Blog

  • சேக்கிழார் பாடல் நயம் -119 (மழை)

    சேக்கிழார் பாடல் நயம் -119 (மழை)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    எறிபத்தர் என்ற மன்னர் அக்கருவூரில் வாழ்ந்தார். அவ்வூரில் அமைந்த ஆனிலையப்பர் திருக்கோயிலில் சிவபூசை மரபுகளைப் பேணி வளர்த்த தொண்டராக அவர் திகழ்ந்தார். அவரைப்பற்றி இப்பாடல்கூறுகிறது.

    பாடல்:

    மழைவள ருலகி லெங்கு மன்னிய சைவ மோங்க
    வழலவிர் சடையா னன்பர்க் கடாதன வடுத்த போது
    முழையரி யென்னத் தோன்றி முரண்கெட வெறிந்து தீர்க்கும்
    பழமறை பரசுந் தூய பரசுமுன் னெடுக்கப்  பெற்றார்.

    பொருள்:

    நிலைபெற்ற சைவம் மழையினால் வளருந் தன்மையுடைய உலகத்தில் எங்கும் ஓங்கும்படியாக, அழல்போன்ற நிறத்துடன் அவிர்ந்த சடையினை யுடைய இறைவன் அன்பர்களுக்கு அடுக்கத்தகாத இடர்கள் வந்த காலத்தில், குகையினின்றுங் கிளம்பிப் பாயும் சிங்கம்போல, விரைவில்  தோன்றி அந்த முரண்பட்ட வலிமை கெடும்படி எறிந்து தீர்க்கும் படைக்கலமாகிய, பழமறைகளாற் போற்றப்பட்டதாகிய பரசாயுதத்தை எப்போதும் ஏந்துகின்றவர் (அவர்).

    விளக்கம் :

    மழைவளர் உலகு – உலகம் மழையின் றுணையானே வளர்ந்து வழங்குவதாம். “வானின் றுலகம் வழங்கி வருதலால்”என்பது திருக்குறள்.

    உலகில் எங்கும் மன்னிய சைவம் – மன்னிய சைவம் எங்கும்  ஓங்க என்க. சைவம் சிவத்துடன் சம்பந்தமாவது. உலகத்தென்றும் சிவசம்பந்தமே நிறைவது – சிவ நிறைவுட்பட்டது உலகம்.

    “ஆண்டுலகே ழனைத்தினையும் வைத்தார் தாமே
    யங்கங்கே சிவமாகி நின்றார் தாமே”

    என்ற திருத்தாண்டகமுங் காண்க. மன்னுதல் – இடையூறு வந்த காலத்தும் அழிவின்றி நிலைபெறுதல். ஓங்க – எங்கும் மேம்பட்டு நிற்க. நிலைபெற்ற நிறைவாகிய அது பொதுவகையாலன்றிச் சிறப்பாக விளக்கம் பெற. சைவம் எங்கும் மன்னியதாயினும் இடையூற்றின் மிகுதிப்பாட்டாற் சிலவிடத்து ஓங்காது குன்றி நிற்கும். கூன்பாண்டியர்

    காலத்தே சமணம்மிக்குச் சைவ விளக்கம் குன்றியது போலக் காண்க.

    அவ்வாறு குன்றாது ஓங்க இந்நாயனார் இடையூற்றினை எறிந்து தீர்க்கப் பரசு எடுத்தனர் என்பது. உலகில் எங்கும் மழை மன்னும்பொருட்டுச் சைவம் ஓங்க என்று கருதுக. சைவம் ஓங்குதலால் மழைமன்னுதல் “வீழ்க தண்புனல்” என்ற திருப்பாசுரத்தாற் காண்க.

    அரசினால் அடாதன நீங்கின; அவை நீங்கச் சைவம் ஒங்கிற்று; அது ஒங்க மழை மன்னிற்று; அது மன்ன உலகம் வளரும் – எனக் கொண்டுரைக்க. இச்சரிதத்தே யானையால் நேர்ந்த சிவாபசாரம் இந்நாயனாரது செயலினாலே நீங்க, மன்னனும் ஒங்கியது காண்க. மன்னனது கோலோங்குதலும் மழைக்குக் காரணமாமென்ப. திருப்பாசுரத்தினும் “வீழ்க தண்புனல்; வேந்தனு மோங்குக” எனத் தொடர்ந்து கூறியருளியதுங் காண்க. இதுபற்றிய விரிவுரையில் ஆசிரியர் சேக்கிழார் பெருமான்,

    “வேள்வி நற்பயன் வீழ்புன லாவது,
    நாளு மர்ச்சனை நல்லுறுப் பாதலால்,
    லாளு மன்னனை வாழ்த்திய தர்ச்சனை,
    மூளு மற்றிவை காக்கு முறைமையால்”

    என்றருளியிருப்பதையும் இங்குவைத்துச் சிந்திக்க.

    அழல் அவிர் சடை – தீப்போலச் செந்நிறத்தனவாகி விரிந்தசடை.

    “அழனீரொழுகியனைய சடை”, “மின்னார் செஞ்சடை”, “மின்வண்ண, மெவ்வண்ணமவ்வண்ணம் வீழ்சடை” என்பனவாதி திருவாக்குக்கள் இதனை நிறுவும்.  மின் தீயினது கூறாகும் என்க.

    அடாதன – அடுக்கத்தகாதன. வரத்தகாத தீங்கு. அடியார்களுக்கு நேரும் தீங்கினைத் தம் வாக்கினாலும் சொல்லாத மரபுடைய ஆசிரியர், அம்மரபுபற்றி அடாதன என்றார்.

    முழையரியென்ன – முழை – சிங்கங்கள் பதுங்கி வசிக்கும் மலைக்குகை முதலிய மறைவிடங்கள். அரி – சிங்கம். பசிமுதலிய அவசியம் நேர்ந்தபோ தன்றிப் பிறகாலத்து இது வெளிவராது. அவசியம் நேர்ந்தபோது எவ்வகையிடையூற்றுக்கும் அஞ்சாது வீரத்தோடெழுந்து பாயும். யானைமேற் பாய்தல் சிங்கத்தினாலன்றிப் பிறவற்றில்   இயலாது. இவை முதலியகாரணங்கள் பற்றி இங்குச் சிங்கத்திற்கு ஒப்புமை கூறினார்.  “செங்கண் வாளரியிற்கூடி” (572) என்று பின்னருங் கூறினார்.

    சீறி – இச்சீற்றம் அன்பர்க்கடாதன அடுத்தபோது தீர்க்கும் அன்புடைமையால் எழுந்த கோபம். சிவப் பணியிடையின் நிகழ்வதாகலின் நூல்களால் விலக்கப்பட்ட மனக்குற்றங்களில் ஒன்றாக வைத்து எண்ணப்படாததாம் என்க. இறைவனது கோபப் பிரசாதம் போலக் காண்க.

    முரண்கெட – பகை நீங்குமாறு. முரண்செய்த காரணத்தைக் கெடச்செய்தலே அடாதனவற்றைத் தீர்க்கும் வழியாம்.  அடுத்தார்க்கு அரணும் அடுக்காதார்க்கு முரணுமாம்.

    எறிந்து தீர்க்கும் பரசு – மறைபரசும் பரசு – எனப் பரசு என்பதனை இரண்டிடத்தும் கூட்டுக. மறைபரசும் பரசு – சிவபெருமான் கையில் உள்ளது. பரசு ஹஸ்தாய நம : என்பது சிவாஷ்டோத்தரம். “பரசுபாணியர்” முதலாகவுள்ள தமிழ் வேதங்களும் காண்க. இறைவன் திருக்கரத்தில் ‘பரசு’ என்ற மழு  விளங்கியதைத்  திருமுறைகள் ஆங்காங்கே செப்புகின்றன.  இங்கு நாயனார் ஏந்தியது அது போன்றதே என்பதாம். இது பற்றியே முதனூலாகிய தமிழ் மறையும் “இலைமலிந்த வேல்” என்று போற்றியது.

    பரசும் பரசு – பரசும் =போற்றுகின்ற, பரசு = மழு;   சொற்பின் வருநிலை என்ற சொல்லணி. தூயபரசு – இங்குப் பரசு, எறிந்து கொலைசெய்யும் படையாயிருந்தும், தூய் – என்றது  என்னை? எனின், அடியார்க்கு அடுக்கும் அடாதனவற்றை நீக்கித், தூய நல்ல சிவதருமஞ்செய்யத் துணை செய்தலானும், அடாதன செய்து அடியார்பால் அபசாரப்பட்டாரை ஒறுத்து அவரையுந் தூய்மை செய்தலானும் அது தூயதேயாம் என்க.

