Blog

  • சேக்கிழார் பாடல் நயம் – 159 (அங்கண்)

    சேக்கிழார் பாடல் நயம் – 159 (அங்கண்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல்

    அங்கண் அமரும் திரு முருகர் அழகுஆர் புகலிப் பிள்ளையார்
    பொங்கு மணத்தின், முன் செய்த பூசை அதனால் புக்கு அருளிச்
    செங்கண் அடல் ஏறு உடையவர் தாம் சிறந்த அருளின் பொருள் அளிக்கத்
    தங்கள் பெருமான் அடி நீழல் தலையாம் நிலைமை சார்வு உற்றார்

    வரலாறு

    வயலில் கயல் உகளும் அவ்வூரில் வாழும்  முருகநாயனார்  தாம் செய்த தவத்தால்,  விடை மேல் வரும் சடையார் அணிந்து கொள்ளத்தக்க திருப்பள்ளித்தாமம் எனப்படும் தலை மாலைக்குரிய பூக்களைப் பறித்து   பூணூல் அணிந்த வேதியராகிய அடியார், வேதவாக்கியங்கள் நான்கிற்கேற்ற  அவற்றைத் தனித்தனிப்  பூக்கூடை களில்  இட்டார்.

    மரங்களிலும், செடிகளிலும் , கொடியிலும், நீரிலும்  பூக்கின்ற  மலர்களின் தரம், விரியும்  நேரம், பறிக்கும் நேரம்  ஆகியவற்றை  நுட்பமாக  உணர்ந்து வேதத்தின் ஆறங்கம் போன்ற கோவை, இண்டை, கண்ணி , மாலை, பிணையல், தொடை ஆகிய ஆறு  வகைகளில் அஞ்செழுத்து ஓதித்  தொடுத்தார்.

    அவர் வேதியர்  என்ற முறையில்  திருஞான சம்பந்தரின் நண்பர்  என்ற பெருமை பெற்றார். அயனும் மாலும் அறியாத சிவன் எழுந்தருளும் வர்த்தமான ஈச்சுரத்தில்  நாளும் பொழுதும் வழுவாமல் அஞ்செழுத்தோதி வழிபட்டார். பின்னர் திருஞான சம்பந்தருடன் இணைந்து இறைவன் திருவடி அடைந்தார். இதனைச் சேக்கிழார்,

    அங்கண் அமரும் திரு முருகர்   அழகுஆர் புகலிப் பிள்ளையார்
    பொங்கு மணத்தின், முன் செய்த   பூசை அதனால் புக்கு அருளிச்

    செங்கண் அடல் ஏறு உடையவர் தாம்  சிறந்த அருளின் பொருள் அளிக்கத் தங்கள் பெருமான் அடி நீழல்   தலையாம் நிலைமை சார்வு உற்றார்

    என்று பாடினார்,

    அப்பாடலின் பொருள்

    அவ்விடத்து அமர்கின்றதிருமுருகனார்,அழகிய புகலியில் வந்த ஆளுடைய பிள்ளையாருடைய சிவம் பொங்கும் திருமணத்தில் முன்செய்த பூசையின் பயனாலே புகுந்தருளிச், செங்கண்ணுடைய வலிய இடபத்தையுடைய சிவபெருமான் சிறந்த அருளாகிய இனிய பொருளை அளிக்கத், தம் பெருமானாரது திருவடிநீழலின்கண்ணதாகிய நிலைபெற்ற தன்மையைச் சார்வுற்றனர்.

    விளக்கம்

    அங்கண்  என்ற சொல்  அவ்விடத்து என்ற பொருளில்  அவ்வூராகிய  புகலூரில் என்றும்,  அதன்கண் அஃதாவது பூசையின்கண் என்று உரைப்பினும்  அமையும். அங்கண்மை- அன்புடைமை என்ற உட்குறிப்பும் காணப்படும்.

    அமரும் என்ற சொல், விரும்பியிருக்கும். பூத்திருப்பணியிலும், பூசையிலும் ஆளுடையபிள்ளையாரது நண்பினிலும் விரும்பி ஒழுகும் என்ற பொருளைக் காட்டும் அழகார் புகலி  என்ற தொடர் ,  புகலி என்ற  சீகாழியைக் குறிக்கும்.  புகலியின் அழகுச் சிறப்புக்களை ஆளுடைய பிள்ளையாரது திருப்பதிகங்களாலும், பாட்டுக்களாலும், பிறவிடங்களாலும் கண்டுகொள்ளலாம்

    பொங்குமணம் என்ற தொடர்,  சிவம்பெருக்கும் பிள்ளையாரது சிவம் பெருக்கும் திருமணத்தைக்  குறித்தது . பொங்குதல் – மேன்மேல் வளர்தல். திருமணத்தில் வந்த எல்லாரும் சோதிவாயிலினுள்ளே புகும்வரை சோதியோங்கியும் அத்திருவாயில் திறந்தும் சிவத்துவம் வளர்ந்துகொண்டேயிருந்த வரலாற்றைக் காட்டியது..

