Blog

  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! (26)

    26. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! பங்கர் ஹோட்டல் அருங்காட்சியகம், ஸ்டுட்கார்ட், ஜெர்மனி

    சுபாஷிணி ட்ரெம்மல்

    எனது கடந்த அருங்காட்சியகத் தொடர் பதிவில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் ஒரு அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்வது பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

    நீங்கள் என்னுடன் வரத் தயார்தானே?

    ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் வருடத்திற்கு ஒரு முறை மார்ச் மாத மத்தியில் அருங்காட்சியக இரவு என்னும் நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய நாளில் மாலை ஐந்து மணி தொடங்கி மறு நாள் காலை மூன்று மணி வரை ஸ்டுட்கார்ட் நகரில் இருக்கும் அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் நாம் சென்று பார்த்து வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். அருங்காட்சியகப் பிரியர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடம் செல்ல வசதியாக அன்று பேருந்துகள் இலவசமாக செலுத்தப்படும். ஒருவர் 15 யூரோ கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதுமானது. கட்டணம் செலுத்தி நுழைவு சீட்டு பெறும் போது நமக்கு ஒரு விளக்கக் கையேடு கொடுக்கப்படும். அதில் ஸ்டுட்கார்ட் நகரில் இருக்கும் ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களை வகைப்படுத்தி, குழுக்களில் அமைத்து, பேருந்துகள் ஒரு அருங்காட்சியக வாசலிலிருந்து மறு அருங்காட்சியகம் செல்லும் வகையில் ஏற்பாடு அமைந்திருக்கும்.

    கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் ஒரு சனிக்கிழமை மாலை நான் இந்த அருங்காட்சியக பயணத்தில் பங்கு கொண்டு நான் வசிக்கும் நகரின் அருகாமையில் இருக்கும் அருங்காட்சியகங்களைப் பார்த்து வருகிறேன். மாலை ஐந்திலிருந்து பயணித்தாலும் ஒரு அருங்காட்சியக தினத்தில் ஏறக்குறைய நான்கு அல்லது ஐந்து அருங்காட்சியகங்களை மட்டுமே காண முடியும். அப்படி ஒரு முறை பயணித்த போது ஸ்டுட்கார்ட் மத்தியில் அமைந்திருக்கும் நிலத்திற்குக் கீழே உள்ள ஒரு அருங்காட்சியகம் செல்லும் ஆச்சரியம் மிக்க ஒரு அனுபவத்தைப் பெற்றேன். விளக்கக் கையேட்டினை வாசித்து எங்கே இருக்கின்றது என இந்த அருங்காட்சியகத்தைத் தேடிக் கொண்டு ஸ்டுட்கார்ட் மார்க்கெட்ப்ளேஸ் (Marktplatz) சென்று சேர்ந்தோம். வெறும் தரை. ஆனால் வரிசையாக மக்கள் நின்று கொண்டிருந்தனர். ஒவ்வொருவராக மனிதர்கள் கீழே நோக்கிச் செல்வதைப் பார்த்த எனக்கு நிலத்தின் அடியில் இருக்கும் அருங்காட்சியகம் செல்கின்றோம் என்று அறிந்ததும் ஒரு தனி குதூகலம் ஏற்பட்டது. அதே வேளை உள்ளே சென்றவர்களும் வெளியே வந்து கொண்டிருந்தனர்.

    நுழைவாயில் பகுதி 1940களில்
    நுழைவாயில் பகுதி 1940களில்

    எங்களின் வாய்ப்பு வர நாங்களும் மேல் தரைப் பகுதியிலிருந்து அன்று மட்டுமே பிரத்தியேகமாக திறக்கப்பட்ட பாறை கற்களுக்குக் கீழே அமைக்கப்பட்டிருந்த படிகளில் இறங்கி உள்ளே நடந்து சென்றோம்.

    1940ம் ஆண்டு வாக்கில் இப்பகுதியில் இன்றும் மிகப் பிரபலமாக விளங்கிய Breuninger வர்த்தக நிறுவனத்திற்கு விற்பனையாளர்கள், வணிகர்கள் தங்குவதற்கு ஒரு தங்கும் விடுதி தேவைப்பட்டது. இந்த வர்த்தக நிறுவனம் இன்றும் அருகாமையிலேயே இயங்கி வருகின்றது. மிகப் பெரியதொரு அங்காடி விற்பனை நிலையம் இது.

    இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய Breuninger வர்த்தக நிறுவனம் இப் பகுதியில் சற்றே தள்ளி தரைக்கடியில் உள்ள நிலத்தில் பாதுகாப்பை மையமாகக் கருதி ஒரு தங்கும் விடுதியை அமைக்க திட்டம் தீட்டி, வரைபடத்தையும் தயார் செய்து கட்டுமாண வேலைகளையும் தொடங்கியது. இந்த நிலத்துக்கு அடியில் அமைந்த தங்கும் விடுதியோடு இணைந்தார் போல வாகன நிறுத்துமிடம், பிறகு அதிலிருந்து மேல் நோக்கி வரும் வகையிலான ஒரு பாதை என்பதையும் இந்த கட்டுமானம் கொண்டிருந்தது.

    இந்த நிலத்துக்கு அடியிலான கட்டுமானம் என்பது அக்கால கட்டத்தில் நிகழ்ந்த முதலாம் உலக யுத்தம், பின்னர் தொடங்கிய இரண்டாம் உலக யுத்தம் ஆகியனவற்றை முக்கியமாக மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதே. இங்கு ஸ்டுட்கார்ட் மட்டுமல்லாது, ஜெர்மனியின் பல ஊர்களில் நிலத்துக்கடியில் தங்கும் வீடுகள், மறைவிடங்கள், தொழிற் சாலைகள், சந்திப்புக் கூடங்கள், கேளிக்கை விடுதிகள் என பல இருக்கின்றன. அந்த வகையில் இதுவும் ஒன்றே!

    இப்படி நிலத்திற்கு அடியில் இயங்கிய வாழ்விடங்களின் உதாரணங்களாக இதுவரை ஸ்டுட்கார்ட் நகரில் ஒன்றும், என் இல்லத்திற்கு அருகாமையில் ஃபெல்பாஹ் நகரில் ஒரு நிலத்திற்கடியிலான இரவு கேளிக்கை விடுதியையும் நான் நேரில் சென்று பார்த்து வந்திருக்கின்றேன். இங்கு நமக்கு கிடைக்கும் அனுபவமே தனி தான்.

    இந்த ஸ்டுட்கார்ட் பங்கர் ஹோட்டல் யுத்த காலத்தில் வணிகம் தடைபடாமல் இருப்பதற்கும் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஒரு பாதுகாப்பு ஏற்பாடாகவே இருந்தது. எதிர்பார்த்தது போலவே 1944ம் ஆண்டு ஜூலை 25-26ம் தேதிகளில் ஸ்டுட்கார்ட் பகுதியில் வெடி குண்டுகள் தாக்கியதில் பல கட்டிடங்கள் சேதத்துக்குள்ளாயின. அந்த சமயத்தில் இந்த பங்கர் ஹோட்டலில் பலர் ஒளிந்துகொண்டு தங்கள் உயிரையும் உடமைகளையும் பாதுகாத்துக் கொண்டனர்.

    ஒரே சமயத்தில் இந்த நிலத்துக்கடியில் அமைக்கப்பட்ட இந்த தங்கும் விடுதியில் பலரும் இருப்பது என்பது எளிதான காரியமல்ல. மூச்சு விட போதிய ஆக்ஸிஜன் போதாமையினாலும் காற்று அழுத்தக் குறைவினாலும் சிரமங்களைத் தாங்கிக் கொண்டே தம் உயிரை இந்த மக்கள் தற்காத்துக் கொண்டனர் என்பதில் சந்தேகம் இல்லை.

    ஸ்டுட்கார்ட் நகரின் மையப்பகுதி 1944ம் ஆண்டு  போரினால் ஏற்பட்ட சேதங்களுடன்
    ஸ்டுட்கார்ட் நகரின் மையப்பகுதி 1944ம் ஆண்டு போரினால் ஏற்பட்ட சேதங்களுடன்

    இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் 1979ம் ஆண்டில் இந்த பங்கர் ஹோட்டல் பொது மக்களின் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாக இணைக்கப்பட்டு ஸ்டுட்கார்ட் மாநகராட்சியின் பொறுப்பின் கீழ் வந்தது. அதே காலகட்டத்திலும் பின்னரும் ஜெர்மனியில் பல இடங்களில் இப்படி நிலத்துக்கடியில் இயங்கிய சில மறைவிடங்கள் அரசாங்கத்தின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்படும் முயற்சிகள் நடைபெற்றன. அதன் அடிப்படையில் இந்த ஹோட்டல் மத்திய அமைச்சின் பொறுப்பில் சிலகாலங்கள் என இருந்தாலும் அதன் பின்னர் பராமரிப்பில் படிப்படியாக சில மாற்றங்கள் நிகழ, பின்னர் மீண்டும் ஸ்டுட்கார்ட் மாநகராட்சியின் கீழ் வந்தது.

    அதன் பின்னர் அருங்காட்சியக இரவு நாட்களில் பொது மக்கள் பார்வையிட வருடத்தில் ஒரு நாள் மட்டும் இந்த நிலத்தின் அடியில் இருக்கும் ஹோட்டல் மாநகராட்சியின் அனுமதி வழங்கப்பட்டு திறக்கப்படுகின்றது.

    அறைகள் வரிசையாக
    அறைகள் வரிசையாக

    உள்ளே நுழைந்தால் வரிசை வரிசையான அறைகள் இருப்பதை முதலில் காணலாம். ஒவ்வொரு அறையிலும் பல அடுக்குகளினாலான கட்டில்கள் போடப்பட்டிருக்கின்றன. ஒரு மூலையில் கேளிக்கை பகுதி என அமைத்து அங்கே ரேடியோ, அலங்காரப் பொருட்கள் என வைத்திருக்கின்ரனர். தொடர்ந்து நீளமான பாதையில் நடந்து சென்றால் ஓரிடத்தில் தனி சமையலறை பகுதி இருக்கின்றது.

    அறைகளில் இன்னமும் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் கட்டில்கள்
    அறைகளில் இன்னமும் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் கட்டில்கள்

    ஹோட்டலின் நிலை பிரத்தியேகமாக புதுப்பிக்கப்படாமல் எந்த மாறுபாடுகளும் இன்றி அப்படியே 1940களில் இருந்த வகையிலேயே இன்றளவும் பாதுகாக்கப்படுகின்றது.

    போரினால் ஏற்பட்ட சேதம் நிகழ்வதற்கு முன் இந்த ஹோட்டலின் காட்சி
    போரினால் ஏற்பட்ட சேதம் நிகழ்வதற்கு முன் இந்த ஹோட்டலின் காட்சி

    இந்த பங்கர் ஹோட்டல் தற்சமயம் மக்கள் புழக்கத்தில் இல்லாமையால் இது அருங்காட்சியகமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு ஸ்டுட்கார்ட் நகர அருங்காட்சியகப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றது. இங்கு நேரில் வந்து இந்த அருங்காட்சியகத்தைக் காண விரும்புபவர்கள் ஜெர்மனிக்கு மார்ச் மாதம் 13 – 30ம் தேதிக்குள் உங்கள் வருகை இருப்பதாக திட்டமிட வேண்டும். இந்த குறிப்பிட்ட வேளையில் அமைகின்ற ஒரு சனிக்கிழமையே ஒவ்வொரு ஆண்டும் ஸ்டுட்கார்ட் நகரின் அருங்காட்சியக நிகழ்வு நடைபெறும்.

    சரி.. நிலத்திற்கடியில் இந்தப் புழுக்கத்தில் எவ்வளவு நேரம் நாம் நிற்பது?

    வாருங்கள்.. உங்களை மற்றொரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கிறேன்.

    தொடரும்..

    சுபா

     

    Share
  • ஊழிற் பெருவலி யாதுள ?…..

    சி. ஜெயபாரதன், கனடா

     

    வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
    தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

    ஊழிற் பெருவலி யாவுள ? மற்றொன்று
    சூழினும் தான்முந் துறும்.

    இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
    தெள்ளியர் ஆதலும் வேறு.

    ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவின்றித்
    தாழா துஞற்று பவர்.

    திருவள்ளுவர்

    “ஓர் ஆப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஒரு பிரபஞ்சம் படைக்கப்பட வேண்டும்.”

    கார்ல் சேகன் (விண்வெளி உயிரியல் விஞ்ஞானி)

    வகுத்தான் வகுத்த வகையில்தான் கோடான கோடிப் படைப்புகள்

    அகிலத்தில் வடிக்கப் பட்டுள்ளன.

    கட்டுரை ஆசிரியர்

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=SBB2qHgZvLY

    [Physicist Dr. Michio Kaku on God]

    [Dr. Albert Einstein on God]

    இக்கட்டுரை மதிப்புக்குரிய நண்பர் மலர்மன்னன் சென்ற வாரம் (மார்ச் 6, 2011) திண்ணையில் எழுதிய “விதியை அறிதல்” என்னும் கட்டுரைக்கு மறுப்புரை இல்லை. ஊழ் விதியைப் பற்றி நான் விஞ்ஞான ரீதியாக அறிந்துள்ள சிந்தனையின் பிரதிபலிப்பே இக்கட்டுரையின் சாரம் ! இங்கு நான் ஊழ் என்று குறிப்பிடுவது மனிதனால் கட்டுப்படுத்த முடியாத ஓர் இயற்கைச் சக்தியைக் குறிப்பிடுகிறேன். பிரபஞ்சத்தைப் படைத்துக் கட்டுப்படுத்தும் படைப்பாளியே மனித இயக்கத்தையும், போக்கையும் வழி நடத்தி வருகிறது என்பதுதான் என் கோட்பாடு. அதைக் கடவுள் என்றாலும் ஒன்றுதான். இயற்கை என்றாலும் ஒன்றுதான். பிரபஞ்சப் படைப்பாளி என்றாலும் ஒன்றுதான். ஊழ் விதி என்பது விளைவை மட்டும் காட்டி மனிதர் காணாமல் மறைந்திருக்கும் ஓர் இயற்கை நியதி.

    ஓர் ஆப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஒரு பிரபஞ்சம் படைக்கப் பட வேண்டும் என்று விண்வெளி உயிரியல் விஞ்ஞானி கார்ல் சேகன் கூறுகிறார். அதாவது பிரபஞ்சம் உருவானதும், காலக்ஸி, பரிதி மண்டலங்கள், மற்றும் உயிரின, தாவர உட்பிறப்புப் தோற்றங்களும் ஒரு காரண-விளைவு நியதியைப் பின்பற்றிச், சுழலும் ஓர் தொடரியக் கத்தை முன்னிட்டு உண்டானவையே. இந்தப் பிரபஞ்சமும், பேரண்டங்களும், அவற்றில் உதித்த பயிரினமும், உயிரினமும் மந்திர சக்தியால் ஒரு சில நாட்களில் தோன்றியவை அல்ல. பிரபஞ்சப் படைப்பாளி பல யுகங்களாய்த் திட்டமிட்டுச் செய்து தோற்றங்களை மாற்றி மாற்றிச் செம்மைப் படுத்தி உருவாக்கியதுதான் நாம் வாழும் உலகம். பிரபஞ்சம் தோன்றி சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகள் கடந்து விட்டன வென்று கணிக்கப் பட்டுள்ளது. பூர்வீகத் தாதுக்களின் கதிரியக்க தேய்வின் அரை ஆயுளை வைத்துத்தான் அந்த எண்ணிக்கையைக் கணக்கிட்டி ருக்கிறார். மெய்யாக அது விஞ்ஞானிகளின் துல்லிய காலக் கணிப்பாகப் பலர் ஏற்றுக் கொண்டாலும், அந்தக் கணக்குக்கு மூல காரணமான தாது உண்டானது எந்த யுகத்தில் ? எவற்றிலிருந்து எப்படிச் சேர்ந்து அந்தத் தாது விளைந்தது ? அதன் மூலப் பொருட்கள் தோன்ற எத்தனை யுகங்கள் ஆயின போன்ற கேள்விகள் மேலும் எழுகின்றன. நமது கருத்தாடலுக்குப் பிரபஞ்சத்தின் வயது 13.7 பில்லியன் ஆண்டுகள் என்று வைத்துக் கொள்வோம். அதாவது படிப்படியாக, ஒன்றிலிருந்து இன்னொன்று பிறந்து, சிறிது சிறிதாய்ச் செம்மையாக்கிக் கடவுளே நமது காலவெளிப் பிரபஞ்சத்தைப் படைக்க 13.7 பில்லிய ஆண்டுகள் எடுத்திருக்கிறது. ஆயினும் பூரணம் அடையாத பூமியும் அதில் பூரணம் அடையாத மனிதப் பிறவிகள்தான் இதுவரைத் தோன்றியுள்ளன.