    “கோல மழுவா லேறுண்டு குற்றம் நீங்கிச் சுற்றமுடன்,
    மூல முதல்வர் சிவலோக மெய்தப் பெற்றான்”   என்பது  சண்டீசர் புராணம்.

    “பாதகமே சோறு பற்றினவா” – திருவாசகம்.

    முன் எடுக்கப்பெற்றார் – முன் – முதன்மையாக. எப்போதும் தம்முன்னர் விளக்கம் பெற. எடுக்கப்பெற்றார் – எடுத்துத் தாங்கும் பேறு பெற்றார்.

    அடியார் பணிகள் இருவகைப்படும். அவர் வேண்டுவன கொடுத்தல் ஒன்று. இளையான்குடிமாற நாயனார், இயற்பகை நாயனார் முதலியோர் செய்தன. இவ்வகை.

    அடியார்க் கடாதன அடுத்தபோது முன்வந்து தீர்க்கும் வீரம் மற்றொரு வகை. இங்கு நாயனார் செய்கை இவ்வகைப்பட்டது. விறன்மிண்ட நாயனார், சத்திநாயனார் திருப்பணிகளும் இவ்வாறேயாவன.

    மறை, இறைவன் வாக்காய் அநாதியாயுள்ளதென்பார் பழமறை யென்றார். இப்பாடலால்  அரசன்  அரண் போலக் காக்கவும், முரண் நீக்கவும்  ஆயுதம் ஏந்தி இருப்பார் என்பது கூறப்பட்டது. இறைவனின்  திருவுருவங்கள் ஆயுதங்களை ஏந்தி மறக்கருணை புரிவதும்  இது பற்றியே ஆகும். இறைவன்  மழுவேந்தி ஆடிய தலம் ‘திருமழுவாடி’ (திருமழபாடி) என்பது இங்கே நினைந்து மகிழத்தக்கது.

    Share
  • குசுத் தீவுக்கு ஒரு பயணம்

    குசுத் தீவுக்கு ஒரு பயணம்

    சிங்கப்பூரின் செந்தோசா அருகில் உள்ள குசுத் தீவு எனப்படும் ஆமைத் தீவுக்கு ஒரு பயணம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஜெயந்தி சங்கர் ஓவியங்கள்

    ஜெயந்தி சங்கர் ஓவியங்கள்

    எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்பெற்ற ஜெயந்தி சங்கர், ஓவியத் துறையிலும் முத்திரை பதித்து வருகிறார். அபாரமான படைப்பூக்கத்துடன், சார்க்கோல், பென்சில், பேஸ்டல், அக்ரிலிக், நீர்வண்ணம் (வாட்டர் கலர்) எனப் பல விதங்களில் வரைந்து வருகிறார். செப்டம்பர் 2018இல் இவரது தனிநபர் ஓவியர் கண்காட்சியாக ஒரு முழுநாள், சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் பேராதரவோடு, தேசிய நூலகத்தில் நடந்தது. எல்லா இனத்தவருமாக, எல்லா வயதினருமாக சுமார் 500 பேர் வருகை புரிந்து ஓவியங்களைக் கண்டு களித்தனர். இந்தக் கண்காட்சி, பெரும் வெற்றியாக அமைந்தது.

    ஜனவரி 2017 முதல் ஆகஸ்ட் 2018 வரையிலான 20 மாதக் காலக்கட்டத்தில் ஜெயந்தி சங்கர். 600க்கும் மேற்பட்ட ஓவியங்களைத் தீட்டினார். அவற்றுள் 300க்கும் மேலான ஓவியங்களை இந்தப் பதிவில் நீங்கள் காணலாம். இந்தப் பதிவின் பின்னணியில் ஜெயந்தி சங்கரின் வீணையிசையும் இழைகிறது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, ஜெயந்தி சங்கரின் ஓவியங்களும் இசையுமாக இந்த இரட்டை விருந்தை உங்கள்முன் படைப்பதில் மகிழ்கிறோம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பெண்களின் வித்தக விந்தைகள்

    பெண்களின் வித்தக விந்தைகள்

    சக்தி சக்திதாசன்

    என் இனிய அன்பு உள்ளங்களே !

    மார்ச் 8ம் திகதி உலக மகளிர் தினம். இத்தினத்தில் எனை இவ்வுலகில் ஈன்ற என் அன்னைக்கு, என்னை ஒரு மனிதனாய் உருமாற்றம் செய்ய அவள் செய்த அளப்பரிய தியாகங்களுக்கு, என்னை பண்புடை மனிதனாக வளர உதவிய என் சகோதரிகளுக்காக, சிதைந்து போன என் வாழ்வை தூக்கி நிறுத்தி இன்று என் அனுபவங்களை என் இனிய உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள வழி சமைத்த என் மனைவி, என் உயிர்த்தோழி, என் அன்பு மனைவிக்காக, இன்று என்னோடு உடன் பிறக்காவிட்டாலும் அண்ணா என்றும் தம்பி என்றும் என்னைத் தம் உடன்பிறப்புகளாக கெளரவிக்கும் என் தமிழன்னை தந்த சகோதரிகளுக்காகவும் இதோ இக்கவிதையைச் சமர்ப்பிக்கிறேன்

    சக்தியெனக்கு கொடுத்தவள் என் அன்னை
    சித்தியெனக்களித்தவள் என் அன்னை
    புத்தியெனக்களித்தவள் என் அன்னை
    முற்று முதலாய் அவளுக்கே என் வணக்கம்

    தன்னில் ஒரு பாகம் கொடுத்து உலகில்
    தந்தான்  ஆதிமூலம் தந்த மகத்துவம்
    எத்தனை வடிவங்கள் எடுத்துப் பெண்கள்
    வித்தக விந்தைகள் புரிவர் இவ்வுலகில்

    அன்னையாராக அன்பு மழை பொழிவர்
    சகோதரியராக பந்தம் வளர்த்திடுவர்
    காதலியராக கனவுகளை உயிர்ப்பிப்பர்
    தோழியராக எம் துயர் பகிர்ந்திடுவர்

    அன்றெம்   முப்பாட்டன் பாரதி
    ஆணித்தரமாய் அடித்துரைத்தான்
    அந்நியர் அடிமை கொள்ளல் போல்
    அன்னையரை அடிமை கொள்ளலாமோ?

    தெள்ளிய உண்மைகளைத் தமிழில்
    தெள்ளத் தெளிவாய்ச் சொன்னார்  பாரதி
    உள்ளத்தில் வாங்கினோமா உண்மைகளை?
    உங்கள் இதயத்தைச் தொட்டுச் சொல்லுங்கள்

    வேதனை பல தாங்கி உலகில் மாதர்கள்
    சோதனை பல வென்று தன்னிரகற்ற
    சாதனையான மகவுகள் தந்தனர் தோழரே!
    போதனையல்ல சத்தியமே உண்மை

    மகளிர் தினம் இதுவென்று உலகில் நாம்
    மார் தட்டிக் கொள்வதில்லை பெருமை
    மகளிரும் உயர்ந்தோரெனும் உண்மை
    விளக்கிட்டோமா என்பதே கேள்வி?

    சமுதாயக்கலாச்சாரம் எனும் போர்வையில்
    மாதர்கள் கால்களில் பூட்டிட்ட விலங்குகளை
    சமத்துவம் கொண்டு என்று நாமதை
    உடைக்கின்றோமோ அதுவே மகளிர் தினம்

    எமையீன்ற அன்னையரைப் போன்றே
    சேய்களுக்கு  வாழ்வை அர்ப்பணித்த
    தியாகச் செம்மல்கள் அனைவருக்கும்
    வணக்கங்களோடு வாழ்த்துகள்.

    Share
  • பெண்களுக்கும் சமூகநீதி!

    பெண்களுக்கும் சமூகநீதி!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா

    பெண் நலம் ஓம்பப்படாத இடத்தில் வேறு எவ்வித நலனும் நிலவுவது அரிது. ஒரு நாட்டு நலன் அந்நாட்டுப் பெண்மக்கள் நிலைமையைப் பொறுத்தே நிற்கும்” என்னும் திரு. வி. கவின் கூற்று யாவரும் மனமிருத்த வேண்டியதே.