    முன்செய்தபூசை  என்ற தொடரில்,  இப்பிறப்பிற்செய்த பூசையும், அப்பூசைக்குக் காரணமாயிருந்த  முன்னைத் தவமும் கூறப்பெற்றது

    பூசையதனாற்புக்கருளி என்ற தொடர், ஆளுடைய பிள்ளையாரது திருமணத்திற் புகுவதற்குப் பூசைகாரணமாகிய.து. பூசையாகிய தவம் செய்தோரே அத்திருமணத்திற் புகப்பெற்றார் என்பதுண்மை. என்னை? அதிற்புகுந்தோர் அனைவரும் முத்தியடைந்தமையாலும்,

    சிவஞான சித்தியாரில்,

    “வேத சிரப்பொருளை மிகத்தெளிந்தும் சென்றால்  சைவத், திறத்தடைவர்
    இதிற் சரியை கிரியா யோகஞ் செலுத்தியபின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வார்”

    என்பதும், தவஞ் செய்யாதார் சிவனடி சேரார் என்பதும் உண்மை முடிபாதலாலும் முன்செய்த பூசைகாரணமாகத் திருமணத்திற்புக்கனர் என்றார். அவ்வாறு திருமணத்திற் புகுதலே முத்திபெற்ற தாய் முடிந்ததாலின் புக்கருளி என்று அருமைப்பாடு பெறக்கூறினார்.

    சிறந்த அருள் இன்பொருள்  சிவனருளையும் இனிய சிவானந்தப் பயனையும் குறித்தது.

    அடிநீழல் தலைஆம் நிலைமை என்ற தொடரில்,  நீழல் தலை – நீழலின் கண்ணே என்பதைக் காட்டியது. ஆம் – ஆகின்ற. நிலைமை – நிலைபெற்ற தன்மை – மீளாநிலையாகிய  பேராவியற்கை ஆகும்.  இது சிவனடி பெறுதலாகிய நிலைத்த வீடுபேறு…

    சிவஞான சித்தியாரில் .”செலுத்தியபின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வார்” என்றும்,

    “ஈனமிலாப்பொருளதனைச் சிந்தித்த லைந்தும்,
    இறைவனடி யடைவிக்கும் எழில்ஞான பூசை”

    என்றும் கூறியபடி இந்நாயனார் செய்த பூசை இவருக்கு ஞானசம்பந்தரின்  திருமணத்தின் வழியே இறைவனடியில் குடியிருக்கும் நிலை தந்தது. ஞானத்தாற் சிவனடி சேர்தல் என்ற உண்மையானது இந்நாயனாரளவில் ஞானசம்பந்தரது துணையால் என்ற குறிப்புத்தர நிகழ்ந்ததும் காண்க. அது குறிக்கவே ஆசிரியர் “மணத்திற் புக்கருளி அடிநீழல் – நிலைமை சார்வுற்றார்” என்றருளினர்.

    இந்நாயனார் மலர்பறித்துச் சாத்திமகிழ்தலாகிய சரியையும், சாந்தம் புகை முதலியன கொண்டு சிவலிங்கத்தில் பூசித்தும் அருச்சித்தும் வழிபடுதலாகிய கிரியையும், அஞ்செழுத்துப் பயிலும் அகப்பூசையாகிய யோகமும், செலுத்தியபடியால் அவை காரணமாக ஞானத்தினுட் புகுந்தனர் என்ற குறிப்பும் பெறப் பூசையதனால் புக்கருளி என்ற தொடரின்  நயமாயிற்று.

    சார்வுற்றார் என்ற தொடரில்  சார்பு – சைவசித்தாந்தம்  உணர்த்தும் மரபுப்பெயர். முன்னர், இப்பிறவியின் சார்வுற்ற உயிர், தான் சாரவேண்டிய மேலைச்சார்பினையுணர்ந்து, இவ்வுலகச் சார்பு கெட ஒழுகிய சிவஞான ஒழுக்கத்தாலே சிவனடி நீழலாகிய நிலைத்த சார்பினை அடைந்தார்!  இவ்வாறு இந்நாயனார் சிவனடி நீழல் சார்வுற்ற சிறப்பை,

    “சீர்பெருகு நீலநக்கர் திருமுருகர் முதற்றொண்டர்”

    என்ற திருஞானசம்பந்த நாயனார் புராணத்திருப்பாட்டாலும் அறிகிறோம்.

    இப்பாடலில்  முருக நாயனார் ஞானசம்பந்தப் பெருந்தகையின் நட்பைப்  பெற்றதையும்,  தாம் செய்த சரியை முதலிய நான்கின் வழியிலும்,  அவருடன்  சிவலோகம் சென்றதையும் விளக்குகிறது!

