திருச்சி புலவர் இராமமூர்த்தி

பாடல்

அங்கண் அமரும் திரு முருகர் அழகுஆர் புகலிப் பிள்ளையார்
பொங்கு மணத்தின், முன் செய்த பூசை அதனால் புக்கு அருளிச்
செங்கண் அடல் ஏறு உடையவர் தாம் சிறந்த அருளின் பொருள் அளிக்கத்
தங்கள் பெருமான் அடி நீழல் தலையாம் நிலைமை சார்வு உற்றார்

வரலாறு

வயலில் கயல் உகளும் அவ்வூரில் வாழும்  முருகநாயனார்  தாம் செய்த தவத்தால்,  விடை மேல் வரும் சடையார் அணிந்து கொள்ளத்தக்க திருப்பள்ளித்தாமம் எனப்படும் தலை மாலைக்குரிய பூக்களைப் பறித்து   பூணூல் அணிந்த வேதியராகிய அடியார், வேதவாக்கியங்கள் நான்கிற்கேற்ற  அவற்றைத் தனித்தனிப்  பூக்கூடை களில்  இட்டார்.

மரங்களிலும், செடிகளிலும் , கொடியிலும், நீரிலும்  பூக்கின்ற  மலர்களின் தரம், விரியும்  நேரம், பறிக்கும் நேரம்  ஆகியவற்றை  நுட்பமாக  உணர்ந்து வேதத்தின் ஆறங்கம் போன்ற கோவை, இண்டை, கண்ணி , மாலை, பிணையல், தொடை ஆகிய ஆறு  வகைகளில் அஞ்செழுத்து ஓதித்  தொடுத்தார்.

அவர் வேதியர்  என்ற முறையில்  திருஞான சம்பந்தரின் நண்பர்  என்ற பெருமை பெற்றார். அயனும் மாலும் அறியாத சிவன் எழுந்தருளும் வர்த்தமான ஈச்சுரத்தில்  நாளும் பொழுதும் வழுவாமல் அஞ்செழுத்தோதி வழிபட்டார். பின்னர் திருஞான சம்பந்தருடன் இணைந்து இறைவன் திருவடி அடைந்தார். இதனைச் சேக்கிழார்,

அங்கண் அமரும் திரு முருகர்   அழகுஆர் புகலிப் பிள்ளையார்
பொங்கு மணத்தின், முன் செய்த   பூசை அதனால் புக்கு அருளிச்

செங்கண் அடல் ஏறு உடையவர் தாம்  சிறந்த அருளின் பொருள் அளிக்கத் தங்கள் பெருமான் அடி நீழல்   தலையாம் நிலைமை சார்வு உற்றார்

என்று பாடினார்,

அப்பாடலின் பொருள்

அவ்விடத்து அமர்கின்றதிருமுருகனார்,அழகிய புகலியில் வந்த ஆளுடைய பிள்ளையாருடைய சிவம் பொங்கும் திருமணத்தில் முன்செய்த பூசையின் பயனாலே புகுந்தருளிச், செங்கண்ணுடைய வலிய இடபத்தையுடைய சிவபெருமான் சிறந்த அருளாகிய இனிய பொருளை அளிக்கத், தம் பெருமானாரது திருவடிநீழலின்கண்ணதாகிய நிலைபெற்ற தன்மையைச் சார்வுற்றனர்.

விளக்கம்

அங்கண்  என்ற சொல்  அவ்விடத்து என்ற பொருளில்  அவ்வூராகிய  புகலூரில் என்றும்,  அதன்கண் அஃதாவது பூசையின்கண் என்று உரைப்பினும்  அமையும். அங்கண்மை- அன்புடைமை என்ற உட்குறிப்பும் காணப்படும்.

அமரும் என்ற சொல், விரும்பியிருக்கும். பூத்திருப்பணியிலும், பூசையிலும் ஆளுடையபிள்ளையாரது நண்பினிலும் விரும்பி ஒழுகும் என்ற பொருளைக் காட்டும் அழகார் புகலி  என்ற தொடர் ,  புகலி என்ற  சீகாழியைக் குறிக்கும்.  புகலியின் அழகுச் சிறப்புக்களை ஆளுடைய பிள்ளையாரது திருப்பதிகங்களாலும், பாட்டுக்களாலும், பிறவிடங்களாலும் கண்டுகொள்ளலாம்

பொங்குமணம் என்ற தொடர்,  சிவம்பெருக்கும் பிள்ளையாரது சிவம் பெருக்கும் திருமணத்தைக்  குறித்தது . பொங்குதல் – மேன்மேல் வளர்தல். திருமணத்தில் வந்த எல்லாரும் சோதிவாயிலினுள்ளே புகும்வரை சோதியோங்கியும் அத்திருவாயில் திறந்தும் சிவத்துவம் வளர்ந்துகொண்டேயிருந்த வரலாற்றைக் காட்டியது..