    இன்று “சர்வதேச மகளிர் தினம்” உலகெங்கும் வரவேற்புப் பெற்று பெண்களின் பெருமை விதந்து பேசப்படுகின்றது என்றால் அதற்கு வித்தாக விளங்கியவர் 18ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் ஒரு கிராமத்தில் பிறந்த கிளாரா ஜெட்கின்‘ என்னும் பெண்மணியாவார். இவர் இளம் வயது முதலே பெண்களின் உரிமைபெண்களின் நலன்யாவற்றிலும் மிகுந்த அக்கறை கொண்டவராகவே இருந்தார் எனலாம். பெண் தொழிலாளர்களின் உரிமையை, பிரச்சினைகளை, மனமிருத்தி – உலகெலாம் ஒலிக்கும்படி செய்தமையால் – பெண்களின் இயக்கங்களுக்கும்அவர்களின் செயற்பாடுகளுக்கும் பெரும் உந்துதலை அளித்தது எனலாம்.

    பெண்கள் பற்றிய உரிமைப் போராட்டங்கள் என்னும் வகையில் 1789 இல் பாரீஸில் சமத்துவத்துவத்துக்காக பெண்கள் எழுந்தனர். பெண்கள் தொடர்பான வேலை நேரம்பெண்களின் வாக்குரிமைபெண் அடிமை, விடுதலைஎன்னும் கோஷங்களுடன் பேரெழுச்சியாய் அப்போராட்டம் வெடித்தது. போராட்டத்தின் முடிவில் பெண்களின் கோரிக்கைக்கு பிரான்ஸ் அரசு ஒப்புதல் வழங்கியது. வழங்கிய அந்த நாள் மார்ச் 8 – 1848 ஆகும். இந்தத் திகதியும் மாதமும் “மகளிர்க்கு உரிய தினம்” என்னும் நிலைக்கு இட்டுச் செல்ல ஏதுவாக அமைந்தது எனலாம்.

    பிரான்சில் பெண்களின் எழுச்சிபோல் 1857இல் அமெரிக்காவில் நியூயோர்க்கிலும் பெண்களின் உரிமைக்குரல் எழுப்பப்பட்டது. பெண்கள் ஒருமித்துப் போராடினால்த்தான் அவர்களுக்கான உரிமைகள் கிடைக்கும் என்னும் எண்ணம் பரந்து விரிந்தது.

    சர்வதேச மகளிர் தினத்துக்கு” வித்திட்ட – கிளாரா ஜெட்கின் தலைமையில் 1919இல் ஹேகனில் அனைத்துலாகப் பெண்களுக்கான மாநாடு கூடியது. இம்மாநாட்டின் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு‘ என்பது உருவாக்கப்பட்டது. ஜேர்மனிஆஸ்திரியாடென்மார்க்குடன் சில ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பலர் இந்த அமைப்பின் சார்பில் 1911 இல் மார்ச்சு மாதம் 19 ஆந் திகதி முதல் ‘ சர்வதேச மகளிர் தினத்தைக் “ கொண்டாடினார்கள். பெண்கள் பல நாடுகளிலிருந்து கலந்துகொண்ட இவ்வரலாற்று வேளையில்தான் – பெண்களுக்கான வாக்குரிமையினை அளிப்பதற்கு மன்னன் லூயிஸ் இணக்கம் தெரிவித்தார். இது இடம் பெற்றது மார்ச் மாதம் 8ம் திகதியேயாகும். பெண்களின் ஒத்துழைப்பால் இவையனைத்தும் நிகழ்ந்த அந்த நாளை “சர்வதேச மகளிர் தினமாக” ஆண்டுதோறும் கொண்டாடும் தினமாகத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    1917ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி ரஷ்சியாவில் சென்பீட்டர்ஸ் நகரில் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தை அடுத்து 1921 மார்ச் 8ஆம் திகதி “சர்வதேச மகளிர் தினமாக” பிரகடனப்படுத்தப்பட்டது.

    ஐக்கிய நாடுகள் சபை 1975ஆம் ஆண்டினை “சர்வதேச மகளிர் ஆண்டாக” அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 1977இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் “சர்வதேச மகளிர் தினத்தை”  மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

    பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன. அதனால் துணிந்த பெண்கள் முழு வீச்சுடன் முன்வந்து போராடிப் பெண்களுக்கான பல உரிமைகளை  வென்றெடுத்தார்கள். ஆனாலும் இன்னும் பெண்களுக்கான பிரச்சினைகள் தொடர்கின்றன.

    மனித வாழ்விலே பெண்ணின் பங்கு மிக மிக இன்றியமையாதது எனலாம். இதனை எவருமே மறுத்துவிட முடியாது. ஆனால் அப்படிப்பட்ட பெண்களை  ” பெண்கள் ” என்னும் தோற்றத்தையும் அவர்களது உடலையும் வைத்துக் கொண்டு அரங்கேறும் அவலங்கள் சொல்லமுடியாதன.

    பெண்களுக்கு வாக்குரிமை எதற்குபெண்களுக்கு பேசும் உரிமை எதற்குபெண்களுக்கு வேலைபார்க்கும் உரிமை எதற்குபெண்களுக்கு வீட்டை விட்டு வெளியில் செல்லும் உரிமை எதற்குபெண்கள் என்றால் திருமணம் செய்ய உதவும் ஒரு மனித உருவம். பிள்ளைகளைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு இயந்திரம். ஆணுக்கு இன்பத்தை அளிக்கும் ஒரு நுகர்வுப் பொருள்.இப்படியெல்லாம் எண்ணி பெண்ணினத்தை வதைத்த வரலாறு மறைக்க முடியாத வரலாறாகும்.அவற்றை யெல்லாம் உடைத்தெறிந்து போராடி பெண்கள் வந்து நிற்கும் நிலையினை இன்று உலகெங்கும் காணுகிறோம். ஆனாலும் பெண்களுக்கான அச்சம் என்னும் நிலைமட்டும் அகலவே இல்லை.

    பட்டங்கள் ஆள்வதும்சட்டங்கள் ஆள்வதும் பாரினில் பெண்கள் பெற்று நிற்கிறார்கள் என்பதும் மறுப்பதற்கில்லை. இன்று பெண்களின் ஆளுமை பல்கிப் பெருகி நிற்பதையும் காணுகிறோம்.

    ஆனாலும் பெண்கள் என்னும் படைப்பால் அவர்களை நோக்கும் விதமும், அவர்களை வதைக்கும் விதமும் சமூகத்தை விட்டு அகலவே இல்லை என்றே எண்ண முடிகிறது.

    பெண்களைப் பொறுத்தவரை சட்டரீதியாகவும்சமூக ரீதியாகவும் எல்லோரையும் போல சமூகநீதி வழங்கப்பட வேண்டும். ஆணும் பெண்ணும் சமமென்று பேசப்படுகிறதே தவிர அவர்களது நடைமுறை வாழ்வில் சமஉரிமை கிடைப்பதில்லை. பெண்கள் பொருளாதார ரீதியாகவும்இன சமூகரீதியாகவும் பாதிக்கப்படும் நிலையினை மாற்றிட முயலுதல் அனைவரதும் தார்மீகக் கடமையாகும்.பெண்களின் பிரச்சினைகளை அணுகவும் அவற்றை அகற்றிடவும் ஆற்றல் மிக்க அதிகாரிகள் நியமிக்கப்படுதல் அவசியமாகும். காவல்துறையில் கூட பெண்களின் நிலை பரிதாபமாகவே காணப்படுகிறது. காவல் துறையில் உயர்பதவியில் இருக்கும் பெண்களுக்கே தக்க பாதுகாப்பு இல்லாதிருக்கிறது.

    நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம், கற்பு நிலையென்று சொல்லவந்தால் இரு கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்

    என்று முழக்கமிட்டுப் பெண்ணுரிமை பேசி நின்றான் புரட்சிக்கவி பாரதி. பாரதி வீர முழக்கத்தைப் படிப்பதோடு நின்று விடக் கூடாது. அதனைக் கருத்தில் இருத்தி யாவரும் செயலாக்குதல் மிக  அவசியம்.