    பிரபஞ்சத்தை ஒரு பிரம்மாண்டமான நூலகமாக ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வியந்து நோக்குகிறார். அதன் விண்வெளியில் உள்ள கரும்பிண்டம், கருஞ்சக்தி, கருந்துளைகள், கோடான கோடி காலக்ஸி ஒளி மந்தைகள், பில்லியன் கணக்கான பரிதி மண்டலங்கள், அண்டக் கோள்கள், துணைக் கோள்கள், அவற்றைப் பிணைத்துள்ள ஈர்ப்பு விசைகள், விலக்கு விசைகள் அத்தனையும் நூலகத்தில் முன்னமே எழுதப் பட்டு சீராக, வகையாக அடுக்கப்பட்டுள்ளன ! அந்த நூல்களை யார் எழுதி வைத்தார், எப்போது எழுதி வைத்தார், ஏன் எழுதி வைத்தார், எப்படி எழுதி வைத்தார் எந்த விதிகளைக் கையாண்டார் என்பதை அறிந்து கொள்ளவே நான் முனைகிறேன் என்று மொழிகிறார் ஐன்ஸ்டைன்.

    பிரபஞ்சம் ஓர் உன்னத சக்தியான கடவுளால் படைக்கப் படவில்லை. அது தானாக உருவானது என்று விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறுவது முதலில் ஒரு விஞ்ஞான முடிவில்லை. அப்படி மேலாகச் சொல்லித் தப்பிக் கொள்வது ஒரு விஞ்ஞான மேதையின் இயலாமையைத்தான் குறிக்கிறது.

    பிரபஞ்சப் படைப்பாளி ஒரு மந்திரவாதியோ, மாஜிஸியனோ இல்லை. இரசாயனக் கதிர் ஏகமூலங்களின் (Radio Isotopes) அரை ஆயுள் தேய்வு நியதிப்படிப் பிரபஞ்சம் 13.7 பில்லியன் ஆண்டுக்கு முன்னே தோன்றியிருக்க வேண்டும் என்று பல்வேறு விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளார். அதாவது படைப்பாளியே இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியை உண்டாக்க 13.7 பில்லியன் ஆண்டுகள் எடுத்திருக்கிறது. இதுவரை விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ள பெரு வெடிப்பு நியதியின் (The Big Bang Theory) ஆரம்பமே ஓர் அனுமான ஊகிப்புதான். மெய்யாக இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று இதுவரை எந்த விஞ்ஞானியாலும் தர்க்கரீதியாக விளக்க முடியவில்லை. எல்லாம் மாறி, மாறிப்போகும் விஞ்ஞானத்தின் வெறும் அனுமான ஊகிப்புகள்தான். விஞ்ஞானம் பிரபஞ்ச ஆதி அந்தங்களை ஆராய முடியாது இடைப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு மட்டும் விளக்கம் அளிக்கிறது.

    காரண-விளைவு நியதியைத் (Cause & Effect Theory) தர்க்க ரீதியாக ஒப்புக் கொள்ளும் உலக விஞ்ஞானிகள், பிரபஞ்சம் தானாக உருவானது, தானாக இயங்குவது, தானாக மாறுவது என்று ஆதாரமின்றிக் கூறுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

    விஞ்ஞானிகள் இதுவரை உயிர் என்றால் என்ன என்று விஞ்ஞான விளக்கம் தர முடிய வில்லை. எந்த இரசாயன மூலகங்களோ, மூலக்கூறுகளோ உயிரை உண்டாக்குவதில்லை. ஆங்கிலத்தில் உயிர் என்பதற்கு ஒரு தனிச்சொல் கூடக் கிடையாது. உயிர், ஆத்மா இரண்டு மட்டுமே மனிதனுக்கும் படைப்பாளிக்கும் உள்ள இணைப்பைக் காட்டுபவை.

    இந்தப் பிரபஞ்சத்தின் உள்ளே இயங்கிவரும் காலக்ஸி ஒளிமந்தைகள், அவற்றில் உள்ள விண்மீண்கள், அண்டக் கோள்கள், கருந்துளைகள், கருஞ்சக்தி, கரும் பிண்டம், பூமியில் உள்ள பயிரினங்கள், உயிரினங்கள் அனைத்தும் ஒன்றிலிருந்து ஒன்றாய், அடுத்தடுத்துச் சங்கிலித் தொடர்பில் பிறந்தவை. அதாவது அவை யாவும் இயற்கை விதியான “காரண-விளைவு நியதியைப்” (Cause & Effect Theory) பின்பற்றித் தோன்றியவை. தற்போதைய நவீனக் கணினி மேற் பார்க்கும் மோட்டார் வாகனம் விருத்தியாகச் சுமார் 100 ஆண்டுகள் எடுத்துள்ளன. எலும்புக் கூடு போன்று ஹென்றி ஃபோர்டு செய்த முதல் கார் எத்தனை முறை மாற்றம் அடைந்து செம்மையாகி மாறி யுள்ளது ? ரைட் சகோதரர் முதன்முதல் செய்த சைக்கிள் உறுப்புகளில் உருவான வான ஊர்தி 100 ஆண்டுகளில் சந்திரனுக்குச் செல்லும் ராக்கெட்டாய், சூரிய மண்டலத்தைத் தாண்டிய முதல் வாயேஜர் விண்கப்பலாய் முன்னேறியுள்ளது. கணினி மின்கருவி எத்தனை ஆண்டுகள், எத்தனை முறைகள் சீராகி நவீன வல்லமை மிக்க கணினியாக உருவாகி உள்ளது ? சார்லஸ் டார்வின் அறிவித்த மனித உயிரின விருத்திக் கோட்பாடு இயற்கை முறையில் எத்தனை தரம் உருமாறிச் செயல் மாறிச் சீராகித் தற்போதைய ஆறறிவு படைத்த மனிதனாய் உலவி வருகிறது ?

    உலகில் நிகழும் வினைகள் அனைத்தும் இரண்டு முறைப்பாட்டில் நேர்கின்றன. ஒன்று இயற்கை நிகழ்ச்சி : இரவு பகல் சுழற்சி. பருவக் காலச் சுழற்சி, இடி மழை வெள்ளம், புயல், சுனாமி, பூகம்பம், எரிமலை போன்றவை யுகயுகமாய் நேரும் இயற்கையின் திருவிளை யாடல்கள் ! அதே சமயம் முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், ஜப்பான் அணுகுண்டு வீச்சுகள், ஆறு மில்லியன் யூதரைக் கொன்ற கோலோஹாஸ்ட் கொடூரம், ஈராக் படை யெடுப்பு, சமீபத்தில் நிகழ்ந்த ஈழப் போர் ஆகிய அனைத்தும் ஆக்கிரமிப்பு மனிதரால் உண்டாக்கப் பட்டவை. அதாவது இயற்கை செய்வதை மனிதர் செய்ய முடியாது. மனிதர் செய்வதில் இயற்கை ஈடுபடாது, தலையிடாது, தடுக்கவும் செய்யாது ! ஒரு சிலர் ஹிட்லராய் உருவா கிறார். ஒரு சிலர் அன்னை தெரேஸாவாகவும், ஆல்பர்ட் சுவைட்ஸராகவும் உருவாகிறார். அவற்றுக்குக் காரணம் என்ன ? சில மோட்டர் வாகனங்கள் மெதுவாகத்தான் ஓடுகின்றன ! சில வாகனஙள் வேகமாகச் செல்கின்றன. சில வாகனங்கள் அதி வேகத்தில் பந்தயக் கார்களாய்ப் போட்டி இடுகின்றன ! காரணம் அந்த மாதிரி வாகனங்கள் அத்தகைய பணிக்காகத் தயாரிக்கப் படுகின்றன. அதே காரணம் தான் பல்வேறு மனிதப் படைப்புக்கும் ஒத்து வருகிறது.

    படைப்புக்கு ஓர் உதாரண மாடல் : கருப்பையில் உருவாகும் சிசுவுக்குத் தாய் காரணமாகிறாள். பிறந்த பிறகே சிசு தானாக விருத்தி அடைகிறது. அதுபோல் தானாக உருவாகும் பிரபஞ்சம் முதலில் ஒரு படைப்பாளியின் கைத்திறனால் தோன்றி உதயமானது.

    மனித இயக்கத்தை ஓரளவு Y = MX + C (M என்பது மனிதனின் தனித்துவம்) (C என்பது மனிதனின் நிலைத்துவம்) (Y & X கால/வயது மாறுபாடுகள்) என்னும் ஓர் எளியச் சமன்பாட்டில் காட்டலாம். ஒரு சந்தர்ப்பத்தில் மனிதனின் இயக்கம் அவனது அப்போதுள்ள தனித்துவ & மனித நிலைப் பாடுகளால் நிர்ணயம் ஆகிறது. ஒரு மனிதன் 707 ஜெட் விமானத்தில் பயணம் செய்யும் போது அவன் விதி விமானியின் கையிலும், விமானத்தின் இயக்கத்திலும் சார்ந்துள்ளது. விமானத்தில் பழுது ஏற்பட்டாலோ அல்லது விமானி தவறு செய்தாலோ விமானப் போக்கு மாறிப் பயணிகள் பூமியின் ஈர்ப்பாற்றலுக்குப் பலியாவார். கடலருகில் மனிதன் உலாவச் செல்லும் போது அவன் விதி சுனாமி போன்ற எதிர்பாராத இயற்கைத் தாக்குதலில் சிக்கிக் கொள்ள ஏதுவாகிறது, இடி மின்னலில் நடக்கும் போது மின்னலின் தாக்குதலில் மனிதன் அடிபட்டு விதி மாறி உடனே உயிர் போகலாம். அதாவது பூமியில் வாழும் மனிதன் சதா காலமும் பூகோள விதியின் கைப் பொம்மையே தவிர பூரண விடுதலைப் பிறவி இல்லை.

    மனிதன் குறிப்பிட்ட ஊழ்விதி வேலிக்குள் தனித்தியங்கும் ஓர் உயிரியல் சுய யந்திரம் ! ஒவ்வொரு மனிதனுக்கும் இடப்பட்டுள்ள தனித்துவத்துக்கு அவனது ஊழ்விதியே காரணம் ! தாய் தந்தையரின் வெறும் டியென்ஏ (DNA) மட்டும் சேயின் தனித்துவத்துக்குக் காரணம் கூற இயலாது. ஒரு தாயிக்குப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளின் டியென்ஏ 100% ஒருமையில் இருப்பதில்லை. அவையும் ஓரளவு வெவ்வேறாகத் தனித்துவம் கொண்டுள்ளன. ஒரு சில கணினிகளை இன்னும் இயக்கி வருவது விண்டோஸ் 98 இயக்க ஏற்பாடு (Operating System), அல்லது விண்டோஸ் 2000, அல்லது விண்டோஸ் NT, தற்போது விண்டோஸ் XP, விண்டோஸ் Vista, விண்டோஸ் 7 இயக்கு ஏற்பாடுகளாகக் கணினியில் இடப்பட்டுள்ளன. மனிதனின் அனுதினப் பழக்கமும், தனித்துவ இயக்கமும் அவனது மூளை நினைவுக் களஞ்சியத்தில் (Brain Memory Units) ஆரம்பத்திலோ அல்லது அதற்குப் பிறகோ நிரப்பப்பட்டுள்ள நிகழ்ச்சிகளைப் பொருத்தவை. கணினி தினம் எழுப்பப் படுவது போல் காலையில் மனிதன் விழிக்கும் போது அவனை மீண்டும் சுய இயக்க மனிதனாய் ஆக்குவது அவனது நினைவுக் களஞ்சிய நிரப்புகளே ! நினைவுக் களஞ்சியத்தில் நினைவுகள் அழிந்து போனால் மனிதன் தான் யார் என்பதே மறந்து போய் மயக்க நிலைக்கு (Coma) வந்து விடுகிறது.

    மனிதன் பிறக்கும் போதே அவனது தலையில் “கணினித் தாய்மைப் பீடம் (Computer Mother Board), மூளை இயக்கி (CPU -Central Processing Unit) நினைவுத் தகுதி (Memory Capacity), இயக்க ஏற்பாடு (Operating System Like Windows XP, Vista or Window : 7) என்ன வென்று இயற்கை அல்லது ஊழ் விதி தேர்ந்தெடுத்துப் பதிவாக்கி விடுகிறது என்பது என் கருத்து. பிறந்த பிறகு மனிதன் அவற்றை ஓரளவு மேம்பாடு (Upgrade) செய்து கொள்ள அவனுக்குத் திறமை அளிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் மனிதனால் தனக்குப் பிறவியிலேயே இடப்பட்டுள்ள தாய்மைப் பீடம், மூளை இயக்கி, நினைவுக் களஞ்சியத்தைப் (Mother Board, CPU, Memory Units) பின்னால் அவனாலோ அல்லது எவனாலோ மாற்ற இயலாது ! இயக்க ஏற்பாடு (Operating System) மாறலாம் ! ஆதலால் மனிதன் ஊழ் விதியின் கைப்பிள்ளைதான் ! ஊழ்விதியின் தீராத ஒரு விளையாட்டுப் பிள்ளைதான்.

    கடவுளை அதன் படைப்புகளில் ஒன்றான புவி மனிதன் கண்ணால் காண முடியாது.

    எப்படி அதை விளக்குவது ?

    வயிற்றில் தொப்புள் கொடியுடன் பின்னி வளரும் குட்டி யானை தன் தாயைக் காண முடியாது. வயிற்றிலிருந்து வெளிவந்த பின்னே குட்டி தாய் யானையைக் காண்கிறது. ஆதலால் பிரபஞ்சத்தில் அடைபட்டுப் போன மனிதன் இயற்கையின் தொப்புள் கொடி இணைப்பில் வாழ்கிறான்; மாள்கிறான்.

    அதுபோல் மனிதன் பிரபஞ்சப் படைப்பாளியைக் காண வேண்டு மென்றால் இயற்கையின் தொப்புள் கொடி அறுத்து பிரபஞ்சத்தை விட்டு வெளியேற வேண்டும்.

    கடவுளைப் பற்றிச் சொல்லவேண்டுமானால் அதன் படைப்புகள் மூலந்தான் நாம் விளக்க முடியும்.

    1. தெரிந்தவற்றை வைத்து தெரியாதவற்றை விளக்குவோம்.

    2. தெரியாவற்றை யூகித்து தெரிந்தவற்றை மேம்படுத்து வோம்.

    இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
    தெள்ளியர் ஆதலும் வேறு.

    இருவேறு உலகம் என்பவை ஆன்மீக உலகம், உலோகாயுத உலகம். சித்தாந்த ஞான உலகத்தின் இயற்கை விதிகள் வேறு. பௌதீக-ரசாயன உலகத்தின் இயற்கை நியதிகள் வேறு. திரு என்பது உலோகாயுதச் சொத்துக்கள். தெள்ளியர் என்பது ஆன்மீக ஞானிகள்.