முன்செய்தபூசை  என்ற தொடரில்,  இப்பிறப்பிற்செய்த பூசையும், அப்பூசைக்குக் காரணமாயிருந்த  முன்னைத் தவமும் கூறப்பெற்றது

பூசையதனாற்புக்கருளி என்ற தொடர், ஆளுடைய பிள்ளையாரது திருமணத்திற் புகுவதற்குப் பூசைகாரணமாகிய.து. பூசையாகிய தவம் செய்தோரே அத்திருமணத்திற் புகப்பெற்றார் என்பதுண்மை. என்னை? அதிற்புகுந்தோர் அனைவரும் முத்தியடைந்தமையாலும்,

சிவஞான சித்தியாரில்,

“வேத சிரப்பொருளை மிகத்தெளிந்தும் சென்றால்  சைவத், திறத்தடைவர்
இதிற் சரியை கிரியா யோகஞ் செலுத்தியபின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வார்”

என்பதும், தவஞ் செய்யாதார் சிவனடி சேரார் என்பதும் உண்மை முடிபாதலாலும் முன்செய்த பூசைகாரணமாகத் திருமணத்திற்புக்கனர் என்றார். அவ்வாறு திருமணத்திற் புகுதலே முத்திபெற்ற தாய் முடிந்ததாலின் புக்கருளி என்று அருமைப்பாடு பெறக்கூறினார்.

சிறந்த அருள் இன்பொருள்  சிவனருளையும் இனிய சிவானந்தப் பயனையும் குறித்தது.

அடிநீழல் தலைஆம் நிலைமை என்ற தொடரில்,  நீழல் தலை – நீழலின் கண்ணே என்பதைக் காட்டியது. ஆம் – ஆகின்ற. நிலைமை – நிலைபெற்ற தன்மை – மீளாநிலையாகிய  பேராவியற்கை ஆகும்.  இது சிவனடி பெறுதலாகிய நிலைத்த வீடுபேறு…

சிவஞான சித்தியாரில் .”செலுத்தியபின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வார்” என்றும்,

“ஈனமிலாப்பொருளதனைச் சிந்தித்த லைந்தும்,
இறைவனடி யடைவிக்கும் எழில்ஞான பூசை”

என்றும் கூறியபடி இந்நாயனார் செய்த பூசை இவருக்கு ஞானசம்பந்தரின்  திருமணத்தின் வழியே இறைவனடியில் குடியிருக்கும் நிலை தந்தது. ஞானத்தாற் சிவனடி சேர்தல் என்ற உண்மையானது இந்நாயனாரளவில் ஞானசம்பந்தரது துணையால் என்ற குறிப்புத்தர நிகழ்ந்ததும் காண்க. அது குறிக்கவே ஆசிரியர் “மணத்திற் புக்கருளி அடிநீழல் – நிலைமை சார்வுற்றார்” என்றருளினர்.

இந்நாயனார் மலர்பறித்துச் சாத்திமகிழ்தலாகிய சரியையும், சாந்தம் புகை முதலியன கொண்டு சிவலிங்கத்தில் பூசித்தும் அருச்சித்தும் வழிபடுதலாகிய கிரியையும், அஞ்செழுத்துப் பயிலும் அகப்பூசையாகிய யோகமும், செலுத்தியபடியால் அவை காரணமாக ஞானத்தினுட் புகுந்தனர் என்ற குறிப்பும் பெறப் பூசையதனால் புக்கருளி என்ற தொடரின்  நயமாயிற்று.

சார்வுற்றார் என்ற தொடரில்  சார்பு – சைவசித்தாந்தம்  உணர்த்தும் மரபுப்பெயர். முன்னர், இப்பிறவியின் சார்வுற்ற உயிர், தான் சாரவேண்டிய மேலைச்சார்பினையுணர்ந்து, இவ்வுலகச் சார்பு கெட ஒழுகிய சிவஞான ஒழுக்கத்தாலே சிவனடி நீழலாகிய நிலைத்த சார்பினை அடைந்தார்!  இவ்வாறு இந்நாயனார் சிவனடி நீழல் சார்வுற்ற சிறப்பை,

“சீர்பெருகு நீலநக்கர் திருமுருகர் முதற்றொண்டர்”

என்ற திருஞானசம்பந்த நாயனார் புராணத்திருப்பாட்டாலும் அறிகிறோம்.

இப்பாடலில்  முருக நாயனார் ஞானசம்பந்தப் பெருந்தகையின் நட்பைப்  பெற்றதையும்,  தாம் செய்த சரியை முதலிய நான்கின் வழியிலும்,  அவருடன்  சிவலோகம் சென்றதையும் விளக்குகிறது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *