Blog

  • கலித்தொகையில் ஐந்திணை அமைப்பு முறை!…

    பேரா.துரைஅரசன்

    கலித்தொகையில் ஐந்திணை அமைப்பு முறை

    நோக்கம்:

    ஐந்திணகளைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற வரிசை முறையில் கூறுவதே நடைமுறை வழக்காகும். ஆனால் தொல்காப்பியம் தொடங்கி அகப்பொருள் இலக்கணம் கூறும் பல இலக்கண நூல்களில் ஐந்திணைகளின் வரிசை முறை வெவ்வேறாக உள்ளன. இந்நூல்கள் கூறும் வரிசை முறையிலிருந்து கலித்தொகையில் இடம் பெற்றுள்ள இத்திணைகளின் வரிசைமுறை முற்றிலும் மாறி அமைந்துள்ளது. இது குறித்து ஆய்வு நோக்கில் எடுத்துரைப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    1. தொல்காப்பியர்:

    ‘முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என

    சொல்லிய முறையால் சொல்லவும் படுமே’ (தொல். அகத்திணையியல், நூ.5 )

    என்பது ஒல்காப் புகழ் தொல்காப்பியரின் வரிசை அமைப்பியல் முறைமை ஆகும். இதில் தொல்காப்பியர் பாலைத்திணையைக் குறிக்கவில்லை.  இவர்,

    ‘நடுவண் ஐந்திணை நடுவண தொழிய

    படுதிரை வையம் பாத்திய பண்பே’ (தொல். அகத்திணையியல், நூ.2 )

    என்று கூறியதன் மூலம் மேற்காட்டிய வரிசை முறையில் நடுவில் பாலைத் திணை அமைத்துக் கொள்ளப்படும். எனவே, தொல்காப்பியர் கருத்துப்படி முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்பது ஐந்திணை வரிசை முறை ஆகும்.

    2. நம்பியகப்பொருள்:

    நம்பியகப்பொருள் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்று ஐந்திணைகளை வரிசைப்படுத்தி உள்ளது. இதனை,

    ‘குறிஞ்சி பாலைமுல்லை மருதம்

    நெய்தல்ஐந்திணைக்கு எய்திய பெயரே’          (நம்பியகப்பொருள், அகத். நூ. 6)

    என்று அந்நூல் குறிப்பிட்டுள்ளது.

    3. இறையனாரகப்பொருள்:

    இறையனராகப்பொருள் குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்று ஐந்திணைகளை வரிசைப் படுத்தி உள்ளது. இதனை, ‘ஐந்திணையாவன யாவையோ எனின், குறிஞ்சி நெய்தல் பாலை முல்லை மருதம் என இவை’ (இறையனராகப்பொருள் உரை,ப.17) என்பதன் மூலம் அறிய முடிகிறது.

    4. தொன்னூல் விளக்கம்:

    தொன்னூல் விளக்கம் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசை முறையைக் கையாண்டுள்ளது. இதனை,

    ‘குறிஞ்சி பாலை முல்லை மருத
    நெய்த லைந்திணைக் கெய்திய பெயரென
    வரையே சுரமே புறவே பழனந்
    திரையே யவையவை சேரிடந் தானு
    நிரையே யைந்திணை நிலமெனப் படுமே’        (தொன்னூல் விளக்கம், நூ.174)

    என்ற தொன்னூல் விளக்க நூற்பா காட்டி நிற்கிறது. நம்பியகப்பொருள், தமிழ்நெறி விளக்கம், தொன்னூல் விளக்கம் ஆகியன ஐந்திணை வரிசை முறையில் ஒத்துள்ளன.

    5. தமிழ்நெறி விளக்கம்:

    தமிழ்நெறி விளக்கம் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்று நம்பியகப்பொருள் வரிசை முறையையும் தொன்னூல் விளக்க வரிசை முறையையும் ஒத்து அமைந்துள்ளது. இதனை,

    ‘பொருப்பே வெம்பரல் புறவொடு பழனம்
    பரப்பமை வாரி குறிஞ்சிமுதற் பாகே’                      (தமிழ்நெறி விளக்கம், நூ.3)

    என்ற நூற்பாவின் வழி அறிய முடிகிறது.

    6. வீரசோழியம்:

     முல்லை குறிஞ்சி மருதத் தொடுமுது பாலைநெய்தல்
    சொல்லிய காஞ்சி சுரநடை கைக்கிளை பாலைதும்பை
    இல்லவண் முல்லை தபுதாரந் தாபத மேய்ந்தவள்ளி
    அல்லது காந்தள் குறுங்கலி வெட்சி யடல்வஞ்சியே

    (வீரசோழியம் 87)

    என்ற வீரசோழிய நூற்பா முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்று ஐந்திணை அமைப்பு முறையைக் குறிப்பிட்டுள்ளது.

    7. முத்துவீரியம்:

    முத்துவீரியம் ஐந்திணை வரிசைமுறையை,

    ‘அகப்பொருள் கைக்கிளை யைந்திணை பெருந்திணை
    எனவெழு வகைப்படு மென்மனார் புலவர்’  (முத்துவீரியம், நூ.770)

    என்ற நூற்பா மூலம் காட்டியுள்ளது. இதற்கு ‘அகப்பொருள் – கைக்கிளையும், குறிஞ்சி – முல்லை – பாலை – மருதம் – நெய்தலாகிய ஐந்திணையும், பெருந்திணையும் என ஏழு வகைப்படும்’  (மேற்படி, ப. 215) என்று உரையாசிரியர் விளக்கம் கூறியுள்ளார். இவ்வரிசை முறை தொல்காப்பிய வரிசை முறையைப் பின்பற்றி அமைந்துள்ளது.

    8. சுவாமிநாதம்:

    ‘திணைகுறிஞ்சி, பாலை,முல்லை, மருத(ம்),நெய்தல், ஐந்தாம்’  (சுவாமி. நூ. 72)

    என்று ஐந்திணைகளை சுவாமிநாதம் வரிசைப்படுத்தி உள்ளது. இவ்வரிசை, நம்பியகப்பொருள், தொன்னூல் விளக்கம், தமிழ்நெறி விளக்கம், சுவாமிநாதம் ஆகிய நூல்களில் அமைந்துள்ள வரிசைமுறையை ஒத்துள்ளது.

    ஐந்திணை வரிசைமுறை:

    எனவே மேற்கண்ட செய்திகளைத் தொகுத்து நோக்குமிடத்து ஐந்திணைகளை வரிசைப்படுத்துகின்ற முறையில், தொல்காப்பியமும் முத்துவீரியமும் ஒத்துணவர்வு கொண்டுள்ளன. அதாவது முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்று இவ்விரு நூல்களும் ஐந்திணைகளை வரிசைப்படுத்தி உள்ளன.

    நம்பியகப்பொருள், தொன்னூல் விளக்கம், தமிழ் நெறி விளக்கம், சுவாமிநாதம் ஆகிய இலக்கண நூல்கள் ஐந்திணைகளை குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்று வரிசைப்படுத்தி உள்ளன.

    இவ்விரண்டு முறைகளிலிருந்தும் வேறுபட்டு இறையனராகப்பொருளும் வீரசோழியமும் வெவ்வேறு முறைகளைக் குறிப்பிட்டுள்ளன. அதாவது இறையனராகப்பொருள் குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்று வரிசைப்படுத்தி உள்ளது; வீரசோழியம் முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்று வரிசைப்படுத்தி உள்ளது.

    உலக வழக்கு:

    ஐந்திணை வரிசை முறைகளில் மேற்கண்ட எட்டு நூல்களில் நான்கு முறைகளைக் காணமுடிகிறது. ஆனால், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பதே நடைமுறை வழக்காக அல்லது உலக வழக்காக உள்ளது. இவ்வுலக வழக்கையும் இணைத்துப் பார்த்தால் ஐந்திணை வரிசை முறையில் ஐந்து நிலைகள் உள்ளன.

    கலித்தொகை:

    மேற்காட்டிய ஐந்து முறைகளிலிருந்தும் மாறுபட்ட வகையில் கலித்தொகையின் ஐந்திணை வரிசை அமைப்பு முறைமை அமைந்துள்ளது. அதாவது கலித்தொகையில் பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்ற முறையில் ஐந்திணை வரிசை அமைந்துள்ளது.

    ஐயங்கள்:

    கலித்தொகையில் அமைந்துள்ள இம்முறை சரிதானா?  இங்ஙனம் அமைக்கக் காரணம் என்ன? பாலையை முன் வைத்தது சரிதானா? என்ற வினாக்கள் எழுகின்றன.

    நச்சினார்க்கினியர்:

    உச்சிமேற் புலவர்களில் நச்சினார்க்கினியர் தொல்காப்பியர் ‘சொல்லிய முறையால் சொல்லவும் படுமே’ என்றதால் சொல்லாத முறையிலும் சொல்லவும் படும் என்று கூறி கலித்தொகையின் வரிசை முறையை நியாயப்படுத்த முனைகிறார். ஆனால் அவரின் இவ் வாதம் ஏற்புடையதன்று.

    கலித்தொகையின் ஐந்திணை வரிசைமுறைக்கானக் காரணங்கள்:

    கலித்தொகையில் ஐந்திணை வரிசை முறை இங்ஙனம் அமையப் பின் வரும் காரணங்களைக் கூறலாம்:

    1) ‘வினையே ஆடவர்க்கு உயிரே’ என்பதால் தலைவியைப் பிரிந்து தலைவன் கடமையாற்றச் செல்வதால் பாலையை முன் வைத்தார் எனலாம்.

    2) கல்வி, தூது, செல்வம் ஈட்டுதல் பொருட்டுத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வான். இவை ஆடவரின் இயல்பாதலால் இதன் பொருட்டுப் பிரியும் பிரிவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாலையை முன் வைத்திருக்கலாம்.

    3) பிரிந்து போய் தலைவன் ஆற்றும் செயல்கள் எல்லாம் அவன் செய்வதற்குரிய அறங்களே ஆகும். மேலும் இல்லத்தில் நிகழ வேண்டிய விருந்தோம்பல் முதலிய நல்லறங்கள் முட்டின்றி நிகழ்வற்கும் இவை இன்றியமையாக் காரணங்களாகும். இவற்றை எல்லாம் இத்திணை தன்னுள் அடக்கி நிற்றலான் இத்திணையைத் தலையாயதாகக் காட்டும் முகத்தான் கலித்தொகையில் முன்னிறுத்தி இருக்கலாம்.

    4) பாலை முழுவதும் பிரிவன்று; தலைவன் பிரிவானோ என்று அஞ்சுவது பெரும்பாலும். அஞ்சும் பொழுது அன்பின் நொய்மை நன்கு புலப்படும். பிரிந்து சென்றவன் தான் விட்டு வந்த மனைவியைக் குறித்து வருந்துவது; நடுவில் ஐயோ இவ்வளவு கொடுமையான வழியில் சென்றேனே என்று வழியைக் குறித்து வருந்துவது. எந்தப் புலவனும் துன்பத்தைப் பற்றிச் சொல்லும்போதுதான்,  மனித தத்துவத்தை அறிந்துள்ள முறையை நன்குணர்த்த முடியும். ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் Tragic-Comedies சிறந்தவை என்பர். இதற்குக் காரணம் இன்பமும் துன்பமும் விரவி வருவதே ஆகும். அது போலவே தமிழிலும் பாலைத்திணை சிறந்தது. ஆதலால் கலித்தொகை என்னும் தொகையுள் பாலைத்திணையை முற்கூறியதில் அதிசயம் ஒன்றுமில்லை என்று கலித்தொகை சொற்பொழிவுகள் என்ற நூலில் திருமதி ஞானம்பாள் அம்மையார் (ப.74) குறிப்பிட்டுள்ளார்.

    முடிவுரை:      

    முதுகலைத் தமிழ் பயில்கின்ற காலத்தில் கலித்தொகைப் பாடத்தைப் படிக்கின்ற வேளையில்  கலித்தொகையில் பாலையை முன் வைத்தது சரியா என்று ஐயம் கொண்டேன். அவ்வையத்திற்கு விடை தேடியபொழுதுதான் கலித்தொகை சொற்பொழிவுகள் என்ற நூலில் திருமதி ஞானம்பாள் கூறிய விளக்கங்கள் கிடைத்தன. இது சரியா? ஏற்புடையதா? என்பதைத் தமிழாய்வுலகம் ஆராய்ந்து தெளிவுறுத்த வேண்டும்.

    இக்கருத்தை முன் வைத்து இக்கட்டுரையை எழுத முனைந்தபொழுதுதான் அகப்பொருள் கூறும் இலக்கண நூல்களில் ஐந்திணை வரிசைமுறை எங்ஙனம் அமைந்துள்ளது என்று  ஆராய்ந்தேன். அப்பொழுதுதான் மேற்காட்டிய எட்டு நூல்களில் ஐந்திணை வரிசைமுறை வெவ்வேறு விதமாக (எட்டு நூல்களில் நான்கு விதம்) அமைந்திருப்பதைக் கண்டறிய முடிந்தது. ஒரு சிக்கலை அவிழ்ப்பதற்காக இறங்கிய முயற்சியில் இன்னொரு சிக்கல் முகிழ்த்துள்ளது. அதாவது உலக வழக்காக உள்ள குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற வரிசைமுறை மேற்காட்டிய எந்த நூல்களிலுமே இடம் பெறவில்லை. இவ்வரிசை முறை எப்படித் தோன்றியது?; எங்கிருந்து வந்தது?.

    ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போல ஐந்திணை வரிசைமுறை பற்றிய விளக்கம் கடினமானதாகப் போய்க்கொண்டிருக்கிறது. தமிழில் எல்லாவறையும் ஆய்வு செய்தாகி விட்டது; அதில் மேலும் ஆய்வு செய்வதற்கு ஒன்றுமில்லை என்பவர்கள்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

    Share
  • சிறு கை அளாவிய கூழ் (4)

     

    இவள் பாரதி 

     
    கண்ணெதுpappa
    மூக்கெது
    தலையெது என
    தன் குட்டிவிரலால்
    சுட்டிக் காட்டுகிறாய்
    எப்படி அழுவாய்
    எனக் கேட்க
    கண்கள் இடுக்கி
    உதடு குவித்து
    எழுப்பும் ஒலியும்
    முகபாவமும்
    எந்தத் திரையிலும்
    பதிவு செய்யப்படாதது

    முகத்தருகே வந்து சிரிக்கிறாய்
    சிரித்த கணம் முடிவதற்குள்
    கன்னத்தில் அடிக்கிறாய்
    கண்கலங்கித் துளிவீழுமுன்னே
    கைதட்டிச் சிரிக்கிறாய்
    என்ன செய்ய என்னை?
    என்ன சொல்ல உன்னை?

    Share
  • வாழ்க்கை நலம் – 50

    குன்றக்குடி அடிகள்

    50. நன்றி பாராட்டுக!

    “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
    அன்றே மறப்பது நன்று”
    (திருக்குறள் –  108)

    என்பது திருக்குறள். இந்த ‘நன்றி’ என்ற சொல் இன்று உலக வழக்கில் சாதாரண வழக்கிற்கே கையாளப்பெறுகிறது. அதாவது, ஒருவர் செய்த உதவியை மறத்தல் கூடாது. உதவியைப் பெற்றவுடன் நன்றி கூறுதல் வேண்டும் என்ற வழக்கு மேலோங்கி நிற்கிறது.

