங்களுக்கு மட்டும் மூடியிருக்கும். மற்ற விடுமுறை தினங்களில் வாடிக்கையாளர்களுக்கு விடுமுறையாதலால் அன்று சாமான்கள் வாங்க வருவார்கள் என்று டிபார்ட்மெண்ட் கடைகள் திறந்திருக்கும். ஈஸ்டருக்கு மூடுவதைப் பல கடைகள் ஏற்கனவே நிறுத்திவிட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வரை நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கும் கிறிஸ்துமஸுக்கும் மூடும் வழக்கத்தை வைத்திருந்தார்கள். இப்போது நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கு மூடுவதையும் மெதுவாகவிட்டுவிடுவார்கள் போலும். எதற்காக? சாமான்களை வாங்கிக் குவிப்பதற்காக.
சிகாகோவில் பிரபல சாக்கலேட் விற்கும் கடை ஒன்று அன்று இரவு ஒன்பது மணியிலிருந்து மறு நாள் வெள்ளி காலை ஒன்பது மணி வரை தள்ளுபடி விற்பனை செய்தது. இந்த நேரத்தில் ஒரு துண்டு சாக்கலேட்டின் விலை இருபத்தைந்து காசுகள். அந்த நேரத்திற்குப் பிறகு போனால் ஒன்றின் விலை நாற்பது காசுகள்.நூற்றுக் கணக்கில் சாக்கலேட் வாங்கும்போது தள்ளுபடி விற்பனைக்கும் தள்ளுபடி அல்லாத விற்பனைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். டி.வி. போன்ற விலையுயர்ந்த சாமான்கள் வாங்கினால் நிறையப் பணம் மிச்சம் செய்யலாம். இருப்பினும் ஆற அமர விருந்துண்டு, நண்பர்களோடும் உறவினர்களோடும் சேர்ந்து மகிழ்ந்திருக்க வேண்டிய சமயத்தில் இப்படி அடித்துப் பிடித்துக்கொண்டு மால்களுக்குஓடி வர வேண்டுமா?
கம்பெனிகளுக்குள் போட்டி என்பதால் தங்கள் சாமான்களை வாடிக்கையாளர்களை வாங்க வைப்பதற்குப் பல வகையாக விளம்பரம் செய்தனர். பிறருக்குக் கொடுப்பதற்குப் பரிசுகள் வாங்குவதற்காக விளம்பரங்கள் செய்ய ஆரம்பித்தவர்கள் இந்த வருஷம் வீட்டிற்கு வேண்டிய சாமான்கள்,தங்களை அலங்கரித்துக்கொள்ள வேண்டியசாமான்கள் ஆகியவற்றைக் கூட தள்ளுபடி விற்பனையில் இடம் பெறச் செய்தார்கள். ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்று விளம்பரம் செய்து ஒன்றைப் பரிசுக்காக வாங்கினால் இன்னொன்றைத் தங்களுக்காக வாங்கிக்கொள்ளும்படி விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களிடம் பொருள்கள் வாங்கும் வெறியை வளர்த்துவிட்டார்கள்.
ஒரு இருபத்தைந்து வயது வடிக்கையாளர் முதலில் நன்றி தெரிவிக்கும் பண்டிகையன்று இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பித்து கடை கடையாகச் சென்று அறுபது அங்குல டி.வி., ஐபாட்(iPod), குக்கர் என்று சாமான்களாக வாங்கித் தள்ளியிருக்கிறார். இதெல்லாம் அவருக்காகவும் அவருடைய மனைவிக்காகவும் மட்டுமே.
இதெல்லாம் போக ஆன்லைனில் பொருள்கள் வாங்கியவர்கள் பட்டியல் வேறு ஒவ்வொரு வருஷமும் கூடிக்கொண்டே போகிறது. இந்த ஆண்டு இருபது சதவிகிதம் அதிகமாம். இதில் கால் பங்கு செல்போன் மூலம் வாங்கப்பட்டதாம்.
