மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
ஆஸ்திரேலியா 

எம்மைப் படைத்த பரம்பொருளினை வாழ்வெல்லாம் எண்ணிட வேண்டும் என்பதற்காக எங்களின் முன்னோர்கள் விடியும் ஒவ்வொரு நாளினையும் அந்தப் பரம்பொருளுக்கு உரிய நாளாகவே ஆக்கி அதற்கென்று ஒரு பெயரினையும் சூட்டி பக்தியின் பாதையிலேதான் பயணித்து வந்திருக்கிறார்கள்.  அந்த வகையில் வருடத்தின் இறுதி மாதமான மார்கழியினை தெய்வத்துக்குரிய மாதமாக்கி – திருவெம்பாவை என்றும்திருப்பாவை என்றும் பக்திப் பனுவல்களை அதிகாலை வேளையிலே ஆலயத்தில் பாடிப் பரவி நின்றார்கள். சைவம் என்றோ, வைணவம்என்றோ பார்க்காமல் அந்தப் பரம்பொருள் புகழ்பாடும் மாதமாகவே வருடத்தின் இறுதி மாதமான மார்கழியினை ஆக்கி விட்டார்கள். வருடத்தின் இறுதி மாதம் பரம்பொருளின் புகழ்பாடும் மாதமாக அமைத்த எங்கள் முன்னோர் வருடத்தின் தொடக்கத்தையும் பரம்பொருளினை எண்ணி பக்திவழியிலேயே தொடங்கும் வண்ணம் ஆக்கிவிட்டார்கள் என்பதுதான் மிகவும் முக்கியமாகும். பூமாதேவியைத் தொட்டு ஆதவனை அகமிருத்தி பஞ்சபூதங்களையும் வணங்கி நன்றி நவிலும் முகமாக தைப்பொங்கல்த் திருநாளினை வருடத்தின் தொடக்கமாகவே அமைத்த முன்னோர்களின் மகத்தான வாழ்வியல் நெறியினை வியந்துதான் பார்க்கவேண்டி இருக்கிறதல்லவா!

நட்சத்திரங்களைநாட்களைதிதிகளை எல்லாம் மனமிருத்தி அவை ஒவ்வொன்றும் உரிய வகையில் பரம்பொருளினைப் போற்றிக் கொண்டாடும் வகையில் பக்தித் திருநாட்களை ஒழுங்கமைத்த பாங்கினைப் பாராட்டியே ஆதல் வேண்டுமல்லவா! மார்கழியில் ஆதிரை நட்சத்திரத்தை சிவனுடன் இணைத்து திருவாதிரைத் திருநாள் வருகிறதல்லவா! மார்கழிமூலம் ஆஞ்ஞனேயருக்கு உரியதாக்கி அதனையும் திருநாளாக்கினார் களல்லவா! தைப்பொங்கல் தைமாதப் பிறப்பாக அமைகிறது. தைபிறந்தால் வழிபிறக்கும் என்பது மனத்தைரியத்தையும்எதிர்காலம் பற்றிய நம்பிக்கையினையும் நல்கிறதல்லவா! ” ஒரு திரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய” என்பது யாவர் மனத்திலும் பதிந்திருக்கும் பெரு மந்திரம் அல்லவா! அந்த மந்திரச் சொல்லுக்கு உரித்தான தகம்பன் சாமியான முரு கனுடன் தையில் வரும் பூச நட்சத்திரத்தை எங்கள் முன் னோர்கள் இணைத்திருக்கிறார்கள். பொங்கலில் பிறந்த நம் பிக்கைக்கு எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படாது இருக்க வேண்டுமேயானால் அதற்கு பெருந்துணை அந்தக் கந்தப்பெரு மானேதான். ஏனென்றால் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகக் காட்சிதருபவர் எங்கள் கந்தப்பெருமானே! அந்தப் பெருமானின் திருநாளாய் மலர்வதுதான் தைப்பூச நன்னாள்.