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 5

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 5

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    தொல்காப்பியமும் தண்டியலங்காரமும்

    முன்னுரை

    ‘உவமம்’ என்பது தமிழ் இலக்கிய மற்றும் இலக்கண மரபுப்படி அகப்பொருள் மாந்தர்களின் கூற்றுப் பகுதியில் பயன்படுவது. அது தற்காலத்தைப் போலச் செய்யுளுக்கு அல்லது கவிதைக்கு அழகு சேர்க்கும் ஓர் உறுப்பு என்பது வடமொழி மரபு. இதற்கான சான்றுகள் முந்தைய கட்டுரைகளில் சுட்டப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தில் ‘அணி’ என்னும் சொல், ‘செய்யுளணி’ என்னும் பொருளில் அந்நூலின் எந்தவிடத்தும் ஆளப்படவில்லை. உவமவியலில் செய்யுளணி பற்றிய குறிப்பு ஏதும் காணப்படவில்லை. செய்யுளுறுப்புக்களில் ஒன்றாகவும் அது கூறப்படவில்லை. இந்த மூன்று கருத்துக்களும் தொல்காப்பியத்தை உற்று நோக்கிய அளவில் காணப்படும் வெகு இயல்பான உண்மைகள். இருந்தும் தொல்காப்பியம் அணியிலக்கணச் சிந்தனைகளை வெளிப்படுத்துகிற நூலெனவும் தொல்காப்பியருக்கு அணியிலக்கணச் சிந்தனை இருந்திருக்கிறது எனவும் கருதுகிற போக்கு, தமிழியல் ஆய்வுலகில் நிலவுகிறது.  இதுபற்றிய அறிஞர் சிலருடைய கருத்துக்களின் வன்மை மென்மைகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    தொல்காப்பியத்துக்கு அணியிலக்கணம் உடன்பாடா?

    தொல்காப்பியம் ‘உவமவியல்’ என்னுந் தலைப்பில் அமைந்த இயலில் செய்யுளில் அமையும் அணி பற்றியே ஆராய்ந்திருக்கிறது. அவ்வியல் பல்வேறு வகையில் இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் உவமைகளின் வகைகளைப் பற்றிக் கூறுகிறது. உவமத்தைத் தவிர மற்ற அணிகள் ஏதும் தொல்காப்பியத்தில் காணப்படவில்லை. அதற்குக் காரணம், ஏனைய அணிகளின் அடிப்படைக் கூறுகள் எல்லாம் உவமையில் நிலவியதால் அவையெல்லாம் உவமத்தின் சிதறல்களாகவே கருதப்பட்டிருக்கலாம் அல்லது உவமையணி மட்டுமே தொல்காப்பியர் காலத்தில் பயன்பாட்டில் இருந்து, மற்ற அணிகள் வளர்ச்சிடையாமல் இருந்திருக்கலாம்.” என்னும் ஊகத்தின் அடிப்படையில் எழுந்திருக்கும் இத்தகைய கருத்துக்கள் பல்வேறு ஐயங்களை எழுப்ப வல்லனவாக அமைந்திருக்கின்றன. ஆதலால் பின்வரும் விளக்கம் பதிவு செய்யப்படுகிறது.

    1. உவமவியலில் செய்யுளணி பற்றிய குறிப்பு எந்த நூற்பாவில் அமைந்திருக்கிறது என மேற்சுட்டிய ஆய்வாளர் சுட்டவில்லை.
    2. உவமவியல் அகப்பொருள் மாந்தர்தம் கூற்றுப் பகுதியில் வினை, பயன், மெய், உரு என உவமம் தோன்றும் முறையும், சிறப்பு, நலன், காதல், வலி, கிழக்கிடும் பொருள் என அதன் நிலைக்களன்கள் பற்றி ஆராய்கிறதே அல்லாமல் தண்டியலங்காரத்தைப் போலப் பல்வகை உவமைகளைப் பற்றி ஆராயவே இல்லை என உறுதியாகக் கூற முடியும்.
    3. ‘உவமைகளின் வகை’ எனத் தொல்காப்பியம் கூறுகிறது என்றால், அவ்வகைகள் எவை என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை.
    4. ஏனைய அணிகளின் கூறுகள் எல்லாம் உவமத்துள் அடங்கியதாகக் கருதப்பட்டதே உவமம் மட்டும் கூறப்பட்டதற்கான காரணம் என்றால், அக்காரணம் தொல்காப்பியத்தில் பதிவு செய்யப்படாமல் போனதற்குக் காரணம் என்ன?
    5. மற்ற அணிகள் வளர்ச்சியடையாமல் போனதும் (other kinds of figures of speech had not been developed then) உவமையின் தனித்த பயன்பாட்டுக்குக் காரணமாயின் மற்ற அணிகள் வளர்ச்சியடையாமல் போனதற்கான காரணங்கள் என்ன என்பதை மேற்கண்ட பகுதியால் அறிந்து கொள்ளவியலவில்லை.
    6. உவமத்தைச் செய்யுளணியாகவும் உவமவியலை அணியிலக்கணம் கூறும் பகுதியாகவும் முன்னரே கருதி முடிவெடுத்துக் கொண்டு அவற்றையெல்லாம் உவமவியலில் தேடியும் காணவியலவில்லை என்பதெல்லாம் ஆய்வு நெறிக்கு ஏற்றதாகுமா என்பது சிந்தனைக்குரியது.

    தொல்காப்பிய உவமம் பற்றிய பாவாணர்தம் விளக்கம்

    “தொல்காப்பியத்திலும் தொன்னூல்களிலும் உவமை அணியிலக்கண  முறையில் கூறப்படாமல் பொருளிலக்கண முறையிலேயே கூறப்பட்டுள்ளது. தோழி, தலைவன் தலைவியொடு, சிறப்பாகத் தலைவனொடு உரையாடும் போது உள்ளுறையுவமம், ஏனை யுவமம் என்னும் இருவகை உவமங்களையும் ஆளுவது மரபு. இவற்றை விளக்க எழுந்ததே உவமவியல். பிற்காலத்தில் வடநூலார் அணியிலக்கணம் வகுத்தபோது தமிழிலக்கண உவமவியலைப் பயன்படுத்திக் கொண்டதுடன் ‘உவமை’ என்னும் பெயரையும் ‘உபமா’ எனத் திரித்துக் கொண்டனர். தொல்காப்பியம் கடைக்கழகக் தொடக்கத்தெழுந்த வழிநூலாதலால் அதற்கு முந்திய அகத்தியம் முதலிய நூல்கள் வடமொழி இலக்கணங்களுக்கு முதனூல் என்பதை எவரும் மறுக்க முடியாது. மேலும் ‘ஐந்திரம்’, ‘பாணினீயம்’ முதலிய வடமொழி வியாகரணங்கள் எல்லாம் நன்னூல் போல் எழுத்தும் சொல்லும் ஆகிய இரண்டே கூறுவனவென்றும், தொல்காப்பியம் முதலிய தொன்னூல்கள் யாவும் எழுத்து, சொல், பொருள் மூன்றையும் கூறும் பிண்டங்கள் என்றும் வேறுபாடறிதல் வேண்டும். வடமொழியில் யாப்பிலக்கணம் ‘சந்தன’ அல்லது ‘சந்தோபிசிதி’ என்னும் நூல்களிலும் அணியிலக்கணம் ‘அலங்காரம்’ என்னும் நூல்களிலும் வேறாகக் கூறப்படும். தமிழிலோ யாப்பும் அணியும் பொருளிலக்கணக் கூறுகள்” என்னும் பாவாணர் அவர்களின் விளக்கம் உவமம் பற்றிய அனைத்துவகை ஐயங்களையும் களைவதாக அமைந்துள்ளது.

    நிலைக்களன் ஒன்று சிந்தனை இரண்டு

    தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் காணப்படும் உவமவியல் இருவேறு வகையான சிந்தனைகளுக்குக் களமாயிருக்கிறது. ‘உவமவியல் அடிப்படையிலேயே பிற்கால அணியிலக்கணங்கள் வளர்ந்தன என்றுரைக்கும் ஆய்வறிஞர்களும், ‘உவமவியலை அடிப்படையாக வைத்துத் தமிழின் தனித்தன்மை மிக்க துறையாக அணியிலக்கணம் வளர்ச்சி பெறவில்லை’ என்னும் ஆய்வறிஞர்களும் தமிழாய்வு உலகத்தில் உள்ளனர் என்பது ஈண்டு இன்றியாமையாக் கருத்தாகச் சுட்டப்படுகிறது.