அமெரிக்காவில் தயாராகும் பொருள்களை வாங்குங்கள் என்று ஒரு சாரார் விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் இப்படித் தயாரிக்கப்படும் பொருள்கள் எல்லாம் இவர்கள் ‘designer goods’ என்று அழைக்கும் விலையுயர்ந்த அணிகலன்கள், உடைகள், காலணிகள். இவற்றிற்கு அமெரிக்கர்கள் நிறையப் பணம் கொடுக்க வேண்டும். மேலும் அமெரிக்காவில் தயாராகும் எந்தப் பொருளுக்கும் வெளிநாடுகளில் தயாராகும் பொருள்களை விட அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். ஏனெனில் வெளிநாடுகளில் தொழிலாளிகளுக்குக் கொடுக்கும் சம்பளம் அமெரிக்கத் தொழிலாளிகளுக் கொடுக்கும் சம்பளத்தை விட மிகவும் குறைவு. வளர்ந்துவரும் நாடுகளில் தொழிலாளர்கள் பாதுக்காப்பிற்கு இந்தக் கம்பெனிகள் செய்ய வேண்டியவற்றை அந்தந்த நாட்டு அரசுகள் சரியாகக் கண்காணிப்பதில்லை. பங்களா தேஷில் போன வருடம் நடந்த ஆயிரம் பேருக்கு மேல் உயிர்களைப் பலிவாங்கிய விபத்தைப் பற்றித் தெரிந்திருந்தும் வெளிநாடுகளில் தயாராகும் பொருள்களை பகிஷ்கரிக்கும் எண்ணம் அமெரிக்கர்களுக்கு வந்தபாடில்லை.
அமெரிக்கப் பொருளாதாரத்தின் பெரும் பகுதி இந்த சில்லரை விற்பனையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதாம். டிபார்ட்மெண்ட் கடைகளில் நடக்கும் விற்பனை ஒவ்வொரு வருடத்திற்கும் கூடிக்கொண்டே போக வேண்டுமாம். அப்போதுதான் அமெரிக்கப் பொருளாதாரம் தொய்வில்லாமல் போய்க்கொண்டிருக்குமாம். என்ன பொருளாதாரமோ. நுகர்வோர்களை உருவாக்கும் அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளின் வேகத்தைக் கட்டுப்படுத்த அரசாலும் முடியவில்லை. இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை.
கவிஞர் காவிரிமைந்தன்
கவிஞரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். 2002ஆம் ஆண்டுவிழாவின் அழைப்பிதழைக் கொடுப்பதற்காக ராகப்ராவகம் சுந்தர் அவர்களது இல்லத்திற்கு சென்றபோது.. அங்கே இருந்த விருந்தினர் இருவர் எமக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிவசு எனப்படும் சிவசுப்பிரமணியன் அவர். சன் தொலைக்காட்சியில் வணக்கம் தமிழகம் பகுதி நிகழ்ச்சி தயாரிப்பாளர் என்பது கிடைத்த தகவல்.
சந்தித்த சில நிமிடங்களிலேயே ஒரு பெரிய பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்தார். ஆம். கவிஞரின் பிறந்தநாளில் இடம் பெற வேண்டிய வணக்கம் தமிழகம் பகுதியில் கவிஞரின் உதவியாளர் திரு. இராம கண்ணப்பன் அவர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும் என்பதே அப்பநியாகும். கொட்டும் மழையிலும் என்னுடன் இணைந்து வந்த நண்பர்.. கண்ணதாசனின் பக்தர் வேலுமணி அவர்களின் மூலம். எதோ ஒரு சில காரணங்களால் இது போன்ற பேட்டிகளைத் தவிர்த்து வந்த திரு இராம கண்ணப்பன் அவர்களை பங்கேற்கச் செய்தது இனிய செய்தியாகும்.
மேலும் சிவசு அவர்களிடம் நாங்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், அழைப்பிதழின் மேலுறையில் இடபெற்றிருந்த கவியரசின் உருவப்படத்தைப் பார்த்து கவிஞரைப் பற்றி அவர் கூறிய சில வார்த்தைகள்.. இமயமென உயர்ந்து எங்கள் மனதில் என்றும் நிலைக்கத் தக்கவை. ஆம். இந்த உலகில் நான் இவரைத்தான் மிகவும் நேசிக்கிறேன். ஒருவர் அன்னை தெரசா .. அடுத்து கவிஞர் கண்ணதாசன். ஏன் என்பதற்கும் அவரே தந்த விளக்கம் அசர வைத்தது. அன்னை தெரசா பற்றி அகிலம் அறியும். ஆனால் கண்ணதாசனைப் பற்றி அவர் என்ன சொன்னார் தெரியுமா?
