Blog

  • பழனி நின்ற பரமன் தந்த பழமதான தெய்வம்

    பழனி நின்ற பரமன் தந்த பழமதான தெய்வம்

    பெரியசாமித் தூரன் இயற்றிய ‘பழனி நின்ற பரமன் தந்த பழமதான தெய்வம்’ என்ற பாடல் மிக இனியது. அழகு தெய்வம் அருளில் தெய்வம், குழந்தை தெய்வம் குமர தெய்வம் என முருகனைக் கொஞ்சிக் கொண்டாடுகிறார். இதை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் இன்னும் உயரே எடுத்துச் செல்கிறார். கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • முருகா என்றால் உருகாதோ!

    முருகா என்றால் உருகாதோ!

    ‘முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்’ என்ற பாடல், பெரியசாமித் தூரன் இயற்றியது. இதை, கேட்போர் உருகும் வண்ணம் பாடுகிறார், ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார். இந்தத் தைப்பூசத் திருநாளில் இதைக் கேட்டு மகிழுங்கள். முருகப் பெருமான் அருள் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • 100 கி.மீ. வேகத்தில் ஒரு பயணம்

    100 கி.மீ. வேகத்தில் ஒரு பயணம்

    சென்னைப் புறவழிச் சாலையில் அண்மையில் 100 கி.மீ. வேகத்தில் ஒரு சோதனைப் பயணம் மேற்கொண்டோம். சென்னையில் வேறு எங்கும் இவ்வாறு செல்ல இயலாது. புறவழிச் சாலையிலும் போக்குவரத்து குறைவாக இருக்கும் சில இடங்களில் மட்டுமே இவ்வாறு செல்ல இயலும். அந்த வேகத்தில் மாருதி டிசயர் வாகனத்தின் அதிர்வையும் இரைச்சலையும் நிலைத்தன்மையையும் இதில் நாம் கவனிக்கலாம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தைப்பூசத் திருநாள்!

    தைப்பூசத் திருநாள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா 

    எம்மைப் படைத்த பரம்பொருளினை வாழ்வெல்லாம் எண்ணிட வேண்டும் என்பதற்காக எங்களின் முன்னோர்கள் விடியும் ஒவ்வொரு நாளினையும் அந்தப் பரம்பொருளுக்கு உரிய நாளாகவே ஆக்கி அதற்கென்று ஒரு பெயரினையும் சூட்டி பக்தியின் பாதையிலேதான் பயணித்து வந்திருக்கிறார்கள்.  அந்த வகையில் வருடத்தின் இறுதி மாதமான மார்கழியினை தெய்வத்துக்குரிய மாதமாக்கி – திருவெம்பாவை என்றும்திருப்பாவை என்றும் பக்திப் பனுவல்களை அதிகாலை வேளையிலே ஆலயத்தில் பாடிப் பரவி நின்றார்கள். சைவம் என்றோ, வைணவம்என்றோ பார்க்காமல் அந்தப் பரம்பொருள் புகழ்பாடும் மாதமாகவே வருடத்தின் இறுதி மாதமான மார்கழியினை ஆக்கி விட்டார்கள். வருடத்தின் இறுதி மாதம் பரம்பொருளின் புகழ்பாடும் மாதமாக அமைத்த எங்கள் முன்னோர் வருடத்தின் தொடக்கத்தையும் பரம்பொருளினை எண்ணி பக்திவழியிலேயே தொடங்கும் வண்ணம் ஆக்கிவிட்டார்கள் என்பதுதான் மிகவும் முக்கியமாகும். பூமாதேவியைத் தொட்டு ஆதவனை அகமிருத்தி பஞ்சபூதங்களையும் வணங்கி நன்றி நவிலும் முகமாக தைப்பொங்கல்த் திருநாளினை வருடத்தின் தொடக்கமாகவே அமைத்த முன்னோர்களின் மகத்தான வாழ்வியல் நெறியினை வியந்துதான் பார்க்கவேண்டி இருக்கிறதல்லவா!

    நட்சத்திரங்களைநாட்களைதிதிகளை எல்லாம் மனமிருத்தி அவை ஒவ்வொன்றும் உரிய வகையில் பரம்பொருளினைப் போற்றிக் கொண்டாடும் வகையில் பக்தித் திருநாட்களை ஒழுங்கமைத்த பாங்கினைப் பாராட்டியே ஆதல் வேண்டுமல்லவா! மார்கழியில் ஆதிரை நட்சத்திரத்தை சிவனுடன் இணைத்து திருவாதிரைத் திருநாள் வருகிறதல்லவா! மார்கழிமூலம் ஆஞ்ஞனேயருக்கு உரியதாக்கி அதனையும் திருநாளாக்கினார் களல்லவா! தைப்பொங்கல் தைமாதப் பிறப்பாக அமைகிறது. தைபிறந்தால் வழிபிறக்கும் என்பது மனத்தைரியத்தையும்எதிர்காலம் பற்றிய நம்பிக்கையினையும் நல்கிறதல்லவா! ” ஒரு திரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய” என்பது யாவர் மனத்திலும் பதிந்திருக்கும் பெரு மந்திரம் அல்லவா! அந்த மந்திரச் சொல்லுக்கு உரித்தான தகம்பன் சாமியான முரு கனுடன் தையில் வரும் பூச நட்சத்திரத்தை எங்கள் முன் னோர்கள் இணைத்திருக்கிறார்கள். பொங்கலில் பிறந்த நம் பிக்கைக்கு எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படாது இருக்க வேண்டுமேயானால் அதற்கு பெருந்துணை அந்தக் கந்தப்பெரு மானேதான். ஏனென்றால் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகக் காட்சிதருபவர் எங்கள் கந்தப்பெருமானே! அந்தப் பெருமானின் திருநாளாய் மலர்வதுதான் தைப்பூச நன்னாள்.

    கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக கந்தப்பெருமான் விளங்குகின்றார். அவரது அருங்கருணையால் அனைவருக்கும் அல்லலகன்று அகமகிழ்வு ஏற்பட வழி பிறக்கும் என்று அடியார்கள் அனைவருமே பெரு நம்பிக்கையுடனேதான் இருக்கிறார்கள். அடியார் ஒரடி நடந்தால் ஆண்டவன் நூறடி வருவான். அடியார் நூறடி நடந்தால் ஆண்டவன் ஆயிரமடி வருவான் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். முருகா என்று ஒருமுறை அழைத்தால் – இம்மைக்கும் மறுமைக்கும் என்றுமே நல்லதையே முருகப்பெருமான் நல்குவான். அந்த அளவுக்கு அளப்பெரும் ஆற்றல் கொண்டவன் முருகப்பெருமான்.

    இதனால்தான்  கலியுகத்தில் எவர்வாயிலும் முதலில் வருகின்ற வார்த்தை எது தெரியுமா? “முருக ” என்பதேயாகும். ஓம் முருகா – ஓம்முருகா – என்று அழைக்கும் பொழுது உள்ளமெலாம் பூரிக்கின்றது! உடலிலே ஒருவித பரவசம் உருவாகிறது! உணர்வுகள் தூய்மை அடைகின்றன. மயிலேறி அந்த மால்மருகன் நிச்சயம் வந்திடுவான். வாழ்விருக்கும் வினையனைத்தையும்  வேல் கொண்டு ஒழித்திடுவான்! என்னும் தெளிவு அனைவருள்ளத்திலும் பிறக்கிறது.

    அழகுஆற்றல், கருணைநிரம்பிய முருகப்பெருமானுக்கு என்று  பல விசேட தினங்கள் அமைந்திருக்கின்றன ஆனாலும் “தைப்பூசம்” என்னும் திருநாளானது அடியவர்களால் முருகனுக்குரிய சிறப்புத் தினமாகக் கொள்ளப்பட்டுவருகிறது என்பது நோக்கத்தக்கத்தக்கதாகும். தைமாதத்தில் பெளர்ணமியில் வருகின்ற பூச நட்சத்திரத்தன்று முருகனுக்கு உகந்ததினமாகக் கொள்ளப்பட்டு  நீண்ட காலமாக தைப் பூசம் என்பது  பெருவிழா வாக தெய்வத் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது நோக்கத்தக்கது.

    தைப்பூசத் திருவிழா என்பது  இன்று, நேற்று,  ஏற்பட்டதல்ல என்பது மனத்திருத்த வேண்டிய கருத்தெனலாம். இந்தத் திருநா ளானது, எங்கள் தேவாரம் பாடிய செல்வக் குழந்தை திருஞான சம்பந்தப் பெருமானது  காலம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதுதான் மிகவும் முக்கியமாகும். அது மட்டுமன்றி பழைய இலக்கியங்களிலும் இவ்விழா பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

    பல தெய்வங்கள் பற்றிய வழிபாட்டினை நோக்கும் பொழுது  முருக வழிபாடு என்பது மிகவும் பழைமை வாய்ந்தது என்றுதான் அறிந்த்து கொள்ள முடிகிறது. தைப்பூசம் என்னும் திரு நாளோடு  முருகப் பெருமான் பல நிலைகளில் இணைக்கப்படுகிறார் என்பது இங்கு கருத்திருத்த வேண்டியதேயாகும். முருகன் என்னும் நாமம்கூட மிகவும் அர்த்தம் பொதிந்தாகக் கருதப்படுகிறது. முருகு – என்றால் இளமை. முருகன்  – என்றால் அழகன் என்றும் என்றுமே இளமையானவன் என்றும் கருத்துக்கள் நிறைந்தே சொல்லப்படுகின்றன. முருகன் என்னும் பெயரினை எங்களின் அன்னைத் தமிழுடன் இணைத்துப் பார்க்கும் அடியவர்களும் பலர் இந்த அவனியிலே நிறைந்திருக்கிறார்கள். அந்த வகையிலே  தமிழில் காணப்படுகின்ற எழுத்துக்களை – வல்லினம், மெல்லினம், இடையினம் என்று இலக்கணத்தார் வகைப்படுத்தியிருக்கிறார்கள். “முருகன்” என்னும் பெயரினை உற்று நோக்கினால் அங்கே தமிழ்ன் மூவின வகை யான தன்மையும் ஒருங்கே இணைவதைக் கண்டு கொள்ளமுடியும். இதனால் முருகப் பெருமானை தமிழுடன் இணைத்துப் பேசுவார்கள். அதுமட்டுமல்ல முருகன் என்றாலே தமிழே வடிவானவன் என்னும் ஒரு எண்ணமும் மேலோங்கி நின்று முருகப்பெருமான் தமிழ் மயமாகவே விளங்குகிறார் என்று சொல்லிப் பெருமைப்படும்  நிலையும் இருப்பதையும் கண்டுகொள்ளலாம்.

    பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து, படாத வேதனைகளையெல்லாம் தாங்கிக் கொண்டு – அந்தப் பரம்பொருளை நோக்கி தவமிருந்து  வரம்பெற்று – அப்படிப் பெற்ற வரத்தினால் பரம்பொருளின் அனுக்கிரகத்துக்கு ஆளாகி  வந்தவர்கள் – பெற்ற வரத்தினைப் பேணாது அதனை தங்களின் சுய இச்சைகளுக்காகப் பயன்படுத்துவது பொருந்தக் கூடியதா? அது மட்டுமன்றி அந்தவரத்தை நல்வழியில் பயன்படுத்தாது – ஆணவத்தால் அற வழியை மறந்து தம் மனம்போன போக்கில் செயற்பட நினைந்தால் என்னாகும். முடிவில் அழிவுதானே வந்து நிற்கும். பெற்ற வரத்தினைப் பேணிக் காக்காமல் மறவழியில் ஆணவத்துடன் செயற்பட்டான் சூரபதுமன். தேவர்களையே சிறைப் பிடித்தான். வரம் கொடுத்த பரம் பொருளையே மதியாது ஆணவத்தின் உச்சியில் ஏறி நின்றான். ஆணவம் எங்கு மேலோங்குகிறதோ அங்கு – வரமளித்த அந்த ஆண்டவனின் சக்தியானது எப்படியோ தோன்றி மறத்தை அழித்து அறத்தை ஓங்கச் செய்யும் என்பதுதான் உண்மையாகும். அரத்தினை நிலைநிறுத்த ஒரு சக்தி வெளிப்பட்டது. அந்தச் பெருஞ் சக்திதான் “முருகப் பெருமான்” என்னும் நிலையில் வந்தமைந்தது. ஆணவ இருளை, அகத்தை இருளை அகற்ற வேண்டுமேயானால் அங்கு ஒரு பேரொளி தோன்ற வேண்டும் அல்லவா! அந்தப் பேரொளி எப்படி அவதாரமாக அமைந்தது என்பதைக் காண்போமா!

    அருவமும் உருவமாகி
    அனாதியாய் பலவாய் ஒன்றாய்
    பிரமாய் நின்றஜோதி
    பிளம்பதோர் மேனியாகி
    கருணைகூர் முகங்களாறும்
    கரங்கள் பனிரெண்டும் கொண்டு
    ஒருதிரு முருகன் வந்தாங்கு
    உதித்தனன் உலகம் உய்ய”

    என்று அந்தப் பேரொளியாக  முருகனது பிறப்பைப் பற்றிக் கந்தபுராணம் இவ்வாறு சுட்டிக் காட்டுகிறது. பேரொளியாக முருகப் பெருமான் வந்த நாளாகவே தைப்பூசத் திருநாள் அமைகிறது என்பதுதான் முக்கியமாகும். இதனால்  முருகப்பெருமானது ஆலயங்கள் தோறும் தைப்பூசத் திருநாள் பக்திபூர்வமாகவே கொண்டாடப்பட்டு வருகிறது என்று தைப்பூசத்துக்கும் முருகனுக்குமான தொடர்ப்பைப்பற்றி ஒரு கதை நெடுங்காலமாகவே வழக்கில் சொல்லப்பட்டு வருகிறது என்பதும் நோக்கத்தக்கது.

    ஆணவத்தின் உச்சியிலிருந்து அட்டூழியம் செய்யும் அரக்கரை அழித்திட பரம்பொருளாம் சிவனால் உருவக்கப்படுகிறார் முருகப் பெருமான். வரம் கொடுத்த தான் போகாமல் தன்னிலிருந்து வெளிப்படுத்திய சக்தியான முருகனைக் கொண்டே சரியான பாடம் புகட்டிட இறைவன் எண்ணுவதும் இங்கு நோக்கத் தக்கது. சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து வெளியான சக்தியாய் முருகப் பெருமான் விளங்குகின்றார். பாலகனாய் இருக்கும் அவரை வரமும் உரமுமுடைய அரக்கரை அடக்கி ஆணவத்தை அழிக்க அனுப்பும் பொழுது – அவருக்கு உறுதுணையாக ஒரு பெருஞ்சக்தியாக உமையம்மன் ஒரு வேலினைப் பாலகனான முருகனுக்குக் கொடுக்கின்றார்.   அம்மை கொடுத்த சக்திவாய்ந்த வேல் என்னும் ஆயுதத்தால் அட்டூழியம் புரிந்த அரக்கனை வதம்செய்து முருகப் பெருமான அறமென்னும் வெற்றியினைப் பெற்ற தினமாகவும் தைப்பூச விழாவானது  அமைகிறது என்று ஒரு கதையும் மரபாக வழக்கில் இருக்கிறது என்பதும் நோக்கத்தக்கதாகும்.