    இன்று எந்த நிகழ்ச்சியானாலும் “நன்றி கூறல்” என்பது ஒரு சடங்காக இடம் பெற்றுவிட்டது. இது தவறன்று. ஆயினும், திருக்குறளின் பொருள் வழி நன்றி என்ற சொல் ஆழமான பொருள் தருவது. நன்று என்ற சொல்லிலிருந்து நன்றி என்ற சொல் பிறக்கிறது. அதாவது ‘நல்லது’ என்ற சொல்தான் நன்றி என்ற சொல்லாக வழங்கப் பெறுகிறது.

    ஒருவர் ஒருவருக்குச் செய்த நல்லதை மறத்தல் கூடாது என்பது கருத்து. அந்த நல்லதைத் தொடர்ந்து சிந்தையிலும் செயலிலும் காப்பாற்றி வரவேண்டும் என்பதே கருத்து. அப்படி காப்பாற்றிக் கொண்டு வாழ்வதே நல்லது செய்தவருக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் தருவதாகும்.

    ஒருவர், ஒருவருக்கு நல்லது செய்தல் என்பது விரிந்த அளவுடையது. சிந்தையால், சொல்லால், செயலால் நன்மை செய்யலாம். ஆனால், இன்று நன்மை என்பதைப் பொருள் அளவினதாகச் சுருக்கி விட்டார்கள்.

    பொருளைவிட, நல்லறிவு கொள்ளுதல், நன்னடை நல்குதல் முதலியனவும் நல்லனவேயாம். இத்தகு நல்லனவற்றைப் பாராட்டி ஏற்று ஒழுகுதலே நன்றி. ஒரோ வழி நன்றல்லாதவற்றை மறந்தால் தான் நெஞ்சிறுக்கம் கொஞ்சம் குறையும்.  ஆதலால், அன்றே மறப்பது நன்று என்றார்.

    புறநானூறு, திருக்குறளை அறநூல் என்று பாராட்டுகிறது ஏன்? அறங்களில் சிறந்தது நன்றி மறவாமை. இந்த நன்றி மறவாமை என்ற சிறந்த பண்பின் வாயிலாக பல்வேறு நற்பண்புகள் தோன்றி வளர வாய்ப்புள்ளது.

    ஆதலால், நற்பன்புகளுக்குள் சிறந்த பண்பு நன்றி மறவாமை. நன்றி பாராட்டுதல் ஒரு நல்லொழுக்கம். நன்றி பாராட்டுதல் ஒரு சிறந்த வாழ்க்கை நெறி.

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • மதுமொழியானாய் ! மணிமொழியே!

    தில்லி                                                      உ                            25-02-14

     

    மொழியே மொழியே தமிழ் மொழியே

    ஈன்றெனைக்  காத்தத் தாய்மொழியே

    மணியென அழைத்தாய்! மார்பளித்தாய்!

    மதுமொழியானாய் ! மணிமொழியே!

     

    மழலாய் என்றென்  த‌மிழ் ரசித்தாய்

    நிழலாய்  வந்தென்  நடை பயின்றாய்

    சுழலாய் வாய்மொழி திகட்டியதாய்

    குழலாய் மடலை வரைந்தேன்! நான்.

     

    காலம் மாறும் உண்மைதான் காசினி மாறும் உண்மைதான்

    பாலம் ஆகும் மொழிபெயர்ந்தால் பலனும் இல்லை உண்மைதான்

    தமிழைத் தமிலாய் சிலர் கூற தமிழை ட்டமிலாய் சிலர் பேச

    அமுத அப்பம் கரைந்திங்கே அப்பளமாகி நொறுங்குதடி!

     

    கழகம் என்பதைக் கலகமென அழகன் என்பதை அலகனென

    பழகும் நாவில் பலகாலம் பயிலாவகுப்பின் சதியாமோ

    அம்மா அத்தை இவைமாறி “மம்மி ஆன்டி” தமிழானால்

    சும்மா இருக்க முடியாது தோட்டா எடுப்பேன் புரியாது.

     

    “அய்யா” என்று அழைக்காது “ஹாயென்றும்” அழைப்பார்கள்

    “அச்சா”   என்றும் விளிப்பவர்கள் அப்படியாயெனில் விழிப்பார்கள்!

    அயலார் தமிழைக் கற்றாங்கே  அழகாய் சொல்லிடக் கேட்டாலும்

    இயலார் தமிழ்நாட் டுடையோரே! “இன்னா நயினா” என்பார்கள்.

     

    காப்பியம் காவியம் சங்கமென  ஆயும்சரித்திர ஆய்வாளர்

    கூப்பிடும் மேடையில் அங்கமென அறிந்ததை சிரிக்க மொழிவாரே

    தேக்கிய நீர்மடை கூட்டமது  நாற்றமெடுத்திடக் காணாது

    ஆக்கிய  உரையும் வீணாமோ  ஆய்வுரை அதனில் பயனுளதோ?

     

    முகத்தைப் பார்த்து பாராட்டி  சால்வைகளோடு சீராட்டி

    அகத்தைக் கந்தல் ஆக்கியதால் அகந்தையாகிடும் சாராம்சம்

    பணத்தை பதவியும் புகழையுமே தராசு ஆக்கி எடைபோட்டின்

    படைப்பின் ஆக்கம் ஆழமுடன் மொழியும் குழியில் வீழாதோ

     

    முத்துடன் சேரும் முத்தமிழே! மெல்ல எந்தன் முறையீடு

    இத்துடன்  யாவும் போகட்டும் இனிமேலாவது வாழட்டும்

    அன்று வாடியப் புலவர்க்கென பெருத்த செலவினில் மாநாடு

    இன்று வாழும் அறிஞரைநீ      இருக்கும்போதே பாராட்டு

     

    அப்பா அம்மா தமிழ்பேச குழவியர் தமிழில் பதில்கூற‌

    தாத்தா பாட்டி கதைச்சேர‌ பேரர் பேத்தியர் இளைப்பார‌

    தமிழகம் விட்டு நகர்ந்தாலும் இல்லம் தமிழகம் ஆகவிடு

    எழிலகம் எட்டி இருந்தாலும் உள்ளம் தமிழினில் ஆளவிடு

     

    அன்புடன்

    உன் மகன்

    Share
  • “மஹா சிவராத்திரி”

    தமிழ்த்தேனீ

    Picture1

    ஒரு முதியவர் இரவு இனிய இரவு என்று சொல்லிவிட்டுப் படுத்தார், இருமல் வந்தது அவருக்கு, எழுந்து உட்கார்ந்தவர் இன்னிக்கு சிவராத்திரிதான் என்றார். அன்று உண்மையிலேயே மஹாசிவராத்திரி. அது அவருக்குத் தெரியவில்லை….!!!!! அன்று அவர் தூங்கவே இல்லை, ஆனால் தூக்கம்தான் வரவில்லையே என்று ஓம் நம் சிவாய நமஹ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். காலையில் பொழுது விடிந்தது, சற்றே ஆயாசத்துடன் எழுந்து குளித்துவிட்டு, வழக்கமாகச் செய்யும் பூஜையை செய்து விட்டு, காலை உணவு உண்டார். மதியம் நல்ல சாப்பாடு, இரவு வழக்கம் போல் இரண்டு வாழைப்பழங்கள், ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு, இனிய இரவு என்று சொல்லி விட்டு படுத்து தூங்க ஆரம்பித்தார். ஆழ்ந்த தூக்கம். அன்று அவருக்கு இருமல் வரவே இல்லை. அன்று மட்டுமல்ல, அதற்குப் பிறகு அவருக்கு 10 வருடங்களாக இருந்த இருமல் வரவே இல்லை.

    முதல் நாள் இருமலின் கொடூரத்தால் நொந்து போய் இன்று சிவராத்திரிதான் என்று சொன்னாரே, அன்று உண்மையாகவே மஹா சிவராத்திரி…. அதன் விசேஷமோ, அன்றி இறைவன் சிவனின் நாமத்தை அன்று இரவு முழுவதும் ஏகாக்ர சிந்தையுடன் அவர் ஜபித்ததின் விளைவோ, அவருடைய வியாதி முற்றிலும் குணமாகி விட்டது. நம்புபவர்களுக்கு தெய்வம் நட்ட கல்லும் தெய்வமே நாதன் உள்ளிருக்கையில் அதாவது நாதனும் சக்தியும் நமக்குள்ளே இருக்கும் வரை நம்பிக்கைதானே தெய்வம்.

    ஆகவே நாம் தெரிந்து செய்தாலும், தற்செயலாக செய்தாலும், நல்ல நேரங்களில் இறைவனை தொழுவது நல்ல பலன்களையே தரும் என்பது சத்தியமான உண்மை. நாமறியாமல் செய்யும் பாவங்களும் புண்ணியங்களும் அனைத்திற்கும் பலன் நமக்கு வந்து கொண்டே இருக்கிறது. ஆகவே தெரியாமல் எவ்வளவோ பாவங்கள் செய்கிறோம். தெரிந்தே ஒரு புண்ணியமாவது செய்வோமே. நாளை இரவு மஹா சிவராத்திரி,மாசி மாதத்தில் வரும் தேய்பிறைச் சதுர்த்தசி இரவே மஹா சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது. மஹா சிவராத்திரியில் சர்வேஸ்வரனையும் அம்பிகையையும் ஆத்ம சமர்ப்பணம் என்னும் மனப்பூர்வமான பக்திசெலுத்தினால், பெரும் புண்ணியம் என்று சொல்வார்கள், மகிமையைப் நாமும் தான் உணர முற்படுவோமே.

    ப்ரும்ம முஹூர்த்தம் என்று சொல்லக்கூடிய விடியற்காலையில் எழுந்து குளித்துவிட்டு, மனப்பூர்வமாக மஹாசிவனை வழிபட்டு, இரவு முழுவதும் அர்த்தநாரீச்வரனாகிய ஈச்வரனை மனதிலிருத்தி தூங்காமல் விழித்திருந்து, அவன் லீலைகளை சொல்லக்கூடிய திருவாசகம் படித்து மறுநாள் காலையில் ஸ்னானம் செய்துவிட்டு அந்த மஹா சிவனையும் அகிலாண்டதேவி அன்னை பராசக்தியையும் நமஸ்கரித்து விரதம் முடிப்போம். மேலும் சக்தியை தன்னில் பாதியாகக் கொண்ட சிவ பெருமானுக்கும் சக்திக்கும் உகந்த அத்துணை சித்ரான்னங்களையும், அவர்களுக்கு மனப்பூர்வமாக நைவேத்யமாகப் படைத்து நம் மனதுக்கும், சக்தி சமேத ஈச்வரனுக்கும் உகந்த மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்து (முக்கியமாக வில்வ இலைகள்) அம்பாளையும், ஈச்வரனையும் தம்பதி சமேதரராக மானசீகமாக இருத்தி குடும்பத்தில் உள்ள அனைவரும் நமஸ்காரம் செய்து, மனம் குளிரப் பண்ணி, நாமும் அந்த ப்ரசாதங்களை மனமார, வயிறார உண்டு, கூடியவரையில் அன்று ஒரு நாளாவது, சில ஏழைகளுக்கும், அந்தப் ப்ரசாதங்களைப் பகிர்ந்தளித்து அவர்களையும் த்ருப்திப் படுத்துவோம்.

    “தெய்வம் மனுஷ ரூபேண” என்று சாஸ்திரங்கள் சொல்கிறது, பல ராத்திரிகள் நம்மை தூங்கச் செய்து, காலையில் சக்தியை அளித்து, அதாவது மீண்டும் நமக்கு உயிராகிய சக்தியை அளித்துக் காக்கும் அம்பாளையும் ஈச்வரனையும் நமஸ்கரித்து அருள் பெறுவோம்….!!!!! எல்லா நலன்களும் நம்மை நாடி வந்தடையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.

    ஈஸ்வரோ ரக்ஷது :

    Picture1

    Share
  • திருமால் திருப்புகழ் (11)

     

    கிரேசி மோகன்

     images (2)

    தந்ததன தந்தனம் தந்ததன தந்தனம்
    தந்ததன தந்தனம் – தந்ததான….

    ———————————————————————————————————————–

    “சஞ்சலமொ ழிந்திடும் சிந்தைமவு னம்பெறும்PESUMPERUMAL KOOZHAMANDHAL VAAMANA
    செங்கிரிய மர்ந்திடும்-வெங்கடேசன்
    பின்புரம ணன்சொலும் அந்தர்முகம் சென்றிடும்
    அன்பரின கந்தையுளம்-எந்தநாளும்
    அஞ்சலென சென்றமரும் அந்தரிசி வன்பதம்
    அந்தவழி சென்றிடும்-நெஞ்சுதாராய்
    சங்கொடுசு ழன்றிடும் செந்திகிரி தண்டமும்
    நந்தகிவில் தங்கிடும் -அங்கையோடு
    பஞ்செனப டர்ந்திடும் செந்திருக ரம்தரும்
    சங்கமசு கம்பெரும் -ரங்கநாதா
    வந்திரணி யன்பலம் வென்றவனை கொன்றிடும்
    கம்பமுறை சிங்கமுகம் -கொண்டமாலே
    தஞ்சமென வந்துதன் செஞ்சரண்அ டைந்ததும்
    தம்பிமுறை தந்திடும் -அஞ்சனாவின்
    பஞ்சமுகம் கொண்டவன் இந்திரியம் வென்றவன்
    அந்தஅனு மன்தொழும் -எம்பிரானே”……..

    Share
  • திருவிளையாடல்….

     

    கிரேசி மோகன்

    ஓவியம் ; கிரேசி மோகன்
    ஓவியம் ; கிரேசி மோகன்

    அப்பர் தமிழ்கேட்டு வெப்பக் களவாயை
    அப்பிய சந்தனமாய் ஆக்கியோய் -தப்பில்
    குதியிட்டுத் தாழ்ந்தேன் மதியில் சதங்கை
    ஜதியிட்டுத் தாண்டவ மாடு….
    அசையும் உயிரில் அசைவாய் இருந்து
    அசையாது நிற்கும் அரனே – இசைந்து
    பசையாய் இடபாகம் பற்றிய உமையும்
    அசைந்திடத் தாண்டவ மாடு….
    இல்லையென்று சொல்வோர்(கு) இயம்ப பதிலில்லை
    தில்லையில் என்வீட்டுத் திண்ணையில் -இல்லையேல்
    கொல்லையில் நான்மட்டும் காண்பதற்கு இல்லையென்று
    சொல்லாது தாண்டவம் ஆடு….
    இல்லம் புகந்தன்று பிள்ளைக் கறியுண்டு
    வெள்ளை மனச்சிறுத் தொண்டர்தம் -உள்ளத்தை
    சோதித்த ஆண்டவா சொக்கநாதா என்நெஞ்சில்
    தாதித்தை தாண்டவம் ஆடு….
    கால்கட்டு சுந்தரர்க்கு கைகட்டு போட்டவரின்
    மால்கட்(டு) அவிழ்த்த மகாதேவா -நூல்கட்டி
    ஆட்டுவிக்கும் அம்பலனே ஆடுமிந்த பொம்மையை
    ஆட்படுத்த தாண்டவம் ஆடு….

    மண்சுமந்து பிட்டுக்குப் புண்சுமந்தாய் மேனியில்முக்
    கண்சுமந்து கந்தனைக் கண்டெடுத்தோய் -பெண்சுமந்த
    பாகத்தோய் நஞ்சுண்ட தாகத்தோய் என்நெஞ்சில்
    ஆகமத் தாண்டவம் ஆடு….
    முடவனன்று வேண்ட தடதடவென்(று) ஓடி
    குடமுழுக்(கு) ஆடிய கும்பேசா -விடமுண்டோய்
    ஆடை கரித்தோல் அணிந்தெனது நெஞ்சமாம்
    மேடையில் தாண்டவம் ஆடு….
    நாம்நமதை விட்டு நமச்சிவாய நாமத்தை
    ஒம்நமஹ சேர்த்தென்றும் உச்சரிப்போர் -காமமதை
    வென்றிடக் கைகொடுக்கும் விஸ்வேசா என்நெஞ்ச
    மன்றிடைத் தாண்டவம் ஆடு….