    Share
  • நெடும்பாவில் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    நெடும்பாவில் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்
                        உதவிப்பேராசிரியர்
                        ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    ’எச்’ தாலுக்காவின் ஐம்பதாம் எண் வாக்குச்சாவடி எதுவென்று தெளிவானது. நகரத்திலிருந்து வெகுதொலைவில் உள்ள நெடும்பாவில்

    “கலெக்டரின் கணினியில் இத்தனை நாட்களாக பாதுகாத்து வைத்திருந்த மிகப்பெரிய இரகசியங்களில் ஒன்று இதுதான்” என்பதை முதலாவது சாவடியின் ஆபிஸர் சிவப்பட்டேரிக் கூறினார். உயர் இரத்த அழுத்தத்தைக் காரணம் காட்டி தன்னை தேர்தல் வேலையில் ஈடுபடுத்தக்கூடாது என்று அவர் ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

    பழக்கப்பட்ட தாலுக்கா ஆபிசின் வாசிலில் நானும் மூன்று வாக்குச்சாவடி அலுவலர்களும் ஒரு வாக்குச்சாவடி அசிஸ்டெண்டும் உடன் இருந்தனர். நாங்கள் தேர்தல் சம்பந்தப்பட்ட பொருள்களை பரிசோதிப்பதில் ஈடுபட்டிருந்தோம்.

    அதற்கிடையில் ஒரு பழக்கமில்லாதவன் எங்க பக்கத்தில் வந்தான்.

    ”இங்க எங்கே…….?” அவன் நலம் விசாரித்தான்.

    ”நெடும்பாவிற்கு” நான் சொன்னேன்.

    ”ஹா! நெடும்பா!

    நல்ல இடம்…… .நா பல தடவ அங்க போயிருக்கேன்”  அறிமுகமில்லாதவன் இனம் புரியாத சிரிப்புடன் கூறினான். அவனின் கண்கள் ஜொலித்தது. நான் கொஞ்சம் சந்தேகத்தோடு சிவப்பட்டேரியின் முகத்தைப்பார்த்தேன்.

    ”அங்கே சௌகர்யமா இருக்குமா?”

    சிவப்பட்டேரி அவனுக்கு நேராகத் திரும்பினான்.

    சாரே என்ன சௌகர்யம் வேணும்? நல்ல காட்டுப்பூனை போல இருக்கிற பொம்பளங்க இருக்கற ஊருதா. வெளியிலிருந்து வர்ற ஆளுங்களப் பார்த்தாலே குதித்து விழுவாங்க. கறுப்பா இருந்தா என்ன? தேகத்தோட ஒரு வடிவமிருக்கே? போதாக்குறைக்கு பச்ச மருந்துகளோட மணமும்; அறிமுகமில்லாதவன் இவ்வளவும் கூறி, கூடுதலாக வேறெதுவும் கேட்க இடந்தராமல் கூட்டத்தில் கலந்தான்.

    மதியவேளை. ஜீப் அதிகவேகமாகப் பாய்ந்தது. நான் ரூட் ஆபிசர்க்கும் டிரைவருக்குமிடையில் அமர்ந்திருந்தேன். சிவப்பட்டேரியும் மற்றுள்ளவர்களும் பின்னால் அமர்ந்திருந்தனர்.  பின்னால் அவர்களுக்கு நடுவில் இரண்டு வாக்கு பெட்டிகள். எண்ணி அடுக்கப்பட்ட எண்ணூற்றி முப்பது வாக்கு காகிதங்கள். திருத்தப்பட்ட தேர்தல் அட்டவணை அழியாத மை. அரக்கு. முத்திரை. காடாத்துணிப் பைகள் முதலியவை. ஜீப் பின்னுக்குத் தள்ளப்படுகின்ற நகரக்காட்சிகளில் ஆங்காங்கே காமசூத்ராவின் விளம்பரங்கள். அவை படிப்படியாக இல்லாமல் போனது. வெளிக்காட்சிகள் மாறியது.

    காய்வதற்காக அடுக்கி வைக்கப்பட்ட செருப்புகளும், தொங்க விடப்பட்ட தோல் சுருளுகளும், நாங்கள் கடந்து செல்வது செருப்பு தைப்பவர்களின் கிராமம் வழியாக என்பதை வெளிப்படுத்தியது.

    வரண்ட உற்சாகமற்றச் சற்றுப்புறங்கள். ஏதோ பழமையான ஒரு கடவுளின் கோயிலுக்கு முன்னால் சில சிறுவர்கள் அம்மணமாக அசைவற்று நின்று கொண்டிருந்தார்கள். நிழல்களில் சாய்ந்து படுத்துக் கொண்டிருக்கும் வயதானவர்கள்.