உலகம்போற்றும் உத்தமர் காந்தியடிகள் தனது சத்தியசோதனையில் தன்னைப்பற்றிய செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும்போது தான் செய்த சில தவறுகளையும் பதிவு செய்து மக்கள் மனதில் உயர்ந்தார். அதைவிட பல மடங்கு.. ஏன் தன் வாழ்க்கை முழுவதையுமே தான் செய்த தவறுகளையெல்லாம் முழுக்க முழுக்க பேச்சிலும் ஏட்டிலும் ஒளிவு மறைவின்றி திறந்த புத்தகமாய் வாழ்ந்து மறைந்தவர் கண்ணதாசன் மட்டுமே. ஒரு தனி மனிதர் தன்னைப்பற்றிய நல்ல குணாதிசயங்களை மட்டுமே இவ்வுலகம் அறியச் செய்வது இயல்பு. எந்த வேளையிலும் எந்த ஒரு தனி மனிதனும் இதற்கு விதிவிலக்கல்ல! வாழும் இந்த உலகில் சிவசு அவர்களின் கணிப்பு எங்களைச் சிந்திக்க வைத்தது! இவற்றையும் தாண்டி கவிஞரின் புகழ் நிரந்தரமாக்க எப்படி முடிந்தது? தமிழ் அல்லவா கவிஞரை இன்றும் நம்மோடு இணைத்து வைத்துள்ளது?
என்னைப்போல் வாழாதீர்கள்.. நான் எழுதியது போல் வாழுங்கள் என்பது தானே கண்ணதாசன் செப்பு மொழி!
‘நீதி’ என்கிற திரைப்படத்தில் மது அருந்தும் பழக்கம் கொண்ட கதாநாயகன் பாடுன்கின்ற பாடல் ஒன்று இடம் பெற வேண்டிய நிலையில் மெல்லிசை மன்னர் மெட்டமைத்து கவிஞருக்காக காத்திருந்தபோது.. தனக்கு தோன்றிய பல்லவியை வைத்து இசை அமைப்பில் இணைத்திருந்தார். கவிஞர் அங்கே வந்தவுடன்.. தான் வைத்திருந்த பல்லவியையும் இணைத்து கவிஞரிடம் காட்ட.. கதாநாயகன் .. இனி நான் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்வதாக காட்சி..
இன்று முதல் குடிக்க மாட்டேன் – சத்தியமடி தங்கம் என்கிற பல்லவியை பார்த்து கண்ணதாசன் மெல்லிசை மன்னரிடம் தன் பாக்கெட்டிலிருந்த பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்து உன் பல்லவிக்கான சந்மனமிது. ஆனால் எந்த குடிகாரனும் இன்று முதல் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய மாட்டான். எனவே, நாளை முதல் குடிக்க மாட்டேன் என்று மாற்றி படலை எழுதித் தந்த வரலாறு இப்பாடலுக்கு உண்டு
.
ஏழைகள் வாழ்வில் விளையாடும் இறைவா நீ கூட குடிகாரன் .. என்கிற வைர வரிக்காக கண்ணதாசனை உளமாரப் பாராட்டத் தோன்றுகிறது
.
கவியரசே உன்னால் மட்டுமே படைத்தவன் மேல் இப்படி பகிரங்க குற்றம் சாட்ட முடிந்திருக்கிறது. இதிலிருந்து தப்ப.. முடியாமல் பரமனும்.. பிரம்மனும் அல்லவா சங்கடப் படுவது போல் தோன்றுகிறது..
http://www.youtube.com/watch?v=XYWxPuf7BIk
http://www.youtube.com/watch?v=XYWxPuf7BIk
கருத்துக்களை வரவேற்கிறேன்.. கவிஞரைப் பற்றிய தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் பற்றிய புளித்துப்போன .. உதவாத கேள்விகளைத் தவிர்த்து அவர்தம் பாடல்களில் உள்ள சுவைதனை, தமிழினை.. இன்னுமின்னும் இன்பம் வாசகர்கள் பெறுவார்கள் என்கிற நம்பிக்கையுடன்..