    நாரதன் தும்புரு நந்தி மிருதங்கம்
    பாரதி வீணை பயின்றிட -வாரிதி
    வானைப் பிடித்திட வையம் அறிந்திட
    தாணுவே தாண்டவம் ஆடு….
    நாவாரப் பைந்தமிழில் தேவாரப் பிள்ளைக்குப்
    பாவூற வைத்த பரமசிவா -பூவாரம்
    கொன்றையும் கங்கையும் கொண்டையில் சூடியோய்
    என்றென்முன் தாண்டவம் ஆடு….

    பதினாறைப் பெற்றோன் பெருவாழ்வைப் போக்க
    அதிகாரம் செய்த எமனை -குதிகாலால்
    எட்டி உதைக்க எழுந்த பதமென்மேல்
    பட்டிடத் தாண்டவம் ஆடு….
    பெரிய புராணம் படித்தறி யேனே
    நரியைப் பரியாக் கியவா -இறைவாநான்
    நாயன்மார் ஆகிஉன் நாமம் ஜபித்திட
    நீயென்மார் தாண்வம் ஆடு….
    பிரிவோடு வாழ்ந்த திருநீல கண்டன்
    உறவோடு சேர உகந்தோய் -திருவாரூர்
    த்யாகேசா தில்லை நடராசா நெஞ்சத்(து)
    ஆகாசம் தாண்டவம் ஆடு….
    பூசலா நாயனாரின் மாசிலா நெஞ்சத்து
    வாசியாக கோயில் வளர்த்தோய் -காசிக்கு
    வந்துன்னைக் காண்போரை வாழ்விப்போய் என்நெஞ்சில்
    தந்தனத்தோம் தாண்டவம் ஆடு….

    தேனிக்குப் போட்டியாய் மாணிக்க வாசகன்தன்
    ஆணிப்பொன் பாக்கள் அருந்தியுந்தன் -தீவிக்கும்
    கண்டத்து நஞ்சை அமுதாக்கிய சங்கரா
    பண்டைஊழ் தாண்டவம் ஆடு….
    விழிமலர்த் தூவி வழிபட்ட வேடன்
    அழிவிலா நாயன்மா ராக -வழிவகுத்தோய்
    நானார் அறிந்திட நீயென்னுள் ஆனந்தக்
    கோனாராய் தாண்டவம் ஆடு….

    அஞ்சை அடக்கிடலாம் அஞ்சா(து) இருந்திடலாம்
    அஞ்சிரெண்டு மாதகர்பம் ஆட்படாய் -அஞ்சிலொன்றில்,
    அஞ்சிலொன்றைத் தாண்டிய அஞ்சனசேய் அம்சமான
    அஞ்செழுத்துக் காரன் அளிப்பு
    ————————————————————————————————————————–

    Share
  • இன்னாசெய்தார்க்கும் இனியவேசெய்த இறைநேசர்!

     

    மேகலா இராமமூர்த்தி

    திருச்சிற்றம்பலம்

    ஒ‌வ்வொரு மாதமு‌ம் தே‌ய்‌பிறை‌யி‌ல் வரு‌ம் ‌சது‌ர்‌த்த‌சி நா‌ள் ‌சிவரா‌த்‌தி‌ரி எ‌ன்று கருதப்படு‌கின்றது. மா‌சி மாத‌த்‌தி‌ல் தே‌ய்‌பிறைக் கால‌த்‌தி‌ல் வரு‌ம் சதுர்த்தசி நாளையே நா‌ம் மகா ‌சிவரா‌த்‌தி‌ரியாகக் கொண்டாடி வருகின்றோம்.  இந்த மகா சிவராத்திரியின் வரலாறு குறித்துப் பல்வேறு புராணக் கதைகள் கூறப்படுகின்றன.

    சிவனின் கண்களைப் பார்வதிதேவி விளையாட்டாக மூடியதால் ஈரேழு உலகங்களும் இருளில் மூழ்கின; அந்த நாளே சிவராத்திரி என்பர் பௌராணிகர் சிலர். ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் ’திருநீலகண்டர்’ எனப் பெயர் பெற்றார். அன்றைய தினத்தன்று இரவு தேவர்கள் பரமேஸ்வரனை வணங்கித் துதித்தனர்; அந்நாளே சிவராத்தரி எனக் கூறுகின்றனர் வேறு சில அருளாளர்கள். சிவனாரின் அடிமுடி காணமுடியாமல் நின்ற திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் நெருப்புப் பிழம்பாகச் சிவன் காட்சி தந்த தினமே சிவராத்திரி என்றொரு கருத்தும் கூறப்படுகின்றது.

    சிவராத்திரி விரதமும் சிவதரிசனமும் மறலி பயத்தையும், மரண பயத்தையும் போக்கி முக்திக்கு வழிவகுக்கும் என்பது நாயன்மார்களின் கூற்று. இப்புண்ணிய நன்னாளில் சிவபக்திச் செல்வத்தால் உயர்ந்த – சிவனின் திருவருளுக்குப் பாத்திரமான ஓர் அருட்செல்வரின் வரலாற்றைச் சிந்திப்பது பொருத்தமாக இருக்கும் அல்லவா! அவ்வடியாரின் வரலாற்றை அறிந்துகொள்வோம் வாருங்கள்!

    திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துவந்த மலையமான் வழித் தோன்றல்களில் ஒருவர் மெய்ப்பொருள் நாயனார். சிவனடியார்களின் திருநீற்றுக் கோலமும், உருத்திராக்கமுமே மெய்ப்பொருள் சின்னங்கள் என்று எண்ணிச் சிவனடியார்கள்பால் மிகுகாதல் கொண்டு அவர்களைப் போற்றியபடியால் ‘மெய்ப்பொருள்’ என்ற பெயர் அவருக்கு ஏற்பட்டிருக்கவேண்டும் என எண்ணுகின்றேன். சிவபக்தியில் திளைத்தவராயிருந்தபோதிலும் வாள்வலியிலும் தோள்வலியிலும் சிறந்த பெருவீரராயும் மெய்ப்பொருளார் திகழ்ந்தார். அதனால் திருக்கோவலூரை அவர்தம் பகைவர்களால் கனவிலும் நெருங்க முடியவில்லை.

    அத்தருணத்தில், மெய்ப்பொருளாருடன் பலமுறைப் போரிட்டும் வெற்றி மங்கையைத் தழுவமுடியாமல் தோல்வியையே முத்தமிட்டுவந்த ’முத்தநாதன்’ என்ற பகையரசன் அவரைச் சூழ்ச்சியால் வெல்லக் கருதினான். அதற்கு என்ன வழி என்று அல்லும் பகலும் சிந்தித்தவனின் மனத்தில் அருமையான திட்டம் ஒன்று உதயமானது. ’ஆமாம்! அதுதான் சரி!’ என்று தனக்குள் கூறிக்கொண்டவன் சற்றும் தாமதியாமல் செயலில் இறங்கினான்.

    தன் உடலெங்கும் திருநீற்றைக் குழைத்துப் பூசிக்கொண்டான். கையினில் ஓர் புத்தகப் பையை எடுத்துக்கொண்டு அதிலே கொலைக் கருவியாம் கத்தியை மறைத்து வைத்துக்கொண்டான். திருக்கோவலூரை நோக்கிப் புறப்பட்டான். அவன் பொய்த்தவ வேடம் எப்படி இருந்தது தெரியுமா? விளக்கானது வெளியில் சுடர்விட்டு ஒளிதந்தாலும் அதன் அடிப்பகுதியில் கருமை கொண்டதாய் இருக்குமல்லவா? அதுபோலவே முத்தநாதனின் பொய்த்தவ வேடமும் வெளியில் சிவச்சின்னங்களுடன் திகழ்ந்தாலும் மனத்திலே வஞ்சம் எனும் கருமைகொண்டு திகழ்ந்தது என்கிறார் தெய்வச் சேக்கிழார். அப்பாடல் வரிகள்…

    மெய்யெலாம் நீறுபூசி  வேணிகள் முடித்துக் கட்டிக்

    கையினிற் படைக ரந்த புத்தகக் கவளி யேந்தி

    மைபொதி விளக்கே யென்ன மனத்தினுட் கறுப்புவைத்துப்

    பொய்த்தவ வேடங்கொண்டு புகுந்தனன் முத்தநாதன்.’ (பெரியபுராணம்)

     

    இத்தகைய பொய்க்கோலத்துடன் சென்றவனைக் கண்ட திருக்கோவலூர் மக்கள் அவனை உண்மைச் சிவனடியார் என்றே எண்ணி வணங்கினர். அவன் நடந்துசென்ற வழிகளிலெல்லாம் அவனுக்கு அரசமரியாதை கிடைத்தது. எளிதில் மன்னரின் அரண்மனையை அடைந்தவனைக் காவலாளிகள் அனைவரும் தொழுது ‘தேவரீர் எழுந்தருள்க!’ என்று முகமன் கூறி வரவேற்றனர். அரண்மனையின் பல வாயில்களையும் இலகுவாகச் கடந்து உள்ளே சென்றவன், அந்தப்புர வாயிலை அடைந்து உள்ளே செல்ல எத்தனித்தான். அங்கே காவல் புரிந்துகொண்டிருந்த அரசரின் மெய்க்காப்பாளனான ‘தத்தன்’ என்பவன் முத்தநாதனைத் தடுத்து, ‘ஐயா! சமயமறிந்து உள்ளே செல்ல வேண்டும்! மன்னர் பெருமான் உறங்கிக் கொண்டிருக்கின்றார். இப்போது உள்ளே செல்வது முறையில்லையே?’ என்றான். அவனைத் தீயெழ நோக்கிய அப்பொய்த்தவ வேடத்தான், ‘நான் அரசர்க்குச் சிவனாரின் உறுதிப்பொருள் ஒன்றை உரைக்க வந்துள்ளேன், என்னைத் தடுக்காதே!’ என்று கூறியவாறே உள்ளே புகுந்தான்.

    சிவனாடியாரைக் கண்டதும், உறங்கிக்கொண்டிருந்த மெய்ப்பொருளாரின் அருகில் அமர்ந்திருந்த அரசமாதேவியார் துணுக்குற்று எழுந்தார். தம் கணவரையும் உடனே எழுப்பினார். உறக்கம் கலைந்து எழுந்த மெய்ப்பொருளார், அடியாரைக் கண்டதும் ஆண்டவனையே கண்டதாய் அகமும் முகமும் மலர்ந்தார். ‘ஐயனே! தாங்கள் இங்கு எழுந்தருளியது யாது கருதியோ?’ என்று அன்போடு வினவினார். மர்மப் புன்னகை பூத்த முத்தநாதன், ’சிவபெருமான் பண்டைக் காலத்தில் திருவாய் மலர்ந்தருளிய ஆகமநூல் ஒன்று என்வசம் உள்ளது. அதனை உனக்கு உபதேசிக்கவே இங்குவந்தேன்’ என்றான். பரவசமடைந்த திருக்கோவலூர் அரசர், ’பேறு எனக்கு இதன்மேல் உண்டோ? உடனே உபதேசித்து அருளுங்கள்!’ என்று மகிழ்வோடு கூற, முத்தநாதனோ அருகிருந்த தேவியாரை ஒரு பார்வை பார்த்துவிட்டு, ‘அரசே! நீயும் நானும் தனித்திருக்கும் வேளையிலேயே இவ்வாகமத்தை உபதேசிக்கவேண்டும்!’ என்று கூறக் குறிப்பறிந்த மன்னவன் தேவி உடனேயே அவ்விடம்விட்டு அகன்றார்.

     Untitled

    மெய்ப்பொருளார் முத்தநாதனை ஓர் உயர்ந்த ஆசனத்தில் அமர்த்திவிட்டுத் தாம் பணிவோடு வெறுந்தரையில் அமர்ந்துகொண்டார். ‘ஐயனே! அந்த உயர்ந்த ஆகமத்தை அடியேனுக்கு இப்போது உபதேசிக்கலாமே!’ என்று குனிந்தவண்ணம் அவர் தொழுதிருந்த வேளையில், முத்தநாதன் எனும் அந்த மூர்க்கநாதன் தன் புத்தகக் கவளியில் மறைத்து வைத்திருந்த கொலைக் கருவியை எடுத்துத் தான் செய்ய நினைந்த அப்பரிசே செய்தான்(கத்தியால் குத்தினான் என்பதே இதன் பொருள்) என்கிறார் சேக்கிழார் பெருமான். (அவன் கத்தியால் குத்தினான்; கொலை செய்தான் என்பன போன்ற அமங்கலச் சொற்களை மறந்தும் நாம் பெரிய புராணத்தில் காணமுடியாது; நயத்தகு நாகரிக மொழிகளாலேயே தீச்செயல்களைக் கூடச் சேக்கிழார் விளக்கியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.) முத்தநாதனால் குத்தப்பட்ட மெய்ப்பொருளார் ’மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள்’ என்று கூறியவண்ணம் இரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

    இந்நிகழ்வு நமக்குத் தெய்வப் புலவரின் ’பகைவர்கள் வணங்கித் தொழுகின்ற கையினுள்ளும் கொலைக் கருவி மறைந்திருக்கும்; அவர்கள் அழுது சொரியும் கண்ணீரும் அத்தன்மையானதே!’ எனும் பொருள்தரும் குறளை நினைவுபடுத்துகின்றது.

     

    தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

    அழுதகண் ணீரும் அனைத்து. (குறள்: 828)

     

    சிவனடியார்பால் கொண்ட காதல் காரணமாக, வந்தவர் உண்மையான சிவனடியாரா? இல்லை…பகைவனா? என்பதை மெய்ப்பொருளார் ஆராய மறந்துவிட்டார்!!

    முத்தநாதனின் கொடூரச் செயலை விவரிக்கும் சேக்கிழாரின் பாடல்…

    ’கைத்தலத் திருந்தவஞ்சக் கவளிகை மடிமேல் வைத்து

    புத்தக மவிழ்ப்பான்போன்று புரிந்தவர் வணங்கும்போதில்

    பத்திரம் வாங்கித் தான்முன் னினைந்தஅப் பரிசேசெய்ய

    மெய்த்தவ வேட மேமெய்ப்பொரு ளெனத்தொழுது வென்றார்.’ (பெரியபுராணம்)

     

    தரையில் சரிந்த மன்னரின் குரல்கேட்டு, வாயிலில் காவல் புரிந்தபோதிலும் தன் கவனம் முழுவதையும் உள்ளேயே வைத்திருந்த மெய்க்காவலன் தத்தன் உள்ளே பாய்ந்துவந்தான். அரசரின் நிலைகண்டு வெகுண்டவன் தன் உடைவாளை உருவி முத்தநாதனைக் கொல்லமுற்பட, அப்போதும் முத்தநாதன்பால் மாளாத அன்புகொண்ட மெய்ப்பொருளார் தன் காவலனைத் தடுத்து, ‘தத்தா நமரே காண்! (தத்தா! அவர் நம்மவர்(சிவனடியார்) அவரை ஒன்றும் செய்யாதே!) எனக் கூறவே, செய்வதறியாது திகைத்த தத்தன், ‘பெருமானே! இப்போது நான் என்ன செய்ய?’ என்று நாத்தழுதழுக்க, கண்ணீர்மல்க மெய்ப்பொருளாரை வினவினான். ’இந்த அடியாருக்கு யாதொரு தீங்கும் நேராவண்ணம் நம் ஊரின் எல்லையில் கொண்டுபோய் விட்டுவா, இது என் ஆணை!’ என்றார் மாசிலா மாணிக்கமாம் மெய்ப்பொருள் நாயனார்.