    “அகத்திணையியல் அகப்பொருளாகவும், புறத்திணையியல் புறப்பொருளாகவும், களவியல் இறையனார் களவியலாகவும், செய்யுளியல் யாப்பருங்கலம் – காரிகை, பாட்டியல் – பிரபந்தவியல் எனப் பல்வகையாகவும் விரிந்து வளர்ந்தமை போன்று ‘உவமை’ என்ற ஒன்றே பின்பு அணிக்கும் அலங்காரத்திற்கும் இடமளித்துத் தன்னை அடியாகக் கொண்டு வளர்ந்த பல்வேறு அணிகளையும் இணைத்துக் கொண்டு தனி அணி இலக்கணமாக வளர்ந்து வந்துள்ளது என்று கருத இடமளிக்கிறது”

    எனப் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஆய்வுலகில்,

    “தொல்காப்பியத்தோடு ஒட்டிய தமிழ் மரபோடு பொருந்திய
    உவம  வளர்ச்சி பற்றிய நூலொன்றும் தோன்றவில்லை”

    என்னும் சிந்தனையும் போதிய கவனத்திற்கு ஆளாகியுள்ளது என்பதும் நோக்கத்தக்கது.

    “தொல்காப்பியர் தம் நூலை எழுத்து, சொல், பொருள் என்னும் முப்பகுதி உடையதாக யாத்துள்ளார். தமக்கு முன்னிருந்த பகுப்புமுறை உண்மை கொண்டே அவர் இப்பகுப்பு முறையை ஏற்றுக் கொண்டிருத்தல் வேண்டும். எழுத்திலக்கணம் அடிப்படையாகவும், சொல்லிலக்கணம் அதன் வளர்ச்சியாகவும், சொல்லுணர்த்தும் பொருள் பற்றிய இலக்கிய இலக்கணம் முடிந்த பயனாகவும் கொள்ளப் பெற்றன. எழுத்தும் சொல்லும் கற்பது பொருள் பற்றிய இலக்கியக் கொள்கைகள் அனைத்தையும் உணர்ந்து இலக்கியங்களை விளக்கமுறக் கற்று இன்பம் நுகர்வதற்கே என்று எண்ணினர். தமிழ்ப்புலவர், பிற்கால இலக்கண ஆசிரியர் சிலர் எழுத்து, சொல்லோடு நின்று விட்டனர். பொருளைப் பற்றி எழுதியவர்கள்கூடத் தொல்காப்பியக் கருத்துக்களையே திரும்பவும் சுருங்கக் கூற முயன்றனரேயன்றிப் புதுமை படைக்கவோ முன்னதை மேலும் விளக்கவோ முயலவில்லை எனலாம். சிலர் பொருளிலக்கணத்திலிருந்து யாப்பைப் பிரித்துத் தனி இலக்கண நூல் எழுதினர். சிலர் அகம் புறம் பற்றித் தனி இலக்கண நூல்களை யாத்தனர். வேறு சிலர் பாட்டியல் நூல் என்னும் ஒரு பிரிவைக் கலப்படமாக ஆக்கினர். ஆனால் உவமவியலை அடிப்படையாகக் கொண்ட தமிழ் அணியியல் ஒன்றும் தோன்றவில்லை.”

    தொல்காப்பிய நிலைக்களத்தில் இவ்வாறு இருவேறு சிந்தனைகள் கிளைத்துள்ளன. எனினும்,

    1. தண்டியலங்காரம் என்னும் வடமொழித் தழுவல் நூலில் குறிக்கப்பட்டுள்ள உவமைகளின் பெயர்கள் ஒன்றுகூடத் தமிழில் இல்லையாதலாலும்,
    2. தனக்குப் பின்னால் செய்யுளணி பற்றிய நூல் தோன்றும் எனக்கருதி முன்கூட்டியே தொல்காப்பியர் உவமவியலைப் படைத்தார் என்பது அளவையியலுக்குப் (LOGIC) பொருந்தாமையானும்
    3. தண்டியலங்காரத்துக்கு முன்னர் எழுந்த தமிழ்க்கவிதைகளில் அணி விகற்பங்களைப் பற்றிய குறிப்புக்கள் ஏதும் இல்லாததாலும்

    அணியிலக்கணச் சிந்தனை தொல்காப்பியருக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை என்னும் முடிவுக்கே வரவேண்டியுள்ளது.

    உவம நெறி பற்றிய பாவலர் பாலசுந்தரனார் கருத்து

    ‘உவமம்’ எனத் தொல்காப்பியர் பயன்படுத்தியதற்கும், ‘உவமையணி’ எனப் பிற்காலத்தார்  உருவாக்கிக் கொண்டதற்கும் உள்ள தொடர்பினை ஆய்வறிஞர் ச.பாலசுந்தரனார்  பின்வருமாறு விளக்கிக் காட்டுகிறார்.

    “உவமமானது செய்யுளொடு ஒருங்கிணைந்து, சிறப்பு நலன் முதலாகியவையேயன்றி மெய்ப்பாடுகளையும் நிலைக்களனாகக் கொண்டு தோன்றுதலான் உவமவியலை, மெய்ப்பாட்டியலின் பின்னும் செய்யுளியலின் முன்னுமாக அமைத்துக் கூறினார் ஆசிரியர்.

    “இடைக்காலத்தே இலக்கண நூல் செய்த ஆசிரியன்மார் மெய்ப்பாடுகளையும் ஆகுபெயர் முதலாய குறிப்பு மொழிகளையும் பொருள்கோளையும் முரண்தொடை முதலியவற்றையும் நோக்கு முதலாய செய்யுளுறுப்புக்களையும் வேறுபட வந்த உவமத் தோற்றங்களையும் உள்ளுறை உவமத்தினையும் செய்யுட்கு அணி செய்வனவாகக் கொண்டு வடமொழி அலங்கார நூல்களைப் பின்பற்றி அணிநூல் செய்து போந்தனர்”.

    “தொல்காப்பியத்துள் கூறப்படும் உள்ளுறை உவமம் ஏனையுவமம் என்னும் பொருளிலக்கணப்பகுதியை அணியிலக்கணம் கூறுவதாகக் கருதி உவமை என்னும் அணியிலிருந்தே பிற அணிகள் யாவும் விரிந்தனவாதலின் அவற்றையெல்லாம் அடக்கி இவ்வாசிரியர் உவமவியல் கூறுவதாக மயங்குவர் பலர்.”

    “தமிழ் இலக்கணம் யாவும் வடமொழி இலக்கணங்களை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டவை எனக் கருதுவார்க்கும் அதற்கேற்ப ஆய்வுரைகளைக் கூறுவார்க்கும் தமிழிலக்கணத்தின் தொன்மையினையும் தொல்காப்பியத்தின் நுண்மையினையும் எடுத்துக் கூறித் தமிழின் தனித்தன்மையை ஏற்கச் செய்வதென்பது ஏறா மேட்டிற்கு நீர் பாய்ச்சுதலை ஒக்கும் என்க”

    ஆய்வு என்னும் பெயரால் தமிழ் மரபைப் பிறழ உணர்ந்தார்க்கும்  உணர்ந்த  பின்பும் மரபழிக்க முயல்வாருக்கும் பாவலரின் இவ்வரிய விளக்கம் பயன்படுதல் வேண்டும்.

    நிறைவுரை

    இதுகாறும் வலிமை வாய்ந்த தரவுகள் பலகொண்டு காட்டப்பெற்ற விளக்கங்களால் உவமம் என்பது தமிழ் மரபென்றும் அது அகப்பொருளில் தலைமக்களுக்கானது என்றும், பின்னாலே வடமொழி மரபு தழுவி எழுதப்பெற்ற தண்டியலங்காரம் என்னும் நூலில் காணப்பெறும் உவமம் பற்றிய கருத்துக்களும் விளக்கங்களும் செய்யுளுக்கு அணியானவை என்றும் புரிந்து கொள்ளலாம். கலாச்சாரக் கலப்புக்கள் இலக்கிய இலக்கணங்களில் எதிரொலிக்கவும் செய்யும் என்பதற்கு இது சான்றாகலாம். தற்காலத்தில் உவமம் பற்றிய தொல்காப்பிய மரபு முற்றிலும் கைவிடப்பட்டு அது கவிதைக்கு அழகு சேர்க்கும் ஓர் உறுப்பு என்ற அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் பொருள் புலப்பாட்டுக் கருவியாகவும் செய்யுளுக்கு அணியாகவும் அமைந்திருக்கும் இவ்வுவமங்கள் கவிதைகளின் பெருமைக்கு எவ்வாறு துணைசெய்கின்றன என்பதைத் தொடர்ந்து வரும் கட்டுரைகளால் விளங்கிக் கொள்ளலாம்.