    இதுமட்டுல் அல்லாமல் இன்னுமொரு கதையும் தைப்பூசத்துடன் முருகப் பெருமானை சம்பந்தப் படுத்த சொல்லப்படுவதும் நோக்கத்தக்கது. எம்பெருமான் சிவனால் பார்வதிதேவியாருக்கு மந்திரம் ஒன்று உபதேசிக்கப்படுகிறது. உபதேசிக்கும் வேளை அதனை முருகப்பெருமானானவர் மறைந்திருந்து கேட்ட தாகவும், இதனை அறிந்த பார்வதிதேவி – கோபங்கொண்டு முருகனைச் சபிக்கின்றாராம். இதனால் முருகன் கோபித்துக் கொண்டு திருப்பரங்குன்றம் சென்று அமர்ந்துவிடுகிறார். முருகனின் கோபத்தை நீக்க சிவனும், பார்வதியும்  முருகன் இருக்கும் இடமான திருப்பரங்குன்றம் சென்று சிவனும், பார்வதியும்  கொடுத்த சாபத்தை மீளப்பெற்று முருகனை அரவணைத்த தினமே தைப்பூசம் என்றும் ஒரு கதை வழக்கில் இருந்து வருகிறது.

    கதைகள் என்னும் பொழுது அத்தனையும் பலகாலமாகவே வழக்கில் நிறைந்தே வந்திருக்கின்றன. அந்தவகையிலேதான் முருகப் பெருமான் பற்றிய பலவித கதைகளும் மக்கள் மத்தியில் உருவாகி அப்படி உருவான கதைகள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் தைப்பூசத்துடன் இணைக்கப்பட்டு விட்டன என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது. முருகனது அவதார தோற்றத்தைக் கந்தபுராணம் காட்டுகின்ற பொழுது “பிரம்மாய் நின்ற ஜோதிப் பிளம்பதோர் மேனியாகி – கருணைகூர் முகங்கள் முகங்கள் ஆ றும் கரங்கள் பனிரெண்டும் கொண்டு ஒரு திருமுருகன்” வந்தான் என்று காட்டுவததைக் கருத்துவதுதான் மிகவும் முக்கியம். முருகப் பெருமான் என்னும் பொழுது அங்கே பிரகாசிக்கும் ஜோதியே வெளிப்பட்டு நிறிறது. ஜோதி என்றால் பிரகாசம் என்று தானே அர்த்தமாகிறது. தைப்புசத்தன்று பெளர்ணமி தினமாகும். பெளர்ணமி பெரு வெளிச்சம் அல்லவா! அந்தப் பெரு வெளிச்சத்துடன் பிரம்மமாய் நின்ற ஜோதியாக உதித்த முருகப் பெருமானை இணைப்பது பொருத்தமாய் இருக்கிறதல்லவா!

    தைபிறந்தால் வழிபிறக்கும்.தைப்பொங்கல் சூரியனுக்குரியது. சூரியன் வெப்ப மயமானவன். சூரியனுக்குரிய பொங்கலையடுத்து வருகின்ற பெளர்ணமி சிறப்புடையது. அந்தத்தினத்தில் வருகின்ற பூசமும் சிறப்புடையது. இத்தகைய காரணங்கள் தைப்பூசத்துடன் முருகப் பெருமான் இணைக்கப்பட்டது பொருத்தமாய் இருப்பதாக தெரிகிறதல்லவா?

    தைப்பூசம் மிகவும் முக்கியத்துவம் மிக்கது என்பதற்கு – சம்பந்தப்பெருமானே தனது தேவாரத்தில் குறிப்பிட்டிருப்பதும் நோக்கத்தக்கது.

    மைப்பூசும் ஒண்கண் மடநல்லூர் மாமயிலை
    தைப்பூசும் நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
    நெய்ப்பூசும் ஒண்புகழ் நேரிழையார் கொண்டாடும்
    தைப்பூசம் காணாது போதியோ பூம்பாவாய் “

    சைவத்தமிழ் மக்கள் வாழுகின்ற தமிழ்நாடு,  இலங்கை சிங்கப்பூர்மலேசியாதென்னாபிரிக்கா, பிரான்ஸ், கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியாபோன்ற நாடுகளிலும் – தமிழரல்லாத மக்கள் வாழுகின்ற கேரளப் பகுதிகளிலும்கூட தைப்பூசமானது திருநாளாகக் கொண்டாடப்படுகிறது என்பது நோக்கத்தக்ததாகும்.                      

    முருகப்பெருமானை முன்னிறுத்தும் தைப்பூசம் தமிழர் வாழ்வில் பல முக்கிய நிகழ்வுகளுக்கும் இடமளிக்கும் திருநாளாகவும் விளங்குகிறது என்பதும் மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம். வயலில் நெற்பயிர்கள் முற்றி விளைந்திருக்கும் காலமிதுவாகும். முற்றிய நெல்லிருந்து புத்தரசி எடுப்பதும் தைப்பூசத்தில்த் தான் என்பதும் நோக்கத்தக்கது. இதனை “புதிரெடுத்தல்” என்று சிறப்புடன் கொண்டாடி மகிழுவதும் மனமிருத்த வேண்டியதேயாகும். புதிரெடுத்து புத்தரியினைக் கொண்டு பொங்கலிட்டு இறைவனுக்குப் படைத்து மகிழுவதும் தைப்பூச நன்னாளில் என்பதை நம்மில் பலரும் மறந்திருக்க மாட்டோம். “புதிரெடுத்தல்” என்னும் சொல்லே மிகவும் ஆழமுடைய வாழ்வியல் தத்துவத்தை அறிவுறுத்தும் சொல்லாகும். அந்தக் கருத்தினை அரங்கேற்றும் நன்னாளாய் தைப்பூசம் இருக்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டிய தேயாகும்.

    தைபிறந்தால் வழிபிறக்கும் என்று சொல்லுவதை நாம் எவருமே மறப்பதேயில்லை. அதற்கான அர்த்தத்தைத் தைப்பூசத் திருநாள் நன்றாகவே நிறைத்தே வைத்திருக்கிறது. எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒருவருக்கு வாழ்க்கையிலே கல்வி அறிவு என்பது கட்டாயம் இருந்தே தீரவேண்டும். “கல்லா நெஞ்சில் நில்லான் ஈசன்” என்று ஒரு பாடசாலையில் மகுடவாசகமாய் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். இதற்குப் பல அர்த்தங்கள் இருந்தாலும் அங்கு “கற்றிடு” என்பதுதான் முக்கியமாய் எனக்குள் உதயமானது. அப்படிக் கற்பதற்கு உரிய பருவத்தில் கற்றலைத் தொடங்க வேண்டும். அதனைத்தான் எங்களின் முன்னோர்கள் வித்தியாரம்பம்” என்று வியந்து நின்றார்கள். அந்த வித்தியாரம் செய்வதற்கு உகந்த நாளாகத் தைப்பூசம் திகழ்கிறது என்பது மிகவும் முக்கியத்துவமாய் வாழ்வில் அமைகிறதல்லவா! ஆலயங்களில் வித்தியாரம்பம் நடைபெறும். வீடுகளில் நடை பெறும். தைப்பூசத்தில் வித்தியாரம்பம் என்பது மிகவும் விசேடமாநது என்னும் கருத்து யாவர் மனத்திலும் பதிந்தே இருக்கிறதல்லவா!

    காது குத்துதல் என்பது அழகுடன் சம்பந்தப்பட்டதல்ல. அது ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டதாகும். அதனால்தான் அக்காலத்தில் ஆண்பிள்ளைகளுக்கும், பெண்பிள்ளைகளுக்குக் காது குத்துவதுபோல் குத்தினார்கள். காதுகுத்துதல் என்பது சுற்றஞ்சூழ இருந்து கொண்டாடி மகிழுகின்ற பெருங் கொண்டாட்டமாகவே ஒரு காலத்தில் அமைந்திருந்தது. தாய்மாமன் மடியில் பிள்ளையினை வைத்துக் காதுகுத்துதல் என்பது மரபாகவே இருந்து வந்தது. அப்படிக் காதுகுத்தும் சிறப்பான குடும்ப விழாவினை நடத்து வதற்குயாவரும் காத்திருக்கும் தினம் என்ன தெரியுமா அந்த நல்ல தினந்தான் தைப்பூச நன்னாளாகும். தைப்பூசத்தை மனமெண்ணி காது குத்தக் காத்திருக்கும் சுகமோ அது ஒரு தனியான சுகமாகும். அதனைச் சொன்னால் புரியாது. அனுபவித்தவர்களுக்குத்தான்  அதன் ஆனந்தம் தெரியும். காதுகுத்த லோடு தைப்பூசம் நின்றுவிடுவதில்லை. வியாபாரம் செய்பவர்கள் புதுக்கணக்கினை ஆரம்பிப்பதும் தைப்பூசத்திலேதான். இந்தவகையில் பார்க்கின்ற பொழுது – சுப நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கவும், புது முயற் சிகளைத் தொடங்கௌம் உவப்பான தினமாக அமைந்திருப்பது தைப்பூசத் திருநாள்தான் என்பதுதான் மிகவும் முக்கியமாகும்.

    வாழ்க்கையில் பல நல விஷயங்களுக்கு வழிசமைக்கும் சிறப் பான திருநாளான தைப்பூசத்தினை ஆலயங்களில் பக்தி பூர்வமாகக் கொண்டாடுவார்கள். முருகனுக்கு உகந்த நாளாகவே அமைகின்ற காரணத்தால் முருகப்பெருமானுக்கு உகந்த காவடிகள் பலவற்றை அடியார்கள் அவனது சன்னதியில் எடுத்து ஆடிப் பாடி அவன் புகழ் பாடியே நிற்பார்கள்.  மலேசிய நாட்டில் பத்த மலை என்னும் பதியில் அமைந்திருக்கும் முருகப் பெருமானது ஆலயத்தில் சைவத்தமிழ் அடியார்களுடன் இணைந்து சீனமக்கள் பலரும் பக்தி பூர்வமாகக் காவடி ஆடிவரும் காட்சிபக்திப் பரவசமாகவே அமையும் பாற்காவடி பன்னீர்க் காவடி,  புஷ்பக்காவடி, சந்தனக்காவடிபறவைக்காவடி, என்று அடியார்கள் வகை வகையாய் காவடிகளைத் தாங்கி ஆடலும் பாடலுமாய் இசையுடனும் தாளத்துடன் ஆடிவரும் காட்சியானது தைப்பூச நன்னாளை பூலோக கைலாசமாகவே மாற்றிக் காட்டி நிற்கும்.

    ஆடலும், பாடலும், பக்தியுடன் அமைந்த விழாவாக தைப்பூச திருநாள் அமைகிறது என்று மட்டும் எண்ணிவிடக் கூடாது. இந்த விழாவுடன் ஜோதிமயமான முருகப் பெருமானும் வந்து இணைகிறார் என்பதையும் கருத்திருத்த வேண்டும். இறைவனை “ஒளிவளர் விளக்கே” என்கிறோம். “மாமணிச் சோதியான்” என்கிறோம். “சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே” என்கிறோம். “அளம்பரும் ஜோதி” என்கிறோம். “தீபமங்கள ஜோதி நமோ நம” என்று பாடுகிறோம். இவையனைத்துமே இறைவனுக்கு மிகவும் பொருத்தமான இலக்கணங்களேயாகும். அந்தவகையில் முருகன் என்னும் அளப்பருந் தெய்வமும் மிகப்பெரிய ஜோதியே. அந்த ஜோதியினைக் காட்டும் பெருவிழா திருவிழா மாநிலமெங்கணும் பட்டொளி பரப்பும் பெளர்ணமி நன்னாளான தைப்பூசத் திருநாளேயாகும். பக்தியுடன், வாழ்வியலுக்கு பொருத்தமான விஷயங்களையும் இணைத்து நிற்கும் இந்தப் புனிதமான திருநாளுக்கு “தகப்பன் சாமியின் திருநாள்” என்று பெயரிட்டு பெருநிறைவு அடைவோம் வாருங்கள்!

    Share
  • சௌசௌ துவையல்

    சௌசௌ துவையல்

    சௌசௌ தோலைத் தூக்கி எறிய வேண்டாம். அதைக் கொண்டு அருமையான துவையல் செய்யலாம். இதோ செய்து காட்டுகிறார், சுதா மாதவன். நீங்களும் செய்து பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 49

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 49

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான்செக்கர்ஸ்மகளிர்கல்லூரி, 
    விளார்புறவழிச்சாலை, 
    தஞ்சைமாவட்டம் – 613006.
    மின்னஞ்சல்முகவரி-  egowrisss@gmail.com

    வைரமுத்து உவமங்களில் மரபு மாற்றம்

    முன்னுரை

    நாணத்திற்கு நாணலை உவமிப்பது மரபு. ‘பிழிந்த புடவை’யை உவமிப்பது புதுமை. ‘நிலவென்னும் அரசியைச் சுற்றித் தோழிமார்கள்’ என வெண்ணிலவையும் விண்மீன்களையும் உவமிப்பது மரபு. உவாநாள் அன்று ‘விண்மீனைக் காவல் வைத்து வெண்ணிலவு தூங்குவது’ என்பது புதுமை. தொன்று தொட்டு வழங்கி வரும் அதே உவமத்தை அதே பொருண்மை விளக்கத்திற்காகப் பயன்படுத்துவதும் வேறொரு பொருள் விளக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதும் உவமத்தில் மரபு சார்ந்த நிலை. புதிய பொருண்மைக்குப் புதிய உவமங்களைப் பயன்படுத்துவதும் பழைய உவமச் சாரத்தைப் புதிய பொருண்மை விளக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதும் புதுமை. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய மரபுப்பாவலர்களான மகாகவி பாரதியாரும் அவருடைய நண்பர் பாவேந்தர் பாரதிதாசனாரும் முன்னோர்களை மதித்துப் போற்றினர். முன்னோர் இலக்கியங்களை ஆராதித்தனர். முன்னோர் படைப்பு நெறியைப் பின்பற்றினர். மரபு காப்பதில் தங்களையே ஒப்படைத்துக் கொண்ட அப்பெருமக்கள் தாங்கள் வாழ்ந்த சமுதாயச் சூழலுக்கு ஏற்ப அவர்கள் படைத்துக் காட்டிய புத்திலக்கியங்கள் மரபின் வேர்களிலிருந்து புறப்பட்டன. பாரதிதாசனுக்குப் பின்வந்த கவிஞர்களில் எண்ணிக்கையிலும் தரத்திலும் வியக்கத்தக்க உவமங்களைப் பயன்படுத்திக் காட்டியவர் வைரமுத்து ஆவார். அவருடைய ஒட்டுமொத்த படைப்புக்களிலிருந்து எடுக்கப்பட்ட மாற்றத்திற்காளாகிப் புதுமை தேக்கிய மரபுவமங்களில் சிலவற்றின் சிறப்புக்களை இந்தக் கட்டுரை முன்னெடுக்க முனைகிறது.