    மன்னரின் கட்டளையைச் சிரமேற்கொண்ட தத்தன், (மன்னரின் நிலையறிந்து)  முத்தநாதனைக் கொல்லவிழைந்த மற்ற காவலர்களிடமிருந்து அந்தப் பொய்வேடத்தானைக் காத்து, ஊரெல்லையில் அவனைப் பத்திரமாகக் கொண்டுசேர்த்துவிட்டு விரைந்துவந்தான் அரசரைக் காண! அவன் திரும்பி வரும்வரையில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்த மெய்ப்பொருளார், தம்மை நோக்கி விரைந்து வந்துகொண்டிருந்த தத்தனின் முகத்தை ஆவலோடு நோக்கினார். தத்தனும் குறிப்பறிந்து, ‘அரசர் பெருமானே! தங்கள் ஆணைப்படி அடியாரை இடையூறு ஏதுமின்றி ஊரெல்லையில் பத்திரமாகச் சேர்த்துவிட்டேன்!’ என்றுகூறிப் பொங்கிவந்த அழுகையை அடக்கிக் கொண்டான். தத்தனை அன்புமீதூறப் பார்த்த நாயனார், ‘ஐயனே! இன்று நீ எனக்குச் செய்த இவ்வரிய உதவியை இனி யாரே செய்வார்?’ என்று அவனைப் பாராட்டிவிட்டுத் தம்மைச் சூழ்ந்துநின்ற சுற்றத்தார், அமைச்சர் பெருமக்கள், அரசியார் அனைவரையும் நோக்கி, ’திருநீற்றினிடத்து (சிவனடியார்களிடத்து) வைத்த அன்பினைச் சோர்வு வாராது பாதுகாத்து உலகிலே கொண்டு செலுத்தக் கடவீர்!’ என்று அன்புக் கட்டளையிட்டுவிட்டுச் சிற்றம்பலத்திலே ஆனந்தக் கூத்தாடும் அம்பலவாணரின் அழகிய கழலணிந்த திருவடிகளைச் சிந்தித்தவண்ணமே கண்மூடியிருந்தார். அப்போது, மெய்ப்பொருளாரின் சிந்தையில் கொலுவீற்றிருந்த அம்பலவாணர் சிவகாமியம்மை சகிதம் தம்மினிய தொண்டர்க்குச் காட்சிதந்து நீங்காமல் தம் திருவடிகளில் தங்கியிருக்கும் பெரும்பேற்றையும் மெய்ப்பொருளார்க்கு அளித்தார் என்பது மெய்ப்பொருள் நாயனார் வரலாறாகும்.

    ’பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே!’ என்ற மகாகவியின் வாக்கிற்குச் சான்றாகவும், வள்ளுவப் பெருந்தகையின்

    இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

    நன்னயம் செய்து விடல்.

    மற்றும்

    இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

    என்ன பயத்ததோ சால்பு. என்ற குறட்பாக்களுக்கும் இலக்கணமாய்த் திகழ்கின்றார் மெய்ப்பொருள் நாயனார் என்பது அவர் வரலாறு வாயிலாய்ப் புலனாகும் செய்திகளாகும்.

    சிவபரம்பொருளுக்குப் பெரிதும் உகந்த இச்சிவராத்திரித் திருநாளில் சித்தத்தைச் சிவன்பால் வைத்துப் பிறவாப் பெருநிலையை அடைந்த சிவநேசச் செல்வர்களைச் சிந்தித்துப் பயன்பெறுவோம்.

    திருச்சிற்றம்பலம்

    படத்திற்கு நன்றி: தினமலர்

    Share
  • மகாசிவராத்திரி – சிவபூசாவிதி

    சுபாஷிணி டிரெம்மெல் – பவள சங்கரி 

    இவ்வருட மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

    இந்தப் பதிவு கடந்த ஆண்டு (2013) சிவராத்திரி தினத்தன்று ஈரோடு ஸ்ரீ மஹிமாலீஸ்வரர் சமேத மங்களாம்பிகைதிருக்கோயிலில் பதிவு செய்யப்பட்டது. அன்றைய தினத்தில் கோயிலில் செய்யப்பட்ட சிறப்பு சிவலிங்க பூஜை இந்தப் பதிவில் இடம் பெறுகின்றது.

    pic12

    பூஜை ஏற்பாட்டில் இடம்பெறும் சிவலிங்கம், பூஜை பொருட்கள் ஆகியவை தயாரானதும் ஆலயத்தில் கருவறையில் இருக்கும் மூலஸ்தான தெய்வத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது. அந்தச் சிறப்பு பூஜையும் இந்தப் பதிவில் பதிவாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து பொது மக்கள் இணைந்து ஈரோடு திரு தங்க. விசுவநாதன் தலைமையில் சிவபுராணம் ஓதி சிவலிங்க பூஜை செய்வதைக் காணலாம்.

    இந்த விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/02/2014_26.html

    யூடியூபில் இப்பதிவைக் காண: http://www.youtube.com/watch?v=t8I64GTDiHM

    திருமதி பவள சங்கரியின், மகா சிவராத்திரியின் சிவ பூஜா விதிகளை விளக்கும் ஒரு கட்டுரையையும் ஈரோடு திரு தங்க. விசுவநாதன் அவர்களின் நித்திய வழிபாட்டு முறை என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையையும் இன்றைய நாளில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம். கட்டுரை கீழே இணைப்பில்!

    இந்த விழியம், மற்றும் புகைப்படங்கள் பதிவினை நான் செய்திட உதவிய திருமதி பவள சங்கரிக்கும் அவர் தம் துணைவர் திரு.திருநாவுக்கரசு அவர்களுக்கும், அனுமதி வழங்கிய ஆலயத்தின் நிர்வாகத்தினருக்கும், திரு தங்க விசுவநாதன் அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

    மேலும் படங்கள்: கட்டுரைக்கு கீழே!

    அன்புடன்
    சுபாஷிணி ட்ரெம்மல்
    [தமிழ் மரபு அறக்கட்டளை]

     
    மகாசிவராத்திரி – சிவபூசாவிதி
    பவள சங்கரி

    ”இவர் ஒரு கற்பத்தில் தம்மையே தியானித்திருந்த காலத்துத் தம் தேகத் துண்டான ஆனந்த பிந்துக்களே சிவலிங்கங்களாயின – (சிவரகசியம்)

    சிவன் – நாராயணர் இவரது கழுத்தைக் கட்டிக் கொண்டதால் கறுத்த கழுத்துடையவரானார்.

    சிவராத்திரி – கால நிர்ணயம், மாசி மாதம் கிருஷ்ணபட்சம், சதுர்த்தசி இரவு, பதினான்கு நாழிகை லிங்கோற்பவ காலம். இதுவே மகா சிவராத்திரி புண்யகாலம்.

    இந்த மகாசிவராத்திரி தினத்தில் நேரிடும் திரயோதசி பரமசிவத்திற்கு தேகமாகவும், சதுர்த்தசி தேகியாகவும், அன்றிச் சக்தியாகவும் சிவமாகவும் கூறப்பட்டிருக்கிறது. சிவராத்திரி முதற் சாம முதல் நான்கு சாமங்களிலும் ஆத்மார்த்த பரார்த்த பூசைகள் நடத்த வேண்டியது. தானஞ்செய்ய வேண்டியது. இதை அனுஷ்டித்தோர் நான்கு யுகங்களிலும் முறையே விநாயகர், கந்தமூர்த்தி, பிரம்ம விஷ்ணுக்களாம். பலன் இம்மையில் சத்சனசானாதி சௌபாக்கிய சம்பத்தும் மறுமையில் சொர்க்காதி போகமுமாம். இது காமியம், நிஷ்காமிகன் இகத்தில் புத்தியும், பரத்தில் முக்தியும் அடைவர்”. – அபிதான சிந்தாமணி.

    பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகியோருக்காக, சிவபெருமானார் லிங்கோத்பவராக எழுந்தருளியபோது, தேவர்கள் பூசித்த காலம் எனவும், ஒரு பிரம்மகற்பத்தில் சக்தி தேவியார், நான்கு காலங்களும் சிவ பூசை செய்து ஐயனை உளம் ஒன்றி வழிபட்ட காலமே சிவராத்திரி என்பது. சிவபெருமானிடம் அன்னையார் வரம் வேண்டிப் பெற்ற நாளும் இதுவே. சக்தி தேவி, பெருமானாரிடம் விளையாடும் முகமாக ஐயனின் திரிநேத்திரங்களையும் மூடப்போக, அகில உலகமே இருளில் மூழ்கிவிட, தேவர்கள் ஐயனை வணங்கி வழிபட்ட காலமும் இதுவே. பாற்கடலில் தோன்றிய நஞ்சுண்டகண்டனான பெருமானாரை அந்த விடம் தாக்காமல் இருக்கும்பொருட்டு தேவர்கள் விடிய விடிய இடையறாது பூசித்த காலமே மகாசிவராத்திரி என்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன. உருத்திரராக வந்த சிவபெருமானார், அண்டங்களின் மாயை எனும் அனைத்து இருளையும் போக்கி, ஞான ஒளியை நீக்கமற எங்கும் நிறையச் செய்த அந்த அற்புதமான காலமே மகாசிவராத்திரி எனப்படுகிறது.

    சிவலிங்கநியாசங்கள் என்பதாவன – தண்டபங்கிநியாசம், முண்டபங்கிநியாசம், ஸ்ரீகண்டநியாசம், ஆகமநியாசம், கலாநியாசம், மாத்ருகா நியாசம் போன்றவைகளாம்.
    சிவதீக்கை

    நம் புற உடலில் ஏற்படும் மாசு மற்றும் நுண்கிருமிகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வது போன்று, ஆன்மா என்ற நம் அகமாகிய உயிரின் மாசு நீங்கும் பொருட்டு அளிக்கப்படுவதே சிவ தீக்கை எனப்படும். ஆண், பெண் என்ற வேறுபாடின்றி சைவ சமயத்தில் பிறந்த அனைவரும் சிவதீக்கை பெறும் தகுதி பெற்றவர்களாகிறார்கள். ‘முள்ளிச் செடிக்கு முக்தி கொடுத்த உமாபதி சிவம்’ மூலமாக, மனிதர்களுக்கு மட்டுமன்றி, பறவை, புல், பூண்டு ஆகியவற்றிற்கும்கூட தீக்கை கொடுக்கப்படுவதை அறிய முடிகிறது. சிவதீக்கை பெறுபவர்கள் உடல், மனம், வாக்கு என்ற மூன்றையும் தூய்மையாக வைத்துக்கொள்பவராக இருக்க வேண்டும். உயர் பண்பும், ஆசாரமும், குரு பக்தியும் உடையவராக இருத்தல் அவசியம். உலக பற்றுகளை கட்டுக்குள் வைத்து தியானத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் வல்லமை பெற்றவராக இருத்தல் நலம்.

    தெய்வ வழிபாடு என்பதே பையப்பைய நம் மனதை பக்குவப்படுத்தி, இகம் மற்றும் பரம் என்ற இரு வாழ்க்கைக்கும் நம்மை அதற்கு உகந்த நிலைக்கு வழிநடத்திச் செல்வது தான். அந்த வகையில் சிவ தீக்கை என்பது அடிப்படையில் மூன்று நிலைகளாகப் பிரித்திருக்கிறார்கள். முதன் முதலில், ‘சமய தீக்கை’ என்கிற அடிப்படையான, சிவலிங்க வழிபாட்டிற்கான ஆயத்தமாக இதனைக் கொள்ளலாம். ‘நான்’ என்ற ஆணவ மலம் அகன்று நாமே சிவம் என்ற உயர் நிலையை அடையும் எண்ணம் உதிக்கத் தோன்றும். சில காலம் மனம் ஒன்றி குரு அருளிய நெறி முறைகளைக் கடைபிடித்து அனுதினமும் அதன் வழி தொடர அடுத்து விசேட தீக்கை பெறும் தகுதியைப் பெறலாம். விசேட தீக்கை பெறுவதன் மூலம் மட்டுமே, சிவலிங்க மூர்த்திக்கு அகப்பூசை மற்றும் அபிசேகம் செய்து, மலர் தூவி வழிபட்டு, அலங்காரங்கள் செய்து, பெருமானாரைத் தம் அகத்திலும், இல்லத்திலும் எழுந்தருளச் செய்யும் புறப்பூசை என்கிற யோக நெறியில் நிறைந்து செய்யும் பூசைக்கான உரிமம் பெறலாம்!

    அடுத்து மூன்றாவதாக வருவது, ‘நிர்வாண தீக்கை’ என்பது. உயிரை ஞான நிலைக்கு இட்டுச் செல்லும் இதனால் பல்வேறு சக்திகளையும் பெற முடியும் என்கிறார்கள். ‘கண்டவர் விண்டிலை, விண்டவர் கண்டிலை’ என்பதே தத்துவம்! இறைவன் தனக்குள்ளும் இருக்கிறார், மற்றனைத்து உயிர்களுக்குள்ளும் உறைந்திருக்கிறார் என்பதை உணரச் செய்யும் தீக்கை என்பதாகக் கொள்ளலாம். முப்பொருள் உண்மையையும், தீய சக்திகளை அடக்கும் கலையையும் அருளும் இந்த நிர்வாண தீக்கை, உலகப் பற்றுகள் அனைத்தும் துறந்த நிலையில் இருப்பவர்களுக்கு வீடு பேறு கிடைக்கும் வகையில் செய்வது, ‘சத்தியோ நிர்வாண தீக்கை’ மற்றும் ஆன்மா, பிரார்த்த வினைப்பயன்களை முழுவதுமாக அனுபவித்த பின்பு, வீடு பேறு (முக்தி நிலை) அடையச் செய்யக்கூடிய, ’அசத்தியோ நிர்வாண தீக்கை’ என்பதாகும். சிவபெருமானின் அருளைப் பூரணமாகப் பெற்று இம்மை, மறுமை இன்பங்களனைத்தும் பெறவே சிவதீக்கை பெறுகிறார்கள்.

    ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
    ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
    ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
    ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.

    அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம்
    கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
    பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்
    துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.

    -சிவவாக்கியர்
    ஏழு வயது ஆன எவரும் சிவதீக்கை பெறலாம். குரு அருளிய திருவைந்தெழுத்து மந்திரத்தை உச்சரிக்கவும், திருநீறை நீரில் குழைத்து திரிபுண்டரமாக பூசிக்கொள்ளவும் சிவதீக்கை பெற வேண்டியது அவசியம். குரு மூலம் தீட்சை பெற வேண்டும் என்பதே சமயக் குரவர்கள் மூலம் நாம் அறியும் நீதி. அகத்திய மாமுனியிடம் ஸ்ரீராமபிரானும், உபமன்யு முனிவரிடம் ஸ்ரீகிருஷ்ணரும் சிவ தீக்கை பெற்று சிவபூசை செய்துள்ளார்கள் என்பதை புராணங்கள் கூறுகின்றன. சமய தீக்கை பெற்று, அன்றாட வழிபாடுகளை நியமங்களின்படி செய்வோருக்கு ஆயுள் கூடும் என்பதும் கண்கூடு. சிவதீக்கை பெற்றவரின் உயிர் முற்றும் அந்தப் பரமனுக்கே உடமையாவதாக ஐதீகம். அந்த வகையில் அந்த உயிரைப் பறிப்பதற்கு எமதர்மனுக்கும் அதிகாரம் இல்லை என்கிறது ஆகமங்கள்.
    ஞான நிலை

    என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே
    என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது கொண்டபின்
    என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ ?
    என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே.

    நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை,
    நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ ?
    அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
    எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே !
    யோக நிலை

    உருத்தரித்த நாடியில் ஒடுங்குகுன்ற வாயுவைக்
    கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
    விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
    அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே.

    அறிவு நிலை

    கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணை மோர்புகா;
    உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
    விரிந்துபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
    இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே.

    -சிவவாக்கியர்
    விசேட தீக்கை பெற்றவர்களின் உயிர் அனந்த தேவருக்கும், நிர்வாண தீக்கை பெற்றவரின் உயிர் சதாசிவ மூர்த்திக்கும் மட்டுமே எடுக்க உரிமையுள்ளதாம். இதனால் தீய சக்திகள் எதுவும் அவர்களை அணுக முடியாது. மேலும் வாரிசுகளால் பிதுர் கடன் ஆற்றாமையாலும் தீங்கு விளையாது. பெருமானாரிடம் பாவ மன்னிப்பு பெறவும் தீக்கை அருள் புரியும். இவையனைத்திற்கும் மேலாக பிரணாயாமம் செய்வதால் அறிவியல் காரணங்களால் இருதய நோயும் அண்டாது. மனம் கட்டுக்குள் அடங்கிவிடுவதால், பூரண அமைதியடைந்து உயிர் தூய்மையடைகிறது. முத்திரைகள் பிடிப்பதால், விரல்களுக்கும், நரம்புகளுக்கும் , நல்ல பயிற்சி கிடைப்பதால் நரம்பு சம்பந்தமான நோய்கள் வராமல் காக்கிறது. ஆன்மார்த்த பூசை செய்வதனால் கடந்தகால பாவங்களின் வினைகள் குறைவதோடு, நிகழ்காலத்தில் பாவங்கள் அணுகாது என்கிறார்கள்.
    தில்லைநாய கன்அவன்; திருவரங் கனும்அவன்;
    எல்லையான புவனமும் ஏகமுத்தி யானவன்
    பல்லுநாவும் உள்ளபேர் பகுத்துகூறி மகிழுவார்;
    வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே.

    எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள்அப்பன் எம்பிரான்
    சத்தியான வித்துளே முளைத்தெழும் அச்சுடர்
    சித்தமும் தெளிந்துவேத கோயிலும் திறந்தபின்
    அத்தன்ஆடல் கண்டபின் அடங்கல்ஆடல் காணுமே.

    உற்றநூல்கள் உம்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர்;
    பற்றறுத்து நின்றநீர் பராபரங்கள் எய்துவீர்;
    செற்றமாவை யுள்ளரைச் செருக்கறுத்து இருத்திடில்
    சுற்றமாக உம்முளே சோதிஎன்றும் வாழுமே.

    அண்டம்நீ அகண்டம்நீ, ஆதிமூல மானநீ,
    கண்டம்நீ, கருத்தும்நீ, காவியங்க ளானநீ,
    புண்டரீக மற்றுளே உணருகின்ற புண்ணியர்,
    கொண்டகோல மானநேர்மை கூர்மைஎன்ன கூர்மையே.
    நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும்
    நமசிவாய அஞ்சில்அஞ்சும் புராணமான மாயையும்
    நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே
    நமசிவாய உண்மையை நன்குஉரைசெய் நாதனே!

    ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
    ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின்
    ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
    ஓம்நமசி வாயமே உட்கலந்து நிற்குமே!

    -சிவவாக்கியர்
    நித்திய வழிபாட்டு முறை

    ஈரோடு திரு தங்க. விசுவநாதன்

    அதிகாலையில் படுக்கையைவிட்டு எழும்போது “சிவ சிவ” என்று இறைவன் திருநாமத்தைச் சொல்லி மடியிலுள்ள திருநீற்றுப் பையிலிருந்து சிறிது திருநீற்றை எடுத்து நெற்றியில் தரித்துக்கொண்டு எழுந்திருக்கவும்.

    1. நீராடுதல்

    நாம் ஆடும் நீரினை இறைவன் வடிவாக எண்ணிக் கீழ்வரும் பதிகத்தைச் சொல்லிக் கொண்டு குளிக்க.

    திருச்சிற்றம்பலம்

    களித்துக் கலந்ததோர் காதற்கசிவொடு காவிரிவாய்க்
    குளித்துத் தொழுது முன்நின்ற இப்பத்தரைக் கோதில் செந்தேன்
    தெளித்துச் சுவையமுது ஊட்டி அமரர்கள் சூழிருப்ப
    அளித்துப் பெரும் செல்வம் ஆக்கும் ஐயாறன் அடித்தலமே. (அப்பர்)

    குளித்தபின் தோய்த்து உலர்ந்த ஆடையையும் கோவண ஆடையையும் அணிந்து கொண்டு துலக்கிய சிறு பாத்திரத்தில் தூய நீரை எடுத்துக்கொண்டு தனியிடத்தில் அமர்ந்து வழிபாட்டைத் தொடங்குக. (வழிபாட்டு அறை தனியாக இருப்பின் சாலச் சிறந்தது).

    2. பிள்ளையார் வணக்கம்

    ஐந்து கரத்தனை ஆனைமு கத்தனை
    இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
    நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
    புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே

    -திருமூலர்
    ஆ. திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
    பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
    ஆதலால் வானோரும் ஆனை முகத்தனைக்
    காதலால் கூப்புவர்தம் கை. [நம்பியாண்டவர் நம்பி]

    [இ] பிடியதன் உருவுமை கொள, மிகு கரியது
    வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
    கடி, கணபதி வர அருளினன் – மிகு கொடை
    வடிவினர் பயில் வலிவலம் முறை இறையே. [1: சம்பந்தர்]
    திருச்சிற்றம்பலம்
    3. சற்குரு வணக்கம்

    சைவ சமய குருமார்கள் நால்வருக்கும், தனக்குத் தீக்கை அருளிய குருவிற்கும் வணக்கம் சொல்லுதல்.

    அ] பூமியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
    ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
    வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி
    ஊழிமலி திருவாதௌஊரர் திருத் தாள்போற்றி [உமாபதி சிவாச்சாரியார்]

    ஆ] தந்தையாய் ஆவானும் சார்கதி இங்காவானும்
    அந்தம் இல்லா இன்பம் நமக்கு ஆவானும்
    எந்தம்உயிர் தான்ஆ குவானும் சரண் ஆகுவானும்
    அருட்கோணாரு வானும் குரு [தத்துவராய சுவாமிகள்]

    4. வழிபடும் இடத்தை சுத்தி செய்தல்

    சிறிது தண்ணீரைக் கையில் எடுத்து, “பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி” என்று ஓதி வழிபாடு செய்யும் இடத்தில் தெளித்து அதை தூய்மை செய்யவும்.
    5. நீரைச்சுத்தி செய்தல்

    தண்ணீரைச் சிவமாக எண்ணி “நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி” என்று மலர் தூவித் தண்ணீரில் சிவலிங்கத் திருமேனியாய் எழுந்தருளியிருக்கும் திருவானைக்காப் பெருமானை எண்ணி,

    வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
    தேனைக்காவில் இன்மொழி தேவிபாகம் ஆயினான்
    ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
    ஏனைக்காவல் வேண்டுவோர்க்கு ஏதும் ஏதம் இல்லையே. [3. சம்பந்தர்]

    என்னும் பதிகம் ஓதித் துதித்து வலக்கைப் பெருவிரலை மடித்துக்கொண்டு, மற்ற விரல்களை நீட்டிக் கவிழ்த்துத் தண்ணீர் உள்ள குவளையை மூடித் திருவைந்தெழுத்தை எண்ணித் துதிக்கவும்.
    6. ஆத்ம சுத்தி [நீரை உட்கொள்ளுதல்]

    நடு மூன்று விரல்களாலும் மேற்கண்ட தண்ணீரை மூன்று முறை தலையின் மேல் தெளித்துக்கொண்டு, சிறிது நீரை உள்ளங்கையில் எடுத்து இறைவனை எண்ணிக்கொண்டு சிவ தீர்த்தமாக மனத்துள் கொண்டு மூன்று முறை உட்கொண்டு அடுத்து வரும் பாடலைச் சொல்லித் துதிக்கவும்.

    ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே;
    ஊழி தோறு ஊழி உயர்ந்தார் தாமே;
    நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே; நீர்,
    வளி, தீ, ஆகாசம், ஆனார் தாமே;
    கொன்று ஆரும் கூற்றை உதைத்தார் தாமே;
    கோலப் பழனை உடையார் தாமே;
    சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே திரு
    ஆலங்காடு உறையும் செல்வர் தாமே. – அப்பர்.
    7. [அ] திருநீற்றைத் தூய்மை செய்தல்

    திருநீற்றைப் பராசக்தியின் வடிவமாக எண்ணி சிந்தித்துத் திருநீற்றைச் சிறிது எடுத்துத் தலை, நெற்றி, உடல், முதலியவற்றில் பூசிக்கொள்ள வேண்டும். மேலும் சிறிது எடுத்து தொப்புழிலிருந்து கழுத்து வரையிலும் சிறிது நேர் கோடுகளாகப் பூசவும். இடது கையில் திருநீற்றை வைத்துக்கொண்டு வலக்கை மோதிர விரலால் சிறிது அதிலிருந்து எடுத்துத் தீய சக்திகளை விலக்க நிருதி மூலையில் [இடது தோளுக்கு மேல் பின்புறமாகத்] தெளித்து விடவும்.

    இடது உள்ளங்கையில் உள்ள திருநீற்றை வலக்கையால் மூடி வலது தொடைமேல் வைத்துக்கொண்டு, அடுத்து வரும் பாடலைப் பாடவும்.

    இராவணன் மேலது நீறு எண்ணத் தருவது நீறு
    பராவண மாவது நீறு பாவம் அறுப்பது நீறு
    தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
    அராவணங் துந்திருமேனி ஆலவாயன் திரு நீறே. – [2.சம்பந்தர்]

    சிறிது நீர் விட்டுத் திருநீற்றைக் குழைத்து, தலை, நேற்றி, மார்பு, புயங்கள், இரண்டு முழங்கை, இரண்டு மணிக்கட்டு, தொப்பூழ், முழங்கால் இரண்டு, வலது – இடது விலாப்புறங்கள் இரண்டு, நடுமுதுகு, கழுத்து ஆகிய பதினாறு இடங்களிலும் இட்டுக் கொள்ளவும். நெற்றி, மார்பு, தோள்களில் ஆறு அங்குலமும், கழுத்து முழுவதும் கீழ்வரும் பாடல்களை சொல்லித் துதித்துக் கொண்டே திருநீறு அணிந்து கொள்ளவும். இதனால் தேகசுத்தி அடைகிறது.

    அ] சந்திரற் சடையில் வைத்த சங்கரன் சாமவேதியன்
    அந்தரத்து அமரர் பெம்மான் ஆன்நல் வெள்ளூர்தி யாந்தன்
    மந்திர நமச்சிவாயவாக நீறணியப் பெற்றால்
    வெந்தறும் வினையும் நோயும் வெவ்அழல் விறகிட்டன்றே [4. அப்பர்]
    ஆ] கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை
    மங்காமல் பூசி மகிழ்வீரே யாமாகில்
    தங்கா வினைகளும் சாரும் சிவகதி
    சிங்காரமான திருவடி சேர்வரே
    -திருமூலர்

    திருநீறு அணிந்த பிறகு கைகளை அலம்பி, அலம்பிய நீர் இடக்கை மூலம் வரும்படியாகச் செய்து இடக்கையை முஷ்டியாகப் பிடித்துக்கொண்டு பெருவிரலை மட்டும் நீட்டி அதன் வழியாகக் கையில் உள்ள நீர் வடிந்து கீழ் உள்ள பாத்திரத்தில் விழும்படியாக வலக்கை முஷ்டியைத் தாழ்த்தி மல்லாத்தி பிடித்துக்கொண்டு பெருவிரல் வழியாக வடியும் நீரைச் சிவத் தீர்த்தமாகப் பாவித்து இடக்கையின் விரல்களினால் ஏற்று, “சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே” என்று இறைவனைத் துதித்துக்கொண்டே மேலே மும்முறை தெளித்துக் கொண்டு வாயிலும் சிறிது விட்டு அருந்துதல் வேண்டும். இதனால் ஆத்மசுத்தி பெறுகிறது.
    7. [ஆ] திருநீறு அணிதல்

    திருநீறு இட வேண்டிய இடம் 16. இப்பதினாறும் இறைவனின் புறத் திருத்தொண்டாம், பதினாறிணையும் முறை தவறாது நிறைவேற்ற அன்புடன் இயற்றுதற்கே இவ்வுடல் என்பதனைக் குறிப்பதாகும்.

    அவை வருமாறு

    1. ஒழுக்கம், 2. அன்பு, 3. அருள், 4. ஆச்சாரம், 5. உபச்சாரம், 6. உறவு, 7. சீலம், 8. தவம், 9. தானம், 10. வந்தித்தல், 11. வணங்கல், 12. வாய்மை, 13. துறவு, 14. அடக்கம், 15. அறிவு, 16. அருச்சித்தல்.

    ஒழுக்கம், அன்பு, அருள், ஆச்சாரம், உபச்சாரம், உறவு, சீலம், வழுக்கிலாத் தவம், வந்தனங்கள், வந்தித்தல், வணங்கல், வாய்மை, அழுக்கிலாத் துறவு, அடக்கம், அறிவோடு அருச்சித்தல், ஆதி இழுக்கிலா அறங்கள் ஆனால் இறங்குவான் பணி அறங்கள். [சித்தியார்]
    திருச்சிற்றம்பலம்.

    8. உறுப்புகளைத் தொடுதல்

    “வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும், தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவா போற்றி”, என ஓதிக் கைகளைக் கூப்பித் தலை வணங்குக. இஃது அருளால் பெற்ற இவ்வுடலால் இறைவனின் அகத் திருத்தொண்டு இயற்றும் முறைமையைக் குறிப்பதாகும்.

    உறுப்புகளைத் தொடும் முறை

    வலக்கைப் பெருவிரல் நுனியை அணி விரல் [மோதிர விரல்] நடுவரையிற் சேர்த்து மற்றைய விரல்களை நீக்கி நமது உடலில் ஒன்பது உறுப்புகளையும் அவ்விரல் கொண்டு தொடுக.

    இவற்றுள் எட்டாவது எண்ணாகிய ஆக்கையைத் தொடுங்கால் இரு கைவிரல்களையும் தனித்தனி இணைத்துச் சிறிது குவித்துத் தலைமுதல் கால் வரை கட்டி, நெஞ்சின் நேர் வைத்துக் கும்பிடுக. 10, 11, 12, திருக்கண்ணிகளை அன்புடன் ஓதிக் கைகள் இரண்டையும் உச்சிமேற் குவித்துத் தொழுக. இம்மூன்றையும் இறை, உயிர், தளை என்னும் முப்பொருள் உண்மையைக் குறிக்கும்.

    1. உச்சி : தலைவனைத் தலையே நீ வணங்காய்.

    2. கண்கள் ; கடல் நஞ்சுண்ட கண்டன் தன்னைக்
    கண்களால் காண்மின் களோ.

    3 . செவிகள் : எரிபோல் மேனிப் பிரான் நிறம்
    எப்போதும் செவிகாள் கேண்மின்களோ

    4 . மூக்கு : வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய்.