    (தொடரும்…)

    Share
  • Covid Vaccinations

    Covid Vaccinations

    Baskar Seshadri

    When the services are extremely good in all the UPHC’s in offering the best services on Covid Vaccinations I wonder why there are no more takers.

    I see many people opting for private hospitals for this Jab and some even do not mind to travel bit afar. This mindset is to be attended and it gives a feeling that governmental institution is not to be taken seriously. Though the election mode is on and the Government can release the Advertisement in newspapers through the Medical services department and create more awareness and invite more to go for the vaccination, preferably in government run hospitals.

    In the public interest this can be done in both print and television media for the benefit of the public.

    Share
  • குறளின் கதிர்களாய்…(340)

    குறளின் கதிர்களாய்…(340)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(340)

    கற்றாருட் கற்றா ரெனப்படுவர் கற்றார்முன்
    கற்ற செலச்சொல்லு வார்.

    – திருக்குறள் – 722 (அவை அஞ்சாமை)

    புதுக் கவிதையில்...

    கற்றோர் நிறைந்த அவையில்
    அவர் முன்
    தாம் கற்றதை
    அவர் மனத்தில் பதியுமாறு
    எடுத்துரைக்க வல்லவரே,
    கல்வி கற்றோருள் நன்கு
    கற்றவரென மதிக்கப்படுவர்…!

    குறும்பாவில்...

    கற்றோர் அவையில் தாம்
    கற்றவைகளை அவர்கள் மனதுக்கேற்ப சொல்லவல்லாரே
    கற்றோருள்ளும் மிகக்கற்றவரெனக் கருதப்படுவர்…!

    மரபுக் கவிதையில்...

    கற்றோர் பலரும் நிறைந்திருக்கும்
    கண்ணிய மிக்க அவையதிலே
    முற்றிலும் அவர்கள் மனம்மகிழ்ந்தே
    முழுதும் விரும்பிக் கேட்டிடத்தான்
    கற்ற வற்றை எடுத்துரைக்கும்
    கலையை யறிந்த வல்லவர்தான்
    கற்ற றிந்த பலருள்ளும்
    கல்வியி லுயர்ந்ததாய் ஆவாரே…!

    லிமரைக்கூ..

    கற்றோர் அவையில் சொல்லுவார்
    கற்றவற்றைக் கற்றவர் மனத்திற் கேற்றபடி,
    கற்றாரிலுயர்ந்தா ரெனும்பேர் வெல்லுவார்…!

    கிராமிய பாணியில்...

    மதிப்புவரும் மதிப்புவரும்
    படிச்ச படிப்புக்கு மதிப்புவரும்,
    படிச்சவங்க சபயில
    படிச்சதத் தெளிவா
    பயமில்லாம எடுத்துச்சொன்னாத்தான்
    படிச்ச படிப்புக்கு மதிப்புவரும்..

    படிச்சவங்க நெறஞ்ச சபயில
    பயமில்லாம
    அவங்க மனசுக்கேத்தபடி
    படிச்சத எடுத்துச் சொல்லுறவன்தான்
    படிச்சவங்களிலயெல்லாம்
    ஒசந்தவனுண்ணு
    ஒலகம் சொல்லுமே..

    பாத்துக்கோ
    மதிப்புவரும் மதிப்புவரும்
    படிச்ச படிப்புக்கு மதிப்புவரும்,
    படிச்சவங்க சபயில
    படிச்சதத் தெளிவா
    பயமில்லாம எடுத்துச்சொன்னாத்தான்
    படிச்ச படிப்புக்கு மதிப்புவரும்…!

    Share
  • யுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஹாலிவுட் வளாகத்தில்

    யுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஹாலிவுட் வளாகத்தில்

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற யுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஹாலிவுட் வளாகத்தில் ஓர் உலா. ஜூராசிக் பார்க் உள்ளிட்ட பல படங்கள் இந்த வளாகத்தில் எடுக்கப்பட்டுள்ளதை வழிகாட்டி விளக்குகிறார். திரைப்பட ரசிகர்களும் திரைத் துறையில் ஆர்வம் உள்ளவர்களும் பார்த்துப் பயன்பெறுங்கள்.

    படப்பிடிப்பு – ஹேமமாலினி லோகநாதன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படக்கவிதைப் போட்டி – 297

    படக்கவிதைப் போட்டி – 297

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    புகைப்படக் கலைஞர் சரவணன் தண்டபாணி எடுத்த இப்படத்தை அவரது ஒளிப்படத் தொகுப்பிலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (07.03.2021) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    Share
  • அஞ்சலி: இரா.கிருஷ்ணமூர்த்தி

    அஞ்சலி: இரா.கிருஷ்ணமூர்த்தி

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    தினமலர் முதன்மை ஆசிரியர் திரு இரா கிருட்டிணமூர்த்தி அவர்கள், என் மீது வற்றாத அன்பு பாராட்டுபவர். அளவற்ற பாசத்தைப் பொழிவார். இனிமையின் இருப்பிடம். மென்மையான பேச்சு எனினும் வலிமையான கருத்துகள்.

    தினமலர் முதன்மை ஆசிரியர் திரு. இரா. கிருட்டிணமூரத்தி அவர்களை 1986 முதல் முதலாகச் சந்தித்தேன். சென்னையில் ஒளி அச்சுக் கோப்பு முறையில் தமிழைப் பரவலாக எடுத்துச் செல்ல முதலீடு செய்கிறேன். நிதி நிறுவனத்தில் கடன் கேட்கிறேன். சந்தை இருக்கிறதா எனக் கேட்கிறார்கள். தினமலர் நாளிதழுக்கு ஒளி அச்சுக் கோப்பு செய்து தருவதாக அவரிடம் கடிதம் கேட்டேன். அவரை அதற்குமுனஅ அறியேன். ஆனாலும் கேட்ட உடனேயே தன் செயலாளரிடம் கடிதத்தைச் சொல்லி என்னிடம் கொடுத்தார்

    அக்காலத்தில் முனைவர் தமிழப்பன் தினமலரில் ஆலோசகராக இருந்தார். பேராசிரியர் அறவாணன் அவரின் நெருங்கிய நண்பர். பேராசிரியர் வி. சி. குழந்தைசாமி, பேராசிரியர் ஐராவதம் மகாதேவன் ஆகியோரும் அவரின் நெருங்கிய நண்பர்கள். இவர்களோடு நானும் பழகுவதால் திரு. கிருட்டிணமூர்த்தி அவர்களை அடிக்கடி சந்திப்பேன். அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கருத்தரங்குகளில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடர்பான கூட்டங்களில் என்னை உற்சாகித்து ஊக்குவிக்கும் பெரியவர் திரு. கிருட்டிணமூர்த்தி.

    தமிழ் எழுத்துருக்கள் தொடர்பாக அவரும் மும்பையில் இருந்த மென்பொருள் நிறுவனமும் இணைந்து முதன்முதலாக மின்னம்பலத்தில் தமிழ் எழுத்துருக்களை வடிவமைத்தனர். தொடர்ந்து தினமலர் நாளிதழில் மின் எழுத்துருக்களையே  பயன்படுத்தியவர்   திரு. கிருட்டிணமூர்த்தி. அக்காலத்தில் ஏனைய அச்சு ஊடகங்கள் ஒளி அச்சுக்கோப்பு முறைக்கு மாறவில்லை.

    புதிதாக எத் தொழிநுட்பம் அறிமுகமானாலும் முதலில் எடுத்தாளும் தமிழ் ஊடகர் திரு. இரா. கிருட்டிணமூர்த்தி அவர்களும் அவர் இல்லாதாரும். தினமலர் அவ்வகையில் முன்னணி நாளிதழே..

    அவருடைய நாணயவியல் கண்காட்சிகளுக்குச் செல்வேன். நாணயவியல் தொடர்பாக அவர் அண்மைக்காலம் வரை எழுதிய நூல்கள் யாவும் என்னிடம் உள. அவரது நாணயவியல் நூல்களைக் காந்தளகம் வழியாக சந்தைப்படுத்துவோம்.

    கொழும்புக்கு வந்தார். கொழும்பு அருங்காட்சியகத்தில் அதுவரை அடையாளம் அறிந்திராத 44 நாணயங்களை அடையாளம் கண்டு நூலாக வெளியிட்டார்.