    உவமம் — உருவகம் ஒரு சுருக்க விளக்கம்

    உவமத்திலிருந்து உருவகம் என்பதே சிந்தனைப் பிழை இவையிரண்டும் தனித்தன்மை வாய்ந்த இருவேறு பார்வைகள். இருவேறு வெளிப்பாட்டு உத்திகள். உவமம் படைப்பாளனின் அறிவுத்திறத்தையும் ஒப்பீடு மற்றும் நினைவாற்றலையும் காட்டும். உருவகமோ அவனுடைய கவியுணர்ச்சியையும் அவன் கலையுணர்வையும் காட்டும். ‘தாமரை முகம்’ என்னும் உவமத்தொகை ‘முகத்தாமரை’ என்று மாறுவது இயற்பியல் மாற்றமன்று, வேதியல் மாற்றம். ‘தாமரை முகம்’ என்பதில் தாமரை முதலில் பார்க்கப்படும். முகம் அதற்குப் பின்னர் பார்க்கப்படும். பின்னர் நோக்கப்படும் முகத்துக்கு முன்னர் பார்த்த தாமரை பொருத்திக் காட்டப்படும். இதுதான் உவமக் கோட்பாடு. இந்தக்  கோட்பாட்டில் கால இடைவெளி உண்டு. ஆனால் முகத்தாமரை என்பதில் முகத்திலேயே தாமரையைக் காண்கிறான். அதாவது முகத்தைப் பார்க்கின்ற அந்த நேரத்திலேயே அதனைத் தாமரையாகவே காண்கிறான். கால இடைவெளி கிடையாது. நம்முடைய தமிழாசிரியர்களும் தமிழ்ப்பேராசிரியர்களும் இத்தகைய படைப்பாளுமையையும் படைப்பாளனின் கவியுள்ளத்தையும் உணராது “உவமத்தின் பண்புகளைப் பொருளின் மேல் ஏற்றிக் கூறுவதற்கு’ உருவகம் என்று பெயர் என்று கோனார் குறிப்பேட்டின் குறிப்புக்களைப் பிழையில்லாமல் படித்து முடிக்கிறார்கள். தாமரை முகம் என்பது படைப்பாளனின் ஒப்பீட்டு உணர்வு. கால இடைவெளி கொண்டது. முகத்தாமரை என்பது அவனுடைய கலையுணர்வு. முன்னது ஓரளவு அறிவு சார்ந்தது. பின்னது முழுமையும் கலைமனத்தைச் சார்ந்தது. ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிடுவது அறிவு. ஒன்றை மற்றொன்றாக நோக்குவது மனம். அறிவுக்கு அங்கே வேலையே இல்லை.

    உவமத்தொகை என்றால் என்ன?

    தொகைகள் எல்லாம் தொடர்மொழிகள். ஐவகைத் தொகைகளுள் உவமத்தொகை என்பதும் ஒன்று. இதனை ‘உவமைத்தொகை’ என்று உச்சரிப்பதில் நம்மவர்க்கு ஒரு கோடி இன்பம். ஆனால் ‘பாட்டன் தொல்காப்பியன்’ என்று பட்டிமன்றத்தில் முழங்குவார்கள். தொல்காப்பியத்தில் ‘உவமை’ என்ற சொல்லே கிடையாது என்பதும் அவர்களுக்குத் தெரியும். ‘மை’ என்னும் பண்பு விகுதி பெற்ற அந்தச் சொல் ‘உவமத்தின் தன்மை’ என்ற பொருளில் கையாளப் பெற்றிருக்கும் ஒரே நூற்பா ‘உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்’ (1229) என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

    இந்த உவமத்தொகைக்கு இலக்கண வரைறையை இப்படிச் சொல்வார்கள். ‘உவமத்தைத் தனியாகக் கூறிப், பொருளைத் தனியாகக் கூறி இரண்டையும் இணைக்கின்ற உவம உருபு மறைந்து வருமானால்  அது உவமத்தொகை’. அவர்கள் கருத்துப்படித் ‘தாமரை முகம்’ என்பது உவமத்தொகை. இடையில் உருபாகிய ஒருசொல் மட்டுமே மறைந்திருப்பதாகக் கருதுகிறார்கள். தாமரை போன்ற சிவந்த முகம் என்பதுதான் விரி என்பதும் அவர்களுக்குத் தெரியும். பொருள், உவமம், பொதுத்தன்மை, உவம உருபு என உவம விரியின் கூறுகள் நான்கானால் ஒன்று மட்டும் குறைவது எப்படி உவமத்தொகையாகும்? இதனைக் கேட்டால் கடைசி பெஞ்சுக்கு அனுப்பிவிடுவார்கள். தாமரை போன்ற முகம் என்பதில் பொதுத்தன்மை மறைகிறதா இல்லையா? ‘தாமரை முகம்’ என்பதில் ‘போன்ற’ என்னும் உருபும் ‘சிவந்த’ என்னும் பொதுத்தன்மையும் மறைகின்றனவா  இல்லையா?  இரண்டு கூறுகள் மறைந்து வருவதே தொகையாயிருக்க உவம உருபு மட்டும் மறைந்து வருவது உவமத்தொகையாவது யாங்ஙனம்?

    இந்தக் குழப்பம் எதனாலே என்றால் ‘உவமத் தொகை’ என்னும் தொடரில் ‘உவமம் என்பது உவம உருபை மட்டுமே குறிக்கிறது’ என்னும் இலக்கண மயக்கம். அது உண்மையே. ஏனைய நான்கு தொகைகளில் வேற்றுமை உருபும், பண்புருபும், உம்மையும், காலம் காட்டும் இடைநிலைகளும் மறைந்து வருவதாகக் கருதியது போலவே உவமத் தொகையிலும் ‘உவம உருபு மறையும்’ என்பது இவர்களது அனுமானம். இன்னொன்றும் மறைகிறதே என்பதைக் கவனிக்கத் தவறியது மறதி. இந்த அனுமானம் முற்றிலும் தவறென்று கூற முடியாது. ஆனால் படைப்பாளனின் கலைமனத்தைக் காண முடியாது தடுக்கும் இரும்புத் திரை இது என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஒப்புக்கொள்வதில்லை. அப்படி ஒப்புக் கொண்டால்தான் கலைமனத்தின் அழகு புலப்படும். கவிதையை ரசிக்க முடியும். இல்லாவிட்டால் ‘குற்றுகரப்பிழையை’ எண்ணிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

    அப்படியானல் இதற்கு என்னதான் முடிவு? மிக எளிது!. இலக்கணப் பார்வையில் உவம உருபோ, பொதுத்தன்மையோ இரண்டுமோ மறைந்து வருவது உவமத் தொகை. இலக்கிய நோக்கில் உருவகம் என்பது பொருளில் உவமத்தைக் காண்பது. ‘அவள் முகத்தாமரையில் என் விழிவண்டுகள் மொய்த்தன!’ முடிந்தது கதை! மறைந்ததைப் பற்றி மறந்து இருப்பதை எண்ணுவதே இன்பம்! உணர்வு சார்ந்த கவிதைகளை அறிவு சார்ந்த இலக்கணத்தால் அளக்க அல்லது தரமதிப்பீடு செய்ய முற்படுகிறபோது எச்சரிக்கையும் கவனமும் மிக மிகத் தேவை!.

    கண்ணகியும் நடுவண் அரசும்

    பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு கோவலனுக்கு உணவு சமைத்துக் குமரி வாழையைின் குருத்தகம் விரித்து உணவு பரிமாறும் கண்ணகி, அவன் இலைக்கு நீர் தெளித்ததை இளங்கோவடிகள்,

    “மண்ணக மடந்தையை மயக்கொளிப்பனள் போல்
    தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவி”

    எனக் குறிக்கின்றார். இருந்த நிலையையும் எதிர்வரும் துன்பத்தையும் அறிந்து கொண்டு மண் மடந்தை மயங்கியதாகவும் இனம் பற்றிய இரக்கத்தால் மண்ணக மடந்தையின் மயக்கத்தைக் கண்ணகி நீர் தெளித்துத் தெளிவித்தாள் எனவும் உரையாசிரியர்கள் நயம் காண்பர். ‘நிலமடந்தைக்கு நீர் தெளித்ததைப் போல்’ என்னும் உவமம் முறையான தமிழ்க்கல்வியைப் பெற்றுள்ள கவிஞரையும் அறியாமல் அவரை ஆட்கொண்டதைத்,

    “தாமரைப் பூவில் உறங்கிக் கொண்டிருக்கும் சரஸ்வதியின்
    முகத்தில் தண்ணீர் தெளிப்பதாக இருக்கின்றன”

    என்னும் உவமத்தால் அறியமுடிகிறது. பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்குத் தேர்வு கிடையாது என்னும் நடுவண் அரசின் சேதி, உறங்கிய கலைமகளின் முகத்தில் தண்ணீர் தெளிப்பதைப் போல் இருந்தது என்னும் உவமம் இளங்கோவடிகளின் உவமத்தின் தாக்கமாக இருந்தாலும் இலக்கியம் வளம் பெறுமேயன்றித் தரம் குறையாது என்பது உண்மை. கண்ணகி மண்மகளின் மயக்கம் தீர்த்தது அன்று. மத்திய அரசு கலைமகளின் மயக்கம் தீர்த்தது இன்று!

    ஆலையிட்ட கரும்பான தலைவி

    ‘ஆலையிட்ட கரும்பு’ என்பது வதைபடும் எப்பொருளுக்கும் காட்டப்படும் மரபுவழி உவமையாகும். வறுமையில் வாடும் மக்கள், பிரிவால் வாடும் காதலர்கள், வர்க்கப் போராட்டத்தால் வாடும் தொழிலாளர்கள் என எல்லாருடைய துன்பத்திற்கும் காட்டப்படும் மரபுவழிப்பட்ட இந்த உவமையைத் தலைவனைப் பிரிந்த தலைவியின் கூற்றில் வைத்து,

    “ஆலையிலே சிக்குண்ட கரும்பாய் என்னை ஆக்கிவிட்டான்”

    எனக் கூறுவதைக் காணமுடிகிறது. தலைவனுடைய எண்ணங்களால் துன்பப்படும் தலைவியின் நிலையை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் இதே உவமையை விதவையான பழைய காதலியைச் சந்திக்கும் தலைவன் கூற்றிலும் வைத்துக்காட்டுகிறார்.

    “நெஞ்சமும் துடிதுடிக்க நிம்மதி எனை மறக்க
    அஞ்சன விழியாள் நெஞ்சம் ஆலையின் கரும்பாய் ஆக”

    எனத் தலைவன் கூறினாலும் அவனும் தலைவியின் நெஞ்சத்துத் துன்ப நிலைக்கே இந்த உவமையைப் பயன்படுத்துகிறான்.

    வைரமுத்து உவமைகளில் மரபு மாற்றம்

    மரபை உவம வகையால் அதன் ஆற்றலுணர்ந்து எத்தகைய மாற்றமும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளும் கவிஞர் தற்காலச் சிந்தனைப் போக்குகளுக்கேற்பத் தேவையான மாற்றங்களைச் செய்து கொண்டு பயன்படுத்திக் கொள்வதையும் காணமுடிகிறது. எத்தகைய புதுமையானாலும் அது மரபென்னும் ஆணிவேரில் கிளைத்தெழும் என்பதே உண்மை. புதுமையான உவமைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கு முன் ஏற்கனவே இருக்கின்ற உவமைகளில் செய்யக்கூடிய சிறிதளவு மாற்றமே பொருள் புலப்பாட்டுக்குப் போதுமானது என்னும் எண்ணமே இதற்குக் காரணம்.

    மரபு மாற்றம் ஏன்?

    நேற்றைய புதுமை இன்றைய மரபாகிவிடுகிறது. இன்றைய புதுமை நாளைய மரபாகிவிடும். புதுமை என்பது மரபை அழித்து விட்டுத் தோன்றுவதன்று. மரபினின்றும் கிளைத்து எழுவது. இலையுதிர் காலங்களில் உதிர்வதும் வசந்த காலங்களில் அவை தளிர்ப்பதுமான நிகழ்வுகள் தொடர்ந்து வந்தாலும் அடிமரத்தில் வேறுபாடு காணமுடியாததைப் போல மரபு ஓர் அடிமரமாக நின்றுகொண்டிருக்கிறது. மற்ற களங்களில் எவ்வாறிருப்பினும் இலக்கியத்தில் மரபும் புதுமையும் பிணைந்து வருவது தவிர்க்க முடியாது. மரபுவழியாகச் சொல்லப்பட்டு வரும் உவமைகளில் காலப் பொருத்தமின்மையும் சலிப்பும் தோன்றுகிற பொழுதும், கவிஞனின் உள்ளத்தெழுச்சி புதிய வேகத்தோடு செயல்படும் பொழுதும் உவமைகளில் மாற்றம் தேவைப்படுகிறது. இதனால் பழைய மரபு புறக்கணிப்புக்கு ஆளாகிறது என்பதைவிட, விரைந்து செல்லும் காலவோட்டத்தில் தனக்குரிய இடத்தைத் தக்கவைக்க புதுமையோடு அது போராட வேண்டியிருக்கிறது என்பதே பொருந்தும்.

    குந்தியிருக்கும் கொக்கும் நதிக்கரை மக்களும்

    வாய்ப்புக்களைத் தேடிக் களைப்பது ஒருவகை. வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்வது மற்றொரு வகை. கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிடாமல் எச்சரிக்கையுடன் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறுவது வேறொரு வகை. இவற்றுள் எந்த வகையாயினும் அவற்றில் வெற்றி பெற வேண்டுமானால் எச்சரிக்கை உணர்வு தேவை. இது தமிழ்க் கவிதைகளின் உள்ளடக்கங்களில் ஒன்று.

    “எய்தற் கரிய இயைந்தக்கால் அந்நிலையே
    செய்தற் கரிய செயல்”

    “கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
    குத்தொக்க சீர்த்த இடத்து”

    என்பன போன்ற குறட்பாக்களில் இத்தகைய சிந்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதற்குத் திருவள்ளுவர், கொக்கின் ‘கூம்புதல்’, ‘குத்துதல்’ என்னும் மாறுபட்ட இருவகை செயல்பாடுகளை உவமமாகக் கூறியிருக்கும் நுட்பத்தை அறிந்து,

    “கொக்கொக்க’ என்றாராயினும் அது கூம்புமாறு போலக் கூம்புக என்றும், ‘குத்தொக்க’ என்றாராயினும் அது குத்துமாறு போலக் குத்துக என்றும் உரைக்கப்படும்” (இரண்டிடங்களிலும் பொருள் உவமத்தை வினையுவமமாகக் கருத வேண்டும் என்கிறார்)

    என விளக்கம் எழுதும் ஆசிரியர் பரிமேலழகரின் உரை, ‘உவமநுட்பம்’ நிறைந்தது. வினையை விளக்க வேறொரு வினையையே உவமமாக்கியிருக்கும் திருவள்ளுரின் நுட்பத்தை உணர்ந்து கொண்ட வைரமுத்து, உவமச் சூழலில் சிறிது மாற்றம் செய்து கருத்து விளக்கம் செய்கிறார். காலமறிதல், இடமறிதல், வலியறிதல் என்பனவெல்லாம் திருவள்ளுவர் காலத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். வருமுன்னர் காத்துக் கொள்ளாத வாழ்க்கை, நெருப்புக்கு முன்னால் வைக்கப்பட்ட பஞ்சுப் பொதியாகும் என்பதும் ஓர் எச்சரிக்கையே. ஆள்வோருக்குச் சொல்லப்பட்ட அறிவுரையில் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டுமென்பதற்கே கொக்கின் இருவகைச் செயல்பாடுகளைத் திருவள்ளுவர் உவமமாக்கினார். காலமாற்றம் சிந்தனை மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. மகனுக்குத் தாய் பாட வேண்டிய தாலாட்டைத் தந்தை பாடுகிறார். அத்தாலாட்டில் தன் மகன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதைப் புதுமையான உவமத்தின் வாயிலாகப் புரியவைப்பதைக் காணமுடிகிறது.

    “நதிக்கரை ஓரத்து
    நகரம்
    வெள்ளப் பெருக்கை
    எதிர்பார்த்து
    விழிப்போடு இருப்பது போல்’
    எப்போதும் விழிப்பாய் இரு.”

    ‘நதிக்கரை ஓரத்து நகரம்’ என்பதால் நதிக்கரை ஓரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களையே குறிக்கும். எச்சரிக்கையாக இருந்து செயல்படுவதற்குக் கொக்கின் செயல்பாடுகளை உவமிக்கும் மரபுவழிச் சிந்தனையில் சிறிது மாற்றம் செய்து, காலத்திற்கேற்ப நதிக்கரை ஓரத்து மக்களின் விழிப்புணர்வை உவமமாகக் காட்டுகிறார்.