    5. வாய் : பேய் வாழ் காட்டகத்து ஆடும்பிரான்
    தன்னை வாயே வாழ்த்து கண்டாய்,

    6. நெஞ்சு : மஞ்சாடும் மலைமங்கை மணாளனை
    நெஞ்சே நீ நினையாய்.

    7. கைகள் : பைவாய் பாம்பரை ஆர்த்த பரமனைக்
    கைகாள் கூப்பித் தொழீர்.

    8. ஆக்கை : அரனைப் போற்றி எண்ணாத இவ
    ஆக்கையாற் பயன் என்.

    9. கால்கள் : கோகரணம் சூழாக் கால்களாற் பயனென்.

    10. இறை : உற்றார் யார் உளரோ!
    உயிர் கொண்டு போம்பொழுது,
    குற்றாலத்துறை கூத்தன் அல்லால்
    நமக்கு உற்றார் யாருளரோ?

    11. உயிர் : இறுமாந்து இருப்பன் கொலோ?
    ஈசன் பல்கணத்து எண்ணப்பட்டுச்
    சிறுமான் ஏந்திதான் சேவடிக்கீழ்ச் சென்று
    அங்கு இறுமாந்து இருப்பன் கொலோ

    12. தளை : தேவனை என்னுளே தேடிக் கண்டு
    கொண்டேன் -[4. அப்பர்]

    திருச்சிற்றம்பலம்

     

    9. மந்திரசுத்தி
    பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை
    பிரிவிலா அடியார்க்கென்றும்
    வாராத செல்வம் வருவிப்பானை
    மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித்
    தீராநோய் தீர்த்தருளவல்லான் தன்னை
    திரிபுரங்கள் தீயெழத் திண்சிலைக் கைக்கொண்ட
    போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
    போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே
    – [5.அப்பர்]
    10. பிராணாயாமம்

    வலச்சுட்டு விரல் நடுவிரல் இரண்டையும் உள்ளே மடக்கிப் பெருவிரலால் வலப்பக்க மூக்கை மூடி “ஓம் சிவாய நம” என் ஐந்து முறை சொல்லி, இடப்பக்க மூக்கால் காற்றை உள்ளே இழுத்துக், காற்றை நிறுத்தி மோதிர விரலால் இடப்பக்க மூக்கை மூடி வலப்பக்க மூக்கால் காற்றை வெளிவிடவும். மீண்டும் இது போலவே இடப்பக்க மூக்கை மூடிக்கொண்டே ஐந்தெழுத்து மந்திரத்தை ஐந்து முறை சொல்லி வலப்பக்க மூக்கால் காற்றை உள்ளிழுத்து இடப்பக்க மூக்கால் வெளிவிடுக. இது போன்று இயன்றளவு செய்க.

    இது சமயம் தொப்புழுக்கு நான்கு விரல் இடம் கீழ் உள்ள இடமாகிய மூலாதாரம் என்னும் இடத்திலிருந்து குண்டலினி என்னும் சிவசக்தி எழுந்து மேல் நோக்கி மூலாதாரம், தொப்பூழ், மார்பு, கழுத்து, புருவமத்தி, உச்சி தலைக்குமேல் பன்னிரண்டங்குல அளவில் உள்ள இடம் ஆகிய உணர்ச்சி நிலையங்களில் எழுந்தருளி விளங்குவதாக எண்ணிப் பிறகு தலைக்கு மேல் இரு கைகளையும் கூப்பி வணங்கி மேற்கண்ட சிவசக்தியை அங்கிருந்து கூப்பிய கரத்தினூடாக, மார்புக்குக் கொணர்ந்து மார்பில் எழுந்தருளி விளங்குவதாகக்கொண்டு பஞ்சபுராணம் ஓதித் துதிக்க.

    11. பஞ்ச புராணம் துதித்தல்

    தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய ஐந்து நூல்களையும் பஞ்ச புராணம் என்று சொல்வது மரபு. வழிபாட்டின்போது குறைந்த அளவு மேற்கண்ட நூல்களில் ஒவ்வொன்றாக ஐந்து பாடல்களாவது பாடித் துதித்தல் வேண்டும். கூடுமானால் பத்தாம் திருமுறையாகிய திருமந்திரத்தில் ஒரு பாட்டும், ஆக பன்னிரு திருமுறைகளிலும் ஒவ்வொரு பாட்டாவது சொல்லித் தினந்தோறும் வழிபடுவது சைவருடைய கடமையாகும். மேற்குறிப்பிட்ட பன்னிரு திருமுறைகளும் தவறாமல் ஒவ்வொரு சைவர் இல்லத்திலும் இருக்க வேண்டுவன.

    தேவாரம்

    அ. தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி
    காடு உடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
    ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
    பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே! – [சம்பந்தர்]

    திருவாசகம்

    ஆ. அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
    அன்பினில் விளைந்தஆ ரமுதே
    பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
    புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
    செம்மையே ஆய சிவபதம் அளித்த
    செல்வமே சிவபெரு மானே
    இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவ தினியே. [8. மணிவாசகர்]

    திருவிசைப்பா

    இ. கண்பனி அரும்பக் கைகள் மொட்டித்(து)என்
    களைகணே! ஓலம்என்(று) ஓலிட்டு
    என்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்(து)
    என்னையும் புணர்ப்பவன் கோயில்
    பண்பல தெளிதென் பாடிநின் றாடப்
    பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பில்
    செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்
    திருவளர் திருச்சிற்றம் பலமே.
    [9. கருவூர்த்தேவர்]

    திருப்பல்லாண்டு

    ஈ. மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
    வஞ்சகர் போயகல
    பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
    புவனி யெல்லாம் விளங்க
    அன்னநடை மடவாள் உமைகோன்
    அடியோ முக்கருள் புரிந்து
    பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
    பல்லாண்டு கூறுதுமே.
    [9. சேந்தனார்]
    பெரிய புராணம்

    உ. நன்மை பெருகு அருள்நெறியே வந்தணைந்து நல்லூரின்
    மன்னு திருத்தொண்டனார் வணங்கி மகிழ்ந்தெழும் பொழுதில்
    “உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம்!” என்று அவர் தம்
    சென்னி மிசை பாதமலர் சூட்டினான் சிவபெருமான்.
    [10. சேக்கிழார்]

    வாழ்த்துப்பா

    ஊ. வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
    வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
    ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
    சூழ்க வையக முந்துயர் தீர்கவே.
    [3. சம்பந்தர்]
    12. ஜபம்

    மனதை புருவ மத்தியில் இறுத்திப் பத்மாசனத்தில் அமர்ந்த வண்ணம் குரு உபதேசித்த திருவைந்தெழுத்தை 108 தடவை மனத்திற்குள்ளாகவே எண்ணுக.

    13. தியானம்

    இறைவன் புருவ மத்தியில் ஒளி வடிவமாக விளங்குவதாக எண்ணி எந்த விதமான வேற்று எண்ணமும் இன்றி அமைதியாகச் சிவனைச் சிந்தித்து இருக்கவும். மேற்கண்டவாறு [அனுஷ்டானத்தை] வழிபாட்டை முடித்துக்கொண்டு புறத்தில் சிவ வழிபாடு தொடங்குதல் வேண்டும்.

    இத்துடன் நித்திய வழிபாடு முற்றுப்பெறும். சிவபூசை செய்வோர் இதற்குமேல் ஆன்மார்த்த மூர்த்தி வழிபாடு செய்தல் வேண்டும்.

    திருச்சிற்றம்பலம்.

    கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
    நில்லாப் பிழையும், நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
    சொல்லாப் பிழையும், துதியாப் பிழையும், தொழாப் பிழையும்
    எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே.

    – திருவேகம்ப மாலை, பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்)

    pic8
    ஆலய வரலாறு
    pic16
    ஆலயத்தின் உள்ளே
    pic9
    சிவ பூஜை செய்ய தயார் நிலையில் இருக்கும் பக்தர்கள்
    pic10
    சிவலிங்கங்கள் தனி பிரகாரங்களில்
    சிவ பூஜை செய்ய தயார் நிலையில் இருக்கும் பக்தர்கள்
    pic13
    சிவ பூஜை செய்ய தயார் நிலையில் இருக்கும் பக்தர்கள்
    pic17
    திரு. தங்க விசுவநாதன்
    மூலஸ்தான தெய்வத்திற்கு அபிஷேகம்

     


    THF: Shivarathiri (Erode Sri Mahimaliswarar Temple – 2013)
    Share
  • மணிமொழியே ஒரு மடல்

    தில்லி-16                            உ                            23-02-14

     

    மணிமொழியே மின்மினி மொழியே!

    மின்வழியால் ஒரு மடல் செம்மொழி அருட்பெருங்கடல்

    காதற்கடிதம்  கவியானால் சாதற்கடிதமும் கவிதானே

    காதில்சேரும் இசையெனவே தொடர்ந்தேன்நா மணிவழியே!

     

    மறந்திடும் உன் குணம் சுகந்தானா ? மறைத்திடும் வதனமும் சுகந்தானா?

    உறைந்தவுன் இன்குரல் சுகந்தானா? மனமிருந்தால் அது சுகந்தானா?

    பக்க பக்கமாய் எழுவதற்கு பாச(ர)மும் இல்லை சுமப்பதற்கு

    படிக்க நேருமுன் கசக்கிடுவாய் பகுத்துசுருக்கி எழுதுகிறேன்

     

    முப்பது வருடங்கள் கழிந்ததன்பின் முகப்பினில் இட்ட அத்திகதி

    இப்பவும் மூலையில்கிடக்குது பார்..இன்னும் மூளையில் கிடைக்குது பார்

    அப்பவும் முகவரி அறியாமல் அயலான் தேசம் சென்றவளே

    கப்பலின் பயணம் காற்றாலே! காதலும் அப்படி யென்றவளே!

     

    மஞ்சள் அட்டையில் கடிதமெலாம் அழியாதெனநீ சொன்னதடி

    நெஞ்சில் பதியவைத்து விட்டாய்! மணவாளன் பெயர் மாற்றியடி

    பின்கோடிட்டு காட்டவென பெயராகல்லில் செதுக்கியடி – அடி

    உள்ளூடிட்டு  வலித்த‌ வண்ணம் காலமும் நேரமும் கடந்ததடி

     

    இட்டப் பசையது விட்டதனால் அஞ்சல்தலையும் விட்டதடி

    வட்டப் பொறிப்புரு  முத்திரையால் தொலைந்த குப்பையும் ஆனதடி

    நட்டதை வேருடன் பிடுங்குதல்போல் நலம்தரு யாழினைப் பாழாக்கி

    இட்டதை வேடிக்கை யாக்குதலோ இத்தமிழ் நாட்டினர் மரபாமோ ?

     

    கற்புயர்க் கண்ணகி குலத்தாரும் கம்பனின் இராமன் இனத்தாரும்

    நற்பெயர் ஆர்த்தக் குறளாரும் நலிந்திடின் மானுடம் பாழாகும்

    முற்பிறப் பளித்த பயனெனவே மூடர்திருமண பந்தமெலாம்

    கற்பனைக் கட்டிலில் நாடிடுவார் கர்ப்பங்கலைத்திட ஓடிடுவார்

     

    பணத்தைத் தேடிடும் பரிவாரம் மணநாண் மந்திரம் ஓதிடினும்

    குணத்தை நாடாக் குணத்தாலே குலத்தை கெடுக்கும் காலமிது

    முகவரி மாற்றிட போய்சேரும் முத்திரைப் பெற்றிடும் கடிதமென

    தலைவரைத் தேடிச் சார்பவர்க்கு  வணிகந்தானோ திருமணமும்?

     

    இல்லறம் இன்பம் அன்பாலே சொல்லறம் என்பது அறிவாலே

    நல்லறம்  காண்பாள் வாழ்வாலே  நலமென்றென செய்த‌தெல்லாம்

    வில்லங்க மாக்கி விட்டவர்யார் ? விவாகராத்தில் முடித்துவிட்டாய்

    கல்மனந் தாங்கியும் ஆகிடநீ  காலமும் விதியெனச் சபித்துவிட்டாய்

     

    இப்படி எத்தனை எத்தனையோ இக்கலி தன்னில் நடக்குதடி

    தப்படி  என்றும் சொன்னாலும் தவறிய மங்கையர் பலகோடி

    அப்படி ஆகா(தினி) செய்திடவே அபாய மணிஒலி எழுப்புகிறேன்

    எப்படி  யுமவர் திருந்திடுவார் என்றே கடிதம் அனுப்புகிறேன்

     

    தன்நலங் காணும் நிலைவிட்டு  தவிக்கும் மனதைப் பண்படுத்து

    உன்நலங் காணும் உறவுகளை  அடைந்து உறவைப் பலப்படுத்து

    முன்நலங் கூறும் மொழியாலே எழுந்து வாழ்வைச் சீர்படுத்து

    பின்நலம் சேரும் வகையாலே வாழ்வின் அர்த்தம் நிலைநிறுத்து!!

     

    Share
  • திருமால் திருப்புகழ் (10)

    கிரேசி மோகன்

    VISHNU_CLOUDS_by_VISHNU108
    தனனதன தானதத்த தனனதன தானதத்த
    தனனதன தானதத்த….

    ————————————————————————————————————————–
    “மனமதனின் ஆணவத்தை உதியுமிட மேவொடுக்க11
    மலையருணை வாசமுற்ற -ரமணேசர்
    அருவியென வேவுரைத்த இருயிருப தானயுக்தி
    உளமதனில் நானகற்றி -உயர்வாக
    அனுதினமு மேஜபிக்க திடவுறுதி தாயெனக்கு
    கடல்கடையும் நாளுதித்து -சபரீசன்
    பெறவுதர பாரமுற்ற ,புலிமுதுகில் ஏறவிட்ட
    கிளரொளியில் மோகினிப்பெண் -அவதாரா
    பணமுடியில் ஏறிநச்சு உமிழவுயிர் தானெடுத்து
    நடனமிடு காளியத்து -விடராசா
    மழலையிவன் ஞானபக்தி கருமமதில் ஆகசித்தி
    கவிதைவடி வாயெனக்கு -அருள்வாயே
    ஜனகமக ளேவொருத்தி ஒருவனிவ னேவுரைக்க
    சிவதனுசை போய்முறித்த -ரகுநாதா
    ஜனனமர ணாதிவட்ட சகலபரி பாலனத்தில்
    ஜகமதனில் பூரிநிற்கும் -பெருமாளே (OR ) ஜெகன்னாதா”….

    ————————————————————————————————————————

    Share
  • மணிமொழியாம் தமிழுக்கொரு மடல்

    கீதா மதிவாணன்

    என் வாழ்வை அணிசெய்யும் மணிமொழியாம் தமிழுக்கு,

    என் வந்தனம். இன்று நீ இருக்கும் நிலைமையை நன்கறிந்தபின்னும் நான் உன்னை நலமா என்று உசாவுவது பொருளற்றது. ஆயினும் உன்னால் நானிங்கே நலமென்று உரைப்பதில்தான் எனக்கெவ்வளவு இறும்பூது!