    இலங்கையில் இருந்து சென்னை வந்திருந்த ஊடகர்  திரு வீரகத்தி தனபாலசிங்கம் அவர்களைத் திரு. கிருட்டிணமூர்த்தியடம் அழைத்துச் சென்றேன். இராஜீவ் காந்தியைக் கொன்றிராவிட்டால் ஈழத் தமிழர் தலைநிமிர்ந்திருப்பரே அவரிடம் கூறினார்.

    யாழ்ப்பாண வரலாற்றுப் பேராசிரியர் சி. க. சிற்றம்பலம் அவர்களை அழைத்துச் சென்றேன். வராலாற்றுச் செய்திகளைப் பரிமாறினர் இருவரும்.

    யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை சென்னைக்கு வந்திருந்தார். மேனாள் ஆளுநர் சி. சுப்பிரமணியம் தலைமையில் சென்னையில் வாழ்ந்த மேனாள் அந்நாள் துணைவேந்தர்கள்யும் தமிழ் அறிஞர்களையும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தேன். திரு. கிருட்டிணமூர்த்தி அவர்களும்  வந்திருந்தார். அவரது பாராட்டு உரையில் யாழ்ப்பாணத்தில் கூடுதல் விகிதாரத்திவ் பல்துறை அறிஞர்களும் இருக்கிறார்களே, காரணம் என்ன என வினவினார்.

    அவர் மற்றும் அன்று அவருடைய உடன்பிறப்புகள் அவருடைய பெறா மகன் திரு கோபால் அனைவருமே என் மீது அளவற்ற அன்பு வைத்திருப்பார்கள். என் வீட்டுக்கு வருவார்கள்.

    அண்மையில் திரு. கிருட்டிணமூர்த்தி அவர்களைச் சென்று பார்த்தேன். திருக்கோயில் திருப்பணி தொடர்கிறதா எனக் கேட்டார். திருப்பணிக்கு நிதியும் தந்தார்.

    88 வயது வரை வாழ்ந்த பெருமகனார். நிறைவான வாழ்வு வாழ்ந்த பெருமகனார். தமிழ் அறிஞர் உலகில் தமிழ் ஊடகத் துறையில் வரலாற்றுத் தடம் பதித்தவர். இன்று அவர் நம்மிடை இல்லை. துயருறும் பெறாமகன் திரு கோபால் அவர்களுக்கும் இல்லத்தாருக்கும் நெஞ்சார்ந்த இரங்கல். தினமலர் அலுவலகத்தாரே உங்கள் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.

    Share
  • காஞ்சி மாநகருக்குப் போக வேண்டும்

    காஞ்சி மாநகருக்குப் போக வேண்டும்

    காஞ்சி மாநகருக்குப் போக வேண்டும்

    மகாபெரியவரின் நட்சத்திரமான அனுஷத்தில், கிருஷ்ணகுமாரின் குரலில் ‘காஞ்சி மாநகருக்குப் போக வேண்டும்’ என்ற பாடலைக் கேளுங்கள். ஜெயஜெய சங்கர! ஹரஹர சங்கர!

    காஞ்சி மகான் என்ற சொல்லே மந்திரம்

    காஞ்சி மகான் என்ற சொல்லே மந்திரம் எனும் பாடலைக் கிருஷ்ணகுமாரின் குரலில் கேளுங்கள். காஞ்சி மகானின் அருளைப் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சான் டியாகோ மாநகரக் கேளிக்கை நிகழ்ச்சிகள்

    சான் டியாகோ மாநகரக் கேளிக்கை நிகழ்ச்சிகள்

    அண்ணாகண்ணன்

    அமெரிக்காவின் சான் டியாகோ மாநகரில், சீ வேர்ல்டு (SeaWorld) என்ற பெயரிலான பொழுதுபோக்கு வளாகம் அமைந்துள்ளது. விலங்குகள், பறவைகள், கடல்வாழ் உயிரிகள் உள்ளிட்ட பலவும் இந்த வளாகத்தை அலங்கரிக்கின்றன. இந்த வளாகத்தில் நடைபெறும் கேளிக்கை நிகழ்ச்சிகள் சிலவற்றை இங்கே நீங்கள் கண்டுகளிக்கலாம்.

    படப்பிடிப்பு: ஹேமமாலினி லோகநாதன்

    Dolphin Show at San Diego

    என் மனைவி ஹேமமாலினி, 2004இல் அமெரிக்காவில் சிறிது காலம் பணியாற்றினார். அப்போது அங்கே அவர் சென்று வந்த சுற்றுலாத் தலங்கள் சிலவற்றைத் தனது கேம்கார்டரில் படம் பிடித்தார். அவரது படப்பிடிப்பில், சான்டியாகோ மாநகரில் நடந்த டால்பின் காட்சிகள் இரண்டை இங்கே நீங்கள் பார்க்கலாம். பல வகையான டால்பின்கள் துள்ளிக் குதிப்பதும் உயரம் தாண்டுவதும் தலைகீழாகப் படுப்பதும் பார்வையாளர்கள் மீது தண்ணீரை வாரி அடிப்பதும் குழந்தைகளுடன் விளையாடுவதும் பயிற்சியாளர்கள் அவற்றின் மீது படுத்தும் அமர்ந்தும் நின்றும் பயணிப்பதும் மிகச் சுவையான காட்சிகள். பார்த்து மகிழுங்கள்.

    Penguins | Sea Cows | White Whales at SeaWorld, San Diego

    அமெரிக்காவின் சான் டியாகோ மாநகரில், சீ வேர்ல்டு (Seaworld) பொழுதுபோக்கு வளாகத்தில் பென்குயின்கள், கடல் பசுக்கள், வெள்ளைத் திமிங்கலங்களைக் கண்டுகளியுங்கள்.

    Pets Rule Show at SeaWorld, San Diego

    சீ வேர்ல்டு வளாகத்தில் பெட்ஸ் ரூல் (Pets Rule) என்ற பெயரில் நடைபெறும் கேளிக்கை நிகழ்ச்சி புகழ்பெற்றது. இதில் நாய்கள், பூனைகள், பன்றிகள், பறவைகள் உள்ளிட்ட பலவும் பல்வகை சாகசங்களை நிகழ்த்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும். நாய்கள் இரு கால்களால் நடப்பதும் பறக்கும் தட்டுகளைத் தாவிச் சென்று பிடிப்பதும் உயரம் தாண்டுவதும் பார்க்க வியப்பளிப்பவை. அத்தகைய நிகழ்ச்சி ஒன்றை இங்கே பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • My Covidshield Experience

    My Covidshield Experience

    Seshadri Baskar

    Some inputs I wish to share on the vaccination issue. Originally I registered through a contact in Trinity hospital based on the portal info and when we went and asked for the same the attendant was not even aware of such a portal had been made on them and said there is no such facility.

    We moved on Kaveri Hospital and there was a serpentine queue of oldies and we were told that it will take one full hour to get the Jab Done. It has a fee of Rupees two hundred and fifty per shot. The programme was cancelled and it was booked next day in Kalyani Hospital well in the morning and as per the allotment we were eligible to get the jab done before five pm.

    But when we went there around 2.30 this noon we were told that the allotted hundred numbers of Jab was over and we will be eligible to get vaccination only tomorrow.

    We drove to PHC. My Jab is over. I had a pleasant experience today at the PHC and the process was over in just ten minutes. I showed the necessary documents and explained my current health issues and after a pressure checkup (it was quite normal) I was vaccinated and after taking ten minutes rest I moved on to my scheduled works.

    The PHC staffs were so cordial and handled the complete exercise very neatly. Total number of people who had undergone vaccination in this unit is around one hundred so far. I could also meet my few old contacts who were served tea and biscuits months ago during the peak of Covid times over there and exchanged pleasantries. Next shot is due by this month end. Thanks GCC for making the exercise easy and simple.

    The location I had chosen is Dvn 125 San Thome UPHC, 14A, Appu 2nd Lane, Mylapore, Chennai-4. This is Near Indian Overseas Bank on Santhome High Road and MSV’s House.

    Please make use of this opportunity and spread the information to your contacts so that all can benefit.

    Interested can reach me on 98410 33888 so that I can guide better.

    Please carry two proofs with you and admit honestly your health issues if any. Please forget not to get few tablets while you come back from them which you will have to use for two days.  What more, the PHC’s are clean, neat and the staffs are very courteous. This is a good initiative by the central and state government and we should thank them for this as an apolitical person.

    Share
  • கச்சத் தீவில் சைவக் கோயில்

    கச்சத் தீவில் சைவக் கோயில்

    மறவன்புலவு க சச்சிதானந்தன்
    சிவ சேனை

    கூகுள் வரை படத்தில் கச்சத் தீவைப் பெரிதாக்கிப் பார்த்தால் அங்கு மேற்குக் கரையில் அண்ணமார் கோயில் இந்துக் கோயில் என இடுகை இருக்கும். (படம் இணைப்பில்)

    கய் > கயர் > காய், தமிழின் வேர்ச் சொற்கள். அறு சுவைகளுள் கயர் > கய்ப்புச் சுவை ஒன்று.

    உப்புச் சுவை கய்க்கும் சுவை. உப்பு நீர் > உவர்நீர். கய்க்கும் நீர்.

    தமிழில் நேயம் > நேசம் ஆகும். பையன்கள் > பசங்கள் ஆவார். வாயில் > வாசல் ஆகும். வயம் > வசம் ஆகும். யகர உச்சரிப்புக் காலப்போக்கில் சகர உச்சரிப்பாக மாறுவது இயல்பு.

    கயர் > கசர். கயப்பு > கசப்பு. உப்புக் கயக்கும் அதே உப்புக் கசக்கும். கடல் நீர் > கச்சல் நீர். கடல் நீர் ஊறும் நிலம் கச்சல் நிலம்

    ஒரு தீவில் கிணறு தோண்டக் கயர் நீர் வருமாயின் கச்சல் நீர் வரும் தீவு, கச்சல் தீவு > கச்சத் தீவு.

    நாகப்பட்டினத்திலிருந்து கடாரம் நோக்கி வணிகக் கப்பல்கள் பயணிக்கின்றன. நக்காவரம் தீவுக் கூட்டங்களைக் கடக்கும் இடத்தில் நன்னீர் கிடைக்குமா? எனத் தமிழ்க் கடலாடிகள் தேடுகின்றனர். கிணறு தோண்டக் கயர் நீர் ஊறுகிறது.

    எனவே அத் தீவில் நன்னீர் கிடைக்காது என்பதைத் தெரிவிக்கக் கச்சத் தீவு என்று பெயரிடுகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளாக அத் தீவு கச்சத் தீவு.

    நக்காவரம் தீவுக் கூட்டங்களில் தெற்கு எல்லையில் சுமாத்திராவிற்கு வடக்கே இந்திரா முனை என இன்று அழைக்கும் தீவின் பெயர் இன்றும் கச்சத் தீவு. கடலாடித் தமிழர் சூட்டிய பெயர். அட்மிராலிற்றி வரை படங்களில் (கப்பல் ஓட்டிகட்கு உதவும் பிரித்தானியத் தாயாரிப்பான வரை படங்களில்) இப் பெயரே உண்டு (Admirality Charts)

    அவ்வாறே நெடுந் தீவுக்கு மேற்காக உள்ள தீவில் கிணறு தோண்டினால் உவர் நீர் அல்லது கயர் நீர் அல்லது கச்சல் நீர் வருவதால் அந்தத் தீவின் பெயர் கச்சத் தீவு.

    பசுத் தீவு அல்லது நெடுந் தீவுக்கும் இராமேச்சரத்துக்கும் இடையே பயணிக்கும் வழிபடு பயணிகள், நன்னீர் கொண்டு செல்ல வேண்டும். வழியில் கச்சத் தீவு வரும் தங்கலாம். அங்கே நன்னீர் கிடைக்காது என்பதைச் சுட்டுவதே கச்சத் தீவு என்ற பெயர்.

    கச்சத் தீவில் உள்ள சிவன்கோயில் திருக்கச்சேச்சரம். அருள்மிகு கயற்கண்ணி உடன் உறை கச்சேச்சரநாதர் திருக்கோயில் அமைந்த தீவு கச்சத் தீவு.

    திருக்கோயில் வாயிலில் அருள்மிகு பிள்ளையார். அவரை வணங்கி உட்சென்று அருள்மிகு கயற்கண்ணி உடனுறை கச்சேச்சரநாதரை வணங்கி, சுற்று மண்டபங்களில் உள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுறை முருகப் பெருமானை வணங்கி, அருள்மிகு பைரவரை வணங்கி, அருள்மிகு வீரபத்திரரை வணங்கி, வெளியே வந்து நெடுந் தீவில் இருந்தோ இராமேச்சரத்தில் இருந்தோ கொண்டு சென்ற பொங்கலுக்கு உரிய பொருள்கள், நீர் முதலியவற்றால் பொங்கல் பொங்கி வழிபடுவது 10 ஆயிரம் ஆண்டுகளாக நெடுந் தீவு மற்றும் இராமேச்சரச் சைவத் தமிழரின் மரபு.

    400 ஆண்டுகளுக்கு முன்பு சங்கிலி மன்னனைத் தோற்கடிக்க மன்னார்த் தீவில் இருந்து இருமுனைத் தாக்குதலை மேற்கொண்டவன் போர்த்துக்கேயத் தளபதி பிலிப்பு டி ஒலிவரா.

    முதலில் தனது கடற்படையை அனுப்பினான். நெடுந் தீவுக்குப் போர்த்துக்கேயக் கடற்படை வந்தது. அங்கே சங்கிலிக்கு உதவியாக நிலைகொண்டிருந்த மலையாளத்துக் குஞ்சலியின் கடற்படை, போர்த்துக்கேயக் கடற்படையைத் தாக்கியது.

    பின்வாங்கிய போர்த்துகேயக் கடற்படை, கச்சத் தீவில் தங்கியது. அங்கே இருந்த அருள்மிகு கயற்கண்ணி உடனாய கச்சேச்சரநாதர் திருக்கோயிலை முற்றுமுழுதாக உடைத்தது.

    பின்வாங்கிய போர்த்துக்கேயக் கடற்படையைக் குஞ்சலி துரத்தினான். கச்சத் தீவு சென்றான். போர்த்துக்கேயக் கடற்படையை முற்றாக அழித்தான். போர்த்துக்கேய வீரர்களைச் சிறைப் பிடித்தான். நெடுந் தீவுக்குக் கொண்டு வந்தான்.

    வைகாசி தேய்பிறை எட்டாம் நாள் யாழ்ப்பாணத்தில் சங்கிலியனைப் பிலிப்பு டி ஒலிவரா சிறைப் பிடித்ததும் நெடுந் தீவில் இருந்த குஞ்சலி வீரர் கடற்படை மலையாளத்துக்குப் புறப்பட்டது.

    நெடுந் தீவு போர்த்துக்கேயர் வயமானது. துப்பாக்கி முனையில் நெடுந் தீவில் வாழ்ந்த சைவர் சிலரைப் போர்த்துகேயர் கத்தோலிக்கராக மாற்றினர்.

    கத்தோலிக்கத்துக்கு மாறாத சைவர்கள் கச்சத் தீவில் உடைந்து தரைமட்டமாகிய அருள்மிகு கயற்கண்ணி உடனாய கச்சேச்சரநாதர் திருக்கோயில் இருந்த இடத்தில் அண்ணமார் (சிவனின் சூலம்) திருமேனி வைத்து வழிபட்டு வருகின்றனர். நெடுந்தீவு மீனவருக்கும் தொண்டி தொடக்கம் இராமேச்சரம் வரை வாழும் தமிழக மீனவர்களுக்கும் இடையே திருமண உறவுகள் நெடுங்கால மரபு. எனவே நேர்த்திக் கடன்களை நிறைவேற்றத் தமிழகக் கரைகளில் இருந்தும் கச்சத் தீவுக்கு மீனவர் வருவர்.

    கடந்த 100 ஆண்டுகளுக்குள் நெடுந் தீவுக் கத்தோலிக்க மீனவர் அந்தோணியார் சிலையை அமைத்து வழிபடத் தொடங்கினர். சைவ வழிபடு மரபுகள் தொய்வுற, கத்தோலிக்கத் திருவிழா மரபு அண்மையக் காலத்தில் தொடங்கியது.

    400 ஆண்டுகளுக்கு முன்பு வரை பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் கூடுதலாகக் கச்சத் தீவில் அமைந்திருந்த அருள்மிகு கயற்கண்ணி உடனாய கச்சேச்சரநாதர் திருக்கோயிலை மீண்டும் திருப்பணி செய்வித்துக் கட்டிக் குடமுழுக்கு நீராட்டினால் இலங்கையில் வாழ்கின்ற சைவர்களின் துன்பங்கள் துயரங்கள் நீங்கும்.

    Share