    உயிர் என்பது என்ன, உயிரினத்தை இயக்கும் ஆத்மா என்பது என்ன வென்று விஞ்ஞானம் இதுவரை விளக்க முடிய வில்லை. உயிர் என்பது எவ்வித இரசாயன மூலக்கூறுகளாலும் ஆக்கப்பட்ட தில்லை என்பது என் கருத்து. ஆத்மா ஓர் இயக்க சக்தி. ஆத்மா எந்த வாகனத்தில் (Car, Rail, Ship, Plane, Rocket or Man, Woman or Animals) நுழைகிறதோ அந்த வாகனத்தின் சாதனங்கள் ஆத்மாவின் இயக்க முறைக்கு வரையறையும், எல்லையும் வகுக்கிறது. ஊர்ந்து செல்லும் இலைப்புழு எப்படிப் பறந்து செல்லும் பட்டாம்பூச்சியாய் மாறிச் செல்கிறது ? வகுத்தான் வகுத்த விதி முறைப்படி நிகழும் ஒரு காட்சி இது. இப்படி செய்வது எது ? இது ஏன் நேர்கிறது ? இதுபோல் முட்டைக்குள் உருவாகும் குஞ்சுக்கு உயிர் எப்படி நுழைகிறது ? சிசு பிறக்கும் போது தாய்க் கருவில் உயிர் அதற்கு எப்படி நுழைகிறது ? மனிதன் இறந்த பிறகு போது உயிர் எங்கே போகிறது ?

    300 பேர் அமர்ந்து பறக்கும் ஆயிரக் கணக்கான ஜெட் விமானங்களைப் படைத்த மனிதனால் ஒரு பட்டுப் பூச்சியை, மினிமினியை உண்டாக்க முடியுமா ?

    மனிதனால் பூமியின் ஈர்ப்புச் சக்தியைக் காணமுடியுமா ? வகுத்தான் வகுத்த வகையில்தான் கோடான கோடி அகிலத்தில் வடிக்கப் பட்டுள்ளன.

    குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பது மெய்யானால், ஏனிப்போது அப்படிப் பிறப்ப தில்லை ? நிகழ்வதில்லை ? மனிதக் குரங்கு எப்படி, எப்போது ஆறறிவு படைத்த மனிதப் பிறவியாய் மாறியது ?

    நம் கண்முன் ஊர்ந்திடும் இலைப்புழு பறந்திடும் பட்டாம் பூச்சியாய் ஏன், எப்படி மாறுகிறது ?

    உயிர் என்பது என்ன, உயிரினத்தை இயக்கும் ஆத்மா என்பது என்ன ?
    இந்த வினாக்களுக்கு விடை எவருக்கும் தெரியாமல் இவை இன்னும் மர்மமாகவும் புதிராகவும் இருந்து வருகின்றன.

    +++++++++++++

    தகவல்:

    1. http://ogcwebb.hubpages.com/hub/WHAT-IS-DESTINY-SHOULD-WE-BELIEVE-IN-FATE-ARE-OUR-DOINGS-LEADING-US-TO-OUR-DESTINY-OR-WHAT-WE-DO-IS-AS-PER-OUR_1

    +++++++++++++

    S. Jayabarathan (jayabarat@tnt21.com) மே 21, 2012 [R-3]

    Share
  • காதல் நாற்பது (3)

     elizabeth-browning1

     

    எலிஸபெத் பிரௌனிங்

    (1806-1861)

    காதல் நாற்பது (3)

    மாறானவர் நாமிருவரும் !

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    அந்தோ இளவேந்து நெஞ்சமே !

    வேறானவர் நாமிருவரும் !

    மாறானவர்,

    விதிகள், பழக்க வழக்கம்

    ஒவ்வாதவை!

    இறக்கை ஒன்று மேல் ஒன்று

    உரசிக் கொண்டு

    செல்கையில்

    தனியே கண்காணிக்கும்

    தேவதைகளும்

    விந்தையாய் நோக்கும்

    நம்மிருவரை !

    பகட்டானச் சமூக விழாக்களில்

    பங்கெடுக்க

    அரசிகளும் விளிப்பர் உன்னை

    விருந்தினராக !

    ஆயிரம் சுடர் விழிகள்

    ஆங்கே எடைபோடும் உன்னை !

    என்னவன் ஆக்கா

    உன்னை,

    என் கண்ணீர்த் துளிகள்,

    உன்னைப் போல்

    இன்னிசைக்கு முதல்வனாய் நடிக்க நான்

    முன்வந்த போதும் !

    காரிருளில் பாடித் திரியும்

    ஓர் எளிய

    பாடகி நான் !

    சைப்பிரஸ் மரத்தின் மீது

    சாய்ந்த வாறு

    நிற்கிறேன்

    களைத்துப் போய் !

    என்னை நோக்கி

    ஜன்னல் விளக்குகள் மூலம்

    பார்த்து நீ

    பண்ணுவ தென்ன ?

    புனித எண்ணையை

    உன்தலை மீதும், என்தலை மீதும்,

    பனித்துளி மீதும்

    ஊற்றிய பின்

    ஆங்கே மூன்றும்

    ஒப்புதல் புரியும் போது

    மரணம்தான் தோண்ட வேண்டும்

    மட்டச் சமநிலைக்கு !

     

    ********************

    Poem -3

     

    Sonnets from The Portuguese

     

    By: Elizabeth Browing

    Unlike are we, unlike, O princely Heart!

    Unlike our uses and our destinies.

    Our ministering two angels look surprise

    On one another, as they strike athwart

    Their wings in passing. Thou, bethink thee, art

    A guest for queens to social pageantries,

    With gages from a hundred brighter eyes

    Than tears even can make mine, to play thy part

    Of chief musician. What hast thou to do

    With looking from the lattice-lights at me,

    A poor, tired, wandering singer, singing through

    The dark, and leaning up a cypress tree

    The chrism is on thine head,–on mine, the dew,–

    And Death must dig the level where these agree.

     

    **********

    Share
  • கைவிளக்கை உருவாக்கிய காரிகை

    தேமொழி

    கனடா நாட்டின் ‘பிரிட்டிஷ் கொலம்பியா’ பகுதியில் உள்ள ‘விக்டோரியா’ என்ற இடத்தில வசிப்பவர் 16 வயதான ‘ஆன் மாக்கசின்ஸ்கி’ (Ann Makosinski from Victoria, British Columbia, Canada) என்ற பள்ளிச் சிறுமி.

    இந்த பதின்மவயது பள்ளி மாணவி செய்த சாதனை, மின்கலம் ஏதுமின்றி ஒளிதரும் கைவிளக்கு (LED torch light/flashlight without batteries) ஒன்றினை உருவாக்கியது. இவரது கண்டுபிடிப்பான கைவிளக்கு ஒளிர்வதற்கு மின்சக்தி அளிக்க மின்கலம் தேவையில்லை என்பதுடன், இரவு பகல் எந்நேரமும் எங்கும் ஒளிரக்டியது.

    இவரது தாய் பூர்வீகத்தில் ஃபிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர், தந்தை கனடா நாட்டைச் சேர்ந்தவர். ஒரு முறை பள்ளி விடுமுறைக்கு தனது தாயின் நாடான ஃபிலிப்பைன்சுக்குச் சென்றார் மாணவி ஆன். அங்கு அவருக்கு விளையாடப் பல நண்பர்கள் கிடைத்தார்கள். நாடு திரும்பிய பிறகு ஒரு முறை அவரைத் தொடர்பு கொண்ட அவரது ஃபிலிப்பைன்ஸ்தோழி தான் தேர்வில் தோல்வியடைந்து விட்டதாகவும், மின்சாரம் இல்லாததால் விளக்கின்றிப் படிக்க முடியாது போனதே அதற்குக் காரணம் என்றும் தெரிவித்தார்.

    சிறுவயதில் இருந்தே அறிவியலில் மிகவும் ஆர்வம் கொண்டவர் ஆன். அத்துடன் எதையாவது உருவாக்குவதிலும் வல்லமை கொண்டும் விளங்கினார். தனது தோழி போன்று மின்சார வசதியற்ற இடங்களில் வாழும் பள்ளி மாணவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் தோன்றவே உடனே செயலில் இறங்கினார்.

    பொதுவாகவே மின்கலம் இன்றி மின்சாரத்தை சேகரிக்க சோலார் செல் என்றழைப்படும் சூரியமின்கலங்கள் பயன்படுத்தப்படும். அவ்வாறின்றி பயன்படுத்துபவரின் உடல்வெப்பம் தரும் மின்சாரம் (thermoelectric) கொண்டு விளக்கை ஒளிரச் செய்யவது அவருக்கு சிறந்த வழியாகத் தோன்றியது.

    இவரது முயற்சியைக் கேள்விப்பட்ட இவரது பள்ளியின் அறிவியல் ஆசிரியை,கூகிள் இளைஞர்களை ஊக்குவிக்க நடத்து அறிவியல் போட்டியில் இவரது கண்டுபிடிப்பை சமர்பித்து பங்கு பெறும்படி ஆலோசனை வழங்கினார். ஆனும் அதன்படியே செய்தார். இவர் பங்கேற்ற 15 – 16 வயதினர்கானப் பிரிவில் இவரது கண்டுபிடுப்பு தேர்ந்தெடுக்கப்பட்டத்தால் 2013 ஆண்டிற்கான பரிசும் பெற்றார்.

    இவர் உருவாக்கிய கைவிளக்கின் பாகங்களாக இருப்பவை நான்கே நான்கு மின்னணு பாகங்களும், அத்துடன் ஓர் அலுமினியக் குழலும், அதனை உள்ளடக்கி வைத்த பி.வி.சி. பிளாஸ்டிக் குழல் ஆகியவை மட்டுமே. மிகக் குறைந்த விலையில் தயாரிக்கக் கூடியதும், எளிமையானக்  கட்டமைப்பும், அத்துடன் இந்த கைவிளக்கு பரவலான வகையில் அளிக்கக் கூடிய பயன்தரும் தன்மையே இவரது கண்டுபிடிப்புக்குப்  பரிசினைத் தேடித் தந்துள்ளது.

    Thermoelectric Flashlight

    Peltier Tilesஇவரது விளக்கினை கையில் பிடித்துக் கொண்டால் நம் உடலில் உள்ள வெப்பம், விளக்கில் பொருத்தப்பட்டுள்ள ‘பெல்டியர் ஓடுகள்’ (Peltier tiles) கொண்டு சேகரிக்கப்படும். கையில் வெளிப்படும் வெப்பத்திற்கும் சுற்றுபுறக் காற்றில் உள்ள வெப்பத்திற்கும் இடையில் உள்ள வேறுபாட்டினால் பெல்டியர் ஓடுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு, சேகரிக்கப்பட்டு அவை விளக்கை ஒளிர பயன்படுத்தப்படுகிறது.

    இவ்வாறு வெப்பமின்சக்தி உருவாக்கும் அறிவியல் கோட்பாடு ‘பெல்டியர் விளைவு’ (Peltier effect) என்று அழைக்கப்படும். சுருக்கமாக, இரு வேறுபட்ட மின்கடத்திகளின்  இடையில் வெப்பம் பாய்ந்து அதன் மூலம் மின்சாரம் தோன்றுவது ‘பெல்டியர் விளைவு’ ஆகும். சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்த வெப்பமின்சக்தியை  உருவாக்கும் பெல்டியர் விளைவு கண்டுபிடிக்கப்பட்டது. இரு பெல்டியர் ஓடுகள் இடையில் உள்ள வெப்பநிலை வேறுபாடுகள் மின்சாரத்தை உருவாக்க உதவுகிறது. பெட்லியர் ஓடுகள் என்பவை மேலும் கீழுமாக இரு வனையோடுகள் (ceramic tiles) கொண்டது. இவற்றினிடையே குறைமின்கடத்திகள் (semiconductors) பொருத்தப்படிருக்கும். இரு வேறுபட்ட மின்கடத்திகளில் ஒன்று வெப்பத்தை உள்ளே உறிஞ்சும் பொழுதும், மற்றொன்று வெப்பத்தை வெளிவிடும்போழுதும், அந்த வெப்பம் குறைகடத்திகள் வழியாக ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு செல்லும் பொழுது வெப்ப மின்சக்தி உருவாகிறது.

    பெல்டியர் விளைவு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டதே  சிறந்த வழிமுறை எனக் கருதி, அதனைப் பயன்படுத்தி கைவிளக்கு ஒன்றினை உருவாக்க விரும்பினார் ஆன். இதற்காக, மனித உடல் வெளிவிடும் வெப்பத்தின் அளவு எவ்வளவு, இந்த வெப்பம் நாம் பொதுவாக வசிக்கும் சூழலில் ஒரு கைவிளக்கு ஒன்றினை ஒளிரச் செய்ய எந்த அளவு மின்சாரத்தை உருவாக்க வேண்டு, அந்த அளவு மின்சாரத்தை உருவாக்க வேண்டுமானால் அதற்கு எத்தனை பெல்டியர் ஓடுகள் தேவைப்படும் என்று கணக்கிட்டார். விளக்கினை உருவாக்க நான்கு பெல்டியர் ஓடுகள் தேவை என அறிந்து, ஒரு அலுமினியம் குழாயில் ஒரு பக்கத்தில் இந்த பெல்டியர் ஓடுகளை அமைத்து விளக்குடன் இணைத்தார். பெல்டியர் ஓடுகள் அமைந்த குழாயின் பகுதியை கையில் பிடிக்கும்பொழுது, கையில் உள்ள பெப்பம் பெல்டியர் ஓடுகள் வழி ஊடுருவி, குறைந்த வெப்பம் உள்ள அலுமினியக் குழாயினுள் உள்ள காற்றினை நோக்கி குறைமின்கடத்திகள் மூலம் கடத்தப்படும் பொழுது மின்சக்தி உருவாகி கைவிளக்கை எரிய வைக்கிறது. இந்த வகை வெப்பமின்சக்தி உருவாக இரு முனைகளுக்கும் இடையில், அதாவது கைக்குக்ம் சூழ்நிலையில் உள்ள காற்றுக்கும் இடையில் குறைந்த அளவு ஐந்து பாகை வெப்ப வேறுபாடே போதுமானதாகும்.

    பலருக்கு பயனளிக்கும் நல்லதோர் கண்டுபிடிப்பினை உருவாக்க வயது ஒரு தடையல்ல, ஆர்வமும் முயற்சியும் போதுமென்று நிரூபித்துள்ளார் இப்பள்ளி மாணவி. இவருடைய அறிவியல் ஆர்வத்திற்குப்  பாராட்டுகள்.

      தகவல் மற்றும் படங்கள் சேகரித்த தளங்கள்: This Could Be Big: Teen Invents Flashlight That Could Change The World – http://news.yahoo.com/blogs/this-could-be-big-abc-news/teen-invents-flashlight-could-change-world-182121097.html?vp=1 Meet This Year’s Google Science Fair Finalists – http://www.businessinsider.com/2013-google-science-fair-finalists-2013-6?op=1#ixzz2uNuGEZgU Student’s flashlight works by body heat, not batteries – http://phys.org/news/2013-07-student-flashlight-body-batteries.html Peltier effect: http://en.wikipedia.org/wiki/Thermoelectric_effect Peltier tiles: http://www.tellurex.com/technology/peltier-faq.php

    Share
  • கன்னி நதியோரம் மின்னி விளையாடும்..- கவிஞர் வாலியின் கைவண்ணம்!