    ”இனியும் ரொம்பகாலத்துக்கெல்லாம் இவங்க  செருப்பு தயாரிக்க மாட்டாங்க” வயதானவர்கள் மேலிருந்த பார்வையை நகர்த்தி ரூட் ஆபிஸர் கூறினார்.

    ”அது ஏ அப்படி?” டிரைவர் அந்த காரணத்தை அறிய விருப்பம் காட்டினார்.

    ”மிருக வதை நிறுத்தப் போறாங்க இல்லையா?. அப்பறம் இவங்களுக்கு தோல் எப்படிக் கிடைக்கும்” ரூட் ஆபிஸர் கம்யூனிசக் கண்ணோட்டத்தோடு கூறினார்.

    ஜீப் போய் கொண்டிருந்தது.   காய்ந்த கிளைகளுள்ள மரங்களுக்கிடையில் வெயில் மின்னியது. நான் கண்களை மூடினேன். பிறகெப்போதோ குயவர்களின் ஊர் வந்தது. வரிசை வரிசையாக மண்பாண்டங்கள்.

    ”நாம இனியும் அந்த எடத்துக்குப் போகல இல்லையா?” பின்னாலிருந்து மூன்றாம் ஆபிஸரான அரபி  மொழியாசிரியர் கேட்டார்.

    ”பாதி தூரம்தான் ஆயிருக்கு” ரூட் ஆபிஸர் கூறினார். சுவர் விளம்பரங்களோ வெளியில் எங்கும் காணவில்லை. ஒரு பாலைவன பூமி போன்ற இடம் வழியாக ஜீப் நகர்ந்தது.

    முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு மஞ்சள் கட்டிடத்தின் முன்பாக ஜீப் தனது பயணத்தை முடித்தது. அரசு அலுவலகம் என்று சுவரில் கறுப்பு நிற எழுத்தால் குறிக்கப்பட்டிருந்தது. நான் வெளியிலிறங்கிச் சுற்றும் முற்றும் பார்த்தேன். செம்மண் மைதானத்தின் ஓரங்களில் கறுப்பு நிறப் பாறைகளும், நரைத்த முடி போன்ற ஒரு வகை புல்லும், வடக்குப் பக்கத்தில் ஒரு பெரிய காற்றாடி மரமும் அசையாமல் நின்றது.

    ”இங்கேயெல்லாம் யாரையுமே காணோமே” சிவப்பட்டேரி சொன்னான்.

    ”ஆளுக எல்லாம் அங்கக் கீழே இருப்பாங்க. ரூட் ஆபிஸர் காற்றாடி மிஷினுக்கு நேராக கை காண்பித்தார்.

    போலிங் அசிஸ்டெண்டும், மற்ற இரண்டு சாவடி ஆபிஸர்களும் ஜீப்பிலிருந்து தேர்தல் அறைக்கான பொருட்களைக் கீழே இறக்கினர். ரூட் ஆபிஸர் கட்டிடத்தைத் திறந்தார். அதற்குள்ளிருந்து நாற்றம் வந்தது.

    “நாசம் புடிச்ச எலிங்க. நேத்துதா அத்தன எலிப்பீயையும் எடுத்து வீசினேன்” ரூட் ஆபிஸர் கோபப்பட்டார்.

    எலிகளை எங்கும் பார்க்க முடியல ஆனால் நாங்கள் இருக்கிறோம் என்கிற சத்தத்தை எழுப்பிக்கொண்டிருந்தன.

    ”பாத்துக்கோ இன்னைக்கு இங்க ஆளிருக்கு. தோட்டாக்கள் நிறைத்த துப்பாக்கியும்  புடிச்சு ஒரு போலீஸ்காரணும் நிப்பா” ரூட் ஆபிஸர் எலிகளை மிரட்டினார். அவைகளோ அவரின் மிரட்டலை ஏற்றுக்கொண்டது போல மேலும் சத்தமிட்டது.

    “பரவால்லே” ரூட் ஆபிஸர் தனது வேலையில் ஈடுபட்டார். அவருக்கு அவசரமாகத் திரும்பிப்போக வேண்டியிருந்தது.

    ”கீழே ஐயா என்கிற ஆளோட டீக்கடை இருக்கு. சாப்பாடு அங்கே கிடைக்கும். தண்ணிக்கும் பிரச்சனையில்லை. இதுக்கு மேலே ஒரு சௌகர்யம். இந்த மாதிரி இடத்தில எதிர் பார்க்கக் கூடாது இல்லையா?”. அவர் அலுவலகத்தின் சாவியை என்னிடம் கொடுத்துவிட்டு ஜீப்பிற்கு நேராக நடந்தார்.