    பொருளீட்டும் பொருட்டு கடல்கடந்துவந்து அந்நிய மண்ணை மிதித்தபோது அகம் கொண்ட ஆற்றாமையோடு அலைபாய்ந்த என் மனத்தைத் தேற்றியது நீதான். மனத்தின் பாரமிறக்க உன் தோள்களைத் தந்து உற்ற தோழனானாய். உற்றார் உறவுகளின் பிரிவை எண்ணிக் கலங்கும்போதெல்லாம் தாயாய் மடி தந்து தயை புரிந்தாய். கதைகளாய், கவிதைகளாய், தேன்சுவைப் பாடல்களாய், அலமாரிப் புத்தகங்களாய், பேச்சாய், மூச்சாய் என்னைச் சூழ்ந்து, என்னுள் இறங்கி, கரைந்து என்னை நானாக வாழவைத்துக்கொண்டிருக்கும் தண்டமிழே, உன் தாள்பணிந்து வணங்குகிறேன்.

    பிறந்தமண்ணில் இருந்தபோது உன்மேல் எனக்குதான் எவ்வளவு உதாசீனம்! ஒருவரிக் கடிதம் எழுதவும் சோம்பிக்கிடந்த நான் இன்று பக்கம் பக்கமாய் எழுதிக்கொண்டிருக்கிறேன். நிழலின் அருமை போல தமிழே.. உன் அருமையும் தாமதமாகத்தான் புரிகிறது.

    தாய்மண்ணைவிட்டு என் கால்கள் பலகாத தூரம் விலகி நடந்தாலும், தாய்மொழியே, செல்லுமிடமெல்லாம் உன்னை என் நாவில் சுமந்தே செல்கிறேன். எத்தனை மொழிகளைக் கற்றாலும் ஏற்றாலும் எப்போதும் மனம் ஏங்குவதென்னவோ உன்னைப் பார்க்கவும் கேட்கவுமே.

    செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்

    தேன்வந்து பாயுது காதினிலே

    என்று அன்று பாடிய முண்டாசுக்கவிஞனின் பாடலை முழுவதுமாய் அனுபவிக்கிறேன் இன்று. எங்காவது பொது இடத்தில் “நீங்க தமிழா?” என்று கேட்பதிலும் கேட்கப்படுவதிலும் உள்ள சுகம்… அதை அனுபவிப்பதுதான் இதம். கன்னற்தமிழே, உன் சுவையைக் காதுகுளிரக் கேட்கும்போது என்னை மறந்துபோகிறேன். என் காதல்மனைவியின் பிரிவையும் மறந்துபோகிறேன்.

    பயிலுறும் அண்ணன் தம்பி — அக்கம்

    பக்கத்துறவின் முறையார்

    தயைமிக உடையாள் அன்னை — என்னைச்

    சந்ததம் மறவாத் தந்தை

    குயில்போல் பேசிடும் மனையாள் — அன்பைப்

    கொட்டி வளர்க்கும் பிள்ளை

    அயலவராகும் வண்ணம் — தமிழ் என்

    அறிவினில் உறைதல் கண்டீர் !

    என்னும் பாவேந்தரின் பாடலை இன்று அனுபவத்தால் உணர்கிறேன். தாய் தந்தையை இழந்த எனக்கு ஒற்றைச் சொந்தமான, என் மனையாளின் பிரிவையும் தாங்கும் மனத்திடத்தைத் தந்த மகோன்னதத் தமிழே நீ வாழி!

    என்றுமில்லாத வழக்கமாய் எதற்கித்தனை பீடிகையென்று உனக்குள் ஐயம் தோன்றியிருப்பதில் வியப்பில்லை. விவரமாய்ச் சொல்கிறேன். என்னை வாழவைக்கும் நீ, என் மனையாளையும் வாழ்விப்பாயென்ற நம்பிக்கையோடு வரையப்படுகிறது இம்மடல்.

    நாராய் நாராய் செங்கால் நாராய்

    பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

    பவளக் கூர்வார்ச் செங்கால் நாராய்

    நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி

    வடதிசைக்கேகுவீராயின்

    எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி

    நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி

    பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு

    “எங்கோன் மாறன்வழுதி கூடலில்

    ஆடையின்றி வாடையின் மெலிந்து

    கையது கொண்டு மெய்யது பொத்திக்

    காலது கொண்டு மேலது தழீஇப்

    பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

    ஏழையாளனைக் கண்டனம் எனுமே”

    என்று தன் வறுமை நிலையைப்பாடி, வடதிசையில் வாடிக்கிடக்கும் தன் மனைவியிடம் நாரையைத் தூதனுப்பிய சத்திமுத்தப் புலவரைப் போன்று, இன்றுன்னை நான் தென்திசைக்குத் தூதனுப்புகிறேன். காதற்தலைவனின் பிரிவால் நலிந்து, தனிமைத் துயருற்றுத் தவித்திருக்கும் என் தலைவியிடம் செல்வாய் செந்தமிழே! பிரிவாற்றாமையால் தவிக்கும் பேதை நெஞ்சம் அமைதிகொள்ளும் வண்ணம் அவள் மனத்துயரைப் போக்குவாய் பைந்தமிழே! என்னை மடியிருத்தி தாலாட்டி மனத்துயர் ஆற்றினாற்போல் அவளையும் ஆற்றுப்படுத்துவாய் என் அன்னைத்தமிழே!

    அலம்பலும் சலம்பலுமாய் அக்கறையற்று வாழ்க்கை நதியின் போக்கில் போகவிருந்த என்னை அக்கறையாய் கரை சேர்த்தவள் என் அன்புக் காதற்கிழத்தி. இன்று அக்கரையில் புலம்பலுடன் கழிகிறது என் வாழ்க்கை, அவளை என் நெஞ்சகத்தில் இருத்தி. காற்றும் புகமுடியாவண்ணம் காதலுடன் வாழ்ந்திருந்த எங்கள் இருவருக்கிடையில் கடல் புகுந்த கதையைக் கேட்கவிரும்புவாயாயின் சொல்கிறேன், கேள்!

    வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;

    பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;

    நேசமுள்ள வான்சுடரே; நின்னழகை யேதுரைப்பேன்?

    ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா!

    என்று நானும் அவளும் காதலால் கலந்து களித்துக்கிடந்த உன்மத்த வேளையொன்றில் தன் உள்ளக்கிடக்கையொன்றைத் தெரிவித்தாள். என் கண்மணியின் விருப்பத்தை நிறைவேற்றும்பொருட்டு, அவள்வழி உறவொன்றின் விழாவுக்காக, அழையாத வாயிலை மிதித்தோம். அவமானமுற்றுத் திரும்பினோம்.

    இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

    எல்லாரும் செய்வர் சிறப்பு

    என்னும் குறளுக்கேற்ப பொருள் இல்லாதவர்களை ஏளனம் செய்வதும் இருப்பவர்களைப் போற்றுவதும்தான் உலக இயல்பு என்பதை அறிந்திருந்தும் ‘மதியாதார் தலைவாசல் மிதியாதே’ என்னும் ஒளவையின் வாக்கை மதியாது சென்ற காரணத்தால் மனமுடைந்துபோனோம்.

    காதற்பித்து தலைக்கேறி, கால்காசுக்கு வழியில்லாதவனைக் கட்டிக்கொண்டுவிட்டாளென்று தூற்றும் ஊரின் வாயை அடைக்க ஒரு உபாயம் சொன்னேன். ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்தொரு அருமையான வாய்ப்பு அழைப்பு விடுத்திருக்கிறது, ஒப்பந்தத்தில் கையொப்பமிட, உன்னிடம் அனுமதி கேட்கும் துணிவின்றி அவதியோடு காத்திருக்கிறேன் கண்ணாட்டி என்றேன். என் வெற்று மார்பைச் சுட்டன அவளது பெருமூச்சும், சில கண்ணீர்த்துளிகளும். நெடிய மெளனத்திற்குப் பின் ‘உம்’மென்றாள் உம்மென்ற முகத்தினளாய்.

    இதோ, சொடக்குப் போட்டாற்போல் ஓடிவிடும் மூன்றுவருடங்கள் என்று பொய் சொல்லிப் புறப்பட்டுவிட்டேன். என்  பொருளிலா வாழ்க்கையின் இன்னல் களைய கடல் கடந்து கண்காணா தேசம் புகுந்துவிட்டேன். அலைபேசியின் நல விசாரிப்புகளிடையே அவ்வப்போது எழும் அவளது விசும்பல்களும் அவற்றை அடக்க அவள் படும் பாடும் என் உள்ளத்தை உருக்கி கண்ணீரை உகுக்கவைக்கின்றன. எவ்வளவு தேறுதல் சொன்னாலும் பேதையவள் நெஞ்சம், பிரிவாற்றாமையினின்று விடுபடும் வழியறியாது பித்தாய்க் கரைகிறது. என்னை அயல்தேசம் செல்ல அனுமதித்ததன் மூலம் தான் தவறிழைத்தாற்போன்று குமுறிக் குறுகும் அவள் நெஞ்சுக்கு நான் எங்ஙனம் ஆறுதலளிப்பேன்? ஆதலால்தான் உன்னைத் துணைக்கழைக்கிறேன் தீந்தமிழே!

    பொருள்வயின் பிரிதல் பற்றி நீ அறியாததா? பரத்தையிற் பிரிவு, ஓதல் பிரிவு, காவல் பிரிவு, தூதிற் பிரிவு, துணைவயின் பிரிவு, பொருள்வயின் பிரிவு என கற்பு வாழ்க்கையில் கணவன் மனைவியருக்கிடையே ஆறுவகையான பிரிவுகளை சங்க இலக்கியம் பகர்வதைச் சொல்லி பொருள்வயிற்பிரிதலொன்றும் ஆடவர்க்குப் புதிதல்ல என்று அவளிடம் எடுத்துரைப்பாய் தங்கத்தமிழே!

    ‘நன்று” எனப் புரிந்தோய்; நன்று செய்தனையே;

    செயல்படு மனத்தர் செய்பொருட்கு

    அகல்வர், ஆடவர்; அது அதன் பண்பே.

    என்னும் சங்கத் தோழி போன்று, ‘உன் கணவன் பொருளீட்டச் செல்லும்போது அதைத் தடுக்காமல், சென்றுவாருங்கள் என்று மலர்ந்த முகத்தினளாய் வழியனுப்பிவைத்தாய்… தலைவி, நீ செய்தது சரிதான்’ என்று அவளுக்கு ஆறுதல் மொழி சொல்லத் தக்க அருந்தோழியரும் அருகில் இலர். ஆகவே என் வாழ்வை அணிசெய்யும் மணிமொழியாம் அழகுத்தமிழே, உன்னையே அவளுக்கு உற்ற துணையாக தூதனுப்ப விழைகிறேன். அதற்கு அச்சாரமாகவே இக்கடிதத்தை உனக்கு எழுதுகிறேன் அருந்தமிழே!

    என் காதல் கனிமொழியாளைப் பிரிந்துவந்து ஆறு திங்கள் ஆகின்றன. புதிய பணியும், சூழலும், புதிய நண்பர்களோடு முத்தமிழே நீயும், காலத்தைக் கடத்தும் முயற்சியில் எனக்குத் துணைபுரியும் இவ்வேளையில் அங்கு அவளது ஒவ்வொரு நாளையும் நெட்டித்தள்ள அவள் படும் பிரயத்தனங்கள் மனக்கண்ணில் விரிந்து வேதனை தருகின்றன.

    இன்பத்தை விடவும் கடமையே கரம்பற்றியவனுக்கு அழகென்று காட்டுதற்கு ஆயிரம் ஆதாரங்கள் உன்னிடம் உண்டல்லவா? ஆயினும் இந்தக் குறுந்தொகைப் பாடலைக் கோடிட்டுக் காட்டினால் அவள் கொஞ்சம் ஆசுவாசங்கொள்ளலாம்.

    வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சிற்  

    குளவி மொய்த்த வழுகற் சின்னீர்  

    வளையுடைக் கைய ளெம்மொ டுணீஇயர்  

    வருகதில் லம்ம தானே  

    அளியளோ வளியளெந் நெஞ்சமர்ந் தோளே.

    பாலைவழிச்செல்லும்போது குடிக்க நீர் கிடைக்காது. வேட்டையாடிக் களைத்த செந்நாயொன்று காலால் மண்ணில் தோன்றிய சிறுபள்ளத்தில் ஊறும் நீரைக் குடிக்கும். நாய் குடித்தது போக மீந்திருக்கும் குறையளவு நீரில் அருகிலிருக்கும் மரத்தின் காட்டுப்பூக்கள் விழுந்து அழுகி நாறிக்கிடக்கும். என்னுடைய தாகத்துக்கு அந்த நீரை நான் பருகலாம். ஆனால் அழகிய வளைக்கரத்தால் நீ அந்நீரைப் பருகிட என் மனம் எப்படி இசையும்? எண்ணிப்பார்க்கவே வேதனை மிகுகிறதே என்று அரற்றுகிறான் பொருட்வயிற்பிரிதலின்போது தானும் அவனுடன் வருவதாய் சொன்ன தலைவியிடம். தனக்காக தன் உற்றார் உறவுகளை விட்டுவந்த காதல் மனைவியை இன்பமுற வைத்திருப்பதுதானே முறை? அதைச் செய்யத்தவறுதல் அன்றோ குறை? என்று எடுத்துரைப்பாய் சங்கத்தமிழே!

    பிரிவுழிக் கலங்கல் வேண்டாம் கண்ணே… வந்துழி மகிழ்ச்சிக்கான காலம் விரைவிலேயே கைகூடிவரும், உன் எண்ணம் போல் ஊரும் உறவும் மெச்ச உன்னத வாழ்க்கை வாழுங்காலம் ஓடிவரும் என்று நல்வாக்கு சொல்லி அவளை நலமோடு வாழ்விப்பாய் நற்றமிழே! நான் மீண்டும் அவளைச் சேருங்காலம் வரையிலும் அவளை உன்பால் ஈர்த்து இணக்கமாக்கி இன்புறச் செய்வாய் இன்தமிழே!

    வெந்தழல் நீராகும்; வெள்ளெலும்பு பெண்ணாகும்;

    வந்தமத வேழம் வணங்கிடுமே; – சந்தமெழப்

    பாடுவார் உள்ளுருகிப் பாடும் தமிழிசைக்கு

    நீடுலகில் உண்டோ நிகர்?

    என்னும் கவிமணியின் பாடலுக்கேற்ப இசையாய், பாடலாய் அவள் இதயத்துக்கு இதமூட்டி, கவியாய், காவியமாய் அவள் கருத்தினில் நுழைந்து, எழுத்தாய், எண்ணமாய் அவளைச் சேர்ந்து, உன் கரங்களுக்குள் அவளைக் கோர்த்து சற்றே என்னை இளைப்பாற்றுவாய் இயற்றமிழே! கன்னற்சுவையும் கற்கண்டுப்பாகும் தோற்கும் நல்லிலக்கியச்சாற்றினை அவள் பருகச் செய்வாய் தேன்மொழி! என் கண்மணியின் கண்ணீர் துடைக்கும் கரங்கள் இனி உனதே! அவள் பிரிவுத்துயராற்றும் வல்லமை, வண்டமிழே… உனையன்றி வேறெவருக்குண்டு?

    உன் பொறுப்பில் அவளை ஒப்படைத்துவிட்டு முழுச்சிரத்தையோடும் உத்வேகத்தோடும் என் கடமையில் கண்ணாவேன். காலநீட்டிப்புக்கு இடங்கொடாமல் செவ்வனே பணிக்காலம் முடித்து என் பாரியாளைப் பார்க்கப் பரவசத்தோடு வீடு திரும்புவேன்.