    வள்ளுவர் கண்ட முதலையும் வைரமுத்து கண்ட முதலையும்

    பொருள் ஒன்று. அதனை நோக்கும் பார்வைகள் பல. நோக்கத்திற்கு ஏற்பப் பார்வைகள் மாறுபடலாம். இடமறிந்து செயல்பட வேண்டும் எனக் கருதிய வள்ளுவர் முதலையின் நீராற்றலை விதந்து சொல்லி, நிலத்தாற்றலை நினைவுபடுத்துகிறார்.

    “நெடும்புனலுள் வெல்லும் முதலை., அடும்புனலின்
    நீங்கின் அதனைப் பிற”

    செயல்படும் இடத்தின் தன்மைக்கேற்பப் பொருளின் வலிமை மாறுபடும் என்னும் கருத்து விளக்கத்திற்காகத் திருவள்ளுவர் பயன்படுத்திக் கொண்ட உவமையைக் கவிஞர் வைரமுத்து,

    “முதலைகள் போல் நாம் கண்கள் திறந்தே உறங்குவோம்”

    எனத் தற்காலத்தில் தேவைப்படும் சமுதாய விழிப்புணர்வை விளக்குதற்கு உவமமாகப் பயன்படுத்திக் கொள்கிறார். தூங்குங்கால் தூங்கி, விழிக்குங்கால் விழித்தெழ வேண்டும் என்பது மரபுவழிச் சிந்தனை. விழித்துக் கொண்டே உறங்க வேண்டும் என்பது புதிய சிந்தனை. கொக்கு மரபுவழிச் சிந்தனைக்கு உவமமாகியிருப்பது போலப் புதிய சிந்தனைக்கு முதலையின் உறக்கம் உவமமாகியிருக்கிறது. ‘இடத்திற்கேற்ப வலிமை மாறும்’ என்னும் கருத்தாக்கம் முதலையால் வெளிப்பட, ‘உறங்காத விழிப்புணர்வே இன்றைய தேவை’ என்னும் கருத்தாக்கம் முதலையின் விழிமூடா உறக்கத்தால் வெளிப்பட்டு நிற்பதைக் காணலாம். முயல், ஆமை, காக்கை, நரி முதலிய கதைகளையே கேட்டு வந்த காதுகளுக்கு இந்த முதலைக்கதை புதுமையாகவும் புதியதோர் உண்மை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது.

    ஆமையின் இடத்தில் சுருக்குப்பை

    பொறியடக்கத்துள் சிறந்தது நாவடக்கம். “யாகாவா ராயினும் நாகாக்க” என்பதே அவ்வடக்கத்தின் இன்றியமையாமை உணர்த்தும் இந்த நாவடக்கத்திற்குத் திருவள்ளுவர் ஒரே அதிகாரத்தில் மூன்று பாடல்களை ஒதுக்கியதிலிருந்தே அதன் எதிர்மறை விளைவுகளை உணரக்கூடும். பொதுவான அடக்கத்திற்கு ஆமையை உவமித்தது மரபாயினும், அம்மரபைச் சற்றே மாற்றிப் புதிய கண்ணோட்டத்துடன் வைரமுத்து படைத்துக் காட்டுகிறார்.

    “ஒரு கலைப்படைப்பு எப்படி மரபினுக்கு ஒத்திருக்க வேண்டும் என்றால் அது மரபினால் வழிகாட்டப்படுதல் போன்று மரபினை மாற்றுவதாகவும் அமைய வேண்டும்’. முந்தைய மொத்த ஒழுங்கு முறையோடு புதிய கலையாக்கம் ஒவ்வொன்றின் உறவுகள் – விகிதங்கள் – மதிப்புகள் என்பன மறு இசைப்பு (RE-ADJUSTMENT) பெறுகின்றன. இதுதான் பழமைக்கும் புதுமைக்கும் இடையில் இருக்க வேண்டிய இயைபு (Conformity) ஆகும்”.

    என்னும் கருத்தின் அடிப்படையில் மரபோடு பின்னிப் பிணைந்தும் அதனை மாற்றியும்,

    “நாவே
    இன்னும் கொஞ்சம் மௌனம் கா
    வாயில்லாச் சில்லறைகள் சத்தமிட்டாலும்
    வாய்திறந்தும் பேசாத சுருக்குப்பைபோல”

    எனத் தலையாய அடக்கமான நாவடக்கத்திற்குச் சுருக்குப்பையை வைரமுத்து உவமையாக்கியிருக்கிறார்.

    செக்கில் சிக்கிய எள்ளும் எள்ளில்லாமல் ஆடும் செக்கும்

    ‘ஆலையில் சிக்கிய கரும்பு’ என்பதைச் சற்றே மாற்றி ஆலைக்குப் பதிலாகச் செக்கையும் கரும்புக்குப் பதிலாக எள்ளையும் இட்டு,

    “இடைவெளி கழிந்த மார்பக இடுக்கில்
    செக்குண்ட எள்ளாய்ச் சிக்குண்டேன்”

    என்னும் காதலன் வாக்கில் செக்கில் ஆடும் எள்ளை உவமமாகப் பயன்படுத்தும் கவிஞரே, எள்ளில்லாமல் ஆடும் வெறும் செக்கையும் தம் கற்பனையால் கண்டு அதனைப் பொருத்தமான பொருள் விளக்கத்திற்குப் பயன்படுத்தியிருக்கிறார்.

    “எள்ளில்லாமல் சுற்றும் செக்கைப் போல்
    கண்ணீரில்லாமல் பெண்கள் அழ”

    என்னும் வரிகளில் ஊராருக்காக வைக்கும் ஒப்பாரியில் நீரில்லாமலே கண்கள் அழும் என்னும் பொருள் விளக்கத்திற்காக எள்ளில்லாமலேயே சுற்றும் செக்கை உவமமாக்கியிருக்கும் உவமம் நேர்த்திக்குரியது.

    “ஒன்றை அறிவிப்பதன்று கவிஞனின் நோக்கம்,
    ஒன்றை உணர்த்தி வைப்பதே கவிஞனின் தொழிலாகும்”

    ஊராருக்காக வைத்து அழும் ஒப்பாரியில் உயிர்த்துடிப்பு இருக்காது என்னும் கருத்து நிலையை,

    “அழுகிற மாதிரி அழுது வராத கண்ணீரத்
    தொடச்சுக்கிட்டா பட்டுச் சீலையெடுத்து”

    என வண்டி நாயக்கர் வைப்பாட்டியின் நிலைப்பாட்டைக் ‘கள்ளிக்காட்டு இதிகாசத்திலும்’ கவிஞர் குறிப்பிடுவது பொருத்தம் கருதிச் சுட்டப்படுகிறது.

    நிலையாமை கூறும் மட்பாண்டம்

    நிலையாமை உணர்த்துவது குறள்நெறி. அனைத்து நிலையாமையுள்ளும் உடலது நிலையாமை சித்தர்களால் வெகுவாகக் குறிக்கப்பட்டது.

    “ஊத்தைக் குழியிலே மண்ணை யெடுத்தே
    உதிரப் புனலிலே உண்டை சேர்த்தே
    வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்
    வரவோட்டுக்கு மாகாதென் றாடாய் பாம்பே”

    குயவன் படைத்த மட்பாண்டத்திற்கு அதனை ஒப்பிடுகிறார். சிறிது கை நழுவினாலும் விழுந்து நொறுங்கும் அதன் நிலைப்பாட்டையும் உடைந்த பிறகு ஒன்றிணைக்க முடியாத இயலாமையையும் ஒருங்கே புலப்படுத்தும் அந்த உவமையின் உள்ளடக்கத்தைப் புரிந்த கொண்ட மற்றொரு சித்தரும்,

                                   “நந்தவனத்தில் ஓர்ஆண்டி – அவன்
    நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
    கொண்டு வந்தானொரு தோண்டி – மெத்தக்
    கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி”

    சிதைந்த உடலுக்கு உடைந்த மட்பாண்டத்தை உவமமாக்கியிருக்கிறார்கள். எனவே உடைந்து போவதற்கு மரபுவழியாகப் பின்பற்றப்பட்டு வந்த உவமமாகிய மட்பாண்டத்தைப்,

    “போட்டுடைத்த மண்பாண்டம் போலே நாட்டில்
    பூந்தமிழர் சிதறி”

    என்னும் வரிகளில் சிதைந்து போன தமிழின ஒற்றுமைக்கு எழுத்து மாறாமல் உவமமாக்கிக் கொள்வதைக் காணமுடிகிறது. உவமையில் ‘மண்பாண்டம்’ என்று கூறப்பட்டிருப்பினும் அதற்கிணையாகத் தமிழர்களைச் சொல்லவரும் கவிஞர் மிகவும் கவனமாகப் ‘பூந்தமிழர்’ என்ற சொல்லைக் கையாள்கிறார். உடைந்து போனதில் மட்டுந்தான் தமிழர்களும் மட்பாண்டமும் ஒன்றே தவிர தன்மையினால் தமிழர்கள் மண்பாண்டங்கள் அல்லர் என்பது அவர் கருத்து. ‘மண்பாண்டம்’ என்னும் சொல்லைக் கொண்டு அதனை மண் ஓடாகக் கற்பனை செய்து கொள்ளும் கவிஞர்,

    “எப்படியோ பிரிவானோம், இடிவிழுந்த ஓடானோம்”

    எனத் தோழிகளின் உடைந்த உறவுக்கு அதனை உவமமாக்குவதையும் இலட்சிய உணர்வின்றி, ஒற்றுமை உணர்வின்றி இன்றைய இளைஞர்கள் சிதறிக் கிடப்பதற்கு,

    “லட்சத்தீவுகளாய்ச் சிதறிக் கிடக்கிறாய்.”

    என இலட்சத்தீவுகளை உவமையாக்குவதையும் அறியமுடிகிறது. ‘சிகரங்களில் கூடு கட்ட வேண்டிய இளைஞர்கள் பள்ளத்தாக்குகளில் பதுங்குவது’ கண்டு பதறும் கவிஞர் இன்றைய இளைஞர்கள் கொள்கைப் பிடிப்பில்லாமல் மனம்போன போக்கில் திரிந்தலைகிறார்கள் என்ற காட்சியைத்தான் ‘லட்சத்தீவுகளாய்’ என்ற தொடரால் சுட்டுகிறார்.

    வனிதையர் கூந்தலும் வாழைக்குருத்தும்      

    பெண்களின் கூந்தலுக்கு மணற்படிவுகளையும் மயில்தோகையையும் கார்மேகத்தையும் கடல் அலைகளையும் கருநாகத்தையும் உவமைகள் சொல்லிச் சலித்துப் போன கவிதையுலகில்,

    “ஓரணா நாணயத்தின் விளிம்பு போன்ற கூந்தல்”

    என 1957இல் கூந்தற்சுருளுக்கு அன்றைக்கிருந்த மஞ்சள் மற்றும் வெள்ளை ஓரணாக்களின் விளிம்புகளை உவமம் காட்டி, மரபிலே மாபெரும் புரட்சி செய்தவர் கலைஞர். கலைஞருக்குப் பின்னால் வந்த கவிஞர் நா.காமராசன்,

    “நீண்ட கருங்கூந்தல்
    ஆலமர விழுதுகள்போல்
    அவள் முதுகில்
    விழுவதும் ஒரு அழகு”

    எனக் கூந்தலின் நெடுமைக்கு ஆலமரத்து விழுதுகளை உவமித்திருப்பது ஒரு புதிய முயற்சி. மரபு சார்ந்தும் புதுமை தழுவியும் கவிதை யாப்பதைத் தமது படைப்புக் கொள்கையாகக் கொண்டிருக்கும் கவிஞர் வைரமுத்து,  கூந்தலுக்கு முற்றிலும் மாறுபட்ட உவமையைக் கூறியிருப்பதன் மூலம் புதியதொரு மரபுக்கு அடித்தளம் அமைப்பதில் தனது பங்கைச் செய்திருக்கிறார் எனலாம்.

    “வாழைக் குருத்துப்போல் சுருண்டிருக்கும் குழல்”

    என்பது கூந்தலுக்கு வைரமுத்து கண்ட உவமை. உவமைகள் கவிஞனின் கற்பனைத்திறனை மட்டுமன்றி அவனுடைய வாழ்க்கை அனுபவங்களையும் வெளிப்படுத்தி நிற்கும். வைரமுத்து வேளாண் குடும்பத்தைச் சார்ந்தவர் ஆதலாலும் விருந்தோம்பும் பண்புடையவராதலாலும் விருந்தினருக்கு உண்ணும் இலை பெரும்பாலும் நுனிக்குருத்தாகவே அமைய வேண்டுமென்பதாலும் இவ்வுவமை கவிஞரின் பட்டறிவு உவமை என்பதோடு கூந்தலை நேருக்குநேர் காட்சிப்படுத்தும் திறனும் கொண்டதாகும்.

    வைரமுத்து உவமைகளில் பண்புகளும் அருவங்களும்

    பண்புகளுக்கு இயக்கம் கற்பிப்பது தமிழுக்குப் புதியதன்று. ஆனால் தற்காலத்தில் புதியது. ‘உண்மை வெல்லும்’ என்பது உலக வழக்கு. ‘அழுக்காறென ஒரு பாவி’ எனப் பண்பைப் பண்பியாகச் சொல்லுவது அக்கால இலக்கிய மரபு. இராமன் காட்டுக்குச் செல்கிற காட்சியில்,

    “விதிமுன் செல்லத் தருமம் பின்னிரங்கி ஏக”

    என விதிக்கும் தருமத்திற்கும் முறையே செல்லுதலும், ஏகுதலுமாகிய வினைகளை இணைத்துப் பண்பிற்கு இயக்கம் கூறியவன் கம்பன். மகாகவி பாரதி,

    “தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்”

    எனக் கூறியிருப்பதும் அத்தகையதே. இவ்வாறு பண்புகளைச் செயல்திறன் உடைய பொருள்களாக்கிக் கூறுகின்ற மரபிலிருந்து, அவற்றை உவமமாகவும் அமைத்துக் கூறும் போக்கை வைரமுத்து கவிதைகளில் காணமுடிகிறது.

    மரம் – நட்டுவைத்த மௌனம்

    இயற்கையைப் பாடுவதிலும் அவற்றை உவமமாக அமைப்பதிலும் கவிஞருக்குள்ள திறன் முன்பே ஆராயப்பட்டுள்ளது. மரத்தின் அசைவையும் பாடி, அமைதியையும் பாடியிருக்கும் அவர் வானுயர்ந்து நிற்கும் மரத்தை,

    “நட்டு வைத்த மௌனங்களாய் மரங்கள்”

    என்கிறார். ‘மௌனத்தின் சப்தங்கள்’ என்னும் தனது நூலொன்றின் தலைப்பில் மௌனத்தைப் பேசவைத்த கவிஞர் இங்கே மௌனத்தை நட்டு வைத்திருப்பதை அறியலாம். ‘மௌனத்தை நட்டு வைத்ததுபோல’ என்னும் உவமை அருவப்பொருளை உவமையாக்கும் அவருடைய படைப்புத்திறனையும் சுட்டுவதாகலாம்.

    மனைவியின் உறக்கமும் தியாகத்தின் தூக்கமும்

    மானுட உறவுகளில் கலப்படமில்லாத உறவு தாயுறவு. அவ்வுறவுக்கு அடிப்படையாக இருப்பது மனைவி பந்தம். போலி மதிப்பீடுகளாலும் சில அவசரத் தீர்ப்புக்களாலும் ‘மனைவி’ என்னும் பந்தம் இன்று தன்னுடைய முழுப்பரிமாணத்தையும் தூய்மையையும் காக்க இயலாவிடினும், வைரமுத்தின் பார்வையில் மனைவி தியாகத்தின் உருவாகவே தெரிகிறாள்.