காவிரிமைந்தன்
பவள சங்கரி
தலையங்கம்
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. பிறப்பில் ஏற்படும் குறைபாடுகளையோ, அல்லது இடையில் விபத்தினால் ஏற்படும் குறைபாடுகளையோ எண்ணிக்கொண்டு காலம் முழுவதும் முடங்கிக் கிடப்பவரின் எண்ணிக்கை இன்று கனிசமாகக் குறைந்துவிட்டது என்பதே உண்மை. இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 70 மில்லியன் மக்கள் மாற்றுத் திறனாளிகளாக இருப்பதாகக் கணக்கெடுப்புகள் கூறுகின்றன. பத்தில் ஒரு குழந்தையோ அல்லது மொத்த குழந்தைகள் மக்கள் தொகையில் 3% குழந்தைகளோ மாற்றுத் திறனாளிகளாக இருக்கிறார்கள். இதில் மிகக் குறைந்த சதவிகிதத்தினர் மட்டுமே கல்வியறிவு பெற்றவர்களாகவும், வேலையில் இருப்பவர்களாகவும் இருக்கின்றனர். அரசு நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்காக குறிப்பிட்ட அளவு வேலை வாய்ப்புகள் ஒதுக்கீடு இருப்பது போல தனியார் நிறுவனங்களும் அதை கட்டாயமாகக் கடைபிடித்தால் இந்தப் பிரச்சனை பெருமளவில் தீர்க்கப்பட்டு அவர்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றப்படும். மாற்றுத் திறனாளிகளின் நிலை மாறி வர வேண்டும் என்பதற்காக நம் அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகளை பாராட்டியே ஆக வேண்டும். வேலை வாய்ப்புகள், பேருந்து, தொடர் வண்டிகளில் அவர்களுக்காக தனிப்பட்ட இட ஒதுக்கீடும், முன்னுரிமையும் அளிப்பது பாராட்டிற்குரியது. ஆனால், மாற்றுத் திறனாளிகளுக்காக வழங்கப்படும் சிறப்பு மாதாந்திர நிதியுதவியை ரூ. 500-லிருந்து ரூ.1,000-ம் ஆக உயர்த்தவும். மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் வகையில் தனி பல்கலைக்கழகம் நிறுவுவது, தொழில் வரி, சொத்து வரியில் விதிவிலக்கு அளிப்பது போன்ற சில முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி, இவர்களுடைய போராட்டங்கள் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளதும் வேதனைக்குரிய விசயம். இன்று பொது கழிப்பிடங்கள், பொது அரசு கட்டிடங்கள், மற்றும் சில தனியார் நிறுவனங்கள் போன்றவைகள் மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பட்ட கட்டிட அமைப்பை மாற்றி வருவதும் வரவேற்பிற்குரிய செயலாகும். நம் சக மனிதர்களை ஏதோ ஒரு சில குறைபாடுகளுக்காக அவர்கள் மீது தேவையற்ற பரிதாபத்தையோ அல்லது புறக்கணிப்பையோ செய்து அவர்களை ஒதுக்குவதைவிட, அவர்களும் நம்மில் ஒருவர் என்ற எண்ணத்தை அவர்களுக்குள் விதைத்து, அவர்கள் முன்னேற அவரவர்களால் முடிந்த உதவியை மனமுவந்து செய்வதே மனிதாபிமானமாகும். பெரும்பாலும் கிராமப் புறங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான எந்த ஒரு தனிப்பட்ட வசதி வாய்ப்பும் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை என்பதே நம் இந்தியாவின் இன்றைய நிலை.