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக கந்தப்பெருமான் விளங்குகின்றார். அவரது அருங்கருணையால் அனைவருக்கும் அல்லலகன்று அகமகிழ்வு ஏற்பட வழி பிறக்கும் என்று அடியார்கள் அனைவருமே பெரு நம்பிக்கையுடனேதான் இருக்கிறார்கள். அடியார் ஒரடி நடந்தால் ஆண்டவன் நூறடி வருவான். அடியார் நூறடி நடந்தால் ஆண்டவன் ஆயிரமடி வருவான் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். முருகா என்று ஒருமுறை அழைத்தால் – இம்மைக்கும் மறுமைக்கும் என்றுமே நல்லதையே முருகப்பெருமான் நல்குவான். அந்த அளவுக்கு அளப்பெரும் ஆற்றல் கொண்டவன் முருகப்பெருமான்.

இதனால்தான்  கலியுகத்தில் எவர்வாயிலும் முதலில் வருகின்ற வார்த்தை எது தெரியுமா? “முருக ” என்பதேயாகும். ஓம் முருகா – ஓம்முருகா – என்று அழைக்கும் பொழுது உள்ளமெலாம் பூரிக்கின்றது! உடலிலே ஒருவித பரவசம் உருவாகிறது! உணர்வுகள் தூய்மை அடைகின்றன. மயிலேறி அந்த மால்மருகன் நிச்சயம் வந்திடுவான். வாழ்விருக்கும் வினையனைத்தையும்  வேல் கொண்டு ஒழித்திடுவான்! என்னும் தெளிவு அனைவருள்ளத்திலும் பிறக்கிறது.

அழகுஆற்றல், கருணைநிரம்பிய முருகப்பெருமானுக்கு என்று  பல விசேட தினங்கள் அமைந்திருக்கின்றன ஆனாலும் “தைப்பூசம்” என்னும் திருநாளானது அடியவர்களால் முருகனுக்குரிய சிறப்புத் தினமாகக் கொள்ளப்பட்டுவருகிறது என்பது நோக்கத்தக்கத்தக்கதாகும். தைமாதத்தில் பெளர்ணமியில் வருகின்ற பூச நட்சத்திரத்தன்று முருகனுக்கு உகந்ததினமாகக் கொள்ளப்பட்டு  நீண்ட காலமாக தைப் பூசம் என்பது  பெருவிழா வாக தெய்வத் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது நோக்கத்தக்கது.

தைப்பூசத் திருவிழா என்பது  இன்று, நேற்று,  ஏற்பட்டதல்ல என்பது மனத்திருத்த வேண்டிய கருத்தெனலாம். இந்தத் திருநா ளானது, எங்கள் தேவாரம் பாடிய செல்வக் குழந்தை திருஞான சம்பந்தப் பெருமானது  காலம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதுதான் மிகவும் முக்கியமாகும். அது மட்டுமன்றி பழைய இலக்கியங்களிலும் இவ்விழா பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

பல தெய்வங்கள் பற்றிய வழிபாட்டினை நோக்கும் பொழுது  முருக வழிபாடு என்பது மிகவும் பழைமை வாய்ந்தது என்றுதான் அறிந்த்து கொள்ள முடிகிறது. தைப்பூசம் என்னும் திரு நாளோடு  முருகப் பெருமான் பல நிலைகளில் இணைக்கப்படுகிறார் என்பது இங்கு கருத்திருத்த வேண்டியதேயாகும். முருகன் என்னும் நாமம்கூட மிகவும் அர்த்தம் பொதிந்தாகக் கருதப்படுகிறது. முருகு – என்றால் இளமை. முருகன்  – என்றால் அழகன் என்றும் என்றுமே இளமையானவன் என்றும் கருத்துக்கள் நிறைந்தே சொல்லப்படுகின்றன. முருகன் என்னும் பெயரினை எங்களின் அன்னைத் தமிழுடன் இணைத்துப் பார்க்கும் அடியவர்களும் பலர் இந்த அவனியிலே நிறைந்திருக்கிறார்கள். அந்த வகையிலே  தமிழில் காணப்படுகின்ற எழுத்துக்களை – வல்லினம், மெல்லினம், இடையினம் என்று இலக்கணத்தார் வகைப்படுத்தியிருக்கிறார்கள். “முருகன்” என்னும் பெயரினை உற்று நோக்கினால் அங்கே தமிழ்ன் மூவின வகை யான தன்மையும் ஒருங்கே இணைவதைக் கண்டு கொள்ளமுடியும். இதனால் முருகப் பெருமானை தமிழுடன் இணைத்துப் பேசுவார்கள். அதுமட்டுமல்ல முருகன் என்றாலே தமிழே வடிவானவன் என்னும் ஒரு எண்ணமும் மேலோங்கி நின்று முருகப்பெருமான் தமிழ் மயமாகவே விளங்குகிறார் என்று சொல்லிப் பெருமைப்படும்  நிலையும் இருப்பதையும் கண்டுகொள்ளலாம்.

பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து, படாத வேதனைகளையெல்லாம் தாங்கிக் கொண்டு – அந்தப் பரம்பொருளை நோக்கி தவமிருந்து  வரம்பெற்று – அப்படிப் பெற்ற வரத்தினால் பரம்பொருளின் அனுக்கிரகத்துக்கு ஆளாகி  வந்தவர்கள் – பெற்ற வரத்தினைப் பேணாது அதனை தங்களின் சுய இச்சைகளுக்காகப் பயன்படுத்துவது பொருந்தக் கூடியதா? அது மட்டுமன்றி அந்தவரத்தை நல்வழியில் பயன்படுத்தாது – ஆணவத்தால் அற வழியை மறந்து தம் மனம்போன போக்கில் செயற்பட நினைந்தால் என்னாகும். முடிவில் அழிவுதானே வந்து நிற்கும். பெற்ற வரத்தினைப் பேணிக் காக்காமல் மறவழியில் ஆணவத்துடன் செயற்பட்டான் சூரபதுமன். தேவர்களையே சிறைப் பிடித்தான். வரம் கொடுத்த பரம் பொருளையே மதியாது ஆணவத்தின் உச்சியில் ஏறி நின்றான். ஆணவம் எங்கு மேலோங்குகிறதோ அங்கு – வரமளித்த அந்த ஆண்டவனின் சக்தியானது எப்படியோ தோன்றி மறத்தை அழித்து அறத்தை ஓங்கச் செய்யும் என்பதுதான் உண்மையாகும். அரத்தினை நிலைநிறுத்த ஒரு சக்தி வெளிப்பட்டது. அந்தச் பெருஞ் சக்திதான் “முருகப் பெருமான்” என்னும் நிலையில் வந்தமைந்தது. ஆணவ இருளை, அகத்தை இருளை அகற்ற வேண்டுமேயானால் அங்கு ஒரு பேரொளி தோன்ற வேண்டும் அல்லவா! அந்தப் பேரொளி எப்படி அவதாரமாக அமைந்தது என்பதைக் காண்போமா!

அருவமும் உருவமாகி
அனாதியாய் பலவாய் ஒன்றாய்
பிரமாய் நின்றஜோதி
பிளம்பதோர் மேனியாகி
கருணைகூர் முகங்களாறும்
கரங்கள் பனிரெண்டும் கொண்டு
ஒருதிரு முருகன் வந்தாங்கு
உதித்தனன் உலகம் உய்ய”

என்று அந்தப் பேரொளியாக  முருகனது பிறப்பைப் பற்றிக் கந்தபுராணம் இவ்வாறு சுட்டிக் காட்டுகிறது. பேரொளியாக முருகப் பெருமான் வந்த நாளாகவே தைப்பூசத் திருநாள் அமைகிறது என்பதுதான் முக்கியமாகும். இதனால்  முருகப்பெருமானது ஆலயங்கள் தோறும் தைப்பூசத் திருநாள் பக்திபூர்வமாகவே கொண்டாடப்பட்டு வருகிறது என்று தைப்பூசத்துக்கும் முருகனுக்குமான தொடர்ப்பைப்பற்றி ஒரு கதை நெடுங்காலமாகவே வழக்கில் சொல்லப்பட்டு வருகிறது என்பதும் நோக்கத்தக்கது.

