சிறு கை அளாவிய கூழ் (4)
இவள் பாரதி
கண்ணெது
மூக்கெது
தலையெது என
தன் குட்டிவிரலால்
சுட்டிக் காட்டுகிறாய்
எப்படி அழுவாய்
எனக் கேட்க
கண்கள் இடுக்கி
உதடு குவித்து
எழுப்பும் ஒலியும்
முகபாவமும்
எந்தத் திரையிலும்
பதிவு செய்யப்படாதது
—
முகத்தருகே வந்து சிரிக்கிறாய்
சிரித்த கணம் முடிவதற்குள்
கன்னத்தில் அடிக்கிறாய்
கண்கலங்கித் துளிவீழுமுன்னே
கைதட்டிச் சிரிக்கிறாய்
என்ன செய்ய என்னை?
என்ன சொல்ல உன்னை?