மாற்றுத் திறனாளிகள் ஒவ்வொருவரிடமும், ஏதோ ஒரு தனித்திறன் மறைந்திருப்பது கண்கூடு. கண் பார்வையற்ற பலர் மிக இனிமையான குரல் வளம் உடையவர்களாக இருக்கக் காண்கிறோம். பெத்தோவன் (Ludwig Van Beethoven) தன் 32 வயதில் அரைகுறை காது கேட்காதவராக இருந்த இவர், தன்னுடைய 46ஆவது வயதில் முழுவதுமாக காது கேட்காத நிலையை அடைந்தும், சங்கீதத்தில் அவர் படைத்த இசைக் காவியங்கள் அனைத்தும், தம் 46ஆவது வயதிற்குப் பிறகு இவர் படைத்தவையே. உலகம் போற்றும் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், வின்செண்ட் வேன்கோவ், சர்.ஐசக் நியூட்டன், நெப்போலியன், அகதா கிரிஸ்டி, ஸ்டீபன் ஹாகிங், அலெக்ஸாண்டர், சார்லஸ் டிக்கன்ஸ், ஜூலியஸ் சீசர், அரிஸ்டாட்டில் போன்ற பல மேதைகள் ஏதோ ஒரு பாதிப்புடன் போராடிக்கொண்டுதான் சாதனை படைத்துள்ளார்கள் என்பது நம் வரலாறு சொல்லும் உண்மை. இப்படி ஊனத்தை வென்று சாதனைப் படைத்தவர் பட்டியல் மிக, மிக நீளம்.
இன்றும், குண்டு எறிதலில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கும், போலியோவினால் பாதிக்கப்பட்ட காலுடன் இருக்கும் விருதுநகர் ஜெயக்கொடியும், ஒரு விபத்தில் வலது கால் துண்டானபோதும், சாதனை படைக்க வேண்டும் என்ற வெறியுடன், இமயமலையின், எவரெஸ்ட் சிகரத்தை ஏறி உலக சாதனை புரிந்துள்ள, உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த அருணிமா சின்கா, தர்மபுரியைச் சேர்ந்த இரு கைகளையும் இழந்தும், தம் தன்னம்பிக்கையை இழக்காமல், தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் நான்கு பதக்கங்களையும், இந்திய அளவில் தனி நபர் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை புரிந்துள்ள வெங்கடேசன் என்று இவர்களைப் போன்ற பலர் முன்னுதாரணங்களாக வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். இவர்களுக்குத் தேவையானதெல்லாம் ஊக்கமும், உற்சாகமும், மற்றும் அனைவரும் ஒரு குடும்பமாக இருந்து செயல்படுவதும்தான் சரியான செயலாக இருக்குமேயன்றி, இவர்கள் மீது தேவையில்லாமல் காட்டப்படும் பரிதாப உணர்ச்சியும், இரக்கமும் அல்ல. ஊனம் ஒரு பலவீனம் இல்லை. அதையும் தாண்டி மனிதன் வெளிபடுத்தக் கூடிய ஆற்றல் பல இருக்கிறது என்பதை உணராதவர்கள் இல்லை. ஊனமில்லாதவர்களுக்கு ஒரு திறன் இருந்தால் ஊனமுற்றவர்களுக்கு வேறு ஒரு மாற்றுத் திறன் இருப்பதாலேயே இவர்களை மாற்றுத் திறனாளிகள் என்று அழைக்கிறோம்.
–
’கரிகாலன் விருது’ பெற்றுள்ள சிங்கை எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கர் அவர்களுக்கு வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக் கழத்தில் அமைத்துள்ள தமிழ்வேள் கோ. சாரங்கபாணி இருக்கையின் வழியாக சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் சிங்கப்பூரின் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை ”கரிகாலன் விருது” இவ்வாண்டு சிங்கை எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கருக்குக் கிடைத்துள்ளது.
2012ஆம் ஆணடு முதல் பதிப்பாக வெளியான நூல்கள் பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டன. சிங்கப்பூரிலிருந்து மொத்தம் 15 நூல்கள் வந்ததாகவும் அவற்றில் திருமதி ஜெயந்தி சங்கர் எழுதிய “திரிந்தலையும் திணைகள்” எனும் நாவல் விருதுக்குரியதாகத் தெரிவு செய்யப்பட்டதாகவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயலகத் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் உதயசூரியன் தெரிவித்தார்.
அதேபோல் மலேசியாவில் 2012ஆம் ஆண்டுக்கான விருது திருவாட்டி சுந்தராம்பாள் எழுதிய “பொன்கூண்டு” சிறுகதைத் தொகுப்புக்கு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் அடங்கிய குழு விருதுக்குரிய நூல்களைத் தெரிவு செய்தது. அவர்களின் பரிந்துரை அடங்கிய அறிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன.