    பைங்கண் யானைப் பரூஉத்தா ளுதைத்த     

    வெண்புறக் களரி விடுநீ றாடிச்     

    சுரன்முதல் வருந்திய வருத்தம் பைபயப்     

    பாரம் மலிசிறு கூவலின் தணியும்     

    நெடுஞ்சேண் சென்று வருந்துவர் மாதோ   

    எல்லி வந்த நல்லிசை விருந்திற்குக்     

    கிளரிழை அரிவை நெய்துழந் தட்ட     

    விளரூன் அம்புகை எறிந்த நெற்றிச்   

    சிறுநுண் பல்வியர் பொறித்த     

    குறுநடைக் கூட்டம் வேண்டு வோரே

    பசிய கண்களையுடைய யானை தன் பருத்தக் காலால் உதைத்துப் பொடியாக்கிய பாழ்நிலத்தின் புழுதியில் நடந்து களைத்த வருத்தமெல்லாம் பருத்திச்செடிகள் சூழ்ந்த கிணற்றால் தணியும். அதுபோல் தலைவன் படும் துயரமெல்லாம், வாழ்க்கைக்குத் தேவையான பொருளீட்டிப் பின்னர், உன்னோடு இனிதே இல்லறம் நடத்துதற்பொருட்டன்றோ? இரவுநேரத்திலும் வீட்டுக்கு வரும் விருந்தினர்க்கு, அடுப்பூதிப் புகைபடிந்த நெற்றியில் வியர்வைத் துளிகள் துளிர்க்க, நெய் மணக்கும் ஊண்சோற்றை குறுநடையுடன் நீ பரிமாறும் அழகில் மயங்கி நிற்பாரன்றோ? என்று அன்றைய தோழி, தலைவியைத் தேற்றியது போல் நீயும் என் தலைவியைத் தேற்றி இன்புறச் செய்திடுவாய்.

    எங்கள் உயிருக்கு நிகராய், எங்கள் உயர்வுக்கு வானாய், எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேனாய், எங்கள் பிறவிக்குத் தாயாய், எங்கள் வளமிக்க உளமுற்ற தீயாய்… தமிழே என்றென்றும் நீ வாழீ!

    இங்ஙனம்,

    உன்னால் உயிர்வாழ்பவன்.

    Share
  • ஒடுக்குமுறையின் தாக்குதலில் அலைவுறும் உடலும் உள்ளமும்!…

    எஸ்.வி. வேணுகோபாலன்

    தீக்கதிர் (பிப் 24) இலக்கிய சோலையில் இடம் பெற்றிருக்கும் கட்டுரை::

    ஒரு சிறுகதையை முன்வைத்து

    ஒடுக்குமுறையின் தாக்குதலில் அலைவுறும் உடலும் உள்ளமும்

    மகாகவியின் அந்தக் கவிதையை அதற்குமுன் வாசித்திருந்தாலும், எம் பி சீனிவாசன் அவர்களது சேர்ந்திசை சிற்பங்களில் ஒன்றான பாரத தேசம் என்று பெயர் சொல்லுவார் பாடலை முதன்முறை மட்டுமல்ல பின் எப்போது கேட்க நேரும்போதும், அதன் கடைசி பகுதியில் “ஓயுதல் செய்யோம்.. தலை சாயுதல் செய்யோம்..” என்ற இடம் வருகையில் இயல்பாக உணர்ச்சி மேலிட கண்ணீர் பெருகத் தொடங்கிவிடும். மனதில் உறுதி வேண்டும் என்ற கவிதை யேசுதாஸ் குரலில் திரைப்பாடலாக ஒலிக்கக் கேட்கும் தருணங்களில் அப்படித் தான்; உண்மை நின்றிட வேண்டும் என்ற வரி என்னை வெவ்வேறு நினைவடுக்குகளின் தாக்கத்தில் சற்று இயல்பு நிலை நழுவ வைத்துவிடும்.

    மனித மனத்தின் தன்மை அப்படி என்பதை பலரது அனுபவங்களிலிருந்தும் அறியமுடியும். இசை நுகர்வைப் போலவே, ஓவிய ரசனை போன்றே, எழுத்து வாசிப்பும் நம்மைச் சமயங்களில் நிலை குலைய வைத்துவிடும் என்பதையும் நாம் உணர்கிறோம். தகழி சிவசங்கரன் பிள்ளை அவர்களது தோட்டியின் மகன் நாவல் அப்படி ஒரு வாரத்திற்கு என்னைத் திண்டாட வைத்தது. அழகிய பெரியவன் அவர்களது சிறுகதைகள் சில உலுக்கி எடுத்ததுண்டு. இந்தப் பட்டியல் பெரியது.

    இவை ஏற்படுத்திய உணர்ச்சிகளிலிருந்து வேறுபட்ட தாக்கம், சம காலத்தில் நேரடியாக அறிந்த நிகழ்வுகளின் புனைவு வடிவங்களில் பயணம் செய்கையில் ஏற்பட்டது. அதன் அதிர்ச்சி பிரதிபலிப்புகள் விவரிப்புக்கு அப்பாற்பட்டவை. தாமிரபரணியில் 17 உயிர்கள் காவு வாங்கப்பட்ட மாஞ்சோலைத் தொழிலாளர் போராட்டத்தின் மீதான காவல்துறை ஒடுக்குமுறையைப் பின்புலமாகக் கொண்ட ச தமிழ்ச்செல்வனின் “சொல்ல வருவது” சிறுகதையைக் குறிப்பிட வேண்டும். தனது தோழனின் கல்லறையை விட்டு அகல மறுத்து அங்கேயே அல்லாடும் அந்த நாய், வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டபின்னும் நள்ளிரவு நேரத்தில் அவனது நினைவில் பெருத்த ஊளையிட்டு அழும் கதையின் இறுதிக் காட்சி எப்போது வாசித்தாலும் நிம்மதி இழக்க வைத்துவிடும்.

    தவிப்புற வைக்கிற – ஆவேசம் கொள்ளத் தூண்டுகிற ஒரு சிறுகதையை அண்மையில் வாசிக்க நேர்ந்தது. “நீளும் கனவு” என்ற தலைப்பில் (கயல் கவின் புக்ஸ், சென்னை 24) வெளியாகி இருக்கும் கவின் மலர் அவர்களது அருமையான சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது “மெய்” என்ற அந்தக் கதை.

    தாங்க முடியாத வலியில் துடிக்கும் ஒரு வாலிபனின் மரண அவஸ்தையின் சொந்தக் குரலில் தொடங்கும் கதை, தான் எங்கே இருக்கிறோம், உயிரோடுதான் இருக்கிறோமா, எப்படி இந்தக் கதிக்கு ஆளானோம் என்று அவன் நிகழ்வுகளைப் பின்னோக்கி சிந்திக்கப் பார்த்துப் பரிதவிக்கும் பாதையில் தொடர்கிறது. உள்ளபடியே அவனது உடலும் பயணத்தில் இருக்கிறது. செமத்தியாக அடித்து நொறுக்கப்பட்ட தனது எந்தெந்த உறுப்புகள் என்னென்ன கதியில் இருக்கின்றன என்பதே கூட அவன் தனக்கு உணர்த்திக் கொள்ளத் தலைப்படும் நேரம் பார்த்து மயக்கம் வந்து அவனை வீழ்த்துகிறது. மீண்டும் கூடுதல் வலியோடு கண் திறந்து அல்லாடும் நேரத்தில் மூளை அவனுக்கு நேர்ந்த தாக்குதலை மீண்டும் திரையில் எழுதிப் பார்க்க முனைகிறது. மீண்டும் மயக்கம்.

    “மவனே! சாவுடா! செத்துத் தொலைடா நாயே!” என்று சொல்லி அடிக்கப்பட்ட நினைவுகள்…. சுற்றிலும் காக்கிச் சட்டைகள்… திரும்பிய பக்கமெல்லாம் இளைஞர்கள்.. ஐந்து முக்கு சாலை. விண்ணதிரும் முழக்கங்களோடு வாகனங்கள் கடந்து போன இடம். முஷ்டியை உயர்த்தித் தான் குரல் எழுப்பிக் கொண்டிருந்த நேரம். இப்போது நினைவு ஒரு புள்ளியில் நிலை கொள்கிறது. தாங்கள் காவல் துறையால் நையப் புடைக்கப்பட்ட இடம், பரமக்குடியின் ஐந்துமுக்கு சாலை. மீண்டும் மயக்கம். மீண்டும் தெளிகிறபோது தன்னருகியில் நெற்றியில் கொப்புளிக்கும் குருதியொடு சாய்கிற பெரியவர் காட்சியில் வந்து போகிறார். துப்பாக்கிச் சூடு. பழி தீர்த்த திருப்தியோடு புன்னகைக்கும் காக்கிச் சட்டைகளும் தட்டுப்படுகிற காட்சி அது.

    தனது உடம்பின் எல்லாப் பாகங்கள்மீதும் பூட்ஸ் கால்கள் கொலைவெறியோடு மிதித்த அந்தக் கொடூர நினைவுகள், தான் உள்ளபடியே செத்துப் போய்விட்டோமோ என்று அலைவுறும் கணங்கள்…என கதை நகர்கிறது. சாதிப் பெயரைச் சொல்லி திட்டியவாறே ஒருவன் நடு மண்டையில் ஓங்கி அடித்தது எல்லாம் நினைவுக்கு வருகின்றன. இப்போது தன்னை எங்கே கொண்டு செல்கின்றனர் என்று தெரியாது. மருத்துவமனை வாசலில் நிற்கும் வேனுக்குள் உயிருக்கு மன்றாடுவோரும், சோர்ந்துபோய் விடைபெற்று விட்டோரும் இருக்க, தற்செயலாக அந்தவழி செல்லும் இஸ்லாமிய இளைஞர்கள் சிலரது மனித நேய நடவடிக்கை அவர்களை மருத்துவமனைக்குள் கொண்டு சேர்க்கிறது.

    பின்னர் சடலங்களின் வரிசையில் தானும் கிடத்தப் பட்டிருக்கிறோம் என்று அந்த வாலிபன் உணர்ந்தாலும் நகரக் கூட முடியாத – தீனக் குரலை எழுப்பக் கூட இயலாத நிலையில் படும் பாடுகளும், பின்னர் சிகிச்சையின் கரங்கள் அவனை ஒரு கட்டத்தில் தீண்டத் தொடங்கிய நேரத்தில் தனது காதல் மனைவியை ஒரு முறை பார்த்துவிட்டு உயிரை விட்டுவிடத் துடிக்கும் அவனது இதயத் துடிப்புகளும் அசாத்திய உண்மைத் தன்மை வாய்ந்தவையாக கவின் மலரின் எழுத்தில் கனத்த வாசிப்பாகிறது. வலி பொறுக்க மாட்டாத சயமங்களில் மயக்கம் அவனுக்கு வரமாக வாய்ப்பதை வாசிக்கையில், மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்தில் வரும் கண்பார்வையற்ற பெண், தனது கால்களில் சூடு வைத்துக் கொடுமைப்படுத்திய ஆட்களைப் பற்றி விவரிக்கையில், நல்ல வேளையாக ஒருத்தன் என் மார்பில் ஓங்கி உதைத்தான், நான் மயக்கம் ஆனேன் என்று சொல்லுமிடம் எனக்கு நினைவுக்கு வந்தது.

    ‘சிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை, நமக்கெல்லாம் உயிரின் வாதை’ என்று புரட்சிக் கவி காவியத்தில் எழுதியிருப்பார் பாவேந்தர் பாரதிதாசன். போராட்டங்களை ஒடுக்கும் அரசின் கொடுங்கரங்கள் அப்படித்தான் என்பதை சுதந்திர இந்தியா உடனே சேலம் சிறையில் நிரூபித்தது. கடலூரில் காட்டியது. எத்தனை எத்தனை உன்னத போராளிகளை அற்ப வெறியோடு தாக்கிய ஆட்சியாளர்களின் ஏவல் படைகளுக்கு இயக்கங்கள் பறிகொடுத்திருக்கின்றன. சாதிய வன்கொடுமைக்கு எதிரான எழுச்சிப் போராட்டங்களை இன்னும் மூர்க்கமாகத் தாக்கப் பழகி இருக்கும் காவல் துறையின் ‘சாதனை’ வரலாற்றின் அண்மைக் கால அராஜக சாட்சியம் பரமக்குடி துப்பாக்கிச் சூடு.

    கொலையுண்டவர்கள் எண்ணிக்கை கூட சரிவர சொல்லப்படாத அளவு துணிச்சலோடு நடத்தப்படும் இத்தகைய நடவடிக்கைகள் நாளேடுகளில் ஒரு நாளின் தலைப்புச் செய்தியாகவும், பருவ இதழ்களில் ஒரு சிறப்புக் கட்டுரையாகவும், புலனாய்வு ஊடகங்களில் ஒரு பரபரப்பு அம்சமாகவும் தற்காலிக வாழ்வு வாழ்ந்துவிட்டு பொது நினைவிலிருந்து அகற்றப்பட்டு விடுபவை. ஆனால் தாக்குண்ட ஒரு மனிதனின் உடலும், உள்ளமும் அடையும் பரிதவிப்பின் பதிவாக எழுதப்பட்டிருக்கும் இந்தச் சிறுகதை சம கால உண்மை நிகழ்வு ஒன்றின் கவனிக்கத் தக்க புனைவாக முன்வைக்கப் பட்டிருக்கிறது. சமூக செயல்பாட்டாளர்களின் வாசிப்பை வலியுறுத்துகிறது.

    Share
  • விளை நிலம் – கவிதை

    சரபோஜிindex

    விளைந்த நிலமாய் – விளையும் நிலமாய்

    இருப்பவைகளை நாகரீக வாழ்வுக்காய்

    விலை நிலமாய் மாற்றி அமைத்தோம்.

    சர்ப்பத்தின் புணர்வுபோல

    அடி பெருத்து நுனி சிறுத்த கல்மரத்தை

    விளைநிலம் தோறும் நட்டு வைத்தோம்.

    முப்போகம் விளைய வைத்து

    உணவிட்டவனின் தற்கொலைக்கு

    கணிணியில் கையறு நிலை பாடினோம்.

    ஏட்டுப்படிப்பு போதுமென நினைத்த நாம்

    ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்பதை

    ஏன் மறந்து போனோம்?

    கண்ணை விற்று சித்திரம் வாங்கும் உண்மையை

    கையூட்டிற்காய் பணியை இழக்கும் அபாயத்தை

    எப்பொழுது உணரப் போகின்றோம்?

    கழனிப்பானையவும் களத்து மேட்டையும்

    தொலைத்த அவலத்தை

    கல்லையும் மண்ணையும் தின்றா போக்க முடியும்?

    இனி ஒரு விதி செய்து மாற்ற முடியாவிட்டாலும்

    இனி ஒரு விளை நிலத்தையும்

    விலை நிலமாய் – மனை நிலமாய் மாற்றாதிருப்போமே!

    படத்துக்கு நன்றி

    http://www.dreamstime.com/royalty-free-stock-photography-green-field-fertile-land-image2506117

    Share
  • சிறு கை அளாவிய கூழ் – 3

    இவள் பாரதி

     

    நி​வேதிதா
    நி​வேதிதா

    இயற்பியலும்

    கணிதமும்

    படிக்கும்போது புரியாத

    கோணத்தை

    செல்லமகள்

    தலைசாய்த்துறங்கும் அழகில்

    புரியவைக்கிறாள்

    நேர்கோணத்தில்

    குறுங்கோணம்

    விரிகோணம்

    செங்கோணத்தை

     

    ======

     

    தத்தி தத்தி

    விழுந்து எழுந்து

    தத்தி விழுந்து

    ஊர்ந்து எழுந்து
    தத்தி தடுமாறி

    விழுந்து தடுமாறி

    தத்தி நடக்கிறது

    கைக்குழந்தை

    தேனூறுகிறது

    தாயின் கண்களில்

     

    Share