    கவிஞர் காவிரி மைந்தன்

    நீர்க்குமிழி என்னும் திரைப்படத்தை யாரும் மறக்கத்தான் முடியுமா? நகைச்சுவைத்திலகம் நாகேஷ் தான் ஒரு நவசர நாயகன் என உறுதிசெய்த படமாகும். முதல் பாதியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்து.. பிற்பாதியில் உள்ளம்கலங்கி அழவைத்துவிடுகிற அவரது நடிப்பை இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் பெற்றுத்தந்தார் என்றே சொல்ல வேண்டும். ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்கிற பாடலையும் இந்தப் படம் தாங்கி வந்தது.

    தான் சிகிச்சை பெறும் மருத்துவமனையின் உரிமையாளரின் புதல்வி வெளிநாடு செல்லும் முன் நடக்கின்ற ஒரு இனிய விழாவில் .. ஆடலும் பாடலும் உற்சாகம் கரைபுரள இடம்பெறுகிறது. உடல்நலிவுற்றிருக்கும் நாகேஷ் இத்தனை ஆட்டம் ஆடும்போதும் அவரைக் கண்காணிக்கும் மருத்துவர் மனவேதனையுடன் அக்காட்சியைக் காண்பதாக திரையோட்டம்!

    மேடையில் நாட்டியம் ஒரு ஆடவன் ஆடும்போது அசந்துபோக வைத்தவர்கள் ஒரு சிலரே.. அவ்வரிசையில் நாகேஷ் முன்னணியில்! இணை சேர்ந்து ராஜஸ்ரீ பாடவும் ஆடவும் வருகிறார். கன்னிநதியோரம்.. மின்னி விளையாடும்.. பாடல்!

    கவிஞர் வாலியின் கைவண்ணம்! இசையமைத்திருக்கிறார்.. வி.குமார்.. அர்த்தபுஷ்டியான வார்த்தைகள் அலங்காரம் செய்துகொண்டு வருகின்றன..

    முந்தானை முகவுரையோ.. முக்கனிக்கு ஒன்று குறையோ
    செந்தேனில் தெளிவுரையோ.. சேர்ந்ததும் முடிவுரையோ
    பொன்மேனி ஊஞ்சல் வேண்டுமோ.. பொழுதெல்லாம் ஆடவேண்டுமோ
    பாலாற்றில் நீந்தவேண்டுமோ.. பசியாறி தூங்க வேண்டுமோ..

    எண்ணிப் பார்த்தால் எத்தனை சொர்க்கம் என்கிற விதத்தில் ரசிக்கப்பட்ட பாடல்! காதல் பாடலாய் இருந்தாலும் கவிஞரின் பேனா நகரும்போது கதையின் முடிவை அவரால் தவிர்க்க இயலாமல்.. முடிவுரையோ.. தூங்க வேண்டுமோ என்றுதானே எழுதிவைத்திருக்கிறார்..

    கன்னி நதியோரம் மின்னி விளையாடும்
    உன்னழகு மேனி என்ன கதை கூறும்
    வண்ண விழிமேடை வந்த இளம்பேடை
    சின்ன இடையோ.. ஜோ..ஜோ.. சேர்ந்து இசை பாடும்!

    கன்னங்கள் கோடி பெறுமோ.. கைகளில் ஆடிவருமோ..
    எண்ணங்கள் பொங்கி வருமோ.. இன்பத்தில் பங்கு தருமோ
    தாளாமல் ஓடிவருமோ.. தழுவாமல் ஆசை தீருமோ..
    நாணத்தை பெண்மை விடுமோ.. நானின்னும் சொல்ல வேண்டுமோ..

    முந்தானை முகவுரையோ.. முக்கனிக்கு ஒன்று குறையோ
    செந்தேனில் தெளிவுரையோ.. சேர்ந்ததும் முடிவுரையோ
    பொன்மேனி ஊஞ்சல் வேண்டுமோ.. பொழுதெல்லாம் ஆடவேண்டுமோ
    பாலாற்றில் நீந்தவேண்டுமோ.. பசியாறி தூங்க வேண்டுமோ..

    நீர்க்குமிழி திரைப்படத்திற்காக டி.எம்.எஸ். எல்.ஆர்.ஈஸ்வரி..

    நாகேஷ் திரையில்.. ராஜஸ்ரீயுடன்..

    Kanni nathiyoram-Neerkumizhi

    Share
  • பூதாதிகாசம் ஓரங்க நாடகம்

    இன்னம்பூரான்

    unnamed

    இடம்: கரும்புலியூர் ஆஸ்தானம்.
    நேரம்: சாயும் காலம்.
    பொருள்: அதுவும் இதுவும்.
    ஏவல்: ஜரிகா புத்ரன் என்ற ….
    பாத்திரங்கள்: பூதாதிகாசத்தனார் (தலை மாந்தர்)
    மாத்ருதீபனார் ( அவருடைய மைத்துனர்)
    ஏழுமலை ( எடுபிடி)
    அபய குசலாம்பிகை ( தலைவி)

    (திரை விலகுகிறது)

    வீட்டு முகப்பு: அபயகுசலாம்பிகை விலாசம். ஹால். சோஃபா இத்யாதி.
    ஏழுமலை தூசி தட்டுகிறான். பூதாதிகாசத்தனார் சுருட்டுப் பிடிக்கிறார். சாம்பல் ரத்னகம்பளத்தில் விழுகிறது. மாத்ருதீபனார் மோட்டுவளையை பார்த்துக்கொண்டபடியே அளவளாவுகிறார். அபய குசலாம்பிகை பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்டு, அதை பத்து மடங்கு அதிகப்படுத்துகிறான், மாடிப்படியிலிருந்து குதித்து ஆரவாரம் செய்து கொண்டு இறங்கின ஜரிகா புத்ரன். பூதாதிகாசத்தனாரின் சுருட்டை பிடுங்கி ஊதுகிறான். புகை மண்டலம். அவன் தான் ரெஸிடெண்ட் குட்டிச்சாத்தான்.

    அ (அபய குசாலாம்பிகை): [தனி மொழி] ‘எங்க அப்பா மஞ்சக்காணியாக கொடுத்த மாளிகை இது. ரத்னகம்பளத்தில் சாம்பல் போடுகிறார். ஒரு பிடி பிடிக்கிறேன் பாரு.’
    [கட கடா என்று பாத்திரம் உருளல். குமுறலோ! கூப்பாடோ ! யான் அறியேன். ]

    அ: (குரல் எழுப்பி.) ஏழுமலை. ஐயாவை ஒரு நிமிடம் உள்ளே வரச்சொல்லு. காப்பித்தண்ணி ஆறிப்போவுது.

    ஏ: அவரு எங்கே வரப்போறாரு. போத்தல் கேட்டாக. மச்சின பிள்ளையும் ஒரு கோப்பை வேணும்னாக.
    ஜரிகா புத்ரன் மெனக்கட்டு வந்து காப்பியை குடித்து விட்டு, எஜமானியம்மாவின் மூக்குக்கண்ணாடியை பிடுங்கிக்கொண்டு ஓடுகிறான். அமைதிக்குரல் கொடுத்து, ஏழுமலை அதை மீட்டு பாகசாலையில் கொடுக்கும் போது ஜரிகா புத்ரன் இருந்த விஸ்கியை குடித்து விடுகிறான்.
    அவனை தவிர, எல்லாரும் எரிச்சலோடு. அவனோ நிச்சலத்தத்துவன். மாத்ருதீபனாரோ சஞ்சலபுத்தி மனிதன். பூதாதிகாசத்தனாரோ ‘லொக்கு’ லொக்கு’ இருமல். காசநோய் உச்சக்கட்டத்தில். அவர் செத்தால் சொத்து நம் கையில் என்கிறான், ‘சூழ்ச்சி’ மாத்ருதீபம். அவனை அடக்கி வைத்திருப்பது, ஏழுமலை. அவன் தான் சீட்டாட அவனுக்கு கந்து வட்டியில் கடன் கொடுப்பவன். ஏகபுத்திரியாக ஏகபோகமாக வளர்ந்த அபய குசாலாம்பிகைக்கு ஏமாற்றம் தான் மிச்சம். குஞ்சு குளவான் இல்லை. சொத்து என்னமோ கரைந்து வருகிறது. அப்பன் வீட்டு சொத்து. ஆயிரம் பொய் சொல்லில்லே அவுக (அதான் பூதாதிகாசத்தனாருடைய அப்பன்காரரு) பொண்ணெடுத்தார். பையனுக்கு வேலை பர்மாவுலே இன்னாரு. அப்றம் தான் தெரிஞ்சது, அவரு பர்மா பஜாரை சொல்றாருன்னு. அதுக்குள்ளே விரைசா தாலிக்கட்டிப்பிட்டானே.
    இனி நாடக மேடை:

    மா (மாத்ருதீபனார்) : மாப்பிள்ளை சார்! இந்த குட்டிச்சாத்தானை கொன்னுப்போடணும். ஏழுமலை! அந்த துப்பாக்கி எடுத்துக்கிட்டு வா.

    ஏ: துப்பாக்கிலெ ரவை இல்லிங்கலே. பரவாயில்லையா? ஜ.பு. அதை எடுத்து குளத்திலெ போட்டுட்டான்.

    பூ (பூதாதிகாசத்தனார்): கொஞ்சம் மெதுவா பேசு மாத்ரு. உங்க அக்கா காதிலெ விளுந்தா ரணகளம் ஆயிடும். ஜ.பு. அவளுக்குத் தத்துப்பிள்ளை மாதிரி. அந்த மலையாளத்து மாந்திரீகனிடம் மந்திரிச்சுல்லெ உங்கப்பன் அவனை துணைக்கு அனுப்பினாரு.

    மா: உங்கப்பன் அது, இதுன்னு பேசினா நான் பல்லை ஒடைப்பேன். உங்கப்பன் யோக்யதை தெரியாதா என்ன? அக்காவோட மஞ்சக்காணி பங்களாவுக்கு போலி பத்திரம் எளுதி வச்சவன் தானே. அந்த கணக்குப்புள்ளே அவரு கிட்டேயும் காசு வாங்கினான். எங்கிட்டேயும் வாங்கில்லெ, சொல்லிப்போட்டான். நாங்க சுதாரிச்சுக்கிணோம். அக்கா! கொஞ்சம் வாயேன்…

    பூ: உனக்கு ஆயிரம் புண்ணியம் மாத்ரு. அவளை கிளப்பாதே. நான் கிளப்புக்குக் கூட்டிக்கிணு போய் உனக்கு தண்ணி ஊத்ரேன்.

    அ: என்ன திட்டம் போட்றீக, மாப்பிளையும், மச்சானும். வக்கத்த புருஷன். கடங்கார தம்பி. எங்க அப்பா மட்டும் இருந்தா, உங்களை கட்டி வச்சு அடிச்சிருப்பார்.

    பூ: (தனி மொழி): இங்க மட்டும் என்ன வாழ்ந்திருச்சாம். ஆட்டிப்படைக்கிறா.

    ஏ: அம்மா! ஐயா வண்டிக்கட்ட சொல்றாரு. எனக்கு கொஞ்சம் காப்பி தண்ணி ஊத்தம்மா. ஓடிட்றேன்.

    அ: ஹாலில் வந்து சத்தம் போடுகிறாள்: ‘என்ன நினச்சுக்கிட்டு வண்டி கட்ட சொன்னீக. நான் கோயிலுக்கு போறதா இல்லை. நேர்ந்து கொண்டிருக்கேனே, சிதற்தேங்காய் உடைக்கிறதா. உங்களுக்கு சுயமா சம்பாதிக்கிற புத்தி வரணும். நம்ம மாத்ருவுக்கு நல்ல பொண்ணா அமையணும் தான் வேண்டுதல். டேய்! ஜரிகா புத்ரா! ஐயாவுக்கு தூபம் போட்றா. கண்ணோல்லியோ.

    பூதாதிகாசத்தனார் தெருவை நோக்கி ஓட்றார். மாத்ரு கொல்லை பக்கம் ஓட்றான். அங்கே தானே அக்காவிடமிருந்து திருடிய சங்கிலியை புதைத்து வைத்து இருக்கிறான். ஜரிகா புத்ரன் தோண்டி எடுத்துட்டா.

    (திரை விழுகிறது)

    டிஸ்கி: இது அன்றாடம் நடப்பது தான். நிகழ்வுகள் கொஞ்சம் கொஞ்சம் மாறலாம்.

    சித்திரத்துக்கு நன்றி: https://d2nh4f9cbhlobh.cloudfront.net/_uploads/galleries/22032/poltergeist-1.jpg

    Share
  • விண்வெளியில் சூடான பூதக்கோள் ஒன்றில் முதன்முறை நீராவி கண்டுபிடிப்பு

     
     
     

    Water vapour in Large Planet

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ஊழி முதல்வன் வெளிவிடும் மூச்சில்
    உப்பிடும் பிரபஞ்சக் குமிழி
    ஒரு யுகத்தில் உடைந்து மீளும் !
    விழுங்கிய கருந்துளை வயிற்றில்
    உயிர்த்தெழும் மீன்கள் !
    விண்வெளி  விரிய விண்ணோக்கியின்
    கண்ணொளி நீண்டு செல்லும்!
    நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தை
    ஊடுருவிக் காமிரா
    கண்வழிப் புகுந்த
    புதிய பூமிகள் இவை !
    பரிதி மண்டலம் போல்
    வெகு தொலைவில் இயங்கிச்
    சுய ஒளிவீசும்
    விண்மீனைச் சுற்றிவரும்
    மண்ணுலகம் இவை !
    ஈர்ப்பு விண்வெளியில் முதன்முறை
    பூமியைப் போல்
    நீர்க்கோள்  இரண்டைப்
    பார்த்துளது கெப்ளர் விண்ணோக்கி !
    சில்லியின் வானோக்கி மூலம்
    விண்வெளி நிபுணர்
    கண்ட கோள்கள் பற்பல ! ஆயினும்
    இன்னும் சவால் விட்டு
    கண்ணுக்குத் தெரியாது மறைந்து
    தேடிக் கிடைக்கா  கோள்கள்
    கோடிக் கணக்கில் !

    +++++++++++++++

    Water vapor discovery

    ஒரு கோள் தனது மூலச் சூரியனைக் கடந்து செல்லும் போது, இப்போது பயன்படுத்திய விதிமுறையைப் [Radial Velocity Technique] பின்பற்றி நீர் ஆவி, மற்றும் வேறு சூழ்வெளிக் கலவைகளையும் உளவிக் கண்டுபிடித்து விடலாம். கோளம் விண்மீனுக்கு வெகு தூரத்தில் இருந்தாலும், படமெடுத்துக் கோளின் சூழ்வெளியை அறிந்து விடலாம்.

    அலெக்ஸாண்டிரா லாக்வுட் [விஞ்ஞானத் தகவல் வெளியீட்டு ஆசிரியர்]

    இப்போதைய பொறிநுணுக்கம் பூமியை ஒத்த கோள்களைக் உளவிக் காண இயலாது. எதிர்கால ஜேம்ஸ் வெப் விண்ணோக்கி [James Webb Space Telescope] & 30 மீடர் விண்ணோக்கி [Thirty Meter Telescope] குளிர்ந்த கோள்களைக் காணவும், அவற்றில் நீர் உள்ளதா வென்று ஆராயவும் உதவும்.