ஆணவத்தின் உச்சியிலிருந்து அட்டூழியம் செய்யும் அரக்கரை அழித்திட பரம்பொருளாம் சிவனால் உருவக்கப்படுகிறார் முருகப் பெருமான். வரம் கொடுத்த தான் போகாமல் தன்னிலிருந்து வெளிப்படுத்திய சக்தியான முருகனைக் கொண்டே சரியான பாடம் புகட்டிட இறைவன் எண்ணுவதும் இங்கு நோக்கத் தக்கது. சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து வெளியான சக்தியாய் முருகப் பெருமான் விளங்குகின்றார். பாலகனாய் இருக்கும் அவரை வரமும் உரமுமுடைய அரக்கரை அடக்கி ஆணவத்தை அழிக்க அனுப்பும் பொழுது – அவருக்கு உறுதுணையாக ஒரு பெருஞ்சக்தியாக உமையம்மன் ஒரு வேலினைப் பாலகனான முருகனுக்குக் கொடுக்கின்றார்.   அம்மை கொடுத்த சக்திவாய்ந்த வேல் என்னும் ஆயுதத்தால் அட்டூழியம் புரிந்த அரக்கனை வதம்செய்து முருகப் பெருமான அறமென்னும் வெற்றியினைப் பெற்ற தினமாகவும் தைப்பூச விழாவானது  அமைகிறது என்று ஒரு கதையும் மரபாக வழக்கில் இருக்கிறது என்பதும் நோக்கத்தக்கதாகும்.

இதுமட்டுல் அல்லாமல் இன்னுமொரு கதையும் தைப்பூசத்துடன் முருகப் பெருமானை சம்பந்தப் படுத்த சொல்லப்படுவதும் நோக்கத்தக்கது. எம்பெருமான் சிவனால் பார்வதிதேவியாருக்கு மந்திரம் ஒன்று உபதேசிக்கப்படுகிறது. உபதேசிக்கும் வேளை அதனை முருகப்பெருமானானவர் மறைந்திருந்து கேட்ட தாகவும், இதனை அறிந்த பார்வதிதேவி – கோபங்கொண்டு முருகனைச் சபிக்கின்றாராம். இதனால் முருகன் கோபித்துக் கொண்டு திருப்பரங்குன்றம் சென்று அமர்ந்துவிடுகிறார். முருகனின் கோபத்தை நீக்க சிவனும், பார்வதியும்  முருகன் இருக்கும் இடமான திருப்பரங்குன்றம் சென்று சிவனும், பார்வதியும்  கொடுத்த சாபத்தை மீளப்பெற்று முருகனை அரவணைத்த தினமே தைப்பூசம் என்றும் ஒரு கதை வழக்கில் இருந்து வருகிறது.

கதைகள் என்னும் பொழுது அத்தனையும் பலகாலமாகவே வழக்கில் நிறைந்தே வந்திருக்கின்றன. அந்தவகையிலேதான் முருகப் பெருமான் பற்றிய பலவித கதைகளும் மக்கள் மத்தியில் உருவாகி அப்படி உருவான கதைகள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் தைப்பூசத்துடன் இணைக்கப்பட்டு விட்டன என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது. முருகனது அவதார தோற்றத்தைக் கந்தபுராணம் காட்டுகின்ற பொழுது “பிரம்மாய் நின்ற ஜோதிப் பிளம்பதோர் மேனியாகி – கருணைகூர் முகங்கள் முகங்கள் ஆ றும் கரங்கள் பனிரெண்டும் கொண்டு ஒரு திருமுருகன்” வந்தான் என்று காட்டுவததைக் கருத்துவதுதான் மிகவும் முக்கியம். முருகப் பெருமான் என்னும் பொழுது அங்கே பிரகாசிக்கும் ஜோதியே வெளிப்பட்டு நிறிறது. ஜோதி என்றால் பிரகாசம் என்று தானே அர்த்தமாகிறது. தைப்புசத்தன்று பெளர்ணமி தினமாகும். பெளர்ணமி பெரு வெளிச்சம் அல்லவா! அந்தப் பெரு வெளிச்சத்துடன் பிரம்மமாய் நின்ற ஜோதியாக உதித்த முருகப் பெருமானை இணைப்பது பொருத்தமாய் இருக்கிறதல்லவா!

தைபிறந்தால் வழிபிறக்கும்.தைப்பொங்கல் சூரியனுக்குரியது. சூரியன் வெப்ப மயமானவன். சூரியனுக்குரிய பொங்கலையடுத்து வருகின்ற பெளர்ணமி சிறப்புடையது. அந்தத்தினத்தில் வருகின்ற பூசமும் சிறப்புடையது. இத்தகைய காரணங்கள் தைப்பூசத்துடன் முருகப் பெருமான் இணைக்கப்பட்டது பொருத்தமாய் இருப்பதாக தெரிகிறதல்லவா?

தைப்பூசம் மிகவும் முக்கியத்துவம் மிக்கது என்பதற்கு – சம்பந்தப்பெருமானே தனது தேவாரத்தில் குறிப்பிட்டிருப்பதும் நோக்கத்தக்கது.