    நாங்க வேலை தொடங்கினோம். நெடும்பாவில் வெயில் மங்கத் தொடங்கியது. இருட்டறதுக்கு முன்பு நிறைய வேலைகள் முடிக்க வேண்டியிருக்கு. அதிகாலைல எழுந்திருக்க வேற செய்யணும். போலிங் ஏழு மணிக்கே ஆரம்பிக்க வேண்டும். திடீரென என்னமோ மேலிருந்து வந்து எங்களுக்கு நடுவில விழுந்தது.

    நான் ஜன்னலுக்குப் பக்கத்தில் ஓடினேன். வெளியில் கறுப்புநிறச் சிறுவன். அவனுடைய கண்களில் விசித்திரமானப் பார்வை தெரிந்தது. ஒன்று ரெண்டு நிமிடங்கள் அவன் அப்படியே நின்றுவிட்டு வேகமாக ஓடினான்.

    ஒரு கல்லில் பொதிந்து எதையோ அவன் எங்களுக்கு நடுவில் எறிந்த செய்தியை அதற்குள் அனைவரும் வாசித்திருந்தனர்.

    ”ஒ. இது கொடூரம் தான்” அரபி மொழியாசிரியரின் முகம் வெளிறியது.

    ”நாம என்ன பண்றது”?. ரெண்டாம் போலிங் ஆபீஸரான ஓவிய ஆசிரியர் பயத்தோடு கேட்டார்.

    வெளியில் ஒரு வாகனத்தின் சத்தம் கேட்டது. எங்களது கவனம் அங்கே திரும்பியது. கரும் நீல நிற வாகனம் ஒன்று மைதானத்திற்கு அருகில் நின்றது. யூனிஃபோம் அணிந்த ஒரு போலீஸ்காரன் கையில் மூங்கில் தடியும் மற்றொரு கையில் பையுடன் இறங்கினான். பையை கீழேவைத்துவிட்டு மூங்கில் தடியை இடது தோளில் சொருகிவிட்டு வாகனத்தின் முன்சீட்டில் இருக்கும் மேலதிகாரியை அதிகாரப்பூர்வமாக வணங்கினார். வாகனம் திரும்பிச் செல்லும்வரை அவர் அதே நிலையில் நின்றார்.

    ”அப்பாடா! சரியான நேரத்துக்கு போலீஸ்காரர் வந்தாரே” போலிங் அசிஸ்டெண்ட் ஆபிஸர் நிம்மதியடைந்தார்.

    ”ஒவ்வொரு கல்லையும் நான் அசைத்து பார்ப்பேன். நெடும்பாவில் இருக்கிற ஒவ்வொரு கல்லையும்” போலீஸ் ஆபிஸர் நெடும்பாவில் கிராமம் வழியாக நடக்கும்போது என்னுடன் வந்த அவர் சத்தம்போட்டுக் கூறினார்.

    ”யாரு அந்த பையன்? பதுங்கி நிக்காம சீக்கிரமா வெளில வர்றதுதான் நல்லது”. அவர் புல்தரையில் நின்றுகொண்டு சத்தமிட்டார் பதிலொன்றும் எழவில்லை

    ”எல்லோரோட முட்டியயும் அடிச்சு ஒடச்சிருவேன். வாடா வெளில” அவர் ஷூக்களணிந்த வலது காலை நிலத்தில் ஓங்கி அடித்தார்.

    ”சார் இங்க நில்லுங்க, நானொரு கை பாக்கறே” அவர் ஒரு வேட்டைநாயைப்போல இருப்பக்கங்களிலும் கவனமாகப்பார்த்துக் கொண்டு ஒரு வைக்கோல் போருக்குப்பின்னால் மறைந்தார். சிறிது நேரம் கழிந்து வெற்றியரவத்தோடு அவர் வெளியில் வந்தார். அவருடன் கூனிக்குறுகி நடுங்குகின்ற ஒரு கிழவனுமிருந்தார்.

    ”நானிந்த ராஸ்கலைப்  வைக்கோலுக்குள்ளிருந்துதான் புடிச்சேன். போலீஸ்காரன் அவரை எனக்கு முன்னால் நகர்த்தி நிறுத்தினார்.

    வயதானவரின் கண்களில் வெண்மைநிற அடையாளம் இருந்து.

    ”சொல்லடா. உன்னோட பேரு என்னான்னு?” போலீஸ்காரர் கர்ஜித்தார்.

    ”சௌக்கார்” கிழவன் கூறினான்.

    ”அந்த திமிரெடுத்த பையன் உன்னோட யாரு?

    கிழவன் பேசவில்லை. அதற்குள் மறைவிடங்களிலிருந்து பலரும் வந்தனர். கறுப்பு நிற சிலை போன்ற முகங்கள்.