    ஜெஃப்ரி பிளேக் [பேராசிரியர் பிரபஞ்சவியல் இரசாயனம் & அண்டக்கோள் விஞ்ஞானி]

    Water found in exoplanet

    நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி புதிய புதையல் கோள்கள் கண்டுபிடித்தது

    2014 பிப்ரவரி 26 இல் நாசா தனது கெப்ளர் விண்ணோக்கியில் குறுகிய காலத்தில் பூமியைப் போலுள்ள 715 கோள்களை நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால், வேற்று சூரிய மண்டல விண்வெளிப் புதையலாகக் கண்டுபிடித்துள்ளது. அந்த 715 கோள்கள் தமது தனிப்பட்ட 305 வெவ்வேறு விண்மீன்களைச் சுற்றி வருகின்றன. இதுவரை நாசா 1700 [2014 பிப்ரவரி] கோள்களைக் கண்டுபிடித்துள்ளது. புதுக்கோள்களில் உயிரினம் வாழ நீரும், சூழ்வெளியும் உள்ளதா வென்று இப்போது தெரியாது. அவை குளிர்ந்த கோள்களா, சூட்டுக் கோள்களா வென்றும் தெரியாது. அவற்றில் நான்கு கோள்கள் பூமியை ஒத்த வடிவமும், விண்மீனுகளுக்கு அருகில் உயிரின வசிப்பு அரங்குகளில் [Habitable Zones] இருந்தன. 2009 ஆண்டில் ஏவப்பட்டு முதலிரண்டு ஆண்டுகளில் கெப்ளர் விண்ணோக்கி உளவிக் கண்டுபிடித்த கோள்களே இந்த 715 புதையல் கோள்கள்.

    Hunt for Earth like planets

    சூடான புதிய பூதக்கோளில் நீர் ஆவி இருப்பு முதன்முறை காணபட்டது.

    நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால் இயங்கும் பூதக்கோள் வியாழனைப் போன்ற ஒரு பெருங்கோளில் நீர் ஆவி [Water Vapour]  இருப்பு முதன்முறை கண்டுபிடிக்கப் பட்டது. காலிஃபோர்னி யாவைச் சேர்ந்த கால்டெக் ஆய்வாளார்கள், ஒரு புதுவித பொறி நுணுக்கத்தைப் பின்பற்றி, புற அண்டங்களின் சூழ்வெளி வாயுக்களை ஆராய்ந்து, நீர் இருப்பதை உளவிக் கண்டுபிடித்துள்ளது. இந்த அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டவர் அலெக்ஸாண்டிரா  லாக்வுட் [Alexandra Lockwood] என்று அழைக்கப்படும் ஒரு பட்டப் படிப்பு மாணவி. இம்முறையப் பயன்படுத்தி அண்டக் கோளில் உள்ள மற்ற சூழ்வெளி வாயுக்களையும் அறியமுடியும்.

    CHIO Observatory, Chile

    “இந்த இரண்டு நீர்க்கோள்கள் நமது பரிதி மண்டலக் கோள்களைப் போன்றவை அல்ல.  அவை கரையில்லாத, முடிவற்ற கடல்களைக் கொண்டவை.    ஆங்கே உயிரினங்கள் இருக்கலாம். ஆனால்  அங்கிருப்போர் மனிதர் போல் பொறியியற் திறமை  உடைய வரா என்பது தெரியாது.   இந்த நீர்க்கோள்களில் உயிரின வாழ்வு, உலோகம், மின்சாரம், நெருப்பு போன்றவை இல்லாது, கடலடியில்தான் நீடிக்க முடியும்.   ஆயினும் அவ்விரண்டு நீல நிறக் கோள்கள், பொன்னிற விண்மீன் ஒன்றைச் சுற்றி வருவதைக் காண்பது வனப்புடன் இருக்கும்.  மேலும் அவற்றில் உயிரின இருப்பைக் கண்டுபிடித்த பொறிநுணுக்க அறிவுத்தரம் நம்மை வியக்க வைக்கும்.”

    லீஸா கால்டநேகர் [இயக்குநர் விஞ்ஞானி மாக்ஸ் பிளாங்க் வானியல் ஆய்வுக்கூடம்]

    கண்டுபிடித்த நீர்க் கோள்கள் கெப்ளர் -62e,  கெப்ளர்-62f [Kepler -62e & Kepler -62f] எனப் பெயரிடப் பட்டுள்ளன.   அவை கெப்ளர் -62 [Kepler -62] என்னும் விண்மீனைச் சுற்றி வருகின்றன.  நீர்க்கோள் கெப்ளர் -62e திரண்ட முகில் வானைக் கொண்டது.  கணனி மாடலின்படித் துருவம் வரை பூராவும் சூடான வெக்கை மயமானது [Warm and Humid].   தூரத்தில் சுற்றும் நீர்க்கோள் கெப்ளர் -62f கார்பன் டையாக்ஸைடு  வாயுவை மிகுதி யாகக் கொண்டு “கிரீன்ஹௌவுஸ் விளைவால்” சூடேறி நீர்மயத்தை நீடிக்கச் செய்கிறது.   இல்லையென்றால் அதன் நீர்வளம் பனியாகி ஓர் பனிக்கோளாய் மாறிப் போயிருக்கும்.”

    டிமித்தர் ஸஸ்ஸெலாவ் [ஹார்வேர்டு வானியல் வல்லுநர்] [Dimitar Sasselov]

    Two Water Planets“ஆதிகாலத்துப் பூர்வீக உலகங்கள் இன்னும் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கின்றன.”

    ரே வில்லார்டு & அடால்ஃப் ஷாலர் (Ray Villard & Adolf Schaller)

    “இன்னும் பத்தாண்டுகளுக்குள் மற்ற விண்மீன் குடும்பங்களில் நமது பூமியைப் போல் உள்ள கோள்களையும், உயிரினச் சின்னங்கள் இருப்பையும் கூடத் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.”

    ரே ஜெயவர்த்தனா (Ray Jayawardhana, Associate Professor of Astronomy, University of Toronto) (2007)

    Kepler -62 System

    நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி முதன்முறை இரண்டு நீர்க்கோள்களைக் கண்டு பிடித்தது 

    2013 ஜூலை 6 ஆம் தேதி நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி முதன்முறை இரண்டு நீர்க்கோள்கள் சுற்றிவரும் ஒரு விண்மீனைக் கண்டுபிடித்தது.   அந்த விண்மீனின் பெயர் கெப்ளர் -62 [Kepler -62].  விண்மீன் கெப்ளர் -62 நமது சூரியனை விடச் சிறியது. உஷ்ணமும் தணிந்தது.  அந்த விண்மீனைச் சுற்றும் நீர்க்கோள்களின் பெயர்கள் :  கெப்ளர் -62e, கெப்ளர் -62f  [Kepler -62e and Kepler -62f].   நீர்க்கோள்  கெப்ளர் -62e,  அதன் விண்மீனை ஒருமுறைச் சுற்றும் காலம் 122 நாட்கள்;  நீர்க்கோள் கெப்ளர் -62f விண்மீனைச் சுற்றும் காலம் 267 நாட்கள்.  அவற்றின் விண்மீன் குறுக்கீடு போக்கை நோக்கி அவற்றின் ஒப்புமை அளவுகள் அறிந்து கொள்ளப்படும். நீர்க்கோள் கெப்ளர் -62e, நமது பூமியை விட 60% பெரிதாகவும், நீர்க்கோள் கெப்ளர் -62f  40% பெரிதாகவும் இருப்பதாய்க் கணிக்கப் பட்டுள்ளன.  வானியல் விஞ்ஞானிகள் நீர்க்கோள் இரண்டும் சுற்று வாயு மண்டலமின்றிப் பாறையாலும், நீராலும் உருவானவை என்று ஊகிக்கிறார்.   கெப்ளர் -62 விண்மீனை அருகில் சுற்றும் நீர்க்கோள் கெப்ளர் -62e, சற்று சூடாகவும்,  பூமியை விட மேகம் மூடியிருப்பதாகவும் தெரிகிறது.  தூரத்தில் சுற்றும் நீர்க்கோள்  கெப்ளர் -62f பேரளவு CO2 கரியமில வாயு மிகுந்து, “கிரீன் ஹவுஸ் விளைவால்” சூடேறி, முன்னதை விடத் தணிந்த உஷ்ண நிலையில்  நீர்மயத்தைத் திரவ வடிவில் வைத்துள்ளது.  இல்லையென்றால் அந்த அரங்கில் நீர்க்கோள் ஓர் பனிக்கோள் ஆகியிருக்கும்.

    நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி நீலக்கோள் ஒன்றைக் கண்டுபிடித்தது.

    2013 ஜூலை 11 இல் நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி பூமியிலிருந்து 63 ஒளியாண்டு தூரத்தில் உள்ள  அண்டவெளி விண்மீனை ஒன்றைச் சுற்றி வரும் நீல நிற வாயுக் கோளைக் கண்டுபிடித்தது. நீலக்கோளின் பெயர் : HD 189733b.   2005 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்ட அந்தக் கோளின் மீது நீல நிறம் சிதறுவதாக முதலில் ஊகிக்கப் பட்டது.  2013  ஜூலையில் அதை ஹப்பிள் தெளிவாக மெய்ப்பித்தது.  நீலக் கோள் அதன் தாய்ப் பரிதியிலிருந்து 2.9 மில்லியன் மைல் தூரத்தில் சுற்றி வருகிறது.   மேலும் தனது ஒரு பாதி வடிவை விண்மீனுக்குக் காட்டி, மறு பாதி முகம் இருளில் தெரியாமல், ஈர்ப்பு விசையில் கட்டப் பட்டு [Gravitationally locked], நமது பூமியைச் சுற்றும்  நிலவு போல் காணப் பட்டது. நீலக்கோளின் பகல் நேர உஷ்ணம் பயங்கர மானது : 2000 டிகிரி F.  வாயுக்களின் வேகம் : 4500 mph. நீல நிறக் கோளின் [Cobalt Blue Colour] நீல நிறம் பூமியைப் போல் நீர் மீது ஒளிச் சிதறலால் எதிர்ப்படுவ தில்லை.   அந்தக் கோளின் மேக மண்டலத்தில் கலந்துள்ள சிலிகேட் துகள்களே [Silicate Particles] நீல நிறத்துக்குக் காரணம் என்பது அறிய வருகிறது.  2007 இல் நாசாவின் ஸ்பிட்ஸர் [Spitzer Space Telescope]  விண்ணோக்கி அறிவித்தபடி, நீலக்கோளின் இரவு-பகல் உஷ்ணங்கள் வேறுபாடு 500 டிகிரி F  என்று கணிக்கப் பட்டது.

    Einstein Planet

    பரிதியைப் போல் தெரியும் விண்மீனான எப்ஸிலான் எரிடானியைச் சுற்றும் (Epsilon Eridani) வாயுத் தூசித் தட்டு ஒரு கோள் என்பது நிச்சயம்.  ஹப்பிள் மூலம் கண்டதால் அது தோல்வியான விண்மீனில்லை, ஓர் அண்டக்கோள் என்பது உறுதி !  அது பெரிதளவில் இருந்தால், கோளுக்கும் விண்மீன் தூசிக்கும் தொடர்பில்லாத பழுப்புக் குள்ளி (Brown Dwarf) என்று சொல்லி விடலாம்.

    பார்பரா மெக் ஆர்தர் (Barbara McArthur, Project Leader, University of Texas) ”

    பூதக்கோளின் விட்டம் நமது பூமியைப் போல் ஒன்றை மடங்கு [12,000 மைல்].  அந்த கோள் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்திலிருந்து 20 ஒளியாண்டு தூரத்தில் இயங்கிச் சுயவொளி வீசும் மங்கிய கிலீஸ்-581 விண்மீனைச் சுற்றி வருகிறது.  அதன் சராசரி உஷ்ணம் 0 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் என்று மதிப்பிடுகிறோம். ஆகவே அங்கிருக்கும் தண்ணீர் திரவமாக இருக்கும் என்று கருதப் படுகிறது.  அந்த கோள் பாறைக் குன்றுகளுடனோ அல்லது கடல் நீர் நிரம்பியோ அமைந்திருக்கலாம்.”

    ஸ்டெஃபினி உட்றி [Stephane Udry, Geneva Observatory]

    Hubble Space Telescope

    “மற்ற சுயவொளி வீசும் விண்மீன்களின் கோள்களை விட, கண்டு பிடிக்கப்பட்ட இந்த பூதக்கோள் ஒன்றுதான் உயிரின வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உட்பொருட்களும் கொண்டதாகத் தெரிகிறது.  அக்கோள் 20 ஒளியாண்டு தூரத்தில் உள்ளதால், விரைவில் அங்கு செல்லும் திட்டங்களில்லை.  ஆனால் புதிய உந்துசக்திப் பொறி நுணுக்கம் விருத்தியானல், எதிர்காலத்தில் அக்கோளுக்குச் செல்லும் முயற்சிகள் திட்டமிடப் படலாம்.  பேராற்றல் கொண்ட வானோக்கி களின் மூலமாக அக்கோளைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடியவற்றை நிச்சயம் ஆய்ந்து கொள்ளப் பயிற்சிகள் செய்வோம்.”

    அலிஸன் பாயில் [Alison Boyle, Curator of Astronomy, London’s Science Museum]

    “அண்டையில் உள்ள சின்னஞ் சிறு சுயவொளி விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியை ஒத்த அண்டக் கோள்களில் உயிரின வாழ்வுக்கு ஏற்ற பகுதிகள் உள்ளதாக இப்போது அறிகிறோம்.  இச்செய்தி புல்லரிப்பு ஊட்டுகிறது. இப்பணி நாசாவின் அண்டவெளித் தேடல் முயற்சிகளின் முடிவான குறிக்கோளாகும்.”

    டாக்டர் சார்லஸ் பீச்மென்  [Dr. Charles Beichman, Director Caltech’s Michelson Science Center]

    “பூதக்கோள் போல பல கோள்களைத் தேடிக் காணப் போகிறோம். பூமியை ஒத்த கோள்களைக் கண்டு அவற்றின் பண்பாடுகளை அறிய விரும்புகிறோம்.  ஆங்கே வாயு மண்டலம் சூழ்ந்துள்ளதா?  அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன?  அந்த வாயுக் கலவையில் நீர் ஆவி [Water Vapour] உள்ளதா?  அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள்ளனவா?  நிச்சயமாக அந்த கோள் எந்த விதமானச் சூழ்வெளியைக் கொண்டது என்பதையும் கண்டு கொள்ள விழைகிறோம்.”

    டாக்டர் விக்டோரியா மீடோஸ் [Member, Terrestrial Planet Finder, NASA]

    “தற்போது ஒருசில வாரங்களுக்கு ஒருமுறை வியாழக் கோளை ஒத்த புறவெளிக் கோள் ஒன்று கண்டுபிடிக்கப் படுகிறது !  சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) விண்மீனைச் சுற்றி வருகிறது !  மிக்க மகத்தானது ஹப்பிள் கண்டுபிடித்துப் படமெடுத்த கோள் இரட்டை விண்மீன்கள் வீசி எறியப்பட்டு 450 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது !  எல்லாவற்றுக்கும் உன்னதமான கோள் இனிமேல்தான் வரப் போகிறது !”

    மிசியோ காக்கு (Michio Kakau, Professor Theoretical Physicist, City College of New York) (2007)

    பூமியைப் போன்ற வெளிப்புறக் கோள்கள் கண்டுபிடிப்பு !

    250 ஆண்டுகளுக்கு முன்பே விண்கோள் தோற்றத்தைப் பற்றிச் சொல்லும் போது ஜெர்மன் மேதை இம்மானுவல் கென்ட் 1755 இல் அண்டக் கோள்கள் விண்மீனைச் சுற்றும் வாயுத் தூசித் தட்டிலிருந்து உதிக்கின்றன என்று முதன்முதலில் அறிவித்தார் !  இதுவரை [ஜூலை 3, 2008] 307 கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டாலும் ஒரு விண்மீனைச் சுற்றி ஒரே சமயத்தில் கோளையும் வாயுத் தூசித் தட்டையும் சேர்ந்து நோக்கியதில்லை !  தனியாகக் கோளையோ அல்லது தனியாக வாயுத் தூசித் தட்டையோ விஞ்ஞானிகள் கண்டிருக்கிறார்.  இப்போது நாசா & ஈசா (NASA & ESA) விஞ்ஞானிகள் ஹப்பிள் தொலைநோக்கி மூலமாக கென்ட் கூறிய அரிய கருத்தை மெய்யென்று நிரூபித்துள்ளார்.  1991 இல் முதன்முதல் விஞ்ஞானிகள் பரிதி மண்டலத்துக்கு வெளியே உள்ள ஒரு விண்மீனைச் சுற்றும் முதல் கோளைக் கண்டுபிடித்தார்கள்.  அடுத்து பதினாறு ஆண்டு களுக்குள்  [2008] இதுவரை 307 வெளிப்புறக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன !  புதிய முதல் கோளின் பெயர் “மெதுசேலா” (Methusela) என்பது.  7200 ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் அந்தப் புதுக்கோள் பூமியை விட மூன்று மடங்கு வயது கொண்டது !  ஆயினும் பூமியைப் போல் நீர்வளம் மிக்க நீர்க்கோள் ஒன்று இதுவரையில் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கப்பட வில்லை !