விருதுகளை வழங்கும் விழா டிசம்பர் மாதம் 14ஆம் தேதி சனிக்கிழமை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடைபெறவிருக்கிறது. அதனை ஒட்டி கருத்தரங்கு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சி பற்றிய கட்டுரைகளை முனைவர் சீதாலட்சுமி, முனைவர் சு. கௌசல்யா, திருவாட்டி வீர. விஜயபாரதி ஆகியோர் படைப்பார்கள். கருத்தரங்கிலும் விருது வழங்கு விழாவிலும் கலந்துகொள்ள விரும்புவோர் கலந்து கொள்ளலாம்.
நா. ஆண்டியப்பன்
தலைவர்
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்
தேர்வுக்குழு அறிக்கை
மக்களை உயர்திணை என்று சுட்டியும் இலக்கிய வாழ்வியலை அக, புறத் திணைகளாகப் பகுத்தும் திணை மரபு கண்ட தமிழினம் அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடிகளால் உயர்திணை, அஃறிணை கடந்து உணர்ச்சிகளோடு போராடும் எந்திர மயமாகி முதல், கரு, உரிப்பொருள்களும் விரவிக் கலந்து மயங்குமாறு புலம்பெயர்ந்து அகத்தும், புறத்தும் அலைவுறுதலை இரு தமிழ்ப்பெண்களின் ஊடாக ஜெயந்தி சங்கர் தம் புதினத்தில் நுட்பமாகச் சித்திரித்துள்ளார் இப்புதினத்திற்குத் “திரிந்தலையும் திணைகள்” என்று பெயரிட்டிருப்பது ஒன்றே ஆசிரியரின் வாழ்வியல் நோக்கத்திற்கு மொழித்திற நுட்பத்திற்கும் போதிய சான்றாகும். 21-ஆம் நூற்றாண்டின் தலைவாயிலில் தோன்றிய இப்புதினம் ஒரு கால கட்டத் தமிழர் வாழ்வின் உயிர்ப்புள்ள பதிவாக காலத்தை விஞ்சி இலக்கிய வரலாற்றில் நிலை பெறும். எனவே இவர் “கரிகாலன் விருதுக்கு” மிகவும் ஏற்றவர் எனத் தேர்வுக்குழு பரிந்துரைக்கிறது.
திவாகர்
பழந்தமிழர் உணவுகளில் கிழங்கு வகைகள் அதிகம் உண்டு. அப்படிப்பட்ட கிழங்குவகைகளில் பனங்கிழங்கு வகைகள் சிறப்பு வாய்ந்ததாகும். அதிலும் முற்றிய பனங்கிழங்கு என்பது வாய்பிளந்து வரும்போது அதன் சுவை மிக அருமையாக இருக்குமாம். அப்படிப்பட்ட முற்றிய வாய் பிளந்த பனங்கிழங்குகளை விவசாயி ஒருவன் தன் அரசனுக்குக்கொடுப்பதற்காக அரச சபைக்கு வருகிறான். சரி, ஏதோ சுவையாக பனங்கிழங்கு வருகிறது.. வாங்கிப் போட்டுக்கொண்டு நேரம் கிடைக்கும்போது சாப்பிட்டுப் போகவேண்டியதுதானே..ஆனால் இந்த ராஜாதான் தமிழ் விரும்பும் ராஜா ஆயிற்றே.. விட்டு விடுவானா அப்படியே.. உடனே தன் கவிஞர் பெருமக்களைக் கூப்பிட்டு அந்த வாய் பிளந்த பனங்கிழங்குக்கு உவமையாக ஒரு தமிழ்க் கவிதை பாடச் சொல்லிக் கேட்டுள்ளான்.