    ”ஓ ஒளிஞ்சிருந்தீங்களா? போலீஸ்காரன் ஏளனமாகக் கேட்டு மற்றுள்ளவர்களுக்கு நேராக நகந்தார். அவர்கள் யாரும் அசையவில்லை. உறைந்தக்காட்சிகள்.

    ”பரவாயில்ல. இங்க உங்கக் கூட்டத்தில நிறைய அழகிக இருக்காங்கனு கேள்விப்பட்டேனே. அவங்க எல்லா எங்கே? பச்ச மருந்துகளோட வாசனை தானே அவங்களுக்கு”?

    போலீஸ்காரர் தன்னை உற்றுப்பார்க்கின்றவர்களுக்கு முன்னால் மூங்கில் தடியை வாயுவில் சுழற்றிக்கொண்டு நடந்தார்.

    “காட்டுப்பூனைகளோட அறிவு. பச்சை மருந்துகளோட வாசம்.

    ”நானிங்க வந்ததே அதையும் மனசில வெச்சுதா. ட்யூட்டி மட்டும் வேணும்னா எனக்கு வேற ஏதாவது இடத்தில வாங்கியிருக்கலாம்” போலீஸ்காரன் சிரித்தான். அவருடைய மூங்கில் தடி அப்போது வலது கை தொடையில் தொங்கிக்கொண்டிருந்தது.

    “சார் நமுக்குப் போகலாம்” நான் அவரை அழைத்தேன்.

    “உம். ஆனா நா இங்க வருவே. எனக்கு வேண்டியது நல்ல பரங்கி மாங்காய் வற்ற வெச்ச சாராயமும், ஒரு கோழியும், ரெண்டு பொம்பளைகளும். புரிஞ்சுதா? ” அவன் என்னுடன் நடந்தார்.

    நான் திரும்பி பார்த்தபோது. பார்வை, துணுக்கு செய்தி அனுப்பின சிறுவனை எங்களுடைய கண்கள் அடைந்தது. ஒரு நிமிடம் நான் திகைத்துப்போனேன்.

    ”இத பாத்தீங்களா? டீக்கடை நடத்தும் ஐயா, கரிபடர்ந்த சுவரில் உள்ள ஒரு நோட்டீஸை சுட்டிக்காண்பித்தார்.

    ”நெடும்பாவில் சொல்கிறது” அதுதான் நோட்டீஸின் தலைப்பு சிவப்பு எழுத்துக்கள்.

    யாரு இத இங்க ஒட்டனாங்கனு தெரியல, ஆனா புடுங்கி வீச தைரியமில்லை”. ஐயா சொன்னார். அவர் பச்சை நிறமுள்ள அரைக்கை ஆடையும், முழங்கால் வரைக்கட்டிய துண்டும். காதில் சின்ன கடுக்கணும் அணிந்திருந்தார். அவருடைய கால் முழங்காலுக்குக் கீழே சொரிந்து வீங்கியிருந்து.

    பார்த்துக் கொண்டிருக்கவே நெடும்பாவில் இருட்டானது. எலிகள் சத்தமிட்டுக் கொண்டிருந்தன. வெளியில் மைதானத்தில் சத்தமிட்டுக் கொண்டு  காற்று வீசியது. இந்த சப்தங்கள் அச்சத்தை உருவாக்கின.

    ”காற்று இப்படி ஓசையிடுவதை நான் இதுவரைக் கேட்டதே இல்லை” சிவப்பட்டேரி கூறினான்.

    தாழ்ப்பாள் இல்லாத ஜன்னல்கள் காற்றில் ஆடியது. உடனே வந்தர்றேன்னு சொல்லிட்டுப்போன போலீஸ்காரர் இனியும் வரவில்லை. காற்று சற்று அதிகமானது. நான் கேட்கறது போலீஸ்காரரோட அலறல்னு எனக்கு ஏதோ தோன்றியது. ஒரு வைக்கோல் போருக்கு முன் ஒரு விலங்கைப் போல நின்று அவர் அலறிக்கொண்டிருந்தார். தீ எரிந்து கொண்டிருந்து. அவரின் உருவம் தீ வெளிச்சத்தில் தெளிவானது. அவர் அம்மனமாக நின்றிருந்தார். குறிகள் தொங்கிக் கொண்டிருந்தது.

    ”நாம கூப்பிட்டுப்பார்த்தாலோ” நான் சிவப்பட்டேரிகிட்ட சொன்னேன்.

    அவர் உடனே என்னுடன் புறப்பட்டார். அவரிடம் டோர்ச் லைட் இருந்தது. நாங்க காற்றை எதிர்த்து நடந்தோம். இடைவெளி இல்லாத இருட்டில் காற்று ஆரவாரித்துச் சென்றது. புழுதி எங்களை மூடியது. பாறைகளின் வெப்பம் தணிந்திருக்கவில்லை.