    2006 நவம்பர் அமெரிக்க வானியல் இதழில் (American Astronomical Journal) பரிதியைப் போன்ற விண்மீன் எப்ஸிலான் எரிடானியை (Epsilon Eridani Star) பத்தரை ஒளியாண்டு தூரத்தில் விஞ்ஞானிகள் கண்டதாக அறிவிக்கப்பட்டது.  சூரிய மண்டலத்தின் கோள்கள் சூரிய வாயுத் தூசித் தட்டில் ஒரே சமயத்தில் உருண்டு திரண்டு உதித்தவை.  4.5 பில்லியன் வயதுடைய நமது பரிதி ஒரு நடு வயது விண்மீன் !  அதனுடைய வாயுத் தூசித் தட்டு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே கரைந்து மறைந்து விட்டது !  ஆனால் எப்ஸிலான் எரிடானி விண்மீன் இளையது.  அதன் வயது சிறியது – 800 மில்லியன் ஆண்டுகள்தான் !  ஆதலால் அதனுடைய தட்டு இன்னும் வெளிப்படை யாகத் தெரிகிறது !  எப்ஸிலான் எரிடானியைச் சுற்றும் தட்டு பூமத்திய ரேகைக்கு 30 டிகிரி கோணத்தல் சாய்ந்துள்ளது !  அதில் திரண்டு உருவாகும் கோளின் நிறை நமது வியாழக் கோளைப் (Planet Jupiter) போல் ஒன்றரை மடங்கு !  அந்தக் கோளே பூமிக்கு அருகில் உள்ள புறவெளிப் பரிதிக் கோள் (Extra-Solar or Exo-Planet) !  அது ஒருமுறைத் தனது விண்மீனைச் சுற்ற சுமார் 7 ஆண்டுகள் ஆகின்றன !  ஹப்பிள் தொலைநோக்கி முதலில் அந்த மங்கலான வாயுக் கோளைக் காண முடியா விட்டாலும், 2007 இல் பரிதி ஒளியைப் பிரதிபலித்த போது தெளிவாகப் படமெடுக்க முடிந்தது.

    சூரிய மண்டலத்துக்கு அப்பால் புதியதோர் பூமியைக் கண்டுபிடித்தார்

    ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் இந்த வாரத்தில் (ஏப்ரல் 25, 2007), சூரியனைப் போன்ற ஆனால் வேறான ஒரு சுயவொளி விண்மீனைச் சுற்றிவரும் மனித இனம் வாழத் தகுந்ததும், பூமியை ஒத்ததுமான ஓர் அண்டக்கோளைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார்கள்.  தென் அமெரிக்காவின் சில்லியில் உள்ள அடாகமா பாலைவனத்து ஈஸோ வானோக்கு ஆய்வகத்தின் [Atacama European Science Observatory, (ESO) La Silla, Chille, South America] 3.6 மீடர் (12 அடி விட்டம்) தொலை நோக்கியில் பிரெஞ்ச், சுவிஸ், போர்ச்சுகீஸ் விஞ்ஞானிகள் கூடிக் கண்டுபிடித்தது.  அந்த ஆய்வகம் கண்ணுக்குத் தெரியாத கோள்களின் ஈர்ப்பாற்றல் விளைவால் ஏற்படும் “முன்-பின் திரிபைத்” [Back-and-Forth Wobble of Stars, caused by the gravitational effect of the unseen Planets] தொலை நோக்கி வழியாக மறைமுகமாக விண்மீனைக் காண்பது.  கண்டு பிடிக்கப்பட்ட கோள் நமது பூமியைப் போல் ஒன்றரை மடங்கு பெரியது;  அதன் விட்டம் 12,000 மைல்.  புதுக்கோளின் எடை நமது பூமியைப் போல் 5 மடங்கு.  அது சுற்றும் சுயவொளி விண்மீனின் பெயர்: கீலீஸ் 581 c [Gliese 581 c].  புதிய கோள், கிலீஸை ஒரு முறைச் சுற்றிவர 13 நாட்கள் எடுக்கிறது. கிலீஸா ஒளிமீன் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்தி லிருந்து 20.5 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது.  ஒளியாண்டு என்பது தூர அளவு. ஓர் ஒளியாண்டு என்றால் ஒளிவேகத்தில் [விநாடிக்கு 186,000 மைல் வேகம்] ஓராண்டு காலம் செல்லும் தூரம்.  நாசா விண்வெளித் தேடலின் முடிவான, முக்கியக் குறிக்கோளும் அவ்விதக் கோள்களைக் கண்டு பிடித்து ஆராய்ச்சிகள் புரிவதே!

    Exoplanets 2012

    பரிதி மண்டலத்தைத் தாண்டி இதுவரை [டிசம்பர் 10, 2013] 1051, 797 பரிதிக் குடும்பங்கள்]  வெளிப்புறக் கோள்கள் (Exoplanets) கண்டுபிடிக்கப் பட்டாலும், சமீபத்தில் கண்ட இந்தக் கோள்தான் சிறப்பாக நமது பூமியை ஒத்து உயிரின வாழ்வுக்கு ஏற்ற வெப்ப நிலை கொண்டதாக உள்ளது. மேலும் அந்த உஷ்ண நிலையில் நீர் திரவ வடிவிலிருக்க முடிகிறது.  கிலீஸ் விண்மீனைச் சுற்றிவரும் நெப்டியூன் நிறையுள்ள ஓர் வாயு அண்டக்கோள் ஏற்கனவே அறியப் பட்டுள்ளது.  பூமியைப் போன்று எட்டு மடங்கு நிறையுள்ள மூன்றாவது ஓர் அண்டக் கோள் இருக்க அழுத்தமான சான்றுகள் கிடைத்துள்ளன.  வானோக்கிகள் மூலமாகப் புதிய பூமியின் வாயு மண்டலத்தில் மீதேன் போன்ற வாயுக்கள் உள்ளனவா, நமது பூமியில் தென்படும் ஒளிச் சேர்க்கைக்கு வேண்டிய குளோரோ·பைல் காணப்படுகிறதா என்றும் ஆய்வுகள் மூலம் அறிய முற்படும்.

    மறைமுக நோக்கில் கண்டுபிடிக்கப்பட்ட அண்டக்கோள்கள்

    2005 மார்ச் 17 ஆம் தேதி வார்ஸா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஆன்டிரி உதல்ஸ்கி [Andrzej Udalski] முதன்முதலாக ஈர்ப்பாற்றல் நோக்கு லென்ஸ் ஆய்வு முறையில் [Optical Gravitational Lensing Experiment (OGLE)] பூமியிலிருந்து நமது காலாக்ஸியின் மத்தியில் ஆயிரக்கணக்கான ஒளியாண்டு தூரத்தில் உள்ள விண்மீன் ஒன்று, அதற்கும் அப்பாலுள்ள விண்மீன் முன்பாக நகர்வதைத் தொலை நோக்கி வழியாகக் கண்டார்.  ஒரு மாதத்துக்குப் பிறகு அவற்றை நோக்கிய போது விந்தை ஒன்றை விண்வெளி விஞ்ஞானி கண்டார்.  வெகு தொலைவிலிருந்த விண்மீன் வியப்பாக 100 மடங்கு வெளிச்சத்தில் மின்னியது.  அதாவது திடீரென வெளிச்சத் திண்மையில் திரிபு காணப்பட்டது.  அந்த வித விரைவு வெளிச்சத் திரிபு தெரிவிப்பது ஒன்றே ஒன்றுதான்:  அதாவது முன்னிருந்து ஒளித்திரிபை உண்டாக்கிய விண்மீன் ஐயமின்றி ஓர் அண்டக்கோளே!  அந்த வெளிச்சத் திரிபை உண்டாக்கக் காரணமாக இருந்தது அந்த அண்டக்கோளின் ஈர்ப்பாற்றலே!  அதாவது புவி எடைக் கோள் ஒன்று அந்தப் பகுதியில் இருந்தால் நாம் தொலைநோக்கியில் அக்கோளைக் காணலாம்.  சில்லியின் லாஸ் காம்பனாஸ் வானோக்கு ஆய்வுக் கூடத்தின் 1.3 மீடர் [4 அடி விட்டம்] தொலைநோக்கியில் ஆண்டுக்கு 600 மேற்பட்ட நுண்ணோக்கு லென்ஸ் ஆய்வுகள் [Micro-lensing Experiments] நடத்தப் படுகின்றன.

    ஈர்ப்பாற்றல் நோக்கு லென்ஸ் ஆய்வுகள் என்றால் என்ன?

    நாம் வானிலை நூல்களில் பார்க்கும் அழகிய விண்மீன்கள் பெரும் பான்மையானவை ஹப்பிள் தொலைநோக்கி மூலமாகவோ அல்லது மற்ற தொலைநோக்கிகள் வழியாகவோ குறிப்பிட்ட தூரத்தில் [உதாரணமாக 400 ஒளியாண்டு] பார்த்துப் படமெடுக்கப் பட்டவை.  அந்த தூரம் நமது பால்வீதி காலாக்ஸி விட்டத்தின் 1% தூரம்.  மற்ற காலாக்ஸிகள் பில்லியன் ஓளியாண்டுக்கும் அப்பால் உள்ளன.  1936 ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விண்மீன்களின் ஈர்ப்பாற்றல் தளங்கள், ஒரு கண்ணாடி லென்ஸ் போல ஓளியை வளைக்கின்றன என்று கூறினார்.  ஈர்ப்பாற்றல் லென்ஸின் விளைவுகளுக்கு ஆயிரக் கணக்கான சான்றுகள் இப்போது காணப்படுகின்றன.  அம்முறை மூலமாக வெகு தூரத்தில் உள்ள ஒளிமீன்களைத் தெளிவாகக் காண முடிகிறது.  ஈர்ப்பாற்றல் லென்ஸ் விளைவின் அடிப்படை விளக்கம் இதுதான்:  பூமியின் தொலைநோக்கி மூலமாக இரண்டு விண்மீன் களை நேர் கோட்டில் கொண்டு வந்தால், அண்டையில் உள்ள விண்மீனின் ஈர்ப்பாற்றல் தளம் [லென்ஸ் போன்று] அப்பால் உள்ள விண்மீனின் ஒளியை வளைக்கிறது.  அவ்வளைவு ஒளி ஒரு வட்ட வடிவில் தெரிகிறது.  அதுவே “ஐன்ஸ்டைன் வளையம்” [Einstein Ring] என்று அழைக்கப் படுகிறது.  அந்த நுண்ணோக்கு லென்ஸ் ஈர்ப்பாற்றல் மூலமாகத்தான், புதிய பூமி இப்போது கண்டுபிடிக்கப்பட்டு விஞ்ஞானிகளிடையே மாபெரும் புத்துணர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

    பரிதி மண்டலத்துக்கு அப்பால் கோள்களை நோக்கும் முறைகள்

    நேர்முறையில் நோக்க முடியாது பலவித மறைமுக முறைகளில் புறவெளிப் பரிதிக் கோள்கள் கண்டுபிடிக்கப் படுகின்றன.  தாய் விண்மீனைப் போல் ஒளியின்றி புறவெளிக் கோள்கள் மிக மிக மங்கலாகத் தெரிவதால் அவற்றைக் நோக்கி உளவுவது சிரமமான ஆராய்ச்சி.  மேலும் தாய்க் கோளின் ஒளி எதிரொளி (Glare) வேறு கொடுப்பதால், மங்கலான வெளிச்சமும் வெளுத்துப் போகிறது. புறவெளிக் கோள் கண்டுபிடிப்பு முறைகள் எவை ? வானியல் அளப்பு முறை, ஆரத்தின் வேக முறை, டாப்பிளர் விளைவு முறை, பல்ஸர் கால முறை, கடப்பு முறை, ஈர்ப்பாற்றல் நுட்ப லென்ஸ் முறை, விண்மீன் சுற்றும் தட்டு முறை, இரட்டைத் தடுப்பு முறை, சுற்றுவீதி நிலை முறை, மறைப்பு அளப்பு முறை (Astrometry, Radial Velocity or Doppler Method, Pulsar Timing, Tansit Method, Gravitational Micro-Lensing, Circumsteller Discs, Eclipsing Binary, Orbital Phase, Polarimerty) போன்றவை. ஹப்பிள் விண்வெளி நோக்கு முறையைத் தவிர இதுவரைப் பயன்படுத்தப்பட மற்ற முறைகள் யாவும் பூதள அமைப்புத் தொலைநோக்கிகள் மூலம் (Ground-Based Telescopes)  கண்ட முறைகளே.  அவற்றை விட மேம்பட்ட முறைகள் தொலைநோக்கிகளை அமைதியற்ற வாயு மண்டலத்திற்கு மேலே விண்வெளியில் அனுப்பிக் காணும் முறைகளே.

    1. 2006 டிசம்பரில் புறவெளிக் கோள்களைக் கண்டுபிடிக்க ரஷ்யா அனுப்பிய ஐரோப்பிய கோரட் (COROT) விண்ணோக்கி ஊர்தி. 2. ஐயமின்றி ஹப்பிள் தொலைநோக்கி இதுவரை ஒருசில புறவெளிக் கோள்களைப் படமெடுத்துள்ளது. எதிர்காலத்தில் நாசா & ஈசா திட்டமிட்டுள்ள குறிப்பணிகள் : 3. கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கி (Kepler Space Telescope) பிப்ரவரி 2009 இல் நாசா அனுப்பத் திட்டமிட்டுள்ளது. 4. புதிய உலகங்கள் தேடும் திட்டம் (New Worlds Mission) ஏவும் தேதி இன்னும் தீர்மானம் ஆகவில்லை. 5. ஈசாவின் திட்டம் : டார்வின் உயிரினக் கோள் தேடும் திட்டம் (ESA’s Darwin Space Mission) (ஏவும் ஆண்டு : 2015) 6. நாசாவின் விண்வெளிக் கோள் திட்டம் (Space Interferomerty Mission) (SIM) (திட்டம் ஆண்டு : 2015 or 2016) 7. விண்வெளிக் கோள் நோக்கி (Terrestrial Planet Finder) (TRF) (ஏவும் தேதி இன்னும் தீர்மானம் ஆகவில்லை.) 8. பேகஸி (பறக்கும் குதிரைத்) திட்டம்   (PEGASE)

    PEGASE is a proposed space mission to build a double-aperture interferometer composed of three free-flying satellites. The goal of the mission is the study of Hot Jupiters (pegasids), brown dwarfs and the interior of protoplanetary disks  The mission would be performed by the Centre National d’tudes Spatiales and is currently being studied for launch around 2010-2012.