    “தியாகம் உறங்குவது போல் கண்தூங்கும் மனைவி”

    எனப் புத்தரின் மனைவி சுஜாதாவின் உறக்கத்திற்குத் தியாகத்தின் உறக்கத்தை உவமமாக்கியிருப்பதன் மூலம், குடும்பக் கட்டமைப்பில் மனைவியின் பெருமையைச் சரியான முறையில் பதிவு செய்திருப்பதாகக் கருதலாம்.

    தாசுமகாலில் உறங்கும் கம்பீரசோகம்

    தாசுமகாலைப் பற்றி எழுதப்பட்ட கவிதைகளுக்குள்ளும் சொல்லப்பட்ட கருத்துக்களுக்குள்ளும் கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ‘உருவமில்லா மரணத்துக்கு மரணமில்லா உருவம் தாசுமகால்’ (Deathless form to the formless Death) என்பது தாகூரின் கருத்து. மும்தாஜ் உட்பட எவருடைய மரணத்திற்கும் உருவமில்லை., ஆனால் எல்லாருடைய மரணத்திற்கும் என்றும் அழியாத நினைவுச் சின்னங்கள் இல்லை. அந்தப் பெருமை மும்தாஜின் மரணத்திற்கு மட்டுமே கிட்டியது. அதனையே தாகூர் மேற்கண்டவாறு குறித்திருக்கிறார். தாகூரின் பார்வையிலிருந்து கவிஞர் வைரமுத்தின் பார்வை முற்றிலும் வேறுபடாவிட்டாலும், சற்று விலகியிருந்து நோக்குவதை அவருடைய கவிதை வரிகள் காட்டுகின்றன.

    “தாஜ்மகாலில் ஒரு கம்பீரசோகம் உறங்குவது மாதிரி”

    என்னும் கவிதை வரிகளில் தாசுமகாலின் தோற்றத்தை உவமமாக்கியுரைப்பதைக் காணமுடிகிறது. அழகியல் சார்ந்த தாசுமகாலின் தோற்றம், கவிஞருக்குத் தமிழ்ச்சிறுவர்களின் துடைக்க முடியாத சோகத்தை நினைவுபடுத்தியிருக்கிறது. தீபாவளிப் பண்டிகை ஒளி வெள்ளத்திற்கு நடுவே கொண்டாடப்படும். ஆனால் அவ்வொளியைக் கொடுக்கும் பட்டாசுகளையும் வெடிகளையும் சிவகாசியில் தயாரிக்கும் சிறுவர்களின் வேதனை மறக்கப்படுகிறது. அச்சிறுவர்களின் சோகத்தைத் தீபாவளியின் ஒளிவெள்ளம் மறைத்துவிடுகிறது. தாசுமகால் உருவாவதற்காகப் பாடுபட்ட தொழிலாளர்களின் ஓலத்தைத் தாசுமகாலின் பளிங்கொளி மறைத்துவிடுகிறது. உருவாக்கிய தொழிலாளர்களின் ‘சோகம் உறங்குகிறது’ என்னும் உவமம் அருவப்பொருள்களை உவமமாகக் கையாளும் வைரமுத்தின் கவித்திறனுக்கு மேலும் ஒரு சான்றாகலாம்.

    வெறுங்கலத்தில் ஊற்றி வைத்த நிசப்தம்

    மக்கள் அமைதியாகத் தூங்கினார்கள் என்பதைக் கவிஞர்கள் தங்கள் கற்பனை வளத்திற்கேற்பப் புனைந்துரைப்பதுண்டு. பாவேந்தர் பாரதிதாசன்,

    “சோலை உதிர் பூ அன்ன மக்கள் துயில் கிடக்கும் போதில்.”

    எனச் சோலையில் கிடக்கும் அமைதியான பூக்களைத் தூங்கிக் கிடக்கும் மக்களுக்கு உவமையாக்குவார். தூக்கத்தின் அமைதி இவ்வாறு இருந்ததெனின், யாருமில்லா முதியவரின் வீட்டில் நிலவும் அமைதியைக் குறிக்கவரும் கவிஞர்,

    “வெறுமையின் கலத்தில்
    நிசப்தம் ஊற்றி வைத்தது போல் வீடு”

    எனக் குறித்திருப்பதைக் காணமுடிகிறது. ‘வெறுமையான கலத்தில் நிசப்தத்தை ஊற்றி வைத்தாற்போலும்’ என அருவப் பொருள்களாகிய நிசப்தத்தைத் திரவப் பொருளாகக் கண்டு உவமிக்கும் கவிஞரின் திறனையும் காணமுடிகிறது.

    உண்மைக்கு எதற்கு ஒப்பனை?

    உவமத்தைக் கையாளுகிறபோது அதன் வெளிப்பாட்டு உத்திகள் ஒரேவகையாக இருப்பதில்லை. இருத்தல் வேண்டும் என்னும் விதிமுறையும் இல்லை. கருத்து விளக்கத்திற்காகவும் பொருள் புலப்பாட்டுக்காகவும் பயன்படுத்தப்படுகிற உவமங்கள் பல நிலைகளில் வெளிப்படும். அவற்றுள் வினா வடிவமும் ஒன்று. சான்றாகப்,

    “பண்ணென்னாம் பாடற்கு இயைபின்றேல்?”

    என்பது திருக்குறளில் வினா வடிவில் அமைந்த உவமம். கவிச்சக்கரவர்த்தி கம்பன்,

    “கனிவரும் காலத்து ஐய! பூக்கொய்யக் கருதலாமோ?”

    என உரைப்பதும் அத்ததையதே. மகாகவி பாரதி,

                                                   “கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
    கைகொட்டிச் சிரியாரோ?”

    என வினவுவதும் உவமையின் ஒருவகை வெளிப்பாடே. இவர்களின் மரபில் வந்து,

    “காரிருளால் சூரியன் தான் மறைவதுண்டோ?
    கறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ?”

    என வினவும் பாவேந்தரின் உவமங்கள் வினாக்கள் வடிவில் அமைந்தவையே. உத்தியில் மரபினைப் பின்பற்றும் வைரமுத்து,

    “உண்மைக்கு எதற்கு ஒப்பனை?”

    எனப் பண்பாகிய அருவத்தை உருவமாகக் கொண்டு உவமமாக்கியிருக்கிறார். காசியில் தன் புற ஆசாரத்தை உதறித் தள்ளிய பாரதியை அவருடைய மாமன் பாராட்டுகிறார். ‘அக உணர்வைப் புறப்பூச்சுக்களால் அளக்க இயலாதது போலப்’ பூணூலையும் குடுமியையும் மட்டும் வைத்துக்கொண்டு உண்மையான பிராமணனை அடையாளம் காணமுடியாது’ என்னும் கருத்து விளக்கத்திற்காக இந்த உவமையைக் கவிஞர் பயன்படுத்தியிருக்கிறார்.

    தர்மம்போல் காத்திருந்த தமிழ்ச்சீதை

    அதர்மத்தைத் தர்மம் வெல்லும் என்பது வழக்கு. ‘தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும்’ என்பது பாரதி வாக்கு. ஆனால் அறமகளான சீதை அசோகவனத்தில் தவமிருந்த காட்சி தருமமே சிறையிருந்ததாக வைரமுத்து கண்களுக்குப் புலப்பட்டுள்ளது. சீதையை இராமனுடைய மனைவியாகக் காணாமல் அறமாக உவமித்துத்,

    “தர்மம்போல் அன்றோ எங்கள் தமிழ்ச்சீதை காத்திருந்தாள்”

    எனக் கூறியிருப்பதைக் காணமுடிகிறது. தர்மம் தனக்குரிய காலத்தை எண்ணிக் காத்திருப்பது போல் சீதை காத்திருந்தாள் என்பதே உவம விளக்கம் ஆயினும் தர்மம் எப்பொழுதும் சோதனைக்கு ஆளாகும் என்பதும் இரட்டுற மொழியப்பட்டிருப்பது உவமத்தின் வன்மையைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.  மரபை அப்படியே பின்பற்றுவதோடு காலச் சூழலுக்கேற்பவும் கருத்து நிலைக்கேற்பவும் சற்று மாற்றியும் உவமங்களைப் பயன்படுத்தும் கவித்திறன் வைரமுத்துக்குக் கைவரப்பெற்றதே! இதனை இந்தக் கட்டுரையில் மேலே காட்டப்பட்ட சில சான்றுகள் கொண்டு அறியலாம்.!

    நிறைவுரை

    பாரதிதாசனுக்குப் பிறகு எண்ணிக்கையாலும் தரத்தாலும் அழகியல் குறையாமலும் கவிதையில் உவமங்களைப் பயன்படுத்தியவர் சிலரே!. சுரதா, அப்துல் ரகுமான் என்னும் இவர்களைத் தொடர்ந்து இந்தப் பயணத்தைத் தொடர்ந்தவர் வைரமுத்து என்பது கட்டுரையாளர் கருத்து. நுண்ணியத்தோடு கூடிய உவமங்களைச் சொன்னதில் இவர்கள் முன்னிற்கிறார்கள்!. பொரியலுக்குப் ‘பூனைக்கண்ணை’ உவமமாக்கியவர் பாவேந்தர். கவிதையின் தடையில்லா இயல்பு நடைக்கு வாழைத்தண்டை உவமமாக்கியவர் சுரதா! வாழ்க்கையில் பின்னோக்கிச் செல்பவனுக்குக் ‘கயிறு திரிப்பவனை’ உவமமாக்கியவர் அப்துல் ரகுமான்! அவர்களைப்  போல அரிய, அழகியலும் ஆழமும் குறையாத உவமங்களை, மரபைப் பின்பற்றுதல், மரபினைச் சற்றே மாற்றுதல், புதிய மரபிற்கு அடிக்கல் நாட்டுதல் என்னும் பல்லாற்றானும் பயன்படுத்தியிருப்பதன்வழி, வைரமுத்தின் படைப்புக்கள் ஓர் உவமக்காட்சிச் சாலையாகவே காட்சியளிக்கிறது!.

    (இந்தத் தொடர் அடுத்த கட்டுரையோடு நிறைவுறும்)

    Share
  • எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் – 12: இல்லத்தரசி 

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    நான் ஒருத்தன் மனைவி – அந்நிலை கடந்து
    நான்  இன்றுள்ள தனித்த மாது !
    அல்லி ராணி, இல்லத்தரசி இப்போ நான்,
    அப்படிச் சொல்வது பாதுகாப் பானது !

    I’m “wife” – I’ve finished that –
    That other state –
    I’m Czar – I’m “Woman” now –
    It’s safer so –

    வாலிபப் பெண் வாழ்வு புதிரானது,
    குளிர்ந்த கிரகணத் துக்குப் பின்னே !
    ஞாலமும் அப்படி உணரும் என்பேன்
    சொர்க்க நபரைக் காணின் இப்போ.

    How odd the Girl’s life looks
    Behind this soft Eclipse –
    I think that Earth feels so
    To folks in Heaven – now –

    இது ஆறுதல் அளிப்பது பின்பு
    மற்றது வேதனை தருவது.
    ஆயினும் ஏன் ஒப்பிட்டு ஆய்வது ?
    இல்லத் தரசி நான் ! நில் அங்கே !

    This being comfort – then
    That other kind – was pain –
    But why compare?
    I’m “Wife”! Stop there!

    *************

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் – 13: பதம் பண்ணா மது நான் சுவைத்துளேன்

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    பதம் பண்ணா மதுவைச் சுவைத்துளேன்
    முத்துக் குளிப்பு தொட்டியில் அள்ளி
    எல்லா ஃபிராங்க்பெர்ட் பெர்ரியும்
    ஈவது இல்லை அது போல் மது பானம்

    I taste a liquor never brewed –
    From Tankards scooped in Pearl –
    Not all the Frankfort Berries
    Yield such an Alcohol!

    மதுக் குடியில்  காற்றில் மிதப்பேன்
    மற்றவரைக் குடிக்க வைப்பேன்
    விடியா வேனிற் பொழுதில் உருண்டு
    மதுக் கடை தரும் குடிதண்ணி மயக்கம்.

    Inebriate of air – am I –
    And Debauchee of Dew –
    Reeling – thro’ endless summer days –
    From inns of molten Blue –

    கடை முத லாளி குடிபோதைத் தேனீயை
    கடை வாசல் விட்டு வெளியேற் றுவான்
    பட்டாம் பூச்சி தேன்துளி வெறுக்கும் போது
    மிக்க அளவு குடிக்கப் போவ தில்லை.

    When “Landlords” turn the drunken Bee
    Out of the Foxglove’s door –
    When Butterflies – renounce their “drams” –
    I shall but drink the more!

    தேவ கன்னியர் தம் சிரசணி  எறியும் வரை
    போதகர் சாளரம் நோக்கி விரைந்து செல்ல
    குள்ளக் குடிகாரன் குடி போதையில்
    பகலோன் எதிரில்  கவிழ்ந்தி ருப்பான்.

    Till Seraphs swing their snowy Hats –
    And Saints – to windows run –
    To see the little Tippler
    Leaning against the – Sun!

    Share
  • குறளின் கதிர்களாய்…(385)

    குறளின் கதிர்களாய்…(385)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(385)

    தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பி
    னென்குற்ற மாகு மிறைக்கு.

    – திருக்குறள் – 436 (குற்றங்கடிதல்)

    புதுக் கவிதையில்

    தன் குற்றத்தை முதலில்
    கண்டறிந்து அதைத்
    தானே நீக்கியபின்,
    மற்றவர் குற்றத்தைக் காணும்
    ஆற்றல் மிக்க
    அரசனுக்கு
    எந்தக் குற்றமும்
    ஏற்படாதே…!

    குறும்பாவில்

    தன்குற்றம் கண்டறிந்து நீக்கியபின்
    மற்றவர் குற்றம் காணும் மன்னனுக்கு
    எக்குற்றமும் வர வாய்ப்பிலையே…!

    மரபுக் கவிதையில்

    மண்ணை யாளும் மன்னவனும்
    மற்றோர் குறையைக் காணுமுன்னே,
    எண்ணிப் பார்த்தே தன்குற்றம்
    ஏற்ற வகையி லதைநீக்கி
    அண்டை அயலார் குற்றமெலாம்
    அலசிப் பார்க்கும் அருமையான
    பண்பு தன்னைக் கொண்டிருந்தால்
    பழியாம் குற்றம் வாராதே…!

    லிமரைக்கூ

    பிறர்குற்றம் கண்டிடும் முன்னால்
    தன்குற்ற மறிந்ததனை நீக்கும் மன்னனுக்கு
    எக்குற்றமும் வராதவன் பின்னால்…!

    கிராமிய பாணியில்

    காணாத காணாத
    குத்தம் காணாத,
    தங்கிட்ட குத்தம் வச்சிக்கிட்டு
    அடுத்தவங்கிட்ட
    குத்தம் காணாத..

    தங்கிட்ட இருக்கிற
    குத்தங் கொறயளக்
    கண்டறிஞ்சி மொதலுல
    அதயெல்லாம் நீக்கிப்புட்டு
    அடுத்தவங்கக் கொறய
    ஆராயிற ராசாவ
    அண்டாதே
    எந்தக் குத்தமும்..

    அதால
    காணாத காணாத
    குத்தம் காணாத,
    தங்கிட்ட குத்தம் வச்சிக்கிட்டு
    அடுத்தவங்கிட்ட
    குத்தம் காணாத…!