மைப்பூசும் ஒண்கண் மடநல்லூர் மாமயிலை
தைப்பூசும் நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
நெய்ப்பூசும் ஒண்புகழ் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம் காணாது போதியோ பூம்பாவாய் “

சைவத்தமிழ் மக்கள் வாழுகின்ற தமிழ்நாடு,  இலங்கை சிங்கப்பூர்மலேசியாதென்னாபிரிக்கா, பிரான்ஸ், கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியாபோன்ற நாடுகளிலும் – தமிழரல்லாத மக்கள் வாழுகின்ற கேரளப் பகுதிகளிலும்கூட தைப்பூசமானது திருநாளாகக் கொண்டாடப்படுகிறது என்பது நோக்கத்தக்ததாகும்.                      

முருகப்பெருமானை முன்னிறுத்தும் தைப்பூசம் தமிழர் வாழ்வில் பல முக்கிய நிகழ்வுகளுக்கும் இடமளிக்கும் திருநாளாகவும் விளங்குகிறது என்பதும் மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம். வயலில் நெற்பயிர்கள் முற்றி விளைந்திருக்கும் காலமிதுவாகும். முற்றிய நெல்லிருந்து புத்தரசி எடுப்பதும் தைப்பூசத்தில்த் தான் என்பதும் நோக்கத்தக்கது. இதனை “புதிரெடுத்தல்” என்று சிறப்புடன் கொண்டாடி மகிழுவதும் மனமிருத்த வேண்டியதேயாகும். புதிரெடுத்து புத்தரியினைக் கொண்டு பொங்கலிட்டு இறைவனுக்குப் படைத்து மகிழுவதும் தைப்பூச நன்னாளில் என்பதை நம்மில் பலரும் மறந்திருக்க மாட்டோம். “புதிரெடுத்தல்” என்னும் சொல்லே மிகவும் ஆழமுடைய வாழ்வியல் தத்துவத்தை அறிவுறுத்தும் சொல்லாகும். அந்தக் கருத்தினை அரங்கேற்றும் நன்னாளாய் தைப்பூசம் இருக்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டிய தேயாகும்.

தைபிறந்தால் வழிபிறக்கும் என்று சொல்லுவதை நாம் எவருமே மறப்பதேயில்லை. அதற்கான அர்த்தத்தைத் தைப்பூசத் திருநாள் நன்றாகவே நிறைத்தே வைத்திருக்கிறது. எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒருவருக்கு வாழ்க்கையிலே கல்வி அறிவு என்பது கட்டாயம் இருந்தே தீரவேண்டும். “கல்லா நெஞ்சில் நில்லான் ஈசன்” என்று ஒரு பாடசாலையில் மகுடவாசகமாய் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். இதற்குப் பல அர்த்தங்கள் இருந்தாலும் அங்கு “கற்றிடு” என்பதுதான் முக்கியமாய் எனக்குள் உதயமானது. அப்படிக் கற்பதற்கு உரிய பருவத்தில் கற்றலைத் தொடங்க வேண்டும். அதனைத்தான் எங்களின் முன்னோர்கள் வித்தியாரம்பம்” என்று வியந்து நின்றார்கள். அந்த வித்தியாரம் செய்வதற்கு உகந்த நாளாகத் தைப்பூசம் திகழ்கிறது என்பது மிகவும் முக்கியத்துவமாய் வாழ்வில் அமைகிறதல்லவா! ஆலயங்களில் வித்தியாரம்பம் நடைபெறும். வீடுகளில் நடை பெறும். தைப்பூசத்தில் வித்தியாரம்பம் என்பது மிகவும் விசேடமாநது என்னும் கருத்து யாவர் மனத்திலும் பதிந்தே இருக்கிறதல்லவா!