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)

    2. 50 Greatest Mysteries of the Universe – Are There Other Planets Like The Earth ? (Aug 21, 2007)

    3. Astronomy Facts File Dictionary (1986)

    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)

    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]

    6. Cosmos By Carl Sagan (1980)

    7. Dictionary of Science – Webster’s New world [1998]

    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)

    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)

    10 Hyperspace By : Michio kaku (1994)

    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)

    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)

    13 National Geographic – Frontiers of Science – The Family of the Sun (1982)

    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)

    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)

    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)

    17 The Geographical Atlas of the World, University of London (1993).

    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)

    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)

    20 Astronomy Magazine – What Secrets Lurk in the Brightest Galaxies ? By Bruce Dorminey (March 2007)

    21 National Geographic Magazine – Discovering the First Galaxies By : Ron Cowen (Feb 2003)

    22 Astronomy Magazine Cosmos – The First Planet By : Ray Villard & Adolf Schaller & Searching for Other Earths By : Ray Jayawardhana [Jan 2007]

    23 Discover Magazine – Unseen Universe Solar System Confidential [Jan 2007]

    24 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40704261&format=html (திண்ணைக் கட்டுரை – பூமியைப் போன்ற புதிய கோளைக் கண்டுபிடித்த விண்வெளி விஞ்ஞானிகள்)

    25 National Geographic Magazine – Searching the Stars for New Earths (Dec 2004)

    26 Scientific American – Does Methane Point to Bacteria on Mars & Titan ? By : Sushil K. Atreya. (May 2007)

    27 News Week Magazine The New Solar System – Our Changing Way of the Universe -(Sep 2006)

    28 Cosmos Magazine – Three-Planet Solar System Detected (May 2006)

    29 Cosmos Magazine – Origin of Planets Confirmed (Oct 2006)

    30 Cosmos Magazine – Earth-Like Planet Await Discovery (Sep 2006)

    31 Cosmos Magazine – Distant Sun Has System of Five Planets (Nov 2007)

    32 Cosmos Magazine – Catalogue of Strange New Worlds (May 2007)

    33 Cosmos Magazine – New Earth-Like Planet May Hold Liquid Water (April 2007)

    34 Astronomy Magazine – Earth-Like Planets May Be Common (Dec 2003)

    35 Omnome Science – Earth -2 How to Find Earth-Like Planets (June 2006)

    36 Extra-Solar Planets By : Wikipedia [31 July 2008]

    36(a)  http://revolutionizingawareness.com/tag/space/  [December 24, 2011]

    36(b)  http://www.kavlifoundation.org/science-spotlights/searching-best-and-brightest  [2011]

    37  http://www.messagetoeagle.com/alienwaterworldskepler.php#.Uem1lo3VCPU  [April 18, 2013]

    38  http://www.dailygalaxy.com/my_weblog/2013/07/two-alien-planets-with-endless-oceans-unlike-anything-in-our-solar-system-.html  [July 11, 2013]

    39  http://www.scientificamerican.com/article.cfm?id=first-distant-planet-be-seen-in-color-blue&print=true  [July 11, 2013]

    40  http://science.gsfc.nasa.gov/sed/index.cfm?fuseAction=home.main&&navOrgCode=667  [NASA Sites for Exoplanets]

    41  http://www.spacedaily.com/reports/Hubble_Finds_a_Cobalt_Blue_Planet_999.html [July 12, 2013]

    42.   https://en.wikipedia.org/wiki/Exoplanet  [December 11, 2013]

    ******************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  March 1, 2014

    http://jayabarathan.wordpress.com/

     

    Share
  • வார ராசி பலன்:24.02.14-02.03.14

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்: மாணவர்களுக்கு நல்லவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கப் பெறும் . பங்குச் சந்தையில் பெரிய அளவில் ஆதாயத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு கிடைக்கும் பலன் சொற்பமே. பிள்ளைகளின் போக்கில் ஏற்படும் மாறுதல்களால் உறவுகளின் நடுவில் சிறு சச்சரவு தோன்றி மறையும். வியாபார விருத்திக்காக எதிர்பார்த்திருந்த சலுகைகளை கிடைப்பதால், வியாபாரிகள் உற்சாகத்துடன் திகழ்வர்.பெண்கள் தங்கள் மனதுக்குகந்த துறை யில் அதிக ஆர்வத்துடனும், ஈடுபாடுடனும் செயலாற்றுவர். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்பை மற்றவர் ஊதி பெரிதாக்க இடம் கொடுக்காதீர்கள். சமாதானமாய் போவது அனைவருக்கும் இதமாகத் திகழும். கலைஞர்கள் தன் பணியில் கவனமாக இருந்தால், அதிக லாபம் பெறலாம்.

    ரிஷபம்: பங்குச் சந்தையில் ஈடுபட்டுள்ளவர்கள், வேண்டிய லாபம் பெற, அன்றாட நிலவரங்களைக் கவனித்து செயல்படுங்கள். கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள், எந்த ஒரு மாற்றத்தையும் செய்யும் முன் கலந்தாலோசித்து முடிவெடுப்பது அவசியம். குடும்பப் பிரச்னையில் பக்குவமாகக் கையாள்வதன் மூலம், பெண்கள் தங்கள் அமைதியை தக்க வைத்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு நெருங்கிப்பழகியவரால் சில தொந்தரவுகள் தோன்றும் வாய்ப்பிருப்பதால், கவனமாய் இருப்பது நல்லது. சுயதொழில் புரிபவர்களுக்கு தொழில் ரீதியாக இருந்துவந்த சங்கடங்கள் விலகும். பெற்றோரின் உடல் நலனில் அக்கறை காட்டி வந்தால் அவர்களின் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

    மிதுனம்:பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவைகள் உங்களின் விருப்பப்படியே நடைபெறும் . வீண் செலவுகளைக் குறைப்பதில் சற்று கவனமாக இருங்கள். சேமி ப்பதற்கான வழி வகைகள் மேலும் அதிகரிக்கும். வியாபாரிகளும், தொழிலதி பர்களும், பொருளாதாரத்தில் அகலக் கால வைக்காமல், கட்டுக் கோப்பாய் செயல் பட்டால், லாப த்தின் வரவில் குறைவிராது. பணி புரியும் இடங்களில் முரண்பட்ட கருத்துள்ளவர்களு டன் மோதுதலைத் தவிர்க்கவும். பெண்கள் கணவன் வழி உறவினர்களின் கோரிக்கைக ளை நிறைவேற்றுவதற்கு முதலிடம் கொடுத்து விடுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்!
    கடகம்:வியாபாரிகள் புதிய திட்டங்களை செயல்படுத்துதல், விரிவாக்கம் ஆகியவற்றை மனம் விரும்பியவாறு செய்து முடிப்பர். வெளிநாடுகளில் வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களின் கனவு நிறைவேறும். வேலைப்பளு இருந்தாலும், பெண்கள் சத்தான உணவை உண்டு வந்தால், அயர்ச்சியும், ஆயாசமும் தலை காட்டாது. சக மாணவர்களோடு ஏற்படும் மனத்தாங்கலை மனம் விட்டுப் பேசித் தீர்த்துக் கொள்வதன் மூலம் நட்பில் விரிசல் விழாமல் பார்த்துக் கொள்ளலாம். வேலைக்கு செல்பவர் தெளிவான மனதுடன் பணியில் ஈடுபடுவது நல்லது. விட்டுக் கொடுத்தால் வெற்றி கிடைக்கும் என்பதை உணர்ந்த கலைஞர்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும்.

    சிம்மம்: குழந்தைகளுக்கு கண் சம்பந்தமான நோய்கள் தோன்றி மறையும். எனவே பெற்றோர்கள் பிள்ளையின் ஆரோக்கியத்தில் கவனமாய் இருப்பது அவசியம். பணம் மற்றும் செலவு சம்பந்தமான விஷயங்களில் சற்று சிக்கனமாய் இருந்தால், பெண்கள் கடன் தொல்லைகள் கட்டுக்குள் வைக்கலாம். மாணவர்கள் தாழ்வு மனப் பான்மையை தூர எறிந்துவிட்டு, துணிவுடன் செயல்பட்டால்,உங்கள் திறமைகளை பிறர் உணர்வா ர்கள். பங்குத்துறையில் உள்ளவர்கள் அளவான முதலீடு என்பதில் உறுதியாக இருப் பது நலம். இந்த வாரம் வெளியூர்ப் பயணங்களால் செலவுகள் கூடினாலும், நீங்கள் நினைத்த காரியத்தை திறம்பட முடித்து விடுவீர்கள்.

    கன்னி: பெண்களுக்கு மனதில் இருந்த கவலை நீங்குவதுடன் உறவுகளும் ஆதரவாய் இருப்பார்கள். காலத்தின் மதிப்புணர்ந்து செயல்பட்டால், மாணவர்களுக்கு நல்ல பலன் கிட்டும். மனைகள் வாங்குதல், விற்றல் ஆகியவற்றில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிட்டும் வரை அவசரப்பட வேண்டாம். முக்கியமான பொறுப்புக்களை வகிப்பவர்கள், எச்சரிக்கையுடன் செயல்பட்டால், வரவிருக்கும் பிரச்னைகளைத் தவிர்த்து விடுவதோடு நல்ல பெயரும் பெறலாம். கவனக் குறைவாகச் செயல்படும் பிள்ளைகளை இதமாகக் கண்டிப்பதே நல்லது. புதிய இடங்களுக்குச் செல்பவர்கள் உடைமைகளை பாதுகாப் பாக வைத்தால், பயணங்கள் இனிமையாக அமையும்.

    துலாம்: சரக்கு வினியோகம் செய்பவர்கள் வெறும் வாய் வார்த்தையை நம்பி பொருள் கொடுப்பதைக் குறைத்துக் கொண்டால் நஷ்டம் இராது. வெளி ஊர்களில் வேலை பார்ப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். பெண்கள் விலைஉயர்ந்த மின்பொருள்களின் பழுதை நீக்குவதற்காக அதிக பணம், நேரம் இரண்டையும் செலவு செய்யும் சூழலுக்குத் தள்ளப்படுவார்கள். பணியில் இருப்பவர்கள் உடற்பயிற்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து வர, ஆரோக்கியம் உங்களின் பணிக்கு ஆதரவாக அமையும். வியாபாரிகளுக்கு வெளியூர்ப் பயணம் மூலம் அதிக லாபம், புதிய ஒப்பந்தம் ஆகிய இரண்டையும் பெறு வர். முக்கியமான செயல்களை விரைந்து முடிக்க, நட்பும், உறவும் கை கொடுப்பார்கள்.

    விருச்சிகம்: தொல்லைத் தந்து கொண்டிருந்த கடன்கள் படிப்படியாகக் குறைவதால், பெண்கள் புது தெம்புடன் வலம் வருவார்கள். வியாபாரிகளும், வேலைக்கு செல்பவர் களும் தங்கள் வருமான வரி கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்வது நல்லது.அலுவலகத்தில் நிலவும் உட்பூசல்களில் தலையிடாதீர்கள். கணினித் துறை யில் உள்ளவர்கள் நிறுவன வளர்ச்சிக்கு உறுத்துணையாக இருப்பதால் புதிய சலுகை களைப் பெறுவார்கள். உயர்பதவி வகிப்பவர்கள் நிர்வாக விஷயங்களில் கூடுதல் கவன ம் செலுத்துவது அவசியம். யாரையும் குற்றம் சாட்டிப் பேசாமலிருந்தால், கலை ஞர்களின் குடும்பத்திலும், தொழிலும் குழப்பம் இராது.

    தனுசு: மாணவர்கள் பேச்சில் கவனம் செலுத்தவதைக் காட்டிலும், தங்கள் செயலில் கவனம் செலுத்தினால், பாராட்டு பல வந்து சேரும். வியாபாரிகள் புதியவர்களிடம் பெரிய பொறுப்புகளை ஒப்படைக்கும் முன் தகுந்த ஆலோசனை செய்வது அவசியம். சுய தொழிலில் இருப்பவர்கள் நிலையான வரவிற்கான வழி வகைகளை உறுதி செய்துகொள்வார்கள். பெண்கள் வேலைப்பளு ஆரோக்கியத்தோடு மோதாமல் இருக்க, சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்வது அவசியம். விலை உயர்ந்த சாதனங்களை கையாளும் போது கவனமாக இருந்தால், பணியாளர்களுக்கு மன உளைச்சலும், வீண் செலவுகளும் வராமலிருக்கும்.

    மகரம்: மாணவர்கள் அறிவுப் பூர்வமான கருத்துக்களை பயன்படுத்தி நல்ல பெயரைத் தட்டிக் கொண்டு செல்வர். பெண்கள் தங்கள் குடும்ப ஒற்றுமையை பிறர் குலைக்க இடம் கொடுக்க வேண்டாம். முதியவர்கள் எலும்புகளின் பலம் குறையாமல் பார்த்துக் கொண்டால், வேலைகளை சோர்வின்றி செய்யலாம். வியாபாரிகள் புது திட்டங்களில் உள்ள நிறை குறைகளை உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்பட்டால், அதிக லாபம் கிட்டும். கலைஞர்கள் தேவையற்ற செலவுகளைச் சுருக்கினால், பொருளாதாரம் கையை க் கடிக்காது. பொது வாழ்வில் இருப்போர்கள் பொறுப் புணர்ந்து செயல்படு பவரிடம் பணிகளைக் கொடுத்தால் வெற்றி உங்களுக்கே!

    கும்பம்: வியாபாரிகள் தேவைக்கு ஏற்றவாறு சரக்குகளை கொள்முதல் செய்தால், எதுவும் தேங்காமல் விற்று விடும். பெண்கள் வீடு பராமரிப்பிற்கென்று அதிக பணம் எடுத்து வைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் பிறரை வெல்ல குறுக்கு வழிகளைத் தேட வேண்டாம். பொது வாழ்வில் உள்ளவர்கள் ஏட்டிக்குப் போட்டியான வாக்கு வாதங்களைத் தவிர்த்து, உறுதியான செயல்பாட்டை கடைபிடியுங்கள்.நல்ல பெயர் நிலைத்திருக்கும். மறைமுகப்போட்டிகளால், புதுமையான எண்ணங்களை நடை முறைப் படுத்துவதில் சில தடுமாற்றம் ஏற்பட்டாலும், தங்கள் திறமையால்,கலைஞர்கள் நினைத்த காரியத்தை முடித்து விடுவார்கள்.

    மீனம்: புதுப்புது யுக்திகளை பயன்படுத்துவதன் மூலம், கூட்டுத் தொழிலில் இருக்கும் பிரச்னைகள் தீரும். பொருளாதார சிரமங்கள் குறைவதால், பெண்கள் உற்சாகத்துடன் திகழ்வார்கள். இல்லத்தில், கோபத்தைக் குறையுங்கள். பிரச்னைகளின் தாக்கமும் தானே குறைந்து விடும். சக மாணவர்களின் மனோபாவத்திற்கேற்றவாறு , உங்கள் அணுகு முறையை மாற்றிக் கொண்டால், கல்வி தொடர்பான வேலைகள் கடகடவென்று முடிந்து விடும். கடும் பணியில் உள்ளவர்கள் உழைப்பில் சலிப்பு சேராமல், பம்பரமாய் சுழல, சத்தான உணவு வகைகள் சாப்பிடுவது நல்லது. இது நாள் வரை எட்டியும், தட்டியும் சென்ற வாய்ப்புகள் மீண்டும் கலைஞர்களை நாடி வரும்.

    Share
  • திருமால் திருப்புகழ் (13)

    101-0105_IMG

    கிரேசி மோகன்

    தந்த தனன தனதானன தனன
    தந்த தனன தனதானன தனன
    தந்த தனன தனதானன தனன-தனதான….

    ————————————————————————————————————-
    “சிந்தை மகிழ சிவநேசர்செ விதனில்images (1)
    மந்த்ர வடிவ உபதேசம ருளிய
    கந்த முருக கதிர்காமம ருகனின் -முறைமாம
    அந்த ரிவயி ரவிவாமமி றைவனின்
    பங்கு திரும யிலைவாழுமை இளைய
    தங்கை வருகை சினமாமனி டம்உரை -சிறைபால
    முந்தை வினைகள் முளையோடுவி டுபட
    சிந்தை வடிவில் பலநாள்பழ கியவ
    கந்தை விலக ரமணேசர்வ ழிதனில்-நடமாட
    எந்தை வருக ரகுநாயக வருக
    என்று அருண கிரியார்புகழ் தமிழின்
    சந்த நடையில் வரவேணும்நெ டிதுயர் -பெருமாளே”….