    Share
  • கணுப் பொங்கல் 2022

    கணுப் பொங்கல் 2022

    இந்த ஆண்டின் கோலாகலக் கணுப் பொங்கல் கொண்டாட்டம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அறுவடைப் பொங்கல் வைப்போம்

    அறுவடைப் பொங்கல் வைப்போம்

    சி. ஜெயபாரதன், கனடா

    பொங்கல் வைப்போம்
    அறுவடைப்
    பொங்கல் வைப்போம்
    நறுமணப்
    பொங்கல் வைப்போம்
    வீட்டு வாசலில்
    மாட்டுப்
    பொங்கல் வைப்போம்
    முன் வாசலில்
    கோலமிட்டு, பெண்டிர்
    கும்மி அடித்து
    தோரணப் பந்தலிட்டு
    சீராய்ப்
    பால் பொங்கல் வைப்போம் !
    புத்தாடை அணிந்து
    பூரிப்பாய்
    பொங்கல் வைப்போம்.
    பொழுது புலர்ந்ததும்
    வெய்யோன் விழித்ததும்
    வெண் பொங்கல் வைப்போம்.
    கூட்டாகத் தமிழர்
    கொண்டாடும் அறுவடைத் திருவிழா
    கோலகல மாகப்
    பொங்கலோ பொங்கல் என்று
    மங்கையர் பாடிக்
    கோலடித்து
    பொங்கல் வைப்போம்.
    தைப் பொங்கல் வைப்போம்.

    Share
  • மாட்டுப் பொங்கல் கோலங்கள்

    மாட்டுப் பொங்கல் கோலங்கள்

    ‘மாடு மேய்க்கும் கண்ணே’ பாடலை நாகி நாராயணன் குரலில் கேட்டுக்கொண்டே மாட்டுப் பொங்கல் கோலங்களின் அணிவகுப்பை அனுபவிக்க வாருங்கள்.

    படப்பதிவு – இயேகாம்பரம்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பொங்கல் கோலங்கள் 2022

    பொங்கல் கோலங்கள் 2022

    பொங்கல் பண்டிகை அன்று, தமிழக வீதிகளை அலங்கரித்த விதவிதமான, வண்ணமயமான, தூள்கிளப்பிய கோலங்களின் அணிவகுப்பு இதோ. கண்டு மகிழுங்கள்.

    வல்லமை அன்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 100

    பழகத் தெரிய வேணும் – 100

    நிர்மலா ராகவன்

    எல்லாரும் முட்டாள்கள் – என்னைத் தவிர

    நமக்குப் பலரைத் தெரிந்திருக்கலாம். அவர்களில் எத்தனைப் பேர் நம்மைப் புரிந்துகொள்கிறார்கள்?

    நாம்தான் அவர்களை முழுமையாகப் புரிந்துகொள்கிறோமா?

    அனேகமாக எல்லா மனிதர்களும் தம்மை ஒத்தவர்களை மட்டும்தான் ஏற்பார்கள். மற்றவர்களெல்லாம் முட்டாள், அல்லது அசடு என்று நம்புவார்கள்.

    மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்துவிடுவார்களோ என்று அஞ்சி, முந்திக்கொள்கிறார்கள். அவ்வளவுதான்.

    சில நிமிடங்களோ, வாரங்களோ மட்டுமே ஒருவருடன் பழகினால் அவரைப் புரிந்துகொள்ள முடியுமா?

    புரிந்துகொள்ள முடியாததால்தான் ஏளனம்.

    கதை

    என் சக ஆசிரியை ரொஜிதா (ROZITA) பதின்ம வயது மாணவர்களை, `இந்தக் குரங்குகள்’ என்றுதான் குறிப்பிடுவாள்.

    பொறுக்க முடியாது, ஒருமுறை, “உன் குழந்தைகளை `குரங்கு’ என்று சொல்வாயோ?” என்று கேட்டுவிட்டேன்.

    “சேச்சே!” என்றாள், சிரித்தபடி.

    அவளைப்போல், `நான்’, `எனது’ என்றே யோசித்தால், `நம்’ என்பது புரியாமல் போய்விடும்.

    பிறர் நிலையில் நம்மைப் பொருத்திக்கொள்வது

    பிறரைக் குறை கூறுவதற்கு முன், நமக்கு வாய்த்த நல்வாழ்க்கை அவர்களுக்கும் அமைந்திருக்குமா என்று சற்று யோசித்தால் அவர்களது நடத்தைக்குக் காரணம் புரியும்.

    பதின்ம வயதிற்கே உரிய குணம் எல்லாவற்றிற்கும் சிரிப்பது.

    வசதி குறைந்த குடும்பங்களிலிருந்து வந்த மாணவர்கள், வீட்டில் அன்பு கிடைக்காதபோது, தம்மையொத்த பிற மாணவர்களுடன் பழக நேர்ந்தால் அவர்களுக்குக் கூடுதலான மகிழ்ச்சி.

    ரொஜிதாவுக்கு அது புரியவில்லை.

    கதை

    ஒரு மாணவன் எதற்கும் அடங்கவில்லை.

    அவன் தாயைச் சந்தித்தபோது, “கொஞ்சங்கூட மரியாதை இல்லாமல் பேசுகிறான்,” என்று புகார் செய்தேன்.

    அவள் பெருமூச்சுடன், “வீட்டிலும் அப்படித்தான்!” என்றாள்.

    எங்கு, எப்போது தவறு நேர்ந்திருக்கும்?

    இத்தகைய பெற்றொர், சிறு குழந்தைகளைத் திட்டக் கூடாது, அவர்கள் மனம் நோக எதையும் செய்யவும் கூடாது, அவமானம் அடைந்துவிடுவார்கள் என்று நம்பி வளர்க்கிறார்கள்.

    நினைவு தெரிந்த நாளிலிருந்து தான்தோன்றித்தனமாக எதையும் செய்து பழகியவன், திடீரென்று பதின்ம வயதில் கண்டிப்பை ஏற்பானா?

    இன்னொரு கதை

    வகுப்பில் கீழ்ப்படியாமல், படிப்பிலும் கவனம் செலுத்தாது இருந்த மாணவர்களுள் ஆதாமும் ஒருவன்.  ஆனால் பரீட்சையில் பௌதிகப் பாடத்திலிருந்த, கஷ்டமான கணக்குகளைச் சரியாகப் போட்டிருந்தான்.

    எனக்குச் சந்தேகம் வந்தது. “என்னெதிரில் இப்போது போட்டுக் காண்பி!” என்றேன்.

    சற்றும் யோசியாது, சில வினாடிகளிலேயே முடித்தான்.

    மகா புத்திசாலி. ஏதோ குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறான் என்று புரிந்தது.

    வகுப்பு முடிந்ததும் என்னுடைய அறையில், சில நண்பர்களுடன் வந்து, என்னைச் சந்திக்குமாறு ஆதாமிடம் கூறினேன்.

    எடுத்த எடுப்பிலேயே, “உன் அப்பா உங்களுடன் இருக்கிறாரா?” என்று கேட்டேன்.

    “அப்பப்போ,” என்றான், அடக்கிய குரலில்.

    “உன் நண்பர்கள் எதிரில் இதைப் பற்றிப் பேசலாமா?” என்று கேட்டுக்கொண்டேன்.

    `அதனால் என்ன! நாங்கள் பார்க்காததா!’ என்பதுபோல் அவர்கள் கையை மேலும் கீழும் ஆட்டினார்கள், அலட்சியமாக.

    தந்தை வேறு பெண் துணைகளுடன் இருக்கும்போது ஆண்குழந்தைகள்தாம் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    தாயின் தனிமையை, வருத்தத்தை நம்மால் போக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சி வேறு.

    இவனைப்போல் எத்தனை மாணவர்களைப் பார்த்திருப்பேன்!

    அவர்களிடம், “உன் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையே இருக்கும் பிரச்னை இது. நீ வீணாகக் குழம்பாமல், உன் எதிர்காலத்தைப் பற்றி யோசி,” என்று பலவாறாக எடுத்துக் கூறுவேன்.

    அதற்குப் பின், நான் `எள்’ என்றால் எண்ணெய்தான்!

    ஆசிரியர்களும் பிறரைப் புரிந்துகொள்ளும் தன்மையும்

    பயிற்சிக் காலத்தில், ஆசிரியர்கள் உளவியல், சமூக இயல் ஆகியவற்றையும் கற்கிறார்கள்.

    உதாரணம்: வசதி நிறைந்த குடும்பத்திலிருந்து வந்த மாணவன், சுய முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டு, நல்ல விதமாக நடப்பான்.

    படிப்பறிவற்ற பெற்றோர்களின் குழந்தைகளுக்கு எவ்வாறு கல்வியில் நாட்டம் பிறக்கும்? அதற்காக, அவர்களைத் துச்சமாக நினைத்துவிடலாமா?

    பரீட்சையில் தேர்ச்சி பெறும் அளவுக்கு இவை புரிந்தால் போதும் என்ற மனப்பான்மை பெரும்பாலான, எதிர்கால ஆசிரியர்களுக்கு. ஆகையால், செயலில் கொண்டுவர முனைவதில்லை. அவர்களுடைய பின்னணி, கல்விக்கூடங்கள் ஆகியவையும் குறுக்கே வர, கற்றது வெறும் ஏட்டுச் சுரைக்காயாகப் போய்விடுகிறது.

    அப்படியிருக்க, மாணவர்களை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?

    தத்தம் கண்ணோட்டத்திலிருந்து பிறரை எடைபோடுவது அநேகமாக தவறான முடிவாகத்தான் இருக்கும்.

    கதை

    “அந்தப் பெண்ணை விரும்பி மணந்தானா! அவன் எவ்வளவு புத்திசாலி! அவளோ, மக்காக இருக்கிறாளே!”

    கல்வித் திறனிலும், உத்தியோகத்திலும் உயர்ந்தவன் அவன்.

    `நான் நிறையப் படித்து, பெரிய உத்தியோகத்திலும் அமர்ந்து, சாதித்துக்கொண்டே இருக்கவேண்டும்!’ என்ற கொள்கை கொண்ட பெண்கள் தனக்குச் சரிப்படாது என்று அவனுக்குத் தோன்றியது. அவர்களால் தனது பெரிய குடும்பத்தை நிர்வகிக்க முடியுமா என்ற கேள்வி எழ, குடும்பப் பாங்கான பெண்ணை மணந்தான்.

    மணவாழ்க்கையும் சுமுகமாக இருந்தது.

    அவனுக்குத் தன் மனம் புரிந்திருந்தது. அதனால் பிறரையும் புரிந்துகொள்ள முடிந்தது.

    ஏன் சிலரைப் பிடித்துப் போகிறது?

    `அவர் என்னைப் புரிந்துகொள்கிறார்!’ என்ற உணர்வு எழும்போது நிறைவாக இருக்கும்.

    அப்படிப்பட்டவர் குறைகளே இல்லாதவர் என்று அர்த்தமில்லை. ஆனால், குறைநிறைகளுடன் தன்னை ஏற்றுக்கொண்டவர். அதனால், பிறருடைய குறைகளையும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. பிறருடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பு அளிக்கும் முதிர்ச்சியை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

    அவர்களைப்போல் அல்லாதவர்கள் அவர்கள் மனத்தை நோகடித்தாலும், ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்று புரியும். `பழிக்குப் பழி’ என்று வீம்பு இருக்காது.

    எப்படிப் புரிந்துகொள்வது?

    பொதுவாக, பிறர் பேசும்போது, தான் எங்கு, எப்படி குறுக்கிடலாம் என்று காத்திருப்பதுதான் பலருக்கு வழக்கம். இது இயற்கை.

    அப்படியின்றி, ஒருவர் பேசுவதை உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டால், ஓரளவு புரிந்துகொள்ள முடியும். சிலரது புன்னகைக்குப் பின்னால் வருத்தம் இருக்கலாம். அன்பு கோபமாக வெளிப்படலாம்.

    பலபேர் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில், ஒருவர் மட்டும் மற்றவரது முகபாவம், பயன்படுத்தும் வார்த்தைகள் போன்றவற்றை மௌனமாகக் கவனித்துக்கொண்டிருப்பார். இவர் பிறரைப் புரிந்துகொள்ளும் அறிவாளி.

    அது புரியாது, `கர்வி,’ அல்லது, `பழகத் தெரியாதவன்’ என்று பட்டம் சூட்டிவிடுவார்கள்.

    தம்பதியருக்கு ஒரே மனமா?

    புதிதாக மணமானவர்கள் முதலில் பேசிக்கொள்வது: `நமக்குள் ரகசியமே இருக்கக் கூடாது. அப்போதுதான் நாம் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்”.

    இரண்டுமே தவறான எதிர்பார்ப்புகள்.

    `நான் திருமணத்திற்கு முன்பே பலருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தேன்!’ என்று அவர்களுள் ஒருவர் கூறினாலும், மற்றவரின் பொறாமையையும், `இப்போது மட்டும் ஒழுக்கமாக இருந்துவிடுவாயோ?’ என்ற சந்தேகத்தையும்தான் தூண்டிவிடுகிறார்.

    நம்மைப் பற்றி நாமே எவ்வளவுதான் விளக்கினாலும், பிறர் நம்மைப் புரிந்துகொள்ள முடியாது.

    பிறர் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று யோசித்தே நடப்பதால், பலரும் உண்மையாக நடப்பதுமில்லை.

    கதை

    நீண்ட காலம் தாம்பத்தியத்தில் ஈடுபட்டிருந்த முதியவர்களைக் கண்டு, அதிசயப்பட்டுக் கேட்டார்கள்: “உங்களுக்குள் சண்டையே வந்தது கிடையாதா? அப்படி ஒரு புரிந்துணர்வா!”

    அதற்கான பதில்: “என்னிடம் மட்டும் குறையே கிடையாதா, என்ன! கணவருடைய (மனைவியின்) குறைகளைப் பெரிதுபடுத்துவானேன்! ஏதாவது கெட்டுப் போயிருந்தால், அதைச் சரிசெய்து, பயன்படுத்தும் தலைமுறை எங்களுடையது!”

    (நிறைவு)

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 10

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 10

    முனைவர் ச.சுப்பிரமணியன்                  

    நூல் மதிப்பீடு

    முன்னுரை

    முதல் மரியாதை’ படத்தைப் பற்றிக் கவிஞர் வைரமுத்து கூறுகையில் ‘தென்றலின் கையைப் பிடித்துக் கொண்டு நந்தவனத்தற்குள் நடந்துபோன திருப்தி எனக்கு’ என்று நந்தவனத்தில் நடைபயின்று அனுபவித்த இன்பத்தை  உவமமாக்கிப் பார்த்துக் களித்த படத்தைப் பொருளாக்குவார். நான் அந்த நந்தவனத்தையே பொருளாக்குகிறேன். வைரமுத்துக்கு நந்தவனமாக இருந்தது கவிஞர் அந்தோணிசாமிக்குச் சோலையாகியிருக்கிறது. நந்தவனம் வடநூல் வழக்கு. சோலை தமிழ்வழக்கு. பழமுதிர்ச்சோலை, திருமாலிருஞ்சோலை, திருவளர்சோலை, என்பன போல!  படத்தின் பன்முகச் சுவையை அனுபவித்த வைரமுத்து பல்வகை தருக்கள நிரம்பிய சோலை நிழலின் குளிர்சசியோடு ஒப்பிட்டார்.  கவிதைப் பூக்கள் பூத்திருக்கும் இந்தச் சோலைக்கு இதற்கு முந்தைய கட்டுரையின் பொருளான கவிதை ஊருணியைத்தான் உவமமாக்க வேண்டியிருக்கும். ‘கவிதை ஊருணி’ என்னும் நூல் தணிக்கையாளர் திரு தணடபாணி அவர்களால்  எழுதப்பட்டது எனின், தமிழக்கவிதைகளால் நிரம்பியிருக்கும் இந்த நூல் ஆங்கிலப் பேராசிரியர் ஒருவரால் எழுதப்பட்டதாகும். சுவையுணர்விலும் திறனாய்விலும் எந்த நிலையிலும் சமரசம் செய்துகொள்வதை விரும்பாத நான் இந்த நூலின் கவிதைகளால் கவரப்பட்ட பாங்கினை இந்தக் கட்டுரை வழியாகச் சுருக்கமாக பந்தி வைக்க முயல்கிறேன்!.