இந்த புலவர் பெருமக்களே ஒரு மாதிரியானவர்கள் போலும். நக்கீரன் வழி வந்தவர்கள்.. அதுவும் தமிழ்ப் புலவர்களல்லவா. இவர்களுக்கென கற்பனை வந்து. இவர்களாக பாடினால்தான் உண்டு. ஒருவேளை சந்திரனை, சூரியனை, அரசிளங்குமரியின் கண்களை உவமையாகப் பாடு என்றால் சபை களை கட்டியிருக்குமோ என்னவோ.. . போயும் போயும் ஒரு விவசாயி கொண்டு வந்த வாயைப் பிளந்த பனங்கிழங்குக்கு உவமை வேண்டுமாம்…தம்மால் முடியாது என்பதை சொல்லாமல் சொல்லி அந்த சபையில் மௌனம் காத்தனர். மன்னனுக்கும் கோபம் வந்தது.. தனக்கென ஒரு கவிதை கேட்டால் பாடமாட்டாத இவர்களெல்லாம் என்ன புலவர்களோ.
சத்திமுத்திப் புலவர் என்பவர் சோழநாட்டைச் சேர்ந்தவர். பாவம் வறுமையில் வாழும் இந்த புலவர் தன் புலமைக்கு யாராவது பரிசு தரமாட்டார்களாவென ஊர் ஊராக திரிந்து களைப்பால் இந்த அரசன் ஆளும் நாட்டுக்கு வருகிறார். இரவு வேளை.. ஒரு வீட்டின் முற்றத்தில் படுக்க இடம் கிடைக்க அங்கே படுத்துக்கொண்டு இரவைக் கழிக்க நினைப்பவர் கண்களுக்குப் பக்கத்தில் ஒரு நாரைப் பறவையும் இவருக்கு துணையாக அந்த முற்றத்தில் இருப்பது தெரிகிறது. அந்த பறவையை தன் மனைவிக்கு தூது செல்லப் பணிக்கிறார். தன் வீட்டில் தனக்காகவும் தான் கொண்டுவருவதாக சொல்லியிருக்கும் செல்வத்துக்காகவும் காத்துக் கொண்டிருக்கும் மனைவியிடம் தன் நிலையை எடுத்துச் சொல்லச் சொல்லிப் பாடுகிறார்.
’நாராய் நாராய் செங்கால் நாராய்;
பழம்படுபனையின் கிழங்கு பிளந்தென்னப்
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்’ என்று ஆரம்பித்து கவிதை படிக்கிறார்.
அவரது அதிர்ஷ்டம் அன்று இரவு சோதனைக்காக மாறு வேடத்தில் வந்திருந்த அந்த நாட்டு அரசனின் காதுகளிலேயே இந்தப் பாடல் ஒலிக்க.. (இனிமேல் கதை புரிந்திருக்குமே)
அது சரிதான், இந்தக் கதையை ஏன் சொல்லுகிறேன் என்றால் இந்த வார வல்லமையில் ஒரு அழகான நாரையைப் பற்றிய பாடல் கண்டேன். திரு சச்சிதானந்தம் அவர்கள் தன் குறவன் பாட்டுப் பகுதியில் இந்தப் பாடலை வேறு விதமாக எழுதியிருந்ததும் அந்தப் பழைய நாரைப்பாடல் நினைவுக்கு வந்தது, குறவன் பாட்டு நான் ரசித்துப் படித்து வரும் பாடல்.
வேகவைத்துத் தோலுரித்து, நுனிதொடங்கிப் பாதிவரை
பிளந்தபின்பு, நடுத்தண்டை நீட்டி நிற்கும்,
பேரலகைப் பிளந்து நாநீட்டி நிற்கும்!
இந்தப் பாடல்கள் முழுவதையும் படித்த பிறகு அவரைப் பாராட்டுவது நல்லது என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் நடுவில் இந்த நாரை வந்து ‘காலத்தை ஏன் வீணடிக்கிறாய் என்று கேட்பது போல பட்டது. அதுவும் மிகவும் பிடித்த சத்திமுத்திப் புலவர் பாடிய பாடல் போல பட்டதால் அவரை மிகவும் பாராட்டி இந்த வார வல்லமையாளர் விருது வழங்குகிறோம். திரு சச்சிதானந்தம் அவர்களுக்கு வாழ்த்துகள்.
கடைசி பாரா: திரு வெ. கோபாலனின் பட்டினத்தார் பாடல்களிலிருந்து
மாதா உடல் சலித்தாள், வல்வினையேன் கால் சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே – நாதா
இருப்பையூர் வாழ் சிவனே, இன்னுமோர் அன்னை
கருப்பையூர் வாராமற் கா.