    ”ஓய்”. ஒரு பாறைக்கு மேல் ஏறி நின்று சிவப்பட்டேரி கூவி விளித்தார்.

    அது இருட்டில் எங்கோ கலந்தது. மற்றொரு பாறையில் நான் ஏறி நின்றேன். நெடும்பாவின் கூரிருட்டைப் பார்த்து நான் சத்தமிட்டேன்.

    ஓய்…………….ஓய்.…………………..

    Share
  • குறளின் கதிர்களாய்…(388)

    குறளின் கதிர்களாய்…(388)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(388)

    கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
    மாடல்ல மற்றை யவை.

    – திருக்குறள் – 400 (கல்வி)

    புதுக் கவிதையில்

    ஒருவனுக்கு
    அழிவே இல்லாத
    அதிகம் சிறப்புடைய
    செல்வம் கல்வியே,
    அதை விடுத்துப்
    பொன் பொருள் போன்றவை
    அனைத்துமே சிறப்புடை
    செல்வமே யல்ல…!

    குறும்பாவில்

    கல்வியே ஒருவனுக்கு
    அழிவில்லா சிறப்புடை செல்வம், அதுவன்றிப்
    பிறவெல்லாம் செல்வமேயல்ல…!

    மரபுக் கவிதையில்

    கல்வி மட்டும் ஒருவற்கு
    காசினி தனிலே பெருஞ்செல்வம்
    எல்லை யில்லாச் சிறப்புடனே
    என்றுமே அழியாத் தன்மையதே,
    இல்லை யதற்குக் களவதுவும்
    எடுப்பதி லேதும் குறையாதே,
    செல்வ மிதனைத் தவிரவெல்லாம்
    செல்வமே யில்லை பாரினிலே…!

    லிமரைக்கூ

    கல்வியது சிறப்பினில் பெரிதே
    செல்வ மதுபோல் வேறில்லை ஒருவற்கு,
    இதைப்போல் கிடைத்தல் அரிதே…!

    கிராமிய பாணியில்

    செல்வம் செல்வம் பெருஞ்செல்வம்
    கல்விதான் எப்பவும் பெருஞ்செல்வம்..

    ஒலகத்தில ஒருவனுக்கு
    ஒசந்த செல்வம் கல்விதான்,
    அது அழிவில்லாதது
    களவு போவாது
    குடுத்தாலும்
    கொறஞ்சி போவாத செறப்புள்ளது,
    பொன்னு பொருளுங்கிற
    மத்த செல்வமெல்லாம்
    செல்வமே யில்ல..

    தெரிஞ்சிக்கோ,
    செல்வம் செல்வம் பெருஞ்செல்வம்
    கல்விதான் எப்பவும் பெருஞ்செல்வம்…!

    Share
  • சௌந்தர்ய லஹரி – 15

    சௌந்தர்ய லஹரி – 15

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பதினைந்தாவது ஸ்லோகம், அம்பிகையின் ரூப வர்ணனையில் தொடங்கி, அருளின் மேன்மைகளில் விரிகிறது. கல்வி, கேள்விகளில் சிறப்புப் பெற்றிருக்க, கவித்துவத்தை விரும்புகிற அனைவரும் இந்தப் பாடலையும் இதற்கு அடுத்து வரும் பாடலையும் தியானித்தால், முழுப் பலன் கிடைக்கும். இந்த அழகிய பாடலை எளிய தமிழில் மதுமிதா வழங்குகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சௌந்தர்ய லஹரி – 14

    சௌந்தர்ய லஹரி – 14

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பதினான்காவது ஸ்லோகம். ஸ்ரீ சக்கரத்தில் உள்ள ஆதாரச் சக்கரங்களின் கிரணங்கள் எப்படி உள்ளன? அவற்றுக்கும் பருவங்களுக்குமான தொடர்பு எவ்வாறு உள்ளது? ஆகியவற்றை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழ்வழியில் படித்தால் வேலை கிடைக்குமா?

    தமிழ்வழியில் படித்தால் வேலை கிடைக்குமா?

    தமிழ் அநிதம் அமைப்பும் திண்டுக்கல் பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து, 27.01.2022 அன்று கல்வி 4.0 என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடலை நடத்தின. அதில் நான் வழங்கிய சிறப்புரை இங்கே. இந்த அமர்வில், தமிழ்வழியில் படித்தால் வேலை கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கினால்தான், பிள்ளைகளைச் சேர்க்க முன்வருவார்கள். அப்போதுதான் தமிழ்வழிக் கல்வி வளரும் என்ற கருத்துக்குப் பதில் அளித்துள்ளேன்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கணவனை டா போட்டு அழைக்கலாமா?