    தமிழ் இலக்கியமும் பிறதுறை அன்பர்களும்

    இலக்கியப் புலமை என்பது வேறு இலக்கிய ஆர்வம் என்பது வேறு. இவையிரண்டும் வேறுபட்டனவேயன்றி முரண்பட்டவை அல்ல. ஒரு மொழியில் புலமை என்பது அம்மொழிச் செவ்விலக்கியங்களில் ஆழங்கால்படுவதும் இலக்கணத்தில் மீயுயர் புலமை பெறுவதுமாகும். வாகீச கலாநிதி, அறிஞர் மு.வ. முதலியோர் இந்த நிரலில் வருவர். இலக்கிய ஆர்வம் காரணமாகத் தமிழின் பல்வகை இலக்கியங்களைத் தாமே கற்று அவற்றின் நுண்ணியம் தேர்ந்து சுவைத்துப் பிறருக்கும் பரிமாறுபவர்கள் சிலர். சிலம்புச் செல்வர், கலைஞர், ஜீவா கண்ணதாசன், வாலி  முதலியோர் ,இந்த நிரலில் அடங்குவர். இவர்களுடைய தமிழார்வமும் உணர்ச்சியும் புலமையினும் சிறந்தது. இந்தக் குழுவில் பிறதுறை அன்பர்களும் பிறமொழிப் பேராசிரியர்களும் சில நேர்வுகளில் ஒளிர்வதுண்டு. தூத்துக்குடி பேராசிரியர் அ.சீனிவாசராகவன், மதுரை  எஸ்.இராமகிருஷ்ணன் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை முன்னாள்  தலைவர் பேராசிரியர் கா. செல்லப்பன் முதலியோர் .இதில் வருவர். கா.நமசிவாய முதலியார், ஆய்வறிஞர் வையாபுரிபிள்ளை, பல்கலைச்செல்வர் ;தெ.பொமீ முதலிய அறிஞர்கள் வழக்கறிஞராய் இருந்து தமிழ்வளர்த்த செம்மல்கள். அந்த நிரலில் வந்திருப்பவர்தான் நல்லாசிரியர் திரு. அந்தோணிசாமி அவர்கள். ஆங்கிலத்தில் முதுகலைப் படடம் பெற்று அத்துறை ஆசிரியராகப் பணியாற்றித் தமிழில் கவிதை யாக்கும் அளவில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

    படைப்பாளரும் படைப்பும்

    ஆங்கிலத்தில் ஒன்றும் தெரியாமல் முற்றும் கற்றவர்போல் போலித் தகுதியைத் தாமே கற்பித்துக் கொள்பவர் ஒருபுறம் தமிழில் பட்டம் பெற்றிருந்தும் ‘எனக்கு ‘ஆங்கிலத்தைப்போல் தமிழ் வராது’ என்று தம்மையே ஏமாற்றிக் கொள்ளும் இரண்டுங்கெட்டான்கள் இன்னொரு புறம்! சுருங்கச் சொன்னால் ஆங்கிலத்தை அறிந்தாலேயே ஆண்டவனை அறிந்தது போன்ற மயக்கம் நிலவுகிற ஒரு போலிச் சமுதாயக் கட்டமைப்பு இது. இந்தக் கட்டமைப்பில் ஆங்கிலத்தை முறையாகக் கற்று அத்துறையில் கல்விப் பணியாற்றிவரும் ஆசிரியர் ஒருவர் தமிழைப் படிப்பது என்பது முதல் நிலை! அதில் உரைநடை இலக்கியங்களைப் படைப்பது இரண்டாவது நிலை! கவிதைகளைப் படித்துப் புரிநது கொள்வது மூன்றாவது நிலை! அதில் கவிதை படைப்பது நான்காவது நிலை! ஆங்கில ஆசிரியர் திரு அந்தோணிசாமி அந்த நிலையை அடைந்திருக்கிறார்! நம்மை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்!  சமுதாயத்திற்கு ஏதாவது சொல்ல வேண்டுன் என்ற அவர்தம் துடிப்பைத் தாமறிந்துணர்ந்த ஆங்கிலத்தில் வெளிப்படுத்தாமல் தாய்மொழி தமிழில் வெளிப்படுத்தயிருப்பதே ‘கவிதைச் சோலை’ பிறரை ஈரக்கின்ற தலையாய காரணியாக அமைந்துவிடுகிறது.

    சான்றோர்களை மதிக்கின்ற மரபு!  

    பணிவும் இன்சொல்லும் தனிமனிதனுக்கே பெருமை தருவதெனின் கவிஞனுக்குச் சொல்ல வேண்டியதில்லை. நல்ல மனிதனாக இல்லாத எவனும் நல்ல கவிஞனாக ஒளிர இயலாது.. கள்ளமில்லாத வெள்ளை உள்ளமே கண்ணதாசனின கவிதை மூலதனம். முரண்பட்ட தத்துவங்களோடு அவர் உறவு வைத்துக் கொண்டாடினார்.  எந்தச் சூழலில் எந்தக் கொள்கையைக் கடைப்பிடித்தாரோ அந்த நேரத்தில் அந்தக் கொள்கைக்கு நம்பிக்கையானவராக அவர் இருந்தார். அந்த உள்ளம் தன்னல மறுப்புக்கு வழிகாட்டும். காட்டவே அனைவரையும் மதிக்கச் சொல்லும். கவிஞர் அந்தோணிசாமி தன்னைச் சூழ்ந்திருப்பவர்களையும் தன் சமுதாய முன்னேற்றத்திற்குப் பாடுபட்ட தலைவர்களையும் பாடி மகிழ்கிறார். சுருங்கச் சொன்னால் பாடாண் திணை பாடாத கவிஞனை நாம் எளிதில் எடைபோட்டு விடலாம்.

    அந்தோணிசாமி பார்வையில் பெரியார்

    பெரியாரின் போராட்டக்களம் உலகளவில் சற்று வேறுபட்டது. மககளால் பல்லாயிரம் ஆண்டுகளாக ஒப்புக்கொள்ளப்பட்டுப் பின்பற்றப்பட்டு வந்த வேர் பிடித்த மரபுகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்த பெருமை அவருக்கு உண்டு. அந்த விசாரணைக் கூண்டில் குற்றம் சாட்டப்பட்டவற்றுள் சாதியமும் ஒன்று

    “சாதிவெறி பரப்பியதால் சாதித்த கூட்டத்தில்
    சாதியத்தை வேரறுத்துச சமதர்மம் படைத்திடவே
    பாதித்த மக்களிடம் பாசமுடன பகுத்தறிவைப
    வதத்தால் வளர்த்தாரே இறுதிவரை பெரியாரே!

    என்று பாடுகிறார். பெரியாரின் எல்லாக் கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எலலாக் கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகக் கருத்துக்களைக் கூறிய மகான் இது வரை பிறக்கவில்லை. ஒருவன் தான் தனிப்பட்ட முறையிலும் சமுதாய அளவில் பிறருடைய பார்வையில் மதிக்கப்படுவதற்கும் முன்னேற்றமடைவதற்கும் காரணமாயிருந்தவரை அடையாளம் காண்பதும் அவரை வணங்குவதும் மானுட இயல்பு. இங்கே இராமனைப் பாடிய கம்பரும் கவிஞர்தான். சிவனைப் பாடிய சேக்கிழாரும் புலவர்தாம். இருவர் கொள்கைகளையும் ஒருவர் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு எறறுக் கொள்ளப்படாததால் அவர்கள் குறையுடையவர்கள் என்றோ கறைபடிந்தவர்கள் என்நோ தரமதிப்பீடு செய்யும் தகுதி நம்மில் யாருக்கும் இல்லை. பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகள் பரவியிருந்திருக்காவிட்டால் கைம்மைத் துன்பததைப் போக்கியிருக்க முடியாது. பெண்கள் தங்களைப் புரிந்து கொண்டிருக்க முடியாது. மனித நேயத்தின் மாண்பினை நாம் உணர்நதிருக்க முடியாது. இநத அளவிலே அந்தோணிசாமி பெரியாரைப் பாடுகிறார். பாராட்டுகிறார்.

    கவிதை மதிப்பீடு

    ஒரு கவிதை நூலையோ அந்த நூலில் உள்ள கவிதைகளின் தரத்தையோ அதனை எழுதிய ஆசிரியரையோ மதிப்பிடுகிறபோது அந்த நூல் முழுமையும் அருமையான கவிதைகளால் நிரம்பியிருக்க வேண்டும என்பதில்லை. எலலாக் கவிதைகளும் கவிதை மூலங்களான கற்பனை உணர்ச்சி, கருத்து வடிவம் என எல்லாக் கூறுகளிலும் செப்பம் உடையதாக இருக்க வேண்டும் என்பதில்லை. கவிஞனும் ஒரே கொள்கை சார்ந்தவனாக முரண்பாடே இல்லாதவனாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும என்பதுமில்லை.காரணம் அது கவிதை. அது ஒரு பரப்புரை சாதனமன்று. அதனைப் பரப்புரையாகப் பயன்படுத்திக் கொள்வது படைப்பாளனின் தனித்திறன். கவித்துவம் நம்மை அசைத்துப் பார்த்தால் அதனைக் கவனிப்போம்! நமக்கு அறிவுரை மட்டும் கூறுவதாக இருந்தால் பழைய ஔவையாரின் ஆத்திசூடிக்குள் போய்விட மாட்டோமா? கவிதையின் ஏதாவது ஒரு கூறு நம்மை அசைத்துப் பாரத்தால் அது போதும் நமக்கு! வைக்கப்படுகிற பந்தியில் ;உட்கார்ந்து எழுந்திருப்பவரும் இருக்கிறார்கள். இலையை மார்கழி மாதத்து வானமாக்கி வழித்தெடுப்பவர்களும் இருக்கிறார்கள். அது இலைகளின் உள்ளடக்கத்தைப் பொருத்தது.

    கடுகும் வேம்பும் நிறைந்த கவிதைச் சோலை

    முனைப்புடைய கவிஞர் என்பாரைக் காசு நெருங்கலாம். கவிதை நெருங்காது. இரக்கம், அன்பு, மனிதநேயம், ஒப்புரவறிதல் என்னும் மனிதகுல விழுமியங்களே சாதாரண மனிதன் ஒருவனை பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. வள்ளலாரும் பாரதியும் இதற்குச் சரியான எடுத்துக்காட்டு. அவர்கள் இருவரும் மாபெரும் அருளாளர்களாயிருந்து கவிஞராய் பரிணமித்தவர்கள். அவர்கள் தேமா புளிமா கவிஞர்கள் அல்லர்! உலகியலில் நகலுக்கு; இருக்கிற மதிப்பு அசலுக்கு இருப்பதில்லை. கவர்ச்சிக்கு இருக்கிற செல்வாக்கு அடக்கத்திற்கு இல்லை

    “கண்கவரும் வண்ணவண்ண விளக்கெரிய
    கண்ணாடிக் கதவுகளால் கவர்ந்திழுக்க
    சொன்னவிலை கொடுத்துவார்க்கும் கடைகளிலே
    சொக்கிப்போய் பொருள் வாங்கும் நண்பர்களே”

    என்று போலித்தனத்திற்கு மயங்கிச் செல்வாரைப் பாசத்துடன் அழைத்துப் பேசுகிற கவிஞர் என்ன சொல்கிறார்?

    வீடு தேடி வருவதாலே விலை குறைத்து
    விற்கத்தான் வேண்டுமென ஏதிர்பார்த்தல்
    பாடுபடும் எளியோரின் வாழ்வினையே
    பாதிக்கும் என்றுணர மறுப்பதேனோ?

    “அஞ்ஞானத்தைத் தேடிச் சென்று அறியாமையை வாங்கிவருகிறீர்கள். வெளிசசத்துக்குள் சென்று ;இருளில் மறைகிறீர்கள்1 வீடு தேடிவரும் ஞானத்தைப் புறக்கணிக்கிறீர்கள்.” என்கிறார். பழ வணிகர்கள், பூவிற்கும தாய்மார்கள், வேர்க்கடலை விற்றுப் பிழைக்கும் முதியவர்கள்  ஆகிய  இவர்களிடம் பேரம் பேசுவதும் ஒருவகை சுரண்டல்தானே!

    கவிதைச் சோலையில் கற்பனை மணம்

    இயற்கையைப் பேணுவோம் என்று எல்லாரும் முழங்குகிறார்கள். விழித்துக் கொண்டே இருப்பவர்களுக்கும் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்துகிறார்கள். அவர்களும் தூங்கிக் கொண்டே நடக்கிறார்கள். இது ‘தினசரி மூன்று காட்சிகள்’ என்பது போல நடந்து கொண்டேதான் இருக்கிறது ஆற்றுநீரைச் சுரண்டுவது பற்றி அந்தோணி எழுதுகிறார்

    ‘ஆறுகளின் முதுகெலும்பு தண்ணீர’

    இத்தகைய அழகியல் சார்ந்த வளமான கற்பனை ஆங்கில ஆசிரியர் ஒருவருக்கு வந்திருக்கிறது. முதுகெலும்பு உள்ளவனைப் பார்த்து முதுகெலும்பு இல்லாதவன் என்று சொல்லும் உலக வழக்கை நோக்கியவர்க்கு இந்தக் கற்பனையின் அழகு இன்னும் அழகு பெறும். கண் அழுவது உண்டு. காற்றுமா அழும்? அந்தோணிசாமிக்கு நீரில்லாத ஆறு நிற்க முடியாமல் படுத்துக்கிடப்பதன் காரணமாக முதுகெலும்பு இல்லாத ஆறு கற்பனை வந்திருக்கிறது! பெருவெள்ளக் கோலமே ஆறு ‘நின்ற கோலம்!’

    “மணல்அள்ளித் துகிலுரித்த போதெல்லாம் செயலற்று
    மண்ணாக இருந்து விட்டு
    அனலிடை அகப்பட்டுத் துடிக்கின்ற புழுவாக
    அவனியிலே தவிப்ப தேனோ?”

    என்று அதே பாட்டில் அவருடைய  மற்றொரு கற்பனைப் பதிவைக் காணலாம். இந்த இடத்தில் மரபு சார்ந்த கற்பனையைத் தன் பார்வையில் பதிவு செய்திருக்கிறார். ஆற்றினைப் பெண்ணாகக் கருதி பாடுவது தமிழ்க்கவிதை மரபு! கண்ணகியின் துன்பத்தைக் கண்ட வையை ஆறு.

    “வையை என்ற பொய்யாக் குலக்கொடி
    தையற் குறுவது தானறிந்தனள் போல்
    புண்ணிய நறுமலர் ஆடைபோர்த்த
    கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப்
    புனல்யாறு அன்றிது பூம்புனல் ஆறு”

    சென்றதாக அடிகள் பாடியிருக்கிறார். அடிகள் போர்த்திய ஆடையை இங்கே பல முதலாளிகள் அவிழ்க்கிறார்கள். பண்பாடு குறைவான செயல் மட்டுமன்று பாதகமான செயலும் கூட!. அந்தப் பாதகத்தை இவர் பாட்டிலே பதிவு செய்திருக்கிறார்.

    கவிதைச் சோலையில் கட்டுமானச் சிறப்பு

    யாப்பு என்பது கற்பு, காப்பு, கலைப்பு என்பன போன்றதொரு  தொழிற்பெயர். கவிதையில் யாப்பு என்பது அதன் புறக்கட்டுமானத்தைக் குறிப்பது. படைப்பாளன் தான் எடுத்துக் கொண்ட அல்லது அவன் உள்ளத்தில் தோன்றிய பாடுபொருளுக்குத் தக்கவாறும் தன் மனநிலைக்கும் தக்கவாறும் அமைத்துக் கொள்கிற வெளிப்பாட்டு உத்தி. இந்தச் சிறிய கவிதை நூலில் காணப்படும் ஒரு சில கவிதைக் கட்டுமானத்தை ஆராய்வதாக இப்பகுதி அமைகிறது.