    ————————————————————————————————————————–

    Share
  • திருமால் திருப்புகழ் (12)

     

    கிரேசி  மோகன்

    perumal1

    தனதன தனான தனதன தனான
    தனதன தனான-தனதான….
    ———————————————————————————————————————–

    “திரைகட லுளோடி திரவிய வியாச 5709796
    மறைகொண ருமீன -பெருமாள்காண்
    வரைவழு விடாது வலியமு துகாள
    உருவில்க டலாமை -பெருமாள்காண்
    சிறையவ னிமீள விரையும வதார
    வடிவுரு வராக -பெருமாள்காண்
    இரணிய விரோதம் ஒழி,பிர கலாத
    அழையவ ருசீய -பெருமாள்காண்
    வரமரு ளமாவ வலிமுடி யிலேறி
    உலகள வுகாணு -பெருமாள் காண்
    மழுபர சுராம,உழவுப லராம
    பழகுகு கராம -பெருமாள்காண்
    இறையென உலாவி பறவையே னவேடன்
    இரையுறு முராரி -பெருமாள்காண்
    தருமம துவாழ தரணிஅ வதார
    தசமுக புராண -பெருமாளே”
    ————————————————————————————————————————-

    Share
  • வாராயோ வெண்ணிலாவே..

    கவிஞர் காவிரி மைந்தன்

    காதலர்கள் கொஞ்சி விளையாட இந்த வெண்ணிலா மட்டும்தான் காலகாலமாக இடம் கொடுத்து வருகிறது! எந்தக் கவிஞனும் சின்னக் குழந்தையாகிவிடுகிறான்.. நிலாவே உன்னைக்கண்டு! தூது விடுப்பதற்கும் நீயே சாலப்பொருத்தம் என்று சரித்திரம் பேசுகிறது! வட்டமுகம்காட்டி வான்வழியே உலா காணும் உன் வதனம் கண்டு சொக்கிப் போகாதவர்கள் யாரிங்கே? நீ சூரியனிடமிருந்து ஒளியைக் கடன்வாங்கியிருந்தாலும் உன் சுடர்மிகு ஒளிவெள்ளம் இன்பம் ஊட்டுவதால் இங்கே இரவுகளுக்குக்கூட கொண்டாட்டம்தானே! புரட்சிக்கவிஞர் முதல் பைந்தமிழர் பாசறை வழிவந்த எந்தக் கவிஞனும் உன்னைத் தொட்டுவிளையாட மறந்தவனில்லை! பட்டுக்கோட்டை கூட பாங்கான பாடல்தந்தான் அன்றோ.. என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ இளையவளா? மூத்தவளா வெண்ணிலாவே.. என்ன அருமையான பாடல்!

    இதோ.. மற்றுமொரு வெள்ளித்திரைதந்த வெண்ணிலா பாடல்! அற்புத சுகமானது! ஆனந்த ரகமானது! நித்தமினிக்கும் இன்பத் திருவிழாபோல் நெஞ்சில் சந்தோஷ அலையடிக்குது! காதலனும் காதலியும்.. அட.. திரைப்படத்தில் கதாநாயகனும் நாயகியும் ஊடல் கொண்டு பாடும் பாடலாக.. உன்னை இடையே வைத்துக் கொண்டு! கற்பனை ராஜ்ஜியம் நடக்கும்போதெல்லாம் கண்டிப்பாக உன் பங்கு அதிகமிருக்கும் என்பார்கள்! பாட்டுத் தேரோட்டம் பாங்காக நடந்திருக்க.. பாடிய குயில்கள் இரண்டு.. ஒன்று.. ஏ. எம். ராஜா மற்றொன்று.. பி. லீலா !

    எஸ். ராஜேஸ்வரராவ் இசையமைப்பில் தஞ்சை ராமையா தாஸ் வரிகள் இதயம் தழுவிச் செல்கிறார்.. கவிதைபோல் ஒரு சில பாடல்கள்தான் திரையிசையில் அமையும்.. அந்த வரிசையில் இந்தப் பாடல் பொருந்தும்!
    கனகச்சிதமான இசையும் கவிதையும் கலந்தினிக்கும் கானா அமிர்தம் என்பேன் நான்!

    AMR:
    வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே
    வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே
    வாராயோ வெண்ணிலாவே

    அகம்பாவம் கொண்ட சதியால்
    அறிவால் உயர்ந்திடும் பதினான்
    அகம்பாவம் கொண்ட சதியால்
    அறிவால் உயர்ந்திடும் பதி நான்
    சதிபதி விரோதம் மிகவே
    சிதைந்தது இதம் தரும் வாழ்வே

    PL:
    வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே
    வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே
    வாராயோ வெண்ணிலாவே

    வாக்குரிமை தந்த பதியால்
    வாழ்ந்திடவே வந்த சதி நான்
    வாக்குரிமை தந்த பதியால்
    வாழ்ந்திடவே வந்த சதி நான்
    நம்பிட செய்வார் நேசம்
    நடிப்பதெல்லாம் வெளி வேஷம்

    AMR:
    வாராயோ வெண்ணிலாவே

    தன் பிடிவாதம் விடாது
    என்மனம் போல் நடக்காது
    தன் பிடிவாதம் விடாது
    என்மனம் போல் நடக்காது
    தமக்கென எதுவும் சொல்லாது
    நம்மையும் பேச விடாது

    PL:
    வாராயோ வெண்ணிலாவே

    அனுதினம் செய்வார் மோடி
    அகமகிழ்வார் போராடி
    அனுதினம் செய்வார் மோடி
    அகமகிழ்வார் போராடி
    இல்லறம் இப்படி நடந்தால்
    நல்லறம் ஆமோ நிலவே

    AMR, PL:
    வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே
    வாராயோ வெண்ணிலாவே

    வாராயோ வெண்ணிலாவே…

    Share
  • சீதாயணம் நாடகப் படக்கதை – ​2 2​​​

     

    சி. ஜெயபாரதன், கனடா

    [சென்ற வாரத் தொடர்ச்சி]

     

    நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு : வையவன்

    ஓவியம் : ஓவித்தமிழ்

     

     

    jay1

    jay2

    தகவல் :
    1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit to Kishan Lal Verma

    3. Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata By: Romesh C. Dutt [1969]

    6. Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma [2004]

    7.   http://jayabarathan.wordpress.com/seethayanam/  [நெஞ்சின் அலைகள்]​

    8.  ​http://www.vallamai.com/?p=21424   [வல்லமை வலைப் பக்கம்]

    **************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013)  [R-2]

    http://jayabarathan.wordpress.com/

     

    Share
  • ஓம் நமசிவாய

    விசாலம்s-index

    அன்னை சக்தி உன்னிடம் பாதி
    அண்ணாமலையில் ஒளிரும் ஜோதி .
    ஐந்தெழுத்து மந்திரம் துன்பம் நீக்கும்
    ஐந்தெழுத்து ஜபிக்க மனமும் அடங்கும்
    உயிர்களைக் காக்க விஷமும் குடித்தாய் .
    உயிர்களின் அழிவை தடுத்து வென்றாய்
    கர்ம வினைகள் எல்லாம் நீங்கும்.
    கரத்தில் சூலம் எதிரியை அழிக்கும்..
    துன்பம் அழிக்கும் பஞ்சாட்சர ஜோதி
    துதிப்போரின் தீவினைகள் மறைவது நீதி.
    உன் விபூதி பூச மனமும் அடங்கும்.
    உயிருக்குள் ஒரு சக்தி தொடங்கும்.
    காங்கேயனை அளித்த முக்கண்ணன் நீதானே!
    காலனை அழித்த பரமசிவன் நீ தானே!
    நமசிவாய ஓதினாலே மரணபயம் தீரும் .
    நம்பியவர் வாழ்வில்அருளொளி வீசும்
    உன் தாள் பணிய மறுபிறப்பேது?
    உன் நாமம் ஓத எனக்குக் குறையேது?

    படத்துக்கு நன்றி

    http://www.angelfire.com/nc2/cybertemples/Shiva.html

    Share
  • அன்புள்ள மணிமொழி

    எஸ். பாலசுப்ரமணியன்

    அன்புள்ள மணிமொழி ஆனந்த  கண்மணி,

    வாழ்த்துக்கள் எப்போதும் எனது நினைவில் நின்று என்னை இயக்குவதற்கு…!

    என்ன ஆச்சு….? திடீரென கடந்த ஒருவார காலமாகவே  உனது காட்சியும் இல்லை. கைபேசி தொடர்பும் இல்லை…? இரண்டாண்டு காலமாக நமது நட்பு கொஞ்சம்  கொஞ்சமாக வளர்ந்து காதலாக கனிந்து இப்போது நாம் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு வருகையில் ஏன் இந்த திடீர் இடைவெளி..? எனது வீட்டில் பெரியவர்கள் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள் என்பதை நீ நன்கு அறிந்திருப்பாய்….! உங்கள் வீட்டில் தான் எனது வருமானத்தை வைத்து குறை சொல்லியதாக சொன்னதை நான் இன்னமும் மறக்கவில்லை. எனது சம்பளம் குறைவுதான். அதுக்காக நாம் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்க முடியுமா…? இப்போதைக்கு நம்மிருவரின் தேவைக்கு எனது சம்பளம் கண்டிப்பாக போதும் எனபதே உண்மை . அன்று கடைசியாக மெரீனாவில் நமது சந்திப்பில் கூட விளையாட்டாக ஒரு மாத பட்ஜெட் எனது சம்பளத்தை மட்டும் வைத்து போட்டோமே. அதில் கூட மீதமாக மாதம் இரண்டாயிரம் ரூபாய் வந்ததே…!

    மறந்து விட்டாயா மணிமொழி. கொஞ்ச நாட்களுக்கு உனது சம்பளம் முழுவதையும் உனது வீட்டுக்கே கொடுப்பதில் எனக்கோ எனது வீட்டு பெரியவர்களுக்கோ எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று சொல்லியிருந்ததை மறந்து விட்டாயா மணிமொழி. கடந்த இரண்டு ஆண்டுகளாக உன்னிடம் நான் கொடுத்த வாக்கை மீறி எதுவும் செய்யவில்லை என்பதை நீ அறிந்திருப்பாய் அல்லவா…?  நாம் தமிழ் நாட்டில் இருக்கும் வரை குடும்ப  செலவை பற்றி ஏன் கவலை கண்ணே.

    நமக்கு திருமணம் முடிந்ததும் முதலில் நாம் செய்யபோவது நமக்கென தனியாக ஒரு ரேசன் கார்டுதான். அதுவும் பச்சை கலர் அட்டையுடன் கூடியது. அப்படி பச்சை கார்டு வாங்கி விட்டால் மாதமாதம் அரிசி  இலவசமா கிடைக்கும். அப்படி கிடைக்கும் அரிசியை  வாங்கி வைத்து கொண்டாலும் நமக்கு முடியாத நேரத்தில்  மலிவு விலையில் அம்மா உணவகங்கள்.  இப்போ இரவு கூட சப்பாத்தி மிகவும் குறைந்த விலையில்  அப்புறம் என்ன நமக்கு கவலை..? நமது அரசாங்கமே நமக்கு இலவசமாக கிரைண்டர்… மிக்ஸி… மின்விசிறி கூட கொடுக்கிறர்கள். கிட்டத்தட்ட 45 வருட காலமாக தேசியக்கட்சிகள் நமது தமிழ்நாட்டில் ஆட்சியில் அமர முடியில்லை. திராவிட கட்சிகள் இதுவரையில் கொடுத்த இலவசங்களை கண்டிப்பாக இனி அதிகபடுத்துவார்களே தவிர கண்டிப்பாக குறைக்க மாட்டார்கள் என்பது மட்டும் உண்மை, என்னதான் தேர்தல் கமிஷன் தடை போட்டலும் வேறு ஒரு ரூபத்தில் இலவசங்கள் நமக்கு கிடைத்து கொண்டே இருக்கும், நமது வருமானம் குறைவாக இருந்தாலும் இது போன்ற  இலவசங்கள் நம் போன்று உண்மையான வசதி குறைவானவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்,  எனவே நீ இன்னமும் என்னை பாரா முகமாக இருப்பதில் அர்த்தம் இல்லை. இந்த மின் அஞ்சல் கண்டதும் உடனடியாக கைபேசி மூலம் உன் குரலை கேட்பேன் என்ற நம்பிக்கையுடன்  உன் நினைவுகளை மனதில் சுமந்தபடி உலா வருகின்ற

    உன் உளங்கவர்ந்த கள்வன்

    பாலா​​​​​

    27.02.2014

    பின் குறிப்பு: நாளை கண்டிப்பாக நாம் வழக்கமாக சந்திக்கும் இடத்தில காத்திருப்பேன் என்பதை மறவாதே. நேரில் வா … உனக்கு வேறு சந்தேகங்கள் இருந்தா அதையும் நிவர்த்தி பண்ணுகிறேன். அவசியம் வருக . எனக்கு மன அமைதியை தருக.

    Share
  • குறளின் கதிர்களாய்… (22)

     

    செண்பக ஜெகதீசன்ele-index

    சிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பிற்

    பட்டுப்பா டூன்றுங் களிறு.

    -திருக்குறள்- 597 (ஊக்கமுடைமை)

     

    புதுக் கவிதையில்…

     

    அம்புபட்டு புண்பட்டாலும்

    யானை

    அசந்துவிடுவதில்லை,

    தெம்புடன் முன்னேறி

    திறமையை நிலைநிறுத்தும்..

     

    ஊக்கமுடையோர் கதையிதுதான்,

    அவர்

    உயர்வுக்குச் சிதைவு வரினும்

    உறுதியாய் நின்று

    ஊக்கமுடன் செயலாற்றி

    இறுதியில் பெறுவார் வெற்றியையே…!

     

    குறும்பாவில்…

     

    அம்பினால் புண்பட்டாலும் அசராமல்

    திறம்காட்டும் யானையாய்

    இடர்களைந்து வென்றிடுவர் ஊக்கமுள்ளோர்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    அம்பது பட்டுப் புண்படினும்

    அந்த வலியையும் பாராமல்

    தெம்பு கொண்டே முன்னேறும்

    திறமை மிக்க யானையைப்போல்,

    நம்பும் வெற்றிப் பாதைதனில்

    நலிவு யேதும் வந்திடினும்

    தெம்பாய் முயன்று பணிசெய்வார்

    தீதிலா வெற்றி பெறுவாரே…!

     

    லிமரைக்கூ…

     

    ஊக்கமுடன் திறம்காட்டும் புண்படினும் அம்பால்,

    உறுதியுடன் யானைபோல்

    இடர்கடந்து வென்றிடுவர் ஊக்கமுள்ளோர் தெம்பால்…!

     

    கிராமியப் பாணியில்…

     

    ஆன ஆன போர்யான

    அம்பாரி வச்ச போர்யான,

    அஞ்சா நெஞ்சப் போர்யான

    ஆவேச மான போர்யான,

    அம்பு பட்ட புண்ணுடனும்

    தெம்பாப் போவும் போர்யான

    தெறம காட்டும் போர்யான..

     

    இப்புடித்தான்,

    தும்பம் வந்து தடுத்தாலும்

    தொல்ல வந்து மறிச்சாலும்,

    தொவண்டு வெலவிப் போவாம

    தெம்பா வேல செஞ்சிவரும்

    தெடமா மனசு உள்ளவந்தான்,

    தெறம காட்டிச் செயிப்பானே…!

     

    http://www.personal.psu.edu/afr3/blogs/SIOW/2011/10/the-elephants-trunk.html

           

    Share