    கணவனை, காதலனை ‘டா’ போட்டு அழைக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. பெயர் சொல்லியும் அழைக்கிறார்கள். இப்படி அழைக்கலாமா? நிர்மலா ராகவன் அவர்களின் பதில் இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காலங்களில் அவன் வசந்தம் – 74 ஆவது நிகழ்ச்சி

    காலங்களில் அவன் வசந்தம் – 74 ஆவது நிகழ்ச்சி

    வணக்கம்.

    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சென்னை, பாரதிய வித்யா பவன், புதுயுகம் தொலைக்காட்சி இணைந்து வழங்கும் “காலங்களில் அவன் வசந்தம்” தொடரின் 74 ஆவது நிகழ்ச்சி….

    பிப்ரவரி 5 ஆம் தேதி, மாலை 7.00 மணி (IST) காலை 8.30 மணி (EST)

    யூடியூப் நேரலை: https://youtu.be/HOBgSLasaPk

    சிறப்பு விருந்தினர்: திருமதி சுபா (நியூ ஜெர்சி)

    வாருங்கள்! கவியரசரைக் கொண்டாடுவோம்!

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • சௌந்தர்ய லஹரி – 13

    சௌந்தர்ய லஹரி – 13

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பதின்மூன்றாவது ஸ்லோகம். அம்பிகையின் கடைக்கண் பார்வை பட்டதும் சாமான்யன் ஒருவனுக்கு எத்தகைய மேன்மைகள் கிட்டுகின்றன என்பதை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பேரறிஞர் அண்ணாவின் கடைசிப் பேச்சு

    பேரறிஞர் அண்ணாவின் கடைசிப் பேச்சு

    14.01.1969 அன்று சென்னையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையினைத் திறந்து வைத்துப் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை. இது, அறிஞர் அண்ணா கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி. அவ்வகையில், பொது நிகழ்ச்சியில் அவரது கடைசிப் பேச்சு. அண்ணா நினைவு நாளில் இந்த உரையைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மத்திய பட்ஜெட் 2022-2023 – ஒரு பார்வை

    இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022-2023ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை அண்மையில் சமர்ப்பித்துள்ளார். இந்த அறிக்கையின் தாக்கம், சாதக – பாதகங்கள், வளர்ச்சி காண உள்ள தொழில்கள் – துறைகள்? கடன்கள் – முதலீடுகளில் மாறக் கூடிய வட்டி விகிதங்கள் உள்ளிட்ட பலவற்றையும் அலசுகிறார் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக். பார்த்துப் பயன்பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சௌந்தர்ய லஹரி – 12

    சௌந்தர்ய லஹரி – 12

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பன்னிரண்டாவது ஸ்லோகம். அம்பிகையின் சௌந்தர்யத்தையும் அதனை யார், எப்படி, எந்த அளவில் கண்டு அனுபவிக்க இயலும் என்பதையும் எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கருப்பூரம் நாறுமோ | ஆண்டாள்

    கருப்பூரம் நாறுமோ | ஆண்டாள்

    ஆண்டாள் இயற்றிய ‘கருப்பூரம் நாறுமோ’ பாடலைத் தமது 72 வயதில் திருமதி விஜயலட்சுமி பாடுகிறார், கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சௌந்தர்ய லஹரி – 11 | ஸ்ரீ சக்கரம்

    சௌந்தர்ய லஹரி – 11 | ஸ்ரீ சக்கரம்

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பதினொன்றாவது ஸ்லோகம்.  ஸ்ரீ சக்கரம் என்பது ஒரு வரைபடம். இன்னின்ன வழிகளில் சென்றால், அம்பிகையை அடையலாம் என்று வழிகாட்டும். இதன் மையத்தில் உள்ள புள்ளியில்தான் சிவ காமேஸ்வரி, காமேஸ்வரனுடன் கூடி லயித்து, ஒன்றி எழுந்து அருளுகிறார். இங்குதான் படைப்புத் தொழில் நடக்கிறது. இங்குதான் அந்தப் பேரானந்த நிலை கிட்டுகிறது. சிற்றின்பத்தை விட அதி அற்புதமான இந்தப் பேரானந்த நிலையை நாம் எப்படி எட்டுவது?

    உன் உடலில் இந்த இந்தத் தளங்களில் இது இது இருக்கிறது. அவற்றை எல்லாம் கடந்து, இன்னின்ன வழிகளில் வந்து, மேல்நோக்கி உன்னை உயர்த்திக்கொண்டே வந்தால், இந்த நிலையை நீ அடைவாய் என்று சொல்வதே ஸ்ரீ சக்கரம். ஆதி சங்கரரின் மனத்தில் தோய்ந்து, இந்த ஸ்ரீ சக்கரத்தை நுணுக்கமாக எளிய தமிழில் விவரிக்கிறார் மதுமிதா. பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன் என உலகோர் உய்ய ஓர் அரும்பொருளை விளக்கியிருக்கிறார். பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share