    “நான்விட்டுத் தரமாட்டேன் என்று சொல்லும்
    நட்பினரும் அதுபோலே நினைப்ப தாலே
    நானிலத்தில் குழப்பங்கங்கள் முற்றிப் போக
    நாள்தோறும் துன்பங்கள் தொடரும்போது
    நான் நினைக்கும் அத்தனையும் சரியே என்று
    நாள்தோறும் வாதிடுதல் சரியா சொல்வீர்?
    நானுணர்ந்தேன் என்தவற்றை! நாளும் வெற்றி
    நனிபெறவே தடைகளின்றி முயல்வோம் நாமே!”

    என்பது போன்ற எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் படைப்பாளின் ஆற்றொழுக்கான நடைக்கும் கவிதை படைப்பதில் அவருக்கிருக்கும் ஆர்வத்திற்கும் சான்றாகத் திகழ்கிறது!. தமிழ்க்கவிதைப் படைப்புலகில் மிகவும் நீர்த்துப்போன யாப்பு இது! இந்த யாப்பினைத் தக்க முறையில் தன் கவிதைப் பயிற்சிக்குப் பயன்படுததிக் கொண்டிருக்கிறார் பாவலர்!.

    சினத்தைத் தூண்டும் சொற்களையே
    சிறிதும் சொல்ல வேண்டாமே
    மனத்துள் சினத்தை அடக்குவதால்
    மனத்தில் அழுத்தம் உயர்கிறதே!
    குணத்தை யாரும் ஒப்பிட்டே
    குறையாய்க் கூற வேணடாமே!
    பணத்தைச் சிறுகச் சேர்ப்பதுபோல்
    பண்பை வளர்க்க முயல்வோமே!

    என்னும் பாட்டு அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களின் பல வடிவங்களில் ஒன்று. மா மா காய் என்று அரையடிக்கான இலக்கணத்தைப் பெற்று அமைகின்ற இநதப் பாட்டின் சந்தம் மகாகவிக்குப் பிடித்தமான சந்தங்களுள் ஒன்று. இதனை

    “மொய்க்கும கவலை பகைபோக்கி
    முன்னோன் அருளைத் துணையாக்கி
    எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி
    உடலை இரும்புக் கிணையாக்கிப்
    பொய்க்கும் கலியை நான்கொன்று
    பூலோ கத்தார் கண்முன்னே
    மெயக்கும் கிருத யுகத்தினையே
    கொணர்வேன தெய்வ விதியிஃதே!

    என்னும் பாடலால் அறியலாம். ‘விநாயகர் நான்மணி மாலையில்’ அமைந்துள்ள நான்கு வடிவஙகளில் ஒன்றினை இந்த யாப்பிற்கு அவர் அளித்திருக்கிறார். இனி இந்த அறுசீர்களை இதே வாய்பாட்டில் பன்னிரு சீர்களாக அமைத்துக் கொண்டு அமைப்பதே பிள்ளைத் தமிழ். இதனை

    பேரா தரிக்கும் அடியவர் தம்
    பிறப்பை ஒழித்துப் பெருவாழ்வும்
    பேறும் கொடுக்க வரும் பிள்ளைப்
    பெருமான் என்னும் பேராளா!!
    சேரா நிருதர் குல கலகா,
    சேவற் கொடியாய்த் திருச்செந்தூர்த்
    தேவா, தேவர் சிறைமீட்ட
    செல்வா என்று உன் திருமுகத்தைப்
    பாரா மகிழ்ந்து முலைத் தாயார்
    பரவிப் புகழ்ந்து விருப்புடன் அப்பா
    வா வா என்று உன்னைப் போற்றப்
    பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால்
    வாரா திருக்க வழக்குண்டோ?
    வடிவேல் முருகா வருகவே
    வளரும் களபக் குரும்பை முலை
    வள்ளிக் கணவா வருகவே!!

    என்னும் பகழிக்கூத்தர் எழுதிய திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமழின் வழியும் ஏனைய பிள்ளைத் தமிழ் நூல்களின் வழியும் உணர்க. இது பிள்ளைத் தமிழில் பெருவழக்கு இனி இந்த கட்டுமானத்தின் முதலடியிலும மூன்றாம் அடியிலும் தனிச்சொல் பெய்து சந்த இனிமையைக் கூட்டி அதனைச சிந்தாக்கும் முயற்சியும் நடந்தேறியிருக்கிறது.

    “அஞ்சி நடுங்கி வாழ்வதுவும்  — பிறர்
    அடிமையாக உழல்வதுவும்
    கெஞ்சித் திரிவதும் வாழ்வாமோ?  பிறர்
    கேட்டில் மகிழ்வது அறமாமோ?”

    என்று கவிஞர் கடவூர் மணிமாறன் பாடியிருக்கிறார். ஆற்றல் மிக்க கவிஞர் வல்லாளர வைரமுத்து

    “மாயக் கனவுகள் தின்பவரை – உயிர்
    மயங்கிக் கிடக்கும் தோழர்களை
    தீயைத் தின்னும் இளைஞர்களாய் – கவி
    செய்யாதொழிந்தால் ஏது பயன்?”

    என்று பாடியிருக்கிறார். பிறரும் பாடியிருக்கிறார்கள். விரிப்பின் பெருகும்.

    “குறுக்கிட்டுப் பேசுவதால் இருவ ருக்கும்
    குறைவான புரிதலுடன் மனவ ருத்தம்
    பொறுமையாய் இறுதிவரைக் கேட்ப தாலே
    பொன்னான நட்புகளைத் தொடர லாமே!”

    என்பதை யொத்த பாடல்களால் தனக்குக கலித்தாழிசையும் கைவந்ததே என்பதைக் காட்டியிருக்கிறார் அந்தோணிசாமி.

    “பொருதடக்கை  வாளெங்கே? மணிமார் பெங்கே?
    போர்முகத்தல் எவர்வரினும் புறங்கொடாத
    பருவயிரத் தோளெங்கே எங்கே என்று
    பயிரவியைக் கேட்பாளைக் காண்மின்! காண்மின்!

    என்பது கலிங்கத்துப் பரணி! எனவே எளிய சொற்களில் இனிய சந்தங்களக் கொண்ட பாடல்களை இயற்றுவதிலும் யாப்பிலக்கண நெறி பற்றி எழுதுவதிலும் அந்தோணிசாமி அவர்களின முயற்சி பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது.. இவர்தம் கவிதைகளில் இழையும் தொடைவிகற்பங்களைப் பற்றி ஆராய்ந்து சொல்லலாம். அது கட்டுரையின் அளவை விஞ்சக்கூடும். யாப்பமைக் கவிதைகளில் காணப்படும் ஒரு சில பிழைகள் கவிதை வல்லாளர்களுக்கும் ஏற்படக்கூடியனவே என்பதாலும் எதிர்காலத்தில் மிக எளிதாக தவிர்க்கப்படலாம் என்பதாலும் அவை கருத்திற் கொள்ளப்படவில்லை.

    ஆன்றோரை மதிக்கும் அந்தோணிசாமி

    பண்பாட்டு விழுமியங்களின் அருமையறியா யாரும் மரபுக்கவிதை எழுதுவதாகச் சொல்லிக் கொள்வது அருவெறுப்பாக உள்ளது. வள்ளுவனுக்கு என்ன  தெரியும்? கபிலர் பாடல்களில் கற்பனை உண்டா? கதை சொன்னதைத் தவிர கம்பன் வேறு என்ன செயதான்? பாரதிக்கு யாப்பிலக்கணம் தெரியுமா? பாரதிதாசனுக்கு எந்தப் பல்கலைக்கழகமாவது டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறதா?’ என்று சான்றோர்களை எள்ளி நகையாடும் ஒரு கூட்டம் தமிழகத்து உயர்கல்வி நிலையங்களிலேயே இடம் பெற்றுள்ளது. இது என் நேரடி அனுபவம். என் முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்டியாக இருந்தவர் ஒரு முறை என்னிடம் சொன்னார். ‘திருக்குறளில்;  ‘கூறியது கூறல்’ என்ற குற்றம் அதிகமாக இருககிறது’ என்று. நான் திருப்பிக் கேட்டேன். ‘அப்படியானால் குறைவாக இருக்கலாமா? என்று. அதாவது திருக்குறளில் குறை காணும் அளவிற்குத் தன்னை தன் முனைப்பை வெளிப்படுத்திக் கொள்ளும் பேராசரியர் (?) ஒருவர் எப்படி மரபாளுநராக பணியாற்ற முடியும்?

    அந்தோணிசாமி அவர்கள் அந்த வகையில் பண்பின் கொள்கலமாகத் திகழ்வதைக் காணமுடிகிறது. ஆங்கிலப பேராசிரியர் ஷெல்லியைப் பாராட்டலாம். பைரனைப் புகழலாம். சேக்‌ஸ்பியரைச் சிலாகிக்கலாம். வால்ட் விட்மனை வாயாரப் புகழலாம். ராபர்ட் பிராஸ்ட் கவிதைகளை மெச்சலாம். அவர் முடியரசனைப் பாராட்டுகிறார். பாரதியைப் பேசுகிறார்!.சுரதாவின் உவமங்களில் இவர் சொக்கிக் கிடந்ததை இவருடைய கவிதைகளில் காணப்படும் மயக்கமே உணர்த்துகிறது. அதிலிருந்து இன்னும் எழவில்லை இவர்!

    “இல்லத்தில் பாராட்டைத் தொடங்கிடுவோம்!
    இளையோரை முதியோரைப் புகழ்ந்திவோம்1
    நல்ல செயல் செய்தவுடன சிறிதெனினும்
    நற்பண்பாய்ப் பாராட்டி ஊக்குவிப்போம்!

    என்று உளவியல் கற்ற இந்த ஆசிரியர் பின்னும் தொடர்கிறார்!  விடுதலைக் கவிஞர் நாமக்கல்லாரை நாவினிக்கப் போற்றுகிறார்! நகைச்சுவைப் புயல் சின்ன அண்ணாமலையை நினைவு கூர்ந்து பாடுகிறார். நான் சின்ன அண்ணாமலை அவர்களைச் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களோடு கண்டவன். அந்த நகைச்சுவை இமயத்தை அந்தோணிசாமி பாடியிருக்கிறார். எனக்குத் தெரிந்து சின்ன அண்ணாமலையின் படத்தைக்கூடத் திறக்காத தமிழகத்தில் அவரைக் கவிதையின் பாடுபொருளாக்கிய பெருமை அந்தோணிசாமிக்கு உண்டு.  அவருக்கு மட்டுமே உண்டு!

    நிறைவுரை

    ‘படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! என்ற பகுதியில் எழுபத்தாறு வயதான நான் எழுதிவரும் கட்டுரைகள் முழுமையும் என் நலன்  நோக்கியதே!  எனது தனிமைக்கு இந்தப் பிள்ளைகள் எழுதும் கவிதைகள் துணையாகின்றன.  இவர்களில் பெரும்பாலோரை நான் நேரில் சந்தித்தது கூட கிடையாது. சிலர் அலைப்பேசியில் தொடர்பு கொள்வர். அவ்வளவதான்! தம்பி அந்தோணிசாமி  ஆங்கிலமொழியிலக்கியத்தில் மேனிலைக் கல்வி ஆசிரியர் அவர் கொஞ்சம் முயன்றிருந்தால் ஒரு சிறிய நூலை ஆங்கிலத்திலேயே வெளியிட்டிருக்க இயலும். அவர் தமிழில் பாடியிருக்கிறார். சொந்தச் செலவில் பதிப்பித்தும் இருக்கிறார். பாராட்ட வேணடாமா? சமுதாய நோக்கு, கற்பனை, வடிவம், உணர்ச்சி என்னும்  கவிதைக்கான பல கூறுகளையும் கலந்த கலவையாகப் படைத்துக் காட்டியிருக்கும் இந்த நூலில் சொத்தைக் கருத்துக்கள இல்லை!. தூங்க வைக்கும் வடிவம் இல்லை!. தொட்ட இடமெல்லாம் தட்டுப்படுவது எளிமை! எளிமை! எளிமை! எளிமையுடையவர் பேறு பெற்றார். அந்தோணிசாமி கவிதைகள் உட்பட!

    நல்லாசிரியர் ம.அந்தோணிசாமி M.A.,M.A.,M.Ed.,M.Phil.,

    (தொடரும்)

    Share
  • தனித்திருப்பம் அளிக்கும் தைப்பொங்கல்!

    தனித்திருப்பம் அளிக்கும் தைப்பொங்கல்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா 

    தையெங்கள் வாழ்வில் தலையாய மாதம்
    தைபிறந்த பின்னால் வழிபிறக்கு மென்போம்
    பொங்கலெனும் பரிசைச் சுமந்துவரும் மாதம்
    தையெனவே எண்ணித் தான்மகிழ்ந்து நிற்போம்

    தைதொடங்கி விட்டால் தைரியமும் பெருகும்
    தைப்பொங்கல் வாழ்வில் தனித்திருப்பம் அளிக்கும்
    உள்ளமதில் உவகை ஊற்றெடுத்து நிற்கும்
    உழைப்பதனை மனமும் ஏற்றுவிடத் துடிக்கும்

    பொங்கலெனும் வார்த்தை பூரிப்பைக் காட்டும்
    மங்கலமாய் பொங்கி மகிழ்கவென உணர்த்தும்
    சொந்தமெலாம் சேர்ந்து நிற்கவெனச் சொல்லும்
    சூழ்ந்திருந்து சுவையாய்ச் சுவைக்கும்படி வைக்கும்

    முற்றத்தில் கோலமிட்டு விளக்கேற்ற வைக்கும்
    மூத்தோரின் கால்தொட்டுப் பணியும்படி வுரைக்கும்
    அத்தையொடு மாமாவின் ஆசியையும் பெற்று
    அனைத்துமே பொங்கென்று அதுவுரைத்து நிற்கும்

    புதுப்பானை எடுத்துப் பொங்கலிடச் செய்யும்
    பொங்கிவரும் பால்பார்க்கச் சுற்றிநிற்கச் சொல்லும்
    பருப்போடு பச்சரிசி பானையிட வைக்கும்
    பக்குவமாய்ச் சர்க்கரையும் சேர்த்துவிடச் செய்யும்

    பொங்கிவரும் பால்பார்த்துப் பூரிப்பு அடைவோம்
    மங்கலங்கள் வாழ்வென்றும் நிறைகவென நினைப்போம்
    சங்கடங்கள் சாம்பலாய் ஆகவென எண்ணி
    சகலருமே இறைவனிடன் தான்வேண்டி நிற்போம்

    அறமுடைய அரசாட்சி அமைந்துவிட வேண்டும்
    ஆன்மீகம் அகமதிலே அமர்ந்துவிட  வேண்டும்
    அறநினைப்பு அகமதிலே எழுந்துவிட வேண்டும்
    அனைத்துக்கும் பொங்கல் வழிசமைக்க வேண்டும்

    மாநிலத்தை வதைத்தெடுக்கும் மாநோயகல வேண்டும்
    மனமார அனைவருமே அதைநினைக்க வேண்டும்
    மனவமைதி மனமகிழ்வு மனநிறைவு பெருக
    மனமுருகி அனைவருமே வேண்டிடுவோம் வாரீர்

    பாலாக இருப்போம் சர்க்கரையாய் இருப்போம்
    பக்குவமாய் யாவருக்கும் சுவைகொடுத்து நிற்போம்
    தேனாக இருப்போம் சேர்கவென அணைப்போம்
    தினமுமே பொங்கலாய் ஆக்கிடுவோம் வாரீர்

    Share