காது குத்துதல் என்பது அழகுடன் சம்பந்தப்பட்டதல்ல. அது ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டதாகும். அதனால்தான் அக்காலத்தில் ஆண்பிள்ளைகளுக்கும், பெண்பிள்ளைகளுக்குக் காது குத்துவதுபோல் குத்தினார்கள். காதுகுத்துதல் என்பது சுற்றஞ்சூழ இருந்து கொண்டாடி மகிழுகின்ற பெருங் கொண்டாட்டமாகவே ஒரு காலத்தில் அமைந்திருந்தது. தாய்மாமன் மடியில் பிள்ளையினை வைத்துக் காதுகுத்துதல் என்பது மரபாகவே இருந்து வந்தது. அப்படிக் காதுகுத்தும் சிறப்பான குடும்ப விழாவினை நடத்து வதற்குயாவரும் காத்திருக்கும் தினம் என்ன தெரியுமா அந்த நல்ல தினந்தான் தைப்பூச நன்னாளாகும். தைப்பூசத்தை மனமெண்ணி காது குத்தக் காத்திருக்கும் சுகமோ அது ஒரு தனியான சுகமாகும். அதனைச் சொன்னால் புரியாது. அனுபவித்தவர்களுக்குத்தான்  அதன் ஆனந்தம் தெரியும். காதுகுத்த லோடு தைப்பூசம் நின்றுவிடுவதில்லை. வியாபாரம் செய்பவர்கள் புதுக்கணக்கினை ஆரம்பிப்பதும் தைப்பூசத்திலேதான். இந்தவகையில் பார்க்கின்ற பொழுது – சுப நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கவும், புது முயற் சிகளைத் தொடங்கௌம் உவப்பான தினமாக அமைந்திருப்பது தைப்பூசத் திருநாள்தான் என்பதுதான் மிகவும் முக்கியமாகும்.

வாழ்க்கையில் பல நல விஷயங்களுக்கு வழிசமைக்கும் சிறப் பான திருநாளான தைப்பூசத்தினை ஆலயங்களில் பக்தி பூர்வமாகக் கொண்டாடுவார்கள். முருகனுக்கு உகந்த நாளாகவே அமைகின்ற காரணத்தால் முருகப்பெருமானுக்கு உகந்த காவடிகள் பலவற்றை அடியார்கள் அவனது சன்னதியில் எடுத்து ஆடிப் பாடி அவன் புகழ் பாடியே நிற்பார்கள்.  மலேசிய நாட்டில் பத்த மலை என்னும் பதியில் அமைந்திருக்கும் முருகப் பெருமானது ஆலயத்தில் சைவத்தமிழ் அடியார்களுடன் இணைந்து சீனமக்கள் பலரும் பக்தி பூர்வமாகக் காவடி ஆடிவரும் காட்சிபக்திப் பரவசமாகவே அமையும் பாற்காவடி பன்னீர்க் காவடி,  புஷ்பக்காவடி, சந்தனக்காவடிபறவைக்காவடி, என்று அடியார்கள் வகை வகையாய் காவடிகளைத் தாங்கி ஆடலும் பாடலுமாய் இசையுடனும் தாளத்துடன் ஆடிவரும் காட்சியானது தைப்பூச நன்னாளை பூலோக கைலாசமாகவே மாற்றிக் காட்டி நிற்கும்.

ஆடலும், பாடலும், பக்தியுடன் அமைந்த விழாவாக தைப்பூச திருநாள் அமைகிறது என்று மட்டும் எண்ணிவிடக் கூடாது. இந்த விழாவுடன் ஜோதிமயமான முருகப் பெருமானும் வந்து இணைகிறார் என்பதையும் கருத்திருத்த வேண்டும். இறைவனை “ஒளிவளர் விளக்கே” என்கிறோம். “மாமணிச் சோதியான்” என்கிறோம். “சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே” என்கிறோம். “அளம்பரும் ஜோதி” என்கிறோம். “தீபமங்கள ஜோதி நமோ நம” என்று பாடுகிறோம். இவையனைத்துமே இறைவனுக்கு மிகவும் பொருத்தமான இலக்கணங்களேயாகும். அந்தவகையில் முருகன் என்னும் அளப்பருந் தெய்வமும் மிகப்பெரிய ஜோதியே. அந்த ஜோதியினைக் காட்டும் பெருவிழா திருவிழா மாநிலமெங்கணும் பட்டொளி பரப்பும் பெளர்ணமி நன்னாளான தைப்பூசத் திருநாளேயாகும். பக்தியுடன், வாழ்வியலுக்கு பொருத்தமான விஷயங்களையும் இணைத்து நிற்கும் இந்தப் புனிதமான திருநாளுக்கு “தகப்பன் சாமியின் திருநாள்” என்று பெயரிட்டு பெருநிறைவு அடைவோம் வாருங்கள்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *